ஈழத்தின் எதிரி ஜெயலலிதா – ஆதாரங்கள்

ஈழத்தின் எதிரி ஜெயலலிதா – ஆதாரங்கள்

ஈழத்திற்கெதிரான பாசிச ஜெயாவின் குற்றப்பட்டியல்

இந்தியாவின் “வருங்காலப் பிரதமர்” ராகுல் காந்தி, கடந்த செவ்வாய்க் கிழமை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டிதான் இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்தி. அந்தப் பேட்டிக்குள் இடம்பெற்ற முக்கியச் செய்தி ஒன்றும் உண்டு. பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி போகிறபோக்கில் புகழ்ந்துரைத்தார் ராகுல். திறமையாளர்கள் யாராக இருந்தாலும் போற்றுகின்ற கண்ணியவானின் தோரணையில் இந்தப் பாராட்டு கூறப்பட்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைக் குறி வைத்தே இது பேசப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.

சில நாட்களுக்கு முன்னர் என்.டி.டி.வி சென்னையில் நடத்திய தேர்தல் விவாதத்தில் ஈழம் முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. விவாதத்தின் இறுதியில் “தேர்தலுக்குப் பின் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்வீர்களா?” என்று அதில் பங்கேற்ற அதிமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் மைத்ரேயனிடம் கேட்டபோது, “இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மறுக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார் மைத்ரேயன். “கூட்டணி அமைக்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லவில்லை. பதிலளிக்க மாட்டோம் என்றுதான் கூறுகிறீர்கள்” என்று கூறிச் சிரித்தார் தொலைக்காட்சி நிருபர். தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ஈழப்பிரச்சினை பற்றிப் பேசும்போது கூட காங்கிரசை ஜெயலலிதா தாக்குவதில்லை. கருணாநிதியைத்தான் குற்றம் சாட்டுகிறார்.

இருப்பினும், ஜெயலலிதாவின் “தமிழீழ ஆதரவு போர்முழக்கத்தை” வைகோ, ராமதாசு, நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுப் புளகாங்கிதப் பட்டிருக்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகம் “ஜெயலலிதா மீது தங்களுக்கு எவ்வித பிரமையும் கிடையாது” என்று கூறிக்கொண்டே தீவிரமாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறது. “காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் நோக்கம்” என்றும் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். “ம.க.இ.க வின் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் மறைமுகமாக காங்கிரசுக்கு உதவுவதாகவே அமையும்” என்றும் இவர்களெல்லாம் கருதுகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் பகுத்தறிவுப் பேச்சாளர்கள் பக்தர்களை இடித்துரைப்பதற்காக அடிக்கடி மேற்கோள் காட்டும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்பது அந்தப் பாட்டு.  பாட்டைப் பாடிக்காட்டிவிட்டு,  “இவனையெல்லாம் திருத்தமுடியுமா?” என்று பக்தர்களை எள்ளி நகையாடுவார்கள் பேச்சாளர்கள். தற்போது “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், இரட்டை இலையை மறந்து விடாதீர்கள்” என்று வீதி தோறும் பிரச்சாரம் நடக்கிறது.

அம்மையாரின் தமிழ் விரோத, ஈழ விரோத நடவடிக்கைகள் பற்றி வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் தெரிந்த அளவுக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்தவரை அம்மாவின் வரலாற்றைக் கீழே தொகுத்துத் தந்திருக்கிறோம். வரலாறு தெரியாத தமிழகத்தின் இளம் தலைமுறையினருக்கும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கும், வரலாற்றை மறந்துவிட்ட மூத்தோருக்கும் இது உதவக்கூடும். வரலாற்றை மறைக்க விரும்புவோருக்கும் தங்கள் சொந்த மூளையிலிருந்தே அவற்றை அகற்றிவிட விரும்புவோருக்கும் நிச்சயம் இவை உதவ மாட்டா.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் இலக்கு என்று கூறிக்கொள்வோருக்கு ஒரு கேள்வி. காங்கிரசு எல்லாத் தொகுதிகளிலும் தோற்று, அதிமுக எல்லாத் தொகுதிகளிலும் வென்று, அம்மையார் டில்லியில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து அரசும் அமைத்து விட்டால்…? அப்படி ஒரு விபரீதம் நடக்கக்கூடாது என்று இஷ்டதெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொள்ளலாம். மீறி அப்படி நடந்துவிட்டால்? அதை எப்படி விளங்கிக் கொள்வது?

“நம்மைப் பொருத்தவரை காங்கிரசுக்குப் பாடம் கற்பித்து விட்டோம். தன் பங்குக்கு ஜெயலலிதாவும் நமக்குப் பாடம் கற்பித்து விட்டார். இரண்டு பேருடைய நோக்கமும் நிறைவேறியது” என்று விளங்கிக் கொள்ளலாமா? ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்வது என்பது காங்கிரசுக்குச் செய்யும் நேரடி உதவியா, மறைமுக உதவியா?

சிந்திக்க வேண்டும். “பாடம் கற்பிப்பதற்கு” முன், வரலாறு கற்பிக்கும் பாடத்தை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். ஏதோ “நேற்று ஜெயலலிதா ஈழத்தை எதிர்த்தார் – இன்று ஆதரிக்கிறார்” என்று மிகவும் எளிதாக இதனைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் இதனைப் படியுங்கள். உங்கள் கருத்தைப் பரிசீலியுங்கள்.

ராஜீவ் கொலைக்கு முன்:

தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ‘புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுஙகிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது’ எனப் பீதியைக் கிளப்பினார்.ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் கூறிய ஜெ, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே ‘விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்

ஜூலை 1991:

ராஜீவ் கொலையானவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். ராஜீவ் கொலையான சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெ. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களை கருணையுடன் நடத்துவோம் என்று முழங்கினார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர் நலன்கள் என்ற பெயரில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ.

செபடம்பர் 1991:

சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய பெரியாரிய- மார்க்சிய பொதுவுடமைக் கட்சியினர் சிலர் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் ‘சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பு ஈழ ஆதரவு, புலி ஆதரவு எனக்கூறி நீக்கப்பட்டது. பாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும் வன்முறையையும் பிளவுவாதத்தையும் தூண்டுவதாகவும் சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்கள் கூட தடை செய்யப்பட்டு ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப்போவதாக மிரட்டினார்.

‘என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தறகொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுறுவி உள்ளனர். ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தை தகர்க்கவும் ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்’ என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார். புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும் ‘புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது’ என்றார்.

1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார். ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெ, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.

ஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும் அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார். பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.

ஈழ அகதிகள்-போராளிகள் உரிமைக்கும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார். ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.கவினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.

ஜெயா-வாழப்பாடி கும்பல் கரடியாய்க் கத்தியதால் ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழ அகதிகள் வாரம் ஒரு கப்பல் வீதம் கட்டாயாப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போயஸ் தோட்டத்துக்கு முன்பு நரிக்குறவர்களையும், ‘வயர்லெஸ்’ கருவியுடன் இருந்த ‘கூரியர்’ நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெ.

1992

தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜெ.அரசால் கைது செய்யப்பட்டனர்.

‘தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுறுவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளும், சாதனங்களும் இன்று அவசியமாக உள்ளது’ என்று ஜெ கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.

1992- செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய ‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து ‘தேசத் துரோக, பிரிவினை சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’ எனப் பாய்ந்த ஜெ, ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் மாநாட்டில் தீவிரமாகப் பேசியதாகக் கூறி சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீதிபதி கந்தசாமிபாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124-ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.

தமிழகத்தின் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி 4 புலிகளை – அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி – கைது செய்ததாக ஜெ அரசு சொன்னது. மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி ‘கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன் ‘ என்றும் சொன்னார்.

1993

புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார்.

1993 மே – ‘நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்’ என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.

கோவை ராமகிருஷ்ணன், சிறு பொறியியல் தொழிலை கோவையில் நடத்திக் கொண்டு தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார். (தற்போது பெ.தி.கவின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) இவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச்செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.

பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ‘திராவிடம் வீழ்ந்தது’ என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ தடாவில் உள்ளே தள்ளினார்.

ஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும். கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.  அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும் அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு போலீசால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.கவை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்க ஐ.பி தயாரித்திருந்த சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்க அவரை மிரட்டினர். அவர் அதற்கு மறுக்கவே, சட்ட விரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தனர். தீலீபன் மன்றத்தில் தியாகு ( இன்றைய தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர்) தொடுத்த ஆட்கொணர்வு மனுவால் 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த ( அதாவது பாலச்சந்திரன் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய ) கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டு வெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக தே.பா.சட்டக்காவலுக்கான ஆணையில் காரணம் சொல்லப்பட்டது.( அதே தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார் ). தே.பா.ச.காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தும் தீர்ப்புக்கு எதிராக சிறப்பு முகாமில் ஜெ.அரசு அவரை அடைத்தது. கொடைக்கானல் வழக்கில் அதிகாரிகள் இவரை கொடைக்கானல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாததால் பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது. மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டிய 14 ஏனைய நபர்களுக்கு அப்போது பிணை வழங்க நீதித் துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் அரசு அவரை வாட்டியது. இன்று ஈழத்துக்கு ஆதரவாக சவுடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் எவ்வாறெல்லாம் ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்தார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் பாலச்சந்திரனின் கதை.

1995 – இல் தஞ்சையில் ஜெ நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர். ஜெயின் கமிசன் விசாரணையில் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்’ என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.

2002

புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ‘பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என ஜெ கொக்கரித்தார். ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

இதே ஆண்டில் ஜெயா சட்டசபையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றினார்.

ஜூலை 2002:

விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வை.கோ மற்றும் 8பேர்கள் மீது ஜெ கொடிய பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார். பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, ‘ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்; அதற்கான பரிசீலனையில் உள்ளோம்’ என எச்சரித்தார். ம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார். புலிகளின் ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி ஜெ பிரிவினைவாதப் பீதியூட்டினார்.

செப்டம்பர் 2002:

பயங்கரவாத – பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர். இக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். ஆள்பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

செப்டம்பர் 2007

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெ ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.

2008:

அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசுக்காரர்களிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு எதிர்தரப்பினரை தள்ளிவிட்டனர். ஆனால் இச்சம்பவத்தைக் கூட ஜெ ‘கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுறுவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது’ என ஊளையிட்டார்.

மற்றபடி ஈழத்தமிழ் மக்கள் செத்து மடிவதைப் பற்றி ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என திமிராகப் பேசினார். திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் அவர்களை கைது செய்யவேண்டுமென கருணாநிதிக்கு உத்தரவுபோட்டார். அதன்பிறகு திருமாவைக் கைது செய்யவேண்டுமென்றார். கடைசில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இப்படி பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய் இப்போது நாற்பது சீட்டையும் வெற்றிபெற வைத்தால் தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருவதாக கூக்குரலிடுகிறது. ஈழப்பிரச்சினைக்காக அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டுமென முடிவெடுத்துள்ள அப்பாவிகள் இனியாவது திருந்துவார்களா?

—————————————————————————————————————————————–

ஜெயலலிதாவும் தமிழர் உரிமைசார் அரசியலும்

JATHINDRA

December 17, 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் ஜரோப்பிய நாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் விடுதலைப் புலிகள் சார்பான அமைப்புக்கள் என பலரும் ஜெயலலிதா தொடர்பில் தங்கள் புகழாரங்களை சூட்டிக்கொண்டிருக்கின்றனர். அண்மைக் காலத்தில் எதிரும் புதிருமான அனைத்து ஈழ அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்கன் என்றால், அது ஜெயலலிதாவிற்கான அஞ்சலி ஒன்றுதான். சம்பந்தன் தனது அறிக்கையில், ஜெயலலிதாவின் மறைவு தமிழ்நாட்டு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், தனது அறிக்கையில் ஜெயலலிதா தமிழ்நாடு சட்ட மன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் உரிமையை வலியுறுத்தும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆழ்வதற்கான சூழலை ஏற்படுத்த ஜெயலலிதா முனைப்புடன் செயற்பட்டதாக தெரிவித்திருக்கின்றார். இதற்கும் அப்பால், வடக்கு மாகாண சபையின் கொடியையும் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு, ஒட்டுமொத்த வடக்கு மக்களும் ஜெயலலிதாவின் மறைவால் துயருறுவதான தோற்றமும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரனால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், ஜெயலலிதா ஈழத் தமிழ் மக்களை பொறுத்தவரையில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக் காலத்திலும் அதன் பின்னரும் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாடு அவரை காவியத் தலைவியாக கருதும் நிலையை ஏற்படுத்தியதாக குறிப்பிடுகின்றார். மேலும், ஜரோப்பிய நாடுகளைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமீழீழ செயற்பாட்டாளர்களும் ஜெயலலிதாவின் மறைவு தொடர்பில் உணர்ச்சிகரமான அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றனர். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தமிழீழ நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணிப்பாதுகாக்க முற்படும் புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கின்றன.

மறைந்த தமிழ் நாட்டின் தலைவர் ஒருவருக்கு ஈழத் தமிழ் மக்களின் சார்பில் அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியம். ஆனால், ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதென்பது வேறு, அவரை அரசியல் ரீதியில் நோக்குவது என்பது வேறு. ஆனால், ஜெயலலிதா பற்றி பேசியிருக்கும் எங்களது தமிழ்த் அரசியல் தலைவர்களும் சரி (எல்லோரும் அல்ல) தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களும் சரி அஞ்சலி என்பதையும் தாண்டி அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றனர்.

இந்த உணர்ச்சிவசப்பட்ட அறிக்கைகளை பார்த்தபோது ஒரு கேள்வி எழுந்தது. ஒருவேளை, ஜெயலலிதாவின் இறப்பு 2009இற்கு முன்னர் நிகழ்ந்திருந்தால் அவருக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் எவராவது அறிக்கை வெளியிட்டிருப்பாரா?

சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன் என்று போற்றப்படுகிறான். பொதுவாக அரசியல் தலைவர்களை அவர்களது மரணத்திற்கு பின்னர் புகழ்ந்து பேசுவது ஒரு நாகரீகமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவரை அவரது மரணத்திற்குப் பின்னர் இகழ்ந்து பேசுவது தவறுதான். ஆனால், ஒரு தனிநபரை முன்னிறுத்தி ஒரு தேசத்தின் அரசியலை கணிப்பிடும் போது அதில் நிதானமும் தெளிவும் அவசியம். சில தினங்களுக்கு முன்னர் காலம்சென்ற தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தொடர்பில் ஈழத் தமிழ் அரசியல் பரப்பில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை உற்றுநோக்கியபோது, டட்லி தொடர்பில் முன்னர் படித்த அந்த குறிப்புத்தான் நினைவுக்கு வந்தது.

1982இல் எம்.ஜி.இராமச்சந்திரனால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட ஜெயலலிதா, 1991இல் தமிழ் நாட்டின் முதல்வரானார். அப்போது இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்தே ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். இந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ் நாடு வந்த போதுதான் ராஜீவ் காந்தி தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். ராஜீவ் கொலப்பட்டதைத் தொடர்ந்து வந்த இரு தினங்களில் தேர்தல் இடம்பெற்றது. ராஜீவ் கொலையினால் ஏற்பட்ட அனுதாப அலையே ஜெயலலிதா வெற்றிபெறுவதற்கான முக்கிய காரணமாகும். இதே 91ஆம் ஆண்டுதான் முத்துவேல் கருணாநிதியின் ஆட்சி தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்தது என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைக்கப்பட்டு தமிழ் நாடு, ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1989இல் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.கவின் ஆட்சி 1991 ஜனவரியில் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில்தான் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் – ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க – கூட்டணி வெற்றிபெற்றது. ஜெயலலிதா தமிழ் நாட்டின் தலைவராக வெளிந்தெரிந்த காலத்திலிருந்து அவர் இறக்கும் வரையில் அவர் ஒருபோதுமே விடுதலைப் புலிகளை முக்கியமாக அதன் தலைவராக இருந்த பிரபாகரனை ஆதரித்தவரல்ல.

ஆனால், ஜெயலலிதாவை அரசியலுக்குக் கொண்டு வந்தவரான எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளின் போசகராக இருந்த ஒருவர். ஆனால், ஜெயலலிதா தனது அரசியல் ஆசானை இந்த விடயத்தில் இறுதி வரையில் பின்பற்றவில்லை. ஒருவேளை ராஜீவ் கொலையின் போது எம்.ஜி.ஆர் பதவியில் இருந்திருந்தால் அவரது நிலைப்பாடும் கூட அப்படியே இருந்திருக்கலாம். ஜெயலலிதாவின் அரசியல் ஞானகுருவும், நெருங்கிய நன்பருமான துக்ளக் சோ என்று அழைக்கப்படும் சோ.ராமசாமியின் விடுதலைப் புலிகள் தொடர்பான நிலைப்பாடு என்னவென்பதை, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இயங்கிவரும் அனைவரும் அறிவர். 2014ஆம் ஆண்டு புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது, ஜெயலலிதாவின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு பற்றி சோ இவ்வாறு கூறுகின்றார். அவரது சில நிலைப்பாடுகள் தொடர்பில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், ஜெயலலிதா ஒரு போதுமே விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை, அவர்களுக்கு உதவி செய்யவில்லை, அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கவில்லை. இதுதான் மற்றவர்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள வித்தியாசம். ஏனெனில், விடுதலைப் புலிகள்தான் இலங்கையிலுள்ள நாசகார சக்தி. அப்படியான சக்தியை கருணாநிதி ஆதரித்தார். ஆனால், ஜெயலலிதா ஆதரிக்கவில்லை. யுத்தக் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு சோ இவ்வாறு பதிலளித்திருக்கின்றார். முதலில் அது யுத்தமே அல்ல. அது தீவிரவாத குழு ஒன்றிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை (military action against terrorist). இதனை சரியா தவறா என்று கேட்டால் அதனை நான் சரியென்றே சொல்வேன். புலிகள் சிவிலியன்களை கேடயமாகப் பயன்படுத்திய போது இராணுவம் சும்மா இருக்க முடியுமா? எனவே, சிவிலியன்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருப்பர். ஆனால், அதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணமேயன்றி, ராஜபக்‌ஷ அரசாங்கம் அல்ல.

சோவின் கருத்திற்கு சமாந்தரமான ஒரு கருத்தைத்தான் ஜெயலலிதாவும் கொண்டிருந்தார். இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொல்லப்படுவது தொடர்பில், யுத்தமென்றால் சாவார்கள்தான் என்பதே ஜெயலலிதாவின் நிலைப்பாடாகவும் இருந்தது. இறுதி யுத்தத்தின் போது ஜெயலலிதாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். ஜெயலலிதாவிற்கு அனுப்பிய கடிதங்கள் சிலவற்றை பதிவு இணையத்தளம் பிரசுரித்திருக்கிறது. அந்தக் கடிதங்கள் போர் முடிவுறுவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர்தான் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், எந்தவொரு கடிதத்திலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கையெழுத்திடவில்லை. உண்மையில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசன் ஜெயலலிதாவிற்கு மட்டுமல்ல கருணாநிதிக்கும் கடிதங்களை அனுப்பியிருப்பார். அவையும் ஒரு நாள் பிரசுரமாகலாம். போரின் உக்கிரம் விடுதலைப் புலிகளை கொஞ்சம், கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்த போது, அதிலிருந்து மீளும் நோக்கில் பலருடனும் விடுதலைப் புலிகள் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். அப்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பியும் பலருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக தனது நேர்காணல்களில் தெரிவித்திருக்கின்றார். எனவே, ஜெயலலிதாவிற்கு விடுதலைப்புலிகள் அனுப்பிய கடிதங்கள் ஆச்சரியத்துக்குரியவை அல்ல.

விடுதலைப் புலிகளின் பரம வைரியான ஜெயலலிதா, விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் அழிக்கப்பட்ட பின்புலத்தில்தான் தனிநாட்டுக்காகப் போராடப் போவதாக குறிப்பிட்டார். ஏன் அதுவரை தனிநாடு பற்றி பேசாதவர் திடீரென்று பேசினார்? ஜெயலலிதா ஒரு அரசியல் அப்பாவியல்ல. அவர், தனது அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதில் கைதேர்ந்த அரசியல் வாதி. தமிழ் நாடு சட்டமன்றத்தில் அவர் நிறைவேற்றிய பிரேரணை, ஈழத் தமிழ் மக்களை முன்வைத்து வாக்குகளை பெறக்கூடிய அனைவரையும் விழிபிதுங்க வைத்தது. அதில் தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பின் அவசியம் பற்றி வலியுறுத்தியிருந்தார். இதன் மூலம் தமிழ் நாட்டின் அனைத்து ஈழ ஆதரவாளர்களையும் ஒரங்கட்டி தானே ஈழத் தமிழ் மக்களுக்கான காவலன் என்பதான தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஜெயலலிதாவின் இந்த தடாலடியான செயற்பாடுதான் அவரை ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் திடீர் கதாநாயகியாக்கியது. ஆனால், இதில் பலரும் பார்க்கத் தவறிய விடயம் இதே ஜெயலலிதான், 2002இல் ராஜீவ் கொலையாளியான பிரபாகரனை கைதுசெய்து சாகும் வரை தூக்கில் போட வேண்டுமென்று கூறியவர். அந்த வகையில் பார்த்தால் தனிநாட்டுக்காக இறுதிவரை போராடிய பிரபாகரனை தூக்கிலிட வேண்டுமென்று ஜெயலலிதா நிறைவேற்றிய பிரேரணையும், பிரபாகரனின் இறப்புக்கு பின்னர், தனிநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் என தற்போது தமிழ் நாட்டு சட்ட மன்றத்தில் இரண்டு பிரேரணைகளும் உண்டு. 2002இல் நோர்வேயின் மத்தியஸ்த்துடனான சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதுதான், அந்த நிகழ்சி நிரலை குழப்பும் வகையில் ஜெயலலிதா மேற்படி பிரேரணையை கொண்டுவந்திருந்தார். மேலும் 1991இல் இடம்பெற்ற சம்பவத்திற்குப் பின்னர் விடுதலைப் புலிகளை தடைசெய்துமாறு மத்திய அரசிற்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வந்தவரும் இதே ஜெயலலிதான்.

ஆனால், எந்த அமைப்பு தனது இராணுவ பலத்தால் இரு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு நடைமுறை அரசை வடகிழக்கு பகுதிகளில் கட்டியெழுப்பியிருந்ததோ, அந்த அமைப்பு அழிவுற்றதன் பின்னர் தனிநாட்டுக்கான பிரேரணையை ஜெயலலிதா முன்வைத்திருக்கின்றார். இதிலிருந்து ஜெயலலிதா உணர்வெழுச்சியினால் அவ்வாறானதொரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம். விருதுநகரில் இடம்பெற்ற தேர்தல் கூட்டமொன்றில் பேசுகின்ற போது ஈழத் தமிழ் மக்களின் அழிவுகளுக்கு காரணமான காங்கிரசிற்கும் அதனுடன் கூட்டு வைத்திருக்கும் தி.மு.கவினருக்கும் வாக்களிக்கப் போகின்றீர்களா என்று கேட்கிறார். இதிலிருந்து அவரின் திட்டம் வெள்ளிடைமலை. இறுதி யுத்தத்தில், பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் தமிழர்கள் என்னும் நிலையில் தமிழ் நாட்டு சாதாரண மக்கள் மத்தியில் ஒரு அனுதாபம் இருந்தது உண்மை. அந்த அனுதாபத்தை கருணாநிதிக்கு எதிராக திருப்பிவிடும் நோக்கில் ஈழ சென்ரிமென்டை ஜெ கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். உண்மையில் ஜெயலலிதா தனிநாட்டுக்கு ஆதரவானவராக இருந்திருந்தால் அதனை பிரபாகரன் இருக்கின்ற போது வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

ஜெயலலிதா தொடர்பிலான தமிழ் தேசியவாதிகளின் அஞ்சலிகளை பார்க்கும் போது இப்பத்தியாளருக்குள் இப்படியொரு கேள்விதான் எழுந்தது: இப்போது எந்த ஜெயலலிதாவிற்கு இவர்களெல்லாம் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்? தனி நாட்டுக்காக தனது உயிர் போகும்வரையில் போராடிய பிரபாகரனை கைதுசெய்து தூக்கில் போட வேண்டுமென்று கூறிய ஜெயலலிதாவிற்காகவா அல்லது பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் தனிநாட்டுக்கான கோரிக்கை என்பது வெற்றுச் சுலோகம் என்பதை விளங்கிக்கொண்டு, கருணாநிதியின் வாக்குவங்கியை சிதைக்கும் நோக்கில் தன்னை ஈழ ஆதரவாளராக காண்பித்துக் கொண்ட ஜெயலலிதாவிற்காகவா? யாருக்காக? அதிலும் இப்போதும் தங்களை புலிகளின் ஆதரவாளர்களாக காண்பித்துக் கொண்டிருப்போர் எவ்வாறு ஜெயலலிதாவிற்காக அஞ்சலி செலுத்த முடியுமா?

சம்பந்தன் தனது இரங்கல் அறிக்கையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பெறுமதியான பிரேரணைகளை முன்வைத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், சம்பந்தன் எந்த பிரேரணையை குறிப்பிடுகின்றார் என்பது தெளிவாக தெரியாவிட்டாலும் நிச்சயமாக 2013இல் ஜெயலலிதா சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பிரேரணை சம்பந்தன் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏனெனில், சம்பந்தன் சமஸ்டிக் கோரிக்கையைக் கூட கைவிட்டுவிடுவதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பவர். மேலும், சம்பந்தன் முன்னரைப் போல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் கூடத் தெரியவில்லை. அண்மைக்காலமாக சம்பந்தன் இந்தியாவிலிருந்து விலகி நிற்பதாகவே தெரிகிறது. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற பின்னர் இதுவரை ஒரு முறை கூட புதுடில்லிக்கு விஜயம் செய்யவும் இல்லை, அரசியல் தீர்விற்காக இந்தியாவின் ஆதரவைக் கோரவும் இல்லை. இது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய கட்சிகள் மத்தியில் அதிருப்திகள் நிலவுகின்றன. கூட்டமைப்பின் தலைவர் என்னும் வகையில் சம்பந்தன் ஒரு போதுமே ஜெயலலிதாவை சந்திக்க முயற்சிக்கவில்லை. சம்பந்தன் தமிழ் நாட்டு பி.ஜே.பி தலைவர்களைச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்திய போதிலும் கூட, முதலமைச்சரான ஜெயலலிதாவை சந்திக்க விரும்பவில்லை. ஜெயலலிதா ஒரு வில்லங்கமான ஆள் என்பதே சம்பந்தனின் கணிப்பாக இருந்தது.

தமிழ்த் தேசிய வாதிகள் மத்தியில் தமிழ் நாடு தொடர்பில் ஒரு பொதுவான பார்வையுண்டு. கடந்த கால அனுபவங்கள் அந்தப் பார்வையை தவறென்று நிரூபித்திருந்தாலும் கூட தற்போதும் அதனை சில தமிழ் தேசியவாதிகள் நம்புகின்றனர். அதாவது, இந்தியாவின், இலங்கை தொடர்பான கொள்கை நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் தமிழ் நாட்டிற்கு உண்டு என்பதே அந்த நம்பிக்கை. இதன் காரணமாகவே தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணிக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஜெயலலிதா தொடர்பில் காண்பிக்கப்பட்டுவரும் இந்த அபரிமிதமான பாசப்புலம்பல்களுக்குப் பின்னாலும் கூட, அந்த பார்வையின் செல்வாக்குண்டு. அதாவது, ஜெயலலிதாவை தூக்கிப்பிடிப்பதன் மூலம் அ.இ.அ.தி.முகவிடம் நெருக்கமான தொடர்பை பேணலாம் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. இந்தியாவைப் பொறுத்தவரையில் தனது அயலுறவுக் கொள்கையில் பிராந்திய பாதுகாப்பு பதற்றங்களுக்கு ஒரு இடமுண்டு. அவ்வாறான பதற்றங்களின் போது அயல்நாடுகளின் மீது தலையீடு செய்வதை இந்தியா ஒரு வெளிவிவகார உபாயமாகவே கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் தலையிடும் ஆற்றல் இலங்கையிலுள்ளவர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டதாகும்.

அன்று இந்தியா தன்னுடைய தலையீட்டிற்கான கருவியாக தமிழ் நாட்டையே கைக்கொண்டிருந்தது. இந்தியா எவ்வாறு தனது அயலுறவுக் கொள்கைக்கு வாய்ப்பாக தமிழ் நாட்டை கைக்கொண்டதோ அதேபோன்று தமிழ் நாட்டின் அரசியல் தரப்புக்களை எங்களுக்கு ஆதரவாக மாற்றுவதன் மூலம், மத்திய அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியுமென்பதே தமிழ் தேசியவாதிகளின் கணிப்பாக இருந்தது. 2009இல் தமிழ் நாடு பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் விடுதலைப் புலிகள் மிக மோசமாக அழிக்கப்பட்டனர். ஆனால், தமிழ் நாட்டால் யுத்தத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசின் மீது வீரியம்மிக்க அழுத்தங்கள் எதனையும் பிரயோகிக்க முடியவில்லை. ஒரு சில எதிர்ப்புக்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால், அவற்றால் மத்திய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. ஏன் முடியவில்லை? இந்தியா ஒன்றால்தான் யுத்தத்தின் போக்கை மாற்ற முடியும் என்னும் நிலைமையிருந்தது உண்மைதான். ஆனால், அவ்வாறானதொரு நிலைமையை நோக்கி இந்தியாவை திருப்ப தமிழ் நாட்டால் முடியவில்லை.

இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டுக்காக மாநிலங்களைப் பயன்படுத்தும் நிலைமைதான் இருக்கிறதேயன்றி, மாநிலங்களால் இந்தியாவின் அயலுறவு கொள்கைகளை மாற்றியமைக்கக் கூடிய நிலைமை இந்தியாவில் இல்லை. இந்தியாவின் தேசிய கொள்கைகளில் மாநிலங்களின் செல்வாக்கு என்பது மிகவும் மட்டுப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழ் நாட்டால் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பில் எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியவில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால், ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு நிலைப்பாடு என்பது அ.இ.அ.தி.முகவின் வாக்கு வங்கியை உயர்த்தியதேயன்றி, அதற்கு அப்பால் இந்தியளவில் அதற்கு எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை. அப்படியொரு முக்கியத்துவம் வர வேண்டுமாக இருந்தாலும் கூட, அதுவும் சவுத்புளொக்கின் தேவையில்தான் தங்கியிருக்கிறது. அரசியல் சாசனம் தொடர்பில் விவாதிக்கப்படும் இன்றைய சூழலில், இந்திய மத்திய அரசை நோக்கி கூட்டமைப்பும் ஏனைய தமிழ் தரப்புக்களும் பணியாற்றுவதுதான் சிறந்தது. குறிப்பாக வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரங்களில் இந்தியாவின் கரிசனைகளை பரீசீலிக்க வேண்டிய அவசியம் உண்டு.

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply