‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

nepali kutti sanyasi

Picture: Little boy from Nepal.

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண் 853 தேதி 20, பிப்ரவரி 2014

This is a translation of my Post No 832 posted in English on 10th February 2014 in this blog.

புறநானூற்றில் ஒரு அருமையான தமிழ் பாட்டு இருக்கிறது. எல்லோருக்கும் முதல் வரி மட்டும் தெரியும்: யாதும் ஊரே; யாவரும் கேளிர்; அதற்கு அடுத்த வரியோ, அந்தப் பாட்டின் முழுப் பொருளோ பலருக்கும் தெரியாது. ஆகையால் இரண்டாவது வரியை தலைப்பாகக் கொடுத்துள்ளேன். இது இந்துக்களின் கர்ம வினைக் கொள்கையை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. “ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மிதவை போல”– என்ற சித்திர உவமையை இந்து சந்யாசிகளும் புத்தரும் பயன்படுத்துகிறார்கள். இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் ஆகிய அனைவரும் மறு பிறப்பு, கர்மா கொள்கைகளில் நம்பிக்கை உடையோர்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ’மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

—-புறம்.192, கனியன் பூங்குன்றன் ( பொருண்மொழிக் காஞ்சித் துறை))
இந்து தர்மக் கோட்பாடுகளை விளக்கும் அருமையான பாட்டு இது.

இவை அத்தனையும் பகவத் கீதையில் உள்ள வரிகள்!!!

வசுதைவ குடும்பகம்

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி என்றே—மிக
நன்று பல்வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக்கை (Subramanya Bharati)

என்று பாரதி பாடுகிறார். 3000 ஆண்டுகளுக்கு முன் அதர்வண வேதத்திலும் ‘பூமி என் தாய், நான் அதன் மகன்’ என்ற வரி உள்ளது. மஹோபநிஷத்திலுல் (6-71), பஞ்ச தந்திரத்திலும் (5-3-37), ஹிதோப தேசத்திலும் (1-3-71) ‘வசுதைவ குடும்பகம்’ (உலகம் ஒரே குடும்பம்) என்ற கோட்பாடு உள்ளது. ஆக உலகம் “ஒரே குடும்பம் நாம் எல்லோரும் அதன் மக்கள்” என்ற கருத்து வேத காலம் முதலே இருக்கிறது.

சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே

இறந்து போவது ஒன்றும் புதிது அல்ல. ஆகையால் வாழ்வதிலும் பெரிய இன்பம் கிடையாது. அதற்காக அதை வெறுத்து ஒதுக்குவதும் எங்களிடம் இல்லை. இந்தக் கருத்து கீதை முழுதும் பல இடங்களில் வருகிறது.

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம முதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹர்யேர்த்தே ந த்வம் சோசிதும் அர்ஹஸி (2-27)

பகவத் கீதை 2—27

பொருள்: பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் நிச்சயமாக இருக்கிறது. ஆகையால் தவிர்க்க முடியாத விஷயத்தில் வருத்தப்பட ஒன்றும் இல்லை.

தமிழ் திரைப் படப் பாடலிலும் இதே கருத்தைக் காண்கிறோம்:

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ… ஒஹோஹோ…
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

(படம்- பாசமலர்; பாடல்-கவிஞர் கண்ணதாசன்)

இதையே புத்த மதப் பாடலிலும் காணலாம்:

“Weep not, for such is here the life of man
Unasked he came, unbidden went he hence
Lo! Ask thyself again whence came thy son
To bide on earth this little breathing space
By one way come and by another gone…..
So hither and so hence— why should ye weep?”

— Psalms of Sisters (E.T. by Mrs Rhys Davids (1909) quoted by Dr S Radhakrishnan in his Bhagavad Gita commentary.

மஹா பாரதத்திலும் வியாசர் உலகிலேயே மிக அதிசயமான விஷயம் எது என்ற கேள்விக்கு தருமன் வாய் மொழியாக விடை கூறியதை யக்ஷப் ப்ரஸ்னத்திலும் ‘உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்?’ என்ற கட்டுரையிலும் ஏற்கனவே எழுதிவிட்டேன். வள்ளுவனும் இந்த ஆச்சரியத்தைக் (குறள் 336) குறிப்பிட்டதையும் எழுதிவிட்டேன்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;

ஒருவருக்கு நல்லதும் கெட்டதும் பிறர் தருவதில்லை. நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். தினை விதைத்தவன் தினை அறுப்பான் ,வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றும் தமிழ் சான்றோர்கள் பகர்வர். வேதகாலம் முதல் இந்தியாவில் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். பாவ புண்ணியம் என்பது இந்தியாவில் பிறந்த எல்லோருக்கும் தெரிந்த கருத்து.

கருட புராணத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தை டாக்டர் ராதாகிருஷ்ணன் எடுத்தாள்கிறார்:

Garuda Purana says
Sukhasya dukkhasya na kopi data
Paro dadatiti kubhuddir esa
Swayam krtam svena phalena yujyate
Sarira he nistara yat tvatya krtam

இன்பமும் துன்பமும் பிறர் தருவது இல்லை. மற்றவர்கள் நமக்குக் கெடுதி செய்துவிட்டனர் என்பது தவறு. நாம் என்ன விதைத்தோமோ அதுதான் பழம் ஆகி பலன் தருகிறது.

’மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,

devotion

பெரியாறு என்பது தமிழ்நாடு—கேரள எல்லையில் இருக்கிறது. புலவர் இதையும் சொல்லி இருக்கலாம். அல்லது பொதுவாக கங்கை முதலிய பெரிய நதிகளில் வரும் தெப்பத்தையும் (படகு) சொல்லி இருக்கலாம். வாழ்க்கை என்பது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் படகு போன்றது. அது போய்ச் சேர வேண்டிய இடத்துக்குச் சேரும் என்பது அறிஞர்கள் கண்ட உண்மை என்று கனியன் பூங்குன்றன் கூறுகிறார். ஆதிசங்கரரின் விவேக சூடாமணி யிலும் இதைக் காணலாம் ஆனால் தமிழ்ப் புலவர் இதைப் படித்துதான் எழுத வேண்டும் என்பதில்லை. பெரியோர்கள் ஒரேமாதிரி சிந்திப்பர்:

ஆதிசங்கரரின் விவேக சூடாமணி (பாடல் 550): ஆற்று வெள்ளத்தில் மிதக்கும் ஒரு கட்டை அதன் போக்கில் உயர்ந்தோ தாழ்ந்தோ ஏறி இறங்கிச் செல்லும். அதே போல கடந்த கால செயல்களுக்கு ஏற்ப (அவரவர் கர்மாப் படி) ஒவ்வொருவரும் அவற்றின் பலன்களை அனுபவிப்பர்.
சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காவியம் முழுதும் ஊழ்வினையின் விளையாட்டைக் காணலாம்.

பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

ஆகையால் பெரியவர்களைக் கண்டால் அவர்களைப் புகழ்வதும் இல்லை. சிறியவர்களைக் கண்டால் இகழ்வது என்பதும் கொஞ்சமும் இல்லை என்கிறார் புலவர் பூங்குன்றன். இதைத் தான் சமத்துவ பாவனை என்பர். சான்றோர்களுக்கு எல்லோரும் ஒன்றே.

“ஸமத்துவ பாவனையே அச்சுதனுக்கு செய்யும் ஆராதனையாம்”

(ஸமத்வ- மாராதன-மச்யுதஸ்யாம், பிரஹ்லாதன்; விஷ்ணுபுராணம், 1-17-90)

வித்யா – விநய – ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சின: ( கீதை 5-18)

பொருள்: கல்வியும் அடக்கமும் நிறைந்த பிராமணனிடத்தும், பசுவி னிடத்தும்,யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலைய னிடத்தும் ஆத்ம ஞானிகள் (பண்டிதர்கள்) சமதர்சனம் (ஒரே பார்வை) உடையவர்கள்.

(ஆதாரம்:– அண்ணா எழுதிய ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம், மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை, இரண்டு புத்தகங்களும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடுகள், மயிலாப்பூர், சென்னை)

ஆக கனியன் பூங்குன்றனின் கருத்துகள் இந்திய தத்துவம்; இது பாரதம் முழுதும் ஒன்றே என்பதைக் காட்டும்.

தொடர்பு கொள்க: swami_48@yahoo.com

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply