திட்டமிட்டச் சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்!

திட்டமிட்டச் சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் சிங்களவர்களது சட்டத்துக்கு எதிரான குடியேற்றத்துக்கு தமிழ் மக்கள் மாபெரும் போராட்டமும் பொதுக் கூட்டமும்  (ஓகஸ்ட் 28) இல் இடம் பெற்றது. இந்தக் கண்டனப் பேரணியும் பொதுக் கூட்மும் தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு மகாவலி அதிகார சபை காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தே இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

கூட்ட இறுதியில் பின்வரும் 6 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்தித்த இணைத்தலைவர்கள் கையளித்துள்ளனர். இந்த மனு நாட்டின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதப்பட்டதாகும்.

ஆறு கோரிக்கைகள்

(1) மகாவலித் திட்டத்தின் நன்மை, தீமைகள், சவால்கள் மற்றும் சிக்கல் தன்மைகளை கருத்திற் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மகாவலி திட்டச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வடக்கின் ஏனைய பகுதிகளில் விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகளை கைவிடுமாறும் தங்களை வினயமுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

(2) கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி கடற்கரையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகார சபையால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக மீளப் பெற வேண்டும்.

(3) 1984 வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான, நீதிக்கு புறம்பாக சிங்கள மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட 2000 வாழ்வாதார நிலங்கள் அதன் உண்மையான உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு மீள வழங்க வேண்டும்.

(4) தமிழர்களின் மரபுரிமையை திட்டமிட்டு சீரழிக்கும் நோக்குடன் மாவட்ட அரசாங்க அதிகாரிகளையும் கிராமிய அமைப்புக்களையும் கலந்துரையாடாது வரலாற்று திரிபை ஏற்படுத்தும் நோக்கோடு தன்னிச்சையாக செயற்படும் தொல்லியல் திணைக்களத்தின் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

(5)வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரிக்கும் நோக்கோடு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உடன் நிறுத்தத் தவறும் பட்சத்தில் அது இன நல்லிணக்கத்தை மிக மோசமாக பாதிக்கும்.

(6) ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நந்திக்கடல், நாயாற்றுக் களப்புக்கள் மீண்டும் சட்ட ரீதியாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட வேண்டும்.

தமிழீழத் தாயகக் கோட்பாட்டைத் தகர்த்தெறிய சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியம் கையில் எடுத்த ஆயுதம் சிங்களக் குடியேற்றமாகும். தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களவர்களை அரச செலவில் குடியேற்றுவதன் மூலம் வட-கிழக்கு மாகாணத்தின் குடித்தொகையில் படிப்படியான மாற்றத்தை ஏற்படுத்த தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணில் – அவர்களது தந்தையும் – தாயும் மகிழ்ந்து குலாவி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த மண்ணில்-சிறுபான்மையர்கள் ஆக மாற்றுவதே சிங்கள அரசுகளின் குறிக்கோளாக இருந்து வருகிறது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாகவே செந்தமிழ் மணம் கமழும் பட்டிப்பளை ஆறு கல்லோயா எனப் பெயர் மாற்றம் பெற்றது, அல்லை கந்தளாய், அல்ல-கந்தளாவ ஆக மாறியது, முதலிக்குளம் பதவியாவாக உருவெடுத்தது, தமிழீழத்தின் இதயபூமியான மணலாறு இரவோடு இரவாக வெலிஓயாவாக மறு அவதாரம் செய்தது. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் மூளையில் உருவாகிய நச்சுத் திட்டமே இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள். அவரே பட்டிப்பளை ஆறு கல்ஓயாவாக மாறியதன் சூத்திரதாரி.

வெலி ஓயா குடியேற்றத்திட்டம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தான குடியேற்றத் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் அரசியல் நோக்கோடு நின்று விடாமல் இராணுவ நோக்கோடும் தொடக்கப்பட்டது. வட தமிழீழத்துக்கும் – தென் தமிழீழத்துக்கும் இடையிலான தரைவழிப் பாதையை துண்டிப்பதே வெலி ஓயா திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதனால் வி.புலிகள் தமிழர் தாயகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மணலாற்றுப் பகுதியைஇதயபூமி என அழைத்தார்கள்.

தியாகி தீலீபன் செப்தெம்பர் 15, 1988 இல் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உணவு தவிர்க்கும் போராட்டத்தை மேற்கொண்டான். அந்த ஐந்து அம்சக் கோரிக்கைகளில் மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதுவும் ஒன்றாகும்.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் 1975 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது. அதனை 30 ஆண்டுகளில் முடிப்பதாக இருந்தது. ஆனால் 1977 இல் ஆட்சிக்கு வந்த ஜேஆர். ஜெயவர்த்தனா அதனை ஆறு ஆண்டுகளில் முடிக்க எண்ணினார். திட்டம் திருத்தப்பட்டு 12 அபிவிருத்தித் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றை நடை முறைப்படுத்த மகாவலி அபிவிருத்தி வாரியம் 1979 இல் உருவாக்கப்பட்டது.இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு காமினி திசநாயக்கா மற்றும் அன்றைய சனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களின் புதல்வர் இரவி ஜெயவர்த்தனா இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள்.

1984 இல் தொடக்கப்பட்ட வெலி ஓயா குடியேற்றத் திட்டம் 1988 ஆம் ஆண்டு அசுர வேகத்தில் முடுக்கி விடப்பட்டது. இதற்காக ஸ்ரீலங்காவின் முழு அரச இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது.

1988ம் ஆண்டு சித்திரைத் திங்கள் 16 ஆம் நாள் ஒரு சிறப்பு அரசதாள் (Gazette) மூலம் முல்லைத்தீவு மாவடத்தின் மணலாற்றுப் பிரதேசம் வெலிஓயாவாக பெயர் மாற்றம் செய்யப் பட்டது. அது மட்டும் அல்லாது ஸ்ரீலங்காவின் 26 ஆவது மாவட்டமாகவும் அது பிரகடனப் படுத்தப்பட்டு அனுராதபுர மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.

1984 இல் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராமங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் 48 மணித்தியாலக் காலக்கெடுவுக்குள் அவர்களது வீடுவாசல்களில் இருந்து வெளியேறுமாறும் வெளியேறத் தவறினால் பலவந்தமாக அவர்கள் வெளியேற்றப் படுவார்கள் எனவும் சிங்கள இராணுவம் ஒலிபெருக்கி மூலம் மிரட்டியது. பின்வரும் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இந்த பலவந்த வெளியேற்றத்திற்கு உள்ளாக்கப் பட்டன.

வவுனியா மாவட்டம்

அரியக்குண்டசோலை – 118, வெடிவைத்தகல்லு – 89, ஏனையவை – 85

முல்லைத்தீவு மாவட்டம்

கொக்குத் தொடுவாய் – 861, கருநாட்டுக்கேணி – 370, ஏனையவை – 66

கொக்குளாய் கிராமசேவகர் பிரிவு

கொக்குளாய் – 508, மரியமுனை – 04, முதத்துவாரம் – 1004, ஆலடிக்குளம் – 05, ஆறுமுகத்தான்குளம் – 69, நாயாறு – 465, தண்ணிமுறிப்பு – 243, ஆண்டான்குளம் – 49, குமுழமுனை – 1164, புளியமுனை – 16

வவுனியா வடக்கு கிராமசேவகர் பிரிவு

புதுக்குடியிருப்பு – 351, காட்டுப்பூவரசங்குளம் – 91, கற்குளம் – 101, கோவில்புளியங்குளம் – 81, சொரியல் – 6448

இவற்றைவிட ஒவ்வொன்றும் 1000 ஏக்கர் கொண்ட பின்வரும் 14 குத்தகைக் காணிகளில் (99 ஆண்டுக் குத்தகை) குடியிருந்த தமிழ்க் குடும்பங்களும் பெரும்பாலும் மலையகத் தமிழ்க் குடும்பங்கள் வெளியேற்றப் பட்டன. இந்தக் காணிகள் சொந்தக்காரர்களால் பெரிய பொருட் செலவில் மேம்படுத்தப் பட்டு அதில் கமம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(1) றேடியோ கண்ணன், (2) டொலர் பாம், (3) ஆனந்தா றேடிங் கொம்பனி, (4) செகசோதி அன்ட் கொம்பனி, (5) எஸ். இராசரத்தினம், (6) எஸ். செல்லத்துரை, (7) எஸ். அம்பலவாணர், (8) த.நடராசா, (9) கென்ட் பாம், (10) சிலோன் தியேட்டர், (11) அரியகுண்டன், (12) கார்கோ போட் கொம்பனி, (13) றெயில்வே குறூப் மற்றும் (14) போஸ்டல் குறூப். இவர்களை வவுனியாவில் பொலிஸ் அத்தியட்சகராக இருந்து ஆர்தர் ஹெரத் அடித்து கலைத்து விரட்டிவிட்டார்.

கல்ஓயா சிங்களக் குடியேற்றத் திட்டத்தின் சூத்திரதாரி டி.எஸ். சேனநாயக்கா என்றால் வெலிஓயா மற்றும் மதுறு ஓயாக் குடியேற்றத் திட்டங்களின் சூத்திரதாரி அன்றைய விவசாய, துரித மகாவெலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திசநாயக்கா ஆவார்.

அமைச்சர் காமினி திசநாயக்காவும் அவரது அமைச்சு அதிகாரிகளும் சேர்ந்து மிக இரகசியமாகத் திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில் யான் ஓயா, மதுறு ஓயா, மணல் ஆறு போன்ற குடியேற்றத் திட்டங்களை எப்படி நடைமுறைப் படுத்தினார்கள் என்பதை துரித மகாவெலி சபை அதிகாரிகளில் ஒருவரான ஹேர்மன் குணரத்தின சண்டே ரைம்ஸ் (26-08-90) பத்திரிகையில் எழுதிய கட்டுரை மூலம் பொதுவெளிக்குக் கொண்டுவந்தார். அவர் எழுதியிருந்ததாவது-

“All wars are fought for land…The plan for the settlement of people in Yan Oya and Malwathu Oya basins were worked out before the communal riots of 1983. Indeed the keenest minds in the Mahaweli, some of whom are holding top international positions were the architects of this plan. My role was that of an executor…

We conceived and implemented a plan which we thought would secure the territorial integrity of Sri Lanka for a long time. We moved a large group of 45,000 land hungry (Sinhala) peasants into the Batticaloa and Polonaruwa Districts of Maduru Oya delta. The second step was to make a similar human settlement in the Yan Oya basin. The third step was going to be a settlement of a number of people, opposed to Eelam, on the banks of the Malwathu Oya.

By settling the (Sinhala) people in the Maduru Oya we were seeking to have in the Batticaloa zone a mass of persons opposed to a separate state…Yan Oya if settled by non-separatists (Sinhala people) would have increased the population by about another 50,000. It would completely secure Trincomalee from the rebels…”

‘நிலத்தைப் பிடிக்கவே எல்லா யுத்தங்களும் மேற்கொள்ளப் படுகிறது……..யான் ஓயா மற்றும் மதுறு ஓயாப் பள்ளத்தாக்கில் (சிங்கள)க் குடியேற்றத்தை அமுல் படுத்துவதற்கு வேண்டிய திட்டம் 1983ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்துக்கு முன்னரே தீட்டப்பட்டுவிட்டது. உண்மையில் இந்தத் திட்டத்தின் சிற்பிகள் மகாவலியில் பணியாற்றிய மெத்தப் படித்த அறிவாளிகள் ஆவர். இவர்கள் இப்போது அனைத்துலக மட்டத்தில் பெரிய பதவிகளில் பணியாற்றுகிறார்கள். இந்தத் திட்டத்தில் எனது பாத்திரம் அதனை நடைமுறைப் படுத்துவதே.

”இந்தத் திட்டத்தை நாம் சிந்தித்து நிறைவேற்றியதின் காரணம் ஸ்ரீலங்காவின் பிரதேச கட்டுமானத்தை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துவதே. மதுறு ஓயா பள்ளத்தாக்கை உள்ளடக்கிய மட்டக்களப்புக்கும் பொலநறுவைக்கும் நாங்கள் காணிக்கு அந்தரித்த 45,000 மக்களைக் கொண்டு சென்று குடியேற்றினோம். அடுத்ததாக இதேபோல் யான் ஓயாவில் (சிங்களவர்களை) குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம். மூன்றாவதாக ஈழத்துக்கு எதிரானவர்களை மல்வத்து ஓயாவின் கரைகளில் குடியேற்ற முடிவுசெய்தோம்.

‘மதுறு ஓயாவில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தனியரசுக்கு எதிரான ஒருதொகை மக்களை உருவாக்கினோம். யான் ஓயாவில் பிரிவினைக்கு எதிரானவர்களைவர்களை குடியேற்றுவதன் மூலம் மக்கள் தொகை 50,000 ஆகக் கூடியிருக்கும். இதன் மூலம் போராளிகளிடம் இருந்து திருகோணமலையை முற்றாகக் காப்பாற்றி விடலாம்.’

1988-89ல் வெலி ஓயாவில் முதல் கட்டமாக 3,364 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் கிறிமினல் குற்றவாளிகள் ஆவர். இரண்டாம் கட்டமாக 35,000 பேர் குடியமர்த்தப் பட்டார்கள். இந்தக் குடியேற்றங்களைப் பாதுகாக்க சிங்கள இராணுவ முகாம்கள் ஆங்காங்கே நிர்மாணிக்கப்பட்டன. இதில் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜானக பேரராவின் சேவையை ‘மெச்சி’ தண்ணிமுறிப்பு ஜானகபுரவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1997 இல் பிரிகேடியர் கிரான் கலன்கொட வெலிஓயாவின் கேந்திர முக்கியத்துவம்பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தது கவனிக்கத் தக்கது,

இராணுவ நோக்கில் வெலி ஓயா மிகவும் முக்கியமானது. எங்களது இருப்பு வட – கிழக்கு இணைப்பை தடுத்துவிடும். நாங்கள் அங்கு நிலைகொண்டு இருக்கும் வரை பயங்கரவாதிகள் ஈழப் போரை வெல்ல முடியாது. நாங்கள் வெளியேறினால் பதவியா, கெப்பிற்றிகொலாவ ஈற்றில் அனுராதபுரம் ஆகிய நகரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். (சண்டே ஒப்சேவர் – 22 பெப்ரவரி, 1998)

“Weli Oya is very important militarily. Our presence will not allow the North-East merger. Terrorists cannot win Eelam as long as we stay here. If we go, there will be a threat to Padavia, Kebitigollewa and eventually Anuradhapura.” (Sunday Observer – 22 February, 1998).

வெலி ஓயா சிங்களக் குடியேற்றத்திட்டம் என்பது சிங்கள ஆட்சியாளர்களாலும் அதிகாரிகளாலும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பாகும். தேசிய பாதுகாப்பு அமைச்சராக லலித் அத்துலத்முதலி பதவி வகித்த காலத்தில் தமிழர்களின் பயங்கரவாதச் சிக்கலைத் தீர்த்து வைக்க வடக்கில் 200,000 சிங்களவர்களை குடியேற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது. குற்றங்களுக்காத் தண்டனை பெற்று சிறையில் இருந்த குற்றவாளிகளையும் தென்னிலங்கை மீனவர்களையும் குடியேற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த சிறைக் கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டு நேரே வெலி ஓயா திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்டார்கள். இவர்கள் தெருக்கள் அமைக்க, காடுவெட்டித் துப்பரவாக்க போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிங்களவர்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியேற்றும் நோக்குக்காக வெலி ஓயா பிரதேசம் அனுராதபுர மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. குடியேற்றம் வெற்றிகரமாக முடிந்த பின்னர் அது ஒக்ரோபர் 2011 இல் மீண்டும் தனித் துணைச் செயலகமாக முல்லைத்தீவு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. நொவெம்பர் 2014 இல் தேர்தல் பரப்புரைக்கு கிளிநொச்சி சென்ற முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சா 3,000 சிங்களக் குடும்பங்களுக் காணி உரிமைப் பத்திரங்களைக் கையளித்தார்.

1981 இல் எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணக்கின்படி முல்லைத் தீவு மாவட்டத்தில் 3,948 சிங்களவர்களே வாழ்ந்தார்கள். ஆனால் வெலி ஓயா குடியேற்றம் காரணமாக 2012 இல் சிங்களவர்களது தொகை இரட்டிப்பாகி விட்டது. கீழ்க் கண்ட அட்டவணை 1, அட்டவணை 2 யது எடுத்த குடித்தொகைக் கணக்கின்படி வெலிஓயாவில் 6,904 பேர் வாழ்ந்தார்கள். ஆனால் அந்தத் தொகை இன்று அதிகரித்திருக்க வேண்டும்.

முல்லைத் தீவு மாவட்ட இனவாரி குடித்தொகை – 2012

அட்டவணை 1


1981 – 2012 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தில் சிங்களவர்களது எண்ணிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது,

முல்லைத்தீவு மாவட்ட இனவாரி குடித்தொகை 1981 – 2012

அட்டவணை 2

போர் காரணமாக இந்த மாவட்டத்தில் குடித்தொகைக் கணக்கு 1999 – 2011 வரை எடுக்கப்படவில்லை.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எந்தத் தடங்கலும் இல்லாமல் முன்னெடுக்கப்படுகிறது. திட்டமிட்டச் சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தான குடியேற்றத் திட்டம் வெலிஓயா ஆகும்!

நக்கீரன்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply