சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம்
முல்லைத்தீவு என்பது தமிழர்களுக்கு உணர்வு ரீதியாக மிகவும் நெருங்கிய பகுதியாக காணப்படுகிறது. முல்லைத்தீவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை நாம் பறிகொடுத்திருந்தோம்.
அங்கு உயர்ந்து நிற்கும் மரங்களும், பரந்து கிடக்கும் மணல் தரையும் எம் உறவுகள் இரத்தம் சிந்தியதற்கான இயற்கை சாட்சியங்களாக பூமியில் நிலைப்பெற்றுள்ளன.
இன அழிப்பு, கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல்போகச் செய்யப்பட்ட உறவுகள் என பல்வேறு சோக வரலாறுகளை கொண்டு அமைந்துள்ள முல்லைத்தீவில் குமுழமுனை கிராமத்திலிருந்து 3.5 மைல் தொலைவில் தண்ணிமுறிப்பு குளத்துக்கு இடப்பக்கமாக குமுழமுனைக் கிராமத்தின் எல்லைகள் கொண்டமைந்த இடமே குருந்தூர் மலை.
பெயர் தோற்றம்
குருந்தமரம் எனும் ஒருகை மரம் இப்பகுதியில் அதிகளவில் காணப்பட்டமையால் குருந்த மலை என பெயர் பெற்று காலப்போக்கில் குருந்தூர் மலை என்ற பெயர் தோன்றியதாக எழுதப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
இங்கு சைவசமயத்தை பறைசாற்றும் வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டு, கால மாற்றத்தால் அழிவுகளை சந்தித்து, எச்சங்களாக ஓர் சிவன் ஆலயம் எஞ்சியுள்ளதாக கூறுகிறார்கள் தமிழர்கள்.
ஆனால் சிங்களவர்கள் கூறும் வரலாறோ வேறு விதமாக இருக்கிறது. ‘குருந்தகம’ என்பதே தற்போது குருந்தூர் மலையாகியுள்ளது, இதனை எம்மால் நிரூபிக்க முடியும் என குறிப்பிடுகிறார் எல்லாவல மேதானந்த தேரர்.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/72afed31-35c2-4b84-8f50-0d7ad843f67b/22-6332d2292ede3.webp)
ஆய்வுகள்
எனினும் கடந்த 1982ஆம் ஆண்டு பேராசிரியர் சி.பத்மநாதன் குருந்தூர் மலைக்குச் சென்று ஆலயச்சிதைவுகளைப் பார்வையிட்டபோது அங்கு ஓர் கற்தூணில் காணப்பட்டதாக கூறப்படும் பிராமி எழுத்தினை மொழி பெயர்ப்பு செய்து, அதில் ‘வேள்நாகன் மகன் வேள் கண்ணன்’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வன்னியில் அதிகளவில் இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒல்லாந்த ஆட்சியாளரான கெப்டன் நாகொல்லு, வன்னி நிர்வாகத்தை நேரடியாக நடத்திய நிலையில், அவரது காலத்தில் வன்னி பிரதேசத்திலிருந்த அனைத்து சைவ கோவில்களும் இடிக்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றே குருந்தூர் மலை சிவன் ஆலயம் என சமூகவியலாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற இயற்கை அழிவுகள் மற்றும் மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட புதையல் தோண்டும் நடவடிக்கை என்பவற்றின் காரணமாக ஆலயம் மேலும் அழிவிற்கு உள்ளாகி தற்போது ஆலயத்தின் எச்சங்கள் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/732e1169-a8a9-4acc-ac67-db08e5b016c6/22-6332d22978181.webp)
இதேவேளை குருந்தூர் மலைப் பகுதியில் ஆங்கிலேய ஆய்வாளர் எச்.சி.பி.பெல் ஆய்வுகளை மேற்கொண்டு அது பற்றிய விபரங்களை கடந்த 1905ஆம் ஆண்டு இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் ‘Archaeological Survey of Ceylon – Annual Report – 1905’ எனும் அறிக்கையில் ஆவணப்படுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில், “குருந்தன் குளத்தின் மேற்குப் பக்கத்தில், குருந்தூர் மலையின் தெற்குப்பக்க சரிவில் குருந்தன் ஊரெனும் நகரம் புதைந்து கிடக்கிறது.
இப்பகுதி முழுவதும் அடர்ந்த காடாகக் காணப்படும் அதேவேளை, இப்பகுதியில் இதுவரை அகழ்வாராய்ச்சிகள் எதுவும் மேற் கொள்ளப் படவில்லை. இவ்விடத்தில் மூன்று பக்கங்களும் மதிற் சுவரினாலும், ஒரு பக்கம் குளத்தின் அணையாலும் சூழப்பட்ட சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கட்டட இடிபாடுகள் காணப்படுகின்றன.
இங்கு கற்தூண்களும், ஏராளமான சிறிய கட்டடங்களின் சிதைவுகளும், சில பெரிய கட்டடங்களின் சிதைவுகளும் காணப்படுகின்றன. இவற்றில் சிறிய தூபி ஒன்று உள்ளது. இதன் அருகில் பல கற்தூண்களும், அதிகளவில் சிதைவடைந்த நந்தி ஒன்றும் காணப்படுகிறது.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/4cd7f959-5d1f-4e5a-b828-833c439d0f03/22-6332d229ac821.webp)
இது அநேகமாக ஒரு சைவக் கோயிலாக இருக்க வேண்டும். இதன் நடுவில் ஒரு அடி விட்டமுள்ள குழி உள்ளது. இதன் அருகில் செங்கற்களினால் கட்டப்பட்ட 04 அடி 06 அங்குலம் அகலமுள்ள கிணறு ஒன்றும் காணப்படுகிறது.
25 அடி ஆழமுள்ள இக்கிணற்றில் 20 அடி வரை செங்கல் கட்டுமானமும், அதன் கீழே 05 அடிக்குப் பாறையில் செதுக்கப்பட்ட கிணறும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கல்லில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் உள்ளது. 02 அடி 06 அங்குல உயரம், ஒரு அடி 09 அங்குல அகலம் கொண்ட இது அமர்ந்து வணங்கிய வண்ணம் காணப்படும் மனித உருவமாகும். இங்கு பல நாக காவற்கற்களும் காணப்படுகின்றன.
இங்குள்ள செங்கல் கட்டடம் ஒரு இந்துக் கோயிலாகும். இது இடிந்து விழுந்து மேடாகக் காணப்படுகிறது. மொத்தத்தில் இது பௌத்த, இந்து சிதைவுகளைக் கொண்ட பிரதேசமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் எல்லாவல மேதானந்த தேரர் கூறுகையில், கடந்த 1905ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவரால் செய்யப்பட்ட ஆய்விலும் இது பௌத்த மரபுரிமைக்குரியது என்பது நிரூபிக்கப்பட்டது.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/9b771a02-e2bd-4803-b6a4-889665c3c301/22-6332d229e1040.webp)
இதனைப் போன்று பல ஆங்கிலேயர்களால் ஆராய்வு செய்யப்பட்டு அவற்றிலும் இது பௌத்த மரபுரிமைக்குரியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் குருந்தூர் மலைப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்ட ஆங்கிலேய ஆய்வாளர் ஜே.பி.லூயிஸ் கடந்த 1895ஆம் ஆண்டு தனது ‘Manual of the Vanni Districts’ எனும் நூலில் இது பற்றிய விபரங்களை எழுதியுள்ள நிலையில், அதில் குருந்தூர் மலையில் தலை உடைந்த நிலையில் ஒரு நந்தியின் சிலை இருந்ததாகவும், வணங்கிய நிலையில் ஒருவர் இருக்கும் சிற்பம் இருந்ததாகவும், இவை தமிழரின் படையெடுப்பின் பின் கட்டப்பட்ட ஓர் இந்துக் கோயிலுக்குரிய சின்னங்கள் எனவும், இங்கு ஐந்து தலை நாகத்தின் கற்சிலையுடன் கூடிய ஒரு பண்டைய கோயில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/0e3444c8-948b-46d6-babc-7d9016dae301/22-6332d22a21dac.webp)
இதன்படி பார்க்கும் போது தமிழர்களாலும், சிங்களவர்களாலும் வரலாறு அலசி ஆராயப்பட்டு வருகின்றமை புலப்படுகிறது.
குருந்தூர் மலை என்பது தமது அடையாளம் என தமிழர்கள் ஆதாரங்களை முன்வைக்கும் அதே சந்தர்ப்பத்தில் அவற்றிற்கு சரிசமனான ஆதாரங்களை முன்வைக்கிறார்கள் சிங்களவர்கள்.
வரலாறுகள், ஆதாரங்கள் ஒருபுறம் இருக்க நீதிமன்றம், அமைச்சர்களின் உத்தரவுகளை மீறி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறித்த பகுதியில் பல அடாத்தான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வேதனையளிப்பதாகவே காணப்படுகிறது.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/8f56d804-3454-4a4a-995b-5ae570bd22db/22-6332d22a521f0.webp)
அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பம்
குருந்தூர் மலை பகுதியில் மக்களது பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த 18.01.2021 அன்று தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து சுமார் ஒரு வார காலத்திற்கு பின்னர் அப்பகுதிக்கு வருகை தந்த அகழ்வாராய்ச்சியாளர்கள், இராணுவத்தினரையும் இணைத்து அகழ்வாராய்ச்சிப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தனர்.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/6ae12764-3609-4aed-ab83-445310051448/22-6332d22abec86.webp)
இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களில் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக பௌத்தபீட விரிவுரையாளர் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குருந்தூர் மலைக்கு பௌத்த மதகுருமார்கள், படை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர் கூறுகையில், மகாவம்சம் மற்றும் எமது இதிகாசங்களில் சொல்லப்பட்ட குருந்து விகாரை, குருந்தாசோக விகாரை ஆகியவற்றை பார்க்கவே நாம் வந்தோம். அங்கு ஒரு விகாரை இருந்தது பின்னர் அழிவடைந்து விட்டது. அந்த இடங்களில் அதன் சிதைவுகள் உள்ளன.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/f64e7c51-1eae-4569-85a4-e34c73b20ef3/22-6332d22a88874.webp)
அத்துடன் சந்திரவட்டக்கல் போன்ற விகாரைக்குரிய சின்னங்கள் அங்கு சிதைவடைந்த நிலையில் உள்ளன. சிங்களத்தில் உள்ள எட்டு இதிகாசங்களில் 2 பாளி மொழியில் உள்ளன.
ஏனையவை சிங்களத்தில் உள்ளன. இதிலொன்று குருந்தி இதிகாசம் ஆகும். இது இந்த இடத்தில் வைத்தே எழுதப்பட்டது. அத்தோடு குருந்தகாசரியோ என்ற விகாராதிபதியினாலேயே இந்த இடம் உருவானது என குறிப்பிட்டிருந்தார்.
சிவலிங்க வடிவிலான சிலை மீட்பு
நிலைமை இப்படி இருக்க அகழ்வாராச்சிப் பணிகளின் போது சிவலிங்க உருவத்தை ஒத்த சிலையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த உருவம், பல்லவர் காலத்திற்குரிய எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கத்தை ஒத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Conversation
Shritharan Sivagnanam@ImShritharanமுல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். #KurunthurMalai5:12 AM · Feb 10, 2021·Twitter for Android
இதேவேளை, அந்த சிவலிங்க உருவத்தை ஒத்த சிலை அநுராதபுர காலத்தை ஒத்த சின்னம் என தொல்பொருட்கள் திணைக்களம் தெரிவித்த நிலையில், அவை வேறு காலத்திற்கு உட்பட்டவை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.
அதன்படி குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசியர் அநுர மனதுங்க தெரிவித்திருந்தார்.
அநுராதபுரம் காலத்திற்குரிய பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்றுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், தொல்பொருள் சின்னமாக கிடைக்கப்பெற்றிருப்பது 8 பட்டைகள் கொண்ட அஷ்ட லிங்கம் எனப்படும் தாராலிங்கம் என வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தமிழ்நாட்டில் இருக்கும் வரலாற்று ஆய்வாளர், இராமநாதபுரம் தொல்லியல் துறை தலைவர் ராஜகுரு என்பவரிடம் உறுதிப்படுத்திக் கொண்டதாக என்.கே.எஸ்.திருச்செல்வம் கூறினார்.
இது தொடர்பில் தமிழ்நாட்டில் இருக்கும் வரலாற்று ஆய்வாளர், இராமநாதபுரம் தொல்லியல் துறை தலைவர் ராஜகுரு என்பவரிடம் உறுதிப்படுத்திக் கொண்டதாக என்.கே.எஸ்.திருச்செல்வம் கூறினார்.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/e5f0a3d7-7303-4abc-bbbb-0d0483b79dc3/22-6332d22af2de2.webp)
இதேவேளை, பொலன்னறுவை 13ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, வன்னி பிரதேச நிலப்பரப்பு பெருமளவிற்கு தமிழர்களின் ஆதிக்கத்திற்கு பின்னர் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து வந்துள்ளது.
இங்குள்ள பௌத்த ஆலயம் 13 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருந்திருக்கும் என்பது வரலாற்று உண்மை. ஆயினும், பௌத்த ஆலயம் தமிழ் மக்களுக்கு உரியதா, சிங்கள மக்களுக்கு உரியதா என்பதனை ஆய்வுகளில் கிடைக்கின்ற நம்பகரமான கல்வெட்டு, நாணயங்களைக் கொண்டே உறுதிப்படுத்த வேண்டும் என யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் குறிப்பிட்டார்.
விகாரைக்கான பூசைகள்
இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்திடம் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் திடீரென கோவிட் சுகாதார விதிமுறைகளை மீறி அவசர அவசரமாக முற்றுமுழுதாக குருந்தாவசோக ரஜமஹா விகாரைக்கான பிரித்ஓதல் வழிபாடுகள் இடம்பெற்று விகாரை பூசைகள் தொடங்கி வைக்கப்பட்டன.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/46af681d-2193-4768-ad31-0b2252b090fd/22-6332d378b0e60.webp)
பின்னர், இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுதலிக்ககூடாது என்றும் அங்குள்ள இந்து வழிபாட்டு இடங்கள் அகற்றப்படக்கூடாது என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் குருந்தூர் மலையில் எவ்விதமான நிர்மாணங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அடிக்கல் நாட்டல்
எனினும் குருந்தூர் மலையில் கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி அங்கு கட்டடம் ஒன்று நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதோடு, மீண்டும் அப்பகுதிக்கு மக்கள் பிரதிநிதிகள் உட்பட எவருக்கும் அனுமதி முற்றாக மறுக்கப்பட்டது.
குருந்தூர் மலையில் கடந்த ஜுன் மாதம் 12ஆம் திகதி புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளையும் மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்வதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசை வழிபாடுளை மேற்கொள்வதற்குமான நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் குறித்த பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர்.
இதில் இராணுவத்தினர் பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச் சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். எனினும் குறித்த முயற்சி தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/7a85ad1e-f410-4f51-9b47-b9f1f0715900/22-6332d37907728.webp)
இந்நிலையில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், கடந்த 16.06.2022 அன்று குருந்தூர்மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை நகர்த்தல்பத்திரம் அணைத்து, ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், பொலிஸார் தொடர்ச்சியாக இந்த வழக்கிலே நீதிமன்றிற்கு வழங்க வேண்டிய அறிக்கைகளை வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அந்தவகையில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும் பொலிஸார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆழ்ந்து அவதானித்த நீதவான், வழக்குத் தொடுநரான பொலிஸார், குருந்தூர் மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக 23.06.2022 திகதியிட்டிருந்தார்.
குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற வழக்கு, மீண்டும் கடந்த 23.06.2022 அன்று இடம்பெற்ற போது பொலிஸார் இது தொடர்பான பூரணமான விளக்கத்தை அளிப்பதற்கு முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், மேலதிகமாக தமக்கு விளக்கமளிப்பதற்கு காலம் தேவை எனவும் கோரியிருந்தனர்.
இதனடிப்படையில் வழக்கு விசாணைகள் 30.06.2022இற்கு தவணை யிடப்பட்டிருந்தது. இதேவேளை பொலிஸ் தரப்பில் விளக்கமளிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதானகே முல்லைத்தீவு மாவட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் சமூகமாகி விளக்கமளித்தனர்.
இரு தரப்பு வாதங்கள், சமர்ப்பணங்களை அவதானித்த நீதவான், கட்டளைக்காக இந்த வழக்கினை 14.07.2022ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/7d253ee0-469d-402d-a888-76f4cd32e94b/22-6332d3793c158.webp)
கட்டுமானங்களை அகற்ற உத்தரவு
இதனை தொடர்ந்து வழக்கு 14.07.2022ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறும், குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும், இந்த இடத்தில் அமைதி குலைவு ஏற்படாத வகையில் பொலிஸார் உரிய பாதுகாப்பினையும் வழங்க வேண்டும் எனவும் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இது தொடர்பில் பொலிஸார் 18.07.2022 அன்று நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த நிலையில் 19.07.2022 அன்று வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற போது வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு, நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்று வரும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் செய்திருந்தனர்.
அத்துடன், ஜூன் மாதம் 12ஆம் திகதி 2022க்கு முன்னர் எந்த நிலையில் குருந்தூர் மலையில் கட்டுமான நடவடிக்கைகள் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்தும் பேணுமாறும், புதிதாக எந்தவிதமான கட்டுமானகளையும் செய்யமுடியாது எனவும், அத்தோடு தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை எதிர்வரும் 13.10.2022 அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை பிறப்பித்திருந்தது.
எனினும் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தொடர்ச்சியாக பௌத்த கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேவேளை பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் மன்றுக்கு அறிக்கையை வழங்க கால அவகாசம் தேவைப்படுவதாக மன்றுக்கு தெரிவித்தனர்.
இந்த நிலையில் வழக்கில் வருகின்ற தவணையான 13.10.2022 வரை ஏற்கனவே நீதிமன்றம் விதித்த கட்டளையை பேணுவதாக கூறியதையடுத்து, அடுத்த தவணையின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளரையும், பொலிஸாரையும் நீதிமன்றிலே முன்னிலையாகுமாறு மன்று கட்டளையிட்டது.
காணியை விகாரைகளுக்கு வழங்க நடவடிக்கை
![சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் | Sri Lanka Buddha Temple In Tamil](https://cdn.ibcstack.com/article/584fcf65-ebdc-4505-99ae-413d6a60f30b/22-6332d22b372a4.webp)
குருந்தூர் மலை தொடர்பான வழக்கு நீதிமன்றில் உள்ள நிலையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குருந்தூர் மலை காணியை விகாரைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் அவர், தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு அளவீடு எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டதுடன், தனக்கு குறித்த விடயம் சம்பந்தமாக அறிக்கையொன்றை சமர்ப்பித்து அனுமதி வழங்கப்பட்டதன் பின் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கை நில அளவைத் திணைக்களத்திற்கு அளவீட்டு பணிகளை நிறுத்துமாறு தெரிவித்த உத்தரவு அடங்கிய கடிதமொன்று சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆக மொத்தத்தில் குருந்தூர் மலைப்பகுதி என்பது மத கண்ணோட்டத்திலும் சரி, மக்களின் காணி தொடர்பான கண்ணோட்டத்திலும் சரி சர்ச்சைக்குரிய இடமாகவே தொடர்ந்தும் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குருந்தூர் மலை தொடர்பான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 13ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் உணர்வோடு இரண்டற கலந்த முல்லைத்தீவில் ஏராளமான எம் உறவுகள் காணாமலாக்கப்பட்டமை போல் இப்பொழுது சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாவும் கொள்ளப்படும் சிவனை காணாமல் செய்வதற்கான முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/237d2c72-b771-41ab-a6a4-4ae1f50c0495/22-6332d3a932adb.webp)
Leave a Reply
You must be logged in to post a comment.