திருக்குறள் அதிகாரம் மருந்து

திருக்குறள் அதிகாரம் மருந்து
 

குறள் பாடல் 

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (௯௱௪௰௧ – 941)

ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும் (௯௱௪௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். (௯௱௪௰௧)
—மு. வரதராசன்

மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும். (௯௱௪௰௧)
—சாலமன் பாப்பையா

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும் (௯௱௪௰௧)
—மு. கருணாநிதி

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். (௯௱௪௰௨ – 942)

முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம் (௯௱௪௰௨)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. (௯௱௪௰௨)
—மு. வரதராசன்

ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை. (௯௱௪௰௨)
—சாலமன் பாப்பையா

உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை (௯௱௪௰௨)
—மு. கருணாநிதி

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (௯௱௪௰௩ – 943)

முன்னுண்டது அற்றபின், உண்பதனையும் அளவாக உண்ண வேண்டும்; அதுவே பெறுவதற்கரியதான இந்த மானிட யாக்கையை நெடுங்காலத்திற்குக் காப்பாற்றும் வழி (௯௱௪௰௩)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும். (௯௱௪௰௩)
—மு. வரதராசன்

முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி. (௯௱௪௰௩)
—சாலமன் பாப்பையா

உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும் (௯௱௪௰௩)
—மு. கருணாநிதி

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. (௯௱௪௰௪ – 944)

முன்னுண்டது அற்றதை அறிந்து, மிகவும் பசித்து, உடலிலே மாறுபாட்டைச் செய்யாத உனவுகளைத் தெரிந்தெடுத்து, உண்டு வருதல் வேண்டும் (௯௱௪௰௪)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும். (௯௱௪௰௪)
—மு. வரதராசன்

முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க. (௯௱௪௰௪)
—சாலமன் பாப்பையா

உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும் (௯௱௪௰௪)
—மு. கருணாநிதி

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (௯௱௪௰௫ – 945)

உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை (௯௱௪௰௫)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை. (௯௱௪௰௫)
—மு. வரதராசன்

ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை. (௯௱௪௰௫)
—சாலமன் பாப்பையா

உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை (௯௱௪௰௫)
—மு. கருணாநிதி

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். (௯௱௪௰௬ – 946)

அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பது போல, அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும் (௯௱௪௰௬)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும். (௯௱௪௰௬)
—மு. வரதராசன்

குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும். (௯௱௪௰௬)
—சாலமன் பாப்பையா

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை (௯௱௪௰௬)
—மு. கருணாநிதி

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். (௯௱௪௰௭ – 947)

பசித் தீயின் அளவாலே அல்லாமல், காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு உண்டானானால், அவனிடத்திலே எல்லையில்லாமல் நோய்களும் வளரும் (௯௱௪௰௭)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும். (௯௱௪௰௭)
—மு. வரதராசன்

தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும். (௯௱௪௰௭)
—சாலமன் பாப்பையா

பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும் (௯௱௪௰௭)
—மு. கருணாநிதி

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். (௯௱௪௰௮ – 948)

குணங்குறிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும் (௯௱௪௰௮)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும். (௯௱௪௰௮)
—மு. வரதராசன்

நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும். (௯௱௪௰௮)
—சாலமன் பாப்பையா

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்) (௯௱௪௰௮)
—மு. கருணாநிதி

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். (௯௱௪௰௯ – 949)

மருத்துவத்தைக் கற்றறிந்தவன், நோயாளியின் சக்தியையும், நோயின் தன்மையையும், காலத்தின் இயல்பையும், நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும் (௯௱௪௰௯)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். (௯௱௪௰௯)
—மு. வரதராசன்

மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும். (௯௱௪௰௯)
—சாலமன் பாப்பையா

நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும் (௯௱௪௰௯)
—மு. கருணாநிதி

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து. (௯௱௫௰ – 950)

பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம் (௯௱௫௰)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது. (௯௱௫௰)
—மு. வரதராசன்

நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும். (௯௱௫௰)
—சாலமன் பாப்பையா

நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது (௯௱௫௰)
—மு. கருணாநிதி 

திருக்குறளில் மருத்துவம்!

“திருக்குறளில் மருத்துவம்!” என்ற தலைப்பில் தொழுதூரில் பாவலர், சித்தமருத்துவர் வரதராஜன் அவர்கள் நடத்தும் மருத்துவக்கூட்டத்தில் ( 28/06/2014) நான் ஆற்றிய உரைவடிவம்!

எல்லாப் பொருளும் இதன்பால் உளதிதன்பால்இல்லா எப்பொருளும் இல்லையால்…
ஒரு பழம்பாடல் திருக்குறளைப் பற்றி இப்படிச் சுட்டுகிறது. மனிதகுல வாழ்விற்கு, மேன்மைக்கு  என்னவெல்லாம் தேவையோ அனைத்தும் சொல்லப்பட்டிருக்கிற நூல் திருக்குறள் என்றால் அது மிகையாகாது.
      இன்றைக்கு நகரங்களில் தோன்றிக்கொண்டிருக்கும் பெரிய பெரிய வணிக வளாகங்கள் பற்றி நாமெல்லாம் நன்கறிவோம். உள்ளே போய்விட்டால் நமக்குத் தேவையான எதுவும் இல்லை எனக் கைவிரித்துவிட்டு வந்துவிடமுடியாது. அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்துவிடுகிறது என்று வியந்து போகிறோம்.
      அது வணிக வளாகம். அத்தகையதே திருக்குறள். இது அறிவு வளாகம். அத்தகைய திருக்குறளில் மாந்தனுக்கு ஏற்படுகின்ற நோய், அந்நோய்க்கான தீர்வாகிய மருந்துபற்றி எந்த அளவிற்குப் பேசப்பட்டிருக்கிறது? என்று பார்த்தோமானால், திருக்குறள் முழுவதையுமே ஓர் மருத்துவ நூல் என்பேன் நான். அதற்குமுன் மருத்தை எத்தனை வகையாகப் பிரிக்கிறது திருக்குறள் என்று பார்த்துவிடுவோம்.
      உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்(று)      அப்பால்நாற் கூற்றே மருந்து!
      என மருந்து நால்வகைப்படும் என்கிறது திருக்குறள். இங்கு ஒரு கேள்வி எழுகிறது. நால்வகை மருந்துகளுள் ஒன்று ‘உற்றவன்’ என்கிறார் வள்ளுவர். அதாவது நோய்ப்பட்டவனே மருந்தும் ஆவான் என்கிறார். நோய்ப்பட்டவனே எப்படி மருந்தும் ஆக முடியும். சிந்தித்துப்பார்க்க வேண்டும். நால்வகை மருந்துகளுள் ஒருவராகிய மருத்துவர் சொல்லும் அறிவுரைகளை, நோய்தீரக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை, செவ்வனே ஏற்றுக் கடைப்பிடித்துத் தனக்கு வந்திருக்கிற நோய் அத்தனை கடுமையானதல்ல விரைவில் தீர்ந்துவிடும், தீர்த்து விடலாம் என்கிற மன உறுதி இருக்கிறதல்லவா அதையே மருந்து எனக்கொள்ளுதல் வேண்டும்.
அடுத்த மருந்து ‘தீர்ப்பான்’. அதாவது மருத்துவன். மருத்துவன் கூறுகிற வழிமுறைகள், ஊட்டுகிற நம்பிக்கை, நோயைத் தீர்க்க அவன் கையாளும் முறை இவையே மருந்து எனக்கொள்ளல் வேண்டும். மூன்றாவதாக ‘மருந்து’. இது மாத்திரை, ஊசிவழி ஏற்றக்கூடிய மருந்து, களிம்பு போன்றவற்றைக் குறிக்கிறது.
நான்காவது மருந்தாக ‘உழைச்செல்வான்’ என்கிறார் திருவள்ளுவர். இச்சொல்லுக்கான பொருளாக பணிவிடை செய்யுநன் அல்லது செவிலித்தாய் எனக்கொள்ளலாம். செவிலித்தாயை எப்படி மருந்தாகக் கொள்ள முடியும்? அவர் செய்கிற பணிவிடை, காட்டுகிற ஈடுபாடு, செலுத்துகிற அன்பு, கரிசனம் போன்றவையே விரைவாக நோய்நீங்கி நாம் மீண்டெழ சிறந்த வழியாக விளங்குவதால் அதையே மருந்தும் ஆகும் என்கிறார் வள்ளுவர்.
வள்ளுவர் கூற்றுப்படி மருந்து நால்வகைப்படுமாயின் நோய் எத்தனை வகைப்படும்? இங்கு எளிதாகப் புரிந்து கொள்ள மூன்று வகையாகப் பிரித்துக்கொள்வது சரியாக இருக்கும் எனக்கருதுகிறேன்.
      1.உடலுக்கு ஏற்படும் நோய், 2.மனதிற்கு ஏற்படும் நோய், 3.அறிவு அல்லது எண்ணத்தில் ஏற்படும் நோய். உடலுக்கு ஏற்படும் நோய்கள் தலைவலி, காய்ச்சல், இரத்தக்கொதிப்பு, மூலம், சர்க்கரை போன்றவை. மனதிற்கு ஏற்படும் நோய்கள் சோர்வு, அமைதியின்மை, குழப்பம், தூக்கமின்மை, அச்ச உணர்வு போன்றவற்றைச் சொல்லலாம். அறிவுக்கு ஏற்படும் நோய்கள் செருக்கு, அகந்தை, வெகுளி, எனக்கொள்ளலாம். இப்படி மூன்று வகையாகப் பகுத்துக் கொண்டு திருக்குறளை நோக்குவோமானால் திருக்குறள் முழுவதுமே மனதிற்கும் அறிவிற்கும் உடலுக்குமான நோய் நீக்கி என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
      இது உடல் சார்ந்த நோய்பற்றிய கூட்டம் என்பதால் நான் உடல் சார்ந்த மருத்துவம் பற்றித் திருக்குறள் சுட்டுவதைத் தொட்டுக் காட்டுகிறேன்.
      மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்      வளிமுதலா எண்ணிய மூன்று!
என்கிறது திருக்குறள். அது என்ன வளிமுதலா மூன்று? வாதம் பித்தம் கபம் என்பனவே அம்மூன்று. இம்மூன்றில் எது ஒன்று மிகினும் குறையினும் நோய் உறுதி. இம்மூன்றையும் எப்படி சரிவிகித அளவில் வைத்துக்கொள்வது? அப்படி வைத்துக்கொள்வதற்கு ஏதாவது ஒரு மருந்து இருக்குமல்லவா? அது நமக்குக் தேவைப்படும் அல்லவா? ஒருவேளை அத்தகைய மருந்து அருமருந்தே ஆனாலும் அதெல்லாம் தேவையில்லை என்கிறது திருக்குறள். மாற்றாக எளிய வழியொன்றை வகுத்துரைக்கிறது.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்!
இது திருக்குறள் கூறும் எளிய முறை. இவ்விடத்தில் அருந்தியது என்கிற சொல்லை நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது. திரவ நிலையில் உள்ளவற்றை உட்கொள்ளும் போது அருந்துதல் என்கிறோம். மென்மை படுத்தப்பட்ட உணவை உட்கொள்ளுவதை உண்ணுதல் என்கிறோம். கடின உணவைத் தின்னுதல் என்கிறோம். அப்படிப் பார்த்தால் உணவை உண்ணுதல் என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு வள்ளுவர் அருந்துதல் என்கிறார். இது நுட்பமான சொல்லாடல். வாயிலிட்ட உணவை நன்றாக மென்று கூழ்நிலையை அடைந்தபின்பு அதாவது திரவ நிலையை அடைந்தபின்பு உட்கொள்வதை அருந்துதல் என்றே சொல்ல முடியுமேயன்றி உண்ணுதல் எனச்சொல்ல முடியாது. ஆக நாம் உணவை நன்றாக மென்று கூழாக்கியபின் அருந்துதல் என்கிற சொல்லாடலே சரி.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? கையில்லாத ஒருவனை ஓவியப்போட்டியில் கலந்துகொள்ளச் சொல்வது எப்படி அறிவுநிலை ஆகாதோ! காலில்லாத ஒருவனை ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ளச் சொல்வது எப்படி அறிவு நிலை ஆகாதோ! அத்தகையதே, பற்கள் நிறைந்த வாயால் உணவை மென்று அருந்தாமல் பற்களே இல்லாத வயிற்றிற்கு அவ்வேலையை செய்யக் கொடுப்பதும் ஆகும்.
வாதம் பித்தம் கபம் இம்மூன்றையும் சமநிலைப்படுத்த இன்னொரு எளிய முறையையும் நம் முன்னோர் கடைபிடித்து வந்துள்ளனர். அது வெற்றிலை பாக்குப் போதுவது. பாக்கில் துவர்ப்பு அதிகம். அது வாதத்தைக் கட்டுப்படுத்த வல்லது. பாக்கை காலை வேளையில் சிறிது கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பகல் வேளையில் வெப்பம் மிகுதியாக இருக்கும். வெப்பம் பித்தத்தைக் கூட்டும். சுண்ணாம்பில் சுண்ணாம்புச் சத்து அதிகம். அது பித்தத்தைக் குறைக்கக் கூடியது. ஆக நன்பகலில் சிறிது கூடுதலாக சுண்ணாம்பைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிலையில் காரம் அதிகம். அது கபத்தைக் கட்டுப்படுத்தும். ஆக இரவில் வெற்றிலையைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாதம், பித்தம் கபம் இம்மூன்றின் சமநிலையைக் குலைக்கவும் ஓர் எளிவ வழி உள்ளது. அது பால், தேநீர், குளம்பி குடிப்பது. பால் கபத்தைக் கூட்டும், தேநீர், குளம்பி பித்தத்தைப் பெருக்கும்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இடம் சார்ந்து, காலம் சார்ந்து விளைகிற காய்கறிகளை அந்தந்த காலக்கட்டத்தில் உண்டு வந்தாலே போதுமானது. எடுத்துக்காட்டுக்கு கோடையில் – வெள்ளரிக்காய், கத்தரிக்காய், முருங்கை, மா, பலா போன்றவை அதிகம் விளையும் கிடைக்கும். அவற்றை நம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதே சிறப்பு. உடலில் அரிப்புடையவர்கள் மட்டும் கத்தரிக்காயைத் தவிர்த்துவிடுவது நல்லது. அதுபோல பலாச்சுளையைத் தேனில் தொட்டுச் சாப்பிடுவதே சிறப்பு என்கிறது சித்தமருத்துவம்.

பால், தேநீர், குளம்பி போன்றவை தமிழகம் போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு ஏற்றதா என்றால் இல்லை. இங்குள்ள நாட்டு மாடுகளுக்கு மடி சிறிதாகவே இருக்கும். குறைந்த அளவு பாலையே கறக்கும். குளிர் மண்டலங்களில் உள்ள மாடுகளின் மடி பெருதாக இருக்கும். பாலும் அதிகம் கறக்கும். அங்குப் பாலின் தேவை அதிகம் அதனால் மடி பெரிதான மாடுகளை இயற்கை அங்குத் தகவமைத்து வைத்திருக்கிறது. இங்குப் பாலின் தேவை குறைவும். மடி சிறிய மாடுகளை இங்குத் தகவமைத்துக் கொடுத்திருக்கிறது இயற்கை.

தமிழகத்தைப் பொருத்தவரை நாட்டு மாடுகள் மொத்தம் 42 வகைகள் உள்ளன. கீகரை மாடு மட்டுமே நாட்டு மாட்டு வகைகளிலேயே அதிகம் பால் தரக்கூடிய தமிழ்நாட்டு பசு.

ஆனால் இன்றைய தமிழகத்தின் நிலையென்ன? பாலின் தேவை அதிக அளவில் உள்ளது. காரணம் கோடையோ குளிரோ எக்காலத்திலும் காலை மாலை மட்டுமன்றி எவ்வேளையிலும் நமக்கு தேநீர் குளம்பி தேவையாக இருக்கிறது. சரி குடிக்கிறதுதான் குடிக்கிறோம். நம் மண்சார்ந்த மாடுகளின் பாலைக் குடிக்கிறோமா என்றால் அதுவுமில்லை. இன்று உலகெங்கும் கலப்பின மாடுகளில் பாலே வியாபார நோக்கில் எங்கும் வியாபித்திருக்கிறது.

இக்கலப்பின மாடுகளின் பால் பற்றி சிந்திக்கத் தகுந்த கருத்தொன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கலப்பின மாட்டுப் பாலில் நோய் மூலக்கூறு உடைய ஏ1 புரதம் இருக்கிறது. நாட்டு மாட்டுப் பாலிலோ அது இல்லை மாறாக மிகவும் சத்துடைய ஏ2 புரதம் உடையவை நாட்டு மாடுகள். கலப்பின மாட்டுப் பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன்- மரபினக் கோளாறு உட்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பால் அதிகமாகக் கறக்கும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது. கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயற்பாடு உடையவை. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குறியது. இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும் – செயற்பாடும், வீரிய குறையும், பெண்போன்ற செயற்பாடும் ஏற்படுகின்றன. பெண்களுக்கு சீரான ஹார்மோன் சுரப்பி, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சிப் பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது.

இதற்கு என்னால் ஓர் எடுத்துக்காட்டைக் கூற முடியும். நாட்டு முட்டை மருத்துவ குணம் மிக்கது. உடலுக்கும் வலுவூட்டும். கடைகளில் விற்கப்படும் பண்ணை முட்டைகளுக்கு இத்தகைய குணம் எதுவுமில்லை. அவை உணவுத்தேவைக்காக வணிக நோக்கிற்காக மட்டுமே உற்பத்திச் செய்யப்படுகின்றன. அதே வேறுபாடுதான் நாட்டு மாட்டுப் பாலுக்கும் வணிக நோக்கில் உற்பத்தி செய்யப்படும் கலப்பின மாட்டுப் பாலுக்குமான வேறுபாடும்.

நம் தமிழிலக்கியங்களில் கூட நீங்கள் காணலாம். மோரின் சிறப்பைப் பேசும் அளவிற்குப் பாலின் சிற்றைப் பேசவில்லை. சித்தமருத்துவத்தின் முன்னோடிகளாகிய சித்தர்கள் கூட நாம் பாலைப் பருக வேண்டும் என்று கூறியதாக ஓரிடத்திலும் குறிப்புகள் இல்லை. ஆக இன்றைக்கு நாம் பருகும் பால் முழுதும் கலப்பினப் பாலாகவே இருப்பதால் முற்றாகத் தவிர்ப்பதே சாலச்சிறந்தது.

இன்றைக்கு நாம் சமச்சீர் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமச்சீர் உணவு பற்றிப் பேசுகிறது திருக்குறள்.
அற்றால் அளவறிந் துண்க அகுதுடம்புபெற்றான் நெடிதுய்க்கு மாறு!
ஒருவன் தனது உடலுக்கு உழைப்புக்கு இவ்வளவு உணவு போதும் என்கிற அளவறிந்து உண்பானானால் அவன் பெற்ற அந்த உடம்பானது நீண்ட நெடுங்காலம் இன்ப நலங்களைத் துய்த்தும் உய்தும் வாழலாம். அதற்கு அளவறிந்து உண்பதே வழி என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
நாம் அளவாகத்தான் உண்கிறோம் என்பதை எப்படி அறிந்து கொள்வது? உண்டபின் ஏப்பம் வராமலிருந்தால் அது அளவுணவு உண்டதாகக் கொள்ளலாம். ஏப்பம் ஏன் வருகிறது? உண்ணும் போது உணவுடம் கலக்கும் காற்றானது உண்டபின் ஏப்பமாக வருகிறது. அறைவயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்கிற விகித்ததைக் கடைப்பிடித்தால் ஏப்பம் வராது. மாறாக கால் வயிறு காற்று இருக்க வேண்டிய இடத்தில் உணவை நிறப்பிவிட்டால் பின்பு காற்று இருக்க இடமேது? ஆகவே காற்று ஏப்பமாக வெளிப்படுகிறது.

திருக்குறள் இன்னொன்றும் சொல்கிறது.மாறுபா டில்லாத உண்டி மறுத்துணின்ஊறுபா டில்லை உயிர்க்கு!

தன் உடலுக்கு ஏற்புடைய, தன் உடல் ஏற்றுக் கொள்கின்ற எளிய, மெல்லிய உணவை அளவில் மிகாமல் ஒருவன் உண்டு வருவானேல் நோய் அவனை அண்டி ஊறு விளைவிக்காதாம் என்கிறது. மாறுபாடில்லாத உணவு என்பதால் அதனை அளவுக்கு அதிகமாக உண்டால் என்னாகும்?

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்!

செறித்தபின் உண்பது, மாறுபாடற்ற உணவை உண்பது, நன்கு பசித்தபின் உண்பது, பசியின் அளவறிந்து உண்பது என்கிற நால்வகை முறையையும் கடைபிடிக்கிற ஒருவனுக்கு நோயைப் பற்றிய கவலை தேவையில்லை.

திருக்குறளும் மருத்துவமும்

October 24, 2010 

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.” – (குறள் 942 – அதிகாரம் – 95)

உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.

மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்த அதிகாரமாகும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”

தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள்.

“பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு

பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

பஞ்சுப் பொதியல்ல நம் வயிறு. வயிறு முட்ட சாப்பிடுவது நல்லதல்ல. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர். மீதி கால் வயிறு காற்றோட்டத்திற்கு. இப்படி இருந்தால் மட்டுமே சிறப்பு.

மூன்று வேளை கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர். வயிறு செரிமானமாகாமல் இருப்பின் அடுத்த வேளை உணவை தவிர்த்து விடலாம். அதுவும் இரவு உணவு உண்பதில் எச்சரிக்கை வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு உணவில் மாமிசத்தைத் தவிர்ப்பது நல்லது.

உலக மக்கள் இருவகை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஒன்று உயிர் வாழ்வதற்காக உண்பவர்கள். இரண்டாம் வகையினர் உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள். இந்த இரண்டாம் வகையினர் சாப்பாட்டுப் பிரியர்கள். இவர்கள் எப்போதும் எதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

தினமும் விருந்தும், கேளிக்கையுமாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே குறுக்கிக் கொள்கிறார்கள்.

உணவு உண்பதில் ஒரு வரைமுறை வேண்டும். ஒரு கட்டுப்பாடு வேண்டும். கால இடைவெளி வேண்டும்.

“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
முப்போதும் உண்பான் ரோகி
எப்போதும் உண்பான் துரோகி”

இப்பாட்டிலிருந்து நாம் அறிவது என்ன?

எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே ஒருவன் இருப்பானேயானால் அவன் தனக்குத்தானே துரோகம் செய்துகொள்கிறான். எப்போதும் எதையாவது உண்டு கொண்டே இருந்தால் வயிறு ஒரு அரவை இயந்திரமாகிப் போகிறது. அதன்பின் அதற்கு ஓய்வில்லாமல் போகிறது. இது வயிற்றில் சுரக்க வேண்டிய சுரப்பி நீர்களை அதிகமாகவோ, குறைவாகவோ நேரம் கெட்ட நேரத்தில் சுரக்க வைக்கிறது.

இதனால் நமக்கு தேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது பல நோய்கள் உருவாக அடித்தளமாகிறது. அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது என்பதை உணர்ந்து சாப்பிடுகிறானோ அவனை எந்த நோயும் அணுகாது. மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை. இதனை நம் திருவள்ளுவர் காலத்திலேயே எடுத்துத்துரைத்திருந்தாலும் நாம் இதுவரை உணரவில்லை. இனியாவது இதனை பின்பற்றுவோமாக..

Thanks, Nakkheeran

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply