ஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல் என்பதைக் காட்ட  வி.புலிகள் ஏனைய  தமிழ்க் குழுக்களின்  தலைவர்களை  கொன்றொழித்தார்கள் – விக்னேஸ்வரன்

ஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல் என்பதைக் காட்ட  வி.புலிகள் ஏனைய  தமிழ்க் குழுக்களின்  தலைவர்களை  கொன்றொழித்தார்கள் – விக்னேஸ்வரன்

நக்கீரன்

சீடன் – வணக்கம் குருவே!

குரு – வணக்கம்! வணக்கம்! நீண்ட நாட்கள் உன்னை நான் பார்க்கவில்லையே! ஒரு வேளை வெளிநாடு போயிருந்தாயோ?

சீடன் – இல்லை குருவே! நான் இமயமலைக்குக் போயிருந்தேன்! அங்கே உங்களைப் போன்ற பலரைக் கண்டு தரிசித்தேன். குளிர் தாங்க முடியவில்லை நாட்டுக்குத் திரும்பி விட்டேன்.

குரு – நல்லது. நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது?

சீடன் – அந்தக் கண்ராவியை ஏன் கேட்கிறீர்கள் குருவே? யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்பதில் ஒரே குழப்பம்!

குரு – நடந்ததைச் சொல்லு.

சீடன் – முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு கொள்கைவாதி. ஒரு நேர்மையானவர். இப்படியெல்லாம் எண்ணி இருந்தேன். ஆனால் மனிதர் வேளைக்கொரு பேச்சு, நாளுக்கொரு கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரது புலம்பெயர் ஆதரவாளர்கள் இப்போது தலையில் கைவைத்து “முதலுக்கு மோசம் வந்ததே” என்று அழுகிறார்கள்.

குரு – அது தெரிந்த சங்கதிதானே. அவர் அரசியலுக்குப் புதியவர். பட்டிக்காட்டான் பட்டினத்தைப் பார்த்த கதையாக எல்லாமே அவருக்குப் புதிதாகவும் புதினமாகவும் தெரிகிறது!

சீடன் – முதலமைச்சராக வந்த பின்னர்தான் அவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி ஒரு பிரமிப்பு வந்தது. பிரபாகரன்  பிறந்த மண்ணில் நின்றுகொண்டு எதோ கொலம்பஸ் கண்டு பிடிப்புப் போல  அவரை சுத்த வீரன் என்றார்.

குரு – உண்மையைத்தானே சொன்னார்? முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள தேசத்துக்கு பிரபாகரன்  சிம்ம சொப்பனமாக இருந்தார்!

சீடன் – நீங்கள் சொல்வது சரி குருவே! ஆனால் அவர் உயிரோடு இருந்த போது சர்வதேசம்  திரும்பிக் கூடப் பார்த்ததில்லை. ஒருபுறம் சமாதானம் பேச்சுவார்த்தைக்கு அனுசரணை என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள், குண்டுகள், கப்பல்கள் எல்லாவற்றுக்கும் மேலாக உளவு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்!

குரு – இராசதந்திரங்களில் அவர்கள் சூரர்கள். நாங்கள்தான் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். சரி விடயத்துக்கு வா!

சீடன் – கொஞ்ச நாட்களுக்கு முன்னர் “அன்று தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்து கொண்டே நாம் செயற்பட வேண்டும். இதனையே மக்கள் விரும்புகின்றார்கள்”  என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

குரு – பேச்சு பூடகமாக இருக்கிறதே? முன்னாள் முதலமைச்சர், இல்லை,  இந்நாள் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன் என்ன சொல்ல வருகிறார்? மீண்டும் ஆயுதப்  போராட்டமா?

சீடன் – சீச் சீ அப்படியிருக்காது. தம்பி பிரபாகரன் அவருக்கு வேறு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். அதைத்தான் சொல்கிறார்.

குரு – அது சரி. அவரது கட்சி எப்படிப் போகிறது?

சீடன் – அதையேன் கேட்கிறீர்கள் குருவே? தமிழ் மக்கள் கூட்டணியில் எல்லாமே அவர்தான்.  தன்னைத்தானே செயலாளர் நாயகம் என நியமித்துக் கொண்டார். பொதுக் குழுவுக்கும்  அவரே ஆட்களை நியமித்தார். அந்தச் செயலாளர் இந்தச் செயலாளர் எனப் பலரை அவரே நியமித்தார். கிட்டத்தட்ட கூட்டத்துக்கு வந்தவர்கள் எல்லோருக்கும் பதவி வழங்கப்பட்டது.

குரு – இது சனநாயக அரசியலாகத் தெரியவில்லையே?

சீடன் – நீங்கள் ஒன்று. சனநாயகம் மற்றவர்களுக்குச் சொல்லும் தத்துவம். தான் பின்பற்றும் சனநாயகம் வேறு. கட்சியின் அடுத்த தேசிய மாநாட்டில்தான் தலைவர் உட்பட அனைவரும் முன்மொழிந்து வழிமொழிந்து தெரிவு செய்யப்படுவார்களாம்!

குரு – ஆள் பஞ்சம் என்று சொல். தொண்டர்கள் இல்லாத தலைவர்களது கட்சி?

சீடன் –  ஆமாம் அதேதான். இப்போது இந்தப் பத்திரிகைச் செய்தியைப் படியுங்கள் குருவே! ( சீடன் கொழும்பில் இருந்து வெளியாகும் த ஐலாந்து நாளேட்டின் பெப்ரவரி 04 ஆம் நாள் பதிப்பை பவ்வியமாக நீட்டுகிறான். குரு அதனை வாங்கிப் படிக்கிறார்.)

யாழ்ப்பாணம், தென்மராட்சியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட  நா.உறுப்பினர் அரசியல் செய்யும் பாணி காலவோட்டத்தில் மாறிவிட்டது என்றார்.

முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் 60  சமூகத் தலைவர்கள் உட்பட பல பொதுமக்களைக்  கொன்று குவித்ததைக் கண்டித்திருந்தார். அதற்கு சுமந்திரன் பதிலளித்திருந்தார்.

மேலும் விக்னேஸ்வரன் பேசும்போது ” தாங்களே தமிழர்களின் ஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல் என்பதைக் காட்ட  வி.புலிகள் ஏனைய  தமிழ்க் குழுக்களின்  தலைவர்களை  கொன்றொழித்தார்கள்.  அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய அரசியல் சக்திகளை அழிக்க முயற்சிக்கிறார்கள். காரணம் அவர்கள் மாத்திரமே தமிழர்களது ஒரே குரலாக இருக்க விரும்புகிறார்கள்.

விக்னேஸ்வரன் ஆயுத மோதல் காலத்தில்  வடக்கில் வசிக்கவில்லை. ஆன காரணத்தினால் அவருக்கு துல்லியமான தகவல்களுடன் தொடர்பு இருந்திருக்கவில்லை.

விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட காரணத்தாலேயே பெற்றுக் கொண்டார். இப்போது அவர் எங்களை தமிழீழ விடுதலைப் புலிகளோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். இத்தகைய நடத்தை  கண்டிக்கத்தக்கது.

 குரு (மிகுந்த வியப்போடு) – ” தாங்களே தமிழர்களின் ஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல் என்பதைக் காட்ட  வி.புலிகள் ஏனைய  தமிழ்க் குழுக்களின்  தலைவர்களை  கொன்றொழித்தார்கள்” என்று விக்னேஸ்வரன் சொன்னாரா? அது உண்மையா?

சீடன் – அப்படித்தான் அந்த ஏடு எழுதியுள்ளது. இதுவரை அதற்கு மறுப்பு இல்லை. பேசிய இடம் இபிஆர்எல்எவ் கிளிநொச்சி பிராந்திய மாநாடு. அதற்கு விக்னேஸ்வரன்தான் சிறப்பு விருந்தினர். வி.புலிகளால் கொல்லப்பட்ட இபிஆர்எல்எவ் தோழர்கள் பற்றிய ஆவணத்தை அவர்தான் வெளியிட்டு வைத்தார். அந்த ஆனந்தில்தான் வி.புலிகளை ஒரு பிடி பிடித்துள்ளார்! விக்னேஸ்வரனது பேச்சு புலத்தில் அவருக்குப் பல்லக்குத் தூக்கும் பக்தகோடிகளது அடிவயிற்றைக் கலக்கியிருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை!

கட்சி தொடங்கிவிட்டார். அவரைப் பொறுத்தளவில் கட்சி என்பது குருவி தலையில் பனங்காய் வைத்த மாதிரித்தான் இருக்கப் போகிறது. மக்கள் ஆதரவு இல்லாத இபிஆர்எல்எவ் அமைப்போடு கை கோர்ப்பது குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குழியில் விழுந்த கதையாக இருக்கப் போகிறது!

குரு – நீ அரசியலை அலசுவதில் குருவுக்கு மிஞ்சிய சீடன்!


விடுதலைப் புலிகளைத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒப்பிட்ட விக்னேஸ்வரனை சாடிய சுமந்திரன்

பெப்ரவரி 04, 2019

எழுதியவர் – தினசேனா றட்ருகமகே

தங்களை எதிர்நோக்கியுள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முகமாக தங்கள் காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் பலரைக் கொன்றது. ஆனால் தமிழத் தேசியக் கூட்டமைப்பு வி.புலிகள் மக்களைக் கொன்றது போன்று மக்களைக் கொல்ல முடியவில்லை என ததேகூ இன் நா.உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், தென்மராட்சியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட  நா.உறுப்பினர் அரசியல் செய்யும் பாணி காலவோட்டத்தில் மாறிவிட்டது என்றார்.

முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் 60  சமூகத் தலைவர்கள் உட்பட பல பொதுமக்களைக்  கொன்று குவித்ததைக் கண்டித்திருந்தார். அதற்கு சுமந்திரன் பதிலளித்திருந்தார்.

மேலும் விக்னேஸ்வரன் பேசும்போது “தாங்களே தமிழர்களின் ஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல் என்பதைக் காட்ட  வி.புலிகள் ஏனைய  தமிழ்க் குழுக்களின்  தலைவர்களை  கொன்றொழித்தார்கள்.  அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய அரசியல் சக்திகளை அழிக்க முயற்சிக்கிறார்கள். காரணம் அவர்கள் மாத்திரமே தமிழர்களது ஒரே குரலாக இருக்க விரும்புகிறார்கள்.”

விக்னேஸ்வரன் ஆயுத மோதல் காலத்தில்  வடக்கில் வசிக்கவில்லை. ஆன காரணத்தினால் அவருக்கு துல்லியமான தகவல்களுடன் தொடர்பு இருந்திருக்கவில்லை.

விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட காரணத்தாலேயே பெற்றுக் கொண்டார். இப்போது அவர் எங்களை தமிழீழ விடுதலைப் புலிகளோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். இத்தகைய நடத்தை  கண்டிக்கத்தக்கது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக வழிவகையில் இருந்ததுடன், அதன் ஜனநாயக தலையீடுகள் தமிழ் மக்களின் பல வெற்றிகளுக்கு வழிகோலியுள்ளது” என சுமந்திரன் தெரிவித்தார். “புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களுக்கு நாங்கள் தீர்வு காண முயற்சிக்கின்றோம். அரசியலமைப்பின் வரைவு ஆவணங்களில் காணப்படும் உறுப்புரைகள் நாங்கள் பெற்ற வெற்றிகள் என்று அழைக்கப்படக் கூடியவை ஆகும்” என்றார். (த  ஐலாந்து நாளேடு)

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=198897


 

 

 

 

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply