முதலாவது சங்கிலி செகராசசேகரன் (கி.பி 1519 – 1565 வரை)
வித்தியாசமாக ஒரு தொடர் பதிவு தொடர் கதையாக எழுதுவது எனத் தீர்மானித்து நாட்களும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்தத் தாமதம் தொடர் ஆரம்பித்த பின் வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தாமதம். இனி நான் எழுத இருக்கும் சங்கிலிய மன்னனின் கதைக்கான முன்னுரைக்கு வருவோம். இதில் எனது கதைக்கான தயார்படுத்தல்களும் உண்டு.
முன்னுரை
‘வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்’ என்பார்கள். என்னைப் பாதியாவது ஆக்கியுள்ளது எனலாம். நிறைய வாசிப்பேன், அதுவே என்னை எழுதவும் தூண்டியது. வலைப்பதிவில் எமது ஆத்ம திருப்திக்காக எதையும் எழுதலாம். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அது சாத்தியப்படாது. அவற்றில் பிரசுரிக்கக் கூடிய தரத்தை குறித்த ஆக்கங்கள் ஓரளவாவது கொண்டிக்க வேண்டும். அந்தத் தரத்தை கொண்டதாக இது அமையும் என்று நான் கருதுகின்றேன். வாசிக்கும் போதும் அதிகமாக சரித்திர நாவல்களையே விரும்பிப் படிப்பேன். தென் இந்திய நாவலாசிரியர்களினது சரித்திர நாவல்களை வாசிக்கும் போது அது எத்தனை பக்கங்களைக் கொண்டிருந்தாலும் வாசிக்கும் போது சலிப்பே வராது. அந்தளவு அவர்கள் வரலாற்றை கற்பனையுடன் கலந்து தந்திருப்பார்கள். உதாரணமாக ஒரு கொடுங்கோல் அரசனது சில நல்ல குணங்களை கருவாக வைத்துக்கொண்டு அவனை கதை நாயகன் ஆக கொண்டு கற்பனையில் சிறந்த காவியத்தைப் படைத்துவிவார்கள். இந்த மாதிரியான நாவல்களை வாசிக்கும் போது இந்தியாவின் பல அரசர்களைப்பற்றிய சுவையான விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. (பாதி கற்பனை) இலங்கைத் தமிழ் அரசர்கள் பற்றிய சில நாவல்களையும் வாசித்திருக்கின்றேன். அவை பெரும்பாலும் வரலாற்றுடனேயே ஒன்றிப்போகின்றன. அங்கு கற்பனைக்கு இடம் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் காவியம் பாதி, கற்பனை பாதி என்ற குறிக்கோளுடன் ஒரு சரித்திர நாவல் எழுத ஆசைப்பட்டேன்.
இலங்கையில் தமிழ் அரசர்கள் பலர் ஆண்டாலும் எனக்கு மாத்திரம் அன்றி பலருக்கும் ஞாபகத்துக்கு வருவது சங்கிலியனே. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன் அவனது சிலை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே அவன் பற்றிய தகவல்களைத்திரட்ட முற்பட்டேன். இதற்கு கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) அவர்களின் மீள் வாசிப்பாக வெளியிடப்பட்ட (என்னைப் போன்றவர்களுக்கு) எஸ். ஜோனின் ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ (1878), மாதகல் மயில்வாகனப் புலவரின் ‘யாழ்ப்பாண வைபவமாலை’ (1884), ஆ. முத்துத் தம்பிப்பிள்ளையின் ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ (1912) அத்துடன் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ‘நாடகத்திரட்டு’ ஆகியவற்றில் இருந்து தகவல்களைப் பெற்றேன். இந்த ஆயத்தங்களுடன் சங்கிலி வரலாற்றை வாசிக்கத் தொடங்கிய போது ஆரம்பமே எனக்கு அஷ்ட கோணலாகிப் போனது. காரணம் யாழ்ப்பாணத்தை இரு சங்கிலி அரசர்கள் ஆண்டிருக்கின்றார்கள். இவர்களில் முதலாவது சங்கிலி செகராசசேகரன் என்ற சிங்காசனப் பெயருடன் நாட்டை ஆண்டிருக்கின்றான் (கி.பி 1519 முதல் கி.பி 1565 வரை) இரண்டாம் சங்கிலி எனும் சங்கிலி குமாரன் கி.பி 1616 முதல் 1621 வரை ஆண்டிருக்கின்றான். நான் மேலே குறிப்பிட்ட மூன்று சரித்திர ஆசிரியர்களும் (நாடகம் தவிர்ந்த) இவ்விரு சங்கிலியையும் ஒருவரே என இணைத்து தங்கள் நூல்களில் எழுதியுள்ளனர். (பின்னைய எழுத்தாளர்களால் அறியப்பட்டது) இதனால் எனக்கு முதல் சங்கிலியினது முடிவும் இரண்டாம் சங்கிலியினது ஆரம்பமும் தெரியாமல் போய்விட்டது.
கதைக்கேற்ப கதாநாயகனின் முடிவை நாங்கள் எழுதிக் கொள்ளலாம். ஆனால் ஆரம்பத்தையும் கற்பனையில் எழுதினால் இக்கதை முற்று முழுதாக கற்பனைக்கதையாகப் போய்விடும். அதனால் முதற் சங்கிலியின் வரலாற்றையே நாவலாக எழுதத் தீர்மானித்தேன். அதிலும் ஓர் சிக்கல் வந்தது. இச்சங்கிலி நாட்டுமக்களுக்கு நன்மை செய்தாம் தன் சொந்த விஷயத்தில் சுயநலத்துடன் நடந்து கொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இச்சங்கிலியானவன் மன்னன் பரராஜசேகரனது வைப்பாட்டியின் மகனாவான். இவன் தன் தமையனைக் கபடமாகக் கொன்று ஆட்சிப் பொறுப்பைப் பெற்றான் என ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். என் கதையின் நாயகனைக் கொடியவனாகக் காட்டுவது எனக்கு சரியாகப் படவில்லை. ஆதலால் சரித்திரத்தில் உள்ள நல்ல விடயங்களை எடுத்துக்கொண்டு மிகுதி கற்பனையையும் சேர்த்து இந்த சரித்திர நாவலை ஆக்கியுள்ளேன். வெறும் ஏழு பக்க வரலாற்றை வைத்து நான் முப்பது அத்தியாயங்கள் எழுதிவிட்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முக்கியமானவிடயம், ஒரு ஏகலைவனுக்கு எப்படி துரோணர் குருவாக அமைந்தாரோ அவ்வாறு எனக்கு குருவாக மறைந்த புகழ் பூத்த தென்இந்திய சரித்திர ஆசிரியர் சாண்டில்யன் இருக்கின்றார். அவரின் புத்தகங்களை வாசித்தே அவரின் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். என்னுடைய ரசனை அவருடன் நிறையவே ஒத்துப் போகின்றது. ஏறத்தாள அவருடைய எல்லா நூல்களையும் யாழ்ப்பாணத்தில் வாசித்து விட்டேன். எஞ்சிய நூல்கள் கிடைக்காததால். ஆனாலும் அண்மையில் தமிழ்ச்சங்கத்தில் சில நான் வாசிக்காத நூல்களைக் கண்டு சந்தோசப்பட்டேன். இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை.
எனவே தெரிந்தோ தெரியாமலோ இக்கதையில் சாண்டில்யன் பாணி பல இடங்களில் பரவிக்கிடக்கும். (உதாரணம் எலியானா என்ற கற்பனைப் பாத்திரம்) இந்த நாவலின் ஐம்பது வீதம் சரித்திரமே. சரித்திரத்தை சுவைபடக் கூறுவதற்கு கற்பனை வேண்டும் என்று புரிந்து கொண்டவர்களுக்கு இது ரசமாக அமையும். எழுத்துருவில் இருந்த இந்த நாவலை வலைப்பதிவில் ஏற்றக் காரணம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் வலைப்பதிவின் ஆதிக்கமும். எனக்கு இந்தக்கதையை எழுதுவதற்கு மூல நூல்களைத்தந்து என்னை யாழ்ப்பாணத்தரசன் சங்கிலியின் வரலாற்றை இந்திய சரித்திர ஆசிரியர்களைப் போல் எழுதுமாறு கூறி இரண்டு வருடங்களுக்கு முன் ஆக்கமும் ஊக்கமும் தந்த என் நண்பன் தக்சனுக்கு எனது நன்றிகள். (அவனும் சரித்திர நூல் வாசகன். அவன் கல்கி வாசகன்) எனது எழுத்துத்துறையில் அவனுக்கு பங்குண்டு.
நான் உங்களிடம் வேண்டுவது என்ன என்றால் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். நிறைகளை பாராட்டுங்கள். தொடர் சிறப்hக அமைவதற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். சங்கிலியன் வரலாற்றுத் தொடரின் முதல் அத்தியாயத்துடன் சந்திக்கின்றேன்.
நன்றியுடன் வரோதயன்.
http://sankili.blogspot.com/2010/03/blog-post.html
Leave a Reply
You must be logged in to post a comment.