சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண் (2)

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்

“நாங்கள் எல்லையில் குந்தாவிட்டால், எல்லை எங்களைத் தேடி வரும்”
நக்கீரன்
(6)

“நாங்கள் எல்லையில் குந்தாவிட்டால், எல்லை எங்களைத் தேடி வரும்” (“If we don’t occupy the border, the border will come to us”) என ஜே.ஆர். ஜெயவர்த்தனா 1985 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் நாள்  நாடாளுமன்றத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.  அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் பெப்ரவரி 13 இல் 100 விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குளாய் இராணுவ முகாம் மீது இராணுவ சீருடையில் சென்று தாக்குதல் தொடுத்தார்கள். அய்ந்து மணித்தியாலம் நீடித்த இந்தக் கடும் சண்டையில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் தமது தரப்பில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்தது.

இந்தக் கொக்குளாய் இராணுவ முகாம் அதே ஆண்டு சனவரி மாதம் சிங்களக் கேடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதாகும்.

பெப்ரவரி 15 ஆம் நாள் இராணுவம் பழிதீர்க்குமுகமாக மேற்கொண்ட தாக்குதிலில் 52 பொது மக்கள் (தமிழர்) கொல்லப்பட்டார்கள். அமைச்சர் அத்துலத்முதலி கொல்லப்பட்டவர்கள் பிரிவினைவாதிகள் என வருணித்தார். கொல்லப்பட்டவர்கள் ஏதிலி முகாம்களில் இருந்த அப்பாவி ஏதிலிகள் எனப் பொதுமக்கள் சொன்னார்கள்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா எல்லைகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதையும் குடியேற்றவாசிகளின் பாதுகாப்புக்கு ஊர்காவல் படைக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் நியாயப்படுத்தினார்.

சனவரி 20 ஆம் நாள் நாட்டுமக்களுக்கு விடுத்த செய்தியில் இலங்கைத் தீவின் எந்தவொரு பகுதியும் ஒரு குறிப்பிட்ட இனத்தவரது மரபுவழித் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். “இலங்கைத் தீவின் இன விழுக்காட்டுக்கு ஒப்ப குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும். அந்தத் திட்டத்தின் கீழ் 1985 இல் தெற்கில் இருந்து 30,000 சிங்களக் குடும்பங்கள் வடமாகாணத்தில் உள்ள வன்னி உலர் வலையத்தில் மன்னார் தொடங்கி முல்லைத்தீவு வரை குடியமர்த்தப்படுவர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரை ஏக்கர் காணியும் வீடு கட்ட பணமும் கொடுக்கப்படும். ஒவ்வொரு குடியிருப்புக்கும் 25 இயந்திரத் துப்பாக்கிகளும் 200  சுழல் துப்பாக்கிகளும் (rifles) பாதுகாப்புக்காக வழங்கப்படும்” என ஜே.ஆர். ஜெயவர்த்தனா சூளுரைத்தார்.

அப்போது காணி மற்றும் துரித மகாவலி மேம்பாட்டு அமைச்சராக இருந்த காமினி திசநாயக்கா சிங்களக் குடியேற்றங்களின் இராணுவ முக்கியத்துவம் பற்றி Far Eastern Economic Review  என்ற ஏட்டின் செய்தியாளர்  Rodney Tasker என்பவருக்கு விளக்கியிருந்தார். சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான அகத்தூண்டுதல் (inspiration) இஸ்ரேலின் மேற்குக் கரை கொள்கை மூலம் வந்தது என்று சொன்னார். (Pirapaharan, Chapter 29 by T. Sabaratnam (Volume 2)

இன்று மகிந்த இராசபக்சே ஜே.ஆரின் பேரினவாத சிந்தனையை அப்படியே பின்பற்றி வடக்கில் இலங்கைத் தீவின் இன விழுக்காடுக்கு ஒப்ப சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்தக் குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவே இராணுவ முகாம்கள், கடற்படை முகாம்கள் கேட்டுக் கேள்வியின்றி தமிழருக்குச் சொந்தமான காணிகளில் பட்டி தொட்டியெல்லாம் நிறுவப்படுகின்றன.

தமிழீழ மண் தொடர்ந்து அசுர வேகத்தில் விழுங்கப்பட்டு வருகிறது. நாளாந்தம் அது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வெளியில் வராத செய்திகள் எத்தனையோ நாம் அறியோம் பராபரமே.
இயற்கை வனப்பும், வேளாண்மை மற்றும் மந்தை வளர்ப்பிற்கேற்ற நிலவளமும் மீன்பிடித் தொழிலிற்கு ஏற்ற கடல் வளமும் ஒருங்கே அமையப் பெற்ற கேப்பாபுலவு கிராமத்தினைச் சேர்ந்த குடும்பங்கள் சுமார் அய்ந்து தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருபவர்களாகும். நந்தியுடையார் வம்சத்தினரான தமிழ் மக்கள் இங்கு பரம்பரை பரம்பரையாக விவசாயம், மீன்பிடி, மந்தை வளர்ப்பு போன்றவற்றை முதன்மைத் தொழிலாகக் கொண்டு இந்த ஊரில் வாழ்ந்து வந்துள்ளனர்.

கேப்பாப்புலவு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட புலக்குடியிருப்பு, கேப்பாபுலவு, சூரிபுரம், சீனியாமேட்டை ஆகிய சிற்றூர்களை உள்ளடக்கியதாக சுமார் 2800 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதான இப்பகுதியில், மக்களின் குடியிருப்பு நிலமாக இருந்தது 480 ஏக்கர் வரையான நிலப்பரப்பேயாகும். தவிர, 500 ஏக்கர் வயல் நிலமாகக் காணப்பட்டது. ஏனைய பகுதி காடாகவும், பற்றைகளாகவும் காணப்பட்டன.

இக்கிராமத்தில், பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி, 19 பொதுக் கிணறுகள், பாடசாலை, பொது விளையாட்டு மைதானம், முருகன் கோவில், கொட்டடிப் பிள்ளையார் கோவில், சீனியாமோட்டைக் குளம் போன்றவை மக்களின் பயன்பாட்டுக்குரிய சொத்துக்களாக அமைந்திருந்தன. இவை தவிர, பனை, தென்னை மற்றும் பயன்தரு பழமரங்களும் இங்கு நிறைந்திருந்தன.

இந்நிலையில், 2008 ஆம் ஆண்டு நொவம்பர் மாதப் பிற்பகுதியில் இந்தப் பகுதியில் இடம்பெற்ற போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் படிப்படியாக கைவேலி, வள்ளிபுனம், ஆச்சித்தோட்டம், தேவிபுரம், இரணைப்பாலை, போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்து இறுதியாகச் செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்த நிலையில், 3 ஆண்டுகளாகியும் இன்னமும் இவர்களுடைய சொந்த ஊர்களில் மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர்.

குறித்த கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் மீள்குடியேற்றப்படாமல் சுமார் 412 குடும்பங்களைச் சேர்ந்த 1648 பேர் வரையானோர் தமது சொந்த இடத்தில் எப்போது மீள்குடியேற்றப்படுவோம் என்ற ஏக்கத்தோடு, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையத்திலும் தங்கியுள்ளனர்.

கேப்பாபுலவு ஊர் முழுமையாக இராணுவத்தின் 591 ஆவது படைப்பிரிவினராலும் விமானப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டும் உள்ளது. இராணுவத்தினரின் அறிவித்தல் பலகைகள் ஆங்காங்கு நாட்டப்பட்டுள்ளன.

சைவர்கள் வாழ்ந்த கேப்பாபுலவில் புதிதாய் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கேப்பாபுலவு கிராமசேவையாளர் பிரிவிலுள்ள சூரிபுரம் என்ற சிற்றரில் அமைந்துள்ள பொதுவிளையாட்டு மைதானத்தில் 6 அடி உயரமுடைய புத்தர்சிலை ஒன்றை இராணுவத்தினர் நிருமாணித்துள்ளனர்.
இந்நிலையில், கேப்பாபுலவைத் சேர்ந்த குடும்பங்கள் தம்மை விரைவில் மீள்குடியேற்றக் கோரி மீள்குடியேற்ற அமைச்சர், முல்லைத்தீவு அரசாங்க அதிபர், முல்லைத்தீவு இராணுவக் கட்டளைத் தளபதி, சிறிலங்கா அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் இராசபக்சே மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோரிற்கு அனுப்பிய மனுக்களுக்கு யாரும் இதுவரை செவி சாய்க்கவில்லை.

இவர்களது மீள்குடியேற்றம் தொடர்பில், 25.07.2012 ஆம் நாளன்று முல்லைத்தீவு மாவட்ட காணி திட்டமிடல் பணிப்பாளர் செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு வருகை தந்து கேப்பாபுலவு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட ஊர்மக்களை அழைத்து அவர்களுடன் அவர்களது காணிகள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தார்.

இக்கலந்துரையாடலின் போது, கேப்பாபுலவு கிராமம் இராணுவத் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக, குறித்த கிராமவாசிகள் அனைவரையும் சீனியாமோட்டை மற்றும் சூரிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காட்டுப்புறத்தில் தற்காலிகமாக தங்கவைப்பதெனவும் விரைவில் அவர்கள் தத்தமது காணிகளில் மீள்குடியேற்றப்படுவர் எனவும் இதற்கு இப்பிரதேசத்தினைச் சேர்ந்த குடும்பங்களின் ஒப்புதலைக் கோரியே தான் இக்கலந்துரையாடலை மேற்கொள்வதாகவும் காணி திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இவரது கருத்தினை ஏற்றுக்கொள்ளாத கேப்பாபுலவு மக்கள் “நாம் எங்களுடைய சொந்த காணியில் மாத்திரமே மீள்குடியேறுவோம். வேறு எந்த இடத்திலும் குடியேறுவதற்கு நாம் தயாராக இல்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றப்பட வேண்டுமென்று இப்பிரதேச மக்கள் தமது குலதெய்வமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் சிறப்பு பூசை வழிபாடுகளையும் பிரார்த்தனையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த கிராமத்தின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள், பாவனைக்குள் வைத்துக்கொண்டிருக்கின்ற சிறீலங்கா இராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவின் தலைமை அதிகாரிகள் குறித்த நிலப்பகுதியினை தம்மிடமிருந்து மீளப்பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டாம் எனவும் அப்பகுதிகளிற்குச் சொந்தமாக குடும்பங்களிற்கு வேறு இடங்களில் மாற்றுக் காணிகளை வழங்குமாறும் முல்லை மாவட்ட அரச அதிபர் செயலக அதிகாரிகளை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இறுதிப் போரின்போது உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்து அனுபவித்த துயரங்களை மறப்பதற்கு வழியின்றியும் தொலைக்கப்பட்ட தமது வாழ்வாதார வளங்களையும் இதர சொத்துக்களையும் மீளப் பெற்றுக்கொள்வதற்கு தமது சொந்த நிலமே தமக்கு கைகொடுத்துதவும் என்ற பெரும் எதிர்பார்ப்போடு தமது மீள்குடியமர்வை எதிர்பார்த்துக் கேப்பாபுலவு மக்கள் காத்திருக்கின்றனர்.
கேப்பாபுலவு மக்கள் போல பல நூறு ஊர் மக்கள் மீள்குடியமர்வுக்குக் காத்திருக்கின்றனர். ஆனால் அது சாத்தியமில்லை. இந்த மக்களது காணிகள் இராணுவ முகாம்கள், கடற்படை முகாம்கள், பாரிய இராணுவ குடியிருப்புக்கள், உல்லாச விடுதிகள், அய்ந்து நட்சத்திர உணவகங்கள், பவுத்த விகாரைகள், தூபிகள், புத்தர் சிலைகள் போன்றவற்றை நிறுவ இராணுவம் ஏற்கனவே பறித்து விட்டது. இதுதான் மகிந்த இராசபக்சே அரசு மேற்கொள்ளும் “மீள்குடியமர்வு” இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்தலின் அழகாகும்.
போர் முடிந்த பின்னரும் சிங்கள பேரினவாத அரசு தமிழ்மக்களை பொட்டுப்பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய், கிள்ளுக் கீரையாய் நடத்துகின்றது. சிங்கள மக்களது கண்களுக்கு வெண்ணெயும் தமிழ் மக்களது கண்களுக்கு சுண்ணாம்பும் பூசுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதிப் போர் நடைபெற்ற ஆனந்தபுரம் கிருஷ்ணன்கோயில் சூழலிலும் அம்பலவன் பொக்கணை கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதுமாத்தளன், மாத்தளன், பொக்கணை ஆகிய பகுதிகளில் அண்மையில் பொதுமக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் இப்படி மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி அந்தரத்தில் விடப்பட்டுள்ளனர்.

சொந்தக் காணிகளில் கொட்டில், தறப்பாள் வீடுகளை அமைத்துக் குடியிருந்தால் மட்டுமே தற்காலிக வீடுகளைக் கட்டித் தருவோம் எனத் தொண்டு நிறுவனங்கள் இந்த மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளன.

செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்து இப்பகுதிகளுக்கு அழைத்துவரப்பட்ட சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்களையே இப்பிரதேசத்தில் மீள்குடியமர்த்தியுள்ளனர்.

ஆனால் இந்த மக்களுக்குரிய எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக அம்பலவன் பொக்கணைப் பகுதியிலுள்ள குடிநீர்க்கிணறுகள் கூட இதுவரையும் சுத்தம் செய்யப்படவில்லை.

இக் கிணறுகள் இரும்புப் பொருட்கள் போடப்பட்டு மணலால் தூர்க்கப்பட்டுள்ளதால் பொதுமக்களால் சுத்தம் செய்ய முடியவில்லை. இதனால் இம்மக்கள் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இரணைப்பாலைப் பகுதிக்குச் சென்று குடிநீரைப் பெறவேண்டிய அவல நிலையிலுள்ளனர்.

சிங்கள – பவுத்த பேரினவாத அரசு தமிழ்மக்களை பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது. வன்னிக்குச் செல்லும் வெளிநாட்டு இராசதந்திரிகள் சுற்றுலாப் பயணிகளைப் போல் வன்னியை மேலெழுந்தவாரியாக சுற்றிப் பார்த்துவிட்டு மீள்குடியமர்பு துரித கதியில் நடைபெறுவதாக சான்றிதழ்கள் வழங்கிவிட்டுப் போகிறார்கள்.

கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கியது. சுதந்திரத்துக்குப் பின்னர் நடைபெற்ற திட்டமிட்ட கல் ஓயா போன்ற சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக அம்பாறை மாவட்டம் 10.04.1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், பாணமை, அம்பாறை, உகன, தமன ஆகிய பிரதேசங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இவற்றுடன் பதுளை மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மகா ஓயா, பதியத்தலாவை என்பவற்றுடன் இணைத்து அம்பாறை எனும் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது பற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.

2009 ஆம் ஆண்டு மே இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமே சிங்கள இனம் கண்டு கொள்ளாத இடங்களை சிங்களவர்கள் பவுத்த திருத்தலத்திற்குரியது என உரிமை கொண்டாடி வருகின்றனர். மாவட்டத்தின் திருத்தலங்கள் அமைந்துள்ள தாந்தாமலை, குடும்பிலை, சுவாமிமலை, போன்ற பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் அமைந்துள்ள பகுதி சிங்களவர்களுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து அங்கு பவுத்த விகாரைகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதே சமயத்தில், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட் பட்ட கெவிளியாமடு, கச்சக்கொடி போன்ற பகுதிகளில் 450 க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் தமிழர் காணிகளில் அத்துமீறி குடியேறியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முந்திரிகைக் குளம், ௭ரிஞ்சகாடு உட்பட நான்கு தமிழ்க் கிராமங்களில் 500 ஏக்கர் காணிகள் சிங்கள குடியேற்றத்திற்காக அபகரிக்கப்படவுள்ளது.

குறித்த காணிகள் தமிழ் மக்களுக்குச் சொந்தமான உறுதிக்காணிகளாகும். இந்தக் காணிகள் கடந்த சில வாரங்களாக அளவீடு செய்யப்பட்டு 200 க்கும் மேற்பட்ட இடைக்கால வீடுகள் அமைக்கப் பட்டுள்ளதுடன் சாலை வசதிகளும் செய்யப்பட்டு மின்கம்பங்கள் நாட்டப்பட்டு வருகின்றன.

அதே நேரம் நீண்ட காலமாக இப்பகுதியில் குடியிருந்து போரினால் இடம்பெயர்ந்து தற்போது மீளக்குடியமர்ந்துள்ள 200 தமிழ் குடும்பங்களுக்கு இதுவரை இடைக்கால வீடுகள் கூட அரசினால் கட்டிக் கொடுக்கப்படவில்லை அத்துடன் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்தக் சிங்களக்குடியேற்றம் தொடர்பாக முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் கேட்ட போது இது குறித்துத் தனக்கு ௭வரும் அறிவிக்கவில்லை ௭ன்றும் பொது மக்களிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கவில்லை ௭ன்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் சிங்கள குடியேற்றத் திட்டத்திற்கான அபிவிருத்திகள் அனைத்தும் வெலிஓயா பிரதேச செயலகத்தின் ஊடாகவே இடம்பெற்று வருகிறது. இந்தச் செயலகப் பிரிவு அண்மையில் உருவாக்கப்பட்டதாகும்.

இவ்வாறு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைதீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் என அனைத்துப் பகுதிகளிலும் தமிழர்களின் மரபுவழிக் காணிபூமிகள் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் அபகரிக்கப்படுகின்றன. இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பை நியாயப்படுத்த பல உத்திகளை சிங்கள – பவுத்த பேரினவாத அரசு பயன்படுத்துகிறது.

1) அந்த இடங்களில் முன்னர் சிங்களவர்கள் குடியிருந்தவர்கள். இப்போது அவர்கள் மீள்குடியமர்த்தப் படுகின்றனர்.
2) அந்த இடங்கள் பவுத்த விகாரைகள், தூபிகள் இருந்த தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. எனவே அவை பவுத்தர்களுக்குரிய புனித பிரதேசமாகும்.
3) போரில் ஊனமுற்ற இராணுவத்தினருக்கு புதிய குடியிருப்புத் திட்டங்களை உருவாக்குவதற்கு இடம் வேண்டும்.
4) நாட்டின் பாதுகாப்புக்கு இராணுவ தளங்கள், கடற்படைத் தளங்கள், விமானப் படைத்தளங்கள், உல்லாச விடுதிகள், அய்ந்து நட்சத்திர உணவகங்கள் நிருமாணிக்கக் காணிவேண்டும்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் மண்ணை இழப்பதோடு தங்களது நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநித்துவத்தையும் இழந்து வருகிறார்கள். நாடாளுமன்றப் பிரதிநித்துவம் எப்படி உலக்கை தேய்ந்து உளிப்பிடியானது என்பதை முன்னர் (அத்தியாயம் 2) பார்த்தோம். பிரதிநித்துவப் பலத்தை இழக்கும் போது அரசியல் பலத்தையும் தமிழினம் இழந்து வருகிறது.
இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேரடியாகவே சிங்கள இராணுவம் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழர்களின் சுடுகாடாக இருந்தாலும் சரி, விளையாட்டுத் திடலாக இருந்தாலும் சரி அவற்றை இராணுவம் அதிகார பலத்தைப் பயன் படுத்தி அபகரிக்கிறது. தமிழ் அரசியல்வாதிகளினால் அவற்றைத் தடுப்பதற்கு இயலாத நிலை காணப்படுகிறது.

வட கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புப் பற்றி மேற்குலக நாடுகள் சரி, இந்தியா சரி கண்டு கொள்வதே இல்லை. மனித உரிமைச் சிக்கல்கள் பற்றியே இந்த நாடுகள் ஓரளவு கரிசனை காட்டுகின்றன. வாழும் நிலத்தைப் பறிப்பது அதியுச்ச மனித உரிமை மீறல் என்பதை இந்த நாடுகள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

கனகராயன் ஆறு, இரணைமடு, விசுவமடு, முத்தையன்கட்டு, தண்ணிமுறிப்பு, பதவியா, கட்டுக்கரைக்குளம், பாவற்குளம், பன்குளம், குமரேசன் கடவை (கோமரங்கடவல) கந்தளாய், அல்லை, மின்னேரி, உன்னிச்சைக் குளம், ஊரியான் குளம் போன்றவையும் கவுடுள்ள, கூறுளு வாவி, பராக்கிரம சமுத்திரம், மதுரு ஓயா, கல் ஓயா, வெலி ஓயா, யோதவாவி, திசவாவி, பெரகம, தம்போல, கொட்டுகச்சி, ரிதிபந்திசி, மகாஉசீ வாவி போன்ற சிங்களக் குடியேற்றங்கள் தமிழர்களின் பாரம்பரிய மண்ணில் உருவாகின. இதில் கனகராயன் ஆறு, இரணைமடு, விசுவமடு, முத்தையன் கட்டு, தண்ணிமுறிப்பு, கட்டுக்கரைக்குளம், பாவற்குளம் என்பன போர்க்காலத்தில் மீட்டெடுக்கப்பட்டன. ஆனால் இன்று மீண்டும் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் அங்கு முடுக்கி விடப்பட்டுள்ளன.

அடுத்து திருகோணமலையில் அய்ம்பதுகளிலும் அதற்குப் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட பாரிய சிங்களக் குடியேற்றங்கள் பற்றிப் பார்ப்போம். (வளரும்)


தமிழ் ஏதிலிகள் காடுகளில் சிங்கள இராணுவம் அவர்கள் வீடுகளில்!

நக்கீரன்
(7)

சிங்களக் குடியேற்றங்கள் மூலம் வடக்கு கிழக்கை சிங்கள மயப்படுத்தல், இராணுவ மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல் ஓய்ந்த பாடில்லை. அவை தொடர்ந்த வண்ணம் உள்ளன. கிழக்கு மாகாணத்தை சிங்கள மயப்படுத்த 40 ஆண்டு காலம் எடுத்தது, ஆனால் வடக்கை சிங்கள மயப்படுத்த  10 -15 ஆண்டுகள் போதும் என்று திரு சம்பந்தர் சொன்னது விரைவில் பலித்துவிடும் போல் இருக்கிறது. முன்னர் முடிக்குரிய காணிகளிலேயே சிங்களக் குடியேற்றம் நடைபெற்றது. இப்போது தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளிலும் சிங்களக் குடியேற்றம் நடைபெறுகிறது. முன்னர் சிவில் அதிகாரிகளே சிங்களக் குடியேற்றங்களுக்குப் பொறுப்பாக இருந்தார்கள். இப்போது சிங்கள இராணுவம் அதனை முன்னின்று நடத்துகிறது. பவுத்த விகாரைகள், பவுத்த தூபிகள், புத்தர் சிலைகள் ஆகியவற்றை இராணுவமே அரச செலவில் கட்டி முடிக்கிறது.

மேற்குலக நாடுகளில் அரசும் மதமும் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அரசுகள் மதசார்பற்ற (secular) அரசுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மதம் என்பது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான நம்பிக்கை. அரசு அதில் தலையிடக் கூடாது. அமெரிக்காவின் அரசியல் யாப்பின் முதலாவது திருத்தம் ஒரு மதத்தை இன்னொரு மதத்துக்கு மேலாக பரிந்துரைப்பது அல்லது ஆதரிப்பதைத் தடை (First Amendment, which prohibits government from endorsing or supporting one religion above others) செய்கிறது.

அமெரிக்காவில் ஒரு நீதிமன்ற வளாகத்தில் அல்லது அரசுக்கு சொந்தமான இடத்தில் பத்துக் கட்டளையை எழுதி வைக்க முடியாது. இதன் பொருள் என்னவென்றால் ஒரு மதத்துக்கும் இன்னொரு மதத்துக்கும் அல்லது ஒரு மதத்துக்கும் மதம் அல்லாத ஒன்றுக்கும் இடையே அரசு நடுநிலை பேணுகிறது.

ஆனால் சிறீலங்கா யாப்பில் (மூன்றாவது அத்தியாயம்) பவுத்த மதத்துக்கு மிக முக்கியமான இடம் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பவுத்த மதத்தைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமையாகும். அதே சமயம் ஏனைய மதங்களுக்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 10 மற்றும் 14 (1) (e) வழங்கும் உரிமைகளுக்கு உறுதி கூறப்படுகிறது. (Chapter III on Buddhism says “The Republic of Sri Lanka shall give to Buddhism the foremost place and accordingly it shall be the duty of the State to protect and foster the Buddha Sasana, while assuring to all religions the rights granted by Article 10 and 14(1)(e).

ஒரு காலத்தில் இந்து சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு செயல்பட்டது. இப்போது இந்து சமய மற்றும் கலாசார விவகார எனத் தனியான அமைச்சு இல்லை. பவுத்த சமயம் மற்றும் சமய சம்பந்தமான அமைச்சு (Ministry of Buddha Sasana and Religious Affairs) என்ற பெயரிலான அமைச்சே உள்ளது. அந்த அமைச்சின் கீழ் இந்து விவவகாரத் திணைக்களம் உள்ளது. இந்து சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் பதவி இருந்த காலத்தில் அறநெறிப் பள்ளிகள் நிறுவுவதற்கு அதிகளவு ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டன. இலவச சீருடைகள், தளபாடங்கள், இசைக் கருவிகள், ஆசிரியர் ஊக்குவிப்புப் படி எனப் பல தளங்களில் இவ் ஊக்கிவிப்புகள் அமைந்தன. இன்று இந்த ஊக்குவிப்புகள் இல்லாததால் அறநெறிப் பள்ளிகள் நலிவுற்றுள்ளன. பவுத்தம் நீங்கலாக ஏனைய சமயங்கள் மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகின்றன. பவுத்த மதத்தை பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமை என்பதால் பவுத்த விகாரைகள், தூபிகள், பவுத்த பள்ளிகள் போன்றவற்றுக்குத் தாராள நிதியுதவி வழங்கப்படுகிறது.

கடந்த மாத இறுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சே கிளிநொச்சி நகரில் சிங்கள இராணுவத்தால் கட்டப்பட்ட பவுத்த விகாரை ஒன்றைத் திறந்து வைத்தார். அங்கு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் பவுத்த சமயத்தையும் பவுத்தர்களையும் பாதுகாத்து வருவதற்கும் முப்படைகளையும் அரச தலைவர்களையும் தீவிரமாக ஆதரித்து வரும் பவுத்த மகா சங்கத்துக்கும் நன்றி கூறினார். சங்கமித்தை வெள்ளரசு கிளையுடன் வந்திறங்கிய சம்பல்துறையில் (மாதகல்) பாரிய விகாரை ஒன்று படைத்துறையினரால் தனியார் காணியில் கட்டப்பட்டுள்ளது. அது தென்னிலங்கை பவுத்த சிங்களவர்களுக்கு ஒரு சுற்றுலா மையமாக விளங்குகிறது. காணிச் சொந்தக்காரர்களான தமிழர்கள் இடைத்தங்க முகாம்களில் கடந்த 17 ஆண்டு காலமாக ஏதிலிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

மே 2009 இல் போர் முடிந்த பின்னர் ஏ9 நெடுஞ்சாலையில் மட்டும் 28 க்கும் அதிகமான பவுத்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றிடங்களை வழங்கும்வரை அவர்களின் காணிகளை இராணுவமுகாம் அமைக்கும் தேவைக்காக கையகப்படுத்துவதை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. கேசன்கேணி மக்களில் சிலர் தாக்கல்செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமது குடியிருப்புப் பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்க வேண்டியிருப்பதால் அங்கிருந்து தம்மை வெளியேறுமாறு உத்தரவிட்டதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

இந்த அறிவித்தலை அடுத்து பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்னும் 50 குடும்பங்கள் வரை தமது இருப்பிடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கேசன்கேணி மக்கள் வழக்கில் சுட்டிக் காட்டியிருந்தார்கள். குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால் அவர்களுக்கு அந்த தொழிலை கொண்டு நடத்தக்கூடிய விதத்திலான மாற்றுக்காணிகளே வழங்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதாடினார்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த 333 பரப்புக் காணி உட்பட கோப்பாய் பிரதேசத்தில் 550 பரப்பு காணியை சிங்கள இராணுவம் முகாம் அமைப்பதற்குக் கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் தலைமையில் நடைபெற்றபோது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மத்தியில் மரத்தை வெட்டித்தள்ளும் கோடரிக் காம்புகள் இன்னும் இருப்பதை இந்தக் காணி ஒதுக்கீடு காட்டுகிறது.

மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த 333.09 பரப்புக் காணியை 51 ஆவது படைத் தலைமையகம் அமைப்பதற்கும் பன்னாலைப் பகுதியிலுள்ள 36 பரப்பு அரச காணியை இராணுவ முகாம் அமைப்பதற்கும் தம்பாலையில் 179 பரப்புக் காணியை இராணுவத்தினரின் தேவைக்கும் இராணுவத்தினர் கோரியுள்ளனர் என பிரதேச செயலாளர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டு காலத்தில் மாணிக்கம் தோட்டத்தில் இருந்து அகற்றப்பட்ட சுமார் 300,000 மக்களில் பெரும்பாலோர் அவர்களது சொந்த காணிகளில் அல்லது அவர்கள் வாழ்வாரத்துக்கு ஏற்ற இடங்களில் மீள்குடியமர்த்தப்படவில்லை.

செப்தெம்பர் 23 ஞாயிறு மாலை சிங்கள இராணுவம் இந்த முகாமில் இருந்த கொட்டில்களை அகற்றியது. முகாமைச் சுற்றியிருந்த முள்கம்பி வேலியையும் பிய்த்து எறிந்தது. அடுத்த நாள் 24 இல் அங்கிருந்த 361 குடும்பங்களைச் சேர்ந்த 1187 பேர் அவர்களது விருப்பத்துக்கு மாறாக  பலவந்தமாக லொறிகளில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவுக்கு மந்தைகள் போல் கொண்டு சென்ற இராணுவம் ஒரு பகுதி மக்களைப்பள்ளிக் கூடம் ஒன்றில் தங்கவைத்தது. எஞ்சியவர்களை சீனியாமோட்டை என்னும் காட்டுப் பகுதிக்குள் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டது.

சீனியாமோட்டை என்பது மாணிக்கத் தோட்டம் போன்ற இன்னொரு காட்டுப் பகுதி. இராணுவ முகாம்கள் தவிர அருகில் எந்த மக்களும்இல்லை. புதர்கள் மண்டிய அந்தப் பகுதியில் குடிக்க, சமைக்க, குளிக்க, இயற்கை உபாதைகளுக்குப் பயன்படுத்த எதற்கும் தண்ணீர் இல்லை. ஒரு முகாமில் இருந்து அதைவிட மோசமானக் காட்டுப் பகுதியில் மக்களைக் கொண்டு விடுவதற்குப் பெயர் மீள் குடியேற்றம் என வெறிபிடித்த இராணுவமும் சிங்கள அரசும் தம்பட்டம் அடிக்கின்றன.

ஆனால் மொத்தம் 361 குடும்பங்களில் 125 கேட்பார்புலவு மக்கள் அங்கிருந்து வெளியேற மறுத்தனர். ஞாயிறு இரவு அவர்கள் மரங்களின் கீழ் படுத்துறங்கினர். தங்களைத் தங்களது வீடு வளவுகளில் மீள் குடியேற்றப்படுவர் என்ற உத்தரவாதம் தந்தாலொழிய அந்த இடத்தை விட்டு நகர மறுத்தனர். அவர்களது நிலத்தில் குடியமர்ந்துள்ள இராணுவம் அவர்களை தற்போதைக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் தங்குமாறும் பின்னர் அவர்கள் குடியமர்வதற்கு மாற்று இடவசதி செய்து தரப்படும் என்று கூறியது. இராணுவத்தின் வேண்டுகோளை மக்கள் நிராகரித்தார்கள். இருந்தும் மாணிக்கம் தோட்ட  மக்களை அவர்களது சொந்தக் காணிகளில் குடியமர்த்தவோ வேறு மாற்று தரிப்பிட வசதி எதுவுமோ செய்யாது சடுதியாக இராணுவம் அந்த முகாமைக் கடந்த செப்தெம்பர் 25 இல் உத்தியோகபூர்வமாக மூடிவிட்டது.

மேலும் அதற்கு முந்திய வாரம் சூரியபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்களை “மீள்குடியமர்த்து” வதாகக் கூட்டிப் போய் ஒரு காட்டுப் பகுதியில் இறக்கி விட்டார்கள். அங்கு குடி தண்ணீர் உட்பட எந்த அடிப்படை வசதியும் இருக்கவில்லை.

இதற்கிடையில் சிங்கள அரசினால் வடக்குக்குத் தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்ட இராணுவ தளபதி பொனிபேஸ் பெரேரா கொழும்பில் இருந்து வெளிவரும் டெயிலி மிறர் நாளேட்டுக்குக் கொடுத்த நேர்காணலில் “இன்றிலிருந்து சிறீலங்காவில் முகாம்களே இல்லை.  இடம்பெயர்ந்த மக்கள் என்றும் யாரும் இல்லை. இனிமேல் ஏதிலி முகாம்கள் இருப்பதாகவோ ஏதிலிகள் இருப்பதாகவோ யாரும் பரப்புரை செய்ய முடியாது” என மார்தட்டிக் கொண்டார்.

மந்துவில் பிரதேசத்தில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 827 பேரும், கேட்பார் புலவில் 110 குடுபங்களைச் சேர்ந்த 360 பேரும் அவர்களது சொந்த இடத்தில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் காட்டுப் பகுதியிலுள்ள தனியார் காணிகளில் எந்தவித உதவியுமின்றி அந்தரத்தில் விடப்பட்டுள்ளார்கள்.

கேட்பார் புலவை சேர்ந்த 110 குடும்பங்கள் தற்காலிகமாக சூரியபுரம் காட்டுப்பகுதியில் தனியார் காணி ஒன்றில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிதண்ணீர் வசதி உட்பட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

எங்களை எங்கள் சொந்த காணியில் குடியமர அனுமதித்தாலே போதும். நாங்கள் எங்கள் வயிற்றுப்பிழைப்பைப் பார்த்துக்கொள்வோம். மூன்று ஆண்டுகளாக ஏதிலிமுகாமில் இவர்களை நம்பி ஏமாந்துவிட்டோம். இனியும் எம்மை இவர்கள் ஏமாற்றக்கூடாது. நாங்கள் எங்கள் சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கவேண்டும் என்கிறார்கள்.

இந்த மக்கள் எப்போது அவர்களது காணிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் எனக் கேட்டதற்கு அரச அதிகாரிகள் அது குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்கள்.

முல்லைத்தீவு மாவட்டம், கேட்பார்புலவு பகுதியில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள சுமார் 2,282 ஏக்கர் காணிக்குரிய அனுமதிப்பத்திரத்தை தம்மிடம் வழங்குமாறு இராணுவம் மக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் வளமான விவசாயக் கிராமமாகக் காணப்பட்ட கேட்பார்புலவில் சுமார் 700 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தன.

மக்களின் வாழ்வாதார வளங்களான கால்நடைகளும் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் காணப்படுகின்றன. அத்துடன் இந்தப் பகுதி மக்களின் சிறுகடற் தொழில்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலை தொடருமானால் தமது இருப்பே கேள்விக்குறியாகி விடுமென இங்குள்ள மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவில் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதால் விவசாயமும் பாதிக்கப்படுகின்ற அவலநிலை உருவாகியுள்ளது.

மாணிக்கம் தோட்டம் மூடப்பட்டு அங்குள்ள அகதிகள் மீள்குடியேற்றபட்டுள்ளனர் என்றாலும் அவர்களது சொந்த இடங்களில் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. அவர்களது சொந்த இடங்களில் தற்போது சிறிலங்கா இராணுவமே குடிகொண்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த மக்கள் துன்ப துயரங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்  என சிறிலங்காவுக்கான அய்க்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான இணைப்பாளர் சபீனே நந்தி தெரிவித்தார்.

அத்துடன் முன்னர் இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் தற்போதும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலுள்ள அவர்களது உறவினர்களுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களையும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற அரசு முனைப்புடன் செயற்படவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அய்யன்னா அதிகாரிகள் சொல்வதை மகிந்த இராசபக்சே அரசு காதில் போட்டுக் கொள்வதில்லை என்பது தெரிந்ததே. “நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிற மாதிரி அழுகிறேன்” என்பதே அய்யன்னா கடைப்பிடிக்கும் கோட்பாடாகும்!

ஊடகவியலாளர்கள் இந்த ஏதிலிகளைச் சந்திக்க முயற்சி செய்த போது அதனை அரசு தடுத்துவிட்டது. சிங்கள இராணுவம் தமிழ்மக்களை தலைமுறை தலைமுறையாக ஒட்டாண்டிகளாக வைத்திருக்கவே விரும்புகிறது. அதே நேரம் தமிழர்களது நிலத்தில் சிங்களக் குடியேற்றம், இராணுவ முகாம்கள், பவுத்த விகாரைகள், தூபிகளை அமைத்து தாய் நிலத்தின் பண்பாட்டைச் சிதைத்து  குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கையில் இராணுவம் மும்மரமாக இறங்கியுள்ளது. இதைப்பற்றி அமெரிக்காவோ இந்தியாவோ கவலைப்படுவதாக இல்லை.

சிங்களக் குடியேற்றம் மூலம் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்கள் இன்று சிறுபான்மையராக ஆக்கப்பட்டுவிட்டனர்.
கிழக்கு மாகாண சபைக்கு கடந்த செப்தெம்பர் 8 இல் நடைபெற்ற தேர்தலில் 15 முஸ்லிம், 12 தமிழர், 8 சிங்களவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முஸ்லிம் காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ள ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதலமைச்சராக ஒரு முஸ்லிமையும் அமைச்சர்களாக இரண்டு முஸ்லிம்களையும் இரண்டு சிங்களவர்களையும் நியமித்துள்ளது. விமலவீர திஸாநாயகா என்ற சிங்களவர் கல்வி, காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சபைத் தலைவர் பதவிக்கும் ஒரு சிங்களவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளும் தரப்பில் 14 முஸ்லிம்கள், 6 சிங்களவர், 2 தமிழர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல கல் ஓயா (பட்டிப்பளை) பள்ளத்தாக்குக் குடியேற்றத்திட்டம் ஓகஸ்து 23, 1949 இல்  பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவால் தொடக்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அல்லை, கந்தளாய், பதவியா, மொறவேவா, பன்குளம் எனப் பல சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் சிங்கள அரசுகளால் செய்து முடிக்கப்பட்டன. இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களினால் தென்தமிழீழத்தில் தமிழர்களது குடித்தொகை விழுக்காடுஏற்பட்ட குடிப்பரம்பல் மாற்றத்தை கீழ்க் கண்ட அட்டவணை 1 காட்டுகிறது.

கிழக்கு மாகாண குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றம் ( 1881-1981)
அட்டவணை 1

ஆண்டு

தமிழர்

முஸ்லிம் சிங்களவர் ஏனையோர்

மொத்தம்

தொகை

%  தொகை % தொகை % தொகை

%

1827

34,758

75.65 11,533 23.56 250 1.30 1087 2.22

47,628

1881

75,318

58.96 43,001 33.66 5,947 4.66 3,489 2.73

127,755

1891

86,701

58.41 51,206 34.50 7,508 5.06 3,029 2.04

148,444

1901

96,917

55.83 62,448 35.97 8,778 5.06 5,459 3.14

173,602

1911

101,181

55.08 70,395 38.32 6,909 3.76 5,213 2.84

183,698

1921

103,245

53.54 75,992 39.41 8,744 4.53 4,840 2.51

192,821

1946

136,059

48.75 109,024 39.06 23,456 8.40 10,573 3.79

279,112

1953

167,898

47.37 135,322 38.18 46,470 13.11 4,720 1.33

354,410

1963

246,059

45.03 184,434 33.75 108,636 19.88 7,345 1.34 546,474

1971

315,566 43.98 247,178 34.45 148,572 20.70 6,255 0.87

717,571

1981

410,156

42.06 315,436 32.34 243,701 24.99 5,988 0.61 975,251
2007 மதிப்பீடு

590,132

40.39 549,857 37.64 316,101 21.64 4,849 0.33

1,460,939

1827-2007

அதிகரிப்பு

555,374 1597.83 538,324 4667.68 315,851 126340.40 3,762 446.09

1,413,311

மூலம் – புள்ளிவிபரத் திணைக்களம்

உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களது குடித்தொகை படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. 1827 இல் 75.65 விழுக்காடாக இருந்த தமிழர்களது குடித்தொகை 2007 இல் 40.39 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அதாவது தமிழர் சிறுபான்மை இனமாக ஆக்கப்பட்டுவிட்டனர். அதே சமயம் முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் குடித்தொகை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு முற்பகுதியில் எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணக்கு இன்னும் வெளிவரவில்லை. அது வந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இப்போது கோழிக் குஞ்சுகளை விறாண்ட பருந்துகள் வட்டமிடுவது போல மாணிக்கம் தோட்டத்தைக் கைப்பற்ற சிறிலங்கா இராணுவம் கடுமையாகப் போராடுகிறது.

மாணிக்கம் தோட்டத்தைக் கைப்பற்றுவதில் வணிகர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இராணுவத்தினரும் ஆர்வம் காட்டுவதாக அமைச்சர் சனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

செட்டிக்குளம் மாணிக்கம் தோட்டப் பிரதேசம் 6000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.  2009 மே மாதத்தில் வவுனியா மாணிக்கம் தோட்டப் பகுதியில் காடுகள் வெட்டி வீழ்த்தப்பட்டு அகதி முகாம்கள் உருவாக்கப்பட்டன. சுமார் 1,750 ஏக்கர் நிலப் பரப்பில் உருவான இந்த முகாமில் அதிகபட்சமாக 300,000 தமிழ் ஏதிலிகள் குடியமர்த்தப் பட்டனர். உலகத்தின் மிகப் பெரிய உள்நாட்டு அகதிகள் முகாம் என அய்யன்னா இதை வருணித்தது. அடிப்படை வசதிகள்கூட இல்லாத இந்த முகாம்களில் இருந்த தமிழர்கள், பல கட்டங்களாக பல்வேறு இடங்களில் குடி அமர்த்தப்பட்டனர். அது பெயருக்குதான் ‘மீள் குடியேற்றமாக’ இருந்ததே ஒழிய, உண்மையில் அவை இடமாற்றந்தான்.

இப்போது 200 ஏக்கர் பரப்பை தமது பண்ணை பாடசாலைக்காக தருமாறு இராணுவம் கோரியுள்ளது. தொல்லியல் திணைக்களமும் 40 ஏக்கர் பரப்பைக் கேட்டுள்ளது. ஒரு சிமென்ந்து நிறுவனம் தொழிற்சாலை அமைக்க இடம் கேட்கிறது. இதற்கிடையே செட்டிக்குளம் வலயம் 2 இல் 250 ஏக்கர் நிலப்பரப்பில் சிறிலங்கா இராணுவம் ஆறு மாதங்களுக்கு முன்னரே காலாற்படை பயிற்சி முகாம் ஒன்றை அமைத்துள்ளதாக பிரதேச செயலர் கமலதாசன் தெரிவித்துள்ளார். இந்தக் காணி பறிப்பு வடக்கில் சிங்கள இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு தந்திரமான முறையில் எடுக்கும் முயற்சியாகும்.

இதேவேளை மாணிக்கம் தோட்டப் பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த 40 குடும்பங்கள் அங்கு திரும்பவேண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவற்றைப் பார்க்கும் போது பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது பொய்யாமொழியாக இருக்கிறது. (வளரும்)


வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள சிறீலங்கா ஆயுதப் படைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 400,000!

நக்கீரன்

(8)

எனக்கு பாவ புண்ணியத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் அப்படி ஏதாவது இருந்தால் தமிழீழத்தில் குறிப்பாக வன்னி, சம்பூர் போன்ற இடங்களில் வாழும் மக்கள் பாவப்பட்ட மக்கள் என நினைக்கிறேன். அவர்களது அல்லல்கள் அவலங்கள் தொடர்கின்றன. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை என்பார்கள். தமிழ்மக்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழும் கண்ணீர் சிங்கள அரசைத் தேய்ததாக இல்லை. போர் முடிந்த பின்னர் சிங்கள அரசு இந்த மக்களை அவர்களது சொந்த வீடுவாசல்களில் மீள்குடியமர்த்தி அவர்களது உடைந்த வீடுகளைத் திருத்தி சீரழிக்கப்பட்ட அவர்களது வாழ்வாதாரங்களை படிப்படியாக கட்டியெழுப்ப உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இராணுவப் பிடிக்குள் அகப்பட்டுவிட்ட இந்த மக்களை சிங்கள இராணுவம் பந்தாடுகிறது. அவர்களது காணிகளைப் பறித்து அவற்றில் இராணுவதளங்கள், குடியிருப்புக்கள், உல்லாச விடுதிகள், விகாரைகள், தூபிகள், புத்த சிலைகளை நிறுவியுள்ளது. மேலும் இராணுவ தளங்களை உருவாக்க தனியார் காணிகளை அடாத்தாகப் பறிக்கிறது.

இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெயர்ந்த 300,000 அகதிகளில் 75, 000 பேர் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை.  மாணிக்கம் தோட்ட முகாம்களிலிருந்து வெளியேறிய ஒரு தொகுதி அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் அல்லது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். பல்வேறு காரணிகளினால் அகதிகள்  மீள்குடியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சொந்த இடங்களில் மீள்குடியேறிய மக்களுக்கு அரசாங்கம் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியுள்ளது என  இரா.சம்பந்தன் தில்லியில் வைத்து அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னைய காலங்களில் தனியார் காணிகள் பொதுப் பணிகளுக்குத் தேவைப்பட்டால் அதனைக் கையகப்படுத்த அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிடும். முறைப்பாடு செய்வோர் முறைப்பாடு செய்யலாம். அதன் பின் விசாரணை நடக்கும். அதனைக் கையகப்படுத்த முடிவெடுக்கும் பட்சத்தில் காணிச் சொந்தக்காரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இப்போது சட்டத்தை இராணுவம் தனது கையில் எடுத்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக எதனையும் செய்யலாம் தட்டிக் கேட்பதற்கு ஆளில்லை என்ற நிலை உள்ளது. நிலப் பறிப்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனால் நீதி கிடைக்கும் என்ற உறுதிமொழி இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பை வடக்கைத் தனது பிடிக்குள் வைத்திருக்கும் இராணுவம் நடைமுறைப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் இல்லை. போதாக் குறைக்கு நீதித்துறை உட்பட எல்லாவற்றையும் அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. நீதித்துறை ஆணையத்தின் செயலாளர் அண்மையில் தாக்கப்பட்டுள்ளார். சனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களே தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை சிங்கள இராணுவம் அடாத்தாக அபகரித்துள்ளது. காவலாளியைத் அடித்துத் துரத்திவிட்டு பூட்டுப் போட்டுள்ளது. தற்போது குறித்த காணியில் இராணுவம் காவலரண் ஒன்றை அமைத்துள்ளது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நல்லூர் பிரதேச சபை தலைவர் எஸ். வசந்தகுமார் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலே சுமார் 875 ஏக்கர் நிலப்பரப்பு இன்று வரை இராணுவத்தினரின் பிடியில் உள்ளதுடன், பல வணிக நிலையக் கட்டடங்களும் படையினரின் பயன்பாட்டிலேயே உள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் கமநலச் சேவை நிலையத்தின் முன்பாகவுள்ள பொன்னம்பலம் மருத்தவமனை இயங்கிய காணியும் அதனைச் சூழவுள்ள பத்துக் குடும்பங்களின் காணிகளும், புதுக்குடியிருப்புச் சந்திப் பகுதியிலுள்ள வணிக நிலையங்கள் உள்ளடங்கலாக சுமார் பதினைந்து ஏக்கர் காணி மற்றும் வணிக நிலையங்கள், பொதுமக்களின் வாழ்விடங்கள் என்பவற்றை சிறீலங்கா இராணுவத்தின் 682 ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்துள்ளது.

இதேவேளை புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் சுமார் 800 ஏக்கர் நிலப்பகுதியை சிறீலங்கா இராணுவத்தின் 68 ஆவது படைப்பிரிவு பிடித்துவைத்துள்ளது. இதைவிடப் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான ஏறத்தாழ 60 ஏக்கர் நிலப்பகுதியையும் சிறீலங்கா இராணுவத்தின் 683 ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்துள்ளது.

இவ்வாறு பொதுமக்களுக்குச் சொந்தமான மேற்படி 875 ஏக்கர் காணி இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருப்பதால் இந்தக் காணிகளின் உரிமையாளர்கள் மீள்குடியமர முடியாமலும் வாழ்வாதாரச் செயற்பாடுகளைத் தொடங்க முடியாமலும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்ற கதையை இது நினைவூட்டுகிறது.

வலிகாமம் சீராவளி என்ற இடத்தில் இராணுவம் சீனாவின் உதவியோடு ஒரு இராணுவ முகாமை நிருமாணித்து வருகிறது. இந்தக் காணி ஆதியில் தனியாருக்குச் சொந்தமாக இருந்தது. அதில் மாட்டுச் சவாரி நடப்பதுண்டு. பின்னர் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்கு விற்கப்பட்டது.

புதுக்குடியிருப்புப் பிரதேச மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை விடுத்தும் எந்தப் பயனும் கிட்டவில்லை.

பாம்பு வாயில் அகப்பட்ட தேரை, பூனை வாயில் அகப்பட்ட எலி, யானை வாயில் அகப்பட்ட கரும்பு, முதலை வாயில் அகப்பட்ட ஆட்டுக்குட்டி எப்படி மீளமுடியாதோ அதுமாதிரி இந்தக் காணிகளை மீளமுடியாதவாறு இராணுவம் அடாத்தாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

சனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றபாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் மொத்தம் 285  பரிந்துரைகளை பரிந்துரைத்தது. அவற்றில் முக்கியமானவை.

* வடக்கில் இராணுவக் குறைப்பு
* காணி தொடர்பான சிக்கல்கள் தீர்த்து வைத்தல்
* சட்டவிரோத படுகொலைகள்
* கடத்தப்பட்டு காணாமல் போனோர்
* தடுப்பு முகாம்களில் இருப்பவர்களின் விவரங்களை வெளிப்படுத்தல்
* வடக்கில் சிவில் நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல்
* ஊடக சுதந்திரங்களை உறுதிப்படுத்தல்
* மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை அதிகரித்தல்
* சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டுதல்
* கருத்துக்கூறும் சுதந்திரம் உறுதிப்படுத்தல்

இவற்றில் எதையும் அரசு இதய சுத்தியோடு தீர்த்து வைக்கவில்லை. ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்பாள் என்பது போலவே அரசு நடந்து கொள்கிறது.

வடக்கில் இராணுவத்தைக் குறைப்பதற்குப் பதில் பல புதிய படைத்தளங்களும் கடற்படை முகாம்களும் கண்காணிப்புக் கோபுரங்களும் காவலரண்களும் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த செப்தெம்பர் 19 ஆம் நாள் சென்னையில் இருந்து வெளிவரும் இந்து நாளேடு  ” வட – கிழக்கில் சிறீலங்கா இராணுவத்தின் இருப்பு பெரிய அளவில் உள்ளது” (Sri Lankan Army still has vast presence in North & East) என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில் “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தீவின் வட – கிழக்கில் சிறீலங்கா இராணுவம் மிகப் பெரிய அளவில் தனது இருப்பைத் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 19 பிரிவுகளில் 16  பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள 3 பிரிவுகள் நீங்கலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா 3 பிரிவுகளை நிறுத்தியுள்ளது. வவுனியாவில் 5 பிரிவுகளை நிறுத்தியுள்ளது. இவற்றைவிட மேலும் 2 பிரிவுகள் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று பிரிவுகள் மட்டும் தென்னிலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஏனைய படைகளோடு ஒப்பிடும் போது சிறீலங்கா படைப்பிரிவு சிறியதாகும். ஆறாயிரம் தொடக்கம் ஏழாயிரத்துக்கு இடைப்பட்ட வீரர்களைக் கொண்டது. இதில் குறைந்த எண்ணிக்கையை எடுத்தால் வடக்கு கிழக்கில் 85,000 – 86,000 போர் வீரர்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை கிழக்கில் பிறிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கைப் படையணி (Special Task Force) மற்றும் கடற்படை, விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்காது” எனத் தெரிவித்தது. (http://www.thehindu.com/news/article3915391.ece)

ஆனால் சிங்கள இராணுவம் தொடர்ந்து தனது படை எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் இப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதன் எண்ணிக்கை 12,000 – 15,000 மட்டுமே என இராணுவப் பேச்சாளர் ருவன் வனிகசூரியா தெரிவிக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் முயற்சியாகும்.

ஏப்ரல், 2009 இல்  முல்லைத்தீவின் நந்திக்கடல் நீரேரிக்கு அண்மையாக  விடுதலைப்புலிகளின் படையணிகளையும்  பொதுமக்களையும் சிறீலங்கா இராணுவம் சுற்றிவளைத்த போது அது 20  படைப்பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது.

அதாவது இந்த காலப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தில் 11, 21, 22, 23, 51, 52, 53, 55, 56, 57, 58, 59, 61 ஆகிய  படைப்பிரிவுகளும் சிறப்பு நடவடிக்கை படையணிகளான (Special Task Force)  2, 3, 4, 5,6, 7,  8  என்பனவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

வடபகுதியில் நிலைகொண்டுள்ள இந்த நடவடிக்கைப் படையணிகளில் நடவடிக்கை படையணி 4, 5, 8  என்பன படைப்பிரிவு  நிலைக்குத் தரமுயர்த்தப்பட்டது.  மேலும் ஒரு புதிய  படைப்பிரிவு  (65)  போர் நிறைவடைந்த பின்னர் உருவாக்கப்பட்டது.

இராணுவம் 2009 மே 19 இல் மாதம் மரபு வழியிலான சமரை நிறைவு செய்துள்ளதாக அறிவித்த போது 265 பற்றாலியன்களை உள்ளடக்கிய 20 படைப்பிரிவுகளைக் கொண்ட 240,000 படையினரை சிறீலங்கா இராணுவம் கொண்டிருந்தது. எனினும் அது தற்போது 300,000 படையினரை கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சே தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாது சிறீலங்காவின் முப்படையினரினதும் எண்ணிக்கை 450,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். (வீரகேசரி வாரஏடு – 02.05.2010)

போருக்குப் பின்னர் படைக்குறைப்பு நடைபெறவில்லை. காரணம் பாதுகாப்பு மற்றும் நகர மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதி ஆண்டு தோறும் கூடிக் கொண்டு போகிறதேயொழிய குறையவில்லை. பாதுகாப்பு அமைச்சுக்கு 2013 ஆண்டுக்கு 290 பில்லியன் (ஒரு பில்லியன் 100 கோடி) உரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டின் முழுச் செலவு 2,250 பில்லியன். இந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சென்ற ஆண்டை விட 26 விழுக்காடு அதிகமானது.  2012 இல் மொத்தச் செலவில் (2,220 பில்லியன்) 230 பில்லியன் உரூபாய் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது.

மேலே கூறியவாறு 20 படைப்பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை 300,000  என்று எடுத்துக் கொண்டால் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள 16 படைப்பிரிவின் எண்ணிக்கை 240,000  ஆக இருக்க வேண்டும்!

எனவே வடக்கில் 15,000 – 18,000  இராணுவத்தினர் மட்டுமே உள்ளனர் என்று கூறுவது ஏமாற்றுப் பேச்சாகும். அது உண்மையானால் மிகுதி 150,000 – 200,000 இராணுவத்தினர் எங்கே இருக்கிறர்கள் என்ற கேள்வி எழுகிறது.

போர் முடிந்த அடுத்த வாரம் ஊடகங்களை சந்தித்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா 170,000 ஆயிரமாக இருந்த இராணுவத்தை 230,000 உயர்த்திவிட்டதாகவும் அதனை மேலும் 300,000 ஆக உயர்த்த வேண்டிய ‘தேவை’ இருப்பதாகவும் குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது. (http://www.dnaindia.com/world/report_sri-lankan-army-strength-to-be-raised-by-100000-fonseka_1259091)

பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் காணப்படும் தரவுகளின்படி சிறீலங்காவின் படை பலம் 500,000 (http://www.defence.pk/forums/military-forum/172283-sri-lanka-armed-forces-military-sri-lanka.html) எனக் கூறப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு.

சிறீலங்கா ஆயுதப் படைகள் – சிறிலங்கா இராணுவம் (Sri Lanka Armed Forces – Military of Sri Lanka)
சிறீலங்கா ஆயுதப்படைகள் – Sri Lanka Armed Forces

சிறீலங்கா இராணுவம் – Sri Lanka Army

சிறீலங்கா கடற்படை – Sri Lanka Navy
சிறீலங்கா விமானப்படை – Sri Lanka Air force
சிறப்பு நடவடிக்கைப் படையணி – Special Task Force
அரச புலனாய்வு சேவைகள் –     State Intelligence Services
சிவில் பாதுகாப்புப் படை –    Civil Defence Force

தற்போது ( ஏப்ரில் 12, 2012)  சிறீலங்கா ஆயுதப் படைகளின் பலம் 500,000   ஆகும். சேமப்படையின் எண்ணிக்கை  80,000 (Reserve personnel) ஆகும். (Currently the strength of Sri Lanka Armed Forces 500,000 active personnel & 80,000 reserve personnel)

மேலே கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் தரவுப்படி வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள சிறீலங்கா ஆயுதப் படைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 400,000! இதன் காரணமாகத்தான் நாளாந்தம் சிறீலங்கா ஆயுதப் படை தமிழர்களது காணிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது. (வளரும்)


சிங்களக் குடியேற்றத்தினால் திருகோணமலையில் தமிழர் சிறுபான்மை ஆக்கப்பட்டுள்ளனர்!

நக்கீரன்
(9)

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக வன்னியில் இடம்பெயர்ந்து ஆதிவாசிகள் போல் மர நிழலிலும் தறப்பாள் கொட்டில்களிலும் வாழ்ந்த மக்கள் இப்போது மீண்டும் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

தமிழகத்தின் கிழக்குக் கரையோரத்தை தாக்கிய “நிலாம்” புயல் தமிழீழத்தின் கிழக்குக் கரையையும் தாக்கியுள்ளது.
வன்னிப் பெருநிலப்பரப்பில் கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 6,497 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் தெரிவித்துள்ளன. இதில் 503 குடும்பங்களைச் சேர்ந்த 1721 பேர் இடம்பெயர்ந்து இடைத் தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட இயக்கச்சி, அல்லிப்பளை, இத்தாவில், முகமாலை ஆகிய கிராமங்களில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 684 பேரும் பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் நல்லூரில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேரும், கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 114 பேருமாக 214 குடும்பங்களைச் சேர்ந்த 853 குடும்பங்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியுள்ளனர் எனக் கிளிநொச்சி மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 5,583 குடும்பங்களைச் சேர்ந்த 19,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருமுறிகண்டியில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 480 பேரும், இந்துபுரத்தைச் சேர்ந்த 122 குடும்பங்களைச் சேர்ந்த 405 பேரும், முத்தையன் கட்டைச் சேர்ந்த 153 குடும்பங்களைச் சேர்ந்த 502 பேரும், பண்டாரவன்னிக் கிராமத்தைச் சேர்ந்த 55 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேரும், பேராறைச் சேர்ந்த 45 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேரும், முத்துவிநாயகபுரத்தைச் சேர்ந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த 227 பேரும், கனகரத்தினபுரத்தைச் சேர்ந்த 58 குடும்பங்களைச் சேர்ந்த 235 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
மாணிக்கம் தோட்ட முகாமில் இருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக் கான மக்கள் நடுக்காட்டில் விடப்பட்டு இன்று வரை அவர்கள் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த செப்தெம்பர் மாதம் 23/ 24 ஆம் நாள் மாணிக்கத் தோட்டத்து முகாமில் இருந்து இராணுவத்தால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட  361 குடும்பங்களைச் சேர்ந்த 1187 பேர் அவர்களது விருப்பத்துக்கு மாறாக  பலவந்தமாக லொறிகளில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவுக்கு மந்தைகள் போல் கொண்டு சென்ற இராணுவம் ஒரு பகுதி மக்களைப் பள்ளிக் கூடம் ஒன்றில் தங்கவைத்தது. எஞ்சியவர்களை சீனியாமோட்டை என்னும் காட்டுப் பகுதிக்குள் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டது.

மந்துவில் பிரதேசத்தில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 827 பேரும், கேட்பார் புலவில் 110 குடுபங்களைச் சேர்ந்த 360 பேரும் அவர்களது சொந்த இடத்தில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் காட்டுப் பகுதியிலுள்ள தனியார் காணிகளில் எந்தவித உதவியுமின்றி அந்தரத்தில் விடப்பட்டார்கள்.  கேட்பார் புலவு மக்கள் பாம்புகள், பூச்சிகள் வாழும் சூரியபுரதில் உள்ள தனியார் காணியில் தங்க வைக்கப்பட்டார்கள்.
புதர்கள் மண்டிய அந்தப் பகுதியில் குடிக்க, சமைக்க, குளிக்க, இயற்கை உபாதைகளுக்குப் பயன்படுத்த எதற்கும் தண்ணீர் இல்லை.  இந்த மக்கள் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் ஒரு முகாமில் இருந்து அதைவிட மோசமான காட்டுப் பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளார்கள். எங்களை வாழ வைக்க முடியாவிட்டால் நஞ்சு கொடுங்கள் குடித்துவிட்டு உயிரை விடுகிறோம் என்கிறார்கள்.

இப்போது முல்லைத்தீவு மாவட்டத்தை தாக்கிய புயலில் இந்த மக்களும் பாதிப்புக்குள்ளாகிப் பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த மக்களை காட்டாச்சி நடத்தும் கொடுங்கோலர்கள் தண்டிக்கிறார்கள் என்றால் இயற்கையும் சேர்ந்து அவர்களைத் தண்டிக்கிறது.

இந்த மக்கள் ஆள்வோரால் இப்படித் ஈன இரக்கமின்றித் தண்டிக்கப்படுவதற்கு என்ன காரணம்? அவர்கள் தமிழர்களாகப் பிறந்ததே காரணமாகும்.

நீதி நியாயத்துக்குப் பயந்த அரசென்றால் போரினால் இடம் பெயர்ந்த இந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தி, வீடில்லாதவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தும் உடைந்த வீடுகளைத் திருத்திக் கொடுத்தும் வாழ்வாதாரத்துக்குத் தேவையான குடிதண்ணீர், கழிவறைகள், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். ஆனால் இவற்றை சிங்கள அரசு செய்யவில்லை.

பாதுகாப்புக்கு 290 பில்லியனை (ஒரு பில்லியன் 1,000 கோடி) செலவழிக்கும் (2013)  சிங்கள அரசு மீள்குடியேற்றத்துக்கு வெறுமனே 0.5 பில்லியனை மட்டும் ஒதுக்கியுள்ளது!

டி.எஸ். சேனநாயக்கா தொடக்கி வைத்த பாரிய சிங்களக் குடியேற்றங்களினால் பாதிக்கப்பட்ட மாவட்டம் திருகோணமலை மாவட்டம் ஆகும். தொடர்ச்சியான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள் இன்று சிறுபான்மையாக ஆக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் தமிழர் 3, முஸ்லிம்கள் 4, சிங்களவர் 3  ஆக மொத்தம் 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கீழே உள்ள அட்டவணை 1 தேர்தல் முடிவுகளைக் காட்டுகிறது.

அட்டவணை 1
திருகோணமலை தேர்தல் மாவட்டம் 2012 மாகாணசபை தேர்தல் முடிவுகள்

கட்சி மூதூர் சேருவில திருகோண

மலை

அஞ்சல்வாக்குகள் மொத்த
வாக்குகள் வாக்குகள் வாக்குகள் வாக்குகள் விழுக்காடு
ததேகூட்டமைப்பு 10,213 5,014 28,067 1,102 44,396 29.08
அய்மசுமுன்ணி 13,011 17,785 7,949 4,579 43,324 28.38
முஸ்லிம் காங்கிரஸ் 14,617 2,390 8,642 527 26,176 17.15
அய்தேகட்சி 12,318 7,148 1,994 24,439 16.01
தேசிய சுதந்திர முன்னணி 490 6,450 1,527 1,055 9,522 6.24
தமிழர் விடுதலைக் கூட்டணி 38 79 259 8 384 0.25
ஏனையவை 2,280 1,009 869 264 4422 2.89
செல்லுபடியான வாக்குகள் 52,967 39,875 50,292 9,529 152,663 100
செல்லுபடியற்றவாக்குகள் 3,032 2,979 4,563 750 11,324
அளிக்கப்பட்ட வாக்குகள் 55,999 42,854 54,855 10,279 163,987
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 89,370 70,141 85,852 245,363
வாக்களித்தவர் விழுக்காடு 62.66 61.10 63.89 66.83

Source: Elections Department
குறிப்பு – 2008 ஆம் ஆண்டுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசும் அய்க்கிய தேசியக் கட்சியும் கூட்டாகப் போட்டியிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை.

இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இனவாரியாக வாக்காளர் பலத்தை கீழ்க் கண்ட அட்டவணை 2 காட்டுகிறது.

அட்டவணை 2

மாவட்டங்களின் இனவாரியான வாக்காளர்    தொகை

மாவட்டங்களின்     இனவாரியான       வாக்காளர்    தொகை
 தேர்தல் மாவட்டம் தமிழர் முஸ்லிம் சிங்களவர் மொத்தம்
மட்டக்களப்பு 255,115 73.66 89635 25.88 1600 00.46 346350
திருகோணமலை 88,607 36.00 83,684 34.00 73,839 30.00 246130
அம்பாறை 69,783 16.00 209,350 48.00 157,013 36.00 436146
கிழக்கு மாகாணம் 413,505 40.20 382,669 37.20 232,452 22.60 1,028,626

 Source: Elections Department

முஸ்லிம் வாக்காளர்களால் 4 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். முப்பது விழுக்காடு சிங்களவர் 3 உறுப்பினர்களை தெரிவு செய்ய முடிந்தது. வேறு மாதிரிச் சொன்னால் 64 விழுக்காடு சிங்களவர்களும் முஸ்லிம்களும் 70 விழுக்காடு இருக்கைகளை கைப்பற்ற முடிந்திருக்கிறது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களது குடிப்பரம்பல் படிப்படியாக குறைந்து வந்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் (1827 – 1981) ஏற்பட்ட குடிப்பரம்பல் மாற்றத்தை கீழ்க்கண்ட அட்டவணை 3 காட்டுகிறது.

அட்டவணை 3
திருகோணமலை மாவட்டத்தில் இனக் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றங்கள் (1827-1981)

சிங்களவர் தமிழர் முஸ்லிம்
ஆண்டு எண்ணிக்கை விழுக்காடு எண்ணிக்கை விழுக்காடு எண்ணிக்கை விழுக்காடு
1827    250 1.3 15,663 81.80   3,245 16.90
1881 935 4.2 14,394 64.8 5,746 25.9
1891 1109 4.3 17,117 66.4 6,426 25.0
1901 1203 4.2 17,069 60.0 8,258 29.0
1911 1138 3.8 17,233 57.9 9714 32.6
1921 1501 4.4 18,586 54.5 12846 37.7
1946 11,606 15.3 33,795 44.5 23219 30.6
1953 15,296 18.2 37,517 44.7 28616 34.1
1963 40,950 29.6 54,050 39.1 42560 30.8
1971 54,744 29.1 71,749 38.1 59924 31.8
1981 86,341 33.6 93,510 36.4 74403 29.0
1827-1981
அதிகரிப்பு
           86091 344.36 77,847 497.01 71,158 2192.85

மூலம் – இலங்கை (சிறீலங்கா) குடிமதிப்பீடு 1881 – 1981
திருகோணமலை மாவட்ட நிலப்பரப்பு – 2618.2 ச.கிமீ

கீழ்க் கண்ட அட்டவணை 4 கிழக்கு மாகாணத்தில் (1881- 2012) இடையில் இடம்பெற்ற இனவாரியான குடிப்பரம்பல் மாற்றத்தைக் காட்டுகிறது.

அட்டவணை 4
கிழக்கு மாகாணம் இனவாரி குடிப்பரம்பல் 1881 – 2012
கிழக்கு மாகாணம் இனவாரி குடிப்பரம்பல் 1881 – 2012

ஆண்டு தமிழர் முஸ்லிம் சிங்களவர் ஏனையோர் மொத்த எண்ணிக்கை
No. No. No. No.
1881  குடிமதிப்பு 75,318 58.96 43,001 33.66 5,947 4.66 3,489 2.73 127,755
1891 குடிமதிப்பு 86,701 58.41 51,206 34.50 7,508 5.06 3,029 2.04 148,444
1901 குடிமதிப்பு 96,917 55.83 62,448 35.97 8,778 5.06 5,459 3.14 173,602
1911 குடிமதிப்பு 101,181 55.08 70,395 38.32 6,909 3.76 5,213 2.84 183,698
1921 குடிமதிப்பு 103,245 53.54 75,992 39.41 8,744 4.53 4,840 2.51 192,821
1946 குடிமதிப்பு 136,059 48.75 109,024 39.06 23,456 8.40 10,573 3.79 279,112
1953 குடிமதிப்பு 167,898 47.37 135,322 38.18 46,470 13.11 4,720 1.33 354,410
1963 குடிமதிப்பு 246,059 45.03 184,434 33.75 108,636 19.88 7,345 1.34 546,474
1971 குடிமதிப்பு 315,566 43.98 247,178 34.45 148,572 20.70 6,255 0.87 717,571
1981 குடிமதிப்பு 410,156 42.06 315,436 32.34 243,701 24.99 5,988 0.61 975,251
2001 குடிமதிப்பு n/a n/a n/a n/a n/a n/a n/a n/a n/a
2007 குடிமதிப்பீடு 590,132 40.39 549,857 37.64 316,101 21.64 4,849 0.33 1,460,939
2012 குடிமதிப்பு 617,295 39.79 569,738 36.72 359,136 23.15 5,212 0.34 1,551,381

1881 இல் 5,947 (4.66 விழுக்காடு) ஆக இருந்த சிங்களவர் எண்ணிக்கை 2012 இல் 359,136 (23.15) ஆக உயர்ந்துள்ளது. அதே காலப் பகுதியில் 43,001 (33.66 விழுக்காடு) ஆக இருந்த முஸ்லிம்களது எண்ணிக்கை 569,738 (36.72 விழுக்காடு) ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் 1881 இல் 75, 318 (58.96 விழுக்காடு) ஆக இருந்த தமிழர்களது எண்ணிக்கை 2012 இல் 617,295 (40.39 விழுக்காடு) ஆக உயர்ந்தாலும் விழுக்காடு குறைந்துள்ளது! அதாவது 8.57 விழுக்காடு குறைந்துள்ளது. சிங்களக் குடியேற்றம் காரணமாகவே தமிழர்களது விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால் முஸ்லிம்களது விழுக்காடு தமிழர்களது விழுக்காடு போல் குறையாது 3.06 விழுக்காடு  கூடியிருக்கிறது.

தொடர்ந்து எழுது முன்னர் திருகோணமலை பற்றிய வரலாற்றை ஒருமுறை பின்நோக்கிப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
திருகோணமலையின் வரலாறு திருக்கோணேசுவர ஆலயம் மற்றும் அங்கு காணப்படும் குளங்கள் போன்றவற்றோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

ஆசியாவில் உள்ள ஒரே இயற்கைத் துறைமுகம் திருகோணமலை என்பது யாவரும் அறிந்ததே. திருகோணமலை வரலாற்றுக் காலந்தொட்டே மார்க்கோ போலோ (Marco Polo) போன்ற கடலோடிகளையும் மேற்காசியா – சீன வணிகர்களையும் ஈர்த்துள்ளது.

கிரேக்க புவியியலாளர் தொலமி (கிபி 250) தாம் வரைந்த இலங்கைப் படத்தில் திருகோணமலையைக் குறிப்பிடுகிறார். இதிகாசங்கள் இராவணனது மனைவி மண்டோதரி கோணேசுவர ஆலயத்தை வழிபட்டார் எனச் சொல்கின்றன. மலையின் அடிவாரத்தின் கிழக்குப் புறத்தில் வங்காள விரிகுடா பரந்து கிடக்கிறது.

இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் திருகோணமலை இந்துப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக விளங்கியது. அதனால் அதனைக் கைப்பற்ற போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் போட்டி போட்டார்கள். திருகோணமலையைச்  சுற்றி எத்தனையோ கடற் சமர்கள் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது (1941 – 1945) ஆசியாவில் ஆங்கிலேயர்களது மிக முக்கிய துறைமுகமாகத் திருகோணமலை விளங்கியது.
திருகோணமலையில் இருந்து 4 கல் தொலைவில் புகழ்பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகள் (7) காணப்படுகின்றன. இந்தக் கிணறுகளில் ஊறும் நீர் வெவ்வேறு அளவு சூட்டைக் கொண்டதாக அமைந்துள்ளது.

திருக்கோணமாமலை ஆலயத்தை கட்டியவன் குளக்கோட்டன் எனக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

இலங்கையில் கிமு 3 ஆம் நூற்றாண்டில் பவுத்தம் பரவுவதற்கு முன்னர் திருகோணமலை இந்துக்களுக்கு புனித தலமாக இருந்திருக்கிறது. இலங்கையில் விசயன் காலத்துக்கு முன்னர் இருந்த அய்ந்து ஈஸ்வரங்களில் திருக்கோணேசுவரம் ஒன்றாகும். (வளரும்)


குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும் கோணமாமலை!
நக்கீரன்
(10)

மகாவம்சம் திருகோணமலையை கோகர்ண எனக் கூறுகிறது. இது பாலி மற்றும் வடமொழி வடிவமாகும். சிங்களத்தில் GONA என அழைக்கப்படுகிறது. இதுவும் தமிழ் KONA என்ற சொல்லின் திரிபாகும்.

சைவசமய குரவர்களான திருஞானசம்பந்தர் (7ஆம் நூற்றாண்டு) திருகோணமாமலையில் எழுந்தருளியுள்ள சிவனைப் பற்றிப் பதிகம் (மூன்றாம் திருமுறை) பாடியிருக்கிறார். இதுவே இந்த ஆலயம் பற்றிய பழைய தமிழர் வரலாற்றுக் குறிப்பாகும்.

நிரைகழல் அரவஞ் சிலம்பொலியலம்பும் நிமலர் நீறணி திருமேனி
வரைகொழுமகளோர் பாகமாப்புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற்பிளவும் அளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்கும் கோணமாமலையமர்ந்தாரே.

சிவபெருமானின் வலது திருவடியில் வீரக்கழலும் இடது திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பு அணிந்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திருமேனியர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும் கரிய அகில் கட்டைகளும் மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவன் வீற்றிருந்தருளுகின்றார்.

அடுத்த பாடலில் ஞானசம்பந்தர் திருகோணமலையின் வளத்தைச் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.

கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே.

விரைவாகப் பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்துத் திருமேனிமேல் போர்த்திக் கொண்டவர் சிவன். அவர் பெண் யானை போன்ற நடையை உடையவளாய், வளையல்களை அணிந்தவளாய்ப் பிறை போன்ற நெற்றியையுடைய உமா தேவியை ஒரு பாகமாக உடையவர். பிறர் கொடிது என்று அஞ்சத்தக்க அலைகளையுடைய ஒலிக்கின்ற கடல், முத்துக்களைச் சுமந்து மக்களுக்கு வழங்கும் வளமைமிக்க திருக்கோண மாமலையில் சிவன் வீற்றிருந்தருளுகின்றார்.

கோணாமா மலையில் குடிகள் நெருக்கமாவும் பெருக்கமாகவும் வாழ்ந்தார்கள் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

எட்டாவது பாடலில் இராவணன் கையிலை மலையைப் பெயர்த்த புராணக் குறிப்பு காணப்படுகிறது. கயிலைமலையை எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவர் சிவன். பின் அவன் ஏத்திப் போற்ற விருப்பத்துடன் வெற்றி வாளும் நீண்ட வாழ்நாளும் அருளியவர் என்பது பாடல்.

கோணேசுவரத்திற்கும் இராவணனுக்கும் தொடர்புண்டு என்ற மரபு பலராலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேச்சுரத்தைப் பூசித்து வந்தான் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. இராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்று தட்சிண கைலாய புராணம் கூறுகின்றது. இதற்குச் சான்று பகர்வது போன்று இம்மலைப் பாறையில் இராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் காணப்படுகின்றது. இராவணன் கிறிஸ்து யுகத்துக்கு மிகவும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய காலத்துக்குப் பின் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது என்றும் ராஜாவளிய என்னும் புத்த சமய வரலாற்று நூல் கூறுகின்றது.

இராவணனோடு தொடர்பு படுத்தப்படும் இன்னொரு தலம் கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளும் அங்குள்ள சிவன் கோயிலுமாகும். இராவணேசுவரன் தனது தாயின் இறுதிச் சடங்கை கன்னியாவில் செய்தான் என்பது மரபு வழிக் கதையாகும். இலங்கையில் அய்ந்து ஈஸ்வரங்கள் இருந்தும் திருக்கோணேசுவரம் மட்டுமே இராவணனோடு தொடர்ப்பு படுத்தப்படுவது நோக்கத்தக்கது.

வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கோயில் ஒன்று மலையின் அடிவாரத்தில் இருந்ததென நம்பப்படுகின்றது. அது கிமு 306 இல் நிகழ்ந்த கடல் கோளினாற் சமுத்திரத்தினுள் மூழ்கிவிட்டது என நம்பப்படுகிறது. ஆழ்கடலில் அமர்ந்திருக்கும் கோணேசுரப் பெருமானுக்கு இன்றும் மலைப் பூசை செய்யப்படுகிறது. மலையின் அடியில் ஆழ்கடலுக்கு எதிரே மலைக்குகை போன்று பண்டைக்கோயிலின் மூலத்தானத்தின் ஒரு பகுதி இன்னமும் எஞ்சியிருக்கின்றது. அது பல்லவர் காலக் குகைக் கோயில் போன்றது. அக்கோயிலின் மிகுதி சமுத்திரத்தின் அடியில் உள்ளதென 1961 இல் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்த மக்வில்சன் என்பர் கூறியுள்ளார்.

கிமு 543 இல் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த விசயன் என்பவனோடும் திருக்கோணேஸ்வரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த விசயன் தனது ஆட்சிக்குப் பாதுகாப்பாக கிழக்குத் திசையில் உள்ள தம்பலகாமம் கோணேச கோயிலைப் புதுப்பித்துக் கட்டினானென மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.

கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் மகாசேனன் என்ற மன்னன் இக்கோயிலை அழித்து அந்த இடத்தில் விகாரையைக் கட்டினான். மகாவம்சத்தில் திருகோணமலையில் இருந்த பிராமணக் கடவுளுக்கான கோயில் ஒன்றை மகாசேனன் இடித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதனை மகாவம்சத்தின் உரைநூலான வங்சத்தப்பகசினியும் குறிப்பிட்டுள்ளது. மகாசேனன் கட்டிய விகாரையை அழித்து மீண்டும் கோணேசர் ஆலயத்தை அங்கு கட்டியுள்ளனர்.

கிபி ஏழாம் நூற்றாண்டில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டு பழைய கோயில்கள் கருங்கற் கோயில்களாகக் கட்டப்பட்டபோது, கோணேசர் கோயிலும் கருங்கற்கோயிலாக மாறியிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு. கிபி 11ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சோழராட்சி நடைபெற்றபோது, கோணேச கோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. இதற்குச் சான்றாகக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சோழரின் பின் பொலநறுவையை ஆண்ட கஜவாகு மன்னன் கோணை நாயகருக்குப் பல மானியங்களை வழங்கினான் எனக் கோணேசர் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டின்பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

கிபி 1263 ஆம் ஆண்டில் இலங்கையைக் கைப்பற்றிய வீரபாண்டிய மன்னர், வெற்றிச்சின்னமாக இரண்டு `மீன்’ இலச்சினைகளை இந்த ஆலயத்தில் பொறித்துச் சென்றுள்ளார். இன்றும் இவ்விரு சின்னங்களும் கோணேசர் கோட்டை நுழைவாயிலில் காணப்படுகின்றன. பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில், மநுநீதிகண்ட சோழனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தானென யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் அநுராதபுரத்திலிருந்தே ஆட்சி செய்துள்ளனமை, குளக்கோட்டு மன்னனின் புனருத்தாரண வேலைக்குச் சாதகமாயிருந்திருக்க வேண்டும்.

கிப. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கோணேசுவரத்திற்குத் திருப்புகழ் பாடியுள்ளார். “விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை” எனத் தொடங்கும் பாடலில்,

“நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொணாமலை தலத்தாருகோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் திரு. ஆர். வடிவேல் எழுதிய திருகோணசுவரம் தொன்மையும் வன்மையும் (1995) என்ற ஆய்வு நூல் திருகோணமலை பற்றிய தகவல்களைத் தருகிறது. திருகோணமலை பற்றிய வரலாற்றில் நாட்டமுள்ளவர்கள் செல்லத்துரை குணசிங்கம் எழுதிய (1) கோணேசுவரம் (1973)  (2) The Tamils and Trincomalee (1979) பண்டிதராசர் எழுதிய தட்சணகைலாய புராணம் (1916)  பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய வன்னியர் (1970) க.தங்கேஸ்வரி எழுதிய குளக்கோட்டன் தரிசனம் (1993) கனகசபாபதி சரவணபவன் எழுதிய வரலாற்றுத் திருகோணமலை (2003) போன்ற நூல்களைப் படித்து அறிக.
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவர் திருகோணமலை மீது செல்வாக்குச் செலுத்தியதாகத் தெரிகிறது. குறிப்பாக மானவர்மன் (கிபி 630 – 668) காலத்தில் பல்லவரது செல்வாக்கு மேலோங்கி இருந்தது. திருகோமலையில் இருந்து 29 கல் தொலைவில் உள்ள திரியாயில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.

அரச கட்டிலை அட்டதத்தன் என்ற மன்னனிடம் பறிகொடுத்த மானவர்மன் நாட்டைவிட்டு ஓடிக் காஞ்சி சென்று பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மனிடம் (கிபி 630-668) அடைக்கலம் புகுந்தான். அக்கால கட்டத்தில் இடம்பெற்ற வாதாபி படையெடுப்பின் போது பல்லவப் படைப் பிரிவு ஒன்றுக்கு மானவர்மன் தலைமை தாங்கியதாகத் தெரிகிறது.

திருகோணேசுவர ஆலயத்துக்கு பல்லவ மன்னர்கள் திருப்பணி செய்தார்கள். அன்றைய ஆலயம் ஆயிரங்கால் மண்டபத்தைக் கொண்டதாக இருந்தது.

சோழர்களும் பாண்டியர்களும் கோணேசுவர ஆலயத்தை ஆதரித்தாகத் தெரிகிறது. பிறட்டிக் கோட்டை வாசலில் இரட்டை மீன்கள் கொண்ட இலட்சணையோடு எழுதப்பட்டிருக்கும் சொற்றொடர் அதற்குச் சான்றாக இருக்கிறது. இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு ஆகும். கி.பி. 12 ஆம் நூற்றாண்டின்பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
போர்த்துக்கேயர் இந்த ஆலயத்தை இடித்துத் தரமட்டமாக்கிய நிகழ்ச்சியை வரலாற்று ஆசிரியர் Tennent என்பவர் கீழ்க்கண்டவாறு விபரிக்கிறார்.
“போர்த்துக்கேயர் தங்கள் ஆட்சியின் முற்பகுதியில் திருகோணமலை பற்றி வாழாவிருந்தனர். ஆனால் ஒல்லாந்தர் 18 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் திருகோணமலையில் தலைகாட்டினார்கள். ஒல்லாந்த தளபதி கொன்ஸ்டன்டைன் டி சா (Constantine de Sa) 1622 இல் கண்டிய மன்னனோடு ஒப்பந்தம் எழுதிக்கொண்டது போர்த்துக்கேயரை அச்சத்துக்குள் ஆழ்த்தியது.

தங்கள் பரம்பரை எதிரிகள் இலங்கையில் காலூன்றுவதை விரும்பாது போர்த்துக்கேயர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்புத் துறைமுகங்களைக் கைப்பற்றித் தங்கள் மேலாண்மைக்குள் கொண்டு வந்தார்கள். அந்தக் கால கட்டத்தில்தான் கோணேசுவர ஆலயத்தைப் போர்த்துக்கேயர்கள் இடித்துத் தள்ளினார்கள்.

இந்து புத்தாண்டு நாளில் கோயில் இடிப்புத் தொடங்கியது. போர்த்துக்கேயப் படையினர் மாறு வேடத்தில் அடியார்களோடு அடியார்களாக ஆலய உள்வீதிக்குள் ஊடுருவினர். பூசை முடிந்து அடியார்கள் அங்கிருந்து அகன்ற பின்னர் இடிப்புத் தொடங்கியது. ஆலயத்தில் எஞ்சி இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். சில மணித்தியாலயங்களில் 2000 ஆண்டு காலமாகச் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கோயில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.

ஆயிரங்கால் மண்டபம் உட்பட ஆலயத்தை இடித்த கற்களைக் கொண்டே பிறட்றிக் கோட்டையைப் போர்த்துக்கேயர்கள் கட்டினார்கள்.
இன்றும் கோட்டை சுவர்களிலும் பீரங்கி மேடையிலும் தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டுக்களைக் காணலாம்.
ஆலயம் இடிக்கப்பட்ட பின்னர் சிலைகள் சில தம்பலகாமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
1950 இல் ஆலயத்தை அண்டியுள்ள கிணற்றில் இருந்து நான்கு சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை அய்ம்பொன்னால் ஆனவை. கடலடியில் நடத்திய ஆய்வுகளின் போது பல தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடலடியில் பழைய ஆலயம் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஏறக்குறைய 380 ஆண்டுகளுக்குப் பின்னர் கோணேசுவரர் ஆலயம் மீள் திருப்பணி செய்யப்பட்டு நாளாந்த பூசை மற்றும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

கடலை அண்டி பழைய கோயில் இருந்த இடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பூசைகள் நடைபெறுகின்றன.

திருகோணமலைப் பகுதியில் அழிந்து போன புத்த விகாரைகளும் காணப்படுகின்றன. பழைய காலத்தில் திரியாய் என்ற கிராமம் தமிழ் பவுத்தர்கள் வாழ்ந்த ஊராக இருந்திருக்கிறது.

திருகோணமலை மாவட்டம் சேருவிலையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஒன்று புத்த சங்கத்துக்கு மகாசிவன் மற்றும் காகபட்டி என்ற தமிழ் வணிகர்கள் குகை ஒன்றைத் தானம் செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

அம்பாறை குடுவில் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மேலும் ஒரு கல்வெட்டு “தீகவாபி குடிமக்கள் ஆன திசா (தமிழன்) அவனது மனைவி மக்கள் ஆகியோருக்குச் சொந்தமான குகை” எனக் குறிப்பிடுகிறது.

திசா என்பதும் தீசன் என்பதும் ஒரு பொருள் குறித்த சொற்களாகும். இதனால் தீசன் என்ற பெயருடையவர்கள் தமிழர்கள் எனப் பெறப்படும். தேவநம்பிய தீசன் நாகவம்சத்தைச் சார்ந்த தமிழ் மன்னன் ஆவான்.

மேலே குறிப்பிட்ட கல்வெட்டுக்கள் கிமு 2 ஆவது அல்லது 3 ஆவது நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும். (வளரும்)


பறிபோய்விட்ட திருகோணமலை
(11)

கோணேசுவரர் ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாசலில் பிரட்றிக் கோட்டை இருக்கிறது. சற்றுத் தள்ளி உட்புறமாகப் புத்தரின் பெரிய உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. கோணேசுவரர் ஆலயத்துக்குப் போவோர்கள் இந்தப் புத்தர் சிலையைக் கடந்தே செல்ல வேண்டும். புத்தரின் சிலைகள் சிங்கள – பவுத்த ஆக்கிரமிப்பின் சின்னமாக திருகோணமலை மாவட்டம் முழுதும் பரவலாக நிறுவப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் பிரட்றிக் கோட்டை வாசலில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை ஆகும்.

கடந்த ஆண்டு சிங்கள இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட சம்பூரில் இருபது ஆண்டுகள் கழித்துப் போயா நாள் கொண்டாடப்பட்டதாக கொழும்பு நாளேடு ஒன்று பெருமிதத்தோடு செய்தி வெளியிட்டிருந்தது. சம்பூரில் நிலைகொண்டுள்ள இராணுவம் அங்கு ஒரு புத்த விகாரையைக் கட்டி உள்ளது. அடுத்த கட்டமாக அங்கு ஒரு பவுத்த தேரர் குடிபுகுவார்.

பிரட்றிக் கோட்டை போர்த்துக்கேயரால் 1623 இல் கட்டப்பட்டது. ஒல்லாந்தர் அந்தக் கோட்டையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து 1639 இல் கைப்பற்றினார்கள். ஒல்லாந்தர்கள் கோட்டையை விரிவாக்கினார்கள். ஆனால் 1672 இல் பிரஞ்சுப் படை அக்கோட்டையைத் தாக்கி அதனைக் கைப்பற்றியது.

1782 ஆம் ஆண்டு சனவரி 8 இல் பிரித்தானியப் படை பிரட்றிக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றியது. ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் நாள் பிரஞ்சுப் படை அதனை மீளக் கைப்பற்றியது.

1783 இல் பிரான்ஸ் பிரட்றிக் கோட்டையை பிரித்தானியாவிற்கு கையளித்தது. பிரித்தானியா அதனை ஒல்லாந்தருக்குக் கொடுத்தது. இறுதியாக பிரித்தானியா 1795 இல் பிரட்றிக் கோட்டையைத் தாக்கி மீளக் கைப்பற்றியது. 1948 இல் இலங்கை சுதந்திரம் அடையும் வரையும் கோட்டை பிரித்தானியர் கைவசமே இருந்தது.

ஒல்லாந்தர் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களை நிருவாக அடிப்படையில் மூன்றாகப் பிரித்தனர்.

1. யாழ்ப்பாண நீதி மாவட்டம்

2. கொழும்பு நீதி மாவட்டம்

3. காலி நீதி மாவட்டம்

யாழ்ப்பாண நீதி மாவட்டம் என்பது தமிழர் வாழ்விடங்களான இன்றைய வடக்கு, கிழக்கு நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே ஒல்லாந்தர் தமிழர் நிலப்பரப்பை இலங்கைத் தீவின் ஏனைய நிலப்பரப்போடு இணைக்காமல் தனி நிருவாக அலகாக வைத்திருந்தனர் என்பது நோக்கத்தக்கது.

திருகோணமலையைக் கைப்பற்றுவதற்கு கொலனித்துவ நாடுகள் தங்களுக்குள் மோதிக் கொண்டதற்கு முக்கிய காரணம் அதன் இயற்கைத் துறைமுகமே. உலகின் 5 ஆவது பெரிய இயற்கைத் துறைமுகம் திருகோணமலையாகும். திருகோணமலையை மையமாகக் கொண்ட ஒரு கடற்படை இந்துப் பெருங்கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பிரட்றிக் கோட்டை இன்று சிங்கள இராணுவத்தின் திருகோணமலை மாவட்ட தலைமையகமாகவும் அரசாங்க அதிபரின் அலுவலகமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சீனன் குடாவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா கடற்படை அங்குள்ள ஒரு குன்றில் அருங்காட்சிக் கோபுரம் ஒன்றை நிறுவியுள்ளது. பிரித்தானியா காலத்து 3 பாரிய பீரங்கிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 5 கிமீ தூரத்துக்குச் சுடக்கூடிய வல்லமை வாய்ந்தவையாகும்.

1957 ஆம் ஆண்டுவரை திருகோணமலை பிரித்தானிய றோயல் கடற்படையின் முக்கிய தளமாக இருந்தது. கடற்படையில் பணியாற்றிய கடற்படையினர் பிரட்றிக் கோட்டையை குடியிருக்கப் பயன்படுத்தினர். அய்ம்பதுகளில் கடற்படையினரின் குடியிருப்புக்கு எனப் பல பங்களாக்கள் கட்டப்பெற்றன. இந்த பங்களாக்களில்தான் இன்று சிங்களப் படை அதிகாரிகள் குடியிருக்கின்றனர்.

1796 இல் கண்டி அரசு நீங்கலாக இலங்கையின் ஏனைய பகுதிகள் பிரித்தானியாவின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டன. 1815 இல் கண்டி அரசின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிரம இராசசிங்கன் சிங்கள பிரதானிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு அவனும் அவனது குடும்பமும் பிரித்தானிய படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கண்டி அரசை சிங்கள பிரதானிகள் பிரித்தானியாவோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியாவிற்குக் கையளித்தார்கள்.

1833 ஆம் ஆண்டு ஒக்தோபர் முதலாம் நாள் இலங்கையின் நிருவாகத்தை சீர்செய்யுமுகமாக கோல்புரூக் – கமெறூன் ஆணையம் இலங்கையை 5 மாகாணங்களாகப் பிரித்தது. இந்தப் பிரிப்பு நிருவாக வசதிக்காகச் செய்யப்பட்ட ஒன்றாகும்.
1) வட மாகாணம் – அனுராதபுரம் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் மன்னார். யாழ்ப்பாணம் அதன் தலைநகரம்.

2) கிழக்கு மாகாணம் – தம்பன்கடவை பிந்தனை கொட்டியாரம் பளுகாமம் பானமை திருகோணமலை மூதூர் மட்டக்களப்பு வெலிகந்தை குமண மற்றும் யால. மட்டக்களப்பு அதன் தலைநகரம்.

3) மேல் மாகாணம் (Western Province) – கற்பிட்டி, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கோட்ட, பாணன்துறை, களுத்துறை மற்றும் குருநாகல். தலைநகர் கொழும்பு.

4) தென் மாகாணம் – காலி தங்காலை மாத்தறை இரத்தினபுரி மற்றும் அம்பலாந்தோட்டை. தலைநகர் காலி.

5) மத்திய மாகாணம் – கண்டி, உடுநுவர, ஊவா. தலைநகர் கண்டி.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு ஒரு தமிழ் அலகும் கண்டிச் சிங்களவர்களுக்கு ஒரு அலகும் கரையோரச் சிங்களவர்களுக்கு இன்னொரு அலகும் என இலங்கை பிரிக்கப்பட்டிருந்தது. அந்த மூன்ற அலகுகளையுமே பிரித்தானியர் 5 மாகாணங்களாகப் பிரித்தனர்.
பின்னர் 1845 இல் வடமேற்கு மாகாணம் உருவாக்கப்பட்டது. அதன் தலைநகரம் குருநாக்கல். 1873 இல் வட மத்திய மாகாணம் உருவாக்கப்பட்டது. இதில் வடமாகாணத்தில் இருந்த நுவரகலவேவா கிழக்கு மாகாணத்தில் இருந்த தம்பன்கடவை இணைக்கப்பட்டன. வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ப்பற்று வட மேற்கு மாகாணத்தோடு இணைக்கப்பட்டது. அதன் தலைநகர் அனுராதபுரம். நாளடைவில் மாகாணங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

1904 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.

இவ்வாறு மாகாணங்கள் உருவாக்கப்பட்ட போது பிரித்தானிய ஆட்சியாளர் தமிழர்களது மரபுவழி தாயகத்தை கணக்கில் எடுக்கவில்லை. எடுத்துக்காட்டாக தம்பன்கடவை தமிழ்ப் பகுதியாகும். ஆனால் அது கிழக்கு மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டு வட மத்திய மாகாணத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் தோற்றம் கொண்ட இன மோதலுக்கு இந்தத் தவறு முக்கிய காரணியாகும்.

மேற் குறிப்பிட்ட 9 மாகாணாங்களில் 20 மாவட்டங்கள் இருந்தன. கீழ்க்கண்ட அட்டவணை 1, 1827 – 1981 ஆம் ஆண்டுவரை கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ் பேசும் – சிங்களம் பேசும் மக்கள் தொகை விழுக்காட்டைக் காட்டுகிறது.

அட்டவணை (1)
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் சிங்களம் பேசும் மக்கள் தொகை விழுக்காடு

 ஆண்டு

தமிழ்பேசும் மக்கள்

சிங்களம் பேசும் மக்கள்

1827

99.24

0.53

1881

93.82

4.66

1891

93.89

5.06

1901

91.80

5.05

1911

93.49

3.76

1921

93.95

4.53

1946

87.8

9.87

1953

85.5

13.11

1963

79.25

19.9

1971

78.61

20.70

1981

74.40

24.92

1955 இல் மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்தப்பட்டு மாகாணங்களின் எல்லைகள் மீள் வரையப்பட்டன.

கிழக்கு மாகாணம் – 10,440 ச.கிமீ இல் இருந்து 9,931 ச.கிமீ ஆகக் குறைக்கப்பட்டது.

வட மத்திய மாகாணம் – 10,352 ச.கிமீ இல் இருந்து 10,709 ச.கிமீ ஆக அதிகரிக்கப்பட்டது.

ஊவா மாகாணம் – 8,160 ச.கிமீ இல் இருந்து 8,478 ச.கிமீ ஆக உயர்த்தப்பட்டது.

தமிழர்களது தாயக நிலப்பரப்பு படிப்படியாக திட்டமிட்டுக் குறைக்கப்பட்டது.

1901 ஆம் ஆண்டு வட – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு 19,100 ச.கிமீ ஆக இருந்தது. பக்கத்து சிங்கள மாகாணங்களோடு தமிழ்நிலப் பரப்பின் ஒரு பகுதி இணைக்கப்பட்டதால் அதன் பரப்பளது 7,500 ச.கிமீ ஆல் குறைக்கப்பட்டு விட்டது.

1948 இல் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 7,000 ச.கிமீ விழுங்கப்பட்டு விட்டது. வட மாகாணத்தில் 500 ச.கிமீ விழுங்கப்பட்டு விட்டது.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பாரிய சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக சிங்களவர் தொகை திருகோணமலை மாவட்டத்தில் 15.3 (1946) விழுக்காட்டில் இருந்து 33.6 விழுக்காடாக (1981) உயர்ந்தது. கிழக்கு மாகாணத்தில் அதே கால கட்டத்தில் 8.4 விழுக்காட்டில் இருந்து 24.9 விழுக்காடாக அதிகரித்தது.

சிங்களக் குடியேற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழந்த தமிழ்மக்கள் சிறுபான்மையாக்கப்பட்டனர். 1960  ஆம் ஆண்டு அம்பாரை தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை துண்டாடி அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.  1976 இல் திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக சிங்களப் பெரும்பான்மை கொண்ட சேருவில தொகுதி உருவாக்கப்பட்டது.
டி.எஸ். சேனநாயக்கா மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களை குடியமர்த்துவதோடு நின்றுவிடவில்லை. அவரது அடுத்து இலக்கு திருகோணமலை மாவட்டமாக இருந்தது. அவர் திருகோணமலையில் சிங்களவர்களைக் குடியமர்த்தி அதன் நிலப்பரப்பை அபகரிக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்காகக் கந்தளாய் குடியேற்றத் திட்டத்தைக் கையில் எடுத்தார். திருகோணமலை மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துக்குத் தேவையான பல குளங்கள் காணப்படுகின்றன. கந்தளாய் குளம், தம்பலகாமம் மற்றும் கிண்ணியாவில் உள்ள வயல்களுக்கு வேண்டிய தண்ணீரை வழங்குகிறது. சேனநாயக்கா, 1948 இல் கந்தளாய் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அதனை ஆழமாக்கி சீரமைத்து தென்னிலங்கைச் சிங்களவர்களை குடியேற்றினார். கந்தளாய் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் பெருந்தொகையான சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

மொத்த நிலப்பரப்பில் 77 விழுக்காடு சிங்களவருக்கும் 23 விழுக்காடு தமிழர் – முஸ்லிம் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டன. திருகோணமலையில் வாழும் 86,000 சிங்களவர்களில் 40,000 பேர் கந்தளாய் மேம்பாட்டுப் பகுதியில் வாழ்கிறார்கள்.

கந்தளாய் குடியேற்றத் திட்டம் வெற்றிகரமாக முடித்த பின்னர் 1950 ஆம் ஆண்டு அல்லை குடியேற்றத்தை டி.எஸ். சேனநாயக்கா கையில் எடுத்தார். திருகோணமலை விரிகுடாவுக்குத் தெற்கேயுள்ள வெருகல் ஆற்றுக்குக் குறுக்கே அணை கட்டப்பட்டது. வெருகல் ஆறு மகாவலி கங்கையின் பல கிளை ஆறுகளில் ஒன்றாகும்.

1952 இல் டி.எஸ். சேனநாயக்கா இறந்த போது காணி விவசாய அமைச்சராக இருந்த அவரது மகன் டட்லி சேனநாயக்கா அல்லை நீர்பாசனத் திட்டத்தை கட்டி முடித்தார். இந்த இடம் முன்னர் கொட்டியாரம் என அழைக்கப்பட்டது. தமிழர்களும் சிங்களவர்களும் அப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் தமிழர்களே பெரும்பான்மை ஆக இருந்தார்கள்.   இருந்தும் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட காணிப் பங்கீட்டில் தமிழர்களுக்கு ஒரு சொட்டுக் காணியும் கொடுக்கப்படவில்லை. சிங்களவர்களுக்கு 65 விழுக்காடும் முஸ்லிம்களுக்கு 35 விழுக்காடும் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டன.

இருபதாம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் திருகோணமலையில் ஒரேயொரு செயலாளர் பிரிவுதான் இருந்தது. அதன் பெயர் கொட்டியார் செயலகப் பிரிவு என்பதாகும். இப்போது மூன்று செயலகப் பிரிவுகள் இருக்கின்றன. மூதூர், சேருவில, வெருகல் இந்த மூன்றுமே அந்தச் செயலகப் பிரிவுகளாகும். சிங்களவர்களுக்கு ஆக சேருவில 1960 இல் உருவாக்கப்பட்டது. வெருகல் 1980 இல் உருவாக்கப்பட்டது. 1981 இல் சேருவிலவில் வாழ்ந்த 20,187 பேரில் சிங்களவர் எண்ணிக்கை 11,665 ஆக இருந்தது.

சிங்கள அரசுகள் முடிக்குரிய காணிகளில் மட்டும் சிங்களவர்களைக் குடியேற்றுவதோடு நின்றுவிடவில்லை. தமிழர்களது பரம்பரை கிராமம்களிலும் சிங்களவர்களை குடியமர்த்தினார்கள். கிராமம்களின் பெயர்களை நேரடியாக சிங்களத்துக்கு மாற்றினார்கள். அரிப்பு சேருநுவர ஆக மாறியது. கல்லாறு சோமபுரமாக மாறியது. நீலப்பள்ளை நீலபொல ஆகியது. பூநகர் மகிந்தபுரம் ஆகவும் திருமங்கவி டெகிவத்தை ஆனது.
அல்லை – கந்தளாய் சிங்களக் குடியேற்றம் அய்ம்பதுகளில் தொடக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து முதலிக்குளம் ( மொறவேவா) பதவிக்குளம் பெரியவிளாங்குளம் போன்ற சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன.

1976 ஆம் ஆண்டில் மூதூர் தேர்தல் தொகுதி ஒற்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக மாற்றப்பட்டது. சிங்கள மக்களுக்காக சேருவில என்ற புதிய தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தேர்தல் தொகுதி, தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் சிங்களப் பெரும்பான்மை சேருவெல தொகுதி 1976 இல் உருவாக்கப்பட்டது.  இது திருகோணமலையின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கியதாகும்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் 1881 இல் தமிழ் மக்களது விழுக்காடு 64.8 ஆக இருந்தது. இந்த விழுக்காடு 1981 இல் 36.4 விழுக்காடாகக் குறைந்துவிட்டது! அதே காலகட்டத்தில் சிங்களவர்களது விழுக்காடு 4.2 இல் இருந்து 33.6 விழுக்காடாக அதிகரித்து விட்டது.

பிரதமர் திரு எஸ்.டபுள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க 1956 இல் வவுனியாவுக்குக் கிழக்கே பதவியா குடியேற்றத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். திருகோணமலை துறைமுகம் மூடியதை அடுத்து வேலையிழந்த மக்களுக்கு என்றே இந்தத் திட்டம் தொடக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 595 தமிழர்களும் 453 சிங்களவர்களும் குடியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. சிங்களக் குடியேற்ற வாசிகள் பவுத்த தேரர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு காணி வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். தமிழர்கள் கட்டிய குடில்களுக்குள் சிங்களவர் வலோத்காரமாக குடிபுகுந்தார்கள். இதனால் பதவியா குடியேற்றத்திட்டம் முழுக்க முழுக்க சிங்களவர்களால் நிரப்பப்பட்டது.

சிறிமாவோ பண்டாரநாயக்க 1960 இல் மொறவேவா குடியேற்றத்திட்டத்தைத் தொடக்கினார். தமிழில் முதலிக்குளம் என அழைக்கப்பட்ட இந்த கிராமம் சிங்களத்தில் மொறவேவா என மாற்றப்பட்டது. 1981 இல் மொத்தம் 9,271 பேர் வாழ்ந்தார்கள். அதில் 5,101 பேர் சிங்களவர்கள். இவர்கள் எல்லோரும் வெளி இடங்களில் இருந்து கொண்டு வந்து குடியமர்த்தப் பட்டவர்கள்.
பெரியவிளான்குளம் சிங்களத்தில் மகாடிவுலுவேவா எனப் பெயர் மாற்றப்பட்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் அங்கு சிங்களக் குடியேற்றம் தொடக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் வேறு வழியிலும் சிங்களவர் தொகை அதிகரிக்கப்பட்டது. 1982 இல் சிங்கள மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக வாழ்ந்த அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த பதவி சிறிபுர (5,953 சிங்களவர்) பறணமதவாச்சி (827 சிங்களவர்) ஜெயந்திவேவ (4,274 சிங்களவர்) திருகோணமலை மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. இவ்வாறு ஒரே நாளில் சிங்களவரின் எண்ணிக்கை 11,059 பேர்களினால் அதிகரித்தது. மறுபுறம் தமிழர்களது விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

திருகோணமலையில் அரசு முன்னெடுத்த சிங்களக் குடியேற்றங்களுக்குப் புறம்பாக சட்டத்துக்கு மாறான அரசியல் நோக்கோடு கூடிய குடியேற்றங்களும் முடுக்கிவிடப்பட்டன. திருகோணமலையை பெரும்பான்மை சிங்களவர் கொண்ட மாவட்டமாக்குவது காலத்துக்குக் காலம் ஆட்சி பீடத்தில் இருந்த சிங்கள அரசுகளின் குறிக்கோளாக இருந்தது. இதில் பச்சைக் கட்சிக்கும் நீலக் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து இருக்கவில்லை.
தமிழ் கிராமங்களை வளைத்து சட்ட விரோத குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. குச்சவெளி, புல்மோட்டை, திரியாய், தென்னமரவடி போன்ற கிராமம்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறு மொத்தம் 10,750 சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இன்றுவரை திருகோணமலை மாவட்ட அரசாங்க முகவராக ஒரு தமிழர் நியமிக்கப்படவில்லை. சிங்களவர்களே அந்த இடத்துக்கு நியமிக்கப் பட்டார்கள். காணி அதிகாரிகளும் சிங்களவர்களே. அய்ம்பது கடைசியில் மட்டும் Mc Heizer  என்ற ஒரு பரங்கியர் திருகோணமலை மாவட்ட அரசாங்க முகவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இப்போது திருகோணமலை அரசாங்க முகவராக இருப்பவர் முன்னாள் இராணுவதளபதி Maj. Gen. T.T. Ranjith de Silva ஆவார். (தொடரும்)


திருகோணமலையில் தமிழர் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும்பான்மை
(12)

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களது குடிப்பரம்பல் படிப்படியாக குறைந்து வந்துள்ளது பற்றி முன்னர் (பாகம் 9) குறிப்பிட்டிருக்கிறேன். அதனை எண்பிக்கும் முகமாக திருகோணமலை மாவட்டத்தில் (1827 – 1981) ஏற்பட்ட குடிப்பரம்பல் மாற்றத்தை ஒரு அட்டவணை வழியாகக் காட்டியிருந்தேன். அந்த அட்டவணை இதுதான்.

அட்டவணை 1
திருகோணமலை மாவட்டத்தில் இனக் குடிப்பரம்பலில் ஏற்பட்ட மாற்றங்கள் (1827-1981)

தமிழர்

முஸ்லிம்

சிங்களவர்

ஆண்டு

தொகை விழுக்காடு தொகை விழுக்காடு தொகை

விழுக்காடு

1827

15,663

81.80   3,245 16.90    250 1.3
1881

14,394

64.8 5,746 25.9 935

4.2

1891 17,117 66.4 6,426 25.0 1,109

4.3

1901

17,069

60.0 8,258 29.0 1,203

4.2

1911

17,233

57.9 9714 32.6 1,138

3.8

1921

18,586

54.5 12846 37.7 1,501

4.4

1946

33,795

44.5 23219 30.6 11,606

15.3

1953

37,517

44.7 28616 34.1 15,296

18.2

1963

54,050

39.1 42560 30.8 40,950

29.6

1971

71,749

38.1 59924 31.8 54,744

29.1

1981

93,510

36.4 74403 29.0 86,341

33.6

1827-1981
அதிகரிப்பு

77,847

497.01 71,158 2192.85    86091

34436.40

மூலம் – இலங்கை (சிறீலங்கா) குடிமதிப்பீடு 1827 – 1981

இந்த அட்டவணை  திருகோணமலை மாவட்டத்தில் 1827 இல் 81.80 விழுக்காடு ஆக இருந்த தமிழர் 1981 இல் 36.4 ஆகக் குறைந்துவிட்டதைக் காட்டுகிறது. அதேசமயம் 1827 இல் 1.3 விழுக்காடாக இருந்த சிங்களவர் 1981 இல் 33.6 விழுக்காடாக அதிகரித்துள்ளள்ளனர்.

1981 ஆம் ஆண்டுக்குப் பிறகு போர்ச் சூழல் காரணமாக 10 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய குடிமதிப்பு திருகோணமலையில் இடம்பெறவில்லை. 2003 இல் அரைகுறை குடிமதிப்புத்தான் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 2007 இல் மக்கள் தொகை மதிப்பீடு (Estimate)  வெளிவந்தது. அந்த மதிப்பீடு முஸ்லிம்களது எண்ணிக்கையை 152,019  ஆகக் காட்டியது. அதாவது முஸ்லிம்களது மக்கள் தொகை 31 ஆண்டுகளில் இரட்டிப்பாகி இருந்தது. எனவே அந்தப் புள்ளி விபரம் பிழையாக இருக்கலாம் என்ற நினைப்பில் அதனைப் பயன்படுத்துவதைப் பெரும்பாலும் தவிர்த்து வந்தேன். ஆனால் இப்போது 2012 ஆம் ஆண்டில், குடிமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் எடுக்கப்பட்ட கணக்கீட்டின் பெறுபேறுகள் வெளிவந்துள்ளன. அதில் முஸ்லிம்களது எண்ணிக்கை 2007  இல் கணக்கிட்ட மக்கள் தொகையோடு பெருமளவு ஒத்துப் போகிறது. வெறுமனே 735 பேர் தான் அதிகரித்துள்ளார்கள்.

கீழ்க் கண்ட அட்டவணை 1981 இல் 29.0 விழுக்காடாக இருந்த முஸ்லிம்களது விழுக்காடு 2012 இல் 40.4 ஆக உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது. அதாவது இருமடங்காக அதிகரித்துள்ளது. அதே சமயம் 1981 இல் 36.4 விழுக்காடாக இருந்த தமிழர்களது விழுக்காடு 2012 இல் 30.6 ஆகக் குறைந்துள்ளது. சிங்களவர்களது விழுக்காடும் 33.6  இல் இருந்து 27.0 ஆகக் குறைந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இனவாரியாக ஏற்பட்ட மாற்றங்கள் (1927 – 1981, 1981-2012)

ஆண்டு

தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர் ஏனையோர்

மொத்தம்

தொகை

%     தொகை % தொகை  % தொகை % தொகை %
1827

15,663

81.80   3,245 16.90    250

1.3

       
1981

   93,510

36.4     74,403 29.0 86,341 33.6     254,254

100

2001 Census*
2007 மதிப்பீடு 96,142 28.75 152,019 45.47 84,766 25.35 1,436 0.43 332,927 100
2012 115,549 30.6 6,531 1.7 152,854 40.4 101,991 27.0 1,257 0.30 376,925 100
அதிகரிப்பு

1827-1981

77,847

497.01 71,158 2192.85 86,091

34436.40

அதிகரிப்பு 1981-2012

22,039

19.07 78,451 51.32 15,650

15.34

அதிகரிப்பு (1827 -2012)

99,886

637.71 149,609 4610.44 101,741

40696.40

மூலம் –  இலங்கை (சிறீலங்கா) குடிமதிப்பீடு 1827 – 2012
*2001 இல் முழுமையான குடித்தொகை மதிப்பு எடுக்கப்படவில்லை

தமிழர்களது குடித்தொகை வீழ்ச்சிக்குக் காரணம் அல்லது காரணங்கள் எவை? சிங்களக் குடியேற்றம் காரணம் என்றால் எப்பிடி முஸ்லிம்களது குடித்தொகை வீழ்ச்சி அடையவில்லை? பல தமிழர்கள் புலம் பெயர்ந்திருக்கலாம். தமிழ்நாட்டுக்கு ஏதிலிகளாக இடம் பெயர்ந்திருக்கலாம். போரின் போது கொல்லப்படடிருக்கலாம். இருந்தும் 1981 க்குப் பின்னர் தமிழர் குடித்தொகை வெறுமனே 22,039 ஆக உயர அதே காலப்பகுதியில் முஸ்லிம்களது குடித்தொகை 78,451 ஆல் அதிகரித்துள்ளது வியப்பாக இருக்கிறது.

முன்னரே குறிப்பிட்டது போல அல்லை குடியேற்றத்திட்டத்தின் கீழ் சிங்களவர்களுக்கு 65 விழுக்காடு முஸ்லிம்களுக்கு 35 விழுக்காடு முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டன. கந்தளாய் குடியேற்றத்திட்டத்தின் கீழ் சிங்களவர்களுக்கு 77 விழுக்காடு காணியும் தமிழர் – முஸ்லிம்கள் இரு சாராருக்கும் 23 விழுக்காடு ஒதுக்கப்பட்டது. மொறவேவா (முதலிக்குளம்) திட்டத்தின் கீழ் தொடக்கத்தில் இனவிழுக்காட்டு அடிப்படையில் காணிகள் ஒதுக்கப்பட்டாலும் தமிழர்கள் கலவர காலங்களில் சிங்களவர்களால் அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டார்கள். இன்று மொறவேவா 100 விழுக்காடு சிங்கள கொலனியாக மாறிவிட்டது. 1972 இல் கப்பல்துறை மற்றம் பாலம்போட்டாறு மக்களுக்கு சொந்தமான 5,000 ஏக்கர் நிலம் இந்தக் குடியேற்றத்திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டு நொச்சிக்குளம் நொச்சியகம எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நொச்சிக்குளம் குடியேற்றத்திட்டத்துக்குப் பின்னால் மூளையாகச் செயற்பட்டவர் கே.பி. இரத்னாயக்கா, நா.உ ஆவர். இவர் அப்போது அனுராதபுர மாவட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்தார். அய்ம்பதுகளிலும் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் திருகோணமலை நகரைச் சுற்றி பல சிங்களக் கிராமங்கள் முளைக்கத்தொடங்கின. சிறீமாபுர, அபயபுர, மிகிந்தபுர, பட்டிஸ்புர அவற்றில் சிலவாகும். பெரும்பாலும் சிங்கள இராணுவத்தின் உதவியோடு தமிழர்களை விரட்டிவிட்டு சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. 1984 இல் சீனன் குடா மற்றும் காவத்தி கிராமங்களில் வாழ்ந்த தமிழ்மக்களை விரட்டிவிட்டு அந்த இடத்தில் சிங்களவர்கள் குடியமர்ந்தார்கள். அதற்கு சிங்கள இராணுவம் துணைபோனது.
1998 ஒக்தோபரில் திருகோணமலை நகரில் இருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருந்த இலிங்கநகரில் வாழ்ந்து வந்த 132 தமிழ்க் குடும்பங்கள் சிங்கள இராணுவத்தினால் வலோத்காரமாக வெளியேற்றப்பட்டனர். இராணுவ முகாம் விரிவாக்கப்படுவதற்கு அந்த நிலம் தேவைப்பட்டது என்று காரணம் சொல்லப்பட்டது.

1996 இல் இந்த இராணுவ முகாம் அமைப்பதற்கு 47 தமிழ்க் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. எண்பதுகளின் முற்பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் பெரும்பாலும் தமிழ் – சிங்கள மக்கள் கலந்து வாழ்ந்த இடங்களில் நடைபெற்றன. ஆனால் இந்தக் கொள்கை பின்னர் கைவிடப்பட்டு முழுதும் தமிழர்கள் வாழ்ந்த நிலங்களில் சிங்களக் கொலனிகள் உருவாக்கப்பட்டன. இது சிங்கள – பவுத்த அரசு மேற்கொண்ட தமிழினச் சுத்திகரிப்பு என்பதில் எந்த அய்யமும் இருந்ததில்லை. இதன் மூலம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள – பவுத்த அரசுகள் தமிழ்மக்கள் மீது தமது மேலாண்மையை நிலை நாட்டின. இம்மாதிரியான குடியேற்றங்கள் இன்று வன்னிப் பெருநிலப்பரப்பில் அசுர வேகத்தில் இடம்பெறுகின்றன.
திருகோணமலை நகரையும் நகரைச் சுற்றியும் உள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து பாரிய மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கப்பலைதுறையில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட இருக்கிறது. அதன் முதல் கட்டத்திற்கு உரூபா 4,250 மில்லியன் செலவழிக்கப்படும். இரண்டாவது கட்டத்துக்கு உரூபா 2,600 மில்லியன் செலவழிக்கப்படும்.

இந்தத் திட்டம் 2015 இல் நிறைவு செய்யப்படும். புடவைக்கட்டில் உரூபா 1,000 மில்லியன் செலவில் ஒரு புதிய மீன்பிடித் துறைமுகம் கட்டப்படும். ஒரு புதிய ஆண்டாங்குளம் – சீனன்குடாவில் ஒரு புதிய நகர அபிவிருத்தி திட்டம் உரூபா 1,500 மில்லியனில் உருவாகும். உப்புவெளி – ஈச்சிலம்பற்றை இணைக்கும் நெடுஞ்சாலை உரூபா 10.3  பில்லியனில் கட்டப்படும். இந்த நெடுஞ்சாலை சிங்களப் பகுதியான சேருவில ஊடாகச் செல்லும். நிலாவெளி மற்றும் வெருகல் இரண்டிலும் உரூபா 800 மில்லியனில் சுற்றுலா புகலிடம் (Tourist Resorts) நிறுவப்படும்.Image result for sri lanka army soldiers sampur

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 இல் சிங்கள இராணுவம் மேற்கொண்ட வலிந்த வான்வழி மற்றம் தரைத் தாக்குதல் மூலம் சம்பூர் உட்பட மூதூர் கிழக்குப் பகுதியை அது கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூதூர் கிழக்கில் 20,000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 23 ஊர்களைச் சேர்ந்த 17,000 மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.  இவர்களில் ஒரு பகுதியினர் தங்கள் வீடுவாசல்களில் அல்லது மாற்றுக் காணிகளில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆனால் பெரும்பாலோர் இன்னமும் மீள் குடியமர்த்தப்படாமல் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். சம்பூரில் மட்டும் 4,000 மக்கள் கடந்த 6 ஆண்டுகளாக தெருவோரங்களில் குடிசைகள் கட்டி வாழ்கிறார்கள். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த சிங்கள அரசு விடாப்பிடியாக மறுத்து வருகிறது. இந்த ஆண்டுத் தொடக்கம் மட்டும் அரசு அவர்களுக்கு உலர் உணவு வழங்கிவந்தது. ஆனால் அவர்கள் வேறு இடங்களில் குடியமர மறுத்து வருவதால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலர் உணவு நிறுத்தப்பட்டுள்ளது. (http://www.youtube.com/watch?v=sc9maxeJOHw)

யூன் 16, 2007 அன்று மூதூர் கிழக்கையும் சம்பூரையும் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக ஸ்ரீலங்கா அரசு அரசாணை மூலம் பிரகடனப்படுத்தியது. இதன் மூலம் சம்பூர் மற்றும் மூதூர் கிழக்குப் பகுதி, மேற்குக் கரையோரப் பகுதிகளான பவுல் பொயின்ற், கல்லடிச்சேனை, உப்பூறல் அடங்கிய கடற்கரைப் பிரதேசங்களும் தெற்கில் செல்வநகர், தோப்பூர், பச்சிளம் பகுதிகளும் மேற்கில் கல்லடிச்சேனை ஆற்றின் மேற்குக்கரை, பச்சிலைக் கல்லடிச்சேனை தெற்கு மூதூர் கல்லடிச்சேனை வடக்கு ஆகிய பகுதிகளும் வடக்கில் கொட்டியாரக்குடா, தெற்குக்கரை கல்லடிச்சேனை ஆறு, சம்பூர் பவுல் பொயின்ற் ஆகிய ஊர்கள் அதிவுயர் வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டது. அதே அரசாணையின் மூலம் முதலீட்டு சட்ட அவைச் சட்டததின் கீழ் 675 ச.கிமீ (260 ச.மைல்) பரப்பளவு கொண்ட ஒரு சிறப்பு பொருண்மிய வலயமும் உருவாக்கப்பட்டது.

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இந்திய அரசு சம்பூரில் 500 MW ஆற்றலுடைய ஒரு அனல்மின் உலையைக் கட்ட சிறீலங்கா அரசோடு உடன்பாடு செய்துள்ளது. இந்தியா சார்பாக இந்திய அரச நிறுவனமான தேசிய வெப்ப ஆற்றல் குழுமமும் India’s National Thermal Power Corporation (NTPC) சிறீலங்கா அரசு சார்பாக இலங்கை மின்சார சபையும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. அய்ப்பதுக்கு அய்ம்பது விழுக்காட்டில் இரண்டு நாடும் முதலீடு செய்யும். அமெரிக்க டொலர் 700 மில்லியன் செலவில் கட்டப்படும் இந்த அனல்மின் உலை 2014 இல் முடிவு பெறும். இந்த அனல்மின் நிலையம் அமைக்க கடற்கரைச்சேனை, சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு ஆகிய ஊர்களை உள்ளடக்கிய 500 ஏக்கர் காணியை அரசு இந்தியாவுக்கு ஒதுக்கியுள்ளது.

இதன் மூலம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்லும் வாய்ப்பு முற்றாக மறைந்துள்ளது. தங்கள் நிலத்தை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மீளாய்வு செய்யுமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த இராசபக்சாவுக்கு மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் யூன் 2008 இல் வேண்டுகோள் விடுத்தது. இந்தியாவிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தங்களை பள்ளிக்குடியிருப்பு, இறால்குழி ஆகிய பகுதிகளில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அவர்களது முறையீட்டுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை.

இந்தப் பகுதி மக்கள் முற்றுமுழுதாக விவசாயம், கால்டை வளர்ப்பு இரண்டையுமே தொழிலாகக் கொண்டவர்கள். அதற்கேற்ற நீர்வளம், நிலவளம், மேய்ச்சல் தரைகள், சந்தை வாய்ப்பு என்பனவற்றைக் கொண்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியத் தமிழ்க்கிராமமே சம்பூராகும். அனைத்து விதமான வளங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தமையினாலேயே சம்பூரணம் என்னும் பெயர் மருவி சம்பூர் என ஆகியதாக முன்னோர்கள் கூறுகின்றனர். சிறீலங்கா அரசினால் தற்போது உயர் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனம் செய்யப்பட்ட சம்பூர் பகுதியில் சம்பூர், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, சூடைக்குடா மற்றும் இளக்கந்தை ஆகிய ஐந்து பாரம்பரியத் தமிழ்க்கிராமங்கள் அடங்குகின்றன. மூதூர் பிரதேச செயலகத்தின் 2008 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி இப்பிரதேசத்தில் 1940 குடும்பங்களைச் சேர்ந்த 7494 பேர் வாழ்ந்து வந்தனர். உண்மையில் சம்பூர் தொடர்பாக நடப்பது என்ன?

2009 ஓகஸ்ட் 30 ஆம் நாள் ராவய சிங்கள பத்திரிகையில் தனுஜ பத்திரன அவர்கள் இந்தியாவின் உதவியுடன் அனல் மின்நிலையம் அமைப்பதற்காகச் சம்பூரில் 500 ஏக்கர் பரப்பளவான  காணிகளில்  நிருமாணிக்கப்பட்டிருந்த சுமார் 500 வீடுகளை அங்கு வாழ்ந்தவர்களுக்கு எவ்வித அறிவித்தல்களுமின்றி அவர்களுடைய எழுத்து மூலமான எவ்வித அனுமதியும் பெறாமல் இலங்கை அரசாங்கம் தரைமட்டமாக்கியுள்ளது எனவும் அந்த அனல் மின்நிலையம் நிருமாணிக்க உத்தேசிக்கப்பட்ட சம்பூர் பிரதேசமானது மக்கள் வாழ்வற்ற சூன்யப் பகுதி எனவும்  எழுதியிருந்தார்.Image result for sri lanka army soldiers sampur

இதில் என்ன சோகம் என்றால் இந்திய அரச நிறுவனமான தேசிய வெப்ப ஆற்றல் குழுமமும் இலங்கை மின்சார சபையும் அனல்மின் உலை கட்டுவதற்கு சென்ற ஆண்டு உடன்படிக்கை எழுதிக்கொண்டாலும் இன்னும் கட்டுமானப் பணி எதுவும் தொடங்கப்படவில்லை என்பதே.

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகிற கதைதான். (வளரும்)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply