விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை போன்றது!  

விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை போன்றது!  

நக்கீரன்

‘எனக்கு அரசியல் அனுபவம் இல்லை. அண்ணன் மாவை சேனாதிராசா போன்றவர்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டுதான் விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்தார். தேர்தலுக்குச் செலவழிக்க என்னிடம் பணம் இல்லை,  எனக்கு ஓய்வூதியமாக  ரூபா 30,000 அளவில்தான் வருகிறது என்று சொன்ன விக்னேஸ்வரனுக்கு  சம்பந்தன் அவர்கள்தான் ததேகூ(கனடா) மூலம்  அந்த உதவியைப் பெற்றுக் கொடுத்தார்.

மக்களுக்கு யார் என்று தெரியாத ஒருவரை தேர்தல் களத்தில் இறக்கி அவரது வெற்றிக்கு அல்லும் பகலும் கண்துஞ்சாது உழைத்தவர்கள் தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும்தான். ஒரு கட்டத்தில் தான் எங்கே இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்படுவேனோ என்ற ஐயம் அவருக்கு வந்த போது, இல்லை அப்படியொன்றும் நடவாது தென்பாக இருங்கள் என்று அவருக்கு ஆறுதல்  சொல்லப்பட்டது.

தேர்தல் முடிவு வந்தபோது 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று விக்னேஸ்வரன் முதலிடத்தில் இருந்தார். இரண்டாவது இடத்துக்கு வந்தவரை விட இவருக்கு 44,385 வாக்குகள் கூடுதலாக விழுந்திருந்தது.

முன்பின் தெரியாத ஒருவரை, அரசியலுக்குப் புதியவரை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்தபோது தமிழ் அரசுக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு இருந்தது. காரணம் முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராசா ததேகூ இன் சார்பாக போட்டியிடுவார் என கிட்டத்தட்ட முடிவாகி இருந்தது. தமிழரசுக் கட்சியைவிட பங்காளிக் கட்சிகளான இபிஎல்ஆர்எவ், ரெலோ, புளட் கட்சிகள் முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராசாவுக்கே ஆதரவு தெரிவித்தன. விதிவிலக்காக  சம்பந்தன் ஒருவரே விக்னேஸ்வரனைக் கொண்டுவர கடும் முயற்சி எடுத்தார். அதில் வெற்றியும் கண்டார்.

இன்று பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாகிப் போய்விட்டது!  வடக்கு மாகாணம் ஒரு வினைத்திறனற்ற சபை என நம்பப்படுகிறது. ஒதுக்கிய நிதியைச் சரிவரப் பயன்படுத்தாது திருப்பி அனுப்பியது, இருநூறுக்கும் அதிகமான தீர்மானங்களை நிறைவேற்றிய மாகாண சபை நான்கு நியதிச் சட்டங்களை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. முதலமைச்சர் நிதி நியதிச் சட்டம் கூட இன்னும் சட்டமாக்கப்படவில்லை.

ஆனால் விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கும் ஆசைப்பட்டார் என்பது இப்போது இதஅ கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கம் சொல்லித்தான் எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. இதற்குத்தான் சொல்வது நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கெடைக்கு எட்டு ஆடுி கேட்கும் என்று.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல விக்னேஸ்வரனுக்கு கிடைத்த பதவி, புகழ் எல்லாம் தஅக யையே சாரும். ஒரு கட்சியின் தலைமைப் பதவிக்கு வர வேண்டும் என்றால் நீண்ட காலம் அந்தக் கட்சிக்கு உழைக்க வேண்டும். பொறுப்பான பதவிகளை வகிக்க வேண்டும். இப்போது தலைவராக உள்ள மாவை சேனாதிராசா இளமைக் காலம்  தொடக்கம் தமிழரசுக் கட்சியில்  இருந்து வருபவர். 1972 ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகம் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறந்துவிட்டு மட்டக்களப்புக்கு வந்தபோது அவரோடு மாவை சேனாதிராசாவும் வந்தார். அப்போது அவருக்கு அகவை 30 மட்டுமே. அதுதான் அவரோடான எனது முதல் சந்திப்பு.

சேனாதிராசா 1961 இல்  இதஅக நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றியவர். 1962 இல் அதன்  இளைஞர் அணியில்  இணைந்தார்.  1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகளை  சிறைக் கதவுகளுக்கு உள்ளே கழித்தவர்.  1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின (தவிகூ) தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.Image result for Senathirajah MP

அமிர்தலிங்கம் 1989 யூலை 13 இல்  படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 1999 யூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தவிகூ வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று  நாடாளுமன்ற உறுப்பினரானார்.  நாடாளுமன்றத்துக்கு நடந்த 2000, 2001, 2004, 2010, 2015  தேர்தல்களிலும்  அவர் வெற்றிபெற்றார்.

இதஅக இல்  பொதுச் செயலாளர் உட்பட பல பதவிகளை வகித்து வந்த மாவை சேனாதிராசா 2014 ஆம் ஆண்டு தலைவர் ஆனார். இப்படிப்  படிப்படியாகத்தான் அவர் தலைமைப் பதவிக்கு வந்தார்.

ஐயா சம்பந்தனும் படிப்படியாகத்தான் தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக வர முடிந்தது. மாவை சேனாதிராசா போலவே  சம்பந்தன் அவர்களது அரசியல் நுழைவு 1961 ஆம் ஆண்டு  நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தோடு தொடங்கியது.  அந்தப் போராட்டத்தில் பங்குபற்றியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். 1977 இல் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி  பெற்றார்.  இலங்கை அரசியலமைப்பின் 6 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் சத்தியப்  பிரமாணம் எடுக்க மறுத்து  தவிகூ உறுப்பினர்கள்  நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை  செப்தெம்பர் 7, 1983  இல் இழந்தார்.  மீண்டும் 2001 தொடங்கி இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். தவிகூ இன்  பொதுச் செயலாளராக இருந்த இவர் அதிலிருந்து வெளியேறிய பின்னர்  தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஒக்தோபர் 20, 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடக்கப்பட்ட போது அதன் தலைவராக இரா. சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார். இன்றுவரை அந்தப் பதவியில் அவர் தொடர்ந்து இருந்து வருகிறார்.

ஓகஸ்ட் 1985 இல்  திம்புவில் இலங்கை அரசுக்கும்  தமிழர் தரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் தவிகூ சார்பாக கலந்து கொண்ட மூவரில் இரா. சம்பந்தன் ஒருவர். மற்ற இருவரும் அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் ஆவர். மறைந்த பிரதமர் இந்திரா நேரு, இராஜீவ் காந்தி ஆகியோருடன் நடந்த பேச்சு வார்த்தைகளின் போதும்   சம்பந்தன்   கலந்து கொண்டவர்.

எனவே மாவை சேனாதிராசா சரி, சம்பந்தன் சரி இருவருக்கும் நீண்ட கால அரசியல் வரலாறு உண்டு. இருவரும்  தமிழ் அரசுக் கட்சியில் படிப்படியாகவே  தலைமைப் பதவிக்கு உயர்த்தப் பட்டார்கள். ஆனால் விக்னேஸ்வரன்? இரண்டாயிரத்து பதின் மூன்றாம் ஆண்டு செப்தெம்பரில் நடந்த மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட போதுதான்  அவர் அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.

கொழும்பு,  புதுக்கடையில்  பிறந்த  விக்னேஸ்வரன் சட்டவாதியாக  தொழில் செய்து  கொண்டிருக்கும் போது    மே 7, 1979  இல்   நீதித்துறையில் இணைந்தார். தொடக்கத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதித்துறை நடுவராகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.  சனவரி 1987 இல் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றார்.  1988 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்று, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாணங்களில் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசரானார். 2001 மார்ச்சு மாதத்தில் உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேசுவரன், அந்த விழாவில் தமிழர்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும். ஒக்டோபர் 2004  இல் இளைப்பாறினார்.

இளைப்பாறிய பின்னர் சித்தம் போக்கு சிவம் போக்கு என்று சொல்லிக் கொண்டு ஒரு ஆன்மீகவாதியாக வலம் வந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக இவர் பாலியல் சாமி பிரேமானந்தாவின் சீடராகவும் இருந்து வந்தார்.  இப்போதும் இருந்து வருகிறார். பிரேமானந்தாவுக்குப் பிடித்த சீடர்களில் அவரும் ஒருவர். பத்தாம் வகுப்புப் படித்த பிரேமானந்தா இவரை ‘டா’ போட்டு அழைப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். இலங்கையில் பிரேமானந்தா ஆசிரமத்துக்கு இருக்கிற சொத்துக்களுக்கு விக்னேஸ்வரன் தலைமையிலுள்ள அறங்காவல் சபை பொறுப்பாக இருக்கிறது.

1983 இனக் கலவரத்தை அடுத்து பிரேமானந்தா தமிழ்நாடு சென்று பாத்திமா நகரில் (திருச்சி) குடியேறினார். அங்கு ஒரு ஆசிரமத்தை உருவாக்கினார். அந்த ஆசிரமத்தில் அவரால் தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்ற 13 பெண்பிள்ளைகளில்  (இவர்கள் எல்லோரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள்)  மூவர் 16 அகவைக்கு குறைந்தவர்கள். அவர்களது கற்பைத் தனது காமப் பசிக்கு  இரையாக்கிக் கொண்டார் பிரேமானந்தா!  இதில் சிலர்  பருவமடைய முன்னரும் பருவமடைந்து ஒரு மாதத்துக்குள்ளும் கூட பிரேமானந்தாவால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற அதிர்ச்சித் தகவலும் அப்போது (1994)  வெளியாயிற்று. பிரேமானந்தாவினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்த சிறுமி ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தக் கருவை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள் அதற்குத் தந்தை பிரேமானந்தாவே என்பதையும் நீதிமன்றத்தில் அறிவியல் (டிஎன்ஏ)  ஆதரங்களோடு எண்பித்தனர்.

பிரேமானந்தாவின் லீலைகளைத் தட்டிக் கேட்ட இரவி என்ற இளைஞனை அடித்துக் கொலை செய்த பின்னர் ஆசிரமத்திலேயே அவரது உடல் புதைக்கப் பட்டது.  கொலை மற்றும் பாலியல் வழக்குகளில் சிக்கிய பிரேமானந்தா, குற்றவாளி என்று எண்பிக்கப்பட்டு, அவருக்கும் ஏனையவர்களுக்கும் ஓகஸ்து 1997 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நீதிமன்றத்தினால் அடுத்தடுத்து இரட்டை ஆயுள் தண்டனை (Two consecutive life sentences)  விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்பிள்ளைகளுக்கு இழப்பீடாக பிரேமானந்தாவுக்கு 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. இவருக்கு உதவிய கமலானந்தாவுக்கு பிரேமானந்தா போலவே அடுத்தடுத்து இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  பாலன், சதீஸ், நந்தா  ஆகிய மூவருக்கும் ஒற்றை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நால்வரும் தற்போது தமிழ்நாடு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரையும் விடுதலை செய்யுமாறு விக்னேஸ்வரன் கடந்த மார்ச் 3, 2015 அன்று இந்தியப் பிரதமர் மோடிக்கு வட மாகாண சபையின் கடிதத் தலைப்பில் ஒரு கடிதம்அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய  கடிதம்  இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா அப்போது  செய்தி வெளியிட்டது.

அந்தக் கடிதத்தில் பிரேமானந்தாவுக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் இராம் ஜெத்மாலினி  தனது நண்பர் என்றும் அவருக்கு   பிரேமானந்தாவுக்கு எதிரான வழக்குப் பொய்யானவழக்கு என்பது தெரியும் என்றும்  குறிப்பிட்டிருந்தார். புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.   பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தாலும் பிரேமானந்தாவின் மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அந்த வழக்கில் சாட்சியம் சொன்ன விக்னேஸ்வரனுக்கு நீதியரசர்கள் தலையில் குட்டு வைத்தனர். அவரை நீதியரசர்கள் கற்பனாவாதி (Wishful thinker) என வருணித்தனர்.

பாலியல்,  கொலை இரண்டிலும் ஆயுள் தண்டனை பெற்ற  பிரேமானந்தா பெப்ரவரி 21, 2011 அன்று மஞ்சள் காமாலை நோய் வந்து  இறந்து போனார்.  இறக்கும் போது அவருக்கு அகவை 60 ஆகும்.

இதில் இருக்கும் பெரிய சோகம் என்னவென்றால்  அவரது நினைவாக விக்னேஸ்வரன்ஆண்டுதோறும் குரு பூசை செய்கிறார். புளியங்குளத்தில் ஒரு கோயில் கட்டி  அங்கு  மூன்று வேளையும் பூசை செய்ய ஒரு ஐயர் அமர்த்தப்பட்டுள்ளார். மேலும் விக்னேஸ்வரன் முதலமைச்சராகப் பதவி ஏற்றபின்  கடந்த ஆண்டு நொவெம்பர்  07, 2014 இல் தமிழ்நாட்டுக்குப் போனபோது அவர்  நேரே  புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை  அடுத்த பாத்திமாநகரில் உள்ள பிரேமானந்தா ஆச்சிரமத்துக்குச் சென்றார்.

அவரைப் பிரேமானந்தா அறக்கட்டளை நிருவாகிகள் வரவேற்றனர். பின்னர், ஆச்சிரமத்தை சுற்றிப்பார்த்த விக்னேஸ்வரன் நிர்வாகிகளிடம் ஆச்சிரமத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, பிரேமானந்தாவை அடக்கம் செய்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பிரேமானந்தா ஆச்சிரமத்தில் நடைபெறும் பௌர்ணமி பூசையில் ஆண்டுக்கு ஒருமுறை விக்னேஸ்வரன் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இலங்கையின் வடக்கு மாகாண சபையின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தற்போதுதான்  முதல் முறையாக ஆச்சிரமத்துக்கு வந்துள்ளார் எனத்  தெரிவித்தனர்.  அன்றிரவு அங்கேயே தங்கி இருந்தார்.

பாலியல் சாமியார் பிரேமானந்தா உயிருடன் இருந்த காலத்தில்  இந்த  ஆசிரமம் பகலில்  இளித்தவாயர்களுக்கு  உபதேசம் செய்யும் மடமாகவும்  இரவில்  இன்பவல்லிகளுடன் சலக்கிரீடை செய்யும் காமதேவனின் பள்ளியறையாகவும் பயன்பட்டது. பகலில் யோகிகள்,  பாதி இராத்திரியில் போகிகள் நிறைந்திருந்தார்கள். அங்கு வரும் பெண் பக்தைகளுக்கு தீா்த்தத்துடன் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து கலவி இன்பத்தில்  பிரேமானந்தா ஈடுபட்டுள்ளார்.

இந்த இளித்தவாயர்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள், பணமுதலைகள் அடங்குவர். கழுத்திலே தங்கச் சங்கிலி, தலையிலே சடாமுடி, நெற்றியிலே குங்குமப் பொட்டு, வீபூதி, இடையிலே காவிவேட்டி, குடிக்கச் சுண்டக் காய்ச்சி கற்கண்டு கலந்த பால், தின்னப் பழங்கள், உண்ணப் பத்துவகைக் கறியோடு நெய்ச்சோறு  என வலம் வந்த பிரேமானந்தா பெண்கள் விடயத்தில் பலவீனமாக இருந்ததில் வியப்பில்லை. 

படித்தவர்கள் கூட பணம் சம்பாதிக்க, பதவி உயர்வு பெற  சாமியார்களை நாடுவது தொன்றுதொட்டு வரும் மூட பக்தியாகும். இதனை அறிஞர் அண்ணா தான் எழுதிய வேலைக்காரி என்ற நாடகத்தில் ஹரிஹரதாசும், சுந்தரகோசும் நடத்துகின்ற ஆசிரமம் வாயிலாகக் காட்சிகள் பலவற்றை உருவாக்கி போலிச் சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை  அம்பலப்படுத்தியிருந்தார்.

பிடிபடும் மட்டும் கள்ளன் யோக்கியனே. அது போல  சாமியார்களும் பிடிபடுமட்டும் கடவுள் அவதாரங்களே!  அப்படித்தான் பாமர மக்கள் நம்புகிறார்கள். பிடிபட்ட பின்னர்தான்  சாமிகள்  ஆசாமிகள் என்பது தெரிகிறது.  ஆனால் விக்னேஸ்வரன் பாலியல் சாமி பிரேமானந்தா ஒரு காமுகன் என்பதை மூன்று நீதிமன்றங்கள்  சொல்லித் தண்டனை வழங்கிய பின்னரும் அவரை நம்புவதும் அவர் மீதான வழக்கு பொய் என்பதும் அவருக்கு கோயில் கட்டி பூசை செய்வதும் கண்டிக்கத் தக்கது.  இளம் பெண்குலத்துக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக விக்னேஸ்வன் விளங்குகிறார்.

இந்த வாரம் கூட யூனியர் விகடன் பாலியல் சாமி பிரேமானந்தாபற்றி ஒரு கட்டுரை பிரசுரித்துள்ளது.  அதைப் படிக்கும் போது குமட்டிக் கொண்டு வருகிறது! உங்களுக்கு எப்படியோ நான் அறியேன் பராபரமே!

“சாமியார்களில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தன் பக்கம் திருப்பியவர், பிரேமானந்தா. அவரது பம்பைத் தலையும், உருட்டுவிழிப் பார்வையும் வெகுநாளைக்கு மக்களின் பேச்சாக இருந்தது. பிரேமானந்தாவின் ஆசிரம மர்மங்களை ஜூ.வி-தான் அம்பலப்படுத்தியது. திருச்சி பாத்திமா நகரில் இருக்கும் பிரேமானந்தா ஆசிரமத்திலிருந்து தப்பிவந்த சுரேஷ்குமாரி, லதா என்ற இரண்டு இளம்பெண்கள், ஜூ.வி அலுவலகத்துக்கு போன் செய்து, நம்மை ஓரிடத்துக்குக் கூப்பிட்டுச் சில பயங்கர உண்மைகளைச் சொன்னார்கள். ‘ஆசிரமத்தில் இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை பிரேமானந்தா தன் காமவெறிக்கு பலியாக்கிக்கொண்டிருக்கிறார். இதை எதிர்த்த ரவி என்பவரைக் கொன்றுவிட்டார்’ என்பது அவர்கள் சொன்ன பகீர்த் தகவல்.

இதைத் தொடர்ந்து ஆசிரமத்துக்கு ஜூ.வி நிருபர் சென்றார். இந்த விஷயத்தை விசாரித்ததும் பிரேமானந்தாவின் முகம் மாறியது. ‘‘இதோ பாரு ராஜா! நான் ஓபனா சொல்கிறேனே… பல பெண்பிள்ளைகள் என்கிட்டே வந்து ‘ஏன் என்னிடம் அப்படி நடந்துக்க (அதாவது… லீலைகள்!) மாட்டேங்கறீங்க’னு கெஞ்சுவாங்க. வற்புறுத்துவாங்க. சாமி டாலரைப் போட்டுக்கிட்டு, நான் எப்படிப் பொண்ணுங்களைக் கூப்பிட்டு வெச்சுக்கிட்டுத் தடவ முடியும்?’’ எனக் கேட்டு திடுக்கிட வைத்தார் சுவாமி.

விவகாரம் ஜூ.வி-யில் வெளியானது. தமிழகமே அதிர்ந்து நிமிர்ந்தது. போலீஸ் அவரைக் கைது செய்தது. அவருடன் ஆசிரமத்தின் தலைவியாக இருந்த திவ்யா மாதாஜி உல்லாசமாக கிடார் வாசிக்கும் படங்களெல்லாம் கிடைத்ததே தவிர, மாதாஜி இலண்டனுக்கு கிரேட் எஸ்கேப் ஆகியிருந்தார்.

ஆசிரமத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவன் ரவியின் சடலத்தைத் தோண்டி எடுத்தனர். ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை செய்ததில் பணம், சாமியாரின் சில வீடியோ காஸெட்கள், கம்ப்யூட்டர் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ‘சுவாரஸ்யமான’ பல படங்களைக் கைப்பற்றி ஜூ.வி வெளியிட… வாசகர்கள் திகில் கலந்த த்ரில்லோடு இந்த ஆன்மிக அலம்பலை ஃபாலோ செய்தனர்……” (https://www.vikatan.com/juniorvikatan/2018-jan-03/jv-milestone:-society/137432-junior-vikatan-milestone-articles-samiyargal.html)

இந்தப் பிரேமானந்தா தனது குரு அவருக்குக் கோயில் கட்டி குடமுழுக்குச் செய்து வழிபடுகிறேன் என்று விக்னேஸ்வரன் சொல்கிறார்.

இப்படியான சாமுத்ரிகா இலட்சணங்களைக் கொண்ட ஒருவர்  எப்படி, எந்த முகத்தோடு  தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டார்? அது கிடைக்கவில்லை என்றவுடன் அந்தக் கட்சியின் இரண்டாம் மட்டத்  தலைவர்களை பழிவாங்கினாரா இல்லையா? முன்னாள் நல்வாழ்வு அமைச்சர் சத்தியலிங்கத்தை “சிக்கலில் மாட்ட முடியாதா” என்று அவர் அமைத்த விசாரணைக் குழு உறுப்பினர்களிடம் கேட்டாரா இல்லையா?

விக்னேஸ்வரன் முன்னாள்  உச்ச நீதிமன்ற நீதியரசர் என்ற ஒரே தகுதியை வைத்துக் கொண்டு  தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப பதவிக்கு ஆசைப்படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போன்றது.   கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத குருக்கள்  வைகுண்டத்துக்கு வழிகாட்டுகிறேன் என்று  சொன்னது போன்றது.


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply