இலங்கையின் மூத்த மொழி தமிழ், தமிழர் பூர்வ குடிகள்!

இலங்கையின் மூத்த மொழி தமிழ், தமிழர் பூர்வ குடிகள்!

நக்கீரன்

ஒருவர் பேசும் போது இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். பேசும் போது எந்த இடத்தில் பேசுகிறோம் என்ன பொருளில் பேசுகிறோம் என்ன தொனியில் பேசுகிறோம் என்பது முக்கியம்.

இது அன்றைய வட மாகாண சபை  முதலமைச்சருக்கும் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்கிறது. அதாவது எங்கே, எதனைப் பேச வேண்டும் என்ன தொனியில் பேசவேண்டும்  என்பது அவருக்குத் தெரியாது இருக்கிறது.  

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு கடந்த ஓகஸ்ட் மாதம் 21, 2020 (வியாழக்கிழமை) காலை தொடங்கிய பின்னர் புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்தனாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து உறுப்பினர்கள் பேசினார்கள். அதில் கலந்து கொண்டு உரையாற்றிய  நீதியரசர் விக்னேஸ்வரன் “எனது தாய்மொழியில் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல விரும்புகிறேன்” எனத் தமிழில் கூறிவிட்டு  தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். அப்போது “தமிழ்  உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்று. அதுவே  இந்த நாட்டில் வாழும்  முதல் பழங்குடி மக்களின் மொழி” என்றார். 

மேலும் பேசுகையில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கையுடன் (ICCPR)  மற்றும் மரபு பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம்  சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும் ” என்று கூறினார். தமிழில் தொடங்கி பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றி   முடிவில் சிங்கள மொழியில் தனது உரையை நிறைவு செய்தார்.

கள்ளர் மரபினரின் வரலாறு: நாகர்கள் வழி வந்தவர்களே கள்ளர்கள்

விக்னேஸ்வரன் தமிழர்கள் இலங்கையின் பழங்குடிகள் என்று பேசியது முற்றிலும் சரியே. அதற்கான சான்றுகள் மகாவம்சத்தில் உள்ளது. ஆனால் விக்னேஸ்வரன்  தமிழ் உலகில் உயிரோடு இன்றும் வாழும் மொழி என்று பேசியிருக்க வேண்டியதில்லை என்பது பலரது எண்ணமாக இருக்கிறது. 

சிங்கள அரசியல்வாதிகள் யாரும்  தமிழ் மூத்தமொழி அல்ல, அது இலக்கிய வளம் நிறைந்த மொழியல்ல எனச் சொல்லவில்லை. மாறாக மூத்த மொழியான தமிழ், இலக்கிய வளம் படைத்த  தமிழ்  காலத்தால் பிந்தி உருவான சிங்களத்தை அது விழுங்கிவிடும் என்றே பயப்படுகிறார்கள். அதற்கு வரலாற்றில் சான்றுகள் உண்டு.

1944 ஆம் ஆண்டு  மே 24 இல்  சிங்களத்தை மட்டும் அரச மொழியாகப் பிரகடனப் படுத்த வேண்டும் என ஜே.ஆர். ஜெயவர்த்தன ஒரு தீர்மானத்தை சட்டச சபையில் முன்மொழிந்தார்.

அன்று  அரச மொழியா இருந்த  ஆங்கிலத்தை அகற்றி, அந்த இடத்தில் பெரும்பான்மை சிங்கள மக்கள் பேசும் மொழியை உத்தியோக மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தனது உரையில்  ஜெயவர்த்தன வேண்டிக் கொண்டார். டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் நாட்டுமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு – எல்லோரும் இந்நாட்டு மன்னர் –  என்ற யாப்பு  இயற்றப்பட்ட பின்னணியில்தான் ஜெயவர்த்தன அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.  அதற்கு முன்னர் ஆங்கிலம் உத்தியோக மொழியாக இருந்தாலும்  இலங்கைத் தீவில் பண்டுதொட்டு பேசப்பட்டு வந்த சிங்களம் – தமிழ் இரண்டும் சமவுரிமை கொண்ட மொழிகள் என்ற  கோட்பாடே மேலோங்கியிருந்தது.

“நான் எப்போதும் தமிழ்மொழி பேசும் மாகாணங்களில் தமிழ் பேசப்பட வேண்டும் என எண்ணுபவன். தமிழ்மொழி பேசும் மாகாணங்களில் தமிழே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு.  ஆனால் நாட்டில் உள்ள மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சிங்கள மொழி பேசுபவராக இருப்பதால் சிங்களமொழி மட்டுமே இலங்கைத் தீவின்  உத்தியோக மொழியாக முன்மொழியும் எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் தமிழ் சமூகமும்  தமிழ்பேசும் முஸ்லிம் சமூகமும் தமிழ்மொழி சிங்களமொழிக்கு சமமாக சேர்க்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதில் எனக்கிருக்கிற பெரிய அச்சம் என்னவெனில் முழு உலகத்திலும் சிங்களம் 3,000,000 மில்லியன் மக்களால் மட்டுமே பேசப்படுவதால் அந்த மொழி பாதிக்கப்படக் கூடும்.  அல்லது சிங்களமொழியோடு தமிழ்மொழியை சமத்துவ நிலையில் வைத்தால் சிங்களமொழி காலப் போக்கில் இல்லாமல் போகக் கூடும்.”

I had always the intention that Tamil should be spoken in Tamil speaking provinces, and that Tamil should be the official language in the Tamil speaking provinces. But as two-thirds of the people of this country speak Sinhala, I had the intention of proposing that only Sinhalese should be the official language of the Island; but it seems to me that the Tamil community and also the Muslim community, who speak Tamil, wish that Tamil should also be included on equal terms with Sinhalese. The great fear I had was that Sinhalese being a language spoken by only 3,000,000 people in the whole world would suffer, or maybe entirely lost in time to come if Tamil is also placed on an equal footing with it in this country…”

தமிழ்மொழி இந்தியாவில் 40 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படுகிறது,  தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ப் பண்பாட்டின்  செல்வாக்கு எதிர்காலத்தில் சிங்களமொழிக்கு பாதகமாக அமையக் கூடும் என நினைக்கிறேன். ஆனால் தமிழர்கள்  சிங்களமொழிக்கு கொடுக்கப்படும் உரிமைபோல் தமிழ்மொழிக்கும் கொடுக்கப்பட வேண்டும் என விரும்பினால்  அந்த நிலையை அடைவதை நாங்கள் தடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.”  (சட்ட சபை விவாதங்கள், மே 24,1944).

The influence of Tamil literature, literature used in India by over 40,000,000 and the influence of Tamil literature and Tamil culture in the country, I thought, might be detrimental to the future of the Sinhalese language.” (State Council Debates, May 24, 1944)

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு  பேசிய எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்க, ஜெயவர்த்தன பேசியதுபோலவே சிங்களத்தோடு தமிழுக்கு சமவுரிமை வழங்கினால் சிங்களமொழியை  எதிர்காலத்தில்  இழக்க நேரிடும் என அச்சத்தை வெளிப்படுத்தினார்.

“இருப்பினும்,  ஒரு தேசத்தின்  மொழிக்கு முக்கியமான அர்த்தம் உள்ளது. தேசிய பண்பாடு மற்றும் தேசிய முன்னேற்றத்தைப் பாதுகாக்க, சிங்கள மொழி மிகவும் அவசியமானது என்றும் எனவே அந்த மொழி உத்தியோகபூர்வ மொழியாக உருவாக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவரது மனதில் இருந்தாக நான் ஊகிக்கிறேன். ஆகையால், இந்த முதல் கட்டத்தில், இறுதியாக, ஒரு உத்தியோகபூர்வ மொழியாக, ஆங்கில மொழியிலிருந்து நமது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளுக்கு மாற்றம் என்பது மிகவும் விரும்பத்தக்க முயற்சி என்பதில் சந்தேகமில்லை.  (சட்ட சபை ஹன்சாட், மே 24,1944).

S W R D Bandaranaike said, “However, language has that important meaning to a nation. I presume that, to some extent, is what the mover had in mind when he thought that for the preservation of national culture and national progress, the Sinhalese language was very necessary and that the language should form the official language. Therefore, on this first point, finally, there can be no doubt that a change-over, as an official language, from the English language to one or more of our languages is a very desirable step.” – State Council Hansard, 1944.

இந்தக் கட்டத்தில் சட்ட சபையில் பேசிய டி.எஸ் சேனநாயக்கா “ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதுதான் முக்கிய பணியாகும். அதனை ஒரு மொழிக்குப் பதில் இரண்டு மொழிகளால் கட்டியெழுப்புவது அவசியமாகும்” என்றார்.

நாகர்கள், புராணம் - Wikiwand

இந்தப் பிரேரணைக்கு எதிராக  அன்றைய திருகோணமலை – மட்டக்களப்பு சட்ட சபை உறுப்பினர் ஜி. நல்லையா ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். எங்கு சிங்களம் என்ற சொல் வருகிறதோ அதை அடுத்து தமிழ்மொழி என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்தத் திருத்தம் ஆகும். அவர் முன்மொழிந்த திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் யினரால் (ஆம் 29  இல்லை 8) நிறைவேற்றப்பட்டது.

1944 இல் ஜெயவர்த்தனாவும் பண்டாரநாயக்காவும் சிங்களத்தோடு தமிழுக்கு சமவுரிமை கொடுத்தால் அது சிங்கள மொழிக்கும் சிங்கள பண்பாட்டுக்கும் பாதகமாக அமையும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.  ஐம்பதுகளில் இந்த இருவரும்  இருமொழிக் கோட்பாட்டில் இருந்து விலகி தனிச் சிங்களத்துக்கு ஆதரவாக மாறிக்கொண்டார்கள். 

1955 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில், அவரது தேர்தல் வெற்றிக்கு முன்னும், அதைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு உரைகளிலும், சிங்களத்தை ஒரே உத்தியோகபூர்வ மொழியாக மாற்ற வேண்டும் என்று பண்டாரநாயக்க ஐயத்துக்கு  இடமின்றி வாதிட்டார். அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சிங்கள தேசியவாத சக்திகளை ஒன்று திரட்டினார்.

“… சிங்களவர்களின் அச்சங்கள், முற்றிலும் அற்பமானவை என்று ஒதுக்கித் தள்ள முடியும் என்று நான் நினைக்கவில்லை. எட்டு மில்லியன் மக்கள்தொகையில் இந்த நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான தமிழர்கள் இல்லை என்று நான் நம்பவில்லை.  மேலும் அருகிலுள்ள நாட்டில் நாற்பது அல்லது ஐம்பது மில்லியன் [தமிழ்] மக்கள் உள்ளனர். இந்தத் தமிழ் இலக்கியங்கள், தமிழ் ஆசிரியர்கள், திரைப்படங்கள், ஆவணங்கள், பத்திரிகைகள் பற்றி என்ன? … சிங்கள மொழியின் தவிர்க்கமுடியாத சுருக்கம் குறித்து நியாயமற்ற பயம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது ஒரு பயம், அதை ஒதுக்கித் தள்ள முடியாது. (பண்டாரநாயக்க 1963, 394–5)

… the fears of the Sinhalese, I do not think can be brushed aside as completely frivolous. I believe there are a not inconsiderable number of Tamils in this country out of a population of eight million. Then there are forty or fifty million [Tamil] people in the adjoining country. What about all this Tamil literature, Tamil teachers, even films, papers, and magazines? … I do not think [there is] an unjustified fear of the inexorable shrinking of the Sinhalese language. It is a fear that cannot be brushed aside. (Bandaranaike 1963, 394–5)

எனவே தமிழ் மூத்தமொழி என்பதை சிங்கள அரசியல் வாதிகளுக்குச் நாங்கள் சொல்லத் தேவையில்லை. அதை அவர்களில் யாரும் மறுக்கவும் இல்லை. உண்மையில் சிங்கள அரசியல்வாதிகள் பல கோடி மக்களால் பேசப்படும் இலக்கிய வளம் நிறைந்த தமிழ்மொழியின் செல்வாக்கைக் கண்டு அஞ்சுகிறார்கள்.  அப்படிப் பேசுவது சிங்கள மக்களின் மனதை மேலும் இறுகச் செய்து அச்சத்தையும், அவநம்பிக்கையும் அதிகரிக்கச் செய்யும். முரண்பாட்டை வளர்க்கும். விக்னேஸ்வரனது   பேச்சு சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் மற்றும் பவுத்த தேரர்களுக்கு அவல் கொடுத்தமாதிரி அமைந்துவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. சிங்கள – பவுத்த தீவிரவாத தேரர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து விக்னேஸ்வரனை உளவுத்துறை விசாரணை செய்துள்ளது.

விக்னேஸ்வரன் இடம், பொருள், ஏவல் மூன்றையும் மனதில் கொண்டு தமிழின் தொன்மைபற்றிப் பேசாது விட்டிருக்கலாம்.

அடுத்து தமிழ்மக்கள் இலங்கை நாட்டின் மூத்த குடிகள் எனக் குறிப்பிட்டார். அப்படிக் குறிப்பிட்டதில் தவறில்லை. சிங்கள – பவுத்த தேசியவாதிகள் தமிழர்கள் வந்தேறு குடிகள், போர்த்துக்கேயர், கூலிவேலை செய்ய ஒல்லாந்தர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவர்கள்.  அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கு திரும்பிப் போக வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். ஆனால் சிங்கள – பவுத்த தேசியவாதிகளின் வேத புத்தகமான மகாவம்சம் தமிழர்கள் இலங்கையில் கிமு 200 ஆண்டுகளுக்கு முன் அதாவது இற்றைக்கு 2,200 ஆண்டுகளுக்கு முன்னர் மகாவலி கங்கைக்கு வடக்கே உள்ள நிலப்பகுதியை ஆண்டார்கள் என்பதை பதிவு செய்துள்ளது.(மிகுதி அடுத்த வாரம்)  

ஆதியில் தமிழர் – நாகர் சமயத்தால் ஒன்றாக இருந்தும்
மொழியால் வேறுபட்டிருந்தனர்!

– நக்கீரன்


(கடந்தவாரத் தொடர்ச்சி)

மகாவம்ச ஆசிரியர் மகாநாப தேரர் ஆதிக்குடிகளின் (நாகர், இயக்கர், இராட்சதர், தேவர், புலிந்தர் (வேடர்) பட்டியலில் தமிழர்களை சேர்க்காது விட்டாலும் மகாவலி கங்கைக்கு வடக்கே தமிழர்கள் செறிந்து வாழ்ந்தார்கள், அந்த நிலப்பகுதியை ஆண்டார்கள் என்பதை காகவண்ண தீசன் (கிமு 210 – 205) வாயிலாகக் கூறுகிறார்.

அதாவது தமிழர்கள் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் மகாவலி கங்கைக்கு வடக்கே உள்ள பகுதியை ஆண்டார்கள் என மகாவம்சம் கூறுகிறது.

அதற்கு முதல் சோணாட்டில் இருந்து சேனன், கூத்தியன் (கிபி 237 -215) ஆகியவர்கள் அனுராதபுரத்தின் மீது படையெடுத்து வந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டார்கள். இந்த இருவரையும் ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு அசேலன் (கிபி 215 – 205) அரியணை ஏறினான். இவன் மூத்தசிவனின் மகன் ஆவான். இவனை சோழநாட்டில் இருந்து படையெடுத்து வந்த எல்லாளன் (கிபி 205 – 161) ஆட்சியில் இருந்து கவிழ்த்து விட்டு 44 ஆண்டுகள் நீதி தவறாத ஆட்சி செய்தான்.

துட்ட கைமுனு (கிமு 161-137) நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன். அவனது பாட்டன் பெயர் கோத்தபாய. அவனது பூட்டன் பெயர் யத்தல தீசன் அவனது ஒட்டன் பெயர் மகாநாகன், மகாநாகனது தந்தை பெயர் மூத்தசிவன்! துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளத்தோடு காணக் கூடிய ஒரு இனக் குழு தோன்றியிருக்கவில்லை.

மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை (கெலனியா) ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள்.

தமிழர்கள் மகாவலி கங்கைக்கு வடக்கே பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள் என்பதற்கு சாட்சியாக துட்டகைமுனு அனுராதபரத்தைக் கைப்பற்றப் படை எடுத்துச் சென்ற போது வழியில் 32 தமிழ்ச் சிற்றரசர்களை வென்றான் என மகாவம்சம் கூறு-கிறது. அதற்கு அவன் எடுத்த காலம் 6 மாதங்களாகும் மகாவம்சம் தமிழ் அரசர்களைத் தமிழர்கள் என்றும் நாக வம்ச அரசர்களை நாகர்கள் என்றும் பிரித்துக் கூறுகிறது.

மதம் மாறிய தேவநம்பிய தீசனையோ அல்லது அவனது முன்னோர்களையோ அல்லது அவனது சந்ததிதியினரையோ தமிழ் அரசர்கள் எனக் கூறவில்லை. கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கு (கிமு 205 – கிமு 161) உரியவை.

ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது.

மகாவம்சம் பல கற்பனைக் கதைகளையும் சில வரலாற்றுக் குறிப்புகளையும் கொண்ட நூல் என்பது நினைவு கொள்ளத்தக்கது. அதன் ஆசிரியர் மகாநாப தேரர் மகாவம்சத்தை எழுதியதன் நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில் “(பவுத்த) பக்தர்களின் அமைதியான ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சம் விஜயனின் முடிசூடல் என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது” எனக் கூறுவார்.

மகாவம்சம் மூலமே தமிழர்கள் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இலங்கையில் செறிந்து வாழ்ந்தார்கள் என்பது தெரிய வருகிறது.

மகாவம்சம் நாகர், இயக்கர், இராட்சதர், தேவர், புலிந்தர் (வேடுவர்) ஆகியவர்களையே ஆதிக் குடிகள் என்கிறது. தமிழர்கள் விடுபட்டுள்ளார்கள்.

நாகர்கள் வடக்கு (நாகதீபம்), தென்மேற்குப் (கல்யாணி) பகுதிகளில் வாழ்ந்திருக்கிறார்கள். இயக்கர், இராட்சதர் பெரும்பாலும் மகியங்கன பகுதியில் வாழ்ந்தவர்கள் ஆவர்.

நாளடைவில் அவர்கள் நாகர்களோடு கலந்து விட்டார்கள். பூர்வீக குடிகளில் கிபி எட்டாம் நூற்றாண்டுவரை நாக வம்சத்தினரே அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்டு வந்திருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டுவரை நாக என்ற விகுதிப் பெயரோடு நாகர்கள் இலங்கையை ஆண்டு வந்துள்ளார்கள். தீசன் என்ற விகுதிப் பெயர் உடையவர்களும் நாகர்களே. மேலும் நாகர், இயக்கர் போன்றோர் தமிழர்களைப் போல் திராவிட இனத்தவர் ஆவர்.

நாக வம்ச அரசர்கள் தங்கள் அடையாளத்தை தொடர்ந்து பேணி வந்திருக்கிறார்கள். பல அரசர்களது பெயர்களில் நாகன் அல்லது தீசன் என்றபின்னொட்டு காணப்படுகிறது.

பாண்டுகாபயன் கிமு 377 – 307
மூத்தசிவன் கிமு 307 – 247
தேவநம்பிய தீசள் கிமு 247 – 207
துட்ட கைமுனு கிமு 101 – 77
சாத்தா தீசன் கிமு 77 – 59
துலாத்தன கிமு 59
இலங்க தீசன் கிமு 59 – 50
கல்லாட நாகன் கிமு 50 – 44
வட்டகாமினி கிமு 44
வட்ட காமினி கிமு 29-17
மகா தீசன் கிமு 17 -03
கோரநாகன் கிபி 03-09
குடக்கண்ண தீசன் கிபி 16 -38
பாதிக அபயன் கிபி 38 -66
மகாநாகன் கிபி 66 – 78
காமினி அபயன் கிபி 78 – 88
கனிராஜ தீசன் கிபி 88 – 91
குலபாயன் கிபி 91-92
சீவலி கிபி 92
இளநாகன் கிபி 95-101
சந்தமுக சிவா கிபி 101 – 110
யசலாக தீசன் கிபி 110 – 118
சுபராஜா கிபி 118 – 124

வசபன் கிபி 124 -168
வங்கநாப தீசன் கிபி 168 -171
முதலாம் கஜபாகு கிபி 171 -193
மகா இளநாகன் கிபி 193 -199
பாதிக்க தீசன் கிபி 199 -223
கனிஷ்ட தீசன் கிபி 223 -241
குஞ்சநாகன் கிபி 241 -243
குடநாகன் கிபி 243 -244
சிறிநாகன் கிபி 244 -263
வோகர தீசன் கிபி 263 -285
அபயநாகன் கிபி 285 -293
சிறிநாகன் 2 கிபி 293 -295
விஜயகுமாரன் கிபி 295 -296
சங்க தீசன் கிபி 296 -300
சங்க போதி கிபி 300 -302
மேகவண்ண தீசன் கிபி 302 -315
யெத்த தீசன் கிபி 315 -325
மகாசேனன் கிபி 325-352
(சான்று மகாவம்சம்)
இளநாகன், சோரநாகன், குஞ்சநாகன், மகாநாகன் போன்ற நாகர்கள்
அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டிருக்கிறார்கள். தேவநம்பிய தீசன் தொட்டு நாகர்களில் பெரும்பான்மையினர் பவுத்த மதத்துக்கு மாறினார்கள்.

நாகர் வழிபாடு நேற்றும் இன்றும்... | - Dinakaran

ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டளவில் பவுத்த நாகர்கள் சிங்கள இன அடையாளத்தையும், சிங்களமொழி அடையாளத்தையும் பவுத்த தேரவாத தேரர்கள் செயற்கையாக உருவாக்கினார்கள். சிங்கள மொழியின் எழுத்து வடிவம் தெலுங்கு, கன்னட மொழியை ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.

சிங்கள மொழி பாளி, சமற்கிருதம், ஹெல (எலு) தமிழ் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டுள்ளது.

நாகர் தமிழ் பேசவில்லை. தமிழையொத்த மொழியைப் பேசியிருக்கலாம். மணிமேகலை என்ற பவுத்த காப்பியத்தில் சாதுவன் என்ற ஒரு பாத்திரம் வருகிறது. அவனது மனைவி ஆதிரை. அவன் அவளைப் பிரிந்து ஒரு கணிகையோடு வாழ்கிறான்.

அப்போது வட்டாடல், சூதாடல் இவைகளில் பொருள் எல்லாவற்றையும் இழக்கிறான். கணிகையும் அவனை விரட்டிவிடுகிறாள்.

சாதுவன் தன் மனைவி மேல் ஆசையும், அன்பும் கொண்டவன். இழந்தவற்றை மீண்டும் அடைந்து ஆதிரையை சுகமாக வாழவைக்க வேண்டும் என்று விரும்பினான்.

எனவே வங்கத்துக்கு வாணிகம் செய்யப் புறப்பட்ட வணிகர்களோடு சாதுவனும் சேர்ந்து கொள்கிறான்.

கடல் காற்றின் வீச்சால் அவன் போன கலம் சிதைகிறது. ஒடிந்த மரம் ஒன்றைப் பற்றிக்கொண்டு சாதுவன் அலைகளில் மிதக்கிறான். நக்க சாரணர்களாகிய நாகர்கள் வாழுகின்ற மலைப் பக்கம் போய்ச் சேர்கிறான். நாகர் வாழும் மலையில் அலைகளால் சேர்க்கப்பட்ட சாதுவன் கடலில் பட்ட துன்பத்தால் வருந்தித் துயிலில் ஆழ்ந்துவிடுகிறான். அவனைக் கண்ட நக்க சாரணர்கள் (நாகர்கள்) அவனைக் கொன்று அவனது ஊனைத் தின்னலாம் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு அவனை எழுப்புகிறார்கள்.

சாதுவன் அவர்களுடைய மொழியை செவ்வனே கற்றுத் தேறியவன் ஆதலின் அவர்கள் பேசியது அவனுக்கு விளங்குகிறது. அவர்கள் அவனைத் தங்கள் தலைவனிம் கூட்டிச் செல்கிறார்கள்.

அங்கே … கள் நிறைந்த பானை, புலால் நாற்றம், காய்ந்து கொண்டிருக்கும் வெள்ளை எலும்புகள் இவை பரவிய ஓர் இருக்கையில் … நாகர்களின் தலைவன் தன் பெண்டுடன் இருக்கும் காட்சி ஓர் ஆண் கரடி தன் பெண் கரடியோடு இருப்பதைப் போலத் தோன்றுகிறது.

அவனையும் தன் பேச்சினால் சாதுவன் பிணித்துவிடுகிறான்! பிறகு மரநிழலில் இளப்பாறியதும் அவனுக்கு ஓர் இளைய நங்கையையும் வெங்கள்ளையும் ஊனையும் கொடுக்குமாறு நாகர் தலவன் தன் ஏவலாளர்களிடம் சொல்கிறான். அவை வேண்டாம் என்று சாதுவன் மறுக்கிறான்.

மயக்கத்தை உண்டாக்கும் கள், உயிர்க்கொலை இந்த இரண்டையும் குற்றமற்ற மக்கள் தவிர்த்தார்கள். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர்கள் மீண்டும் பிறப்பதும் … உறங்குவதும் உறக்கத்திற்குப் பின் விழிப்பதும் போலவே. இந்த உண்மையினால் … நல்லறத்தைச் செய்பவர்கள் நல்லுலகை அடைவார்கள் நல்லது அல்லாதவற்றைச் செய்பவர்கள் கொடிய நரகத்தை அடைவார்கள். அதனால் அறிவுடையோர் இவைகளைத் தவிர்த்தார்கள்.

சாதுவன் பவுத்தன் என்பதால் அவன் பவுத்த கோட்பாடுகளை நாகருடைய தலைவனுக்கு எடுத்துக் கூறினான்.

நெடுங்காலமாகக் கலம் கவிழ்ந்து வந்து கரையொதுங்கிய மக்களை நாங்கள் உண்டிருக்கிறோம். அவர்களிடமிருந்து நாங்கள் எடுத்த பொருள்கள் இவை. மணம் நிறைந்த மரம், மெல்லிய துகில், நிறையப் பணம் இவைகளை எடுத்துக்கொள் என்கிறான்.

அந்தப் பொருள்களைச் சாதுவன் எடுத்துக்கொண்டு சந்திரதத்தன் என்னும் வாணிகனின் வங்கம் வந்தபோது அதில் ஏறித் தன் ஊர் வந்து சேருகிறான்.

இந்தக் கதையில் இருந்து நாகர்கள் பேசிய மொழி தமிழ் அன்று. அது அவர்களுக்கு உரித்தான மொழி அல்ல என்பது புலப்படுகிறது. எனவே தேவநம்பிய தீசன் தமிழ் அரசன் என்பதும் அவன் மகிந்த தேரரோடு தமிழில் பேசினான் என்பது தவறான அல்லது பிழையான அனுமானமாகும். அப்படியென்றால் தேவநம்பிய தீசன் மகிந்த தேரருடன் பேசிய மொழி எது?

மகாவம்சம் விடையளிக்கிறது. இருவரும் நாட்டில் (மக்கள்) பேசிய மொழியில் (in the language of the land – Chapter IV)) உரையாடினார்கள் என்கிறது மகாவம்சம். பெரும்பாலும் அந்த மொழி பிராக்கிரத மொழியாக இருந்திருக்க வேண்டும்.

சரி, இந்த நாகர்கள் என்ன ஆனார்கள்? அவர்களில் பெரும்பான்மையோர் பவுத்தர்கள் என்பதால் காலப் போக்கில் அவர்கள் சிங்கள மொழி பேசி சிங்களவர்கள் என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டார்கள். சிறுபான்மை வேதமத நாகர்கள் தமிழர்களோடு
சங்கமமாகிவிட்டனர்.

அதற்குச் சான்றாக தமிழர்களிடம் காணப்படும் வீட்டுப் பெயர்கள், இடப்பெயர்கள், வழிபாட்டுத் தலங்கள் சாட்சி பகருகின்றன. தமிழர்கள் நாக என்ற முன்னொட்டை தங்கள் பெயரில் வைத்திருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக நாகநாதன், நாகம்மா, நாகமணி நாகலிங்கம், நாகரத்தினம், நாகையா, நாகராசா, நாகமணி, நாகேஸ்வரன், நாகேஸ்வரி, நாகபூசணி, நாகப்பன், நாகலட்சுமி, நாகராணி போன்ற பெயர்களை குறிப்பிடலாம்.

இதே போல் நாகபட்டினம், நாகதீவு (நயினாதீவு), நாகதீபம் நாகபடுவான், நாகர்கோயில்

aaRKay Tamil: நாகர்கள்

போன்ற இடப்பெயர்கள் இந்து நாகர்கள் வட பகுதியில் வாழ்ந்ததைக் காட்டுகின்றது. நாகபூசணி அம்மன் கோயில், நாகதம்பிரான் கோயில் நாகர்களை நினைவுபடுத்தும் இலங்கையின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களாகும்.

தேவநம்பிய தீசனுக்கு முந்திய அரசர்கள் வேத நெறியைப் பின்பற்றிய நாக அரசர்களே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 367-307) ஆவான்.

அவனது மகனின் பெயர் மகா சிவன். சங்க இலக்கியங்களில் சிவன் என்ற சொல் பயன்பாட்டில் இருக்கவில்லை. எனவே கிமு 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாகவம்சஅரசர்களுக்கு சிவன் என்ற பெயர் இருந்தது வியப்பாக இருக்கிறது.

முடிவாக சமயத்தால் தமிழர்களும் நாகர்களும் ஒன்றாக இருந்தும் மொழியால் வேறுபட்டு இருந்தார்கள். வேதநெறியைப் பின்பற்றிய நாகர்கள் வேத நெறியைப்பின்பற்றிய பின்னரே அவர்கள் தமிழர்களோடு கரைந்து தமிழ் பேசியிருக்க வேண்டும். (உதயன் கனடா – ஒக்தோபர் 2020)

இந்தக் கட்டுரையையும் வாசிக்கவும்:

https://yarl.com/forum3/topic/214689-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply