கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?அரசியல் அலசல்

கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?

 எஸ்.திவியா
2 weeks 6 days ago

இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் சீனாவுடனான நெருக்கம் அதிகரித்ததுஇலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் சீனாவுடனான நெருக்கம் அதிகரித்ததுஇலங்கையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராக கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷ, 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை அதிபராக பதவி வகித்தார்.

சீனாவைப் பொறுத்த வரையில் அந்நாட்டின் எல்லா விஷயத்திலும், ஆம் அல்லது சரி என்று சீனாவுக்கு சாதகமான ஒரே பதிலையே ராஜபக்‌ஷ சொல்லிவந்தார் என பரவலாக கூறப்படுகிறது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கை இதுபற்றி இவ்வாறு கூறுகிறது: “சீனா கொடுக்கும் கடன் மற்றும் அதன் லட்சிய துறைமுக திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவின் பதில் எப்போதும் ‘ஆம்’ என்றே இருந்தது. அம்பாந்தோட்டா துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அது நிதர்சனத்திற்கு ஒவ்வாத திட்டம் என்று கூறினாலும், சீனாவின் விருப்பத்திற்கு ‘சரி’ என்ற பதிலையே தெரிவித்தார் ராஜபக்ஷ.

இலங்கைக்கு தொடர்ந்து கடனுதவி செய்துவந்த இந்தியா, இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மறுத்தபோது, அந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை ராஜபக்ஷ சீனாவிடம் ஒப்படைத்தார். ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், சீனாவிடம் இருந்து இலங்கை பெற்ற கடன்தொகை துரிதமாக அதிகரித்தது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி, “சீனாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான ஹார்பர் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் அம்பாந்தோட்டா துறைமுகத்தின் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது. இந்த துறைமுகத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெறாது என்று முன்னரே கூறப்பட்டது. இந்த துறைமுகத்தை ஒட்டியுள்ள கடல் மார்க்கம், உலகிலேயே அதிக பரபரப்பானது; பல்லாயிரக்கணக்கான கப்பல்கள் இந்த வழியில் பயணிக்கின்றன, அதேசமயம் 2012 ஆம் ஆண்டில், அம்பாந்தோட்டாவில் இருந்து 34 கப்பல்கள் மட்டுமே அந்த வழியில் சென்றன, இறுதியில் அந்த துறைமுகம் இப்போது சீனாவிற்கு சொந்தமாகிவிட்டது.”

மஹிந்த ராஜபக்‌ஷ சீன ஆதரவு அதிபர் என்று நம்பப்படுகிறார்கடன் சுமையில் தள்ளாடும் இலங்கை

2015 ல், ராஜபக்ஷ இலங்கையின் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டாலும், பதவியேற்ற புதிய அரசு, வாங்கிய கடனை செலுத்துவதற்கு திணறுகிறது. கடனை திருப்ப செலுத்த முடியாமல் போனதால், பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இலங்கை, அம்பந்தோட்டா துறைமுகத்தையும், 15,000 ஏக்கர் நிலத்தையும் சீனாவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சீனாவுக்கு இலங்கை ஒப்படைக்கப்பட்ட பகுதி, இந்தியாவிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ளது என்பது, இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை மீண்டும் சீனாவில் இருந்து கடன் வாங்கப் போகிறது. 2018ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த கடன் இலங்கைக்கு கிடைக்கும். 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த கடனை இலங்கை திருப்பிச் செலுத்தத் தொடங்கவேண்டும்.

பிசினஸ் டைம்ஸ் பத்திரிகையின் கருத்துப்படி 2019 முதல் 2022 வரையிலான ஒவ்வொரு ஆண்டும் நான்கு பில்லியன் டாலர்கள் அளவிலான வெளிநாட்டுக் கடனை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி, இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் 2017இல் 55 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ளது.

நிக்கேய் ஆசிய மதிப்பீட்டு அறிக்கையின்படி, 1.25 பில்லியன் டாலர்களை சீனாவிடம் இருந்து புதிய கடனாக பெறும் இலங்கை, தன்னை, அதனிடம் ஒப்படைக்கப்போகிறது. தெற்காசிய நாடுகளில் மிகப்பெரிய கடன் வழங்குநராக ஏற்கனவே சீனா உருவாகிவிட்டது.

அம்பந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்தும் பணி முதலில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாலும், அதை இந்தியா மறுத்துவிட்டதாக இலங்கை கூறுகிறது.அம்பந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்தும் பணி முதலில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாலும், அதை இந்தியா மறுத்துவிட்டதாக இலங்கை கூறுகிறது.ராஜபக்‌ஷவுக்கு பிறகும் கடன் வாங்குவதை தொடரும் இலங்கை

இலங்கையின் மத்திய வங்கி, சீனாவின் பீப்பிள்ஸ் வங்கியிடம் இருந்து 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாண்டா பத்திரங்களை (சீனாவின் மைய வங்கி இதுபோன்ற பத்திரங்களை நேரடியாக வெளியிடுவதில்லை, ஆனால் கண்காணிக்கும் பணியை செய்கிறது) வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று ஸ்ரீலங்கன் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

இதைத் தவிர, ஏற்கனவே சீனாவின் வர்த்தக வங்கிகளிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இலங்கை கடன் பெற்றுள்ளது. மேற்கத்திய சர்வதேச கடன் வழங்குநர்களைவிட, சீனாவிடம் இருந்து கடன் பெறுவது சுலபமாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது. நிக்கேய் ஆசிய ஆய்வின்படி, இந்த வார இறுதியில் 50 கோடி டாலர் தொகையை முதல் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச அரசு பத்திரங்கள் (International Sovereign Bond) மற்றும் பிற கடன் வழங்குநர்களிடம் இருந்து பெறும் கடன்களைவிட, இலங்கை சீனாவிடம் இருந்து கடன்களைப் பெறும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. ஒருபுறம் இப்படியென்றால், மறுபுறத்திலோ, இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு 8.5 பில்லியன் டாலர்கள் மட்டுமே இருப்பதால், அந்நாடு எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு கவனமாக யோசிக்கவேண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உண்மையில் இலங்கையிடம் இருக்கும் அந்நிய செலாவணி இருப்பில் தற்போது எஞ்சியிருக்கும் பணம், அதன் முக்கியத் தேவைகளுக்கே (இறக்குமதிக்கு செலுத்துவதற்கும், பிற தேவைகளுக்கும்) போதுமானதாக இல்லை.

ரணில் மற்றும் ஷி ஜின்பிங்

முதல் கடனை திருப்பச் செலுத்த வேண்டும்

இலங்கையின் 17 பில்லியன் வெளிநாட்டுக் கடன்களை, அது 2019 முதல் 2023க்கு இடையிலான காலகட்டத்தில் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, சீனா, ஜப்பான், இந்தியா உட்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்த கடன்கள் பெறப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

அமெரிக்க டாலர் அடிப்படையில் கடனை திருப்பிச் செலுத்தும் பாரம்பர்யமான வழியை இலங்கை தேர்ந்தெடுக்கவில்லை என்று அந்நாட்டு மத்திய வங்கியின் தலைவர் இந்திரஜீத் குமாரஸ்வாமி கூறுகிறார். இது வெளிநாட்டு கடன்களை நிர்வகிக்கும் சிறந்த வழிமுறை என்று இந்திரஜீத் கூறுகிறார்.

நிக்கேய் ஆசிய மதிப்பீட்டில் பேசிய குமாஸ்வாமி, “அடுத்த ஆண்டில், கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் அளவிலான கடனை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும். எங்கள் கடன் அளவு அதிகமாக இருந்தாலும், நாங்கள் அதை சரியாக நிர்வகிப்போம்” என்று கூறினார்.

87 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்ட இலங்கையின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 சதவீதமாகும். இலங்கையின் கடன், அதன் ஜி.டி.பியில் 77% என்று குமாரஸ்வாமி கூறுகிறார்.

பில்லியன் டாலர் கடன்

இது, இலங்கையின் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், மலேசியா மற்றும் தாய்லாந்தின் அளவை விட மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தகக்து. மொத்தமாக 55 பில்லியன் டாலர் அளவில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை கடன் பெற்றுள்ளது. அதில், சீனா 10 சதவிகிதம், ஜப்பான் 12 சதவிகிதம், ஆசிய மேம்பாட்டு வங்கி 14 சதவிகிதம், உலக வங்கி 11 சதவிகிதம் என்ற அளவில் இலங்கைக்கு கடன் கொடுத்திருக்கின்றன.

அதிகரித்துவரும் இலங்கையின் கடன் சுமையானது, அதன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. சீனா வைத்திருக்கும் கடன் பொறியில் இலங்கை சிக்கிக் கொண்டிருப்பதாக பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் கடனை செலுத்த முடியாமல், அதற்கு பதிலாக அம்பாந்தோட்டா துறைமுகத்தை நூறு ஆண்டுகள் குத்தகைக்கு இலங்கை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது இந்த அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

சீனாவிற்கு இலங்கையை முற்றிலுமாக திறந்து விட்டதற்கு மஹிந்த ராஜபக்ஷவே காரணமாக கருதப்படுகிறார். 2005 முதல் 2015 வரை இலங்கை அதிபராக பதவியில் அவர் இருந்த காலகட்டத்தில்தான், இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகம், புதிய விமான நிலையம், நிலக்கரி மின்நிலையம் மற்றும் சாலை கட்டுமானத்திற்கு என சீனா 4.8 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. 2016ஆம் ஆண்டில் இந்த கடன் 6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துவிட்டது.

அம்பந்தோட்டா துறைமுகம் தொடர்பாக, சீனாவிற்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டனஅம்பந்தோட்டா துறைமுகம் தொடர்பாக, சீனாவிற்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டனவெளிநாட்டு முதலீடு சொற்பம்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நான்கு ஆண்டுகால கூட்டணி அரசின் ஆட்சியிலும் இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீடு இல்லை என்றே சொல்லிவிடும் அளவிலேயே இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் டாலர்கள் மட்டுமே இலங்கையில் முதலீடு செய்யப்பட்டது.

இலங்கையில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை சர்வதேச அளவில் எடுத்துச்சொல்ல அரசு தவறிவிட்டது. தொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை 111வது இடத்தில் உள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, கடன் வழங்குவதை உத்திரீதியிலான ஆயுதமாக சீனா பயன்படுத்துகிறது. அந்த அறிக்கையின் படி, தேவைப்படும் நாடுகளுக்கு கடன் கொடுத்து, தனது ஆதிக்கத்தை சீனா செலுத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

“சீன அதிபர் ஷி ஜின்பிங், ‘ஒரு பெல்ட் ஒன் ரோட்’ என்ற லட்சியத் திட்டத்தின் மூலம் அண்டை நாடுகளை ஈர்க்கிறார்” என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ரணில் மற்றும் சுஸ்மா சுவராஜ்இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான தொடர்பு

சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு எப்போதும் சுமூகமாகவே தொடர்ந்து வந்துள்ளது. சீனப் புரட்சிக்கு பின்னர், மாவோவின் கம்யூனிச அரசாங்கத்தை அங்கீகரித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று.

இலங்கையில் ராஜபக்ஷ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடுமையான சண்டை நடைபெற்ற நேரத்தில், சீனா இலங்கையின் நெருங்கிய நாடாக உருவெடுத்தது.

இந்த போரில், மனித உரிமைகள் மீறல் தொடர்பாக, சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டபோது, சீனாவின் அணுகுமுறை மாறுபட்டதாக இருந்தது.

இலங்கைக்கு அதிக அளவிலான நிதி உதவிகளை சீனா வழங்கியது. இலங்கை மீதான ஐ.நா-வின் பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தை குறைக்கும் விதமாக, ராணுவ ரீதியாகவும், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளை சீனா தொடர்ந்து வழங்கியது.

2009இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபிறகு, ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர், இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ராஜபக்ஷவின் மூன்று சகோதரர்கள், இலங்கை அமைச்சரவையின் மீது அதீதமான செல்வாக்கை கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், சீன அரசுக்கும், ராஜபக்ஷவுக்கும் இடையிலான உறவு மேலும் நெருக்கமானது.

முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் ஷிவ் ஷங்கர் மேனன், நியூ யார்க் டைம்ஸிடம் கூறியதை குறிப்பிட்டுச் சொல்லலாம்: “அம்பாந்தோட்டாவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, இலங்கை முதலில் இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களையே அணுகியது. ஆனால், அந்த திட்டம் பயனற்றது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் எந்தவிதமான லாபத்தையும் கொடுக்காது என்பதால் அதை இந்தியா மறுத்துவிட்டது. இறுதியில் அந்த திட்டம் நிறைவடைந்த பிறகு, இந்தியாவின் கூற்று உண்மை என்பது நிரூபணமாகிவிட்டது.”

https://www.bbc.com/tamil/sri-lanka-45414573


விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து – அரசியல் அலசல்

3 weeks ago

புருஜோத்தமன் தங்கமயில்

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிப் பேசியிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு, அவர் தலைமையேற்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலொன்றை வழங்கும் கட்டத்துக்கு, அவர் வந்திருக்கின்றார்.

முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும், தன் முன்னால் நான்கு தெரிவுகள் இருக்கின்றனவென, விக்னேஸ்வரன் கூறுகிறார். முதலாவது, ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது; இரண்டாவது, கட்சியொன்றுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது; மூன்றாவது, புதிய கட்சியை ஆரம்பிப்பது; நான்காவது, கட்சி அரசியலைக் கைவிட்டு, தமிழ் மக்கள் பேரவையைப் பேரியக்கமாக மாற்றுவது.

இதில், முதலாவது தெரிவை, கூட்டமைப்பிலுள்ள சிலர் விரும்பினாலும், கூட்டமைப்புக்கு எதிரான அணிகளோ, விக்னேஸ்வரனோ விரும்பவில்லை. ஆக, அந்தத் தெரிவு ஒப்புக்குச் சொல்லப்பட்ட ஒன்று.
அதுபோல, நான்காவது தெரிவையும் ஒப்புக்குச் சொல்லப்பட்ட ஒன்றாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், விக்னேஸ்வரனின் ஐந்து வருட அரசியலில், அவர் என்றைக்குமே தன்னையொரு களச் செயற்பாட்டாளராகவோ, சமூகத்துக்குள் மக்களோடு மக்களாகச் சமாந்தரமாகப் பயணித்து, விடயங்களைக் கையாளக் கூடியவராகவோ காட்டிக் கொள்ளவில்லை.அவரின் செயற்பாட்டு அரசியல் என்பது, அவர் அணியும் ஆடைகள் மாதிரியானவை; மடிப்புக் கலையாத தன்மை கொண்டவை; வேர்வைகள் கூட ஒட்டாதவை.

அப்படிப்பட்ட ஒருவரால், அதிக உழைப்பைக் கோரும் செயற்பாட்டு அரசியலை, அதாவது, கட்சி – வாக்கு அரசியலுக்கு அப்பாலான மக்கள் அரசியலைச் செய்வதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை.
ஏனெனில், பேரவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், பேரவைக்குள் அவரின் செயற்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதை நோக்கினாலே புரிந்து கொள்ள முடியும்.

பேரவையின் முக்கிய செயற்பாடுகளாக எழுக தமிழையும் அரசியல் தீர்வுக்கான யோசனைகள் முன்வைப்பையும் கொள்ள முடியும்.

ஆனால், ‘எழுக தமிழ்’ போன்ற மக்களை ஒருங்கிணைக்கும் போராட்டச் செயற்பாட்டுக்கான முனைப்பை வெளியிடும் கட்டத்தில், விக்னேஸ்வரன் ஒரு முகமாக மாத்திரமே இருந்தார். அவர், ஒரு செயற்பாட்டாளராக இருக்கவில்லை.

மற்றவர்கள் ஓடி ஆடிக் கட்டிய மேடையில், பிரதம இடத்தைப் பிடிப்பது மாத்திரமே அவரின் பாத்திரமாக இருந்து வந்திருக்கின்றது. கடந்த ஐந்து வருடப் பயணத்தில், விக்னேஸ்வரன் முதலமைச்சராகியதும், பேரவையின் முகமாகியதும் அப்படித்தான்.

இனி வருங்காலங்களில், இரண்டாவது,  மூன்றாவது தெரிவுகளின் இணைப்புப் பாதையிலேயே விக்னேஸ்வரன் பயணிக்க வேண்டியிருக்கும். ஏனெனில், மாகாண சபைத் தேர்தல், ஜனவரி மாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதற்குள், புதிய கட்சியொன்றை ஆரம்பித்து, தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்து, அதன் பின்னர் கூட்டணியொன்றை ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆரம்பித்தல் என்பது சற்றுச் சிரமமானது.

அப்படியான நிலையில், ஏற்கெனவே இருக்கும் கட்சிகளுடன், பேரவையையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, பேரவையின் வழி, தன்னைத் தலைவராக முன்னிறுத்தி, தேர்தல்களைச் சந்திக்கலாம் என்று விக்னேஸ்வரன் நினைக்கலாம்.

ஆனால், பேரவை, வாக்கு அரசியலில் ஈடுபடாது என்கிற உறுதிமொழியை வழங்கிய பின்னரே, அதன் இணைத் தலைவர் பதவியை ஏற்றதாக, விக்னேஸ்வரன் பல தடவைகள் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், தேர்தல் கூட்டணியொன்றுக்குள் பேரவையை வெளிப்படையாகக் கொண்டு வருவதில் சிக்கலுண்டு. அதனை, இலகுவாகக் கேள்விக்குள்ளாக்கலாம். அத்தோடு, பேரவையிலுள்ள புத்திஜீவிகளும் வைத்தியர்களும், பேரவை மீது ஒட்டுமொத்தமாகத் தேர்தல் அரசியல் அடையாளம் விழுவதையும் விரும்பவில்லை.

அவர்கள், பேரவை ஒருங்கிணைக்கும் அரசியல் கூட்டொன்றுக்கு, விக்னேஸ்வரன் தலைமையேற்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அப்படியான கட்டத்தில், தவிர்க்க முடியாமல் கட்சியொன்றின் அடையாளத்தை விக்னேஸ்வரன் பெற வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

இன்னொரு கட்டத்தில், கூட்டமைப்போடு முரண்பட்டு, விக்னேஸ்வரனின் பின்னால் தற்போது நிற்கின்ற, பொ. ஐங்கரநேசன், க. அருந்தவபாலன், அனந்தி சசிதரன் போன்றவர்களுக்கு, புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவை உண்டு. அதுதான், தம்முடைய அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

ஏனெனில், பேரவையை முன்னிறுத்திக் கொண்டு, விக்னேஸ்வரனின் பின்னால் சென்றாலும், விக்னேஸ்வரனின் காலத்துக்குப் பின்னர், தங்களுடைய அடையாளம் எதுவாக இருக்கும் என்கிற குழப்பம் அவர்களுக்கு உண்டு.

அதன்போக்கில், புதிய கட்சியொன்றை எப்படியாவது ஆரம்பித்து, அதில் தங்களுக்குரிய பதவிகளை அடையாளங்களாகக் கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. அதன்போக்கில், புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளை, ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் மேற்கொண்டிருப்பதாகக் தெரிகின்றது.

ஆனால், மாகாண சபைத் தேர்தலுக்குள் புதிய கட்சியைப் பதிவு செய்து, சின்னத்தைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே? அதனை, விக்னேஸ்வரனும் வெளிப்படுத்துகிறார்.

விரைவாகத் தேர்தலொன்று வரும் நிலையில், பேரவைக்குள் இருக்கிற கட்சிகளில் ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னம்) ஆகியவற்றின் சின்னங்களில் ஒன்றில் பயணிக்க வேண்டிய கட்டத்தை ஏற்படுத்தலாம். இது, உண்மையிலேயே விக்னேஸ்வரனுக்கும், அவர் தரப்புக்கும் உவப்பான ஒன்றல்ல.

சின்னத்தின் தேவை கருதி, தமிழர் விடுதலைக் கூட்டணியை (உதய சூரியன்) உட்கொண்டுவர விக்னேஸ்வரன் முயலக்கூடும். ஆனால், வீ.ஆனந்தசங்கரியோடு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்து பணியாற்றுவாரா என்கிற விடயம் மேலேழுகின்றது.

சுயேட்சைக் குழுவாகச் சின்னமொன்றைப் பெற்றுக் கொண்டு, தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடுவார்களே அன்றி, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு, விக்னேஸ்வரனின் பின்னாலுள்ளவர்களும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் விரும்பமாட்டார்கள். அப்படியான கட்டத்தில், புதிய சிக்கலொன்றையும் பேரவை ஒருங்கிணைக்கப் போகும் தேர்தல் கூட்டணி சந்திக்கப்போகின்றது.

பேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், கூட்டமைப்பின் தலைமை தோல்வியடைந்து விட்டதாகத் தெரிவித்த கருத்தும் நோக்கப்பட வேண்டியது. ஏனெனில், கூட்டமைப்போடு முரண்பட, விக்னேஸ்வரன் ஆரம்பித்த காலத்திலிருந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரையிலும், தமிழரசுக் கட்சி, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களை நேரடியாக விமர்சித்து வந்தாலும், இரா.சம்பந்தன் மீது நேரடியாக விமர்சனங்களை முன்வைத்தது கிடையாது.

ஆனால், கூட்டமைப்பின் தலைமை தோல்வியடைந்து விட்டதான தொனியை, விக்னேஸ்வரன் வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பது என்பது, சம்பந்தனுக்கு எதிரான தலைமைத்துவத்தை, தான் எடுத்துக்கொள்ளத் தயார் என்று விடுத்த அறைகூவலாகும்.

சில நாட்களுக்கு முன்னர் வரையிலும் கூட, சம்பந்தனோடு பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்வது தொடர்பில், விக்னேஸ்வரன் அதிக ஆர்வம் காட்டினார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி சட்டத்தரணியொருவர், அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

ஆனால், தமிழரசுக் கட்சியினரின் பலமான எதிர்ப்பை அடுத்து, அந்தச் சந்திப்பைச் சம்பந்தன் தவிர்த்தார். அத்தோடு, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தனிப்பட்ட ரீதியில், “விக்னேஸ்வரனைக் கூட்டமைப்புக்குள் இனி வைத்துக் கொள்ளப் போவதில்லை” என்றும் சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

இதுவும் கூட, விக்னேஸ்வரன் – சம்பந்தன் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்தவர்களை, பின்வாங்க வைத்திருக்கின்றது.

விக்னேஸ்வரன் புதிய அணியொன்றுக்குத் தலைமை ஏற்பதை, சம்பந்தன் துளியும் விரும்பவில்லை. எப்படியாவது, விக்னேஸ்வரனைத் தேர்தல் அரசியலுக்கு அப்பால், கௌரவமான ஓய்வுநிலையில் வைத்துவிட வேண்டும் என்றே அவர் விரும்பினார்.

அது, தனக்கும் கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்றும் நினைத்தார். ஆனால், அந்த முயற்சிகள் எல்லாமும் பொய்த்துப்போன புள்ளியில், விக்னேஸ்வரனை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டம் ஏற்பட்டிருக்கின்றது.

அதன்போக்கில்தான், விக்னேஸ்வரனுக்கு உரிய நேரத்தில் பதில் வழங்கப்படும் என்ற காட்டமான செய்தியை, ஊடகங்களின் வழி சம்பந்தன் வெளியிட்டிருக்கின்றார்.

கூட்டமைப்பைத் தோல்வியடைந்த தலைமையாக விளிக்கும் விக்னேஸ்வரன், தேர்தல் வழி, இன்னோர் அணிக்குத் தலைமையாக நினைக்கின்றார். ஏனெனில், அதுதான், இலகுவானது; அதிக உழைப்பைக் கோராதது.

தேர்தல் அரசியலுக்கு அப்பால் நின்று, மக்கள் பேரியக்கங்களைத் தோற்றுவிக்கும் ஆளுமையை, 2009க்குப் பின்னரான கடந்த பத்து வருடத்தில், கூட்டமைப்போ, கூட்டமைப்புக்கு எதிரான அணியோ, எதுவாக இருந்தாலும் வெளிப்படுத்தவில்லை.

அப்படியான கட்டத்தில், தேர்தல் இழுபறி – குத்துவெட்டு அரசியலைத்தான் தொடர்ந்தும் பேச வேண்டியிருக்கும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்கியின்-தெரிவு-பேரவை-உரையை-முன்வைத்து


கொழும்பை உலுக்குமா ராஜபக்ஷாக்களின் “ஜனபலய” ?

(வீ. தனபாலசிங்கம்)

3 weeks ago
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியும் அவர்களின் ஆதரவுடனான புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து நாளை புதன்கிழமை நடத்தவிருக்கின்ற ” கொழும்புக்கு மக்கள் சக்தி” என்ற பேரணி பற்றியே தலைநகரில் எங்கும் பேச்சு. நாளைக்கு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரமுடியுமா? பாடசாலைகளுக்கு பிள்ளைகள் போகமுடியுமா? அலுவல்களைச் செய்துகொள்ள தலைநகருக்கு நாளையதினம் வரமுடியுமா? என்று எங்கும் கேள்வி.

கூட்டு எதிரணியினரும் பொதுஜன பெரமுனவும் இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளை ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலமாக செய்துவந்திருக்கிறார்கள். நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து மக்களை அணிதிரட்டி அழைத்துவந்து அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் சக்தியை வெளிக்காட்டுவதே தங்களது இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள், தேசிய சொத்துக்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பனை செய்தல்  மற்றும் பொருளாதார நெருக்கடி உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாவிட்டால் ஆட்சியதிகாரத்தில் இருந்து இறங்கவேண்டுமென்று கோருவதற்காக மக்கள் சக்தியை அணிதிரட்டுவதாகக் கூறியிருக்கும் கூட்டு எதிரணித் தலைவர்கள் அரசாங்கத்தை வீழ்த்தும்வரை தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தப்போவதாகவும் சூளுரைத்திருக்கிறார்கள்.

தலைநகர் நோக்கி  வருகின்ற மக்கள் கூடுவதற்காக ஹைட் பார்க், கெம்பல் பார்க் மற்றும் சாலிகா மைதானம் உட்பட ஐந்து இடங்களை தெரிவுசெய்திருப்பதாகக் கூறியிருக்கும் அவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து படையெடுக்கும் மக்கள் எந்த மைதானத்தில் கூடுவார்கள் என்பதைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தவில்லை.பேரணி வெற்றிகரமானதாக அமைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டே அதை அவர்கள் வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் தலைவராக செயற்படுகின்ற மக்கள்  ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன ‘ ஜனபலய கொழும்பட்ட ‘ என்று சிங்களத்தில் அழைக்கப்படுகின்ற நாளைய பேரணியில் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியிருக்கிறார்.பேரணியைச் சீர்குலைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்ற போதிலும் தங்களது ஏற்பாடுகள் முன்னேற்றகரமான முறையில் சென்றுகொண்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கூட்டு எதிரணியைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுமார் பத்து இலட்சம் மக்கள் நாளை கொழும்பில் திரளுவார்கள் என்று கூறியிருப்பதையும் செய்திகளில் படிக்க முடிந்தது. பாதுகாப்பு படையினரையும் பொலிசாரையும் பெருமளவில் குவித்து அசம்பாவிதம் எதுவும் நடவாதிருப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்று வருடங்களுக்கும் கூடுதலான காலகட்டத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் சக்திகள் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்கெனவே தலைநகரில் நடத்திக்காட்டியிருக்கின்றன. நாளைய பேரணியுடன் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் என்று கூட்டு எதிரணியின் பல தலைவர்கள் வீராப்பாகப் பேசிக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இரு வருடங்களுக்கு முன்னர் அதாவது 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முழுமையாக ஒரு வருடம் கூட கடந்துசென்றிராத நிலையில் கூட்டு எதிரணியினர் மாபெரும் பேரணியொன்றை தலைநகரில் நடத்தியிருந்தனர். முன்னைய ஆட்சியில் ராஜபக்சாக்களும் அவர்களின் பரிவாரங்களும் முறைகேடாகச் சேர்த்த நிதிவளங்களைப் பயன்படுத்தியே மக்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டி பேரணிகளை அவர்களால் ஏற்பாடு செய்யக்கூடியதாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

முன்னைய பேரணிகளின்போதும் காலிமுகத்திடலில் நடத்திய மேதினப் பேரணியின்போதும் கூட்டு எதிரணியின் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கம் சில வாரங்களில், சில மாதங்களில் வீழ்ச்சிகண்டுவிடுமென்று பேசினார்கள்.ஆனால், அரசாங்கம் வீழ்ச்சியடையவில்லை. அதன் பிரதான  பங்காளிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்து வந்த போதிலும் அரசாங்கம் ஏதோ தொடர்ந்து பதவியில் இருந்துவருகிறது.

நாளைய பேரணியுடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி தொடங்கிவிடுமென்று இப்போது கூட்டு எதிரணியினதும் பொதுஜன பெரமுனவினதும் அரசியல்வாதிகள் உரக்கப்பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துகொண்டே வருகிறது என்பது உண்மையே.அரசாங்கத் தலைவர்கள் 2015 தேசியத் தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் பலவற்றை இன்னமும் நிறைவேற்றவில்லை. மறுபுறத்தில் , பொருளாதார நெருக்கடியினால் சனத்தொகையில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவு அன்றாடம் உயர்ந்துகொண்டேபோகிறது. தங்களது நல்லாட்சியின் கீழ் ஜனநாயக சுதந்திரங்களை மக்கள் பெருமளவுக்கு அனுபவிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று அரசாங்கத் தலைவர்கள் பெருமைப்பட்டுக் கூறுகின்றபோதிலும் , பெருவாரியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் அரசாங்கம் கண்டுவருகின்ற தோல்விகள் காரணமாக மக்களின் வெறுப்பு அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.தலைவர்கள் கூறுகின்ற ஜனநாயக சுதந்திரங்களை மக்கள் பெரிதாக நோக்கமுடியாத அளவுக்கு ஏனைய பிரச்சினைகள் பூதாகாரமானவையாக இருக்கின்றன.

தலைநகரில் அன்றாடம் வீதி ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.அடிக்கடி வேலைநிறுத்தங்கள் இடம்பெறுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடையே ஒருமித்த அணுகுமுறைகள் இல்லையென்பதால் இந்த நெருக்கடிகள் தோற்றுவிக்கின்ற சவால்களைச் சமாளிக்க இயலாமல் இருக்கிறது.

ஆனால், அரசாங்கத்தைக் குறைகூறிக்கொண்டு அடிக்கடி ஒவ்வொரு போராட்டத்தை அறிவிக்கின்ற கூட்டு எதிரணியினர் நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு உரிய மாற்றுத் தீர்வுயோசனைகளை முன்வைப்பதில்லை. மேலும் அவர்கள் இனவாத உணர்வுகளைக் கிளறுகின்ற அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்கிறார்கள்.வெறுமனே ஆட்சிமாற்றம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தரப்போவதில்லை.தலையணையை மாற்றுவதன் மூலம் தலைவலியை மாற்றிவிட முடியுமா?

மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் திட்டமிட்டே தாமதப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டுகின்ற எதிரணிக் கட்சிகள் அண்மையில் புதிய தேர்தல் முறைக்கான தொகுதிகளின் எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கைக்கு எதிராகவே பாராளுமனறத்தில் வாக்களித்து அதை நிராகரித்தன.ஒரு புறத்தில் அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு அஞ்சுகிறது என்று குற்றஞ்சாட்டுகின்ற இந்தக் கட்சிகள் கடைப்பிடிக்கவேண்டிய தேர்தல் முறை குறித்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர ஒத்துழைக்கவும் மறுக்கின்றன.

40769081_502549610171037_335699936973055

கடந்த மூன்று வருட காலத்திலும் கூட்டு எதிரணியினரால் முனனெடுக்கப்பட்ட மக்கள் அணிதிரட்டல் போராட்டங்களும் பேரணிகளும் நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கும் நோக்கத்தைப் பிரதானமாகக் கொண்டிராமல் ஆட்சி மாற்றமொன்றை — அதாவது ராஜபக்சாக்களை மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டவையாகவே இருந்துவருகின்றன.சுமார் பத்து வருடங்களாக ஆட்சியதிகாரத்தில் இருந்த ராஜபக்சாக்கள் மீண்டும் வந்து என்ன அதிசயத்தை நிகழ்த்திவிடப் போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.ஆனால், அரசாங்கத் தலைவர்களின்  தடுமாற்றமான அணுகுமுறைகள் காரணமாக உறுதியான தலைமைத்துவம் பற்றிய  மாயை ஒன்றை ராஜபக்சாக்களைச் சுற்றி அவர்களின் விசுவாசிகளினால் கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கிறது என்பதை அவதானிக்கத் தவறக்கூடாது.

இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்ட எவரும் எதிர்பார்த்திராத பெருவெற்றி காரணமாக ராஜபக்சாக்கள் அடுத்துவரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் தங்களால் சுலபமாக வெற்றிபெற்றுவிட முடியும் என்று  உறுதியாக நம்புகிறார்கள். நாளைய தினம் நடைபெறவிருக்கும் “கொழும்புக்கான மக்கள் சக்தி ” பேரணி அடுத்த வருட இறுதிக்கு முன்னதாக நடத்தப்படவேண்டியதாக இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை வெளிக்காட்டுவதற்கு ராஜபக்சாக்கள் முன்னெடுக்கும் ஒரு நடவடிக்கையே தவிர மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டுமென்ற பொது அக்கறையின்விளைவானதல்ல.

http://www.virakesari.lk/article/39734


வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலயமும் தொல்பொருட் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பும்

தமிழர்கள் தனித்துவமான கலை, கலாசார, பண்பாடு பாரம்பரியங்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எமது தேசத்தில் காணப்படும் பல்வேறு சான்றுகள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன. யுத்தம் மற்றும் அதன் தாக்கத்தில் இருந்தும் மீண்டும் தமது வாழ்வியலை மீட்டெடுக்க முனையும் தமிழ் சமூகம் தனது கலாசார பாரம்பரியங்களில் இருந்து என்றும் விலகாது அதனை போற்றிப் பாதுகாத்து வருகின்ற நிலையில், தென்னிலங்கை பேரினவாத சக்திகள் தமது அதிகார செயன்முறைகளின் ஊடாக தமிழர்களது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையினை சிதைக்க முனைவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.

அந்தவகையில் வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுங்குநாறி மலைப் பகுதியில் உள்ள ஆதி சிவனை ஏறத்தாழ 200 வருடங்களுக்கும் மேலாக இப் பிரதேச மக்கள் வழிபட்டு வந்தனர். யுத்தகாலத்தில் வழிபாடுகள் நலிவடைந்திருந்தாலும் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மீண்டும் வழிபாடுகள் சிறப்பாக இடம் பெற்றும் வந்தன. தற்போது வெடுங்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்திற்கு சென்று சுதந்திரமாக வழிபடுவதற்கும், கட்டிட நிர்மாணங்களை மேற்கொள்வதற்கும் தொல்பொருட் திணைக்களம் தடை வித்துள்ளது.

images-1.jpg

வவுனியா வடக்கு, ஒலுமடு பிரதேசத்தில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வெடுங்குநாறிமலை என்பது நாகர் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய ஒரு இடமாகவும், அதில் தமிழ் பிராமிய எழுத்துக்கள் காணப்படுவதனையும், மலையின் அடிவாரத்தில் பிள்ளையார் மற்றும் முருகன் விக்கிரகங்களும், மேலே செல்லச்செல்ல வைரவர், நாகதம்பிரான் சிலைகள் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதையும், மலையின் உச்சியில் இந்துக்களின் முழுமுதல் கடவுளான ஆதி சிவனின் இலிங்கவடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. அத்துடன் இந்து ஆலயங்களுக்கு அருகில் கேணி அல்லது குளம் அமைந்திருப்பது வழமை. இதனை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் பாறை படைகளை குடைந்து அழகிய சிறிய கேணியும் அமைக்கப்பட்டு நாகர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கள் இங்கு சிவவழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதை தமிழர் தொன்மை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

யுத்த காலத்திலும், அதன் பின்னரான காலத்திலும் அப்பகுதி மக்களால் இவ் ஆலயப்பகுதி தெய்வீக பிரதேசமாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.இந் நிலையில் குறித்த பகுதியில் தொல்பொருட்கள் இருப்பதாகக் கூறியே தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இது உண்மைக்குப் புறம்பானது என அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் அரசாங்கம் தனது ஆதிக்கத்தை மறைமுகமாகச் செலுத்தி இங்கு புத்தர் கோயில் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்கின்றனர் பிரதேச மக்கள்.

DSC01438.jpg

வவுனியா வடக்கின் எல்லைப் பகுதியில் இனப்பரம்பலை குலைக்கும் வகையில் சிங்கள குடியேற்றங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றது. நெடுங்கேணியின் கிழக்குப் பகுதியை மகாவலித் திட்டத்தின் எல் வலயம் என அடையாளப்படுத்தி சிங்கள குடியேற்றங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இந்தப் பின்னணியில் தொல்பொருள் திணைக்களத்தையும், வனவளத்திணைக்களத்தையும் பயன்படுத்தி புதிய குடியேற்றங்களுக்கு அண்மையில் உள்ள வடக்கின் உயரமான மலைகளில் ஒன்றாகிய வெடுங்குநாறி மலையில் புத்தர் சிலை அமைப்பதை நோக்கமாக கொண்டே காய் நகர்த்தல் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். இதனை வலுப்படுத்தும் வகையில் இப்பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந் நிலையில் ஆடி அமாவாசை உட்பட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இப் பிரதேசத்தில் உள்ளவர்களால் இங்குள்ள ஆதி விக்கிரகங்களுக்கு பூஜை வழிபாடுகள் செய்து வருவதுடன் சுமார் 300 அடி உயரத்தில் உள்ள மலைக்குன்றில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஆதி சிவனுக்கும் உமைஅம்மைக்கும் பயபக்தியுடனும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் சென்று வழிபாடுகளை 5 தலைமுறைகள் கடந்தும் பல்லாண்டு காலமாக செய்துவருகின்றனர்.

தமிழர்களது மரபுசார்ந்த பல இடங்களையும் தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் உட்படுத்தி அதனை பாதுகாப்பதாக தெரிவித்து பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டு பௌத்த வழிபாட்டு இடங்களாக மாற்றியுள்ளதனை கிழக்கில் கன்னியா வென்னீரூறிலும், தமிழர் வழிபாட்டு இடமான கதிர்காமத்திலும், வடக்கில் கந்தரோடையிலும் நாம் கண்டுள்ளோம்.

அவ்வாறே பரம்பரை பரம்பரையாக இந்துக்களால் வழிபடப்பட்டு வருகின்ற வடக்கில் உள்ள வெடுங்குநாறி மலைக்கும் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதில் வடபுலத்து தமிழர்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவாகவே மக்கள் வெடுங்குநாறி மலைக்காக வீதியில் இறங்கி போராடியுள்ளார்கள். தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அதாவது வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலய தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளை தகர்த்தெறிய வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. தமிழர் அடையாளமான வெடுங்குநாறி மலை மற்றும் ஆதி சிவன் ஆலயத்தை மீட்டு பாதுகாப்பதன் மூலமே எதிர்காலத்தில் தமிழரின் வரலாற்று மரபுகளுடனும், கலாசார பண்பாடுகளுடனும் தொடர்புடைய இடங்களை பாதுகாத்து தமிழர் இருப்பை நிலைபெற செய்ய முடியும் என்பதையே கடந்த கால படிப்பினைகளும் தொல்பொருட் திணைக்களத்தின் நடவடிக்கைகளும் வெளிப்படுத்தியிருக்கின்றது.

எனவே தமிழ் மக்கள் தமது வரலாறு, காலாசார பண்பாடுகளுக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் காலம் ஏற்படுத்தியிருக்கின்றது. இதனை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டியது அவசியமானதே.

http://www.newsuthanthiran.com/2018/09/03/வெடுங்குநாறி-ஆதி-சிவன்-ஆ/


நாடகம் ஆடுவதாக நாடகம் ஆடுதல்

காரை துர்க்கா

யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. மாலைத் திருவிழா முடிந்தவுடன், ஆலயச் சுற்று வீதியில் பரப்பப்பட்டுள்ள மணல் மண்ணில், கச்சான், கடலை கொறித்தவாறு, நல்ல உள்ளங்களுடன் ‘நாலு’ கதை கதைப்பது, மனதுக்கு ஒருவித புதுத் தென்பைத் தரும்.

தினசரி, வீட்டுக்கும் வேலைக்கும் இடையே, ஓயாது ஓடி ஓடி உழைக்கும் உழைப்பாளிகளுக்கும் ‘படிப்பு படிப்பு’ என ஒரே பரபரப்புக்குள் வாழும் இளவயதினருக்கும், ஓர் இடைக்கால நிவாரணம் இது, என்றால் மிகையல்ல.

“என்னதான் வசதிகள், வாய்ப்புகள் கண்முன்னே பல்கிப் பெருகி இருந்தாலும், பதுங்குகுழியின் பக்கத் துணையோடும், குப்பி விளக்கின் ஒளியோடும், குண்டு வீச்சுகளுக்கு நடுவே வாழ்ந்த வாழ்வு, இப்போது உள்ள வாழ்க்கையிலும் அலாதியானது” என, தனது மனப்பாரத்தைக் கொட்டிக்கொண்டிருந்தார் ஒருவர்.

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ எனக் கூறுவது போல, தமிழ் மக்களது ஒட்டுமொத்த வாழ்வும் இவ்வாறாகவே கழிகின்றது. கொடும் போரின் வெடி ஓசை ஓய்ந்தாலும், ஓயாத அதிர்வுகள், சுற்றிச்சுற்றி வலம் வருகின்றன. போர் முடிந்தும், தமிழ் மக்கள் போருக்குள் வாழ்கின்றனர்.

“வடக்கு முதலமைச்சர் நாடகமாடுகின்றார்; அந்த நாடகத்துக்குப் பின்னால், கஜேந்திரகுமார் செல்கின்றார்; அதற்குள் சம்பந்தன், மாவை, சுமந்திரன் சித்து விளையாட்டு விளையாடுகின்றனர்” என, மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

“இவர் நாடகமாடுகின்றார்; அவர் சித்து விளையாட்டுக் காட்டுகின்றார்” எனக் கூறுபவர்கள், முதலில் தம்மை, தங்களது மனக் கண்ணாடியின் முன் அளவிடுவது மிகவும் அவசியம். ஒருவரை எதிர்க்கும் போதும், எதிர்த்து வார்த்தைகளைக் கொட்டும் போதும், த(ம்)ன் பக்க நியாயங்களையும் தொட்டுப்
பார்க்க வேண்டும்.

இதற்கு மேலதிகமாக, தான் கூறும் கூற்று, கேட்பவர்களுக்குச் சினத்தை மூட்டுமா, விருப்பை விளைவிக்குமா எனக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். கொடிய போரில் சிக்கி, சமநிலை குழம்பி, முரண்பாடுகள் நிறைந்தும், வன்முறைகளைத் தரிசித்தபடியும் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில், தமது உரை, உறைக்குமா, இனிக்குமா என யோசிக்க வேண்டும்.

இவ்வாறாகத் தமிழ்த் தலைவர்கள் மீது, அமிலத்தைக் கொட்டுவோர், அவர்களைச் சார்ந்தோர், அந்தக் கட்சிகளைச் சார்ந்தோர் ஆகியோர், கடந்த காலங்களில் தமிழ் மக்கள் விடயத்தில், புனிதர்களாக இருந்தார்களா, மீட்பர்களாக வாழ்ந்தார்களா?

புலிகளுக்கு எதிரான யுத்தம் எனத் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் வீச்சுக் கொண்ட வேளை, ஒருவருமே மூச்சுக் கூடக் காட்டவில்லை.

மேலும், இந்திய, இலங்கை ஒப்பந்தத்துடன் (1987) அண்ணளவாக இரு தசாப்தங்கள் (19 வருடங்கள்) ஒன்றாக இணைந்திருந்த வடக்கையும் கிழக்கையும் இரு கூறாக்க, நீதிமன்றம் (2006) சென்று, இணைந்த வடக்கு, கிழக்கு, தமிழர் தாயகம் என்ற தமிழ் மக்களது அபிலாஷையின் தொடர்பைத் துண்டித்தவர்கள், மக்கள் விடுதலை முன்னணி கட்சியினராவர்.

“வடக்கு முதலமைச்சர், கொழும்பில் தனது இரு பிள்ளைகளுக்கும் சிங்களவர்களை மணம் முடித்துக் கொடுத்துள்ளார்; அவர்கள் அங்கு சந்தோஷமாக வாழ்கின்றார்கள். இங்கு (வடக்கில்) வந்து நாடகமாடுகின்றார்” என்றும் இராமலிங்கம் சந்திரசேகரன் அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்தை, இவர் மட்டும் கூறவில்லை. வடக்கு ஆளுநர் உட்பட தெற்கிலுள்ள பல அரசியல்வாதிகள், அவ்வப்போது கூறி வருவதுண்டு.

வடக்கு முதலமைச்சர், தனது பிள்ளைகளுக்கு பெரும்பான்மையின மருமக்கள் வர வேண்டும் என, அவர்களது ஜாதகக் குறிப்பைக் கொண்டு திரியவில்லை. அவ்வாறாக, அமைய வேண்டும் எனக் கோவிலில் நேர்த்திக்கடன் வைக்கவும் இல்லை. கா(தல்)லச் சூழ்நிலைகளால் அவ்வாறான திருமணங்கள் அமைந்திருக்கலாம். அதைத் தூக்கிப் பிடித்து, மேடையில் முழங்குதல், தேவையற்ற வெட்டிப் பேச்சாகும். ஏனெனில், தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு அல்லவா?

அண்மையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை கூடியிருந்தது. அங்கு, கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவி தொடக்கம், அனைத்துப் பதவிகளுக்கும் நியமனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழ் மக்கள் பல(ர்) அப்பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

இதேநேரத்தில், முல்லைத்தீவு மண்ணை, பெரும்பான்மையின ஆக்கிரமிப்பிலிருந்து மண்ணை மீட்கும் மக்கள் போராட்டம், நடைபெறுகின்றது. தமிழ் மக்களது பூர்வீக உரித்துள்ள காணிகள்,பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பலருக்கு, காணி உரிமம் வழங்கப்பட்டு உரித்தாக்கப்பட்டுள்ளது.

மகாவலி அதிகாரசபை, முல்லைத்தீவில் தீவிர செயற்பாட்டில் ஈடுபட்டு, வெளிப்படையாகவே பெரும்பான்மையினரைக் குடியேற்றி வருகின்றது என்ற குற்றச்சாட்டு, அப்பிரதேசம் சார் வாழ் மக்களால், முன்வைக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவில் கிராமப்புறங்களில் வாழும் தமிழ் மக்கள், தங்களது காணிகளை ‘மகாவலி’ அடித்துச் சென்று விடுமோ என ஏக்கத்துடன் சீவிக்கின்றனர். ‘ இலங்கையின் மிகப்பெரிய கங்கை, மகாவலி கங்கை’ எனச் சிறுவயது முதற்கொண்டு கற்றுவந்த தமிழ் மக்களுக்கு, ‘மனவலி’ தரும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவே, சிங்கள மக்களுக்கு ‘மகாவலி’ யாக உள்ளது.

கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜனாதிபதி, அப்படிக் குடியேற்றம் ஒன்றுமே அங்கு நடைபெறவில்லை என அடித்துக் கூறி விட்டார். இதையே அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கூறுகின்றார். முல்லைத்தீவில் குறித்த பிரதேசங்களை அண்டிவாழும் மக்கள், “இது முழுப்பூசணிக்காயை அப்படியே சோற்றுக்குள் புதைத்த மாதிரி இருக்கிறது” என்று கடிந்து கூறுகின்றார்கள்.

இங்கு ஒன்றுமே நடக்காமலா, தமிழ் மக்கள் வீதியில் அஹிம்சைப் போர் புரிகின்றனர்? இந்தப் போராட்டம், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ் மக்களைப் பாரிய அளவில் ஒன்று திரட்டிய நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.

ஆகவே, தென்னிலங்கை தேசியக் கட்சிகள் ஊடாகத் தமிழ் மக்களுக்குச் சேவை செய்யப் போகின்றோம் எனக் கிளம்பிய, வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரதிநிதிகளால், தங்களது கட்சியின் தலைமைத்துவம் ஊடாக, ஆக்கிரமிப்புகள், பொருளாதாரச் சுரண்டல்களைத் தடுக்கக் கூடிய வலு உள்ளதா, மீண்டும் மீட்டெடுக்கக் கூடிய சக்தி உள்ளதா?

நிச்சயமாக இல்லை. அவ்வாறெனில், ஏன் அவர்கள் கட்சியில், மனச்சாட்சியைத் துறந்து, தொடர்ந்து பயணிக்க வேண்டும்?  “அபிவிருத்தி” என, எவ்வளவு காலம் இவர்கள், வெறுவாய் மெல்லப் போகின்றார்கள்?

“தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தியில் கடை நிலையில் உள்ளன; கூட்டமைப்புக்கு அபிவிருத்தி தொடர்பில் அக்கறை இல்லை. ஆகவே, அபிவிருத்தி அவசியம். அபிவிருத்திக்காக அல்லும் பகலும் உழைக்கின்றோம்” என, இவர்களால் நியாயம் கற்பிக்கப்படலாம்.

அபிவிருத்தி முக்கியம்; அதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால், வறுமைநிலையில் முதல் இடத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில், அங்கு பிறந்து தொழில்செய்து வந்தவன், வாடி வதங்க, எங்கிருந்தோ வந்தவன் படையினரின் நிழலில் வாடி அமைத்து, செல்வம் தேடுகின்றான்; இதனால், அங்கு தொழில்செய்து வந்தவனின் வருமானம் இல்லாமல் போகின்றது. ஆகவே, பொருளாதார அபிவிருத்தி இல்லாமல் போகின்றது.

இந்தப் பொருளாதாரச் சுரண்டல், மிகப் பெரியளவில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பாரிய அளவில் கடல் உணவுகள் அள்ளப்பட்டு, தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதால், வன்னி மக்களுக்கு கடல் உணவு, தற்போது மலையளவு விலையில் கிடைக்கின்றது. இதனால் கிடைக்க வேண்டிய புரதச்சத்து இல்லாமல் போகின்றது. இதனால் அவர்களது உடல், உள அபிவிருத்தியும் பாதிக்கப்படுகின்றது.

ஆகவே, தென்னிலங்கை தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், இவ்வாறாக இழந்து கொண்டிருக்கும் பல அபிவிருத்திகளை, மீட்டுத்தர முன்வருவதுடன், இனியும் நிகழாமல் பாதுகாக்கவும் வேண்டும்; செய்வார்களா?

1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி தொடக்கம், நேற்று வரை, தமிழ் மக்களுக்குச் சேதாரங்களை வழங்கிய கொழும்பு தேசியக் கட்சிகள், இன்று மனம் திருந்தி, தமிழ் மக்களுக்கு ஆதாரமாக மாறும் என எந்தத் தமிழ் மகனும் மகளும் கருதவில்லை.

நல்லிணக்கத்தை மலரச் செய்வார்கள் என வாக்களிக்க அவர்கள், நெடுங்கேணி, கொடுக்குநாறி மலையில், கடவுளைக் கும்பிடக் கூட தடை விதிப்பது, இதற்கான இறுதி உதாரணமாகும்.

ஆகவே, தென்னிலங்கைக் கட்சிகளில், தமிழ்ப் பிரதிநிதிகள் பங்கு கொண்டு செயற்படுவதால், தமிழ் மக்களுக்குக் கிடைத்து வருகின்ற நன்மைகளைக் காட்டிலும், இதனால், பெரும்பான்மையின அரசாங்கங்களுக்குக் கிடைத்து வருகின்ற நன்மைகள் பன்மடங்கு அதிகம்.

தற்போது, நல்லிணக்கம் என்ற முகமூடிக்குள் ஒளிந்திருந்து, இனவாதம் சத்தமில்லாது, தமிழ்ச் சமூகத்தின் கல்வி, பாரம்பரியங்கள், தொழில்முறைமைகள் போன்றவற்றின் போக்கை மாற்ற முனைகின்றது. இந்நிலையில், அதே பெரும்பான்மையினக் கட்சிகளுக்குத் தமிழ் மக்களது வாக்கைக் கோருவது கூட, ஒரு விதத்தில் நாடகமே.

ஆகவே, “அவர் நாடமாடுகின்றார்; இவர் நாடகமாடுகின்றார்” எனக் கூறி, தங்களது சொந்த நலனுக்காக, மக்கள் சேவை என்ற முத்திரை குத்திப் பலர் நாடகமாடுகின்றார்கள்.

தொடர்ந்தும் நாடகங்களைப் பார்க்கும் பார்வையாளராக தமிழ் மக்கள் இருக்கப் போகின்றார்களா?

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாடகம்-ஆடுவதாக-நாடகம்-ஆடுதல்/91-221207


அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா?

அதிரதன் 

3 weeks 1 day ago

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், “அத்தனை குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகக் குடியேற்றப்படும்போதே, எங்களது போராட்டம் முடிவுக்கு வரும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தொடங்கப்பட்ட இவர்களின் நில மீட்புப் போராட்டம், நேற்றுடன் (03) 21 நாளை எட்டியபோதும், “இதுவரையில் யார் வந்தும், தீர்க்கமான முடிவையோ, தீர்வையோ வழங்கவில்லை” என்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை,  பிரதேச செயலாளர், வன பரிபாலன அதிகாரிகள் , வீடமைப்பு அதிகார சபையினர் வந்து கலந்துரையாடி இருக்கிறார்கள்.

“அரசாங்க அதிபர் இதுவரையில் எம்மை வந்து சந்திக்கவில்லை. வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள், 30 வீடுகள் அமைத்துத் தரவுள்ளதாகக் கூறியுள்ளனர்.  ஒருவருக்கு 40 பேர்ச் (நான்கு பரப்பு) காணி வழங்கப்படுமாம். இருப்பினும், 40 பேர்ச்சுக்காக நாங்கள், இவ்விடத்தில் வந்திருக்க வேண்டியதில்லை. அப்படியென்றால், மூன்று வருடங்களுக்கு முன்னமே அதைப் பெற்றுக் கொண்டிருக்க முடியும்” என்று கூறுகின்றார்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.

இது, வெறும் 30 வீட்டுத்திட்டத்துக்கான போராட்டமல்ல; முழுக் கனகர் கிராமத்துக்கான நில மீட்புப் போராட்டம் ஆகும். ஒட்டுமொத்தமாக 278 குடும்பங்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கியிருந்து இடம்பெயர்ந்திருந்தன.  இப்போது அக்குடும்பங்கள்,  இரண்டு, மூன்று மடங்காக அதிகரித்திருக்கின்றன.

“எங்களுக்கு மட்டும் காணி வீட்டைத்தந்து குடியேற்றுவது நியாயமா?” எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது.

image_e99eb13fdc.jpg

1981ஆம் ஆண்டு,  அரச வர்த்தமானியில் 60ஆம் மைல் போஸ்ட் கிராமத்தை, கனகர் கிராமம் என, அன்றைய கால கட்டத்தில் இருந்த அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அக்கால வீடமைப்பு அமைச்சால், ஆரம்பகட்டமாக 30 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இப்பிரதேசத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரு இனங்களையும் சேர்ந்த மக்கள், விவசாயத்தை மேற்கொண்டு வந்திருந்தனர்.

1990ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலையால், திருக்கோவில்  பிரதேசத்துக்கு  இடம்பெயர்ந்து, அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு, தமது சொந்த இடமான ஊறணி – கனகர் கிராமத்துக்குத் திரும்பிய வேளை, இப்பிரதேசம் வனவிலங்கு இலாகாவுக்கு உட்பட்டும், இராணுவக் கட்டுப்பாட்டின் கீழும் காணப்பட்டிருந்தது.

பிரதேச செயலகம், வனவிலங்கு திணைக்களம், மாகாணசபை, பிரதமர் அலுவலகம் வரை இம்மக்கள் சென்றிருந்தும், இன்றுவரை மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.

இந்தநிலையில், கனகர் கிராமத்து (60ஆம் மைல் போஸ்ற்) மக்கள், தமது காணிகளை வன இலாகா விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து, இன்றுவரையில் பொத்துவில், திருக்கோவில், கல்முனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள், அம்மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இருந்தாலும், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சாத்தியமான தீர்வை வழங்குவதற்கு, எந்தத் தரப்பும் முயலவில்லைப் போலத்தான் தெரிகிறது.

இலங்கையில் 70களுக்குப் பின்னர், ஆரம்பமான இனமுரண்பாடுகள், 78களில் மோசமடைந்து 87இல் இந்திய இராணுவம் சமாதானப் படையாக வரவழைக்கப்பட்டு, அவர்களது காலத்தில் நடைபெற்ற பிரச்சினைகளால், மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.

அதன் பின்னர், நாட்டில் நடைபெற்ற கோர யுத்தம், ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகளின் பின்னர் நிறைவுக்கு வந்தது.

தற்போது யுத்தம் முடிவுற்று ஒன்பது வருடங்கள் கழிந்தும், தமிழ் மக்களின் ஆதரவுடன்  2015இல் நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, மீள்குடியேற்றம் என்பது, அரசாங்கத்தால் சுயமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இருந்தாலும், இழப்புகளைச் சந்தித்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றபோதிலும், அதைத் துரிதமாகச் செய்து முடிக்க முயலாவிட்டால், அதற்குக் காரணம் என்ன என்பதே இப்போதைய கேள்வியாகும்.

மக்கள், தமது சொந்தக் காணிகளுக்குள் செல்வதற்கு முடியாதவாறு,  வன பரிபாலனத் திணைக்களம் அச்சுறுத்தல் விடுத்து வருவது, கண்டிக்கத்தக்கதாகப் பார்க்கப்பட்டாலும், காணி உரிமைப் பத்திரம் இருந்தும் சொந்தக் காணிக்குள் சென்று பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலை குறித்து, கனகர் கிராம மக்கள் கவலையைத்தான் வெளியிடுகின்றனர்.

1990களில் இடம்பெயர்ந்த பின்னர், எந்தவித பாராமரிப்போ, கவனிப்போ இன்றியிருந்த கிராமம், காடாகி இருப்பதைக்கண்டு மனம் நொந்து கொள்வதைத் தவிர, இவர்களுக்கு வேறு வழியில்லை என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது.

வடக்கைப் பொறுத்தவரையில் மக்களின் காணிகளை இராணுவம், பாதுகாப்புத் தரப்பினர், தங்களது தேவைகளுக்காகப் பெருமளவில் சுவீகரித்தனர், பயன்படுத்துகின்றனர். கிழக்கின் கனகர் கிராமத்தின் கதை வேறாக இருக்கிறது.

“வீடுகள் அமைந்திருந்த பிரதேசங்களுக்குள், நுழைய முடியாதபடிக்கு காடு மண்டிப்போயிருக்கின்றது. சிரமத்தின் மத்தியில் உள்ளே சென்று பார்க்கின்ற போது, வீடுகள் உடைக்கப்பட்டு, கூரை ஓடுகள், மரம் தடிகள், கதவுகள், ஜன்னல்கள் இல்லாமல் உடைந்த சில சுவர்களைத்தான் காணமுடிகிறது. துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்களுடன் ஒருசில சுவர்கள், அநேகமான வீடுகள் உடைந்து தரைமட்டமாகி இருக்கின்றன. காடுகளுக்குள் புகுந்து மரங்களை வெட்டித்தான், அவற்றையும் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.  ஒருசில வீடுகளின் அத்திபாரங்களை மாத்திரம்தான் காணமுடிகிறது” என்று கவலை கொள்ளும் மக்களுக்கு, ஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

கனகர் கிராமம் சமுளை மரங்கள் நிறைந்த சமுளஞ்சேனையாகத்தான் இருந்திருக்க வேண்டும். 1950-60 காலப் பகுதியில் காடுகள் வெட்டப்பட்டு, சேனைப்பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வேளைகளில் குடியிருக்க ஆரம்பித்து, 1960-1990ஆம் ஆண்டு காலப்பகுதி வரை, சுமார் 278 குடும்பங்கள் வசித்து வந்தாகவும், ஒரு குடும்பத்துக்கு மூன்று தொடக்கம் ஐந்து ஏக்கர் வரையில் காணிகள் இருந்ததாகவும் கனகர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமுளஞ்சேனையாக இருந்த இப்பிரதேசத்தில், 1981ஆம் காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சருமான மறைந்த எம்.சி.கனகரெத்தினம், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக, வீடுகளை அமைக்கக்கூடிய வசதியுள்ள, அரச உத்தியோகத்தர்கள் அடங்கிய குடும்பங்களுக்கு, கடனடிப்படையில் 30 வீடுகள் வழங்கப்பட்டு, கனகர் கிராமம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

இந்திய இராணுவத்தின் வருகையோடு, குண்டுவெடிப்புகள், படையெடுப்புகள் எனப் பிரச்சினைகள் அதிகரிக்க, இக்கிராமங்களில் இருந்த மக்கள், துன்பங்களை அனுபவிக்கத் தொடங்கினர். பின்னர், யுத்த அச்சம் காரணமாக, அவர்களுடைய காணிகள், வீடுகளில் இருந்து வெளியேறி, பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்தனர்.

தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் கைதுகள், கொலைகள், காணாமல் போதல்களால் இடம்பெயர்ந்து திருக்கோவில், கோமாரி, பொத்துவில் உட்பட்ட இடங்களிலுள்ள அகதி முகாம்களில் வசித்து, நெருக்கடிகள், பிரச்சினைகளால் உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளில் வசித்துவருகின்றனர். இவர்கள்   இலங்கையின் பல பாகங்களிலும் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தாம் பூர்வீகமாக வாழ்ந்த கிராமத்தில் குடியேறுவதற்கென்றே முன்னெடுக்கும் போராட்டத்தை  30 வீட்டுத்திட்டத்துக்கான போராட்டமாகத் திசைமாற்றவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றனவோ என்ற சந்தேகமும் இந்த மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

ஆனால், முழுக் கனகர் கிராமமும் தங்களுக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில், மக்கள் ஆணித்தரமாக உள்ளனர்.

நில மீட்புப் போராட்டமானது, அஹிம்சை வழியில் நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரையில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், கல்முனை விகாராதிபதி, கல்முனை மாநகரசபை உறுப்பினர், பொத்துவில் பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் ஆகியோர் கனகர் கிராம நில மீட்புப் போராட்டக்காரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிச் சென்றிருக்கின்றனர்.

“இவர்கள் எமக்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக நம்பிக்கை தெரிவித்து சென்றுள்ளார்கள்; என்றாலும் எமது காணிகளை வழங்குவதற்கான உறுதிமொழிகளை ஜனாதிபதி, பிரதமர், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். ஆனாலும், எங்கள் அனைவரது குடும்பங்களுக்கும், கனகர் கிராமம் கிடைக்கும் வரையில், எமது நிலமீட்பு போராட்டம் தொடரும்”  என்று போராட்ட ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர்  எம். குழந்தைவேல் தெரிவிக்கிறார்.

கனகர் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்தவர்கள், வயதானவர்களாகத் தங்களது காணிகளில் இறுதிக்காலத்திலேனும் வாழ்ந்து நிம்மதியடையவும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான  வாழ்கையை ஏற்படுத்திக் கொடுக்கவும் என, பல்வேறு எதிர்காலச் சிந்தனைகளுடன் முன்னே செல்ல எத்தனிக்கும் கனகர் கிராம மக்களின் காணிப்பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே, எல்லோருடையதும் நோக்கமுமாக இருக்கிறது.

நில மீட்புப் போராட்டம் ஆரம்பித்ததையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது அலுவலகத்தில் சந்தித்த அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், “அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நல்லதொரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக, ஜனாதிபதி உறுதியளித்தார்” என்று தகவல் வெளியிட்டார்.

போராட்டம் ஆரம்பமாகி, நான்காம் நாள் போராட்டக்காரர்களைச் சந்தித்த கோடீஸ்வரன், 10ஆம் நாள் ஜனாதிபதியைச் சந்தித்தார். இன்று 21ஆவது நாளாகிப் போயிருக்கிறது. இதுவரையில் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி ஏன்  நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான், மக்களிடமுள்ள கேள்வி.

இரவு பகலாக மக்களது போராட்டம் தொடரும் நிலையில், மக்களது கோரிக்கை ஜனாதிபதி, பிரதமர், வனவள அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு  செல்லப்பட்டிருக்கிறது. இருந்தாலும், முடிவுகளை அறிவிப்பதில்தான் ஏன் தாமதம்? இந்தத் தாமதம் இல்லாமல் போவதற்கு எதைத்தான் செய்ய முடியும்?

30 வருடங்களுக்கு முன்னர், சேனைப் பயிர்ச்செய்கை,  விவசாயத்தை மேற்கொண்டிருந்த 278 எண்ணிக்கையைத் தாண்டிய குடும்பத்தினர், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம் என்று தெரிந்தாலும், காடு படர்ந்தால் அது வன இலாகாவுக்குச் சொந்தம் என்ற சாதாரண சட்டத்தின் கீழ் உள்ள காணியை மீட்பதற்கோ, அதை வழங்குவதற்கோ தாமதம் எதற்கு என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

நாட்டில் நல்லிணக்கம், சமாதானம், இன நல்லுறவு ஏற்பட்டாக வேண்டுமாக இருந்தால், அது அரசியல் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாக, அடிமட்ட மக்களின் அத்தனை உரிமைகளும் நிறைவேற்றப்படுகின்ற வரைக்குமான செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புகள் நம் நாட்டுக்குத் தேவையானதாக இருக்கிறது.

தேடிக்கண்டுபிடித்து மீள்குடியேற்றங்களை நடத்தி வைக்க வேண்டிய அரசாங்கமும் அரச அதிகாரிகளும் மக்கள் போராட்டம் நடத்தும் போது கூட, அதற்கான தீர்வைக் கொடுக்கவில்லையென்றால், அதற்குள் இருக்கும் கேள்விகளுக்கு  பதில்களைக் கண்டறிய முடியாமல் உள்ளது.

வருடக்கணக்காகத் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்புப் போராட்டம் போல், அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்து மக்களின் போராட்டம் தொடரக்கூடாது என்பதே, எல்லோருடையதும் எண்ணமாக இருக்கவேண்டும்.

அதற்கான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை, முயற்சிகளை நாமும் செய்வோமா?
“நாம் பூர்வீகமாக வாழ்ந்த காணியைத் தான் கேட்கிறோம்; எமது நிலத்தை எமக்கு வழங்கும் வரை நிலமீட்புப் போராட்டம் தொடரும்” என்று கூறியபடி  நடத்தும் நில மீட்புப் போராட்டம், இரவு பகலாகத் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அம்பாறையில்-நிலமீட்புப்-போராட்டம்-கனகர்-கிராமத்தில்-மீள்குடியேற்றம்-சாத்தியமா/91-221197

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply