Political Column 2009 (1)

நோர்வே பிரான்ஸ் இரண்டுக்கும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்பதை எண்பித்துக் காட்டுங்கள்!

நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ – கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடீ.

கூட்டத்திற் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ – கிளியே
நாளில் மறப்பா ரடீ.

அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
அச்சத்திற் கொண்டா ரடீ – கிளியே
ஊமைச் சனங்க ளடீ.

ஊக்கமும் உள்வலியும்
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் – கிளியே
வாழத் தகுதி யுண்டோ?

சொந்தச் சகோதரர்கள்
துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை இரங்கா ரடீ – கிளியே
செம்மை மறந்தா ரடீ.

நூற்றிப்பத்து ஆண்டுகளுக்கு முன் நடிப்புச் சுதேசிகளைக் கண்டு மனம் வெதும்பிய பாட்டுக்கொரு புலவன் பாரதி கழிவிரக்கப்பட்டு எழுதிய வரிகள்தான் இவை.

பாரதியார் காலத்தில் ஒரு கூட்டம் இருந்தது. நெஞ்சில் உரம் இல்லை. நேர்மை இல்லை. சொல்வதெல்லாம் வஞ்சனை. வாய்ச் சொல்லில் மட்டும் வீரம்.

இந்தக் காலத்திலும் பாரதியார் காலத்து நடிப்புக் கூட்டம் இருக்கிறது. எப்போதும் சின்னஞ் சிறு கதைகள் பேசி, பிறர் வாடச் செயல்கள்பல செய்து கூடிக் கிழப் பருவம் எய்திப் பின் கூற்றுக்கு இரையாகும் வேடிக்கை மனிதர்கள் கூட்டம் இருக்கிறது.

இப்படிப் பட்டவர்கள் தாங்களும் உருப்படியாக எதனையும் செய்யமாட்டார்கள். மற்றவர்கள் செய்தாலும் நொட்டை; சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீது மீள் வாக்குக் கணிப்பு ஏன் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான காரண காரியங்களை விளக்கிப் பல கூட்டங்கள் நடத்தினோம். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல கட்டுரைகளை எழுதினோம்.

கனடா உலகத்தமிழர் ஏடு வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து பல கிழமைகளாக வெளியிட்டு வருகிறது. இருந்தும் சிலர் அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தைப் படித்துணர மறுக்கிறார்கள். அதனை எதிர்த்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

எனது நீண்ட கால நண்பர் ஒருவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் மின்னஞ்சல் ஒன்றை எனக்க அனுப்பியிருந்தார். அவர் இலண்டனில் வாழ்கிறார். அவருக்குப் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வெளியிட்ட ஊடக அறிக்கையை அனுப்பியிருந்தேன். அதைப் படித்து விட்டு அவர் ஆங்கிலத்தில் மறுமொழி எழுதியிருந்தார்.

Thanks for your comments about Vaddukkoddai resolution. But you fail to explain why voting is essential at this time. This resolution already approved by a Convention of All Tamil parties and at the general election in 1977. Almost all Tamils approved. Why is important for Diaspora Tamil? No one against. No one so far explained this Question. Regards.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி உங்களது விளக்கக் குறிப்புகளுக்கு நன்றி. ஆனால் நீங்கள் அந்தத் தீர்மானத்துக்கு இப்போது வாக்களிப்பு நடத்த வேண்டிய தேவையை விளக்கத் தவறிவிட்டீர்கள். இந்தத் தீhமானம் அனைத்து தமிழ்க் கட்சிகளது மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட எல்லோருமே அதனை ஏற்றுக்கொண்டார்கள். அது ஏன் புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு முக்கியமானது? யாரும் அதற்கு மாறில்லை. இதுவரை யாரும் இந்தக் கேள்விகளுக்கு பதில் இறுக்கவில்லை. வாழ்த்துக்கள்.

இந்த நண்பர் படியாதவர் அல்ல. நன்றாகப் படித்தவர். ஒரு மாத சஞ்சிகைக்கு ஆசிரியராகவும் இருக்கிறார். முன்னாள் தொழிற்சங்கவாதி. தமிழீழ தேசியத்தை நேசிப்பவர். தமிழீழ போராட்டத்தை ஆதரிப்பவர். அதற்காக 1979 இல்; பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். அவரோடு சேர்ந்து கைதாகிய நண்பர் ஈழவேந்தனும் அதே சிறையில் அடைக்கப்பட்டார்.

கனடா போல இங்கிலாந்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய விளக்கங்களோ மீள் வாக்கெடுப்போ இன்னும் நடைபெறவில்லை என நினைக்கிறேன். அவரது விளக்கக் குறைவுக்கு அது ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்று (புதன்கிழமை) கீதவாணி வானொலியில் நான் ஒரு மணி நேரம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி விளக்கம் அளித்தேன். நேயர்களது கேள்விகளுக்கும் பதில் இறுக்கும் வாய்ப்பை நண்பர் நடராசா இராஜ்குமார் எற்படுத்தித் தந்தார். இரண்டு நேயர்கள் மட்டும் குதர்க்கமாக விதண்டா வாதம் செய்தார்கள்.

எனவே நண்பரது கேள்விகளுக்கும் கீதவாணியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் கேள்வி – பதில் வடிவத்தில் கீழே கொடுத்துள்ளேன்.

(1) கேள்வி – வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு இப்போது வாக்களிப்பு நடத்த வேண்டிய தேவை என்ன?

பதில் – வட்டுக்கோட்டைத் தீர்மானம் 33 ஆண்டுகளுக்கு முன்னர் 1976 ஆம் ஆண்டு மே 14 இல் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை முன்னிறுத்தி 1977 ஆம் ஆண்டு யூலை 21 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அய்க்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி சுதந்திர இறைமையுள்ள தமிழீழ தனியரசே ஒரே தீர்வு என்கிற அரசியல் பிறப்புரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் (மொத்த இருக்கைகள 168;) வெற்றி பெற்றது. வட மாகாணத்தில் மட்டும் 14 தொகுதிகளைக் கைப்பற்றியது.

இந்தத் தேர்தலில் இன்று 49 அகவையைத் தாண்டியவர்கள் வாக்களித்திருக்க முடியாது. எங்களது இளம் தலைமுறை நிச்சயம் வாக்களித்திருக்க முடியாது. மேலும் இன்று சிங்கள அரசு சரி, இந்தியா சரி எல்லோரும் இனச் சிக்கலுக்கு 13 ஆவது சட்ட திருத்தத்தின் அடிப்படையில்தான் தீர்வு எனச் சொல்கின்றன. எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள உறுதிசெய்வதன் மூலம் தமிழ்மக்கள் 13 ஆவது திருத்தத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்ற செய்தியைச் சொல்ல முடியும்.

(2) கேள்வி – இந்தத் தீர்மானத்தின் மீது நிலத்தில் உள்ளவர்கள்தான் வாக்களிக்க வேண்டும். புலத்தில் இருக்கும் தமிழர்கள் வாக்களிப்பதில் என்ன பலன்? பதில் – நிலத்திலுள்ள எங்கள் மக்கள் சிங்கள – பவுத்த ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்;கள் தங்கள் வாயைத் திறக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள். வன்னியில் இன்றும் 120,000 பொது மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. 11,000 க்கும் அதிகமான போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

வன்னி தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகரத்தினம் சிறை வைக்கப்பட்டுள்ளார். அமைதிக் காலத்தில் இரண்டு கட்டுரை எழுதிய ஊடகவியலாளர் திரு. திசநாயகத்துக்கு சிங்கள நீதிபதி 20 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார். கொலையாளிளுக்கும் கொள்ளைக்காரர்ளுக்கும் 6 – 10 ஆண்டு தண்டனைதான் விதிக்கப்படுகிறது.

சிங்களக் குடியேற்றம் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக திருகோணமலையில் தமிழர்களது நிலங்கள் பறிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குக் காவலாக துப்பாக்கி ஏந்திய 40,000 சிங்கள இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கும் சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் இருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர்கள் ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ தளபதிகள். கிழக்கு மாகாண அரச அதிபரும் சிங்களவரே.

கிழக்கு மாகாண முதல் அமைச்சர் ஒரு கூலித் தொழிலாளியைக் கூட நியமனம் செய்யும் அதிகாரம் அற்ற பொம்மையாகவே இருக்கிறார். இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

சுருக்கமாகச் சொன்னால் தமிழ்மக்கள் தங்கள் அரசியல் வேட்கையைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கும் அதற்காகக் குரலெழுப்பிப் போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்ளக நிலைமைகள் மிகப்பெரும் தடையாகவும் பாரிய அச்சுறுத்தலாகவும் உள்ளன. எனவே அவர்களுக்கு நாம்தான் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. அதன் ஒரு செயற்பாடே இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்குக் கணிப்பு.

(3) கேள்வி – வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்குக் கணிப்புக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு நடைபெற இருக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு? நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிப்பவர்களில் சிலர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது நடைபெற இருக்கும் வாக்குக் கணிப்பை எதிர்க்கிறார்களே?

(4) பதில் – இரண்டும் வௌ;வேறானவை அல்ல. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் இறைமை பொருந்திய சமய சார்பற்ற, சமவுடமைத் தமிழீழ அரசை மீட்டளிப்பதும் மீள் உருவாக்குவாக்குவதும் (This Convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Thamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Thamil Nation in this Country)  இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் தனது இருப்பைக் காப்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது என இம் மாநாடு தீர்மானிக்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Thamil Eelam)  தமிழ் மக்களது அரசியல் வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாகத் தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஓர் அரசியல் அமைப்பாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கருவாகும்.

தாயகத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கைகளையும் உரிமைககளையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்பொழுது எவ்வித வாய்ப்புகளும் இல்லை. ஸ்ரீலங்கா அரசின் சட்ட அடிப்படையான தடைகள், இராணுவ ஆக்கிரமிப்பு, படுகொலைகள் ஆகிவற்றின் ஊடாகத் தமிழ் மக்களது விடுதலை வேட்கையையும் உரிமைகளையும் ஒடுக்கி வருகின்றது.

இந்நிலையில் தமிழீழ நாட்டின் உறுப்பாகிய புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள மக்களாட்சி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்குச் செயலுருவம் கொடுப்பதற்காகப் பாடுபடும் அதியுயர் அரசியல் நடுவமாக இந்த நாடுகடந்த அரசு அமைக்கப்படும். தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசில் பங்கு பெறுவது நடைமுறைச் சாத்தியமற்றது. எனவே இந்த அரசில் உறுப்புரிமை வகிக்கும் சார்பாளர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களிடையே இருந்து மக்களாட்சி முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த அரசு இலங்கைத் தீவில் இருக்கும் நட்பு சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும். (நாடு கடந்த தமிழீழ அரசு விளக்கக்கோவை)

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள தமிழர்களது சுதந்திர இறைமையுள்ள தமிழீழ தனியரசு என்பது ஒரு இலக்கு ஆகும். அந்த இலக்கை அடைவதற்குக் கொடுக்கப்படும் செயல் வடிவம் அல்லது கட்டுமானவே நாடுகடந்த தமிழீழ அரசாகும்.

அதே சமயம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும் வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும் நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும் இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு கை கொடுக்கும் முகமாக மக்கள் அவை உருவாக்கப்படும். அதற்கான தேர்தல் மக்களாட்சி முறைமைக்கு அமைய மிக விரைவில் நோர்வேயில் நடந்தது போல் கனடாவிலும் நடைபெறும்.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும். காரணம் இவை ஒன்றுக்கொன்று இசைவானவை. பாதுகாப்புத் தரக்கூடியவை. மாவீரர்களதும் உலகளாவிய தமிழ் மக்களதும் தாகமான தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும்.

எதிர்வரும் டிசெம்பர் 19 ஆம் நாள் (சனிக்கிழமை) நடைபெற இருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்குக் கணிப்பில் தமிழ்த் தேசியத்தையும் மக்களையும் மண்ணையும் மறைந்த மாவீரர்களையும் பூசிக்கும் கனடிய தமிழர்கள் கலந்து கொண்டு தங்கள் வரலாற்றுக் கடமையை செவ்வனே நிறைவேற்ற வேண்டும்.

நோர்வே மற்றும் பிரான்ஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு கனடிய மக்களாகிய நாம் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எண்பித்துக் காட்டுங்கள்! தமிழினம் பேரும் புகழும் சீரும் சிறப்பும் பீடும் பெருமையும் மிக்க இனம் என்பதை உலகுக்கு மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்!

மானத்தை காத்திட்டால் மரணத்தை வென்றிடலாம். விழிப்புடன் இருந்தால் விதியினை மாற்றிடலாம். காரியத்தில் கண்ணாயிருந்தால் தமிழீழத்தை மீட்டிடலாம்! (உலகத்தமிழர் – டிசெம்பர் 17.2009)

இந்த கட்டுரையை எழுதியவர் தன்னை மிகப் பெரிய அறிவாளி என நினைக்கிறார் எனத் தெரிகிறது. வி.புலிகளது ஆதரவாளன் எனச் சொல்லிக் கொண்டு தனது எதிர்ப்புப் பரப்புரையை செய்திருக்கிறார். இவருக்கு வ.தீர்மானம் வி.புலிகளால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கை என்பது தெரியாமல் இருக்கிறது. நோர்வேயில் வ.தீர்மானத்தின் மீது வாக்குக் கணிப்பு மே 10 ஆம் நடந்தது. அவாவது முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்கு முன்னர்!

இப்படி மாரித்தவக்கை மாதிரி எதிலும் நொட்டை பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருக்காமல் ஏதாவது உருப்படியாகச் செய்யவும். இல்லையேல் கொஞ்சம் விலகி இரு பிள்ளாய் சன்னிதானம் மறைக்கீறது!

மக்கள் கரி பூசினது உங்களது முகத்திலேதான். அது தெரியாவீட்டால் கண்ணாடியில் பார்க்கவும்.


இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசுக்குத் தமிழ்மக்கள் வாக்களிப்பு?  

நக்கீரன் 

இரண்டு ஆண்டுகாலம் பதவியில் நீடிக்கச் சட்டப்படி வாய்ப்பிருந்தும் ஆட்சி;த்தலைவர் மகிந்தா இராசபச்சே ஆட்சித்தலைவருக்கான தேர்தலை முன்கூட்டி நடத்த முடிவு செய்துள்ளார்.  

தேர்தலுக்கான வேட்பு மனு இம் மாதம் 17 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் எதிர்வரும் சனவரி 26 இல் நடைபெற இருக்கிறது.  

ஆட்சித்தலைவர் தேர்தலை இரண்டு ஆண்டுகாலம் கழித்து நடத்தாமல் இப்போது இராசபக்சே நடத்துவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.  

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை வாக்குகளாக மாற்றி அதனை அறுவடை செய்யலாம் என மகிந்தா இராசபக்சே நினைக்கிறார்.    

விடுதலைப் புலிகளைப் போரில் அழித்தொழித்த காரணத்தால் இராசபக்சே சிங்கள மக்களிடம் தான் ஒரு நவீன துட்ட கைமுனு என்ற மிதப்போடு வலம் வருகிறார். அரச சார்பு ஊடகங்களும் அரசு கட்டுப்பாடு ஊடகங்களும் இராசபக்சேயை அப்படித்தான் வருணிக்கின்றன. அவர்தான் நாட்டின் அரசன் என்றுகூட சில ஊடகங்கள் புகழாரம் சூட்டி மகிழ்கின்றன.  

மூன்று சகாப்தங்களுக்கும் மேலான “பயங்கரவாதத்தை” முறியடித்த சிங்கள – பவுத்த வீரர் என்ற முறையில் மகிந்த இராசபக்சே மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளால் தேர்தலில் வெற்றிவாகை சூட வேண்டும். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணம் நீங்கலாக சிங்கள மாகாணங்களில் மகிந்த இராசபக்சேயின் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரு வெற்றி பெற்றிருக்கிறது.  

அய்க்கிய தேசியக் கட்சியின் கோட்டை என ஒரு காலத்தில் கருதப்பட்ட மேல்மாகாணத்திலும் அய்க்கிய மக்கள் சுதந்தி;ர முன்னணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  

ஆனால் இராசபக்சேயின் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த வெற்றி முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் அரசியல் வருகையால் கைக்கு எட்டாத தூரத்திற்குப் போயிருக்கிறது.  

இராசபக்சேயும் சரத் பொன்சேகாவும் ஆளை ஆள் சரமாரியாக விமர்ச்சிக்கத் தொடங்கியுள்ளார்கள்.  

நேற்றைய கதாநாயகர்கள் இன்றைய துரோகிகளாக மாறுகிறார்கள்” (“yesterday’s heroes turning today’s traitors”) என சரத் பொன்சேகாவை இராசபக்சே சாடியுள்ளார்.   

ஒரு இராணுவப் புரட்சி மூலம் தனது ஆட்சியைக் கவிழ்க்க பொன்சேகா திட்டம் தீட்டினார் என்று இராசபச்சே குற்றம் சாட்டினார். இராணுவப் புரட்சியா? அப்படியொன்றும் இல்லை, இது வெறும் புரளி என்றார் பொன்சேகா.    

சரத் பொன்சேகா தான் ஒருபோதும் தோல்வியைக் கண்டிராத ஒரு இராணுவ தளபதி என்று மார்தட்டுகிறார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தன்னை உலகிலேயே சிறந்த இராணுவ தளபதி என்று குறிப்பிட்டிருந்ததாகவும் பொன்சேகா கூறுகிறார்.  

இல்லை அவர் இதற்கு முன்னர் வி.புலிகளுக்கு எதிரான போரில் பல களமுனைகளில் தோல்வி கண்டவர்” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சே ஏளனம் செய்கிறார்.  

முகமாலைப் போர்முனையில் வி.புலிகளுக்கு எதிராக மூன்று முறை படையெடுத்து மூன்று முறையும் தோல்வி கண்டவர் என்றும் 500 சிங்கள இராணுவத்தினரைப் பலி கொடுத்தவர் என்றும் அவர் ஒரு இராணுவ மேதாவி என்றோ யுத்த கதாநாயகன் என்றோ உரிமை கோர முடியாது என்று கோத்தபாய இராசபக்சே கூறுகிறார்.  

ஆட்சித்தலைவி சந்திரிகா குமாரதுங்காவுக்கு 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வி. புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த 40,000 சிங்கள இராணுவத்தினரை திருப்பி எடுக்குமாறு பரிந்துரை செய்தவர்களில் பொன்சேகாவும் ஒருவர் என்ற குற்றசாட்டும் பொன்சேகா மீது வீசப்படுகிறது. 

இப்படி மாறி மாறி இராசபக்சேயும் பொன்சேகாவும் ஆளுக்கு ஆள் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.  

மகிந்த இராபக்சேயைப் பொறுத்தளவில் தன்பக்கம் நிற்காத அனைவருமே துரோகிகள் என்பது அவரது சிந்தனையாகும். 

போர்க்காலத்தில் தோளோடு தோள் நின்று போர்க்கள வெற்றியை வெடிகொளுத்தி நாடு முழுதும் பறையறைந்து கொண்டாடிய இந்த இரண்டு “போர்க் கதாநாயகர்” களும் எப்படி பரம எதிரிகளாக மாறினார்கள்? 

எல்லாம் போர்க்கள வெற்றிக்கு யார் காரணம்? அந்தப் பெருமை யாருக்கு உரியது? என்ற சண்டைதான். 

போர் வெற்றிக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவா அல்லது அரசியல் தலைவர் மகிந்தா இராசபச்சேயா என்பதில்தான் சண்டை! இந்தச் சண்டை குழாயடிச் சண்டையாக இன்று மாறியிருக்கிறது. அது கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கிறது!  

எது எப்படியிருப்பினும் மகிந்த இராசபச்சே சரி, சரத் பொன்சேகா சரி இருவருமே தமிழ்மக்களைப் பொறுத்தளவில் கொலைகாரர்களே! முன்னவர் வன்னி மக்களை கொல்லச் சொன்னார், பின்னவர் அவர்களைக் கொன்று முடித்தார்.  

போர் முடிந்த பின்னரும் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சரத் பொன்சேகா வெளிப்படையாகவே பயமுறுத்தியிருக்கிறார். 

இந்த நிலையில் தமிழ்மக்கள் யாரை ஆதரிப்பது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தவரும் இருந்து வருபவருமான மகிந்த இராசபக்சேக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. எனவே அவருக்கு எதிராக தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதில் இருவித கருத்துக்கு இடமில்லை. அப்படியென்றால் தமிழ்மக்கள் அடுத்து யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் முன்னுள்ள தேர்வு என்ன?  

(1) இரண்டும் பிசாசுகள் அல்லது பாம்புகள் அல்லது கொள்ளிக் கட்டைகள் இதில் நல்லது கெட்டது என்ற ஆராயாமல் தேர்தலைப் புறக்கணிப்பது. 

(2) தமிழ்மக்களின் முக்கிய எதிரியான இராசபக்சேயை வீழ்த்த பொன்சேகாவுக்கு வாக்களிப்பது. 

(3) தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தேர்தலில் போட்டியிட வைப்பது. 

(4) இரா.சம்பந்தனை ஆதரித்து வாக்களிக்கும் தமிழ் வாக்காளர்கள் விருப்பு வாக்கை இராசபக்சே இரண்டாவது சுற்றில் வெற்றிபெறுவதைத் தடுக்கும் பொருட்டு பொன்சேகாவுக்கு அளிப்பது.  

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது சம்பந்தனை தேர்தலில் போட்டியிட நிறுத்துவதா இல்லையா என்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் கூடி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. முடிவு அறிவிக்கப்படவில்லை.  

தேர்தலில் மகிந்தா இராசபக்சே 50 விழுக்காட்டுக்கு மேலான வாக்குகளைப் பெற்றால் தமிழ்மக்கள் பொன்சேகாவுக்குப் போட்டாலும் சரி சம்பந்தனுக்குப் போராட்டாலும் சரி தேர்தல் முடிவில் மாற்றம் இருக்காது.  

தேர்தலில் இராசபக்சேயும் பொன்சேகாவும் 50 விழுக்காட்டுக்குக் குறைவான வாக்குகளைப் பெற்றால் மட்டுமே சம்பந்தனுக்குப் போட்ட வாக்குகள் முதல் சுற்றில் பொன்சாகாவின் வெற்றியைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.  

இந்தத் தேர்தல் 2008 இல் எடுத்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14,088,500 ஆகும். இதில் இன்று குறைந்த பட்ச தமிழ்வாக்காளர்களது (வடகிழக்கு, மலையகம், மேல்மாகாணம் உட்பட முழு இலங்கையிலும்) விழுக்காடு 15 என எடுத்துக்கொள்ளலாம்.    

(1981 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணிப்பின் படி இலங்கைத் தமிழர் 12.71 விழுக்காடு  மலையகத்தமிழர் 5.51 விழுக்காடு (1971 – 9.26) மொத்தம் 18.22 விழுக்காடு).      

மொத்தம் 14 மில்லியன் வாக்குகளில் 70 விழுக்காட்டினரே தேர்தலில் கலந்து கொள்வார்கள் என்று எடுத்துக் கொண்டால் 9.8  மில்லியன் வாக்காளர்களே (2005 – 9,717,039) தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் 15 விழுக்காடு வாக்குகளின் தொகை 1.47 மில்லியன் (14.7 இலட்சம்) ஆகும்.     

தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமையலாம் என ஒரு எதிர்வு கூறலாம்.   

மகிந்த இராசபக்சே         –    47 விழுக்காடு

சரத் பொன்சேகா          –   45 விழுக்காடு

இரா. சம்பந்தன்             –    7 விழுக்காடு

மற்றவர்கள்                   –    1 விழுக்காடு  

இப்படியான முடிவு இரா. சம்பந்தனுக்கு போட்ட வாக்குகள் பொன்சேகாவின் வெற்றியைப் பாதித்து விட்டது என்பது சரியாயாகி விடும். சம்பந்தன் கேட்காது இருந்திருந்தால் பொன்சேகா 52 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதல் சுற்றிலேயே வெற்றி பெற்றிருப்பார் என்று எண்ணத் தோன்றும்.   

ஆனால் கதை இதோடு முடிந்து விடாது. எந்த வேட்பாளருக்கும் 50 + விழுக்காடு வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் வெற்றி தோல்வி முதல் இரண்டு வேட்பாளருக்கும் கிடைத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கையே முடிவு செய்யும். அதாவது தேர்தலில் ஒருவர் இரண்டு வாக்குகளைப் போடமுடியும். இரா. சம்பந்தருக்குப் போட்ட 7 விழுக்காடு (மொத்த தமிழ்வாக்களர்களது வாக்குகளில் பாதி) வாக்காளர் தங்களது விருப்பு வாக்குகளை பொன்சேகாவுக்கு போட்டிருந்தால் அவர் வெற்றிபெறுவார். ஆனால் இதிலும் ஒரு சிக்கல். சிங்கள வாக்காளர்களது விருப்பு வாக்குகள் யாருக்கு அதிகம் என்பதில் இருந்தே இறுதி வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும்.    

இரா.சம்பந்தனை வேட்பாளராக நிறுத்துவதால் தமிழர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?  

(1) தமிழ்மக்கள் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட இனம் என்பதையம் அவர்களது அரசியல் வேட்கை வேறு என்பதையும் உலகுக்கு எடுத்துக் காட்டலாம்.  

(2) அனைத்துலக நாடுகளுக்கு போர் முடிந்தாலும் தமிழர்களது அரசியல் போராட்டம் தொடர்கிறது என்பதை எடுத்துக் காட்டலாம்.

(3) தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் வேட்கைகளுக்குத் தீர்வு காண்பதற்கான எந்தத் திட்டமும் இராசபக்சே சரி, பொன்சேகா சரி இருவரிடமும் இல்லை என்பதை ஊருக்கும் உலகுக்கும் அம்பலப்படுத்தலாம்.

(4) 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு உட்பட்ட எந்தத் தீர்வையும் தமிழ்மக்கள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்ற உண்மையை உலகுக்குக் குறிப்பாக இந்தியாவுக்கு உறைப்பாக உணர்த்தலாம். 

 (5) தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை மீண்டும் வலியுறுத்தி அதற்கு வலுச் சேர்க்கலாம். 

( 6) இபிடிபி டக்லஸ் தேவானந்தா, புளட் சித்தார்த்தன், கருணா, பிள்ளையான், ஆறுமுகன் தொண்டமான், சந்திரசேகரன, ஆனந்தசங்கரி போன்றோரை தமிழ்மக்களை சிங்களவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும் அல்லது கூட்டிக் கொடுக்கும் அற்ப சலுகைகளுக்காக முழங்காலில் கையேந்தி நிற்கும் எட்டப்பர்கள், காக்கைவன்னியர்கள் எனச் சித்திரித்துக் காட்டி கொடுங்கோலன் இராசபக்சேக்கு அவர்கள் வழங்க இருக்கும் நிபந்தனையற்ற ஆதரவை மழுங்கடிக்கலாம்.

(7) 2010 ஏப்ரில் மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்கு இந்தத் தேர்தல் முன்னோடியாக அமையலாம்.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் எதிர்வரும் ஆட்சித்தலைவர் தேர்தலில் தமிழ் வாக்காகளர்கள் தமிழினத்தின் முதல் எதிரியான இராசபக்சேயைத் தோற்கடிக்க இரண்டாவது எதிரியான சரத் பொன்சேகாவுக்கு இடது கையால் வாக்களிக்க வேண்டும்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தலில் இரா. சம்பந்தன் நிறுத்தப்பட்டால் அவருக்கு முதல் வாக்கையும் இரண்டாவது விருப்பு வாக்கை பொன்சேகாவுக்கும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.


 வட்டுக்கோட்டைத் தீர்மானமும் நாடுகடந்த தமிழீழ அரசும்!

நக்கீரன்

உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பறையறைவுகள் (proclamation)  காலத்துக்குக் காலம் வெளிவந்துள்ளன. அந்த முரசறைவுகள் வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்துள்ளன.

1847 இல் யூலை மாதத்தில் இலண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் தொழிலாளர்களின் சங்கத்தைத் தீவிரமான முறையில் செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தத் தொழிலாளர்கள் சங்கம் ‘கம்யூனிஸ்டுகள் சங்கம்’ என்று அழைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில்தான் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர” (Workers of the world unite; you have nothing to lose but your chains) என்ற முழக்கத்தை கார்ல் மார்க்சும் பிடரிக் ஏஞ்ஜெல்சும் (Karl Marx and Frederick Engels )  முன்வைத்தனர்.

1848 இல் மார்க்ஸ், ஏஞ்ஜெல்ஸ் இருவரும் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Communist Party Manifesto) என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் மக்களின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது.

அமெரிக்காவுக்கும் அய்க்கிய இராச்சியத்துக்கும் எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த யுத்தத்தில் பிரித்தானியர் பல சண்டைகளில் வெற்றி பெற்றபோதும் போரில் தோல்வி கண்டனர். சாதுரியமான கெரிலா யுக்திகளைக் கையாண்ட George Washington  அவர்களின் போர் நுட்பம் ஒரு காரணமாக இருந்தபோதும் இவர்களது விடுதலை வேட்கையும் வெறியுமே முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால்தான் 1777 இல் ஏற்பட்ட கோரமான, இரக்கமற்ற பனிக்குளிரின் மத்தியிலும் இவர்கள் சளைக்காது போராடினர், அன்னியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திரப் பறையறை துரடல 4, 1776 இல் இடம்பெற்றது.

1776 ஆம் ஆண்டு யூலை 4 ஆம் நாள் வட அமெரிக்காவில் பிரித்தானியாவுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 கொலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பறையறை வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திரப் பறையறைக்கு இடப்பட்டிருந்த தலைப்பு “13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஏகமனதான பறையறை” என்பதாகும். இன்றளவும் அந்த யூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

யூலை 10, 1776 இல் அய்வரைக் கொண்ட குழு சுதந்திர பறையறைவு தயாரிப்பில் ஈடுபட்டது. யோன் அடம்ஸ் (James Adams) பென்ஜமின் பிராங்ளின் (Benjamin Franklin) றொஜர் ஷெர்மன் (Roger Sherman) ஆர்.ஆர் லிவிங்ஸ்ரன் (R.R.Livingston) தொமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson) ஆகியோரே இந்த அய்வர் ஆவர். இந்தப் பஞ்ச பாண்டவருள் Thomas Jefferson  என்பாரே இந்த பறையறைவை எழுதினார். இந்த பறையறைவில் காணப்பட்ட சாகா வரம் கொண்ட வைர வரிகள்….

We hold these truths to be self evident: that all men are created equal; that they are endowed by their creator with certain inalienable rights; that among these are life, liberty. and the pursuit of happiness.”

இந்த உண்மைகள் வெளிப்படையானவை எனக் கருதுகிறோம்: எல்லா மனிதர்களையும் கடவுள் சமமாகப் படைத்துள்ளான். அத்தோடு எவராலும் மறுக்க முடியாத சில உரிமைகளையும் கடவுள் அவர்களுக்கு அளித்துள்ளான். அவற்றுள், வாழ்வுரிமை (Life) சுதந்திரம் (Independence)இன்பத்திற்கான தேடல் உரிமை (Persuit of happiness)  வெளிப்படையான உண்மைகள் எனக் கருதுகிறோம்.”

அமெரிக்க சதந்திரப் பிரகடனத்தின் தர்மமே தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம். அமெரிக்க மக்கள் சுதந்திரம் பெற்றமைக்கு இந்த அறமே காரணம் எனலாம். ஈழத் தமிழ் மக்களும் இன்று அல்லது நாளை தங்கள் விடுதலையை வென்றெடுப்பர். ஏனெனில்…

“தார்மீக அடிப்படையில் நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட வேட்கை நியாயமானது. பன்னாட்டு மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனி அரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். பன்னாட்டு சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது.” (தமிழ் ஈழ தேசியத்தலைவர் மேதகு திரு வே. பிரபாகரன்)

பாகிஸ்தான் 1947 இல் புதிதாக உருவாக்கப்பட்ட முஸ்லிம் நாடு. அதன் முன்னோடி மார்ச்சு 22 – 24, 1940 இல் லாகூரில் கூடிய முஸ்லிம் லீக் மாநாடு பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அதிகளவு தன்னாட்சி உரிமை வழங்க வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றியது. இது பாகிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் என எல்லோராலும் கருதப்பட்டது. முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை 1930 இல் அல்லமா இக்பால் (Allama Iqbal) அவர்களால் முன்மொழியப்பட்டது. அதன் பின் பாகிஸ்தான் என்ற பெயர் 1933 இல் சவுத்திரி இராமத் அலி (Choudhary Rahmat Ali) என்பவரால் முன்மொழியப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் மொகமட் அலி ஜின்னாவும் மற்றும் தலைவர்களும் இந்து – முஸ்லிம் ஒற்றுமையில் நம்பிக்கையுடையவர்களாக இருந்தார்கள்.

1941 இல் லாகூர் தீர்மானம் முஸ்லிம் லீக்கின் யாப்பில் சேர்க்கப்பட்டது. இதுவே 1946 இல் முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையாக வடிவெடுத்தது.

“முஸ்லிம்கள் தொடர்ச்சியாகவும் வாழும் புவியியல் நிலப்பரப்பு தனிப் பகுதிகளாக எல்லை வகுக்கப்பட்டால் அல்லாது எந்த அரசியல் யாப்புத் திட்டமும் முஸ்லிம்களால் ஏற்கவோ நடைமுறைப் படுத்தவோ முடியாது. இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் ஆன வட – மேற்கு மற்றும் கிழக்கு வலையங்கள் சுதந்திர அரசுகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அவை தன்னாட்சி உரிமை மற்றும் இறைமை படைத்த மாநிலங்களாக விளங்கும்.”

பாகிஸ்தான் உருவாகுவதற்கு பிரித்தானிய இந்திய சட்டசபைகளில் சிந்து மாகாணமே முதலாவதாக ஆதரவு தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனை இரண்டாகப் பிரித்து இஸ்ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இஸ்ரேல் ஒரு தலைபட்ச பறையறவை அறிவித்தது. இந்தப் பறையறை வெளியிடப்பட்ட 11 ஆவது மணித்துளியில் அமெரிக்கா இஸ்ரேலை ஒப்புக்கொண்டது. அதனைத் தொடர்ந்து கவுத்தமாலா, நிக்கரகுவா, ஊருகுவே ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்;தது. மே 17 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. அதன் பின்னர் பல நாடுகள் ஒப்புதல் அளித்தன.

1945 இல் அய்யன்னா அவை உருவாக்கப்பட்டது. அப்போது அதில் 51 நாடுகள் உறுப்புரிமை வகித்தன. இன்று அதன் உறுப்பினர் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பான்மை தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்த நாடுகள் ஆகும்.

1889 இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (1990) சோவியத் ஒன்றியம் உருக்குலைந்தது. 1991 டிசெம்பர் 8 இல் சோவியத் ஒன்றியம் 74 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசமுறையாகக் கலைக்கப்பட்டது.

சோவியத் ஒன்றியம் 15 இணைப்பாட்சி நாடுகளைக் (1. Armenia, 2. Azerbaijan, 3. Belarus, 4. Estonia, 5. Georgia, 6. Kazakhstan, 7. Kyrgyzstan, 8. Latvia, 9. Lithuania, 10. Moldova, 11. Russia, 12. Tajikistan, 13. Turkmenistan, 14. Ukraine, 15. Uzbekistan) கொண்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு இராணுவம் மேற்கொண்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனை அடுத்து பொரிஸ் யெல்ச்சின் (Boris Yeltsin) ஆட்சியைக் கைப்பற்றினார். செப்தெம்பர், 1991 இல் போல்ரிக் நாடுகளது (Latvia, Lithunia, Estonia)  சுதந்திரத்தை உருசியா ஏற்றுக்கொண்டது. நொவெம்பர், 1991 இல் பொரிஸ் யெல்ச்சின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்யும் சட்டத்தை அறிவித்தார். இதனை அடுத்து எஞ்சிய 12 நாடுகள் தனிநாடாகத் தம்மைப் பிரகடனம் செய்தன.

இதே போல் யூகோசிலோவாக்கியா குடியரசில் (Slovenia, Croatia, Bosnia and Herzegovina, Macedonia, Montenegro, Serbia) இரண்டு மாகாண அரசுகளும் (Kosovo and Vojvodina)  உறுப்பிரிமை வகித்தன. யூகோசிலோவாக்கியாவின் தலைவர் டிட்ரோ மறைந்த பின்னர் அது உடைந்து தனித்தனி நாடுகள் ஆகின.

யூகோசிலாவியாவில் உறுப்புரிமை வகித்த குரோசியாவும் ஸ்லோவேனியாவும் யூன் 25, 1991 இல் சுதந்திரப் பறையறை செய்துவிட்டுத் தனி நாடுகளாகப் பிரிந்தன. இந்த இரண்டு நாடுகளையும் அய்க்கிய நாடுகள் அவை 1992 சனவரியில் புதிய நாடுகளாக ஒப்புதல் அளித்தது.

1991ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் மசிடோனியா சுதந்திரப் பறையறை செய்தது. சண்டை இல்லாமல் அமைதி வழியில் யூகோசிலாவியாவில் இருந்து பிரிந்த ஒரே நாடு மசிடோனியாதான்.

இதனைத் தொடர்ந்து பொஸ்னியா 1992 பெப்ரவரி மாதத்தில் தன்னை சுதந்திரநாடாகப் பிரகடனப்படுத்தியது. அதே ஆண்டு ஏப்ரில் மாதத்தில் அதற்கு அய்யன்னா அவையின் ஒப்புதல் கிடைத்தது. அதே சமயம் யூகோசிலாவியா (எஞ்சிய) அய்யன்னா அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் நாள் கொசோவோ நாடாளுமன்றம் கூடியபோது அந்த நாட்டின் தலைமை அமைச்சர் ஹாஷிம் தாசி (Hashim Thaci)  சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார். அந்தப் பிரகடனம் மிகவும் முக்கியமானது.

“கொசோவோவை நாங்கள் ஒரு விடுதலை பெற்ற சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்துகிறோம். கொசோவோவில் வாழும் எல்லா சமூகத்தினரதும் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் அவர்கள் ஆட்சியில் பங்கு கொள்ளும் உரிமையையும் உறுதி செய்கிறோம். சிறுபான்மை மக்களது உரிமைகள் பற்றிக் குறிப்பிடும் திட்டத்தின் இணைப்பு 12 யை முற்றாகப் பின்பற்றுவோம் என உறுதி கூறுகிறோம்………”

எனவே புவிவரை படத்தில் இருக்கும் நாடுகள் மனிதர்கள் புவியைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்ட வரலாறுதான். நாடுகளின் எல்லைக் கோடுகள் கல்லில் எழுதியவை அல்ல. கடவுளால் எழுதப்பட்டவையும் அல்ல.

இந்த வரலாற்றுப் பின்புலத்திலேயே 1976 ஆண்டு மே 14 இல் வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் நாம் நோக்க வேண்டும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கும் நான் மேலே குறிப்பிட்ட அமெரிக்க சுதந்திர பிரகடனத்துக்கும் அல்லது லாகூர் தீர்மானத்துக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.

இலங்கையின் வட – கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களது ஒட்டுமொத்த அரசியல், சமூக, பொருண்மிய வேட்கைகள் அனைத்தையும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் துல்லியமாகவும் அச்சொட்டாகவும் எடுத்துக் காட்டுகிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர்கள் இன்று எதிர்நோக்கும் வாழ்வியல் அவலங்களில் உள்ள பல்வேறு இடர்களைத் தீர்ப்பதற்கும் தங்களது சொந்த மண்ணில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் மானத்தோடும் வாழ்வதற்கும் தங்களது மொழி, கலை, பண்பாடு இன அடையாளங்களைப் பேணித் தனித்துவமான இனமாக வாழ்வதை வற்புறுத்துகிறது.

ஒவ்வொரு தேசிய இனத்தினதும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமையுடைய சமயசார்பற்ற சமவுடமைத் தமிழீழ அரசை மீட்டெடுத்து மீள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அரசியல் இலக்கை எட்டும் வரை நாம் ஓயாது போராடவேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. வடக்கில் 69 விழுக்காடு வாக்குகளையும் கிழக்கில் 32.9 விழுக்காடு வாக்குகளையும் அது பெற்றது.

33 ஆண்டுகளுக்குப் 1976 இல் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட் வட்டுக்கோட்டைத் தீர்மானமே திம்பு பேச்சுவார்த்தைக்கும் ஒஸ்லோ அறிவித்தலுக்கும் அடிக்கல்லாக இருந்தது. திம்புவில் தமிழர் தரப்பு பேச்சு வார்த்தைக்காக முன்வைத்த தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட கோட்பாடுகளே.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள் உறுதிசெய்வது நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்துக்கு வலு சேர்க்கும். இதனை நாடுகடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் திரு. விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களும் உறுதி செய்துள்ளார். அவரால் வெளியிடப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக்கோவையில் காணப்படும் “நாடுகடந்த தமிழீழ அரசின் நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான தேவை என்ன?” என்ற கேள்விக்கு பின்வருமாறு விடை இறுக்கப்பட்டுள்ளது.

“ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு;, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தைத் தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் அவற்றிற்கு ஈடாகவும் செயற்படுவதிலுமே தங்கியுள்ளது. இதனை நிலைநாட்டுவதற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் ஏதுவாக ஓர் உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு தேவையாகும். இத்தேவை 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக வடிவம் பெற்று 1977 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப் படுத்தப்பட்டது. 1985 திம்பு கோட்பாடுகள், 2003 இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைவு இதற்கு மேலும் வலுச் சேர்த்தன.”

காலத்தின் தேவையை உணர்ந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு தமிழீழ விடுதலைக்குத் தொடர்ந்து ஓயாது ஒழியாது போராடுவோம். (அடுத்த கிழமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வரலாற்றுப் பின்புலம் பற்றிப் பார்ப்போம். (Ulagaththamilar – September 25, 2009)


வட்டுக்கோட்டைத் தீர்மானமும் நாடுகடந்த தமிழீழ அரசும்

யாழ்ப்பாண அரசு

(2)
நக்கீரன்

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு பற்றிய கருத்தரங்குகள் ரொறன்ரோவில் நடத்தப்பட்டன.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், சுதந்திரமா? அடிமை வாழ்வா? என்ற கேள்விக்கு 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் அளித்த ஆணை, 1985 இல் திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அனைத்துத் தமிழ் அமைப்புகளும் முன்வைத்த தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழர் தன்னாட்சியுரிமைக் கோட்பாடுகள், 2004 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் வி.புலிகளே தமிழமக்களின் ஏகப் பிரதிநிதிகள் ஆகிய வரலாற்றுப் பதிவுகளை மீள் வாசிப்புச் செய்து “தமிழீழமே தமிழர்களது முடிந்த முடிவு” என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வலுசேர்க்க ஒரு நேரடிவாக்கெடுப்பை (சுநகநசநனெரஅ) நடத்துவதன் தேவை பற்றியும் நாடு கடந்த அரசை மக்களாட்சி முறைமைக்கு ஏற்ப வலுப்படுத்தவும் இந்தக் கருத்தரங்குகளில் விளக்கம் – கருத்துப் பரிமாற்றம் – கலந்துரையாடல் இடம்பெற்றது. செப்தெம்பர் 20 இல் ஸ்காபரோ முருகன் கோயில் அரங்கிலும் ஒக்தோபர் 04 இல் மிசிசக்கா ஜெதுர்க்கா கோயில் மண்டபத்திலும் இக் கருத்தரங்கம் நடந்தேறின. கனடியத் தமிழ் மாணவர் சமூகம் மற்றும் கனடியத் தமிழ் சமூகம் ஒழுங்கு செய்த இந்தக் கருத்தரங்கில் நானும் கலந்த கொண்டு பேசினேன்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் – நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் இடையிலான வேற்றுமை ஒற்றுமை பற்றி பலர் விளக்கம் கேட்டார்கள்.

தமிழில் பல இலக்கண நூல்கள் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றுக்கும் தொல்காப்பியமே முதல் நூல். நன்னூல், தொன்னூல், யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம், களவியற்காரிகை, நேமிநாதம், காக்கைபாடினியம், பன்னிரு பாட்டியல், வீரசோழியம் போன்றவை வழி நூல்களாகும்.

இது போலவே திம்பு பேச்சுவார்த்தை, இடைக்கால தன்னாட்சி அதிகார அவை, நாடுகடந்த தமிழீழ அரசு போன்றவற்றுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானமே ஆணிவேர் அல்லது அடித்தளம். திம்புப் பேச்சு வார்த்தையில் முன்வைக்கப்பட்ட தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தன்னாட்சி உரிமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட – சுதந்திரம், இறைமை நீங்கலாக – எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளே. பேச்சு வார்த்தைக்காக சுதந்திரம், இறைமை இரண்டும் கைவிடப்பட்டன.

ஒஸ்லோ பறையறைதலிலும் சுதந்திர இறைமையுள்ள தமிழீழத்துக்கு மாற்றாக உள்ளக தன்னாட்சிக் (Internal Self Determination) கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக்கோவை (1) நாடு கடந்த தமிழீழ அரசு என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பின்வருமாறு பதில் இறுக்கியது.

“நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Tamil Eelam) தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையைத் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியல் அமைப்பாகும்.”

இது போலவே இடைக்கால தன்னாட்சி அதிகார அவை (ISGA)) வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் குறிப்பிடுகிறது.

யாழ்ப்பாண இராச்சியம் என்று சொல்லப்படும் அரசுருவாக்கம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலேயே உருவானது எனும் கருத்துடைய வரலாற்றாய்வாளர்கள் கலிங்க மாகனுடன் அதன் தோற்றத்தை எடுத்துக் கொள்வார்கள்.

1976 ஆம் ஆண்டு மே 14 இல் பண்ணாகம், வட்டுக்கோட்டையில் தந்தை செல்வநாயகம் தலைமையில் கூடிய தமிழர் அய்க்கிய முன்னணியின் முதல் தேசிய மாநாட்டில் ஒரு நீண்ட தீர்மானம் நிறைவேறியது. நான்கு பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்மானம் தமிழ்மக்களின் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாகும். இருபத்து ஏழு ஆண்டுகள் ஒன்றுபட்ட இலங்கையில் இணைப்பாட்சி அரசியல் முறைமைக்கு அறவழியில் போராடிய தமிழ் அரசுக் கட்சி அதில் தோல்வியையே கண்டது. எனவே இணைப்பாட்சியைக் கைவிட்டுத் தனித் தமிழீழத்துக்கான முடிவை மேற்கொண்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் கீழ்க்கண்ட வாசகம் இருந்தது.

“இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழ்மக்களுக்குள்ள தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமைபொருந்திய சமய சார்பற்ற, சமவுடமை தமிழீழ அரசை மீட்டெடுத்தலும் மீள உருவாக்குதலும் தவிர்க்க முடியாதென இம் மாநாடு தீர்மானிக்கிறது.”

This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.

இந்தத் தீர்மானத்தில் காணப்படும் இரண்டு சொற்கள் கவனத்தில் கொள்ளத்தக்கது. அவை மீட்டெடுத்தல் மீள்உருவாக்கல் (restoration and reconstitution) என்பனவாகும்.

போர்த்துக்கேயர் (கிபி 1505 -1658) முதன்முறை இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது அங்கு மூன்று அரசுகள் இருந்தன. வடக்கில் யாழ்ப்பாண இராச்சியம், தெற்கே கோட்டை இராச்சியம், மத்தியில் கண்டி இராச்சியம் ஆகியன இருந்தன.

கோட்டை இராச்சியத்தை போர்த்துக்கேயர் கிபி 1565 கைப்பற்றினார்கள். யாழ்ப்பாண இராச்சியத்தை கிபி 1619 ஆண் ஆண்டு போர்முனையில் கைப்பற்றினார்கள்.

இலங்கை போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரிடம் 1658 இல் கைமாறியது. ஒல்லாந்தர் கண்டி, வடக்கு வன்னிமை நீங்கலாக இலங்கையை 1796 மட்டும் ஆண்டார்கள். பின்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரம் பிரித்தானியரிடம் கைமாறியது. 1815 இல் கண்டியை ஆண்ட தமிழ்மன்னன் ஸ்ரீவிக்கிரமசிங்கனை சிங்களப் பிரதானிகள் பிரித்தானியர்களிடம் காட்டிக் கொடுத்துவிட்டு அரசையும் அவர்களிடம் கையளித்தார்கள்.

யாழ்ப்பாண அரசு (இராச்சியம்) யாழ்ப்பாணம், மன்னார், பனங்காமம், முள்ளியவளை, தென்னமரவடி ஆகிய வன்னி மையங்களைக் கொண்டிருந்தது. அதன் மேலாண்மை சில வேளைகளில் புத்தளம் கற்பிட்டி வரைக்கும் பின்னர் நீர் கொழும்பு வரைக்கும் கிழக்குப் பகுதியில் பாணமை வரைக்கும் பரவியிருந்தது.

யாழ்ப்பாண அரசு வீழ்ந்த பின்னரும் பண்டார வன்னியன் ஆண்ட வன்னிமை 1803 ஆம் ஆண்டுவரை தனி அரசாகவே விளங்கியது. கற்சிலைமடுவில் நடந்த போரில் பண்டாரவன்னியன் கப்டன் ட்றிபேர்க் (ஊயிவ. னுசநைடிநசப) என்பவனால் தோற்கடிக்கப்பட்டான்.

யாழ்ப்பாண அரசு இருந்ததை இன்றைய சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இருட்டடிப்புச் செய்ய முனைகிறார்கள். சென்ற ஆண்டு (2008) தரம் எட்டு வரலாறு பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த “யாழ்ப்பாண இராச்சியம்” தொடர்பான பாடத்தை நீக்கிவிட அரசு சாங்கம் முயற்சி மேற்கொண்டது. ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைக்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும்.

யாழ்ப்பாண அரசை ஆண்ட மன்னர்களது பெயர்களையும் ஆட்சிக் காலத்தையும் கீழே காணலாம்.

அரசன் பெயர் ஞானப்பிரகாசர் இராசநாயகம்

கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி அல்லது

காலிங்க ஆரியச்சக்கரவர்த்தி கி.பி 1242 கி.பி 1210

குலசேகர சிங்கையாரியன் கி.பி 1246

குலோத்துங்க சிங்கையாரியன் கி.பி 1256

விக்கிரம சிங்கையாரியன் கி.பி 1279

வரோதய சிங்கையாரியன் கி.பி 1302

மார்த்தாண்ட சிங்கையாரியன் கி.பி 1325

குணபூஷண சிங்கையாரியன் கி.பி 1348

விரோதய சிங்கையாரியன் கி.பி 1344 கி.பி 1371

சயவீர சிங்கையாரியன் கி.பி 1380 கி.பி 1394

குணவீர சிங்கையாரியன் கி.பி 1414 கி.பி 1417

கனகசூரிய சிங்கையாரியன் கி.பி 1440

1450 இல் கோட்டை அரசனின் பிரதிநிதியான சப்புமால் குமாரய யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான். சப்புமால் குமாரயா அல்லது செண்பகப்பெருமாள் கி.பி 1450 – 1467 வரை ஆட்சி செய்தான். அது மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது.

கனகசூரிய சிங்கையாரியன் கி.பி 1467

செகராசசிங்கன் சிங்கையாரியன் கி.பி 1478

முதலாவது சங்கிலி கி.பி கி.பி 1519

1560 இல் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கீசர் கைப்பற்றிச் சங்கிலியைப் பதவியினின்றும் அகற்றினர்

புவிராஜ பண்டாரம் கி.பி 1561

காசி நயினார் கி.பி 1565

பெரியபிள்ளை கி.பி 1570

புவிராஜ பண்டாரம் கி.பி 1572

எதிர்மன்னசிங்கம் கி.பி 1591

அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக) கி.பி 1615

சங்கிலி குமாரன் (பராயமடையாத வாரிசுக்காக) கி.பி 1617

1619 இல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு அவர்களின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது.

தமிழர்கள் தங்களது வரலாற்றை எழுத்தெண்ணிப் படிக்காவிட்டாலும் அதில் நல்ல தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கது. . கடந்த கால வரலாறு தெரிந்தால் மட்டுமே நிகழ்கால அரசியலை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. வரலாற்றில் இருந்து படிப்பினை படிக்க முடியாதவர்கள் தாங்கள் விட்ட பிழைகளை மீண்டும் விடத் தள்ளப்படுவார்கள் (Those Who Do Not Learn From History Are Doomed to Repeat It.) எமது வரலாற்றை ஒரு நாளிலோ ஒரு மாதத்திலோ அல்லது ஒரு ஆண்டிலேயோ படித்து முடித்துவிட முடியாது. அது ஒரு தொடர் முயற்சியாக இருக்க வேண்டும். கீழே தமிழ் வரலாற்று நூல்கள் பற்றிய ஒரு பட்டியலைத் தந்துள்ளேன். முடிந்தளவு இவற்றைப் படிக்க முயற்சி செய்யுங்கள்.

பரராசசேகரம்                             – ஐ.பொன்னையாப்பிள்ளை (பதிப்பு 1928-1936)

வையா பாடல்                             – வையாபுரி அய்யர் (14-17 ஆம் நூற்றாண்டு) பதிப்பு க.செ. .நடராசா 1980)

கைலாயமாலை                        – முத்துக்கவிராயர் (16-17 ஆம் நூற்றாண்டு) – நல்லூர் கைலாசநாத கோயில் புராணம்

யாழ்ப்பாண வைபவமாலை – மயில்வாகனப் புலவர் (பதிப்பு குல.சபானாதன் 1949)

யாழ்ப்பாண சரித்திரம             – ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை (1912)

புராதன யாழ்ப்பாணம்            – முதலியார் செ. இராசநாயகம் (1926)

யாழ்ப்பாணச் சரித்திரம்         – முதலியார் செ. இராசநாயகம் (1933)

யாழ்ப்பாண வைபவ கவ்முதி – ஆசு கவி கல்லடி வேலுப்பிள்ளை (1918 – வல்வை நகுலசிகாமணி 2001 பதிப்பு)

யாழ்ப்பாண அரசர்கள் (1920) – சுவாமி ஞானப்பிரகாசர்

யாழ்ப்பாண இராச்சியம்            – கலாநிதி சி. பத்மநாதன்

யாழ்ப்பாண இராச்சியம்            – பேராசிரியர் க. சிற்றம்பலம் (1992)

யாழ்ப்பாண வரலாற்று மூலங்கள் – கலாநிதி முருகர் குணசிங்கம் (1953)

பவுத்தரும் சிறுபான்மையினரும்    – ச.கீத. பொன்கலன் (1987)

 இலங்கையில் தமிழர்கள்             – கலாநிதி முருகர் குணசிங்கம் (2008)

யாழ்ப்பாண அரச பரம்பரை           – க. குணராசா

தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு – ப. புஷ்பரட்ணம்

என்று முடியும் எங்கள் போட்டிகள் – எஸ்.கே.மகேந்திரன், எம்.ஏ.

தஷிணகைலாச புராணம்                           – சிங்கை செகராசசேகரன் (பதிப்பாசிரியர் சி.பத்மநாதன் (1995)

The Fall and Rise of the Tamil Nation – V.Navaratnam (1995)

Sri Lanka The National Question        – Satchi Ponnambalam (1983)

Sri Lanka: Witness to History             – S.Sivanayagam (2000)

S.J.V. Chelvanayakam The Crisis of Sri Lankan Tamil Nationalism – A.Jeyaratnam Wilson (1993)

The Break-Up of Sri Lanka               – A Jeyaratnam Wilson (1988)

Sri Lankan Tamil Nationalism          – Murugesar Gunasingam (1999)

The Evolution of An Ethnic Identity – K.Indrapala (2005)

அடுத்த கிழமை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் அரசியல் வானில் சுடர்விட்டு ஒளிர்ந்த பொன்னம்பலம் உடன்பிறப்புக்களில் ஒருவரான சேர் பொன். அருணாசலம் பற்றி எழுதுவேன். (வளரும்)


வட்டுக்கோட்டைத் தீர்மானமும் நாடுகடந்த தமிழீழ அரசும்

சிங்களத் தலைவர்கள் இனவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கடுமையாக எதிர்த்தனர்

(3)

நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பொன்னம்பலம் அருணாசலம், பொன்னம்பலம் இராமநாதன் இருவரும் இலங்கை அரசியலிலும் சமூக தளத்திலும் இமயம் போல் வலம் வந்தார்கள். இந்தக் கால கட்டத்தில் இவர்கள் இருவரும் இலங்கையின் சிறந்த தேசியத் தலைவர்களாகக் கருதப்பட்டனர்.

பொன்னம்பலம் அருணாசலம் (செப்டம்பர் 14, 1853 – ஜனவரி 9, 1924) கேட் முதலியார் என அழைக்கப்பட்ட அருணாசலம் பொன்னம்பலம், செல்லாச்சி (சேர் முத்து குமாரசுவாமியின் உடன்பிறப்பு) ஆகியோரின் மூன்றாவது மகனாவார். பொன்னம்பலம் குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோர் இவரது உடன்பிறப்புக்கள் ஆவர்.

பொன்னம்பலம் குமாரசுவாமி புகழ்பெற்ற சட்டத்தரணியாவார் (Proctor) 1893 இல் இலங்கை சட்டசபைக்கு நியமன உறுப்பினராக இருந்தார். இளவயதில் இவர் காலமாகி விட்டார்.

பொன். அருணாசலத்தின் மனைவியின் பெயர் சுவர்ணம் நமசிவாயம். பிள்ளைகள் அருணாசலம் மகாதேவா, சிவானந்தன் அருணாசலம், அருணாசலம் இராமநாதன் ஆகியோர்.

பொன். அருணாசலம் மற்றும் பொன். இராமநாதனின் முன்னோர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரனின் அவையில் முதல் அமைச்சராக விளங்கிய மானா முதலியார் எனத் தெரியவருகிறது.

மானா முதலியாரும் அவரின் கொடிவழியினரும் வாழ்ந்த இடம் மானிப்பாய் என்று அழைக்கப்பட்டது. மானா முதலியாரின் கொடிவழியினர் மானிப்பாயிற்தான் காலாதி காலமாகக் குடியிருந்து வந்துள்ளார்கள். இக் குடும்பத்தவர்களிடம் இறைபக்தி, கொடைத்தன்மை, தொண்டுள்ளம், அஞ்சாமை ஆகிய நற்குணங்கள் காணப்பட்டன.

மானா முதலியாரின் மகன் கதிர்காம முதலியார் யாழ்ப்பாண அரசின் அரண்மனையில் கணக்கராகப் (Accountant) பணியாற்றிய போது இரண்டாவது சங்கிலி எதிர்மன்னசிங்க பரராசசேகரனைத் துரத்தி விட்டுத் தானே அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவனே யாழ்ப்பாண அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவான். இவனை நல்லூரில் நடந்த போரில் போர்த்துக்கேயர் தோற்கடித்து யாழ்ப்பாண அரசை 1619 இல் கைப்பற்றினார்கள்.

பொன். அருணாசலம் பின்னால் றோயல் கல்லூரி என அழைக்கப்பட்ட கொழும்பு றோயல் கழகத்தில் (Royal Academy)  கல்வி கற்று புலமைப்பரிசில் பெற்று இலண்டன் சென்று கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் படித்துக் கலைமாணிப் பட்டம் பெற்றார். இங்கிலாந்தில் வழக்கறிஞராகவும் (Barrister)  ஆகவும் 1875 இல் குடியியல் பணித் தேர்வில் (Civil Service)  சித்தி பெற்று முதல் இலங்கையர் எனப் பெயரெடுத்தார். பின்னர் அவர் இலங்கை திரும்பினார்.

அரச பணியில் 1875 – 1913 ஆம் ஆண்டு வரை பல்வேறு உயர் பதவிகளை பொன். அருணாசலம் வகித்தார். பதிவாளர் நாயகமாக (1887 – 1902) இருந்தார். 1911 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமதிப்புப் பற்றிய இவரது விரிவான அறிக்கை ஆங்கில அதிகாரிகளது அமோக பாராட்டுதலைப் பெற்றது.

இவரைப் பற்றி இலங்கையின் வரலாற்றிசிரியர் கே. எம்.டி. சில்வா ‘மிக உயர்ந்த அரச அதிகாரியான அருணாசலம் அதிகம் பேசுவதில்லை. ஆனால் வியத்தக்கவாறு தமிழ் மக்களுக்குப் பணி செய்திருக்கிறார். சிங்கள மக்களுக்கும் அவர் பணி செய்திருக்கிறார். அவரைப் போல வேறு யாரும் சிங்களவர்களுக்குப் பணி செய்ததில்லை’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

1913 இல் பொதுப் பணியில் இருந்து பொன். அருணாசலம் ஓய்வு பெற்றார். அதே ஆண்டு அவருக்குப் பிரித்தானிய அரசு சேர் பட்டம் வழங்கி மேன்மைப்படுத்தியது. அது மட்டும் அல்லாது அவர் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய பணியைக் கவனத்தில் கொண்டு நிறைவேற்று அவைக்கு (Executive Council) ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டார்.

அரச ஆசிய அவையின் (Royal Asiatic Society)  இலங்கைக் கிளையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சைவ பரிபாலன சபையின் தலைவராக இருந்து இந்து பண்பாடு தொடர்பான பணிகளில் ஈடுபட்டார். இலங்கையில் ஒரு பல்கலைக் கழகம் உருவாக்கப் படவேண்டும் என்ற வேண்டுகோளை பொன். அருணாசலம் அவர்களே முதலில் முன் மொழிந்தார்.

சேர். பொன். அருணாசலம் அரச பணியில் இருந்த காலத்திலேயே சுயராஜ்ய (தன்னாட்சி) உணர்வால் உந்தப்பெற்றார். எனவே ஓய்வு பெற்ற பின் அரசியல், சமூக, கல்விப் பண்பாட்டுத் துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மேட்டுக்குடியில் பிறந்தாலும் பொன்.. அருணாசலம் அவர்கள் அடித்தட்டு மக்களது முன்னேற்றத்துக்கும் பாடுபட்டார். இது பலர் அறியாத செய்தியாகும்.

சேர் யேம்ஸ் பீரிசோடு சேர்ந்து 1915 ஆம் ஆண்டு இலங்கை சமூக சேவை சங்கத்தை (Ceylon Social Service League)  தோற்றுவித்தார். அதன் தொடக்கக் கூட்டத்திற்கு முன்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு கல்வி வாய்ப்பு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, கட்டாய குறைந்தபட்ச கூலி, கட்டாய காப்புறுதி ஆகிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடினார்.

இந்தக் குறிக்கோள்களை அடையும் பொருட்டு கல்வி எல்லாத் தரப்பு மக்களிடையேயும் பரப்பப்பட வேண்டும் என எடுத்துரைத்தார். உண்மையில் பொன். அருணாசலம் அவர்களே இலவசக் கல்வியை வலியுறுத்திய முதல் அரசியல்வாதி ஆவார்.

கல்வி எல்லோருக்கும் இலவசமாக – தொடக்கப்பள்ளி மேல்நிலைப்பள்ளி இரண்டிலும் – வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் தொழல் நுட்பக் கல்வியும் அறிவியல் பாடங்களும் கற்பித்துக் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.

இலங்கையில் இக்காலப் பகுதியில் அயந்து அரசியல் இயக்கங்கள் முக்கியமாகச் செயற்பட்டன.

இலங்கைத் தேசிய சங்கம், இலங்கை சீர்திருத்தச் சங்கம், இளம் இலங்கையர் கழகம், சிலாபச் சங்கம், யாழ்ப்பாணச் சங்கம் என்பனவே அந்த அய்ந்துமாகும். இந்த அய்ந்தையும் இணைத்து ஒரு தேசிய இயக்கத்தினை உருவாக்குவதில் பொன். அருணாசலம் கவனம் செலுத்தினார். இதைவிட, முஸ்லிம் சங்கம், பறங்கியர் சங்கம் என்பனவும் செயற்பட்டன. ஆனால், அவை சேதிய இயக்கம் ஒன்று உருவாவதற்கான செயற்பாடுகளைப் புறக்கணித்தன.

இந்த அய்ந்து அரசியல் இயக்கங்களில் இலங்கைத் தேசிய சங்கத்தையும் யாழ்ப்பாணச் சங்கத்தையும் பொது உடன்பாட்டுக்குக் கொண்டு வருவது கடினமாக இருந்தது.

இலங்கைத் தேசியச் சங்கம் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அகற்றி, ஆட்புலவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வருதல், சட்டசபையில் உத்தியோகப் பற்றற்றவர்களின் பெரும்பான்மையை அதிகரித்தல், சட்டசபையின் அதிகாரங்களை அதிகரித்தல் என்பனவற்றையே இலக்காகக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாணச் சங்கத்திற்கு இவற்றையிட்டு கருத்து முரண்பாடு இருந்தது. இனவாரிப் பிரதிநிதித்துவ முறையை (Communal Representation) நீக்குவதின் ஊடாகச் சமபல பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் நிலவியது. எனவே இனவாரிப் பிரதிநிதித்துவ முறை தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதை யாழ்ப்பாணச் சங்கம் வற்புறுத்தியது.

ஒன்றுபட்ட இலங்கைத் தேசிய இயக்கமாக இலங்கைத் தேசிய காங்கிரசை உருவாக்குவதற்கான முதலாவது கூட்டம் 1917 டிசம்பர் 15 இல் நடைபெற்றது. 144 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இவர்களில் 17 பேர் தமிழர்கள்.

யாழ்ப்பாணச் சங்கத்தின் சார்பில் இரு சார்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழ்த் தலைவர்கள் பின்வரும் இரு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

1. இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் அகற்றப்படக்கூடாது.

2. அரச சார்பற்ற உறுப்பினர் எண்ணிக்கை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சமமாக இருக்கவேண்டும்.

இக்கோரிக்கைகளைக் குடியேற்ற நாட்டுச் செயலருக்கும் அனுப்பிவைத்தனர்.

ஆனால் இலங்கைத் தேசிய சங்கம் இனவாரிப் பிரதிநிதித்துவம் அகற்றப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது.

சேர். ஜேம்ஸ் பீரிஸ், ஈ.ஜே. சமரவிக்கிரம, எவ்.ஆர். சேனநாயக்கா போன்ற தேசியச் சங்கத்தின் தலைவர்கள் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை கடுமையாக எதிர்த்தனர்.

பொன். அருணாசலம் தொடர்ந்தும் இரு தரப்பினரையும் பொதுக் கருத்திற்கு கொண்டுவர முயற்சி செய்தார். அவரைப் பொறுத்தவரை அக்காலத்தில் சிங்களத் தலைவர்கள் மீதிருந்த நம்பிக்கையால் நியாயமான அளவு பிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தே மேலோங்கியிருந்தது.

தமிழர்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான ஒழுங்கு முறைகள் பற்றி சிங்களத் தலைவர்களுடன் தமிழ்த் தலைவர்கள் கலந்துரையாடினார். இதன் பலனாக சிங்களத் தலைவர்களோடு உடன்பாடு ஏற்பட்டது.

டிசெம்பர் 1919 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

இலங்கையின் சிறப்பான அரசுக்கும் மக்களது மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் பிரித்தானிய பேரரசின் ஒரு பிரிக்கமுடியாத பொறுப்பான அரசுக்கும் ஏதுவாக அரசியல் யாப்பும் அரச நிருவாகமும் பின்வருமாறு மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

சட்ட சபை 50 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அவர்களில் அய்ந்தில் நான்கு பங்கினர் ஆட்புல அடிப்படையில் (Territorial Representation)  தேர்ந்தெடுக்கப்படுவர். ஆண்களுக்கு முழு வாக்குரிமையும் பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையும் வழங்கப்படும்.

எஞ்சிய அய்ந்தில் ஒரு பகுதியினர் சிறுபான்மையினரைப் பரதிநித்துவப்படுத்தும் – அரச சார்பாகவும் அரசு சார்பற்றதாகவும் – உறுப்பினர்களாக இருப்பார்கள். அவைத் தலைவரை சட்ட சபையே தேர்ந்தெடுக்கும். இலங்கைத் தேசிய காங்கிரஸ் இனவாரியான பிரதிநித்துவத்தை முழு மூச்சாக எதிர்த்தது. சிங்களத் தலைவர்கள் சட்ட சபைக்குத் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற அடிப்படையில் நியமிப்பது வகுப்புவாதம் அல்லது இனவாதம் என வாதிட்டார்கள்.

அதே நேரத்தில் தமிழர்களுக்கு முடிந்த மட்டும் அதிகளவான பிரதிநித்துவத்தை உறுதிப் படுத்துவதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் எடுப்போம் எனச் சிங்களத் தலைவர்கள் சொன்னார்கள்.

தமிழர்கள் தங்களது இன அடையாளத்தை இழக்காமல் தொடர்ந்து அதனைப் பேண விளைந்தார்கள். ஆனால் அவர்களது கெட்டகாலத்துக்குச் சட்ட யாப்புத் திருத்தத்தில் சிங்களவரோடு ஒத்துப்போக வேண்டும் என்ற எண்ணத்தாலும் சுயாட்சி கிடைக்க வேண்டும் என்ற வேட்கையாலும் சிங்களத் தலைவர்களது விருப்பத்துக்கு இணங்கினார்கள்.

அந்த இணக்கம் தமிழர்களது பலவீனமாகச் சிங்களத் தலைவர்கள் எடுத்துக் கொண்டார்கள். இதனால் சிங்களத் தலைமை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இனவாரியாகப் பிரதிநித்துவம் வழங்கப்படக் கூடாது என்பதில் மேலும் பிடிவாதமாக இருக்கத் தலைப்பட்டது.

இந்தக் கட்டத்தில் பொன். அருணாசலம் இருசாராருக்கும் இடையில் ஒரு பக்க சார்பற்ற இடைத்தரகராக இருக்க விரும்பினார். சிங்களத் தலைவர்களான ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் சமரவிக்கிரம கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பின்வரும் யோசனைகளை முன்வைத்தார்.

1) வடக்கு மாகாணத்துக்கு மூன்று இருக்கைகள்.

2) கிழக்க மாகாணத்தக்கு இரண்டு இருக்கைகள்

3) மேல் மாகாணத்துக்கு ஒரு இருக்கை.

4) முடிந்தால் தமிழர்களுக்கு ஏனைய மாகாணங்களிலும் கொழும்பு மாநகர சபையிலும் மேலதிக இருக்கைகள்.

5) மேல் மாகாணத்தில் முஸ்லிம் உறுப்பினருக்கு ஆதரவு.

இவ்வாறு இலங்கையரின் கருத்தைத் அறிந்து கொண்ட குடியேற்ற நாட்டின் செயலர் 1920 ஒகஸ்ட் மாதம் 13 ஆம் நாள் ஒரு அரச கட்டளையைப் பிறப்பித்தார்.

அதன்படி சட்ட சபையில் 37 உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்களில் 14 பேர் அரசு உறுப்பினர்கள். 23 பேர் அரசு சார்பற்ற உறுப்பினர்கள்.

பதினொரு அரசு சார்பற்ற உறுப்பினர்கள் ஆட்புல அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அய்ந்து பேர் அய்ரோப்பியரையும் இரண்டு பேர் பரங்கிகளையும் பிரதிநித்துவப்படுத்துவர். ஒருவர் வாணிக வாரியத்தின் பிரதிநிதி. இரண்டு நியமன உறுப்பினர்கள் கண்டிச் சிங்களவருக்கு. இந்தியத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தலைக்கொரு நியமன உறுப்பினர். இந்த ஏற்பாட்டின் படி இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக அரசசார்பற்ற உறுப்பினர்களது பெரும்பான்மை 9 ஆக உயர்ந்தது.

இதை அடுத்து சிங்கள தீவிரவாதப் போக்குடைய ஒரு குழுவொன்று இலங்கைத் தேசிய காங்கிரசின் தலைமையைக் கைப்பற்றியது. (வளரும்)


சிங்கள அரசியல்வாதிகளை நம்பிய பொன். அருணாசலம் ஏமாற்றப்பட்டார்

(4)

1919 ஆம் ஆண்டு இலங்கையருக்குக் கூடிய தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டதைப் பார்த்தோம். அதன் தலைவராக பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன, மொழி, மத வேறுபாடின்றி எல்லோரும் இலங்கையர் என்ற அடிப்படையில் தன்னாட்சி என்ற இலக்கை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதே பொன். அருணாசலம் அவரது அரசியல் வேட்கையாக இருந்தது.

இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பது தொடர்பாக சேர். பொன். அருணாசலம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி சி.ஈ.கொறயா பின்வருமாறு குறிப்பிட்டார்:

“கடந்த சில ஆண்டுகளாக சகல முயற்சிகளுக்கும் மையமாக இருக்கும் கொழும்பு நகரில் ஒரு பெரியார் ஆங்காங்கு பரந்து கிடந்த தனிப்பட்ட ஆர்வப் பொறிகள், தனித்தனியாகக் கிடந்து ஒளியின்றி அணைந்து போகும் தறுவாயில் இருப்பதைக் கண்ணாரக் கண்டார். அப்பெருமகனார் எழுந்து விரைந்து சென்று அப்பொறிகளை ஒன்று சேர்த்து கொழுந்துவிட்டெரியும் தமது நாட்டுப்பற்றுக் காரணமாக அவற்றிக்கு வலுவூட்டி, தேசிய முயற்சி எனும் பெருந் தீயாக மாற்றினார். இப்பெருந்தீயில் புடமிட்டு உருவாக்கியதே இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆகும்”

இன, மொழி, மதம் கடந்த முதலாவது தேசிய இயக்கத்தை உருவாக்கக் காரணமாக இருந்த பொன். அருணாசலம் அவர்களே பின்னர் இனம், மொழி, மதம் சார்ந்த அரசியல் காரணமாக அந்தத் தேசிய இயக்கத்தில் இருந்து வெளியேற நேர்ந்தது ஒரு சோக வரலாறு. ஆகும்.

முன்னர் குறிப்பிட்டவாறு 37 உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபையில் 16 இருக்கைகள் மட்டுமே ஆட்புலவாரியான தேர்தல் மூலம் சார்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருந்தனர். இந்தப் 16 இருக்கைகளில் ஒன்று மேல்மாகணத் தமிழர்களுக்கு ஒதுக்கப்படும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. கொழும்புத் தொகுதியில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களை போட்டியிட வைப்பது என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது. இந்த வாக்குறுதியை சிங்களத் தலைவர்களான சேர் ஜேம்ஸ் பீரிசும் நு. து. சமரவிக்கிரமாவும் எழுத்தில் வழங்கி இருந்தார்கள்.

“மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பதை நாம் முழு மூச்சாக ஆதரிப்போம் என வாக்குறுதி அளிக்கிறோம். ஆனால் அப்படி ஒதுக்கப்படும் தொகுதி ஆட்புலவாரியாக ஒதுக்கப்பட்ட தொகுதியாக இருக்க வேண்டும்.”

(We are prepared to pledge ourselves to actively support a provision for the reservation of a seat to the Tamils in the Western province so long as the electorate remains territorial.. (The Life of Sir Ponnampalam Ramanathan by M.Vythilingam Vol (II – page 524 )

ஆனால் இருபெரும் சிங்களத் தலைவர்கள் எழுத்தில் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. டி.எஸ். சேனநாயக்காவும் அவரது மூத்த உடன்பிறப்பான எவ்.ஆர். சேனநாயக்காவும் சேர் ஜேம்ஸ் பீரிசை போட்டியிட வைத்தார்கள். அதாவது தமிழர்க்கென ஒதுக்கப்பட்டிருந்த அந்த இருக்கைக்கு ஒரு சிங்களவரைப் போட்டியிடக் களம் இறக்கினார்கள்.

மேலும் சிங்களப் பகுதியில் அனைத்திலும் சிங்கள வேட்பாளர்களையே நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்கள். அதனை நியாயப்படுத்த ஒரு முக்கியமான காரணத்தையும் சொன்னார்கள். தமிழர்களுக்குக் கொழும்பில் இருக்கை எதுவும் கொடுக்கத் தேவையில்லை. இலங்கைத் தமிழர்கள் மற்றவர்கள் போல் சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல. அவர்களும் அவர்கள் வாழும் இடங்களில் காலம் காலமாகப் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த இனத்தவரே. ஆகவே அவர்களுக்கென்று கொழும்பில் தனியிடம் ஏதேனும் கொடுக்கத் தேவையில்லை என்றார்கள்.

அதாவது, காலங்காலமாக வடக்கும் கிழக்கும் தமிழ் அரசர்கள் ஆண்டு வந்த ஆட்புலமாகும். எனவே வட – கிழக்கு நீங்கலான பகுதிகளில் அவர்களுக்கு தனிச் சலுகைகள் எதுவும் தேவையில்லை என்று அன்றைய சிங்களத் தலைவர்கள் கூறினார்கள்.

பொன். அருணாசலம் சரி, பொன். இராமநாதன் சரி அல்லது ஏனைய தமிழ்த் தலைவர்கள் சரி எல்லோருமே இலங்கைத் தமிழர்கள் சிறுபான்மையர் அல்ல அவர்கள் பெரும்பான்மை சிங்களவர்கள் போல் நாட்டின் பூர்வீக மக்கள் என எண்ணினார்கள்.  (founding fathers)

நாட்டின் சிறுபான்மை இனத்தவர் என்று முஸ்லிம்கள், இந்திய வம்சாவழித் தமிழர்கள், பரங்கியர் ஆகியோரே கணிக்கப்பட்டார்கள்.

எப்.ஆர். சேனநாயக்கா பொன். அருணாசலம் அவர்களை “செருக்குப் பிடித்தவர். தனது முக்கியத்துவம் பற்றி மிகைப்பட நினைப்பவா. அரசியலில் தீவிரவாதப் போக்குடையவர்” எனக் காட்டமாகச் சொன்னர். பொன். அருணாசலம் அவர்களுக்குப் பதிலாக இலங்கை தேசிய காங்கிரஸ் கொழும்புத் தொகுதிக்கு சேர். ஜேம்ஸ் பீரிஸ் அவர்களை வேட்பாளாராக நிறுத்தியது.

எவ். ஆர். சேனநாயக்கா (Francis Richard Senanayake – 1884 – 1925)) இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்காவின் (Don Stephen Senanayake) மூத்த உடன்பிறப்பு ஆவார். இலங்கைத் தேசிய காங்கிரஸ் காலத்திலேயே இவர்கள் சேர். பறன் ஜெயதிலக்கா (Sir Baron Jayatileka) அவர்களோடு சேர்ந்து சிங்கள மகாஜன சபா (The Great Sinhalese People’s Association) என்ற அமைப்பை 1918 இல் நிறுவி இருந்தார்கள். இலங்கைத் தேசிய காங்கிரஸ் தனது நடவடிக்கைகளை சிங்கள மொழியில் நடத்த வேண்டும் என இவர்கள் வற்புறுத்தினார்கள். சட்டவாக்கு அவைக்கு (Legislative Council) கிறித்தவ சிங்களவர்கள் தெரிவு செய்யப்படுவதை எதிர்த்தார்கள். பவுத்த சிங்களவர்களுக்குத் தங்கள் ஆதரவை நல்கினார்கள்.

சேனநாயக்க உடன்பிறப்புக்களும் ஜெயதிலக்காவும் சேர்ந்து இளைஞர் பவுத்த சங்கம் என்ற அமைப்பையும் தோற்றுவித்தார்கள். இதுவே பிற்காலத்தில் அகில இலங்கை பவுத்த சங்கங்களின் பேரவை (All Ceylon Congress of Buddhist Association)  என உருவெடுத்தது. பின்னர் 1940 இல் அகில இலங்கை பவுத்த காங்கிரஸ் (All Ceylon Buddhist Congress) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எனவே சேனநாயக்க உடன்பிறப்புக்கள் எஸ். டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவை (Solomon West Ridgeway Dias Bandaranaike) முந்திக் கொண்டு இன, மத அடிப்படையில் அமைப்புக்களைத் தோற்றுவித்துவிட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பண்டாரநாயக்கா சிங்கள மகா சபையை 1937 இல் தொடக்கினார்.

சிங்களவர்களின் திரை மறைவுச் சூழ்ச்சிகளை எல்லாம் அறிந்திராத பொன். அருணாசலம் கொழும்புத் தொகுதியில் போட்டியிடத் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய முற்பட்டார். ஆனால் தனக்குப் பதில் இலங்கை தேசிய காங்கிரஸ் ஜேம்ஸ் பீரிஸ் நிறுத்தியதை அறிந்ததும் கண்ணியமாக விலகிக் கொண்டார்.

இலங்கை தேசிய காங்கிரசில் இருந்தும் தலவர் பதவியில் இருந்தும் விலகிக் கொண்டார். “சிங்களவர்களில் ஒரு சாராரின் முடிவு எல்லா இனமக்களிடத்திலும் நிலவிய ஆளாளுக்கான நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை அழித்துவிட்டது” என பொன். அருணாசலம் சொன்னார். அப்போது பொன். அருணாசலம் தனது 69 ஆவது அகவையை எட்டிக் கொண்டிருந்தார். அரசியலை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார்.

இலங்கைத் தேசிய காங்கிரசை தோற்றுவித்து இனம், மொழி, மத வேறுபாடுகள் அற்ற ஒரு சுதந்திரப் பாதையில் இலங்கையை இட்டுச்செல்ல பொன் அருணாச்சலம் கண்ட கனவு சில ஆண்டுகளிலேயே தவிடு பொடியானது.

இந்தக் கசப்பான அனுபவங்கள் பொன். அருணாசலத்துக்கு பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது. தமிழர்கள் இலங்கையில் தன்மானத்தோடும் பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி வட – கிழக்கை உள்ளடக்கிய ஆட்புலத்தில் தமிழ் ஈழ அரசை நிறுவ வேண்டும். 1923 இல் இலங்கைத் தமிழர் சபை (Ceylon Tamil League)  என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் தொடக்கக் கூட்டத்தில் பொன். அருணாசலம் ஆற்றிய உரையின் ஒரு பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது.

“நாங்கள் பெருமையாகப் பேசும் தமிழீழத்தின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வென்றெடுக்க அதன் கோட்பாடுகளை இலங்கை முழுதும் பரப்புரை செய்தல் வேண்டும். நாங்கள் தமிழர்கள் என்ற எமது தனித்தன்மையைப் பாதுகாக்க ஆசைப்படுகிறோம். நாங்கள் எங்களது பரம்பரைப் புகழுக்கு தகுதியுடையவர்களாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் எங்களை “இரண்டும் கெட்டான் நிலைக்குத் (Neither fish, flesh, fowl nor red herring) தள்ளும் வாழ்க்கை முறைக்கு வசியப்பட்டவர்கள் அல்லர். ஆனால் இதன் பொருள் நாங்கள் தமிழ் இனத்துக்கு மட்டும் உழைக்கும் தன்னலவாதிகள் என்பதல்ல. நாங்கள் தமிழர்களது முன்னேற்றத்தை விட முழு இலங்கையரது முன்னேற்றத்துக்குப் பாடுபட்டிருக்கிறோம்…….. ஆனால் நாங்கள் மற்றவர்களது அடிமைகளாக இருப்பதை முற்றாக எதிர்க்கிறோம். நாங்கள் எங்களைப் பாதுகாக்கப் பலத்தோடு இருக்க விரும்புகிறோம். அதே நேரம் பொது நன்மைக்கும் பாடுபட அணியமாக இருக்கிறோம்.” (The Break-Up of Sri Lanka- Page 8)

பொன். அருணாசலம் சிங்கள அரசியல்வாதிகள் இன அடிப்படையிலும் மத அடிப்படையிலும் அமைப்புகளை தோற்றுவித்ததை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அரச சேவையில் செலவிட்ட பொன். அருணாசலம் அரசியல்வாதிகளுக்குரிய நெழிவு சுளிவுகளையும் தந்திரங்களையும் படித்துக் கொள்ள வாய்ப்பில்லாது போய்விட்டது. சிங்களத் தலைவர்கள் தன்னைப் போல் இன,மத, மொழி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணி எமாந்து போனர்.

கொழும்புத் தொகுதியில் போட்டியிட முடியாமல் போனது பொன். அருணாசலத்துக்குப் பாரிய பின்னடைவாகப் போய்விட்டது. தென்னிலங்கையில் அவர் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டதால் யாழ்ப்பாணத்தில் அவருக்கென்று ஒரு அரசியல் ஆதரவுத் தளம் இருக்கவில்லை. இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து விலகிய பின்னர் பொன். அருணாசம் 1923 ஆண் ஆண்டில் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு அவரை வரவேற்க யாரும் இருக்கவில்லை. யாழ்ப்பாண வீதிகளில் அவரைக் கண்ட மக்கள் இகழ்ந்து கூச்சல் இட்டார்கள்.

பொன். அருணாசலம் போன்ற தமிழ்த் தலைவர்கள் இனம், மொழி, மதம் கடந்த இலங்கையை உருவாக்க நினைத்தபோது “நாம் பெரும்பான்மையினர், அரசியல் அதிகாரம் எங்களது கைகளில் இருக்க வேண்டும் எங்கள் தயவிலேயே மற்றைய இனத்தவர்கள் வாழவேண்டும்” என்ற ஒரு மேலாண்மைப் போக்கு சிங்களத் தலைவர்கள் மனங்களில் வேரிடத் தொடங்கி விட்டது. இதுவே பிற்காலத்தில் பெரிய மரமாக வளர்ந்தது.

மக்களாட்சி முறைமையில் ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு என்பது பெரும்பான்மை சிங்களவர்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைக்கப் போகின்றது எனக் கண்ட சிங்கள அரசியல்வாதிகள் அதைத் தம்வசம் வைத்திருக்க அன்றே திட்டம் போட்டார்கள். இதன் பிரதிபலிப்பே “சிங்களவர் மட்டும்’ அமைச்சரவை, மலையகத் தமிழர்களின் குடியுரிமை வாக்குரிமை பறிப்பு, “சிங்களம் மட்டும்’ அரச மொழி என்ற சட்டங்கள் ஆகும்.

1924 ஆம் ஆண்டு சனவரி மாதம் பொன். அருணாசலம் தமிழ்நாட்டுக்கு யாத்திரை போனார். அங்கு நோய்வாய்ப்பட்டு சனவரி 09 ஆம் நாள் மதுரையில் காலமானார். அவரது பூதவுடல் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பு பொது மயானத்தில் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன.

1930 ஆம் ஆண்டு ஏப்ரில் 3 ஆம் நாள் பொன்.அருணாசலம் அவர்களது வெண்கலச்சிலை அன்றைய அரச அவை முன்றலில் திறந்து வைக்கப்பட்டது.

பொன். அருணாசலம் அவர்களது தமிழீழக் கனவு அவரது சாவோடு கலைந்துவிட்டது. அவர் சிங்களவரிடம் இருந்து படித்த பாடத்தை அவருக்குப் பின் வந்த தமிழ் அரசியல் தலைவர்கள் படிக்க மறந்தார்கள். 1944 இல் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் 50 : 50 சம பிரதிநித்துவம் கேட்டாரேயொழிய தமிழீழம் கேட்கவில்லை. மலையகத் தமிழர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்க் காங்கிரசில் இருந்து வெளியேறிய தந்தை செல்வநாயகம் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களின் தாயக பூமியான வட-கிழக்குக்கு இணைப்பாட்சி கேட்டுப் போராடினார். தமிழீழம் கேட்கவில்லை.

1970 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் தொடர்பாக தமிழரசுக் கட்சி வெளியிட்ட அறிக்கையில்:

“நாட்டைத் துண்டாட நினைக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு கொடாதீர் எனக் கேட்டுக் கொள்கிறோம். நாட்டைத் துண்டாடுவது நாட்டுக்கோ தமிழ்பேசும் மக்களுக்கோ பயனுள்ளதாக இருக்காது என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை” எனக் கூறப்பட்டது. இது சுயாட்சிக் கழகத்தை மனதில் வைத்துச் சொல்லப்பட்டதாகும்.

The Federal Party election manifesto released on  April 04, 1970 stated:

It is our firm conviction that division of the country in any form would not be beneficial, neither to the country, nor to the Tamil-speaking people. Hence, we appeal to the Tamil-speaking people not to lend their support to any political movement that advocated bifurcation of our country. 

1972 இல் தனிச் சிங்களச் சட்டத்திற்கு யாப்பில் இடம்கொடுத்து, பவுத்த மதத்துக்கு முன்னிடம் கொடுத்து, சோல்பரி யாப்பின் 29 ஆவது விதிக்கு முழுக்குப் போட்ட சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட புதிய குடியரசு யாப்பே தமிழரசுக் கட்சித் தலைவர்களின் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைப்பாட்சி என்ற கனவைக் கலைத்தது. அதன் எதிரொலியாக “ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுள்ள, சமயசார்பற்ற, சமவுடமைத் தமிழீழ அரசை மீட்டெடுப்பதும் மீள் உருவாக்கம் செய்வதும் தவிர்க்க முடியாதென இம்மாநாடு தீர்மானிக்கிறது” என்ற தீர்மானம் 1976 இல் வட்டுக்கோட்டையில் மே 14, 1976 ஆம் ஆண்டு நடந்த தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. (தொடரும்)


2009-10-14 04:24:59    

நல்ல காலம் இவர் (திருமாவளவன்) பிரபாகரனுடன் இருக்கவில்லை. இருந்திருந்தால் இந்நேரம் இவரும் தொலைந் திருப்பார்” என்று நேரடியாகக் கூறியிருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று மாலை கொழும்பில் இந்திய நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தசமயமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, அதில் பங்குபற்றிய கனி மொழி எம்.பியிடம் அருகிலிருந்த திருமாவளவனைக் காட்டியே ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கின்றார். 

இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் அருந்தப்பில் தப்பிவிட்டார். பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூற, அதை சிரித்தபடி செவிமடுத்துக்கொண்டிருந்தார் திருமாவளவன்.         

— — பாக்கியராசன் சே.. நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்… www.naamtamilar.org “வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்” “Next Year in Tamil Eelam” 

12/10/2009

கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு ‘இந்தியத் துரோகம்’!

ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்துகொண்டார்.

கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர்.

கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். தமிழகம் அமைதியானது.  

அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள்.

நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாக்கிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது.

இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறியபோது தமிழகத்தில் மாண்புமிகு முதலசை;சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார். தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர். வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.

நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது. இது இதுவரை இந்தியா மேற்கொண்டுவந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது.

மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய சிறிலங்கா தொடர்பான கொள்கை மாற்றம் ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள். இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது.

இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. – காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும் மேனனும் சிறிலங்கா சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.

தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள். இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது.

சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக் கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார். தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும். இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது. நன்றி – ஈழநாடு


அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்

கருணாநிதிக்கு “அண்ணா விருது“வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள தம்பி, 

செப்டம்பர் 26ம் நாள்,என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்ற எண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை..  

தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது கொள்கைகளையும், லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான்,தமிழ்கூறும்  நல்லுலகின் புகழ பரப்புவான் என்றெண்ணியதுண்டு.ஆனால், தமிழ்கூறும்  நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை.  

 வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று நான் சொன்னதை, உன் குடும்பம் மந்திரி பதவிகளைப் பெற்றதும் “வடக்கு வழங்குகிறது, தெற்கு செழிக்கிறது“ என்று நீ மாற்றிவிட்டாய். எந்தகாங்கிரஸ் கட்சியை நாம் ஒழித்து, அழித்து, பூண்டோடு அற்றுப் போகச் செய்யவேண்டும் என்று நாம் பாடுபட்டு 67ல் ஆட்சிக்கு வந்தோமோ, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவியை “தியாகத் திருவிளக்கு“ என்று பட்டமளித்து, பிணமாயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டி அழகு பார்க்கிறாய்.  

வரலாறை திரும்பிப் பார் தம்பி ! என் மறைவுக்குப் பின், என் உயிரினும் மேலான அன்பு இளவல் “நாவலர்“ நெடுஞ்செழியன் முதல்வராக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையாள மன்னவனும் மக்களை வென்றவனுமான எம்ஜிஆரின் உதவியுடன், நாவலரைத் தோற்கடித்து,நீ முதல்வர் பதவியை நயவஞ்சகமாக பிடித்ததை நான் அறிவேன்.  

 ஆட்சியைப் பிடித்தவுடன், எந்த எம்ஜிஆரால் நீ பதவிக்கு வந்தாயோ, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீ நீக்கியதையும், அதற்காக தமிழக மக்கள் உன்னை 13 ஆண்டுகள் தண்டித்ததையும் வரலாறு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.  

 67ல் ஆட்சிக்கு வரும் வரையில், பல போராட்டங்களை  நடத்தியும்,சினிமாவுக்கு வசனம் எழுதியும், ஆனால், நான் தொடங்கி வைத்ததை இத்தனை ஆண்டுகள் நீ  திறம்பட நடத்துவாய் என நான் எதிர்ப்பார்க்கவில்லை.  

எனது ஆட்சியில் “பொதுப் பணித்துறை“ அமைச்சராக நீ இருந்தபொழுது, “பொதுப்பணியை“ கவனிக்காமல்  “கலைப்பணி“ யில் ஈடுபட்டு, “காகிதப்பூ“ கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம் புரிந்ததையும் நான் அறிவேன்.  

பெரியார் பாசறையிலே என்னோடு சேர்ந்து நீயும் பயின்றவன் என்பதால், ஓரளவாவது பகுத்தறிவோடு இருப்பாய் என எதிர்ப்பார்தேன்.ஆனால், மதவாத பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து, பாபர் மசூதியை இடித்தவர்களுக்குமகுடம் சூட்டுவதில், பக்கத் துணையாய் இருப்பாய் என்பதை யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார்? சோதிடத்தில நம்பிக்கை கொண்டு,அதனால் மஞ்சள் துண்டு அணிந்து, “மஞ்சள் துண்டு மடாதிபதி“யாய் மாறிய உன்னை பெரியார் மன்னிக்க மாட்டார்.  

ஒன்றே குலம், ஒருவனே தேவன்“ என்று நான் சமரசம் செய்தால், உன் அமைச்சர்களை தீ மிதிக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளாய்.  

இக்கட்சியை உருவாக்கியதில், மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் எல்லாரும், இப்போது மறைந்து போய், அவர்களின் குடும்பங்கள் வறிய நிலையில வாடிக்கொண்டிருக்கையில்,  உன் குடும்பம், உலக செல்வந்தர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது, காலத்தின் கோலம்!  

மற்ற எல்லாவற்றையும் கூட மன்னித்து விடலாம் தம்பி….. இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில்,நீ ஆடிய நாடகமும், லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கையில், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, காங்கிரஸ் காலில் விழுந்து கிடந்ததை நான் மன்னித்தாலும் காலம் மன்னிக்காது.

“தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே“ என்று அழுது  நடித்த நாடகம் தமிழர்களிடத்தில் எடுபடவில்லை. இத்தனை தமிழர்களின் உயிர் போனதற்கு நீதான் காரணம் என்று வரலாறு உன் பெயரை பதிவு செய்யும். ஆகையால், என் பெயரால், உனக்கு வழங்கப் படும் விருதுக்கு நீ எள் முனையளவும் தகுதி படைத்தவன் கிடையாது.


Undermining the TNA?

(This writer appears to have all the answers to Thamils problem. Hence his patternistic sermonizing. He seems to surmise the interests of TNA and the Diaspora are not the same. He is making efforts to drive a wedge between the TNA moderates and militant Thamil Diaspora. How unsolicted  is his sermon that “all those global calls for ‘war crimes tribunals’ and the like on Sri Lanka could hurt them even more”. Pray how will it hurt the Diaspora more when no lesser person than Commissioner for Human Rights Navi Pillay said that certain actions undertaken by the Sri Lankan military could constitute violations of international human rights and humanitarian law. Additionally, a crucial report on Sri Lanka’s alleged war crimes is scheduled to be released mid-October by the US Department of State. The report, which could determine United State’s future financial assistance to the island, will be handed over to the US Congress for evaluation. US Ambassador-at-Large for War Crimes Issues, Stephen Rapp in an interview with Time magazine on September 14 disclosed that his office was now primarily focusing on Sri Lanka and a report from the Department of State on the war in Sri Lanka is due in Congress on September 21.)

“The Office of War Crimes Issues, together with the Secretary for Global Affairs and the Secretary of State, has the responsibility to collect information on ongoing atrocities, and it is then the responsibility of the President (Barak Obama) to determine what steps might be taken towards justice. Like the canary in the coal mine, we give the signal that something very serious is occurring,” Rapp said.

In the Amendment 1169 to H.R. 2346, an Act making supplemental appropriations for the fiscal year ending September 30, US Senators had earlier proposed to “prohibit certain forms of financial support to Sri Lanka,” unless certification is made by the Secretary of State that “Sri Lanka has taken certain steps to address the humanitarian situation in areas affected by the conflict in Sri Lanka.”

The Office of War Crimes Issues, helps formulate US policy responding to atrocities in areas of conflict around the globe.

The writer must be joking when he asserts quite confidently that “Already, there are suggestions that it was not the Diaspora that used the local polity in host countries, but was the other way round. A divided Diaspora with a weakened will can end up handing over the ethnic issue on a platter to all those who want to use it to beat the Sri Lankan State with – and achieve nothing much for the Tamil people. Trade-off is the name of the game in global diplomacy.” Undoubtedly, he is trying his level best to save the Rajapakses from gallows whether for a fee or not is not clear.

He goes onto claim “The Diaspora — whose interest in returning home or re-investing their large overseas earnings in the Tamil areas of Sri Lanka during the CFA period was not all that encouraging — should accept that reality.” But the reality is that even during the CFA there were numerous restrictions in regard to materials that can get into Vanni. Cement and steel were two items that were banned partially. Yet numerous buildings were constructed during the period. The Vanni Tech functioned in full force to train students in computer technology and a good number got graduated.

The writer foolishly offers advice that the Thamil Diaspora should leave Thamil issues to the moderate leadership that shares the pains and sufferings of the Thamil people. He forgets the fact that the moderate leadership is unable to speak freely and independently due to bullying by a dictatorial and racist government. Four out of 22 TNA MPs are unable to return to their country for fear of arrest and detention. They have not been allowed access to the concentration camps despite meeting president Rajapakse and dining with him! There is a conspicuous absence of any “advice” to the government by this columnist. His efforts appears to discredit the Thamil Diaspora as a bunch of militants hell bent to destroy his darling Sri Lankan government.

He knows if steps on the wrong foot his column will be dumped unceremoniously. The Thamil Diaspora are not imbeciles. They know best what is best for their brothers and sisters back home. If not for the support of the Thamil Diaspora to the LTTE, Northeast would have now become majority Sinhalese areas. At least we have put that attempt 20 years backwards. )

The revived interest of the international community in the ‘IDPs issue’ in Sri Lanka should come as a relief to all those wanting them resettled early on. It helps keep the Sri Lankan Government to be on its toes in meeting the six-month deadline that it had set for itself. At the same time, there should be a method to these efforts lest it should end up undermining the Tamil National Alliance (TNA), which has commenced talks with the Government on precisely the same issue.

The IDP issue is alive and immediate, unlike the larger political concerns and aspirations of the Tamil people. For the TNA, representing all those sections of the Tamil polity not identified with the Government, it has become the first issue on which to commence talks with the Government in the post-war era. It has also thus become the first issue for the TNA to test the Government’s will and willingness.

In a way, it is the international pressure on the one hand, and the TNA’s dialogue nearer home that is expected to do the trick. However, in the weeks after the TNA began talks – and only the first round is over, though with a promise of a second one at the very least – representatives of foreign governments and international agencies, starting with the UN and its affiliates have been harping on the same subject in meetings with Sri Lankan Government leaders, both in Colombo and in global capitals.

In doing so, the global community should take care to ensure that it does not overdo things in a way that the Government of President Mahinda Rajapaksa comes under greater internal pressure on what is increasingly becoming an ‘externalised issue’ all over again. The gains of the pressure thus exerted on human rights and humanitarian issues, both from the end-game of the war and in the IDP camps, should not end up being lost in a new wave of old suspicions between ethnicities and communities inside Sri Lanka

As is known, hard-line sections from with the Sinhala polity and society have often charged their Tamil counterparts with seeking to ‘internationalise’ the issue at every turn – and thus also charging them with complicating the issues on hand beyond recognition.

It is not the whole truth, as the fact remains that no solution was forthcoming when the ‘ethnic issue’ remained an internal affair of Sri Lanka, then Ceylon.

It is not as if the internationalisation of the issue has helped, either. The Tamils have also understood it, particularly given the loss and destruction that three decades of war entailed without any great gains to show, by way of results.

The TNA’s willingness and interest in honouring the invitation for talks extended repeatedly by President Rajapaksa should be seen in this context.

That being the case, there is a greater need now for the stakeholders from within Sri Lanka to engage in a dialogue that would help them sort out all issues on the ethnic front for all time to come. It is not going to be easy – but it is not going to be difficult, either, if they put their heart into it. Where there is will, as they say, there is a way.

As often said, given the post-war euphoria rightfully created in the Sinhala society, no one can stop the Rajapaksa leadership from giving the Tamils their legitimate due(s). Nor can the TNA, which was outside the pale of governmental engagement until the war was over, afford to let down the larger Tamil community in its hour of grave crisis and confusion.

Those sections of the international community that is taking up the larger Tamil cause in general, and the IDP issue in particular, should be alive to the ground situation in Sri Lanka.

Their efforts should be aimed at promoting the dialogue between the stakeholders in Sri Lanka in a way that produces tangible results on the ground.

The same applies to the vociferous Sri Lankan Tamil Diaspora, which seems getting increasingly divided in the weeks and months after the war. Earlier divisions of the kind were reflective of the conceptual differences within the Sri Lankan Tamil society and polity, represented often by their one-time militant youth. The Diaspora discourse on the subject often reflected this.

There is no denying the lead-role played by the Diaspora in internationalising the ethnic issue, and even arming and training the Tamil youth in the art of war.

In the process, the Diaspora found – and also contributed to — the leadership of the larger Tamil movement passing on to the militant youth back home, with their voice being stifled with as much increasing regularity as the moderate voice nearer home was stuffed out.

It is thus that the Diaspora ended up playing second fiddle to the LTTE leadership – and doing nothing more, either by way of guiding the movement, or introspecting on its behalf, as used to be the case once upon a time. Today, once again, the Diaspora divisions are not over political philosophies but over processes.

This may have to change in the changed circumstances in which the Diaspora finds itself – as is the Tamil community that they have left behind in Sri Lanka.

Already, there are suggestions that it was not the Diaspora that used the local polity in host countries, but was the other way round. A divided Diaspora with a weakened will can end up handing over the ethnic issue on a platter to all those who want to use it to beat the Sri Lankan State with – and achieve nothing much for the Tamil people. Trade-off is the name of the game in global diplomacy.

More importantly, the Diaspora — whose interest in returning home or re-investing their large overseas earnings in the Tamil areas of Sri Lanka during the CFA period was not all that encouraging — should accept that reality.

They should leave the Tamil issues in the country to be handled by the moderate local leadership that shares the pains and sufferings of the Tamil people. Their mistake last time was to hand it over to a monolithic militant leadership that would brook no opinions, leave alone dissent.

The TNA is already there, and the Diaspora or none other need to invent anyone new. The TNA, along with other Tamil parties back home, knows what is happening on the ground, and what is achievable – and in what all ways and through what all means.

The Diaspora, too, thus needs to ensure that neither its emerging divisions, nor its excessive campaigns end up undermining the TNA or its efforts to restore normalcy to the lives of the Tamils back home, and honour and dignity to those lives.


வட்டுக்கோட்டைத் தீர்மானமும் நாடுகடந்த தமிழீழ அரசும்!

நக்கீரன்

உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பறையறைவுகள் (proclamation)  காலத்துக்குக் காலம் வெளிவந்துள்ளன. அந்த முரசறைவுகள் வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்துள்ளன.

1847 இல் யூலை மாதத்தில் இலண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் தொழிலாளர்களின் சங்கத்தைத் தீவிரமான முறையில் செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தத் தொழிலாளர்கள் சங்கம் ‘கம்யூனிஸ்டுகள் சங்கம்’ என்று அழைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில்தான் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை உங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர” (Workers of the world unite; you have nothing to lose but your chains) என்ற முழக்கத்தை கார்ல் மார்க்சும் பிடரிக் ஏஞ்ஜெல்சும் (Karl Marx and Frederick Engels )  முன்வைத்தனர்.

1848 இல் மார்க்ஸ், ஏஞ்ஜெல்ஸ் இருவரும் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Communist Party Manifesto) என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் மக்களின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது.

அமெரிக்காவுக்கும் அய்க்கிய இராச்சியத்துக்கும் எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த யுத்தத்தில் பிரித்தானியர் பல சண்டைகளில் வெற்றி பெற்றபோதும் போரில் தோல்வி கண்டனர். சாதுரியமான கெரிலா யுக்திகளைக் கையாண்ட George Washington  அவர்களின் போர் நுட்பம் ஒரு காரணமாக இருந்தபோதும் இவர்களது விடுதலை வேட்கையும் வெறியுமே முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால்தான் 1777 இல் ஏற்பட்ட கோரமான, இரக்கமற்ற பனிக்குளிரின் மத்தியிலும் இவர்கள் சளைக்காது போராடினர், அன்னியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திரப் பறையறை துரடல 4, 1776 இல் இடம்பெற்றது.

1776 ஆம் ஆண்டு யூலை 4 ஆம் நாள் வட அமெரிக்காவில் பிரித்தானியாவுடன் அரசியல் தொடர்புகளை வைத்திருந்த 13 கொலனி நாடுகளை ஒருங்கிணைந்து சுதந்திரப் பறையறை வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திரப் பறையறைக்கு இடப்பட்டிருந்த தலைப்பு “13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஏகமனதான பறையறை” என்பதாகும். இன்றளவும் அந்த யூலை 4 தான் அமெரிக்காவின் சுதந்திர நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

யூலை 10, 1776 இல் அய்வரைக் கொண்ட குழு சுதந்திர பறையறைவு தயாரிப்பில் ஈடுபட்டது. யோன் அடம்ஸ் (James Adams) பென்ஜமின் பிராங்ளின் (Benjamin Franklin) றொஜர் ஷெர்மன் (Roger Sherman) ஆர்.ஆர் லிவிங்ஸ்ரன் (R.R.Livingston) தொமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson) ஆகியோரே இந்த அய்வர் ஆவர். இந்தப் பஞ்ச பாண்டவருள் Thomas Jefferson  என்பாரே இந்த பறையறைவை எழுதினார். இந்த பறையறைவில் காணப்பட்ட சாகா வரம் கொண்ட வைர வரிகள்….

We hold these truths to be self evident: that all men are created equal; that they are endowed by their creator with certain inalienable rights; that among these are life, liberty. and the pursuit of happiness.”

இந்த உண்மைகள் வெளிப்படையானவை எனக் கருதுகிறோம்: எல்லா மனிதர்களையும் கடவுள் சமமாகப் படைத்துள்ளான். அத்தோடு எவராலும் மறுக்க முடியாத சில உரிமைகளையும் கடவுள் அவர்களுக்கு அளித்துள்ளான். அவற்றுள், வாழ்வுரிமை (Life) சுதந்திரம் (Independence)இன்பத்திற்கான தேடல் உரிமை (Persuit of happiness)  வெளிப்படையான உண்மைகள் எனக் கருதுகிறோம்.”

அமெரிக்க சதந்திரப் பிரகடனத்தின் தர்மமே தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டம். அமெரிக்க மக்கள் சுதந்திரம் பெற்றமைக்கு இந்த அறமே காரணம் எனலாம். ஈழத் தமிழ் மக்களும் இன்று அல்லது நாளை தங்கள் விடுதலையை வென்றெடுப்பர். ஏனெனில்…

“தார்மீக அடிப்படையில் நாம் ஒரு உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட வேட்கை நியாயமானது. பன்னாட்டு மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனி அரசை அமைக்கும் தகுதி பெற்றவர்கள். பன்னாட்டு சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது.” (தமிழ் ஈழ தேசியத்தலைவர் மேதகு திரு வே. பிரபாகரன்)

பாகிஸ்தான் 1947 இல் புதிதாக உருவாக்கப்பட்ட முஸ்லிம் நாடு. அதன் முன்னோடி மார்ச்சு 22 – 24, 1940 இல் லாகூரில் கூடிய முஸ்லிம் லீக் மாநாடு பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அதிகளவு தன்னாட்சி உரிமை வழங்க வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றியது. இது பாகிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் என எல்லோராலும் கருதப்பட்டது. முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை 1930 இல் அல்லமா இக்பால் (Allama Iqbal) அவர்களால் முன்மொழியப்பட்டது. அதன் பின் பாகிஸ்தான் என்ற பெயர் 1933 இல் சவுத்திரி இராமத் அலி (Choudhary Rahmat Ali) என்பவரால் முன்மொழியப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் மொகமட் அலி ஜின்னாவும் மற்றும் தலைவர்களும் இந்து – முஸ்லிம் ஒற்றுமையில் நம்பிக்கையுடையவர்களாக இருந்தார்கள்.

1941 இல் லாகூர் தீர்மானம் முஸ்லிம் லீக்கின் யாப்பில் சேர்க்கப்பட்டது. இதுவே 1946 இல் முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையாக வடிவெடுத்தது.

“முஸ்லிம்கள் தொடர்ச்சியாகவும் வாழும் புவியியல் நிலப்பரப்பு தனிப் பகுதிகளாக எல்லை வகுக்கப்பட்டால் அல்லாது எந்த அரசியல் யாப்புத் திட்டமும் முஸ்லிம்களால் ஏற்கவோ நடைமுறைப் படுத்தவோ முடியாது. இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் ஆன வட – மேற்கு மற்றும் கிழக்கு வலையங்கள் சுதந்திர அரசுகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அவை தன்னாட்சி உரிமை மற்றும் இறைமை படைத்த மாநிலங்களாக விளங்கும்.”

பாகிஸ்தான் உருவாகுவதற்கு பிரித்தானிய இந்திய சட்டசபைகளில் சிந்து மாகாணமே முதலாவதாக ஆதரவு தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனை இரண்டாகப் பிரித்து இஸ்ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இஸ்ரேல் ஒரு தலைபட்ச பறையறவை அறிவித்தது. இந்தப் பறையறை வெளியிடப்பட்ட 11 ஆவது மணித்துளியில் அமெரிக்கா இஸ்ரேலை ஒப்புக்கொண்டது. அதனைத் தொடர்ந்து கவுத்தமாலா, நிக்கரகுவா, ஊருகுவே ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்;தது. மே 17 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் ஒப்புதல் அளித்தது. அதன் பின்னர் பல நாடுகள் ஒப்புதல் அளித்தன.

1945 இல் அய்யன்னா அவை உருவாக்கப்பட்டது. அப்போது அதில் 51 நாடுகள் உறுப்புரிமை வகித்தன. இன்று அதன் உறுப்பினர் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பான்மை தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்த நாடுகள் ஆகும்.

1889 இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (1990) சோவியத் ஒன்றியம் உருக்குலைந்தது. 1991 டிசெம்பர் 8 இல் சோவியத் ஒன்றியம் 74 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசமுறையாகக் கலைக்கப்பட்டது.

சோவியத் ஒன்றியம் 15 இணைப்பாட்சி நாடுகளைக் (1. Armenia, 2. Azerbaijan, 3. Belarus, 4. Estonia, 5. Georgia, 6. Kazakhstan, 7. Kyrgyzstan, 8. Latvia, 9. Lithuania, 10. Moldova, 11. Russia, 12. Tajikistan, 13. Turkmenistan, 14. Ukraine, 15. Uzbekistan) கொண்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு இராணுவம் மேற்கொண்ட இராணுவப் புரட்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனை அடுத்து பொரிஸ் யெல்ச்சின் (Boris Yeltsin) ஆட்சியைக் கைப்பற்றினார். செப்தெம்பர், 1991 இல் போல்ரிக் நாடுகளது (Latvia, Lithunia, Estonia)  சுதந்திரத்தை உருசியா ஏற்றுக்கொண்டது. நொவெம்பர், 1991 இல் பொரிஸ் யெல்ச்சின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்யும் சட்டத்தை அறிவித்தார். இதனை அடுத்து எஞ்சிய 12 நாடுகள் தனிநாடாகத் தம்மைப் பிரகடனம் செய்தன.

இதே போல் யூகோசிலோவாக்கியா குடியரசில் (Slovenia, Croatia, Bosnia and Herzegovina, Macedonia, Montenegro, Serbia) இரண்டு மாகாண அரசுகளும் (Kosovo and Vojvodina)  உறுப்பிரிமை வகித்தன. யூகோசிலோவாக்கியாவின் தலைவர் டிட்ரோ மறைந்த பின்னர் அது உடைந்து தனித்தனி நாடுகள் ஆகின.

யூகோசிலாவியாவில் உறுப்புரிமை வகித்த குரோசியாவும் ஸ்லோவேனியாவும் யூன் 25, 1991 இல் சுதந்திரப் பறையறை செய்துவிட்டுத் தனி நாடுகளாகப் பிரிந்தன. இந்த இரண்டு நாடுகளையும் அய்க்கிய நாடுகள் அவை 1992 சனவரியில் புதிய நாடுகளாக ஒப்புதல் அளித்தது.

1991ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் மசிடோனியா சுதந்திரப் பறையறை செய்தது. சண்டை இல்லாமல் அமைதி வழியில் யூகோசிலாவியாவில் இருந்து பிரிந்த ஒரே நாடு மசிடோனியாதான்.

இதனைத் தொடர்ந்து பொஸ்னியா 1992 பெப்ரவரி மாதத்தில் தன்னை சுதந்திரநாடாகப் பிரகடனப்படுத்தியது. அதே ஆண்டு ஏப்ரில் மாதத்தில் அதற்கு அய்யன்னா அவையின் ஒப்புதல் கிடைத்தது. அதே சமயம் யூகோசிலாவியா (எஞ்சிய) அய்யன்னா அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் நாள் கொசோவோ நாடாளுமன்றம் கூடியபோது அந்த நாட்டின் தலைமை அமைச்சர் ஹாஷிம் தாசி (Hashim Thaci)  சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார். அந்தப் பிரகடனம் மிகவும் முக்கியமானது.

“கொசோவோவை நாங்கள் ஒரு விடுதலை பெற்ற சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்துகிறோம். கொசோவோவில் வாழும் எல்லா சமூகத்தினரதும் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் அவர்கள் ஆட்சியில் பங்கு கொள்ளும் உரிமையையும் உறுதி செய்கிறோம். சிறுபான்மை மக்களது உரிமைகள் பற்றிக் குறிப்பிடும் திட்டத்தின் இணைப்பு 12 யை முற்றாகப் பின்பற்றுவோம் என உறுதி கூறுகிறோம்………”

எனவே புவிவரை படத்தில் இருக்கும் நாடுகள் மனிதர்கள் புவியைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்ட வரலாறுதான். நாடுகளின் எல்லைக் கோடுகள் கல்லில் எழுதியவை அல்ல. கடவுளால் எழுதப்பட்டவையும் அல்ல.

இந்த வரலாற்றுப் பின்புலத்திலேயே 1976 ஆண்டு மே 14 இல் வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் நாம் நோக்க வேண்டும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கும் நான் மேலே குறிப்பிட்ட அமெரிக்க சுதந்திர பிரகடனத்துக்கும் அல்லது லாகூர் தீர்மானத்துக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.

இலங்கையின் வட – கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களது ஒட்டுமொத்த அரசியல், சமூக, பொருண்மிய வேட்கைகள் அனைத்தையும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் துல்லியமாகவும் அச்சொட்டாகவும் எடுத்துக் காட்டுகிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர்கள் இன்று எதிர்நோக்கும் வாழ்வியல் அவலங்களில் உள்ள பல்வேறு இடர்களைத் தீர்ப்பதற்கும் தங்களது சொந்த மண்ணில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் மானத்தோடும் வாழ்வதற்கும் தங்களது மொழி, கலை, பண்பாடு இன அடையாளங்களைப் பேணித் தனித்துவமான இனமாக வாழ்வதை வற்புறுத்துகிறது.

ஒவ்வொரு தேசிய இனத்தினதும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமையுடைய சமயசார்பற்ற சமவுடமைத் தமிழீழ அரசை மீட்டெடுத்து மீள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அரசியல் இலக்கை எட்டும் வரை நாம் ஓயாது போராடவேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. வடக்கில் 69 விழுக்காடு வாக்குகளையும் கிழக்கில் 32.9 விழுக்காடு வாக்குகளையும் அது பெற்றது.

33 ஆண்டுகளுக்குப் 1976 இல் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட் வட்டுக்கோட்டைத் தீர்மானமே திம்பு பேச்சுவார்த்தைக்கும் ஒஸ்லோ அறிவித்தலுக்கும் அடிக்கல்லாக இருந்தது. திம்புவில் தமிழர் தரப்பு பேச்சு வார்த்தைக்காக முன்வைத்த தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட கோட்பாடுகளே.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள் உறுதிசெய்வது நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்துக்கு வலு சேர்க்கும். இதனை நாடுகடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் திரு. விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களும் உறுதி செய்துள்ளார். அவரால் வெளியிடப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான விளக்கக்கோவையில் காணப்படும் “நாடுகடந்த தமிழீழ அரசின் நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான தேவை என்ன?” என்ற கேள்விக்கு பின்வருமாறு விடை இறுக்கப்பட்டுள்ளது.

“ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு;, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தைத் தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் அவற்றிற்கு ஈடாகவும் செயற்படுவதிலுமே தங்கியுள்ளது. இதனை நிலைநாட்டுவதற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கட்டுப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் ஏதுவாக ஓர் உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு தேவையாகும். இத்தேவை 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக வடிவம் பெற்று 1977 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப் படுத்தப்பட்டது. 1985 திம்பு கோட்பாடுகள், 2003 இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைவு இதற்கு மேலும் வலுச் சேர்த்தன.”

காலத்தின் தேவையை உணர்ந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு தமிழீழ விடுதலைக்குத் தொடர்ந்து ஓயாது ஒழியாது போராடுவோம். (அடுத்த கிழமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வரலாற்றுப் பின்புலம் பற்றிப் பார்ப்போம். (Ulagaththamilar – September 25, 2009)


அய்யன்னாவைச் செல்லாக் காசாக்கும் பான் கீ மூன்

அய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு பல திசைகளில் இருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அவரது செல்வாக்கு எல்லா மட்டத்திலும் தேய்ந்து விட்டது. செய்தி ஏடுகள் அவரை வறுத்து எடுக்கின்றன. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூ யோர்க் ரைம்ஸ், வுhந நுஉழழெஅளைவ போன்ற ஏடுகள் பான் கீ மூன் அவர்களைச் கடுமையாகச் சாடி எழுதியுள்ளன.

பான் கீ மூனுக்கு எதிராகக் கிளம்பியுள்ள எதிர்ப்புக்கு என்ன காரணம்? இலங்கையில் நடைபெற்ற போரை அவர் சரியாகக் கையாளவில்லை, ஏனோ தானோ என்று நடந்து கொண்டார் என்பதே அவர் மீது சுமத்தப்படும் முக்கிய குற்றச்சாட்டாகும்.

கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பான் கீ மூனின் செல்வாக்கு சரிந்து விட்டது எனக் குறிப்பிட்ட The Economist  அதற்குக் காரணம் இலங்கையில் நடைபெற்ற போரில் அவர் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை எனக் கூறியது.

The Economist  போலவே நியூ யோர்க் ரைம்ஸ் நாளேடு பான் கீ மூன் அவர்கள் போர் தொடர்பாக எடுத்த நடவடிக்கை போதாது என்றும் அதனைத் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கை எடுக்க அவர் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியது.

போரைத் தடுத்து நிறுத்தப் போதிய மூலோபோயங்களையும் உருப்படியான நடவடிக்கைகளையும் பான் கீ மூன் எடுக்கவில்லை. அவர் ஸ்ரீலங்கா ஆட்சித் தலைவர் மகிந்தா இராசபக்சேயுடன் தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தை நடத்தினாலும் ஸ்ரீலங்கா அரசின் மீது வெளிப்படையாக அழுத்தம் கொடுக்கும் வகையில் அனைத்துலக நாடுகளது ஆதரவைத் திரட்டவில்லை எனக் குறை கூறப்படுகிறது.

மேலும் பான் கீ மூன் அவர்களது அணுகுமுறை ஊக்கக் குறைவாக இருந்தது. எந்தக் கட்டத்திலும் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களைக் காட்டமான முறையில் கண்டித்து அவர் தனது கைப்பட எந்த அறிக்கையையும் விடவில்லை.

போரின் கடைசிக் கட்டத்தி;ல் ஸ்ரீலங்காவிற்குத் தானே பறந்து செல்லாமல் தனது சார்பாக விஜய் நம்பியாரை பான் கீ மூன் அனுப்பி வைத்தார். இந்த விஜய் நம்பியார் யாரென்றால் ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக விளங்கிய சதீஷ் நம்பியாரின் உடன் பிறப்பாகும். இது பான் மீ மூன் அவர்களுக்குத் தெரியாதிருக்க நியாயமில்லை. போரை எப்படி நடத்த வேண்டும் என்று சதீஷ் நம்பியார் ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கும் போது போரை நிறுத்துமாறு விஜய் நம்பியார் எப்படி ஆலோசனை சொல்ல முடியும்? பான் கீ மூன் அவர்களது இந்த முடிவு பலத்த கண்டனத்துக்கு அப்போது இலக்காகியது நினைவிருக்கலாம்.

பான் கீ மூன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தவறோ சரியோ அவர் எந்தளவு தூரத்துக்கு அழுத்தத்தை தங்கள் மீது கொண்டு வரமுடியும் என்பதைப் போர் தொடங்கின நாள் தொட்டே ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் சரியாகக் கணித்து வைத்துவிட்டார்கள்.

ஸ்ரீலங்கா அரசு பான் கீ மூன் கொண்டு வரக் கூடிய அழுத்தத்தைக் குறைக்க முன்கூட்டியே அரசதந்திர மட்டத்தில் ஆதரவு திரட்டிவிட்டது. அதனைக் கெட்டித்தனமாகச் செய்து விட்டதென்று கூடச் சொல்லலாம்.

முன்னாள் அய்யன்னா அவையின் செயலாளர் நாயகம் கோபி அனன் அவர்களது பதவி முடிவுக்கு வந்த போது அடுத்த செயலாளர் நாயகம் யார் என்ற கேள்வி எழுந்தது. முன்னைய செயலாளர்கள் அய்ரோப்பா, ஆபிரிக்க நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டதால் இம்முறை ஒரு ஆசியக்காரருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருந்தது. ஸ்ரீலங்கா ஜெயந்தா தனபாலாவின் பெயரை அய்யன்னா செயலாளர் பதவிக்கு முன்மொழிய முடிவு செய்தது. அப்போது ஆட்சித்தலைவராக சந்திரிகா குமாரதுங்காவும் பிரதமராக மகிந்த இராசபக்சேயும் இருந்தார்கள்.

இதே சமயம் தென்கொரியா அய்யன்னா செயலாளர் நாயகம் பதவிக்குப் போட்டியிட பான் கீ மூன் அவர்களை நிறுத்த முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து தென் கொரியா ஸ்ரீலங்காவை அணுகி ஜெயந்தா தனபாலாவை போட்டியில் இருந்து விலக்குமாறு கேட்டுக் கொண்டது. அப்படிச் செய்தால் கைமாறாக ஸ்ரீலங்காவிற்கு பெரிய அளவில் நிதியுதவி செய்வதாக தென் கொரியா வாக்களித்தது.

இந்தக் கட்டத்தில்தான் பான் கீ மூன் அப்போது பிரதமராக இருந்த இராசபச்சேயைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். தொடக்க முதலே ஸ்ரீலங்கா ஜெயந்தாவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என முடிவுகட்டியது. அதனால் அவர் சார்பாக பொருளைச் செலவழித்துப் பெரிய அளவில் ஆதரவு திரட்டும் நடவடிக்கைகள் எதனையும் ஸ்ரீலங்கா மேற்கொள்ளவில்லை.

மகிந்தா இராசபக்சே ஆட்சித்தலைவராக வந்தவுடன் பான் கீ மூநோடு தனது நட்பை வளர்த்துக் கொண்டார். இவைதான் பான் கீ மூன் ஸ்ரீலங்காவோடு மெத்தனமாக நடந்து கொண்டதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

மேலே சொன்ன தரவுகளைக் கொழும்பில் இருந்து வெளியாகும் டெயிலி மிரர் நாளேட்டின் (செப்தெம்பர் 09, 2009) பத்தி எழுத்தாளர் உப்புல் யோசேப் பெர்னான்டோ கொடுத்துள்ளார்.

இந்தப் பின்னணி காரணமாகவே பான் கீ மூன் ஸ்ரீலங்காவைக் காட்டமாகக் கண்டிப்பதைத் தவிர்த்துக் கொண்டார் என பெர்னான்டோ முடிவு கட்டுகிறார்.

மற்றொரு காரணத்தையும் சொல்லலாம். பான் கீ மூன் ஒரு பவுத்தர். மகிந்தா ஒரு பவுத்தர். ஸ்ரீலங்கா நாடு ஒரு பவுத்த நாடு. தென் கொரியா ஒரு பவுத்த நாடு. இந்த சமய ஒற்றுமையும் பான் கீ மூனின் மெத்தனப் போக்குக்குக் காரணமாக இருக்கலாம்.

பான் கீ மூனுக்கு நோர்வே நாட்டிடம் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற முடியாமல் போனதற்கு அய்யன்னா பொதுச்செயலர் பான் கீ மூனின் செயல்பாடுகள் தான் காரணம் என அய்யன்னாவுக்கான நோர்வே தூதுவர் மோனா யூல் தெரிவித்துள்ளார் என திவயின செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

தேசியத் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு மேற்குலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி அய்யன்னாவின் நோர்வே சார்பாளர் மோனா யூல் எழுதிய இரகசிய கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அய்யன்னாவின் செயலாளர் பான் கீ மூன் தலைமைத்துவம் ஏற்க அருகதை அற்றவர், மற்ற நாடுகளின் செயற்பாடுகளில் தலையிடத் தெரியாதவர், கோபக்காரர் என சரமாரியான குற்றச்சாட்டுக்களை நோர்வே தூதுவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக ஒஸ்லோ நாளேடு ஆஃப்டன்போஸ்டன் கூறியுள்ளது.

அய்யன்னா மற்றும் அனைத்துலக தலையீடுகள் தேவைப்பட்ட சேரத்தில் எல்லாம் பான் கீ மூன் அமைதியாக இருந்துள்ளார். பான் கீ மூன் ஒரு தகுதியில்லாத செயலாளர் நாயகம் என்ற கோணத்தில் அவருடைய பதவி நோக்கப்படுவதற்கு ஸ்ரீலங்கா ஒரு முக்கிய மேற்கோளாகப் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு படை நடவடிக்கையில் நடைபெற்ற பாரதூரமான மானிட அவலங்களை அவர் நேரடியாகச் சென்று பார்த்தும் கூட அதுபற்றி எதுவித கண்டனத்தையும் மகிந்த இராசபக்சே அரசுக்குக் காண்பிக்கவில்லை.

ஸ்ரீலங்கா போலவே படு மோசமான இராணுவ ஆட்சி நடந்து வருகின்ற மியன்மாரில் எதிர்க்கட்சித் தலைவியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ குயி வீட்டுக்காவலில் இருப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்க பான் கீ மூன் தவறியுள்ளார் என நேர்வே தூதுவர் திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டியுள்ளர்.

பான் கீ மூன் ஆவர்களோடு அனைத்துலக சிக்கல்களைப் பற்றிப் பேச முடியாதுள்ளதாகவும் எப்படி உலக அலுவல்களைக் கையாள்வது என்ற தொழில் நுட்பம் தெரியாத ஒருவராகவும், பேசும்போது

ஆனால் இந்தக் கடிதத்தின் உண்மைத்தன்மை பற்றி நோர்வே வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். நோர்வே மொழியில் எழுதப்பட்ட இக்கடிதம் பான் கி மூன் நோர்வேக்கு சென்ற ஓகஸ்த் மாதம் 31 ஆம் நாள் மேற்கொண்ட செலவுக்கு அண்மித்தாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பாகிஸ்தான், சுடான், சோமாலியா, சிம்பாவே மற்றும் மிகச் சமீபமாக கொங்கோ நாடுகளில் நடைபெறும் சிக்கல்களுக்கும் பான் கீ மூன் ஒருவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்லுப் பிள்ளையார் மாதிரி இருந்துவிட்டார் என்கிறார் நோர்வே தூதுவர்.

பான் கீ மூன் அவர்களின் கெட்ட காலம் ஸ்ரீலங்கா யுனிசெஃப் அமைப்பின் ஸ்ரீலங்கா பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பரப்புரைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் அவரது இசைவுச் சீட்டு இல்லாது செய்யப்பட்டு அவரை நாட்டைவிட்டு உடனடியா வெளியேறுமாறு கடந்த செப்தெம்பர் 5 ஆம் நாள் ஸ்ரீறிலங்கா அரசு கட்டளையிட்டது. நாட்டை விட்டு வெளியேற அவகாசம் கேட்டதன் பின் எதிர்வரும் திங்கட்கிழமை (21.09.09) மட்டும் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசின் முடிவு குறித்து தாம் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக அய்யன்னா பொதுச் செயலாளரின் அலுவலகம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

விரைவில் இந்தப் பொருள் குறித்து ஸ்ரீறிலங்கா அரச தலைவர் மகிந்த இராசபக்சேயுடன் பான் கீ மூன் பேசுவார் என்றும் அலுவலகம் கூறியுள்ளது.

ஆயிரக்கணக்கில் தமிழ்மக்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்ட போது வாழாவிருந்துவிட்டு இப்போது 280,000 தமிழ்மக்கள் அவர்களது விருப்புக்கு மாறாக ஆடு மாடுகள் போன்று முட்கம்பி வேலிகளுக்குள் சிறைவைக்கப்பட்டிப்பது கண்டு வாழாவிருக்கும் பான் கீ மூன் அய்யன்னா அதிகாரி நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார் என்றதும் கண்டனம் தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது.

அய்யன்னா உலகில் போரைத் தவிர்த்து அமைதியை நிலைநாட்டி பொருளாதாரம், குமுகாயம், பண்பாடு மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு ஆகியவற்றுக்குப் பாடுபடுவதைக் குறிக்கோளாகக் கொண்டு 1945 இல் உருவாக்கப்பட்டது. அதன் பட்டயம் யூன் மாதம் 26 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்டு அதே ஆண்டு ஒக்தோபர் 24 இல் அது நடைமுறைக்கு வந்தது.

அய்யன்னா உருவாக்கப்பட்ட போது அதில் 51 நாடுகள் உறுப்புரிமை வகித்தன. இப்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.

உறுப்புரிமை கூடியுள்ளதே தவிர அதன் செல்வாக்கு உலகளாவிய அளவில் தேய்ந்துள்ளது.

அய்க்கிய நாடு அவை பன்னாட்டு சிக்கல்களுக்குத் தீர்வு காணவே உழைக்க வேண்டும். விதி 2(7) அயக்கிய நாடுகள் அவை அல்லது ஒரு நாடு அல்லது ஒரு பரிவு நாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் – அந்த நாடு கேட்டுக்கொண்டால் அல்லாது – தலையிட அனுமதி அளிக்கக் கூடாது எனச் சொல்கிறது. அதே சமயம் ஆக்கிரமிப்பு அல்லது அமைதிக்கு அச்சுறுத்தல் அல்லது ஊறு ஏற்படும் பட்சத்தில் தடைகளை நடைமுறைப்படுத்தலாம் என அதன் பட்டயம் சொல்கிறது. ஆனால் ஒரு நாட்டின் உள்ளாட்டுச் செயல்களில் அல்லது அதன் இறையாண்மையில் தலையிட முடியாது.

“ஒரு நாட்டின் உள்ளாட்டுச் செயல்களில் அல்லது அதன் இறையாண்மையில் தலையிட முடியாது” என்ற விதியைக் கேடயமாகப் பிடித்துக் கொண்டே ஸ்ரீலங்கா, சுடான் மைனமார் போன்ற நாடுகள் அய்யன்னா அவையை உதாசீனம் செய்கின்றன.

உரோம் பற்றி எரியும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த பான் கீ மூன் அவர்களின் கையாலாகாத்தன்மை அய்யன்னாவைச் செல்லாக் காசாக்க உதவியுள்ளது. (உலகத்தமிழர் – 19-09-2009)

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்!

பாஞ்சாலி சபதத்தில் துச்சாதனன் திரௌபதியின் நீண்ட கருங்குழலை கைப்பற்றிக் கொற கொறவென அரச சபைக்கு இழுத்து வருகிறான். அப்படி இழுத்து வரும் போது ஊரார் நெட்டை மரங்கள் என நின்று புலம்பினர். சபையிலே ஆவி குலைவுற்று அவள் நிற்கிறாள். ஆவென்று அழுது துடிக்கிறாள். வெறு மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மைகுழல் பற்றி இழுக்கிறான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வீமன் தருமனை நோக்கி வெஞ்சினம் கூறுகிறான்.

இது பொறுப்பதில்லை – தம்பி
எரிதழல் கொண்டு வா,
கதிரை வைத்திழந்தான் அண்ணன்
கையை எரித்திடுவோம்.

அப்போது அருச்சுனன் அண்ணன் தருமனைச் சினந்து சொன்ன வீமனது சுடுமொழிக்குப் பதில் இறுக்கிறான்.

“தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்” எனும் இயற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்,
கருமத்தை மேன்மேலுங் காண்போம், இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்,
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்,
தனுஉண்டு காண்டீபம் அதன் பேர்” என்றான்.

பாரதி தாம் படைத்த பாஞ்சாலி சபதத்தில் அருச்சுனன் வாயிலாக “தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்” என்றும் “கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும், தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்” என்றும் அறிவுரை கூறுகிறார். அடிமைப் பட்டுக் கிடந்த இந்தியத் தாயை பாஞ்சாலியாகவும் பாண்டவர்களை இந்திய நாட்டு மன்னர்களாகவும் கவுரவரை ஆங்கிலேயராகவும் பாரதி உருவகித்துப் பாடியதே பாஞ்சாலி சபதம்.

மே 19 இல் ஈழப் போர் முடிவுக்கு வந்த பின்னர் – வி.புலிப் போராளிகளும் தளபதிகளும் வீரச்சாவைத் தழுவிய பின்னர் – எம்மிடையே ஒரு சோர்வு மனப்பான்மை குடிகொண்டுள்ளது. செந்நீர் ஊற்றி வளர்த்த விடுதலை வேள்வி எம் கண்முன்னாலேயே அணைந்து போனதை எம்மால் செரிக்க முடியவில்லை என்பது உண்மையே.

இந்தச் சோகம் மறைவதற்கு முன்னர் மீண்டும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்புகளின் ஒருங்கிணைப்பாளர் கே.பத்மநாதன் மலேசியாவில் கைது செய்யப்பட்டுப் பின்னர் ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட செய்தி எம்மை விரக்தியின் விளிம்பிற்கே தள்ளியது.

ஆனால் ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில் பின்னடைவுகளைக் கண்டு நாம் மனம் சோர்ந்துவிடக் கூடாது. நம்பிக்கையை இழந்து விடக் கூடாது. “நம்பினோர் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். நமக்குள் இருக்கும் பெரிய கருவூலம் தன்னம்பிக்கைதான் (ளுநடக ஊழகெனைநnஉந). தன்னம்பிக்கை இருந்தால்தான் நாம் வாழ்க்கையில் அரிய பெரிய குறிக்கோள்களை அடைய முடியும்.

ரொபர்ட் ப்ரூஸின் கதை நம்பிக்கை இறுதியில் வெற்றியைத் தரும் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு. போரில் தோல்வியுற்ற ரொபர்ட் ப்ரூஸ் எதிரிகளிடமிருந்து தப்பி ஓடி ஒரு குகைக்குள் மறைந்து வாழ்ந்தான். அடுத்து என்ன செய்வது என்றறியாமல், குகையின் மேற்கூரையைப் பார்த்தவாறு படுத்திருந்தான். அப்போது ஒரு சிலந்தி ஒரு முகட்டிலிருந்து இன்னொரு முகட்டிற்கு வலை பின்னிக் கொண்டிருந்தது. பலமுறை வலை அறுந்து விழுந்த போதிலும் சிலந்தி முயற்சியைத் தளரவிடாமல் முயன்று இறுதியில் வலையைப் பின்னி விட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரூஸின் மனதில் நம்பிக்கை ஒளி தோன்றியது. மீண்டும் படைகளைத் திரட்டி எதிரிகளை முறியடித்துத் தனது அரசை மீட்டான்.

தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு தொடர் ஓட்டப் போட்டி போன்றது. ஒவ்வொரு சுற்றிலும் ஓடி வருபவர்கள் தங்கள் பொல்லை அடுத்த சுற்றுக்கு அணியமாக இருப்பவர்களிடம் கொடுக்கிறார்கள். முடிவில் முதலாவதாக ஓடி முடிப்பவன் வெற்றிக் கிண்ணத்தை தட்டிக் கொண்டு போகிறான்.

தந்தை செல்வநாயகம் தொடக்கி வைத்த போராட்டத்தை தேசியத் தலைவர் பிரபாகரனிடம் கையளித்தார். அதனை அவர் இப்போது எம்மிடம் கையளித்துள்ளார். அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு எங்கள் கையில் உள்ளது.

அயிரிஷ் போராட்டம் 120 ஆண்டுகள் நீடித்தது. அதாவது நான்கு தலைமுறை நீடித்தது. அயிரிஷ் போராட்டத்தோடு எமது போராட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் வெறுமனே 61 ஆண்டுகள்தான் கழிந்துள்ளது. முதல் 25 ஆண்டுகள் அறவழிப் போராட்டம். எஞ்சிய 26 ஆண்டுகள் மறவழிப் போராட்டம். இனி எமது போராட்டம் அரசியல் – இராசதந்திர தளங்களில் முன்னெடுக்கப்படும். நாடுகடந்த தமிழீழ அரசு அதற்கான முயற்சியாகும்.

திருவள்ளுவர் பொருட் பாலில் அரசியல் பற்றிப் பேசுகிறார். இறைமாட்சி (வுhந புசயனெநரச ழக ஆழயெசஉhல) என்ற அதிகாரத்தில் (39) அரசனது நற்குண நற்செய்கை பற்றியும் வினை செயல் வகை என்ற அதிகாரத்தில் (68) அமைச்சன் செய்ய வேண்டிய வினை பற்றியும் (68) பத்துப் பத்துக் குறள் மூலம் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.               (குறள் 383)

நாட்டை ஆளும் அரசனுக்கு காலம் தாழ்த்தாத விரைவான வினைத்திறனும் அதனை அறிதற்கேற்ற கல்வி அறிவும் அவற்றைச் செய்து முடிக்கும் மனத்திட்பமும் என்றும் நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவை ஆகும்.

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (குறள். 671)

ஆராய்ச்சியின் முடிவு துணிபு கொள்வதே ஆகும். அவ்வாறு துணிவு பெற்ற பிறகு காலம் தாழ்த்துவது குற்றமாகும்.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.                   (குறள். 672)

காலம் தாழ்த்திச் செய்யத் தக்கவற்றை அவ்வாறே செய்ய வேண்டும். விரைவாகச் செய்ய வேண்டியவற்றில் காலம் தாழ்த்துதல் கூடாது.

இன்றைய மக்களாட்சி முறைமையில் அரசன் இல்லை. மக்கள்தான் அரசர்கள். எனவே அரசனக்கும் அமைச்சனுக்கும் சொன்ன இலக்கணம் மக்களுக்கும் பொருந்தும்.

இன்று எமக்குத் தேவையானது போர்க்குணம். அநீதியைக் கண்டு கொதித்தெழும் ஓhமம். எல்லாம் முடிந்தது என்று சொல்லிக் கொண்டு மூலையில் இருந்து ஒப்பாரி வைக்கும் தோல்வி மனப்பான்மை அல்ல.

அடிமைத்தனம் என்பது நாம் அறியாமலேயே நம் வாழ்வில் கலந்துவிட்டது. நாம் எமது உரிமைகளை உரத்த குரலில் கேட்டால் பிறர் என்ன சொல்வார்களோ நினைப்பார்களோ என்ற பயவுணர்வுடன் வாழும் நிலையை அடிமைத்தனம் என்று கூறலாம்.

வவுனியா சித்திரவதை முகாம்களில் 283,000 உறவுகள் கொடிய சிங்கள – பவுத்த வெறிபிடித்த மகிந்த இராசபக்சா அரசினால் சிறைவைக்கப்பட்டுள்ளார்கள். தாய் ஒரு முகாமிலும் பிள்ளை இன்னொரு முகாமிலும் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஒரு நேர உணவுக்கு கையேந்தி நிற்கிறார்கள். இதைப் பார்த்து நாம் அழக் கூடாது. அவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க நாம் சூளுரைக்க வேண்டும். மனிதவுரிமை மீறல்களை கங்குகரையின்றிச் செய்திடும் மகிந்த இராபக்சேயையும் அவரது உடன்பிறப்புக்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற நாம் சூளுரைக்க வேண்டும்.

ஆயிரத்து அய்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு துறவிக்கு இருந்த துணிவில், தன்னம்பிக்கையில் கால்வாசியாவது எமக்கு வேண்டாமா?

நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்திலிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளு ந்துன்ப மில்லை….

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் – கிளியே
இருக்க நிலைமை யுண்டோ!

அஞ்சியஞ்சிச் சாவாரடி கிளியே! இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே………..

என்றார் முண்டாசுக் கவி பாரதி. அடிமைத்தனம் எந்நேரமும் அச்ச உணர்வைக் கொடுக்கும். அதனால் அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி, ஏறுபோல் நட, கீழோர்க்கு அஞ்சேல், கெடுப்பது சோர்வு, கேட்டிலும் துணிந்து நில், கொடுமையை எதிர்த்து நில், கோல்கை கொண்டு வாழ், சாவதற்கு அஞ்சேல், சிதையா நெஞ்சு கொள், சீறுவோர்ச் சீறு, சூரரைப் போற்று, செய்வது துணிந்து செய், ஞமலி போல் வாழேல், தாழந்து நடவேல், தீயோர்க்கு அஞ்சேல், தேசத்தைக் காத்தல் செய், நன்று கருது, நாளெல்லாம் வினை செய், நினைப்பது முடியும், நையப் படை, பணத்தினைப் பெருக்கு, பூமி இழந்திடேல், போர்த்தொழில் பழகு, மானம் போற்று, ரௌத்திரம் பழகு, (உ)லுத்தரை இகழ், வீரியம் பெருக்கு, வையத் தலைமைகொள் எனப் பாரதி தனது புதிய ஆத்திசூடியில் அறிவுறுத்துவதை மனங்கொள்ளுங்கள்.

ஊமைவிழித் திரைப் படத்தில் ஒரு பாட்டு. இன்றைய எமது சூழ்நிலையை அச்சொட்டாகப் படம்பிடித்துக் காட்டும் கவிதை வரிகள். அதனை எல்லோரும் நெட்டுருச் செய்ய வேண்டும்.

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா…

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா…
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..கனவை மறக்கலாமா…
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா…

விடியலுக்கில்லை தூரம் …
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் நாம் அடுத்த கட்டத்துக்கு விடுதலை என்ற தேரை ஊர் கூடி இழுத்துச் செல்ல வேண்டும். புலிகள் இல்லை என்ற நினைப்பில் சில எலிகள் சன்னதம் செய்கின்றன. அது எதிர்பார்த்ததுதான். அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். காகம் திட்டி மாடு சாவதில்லை. நாம் தொடர்ந்து எமது தலைவர் வகுத்த பாதையில் துவளாது கண் தூங்காது எமது இலக்கான தமிழீழம் நோக்கி வெற்றி நடை போடுவோம்.

எத்தனை முறை வீழ்ந்தாலும் அத்தனை முறையும் பீனிக்ஸ் பறவை போல் எழுவோம்.

எழு எழு தமிழா எழுந்திடு

விழ விழத் தமிழா எழுந்திடு

அழுதது போதும் எழுந்திடு

பட்டது போதும் விழித்திடு

சாவாவாழ்வா ஒருகை பார்த்;திடு

நெற்றிக் கண்ணைக் காட்டிடு

எதிரியைச் சுட்டு எரித்திடு

சாட்டை எடுத்து அடித்திடு

கொடு வாளை எடுத்திடு

கொடும் பகை முடித்திடு

வெற்றி வாகை சூடிடு

ஞாலம் முழுதும் வென்றிடு

புலிக்கொடி எங்கும் நாட்டிடு

புதிய வரலாறு படைத்திடு

தொடு வானை அளந்திடு

தாய் மண்ணைத் தொழுதிடு

தமிழீழம் உயிரெனச் சொல்லிடு

தானைத் தலைவனை வணங்கிடு

மாவீரர் புகழ் பாடிடு

எழு எழு தமிழா எழுந்திடு

விழ விழத் தமிழா எழுந்திடு.

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். கவலையை விடுங்கள்! கடமையைச் செய்யுங்கள்! (உலகத்தமிழர் – ஆகஸ்ட் 28, 2009)


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply