ஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்!

 ஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்!

திருமகள்

தீர்வையற்ற வாகன அனுமதி சட்டப்படி எனக்குள்ள உரித்து அதனை உடன் வழங்குமாறு மங்களாவுக்கு விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். இது செய்தி.

சும்மா சொல்லக் கூடாதுமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் சாதகத்தில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருந்த காலம் இருந்தது. இப்போது அது போய்விட்டதுஎல்லா மட்டத்திலும் அவருக்குத் தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டு வருகிறது.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஓகஸ்ட் மாதம் 2017 இல்  மனுத் தாக்கல் செய்திருந்தார்.   முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே  தான் வழக்கைத் தொடர்ந்ததாக டெனீஸ்வரன் கூறுகிறார்.

கடந்த யூன் 29, 2018 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது சட்டப்படி செல்லுபடியாகாது அவர் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருக்கிறார் என ஒரு இடைக்காலத் தீர்ப்பை  வழங்கியது. பதவி நீக்கம் செய்வதாக முதலமைச்சர் டெனீஸ்வரனுக்கு எழுதிய கடிதம் சட்ட வலுவற்றது என நீதிமன்றம் தெரிவித்தது.

“வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் தொடர்கிறார் என்றும் அவரது அமைச்சுப் பொறுப்புக்களை பங்கிட்டு புதியவர்களுக்கு வழங்கி வெளியிட்ட அரசிதழ் இல்லாது  செய்யப்படுவதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கூடவே அமைச்சர் வாரியம் ஐந்து என்ற எண்ணிக்கைக்கு அதிகமாக இருப்பது குறித்து ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியது. அமைச்சர் பதவியில் டெனீஸ்வரன் தொடர்வதற்கு இடையூறு விளைவிக்கக் கூடாதென்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டும்  அது இன்னமும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும் என அமைச்சர் டெனீஸ்வரன் வழக்குத் தாக்கல் செய்தார்.  இது  தொடர்பான விசாரணை ஒக்தோபர் 17 ஆம் நாள் நடக்க இருக்கிறது. அன்றைய நாளில் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் முன்னிலையாக ஆக வேண்டும்.

மாகாண சபை அமைச்சர் ஒருவரை நியமிப்பது மற்றும் பதவி நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உரியதா அல்லது ஆளுநருக்குரியதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கே இருப்பதாகவும்  அரசியல் யாப்பு பற்றிய அர்த்த விளம்பலை வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அன்றி உச்சநீதிமன்றத்துக்கே உள்ளது. நீதிமன்றத்தின் அடிப்படை அந்தஸ்தே கேள்விக்கிடமாக்கப்பட்டிருக்கும் நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடைக்கட்டளையை பிறப்பிப்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்  மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த  தீர்ப்பை விலக்குமாறும் அதனை செல்லுபடியற்றது என அறிவிக்குமாறும் மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.   முதலமைச்சர்   விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மனுவை நீதிமன்றம்  செப்தெம்பர் 05, 2018 அன்று நிராகரித்துவிட்டது.
தனக்கு  அமைச்சர்களை நியமிக்கவோ விலக்கவோ உரிமையில்லை என மேன்முறையீடு நீதிமன்றம் தெரிவித்து விட்டபடியால் தான் டெனீஸ்வரனை அமைச்சராக நியமிக்கவோ அல்லது ஏற்கனவே அமைச்சர்களாக உள்ள ஒருவரை விலக்கவோ நடவடிக்கை எடுக்க முடியாது என்று முதலமைச்சர் சொல்லுகிறார்.
ஆனால் மேன்முறையீட்டு  நீதி மன்றம் தனது இடைக்கால தடை உத்தரவில் அப்படிச் சொல்லவில்லை. முதலமைச்சர் ஒரு அமைச்சரை விலத்த வேண்டும் என்றால் அவர் தனது விருப்பத்தை எழுத்து மூலம் ஆளுநருக்குத் தெரிவிக்கலாம்.  இப்போது கூட அவர்  அமைச்சர் டெனீஸ்வரனை பதவியில் இருந்து விலத்துமாறு ஆளுநருக்கு ஆலோசனை வழங்கலாம். அதற்கு தடையில்லை என மேன்முறையீட்டு மன்ற நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் தெளிவாகச்  சொல்லியிருக்கிறார்கள்.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும் எனக் கூறி அமைச்சர் டெனீஸ்வரன் மீண்டும் ஒரு வழக்கை ஓகஸ்ட் 6 ஆம் நாள் தாக்கல் செய்தார்.   இந்த வழக்கு செப்தெம்பர் 17 ஆம் நாள் விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை வழக்கை ஒத்திப் போடுமாறு விக்னேஸ்வரனது வழக்கறிஞர்கள் முன்வைத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்தோபர் 18 க்கு தள்ளிப் போட்டுள்ளது. நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவும் அதே திகதி  வரை நீடிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாள் விக்னேஸ்வரன், அனந்தி, சிவநேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த மேன் முறையீட்டு  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்திடம்  விண்ணப்பித்த போது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

எப்படியும் ததேகூ தன்னை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கும் என்று விக்னேஸ்வரன் நம்பியிருந்தார்அது தொடர்பாக சம்பந்தன் ஐயாவை நேரில் கண்டு பேசவும் வாய்ப்புக் கேட்டிருந்தார்அது சம்பந்தன் ஐயாவால் மறுக்கப்பட்டுள்ளது.

இப்படிப் பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கு ஒப்ப அவர் எடுக்கிற காரியங்கள் எல்லாம் கைகூடாமல் போய்க்கொன்டு இருக்கின்றனதோல்வி மேல் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தார்.

இப்போது வரியில்லாது அமெரிக்கன் டொலர் 65,000 (உரூபா ஒரு கோடிபெறுமதியான சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்ய விண்ணப்பித்த மனுவும் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முதலமைச்சரோ தனக்கு அமெரிக்க டொலர் 65,000 இல் சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்ய  சட்டப்படி உரிமை உண்டென்று பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கையில் காணப்படும் முக்கிய அம்சங்கள்.

வரியில்லாத கார்களை அமைச்சர்கள்முதலமைச்சர்கள்நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறக்குமதி செய்யலாம் என்பது ஒரு சலுகைஉரிமையில்லைஅமைச்சரவைதான் அப்படியான முடிவை எடுத்தது. அதே அமைச்சரவைதான் அப்படியான சலுகையை நாட்டின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி நிறுத்தியுள்ளது.

65 ஆயிரம் டொலர் பெறுமதியான தீர்வையற்ற வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அமைச்சரவை அனுமதி மறுத்தமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து  முதலமைச்சர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில் காணப்பட்ட அவரது முக்கிய வாதங்கள்.

(1) வடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
அதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி, தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் எனக்கு வழங்கவேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும், அதனை வழங்குமாறும் கேட்டுள்ளேன்.

(2) முதலமைச்சர் என்றவகையில் நான் கூடுதல் பெறுமதியுடைய 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றைப் பெற்றுக் கொள்வதற்குத்
தகுதியுடையவனாக இருந்த போதும் எனக்கும் 40,000 அமெரிக்க டொலருக்குக் குறைவான அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டிருந்தது. மற்றைய உறுப்பினர்களைப் போன்று எனக்கும் இந்த
அனுமதிப் பத்திரம் தரப்பட்டிருந்தது.

(3) அந்தத் தவறைத் திருத்த அமைச்சர்கள் குழாம் முன் அனுமதி பெறவேண்டியிருந்ததால் அதனைப் பெற்றுத் தருவதாக அமைச்சினால் கூறப்பட்டது. 40,000 டொலரோ 65,000 டொலரோ அனுமதிப்பத்திரம் இறக்குமதித் தீர்வை மட்டுந்தான் நீக்கியது. வாகனமானது அந்தப் பணத்தைச் செலுத்தியே இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. அதற்கான பணத்தை நான் என் மகனிடம் இருந்து பெற இருந்தேன்.

(4) அதன் பின் தற்செயலாகவே முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய வாகனம் 65,000 அமெரிக்க டொலர் பெறுமதி யுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய அனுமதிப் பத்திரமே என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

(5) அதேகால கட்டத்தில் இந்த அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனங்களை இறக்குமதி செய்வது ஒரு வருட காலத்திற்கு அரசினால் பிற்போடப்பட்டிருந்தது. எனவே அமைச்சர் பைசர் முஸ்தாபா அந்த அனுமதிப் பத்திரத்திற்கு வடமாகாண சபை முதலமைச்சர் உரித்துடையவர் என்பதை அமைச்சரவைக்குக் கூறி அனுமதி பெற விழைந்த போது நிதியமைச்சர் மங்கள சமரவீர இறக்குமதி பிற்போடப்பட்டுள்ளதால் அனு மதிப்பத்திரம் வழங்கலாகாது என்று கூறியதால் அமைச்சரவை அனுமதிப் பத்திரத்தை வழங்குவதைத் தடை செய்தார் எனக் கேள்விப்படுகின்றேன். ஆனால் வடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றியது.

(6) அவ்வாறு வரிச்சலுகை அனுமதிப் பத்திரத்தின் மீது அவ்வளவு ஈடுபாடுடையவனாக நான் இருந்திருப்பின் கிடைத்த அந்த அனுமதிப் பத்திரம் கைவசம் வந்தவுடனேயே அதனைப் பயன்படுத்தியிருப்பேன். அல்லது உயர் பெறுமதியுடைய புதிய அனுமதிப் பத்திரத்திற்காக உடனேயே விண்ணப்பித்திருப்பேன். தமது தவறை ஏற்று அமைச்சு அதனைச் சீர்செய்ய முன்வந்ததால்தான் நான் இதுகாறும் வாளாதிருந்தேன்.

இந்த நீண்ட அறிக்கை முதலமைச்சருக்கு வினைத்திறமை இல்லை  என்பதையே காட்டுகிறது.  அவருக்கு உரிமைக்கும் (right) சலுகைக்கும் (privilege) ள்ள வித்தியாசம் தெரியாமல் இடர்ப்படுகிறார்.வேலை செய்யும் ஒருவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் அவரது உரிமை. அவருக்கு ஓய்வூதியம் கொடுப்பது சலுகை.

முதலமைச்சர் யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் என அரச செலவில் விமானத்தில் பயணம் செய்வது ஒரு சலுகைஅது உரிமையில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சரியில்லைஅவர்களது அணுகுமுறை சரியில்லைபதவிக்காகவும் சலுகைகளுக்காகவும் பணத்துக்காகவும் தமிழ் இனத்தை விற்று விட்டார்கள் என விக்னேஸ்வரன் குற்றம் சாட்டி வருகிறார்.

இப்போது விக்னேஸ்வரன் அதே சலுகையை தனது உரிமை என்று சொல்லி வாதாடுகிறார். இப்படித் தனக்கொரு நியாயம் மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம் என்ற ஆணவப் போக்கே அவரிடம் தொடர்ந்து காணப்படுகிறது.

ஒரு கோடி உரூபா பெறுமதியான காரை இறக்குமதி செய்வதற்கு மகன் பணம் தருவார் என்பது நல்ல செய்திஅவரது மகன் கோடீசுவரனாக இருப்பது அதைவிட நல்ல செய்தி. அதே நேரம் 2013 ஆம் ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தலில் “தேர்தல் பரப்புரைக்கு என்னிடம் பணம் இல்லை. மாதா மாதம்  கிடைக்கிற ஓய்வூதியத்தில்தான்  வாழ்கிறேன். தேர்தலுக்கு செலவழிக்க என்னிடம் பணம் இல்லை என்று சொன்ன போது கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல இலட்சம் உரூபாய்களை அவருக்கு அனுப்பி வைத்தது.

2015 இல் நாடாளு மன்றத் தேர்தலுக்கு நிதி திரட்ட ஒரு இரவு விருந்து ஒழுங்கு செய்யப்பட்டது. அதில் கலந்து கொள்ளுமாறு விக்னேஸ்வரனுக்கு கனடா ததேகூ அழைப்பு விடுத்தது. “எனக்கு முதுகில் புண், நீண்ட நேரம் விமானப் பயணம் செய்ய முடியாது” என்று சொல்லி கைவிரித்து விட்டார். முதல் வகுப்பில் வரலாம், மருத்துவர் சத்தியலிங்கம் அவர்களையும் அழைத்துள்ளோம். அவரோடு வரலாம்” என்றோம்.  அப்போதும் அவர் மறுத்துவிட்டார். ஆனால் இது நடந்த சொற்ப காலத்தில் விக்னேஸ்வரன் அமெரிக்காவுக்குப் பறந்து சென்று பல  பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இலண்டனிலும் பல பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

“என்னை வைத்து இவர்கள் பணம் சேர்க்கப் பார்க்கிறார்கள்” என விக்னேஸ்வரன் தனது நெருங்கிய வட்டார நண்பர்களுக்குச் சொன்னதாக பின்னர் அறிந்து கொண்டோம்.

இப்போது அடுக்கடுக்காக நடக்கிற  பின்னடைவுகளைப் பார்த்தால் விக்னேஸ்வரனுக்கு  சனி  திசை  நடக்கிறது போல் தெரிகிறது!

ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply