சிலப்பதிகாரத்தில் கோயில் வழிபாடும் கோட்டம் வழிபாடும்

சிலப்பதிகாரத்தில் கோயில் வழிபாடும் கோட்டவழிபாடும்

(மதுரை ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம் 26,27ஏப்ரல் 1999ல் நடத்திய ஐந்தாவது கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக்கட்டுரை. ஆய்வுச் சிந்தனைகள்- தொகுதி- 1 என்ற கருத்தரங்க மலரில் பதிப்பிக்கப் பட்டது.)

முன்னுரை:

சிலப்பதிகாரத்தில் சுட்டப்பெறும் கோயில்கள்,கோட்டங்கள் ஆகியவற்றின் இருப்பிடத்தையும், அங்கு நிகழ்ந்த வழிபாட்டு முறையையும் ஆராய்வது இக்  

கட்டுரையின் நோக்கமாகும். எனவே சிலப்பதிகாரம் இக்கட்டுரையின் ஆய்வு 

எல்லை ஆகிறது. முதல்நிலைத் தரவுகள் சிலப்பதிகாரத்திலிருந்தும்; இரண்டாம் நிலைத்தரவுகள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, மணிமேகலை முதலிய இலக்கியங்களில் இருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன.

இருப்பிடங்களும் நடைமுறைகளும்:

கோயில்கள் தலைநகரங்களிலும் பிற ஊர்களிலும் இருந்தன. அங்கெல்லாம் வேத முறைப்படி வேள்விகள் நிகழ்ந்தன. கோட்டங்கள் தலைநகரங்களிலும் பிற ஊர்களிலும் ஈமப்புறங் காட்டிலும் இருந்தன. கோட்டம் குழந்தையின் சடலத்தோடும் கூடச் செல்லக்கூடிய ஒரு வழிபாட்டிடம் ஆகும். 

சோழர் தலைநகரமாகிய புகாரில் பிறவியாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்குக் கோயில் இருந்தது. (சிலப்.- இந்திர.- அடி.- 169-175) இந்திரவிழாவின் போது அங்கு வேள்வி நிகழ்ந்தது. சிவன் அதிபதியாக இருக்கும் கைலாயத்தின் பெயரால் ஊர்க் கோட்டமும் இருந்தது. (சிலப்.- கனாத்.- அடி-11) அங்கு மாலதி மாற்றாள் மகவின் சடலத்தோடு சென்று வணங்கினாள். 

முருகன் ஆறுமுகத் தோற்றத்தில் அழகுடன் எழுந்தருளிய கோயிலும் புகார் நகரில் இருந்தது. (சிலப்.-  இந்திர.-அடி.- 169-175) அங்கு இந்திர விழாவின் போது வேள்வி நிகழ்ந்தது. முருகனின் ஆயுதமாகிய வேலின் பெயரால் வழிபாடு நிகழ்ந்த வேற்கோட்டமும் இருந்தது. (சிலப்.- கனாத்.- அடி- 11)அங்கு மாலதி பால்விக்கிச் சோர்ந்த பாலகனின் உடலோடு சென்று அதற்கு உயிரை மீட்டுத்தரும்படி வேண்டினாள். 

புறநானூறு தமிழகத்தில் இருந்த ஒரு முருகன் கோட்டம் பற்றிப் பேசுகிறது (பா-299). அணங்குடை முருகன் கோட்டத்தில் கலந்தொடா மகளிர் ஒதுங்கி இருந்ததைப் போலக் குதிரைகள் நின்றன என்று பாடியுள்ளார் பொன்முடியார். இதனால் விலக்கான நிலையிலிருந்த பெண்கள் கூட ஒதுங்கி இருக்கக்கூடிய இடமாகக் கோட்டங்கள் நிலவின எனத் தெரிகிறது.

நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் கோயில், கோட்டம் என்ற இருபெயர்களையும் எடுத்தாளவில்லை. ஆனால் வேதநெறி பின்பற்றிய வழிபாட்டிடங்களையும் பிற மரபினைப் பின்பற்றிய வழிபாட்டு  இடங்களையும் தனித்தனியாகப் பட்டியலிடுகிறார். 

திருப்பரங்குன்றத்தைத் தலைமைப்படுத்தியுள்ளார். (திருமுருகாற்றுப்  படை- அடி.- 66-77) அது கோயிலுமன்று; கோட்டமும் அன்று; நகர் என்னும் வகையினது என்பது பரிபாடல்(18&19) மூலம் தெளிவாகிறது.     

அடுத்து அலைவாய், ஆவிநன்குடி, ஏரகம் ஆகிய தலங்களில் வேதநெறி பின்பற்றப்பட்டமையைக் காட்டி விளக்குகிறார். (மேற். -அடி. -78-189) அலைவாயில் எழுந்தருளிய முருகனின் திருமுகங்களில் ஒன்று வேள்வியை நோக்கிக் கொண்டு இருந்தது. ஆவிநன்குடியில் எழுந்தருளிய முருகனை வழிபட நூறு வேள்விகளையும் செய்து முடித்த இந்திரனும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து சென்றனர் என்கிறார். ஏரகத்தில் எழுந்தருளிய முருகனை வழிபட வேதநெறிப்படி வழிபடும் அந்தணர்கள் வந்தனர் என்கிறார். இவ்வாறு கோயில் என்று சொல்லக்கூடிய மூன்று தலங்களைப் பாடிய பின்னர் முச்சந்தி, நாற்சந்தி, ஐஞ்சந்தி, ஆற்றங்கரை, குளத்தங்கரை, வெறியாட்டயர் களங்கள், மன்றங்கள், பொதியில்கள், மலைநிலத்துக் குடியிருப்புகள் என்று நீளமாக அவர் வரிசைப்படுத்தும் வழிபாட்டிடங்கள் கோட்டங்கள் என்று சொல்லத்தக்கனவாய் உள்ளன. (மேற்.- அடி.- 189-226)

மதுரை மாநகரத்தில் சிவபெருமானுக்குக் கோயிலும், முருகனுக்குக் கோட்டமும் இருந்தன. இரு வழிபாட்டு இடங்களிலும் காலை முரசின் ஓசை சங்கொலியுடன் கேட்டது. (சிலப்.- ஊர்காண் காதை- அடி.- 5-14) சிவபெருமானின் கோயிலிலும், மன்னனின் அரண்மனையிலும் நான்மறை அந்தணர் நவின்ற ஓதை கேட்டது (சிலப்.- புறஞ்சேரியிறுத்த காதை- அடி.- 137-142)

வஞ்சிமாநகரில் சிவன் கோயிலில் மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை செங்குட்டுவனது மாலையின் நல்லகம் வருந்த அவன் தொழுதான். (சிலப்.- கால்கோட் காதை-அடி.- 55-60) அந்நகரில் திருமால் எழுந்தருளிய ஆடகமாடம் கோயிலா? கோட்டமா? என்று சொல்லக்கூடிய சான்றாதாரம் இல்லை. 

புகார் நகரில் இருந்த திருமால் கோயில் நீலமேனி நெடியோன் கோயில் என்று சுட்டப்படுகிறது. (சிலப்.- இந்திர.- அடி.- 169-175) அங்கு இந்திர விழாவின் போது வேள்வி நிகழ்ந்தது. அத்துடன் திருமாலுக்குக் கோட்டமும் இருந்தது. (சிலப்.- நாடுகாண் காதை- அடி- 10) கண்ணகியும் கோவலனும் கங்குல் கனைசுடர் கால்சீயாமுன் தம் இல்லத்து நீள்நெடுவாயில் நெடுங்கடை கழிந்து யாரும் அறியாமல் மணிவண்ணன் கோட்டம் வலம் செய்து சென்றனர். 

இந்திரனுக்குப் புகார் நகரில் கோயில் ஒன்று இருந்தது.(சிலப்.- இந்திர.- அடி.- 169-175) மாலை வெண்குடை மன்னவனாகிய அவன் கோயிலில் இந்திர விழாவின் போது வேள்வி செய்தனர். அவனது ஆயுதத்தின் பெயரால் வச்சிரக் கோட்டமும், அவனது வாகனத்தின் பெயரால் வெள்யானைக் கோட்டமும், அவன் அதிபதியாக இருக்கும் தேவலோகத்திலுள்ள கற்பகதருவின் பெயரால் ஒரு கோட்டமும் அந்நகரில் இருந்தன. மாலதி தன்னிடம் பாலருந்தி விக்கிச் சோர்ந்த பாலகனின் சடலத்தோடு அங்கெல்லாம் சென்று அழுது புலம்பினாள். (சிலப்.- கனாத்.- அடி.- 9-20) இந்திரவிழா தொடங்கியவுடன் வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசினைக் கச்சை யானைப் பிடர்த்தலையில் ஏற்றி விழா அறைந்தனர். வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்தில்; அதாவது ஐராவதக் கோட்டத்தில் விழாக்கால் நாட்டினர். தருநிலைக் கோட்டத்தில் விழாவிற்குரிய மங்கல நெடுங்கொடியை வானுற எடுத்தனர் என்கிறார் இளங்கோவடிகள். (சிலப்.- இந்திர.- அடி.- 141-146)

மணிமேகலையிலும் இந்திரவிழா தொடங்கியவுடன் வச்சிரக் கோட்டத்து முரசினையே அறைந்து சாற்றியதாகச் சாத்தனாரும் பாடியுள்ளார். (விழாவறை காதை- அடி.- 27-72)

பலதேவனுக்குப் புகார் நகரில் கோயிலும் கோட்டமும் இருந்தன. (சிலப்.- இந்திர.- அடி.- 171& ஊர்காண்.- அடி- 7) வால்வளை மேனி வாலியோனாகிய அவன் கோயிலில் இந்திரவிழாவிற்காக வேள்வி நடத்தினர். புகர் வெள்ளை நாகராகிய அவன் கோட்டத்தில் மாலதி குழந்தையின் சடலத்தோடு சென்று தவித்து வணங்கினாள். 

மேற்சுட்டிய கோட்டங்களோடு மாசாத்தன் என்ற புறம்பணையான் கோட்டம், பகல்வாயில் உச்சிக்கிழான் என்ற சூரியன் கோட்டம், பாசண்டச் சாந்தன் கோட்டம், நிலாக்கோட்டம், நிக்கந்தக்கோட்டம், எனப் பல கோட்டங்கள் புகாரில் இருந்தன. (சிலப்.- கனாத்.- அடி.- 9-20) மாலதி இறந்த பிள்ளையின் உடலோடு இங்கெல்லாம் சென்று அரற்றி ஏங்கினாள். 

புகார் நகரத்து நெய்தலங்கானலில் காமவேள் கோட்டம் இருந்தது. அங்கு சென்று சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய துறைகளில் மூழ்கித் தொழ வேண்டும் என தேவந்தி கண்ணகியிடம் கூறுகிறாள். (மேற். -அடி. -58-61) 

 பட்டினப்பாலை காமவேள் கோட்டத்தையும், நிலாக்கோட்டத்தையும் ஒருங்கு குறிப்பிடுகிறது. 

“மதி சேர்ந்த மகவெண்மீன் 

உருகெழு திறல் உயர்கோட்டத்து” என்றும், 

“இருகாமத்து இணையேரி” என்றும் பாடியிருப்பது 

நோக்கத்தக்கது. (பட்டினப்பாலை- அடி.- 35-39)

சுடுகாட்டுக் கோட்டம் ஈமப்புறங் காட்டில் இருந்தது. இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய் சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளில் சென்று தான் பறித்த பிணத்தைத் தின்றது. (சிலப்.- கனாத்.- அடி.- 15-22)

மணிமேகலை புகார் நகரத்து ஈமப்புறங் காட்டைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அங்கு சக்கரவாளக்கோட்டம், காடுகிழாள் கோட்டம், இறந்த அரசர்க்கமைந்த கோட்டங்கள் எனக் குறியவும் நெடியவும் குன்றுகண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டங்களாகப் பல இருந்தன. (சக்கரவாளக்  கோட்டம் உரைத்த காதை)

புகார் நகரிலிருந்து மதுரை செல்லும் வழியில் எயினர் குடியிருப்பில் ஐயை கோட்டம் இருந்தது. (சிலப்.- வேட்டுவ வரி- அடி.- 4) எயினர் குலக்குமரியைக் கொற்றவையாக அலங்கரித்து வழிபாடு நிகழ்த்தினர். அது மட்டுமின்றிப் பாண்டிய நாட்டில் ஐயை கோயிலும் இருந்தது. வேத மந்திரங்களைச் சிறப்பாக

 “மையறு சிறப்பின் ஐயை கோயில்” கதவு மூடிக் கொண்டது என்றும் சிலப்பதிகாரம் கூறக் காண்கிறோம். (சிலப்.- கட்டுரை காதை- அடி- 107) 

கோட்டம் கோயிலாவதும் கோயில் கோட்டமாவதும்:

கோட்டத்தில் வேள்விச்சாந்தி நிகழ்த்தினால் அது கோயில் என்று அழைக்கப்பட்டது. வேதமரபை மீறும்போது மீண்டும் கோட்டம் என்றே வழங்கினர். 

செங்கோட்டுயர்வரையில் மலைமகளிர் கண்ணகியை வணங்குவதாக இளங்கோவடிகள் காட்டுகிறார். அவர்கள் தொண்டகம் தொட்டு; சிறுபறை தொட்டு; கோடுவாய் வைத்து; கொடுமணி இயக்கி; குறிஞ்சி பாடி; நறும்புகை எடுத்து; பூப்பலி செய்து; காப்புக் கடை நிறுத்தி; விரவுமலர் தூவிப் பரவினர். (சிலப்.- குன்றக்குரவை- அடி.- 11-22) அவர்கள் வழிபாடு செய்த இடத்தை மாடலன் மங்கலமடந்தை கோட்டம் என்று சுட்டுகிறான். (சிலப். -வரந்தரு காதை- அடி.- 58&88) மலைவளம் காணவந்த செங்குட்டுவன் கண்ணகி வரலாற்றை அறிந்து; இமயக் கல்லெடுத்துக்; கங்கையில் நீர்ப்படை செய்து; நூல்நெறி மாக்கள் பாற்பட வகுத்த பத்தினிக் கோட்டத்தில் நடுகல்லாக்கிக்; கடவுள் மங்கலம் செய்தான். (சிலப்.- நடுகற் காதை- அடி- 224) பின்னர் மாடலமறையோன் அறிவுறுத்த நூன்மரபின் படி வேள்விச்சாலை அமைத்துத் தீமுறை செய்தான். வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்துக் கடவுள் மங்கலம் செய்தான். அவ்விடத்திற்கு தேவந்தியும், ஐயையும், காவற்பெ ண்டும், வந்து சேர்ந்த பொழுது;

 “கோமகள் தன் கோயில்” என்கிறார். (சிலப்.- வாழ்த்துக்  காதை- உரைப் பாட்டுமடை) ஆனால் வேள்வி முடிந்து; கண்ணகி காட்சியளித்து; வாழ்த்தி; வரம்தந்த பின்னர்; வேதமரபினின்று மாறுபட்டுச் செங்குட்டுவன் தேவந்தியை அங்கே தங்கி நித்தல் விழாவணி நிகழ்த்திப் பலிபூசை செய்ய ஏவியபோது;

 “பத்தினிக்கோட்டம்” (சிலப்.- வரந்தரு காதை- உரைப்பாட்டு மடை) என்றே சுட்டுகிறார். இதனால் வேதமரபு பின்பற்றப்படும் போது மட்டும் கோட்டம் கோயில் என்று அழைக்கப்படுவது கண்கூடு. 

கோட்டங்கட்குரிய மரபுகள்:

கோட்டங்களில் தெய்வக் கோலத்தை மானிடர்க்குப் புனைந்து வழிபடும் வழக்கமும், வரிப்பாடல்கள் பாடிக் குரவைக்கூத்து ஆடும் வழக்கமும், தெய்வமேறி ஆடும் நடைமுறையும் இருந்தன. 

எயினர் குடியிருப்பில் இடம்பெறும் ஐயைகோட்டத்து வழிபாட்டில் சாலினி தெய்வமேறி ஆடுகிறாள். (சிலப்.-  வேட்டுவவரி- அடி.- 4-74) கண்ணகியைக் குடமலையாட்டி என்று சுட்டிப் பேசி வருவதுரைக்கிறாள். அவ்வமயம் எயினர் வேட்டுவவரிப் பாடல்கள் பாடி ஆடினர். 

செங்கோட்டுயர்வரையில் மங்கலமடந்தை கோட்டத்தில் மலைநாட்டுப் பெண்கள் குன்றக்குரவை ஆடி முருகனையும், வள்ளியையும், கண்ணகியையும் வழிபட்டனர். 

திருமுருகாற்றுப்படையில் முருகனின் கோட்டங்கள் என்று கருதத்தக்க பட்டியலில் வேலன் தெய்வமேறி ஆடும் வருணனை உள்ளது. (அடி.- 189-215) 

குரவையர் துணங்கையர் அணங்கெழுந்தாடும் வழக்கத்தை எண்ணிறந்த சங்க இலக்கியங்களில் காண இயல்கிறது. (மதுரைக்காஞ்சி- அடி.- 610-615& கலித்தொகை- பா- 39) அங்கெல்லாம் வேதமரபினின்று மாறுபட்ட வழிபாட்டு முறையே நடைபெறுவதாகக் காட்டப்படுவது நோக்கத்தக்கது.

முடிவுரை:

இதுகாறும் கண்டவற்றான் பண்டைத் தமிழகத்தில் கோயில் வழிபாடு வேதமரபைப் பின்பற்றி அமைந்தது என்றும்; கோட்ட வழிபாடு பிற வழிபாட்டு  நடைமுறைகளைக் கொண்டிருந்தது என்றும் புலப்படுகிறது. 

சுருக்கக் குறியீட்டு விளக்கம்

  1. இந்திர. – இந்திரவிழவு ஊரெடுத்த காதை 
  2. கனாத். – கனாத்திறமுரைத்த காதை    (முற்றும்) சக  

https://groups.google.com/forum/#!topic/minTamil/Mb8zv9p2Sc0


சங்கம் மருவிய காலத்தில் சிவ வழிபாடு

ஆராய்ச்சியாளர்கள் சங்கம் மருவிய காலம் என்றும் காப்பிய காலம் என்றும் குறிப்பிடுவர். கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6 ஆம் நூற்றாண்டுவரை இந்தக் காலத்தைக் குறிப்பிடலாம். இந்தக் காலக் கட்டத்தில் தமிழகத்தில் களப்பிரர் என்ற மரபினர் ஆ ட்சி புரிந்தனர். இக்காலக் கட்டத்தில் தமிழகத்து வரலாற்றில் அதிகமான செய்திகளைப் பெற முடியவில்லை. இருப்பினும் கிபி. 2 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அந்தக் காலத்து மக்களின் வாழ்வியல் முறைகளைத் தருகின்றன. சங்க கால மக்கள் ஐவகை நிலங்களில் ஐவகைத் தெய்வங்களை வணங்கி தன்மைத் தெய்வங்களான சிவனையும், திருமாலையும் வணங்கிப் போற்றியும் வந்தனர். ஆனால் அடுத்து வந்த காப்பிய காலத்தில் வட ஆரியரின் தலையீட்டால் பல தெய்வவழிபாடுகளும் நம்பிக்கைகளும் தோன்றின. மேலும் வைதிக சமயங்களுக்கு எதிராகச் சமணமும் பௌத்தமும் மிக வேகமாகத் தளைத்து வளரத் தொடங்கின. பழந் தமிழகத்தில் சமண மதத்தை சாக முனிவர் என்பவரும் அவர் வழித் தோன்றிய சீடர்களும் தீவிரமாகப் பரப்பினர். அதுபோல அசோகரின் சமயத் தூதுவர்கள் பௌத்த சமயத்தைத் தமிழகத்தில் பரப்பினார்கள்.

இரு சமயங்களும் வடநாட்டில் ஊன்றியிருந்தாலும் தமிழகத்திலும் அவை போற்றப்பட்டு வந்தன. அந்த அடிப்படையில் தான் இந்தக் கால கட்டத்தில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தோன்றின. அந்த இரு காப்பியங்களிலும் காணப்படுகின்ற சிவ வழிபாட்டுச் செய்திகள் சுருக்கித் தரப்படுகின்றன. இரு காப்பியங்களும் புறச் சமய நூல்களாக இருந்தாலும் அவற்றிலும் சிவ வழி பாட்டுச் செய்திகள் இடம் பெற்றுள்ளன என்பதை மறுக்க இயலாது. 1.3.1

சிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடு இயற்கைத் தெய்வங்களான ஞாயிறு, திங்கள், மழை இவற்றைப் போற்றுகின்ற வாழ்த்துப் பகுதிகள் சிலப்பதிகாரத்தின் தொடக்கத்தில் இறை வாழ்த்துப் போல் அமைந்துள்ளன. மேலும் தமிழ்நாட்டில் நிலவிய சமயங்களையும் அவற்றை மக்கள் மதித்து ஒழுகிய திறத்தையும் சிலப்பதிகாரம் தெளிவாக விளக்குகிறது. சிலப்பதிகாரம் தன்னுடைய காதையில் ஒன்றான குன்றக் குரவையில் குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகவேளின் வழிபாட்டைக் கூறுகிறது.

ஆய்ச்சியர் குரவையில் முல்லைநிலத் தெய்வமான திருமால் வழிபாடு கூறப் பெற்றுள்ளது. இந்திரவிழவூரெடுத்த காதையில் மருதநிலத் தெய்வமான இந்திரன் வழிபாடு கூறப் பெற்றுள்ளது. கானல்வரியில் நெய்தல் நிலத் தெய்வமான வருணன் வழிபாடும், வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடும் கூறப் பெற்றுள்ளன. குன்றக் குரவையில் முருக வழிபாட்டினுடைய செய்திகள் அனைத்தும் சைவ சமய வழிபாட்டின் அடிப்படையிலேயே கூறப் பெற்றுள்ளன. மேலும் இக்காதையில் சிவபெருமான் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து முனிவர்களுக்கு அறம் உரைத்து அருளியதும், சிவபெருமான் கயிலை மலையில் வீற்றிருப்பதும், மலையரசன் மகளாகிய உமையவளை மணந்ததும் குறிக்கப் பெற்றுள்ளன. ஊர்காண் காதையில், மதுரை நகரில் சிவபெருமானாம் திருஆலவாயான் திருக்கோயிலில் நான்மறை ஓசைகள் முழங்கின என்ற செய்தி குறிக்கப் பெறுகிறது. சிவபெருமானைப் “பிறவா யாக்கைப் பெரியோன்” என்றும், “நுதல்விழி நாட்டத்து இறைவன்”
என்றும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. சிவ பெருமானைக் குறிக்கின்ற பொழுதெல்லாம் பிற தெய்வங்களுக்கு முதன்மையானவனாகவே சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. எனவே சிலப்பதிகாரக் காலத்தில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட முதன்மை வழிபாடு சிவவழிபாடே என்பது பெறப்படுகிறது. பண்டைக் காலத்தில் அரசர்கள் போருக்குச் செல்லுகின்ற
பொழுது சிவபெருமான் சூடிய வஞ்சிமாலையை அணிந்து செல்லும் வழக்கம் இருந்தது. இதைச் சிலப்பதிகார ‘வஞ்சிக் காண்டம்’ செங்குட்டுவன் மூலமாகக் குறிப்பிடுகிறது. வட ஆரியர் மீது போர் தொடுத்துச் செல்லும் செங்குட்டுவன், நிலவுக் கதிர் முடித்த நீளிருஞ் சென்னி உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து (கால்கோள் காதை : 55-57) புறப்பட்டான் என்று சிலப்பதிகாரக் கால்கோள் காதை குறிப்பிடுகிறது.

செங்குட்டுவன் நடத்திய போரில் தோற்றவர்கள் உடல் முழுவதும் முழுநீறு பூசிய சிவனடியார்கள் போலவே தங்களை மாற்றிக் கொண்டு ஓடினார்கள் என்று குறிப்பிடுகின்ற செய்தியால் சிலப்பதிகாரக் காலத்தில் திருநீறு பூசி, சிவனை வழிபடும் வழக்கம் இருந்தமை உறுதியாகிறது. இது போலச் சிவபெருமானுடைய கொடுகொட்டிக் கூத்தினைச் சிலப்பதிகாரம் கடலோடு காதையில், உமையவள் ஒருதிறனாக ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் (42 – 43) என்று குறிப்பிடுகிறது. எனவே இங்கு எடுத்துக் காட்டிய பகுதிகளால் சிவபெருமான், பிறவாயாக்கைப் பெரியோன் என்பதும், நெற்றிக்கண் உடையவன் என்பதும், உமையவளை ஒரு பாகத்தில் கொண்டவன் என்பதும், ஆலின்கீழ் அறமுரைத்தவன் என்பதும் தெரிய வருகின்றன.

மேலும் சிவ வழிபாட்டில் திருநீறு பூசி வழிபடுவதும், போரில் வெற்றிபெறச் சிவபெருமானை வழிபடுவதும், விழாக்களில் சிவபெருமான் ஆடிய கூத்துக்களை ஆடுவதும் அறியப்படுகின்றன..1.3.2 மணிமேகலையில் சிவ வழிபாடு முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்துடன் வரலாற்று நிகழ்ச்சியாலும் காப்பியத் தலைவர்களின் உறவு முறையாலும், நிகழ் இடத்தாலும் மிக நெருங்கிய தொடர்புடையது மணிமேகலைக் காப்பியம் ஆகும். சீத்தலைச் சாத்தனார் இக்காப்பியத்தை மணிமேகலைத் துறவு என்ற பெயரில் படைத்தார் என்பது ஒரு செய்தியாகும்.

மணிமேகலை பிறந்து வளர்ந்து துறவு அடைந்தது தமிழகம் என்பதால் தமிழகத்தில் நிலவிய பல்வேறு வகைத் தெய்வ வழிபாடுகள் சாத்தனாரால் குறிக்கப் பெற்றுள்ளன. இக்காப்பியத்தில் சிவபெருமான், முருகன், திருமால், குமரி, கொற்றவை, இந்திரன் முதலிய தொன்மைத் தெய்வ வழிபாடுகளும் மணிமேகலா தெய்வம், சதுக்கப் பூதம், சம்பாபதி, சிந்தாதேவி, தீவதிலகை, கந்திற்பாவை முதலிய பிற தெய்வ வழிபாடுகளும் இடம் பெற்றுள்ளன. இக்காப்பியத்தில் உள்ள சமயக் கணக்கர் திறம் கேட்ட காதையில் பல்வேறு சமயக் கணக்கர்கள் இடம் பெறுகின்றனர்.

சைவம், வைணவம், ஆசிவகம், நிகண்டவாதம், சாங்கிய வாதம் ஆகிய சமயக் கணக்கர்கள் அக்காதையில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் வழங்கிய தெய்வ வழிபாடுகளில் சிவ வழிபாடு தலைமையும் சிறப்பும் வாய்ந்தது என்பதை மணிமேகலை வலியுறுத்துகின்றது. தெய்வ வழிபாடுகளைக் கூறுகின்ற பகுதியில் முதலில் கூறப் பெறுவது சிவ வழிபாடே ஆகும். நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக (மணிமேகலை,1 : 54-55) என்ற பகுதி இதனை வலியுறுத்தும். முருகனைப் பற்றி மணிமேகலை குறிக்கின்ற பொழுது, “ஆலமர் செல்வன் மகன்”என்று குறிப்பிடுகிறது. புத்தமதக் காப்பியத்தில் சிவ புராண நிகழ்வுகள் குறிக்கப் பெறுவது சிறப்புடையதாகும். முருகனுக்கு விழா எடுத்ததைக் குறிக்கின்ற பொழுது, ஆலமர் செல்வன் மகன் விழாக் கால்கோள் காண்மினோ(மணிமேகலை. 3 : 144-145)என்று குறிப்பிடப்படுகிறது.

மணிமேகலையில் காணப்படும் சைவவாதி தன் சமயக் கொள்கைகளைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறான். அவன் கூற்றின் மூலமாகச் சிவவழிபாட்டுத் தத்துவங்கள் வெளிப்படுகின்றன. மணிமேகலை சைவவாதியைக் குறிப்பிடுகின்ற பொழுது, “இறைவன், ஈசன் என நின்ற சைவவாதி” எனக் குறிப்பிடுகின்றது. அச்சைவவாதியின் கூற்றில் வரும் சிவச் செய்திகள் வருமாறு :சிவபெருமான்அட்டமூர்த்தியாக விளங்குகிறான். (“இருசுடர் இயமானன் ஐம்பூதம் என்று எட்டுவகை”)சிவனையே முதலாக உடைத்து உலகம்.எல்லா உயிர்களுக்கும் இறைவன் சார்பாக உள்ளவன்.இவ்வாறு சிவபெருமானைப் பற்றிய செய்திகள் இடம் பெறுவதோடு பித்தன் ஒருவன் கொண்ட வேடம் சிவவேடமாகக் காட்சியளிக்கிறது என்று மணிமேகலை குறிப்பிட்டு மேனி முழுவதும் திருநீறு பூசினால் அது சிவ வேடமாகும் என்று கூறுகிறது.1.3.3

காரைக்காலம்மையார் நூல்களில் சிவ வழிபாடு சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு களப்பிரர் ஆட்சி நடைபெற்றதால் சிவ வழிபாட்டில் குறிப்பிடத்தக்க செய்திகள் கிடைக்கப் பெறவில்லை. கிடைத்திருக்கும் செய்திகளில் கி.பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையாரின் பாடல்கள்தாம் சிவ வழிபாட்டைச் சிறப்பாகக் கூறுகின்ற சான்றாக விளங்குகின்றன. சமய இலக்கிய ஆய்வாளர்கள் திருமுறைப் பாடல்களில் காலத்தால் முந்தியவை காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் என்பதில் கருத்து வேறுபாடு கொள்வதில்லை. தொன்மை நிலையில் காரைக்கால் அம்மையாரின் பதிகங்கள் சிவபெருமான் பெருமைகளையும், சிவனை வழிபடுவதால் கிடைக்கின்ற முக்திப் பேற்றினையும் குறிப்பிடுகின்றன எனலாம். அவருடைய நூல்கள் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி என்ற சிற்றிலக்கியங்கள் ஆகும். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டும் 22 பாடல்களையும், திருஇரட்டை மணிமாலை 20 பாடல்களையும், அற்புதத் திருவந்தாதி 100 பாடல்களையும் கொண்டவையாகும். காரைக்கால் அம்மையாரின் பாடல்களில்தான் சைவ சித்தாந்தக் கருத்துகள் முதன்முதலாகப் போற்றப் பெறுகின்றன. சிவபெருமானின் பெருமைகள் அனைத்தும் காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் இடம்பெற்றுள்ளன எனலாம். அம்மையாரின் வழியில்தான் பிற திருமுறை ஆசிரியர்கள் சிவபெருமான் பெருமைகளை உரைத்திருக்கின்றனர் எனலாம். உலகத்தை ஒடுக்கிய சிவபெருமான் உலகத்தை மீளத் தோற்றுவிக்கின்றான் என்ற சைவ சித்தாந்தத் தத்துவத்தை அற்புதத் திருவந்தாதியில் அம்மையார் குறிப்பிடுகின்றார். (அற்புதத் திருவந்தாதி பாடல்-5)

இறைவன் உயிர்க்கு உள்ளே இருந்து அறிவுறுத்தித் தன்னை அறிய வைக்கின்றவன் என்பதையும் அற்புதத் திருவந்தாதி குறிப்பிடுகின்றது. செம்மேனி அம்மான் சிவன் என்றும், உமையவளை இடப்பாகத்தே கொண்டவன் என்றும், கழுத்தில் நஞ்சை அடக்கியவன் என்றும், திங்களையும், பாம்பையும், கங்கையையும் தலையில் சூடியவன் என்றும் அம்மையார் சிவனின் பெருமைகளை எடுத்துக் கூறுகிறார். அவனைத் துதித்து வணங்கிக் கைத்தொண்டு செய்தால் முக்தியை அடையலாம் என்ற வழிபாட்டு முறைமையினையும் அம்மையார் சுட்டிக் காட்டுகிறார்.

இறைவனுடைய திருவடியை வணங்கினால் செய்த வினைகள் நில்லா என்பதும் அம்மையாரின் கருத்தாகும். பிறந்த காலம் முதல் இறைவனை வணங்குகின்ற, வழிபடுகின்ற வழிபாடு அம்மையார் காட்டும் வழிபாடாகும். (அற்புதத் திருவந்தாதி பாடல் -1) ‘இறைவனைக் கைதொழுது வணங்கிக் காதலால் கண்டால் இறைவன் தோன்றுவான்’ என்கிறார் அவர். (அற்புதத்
திருவந்தாதி. பாடல் -17)

நாமாலை சூடியும் நம் ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் (அற்புதத் திருவந்தாதி. பாடல் – 87) என்று அம்மையார் குறிப்பிடுவதிலிருந்து இறைவனுக்குப் பூமாலை சூட்டிப் பாமாலையால் வணங்குகின்ற வழிபாடு கூறப்படுகிறது.

இவ்வாறு காரைக்காலம்மையார் பாடல்கள் மூலம் சிவபெருமானின் பெருமைகளையும், புராண வழிபாட்டுச் செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.

http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021103.htm

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply