இந்துமதம் எங்கே போகிறது? பகுதி 34, 35,36,37, 38

  சூத்ரன் அர்த்தம் என்ன? பெண்ணை கேசத்தால் ஏரில் கட்டினான் பகுதி 34 

சூத்திரர்களுக்கு மோட்சம் கிடையாது. (பிராமண) பெண்களுக்கும் மோட்சம் கிடையாது என அபசூத்ராதிஹரணத்தில் ராமானுஜர் அருளியிருந்ததை பார்த்தோம்.

சூத்ரன் என்று அடிக்கடி சொல்கிறோமே?… இச் சொல்லின் அர்த்தம் என்ன? சூசம்+த்ராதி-சூசம் என்றால் கடின உழைப்பால் ஏற்படும் கஷ்டம் என்று பொருள் த்ராதி என்றால்? அதை விரட்டுபவன்.

அதாவது கடின உழைப்பின் கஷ்டத்தை தானே பெற்று… அந்த கஷ்டத்தை உனக்கு வராமல் விரட்டுகிறவன் தான் சூத்ரன். இன்னும் சொல்லப்போனால் தான் உழைத்து உனக்கு சுகம் கொடுப்பவன்’ என்கிறது சமஸ்கிருத மொழி.

அப்படித்தான் பெண்களையும் சூத்ர மரியாதை கொடுத்து வைத்திருந்தார்கள். பெண்களுக்கு என்றுமே இந்த நிலைதானா?… இந்த கேள்வியை சற்று ஆழமாகவே அலச வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

வேதம் தோன்ற முனைந்த காலகட்டத்திலும், வேத காலத்திலும் பெண்கள் எப்படி இருந்தனர். அவர்கள் ஆரம்பத்திலேயே ஆண்களால் அடக்கப்பட்டனரா?… வழிபடப்பட்டார்களா…?

சமுதாயம், மதம் என கட்டுமானங்கள் ஏற்பட்ட பிறகு பெண்ணின் முக்யத்துவம் எப்படி இருந்தது?… இந்த கேள்விக்கான விடைகள் அன்று முதல் இன்றுவரை என்ன?…

ப்ரிமிட்டிவ் கல்ச்சர் (Primitive culture) காலம் அதாவது நாகரிகத்தின் தொடக்க காலம் (theintitial stage of cvilization)… இதற்கும் முன்னால் நாகரீகம் வளராத காலம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஆணும், பெண்ணும் நிர்வாணமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவளால்தான் நாம் பிறந்தோம் என அவனுக்கு தெரியாது. அவனை நாம்தான் பெற்றெடுக்கிறோம் என அவளுக்கு தெரியாது. அதாவது… ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை போட்டு வைத்திருந்த முடிச்சை அவிழ்க்கத் தெரியாத அறியாமைக் காலம் அது.

வெட்கம் கிடையாது. காமத்துக்கு வடிகால் அவள்தான் என்றோ… அவன் தான் என்றோ இருபாலருக்கும் கண்டுபிடிக்கத் தெரியாத காலம்.

இப்படிப்பட்ட காலத்தில் ஆண் கூட்டம் தனியாக அலைந்து கொண்டிருக்கும் மரங்களில் ஏறுவது… பழங்களை பறிப்பது தொப்பென கீழே விழுவது… இப்படி மலை, காடு மேடுகளில் ஊர்ந்து கொண்டிருந்த மனிதன் பெண்ணை முழுதாக நிமிர்ந்து பார்த்தான்.

தன் கை, கால்களை ஒரு தடவை பார்த்துக் கொண்டான். முகத்தை தடவி மூக்கை பிடித்துப் பார்த்தான் தன் வாய்க்குள் கையை விட்டுப் பார்த்தான். காதுகளை சுண்டிக் கொண்டான். கன்னத்தை தட்டிக் கொண்டான். மறுபடியும் தன்னை கால்களிலிருந்து கழுத்து வரை கண்களால் அளந்தான்.
பிறகு பெண்ணை இன்னொரு முறை திரும்பிப் பார்த்தவன், அச்சு அசலாய் தன்னைப் போலவே அவள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான்.

சில வித்தியாசங்கள்… அவளுக்கு மார்பகங்கள் திரண்டு நின்றன. கேசம் இடுப்பு வரைக்கும் ரோமநார்களாய் தொங்கிக் கொண்டிருந்தன. கன்னங்கரேரென முகத்தைச் சுற்றி மறைத்து நின்ற கேஸத்தை பார்த்ததும்… ஆதிமனிதனுக்கு முதலில் வந்தது பீதி.

‘அய்யோ… பேய்… பிசாசு… மிருகம்…’ என அக்காலத்தில் அவன் பயம் கொள்ளத்தக்க விஷயங்களை பட்டியல் போட்டான்.
சத்தம் கேட்டு பக்கத்தில் நின்ற ஒரு சிலர் ஓடி வந்தனர்.

அனைவரும் அவளைப் பார்த்து… அவளின் தலைவிரி கோலத்தை பார்த்து மிரண்ட விழிகளைப் பார்த்து பயந்தனர். ‘அய்யோ பேயை, பிசாசை அடித்து விரட்டணும்’ என்ற முடிவுக்கு வந்து கம்பு, கல், மண் என கண்டதையும் எடுத்து அடித்தான். பெண்ணைக் கண்டதும் ஆணுக்கு ஏற்பட்ட முதல் உணர்வு பயம்தான். ஆனால் இந்த பயம் நீடித்ததா?

கூந்தலை அவள் ஒதுக்கியபோது தான் முகத்தின் அழகு முழுதாய் தெரிந்தது. காலப்போக்கில் இயற்கையின் தத்துவம் விளங்கத் தொடங்கியது. முதலில் பெண்ணைப் பார்த்து பயந்தவன்… பெண்ணை பயமுறுத்தத் தொடங்கினான். அவள் கூந்தலை பிடித்து இழுத்தான். அடித்தான் அவளது மிரட்சி இவனது மிரட்டலை அதிகப்படுத்தியது.

நாகரீகத்தின் தொடக்க காலத்தில் சமவெளிகளில் வாழ்ந்த மனிதன்… விவசாயம் செய்யத் தொடங்கியபோத ஏர் போன்ற கருவி செய்தான். அப்போது விலங்குகளை எல்லாம் கண்டு வெகுவாக பயந்ததால் அவைகளிடமிருந்து விலகியே இருந்த மனிதன் அவைகளை பழக்குவதற்குரிய பரிணாம வளர்ச்சி இல்லாத நிலையில்…

ஏரில் பூட்டி உழவு செய்வதற்கு என்ன செய்வது என யோசித்தபோது தான்… மிரண்டு கிடந்த பெண்கள் அவனது யோசனையில் வர ஆரம்பித்தனர்.

என்ன சொன்னாலும் கேட்ட பெண்களில் கூந்தலை பிடித்து இழுத்து வந்தான்… அந்த சடை முடியை இழுத்து ஏரின் நுனியில் கட்டினான். அவர்களது பின்னங்கழுத்தில் ஏரை சுமத்தி பெண்களைக் கொண்டே உழவு செய்ய ஆரம்பித்தான். மட்டுமா?

கம்பை கொண்டு அடித்து அவர்களை துரிதப்படுத்தினான். கழுத்து வலி தாளாத பெண்கள் கதறினர். ஆனாலும் ஆதிமனிதன் விடவில்லை. அவர்கள் அழுதபடியே உழுதார்கள். ஆணை பார்த்து தொழுதார்கள்.

இதை உங்களால் மனக்கண்ணில் யூகிக்க முடிகிறதா?… முடியவில்லை என்றால்… ‘பழநி’ என்ற பழைய சினிமாவில் ஒரு காட்சி வரும் (என்னடா… தாத்தாச்சாரியார் சினிமாவை எல்லாம் ஆன்மீக தொடரில் சம்பந்தப்படுத்து கிறாரே… என எண்ணாதீர்கள். மக்களுக்கு பல உண்மைகளைச் சொல்ல வேண்டி வரும்போது அவர்களுக்கு எது புரிகிறதோ அந்த வழியில் சொல்லிட வேண்டுமல்லவா?

இனி அந்த சினிமா காட்சி… அண்ணன் தம்பிகள் பாகப் பிரிவினையின்போது சிவாஜிக்கு கரடுமுரடான கட்டாந்தரைதான் வாய்க்கும். அவருக்கோ அதை பண்படுத்த மாடுகள் வாங்கக்கூட முடியாத வறுமை நிலை அப்போது. ஏரில் தன் குடும்பப் பெண்களையே பூட்டி உழவு செய்வார்.

ஏரின் நுகத்தடி பெண்ணின் புரடியில் இருக்கும். சிவாஜி அந்தப் பெண்களை சாட்டையால் அடித்து ஏரை செலுத்துவார். இப்படியாக அமைக்கப் பட்டிருக்கிறது அந்த சினிமாக் காட்சி.

இதே கற்பனைக் காட்சிதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிஜக்காட்சியாக நடை பெற்றிருக்கிறது. கேசத்தை கண்டு பயந்தவனே பெண்ணை கேசத்தால் ஏரில் கட்டினான். பிறகு…?-
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும் )


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 33. ப்ராமண ஸ்த்ரீகளும் சூத்ரர்கள்தான். அதனால் அவர்களுக்கு மோட்சம் கிடையாது. பகவானுக்கு உருவம் உண்டு? கிடையாது?

பகுதி 35. பெண் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும்.


பெண் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும் பகுதி 35 

பெண்களை பிசாசு, மிருகம் என கர்ணக் கொடூரமாய் வர்ணித்து பார்த்தவன். அவள் கர்ப்பவதியாய் இருப்பதை பார்த்தான். அடிவயிறு புடைத்து அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்ததை பார்த்த அவனுக்குள் ‘சரிதான் இவள் ராட்சதப் பிசாசு தான்……

நாகரீகம் முளை விடுவதற்கு முன்பு மூளை இருந்தும் சிந்திக்கத் தெரியாத அறியாமை பொந்துக்குள் வாழ்ந்த மனிதன் பெண்களை ஏரில் கட்டி உழுத கொடுங்கதையை பார்த்தோம்.

இந்த காலகட்டம் தாண்டி வேதம் தோன்ற முனைந்த காலத்தில் அவர்மீது கொஞ்சமாய் நாகரீக வெளிச்சம் கொட்டியிருந்தது. ஆனாலும் பெண்ணின் மீதிருந்த பயம் மிரட்டலாய் மாறியிருந்தது.

ஏற்கெனவே பெண்களை பிசாசு, மிருகம் என கர்ணக் கொடூரமாய் வர்ணித்து பார்த்தவன். அவள் கர்ப்பவதியாய் இருப்பதை பார்த்தான். அடிவயிறு புடைத்து அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்ததை பார்த்த அவனுக்குள் ‘சரிதான் இவள் ராட்சதப் பிசாசு தான். சில நாள் முன் சப்பையாய் இருந்தாள். இப்போது திடீரென உப்பித் திரிகிறாளே’ என்ற தீர்மானம் பளிச்சிட்டது.

இப்போது கல்லெடுக்கவில்லை. கம்பெடுக்கவில்லை. அக்கினியை மூட்டினான். அவள் அருகில் எரிய வைத்தான் எதற்கு? அவளுக்குள் இன்னொரு பிசாசு புகுந்து வீங்கியிருக்கிறது. அதை விரட்டத்தான் இங்கு அக்னி சூட்டுக்கு பயந்து பிசாசு ஓட்டம் எடுக்கும் என நம்பினான். அதனால் பற்ற வைத்தான்.

இதுவே வேதத்தில் ஜாதகர்மா என்ற ஹோமமாக வடிவம் பெற்றது. முதன்முதலில் கர்ப்பிணியை பிசாசுக்குள் பிசாசு என நினைத்து விரட்ட நெருப்பு பற்ற வைத்த மூடநம்பிக்கையை முழுதாக தத்தெடுத்துக் கொண்டது வேதம்.

வேதம் என்றால் பற்பல ரிஷிகள் சேர்ந்து செய்த நெறிமுறைக்கு கட்டுப்பாடுகள்தான் என்பதை இக்கட்டுரைத் தொடரின் முதலாம் அத்தியாயத்திலேயே பார்த்தோம் அல்லவா?

அப்படித்தான் இந்தப் பழக்கத்தையும் தன்னுள் தரித்துக் கொண்டது வேதம்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த ஜாதகர்மா என்ற ‘தீ வைக்கும்’ பழக்கத்தை இன்றும் தங்கள் பிழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பிராமணர்கள். கல்யாண வைபோகங்களில் ஜாதகர்மா என்றொரு ஹோமச் சடங்கை நடத்துகிறார்கள்.

இங்கே இதன் அர்த்தம் என்ன தெரியுமா? மணமகளாய் அமர்ந்திருக்கும் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகளை பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் அண்டக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சடங்கு.

காட்டுக்கு நடுவே அன்றைய மனிதன் தீயின்மீது மூடநம்பிக்கையே இன்னும் நவநாகரீக உலகத்தில் வாழும் அப்படியே பின்பற்ற மனிதன் பார்க்கிறான் என்றால் அந்த வேகத் தீயின் வீச்சைப் பாருங்கள்.

பெண்களை இதுபோல் பயம் தரும் கோபம் தரும் ஜந்துவாய் சித்தரித்தவன் மெல்ல மெல்லதான் அவளது அழகைப் பார்க்க ஆரம்பித்தான்.

இதையும் வேதம் எப்படித் தெரியுமா சொல்கிறது? இந்த உலகம் ஆற்றுப் படுவதற்கு Relaxation இயற்கையும் பெண்களும் தான் மூல காரணம். அவர்கள் இருவரிடமும்தான் உலகை சாந்தப்படுத்தும் சக்தி. அழகு என்ற ரூபத்தில் நிரம்பிக் கிடக்கிறது.

அதனால் அதனால்?புரந்திர் யோஷா ஜாதாம்அப்படியென்றால்? தேவனே பெண்களை எப்போதும் அழகாகவே வைத்திருப்பாயாக. அப்போதுதான் உலகமும் வாழ்க்கையும் அழகாக இருக்கும்.இது பிராமணர்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகளாக வேதம் வகுத்தவற்றில் ஒன்று.அதாவதுஇது ‘Vedic Prayer’ என அழைக்கப்படும் இன்னின்ன வேண்டும் என தெய்வத்திடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

ஆகவே எஜமானஸ்ய விரோ ஜாயதாம்.நல்ல குணங்கள் கூடிய குழந்தைகள் பிறக்கவேண்டும்.‘சபாயோ யுவர் ஜாயதாம்.’?அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி சான்றோர்கள். சிந்தனையாளர்கள் நிரம்பிய சபையிலே மரியாதையுடன் திகழ வேண்டும்.

நிகாமே நிகாமே.பர்தன்யோ வர்ஹது’
நாங்கள் ஆணையிட்டவுடன் வானைவிட்டு மேகம் மழையாய் மண்ணில் இறங்க வேண்டும். அதாவது பெய்யெனச் சொன்னால் மழை பெய்ய வேண்டும்.இப்படிப்பட்ட வேண்டுதல்களில் முக்கியமான ஒன்றாகத்தான் பெண்கள் எப்போதும் அழகாகவே இருக்கவேண்டும். அவர்களால் உலகமும் அழகாகவே அமைந்திருக்கவேண்டும் என்ற பிரார்த்தனையும்,

சரி.. பெண்கள் காலம் முழுவதும் அழகாகவே இருந்து என்ன பண்ணப் போகிறார்கள்? வேதத்திடம் நாம் வினா தொடுத்தால் பதில் கொடுக்கிறது. இந்த ஸ்லோகம் மூலம்,‘பத்னிஹீ பாரீனஷ்யஸ்ய ஏஸேபத்னியைவ அனுமதம் நர்வபதி’

பெண் என்பவள் அனுதினமும் அழகாக இருக்கவேண்டும். எவ்வளவு அழகுடையவளாக இருந்தாலும் அவள் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும். அவள் வீட்டின் அதிகாரி. அதாவது வீட்டில் உள்ள வேலைகளையெல்லாம் செய்து கொண்டு தன் கணவன் வெளியிடங்களுக்கு பிழைப்புக்காக செல்லும் நேரங்களில் வீட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் தன் புனிதமான அழகை காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதே நேரம், கணவன் தன் செலவில் ஏதேனும் யாஹங்கள், ஹோமங்கள் நடத்தப் போகிறான் என்றால், அதற்கு மனைவியிடம் அனுமதி வாங்க வேண்டும். ஏனென்றால் யாகங்களுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை வீட்டில் இருந்து தானே எடுத்துக் கொள்ளவேண்டும். அதற்கு வீட்டு அதிகாரியான பெண்ணிடம் கேட்கவேண்டும்.

என “வீட்டுக்குள்ளே பெண்களை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர்களால் நிரம்பியிருந்தது வேதம்” ஒரு பக்கம். இப்படி பெண்களை வீட்டுச் சிறைக்குள் வைக்கச் சொல்லும் வேதத்தின் இன்னொரு பக்கத்தில். இன்று நாம் காணும் காட்சிகளைப் போன்று பெண்களைப் பார்க்க முடிகிறது.

எங்கே? ஸ்த்ரீ சம்ஸாதத்தில் ஸ்த்ரீ சம்ஸாதம் என்றால்? நிறைய பெண்கள் ஓரிடத்தில் கூடியிருக்கிறார்கள். ஆமாம் அதாவது பெண்கள் மாநாடு வேதத்தில் பெண்கள் மாநாடா? — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
(தொடரும் )


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 34.சூத்ரன் அர்த்தம் என்ன? பெண்ணை கேசத்தால் ஏரில் கட்டினான்

பகுதி 36.
கோத்ரம் என்றால் என்ன? பெண்கள் மாநாடா? வேதத்திலா?



கோத்ரம் என்றால் என்ன? பெண்கள் மாநாடா? வேதத்திலா? பகுதி 36

‘கோ’களை அதாவது மாடுகளை கட்டி வைப்பவர்களின் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டதுதான் கோத்ரம்.

என்னது? பெண்கள் மாநாடா? அதுவும் வேதத்திலா? என்ன சொல்கிறீர்கள்? என்ற உங்கள் பிரமிப்பு புரிகிறது.அந்த ஸ்த்ரீ சம்ஸாதத்துக்குள் நாம் நுழைவதற்குமுன் பொதுவான சபாவைப் பற்றி பார்த்து விடுவோம்.

ரிக் வேதத்தில் வருகின்ற ஸ்லோகங்கள் இவை.“நஸா சபாயத்து நபாது செய்ஹநஸா சபாயத்து விபாது செய்ஹ”

அதாவது… எதையுமே எந்த விஷயத்தையுமே கூடிப்பேசி, விவாதித்து இந்த முடிவெடுத்தால் நல்லது, கெட்டதுகள் என்னென்ன ஏற்படும் என்பதை பலரின் கருத்துக்கு விட்டு பெரும்பாலும் என்ன சொல்கிறார்களோ? அதை முடிவாகக் கருதவேண்டும்.”

– இன்று நமது பார்லிமென்ட் (Parliament) நடைமுறையில் உள்ள தத்துவத்தை ரிக் வேதச் சிந்தனை யாளர்கள் ரீங்காரமிட்டுள்ளார்கள்.சரி… சபாவில் குழப்பம் குளறுபடி வந்தால்?

“சங்க சத்வம்சம்ப சுத்வம்சம்போ மனாம்ஸி ஜானதாம்”ஒரே பாதையில் நடங்கள், ஒரே வழியில் சிந்தியுங்கள். ஒன்றாகப் பேசி முடிவெடுங்கள். (Walk United, Think United, Talk United) என ஒற்றுமையாக வலியுறுத்தி ‘சபா’வை ஸ்திரப்படுத்தச் சொல்கிறது ரிக் வேதம்.

அதாவது… வேத காலத்தில் சமூக கட்டமைப்புக்குள் கட்டுப்பட்டு வளர்ந்த மக்களின் பிரச்சினை களை தீர்த்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் சபா. இந்த சபாவில் சிந்தனை சக்தி மிகுந்த ரிஷிகள் அமர்ந்திருப்பார்கள். அந்தந்த குழுமத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் கூடி தத்தமது எண்ணங்களை எடுத்துரைப்பார்கள்.

இறுதியாக ரிஷிகள் இதற்கொரு முடிவு சொல்வார்கள். சரி… இங்கு பெண்களைப் பற்றியே எங்கும் சொல்லக் காணோமே. பிறகு, பெண்கள் எப்படி வருவார்கள்?

உங்கள் கேள்விக்கு… இன்னொரு வேத ஸ்லோகம் விடை சொல்கிறது…

‘தம்பதிஇவ க்ரஹிபிதா ஜனேஸி…’அதாவது நீ எங்கு சென்றாலும்… யாரைப் பார்க்கச் சென்றாலும்… ஏன் கடவுளையே பார்க்கச் சென்றாலும் உன் மனைவியை பத்தினியை உடன் கூட்டிப்போ.

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கச் சொன்ன வேதம்… கால வளர்ச்சியில் இதனை சொல்கிறது என நாம் எடுத்துக் கொள்ளலாம். (ஏனென்றால், வேதங்கள் திடுதிப்பென திடீரென்று ஒரே பொழுதில் உண்டாக்கப்பட்டவை அல்ல…)இதன்படி ஒவ்வொருத்தரும் சபாவுக்கு வரும்போது தன் மனைவியை கூட்டிவர ஆரம்பித்தான். அப்படி வரும்போதுதான் பெண்கள் சபாவுக்கு வரத் தொடங்கினார்கள்.

அப்போது வெளியுலக பிரச்சினைகள் அவர்கள் காதிலும் விழுந்தது. கணவனின் கட்டளைகளாகலேயே நிரம்பிப் போயிருந்த காதுகளில் சமூகப் பிரச்சினைகள் வந்து விழுந்தன.

வாயில்படி தாண்டியிராத பெண்களின் வாயிலிருந்து பொதுக் கருத்துகள் புறப்பட ஆரம்பித்தன.பிரச்சினைகளைப் பற்றி பெண்கள் பேசிய பேச்சுகளை கேட்ட ஆண்கள் அசந்து போய்விட்டனர். எப்படி இவர்களுக்கு இப்படியெல்லாம் பேசத் தோன்றுகிறது? என வியந்தனர்.

இந்தக் காட்சியை“அபிப்ராவந்த்தா சமனே இவயோஷாஹதகல்யாண்யஹ ஸ்மயமானாஹா அக்னிம்…”என்று வேத ஸ்லோகம் சொல்கிறது.
“எல்லாம் கூடியிருக்கிற இடத்திலே பெண்கள் ஆண்களுக்குச் சமமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அது மட்டுமா? அங்கே வெளிச்சத்துக்காக வளர்க்கப்பட்டிருக்கும் அக்னியைச் சுற்றி பெண்கள் அமர்ந்து கொண்டு சிரித்தபடியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.”

இதைப் பார்த்துதான்… அழைத்து வந்த ஆண்கள் வியப்படைந்து போய்விட்டார்கள். அவர்களின் வியப்புக்கு வேதம் விளக்கம் சொல்கிறது கவனியுங்கள்.“°த்ரீநாம் த்விகனம் ஆஹாரம் புத்தீஸ் சாபி சதுர் குணம்”அதாவது வீட்டில் ஆண்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்துவிட்டு வெளியே போய்விடுவார்கள்.

இதையெல்லாம் பெண்கள்தான் சாப்பிடுவாள். அதனால், அந்த ஆண் சாப்பிட்ட சாப்பாட்டைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகவே அவள் ஆஹாரம் புசிப்பாள். இரண்டு மடங்கு உணவு அதிகமாக உண்ணும் பெண்… ஆணைவிட நான்கு மடங்கு அதிகமாக அறிவைப் பெற்றிருப்பாள்.

இவ்வாறு ஆண்களைவிட நான்கு மடங்கு அதிகமாய் ‘புத்தி’ பெற்ற பெண்கள் வேத மந்த்ரங்களையும் இயற்றினார்கள். அத்யயனம் செய்தார்கள் என்பது வேதமே ஒப்புக்கொள்ளும் அளப்பரிய உண்மை.“அபகேஸ்ம ஸ்த்ரியோமந்த்ர கிருத ஆசுஹீப்ரா கல்பேது நாரீனாம்பௌஞ்ச்சீ பந்தது இஷ்யரேஅத்யாபனந்த வேதானாம்…”பெண்கள் வேதமந்த்ரங்களையும் இயற்றியுள்ளார்கள்.

பெண்கள் இயற்றிய வேத மந்த்ரங்களை பெண்களே அத்யயனம் அதாவது தினசரி உச்சரித்தும் வந்துள்ளார்கள்.குறிப்பாக ஆத்ரேய கோத்ரத்துப் பெண்கள் இதில் சிறப்பாக விளங்கினார்கள். ஆத்ரேய கோத்ரம் என்றால் ஆத்ரேயர் என்ற ரிஷியின் வழிவந்தவர்கள் என்று பொருள்.

கோத்ரம் என்றால் என்ன? ஒன்றும் பெரிய அர்த்தம் இல்லை.வேத காலங்களில் மாடுகளை குழு குழுவாக கட்டி வைத்திருப்பார்கள். ஒரு ரிஷியின் குழுவினர் மாடுகளை ஓரிடத்தில் சேர்த்து கட்டி வைத்திருப்பார்கள்.‘கோ’களை அதாவது மாடுகளை கட்டி வைப்பவர்களின் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டதுதான் கோத்ரம்.

இப்படியாக ஆத்ரேய கோத்ர பெண்கள் அறிவில் மிகச் சிறந்தவர்களாக விளங்கினர். இப்படிப்பட்ட பெண்கள்தான் ஸ்த்ரி சம்ஸாதம் அதாவது பெண்களுக்காக மட்டும் கூட்டங்களை கூட்டினர். இதுதான் பெண்களின் மாநாடு… ஒருநாள் இந்த மாநாட்டில்…? அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 35. பெண் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும். 

பகுதி 37. மாதவிடாய் பெண்களை விலக்கிவையுங்கள். ப்ரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?


 மாதவிடாய் பெண்களை விலக்கிவையுங்கள். ப்ரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?   பகுதி 37

அவள் தீட்டு, அவளை, அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் கடுஞ்சொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது.

கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் விதமாக மாதாமாதம் இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய். ஆனால், இதை வேத காலம் எதனோடு ஒப்பிட்டு காரணம் கண்டு பிடித்தது தெரியுமா?

ஸ்திரீ ஸம்ஸாதம் அதாவது பெண்கள் மாநாடு பற்றி போன அத்தியாயத்தில் பார்த்தோம். ஆணைவிட 4 மடங்கு அறிவு கொண்ட பெண்கள் ஒன்றாக கூடி விவாதங்கள் செய்து… வேத காலத்தில் சிறந்து விளங்கினார்கள்.

கார்க்தி, வாஸக்தலி, யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயி போன்றவர்கள் இந்த விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் நமக்கு அறியக் கிடைக்கிறது.

இவ்வளவு முற்போக்காகவா பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்கிற நம் ஆச்சரியக்குறியை ஒடித்துப் போடுகிற அளவுக்கு அடுத்த தகவல் அதிர்ச்சி தருகிறது.

அது என்ன? பெண்களுக்கு இயற்கை மாதாமாதம் அளிக்கும் ஒரு துன்பம்… வலி உடலியல் காரணங்களால் வெளியேற்றப்படும் கழிவாகிய ‘மாதவிடாய்’ என்பதை காரணம் காட்டி பெண்களை வெறுத்து ஒதுக்கியது வேதகாலம்.

அவள் தீட்டு, அவளை விலக்கிவையுங்கள், அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் கடுஞ்சொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது ஏற்கெனவே இயற்கை தந்த துன்பத்தை சகித்துக் கொண்டிருக்கும் பெண்கள் – அறியாமையால் ஆண்கள் தந்த தீண்டாமை துன்பத்தையும் சகித்துக் கொண்டார்கள்.

கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் விதமாக மாதாமாதம் இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய். ஆனால், இதை வேத காலம் எதனோடு ஒப்பிட்டு காரணம் கண்டு பிடித்தது தெரியுமா?

பார்ப்பதற்கு முன்…மீண்டும் ஸ்திரீ ஸம்ஸாதம்…. பெண்கள் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிரிப்பொலி காற்றில் சிணுங்கலாக மிதந்து கொண்டிருக்கிறது. அந்த வேளையில் திடுமென அவ்விடத்தில் ஒரு பிரகாசம். வெளிச்சப் புகைக்கு நடுவே அங்கே வந்திறங்குகிறான் இந்திரன்.

இந்திரன்? ஆம் தேவர்களின் அரசன். சர்வ சந்தோஷங்களையும் அனுபவித்து அனுதினமும் பகட்டில் வாழும் அவன் முகமே பார்க்க முடியாத அளவு கோரமாய் காட்சியளித்தது. செம்பட்டு இழையான தலைமுடி கொண்ட இந்திரன் செம்பட்டையும் பரட்டையுமாக மாறி போயிருந்தான்.

புன்னகை வெளிப்பட்ட வாயிலிருந்து கோரப் பற்கள் கறுத்து இருண்ட மேனியுடன் வந்த இந்திரனின் முகத்தில் சங்கட ரேகைகள். கண்கள் மட்டும் அல்ல, அங்கங்கள் அனைத்தும் அழுதன. நடுக்கம் அவன் நெற்றியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. என்ன ஆச்சு இந்திர ராஜாவுக்கு!

ப்ரம்மஹத்தி தோஷம் அப்படியென்றால்…!குற்றங்களிலேயே மிகக் கொடிய குற்றம். உச்ச பட்ச தண்டனைக்கு உள்ளாகும்படியான குற்றம். தலைமைக் குற்றம் என்றுகூட சொல்லலாம். இக்குற்றத்தை செய்தவனுக்கு எந்த பரிகாரமும் இல்லை. பித்துப் பிடித்து அலைவதைத் தவிர

சரி.. என்ன செய்தால் இந்த குற்றம் வரும்? ப்ராமணனை கொலை செய்வது தான் ப்ரமஹத்தி குற்றம். பிரம்மம் – பிராமணன்; ஹத்தி கொலை அதாவது பிராமணனை கொலை செய்யும் குற்றம்தான் ப்ரமஹத்தி.

இப்பேர்ப்பட்ட குற்றத்தைத்தான் இந்திரன் செய்துவிட்டான். இப்போது இந்த காலத்தில் காஞ்சிபுரம் கோவிலுக்குள்ளேயே வைத்து சங்கரராமன் என்னும் பிராமணனை கத்தி, அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் ஹத்தி (கொலை) செய்தார்களே. அவர்களும்கூட வேதத்தின் நீதிமன்றம் முன்பு ப்ரமஹத்தி (தோஷம்) குற்றம் செய்தவர்கள்தான். அதாவது அவர்கள் இவ்வளவு ப்ரமஹத்திகள்.

சரி., நாம் இந்திரன் விவாவதத்துக்கு வருவோம் ப்ரம்ஹாத்தி குற்றம் செய்யும் அளவுக்கு இந்திரன் என்ன செய்தான். காஸ்யபன் என்றொரு முனிவர். அவருக்கு திதி, அதிதி என இரண்டு மனைவிகள். திதியின் பிள்ளைகள் மதத்தவர்கள். அதாவது அசுரர்கள். திதி அசுர குலத்தை சேர்ந்தவள். இன்னொரு மனைவி அதிதியின் பிள்கைள் தேவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

அதிதிக்கு பிறந்த 12 புதல்வர்களில் ஒருவரான தொஷ்டா, அசுர குலத்தைச் சேர்ந்த ரஸனை என்னும் பெண்ணை மணமுடிக்கிறார். தேவனாகிய தொஷ்டாவுக்கும் அசுரப் பெண்ணாகிய ரஸனைக்கு பிறந்தவன் விஸ்வரூபன். இந்திர ராஜ்யத்தில் புரோகிதராக இருந்தான் விஸ்வரூபன்.

புனித யாகங்கள் முடிந்தபின் கிடைக்கும் ‘ஹவிஸ்’ என்ற பெரும் நலம் கொடுக்கக்கூடியப் பொருளை இந்திரனுக்குத் தெரியாமல் தன் மாமாவான அசுரர்களுக்கு கொடுத்துவிட்டான். இது தெரிந்த இந்திரன் – விஸ்வரூபனின் தலையையும் கோபப்பட்டு வெட்டி வீழ்த்திவிட்டான். விஸ்வரூபன் ஒரு பிராமணன் கொலை செய்தவன் இந்திரன் சும்மா விடுமோ?

பிடித்தது ப்ரம்மஹத்தி. எங்கெங்கோ போய் கத்திப் பார்த்தான் அலைந்தான் – திரிந்தான்.

கடைசியில் ‘ஞானம்’ வந்த இந்திரன் தனது ப்ரமஹத்தி கொடுத்து விடுதலை பெறலாம் என நினைத்தான்.முதலில் பூமா தேவியை போய் பார்த்து அழுதான் இந்திரன். என்னயென்று கேட்டாள் பூமாதேவி.

இதுபோல் நான் ப்ரமஹத்தி தோஷத்திற்கு ஆளாகிவிட்டேன் தேவி. என் தோஷத்தை நீதான் எடுத்துக்கொண்டு எனக்கு அருளவேண்டும் என்றான் இந்திரன்.

எல்லா தோஷத்தையும் நானே எடுத்துக்கொண்டால் என் மேல் வசிக்கும் ஜீவராசிகளுக்கு ஏது சந்தோஷம். அதனால் நீ கேட்கிறாய் என்பதற்காக ஒரு பகுதி தோஷத்தை என்னிடம் கொடு என்கிறாள் பூமாதேவி.

அதன்படி…. இந்திரன் தன் கொலைக் குற்றத்தில் ஒரு சிறு பகுதியை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான்.

அதுதான், தானியங்கள் விவசாய தகுதி இல்லாத தரிசு நிலங்களாகவும், பாலைவனங்களாகவும் மாறிபோய் விட்டன. தோஷத்தை வாங்கிக் கொண்டதற்கு பரிகாரமாக பூமி பிளந்தால் ஒன்று சேரக்கூடிய வரத்தை வழங்கினானாம் இந்திரன்.

விருட்சங்ளே… என் ப்ரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் என கெஞ்சினான். அப்படியானால், எங்களை வெட்டிப் போட்டாலும் வெட்டிய இடத்திலிருந்து துளிர்க்க வரம் தா என கேட்டன மரங்கள். வரம் கொடுத்த இந்திரன் உடனே தன் ப்ரம்மஹத்தி தோஷத்திலும் பாதியை கொடுத்தான்.

அதுதான் மரங்களில் பிசினாக (கோந்து) வழிந்து கொண்டிருக்கிறது. பெருங்காயமும் ‘ஹிங்கு என்ற மரத்திலிருந்து வந்த ஒரு பிசின்தான். அதனால்தான் பிராமணர்கள் முக்கிய விழா சிரார்த்தம் (திவசம்) போன்ற காரியங்களில் சமையலில் பெருங்காயத்தை உபயோகப்படுத்த மாட்டார்கள்.

இன்னும் பாதி ப்ரம்மஹத்தி தோஷத்தை வைத்திருந்த இந்திரன் கடைசியாக ஸ்தரீ சம்ஸாதம். அதாவது பெண்களின் மாநாட்டில் பிரவேசித்தான். அங்கே? அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
பகுதி 36.கோத்ரம் என்றால் என்ன? பெண்கள் மாநாடா? வேதத்திலா?

பகுதி 38. இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதவிடாய்.பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்… மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது.


இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதவிடாய்  பகுதி 38

பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்…

மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது.
இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என்கிறது வேதக் கதை.

யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது. விழுந்திட்டால் யாகத்தின் பலன் கிடைக்காது.

பூமாதேவியிடம் கொஞ்சம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும், விருட்சங்களிடம் கொஞ்சம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும் கொடுத்த இந்திரன்… மீதி வைத்திருந்த அந்த குற்ற தோஷத்தை எங்கே கொண்டுபோய் கொட்டுவது என யோசித்தான்.

யோசித்து யோசித்துதான் அந்த ஸ்த்ரீ ஸம்ஸாதத்தில் பிரவேசித்தான். எப்படி பிரவேசித்தான் என்பதை சென்ற அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள். அழகு குன்றி, கர்வம் இன்றி… வாழ்ந்து கெட்ட செல்வந்தனைப்போல அந்த ஸ்த்ரீகளிடையே தோன்றினான் இந்திரன். அவர்களிடமும் தனது வழக்கமான வேண்டுகோளை இறக்கி வைத்தான்.

‘எனது ப்ரம்மஹத்திதோஷத்தில் ஒரு பங்கு இன்னும் என்னிடம் பாக்கியுள்ளது. நீங்கள் அதை தயைகூர்ந்து ஏற்றுக்கொண்டால் பழையபடி இந்திரனாகிவிடுவேன்’ என காலில் விழாத குறையாக கெஞ்சினான் இந்திரன்.

“எங்களுக்கென்ன தருவாய்?”

“கேட்டதை தருகிறேன்…”“அப்படியானால்… நாங்கள் குழந்தைகள் பிரசவிக்கும் வரை எங்கள் புருஷன் எங்களோடு தேகஸம்பந்தம் வைத்துக் கொள்ள வசதி செய்து வரம் கொடு…’- என வேண்டுகோள் வைத்தார்களாம் பெண்கள்.

மனிதனை தவிர மற்ற விலங்குகளில்… கர்ப்பம் தரித்த நிமிடத்திலிருந்து ஆண் விலங்கு பெண் விலங்கை முகர்ந்துகூட பார்க்காது. மனிதர்களில்தான் பிரசவத்துக்கு முன்புவரை நெருங்கும் பழக்கம் இருக்கிறது.

இந்திரனும், பிரசவத்துக்கு குறிப்பிட்ட காலம் முன்புவரை பெண்கள் தங்கள் புருஷனோடு தேகஸம்பந்தம் கொள்ள வரம் கொடுத்தான்.

கூடவே ப்ரம்மஹத்தி தோஷத்தையும் வழித்து துடைத்து அவர்களிடம் கொடுத்து விட்டான்.இப்படியாக முடிகிறது அந்த வேதக்கதை.

இந்த இடத்தில்தான் நாம் முக்கியமாக ஒன்றை கவனிக்கவேண்டும். தனது ப்ரம்மஹத்தி தோஷத்தை இந்திரன் பெண்களிடம் முற்றாக ஒப்படைத்தான் அல்லவா?

அந்த தோஷம்தான் பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என்கிறது வேதக் கதை.

அதனால்தான் அந்த மூன்று நாள்களை பகிஷ்டை என்றே சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டார்கள். அதாவது… வெளியில் வை… விலக்கி வை… ஒதுக்கி வை என்று இதற்கு அர்த்தம்.

பிராமணனைக் கொன்ற ப்ரம்மஹத்தி கொலைக் குற்றத்தை தங்களுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அதனால் அவள் தோஷம் பிடித்தவள் என்றது வேதம்.

அதாவது… இயற்கை பெண்ணின் உடலில் நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சி… அது ஒரு கற்பனைக் கதையோடு தொடர்புபடுத்தி அந்த நாள்களில் பெண்களை ஒதுக்கி வைத்து துன்புறுத்தி இருக்கிறது வேதம் வகுத்த விதி.

ஒரு பக்கம் இப்படி பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்…

இன்னொரு பக்கம் அழகிப் போட்டியே நடத்தியிருக்கின்ற தென்றால் பாருங்களேன். அதாவது இன்று மிஸ் வேர்ல்டு என்று சொல்வதைப்போல ‘மிஸ் வேதா’ என்று வேண்டுமானால் நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்.அந்த அளவுக்குப் பெண்களை அழகுப் பதுமைகளாக முன்மொழிந்து வழிமொழிகிறது. வேதகாலம் எப்படி? இப்படித்தான்.

“யதாஷனவ யோஹாஹாஸ்வர்ணம் க்ரணியம் பேசலம்விப்ரதீ ரூபானி ஆஸ்தி…”

வேதகால விதிகளில் பெண்கள் எப்படி நடந்து வந்தார்கள் தெரியுமா?முழுக்க முழுக்க தங்க நகைகள், ஆபரணங்கள் அணிந்து… மிக மென்மையான உடம்பை பாதங்களால் அளப்பதுபோல நகர்த்தி நடந்து வருகிறாள் பெண். அவள் அழகு எப்படி ஜொலிக்கிற தென்றால்… ஜலத்தில் துளியளவில் நெய் பட்டால் எப்படி மினுமினுவென்று தண்ணீர் தகதகக்குமோ… அதேபோல, தங்க ஆபரணங்களை தாங்கி வரும் பெண்ணும் ஜொலிக்கிறாள் என வர்ணிக்கிறது ஸ்லோகம்.

இந்த அழகு மட்டும்தானா? பெண்களுக்கு புற அழகுதான் பிரதானமா? “சுப்ராஹா கன்யாஹா யுவதயஹாசுபேஷசஹா கர்மகிருதஹாசுகிர்தாஹா வீர்யாபதிஹி…”பெண்ணானவள் ஒளி பொருந்தியவள். அவள் பார்த்தாலே பிரகாசம்.

அடுத்தவர்களை கவர்ந்திழுக்கக் கூடியவள். இவளோடு சேர்ந்து வாழவேண்டும் என ஆண்களுக்கு ஆசையை ஏற்படுத்தக் கூடியவள். எக்கச்சக்கமான அலங்காரங்கள் செய்து கொள்பவள். எப்போதும் துருதுருவென ஏதாவது காரியம் செய்துகொண்டே இருப்பவள்.

எதிர்காலத்தைப்பற்றி கவலை கொண்டு அதற்கேற்றவாறு வாழ்க்கையை நிகழ்காலத்தில் திட்டமிட்டுக் கொண்டு செல்பவள். இவற்றையெல்லாம்விட உடல், உள்ளம் இரண்டுமே பலம் மிக்கது பெண்களுக்குத்தான்.என வேதகால பெண்களைப் பற்றி வரையறுக்கிறது அந்த ஸ்லோகம்.

சரி சரி… தேகம் ஆரம்பித்து மனம் வரைக்கும் பெண்களை புகழ்ந்து தள்ளும் வேதம்… வேதகாலத்தில் முக்கிய கர்மாவான யாகம் நடக்கும்போது பெண்களை எப்படி நடத்தியது? ஒரு உதாரணம் சொல்கிறேன்.

சில வருடங்கள் முன்பு திருச்சூரில் ஓர் யாகம். சோம யாகம். கிட்டத்தட்ட நான்காயிரம் படித்த பெண்கள் அந்த யாகத்துக்கு வந்திருந்தார்கள். எல்லாரும் இக்கால நவநாகரிக பெண்கள். நானும் அந்த சோம யாகத்தில் கலந்து கொண்டேன்.

யாகம் நடத்துபவர்கள் யாக சாலையில் இவ்வளவு பெண்கள் நிறைந்திருப்பதைக் கண்டு ஒரு கணம் யோசித்தார்கள். ‘அம்மா… நீங்க எல்லாரும் உங்க சேலைத் தலைப்பால் காது, முகத்தை மூடிக்கோங்கோ…’ என பெருங்குரலில் ஆணையிட்டனர்.

உடனே பெண்கள் அனைவரும் தங்களது சேலை தலைப்பை எடுத்து ‘காதுகளோடு முகத்தை மூடிக்கொண்டார்கள். ஏன் இந்த மூடு காரியம்…?

யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது. விழுந்திட்டால் யாகத்தின் பலன் கிடைக்காது.

அதற்காகத்தான். சில வருடங்களுக்கு முன் திருச்சூரில் நடந்த நிகழ்வு இது. வேதத்திலிருந்தே உங்களுக்கு உதாரணத்தை என்னால் காட்ட முடியும்.

ஆனால்…இந்த காலத்திலேயே இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் நடந்த யாகம்… வேத காலத்தில் எப்படி நடந்திருக்கும் என உங்களின் யூகத்துக்கு விடத்தான் தற்கால நிகழ்வைச் சொன்னேன்.

வேதகால பெண்களின் தேக லட்சணம் யாக லட்சணம் எல்லாம் பார்த்தோம்… அன்று கல்யாணம் எப்படி? முதல் மணமகள் யார்? அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)


பகுதி 37. மாதவிடாய் பெண்களை விலக்கிவையுங்கள். ப்ரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? 

பகுதி 39.விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம். வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது திருமணம் எப்படி நடந்தது?


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply