இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 39, 40, 41

 விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம் -பகுதி 39

பெண்களின் இயற்கையான உடலியல் நிகழ்வை வேதம், எத்தனை கற்பனை முடிச்சுகளால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா?

வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது திருமணம் எப்படி நடந்தது?

அடுத்து… நாம் பார்க்கப் போவது பெண்களின் வாழ்க்கையில் முக்கிய தருணமான திருமணம்.

வேதத்தில் சில இடங்களில் விவாஹம் என்றும் பாணிக்ரஹணம் என்றும் குறிப்பிடப்படும் திருமணம் மிகவும் தடபுடலாக நடத்தப்பட்டிருக்கிறது.

முதலில்… விவாஹம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்வோம். ஏனென்றால், இன்று வரையும் திருமணப் பத்திரிகைகளுக்கு ‘விவாஹ சுபமுகூர்த்த பத்திரிகை’ என பெயரிட்டு அச்சடிக்கிறார்கள். விவாஹம் என்றால் Tribal வார்த்தை. அதாவது மலைப்பிரதேச பழங்குடியினர் வார்த்தை.

இதற்கு தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம். இந்த அர்த்தத்தை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருமணங்களில் பெண்ணின் உறவினர்கள் பெண்ணை தூக்கிக்கொண்டு போவது என்ற ஒரு சடங்கை திணித்திருக்கிறார்கள்.

சரி… நாம் வேத திருமணத்துக்குப் போவோம். திருமண நடவடிக்கைகள் எப்படி ஆரம்பிக்கின்றன. தரகரை அனுப்புகிறது வேதம். ‘முதலில் நீ போய் பெண்ணை பார்த்துவிட்டு வா’ என்று.

“ப்ரதக் மந்தா திய ஸானஸ்ய வரேபி வராதுகாசுப்ர தீததா ஆஸ்மா சுமிந்த்ராஉபயம் ஜீஹோஷதீ…” என போகும் இந்த வேத மந்த்ரம்…

தரகர் எப்படி பெண் பார்க்க செல்லவேண்டும் என்று வலியுறுத்துகிறது. நீ மிக பகட்டான ஆடம்பர ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கு பணக்காரன் போன்ற தோரணையுடன் பெண் பார்க்கச் செல்லவேண்டும்.

இல்லையென்றால், மாப்பிள்ளை வீட்டாரை பிச்சைக்காரன் என நினைத்துப் பெண் கொடுக்காமல் இருந்து விடுவார்கள் என மாப்பிள்ளை வீட்டாரின் பிரதிநிதியாக தரகரை வரையறை செய்து வைத்திருக்கிறது வேதம்

அவர் பார்த்து பேசிவிட்டு வந்தபின் அடுத்தது பெண்ணும், பையனும் பார்த்துக் கொள்கிறார்கள். பரஸ்பர பார்வை பரிவர்த்தனம், பிறகு கை பிடிக்கிறார்கள். அதாவது Mutual Meeting. அதாவது பாணிக்ரஹணம். எங்கே பார்த்துக் கொள்கிறார்கள்? மணமேடையில்?

அப்போது பெண்ணிடம் சொல்கிறார்கள்…தொஷ்டா அஸ்பை துவாம்பதிம்தொஷ்டா சகஸ்ரமாஹம் ஷிஹீதீர்க்கமாயு க்ரேனோவதாம்…

ஏ… பெண்ணே இவன்தான் உனக்கென தெய்வத்தால் அனுப்பி வைக்கப்பட்டவன். இனி இவன்தான் உனக்கு எல்லாம். இவன்தான் உன் கணவன். இவன் சொல்படிதான் இனி உன் சொர்க்கம். இவனை தெய்வத்தின் உத்தரவின் பேரில் நீ திருமணம் செய்துகொள்வாயாக.

நீ இவனோடு எதுவரைக்கும் வாழவேண்டும் என்றால்…“க்ருப்ணாபிதே சுப்ரஜா அஸ்த்வயாமயாபத்ய ஜலதஷ்டிம் யதாஸஹா” நீ கிழவியான பிறகு கூட உனக்கு இவன் தான் துணை என்கிறது வேதம். பொதுவாக திருமணம் இப்படி நடந்திருக்கிறது.

வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது திருமணம் எப்படி நடந்தது?

ரிக் வேதத்தின் 10-ஆவது மண்டலத்தில் முதல் திருமணம்பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.சூர்யா என்கிற உஷஸ் என்பவள் சோமராஜனை காதலிக்கிறாள். அதாவது சந்திரனை காதலிக்கிறாள். அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால், இதை தன் அப்பனிடம் எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறாள்.

இந்த நிலையில்தான் சூர்யாவின் தந்தை அவளுக்கு திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டான். எப்படி? உலகெங்கும் உள்ள ராஜாக்களுக்கு அழைப்பு விடுக்கிறான். அவர்களுக்கு ஒரு பந்தயம்.

அதாவது சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ராஜாக்கள் தங்களது ரதங்களோடு வந்துவிடவேண்டும். அங்கே அனைத்து ராஜாக்களுக்கும் ரதப் பந்தயம் நடக்கும். குறிப்பிட்ட தூரத்திலுள்ள இலக்கை எந்த ராஜாவின் ரதம் முதலில் அடைகிறதோ அவருக்கு சூர்யா மணப்பெண்ணாக கிடைப்பாள்.

இப்படியாக… அனைத்து ராஜாக்களும் அந்த பந்தயத்துக்கு அழைக்கப் பட்டிருந்தார்கள். சூர்யாவை அடைந்தே தீருவது என்ற ஆசையோடு ஒவ்வொரு ராஜாவும் தங்கள் ரதங்களோடு வந்திருந்தனர்.

அந்த இடமே வண்ண மயமாக இருந்தது. பல தேசத்து குதிரைகள் பூட்டப்பட்ட ரதங்கள் அலங்காரமாய் அணிவகுத்திருந்தன. அந்தக் கூட்டத்தில் சூர்யாவை காதலித்துக் கொண்டிருக்கிற சோமராஜாவும் தன் ரதத்தோடு வந்திருந்தார்.

சூர்யாவுக்கும் பதற்றம் பரவிக் கிடந்தது. நமது நாயகன் பந்தயத்தில் முந்தி வந்து நம்மை கைப்பிடிப்பானா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்தாள் சூர்யா.

பந்தயம் ஆரம்பித்தது. ராஜமுரசு அறையப்பட்டதும் அனைத்து ரதங்களும் தயாராயின. சூர்யாவை பரிசுப் பொருளாக அடையவேண்டும் என்ற ஆசையில் ராஜாக்கள் தங்கள் ரதங்களில் கட்டப்பட்டிருந்த குதிரைகளை முடுக்க ஆரம்பித்தனர்.

இவர்களுக்கிடையே அஸ்வதி ராஜாவும் அழகான சூர்யாமேல் ஆசைப்பட்டான். ஏன் அவன் ஆசைப்படக் கூடாது என்கிறீர்களா? அவன் ரதத்தில் கட்டப்பட்டிருந்தவை குதிரைகள் அல்ல, கழுதைகள்.

குதிரைகள் ரதங்களோடு தனது கழுதை ரதத்தையும் வேகமாக செலுத்தினான் அஸ்வதி ராஜா.சூர்யா… தன் அரண்மனை மாடத்திலிருந்து இந்தப் பந்தயத்தை உற்று கவனித்துக் கொண்டிருந்தாள். தன் சோமராஜா முந்தவேண்டும் என்று அவள் தியானித்துக் கொண்டிருக்க…யாருமே எதிர்பாராத வகையில்..– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 38. இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதவிடாய்.பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்… மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது.

பகுதி 40. “விவாஹே கௌஹு…க்ருஹே கௌஹு… திருமண‌ங்களில் மாட்டை வெட்டி மதுவகையுடன் மாட்டிறைச்சி.பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண்.


தெரியுமா? .“விவாஹே கௌஹு…க்ருஹே கௌஹு… பகுதி 40

திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.
பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண். கல்யாண வீட்டில் மதுவகையுடன் மாட்டிறைச்சியும்.

சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா? பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது.

திருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படிக் கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.“விவாஹே கௌஹு…க்ருஹே கௌஹு… திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.

சூர்யாவை பரிசாக பெறுவதற்காக நடந்த அந்த ரதப் பந்தயத்திலே.. யாருமே எதிர்பாரத வகையிலே….பல குதிரை ரதங்களை பின்னால் தள்ளிவிட்டு வெகு வேகமாக முன்னேறியது கழுதைகள் பூட்டப்பட்ட ரதம்?

ஆமாம். பல குதிரை ராஜாக்களை தோற்கடித்து அஸ்வதி ராஜா முதலிடத்திலேயே வந்துவிட்டான். பந்தயக்களமே ஸ்தம்பித்துவிட்டது. இவ்வளவு குதிரை பூட்டிய ரதங்களை எப்படி கழுதை பூட்டிய ரதம் முந்தி வந்தது என எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். அதே நேரம் பத்தயத்தை பார்த்துக்கொண்டே இருந்த சூர்யா, அஸ்வதி ராஜாவின் வெற்றியைப் பார்த்து திகைத்து விட்டாள். அவள் பிரேமித்த சோமராஜா தோற்றுப்போனதால், அவனை கைப்பிடிக்க முடியாததென்று அவளுக்கு உறுதியாக பட்டுவிட்டது.

அடுத்த க்ஷணத்திலிருந்தே அஸ்வதி ராஜாவுக்கு சூர்யாவை திருமணம் செய்ய ஏற்பாடுகள் மளமளவென ஆரம்பித்தன. தான் பிரேமித்த சோமராஜா தன் கைகழுவி போய்விட்டானே என சூர்யாவின் கண்கள் சமுத்திரமாகின. கன்னப் பிரதேசங்கள் உப்பளமாயின.

இந்த நிலையில், அஸ்வதி ராஜா ஜெயித்தது போலவே மறுபடியும் யாரும் எதிர் பார்க்காத ஒரு காரியம் சம்பவித்து, அஸ்வதி ராஜாவே சூர்யாவை அழைத்தான். தேவீ சோமராஜா மீதான உள் பிரேமை எனக்குத் தெரியும். பந்தயத்தில் கலந்துகொள்ளத்தான் நான் வந்தேன். நானே எதிர்பார்க்காமல் உனது மணாளன் ஆகிவிட்டேன்.

இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை. நீ உன் இஷ்டப்படி சோமராஜாவையே திருமணம் செய்துகொள். எனக்கு இதில் பூரண இஷ்டம் என யாருமே எதிர்பாராத வகையில் சூர்யா சோமராஜாவை ஜோடி சேர்த்து வைத்தான் அஸ்வதி ராஜா. இப்படித்தான் வேதத்தின் முதல் திருமணமே மிக கோலாகலமாக நடந்தது வேதப்படி பெண்களை திருமணம் செய்து கொடுக்கும்போது சீதனம் ரொம்ப முக்கியமானது.

இனி அவளுக்கு எதை செய்யப்போகிறாய். அதனால் மொத்தமாக அவளுக்கு செய்ய வேண்டியதை செய்துவிடு என்கிறது வேதம்.அதனால், பெண்ணுக்காக ஆபரணங்கள் வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள் என பல விலை மதிப்பற்ற பொருள்களை பெண்ணுடன் சேர்த்து அனுப்புவார்கள்.

சீதனம் எவ்வளவு இருக்கும் என்பதை யூகிப்பதற்காக ஒரு வேத மந்த்ரம் பாருங்கள்

‘ஏ கந்தர்வாஹா அப்சரஸ்ய தேவிஹிஏஷீ விருஷ்ஹேசு ஆஷதே ஷிவாஸ்தே’

ஏ, தேவதையே கந்தவர்களே எங்கள் பெண்ணை திருமணம் செய்து அனுப்புகிறோம். அவளுக்காக சீதனங்களை வண்டி வண்டியாக அனுப்புகிறோம். அவை அனைத்தும் அவளோடு பத்திரமாக போய்ச்சேரவேண்டும். எல்லாமே விலை மதிப்பற்ற பொருட்கள் என்பதால் பேய்கள், பிசாசுகள் அவற்றை அண்டாமல் அபகரித்துச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வேண்டுகிறது அந்த வேத மந்த்ரம்

சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா? இன்னாரு புதிய சீதனத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது வேதம். அதன் பெயர் அனுதேயி. அனுதேயி என்றால் என்ன பொருள்? அதன் பயன் என்ன? நீங்கள் கேட்பது புரிகிறது. அனுதேயி என்றால் ஜடப் பொருள் அல்ல. அது இயங்கும் உயிர் பொருள். மணப்பெண் மணமுடித்து புகுந்த வீட்டுக்கு செல்லும் போது கூடவே இந்த உயிர்ப் பொருளும் செல்லும். அவள் சொன்ன வேலைகளைச் செய்யும். அப்படி என்ன சீதனம் அது என யோசிக்கிறீர்களா?

அதாவது அனுதேயி என்றால் பின் தொடர்ந்து வந்து சொன்னதை செய்பவர். அதாவது இங்கே இன்னொரு பெண் . ஆமாம். பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது. முதல் மணமகளான சூரியாவுக்கு இதுபோல ரைபி என்னும் பெண்ணை சீதனமாகக் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். மணப்பெண்ணோடு தோழி என்ற பெயரில் அனுப்பி வைக்கப்படும். இந்த சீதனப் பெண் தொடர்ந்து மணப் பெண்ணின் புகுந்த வீட்டில்தான் இருக்கவேண்டுமா? அவளுக்கென்று தனி வாழ்க்கை அமையாதா?

அதாவது அவளுக்குத் திருமணம் நடக்காதா? என்றெல்லாம் அந்த சீதனப் பெண் அனுதேயியை மையமாக வைத்து நாம் கவலைகளை கேள்விகளாக எழுப்பினால்…. அதற்கு வேதம் பதில் சொல்கிறது. என்ன சொல்வது? அவளைப்பற்றி ஏன் யோசிக்கிறீர்கள்? இதெல்லாம் திருமணம் முடிந்த பிறகு நடக்கும் சமாச்சாரங்கள்.

இங்கே இன்னொரு முக்கியமான திருமணத்துக்கு முதல் நாள் நடக்கக்கூடிய ஒரு விஷயத்தை விலாவாரியாகச் சொல்லவேண்டும்.அந்த விஷயத்துக்குப் போவதற்கு முன் விசேஷமாய்

இந்த மந்த்ரத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
“மாதா முத்ராணாம் துஹிதா பசூனாம்ஸ்வஸ் ஆதித்யானாம் அமிர்த ஸ்யனா பிஹிப்ரனுபோகம் சிதுஹே ஜனாயோமாகா பனாகாம் அதிது வசிஷ்ட்

நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன். ஏன் திருமணம் என்னும் புனிதமான விஷயத்தை இப்படி ரத்தக் களறியாக்குகிறீர்கள்”

பாவம் அவையெல்லாம். அவற்றை ஏன் கொன்று குவிக்கிறீர்கள்?. அவற்றை நாம் தாயாக எண்ணி புனிதமாக வழிபட வேண்டும். அதைவிட்டுவிட்டு அவற்றின்மேல் வாள் வைப்பதா?

நிறுத்துங்கள். திருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படிக் கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.“விவாஹே கௌஹு…க்ருஹே கௌஹு…திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.— அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 39.விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம். வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது திருமணம் எப்படி நடந்தது?

பகுதி 41. கல்யாணங்களில் பொருந்தாத மந்திரங்கள். மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்… வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் மாட்டு மாமிசம் தான்.


  கல்யாணங்களில் பொருந்தாத மந்திரங்கள் பகுதி 41

 திருமணத்தில் மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்… வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் கோமாமிசம் தான்.

மாப்பிள்ளை அழைப்பு என்ற திருமணத்துக்கு முதல் நாள் நிகழ்ச்சியில் மது வர்க்கம் என்றொரு சடங்கு. இதிலும் மறுநாள் திருமணச் சடங்குகளிலும் ரிஷிகளும், கோமாமிசமும் அவஸ்யம் என்கிறது வேத விதி.

பக்கத்தில் ஒரு கிரகத்தில் திருமணம் நடக்கிறது. யாகங்களும் மந்த்ர ஒலிகளும் பூமியிலிருந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு புறப்படுகின்றன. திரவியங்களின் வாசனை நாசிக்குள் நாட்டியமாடுகிறது. இப்படிப்பட்ட சுகந்தமான சூழ்நிலையில் அந்தக் கிரகத்தின் பக்கத்தில் இரண்டு சிறுவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

“என்னடா அங்கே மடமடன்னு சத்தம் கேட்கிறதே?” “உனக்குத் தெரியாதா? பக்கத்து கிரஹத்திலே கல்யாணம் ரிஷிகள் நிறையபேர் போயிருக்கிறார்கள் பாவம்… இன்று கன்றுக் குட்டிகள் தப்பிக்க முடியுமோ? அவைகளை வெட்டும் சத்தம்தான் மடமடயாதே… (அதாவது மடமடன்னு கேட்கிறது)” என்கிறான் மற்றவன்.

இது ஒரு வேதக்கதை அதாவது கல்யாண காரியங்களிலே கன்றுக்குட்டிகளையும் கறி சமைத்திருக்கிறார்கள்.

ஆனால்.. இன்று நடக்கும் திருமணங்களிலும் அறிந்தோ அறியாமலோ(?) வாத்யார்கள் (கல்யாணம் நடத்தி வைப்பவர்கள்) மாடு வெட்டும் சடங்குக்குரிய மந்திரங்களை ஓதுகிறார்கள். ஆனால்… ‘மது வர்க்க’த்தில் கோமாமிசத்துக்குப் பதில் வாழைப்பழத்தைக் கொடுக்கிறார்கள்.

அப்படியானால் அந்த மந்த்ரம் எதற்கு? மாட்டை வெட்டச் சொல்லும் மந்த்ரத்தை நீங்கள் சொல்லும்போது மாடு வெட்டப்பட வேண்டுமே! அப்படி செய்யாத பட்சத்தில் அந்த மந்த்ரத்தை கல்யாணச் சடங்கிலிருந்து வெட்டிவிடலாமே?

இதேபோல… ‘கௌஹு…கௌஹு என சொல்லிக்கொண்டேஇன்னொரு கல்யாண சடங்கையும் நடத்துகிறார்கள். கல்யாண தினத்தன்று… கோமாமிசம் சாப்பிடவேண்டிய சடங்குக்கான மந்த்ரத்தை சொல்கிறார்கள்.

அந்த நேரத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் தேங்காய் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஏன் இந்த முரண்பாடு? காலத்தின் மாற்றத்தால் சடங்குகளை மாற்றிக் கொண்ட பிராமணர்கள்…மந்த்ரங்களை மட்டும் இன்னும் விடாப்பிடியாய் பிடித்திருக்கிறார்கள்.

இது பிராமணர்களின் கல்யாணங்களில் மட்டுமல்ல… மற்ற ஜாதியினரின் கல்யாணங்களிலும் இந்த பொருந்தாத மந்த்ரங்கள்தான் போற்றப்படுகின்றன. மாட்டு மாமிசம் தின்பதற்கும், தேங்காய் உருட்டுவதற்கும் என்ன சம்பந்தம்?இதற்கான மேலும் சில மந்த்ர உதாரணங்களைப் பிறகு பார்க்கலாம்.

இப்படியாக கல்யாணம் நடக்கிறது. பெண்ணானவள் புருஷன் வீட்டில் எப்படி நடந்துகொள்ளவேண்டும்.

“பரித்வா கிர்வனோ க்ரஹஇமாபவந்து விஷ்வதஹாவ்ருத்தாயும் அனிவ்ருத்தயாஜீஷ்டா பவந்து ஜீஷ்டாயா?……அடியே… உனக்கு நாங்கள் கொடுக்கும் சீதனத்திலே மிக உயர்ந்த மெல்லிய, அழகுக்கு அழகு சேர்க்கக்கூடிய ஜரிகை வஸ்திரங்கள் இருக்கலாம்.

அவற்றை நீ அணிந்தால் உனக்கு அலங்காரமாக இருக்கலாம். ஆனால்… இவையெல்லாம் ஒருநாள் மக்கிவிடும், மடிந்துவிடும், கிழிந்துவிடும்.ஆனால்… என்றென்றும் கிழியாத வஸ்திரம் உனக்கென்று உள்ளது. புகுந்த வீட்டில் புருஷனும்… மற்றவர்களும் உன்னைப் புகழ்ந்து பேசவேண்டும்.

அவர்கள் உன்னை மெச்சிக்கொள்ளும் புகழ்மொழிகள்தான் உனக்கு உண்மையான ஆடை. அதனால் புகுந்த வீட்டில் அவர்கள் சொன்னபடி நீ நடந்து அந்த ஆடையை அணிந்துகொள்.இப்படியாக பெண்களுக்கு நிறைய அறிவுரைகளை அள்ளித்தரும் வேதம்… திருமணத்துக்குப் பிறகு அவளை எப்படி நடத்தவேண்டும், நடத்தக்கூடாது என்பதற்கு அகஸ்தியர் மூலமாக ஒரு கதையை சொல்லியிருக்கிறது.

அகஸ்திய முனிவர் ரொம்ப குள்ளமானவர். அவர் லோபாமுத்ரை என்னும் மங்கையை பார்த்ததும் அவளை அடைந்தே தீரவேண்டும் என்று அவருக்குள் உயரமாக உதித்தது ஆசை. நேராக அந்தப் பெண்ணின் தந்தையிடமே போனார் அகஸ்திய முனி. ‘உன் பெண்ணை பார்த்தேனப்பா… அவளையே கல்யாணம் செய்துகொள்ள ஆசைப் படுகிறேனப்பா’… எனக்கூற…தந்தையோ, அகஸ்திய முனியை கொஞ்ச நேரம் பார்த்தார். ‘என் பெண்ணிடமே கேட்டு, அவளுக்கு இஷ்டமா, இல்லையா என தெரிந்துகொள்ளப்பா…’ என சொல்லிவிட்டார்.

இப்படியே இந்த உருவத்திலேயே போனால் லோபாமுத்ரை நம்மை ஏற்றுக்கொள்வாளா? தன்னையே ஒருதடவை பார்த்துக் கொண்டார் அகஸ்தியர். கடைசியில் தன் குள்ள உருவத்திலிருந்து சில மந்த்ரங்களைச் சொல்லி தன்னை அழகனாக மாற்றிக் கொண்டார் அகஸ்தியர்.

லோபாமுத்ரையிடம் போனார் பேசினார். அகஸ்தியரின் வாளிப்பிலும், வார்த்தைகளிலும் மயங்கிய லோபாமுத்ரா அவர் கழுத்தில் மாலையைப் போட்டாள். தன் மணாளனாக்கிக் கொண்டாள்.அகஸ்தியருக்கு சந்தோஷம். மறுபடியும் லோபாவின் அப்பாவிடம் ஓடினார். ‘உன் பெண்ணை கல்யாணம் செய்துவிட்டேன் பார்’ என்றார்.கல்யாணம் ஆன பிறகுதான்… தன் கணவன் அகஸ்தியரின் நிஜ உருவத்தை தரிசித்தாள் லோபாமுத்ரை…. பிறகு…? – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 40. “விவாஹே கௌஹு…க்ருஹே கௌஹு… திருமணவீட்டில் மாட்டை வெட்டி மதுவகையுடன் மாட்டிறைச்சி.பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண்.

பகுதி 42.. நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்


About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply