இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 45- 46

இந்து மதம் எங்கே போகிறது?  பகுதி 46

ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அருந்து? 

ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.

எட்டு வய‌துக்குள் உன் ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து கொடுக்காவிட்டால் ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை… உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.

எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும்.

கொடுமையான தண்டனை… அதிலிருந்து தப்பிக்க ‘வரும்படி’ தருகின்ற பரிகாரம்.

எட்டு வயதைத் தாண்டி, பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்கின்ற அப்பா… மநுவிடம் போட்ட மனு என்ன ஆனது?… இப்போது மந்திரி பிரதானிகளிடம் மக்கள் கொடுத்த மனு எப்படி குப்பைத் தொட்டிக்குப் போகிறதோ அதே மாதிரிதான்.

அதோடு நின்றால் பரவாயில்லை. கூடவே… நீ ஏனடா உன் பெண்ணுக்கு எட்டு வயது வரை கல்யாணம் செய்யாமல் இருந்தாய். கன்னிகா தர்மத்தை கால்களில் போட்டு மிதித்து விட்டாயே… இது பாவம் என்று உனக்குத் தெரியாதா? இந்த பாவத்துக்கு தண்டனை என்ன என்று உனக்கு தெரியாதா?… என மநு ஸ்மிருதி அந்த அப்பாவி அப்பாக்களை பார்த்து அதட்டுகிறது.

இக்கால அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்த தண்டனையை அனுபவிப்பதை அவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள்.அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?

“மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்…”

இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது… தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

அது என்னவென்றால்…அடே கையாலாகாத அப்பா… உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும். தவறிவிட்டாய். அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.

ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்… அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும் வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?

அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை… உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை. 

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல… இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது.

அடப்பாவிகளா?… வறுமையாலோ, ஜாதக தோஷத்தாலோ.. பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ணவேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வாளர்களின் கருத்து.

அதையும் தாண்டி மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு எத்தனை கடுமை?… கொடுமை?… எரிகின்ற தீயில் எது நல்ல தீ என்பது மாதிரி… இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கிறார் மநு. அப்படியா? என்ன பரிகாரம்?…

உன் மகள் ருது காலத்தில் அவளது ப்ரம்மஹத்தி தோஷத்தை சாப்பிடவேண்டும் என்று சொன்னேன் இல்லையா?…

அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின் (மாதவிடாய்)  போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோதானம் தான் உனக்கு பரிகாரம்.

அதாவது… மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ… அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம். இப்போது புரிகிறதா… எங்கு போய் எங்கு வருகிறார் மநு என்று?

அந்த கோதானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா?

கொடுமையான தண்டனை… அதிலிருந்து தப்பிக்க ‘வரும்படி’ தருகின்ற பரிகாரம். சரி.. கோதானம் கொடுத்தோ, கொடுக்காமலோ கல்யாணம் ஆகிவிட்டது.

அடுத்த ஒருவருஷம் வரை… அவளும் அவனும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும். அதென்ன ஒளபாசனம்

அக்னி காரியம் தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ணவேண்டிய ஹோமம் இந்த ஒரு வருடம் வரை… அவள் கணவன் வீட்டில் இருந்தாலும்… கணவனுக்கு பணி விடைகள் செய்தாலும்… ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக ஸம்பந்தம் கொள்ளக்கூடாது.

ஒரு வருஷம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம்.

இதற்கிடையில்… ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு தர்பை (புல்)யை கிள்ளிப் போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன். அவன்… இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இப்போது இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடருகிறார்கள் என்பது ஹாஸ்யம்.

இப்பழக்கம் ஆதிகாலத்தியது. க்ருஹ சூத்திரம் சொல்வது. இதன்படி, வகுத்தவர்களாலேயே நடக்க முடியவில்லை. என்ன ஆனது?… அந்த ஒரு வருஷம்… 6 மாசங்களானது… அப்போதும் கஷ்டம்… என்னடா இவ்வளவு நாள்கள் ஆகிறதே என்று… கொஞ்சமாய் குறைந்து மூன்று மாதங்கள் ஆனது.
அடுத்தடுத்து வந்த தலைமுறையினருக்கு மூன்று மாதமே பெருங்காலமாக இருந்தது. அப்புறம் பார்த்தார்கள். 15 நாள்கள் ஆக்கினார்கள். அதுவும் தேய்ந்து 7 நாள்களானது.

பின் கல்யாணம் ஆகி 3 நாள்கள் கழித்து… இப்போது காலையில் கல்யாணம் ராத்திரி சாந்தி கல்யாணம்.

நமது சௌகரியத்துக்கேற்ப சாஸ்திரத்தை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் ஆக்கி விட்டோம் என்பதற்காக சொல்ல வந்தேன்.

சரி… மநு சொன்னபடி பால்ய கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் யாரையாவது காண்பிக்க முடியுமா?… அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(சர்ச்சைகள் தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 45.மகளை எட்டு வயதுக்குள் திருமணம் செய்து கொடுத்துவிடு. அவள் ருதுவாகித்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறான் என்றால் தகப்பனுக்கு மிக அசிங்கமான குமட்டுகின்ற‌ தண்டனை –‍ மநு.

பகுதி 47. பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை தொட , படிக்க, வேதம் கண்பட, ஓதும் ஓசை காதில் பட அருகதை கிடையாது. கல்யாணத்தின் போது சீதைக்கு வயது ஆறேதான்.


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply