தீர்வையற்ற வாகன அனுமதி சட்டப்படி எனக்குள்ள உரித்து அதனை உடன் வழங்குமாறு மங்களாவுக்கு விக்கி கடிதம்

தீர்வையற்ற வாகன அனுமதி சட்டப்படி எனக்குள்ள உரித்து அதனை உடன் வழங்குமாறு மங்களாவுக்கு விக்கி கடிதம்

நக்கீரன்

சும்மா சொல்லக் கூடாது. முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சாதகத்தில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருந்த காலம் போய்விட்டது. இப்போது அவருக்கு சனிதிசை.

எல்லா மட்டத்திலும் அவருக்குத் தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டு வருகிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது சட்டப்படி செல்லுபடியாகாது அவர் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருக்கிறார் என ஒரு இடைக்காலத் தீர்ப்பு அளித்துள்ளது.

அந்த இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறி அமைச்சர் டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அது பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு முதலமைச்சர் விண்ணப்பித்த போது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதே போல் டெனீஸ்வரன் தொடர்பாக அளித்த இடைக்காலத் தீர்ப்பை விலக்குமாறு கேட்டு முதலமைச்சர் வைத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எப்படியும் ததேகூ தன்னை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கும் என்று விக்னேஸ்வரன் நம்பியிருந்தார். அது தொடர்பாக சம்பந்தன் ஐயாவை நேரில் கண்டு பேசவும் வாய்ப்புக் கேட்டிருந்தார். அது சம்பந்தன் ஐயாவால் மறுக்கப்பட்டுள்ளது.

இப்படிப் பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கு ஒப்ப அவர் எடுக்கிற காரியங்கள் எல்லாம் கைகூடாமல் போய்க்கொன்டு இருக்கின்றன. தோல்வி மேல் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தார்.

இப்போது வரியில்லாது அமெரிக்கன் டொலர் 65,000 (உரூபா ஒரு கோடி) பெறுமதியான சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்ய விண்ணப்பித்த மனுவும் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முதலமைச்சரோ தனக்கு அமெரிக்க டொலர் 65,000 இல் சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்ய தனக்குச் சட்டப்படி உரிமை உண்டென்று பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுள்ளார்.

அதனைப் படிக்கும் போது இவர் எப்படி உச்ச நீதிமன்ற நீதியரசராக இருந்தார் என்பது வியப்பாக இருக்கிறது.

வரியில்லாத கார்களை அமைச்சர்கள், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறக்குமதி செய்யலாம் என்பது ஒரு சலுகை. உரிமையில்லை. அமைச்சரவைதான் அப்படியான முடிவை எடுத்தது. அதே அமைச்சரவைதான் அப்படியான சலுகையை நாட்டின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி நிறுத்தியுள்ளது.

“வடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
அதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி, தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் எனக்கு வழங்கவேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும், அதனை வழங்குமாறும் கேட்டுள்ளேன்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன்.”

முதலமைச்சருக்கு உரிமைக்கும் ( right) சலுகைக்கும் (privilege) வித்தியாசம் தெரியாமல் இடர்ப்படுகிறார். வேலை செய்யும் ஒருவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் அவரது உரிமை. ஓய்வூதியம் கொடுப்பது சலுகை.

முதலமைச்சர் யாழ்ப்பாணம்கொழும்புயாழ்ப்பாணம் என அரச செலவில் விமானத்தில் பயணம் செய்வது ஒரு சலுகை. அது உரிமையில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சரியில்லை, அவர்களது அணுகுமுறை சரியில்லை, பதவிக்காகவும் சலுகைகளுக்காகவும் பணத்துக்காகவும் தமிழ் இனத்தை விற்று விட்டார்கள் என விக்னேஸ்வரன் குற்றம் சாட்டி வருகிறார்.

இப்போது விக்னேஸ்வரன் அதே சலுகையை தனது உரிமை என்று சொல்லி வாதாடுகிறார்.

இப்படித் தனக்கொரு நியாயம் மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம் என்ற ஆணவப் போக்கே அவரிடம் காணப்படுகிறது.

ஒரு கோடி உரூபா பெறுமதியான காரை இறக்குமதி செய்வதற்கு மகன் பணம் தருவார் என்பது நல்ல செய்தி. அவரது மகன் கோடீசுவரனாக இருப்பது மெத்த மகிழ்ச்சியைத் தருகிறது.


தீர்வையற்ற வாகன அனுமதி சட்டப்படி எனக்குள்ள உரித்து அதனை உடன் வழங்குமாறு மங்களவுக்கு விக்கி கடிதம்

யாழ்ப்பாணம், ஒக். 06

வடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
அதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி, தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் எனக்கு வழங்கவேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும், அதனை வழங்குமாறும் கேட்டுள்ளேன்.
– இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன்.

65 ஆயிரம் டொலர் பெறுமதியான தீர்வையற்ற வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அமைச்சரவை அனுமதி மறுத்தமை தொடர்பில் ஊடகங்க
ளில் வெளியான செய்தி குறித்து வெளியிட்டுள்ள விளக்கத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

முதலமைச்சருக்குரிய இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பாகத் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் செய்திகளை முழுமையற்றனவாகவும் தமக்கு ஏற்றவிதத்திலும் தவறான வழியில் பிரசுரித்துப் பொதுமக்களுக்கு பல உண்மைக்குப் புறம்பான செய்திகளை வழங்கியிருக்கின்றமை வருத்தத்திற்குரியது.

இந்நிலையில் இதன் உண்மை நிலையை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய சூழ் நிலையில் இந்த அறிக்கையைப் பத்திரிகைகள் பிரசுரிப்பதற்காக அனுப்பி வைக்கின்றேன்.

இரண்டரை வருடங்கள் பூர்த்தி செய்த வடமாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த
இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரங்களினூடாக 40,000 அமெரிக்க டொலருக்குக் குறைவான வாகனமொன்றைத் தீர்வை நீக்கி இறக்குமதி செய்து பயன்படுத்த முடியும்.

முதலமைச்சர் என்றவகையில் நான் கூடுதல் பெறுமதியுடைய 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றைப் பெற்றுக் கொள்வதற்குத்
தகுதியுடையவனாக இருந்த போதும் எனக்கும் 40,000 அமெரிக்க டொலருக்குக் குறைவான அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டிருந்தது. மற்றைய உறுப்பினர்களைப் போன்று எனக்கும் இந்த
அனுமதிப் பத்திரம் தரப்பட்டிருந்தது.

அதன் பின் தற்செயலாகவே முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய வாகனம் 65,000 அமெரிக்க டொலர் பெறுமதி யுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய அனுமதிப் பத்திரமே என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே முன்னைய குறைந்த  முன்னைய குறைந்த அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்து எனது பதவிக்கு உரித்தான 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய அனுமதிப் பத்திரத்தை வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.

நாட்டின் மற்றைய முதலமைச்சர்கள் யாவருக்கும் இந்தக் கூடிய பெறுமதி வாய்ந்த வாகன அனுமதிப் பத்திரமே வழங்கப்பட்டிருந்தது.

அமைச்சின் கோரிக்கைக்கு இணங்க குறைந்த பெறுமதி வாகனத்திற்கான எனக்குத் தரப்பட்டஅனுமதிப் பத்திரம் அவர் களுக்கு திருப்பிஅனுப்பப்பட்டு அது இரத்துச் செய்யப்பட்டது. எனக்குக் கூடிய பெறுமதியுடைய வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என்றும் இது சம்பந்தமாகத் தவறு நேர்ந்திருந்தமையும் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

அந்தத் தவறைத் திருத்த அமைச்சர்கள் குழாம் முன் அனுமதி பெறவேண்டியிருந்ததால் அதனைப் பெற்றுத் தருவதாக அமைச்சினால் கூறப்பட்டது. 40,000 டொலரோ 65,000 டொலரோ அனுமதிப்பத்திரம் இறக்குமதித் தீர்வை மட்டுந்தான் நீக்கியது. வாகனமானது அந்தப் பணத்தைச் செலுத்தியே இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.

அதற்கான பணத்தை நான் என் மகனிடம் இருந்து பெற இருந்தேன்.

ஆனாலும் அமைச்சு அலுவலகங்களில் எனதுஅனுமதிப் பத்திரம் தொடர்பான கோரிக்கை பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டு கடந்த வாரமே அமைச்சரவை அனுமதிக்காக
சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதேகால கட்டத்தில் இந்த அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனங்களை இறக்குமதி செய்வது ஒரு வருட காலத்திற்கு அரசினால் பிற்போடப்பட்டிருந்தது.

எனவே அமைச்சர் பைசர் முஸ்தாபா அந்த அனுமதிப் பத்திரத்திற்கு வடமாகாண சபை முதலமைச்சர் உரித்துடையவர் என்பதை அமைச்சரவைக்குக் கூறி அனுமதி பெற விழைந்த போது நிதியமைச்சர் மங்கள சமரவீர இறக்குமதி பிற்போடப்பட்டுள்ளதால் அனு மதிப்பத்திரம் வழங்கலாகாது என்று கூறியதால் அமைச்சரவை அனுமதிப் பத்திரத்தை வழங்குவதைத் தடை செய்தார் எனக் கேள்விப்படுகின்றேன். ஆனால் வடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றியது.

அதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி அனுமதிப் பத்திரம் எனக்கு வழங்க வேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும், ஆனால் அதனை ஒரு வருடத்துக்கு நடைமுறைப்படுத்தாது வைத்திருப்பது எனது கடமை என்றும் கூறி அனு மதிப் பத்திரத்தை வழங்குமாறு கேட்டுள்ளேன்.

மற்றைய உறுப்பினர்களுக்கு அவர்களுக்குரிய குறைந்த தொகையிலான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு அவர்கள் ஏற்கனவே நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்கள் என்று அறிகின்றேன்.

என்னுடைய குறைந்த பெறுமதி வாகன அனுமதிப்பத்திரமோ அமைச்சினால் திரும்பப் பெற்று அது ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ரத்துச் செய்தமைக்குக் காரணம் அமைச்சரவை கூடிய பெறுமதிக்குரிய அனுமதிப் பத்திரத்தைக் கட்டாயம் வழங்கும் என்ற அவர்களின் திடமான நம்பிக்கையே.தற்போது கூடிய அனுமதிக்குரிய அனுமதிப் பத்திரமும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றியது. அதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி அனுமதிப் பத்திரம் எனக்கு வழங்க வேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும், ஆனால் அதனை ஒரு வருடத்துக்கு நடைமுறைப்படுத்தாது வைத்திருப்பது எனது கடமை என்றும் கூறி அனுமதிப் பத்திரத்தை வழங்குமாறு கேட்டுள்ளேன்.

இதனைச் சில கொழும்பு சிங்களப் பத்திரிகைகள் சரியாக பிரசுரித்தபோதும் ஆங்கிலப் பத்திரிகைகளும் தமிழ்ப் பத்திரிகைகளும் தங்கள் தங்கள் கைவண்ணங்களைக் காட்டியமையுடன், நான் ஏதோ வரிச்சலுகை அடிப்படையில் வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரத்திற்காக ஏங்கித் தவிக்கிறேன் எனவும் அது கிடைக்காததால் நான் குழப்பத்தில் உள்ளேன் எனவும் வர்ணனை செய்திருப்பது வருத்தத்திற்குரியது.

அவ்வாறு வரிச்சலுகை அனுமதிப் பத்திரத்தின் மீது அவ்வளவு ஈடுபாடுடையவனாக நான் இருந்திருப்பின் கிடைத்த அந்த அனுமதிப் பத்திரம் கைவசம் வந்தவுடனேயே அதனைப் பயன்படுத்தியிருப்பேன். அல்லது உயர் பெறுமதியுடைய புதிய அனுமதிப் பத்திரத்திற்காக உடனேயே விண்ணப்பித்திருப்பேன். தமது தவறை ஏற்று அமைச்சு அதனைச் சீர்செய்ய முன்வந்ததால்தான் நான் இதுகாறும் வாளாதிருந்தேன்.

எனினும் கடைசியாக அமைச்சர் அவைக்கு மேற்படி விடயம் வந்தபோது பாஸ்கரலிங்கம் அவர்களிடம், அனுமதிப்பத்திரம் பெறுவது எனது உரித்து என்றும், தடையை நடைமுறைப்படுத்துவது எனது கடமை என்றும் கூறியிருந்தேன். அதற்கு அவர் அமைச்சர்களுக்கு அது தெரியுந்தானே என்றார். அதனால் நான் நிம்மதியாக இருந்தேன். ஆனால் அமைச்சர்களுக்கு அது புரியவில்லை என்று இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.

அரசியல் ரீதியாக என்மீது ஏதாவது கோபங்களிருப்பின் எனது அரசியல் பற்றி நேரடியாக எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் விமர்சிக்கவேண்டும். அதனை விடுத்து இது போன்ற அற்பத்தனமான செய்திகளைப் பிரசுரித்து உங்கள் பத்திரிகையின் கெளரவத்தையும் பத்திரிகைத் தர்மத்தையும் குறைத்துக் கொள்ளாதீர்கள் எனக் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகைகளிடமும் ஆங்கிலப் பத்திரிகைகளிடமும் அன்புடன் வேண்டுகின்றேன். – என்றுள்ளது.(ஐ)


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply