இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 15,16, 17, 18, 19


பணத்தை தேடித் தேடி அலையாதே. பெண்களை நம்பாதே – சங்கரர் பகுதி 15

பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். ‘பெண்களை நம்பாதே’ பணத்தை தேடித் தேடி அலையாதே. பணத்தால் திவலை அளவு கூட நன்மையில்லை. பணத்தால் சத்யம் சாகடிக்கப்படும். சங்கரர் அத்வைத குட்டையைக் குழப்பிவிட்டார்


பஜ கோவிந்தத்தில் ஆதி சங்கரர் சொன்ன சேதிகளை யெல்லாம் அவரைப் பின்பற்றக் கூடியவர்கள் நிஜ கோவிந்தமாக காதில் வாங்கினார்களா? கடை பிடிக்கிறார்களா? பானை சோற்றுக்கு பதச் சோறாக சில ஸ்லோகங்களை மட்டும் பார்க்கலாம். .

‘அர்த்தம் அனர்த்தம் பாவைய நித்யம் நாஸ்தி தகஹா சுக வேஸஹா சத்யம்’

இதுவும் “பண” பக்தி பற்றிய ஸ்லோகம் தான். பணம் என்பதற்கு ஒன்றுமில்லை என்று தான் பொருள். பணத்தால் திவலை அளவுகூட நன்மையில்லை. பணத்தை தேடித் தேடி அலையாதே. பணத்தால் சத்யம் சாகடிக்கப்படும்.

உனக்குள்ளேயே கலகங்கள் நடக்கும். பணம் சம்பாதிப்பதைவிட அதைக் காப்பாற்றுவது கஷ்டம். நீ பணக்காரன். ஆனால், மித்ரன்கூட சத்ரு ஆகி விடுவான். அதாவது நண்பன் கூட பகைவன் ஆகிவிடுவான் என்ற ஆதிசங்கரர்,

‘புத்ராதபி தனபாஜாம் பீதிஹி’ என்றும் சொல்லுகிறார். இதற்கென்ன அருஞ்சொற் பொருள்? பணக்காரனுக்கு தன் மனைவி மக்களால் கூட ஆபத்து, பீதி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

இவ்வாறு, மண்ணாசை, பொன்னாசை உள்ளிட்ட ஆசைகளுக்கு அடித்தளமான, பணத்தை பற்றி குறிப்பிட்டுக் காட்டி எச்சரிக்கும் ஆதிசங்கரர் அடுத்து முக்கியமாக… பெண்ணாசையைப் பற்றி பொட்டில் அறைந்தாற் போல ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்:

“நாரீஸ் தனபர நாபீதேசம்த்ரிஷ்டவா மாதாமோஹாவேஸம்…” என்று போகிற இந்த சமஸ்கிருத கவிதையின் சாராம்ஸமே. ‘பெண்களை நம்பாதே’ என்பதுதான்.

பெண்கள் தங்களது பாவங்களையும், பாகங்களையும் காட்டி உங்களை மயக்கப் பார்ப்பார்கள். அவள் இருண்ட கேஸத்தில் சிக்கிக் கொண்டு நீ மோசம் போய்விடாதே. அந்த சிரிப்பு என்ற நெருப்பில் மாட்டிக் கொண்டு மாய்ந்து போய்விடாதே.

முக்கியமாக பாவி, பெண்களின் மேல் பாகங்களைப் பார்த்து மயங்கி விழுந்து விடாதே. பின்னர் அதிலிருந்து நீ எழுந்திருக்கவே முடியாது. அதனால் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள். உலகில் யாவும் பொய். பொண்ணு பொய். அவளது மெய் (உடம்பு) யும் பொய்.- என எச்சரிக்கை விடுக்கிறார் அன்றே ஆதிசங்கரர்!

இன்று நாம் சகஜமாக செய்தித்தாளில் படிக்கிற பல செய்திகளையும் வைத்துப் பார்க்கிறபோது, சந்யாசிகள் முதல் கொண்டு சினிமாப்பட ரசிகர்கள் வரைக்கும் சங்கரரின் அறிவுரை மற்றும் எச்சரிக்கை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?

ஒரு பக்கம் தீவிர கட்டுப்பாடுகளுடன் சந்யாசத்தை தழுவிக் கொண்ட சங்கரர் வேத கர்மாக்களை எதிர்ப்பதிலும் அதி தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார்.

அதற்காக… தான் சந்யாசியான க்ஷணத்திலேயே தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.

இதைவிட முக்கியமாக பிராமணர்களுக்கு வேத கர்மாக்களை செய்வதற்கு பிரதானமாக இருக்கக்கூடிய யக்ஞோபிதம் அதாவது பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். வேதம் பொய். அதன் கர்மாக்கள் பொய் என்ற நிலையில் தன் தோள்பட்டையில் பூணூல் என்னும் பொய்யை எப்படி தாங்கிக் கொண்டிருப்பது என்ற சிந்தனையின் அடிப்படையில் தான் அதை கழற்றி எறிந்தார் சங்கரர்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் தான் சங்கரர் மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சிகை (குடுமி) யக்ஞோபிதம் (பூணூல்) ஆகிய இரண்டும் கர்மாக்கள் செய்கையிலே பிராமணர்களுக்கு பிரதானம் என சாஸ்திரங்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில்…

சங்கரர் தடாலடியாக குடுமியை மழித்து, பூணூலை கழித்து சந்யாசியான விதம் அவர்களை அதிருப்தியாக்கியது.

சங்கரரின் இந்த செய்கைகள் ஏற்படுத்திய கோபத்தின் மீது இன்னொரு கோப அடுக்கை ஏற்படுத்தின – . அவரது உபதேசங்கள்.இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியிலே நான் குறிப்பிட்டுக் காட்டியதை போல… குழந்தாய்.. இந்தா பால், இதைக் குடித்து வளமோடு வாழு என்கிறது வேதம்.

உனக்கென உன்னை நம்பும் பெண்ணோடு இணைந்து வாழ்க்கையைச் சுகமாக நடத்துவாயாக. இதெல்லாம் கூடாது என சந்யாசம் பேசி வருபவர்களைச் சமூகத்துக்குள்ளேயே விடக்கூடாது. அவர்களை விரட்டியடியுங்கள் என சொல்கிறது வேதசாரம்.

இன்னும் உபநிஷது சொல்வது என்னவென்றால் ஜானாதீ இச்சதீ யததே…? அதாவது நாம் பார்ப்பதன் மேல் அறிவானது ஆசை கொள்ளும். ஆசையின் மிகுதியால் அந்த பொருளை அடைய பிரயத்தனம் செய்யும். பிரயத்தனம் செய்து அந்த ஆசைப்பட்ட பொருளை அடைந்தால் அதுதான் ஆனந்தம். இந்த ஆனந்தமே வாழ்க்கை. ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து முயற்சியில் வெற்றிபெற்று ஆனந்தப்படுவது தான் அறிவு -என்கிறது உபநிஷது.

ஆனால் சங்கரரின் அத்வைதம்… இவைகளுக்கு எதிரானவையாக இருந்ததால் வேதக்காரர்கள் சங்கரர் மீது சரமாரியாக கருத்துத் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்நிலையில் தான் சங்கரரை பின்பற்றியவர்களிலேயே இரண்டாக சிறு பிளவு ஏற்பட்டது.

உலகமே மாயம் என்று மாயாவாதத்தை ஒரு பிரிவினரும், மாயம் அல்ல, அது நம் அக்ஞானம் என்று ஒரு பிரிவினரும் முளைத்தனர்.சங்கரர் முழுக்க முழுக்க தன் தத்துவத்தை “Educated Class” அளவிலேயே கூறி வந்ததால், இந்த பிளவும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

மாறாக, வேதபககாரர்களின் எதிர்ப்பை சமாளிக்க சங்கரரே ஒரு முரண்பாட்டை சூடிக்கொண்டார். “வேதோ நித்யமதிய தாம்ததுஉதிதம் கர்ம ஸ்வனுஷ்டேதாம்காம்யே மதிஹி” அஃதாவது சித்த சுத்தியுடன் வேதம் சொன்ன கர்மாக்களை செய்தால் மோட்சம் எளிதில் பெறலாம் என்ற ரீதியில் சங்கரர் சொல்லி அத்வைத குட்டையைக் குழப்பிவிட்டார். — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


கர்மா,வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர்.  அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி…? பகுதி – 16 

வேத கர்மாக்களை செய்தால் எளிதில் மோட்சம் பெறலாம் – என சங்கரர் சொல்லி அத்வைத குட்டையை குழப்பிவிட்டார் என்பதை கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.குட்டைதான் குழம்பியது. அதில் குளித்தெழுந்த சங்கரர் குழம்பவில்லை. தன்னளவில் மாயாவாதத்தை விட்டு விலகாமல்தான் இருந்தார்.இது ஒரு பக்கம் இருக்க… ஆதிசங்கரருக்கும், ஆகமக்காரர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது.

ஆகமக்காரர்களா…? முதலில் ஆகமம் என்றால் என்ன? கடவுளை எப்படி வழிபடவேண்டும். என்னென்ன சம்பிரதாய சடங்குகள் விக்ரகத்துக்கு செய்யவேண்டும் என்பன போன்ற விதிமுறைகளையும் மேலும் பிறப்புக்குப் பிறகிலிருந்து இறப்புக்குப் பிறகுவரை ஒரு மனிதனுக்கு செய்ய வேண்டிய சடங்குகளையும் பற்றி சொல்வது தான் ஆகமம்.

ஆக மொத்தம் ஆகமம் என்பதற்கு வழிமுறை என்று பொருள்.இதில் வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு இரண்டு ஆகமங்களும், சைவ சம்பிரதாயத்துக்கு 63 ஆகமங்களும் இருக்கின்றன.

வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு வைகானச ஆகமம், பாஞ்சராத்ர ஆகமம்.

பெருமாளை எப்படியெல்லாம் ஆராதனை செய்யவேண்டும். அர்ச்சிக்க வேண்டும்… ஆகியவற்றை ‘விகனசர்’ என்பவர் வகுத்தார். எனவே, இது வைகானச ஆகமம் ஆயிற்று.

அடுத்ததாக… பெருமாளே இறங்கி வந்து ‘என்னை இப்படி இப்படியெல்லாம் பூஜிக்கவேண்டும். புனஸ்காரம் பண்ண வேண்டும், அர்ச்சிக்க வேண்டும், அலங்காரம் பண்ணவேண்டும்’ என தன்னை வழிபடும் முறைகளை அந்தப் பெருமாளே சிலரிடம் கூறியதாக ஒரு கருத்துரு காணப்படுகிறது. இதுவே பாஞ்சராத்ர ஆகமம் எனப்படுகிறது.

சைவ சம்பிரதாயத்துக்கு 63 ஆகமங்கள். அவற்றில் பலவற்றை இப்பொழுது புழக்கத்தில் பார்ப்பதே அபூர்வமாகி விட்டது.

சரி… இவைதான் ஆகமங்கள். அதாவது விக்ரக வடிவிலான தெய்வத்தை எப்படி ஆராதனை செய்யவேண்டும் என போதனை செய்த மந்திரங்கள் தான் ஆகமங்கள். இதையெல்லாம் சொன்ன ஆகமங்கள்… இதோடு இன்னொன்றையும் கூறின.

‘இப்படியெல்லாம் க்ரமங்களோடு பகவானை வழிபட்டால் தான் மோட்சம் கிட்டும்’ என்பது தான் அது. இங்கே தான் ஆதிசங்கரர் குறுக்கிட்டார். கண்டித்தார் என்றுகூட சொல்லலாம்.

கடவுள் மட்டும் தான் நிஜம். மற்ற அனைத்தும் மாயம், பொய். ஆகமங்கள் பொய்களை திரட்டி வந்து உண்மையை பூஜிக்கச் செய்கின்றன. அந்த உண்மையைக் கூட விக்ரகம் என்னும் பொய் வடிவமாகவே பார்க்கின்றன. இப்படியெல்லாம்… ஆகமக்காரர்களின் அறிவுரைகளை நம்பிக் கொண்டிருந்தால் மோட்சம் கிட்டாது. கடவுளின் கடாட்சமும் கிட்டாது. ஆகமங்கள் தவறு. அது அடியொற்றுவதும் தவறு என வாதிட்டார் ஆதிசங்கரர்.

அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி…?

சொன்னார்.“சத்ஸங்கத்வே நித்ஸங்கத்வம் நித்ஸங்கத்வே நிர்மோகத்வம் நிர்மோகத்வே நித்ஸலசித்தம் நித்ஸலசித்தே ஜீவன்முக்தி…” இந்த வரிகளுக்குள் வாழும் பொருள் என்ன?

சந்யாசிகள், சாதுக்கள், ஞானிகளின் தொடர்பு கிடைக்கும் போது உனக்கு உலகியல் மீதான நாட்டம் குறைகிறது. உலகியல் பற்று குறையும் போது உன் மனம் மோகத்தை முழுமையாக விட்டு விடுகிறது. மோகத்தை நீ விட்டுவிட்ட போது உனக்கு சலனம் இல்லாத சித்தம் வாய்க்கிறது. சித்தத்தில் சலனம் இல்லாமல் இருந்தாலே உனக்கு மோட்சம் கிடைக்கும். இதற்காக கர்மா, வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர்.

இப்படியாக வாழும் முறையிலிருந்து, மோட்ச தத்துவம் வரை பல இடங்களுக்கும் தன் காலடியால் கடந்து பரப்பிய ஆதிசங்கரர். தனது 32 வயதிலேயே மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறார்கள்.

அவர் பிறந்த இடம் காலடி என உறுதிபடச் சொல்வதுபோல்… அவர் இன்ன இடத்தில் தான் இறந்தார் என்பதற்கு எவ்வித தகவல் ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இமயமலைப் பக்கம் சென்றவர் திரும்பவேயில்லை என உறுதியற்ற தகவல்தான் நிலவுகிறது.

ஒருவேளை கிடைத்திருந்தால்… அவருக்கு அங்கே அவரை பின்பற்றியவர்கள் நினைவுச் சின்னம் அமைத்திருப்பார்களே அதுவும் இல்லை. அதனால்… ஆதிசங்கரர் இங்குதான் உயிர் நீத்தார் என்பதும் எங்கே எனத் தெரியவில்லை.

இந்த யூகங்கள் ஒருபுறம் இருக்க… சங்கரரின் காலம் பற்றியும் பல கணிப்புகள்! தனது “Discovery of India” என்னும் வலுவான வரலாற்று நூலில் ஆதிசங்கரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நேருஜி கூறுகிறார்.

இன்னும் சிலர்… நான்காம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு என்றெல்லாம் சொல்கிறார்கள். இவர்களைத் தூக்கி சமைக்காமலே சாப்பிடுவதுபோல் இன்னும் சிலர் சங்கரர் இரண்டாயிரத்து அய்நூறு வருடங்களுக்கு முற்பட்டவர் என்கிறார்கள் சகஜமாக.

இப்படி சில கணிப்புகள் திணிக்கப்பட்டாலும் பொதுவாக சங்கரர் கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டுக்காரர் தான். அதாவது இன்றைய காலத்திலிருந்து 1,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது தான் வரலாற்றை வடிகட்டிப் பார்க்கும்போது கொடிகட்டி நிற்கும் நிஜம்.

என்ன இது சங்கரர் அவதரித்தது முதல் முக்தியடைந்தது வரை சொல்லி முடித்துவிட்டாரே? சங்கரர் என்றால் மடங்கள் தானே ஞாபகம் வரும். அவற்றை ப்பற்றி ஒருவரி கூட சொல்லவில்லையே? என நீங்கள் கேட்பது என் செவிகளில் தீர்க்கமாக தெறிக்கிறது.

சங்கரமடங்கள் அனைத்தும் சங்கரருக்குப் பிறகு தானே ஆரம்பிக்கப்பட்டவை. அதை எப்படி சங்கரர் வாழ்க்கை வரலாற்றில் சொல்ல முடியும்.  அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


 மடங்கள் எப்படி தோன்றின.மடங்களுக்கான நோக்கம்? பகுதி – 17

மடங்கள் எப்படி தோன்றின.மடங்களுக்கான நோக்கம்? அப்படியானால்…சங்கரர் சகாப்தம் முடியும் வரை சங்கர மடங்கள் தோன்றவில்லையா?… அந்த மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து உண்மையில்லையா?… அவ்வாறே வைத்துக் கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன?…இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை சங்கரருக்குப் பிறகான நூற்றாண்டு காலம்தான் சொல்கிறது.

தான் போதித்த அத்வைத கருத்துக்களை தன் காலத்துக்குப் பின்னாலும், உலகம் முழுவதும் சென்று பரப்புமாறு தன் சிஷ்யர்களுக்கு ஆணையிட்டார் ஆதிசங்கரர்.
புத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின் சாரத்தை பெற்ற சங்கரர்… வைஷ்ணவர்களால் ‘ப்ரசன்ன பௌத்தர்’ என்றே அழைக்கப்பட்டார்.

அதாவது புத்தரின் கருத்துக்களை மறைமுகமாக சொன்னவர் என்பதால் இப்பெயரால் அழைக்கப்பட்டார். இதேபோல் ஆதி சங்கரரின் சிஷ்யர்களும்… ப்ரஸன்ன பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

சங்கரரர் காலத்துக்குப் பிறகு… அத்வைதத்தை பரப்ப முழுக்க முழுக்க முனைந்தார்கள் இந்த ப்ரஸன்ன பௌத்தர்கள். சங்கரரை போலவே ஊர் ஊராக சுற்றினார்கள்.

வாழ்வே பொய் எதையும் நம்பாதே. சந்நியாசம் பெறு…! என சுற்றிச் சுற்றி வலியுறுத்தினார்கள்.

‘தனேஷனே… பார்யஷனே… புத்ரேஷனே’… என சொல்லித்தான் அவர்கள் சந்நியாசம் ஏற்றார்கள். அதாவது செல்வ ஆசையை துறந்தேன். மனைவி (பெண்) இச்சையை மறந்தேன். அதன் மூலம் புத்ர விருப்பத்தை மறுத்தேன் என்பது தான் இந்த மூன்று வார்த்தைகளின் முழக்கம். இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டு சங்கரரை பரப்புவதற்காக நடந்த சிஷ்யர்கள் அலைந்து அலைந்து ஓர் முடிவுக்கு வந்தார்கள்.

“நமது குருநாதர் புத்தரிடமிருந்த சர்வம் சூன்யம் என்ற உபதேசத்தைத்தான் கைக்கொண்டு கடவுள் மட்டும் உண்மை மற்ற அனைத்துப் பொய் என சொன்னார்.

அப்படிப்பட்ட சங்கரரின் புத்தோபதேசத்தை பரப்ப… நாமும் புத்தரைப் பின்பற்றியவர்களின் யுக்தியை பின்பற்றலாமே”… என ஆலோசித்தனர். என்ன யுக்தி?…

இந்தத் தொடரின் முற்பகுதியில் புத்தரைப் பற்றி எழுதிய அத்தியாயங்களில் நான் ஒன்றை குறிப்பிட்டேனே ஞாபகம் இருக்கிறதா?…

“இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே… இது போன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்” என இத்தொடரில் 4-ஆவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த புத்த யுக்தியைதான் சங்கரரின் சிஷ்யர்கள் பின்பற்றலாமா என ஆலோசித்தனர். அதன்படியே ஆதிசங்கரரின் சிஷ்யர்கள்… புத்தர் விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தனர்.

ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள் திசைக்கு கொஞ்சம் பேராய் கொத்துக் கொத்தாய் நடந்தனர். தெற்கு திசை நோக்கி நடந்தவர்கள் சிருங்கேரியில் ஒரு மடத்தை எழுப்பி… அத்வைத பிரச்சாரத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள். கிழக்குப் பக்கமாக மாயாவாதத்தை பரப்ப சென்றவர்கள் பூரியில் மடத்தை நிர்மாணித்தார்கள்.

மேற்குப் பக்கமாய் அத்வைதம் பரப்புவதற்காக துவாரகையில் தொடங்கப்பட்டது மடம். வடக்குப் பகுதிக்கும் சென்றனர். பத்ரியில் சங்கரரின் கொள்கைகளை விரிவாக்க ஒரு மடத்தை நிர்மாணித்தனர். இவ்வாறு… சங்கரரின் முக்கியமான சிஷ்யர்களான சுரேஷ்வரன், ஆனந்தகிரி, பத்மநாபர், ஹஸ்தமலர் போன்றவர்கள் உள்ளிட்ட பல சிஷ்யர்கள் இந்த 4 மடங்களையும் நிர்மாணிக்கிறார்கள்.

ஆதிசங்கரரின் உபதேசத்திற்கு இணங்க… இம்மடங்களில் எந்தவிதமான பூஜை புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது. அத்வைதம் காட்டும் ஞான மார்க்கத்தின்படி… விக்ரக வழிபாடு கிடையாது. பூஜைகள் கிடையாது. கோவில்களுக்கும் மடங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகமங்கள் கிடையாது. வேதங்கள் சொன்ன கர்மங்கள் கூடாது.

சங்கர கொள்கைகளை பரப்புவதற்கான இம்மடங்களில் சமையல் செய்யக்கூடாது. பிச்சை எடுத்து சாப்பிடும் சந்நியாசிகள் தங்கும் இடத்தில் எதற்காக சமையல்?…

சமையல் இல்லையென்றால்… அதாவது நைவேத்யம் இல்லையென்றால் பிறகு அங்கே பூஜை எப்படி நடக்கும்? பூஜை இல்லையென்றால் அங்கே விக்ரகம் எப்படி இருக்கும்?

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால்… “Shankara Muths are only for proclamation of Advydam” அதாவது சங்கரரின் சிஷ்யர்களால் நிர்மாணிக்கப்பட்ட மடங்களின் முதல் மற்றும் முழுமையான பணி… அத்வைத கொள்கையை பறைசாற்றி… உலககெங்கும் பிரச்சாரம் செய்வதற்காகத்தானே மட்டுமன்றி… வேறெதற்கும் அல்ல…

இப்போது நீங்கள் கேட்கலாம் மடங்களுக்கான நோக்கம் இப்போதும் அதே அளவில் இருக்கிறதா?… சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?.. அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . (தொடரும்)


 சங்கரர், சங்கர மடங்களை ஸ்தாபித்தாரா? பகுதி – 18ஆதிசங்கரர் போதித்தபடி தான் அவர்தம் சிஷ்யர்களால் சிருஷ்டிக்கப்பட்ட மடங்கள் நடக்கின்றதா? ஆதி சங்கரரே மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?

இரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்.
வரலாற்றுச் செய்திகளை, வதந்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியே அண்ணாந்து பார்த்து ஆமாம் போடுவதல்ல அறிவு.


அதிலே சொல்லப்பட்டவற்றின் உள்ளே போய் உட்கார்ந்து சிந்தனை செய்து சரிபார்ப்பதுதான் முறை. அந்த முறையில்… சங்கரர், சங்கர மடங்களை ஸ்தாபித்தாரா?… என்பதை பார்க்கக் கடவோம்.

ஆதிசங்கரர் தனது முப்பத்து இரண்டாவது வயதிலேயே மோட்சமடைந்து விட்டார் என கொண்டு பார்த்தால், சாலை வசதிகள் தெளிவான பூகோள வழிகாட்டுதல்கள் என எவ்வித போக்குவரத்து தகவலமைப்பும் துளிகூட இல்லாத சங்கரரது காலத்தில் அவர் இந்தியா முழுமையும் சுற்றியிருக்க முடியுமா? என்பதே சிந்திக்கத் தகுந்ததாகிறது

.இன்றுகூட நெடுஞ்சாலைகளிலிருந்து கோபித்துக் கொண்டது போல் எத்தனை சிறு சிறு வீதிகள் விலகிச் செல்கின்றன. அவற்றின் வழியே எத்தனை கிராமங்கள் கல்லும் மண்ணும் கலந்த சந்துகளால் கட்டப்பட்டு கிடக்கின்றன. அந்த சின்னச் சின்ன சாலைகளைக் கடந்து அந்த கிராமத்துக்குள் செல்வதற்கு…விஞ்ஞானம் வளர்ந்த இக்காலத்திலேயே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? கால விரயம் ஆகிறது?

அப்படியென்றால் விஞ்ஞானம் வளராத- ஞானம் வளர்ந்த காலத்தில் வாழ்ந்த சங்கரர் தன் காலத்தில் எத்தனை வியாக்யானங்கள் பாஷ்யங்கள் செய்திருக்கிறார்.

இவ்வளவையும் மூலநூல்கள் பார்த்து படித்து உணர்ந்து தெளிந்து பாஷ்யமாக மாற்றி இயற்றுவதற்கு சங்கரருக்கு குறிப்பிட்ட காலம் நிச்சயமாக பிடித்திருக்கும். இந்த பெருங்காரியத்தோடு ஊரெங்கும் சுற்றி கால் நடையாகவே சுற்றி… அத்வைதத்தை பரப்பியும் வந்திருக்கிறார்.

கால தேவனின் குளிர், வெப்ப ஜாலங்களில் பயணித்து… இன்று இந்தியா என்று சொல்கிறோமே இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் பரவலாக சுற்றி வந்திருக்க சங்கரருக்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கும்.

ஊர் ஊராக போய் உடனே மடம் நிர்மாணிப்பதை சங்கரர் முக்கிய கடமையாக கருதவில்லை. சென்ற உடனேயே அங்கே மடம் ஆரம்பிக்க வேண்டிய அவசியமும் சங்கரருக்கு இருந்திருப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில்… தெற்கே சிருங்கேரியிலிருந்து வடக்கே பத்ரிநாத்… கிழக்கே பூரி, மேற்கே துவாரகா என திக்குக்கு ஒன்றாய்… எக்கச்சக்க தொலைவுகளை இவ்வளவு இளவயதில் முக்தியடைந்த சங்கரர் பயணித்து மடங்களை நிர்மாணித்தார் என்பதை காலக்கணக்கு கேள்வி கேட்கிறது.

அடுத்ததாக…சங்கரர் முக்தியடைந்த அந்த புண்ணிய பூமி எங்கே இருக்கிறதென இதுவரை இறுதியாக தெரிய வரவில்லை. ஒருவேளை சங்கரரே இந்த நான்கு மடங்களையும் தன் ஆயுளுக்குள் ஸ்தாபித்ததாக கருதிக் கொள்வோம்.

அப்படியானால்… சங்கரர் முக்திபெற்ற பிறகு. அவர்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, மரியாதையின் காரணமாக… அவர் போதனையை கேட்டவர்கள் என்பதன் காரணமாக… சிஷ்யர்கள், சங்கரருக்கு அவர் ஸ்தாபித்த ஏதாவது ஒரு மடத்தில் அவருக்கு சமாதி அமைத்திருப்பார்களே அவர் ஸ்தாபித்த மடத்துக்கு இதைவிட வேறென்ன பெருமை கிடைத்திருக்க முடியும்?.

சரி… சங்கரரே என் இறப்பும் ஒரு பொய்தான். அதனால் என்னை நான் நிர்மாணித்த மடங்களில் ஒன்றில் அடக்கம் செய்து மடத்தின் நோக்கத்தை கெடுத்து விடாதீர்கள் என்று சிஷ்யர்களிடம் சொல்லியதாக வைத்துக் கொள்வோம்.

அப்படியிருப்பின் சங்கரர் முக்தி பெற்ற ஸ்தலத்திலேயே அவருக்கு ஜீவசமாதி எழுப்பியிருக்க மாட்டார்களா? அதுவும் தேடலில் காணக் கிடைக்கவில்லையே. இந்த கேள்விக் குறிகளையெல்லாம் ஒரு பக்கம் வையுங்கள்.

இன்னொரு பக்கம் சங்கரர்… சங்கர மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு தெய்வங்களே சாட்சி சொல்கின்றன.

தெய்வ சாட்சியா? ஆமாம். கடந்த அத்தியாயத்துக்கு, முதல் அத்தியாயத்தில் தான்… மோட்சம் பெறுவதற்கு சங்கரர் அருளிய ஸ்லோகத்தை சொல்லியிருந்தேன். அதாவது… சந்நியாசிகளின் நற்சம்பந்தம் பெற்று அதன்மூலம் உலகியல் பற்றை ஒழித்து… மோகத்தை துறந்து… அதன் அடிப்படையில் சித்தம் சலனம் இன்றி இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று.

இதைச் சொன்ன சங்கரர்… விக்ரஹ வழிபாட்டை வலியுறுத்திய ஆகமக்காரர்களை கண்டித்த கதையையும் சொல்லியிருந்தேன். அதாவது… மனசு சுத்தமானாதான் மோட்சமே தவிர… அப்படி, இப்படி, என விக்ரக வழிபாடுகளால் அல்ல என்பது சங்கரோபதேசம். இப்படிப்பட்ட சங்கரர்… தான் மடங்களை நிர்மாணித்து அதில் ஆஹம ரீதியான வழிபாடுகளை நடத்தியிருப்பாரா…?

அதிலும் ‘அகம் ப்ரம்மம்’ என்று சொன்ன சங்கரரின் மடங்களில் நிலவும் வழிபாடுகளைக் கவனியுங்கள்.]

தெற்கே உள்ள சிருங்கேரி மடத்தில் சாரதாதேவி வழிபாடு… கிழக்கே உள்ள பூரி மடத்தில் க்ருஷ்ண உபாசனை, வடக்கேயுள்ள பத்ரிநாத் மடத்தில் சில வழிபாடு… மேற்கே இருக்கிற துவாரகையில் கிருஷ்ண துதி இப்படியாக 4 மடங்களிலும் விக்ரக வழிபாடு… மூர்த்தி உபாஸனை.

அதுவும் வெவ்வேறு தெய்வ வழிபாடு… சங்கரரே உண்மையில் மடங்களை ஸ்தாபித்திருந்தால் இப்படிப்பட்ட முரண்பாடுகளை முடிச்சு போட்டிருப்பாரா?

இதற்கெல்லாம் சிலர் பதில் சொல்லலாம். ‘சங்கரர்தான் மடங்களை ஸ்தாபித்தார்.அவரது சிஷ்யர்கள் காலத்தில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்’ என்று. சபாஷ். இந்த பதில்தான் முதல் கேள்விக்கு பதில். அதாவது… சங்கரர் போதித்தபடி தான் மடங்கள் நடக்கின்றதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைத்து விட்டதே.

அடுத்ததாக 4 மடங்கள் தானா காஞ்சி மடத்தைப் பற்றி சொல்லவே இல்லையே? இந்த கேள்வி காதில் கேட்கிறது எங்களைப் போன்றவர்களுக்கு. அது கும்பகோண மடம்தான்.- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது. மடாதிபதி என்றால் யார்…? கும்பகோணம் மடமா? காஞ்சி மடமா? பகுதி 19

இந்தக் கேள்விக்குள் நுழைவதற்கு முன்பு, 500 வருடங்கள் பின்னால் போய் அதோ அந்த சிருங்கேரி மடத்தின் வாசலில் நில்லுங்களேன். இன்றைய பெங்களூரிலிருந்து சில மணித்துளிகள் வாகனப் பயணம். அங்கே ஷிமோகா இயற்கையின் அழகு அமோகமாய் மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறி இறங்கி தவழ்ந்து கொண்டிருக்கிறது.

இங்கிருந்து சுமார் 100. கிலோமீட்டர் கடந்து… தண்மையான துங்கா நதியின் மத்திய கருநாடகாவிலுள்ள இந்த சிருங்கேரியில் தான் சங்கரத்துவத்தின் தென்பகுதி மடம் எளிமையாக அமைந்திருந்த குடில் போன்ற தோற்றம் கொண்ட இம் மடத்தின் வாசலில் ஆங்காங்கே சில பிராமணர்களின் பேச்சுக்குரல்.

மடத்துக்கு உள்ளே சந்நியாசிகள் அமர்ந்திருக்க… அங்கேயும் சில பிராமணர்கள், பல நாள்கள் வெளியே சுற்றித் திரிந்த அத்வைத சந்யாசிகள் அன்றுதான் மடத்துக்கு வந்திருப்பார்கள் போலும்.

அதனால்தான் இந்த பக்தி பரபரப்பு. இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்வது விசேஷம். மடத்தை மையமாக வைத்தபடி அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில்தான் சுற்றித் திரிந்து அத்வைதம் பரப்பவேண்டும்.

அதேபோல, அதே பகுதிகளில் வாழ்பவர்கள்தான் அம்மடத்துக்குள் வந்து ஸ்வாமிகளிடம் தரிசனமோ, தீட்சையோ பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டிருந்தது.

அந்த எல்லையை விட்டு மடாதிபதிகளும் வெளியே போகக்கூடாது. அந்த எல்லையைத் தாண்டிய பக்தர்களும் அம்மடத்துக்கு வரக்கூடாது. இந்த இடத்தில் மடாதிபதி என்றால் யார்…? என்ற கேள்வி எழும்.

மடங்களின் அதிபதி மடாதிபதி. அதிபதி என்றால் மடத்துக்குப் பொறுப்பானவர் அதாவது இருக்கும் சந்யாச சிஷ்யர்களிலேயே சந்யாச காலத்தில் மூத்தவர்கள் மடாதிபதி என அழைக்கப்படுவார்.

அவருக்கு அடுத்தது சந்யாசகாலம் பெற்றவர். அடுத்த மடாதிபதியாக வருவார். இதுதான் மடாதிபதி என்பதன் பொருள்.

மாறாக மடத்துக்கு வருவாய் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு நிருவாகம் செய்பவர் அல்ல அதாவது… அந்த காலத்திலெல்லாம் சங்கர மடங்களில் நிறைய சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள்.

சந்யாசம் வாங்கிக்கொண்டு செயல் பட்டிருக்கிறார்கள். அவர்களில் அதிக அளவு சந்யாச காலம் பெற்றவர் மடாதிபதியாகிறார். அதாவது The Senior Saint becomes seer இந்த சின்ன விளக்கத்துக்குப் பிறகு மறுபடியும் சிருங்கேரி மடத்தின் வாசலுக்கு வந்துவிட்டீர்களா?

அப்படி ஒரு மூத்த சந்யாசி மடாதிபதியாக வீற்றிருந்தார் மடத்தில். அவரைப் பார்த்து தரிசித்து வணங்கி மகிழ்ந்துவிட்டு திருப்திபட்டுக் கொண்டவாறே சில பிராமணர்கள் வெளியே வந்தனர்.

அப்போது சில யுவஸ்திரீகள் சங்கர மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக உள்ளே நுழைய…“நில்லுங்கள்” என்றது மடத்துக்காரரின் குரல் நீங்களெல்லாம் உள்ளே வரக்கூடாது. ஸ்வாமிகள் உங்களை பார்க்கமாட்டார். நீங்கள் கொண்டு வருபவற்றை ஸ்வீகரிக்க மாட்டார். போய்விடுங்கள். ”“ஏன்…?” கையில் பழங்களை வைத்திருந்த பெண்கள் திரும்பக் கேட்டனர்.

“ஏனென்றால் நீங்களெல்லாம் ஸ்திரீகள். உங்கள் சம்பந்தம் வேண்டாம். உங்களால் உண்டாகும் இன்பங்களெல்லாம் வேண்டாம். புத்ர சுகம்… முதலான லவுகீக வஸ்துகளெல்லாம் வேண்டாம் என்றுதானே சந்யாசம் பெற்றிருக்கிறார். பிறகு எப்படி உங்களை நோக்குவார். பிக்க்ஷாந்திக்காக வந்தால் அப்போது இப்பழக்கங்களை இடுங்கள். இப்போது திரும்ப நடங்கள்” என நீண்டதொரு விளக்கம் சொல்லி வைத்தார் மடத்துக்காரர்.

ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது என்பது சங்கர மடங்களில் ஆரம்ப காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாட்டு நெறிமுறை. அந்த இளம் பருவத்து ஸ்திரீகள் மடத்தை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்து போனார்கள்.

இதற்குப் பின்னர் அதே மடத்துக்கு இன்னும் சில பிராமணர்கள் கொத்தாக வந்தனர். அதே ரீதியில் அவர்களும் தடுக்கப்பட்டனர்.

“ஏனப்பா? நாங்கள் என்ன ஸ்திரீகளா? அத்வைதிகள்தான். அனுமதிக்க வேண்டியது தானே…?”“இல்லை உங்களுக்கு அனுமதி இல்லை?”“அனுமதி இல்லையா? ஏன்?”

இக்கேள்விக்கு அம் மடத்துக்காரர்கள் சொன்ன பதிலுக்குப்பின் ஒரு கதை.

மடங்களுக்கென்று ஓர் எல்லை நிருணயிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் பக்தர்களும் மடாதிபதிகளும் செயல் படுகிறார்கள் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்த வகையில் சிருங்கேரி மடத்துக்குட்பட்ட எல்லையில் இன்றைய தமிழ்நாடும் அடங்கும்.

தமிழ்ப் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள் ஷிமோகா மாவட்டத்திலும் மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர். அவர்களில் வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் என பரிசுகளாகக் கொடுத்தனர்.

அவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ்ப் பிராமணர்கள்தான் கொத்துக் கொத்தாக போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ மொழியைப் பார்த்தோ சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.

“நீங்கள் தமிழ்நாட்டுப் பூர்வீக பிராமணர்கள்தானே…”“ஆமாம்… அதற்கென்ன?…”“நீங்கள் சிறீமடத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் அதனால் உங்களுக்கு இங்கே ப்ராப்தம் இல்லை.” என்றனர் மடத்துக்காரர்கள்.

“தென்தேசம் முழுதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக் குட்பட்டதுதானே… நாங்களும் தென்தேசக் காரர்கள்தானே?.”

“பூகோள எல்லை கிடக்கட்டும் … உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி, பின்பற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு தோஷக்காரர்கள் இம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு அனுமதி இல்லை…”

கருநாடக மண்ணில் ‘தமிழர்கள்’ முதன்முதலாக அனுமதி மறுக்கப்படாதது. இந்த சமயத்தில்தானோ என நினைக்கிறேன். – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply