வட மாகாணம் போதைக்கு அடிமையான மாகாணமாக ஆக்கப்படுமா?
நடராசா லோகதயாளன்
வட மாகாணம் போதைக்கு அடிமையான மாகாணமாக ஆக்கப்படுமா? என்ற அச்சம் எழுப்பும் இக் காலத்தில் அதிலிருந்து மீட்கவேண்டிய பொறுப்புனர்ந்து வட மாகாண சபை ஆற்றிய முதல்பங்கு இன்று முன்னுதாரனமாககொள்ளப்பட்டு வடக்கின் சகல மாவட்டத்திலும் நிறுவுவதற்கு மீள்குடியேற்ற அமைச்சு முன் வந்துள்ள ஓர் வெற்றிகரமான திட்டமாகவும் கானப்படுகின்றது.
கிளிநொச்சி தர்ம்புரம் பகுதியில் இவ்வாறு அமைக்கப்பட்ட போதைக்கு அடிமையானவர்களிற்கான புனர்வாழ்வு சிகிச்சை மையம் 2017-08-31 அன்று உத்தியோக பூர்வமாக முன்னாள் வட மாகாண நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் .சத்தியலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிலையமானது முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சரின் கோரிக்கையின் பெயரில் கனடாவில் வாழும் அன்பர்களின் நிதிப் பங்களிப்பில் சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் 2015ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு வைத்திய நிலையம் மாதிரியாக இயங்க ஆரம்பித்தபோதும் தற்போதுதான் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட புனர்வாழ்வு மையத்தில் மாதிரிச் செயல்பாட்டுக் காலத்தில் இதுவரை சுமார் 290பேர் புனர்வாழ்வு பெற்று போதையில் இருந்து விடுபட்டு வெளியேறிய நிலையில் குறித்த புனர்வாழ்வு நிலையம் ஒன்று கிளிநொச்சியில் அமைக்கப்பட வேண்டும் என கடுமையாக உழைத்த மருத்துவர் கணேசன் இது தொடர்பில் விபரம் தெரிவிக்கையில் ,
யுத்தத்திற்குப் பின்னர் வடக்கில் இளைஞர்களின் தடம்புரள்விற்கு முக்கிய காரணமாகத் திகழ்வது போதையே. அதில் இருந்து எமது இளைஞர் சமூகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு எம்மவர்க்கு உண்டு. இது தொடர்பில் வைத்தியர் ஜெயராசா மற்றும் கனடாவில் வாழும் விரிவுரையாளரான அருன் – ரவீந்திரன் ஆகியோர் சிந்தித்தார்கள். அந்த வேளையிலேயே வட மாகாண சபை உதயம் பெற்றிருந்தது. அதனால் வட மாகாண சுகாதார அமைச்சரின் உதவியையும் நாடினோம்..
இதேவேளை யுத்தத்துக்குப் பின்பு இவ்வாறான புனர்வாழ்வு வைத்திய மையத்தினை நிறுவ பணியை தொடங்கியபோதும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போதைய ஜனாதிபதியும் மது ஒழிப்பில் தீவிரமாக செயல்பட்டமை எமக்கு புது வேகத்தை தந்ததோடு மேலும் நம்பிக்கையூட்டியது. இவையும் எமது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இந்தவகையிலே இதுவரை இயங் கிய இந்த இரண்டு ஆண்டுகாலத்தில் மொத்தம் 290பேர் தங்கிப் புனர்வாழ்வு பெற்று வெளியேறியுள்ளனர். இந்தப் புனர்வாழ்வு வைத்திய கூடம் அமைந்துள்ள தர்மபுரம் காணி அரச காணியாகும்.
அதேநேரம் இக்கட்டிடத்தினை கட்டி முடிப்பதற்கு முன்னாள் வட மாகாண நல்வாழ்வு அமைச்சர் ஊடாகக் கனடா வாழ் வைத்தியர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்தே முழுப் பணத்தையும் அன்பளிப்பாகத் திரட்டினார்கள். அதாவது சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் கனேடிய டொலர்களைத் திரட்டினார்கள். அப் பணமானது எமது நாட்டுப் பெறுமதியில் 13 மில்லியனிற்கும் அதிகம் ஆகும். இன்று இங்கே வைத்தியர்களுடன் இரண்டாம் நிலை ஊழியர்களாக நன்கு பயிற்றப்பட்ட ஊழியர்கள் 6 பேர் உள்ளனர். இந்தப் புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தின் வெற்றியே இந்த ஊழியர்களின் கையில்தான் தங்கி உள்ளது. ஏனெனில் வைத்திய நிலையத்தில் வைத்தியர்களினை விடவும் அதிகம் ஊழியர்களின் அரவனைப்பே காணப்படும் .
இலங்கையில் இன்று இது போன்ற புனர்வாழ்வு வைத்திய நிலையங்கள் 3 இருப்பினும் இந்த நிலையம் இந்த ஊழியர்களின் முயற்சியினால்தான் முதலிடம் பிடித்து நிற்பதோடு முன்மாதிரியாகவும் திகழ்கின்றது. இதேநேரம் இதுவரை தர்மபுரத்தில் 290 பேர் புனர்வாழ்வு சிகிச்சை பெற்று போதையில் இருந்து மீண்டிருந்தாலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. வடக்கின் பல பாகங்களில் இருந்து மட்டுமின்றி தெற்கைச் சேர்ந்த பலரும் இவ்வாறு நன்மை பெற்றுள்ளனர்.
குறித்த புனர்வாழ்வு வைத்திய நிலையத்தில் ஒரே காலத்தில் சுமார் 20பேர் தங்கிச் செயல்படும் வாய்ப்புக்கள் உள்ளதோடு இங்கே புனர்வாழ்வு பெற்று போதையில் இருந்து விடுபடுவதற்கு உச்ச பட்சமாக 15 நாள்களே தங்கி வைத்தியம் பெறுவதே போதுமானது எனவும் தெரிவித்தார்.
இதேநேரம் இப்புனர்வாழ்வு வைத்திய நிலையம் ஆரம்பிக்கப்படுவதற்கு பெரிதும் முன்னின்றவர்களில் ஒருவரான வட மாகாண முன்னாள் நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்திடம் இது தொடர்பில் கேட்டபோது ,
வைத்தியர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கவேண்டியது அமைச்சர்களின் கடமை என்ற வகையில் நான் அப் பணியில் இருந்த சமயம் கனடாவில் வாழும் வைத்திய நண்பர்கள் மற்றும் ஏனைய வைத்தியர்கள் விரிவுரையாளர் அருண்- ரவீந்திரன் ஆகியோரின் கூட்டில் முதலில் சிறிதாக முயற்சித்து பின்னர் முழுமையான பங்களிப்பில் இன்று புலம்பெயர் உறவுகளின் முயற்சியால் ஒரு வைத்தியசாலை நிமிர்ந்து நிற்கின்றது. முயன்றால் புலம்பெயர் உறவுகளினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த வைத்திய நிலையம் சான்றாக உள்ளது.
இதேநேரம் இப் புனர்வாழ்வு வைத்திய கூடத்தில் தங்கி வைத்தியம் பெற்று வெளியேறிய கிளிநொச்சி மாவட்டம் புண்ணைநீராவியை சேர்ந்த இந்திரதாஸ் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது அனுபவம் தொடர்பில் தெரிவிக்கையில் ,
1980ம் ஆண்டு பிறந்த நான் 1999 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தேன். போர்க்களத்தில் 3 தடவை காயமடைந்து அதன் காரணமாக ஏற்பட்ட சோர்வின் காரணமாக 2004 இல் அமைப்பில் இருந்து விலகி 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தேன். இரு பிள்ளைகளுடன் சற்று சந்தோசமாக வாழ்ந்த நேரம் இறுதி யுத்தத்தின்போது 2009-04-11 அன்று மாத்தளன்பகுதயில் கப்பல் துறையில் இடம்பெற்ற செல் தாக்குதலில் எனது மனைவி ஒரு பிள்ளை மற்றும் எனது தாயார் ஆகியோர் அந்த இடந்திலேயே கொல்லப்பட்டனர். ஒரு மகனும் நானும் மட்டுமே மிஞ்சினோம்.
இதன் பின் செட்டிக்குளம் வந்து மீள்குடியேற்றத்தின் பின்னர் எப்படி உழைத்தாலும் எனது பிள்ளைக்கும் எனக்கும் போதிய உணவோ பராமரிப்போ கிடையாது. இதனால் எனது மகன் 5 வயதில் எனது வீட்டிலும் பேத்தியார் வீடும் என மாறி மாறி அலைக்கழிந்தான். அவர்களிடத்தில் இருந்தும் போதிய ஒத்துழைப்பு கிட்டவில்லை. இதனால் 2011 இல் மெல்ல மெல்ல ஆரம்பித்த குடி 2013 இல் உச்சம் பெற்றது. இதனால் நான் தொழில் இழந்தேன். அப்போது பிள்ளையை பாடசாலையில் இணைத்திருந்தேன்.
அவனை ஏற்றி இறக்குவதும் நானே. இவ்வாறு ஏற்றி இறக்கும் சந்தர்ப்பத்தில் 2014 அவனது தரம் 3 பரீட்சையின் முதல்நாள் போதையின் காரணமாக மறுநாள் என்னால் காலையில் எழும்ப தாமதமாகிவிட்டது. அதனால் மகன் பரீட்சையை இழந்தான். பாடசாலை ஆசிரியர் என்னை அழைத்து ஏசினார். நிலமையை கூறினார். இதனால் குடியை குறைக்க முயற்சித்தேன். முடியவில்லை. அதன் பின்பே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றநேரம் குறித்த புனர்வாழ்வு சிகிச்சைக் கூடத்தினைப் பற்றியும் தெரிவித்தனர்.
அதன் பிரகாரம் 2015 இல் இங்கு சென்று வைத்தியம் பெற்றேன். அது ஒரு வைத்தியம் என்பதை விட ஓர் அரவனைப்பைப் பெற்றேன் என்று கூற முடியும். அதன் பின்பு நானும் எனது மகனும் என வாழ்ந்து வந்தேன். இதன் பிரகாரம் 2016 இல் மீண்டும் திருமணம் செய்து எனது மூத்த பிள்ளையுடன் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரம் ரூபா முதல் 1500 ரூபா வரையில் உழைத்து வாழ்கின்றேன். இதேநேரம் குடிக்க ஆரம்பித்த நாட்களில் நாள் ஒன்றுக்குக் குடிப்பதற்கே 300 ரூபா முதல் 400 ரூபா வரையில் தேவைப்பட்டதையும் தற்போதும் எண்ணிப்பார்க்கின்றேன் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.