வேலைகளல்ல  வேள்விகளே

மூலையில் கிடக்கும் வாலிபனே-தினம் 

முதுகில் வேலையைத் தேடுகிறாய்

பாலை வனந்தான்  வாழ்க்கையென- வெறும் 

பல்லவி எதற்குப் பாடுகிறாய் 

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள் 

வேங்கைப் புலிநீ தூங்குவதா?

இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று 

எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழிவிழி உன்விழி நெருப்பு விழி -உன் 

விழிமுன் சூரியன்  சின்னப் பொறி 

எழு எழு தோழா உன் எழுச்சி -இனி 

இயற்கை மடியில் பெரும்புரட்சி 

நீட்டிப்  படுத்தால் பூமிப்பந்தில்

நீதான் பூமத் தியரேகை-நீ 

போட்டுக் கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான் 

பூமி வலம் வரும் புதுப் பாதை 

வெறுங்கை என்பது மூடத்தனம்-உன் 

விரல்கள் பத்தும் மூலதனம் 

கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும்-உன் 

கைகளில் பூமி சுழன்று வரும்

கட்டை விரலை விடவும் இமயம்

குட்டை என்பதை எடுத்து சொல் 

சுட்டு விரலின் சுகமாய் வானம் 

சுருங்கினதென்று முழக்கிச் செல்

தோள்கள் உனது தொழிற்சாலை -நீ

தொடுமிட மெல்லாம் மலர்ச் சோலை 

தோல்விகள்  ஏதும் உனக்கில்லை-இனி 

தொடு வானம்தான் உன் எல்லை

கால்கள் கீறிய கோடுகள் வழியே

கங்கையும் சிந்துவும் ஓடி  வரும்-உன் 

தோல்க ளிரெண்டும் தெற்கு வடக்காய்-

துருவங் களுக்குப்  பாலமிடும்

மண்புழு அல்ல மானிடனே – நீ

மாவலி காட்டு வானிடமே!

விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே-இவை 

வேலை களல்ல வேள்விகளே!

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply