Political Column by Nakkeeran 2006 (2)

அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்!
நக்கீரன்

கனடிய தமிழர் பேரவை முன்னெடுத்த ஒற்றுமை வாரம் சென்ற மே 8 ஆம் நாள் திங்கள் தொடங்கி மே 16 ஆம் நாள் ஞாயிறு நிறைவுற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளை கனடிய அரசு பயங்கரவாத இயக்கப் பட்டியலில் சென்ற ஏப்பிரில் 8 ஆம் நாள் தொடக்கம் சேர்த்துக் கொண்டது. அதனைக்  கண்டித்தே இந்த ஒற்றுமை வாரம் அனுட்டிக்கப்பட்டது.

உண்மையில் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம்  (Bill C 36) சென்ற 2001 ஆம் ஆண்டு இறுதியில் லிபரல் கட்சி ஆட்சியின் போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதன் பின் லிபரல் அரசு 38 அமைப்புக்களை அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொண்டது. ஆனால் வி.புலிகள் அதில் சேர்க்கப்படவில்லை. அப்படி விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பது நோர்வே நாட்டு அனுசரணையுடன் வி.புலிகளுக்கும் ஸ்ரீ லங்கா அரசுக்கும் இடையில் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தையைப் பாதிக்கும் என லிபரல் அரசு கருதியது. முக்கியமாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் பில் கிறகம் அப்படி நினைத்தார். அவரது செல்வாக்குக் காரணமாகவே வி.புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கும் உளவுத்துறையின் முயற்சி நிறைவேறவில்லை.

உண்மையில் கனடிய உளவுத் துறை (CSIS) வி.புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்ப்பதற்கு மூன்று முறை முயற்சித்தது. ஆனால் அது வெற்றி பெற வில்லை. ஆனால் வலதுசாரிப் பழைமவாதக் கட்சி ஆட்சிக்கு வந்ததும்  மீண்டும் உளவுத்துறை முயற்சித்து வெற்றி பெற்று விட்டது.

பயங்கரவாத அச்சுறுத்தலை ஊதி ஊதிப் பெரிதாக்கிக் காட்டுவது என்பது  எல்லா நாட்டு உளவுத்துறைகளுக்கும் பொதுவான ஒரு நியதி ஆகும். நிதியுதவி, ஆள் அணி, பதவி உயர்வு மற்றம் சலுகைகளைப் பெருக்க இந்தப் பயங்கரவாதப் பூச்சாண்டி உதவுகிறது!

வி.புலிகள் தடை செய்யப்பட்ட செய்தியை முதலில் முந்திக் கொண்டு வெளியிட்ட நாளேடு National Post ஆகும். ஏனைய நாளேடுகள் இரண்டொரு நாள் கழித்துத்தான் அந்தச் செய்தியை வெளியிட்டன.

வலதுசாரி  National Post  நாளேடு நீண்ட காலமாக வி.புலிகளுக்கு எதிரான செய்திகளை திரித்து வெளியிட்டு வந்தது நினைவிருக்கலாம். வி.புலிகள் சிவப்பு விளக்குப் பகுதியைத் தொடக்கி அதன் வாயிலாகவும் பணம் சேர்க்கிறார்கள் என்ற முழுப் பொய்யை இங்கு இயங்கும் McKenzie Institute  இயக்குநர் Thompson Mckenzie  யை மேற்கோள் காட்டி ஒரு அவதூறான பரப்புரையை முன்னர் அது செய்தது. அந்தப் பரப்புரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கனடிய தமிழர்களால் பெரிய ஆர்ப்பாட்டப் பேரணி கூட நடத்தப்பட்டது. அவ்வாறான ஒரு நாளேடு வி. புலிகள் தடைசெய்யப்பட்ட செய்தியை முந்திக் கொண்டு வெளியிட்டதில் வியப்பில்லை. உளவுத்துறையே அந்தச் செய்தியை National Post  நாளேட்டுக்கு முதலில் கசிய விட்டிருக்க வேண்டும்!

லிபரல் கட்சி ஆட்சியின் போது National Post  ஆசிரிய குழு அன்றைய துணைப் பிரதமரும் பொதுப் பாதுகாப்பு அமைச்சருமான Anne McLellan அவர்களை நேரில் கண்டு வி.புலிகளை பயங்கரவாத இயக்கப் பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்திக்  கேட்டிருந்தது! ஒரு தேசிய நாளேட்டின் ஆசிரிய குழு இவ்வாறான வேண்டுகோளோடு ஒரு அமைச்சரைச் சந்தித்துப் பேசியது இதுவே வரலாற்றில் முதல் தடவையாக இருக்க வேண்டும்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு 5 நாட்கள் இருக்க (சனவரி 18) இன்றைய வெளியுறவு அமைச்சர் பீட்டர் மக்கேயை  யேவழையெட National Post ஒரு உள்நோக்கோடு செவ்வி கண்டது. அப்போது “பழமைவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தால் வி.புலிகள் இயக்கம் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுமா?” என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பீட்டர் மக்கே “இந்தக் கேள்விக்கான குறுகிய பதில் ஆம்” (The short answer is yes”)  எனப் பதில் இறுத்தார்.  இந்த செவ்வி ரொறன்ரோ பெரும்பாகப் பகுதியில் போட்டியிட்ட பழமைவாதக் கட்சி வேட்பாளர்களை ஒரு இக்கட்டில் மாட்டியது. அவர்கள் பழமைவாதக் கட்சித் தலைமையோடு தொடர்பு கொண்டு மக்கே சொன்ன கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்க அழுத்தம் கொடுத்தார்கள். அதன் விளைவாக பழமைவாதக் கட்சி ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது.

அதில் பழமைவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தால் “நோர்வே ஸ்ரீலங்காவில் மேற்கொண்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கனடா இராசதந்திர மட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னுரிமை அளிக்கும். கனடிய நிதி உதவியை அதிகரிப்பதன் மூலம் பேச்ச வார்த்தை ஊடாக ஒரு அமைதியான தீர்வை எட்டுவதக்கான சூழ்நிலையை அதிகரிக்கும். பழமைவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீலங்காவிற்கான கனடிய மேம்பாடு மற்றும் மனதாபிமான நிதியுதவியை அதிகரிக்கும். அப்படியான உதவிகள் அரசு சார்பற்ற அமைப்புக்கள் மூலம் எல்லா மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுப்பதையும் உறுதி செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டது.

“The Conservative Party of Canada’s priority is to increase Canada’s  diplomatic participation in the Norway peace process in Sri Lanka,  backed  by increased Canadian assistance spending to further build the  conditions  for a negotiated peace in Sri Lanka ….  A Conservative government would increase Canada’s humanitarian and development assistance spending in Sri Lanka and would ensure that it   is  equitably distributed to people in need through non-governmental organizations”

இது வட்டுக் கோட்டைக்கு வழி என்னவென்று கேட்டவனுக்கு துட்டுக்கு எட்டுப் பாக்கு என்ற சொன்னவன் கதை மாதிரி இருந்தது.

உண்மை என்னவென்றால் தேர்தலுக்கு முன்னர் வி.புலிகள் தடைசெய்யப்படுவர் என்ற செய்தியை அமுக்கி வைக்குமாறு பழமைவாதக் கட்சியின் தலைமை மின்னஞ்சல் மூலம் தனது கட்சிக்காரர்களைக் கேட்டிருந்தது!

எனவே பழமைவாதக் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்ததில் எந்த வியப்பும் இல்லை. மனிதவுரிமை கண்காணிப்பு அமைப்பு (HRW) “வி.புலிகள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் இருந்து இறுதி யுத்தத்துக்கு வெருட்டிப் பணம் பறிக்கிறது” (Funding The Final War: LTTE Intimidation and Extortion in the Tamil Diaspora” எனப் பரபரப்பாப மகிடமிட்டு 45 பக்க அறிக்கையை வெளியிட்டது. அதனை இங்குள்ள ஊடகங்கள் பசித்த மாடு கம்பன் கொல்லையில் விழுந்த கதையாக ஆரவாரத்தோடு பெரிய செய்தியாக வெளியிட்டன. இதுவும் வி.புலிகளைத் தடைசெய்வதற்கு பழமைவாதக் கட்சி அரசுக்கு நல்ல சாட்டாகப் போய்விட்டது.

மனிதவுரிமை கண்காணிப்பு அமைப்பு இலங்கையில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்களை வெளிக் கொணர்வதற்குப் பதில் கனடாவில் உள்ள தமிழர்களை இலக்கு வைத்து அறிக்கை தயாரித்ததில் உள்நோக்கம் இருந்தது. இந்த அமைப்பு அமெரிக்காவில் இயங்கும் வலதுசாரி அறக்கட்டளைகள் கொடுக்கும் பணத்திலேயே ஏர் உழுகிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

கனடிய தமிழர் பேரவை ஒற்றுமை வாரம் (Solidarity Week)  என ஏன்தான் பெயர் சூட்டினார்களோ தெரியவில்லை. அப்படிப் பெயர் வைத்ததன் மூலம் கனடிய தமிழரிடையே  ஒற்றுமை இல்லை என்ற எதிர்மறைத் தோற்றத்தை உண்டாக்கி விட்டதாகப் பலர் நினைத்தார்கள். ஒற்றுமை வாரம் என்பதற்குப் பதில் எதிர்ப்பு வாரம் எனப் பெயர் இட்டிருக்கவேண்டும்.

உண்மை என்னவென்றால் தமிழீழ விடுதலைப்  போராட்டத்துக்கு எதிர்வினையான உணர்வு கனடிய் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை. மக்கள் காட்டும் ஆதரவு, வெளிப்படுத்தும்  உணர்வு, வேகம் அவ்வப்போது  கூடிக் குறையலாம். ஆனால் அமைப்பு அடிப்படையில் எதிர்ப்பு இல்லை என்பதே உண்மையாகும். இரண்டொரு புல்லுருவிகள் சில எதிர்ச் சக்திகளுக்குப் பின் மறைந்து நின்று கொண்டு முதுகில் குத்த முயற்சிக்கலாம். அதற்கு மேல் எதிர்ப்பாளர்கள்  எதையும் சாதிக்க முடியாது.

ஒற்றுமை வாரம் மக்கள் மத்தியில் ஒரு புதிய எழுச்சியை உருவாக்க உதவியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சமூகத்தின் ஈட்டி முனைகளாக விளங்குபவர்கள் மாணவர்கள். அவர்கள் நினைத்ததைச் சாதிக்கக் கூடியவர்கள். அலிகார் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த  இக்பால் என்ற மாணவன் கண்ட கனவுதான் இன்று பாகிஸ்தான் என்ற சுதந்திர நாடாகப் புவியியல் படத்தில் இடம் பிடித்துள்ளது.

மெல் லாஸ்ட்மென் சதுக்கத்தில் மே 9 ஆம் நாள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் போது நூற்றுக் கணக்கான மாணவர்கள் கருப்பு உடை அணிந்து கருப்புக் கொடியோடு கலந்து கொண்டார்கள்.  ‘தன்னாட்சி உரிமை எங்களது அடிப்படை உரிமை! அதனை யாரும் தடுக்க முடியாது!’ என ஒரே குரலில் அவர்கள் முழக்கம் இட்டார்கள்.

‘நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்! நாங்கள் இரண்டாம்தரக் குடிமக்கள் அல்ல! அப்படி நடத்தப்படுவதை அனுமதியோம்!” எனவும் துணிச்சலோடு முழக்கம் இ;ட்டார்கள்.

ஸ்காபரோ பொதுமக்கள் அரங்கில் ஊடகவியலாளர் மாநாடும் கண்காட்சியும் மிகவும் சிறப்பாக நடந்தது. அரங்கு நிறைய மக்கள் குழுமியிருந்தார்கள்.

கனடிய அரசு இயற்றி நடைமுறைப்படுத்துகிற பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் ஒரு பயங்கரமான சட்டம் என்பதில் அய்யமில்லை. இந்தச் சட்டம் இந்த நாட்டுக் குடிமக்களது அடிப்படை மனிதவுரிமைகளுக்கு ஆப்பு வைக்கிறது.

ஒரு நடன அரங்கேற்றத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்ட கல்லூரி அரங்குக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுத்துள்ளது. அதற்குச் சொல்லப்பட்ட காரணம் அதனை ஒழுங்கு செய்த தமிழர் புனர்வாழ்வுக் கழகச் செயலாளர் ஒரு ‘கிறிமினல் குற்றவாளி’ எனக் காவல் துறை அய்யப்பட்டதாம்! இந்தச் சட்டத்தை எப்படி காவல்துறை நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதற்கு இந்த நிகழ்வை ஒரு வெள்ளோட்டமாக எடுத்துக் கொளளலாம்.

வி.புலிகள் இயக்கம் என்ற ஒரு அமைப்பு கனடாவில் இல்லை. உறுப்பினர்களும் இல்லை.   ஆனால் வி.புலிகளை பயங்கரவாத இயக்கப் பட்டியலில் சேர்த்துக் கொண்டது கனடிய தமிழர்கள் எல்லோரையும் “கிறிமினல் குற்றவாளிகள்” எனக்  காவல்துறை அய்யத்தோடு பார்க்க வழி வகுத்துள்ளது. இன்றுள்ள நிலைமை இதுதான்.

அமெரிக்காவில் வி.புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தடை வி.புலிகளது ஆயுதக் கொள்வனவுக்கு நிதி சேகரிப்பதற்கு எதிரான தடை மட்டுமே. அது நீங்கலாக வி.புலிகளது மருத்துவம், கல்வி  போன்ற மனிதாபிமானப் பணிகளுக்கு நிதி சேகரிப்பது தடைசெய்யப்படவில்லை. அரசியல் செயல்பாடுகளும் தடை செய்யப்படவில்லை. இது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அமெரிக்க  நீதி மன்றம் எவற்றைச் சட்டப்படி செய்யலாம் எவற்றைச் சட்டப்படி செய்யப்கூடாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பேச்சு, எழுத்து மற்றும் (கூட்டம்) கூடுதல் போன்ற சுதந்திரங்கள் யாப்பில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் கனடாவில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான பட்டயம் (Canadian Charter of Rights and Freedoms) எந்தளவுக்கு இவ்வாறான சுதந்திரங்களைப் பாதுகாக்கிறது என்பது தெரியவில்லை. அது வெறும் ஏட்டுச் சுரக்காயா இல்லையா என்பதை இன்னும் யாரும் நீதிமன்றத்தைக் கொண்டு உரைத்துப் பார்க்கவில்லை!

உலகத் தமிழர் இயக்கம் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக பயனுள்ள  ‘அறிவுரை வழங்கும் ஆவணம்’ ஒன்றை வெளியிட்டுள்ளது. வழக்கறிஞர்களது ஆலோசனையின் அடிப்படையில் தயாரித்துள்ள இந்த அறிவுரையை எல்லோரும் கவனமாகப் படித்து அதன்படி நடக்க வேண்டும். இது மிகவும் அவசியம்.

கனடா மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாடு. பயங்கரவாதத்துக்கு எதிரான கருப்புச் சட்டங்கள் சட்டப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தாலும் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற கோட்பாடு மெச்சத் தகுந்த முறையில் நடைமுறையில் இருக்கிறது. ஒரு காவல்காரர் அல்லது தொழில் கொடுப்பவர் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரைப் பாகுபடுத்திப் பார்க்கலாம். ஆனால் நாட்டின் சட்டம் எல்லாக் குடிமக்களையும் ஒத்த உரிமை ஒத்த நிறை ஒத்த விலை உடையவர்களாகவே பார்க்கிறது. முதல் தர இரண்டாம்தர குடிமக்கள் என்ற பாகுபாடு கனடாவில் இல்லை.

தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் கனடிய சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து ஒழுக வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. அதே சமயம் அநீதியான சட்டங்களுக்கு தலைவணங்க வேண்டும் என்ற நியதியும் இல்லை. அநீதிகளுக்கு அமைதி வழியில் எதிர்ப்புத் தெரிவிக்க அவர்கள் முன் வரவேண்டும். அது அவர்களது அடிப்படை  சனநாயக உரிமை ஆகும்.

கனடாவில் வி.புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதற்கு இங்குள்ள கனடிய தமிழர்களின் பரப்புரைப் பற்றாக் குறை காரணம் எனப் பேராசிரியர் சிவத்தம்பி போன்றோர் நினைக்கிறார்கள். அவர்களது ஆதங்கம் எங்களுககு விளங்குகிறது. ஆனால் அவர்கள் நினைப்பது போல் நினைப்பது போன்ற நிலைமை இங்கில்லை.

உண்மை என்னவென்றால் கனடிய ஆட்சி அதிகாரத்தை ஒரு வலதுசாரி அரசியல் கட்சி கைப்பற்றியுள்ளது. அதைத் தடுக்கும் ஆற்றல் தமிழ்க் கனடிய மக்களது கையில் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பழமைவாதக் கட்சி வேட்பாளர்கள் (ஒரு தமிழர் உட்பட) தமிழர்கள் செறிந்து வாழும் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. எல்லோரும் தோற்றுப் போய்விட்டார்கள்.

நாடாளுமன்றத்துக்கு ஒரு தொகுதியிலேனும் ஒரு வேட்பாளரை வெற்றி அடைய வைக்கும்  வாக்குப் பலம் கனடிய தமிழர்களிடம் இப்போது இல்லை. போட்டி மிகக் கடுமையாக இருந்தால் மட்டுமே கனடியத் தமிழர்களது வாக்குப் பலம் இரண்டொரு தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிச்சயிக்க உதவும்.

மேலும் டுழடிடிலளைவள உதவியை நாடியிருந்தால் இந்தத் தடையைத் தவிர்த்திருக்கலாம் எனச் சிலர் நினைக்கிறார்கள். டுழடிடிலளைவள வைத்துக் கொள்வதற்கு ஆகிற பெருந்தொகைச் செலவுக்கு வேண்டிய பண பலம் தமிழர்களிடம் இல்லை. Canada National Post  நாளேட்டுக்கு எதிராகத் தொடுத்த வழக்கு நிதி பற்றாக் குறைகாரணமாக கைவிடப்பட்டது நினைவு கூரத்தக்கது.

உலக அரசியலில் கனடா செலுத்தும் செல்வாக்கு மிகக் குறைவு. இதனை கனடிய  வெளியுறவு அதிகாரிகளோடு பேசிப் பார்த்தால் தெரியும். அவர்களே எங்களோடு மெனக்கெடாமல் அமெரிக்காவைக் “காக்காய்” பிடிக்குமாறு அறிவுரை சொல்கிறார்கள்.

கனடா விதித்துள்ள தடையால் பாதிப்பு இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் விதித்த தடைகளின் தாக்கத்தைவிட கனடிய அரசு விதித்துள்ள தடை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை.

ஹாமாஸ் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. கனடா தடை செய்துள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் மீறித்தான் ஹாமாஸ் .இயக்கம்  ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.  ஆட்சியை ஹாமாஸ் கைப்பற்றியதை செரிக்க முடியாத அமெரிக்கா, கனடா, அய்ரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் பாலஸ்தீனிய அரசுக்குக் கொடுத்து வரும் நிதிக் கொடுப்பனவை நிறுத்திவிட்டன. இந்த அழுத்தங்களுக்கு அசைந்து கொடுக்காமல் ஹாமாஸ் இயக்கம் ஆட்சி நடத்தி வருகிறது. இது எங்களுக்கு ஒரு படிப்பினையாகும்.

ஒற்றுமை வாரம் ஒரு வாரத்தோடு முடிவடைந்துவிடக் கூடாது. பழமைவாத அரசுக்கு எதிரான போராட்டத்தை நாம் படிப்படியாக முன்னெடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

ஒரு விதத்தல் வி.புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை எதிர்மாறான நன்மையைச்  செய்துள்ளது. தூங்கிக் கிடந்த புலிகளை (மக்களை)  தட்டி எழுப்பி விட்டிருக்கிறார்கள்! அதற்காக பழமைவாத அரசுக்கு நாம் நன்றி சொன்னாலும் பருவாயில்லை! (உலகத்தமிழர் – 19-05-2006)


மீண்டும் தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி!

வெற்றி பெற்றவரை எல்லோரும் சொந்தம் கொண்டாடுவார்கள். தோல்வி பெற்றவர் ஏதிலி ஆகிவிடுவார். அவரை யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள். உலக நியதி இதுவாகும்.

இதற்கு அமைய திமுக வின்; அறிவாலயம் கல கலப்போடு தொண்டர்களினால் நிரம்பி வழிய அதிமுக தலைமையகம் வெறிச்சோடிக் கிடந்தது. போயஸ் தோட்டத்துக்கும் அந்தக் கெதிதான். நடந்து முடிந்த தேர்தலில் –

திமுக கூட்டணி 163 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக                         – 96
காங்கிரஸ்                – 34
பாமக                        – 18
கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)    –  9
இந்திய கம்யூனிஸ்ட்                –  6

அதிமுக கூட்டணி  69 தொகுதிகளில் வெற்றி ஈட்டியுள்ளது.

அதிமுக                                    –   60
மதிமுக                                     –       6
விடுதலைச் சிறுத்தைகள்   –       2
அய்என்ரியூசி                       –        1

தேர்தலுக்கு முன்பும் தேர்தல் நாளன்றும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் திமுக தலைமையிலான சனநாயக முற்போக்கு அணியே பெருவெற்றி பெறும் எனக் கூறின. முடிவுகள் கிட்டத்தட்ட கருத்துக்கணிப்புக்களை ஒத்து இருக்கின்றன.

தோல்வியை முன்கூட்டியே மணந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாக்குப்பதிவு நடந்த அன்றே சிறுதாவூர் பங்களாவுக்குத்  தனது உயிர்த் தோழி சசிகலா சகிதம் ஓய்வெடுக்கச் சென்று விட்டார்.

தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற திமுக கட்சியின் தலைவர் என்ற முறையில் கலைஞர் மு.கருணாநிதி 5 ஆவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக நாளை முடி சூட்டிக் கொள்கிறார்.
1957 ஆண்டு தொடக்கம் நடந்த 11 சட்டசபைத்  தேர்தல்களிலும் கருணாநிதி தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அறுதிப் பெரும்பான்மை (118) இல்லாத திமுக கட்சிக்கு பாமக வும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியும் வெளிpயல் இருந்து ஆதரவு தெரிவிக்கும் என அறிவித்துள்ளன. ஆனால் இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்கும் எனத் தெரிகிறது. அது சரியென்றால் 1952 ஆம் ஆண்டு இராசாசி தலைமையில் பதவியேற்ற கூட்டணி ஆட்சிக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது.

1967 ஆம் ஆண்டு தொடக்கம் திமுக வும் அதிமுக வும் மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகின்றன. இதற்கு விதிவிலக்கு எம்ஜிஆர் ஆட்சிக் காலம். 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமோக  வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் மீண்டும் 1980, 1984 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அடுத்தடுத்து வெற்றி ஈட்டினார். இறக்கும் வரை (1987 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 24) அவரை யாராலும் அசைக்க முடியவில்லை!

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 44.58 விழுக்காடு வாக்குகளும் அதிமுக கூட்டணிக்கு 39.83 விழுக்காடு வாக்குகளும் விழுந்துள்ளன. இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு வெறுமனே 4.75 விழுக்காடாகும். மூன்று தொகுதிகளில் பெரும்பான்மை வாக்குகள் 100 கும் குறைவாக இருந்துள்ளது.

இந்தத் தேர்தலில் பணம் தண்ணீராக இரண்டு அணிகளாலும் இறைக்கப்பட்டது. திமுக வை விட ஆளும் கட்சி என்ற முறையில் அதிமுக பணத்தை பணம் என்று பாராமல் அள்ளி வீசியது. ஒவ்வொரு தொகுதியிலும் 2 கோடி உரூபா செலவழிக்கப்பட்டதாக செய்திகள் கூறின.

இந்தத் தேர்தலில் அதிமுக ஏன் தோற்றது? தோல்விக்கு யார் காரணம்?

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஜெயலலிதா  “திமுகவும் கருணாநிதியும் என் பரம்பர எதிரிகள்! திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இதுதான்”என்று சூளுரைத்தார். அன்றே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
“அம்மையார் சொல்வது சரி! சரித்திர ஆசிரியர்களும் அப்படித்தான் எழுதி வைத்துள்ளார்கள்” என கருணாநிதி பதில் இறுத்தார்!

“திமுகவும் கருணாநிதியும் என் அரசியல் எதிரிகள்” என்று சொல்வது வேறு “திமுகவும் கருணாநிதியும் என் பரம்பரை எதிரிகள்” என்று ஜெயலலிதா சொல்வது வேறு.

ஜெயலலிதாவுக்கு அரசியல் பரம்பரை என்று ஒன்றும் இல்லை. அரசியலில் அ ஆ கூடத்தெரியாத அவரை எண்பதுகளில் எம்ஜிஆர் தான் அரசியலுக்கு இழுத்து வந்தார்.  எனவே அவர் பரம்பரை எதிரி என்று குறிப்பிடும்போது திராவிடப் பரம்பரையைத்தான் சூறிப்பிடுகிறார் என்பது வெள்ளிடமலை.

அகங்காரம்
ஆணவம்
ஆடம்பரம்
தலைக்கனம்
வாய்க் கொழுப்பு
நான் நான் என்ற மமதை
மற்றவர்களை எடுத்தெறிந்து பேசும் திமிர்ப் போக்கு
சோதிடம்
மூட நம்பிக்கை
மூடபக்தி

ஆகியவற்றின் மொத்த உருவம்தான் ஜெயலலிதா!

எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா தமிழீழத் தேசியத்தின் பரம்பரை எதிரியாவார்!

அதற்கான சான்றுகளை அடுத்கடுக்கா எடுத்துக் காட்ட முடியும்.

தமிழீழத் தேசியத் தலைவரை இந்திய இராணுவத்தை அனுப்பிப் பிடித்து வர வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா!

வி.புலிகளுக்கும் – ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தையை சென்னையில் நடத்துவதற்கு அனுமதி அளிக்குமாறு வி.புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். தகுந்த மருத்துவ உதவி பெறவும் வன்னிக் காட்டில் இருக்கும் தலைவர் பிரபாகரனோடு நேரடித் தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கும் என்பவற்றைக் காரணம் காட்டி  அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் வி.புலிகளின் நடமாட்டத்தை தமிழ்நாட்டில் ஒழித்துவிட்டதாக மார்தட்டிய ஜெயலலிதா அந்த யோசனையை உடனடியாக நிராகரித்து அறிக்கை விட்டதோடு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் வி.புலிகளை அனுமதிக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

அத்தோடு அமையாமல் ஆளுநர் உரையிலும் அதனைப் பெரிய விடயமாக எடுத்து ஜெயலலிதா குறிப்பிட்டார்.
தமிழீழத் தமிழர்களை இலங்கைத் தமிழர்கள் என்றுதான் குறிப்பிடுவேன் என்று திமிரோடு பேசுகிறார்.

தமிழினத்தின் பண்பாட்டுச் சின்னமான கண்ணகி சிலையை இரவோடு இரவாகப் பெயர்த்துக் கொண்டு போய் பண்டகசாலை ஒன்றில்  அனாதரவாகப் போட்டவர் ஜெயலலிதா. இந்தச் சிலை அண்ணா முதலமைச்சராக இருந்த போது நிறுவப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

தமிழ்க் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போது அவர்களுக்கு ஜெயலட்சுமி, ஜெயப்பிரபா, ஜெயலலிதா போன்ற வடமொழிப் பெயர்களையே ஜெயலலிதா வைக்கிறார். இது அவரது தமிழ்மொழி வெறுப்பையும் வடமொழிப் பற்றையும் காட்டுகிறது.

சென்ற கிழமை கூட சென்னையில் தென்தமிழீழத் தமிழர்கள் சிங்களப் படையினரால் குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன், தந்தை பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மார்க்சீய பெரியாரிய பொவுடமைக் கட்சித் தலைவர் ஆனைமுத்து, தமிழத் தேசப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணியரசன், தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தியாகு உட்பட 500 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

எல்லை கடந்த பயங்கரவாதத்தைத் தடுக்க உருவாக்கப்பட்ட பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி பழ. நெடுமாறன், சுப வீரபாண்டியன், நக்கீரன் கோபால்  போன்ற தமிழ் உணர்வாளர்களை 19 மாதங்களுக்கு மேலாகச் சிறைக் கொட்டிலில் அடைத்து சித்திரவதை செய்தவர் ஜெயலலிதா. அதனை வைகோ மறந்தாலும் மற்றவர்கள் மறக்க மாட்டார்கள்.

குறைந்த பட்ச பண்பாடின்றி கலைஞர் போன்ற மூத்த அரசியல்வாதிகளை சட்டசபையிலேயே ஒருமையில் அழைத்துத் திட்டுவது ஜெயலலிதாவின் சின்னத்தனத்துக் எடுத்துக்காட்டாகும். அதிமுக வின் தேர்தல் அறிக்கை நாலாந்தர நடையில் எழுதப்பட்டிருந்தது.

கொடுங்கோலன் கருணாநிதி

கருநாகப் பாம்பு

கருணாநிதியின் சதிகாரக் கும்பல்
கபட வேடதாரி கருணாநிதி
குள்ள நரிக் கூட்டங்களின்

இவை அதிமுக தேர்தல் அறிக்கையில் காணப்பட்ட மணிமொழிகளாகும்!

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய பண்புகளைச் சொல்லிக் கொடுத்த அறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் அவரது படத்தை கட்சிக் கொடியிலும் கொண்டுள்ள ஒரு கட்சியின்  பொதுச்செயலாளர் இவ்வாறெல்லாம் ஒரு மூத்த தலைவரை அருச்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தனக்குப் பிடிக்காதவர்கள் மீது காவல்துறையை ஏவி கஞ்சா வழக்குப் போட்டுச் சிறையில் அடைப்பது ஜெயலலிதாவுக்கு கைவந்த நுண்கலை.

ஜெயலலிதா தலைமை தாங்கும் அதிமுகவில் உட்கட்சி சனநாயகம் என்பது மருந்துக்கும் இல்லை.  அதிமுக அமைச்சர்கள் அடிமைகள் போல் ஜெயலலிதாவினால் நடத்தப்பட்டார்கள்.
அதிமுக அமைச்சரவை ஆறுமுறை மாற்றி அமைக்கப்பட்டது.

அதிமுக அமைச்சர்கள் செய்தித்தாள்களுக்கு நேர்காணல் வழங்க அனுமதி இல்லை.

பரப்புரைக்குச் செல்லும் ஜெயலலிதாவை வரவேற்க அதிமுக அமைச்சர்கள் தெருவோரங்களில் கும்பிட்ட கையோடு குரங்குகள் போல்  குந்தி இருக்க வைத்து கேவலப்படுத்தப்பட்டார்கள்.

“அதிமுக அரசில் நான் அமைச்சராக இருக்கவில்லை அடிமையாகவே இருந்தேன்” என நேற்றுவரை அமைச்சராக இருந்த இன்பத்தமிழன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்பத்தமிழன் மட்டுமல்ல சேடப்பட்டி முத்தையா போன்ற அதிமுக முன்னாள் பிரபல்யங்களும் இப்படிச் சொல்லித்தான் புலம்பினார்கள்.

ஜெயலிதாவின் அரசியல் பழிவாங்கலுக்கு பத்தாயிரம் சாலைப் பணியானார்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களில் 73 பணியாளர்கள் பசிக் கொடுமை தாங்காது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்கள்.
ஒரேநாளில் இரண்டு இலட்சம் அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்த ‘பெருமை’ சீமாட்டி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு!

இந்தத் தேர்தலில் கட்சித் தாவல்களுக்கும் அணி மாறலுக்கும் பஞ்சமே இல்லை. பொழுது போக்கு அம்சங்களும் நிறையவுண்டு!

இந்தத் தேர்தலில் மதிமுக சட்டசபையில் முதல் முறையாகக் கணக்குத் திறந்துள்ளது. போட்டியிட்ட 35 தொகுதிகளில் 6 தொகுதிகளில் மட்டும் அது வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் முதலில் மதிமுக பொதுச் செயலாளர்  “அண்ணன் கருணாநிதிதான் அடுத்த முதல்வர்” என்று பேசிவிட்டு அடுத்த நாள் “புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சி தொடரும்” என்று அவர் தட்டை மாற்றிப் பேசியதை வாக்காளர்கள் இரசிக்கவில்லை. தேர்தல் முடிவுகள் அதையே காட்டுகின்றன.

அது மட்டுமல்ல காடேறி, சூழ்ச்சிக்காரி, சூனியக்காரி, சதிகாரி, பாசிஸ்ட் என்று ஜெயலலிதாவை அருச்சித்துவிட்டு பின்னர் அவரை புரட்சித் தலைவி என்று பேசியதையும் வாக்காளர்கள் இரசிக்கவில்லை.

வி.சிறுத்தைகள் இம்முறை 9 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்ற (2001) தேர்தலில் ஒரேயொரு தொகுதியில் மட்டும் வென்றிருந்தது.

இந்தத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக) என்ற பெயரோடு களம் இறங்கிய நடிகர் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். விருத்தாசலம் தொகுதி பாமக வின் கோட்டை என நம்பப்பட்ட தொகுதி ஆகும். முப்பது விழுக்காடு வன்னிய வாக்காளர்கள் இருக்கிறார்கள். இருந்தும் பாமக அந்தத் தொகுதியில் தோற்றுள்ளது.
மொத்தம் 232 தொகுதிகளில் போட்டியிட்ட மேமுதிக 231 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இருந்தும் நாடு தழுவிய அளவில் 8.33 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஓரளவு பலமான கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்தத் தேர்தலில் திரைப்பட நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் கோலோச்சியது. அதிமுக பல நடிகர் நடிகைகளை மேடையேற்றி எதிர்க்கட்சிகளைத் திட்ட வைத்தது. வட இந்திய நடிகையான சிம்றனும் மேடையேறி மழலைத் தமிழில் பேசி அதிமுக வுக்கு வாக்குக் கேட்டார்.

திரையுலகில் வாய்ப்பை இழந்து விட்ட இந்த நடிகர் நடிகைகள் அதிமுகவுக்கு  வாக்குச் சேகரித்தார்களோ இல்லையோ நல்ல நகைச்சுவை விருந்து மட்டும் அளித்தார்கள்.

சிரிப்பு நடிகர் செந்தில் தன்னோடு ஒண்டிக்கொண்டு மோத கருணாநிதி தயாரா என்று கேட்டார். தமிழைச் செம்மொழி ஆக்கி விட்டோம் என்று கருணாநிதி சொல்கிறார்  அப்படியென்றால் கன்னட மொழி பச்சை நிறமா? தெலுங்கு மஞ்சள் நிறமா? என்று மேடையில் செந்தில் கேட்டார். செம்மொழி என்றால் சிவப்பு மொழி என்று பொருள் கொண்டதன் அனர்த்தம் இது!

“நான் செத்தால் எனது உடல் திமுக கொடியால் போர்க்கப்பட வேண்டும்” என்று வீரம் பேசிய நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவோடு அம்மாவிடம் தஞ்சம் அடைந்த பின்னர் ‘கருணாநிதிக்கு அரசியல் nதியாது, ஸ்டாலினுக்குப் பேசத் தெரியாது’ என்று பேசியது நல்ல நகைச்சுவையாக இருந்தது.

திமுக அணியின் கதாநாயகன் கலைஞர் கருணாநிதிதான் என்பது வெள்ளிடமலை. அவர் நீண்ட காலம் சிந்தித்துத் தயாரித்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட இரண்டு உருபாய்க்கு ஒரு கிலோ அரிசி, நிலமில்லாத ஏழைகளுக்கு 2 ஏக்கர் தரிசு நிலம், தொலைக்காட்சி இல்லாத தாய்மார்களுக்கு வருண தொலைக்காட்சி இலவசம் போன்ற வாக்குறுதிகள் அடித்தட்ட மக்களது மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

“நான் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ அரிசி இலவசம்” என்று ஏட்டிக்குப் போட்டியாக ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதி மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

இந்தத் தேர்தலின் வெற்றிக்கு மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம் மற்றும் தயாநிதி மாறன் இருவரது பரப்புரை கைகொடுத்துள்ளது. குறிப்பாக தயாநிதி மாறன் எல்லோராலும் பேசப்படும் துடிப்புள்ள அரசியல்வாதியாக இந்தத் தேர்தல் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அவர் மீதும் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான சன் தொலைக்காட்சி மீதும் அள்ளி வீசப்பட்ட சேறு ஒட்டவில்லை. ஒரு மார்வாடி அல்லது தெலுங்கன் அல்லது கன்னடன் கையில் இல்லாது ஒரு தமிழன் கையில் சன் தொலைக்காட்சி இருப்பதை தமிழ்மக்கள் வரவேற்கவே செய்தார்கள்.

‘எனது ஆட்சி நல்லாட்சியாக அமையும்’ என முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவரது ஆட்சி நல்லாட்சியாக மட்டும் அமைந்தால் போதாது. தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தும் அதனை முன்னெடுக்கும் தமிழனின் ஆட்சியாகவும் அது அமைய வேண்டும். இதையே உலகளாவிய தமிழ்மக்கள் அவரிடம் இருந்து ஆவலோடும் நம்பிக்கையோடும் எதிர்பார்க்கிறார்கள்.  (உலகத்தமிழர் – மே 12, 2006)


 ஆப்கனிஸ்தானில் கனடா மாட்டுப்படலாம்!

காந்தாரம் என்ற நாட்டைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய ஆப்கனிஸ்தான் தான் அன்றைய காந்தாரம்!

ஒரு காலத்தில் இந்தியாவில் 56 தேசங்கள் இருந்ததாகச் சொல்வார்கள். அதில் ஒன்றுதான் காந்தாரம்.

கடந்த ஏப்ரில் 22 ஆம் நாள் கந்தகாரில் இருந்து 75 கிமீ அப்பால் உள்ள புரஅடியன என்ற பகுதியல் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 கனடிய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். மேலும் சிலர் காயப்பட்டார்கள்.

ஒரே நாளில் 4 வீரர்களை இழந்தது கனடிய அரசியல் – இராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது. காரணம் கொரியாப் போருக்குப் பின்னர் கனடிய படைக்கு ஒரே நாளில் ஏற்பட்ட பாரிய இழப்பு இதுவாகும்.

2002 ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனிஸ்தான் போரில் ஒரு இராசதந்திரி (Glyn Berry) உட்பட 16 கனடியர்இறந்துள்ளார்கள். இதில் பாதி இந்த ஆண்டு ஏற்பட்டதாகும்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் கனடா ஓசைப்படாமல் ஆப்கனிஸ்தானில் உள்ள தனது படைபலத்தை 2,300 என்ற எண்ணிக்கைக்கு உயர்த்தியது. தலிபான் கிளர்ச்சிக்கு எதிராக பன்னாட்டு படைகளின் பலத்தை கூட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் இராக்கில் மாட்டுப்பட்டுப் போயிருக்கும் அமெரிக்கா ஆப்கனிஸ்தானில் உள்ள தனது படையின் ஒரு பகுதியை அங்கிருந்து திருப்பி அழைக்கிறது. அந்த இடைவெளியை நிரப்பவே கனடிய படை பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

யார் எதைச் சொன்னாலும் அமெரிக்காவும் கனடாவும் ‘தோழமை’ நாடுகள் ஆகும். சென்னைத் தமிழில் சொன்னால் ‘தோஸ்து’ நாடுகள் ஆகும்.  இவற்றுக்கிடையே இருக்கும் பிணைப்பை மாமன் – மச்சான் உறவு என்று சொல்வதைவிட  மாமன் – மருமகன் உறவு என்று வருணிக்கலாம்.

அமெரிக்க – கனடா நாடுகளின் உறவு மிகவும் இறுக்கமானது. சில சமயங்களில் வ;வேறு நிலைப்பாட்டினை எடுத்தாலும் தங்களுக்குள் வாதிட்டுக் கொண்டாலும் அவ்வப்போது பிடுங்குப்பட்டாலும் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையில் தனித்துவமான உறவு (Social relaionship)  நிலவுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு நாடுகளுமே ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்ட அங்கிலோ- சக்சன் (Anglo – Saxon) மக்களது குடியேற்ற நாடுகளாகும்.

அமெரிக்கா மீது நடந்தப்பட்ட 9/11 தாக்குதலின் போது இராணுவ அடிப்படையில் அமெரிக்காவின் உதவிக்குப் போன முதல் நாடு கனடா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் கனடிய விமானநிலையங்களுக்குத் திசை திருப்பி விடப்பட்டன.

அதே போல் கற்றினா சூறாவளி அமெரிக்காவின் வளைகுடாப் பகுதியைத் தாக்கியபோது ( ஓகஸ்த்து 29,2005) இரண்டு நாள் கழித்து வன்கூவர் இல் இருந்து 3 கப்பல்களில் (HMCS Athabaskan, HMCS Toronto, NSMC Ville de Quebec, and CCGC William Alexander )  நிவாரணப் பொருட்களை அங்கு அனுப்பி வைத்த நாடு கனடாவாகும்.

இந்த அடிப்படையில்தான் அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் கனடா அமெரிக்காவிற்கு கை கொடுத்து வருகிறது.

இந்த உறவுதான் கனடிய படையின் பலத்தை ஆப்கனிஸ்தானில் அதிகரிக்கச் செய்ததற்கான அடிப்படைக் காரணமாகும்.

அப்படி என்றால் இராக் மீதான அமெரிக்கத் தாக்குதலில் கனடா பங்குபற்றாது இருந்துவிட்டது ஏன் என்ற கேள்வி எழலாம். அப்போது பிரதமராக இருந்தவர் யேன் கிறட்சியன் ஆவார். கனடிய லிபரல் கட்சித் தலைவர் ஆன இவர் கியூபெக் மாகாணத்தைச் சார்ந்தவர்.  ஒரு பிரஞ்சுக்காரர் என்ற முறையில் அவருக்கு அமெரிக்கா மீது பெரிய வாரப்பாடு இருக்கவில்லை. எனவே அவர் கனடிய படையை இராக்குக்கு அனுப்பாமல் இருந்து விட்டார்.

இன்று அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பழமைவாதக் கட்சிப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் நிச்சயம் அமெரிக்காவோடு கைகோர்த்துக் கொள்வார்!  அமெரிக்கா இராக் மீது படையெடுத்தபோது அதற்கு ஆதரவான கருத்தைக் கார்ப்பர் தெரிவித்ததோடு அமையாமல் கனடாவும் அதில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். ஆனால் சென்ற தேர்தலின் போது அந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே ஆப்கனிஸ்தான் வெளிநாட்டுப் படையெடுப்புக்கு  உள்ளாகி வந்துள்ளது. முதலில் பாரசீக மன்னன் முதலாவது டேறியஸ் (கிமு 500) ஆப்பாகனிஸ்தான் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். பின்னர் மகா அலெக்சாந்தர் (கிமு 329 – 327) அதன் மீது படையெடுத்து கைப்பற்றினான். அலெக்சாந்தருக்குப் பின்னர் ஆப்கனிஸ்தான் செலோசிட் (ளுநடநரஉனை) பேரரசின் ஒரு பகுதியாக இருந்து வந்தது.

வட ஆப்பனிஸ்தான் மவுரிய வம்சத்தினரால் (கிமு 2 ஆம் நூற்றாண்டு) பிடிக்கப்பட்டது. குஷான் வம்சத்தினரின் ஆட்சியின் போது பவுத்தம் அங்கு பரவியது. அப்போது பெஷாவார் அதன் தலைநகராக இருந்தது. குஷானியரின் ஆளுகை தேய்ந்து கிபி 3 ஆம் நூற்றாண்டளவில் ஆப்கனிஸ்தான் துருக்கியரின் ஆட்சிக்கு வசப்பட்டது.

கிபி 7 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் படையெடுப்புத் தொடங்கியது. முஸ்லிம் அரசர்களில் கஜினி மொகமது பெயர் போனவன்.  அவன் இரான் தொடங்கி – பஞ்சாப் வரை தனது ஆளுகையை (11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)  நிறுவினான்.

அவனைத் தொடர்ந்து ஜென்கிஸ்கான் (துநபொணை முhயn – கிபி 1220) திமூர் (14 ஆம் நூற்றாண்டின் இறுதியில்) ஆப்கனிஸ்தானைக் கைப்பற்றி ஆண்டார்கள். திமூரின் சந்ததியில் வந்த பாபர் காபுலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.

இவனே வட இந்தியாவைக் கைப்பற்றி அங்கு மொகலாயர்களது ஆட்சியை 16 ஆம் நூற்றாண்டில் நிறுவியவன் ஆவான்.

பாபருக்குப் பின்னர் நதீர் ஷா என்ற பாரசீக அரசன் ஆப்கனிஸ்தானைக் கைப்பற்றி ஆண்டான். அவனது இறப்புக்குப் பின்னர் (1747) அகமது ஷா ஆப்கனிஸ்தானை ஆண்டான். இவன் ஆப்கான் குழுத் தலைவனாவன். அவனது பரம்பரை துரானி என அழைக்கப்படுகிறது. அவன் ஆண்ட பகுதி கிட்டத்தட்ட இன்றைய ஆப்கனிஸ்தான் பகுதியாகும். துரானியின் ஆட்சி 1818 இல் முடிவுக்கு வந்தது. 1826 இல் முகமது (  Muhammad) அமீர் என்ற பட்டத்தோடு ஆட்சிக்கு வந்தான். இந்தியாவின் வடபகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எத்தனித்த பிரித்தானியர் முகமதுவை கவிழ்த்து விட்டு தங்களுக்கு ஆதரவான ஒரு அமீரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினர். இதனைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் (1833-42) ஆப்கனிஸ்தானிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையில்  யுத்தம் நடைபெற்றது. முகமது மீண்டும் ஆட்சிக்கு வந்தான். பிரித்தானியாவோடு அவன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டான். இவன் கிபி 1863 இல் இறந்துபட்டான். பின்னர் அவனது மகன் சேர் அலி பதவிக்கு வந்தான்.

மீண்டும் இரண்டாவது ஆப்கான் யுத்தம் (1878) இடம் பெற்றது. அமுனுல்லா என்ற அரசன் இந்தியா மீது படையெடுக்க எத்தனித்த போது மூன்றாவது ஆப்கான் போர் மூண்டது. இராவல்பிண்டி ஒப்பந்தத்தின் மூலம் அந்தப் போர் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் வெளியுறவில் ஆப்கானிஸ்தானுக்கு சுதந்திரம் வளங்கியது. பிரித்தானியாவின் அழுத்தத்தையும் மீறி இரண்டாவது உலகப் போரின் போது ஆப்கானிஸ்தான் நடுநிலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இடத்தில் இன்றைய ஆப்கனிஸ்தான் பற்றி ஒரு பருந்துப் பார்வை பார்ப்பது நல்லதென்று நினைக்கிறேன்.

ஆப்கனிஸ்தான் மேற்கில் இரான், கிழக்கில் பாகிஸ்தான் மற்றும் துருக்மினிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வடக்கில்  தாஜிஸ்கான், வடகிழக்கே சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே இருக்கிறது. அதன் தலைநகரம் காபுல் ஆகும்.

பரப்பளவு – 647,500 சதுர கிமீ ( மனித்தோபா மாநிலத்தின் பரப்பளவு)

மக்கள் தொகை – 28,513,000 (2004)

இனக் குழுக்கள்  – பஸ்தூன் 42 விழுக்காடு, தாஜிக் 27 விழுக்காடு, உஸ்பெக் 9 விழுக்காடு மற்றவர்கள் 13 விழுக்காடு

ஆட்சித் தலைவர் – ஹாமித் ஹர்சாய் ( Hamid Harzai)

வேலையின்மை  – 78 விழுக்காடு

மொத்த உள்ளுர் உற்பத்தி (GDP) – 20 பில்லியன் அ. டொலர்கள் (மதிப்பீடு)

கனடாவிற்கு ஏற்றுமதி  – 518,889 அ.டொலர்கள்

கனாவில் இருந்து இறக்குமதி  – 9 மில்லியன் அ. டொலர்கள்

அகவை பலம்  –  42.46 அகவை

ஆப்கனிஸ்தானில் கனடிய படைகளின் பணிகள் என்ன?

1) ஆப்கனிஸ்தானில் பன்னாட்டு உதவிப் படைகளிடம் சேர்ந்து கொண்டு  “மக்களாட்சி முறைமையை மீள்கட்டல்”.

2) கண்ணிவெடிகளை அகற்றல். 10-15 மில்லியன் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

3) கடனுதவி – 140,000 மக்களுக்கு, பெரும்பாலும் பெண்களுக்கு சிறு அளவிலான கடனுதவி.

4) கனடிய படையும் பயிற்சி அளிக்கிறது. கனடிய உளவுத்துறையும் அங்கு இயங்குவதாக நம்பப்படுகிறது. ஆனால் அதன் விபரம் தெரியவில்லை.

அமெரிக்கா, கனடா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் மூன்றாவது உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை வழக்கமாகிக் கொண்டுள்ளன.

அமெரிக்கா மீது 9/11 இல் நடந்த தாக்குதலுக்கு அல் குவைதா உரிமை கோரியது நினைவிருக்கலாம். அல் குவைதா தலைவர்களில் முக்கியமான பின் லேடனுக்கு ஆப்கனிஸ்தானில் ஆட்சி செலுத்திய தலிபான் அரசு அரசியல் அடைக்கலம் கொடுத்திருந்தது. பின் லேடனையும் அவனது கூட்டாளிகளையும் தன்னிடம் ஒப்படைக்க அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை தலிபான் அரசு மறுத்ததன் காரணமாகவே அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் ஆப்கானிஸ்தானை தாக்கித் தலிபான் ஆட்சியைக் கவிழ்த்தது.

மற்றவர்களைப் பார்த்து எந்தச் சிக்கல் என்றாலும் அமைதி வழியில் பேசித்  தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று போதிக்கும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் போதிப்பது போல் நடப்பதில்லை.

மேற்குலக நாட்டு மக்களும் போரை விரும்புவார்களாகவே காணப்படுகிறார்கள். அமெரிக்கா இராக் மீது தாக்குதல் நடத்திய போது 65 விழுக்காட்டு அமெரிக்கர்களது ஆதரவு ஆட்சித் தலைவர் புசுக்கு இருந்தது. பின்னா நாளாந்தம் சவப்பெட்டிகளில் சடங்கள் வரத் தொடங்கிய பின்னரே அமெரிக்க பொதுமக்களது போருக்கான ஆதரவு சரியத் தொடங்கியது. இப்போது புஷ் அவர்களின் ஆதரவு 35 விழுக்காடாக வீழ்ச்சி கண்டுள்ளது.

காலப் போக்கில் கனடிய பிரதமர் கார்ப்பருக்கும் புஷின் கதி ஏற்படலாம். இப்போதுதான் கனடிய படையினரின் சடலங்கள் சவப் பெட்டிகளில் வரத் தொடங்கியுள்ளன. இறந்த போர் வீரர்களைப் பற்றி இங்குள்ள ஊடகங்கள் பெரிது படுத்தி பக்கம் பக்கமான எழுதிக் குவித்தன.

இதனைக் கண்டு மிரண்டு போன பிரதமர் கார்ப்பர் இறந்த போர் வீரர்களின் சவப் பெட்டிப் படங்களையோ சாவுச் சடங்குப் படங்களையோ வெளியிடக் கூடாது எனத் தடை விதித்துள்ளார். அந்தத் தடைக்கு இறந்த படைவீரர்களின் குடும்பங்கள் சில எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இதில் பிரதமர் கார்ப்பர் தனது அரசியல் குரவான புஷ் அவர்களின் நடைமுறையைப் பின்பற்றுகிறார். ஆப்கனிஸ்தானில் படை வீரர்களின் இழப்புகள் கூடும் போது கனடிய மக்களின் மனநிலையும் அமெரிக்க மக்களது மனநிலை போல் மாறும் என எதிர்பார்க்கலாம்.

இராக்கில் அமெரிக்கா மாட்டுப்பட்டு விழிப்பது போல கனடாவும் ஆப்கானிஸ்தானில் மாட்டுப்பட வாய்ப்புண்டு.  (உலகத்தமிழர் – மே 05,2006)


இரான் மீது அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்துமா?

நக்கீரன்

இரானின் ஆட்சித்தலைவர் மகமூது அஃமதினெஜ்ஜாத (Mahmoud Ahmadinejad) கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இரானிடம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் (enriched uranium)  கையிருப்பில் இருப்பதாக மகமூது அஃமதினெஜ்ஜாத் தெகரான் தலைநகரில் அந்தச் சாதனையைக் கொண்டாடும் முகமாக நடந்த அரச நிகழ்ச்சில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இரானின் மதத் தலைவர் அயோத்தொல்லா கொமேனியும் கலந்து கொண்டுள்ளார்.

அதே சமயம் அணு ஆற்றல் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருக்கும் இரான் மீது அமெரிக்கா தாக்குதல் செய்ய ஆயத்தமாகி வருகிறது என்ற செய்தி மேற்கு ஆசியா முழுதும் பதகளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் பேச்சால் உலகச் சந்தையில் மதகுஎண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஒரு பீப்பா மதகுஎண்ணெய் 69 அமெரிக்க டொலருக்கு மேல் விற்பனையாகிறது. இந்த விலையுயர்வு அமெரிக்கா அய்ரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கவே செய்யும். இதனால் இரான் நாட்டோடான மோதல் போக்கு இந்த நாடுகளுக்கு மிக ஒறுப்பாகவே இருக்கப் போகிறது.

அணு ஆற்றல் ஆய்வு தொடர்பாக இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு பனிப் போர் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.

“இரான் அணுசக்தி ஆய்வை நிறுத்த வேண்டும், இரான் அணுக்குண்டுகளை உற்பத்தி செய்வதையோ, உற்பத்தி செய்யும் ஆற்றலைப் பெறுவதையோ, அவற்றை இஸ்ரேல் மீது வீசுவதையோ அமெரிக்கா கண்டிப்பாக அனுமதிக்காது” என அமெரிக்க ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ் இரானைப் பலமாக எச்சரித்துள்ளார்.

இரான் தனது அணுசக்தி ஆய்வை நிறுத்த வேண்டும் நிறுத்தாவிட்டால் இரானின் அணு ஆற்றல் நிலைகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தப்படும் எனவும் புஷ் மிரட்டி உள்ளார்.
மேலும் பொருளாதாரத் தடைகளையும் இரான் சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்கா பயமுறுததியுள்ளது.

இரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை ஒன்றும் புதிதல்ல. இரானுக்கு எதிரான அமெரிக்க நாட்டின் பொருளாதாரத் தடை  கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் அந்த பொருளாதாரத் தடை இரானைப் பலவீனப்படுத்தத் தவறிவிட்டது. இரானின் எண்ணெய் உற்பத்தியை மட்டும் அது கொஞ்சம் பாதித்திருக்கிறது.
மேலும் இரான் இராக், துருக்கி, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய குடியரசுகள் ஆகியவற்றோடு நட்புறவு கொண்டிருப்பது  பொருளாதாரத் தடை அதனைப் பெரிதும் பாதிக்காததற்கு இன்னொரு காரணமாகும்.

புலனாய்வு நிருபர் Seymour Hersh என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று நியூ யோர்க் ரைம்ஸ் நாளிதழில் வெளிவந்துள்ளது. அதில் பெயர் குறிப்பிடப்படாத இந்நாள் முந்நாள் அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்கா தெகெரானுக்குத் தெற்கே நத்தான்ஸ் ( (Natanz) நகரில் உள்ள இரானின் பாதாள அணு ஆற்றல் உற்பத்தி நிலையங்களை அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி அழிக்கத் திட்டம் இடுவதாக தெரிவித்திருக்கிறார்.

இரான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கத் திட்டம் தீட்டுவதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது.

ஆட்சித்தலைவர் புஷ் அவர்களுடைய ஆலோசகர்கள் அவர் இழந்து விட்ட செல்வாக்கை தூக்கி நிறுத்த இரான் நெருக்கடியைப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். அமெரிக்க காங்கிரசுக்கான இடைக்காலத் தேர்தல் எதிர்வரும் நொவெம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இராக் மீது இராணுவத் தாக்குதல் மேற்கொண்ட அமெரிக்கா இன்று அதனை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் திணறுகிறது. இருக்கவும் முடியாமல் வெளியேறவும் முடியாமல் அமெரிக்கா இரண்டும் கெட்ட நிலையில் உள்ளது.

இவ்வாறு இராக்கில் மாட்டுப்பட்டுப் போய் இருக்கும் அமெரிக்கா இரான் மீதும் படையெடுத்தால் அது அமெரிக்காவிற்கு மேலும் இக்கட்டாக முடியாதா எனக் கேட்கத் தோன்றும்.
முதலாவது இரான் மீது அமெரிக்கா தன்னிச்சையாகவோ அல்லது ஒருதலைப் பட்சமாகவோ தாக்குதலை நடத்தாது. பாதுகாப்பு அவையின் ஒப்புதலோடுதான்  தாக்குதல் இடம் பெறும்.

இரண்டாவது அமெரிக்கா மேற்கொள்ளும் தாக்குதல் இராக் மீது மேற்கொண்ட தரை – வான்  தாக்குதல் போல் இருக்காது. இரான் மீது வான் தாக்குதலை மட்டுமே அமெரிக்கா நடாத்தும். அது நீண்ட நாள்கள் நீடிக்காது. இரானின் அணு ஆற்றல் நிலையங்கள் அழிக்கப்பட்டதும் அமெரிக்கா தாக்குதலை நிறுத்திவிடும்.
ஆனால் அமெரிக்கா இரான் மீது மேற்கொள்ளும் தாக்குதல் பக்கவிளைவுகளை ஏற்படுத்த மாட்டாது என்று சொல்ல முடியாது. இரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலின் எதிரொலி இராக்கில் கேட்கக் கூடும்.

செல்வாக்கும் செல்வமும் படைத்த இரான் மேற்கு ஆசியாவில் தனது ஷியா ஆதரவு அமைப்புகளைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்கு நெருக்கடியை கொடுக்கலாம் என்ற அச்சம் பரவி வருகிறது.

கடந்த டிசெம்பர் 15 இல் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலை அடுத்து ஷியா மதப்பிரிவினரின் கை ஓங்கியுள்ளது. ஆட்சி அதிகாரம் அவர்கள் கைக்கு மாறி இருக்கிறது. இதனால் இரான், இராக் மீது கணிசமான செல்வாக்கைச் செலுத்த வழி பிறந்துள்ளது.

ஷியா பிரிவுகளில் ஒன்றான இராக்கின்  இஸ்லாமிய புரட்சிக்கான  உச்ச சபை (Supreme Council for Islamic Revolution in Iraq SCIRI)( யின் படைப் பிரிவான பாடர் படை (BadrCorp) வீரர்களுக்கு இரானிய புரட்சி காவல்படையே பயிற்சி அளிக்கிறது.  இராக்கின் இஸ்லாமிய புரட்சிக்கான உச்ச சபை ஆட்சியில் உள்ள அய்க்கிய இராக் முன்னணியில் முக்கிய பங்காளி என்பது நினைவு கொள்ளத்தக்கது.

அய்க்கிய இராக் முன்னணியே நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் தலைவர் அப்துல் அசீஸ் ஹக்கிம் (Abdel Aziz Hakim) 20 ஆண்டுகள் இரானில் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்தவர். இரான், இராக் ஷியா மதப் பிரிவினரோடு மட்டுமல்ல குர்திஷ் தலைவர் ஜலாபி தலபானியோடும் நெருக்கமாக இருக்கிறது.

எனவே இரான், இராக்கில் செல்வாக்கும் ஆட்சி அதிகாரமும் வகிக்கும் ஷியா மதப்பிரிவினரை அமெரிக்காவிற்கு எதிராக திருப்பிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்காவின் எச்சரிக்கைகளையும் பயமுறுத்தல்களையும் இரான் சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

இரான் மீது பென்டகன் திட்டமிடும் தாக்குதல் திட்டங்களை இரானின் வெளியுறவுப் பேச்சாளர் அமெரிக்கா மேற்கொள்ளும்  “உளவியல் போர்” என்று  வருணித்துள்ளார்.  மேலும் “அணு ஆற்றல் தொழில் நுட்பத்தை வைத்திருப்பது எமது உரிமையாகும். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். அமெரிக்காவின் பயமுறுத்தலுக்கு நாம் அஞ்சப் போவதில்லை” எனக் கூறியிருக்கிறார்.

“எங்களது அணுசக்தி உற்பத்தி குண்டுகள் செய்வதற்கல்ல, அதனை அமைதி நோக்குக்காகப் பயன்படுத்தவே ஆய்வு செய்கிறோம். அப்படிச் செய்ய இரான் நாட்டுக்கு உரிமை உண்டு” என இரானின் ஆட்;சித் தலைவர் கமூது அஃமதினெஜ்ஜாத்தும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பாதுகாப்பு அவை யுறேனிய செறிவூட்டத் திட்டத்தை உடன் நிறுத்துமாறு இரானைக் கேட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொன்டலீசா றைஸ் பாதுகாப்புச் சபை இரானைத் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இரான் யுறேனிய செறிவூட்டலை வைத்துக் கொண்டு அணுக்குண்டுகள் செய்யக் கூடிய தொழில்நுட்பத்தை பெற முயல்வதாக மேற்குலக நாடுகள் அய்யப்படுகின்றன.
கடந்த சனவரி மாதத்தில் யூறேனிய செறிவூட்டுத் திட்டத்தை இரான் மீளத் தொடங்கியதை அடுத்து பிரித்தானியா, பிரான்ஸ் மற்றம் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரானோடு அணு ஆற்றல் உற்பத்தி தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டுவிட்டன.

அமெரிக்கா – இரான் இருநாடுகளுக்கும் இடையில் நடக்கும் பனிப் போரில்  சீனா மற்றும் உருசியா நாடுகளின் நிலைப்பாடு என்ன? இரண்டு நாடுகளும் இரான் மீது புதிதாகப் போடப்படும் பொருளாதாரத் தடைகளைப் பலவீனப்படுத்த முயற்சி எடுக்கலாம்.

ஆசியாவில் தன்னை ஒரு வல்லாண்மை படைத்த நாடாக மாற்றிக் கொள்ள முனையும் சீனா இந்த இரான் – அமெரிக்க நெருக்கடியால் பயன் பெறக் கூடும்.
உருசியா இரானை அனுதாபத்தோடு பார்க்கலாம். ஆனால் முடிவில் அது அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் பக்கம் சாய்ந்து விடும் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உருசியா இரு சாராருக்கும் இடையில் அனுசரணை வழங்க முன்வரலாம்.

மேற்கு நாடுகளுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதாவது ஆட்சித் தலைவர் அகமதினெஜ்ஜாட் அவர்களது எதிரிகளும் அவரை விமர்ச்சிப்பவர்களும் அவரை பலவீனப் படுத்தலாம். அகமதினெஜ்ஜாட் அவர்களுக்குப் பழைமைவாத முல்லாக்கள் மற்றும் பெருநிதி வணிகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கிறது.

இந்தப் பின்னணியில் பன்னாட்டு அணு ஆற்றல் நிறுவனத்தின் (Atomic Energy Agency (IAEA)  தலைவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரானுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் ஒரு அறிக்கையைப் பாதுகாப்பு அவைக்கு சமர்ப்பிக்க இருக்கிறார்.

“இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதற்கு எந்த சான்றுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அதை வைத்துக் கொண்டு இரான் நாட்டுக்கு ஒரு நற்சான்றிதழ் வழங்க நான் தயாராயில்லை” என்றும் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இரானும் சந்தித்துப் பேச முயற்சி நடைபெறுகிறது என்ற செய்தியும் அடிபடுகிறது. அந்தச் செய்தி  அரபு நாடுகளது ஏக்கத்தை அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 8 ஆம் நாள் எகிப்தின் ஆட்சித் தலைவர் முபராக் அல் அரேபிய தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் இராக் ஒரு உள்நாட்டுப் போருக்குத் தள்ளப்பட்டு வருவததாகக் குறிப்பிட்டார். அரபு நாடுகளில் வாழும் ஷியா மதத்தவர் தாங்கள் வாழும் நாட்டை விட இரானுக்கே அதிக விசுவாசகமாக இருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

மேற்கு ஆசியாவில் இரான் குழப்பத்தை உண்டு பண்ணலாம் என்ற அச்சம் எகிப்து, சவுதி அரேபியா, யோர்டான், பாஃரான், குவேத்து நாடுகளது புலனாய்வு அதிகாரிகள் கெய்ரோவில் சந்தித்ததை அடுத்தே முபராக் கருத்துத் தெரிவத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரான் அணுக்குண்டுகளை உற்பத்தி செய்யும் அணு ஆற்றல் நாடாக உருவாகுவதை அமெரிக்கா அனுமதிக்காது என்பதே அரசியல் நோக்கர்களின் எண்ணமாகும்.

இரான் அணுக்குண்டு உற்பத்தி செய்வதைத் தடுக்க அமெரிக்கா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துமா? அல்லது இரானை ஒரு அணுசக்தி நாடென்ற படிநிலையைப் (status) பல நிபந்தனைகளோடு அங்கீகரிக்க முடிவு எடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  (உலகத்தமிழர் – ஏப்ரில் 14, 2006)


தமிழ்தேசியத்தின் பரம்பரை எதிரி ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்புங்கள்!

நக்கீரன்

தமிழக தேர்தலுக்கு இன்னும் எண்ணி 5 நாள்களே எஞ்சி உள்ளன. தமிழக வாக்காளப் பெருமக்கள் மே 8 ஆம் நாள் நல்ல தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள்.
மக்கள் பணியே மகேசன் பணி என்பது மட்டுமல்ல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றும் சொல்லலாம்.

மக்களாட்சி அரசியல் முறைமை நல்ல அரசியல் முறைமைதான். ஆனால் நடைமுறையில் சனநாயகம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு பணநாயகமே ஆட்சி செய்கிறது.

ஒரு நாள் மன்னர்கள் பற்றிக் கதைகளில் படித்திருக்கிறோம். அது போலவே தேர்தல் நாள் அன்று மட்டும் மக்கள் மன்னர்களாக இருக்கிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் மக்களை ஆட்சியாளர்கள் பெரும்பாலும் மறந்து விடுகிறார்கள்.

பகவத் கீதையில் தனது சொந்தபந்தங்களோடு சண்டை செய்ய மறுத்து வில்லையும் அம்புகளையும் எறிந்து விட்டு தேர்ப்பீடத்தின் மேல் உட்கார்ந்துவிட்ட அருச்சுனனை போர் செய்யுமாறு அவனது வர்ணத்தை எடுத்துக் கூறி கண்ணன் குளையடிக்கிறான்.

“நீ சத்திரியன்! போர் செய்வது உன் சுயதர்மம்! நீ போர் செய்ய மறுத்தால் சுயதர்மத்தையும் கீர்த்தியையும் கொன்ற பாவத்துக்கு ஆளாவாய்! கொல்லப்படினோ வானுலகம் எய்துவாய்! வென்றால் பூமி ஆள்வாய்! எனவே போர் செய்யத் துணிந்து எழுந்து நில்” என்கிறான்.

போர்க்களத்தில் தோற்றால் சொர்க்கம் என்பது சரியாக இருக்கலாம். ஆனால் தேர்தலில் தோற்றால் சொர்க்கம் இல்லை நரகம்தான்!

சாதாரணமாக தேர்தல் என்றால் வாழ்வா சாவா என்ற போராட்டம் என்று சொல்வதும் எழுதுவதும் வழக்கமாகும். ஆனால் இம்முறை தமிழகத் தேர்தல் உண்மையாகவே  வாழ்வா சாவா என்ற போராட்டமாக அமைந்துள்ளது.

எப்போது ஜெயலலிதா “திமுகவும் கருணாநிதியும் என் பரம்பர எதிரிகள்! திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இதுதான்” என்று சூளுரைத்தாரோ அன்றே தேர்தல் பரப்புரை சூடு பிடித்து விட்டது.

“திமுகவும் கருணாநிதியும் என் அரசியல் எதிரிகள்” என்று சொல்வது வேறு “திமுகவும் கருணாநிதியும் என் பரம்பரை எதிரிகள்” என்று சொல்வது வேறு.

ஜெயலலிதாவுக்கு அரசியல் பரம்பரை என்று ஒன்றும் இல்லை. அரசியலில் அ ஆ கூடத்தெரியாத அவரை எண்பதுகளில் எம்ஜிஆர் தான் அரசியலுக்கு இழுத்து வந்தார்.  எனவே அவர் பரம்பரை எதிரி என்று குறிப்பிடும்போது திராவிடப் பரம்பரையைத்தான் சூறிப்பிடுகிறார் என்பது வெள்ளிடமலை.

“நம் இனத்தைச் சேர்ந்த முதல்வரை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது. எதிர்காலத்தில் நம் பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வருவது கடினம். எனவே இருப்பவரை இழந்துவிடக் கூடாது” என  26-04-2006 நாளிட்ட தினமலர் ஏட்டில் (பக்கம் 7) பச்சையாகவே ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது. இது நடைபெற இருக்கும் தேர்தல் பரம்பரை எதிரிகளுக்கு இடையிலான போர் என்பதை ஊருக்கும் உலகத்துக்கும் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகிறது.

“நான் பாப்பாத்தி! அப்படிச் சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்” என்று தனது சாதியைப் பற்றி சட்டசபையிலேயே சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவர் ஜெயலலிதா.

தமிழாய்ந்த தமிழன்தான் தமி;ழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கனவு கண்டார்.

புரட்சிக் கவிஞர் கண்ட கனவு அறிஞர் அண்ணா 1967 இல் முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது பலித்தது. கலைஞர் கருணாநிதி காலத்திலும் அது தொடர்ந்தது. அதன்பின் அது பொய்த்துவிட்டது. குறிப்பாக ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்றபோது அது பழங்கனவாய் போய்விட்டது.

கோடம்பாக்கத்தில் அரிதாரம் பூசி நடித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா அரசியலுக்கு வந்தது ஒரு வரலாற்று விபத்து. அதைவிடப் பெரிய வரலாற்று விபத்து அவர் அறிஞர் அண்ணாவின் பெயரைத் தாங்கிக் கொண்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பது!

அகங்காரம்
ஆணவம்
ஆடம்பரம்
தலைக்கனம்
வாய்க் கொழுப்பு
நான் நான் என்ற மமதை
மற்றவர்களை எடுத்தெறிந்து பேசும் திமிர்ப் போக்கு
சோதிடப் பித்து
மூட நம்பிக்கைகள்
ஆகியவற்றின் மொத்த உருவம்தான் ஜெயலலிதா!
எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா தமிழீழத் தேசியத்தின் பரம்பரை எதிரியாவார்!

அதற்கான சான்றுகளை அடுத்கடுக்கா எடுத்துக் காட்ட முடியும்.

தமிழீழத் தேசியத் தலைவரை இந்திய இராணுவத்தை அனுப்பிப் பிடித்து வர வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா!

வி.புலிகளுக்கும்;; – ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தையை சென்னையில் நடத்துவதற்கு வி.புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தகுந்த மருத்துவ உதவி பெறவும் வன்னிக் காட்டில் இருக்கும் தலைவர் பிரபாகரனோடு நேரடித் தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கும் என்பவற்றைக் காரணம் காட்டி  அந்த வேண்டுகோள் முன்வைக்கப் பட்டது.

ஆனால் வி.புலிகளின் நடமாட்டத்தை தமிழ்நாட்டில் ஒழித்துவிட்டதாக மார்தட்டிய ஜெயலலிதா அந்த யோசனையை உடனடியாக நிராகரித்து அறிக்கை விட்டதோடு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் வி.புலிகளை அனுமதிக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

அத்தோடு அமையாமல் ஆளுநர் உரையிலும் அதனைப் பெரிய விடயமாக எடுத்து ஜெயலலிதா குறிப்பிட்டார்.

தமிழீழத் தமிழர்களை இலங்கைத் தமிழர்கள் என்றுதான் குறிப்பிடுவேன் என்று திமிரோடு பேசுகிறார்.

தமிழினத்தின் பண்பாட்டுச் சின்னமான கண்ணகி சிலையை இரவோடு இரவாகப் பெயர்த்துக் கொண்டு போய் பண்டகசாலை ஒன்றில்  அனாதரவாகப் போட்டவர் ஜெயலலிதா. இந்தச் சிலை அண்ணா முதலமைச்சராக இருந்த போது நிறுவப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

தமிழ்க் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போது அவர்களுக்கு ஜெயலட்சுமி, ஜெயப்பிரபா, ஜெயலலிதா போன்ற வடமொழிப் பெயர்களையே ஜெயலலிதா வைக்கிறார். இது அவரது தமிழ்மொழி வெறுப்பையும் வடமொழிப் பற்றையும் காட்டுகிறது.

நேற்றுக்கூட சென்னையில் தென்தமிழீழத் தமிழர்கள் சிங்களப் படையினரால் குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன், தந்தை பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மார்க்சீய பெரியாரிய பொவுடமைக் கட்சித் தலைவர் ஆனைமுத்து, தமிழத் தேசப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணியரசன், தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தியாகு,  தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தலைவர் பொழிலன்,  தமிழ்த் தேச மார்க்சீய கட்சித் தலைவர் இராசேந்திர சோழன், தலைநகர் தமிழ்ச் சங்கத் தலைவர் சுந்தரராசன், ஓவியர் வீர சந்தானம், திருச்சி சவுந்தரராசன், உலகத் தமிழர் பேரமைப்பின் பத்மநாபன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, புலவர் இறைக்குருவனார், மா.செ. தமிழ்மணி, உலகத்தமிழர் மையத்தின் புலவர் மதிவாணன், முனைவர் தமிழப்பன், புதுவை பெரியார் திராவிட கழகத்தின் லோகு அய்யப்பன், மனிதம் அக்னி சுப்பிரமணியம் ஆகியோர் iது செய்யப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

மொத்தம் 500 கும் மேலான தமிழ் உணர்வாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

எல்லை கடந்த பயங்கரவாதத்தைத் தடுக்க உருவாக்கப்பட்ட பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி பழ. நெடுமாறன், சுப வீரபாண்டியன், நக்கீரன் கோபால்  போன்ற தமிழ் உணர்வாளர்களை 19 மாதங்களுக்கு மேலாகச் சிறைக் கொட்டிலில் அடைத்து சித்திரவதை செய்தவர் ஜெயலலிதா.

குறைந்த பட்ச பண்பாடின்றி கலைஞர் போன்ற மூத்த அரசியல்வாதிகளை ஒருமையில் அழைத்துத் திட்டுவது ஜெயலலிதாவின் சின்னத்தனமாகும்.

தனக்குப் பிடிக்காதவர்கள் மீது காவல்துறையை ஏவி கஞ்சா வழக்குப் போட்டுச் சிறையில் அடைப்பது ஜெயலலிதாவுக்கு கைவந்த நுண்கலை.

ஜெயலலிதா தலைமை தாங்கும் அதிமுகவில் உட்கட்சி சனநாயகம் என்பது மருந்துக்கும் இல்லை.

அதிமுக அமைச்சர்கள் அடிமைகள் போல் ஜெயலலிதாவினால் நடத்தப்படுகிறார்கள்.

அதிமுக அமைச்சரவை ஆறுமுறை மாற்றி அமைக்கப்பட்டது.

அதிமுக அமைச்சர்கள் செய்தித்தாள்களுக்கு நேர்காணல் வழங்க அனுமதி இல்லை.

பரப்புரைக்குச் செல்லும் ஜெயலலிதாவை வரவேற்க அதிமுக அமைச்சர்கள் தெருவோரங்களில் கும்பிட்ட கையோடு குரங்குகள் போல்  குந்தி இருக்க வைத்து கேவலப்படுத்தப்படுகிறார்கள்.

“அதிமுக அரசில் நான் அமைச்சராக இருக்கவில்லை அடிமையாகவே இருந்தேன்” என நேற்றுவரை அமைச்சராக இருந்த இன்பத்தமிழன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இன்பத்தமிழன் மட்டுமல்ல சேடப்பட்டி முத்தையா போன்ற அதிமுக முன்னாள் பிரபல்யங்களும் இப்படிச் சொல்லித்தான் புலம்புகிறார்கள்.

ஜெயலிதாவின் அரசியல் பழிவாங்கலுக்கு பத்தாயிரம் சாலைப் பணியானார்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்களில் 73 பணியாளர்கள் பசிக் கொடுமை தாங்காது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்கள்.

ஒரேநாளில் இரண்டு இலட்சம் அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்த ‘பெருமை’ சீமாட்டி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு!

இந்தத் தேர்தலில் கட்சித் தாவல்களுக்கும் அணி மாறலுக்கும் பஞ்சமே இல்லை. பொழுது போக்கு அம்சங்களும் நிறையவுண்டு!

காலையில் “அண்ணன் கருணாநிதிதான் அடுத்த முதல்வர்” என்று பேசியவர் மாலையில் “புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சி தொடரும்” என்று பேசுகிறார்.

எப்படிப்பட்ட புரட்சித் தலைவி? காடேறி, சூழ்ச்சிக்காரி, சூனியக்காரி, சதிகாரி, பாசிஸ்ட் என்று இரண்டு நாள்களுக்கு முன்னர்வரை அர்ச்சிக்கப்பட்ட அதே ஜெயலலிதா!

அறிவாலயத்தில் இருந்து அழைப்பு வரும் எனக் காத்திருந்து அது கிடைக்கவில்லை என்றதும் தோட்டத்திற்குப் போய் சரணாகதி அடைந்தவர் பேசுகிறார் “கருணாநிதி தமிழ் விரோதி, தலித் விரோதி எங்கள் அம்மாதான் நாட்டிலுள்ள ஒரே சிங்கம்” என்கிறார். மதுரையில் அவரோடு மேடையேற ஜெயலலிதா மறுத்துவிட்டதை அவர் வசதியாக மறந்து விட்டார்.
இவர்களை மனதில் வைத்துத்தான் அறிஞர் அண்ணா “இரட்டை நாவுடையாய் போற்றி!” என்று போற்றி அகவல் பாடியிருக்கிறார்.

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று மகாகவி பாரதியார் சொன்னார்.

தமிழ்நாட்டை ஜெயலலிதா என்ற பேய் ஆளுகிறது. அந்தப் பேயின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைத்துள்ளது.

பெரியார் பிறந்த மண்ணில், அண்ணா வாழ்ந்த நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக மீண்டும் பதவிக்கு வருவது என்பது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாகிவிடும்!  தமிழினத்தின் ஒட்டுமொத்த தன்மானத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவலாகிவிடும்!

எனவே தமிழ்நாட்டு வாக்காளர்கள் ஒரு கொடுங்கோல் ஆட்சியை ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியை, தமிழ்த் தேசியத்துக்குப் பகையான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரத் தங்கள் பொன்னான வாக்குகளைத் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம்.

ஆண்டது போதும் அம்மாவை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்!

தமிழ் கூறும் நல்லுகம் தமிழ்நாட்டு வாக்காளர்களது நல்ல தீர்ப்பைக் கேட்க ஆவலோடு  காத்திருக்கிறது! (2006)


பாலஸ்தீனிய மக்களைத் தண்டிக்கும் அமெரிக்கா!
நக்கீரன்

கடந்த சனவரி 23 இல் பாலஸ்தீனிய அதிகார அவைக்கு நடந்த தேர்தல் முடிவுகள் மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியதாக முன்னர் எழுதியிருந்தேன்.

மொத்தம் 132 இருக்கைகளில் 76 இருக்கைகளை ஹமாஸ் இயக்கம் கைப்பற்றியது.  மேலும் ஹமாஸ் ஆதரவு வழங்கிய 4 சுயேச்சை வேட்பார்ளர்கள் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாத்தா அமைப்புக்கு 45 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மிகுதி இடங்களை சிறு கட்சிகள் கைப்பற்றியுள்ளன. அமெரிக்கா ஏனைய நாடுகளுக்கு, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு, மக்களாட்சி முறைமையை ஏற்றுமதி செய்வதை தனது தலையாய வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டுள்ளது.

இராக் மீது 2003 இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சர்வாதிகாரி சதாம் குசேனை ஆட்சியில் இருந்து அகற்றி அங்கு மக்காட்சியைக் கொண்டு வருவதற்கே என அமெரிக்க தரப்பில் சொல்லப்பட்டது. கடந்த சனவரி 30 இல் இராக்கில் நடந்து முடிந்த தேர்தல் மக்களாட்சிக்கான கால்கோள் என ஆட்சித் தலைவர் புஷ் மார் தட்டிக் கொண்டார்.

கடந்த மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் ஹாமாஸ் இயக்கம் சார்பாக அதன் பிரதமர் இஸ்மாயில் ஹனியா (Ismail Haniyeh)   24 பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியலை பாலஸ்தீன ஆட்சித்தலைவர் மகமூத் அப்பாஸ் இடம் கையளித்தது. ஹமாஸ் இயக்க முக்கிய தலைவர்களில் ஒருவரான மகமூத் சகார் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில்  ஒரு பெண்ணும் இடம் பெற்றுள்ளார்.

ஆனால் ஹமாஸ் அரசை அமெரிக்கா அங்கீகரிக்க மறுத்துள்ளது. அது மட்டும் அல்லாமல் ஹமாஸ் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற காரணத்தைக் காட்டி பாலஸ்தீனிய அதிகார அவைக்கு இதுவரை காலமும் கொடுத்து வந்த நிதியுதவியை நிறுத்தி விட்டது. இப்படி நிதியதவியை நிறுத்திய இன்னொரு நாடு கனடாவாகும். ஆக தற்சமயம் இஸ்ரேல், அமெரிக்கா, கனடா ஆகிய 3 நாடுகள் நிதியுதவியை நிறுத்தியுள்ளன. கடந்த ஆண்டு அமெரிக்கா 324 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அய்ரோப்பிய ஒன்றியம் சில நிபந்தனைகளோடு 60 மில்லியன் யூறோ டொலர்களை வழங்கியுள்ளது.  ஹமாஸ், இஸ்ரேல் தொடர்பான தனது கொள்கையை மாற்றாவிட்டால் மேற்கொண்டு நிதியுதவி எதுவும் அளிக்கப்பட மாட்டாது என அது அறிவித்துள்ளது.

நிதியுதவி தொடர்பாக பேசிய அமெரிக்காவின் ஆட்சித் தலைவர் புஷ் “இஸ்ரேலை அழிப்பதை தனது குறிக்கோளாகக் கொண்டுள்ள ஹமாஸ் இயக்கம் அதனைக் கைவிட வேண்டும். எமது நட்பு நாடான இஸ்ரேலை அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள அரசுக்கு நாம் உதவி செய்ய முடியாது. நாம் உதவி செய்ய வேண்டும் என்றால் ஹமாஸ் இயக்கம் தனது தனது ஆயுதப் படையைக் கலைத்து வன்முறையைக் கைவிட்டு இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

மத்திய கிழக்குக்கு மக்களாட்சி முறைமையை ஏற்றுமதி செய்வதே அமெரிக்காவின் கொள்கை என ஒருபுறம் பேசிக் கொண்டு மக்களாட்சி முறைமைக்கு அமைய நடந்த தேர்தலில் மக்களது வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடிய ஹமாஸ் இயக்க்கத்தின் அரசை அங்கீகரிக்க மறுப்பதும் அதற்கு நிதியுதவியை நிறுத்திக் கொள்வதும் எந்தவிதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை.

நிதியுதவியை நிறுத்தியதன் மூலம் அமெரிக்கா பாலஸ்தீனிய மக்கள் ஒரு சுதந்திரமான தேர்தல் மூலம் வெளிப்படுத்திய முடிவை உதாசீனம் செய்வதோடு அவர்களை ஒட்டு மொத்தமாகத் தண்டிக்கவும் செய்கிறது.

பாலஸ்தீனிய மக்கள் ஹமாஸ் இயக்கத்துக்கு வாக்களித்ததன் மூலம் சில செய்திகளை உலகுக்குச் சொல்லியிருக்கிறார்கள். தங்களைத் தாங்களே பாதுகாக்கும் உரிமை, ஆக்கிரமிப்புப் படையை ஆயுதப் போராட்டத்தின் மூலம் வெளியேற்றும் உரிமை, இறுதியாக ஒரு சுதந்திரமான நாட்டை உருவாக்கும் உரிமை ஆகிய அடிப்படை உரிமை ஆகியவையே அந்தச் செய்திகளாகும்.

1994 ஆம் ஆண்டு பாலஸ்தீனிய அதிகார அபை உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து யாசர் அரபத் தலைமை வகித்த பாத்தா அமைப்பு ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதன் 13 ஆண்டு கால ஆட்சியின் போது சகல மட்டங்களிலும் ஊழல், தவறான அதிகார நடைமுறை, அரசியல் பழிவாங்கல் மற்றும் நிதி மோசடி நிலவியது. கோடிக்கணக்கான பணம் அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் களவாடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. எனவே பாலஸ்தீனிய மக்கள் ஹமாசுக்கு அளித்த வாக்குகள் ஊழல் புரையோடிப் போன அரசுக்கு எதிரான தீர்ப்பாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

1994 – 1996 ஆண்டுகால இடைவெளியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்துக்குப் பலியானார்கள். ஒஸ்லோ அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராக இன்ரிபடா (al Aqsa Intifada)  என அழைக்கப்படும் கிளர்ச்சி வெடித்தது. முன்னரைக் காட்டிலும் அதிகளவு உயிர்ப்பலியும் சோதனைச் சாவடிகளும் வீடுகள் தகர்ப்பும் சிறை வாசமும் அதிகரித்தன. ஒஸ்லோ ஒப்பந்தம் எழுதி 13 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒரு முழு அரசை உருவாக்கும் முயற்சி கை கூடாமல் இருக்கிறது.

இது இவ்வாறிருக்க கடந்த மார்ச்சு 28 இல்  இஸ்ரேலில் நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் ஒரு வலதுசாரி அரசே பதவிக்கு வந்துள்ளது.

1982 ஆம் ஆண்டு செப்தெம்பர் 16 இல் சப்ரா மற்றும்  சட்டிலா (Sabra and Satila)  அகதி முகாம்களில் வாழ்ந்த சுமார் 3,600 பாலஸ்தீனிய மக்களின் படுகொலையில் தொடர்புடையவர் என அய்யப்படும் ஏரியல் சாரன் (Ariel Sharon)  நிறுவிய கடிமா என்ற கட்சியே பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடிமா கட்சியின் தவைர் நூரன ழுடஅநசவ  பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அனைத்துலக மட்டத்தில் அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான போரில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன சிக்கலோடு “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” (War  on terror)  முஸ்லிம் வலதுசாரிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் கையை ஓங்கச் செய்திருக்கிறது. இதனால் இராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்தும் நேரடிப் போரும் பாலஸ்தீனத்தில் நடத்தும் மறைமுகப் போரும் மேற்குலகத்துக்கும் இஸ்லாம் மதத்திற்கும் இடையில் நடைபெறும் போர் என்ற படிமத்தைத் தோற்றுவித்துள்ளது.

மேலும், முன் எப்பொழுதையும் விட இன்றைய அமெரிக்க அரசு இஸ்ரேல் சார்பான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்கிறது. புஷ் அவர்களின் முதல் 4 ஆண்டு பதவிக் காலத்தில் இஸ்ரேலின் பிரதமராக இருந்து சாரன் ஒன்பது முறை வெள்ளமாளிகைக்கு சென்று திரும்பியுள்ளார். அது மட்டுமல்ல சரோனை  “ ஒரு சமாதான விரும்பி” (“A man of peace”) என்று புஷ் புகழாரம் சூட்டவும் தவறவில்லை! இது புஷ் பாலஸ்தீன மக்களின் அடிப்படை மனித உரிமைக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதைக் காட்டுகிறது.

இந்தப் பின்னணியில் நடந்து முடிந்த தேர்தலில் ஹமாசை ஆதரிப்பதை விட பாலஸ்தீனிய மக்களுக்கு வேறு வழி இருக்கவில்லை என்றே சொல்லலாம்.

ஒரு விதத்தில் இஸ்ரேலிய வலதுசாரி கட்சிகளுக்கும்  இஸ்லாமிய வலதுசாரிப் போக்குடைய ஹமாசுக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஹமாசின் கொள்கை, கோட்பாடு, நிலைப்பாடு இன்றைய இஸ்ரேலிய அரசின் கொள்கை, கோட்பாடு, நிலைப்பாடு போன்றவற்றையே பிரதிபலிக்கிறது என்று சொல்லலாம்.

1) வரலாற்று அடிப்படையில் வலதுசாரி லிக்குட் கட்சி (Likud Party) 1977 ஆம் ஆண்டு  அதற்கு முன்னர் 40 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தொழிற் கட்சியைத் தோற்கடித்து  ஆட்சியைப் பிடித்தது. அந்தக் கட்சி சார்பாக பெகின், சமீர், நெத்தன்யாகு,  சாரன் பிரதமர்களாக பதவி வகித்தார்கள். ராபினின் தொழிற் கட்சி இஸ்ரேலிய – அரபு மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியதைச் சுட்டிக் காட்டியே லிக்குட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 2006 இல் லிக்குட் கட்சி பயன்படுத்திய அதே வாதங்களையும் இராசதந்திரத்தையும் பயன்படுத்தியே 40 ஆண்டு காலம் பாலஸ்தீன அரசியலில் மேலாதிக்கம் செலுத்திய பத்தா கட்சியை ஹமாஸ் தேர்தலில் தோற்கடித்தது.

2) ஹமாஸ் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் லிக்குட் கட்சியும் பாலஸ்தீனியர்களது அரசுரிமையையும் அங்கீகரிக்கவில்லை. வரலாற்று அடிப்படையில் பாலஸ்தீனிய மண்ணுக்கு உரிய உரிமையையும் லிக்குட் கட்சி அங்கீகரிக்க மறுக்கிறது. இஸ்ரேலிய அரசு இஸ்ரேல் மண்ணுக்கு இஸ்ரேலியர்கள் மட்டுமே உரிமையுடையவர்கள் என்று சொல்கிறது. ஏப்ரகாம் வழிவந்த முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரது மண்ணுரிமையை லிக்குட் கட்சி (லிக்குட் கட்சியை உடைத்து சாரன் தொடக்கிய கடிமா கட்சிக்கும் இடையில் கொள்கை கோட்பாட்டில் பெரிய வேறுபாடு இல்லை) மறுக்கிறது. யூத இளத்தவருக்கு மட்டுமே மண்ணுக்கு உரிமை உண்டு என்று சொல்கிறது. இந்த வாதத்தின் மறுபக்கமாக ஹமாஸ் இயக்கம் மத அடிப்படையில் முழு பாலஸ்தீனமும் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமானது என்று சொல்கிறது.

3) இஸ்ரேலிய வலதுசாரிக் அரசுகள் பாலஸ்தீனியர்களுக்கு ஒரு முழு இறைமை படைத்த அரசை நிறுவும் உரிமையை மறுக்கின்றன.  பாலஸ்தீனியர்களுக்கு உருவாக்கப்படும் அரசு இஸ்ரேல் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் ( எல்லைகள், பிரதேசங்கள்) என விரும்புகின்றன.  குறிப்பாக கிழக்கு ஜெரூசலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஹமாஸ் இதற்கு எதிர்மாறான நிபந்தனைகளை முன்வைக்கிறது. இஸ்ரேலிய யூதர்கள் பாலஸ்தீனத்தில் (இன்றைய இஸ்ரேல் நாட்டுப் பிரதேசம் உட்பட)  முஸ்லிம் அல்லாதவர் போல் வாழலாம். அவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம் நடத்தப்படுவார்கள்.

4) இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரண்டுமே வன்முறையையும் ஆயுதங்களையும் தாராளமாகப் பயன்படுத்துகின்றன. இரு சாராருமே “அவர்கள் துப்பாக்கி மொழியை மட்டுமே புரிந்து கொள்வார்கள்” என்ற முழக்கத்தை திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

5) ஹமாஸ் இஸ்ரேலுடன் ஒரு நீண்டகால போர்நிறுத்தத்தை மேற்கொள்ளத் தயார் என அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசும் இதுவரை காலமும் இஸ்ரேல் நாடடின் அனைத்துலக  எல்லைகளை இன்னும் நிறுவவில்லை. பாலஸ்தீனியர்களது தாயகத்துக்கான  வரலாற்று உரிமையையும் அங்கீகரிக்கவில்லை. எனவே இரண்டு பக்கமும் ஒரு நீண்ட கால போர் நிறுத்தத்தையே கடைப்பிடிக்கிறார்கள். பாலஸ்தீனியர்களது தாயக உரிமையை எந்தப் பாலஸ்தீனிய இயக்கமும் விட்டுக் கொடுக்கும் நிலைமை இல்லை.

6) ஹமாசும் இன்று பதவியிலுள்ள அரசும் ஒஸ்லோ அமைதி உடன்பாட்டை  நிராகரித்து விட்டன. சாரன் தனது பதவிக் காலத்தில் ஒஸ்லோ உடன்படிக்கையை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு தனது நிகழ்ச்சி நிரலையே நடைமுறைப் படுத்தினார். ஒஸ்லோ ஒப்பந்தத்தை உருவாக்கிய மிதவாத பாத்தா மற்றும் தொழிற்கட்சி இரண்டும் வலதுசாரி கட்சிகளான ஹமாஸ் மற்றும் லிக்குட் (இப்போது கடிமா) கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டு விட்டன.

எனவே இஸ்ரேல் – பாலஸ்தீனிய சிக்கலுக்கு தீர்வுகாணும் பொறுப்பு ஹமாஸ் மற்றும் கடிமா கட்சிகளுக்கே உண்டு. பத்தாவும் தொழிற்கட்சியும் தோல்வியுற்ற நிலையில் யாரும் பலத்துடன் விளங்கும் ஹமாசையோ கடிமாவையோ புறந்தள்ளிவிட முடியாது.

புஷ் நிருவாகம் ஹமாஸ் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்றோ அல்லது அதன் தலைவர்கள் “பின் லாடனின்” அச்சு என்று சொல்லி அவர்களை ஒதுக்கிவிட முடியாது.
தங்கள் விடுதலைக்கும் தாயக உரிமைக்கும் போராடும் மக்களை வெறுமனே “பயங்கரவாதிகள்” என்று அமெரிக்கா அருச்சிப்பதில் அர்த்தமில்லை. அது சிக்கலுக்கு முகம் கொடுக்காது ஓடிவிடும் போக்கையே காட்ட உதவும்.

உண்மையில் மக்களாட்சி முறைமையை உலகுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தால்  இஸ்ரேல் – பாலஸ்தீனச் சிக்கலுக்கு புஷ் தீர்வு காண முன்வர வேண்டும். அமெரிக்கா கண்மூடித்தனமான போக்கில் இஸ்ரேல் ஆதரவுக் கொள்கையைக் கைப்பிடிக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் அமெரிக்காவின் ஒருதலைப் பட்ச அணுகுமுறை உலக மட்டத்தில் அதற்குக் கெட்ட பெயரையே வாங்கிக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அரசு ஹமாஸ் இயக்கத்தோடு இராசதந்திர மட்டத்தில் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு  வரவேண்டும்.

அமைதி என்பது நண்பர்களோடு அல்லாது  எதிரிகளோடு பேசிக் காண வேண்டிய சங்கதியாகும்.

பாலஸ்தீனிய மக்கள் சனநாயக வழியில் அளித்த தீர்ப்பை அமெரிக்கா, இஸ்ரேல், கனடா போன்ற நாடுகள் அங்கீகரிக்க மறுப்பது சனநாயகப் படுகொலையாகும்.

பாலஸ்தீனிய மக்களது சனநாயகத் தீர்ப்பை நிராகரித்து நிதியுதவியை நிறுத்தி அவர்களை ஒட்டு மொத்தமாகத் தண்டிப்பது பாலஸ்தீனிய – இஸ்ரேல் இரண்டுக்கும் இடையிலான மோதலை அதிகரிக்கவே உதவும்.  (உலகத்தமிழர் 31-03-2006)


புலி வாலைப் பிடித்துள்ள புஷ்

நக்கீரன்

அண்மையில “உள்நாட்டுப் போருக்குத் தயாராகும் இராக்” பற்றி (உலகத்தமிழர் மார்ச்சு 3- மார்ச்சு 09) எழுதியிருந்தேன்.

இப்போது இராக் நாட்டின் முன்னாள் இடைக்காலப் பிரதமர்  அய்யத் அலாவி இராக் நாட்டில் உள்ளாட்டுப் போர் ஒன்று தொடர்வதாக (a civil  war in progress) அறிவித்துள்ளார். அலாவி மட்டுமல்ல அமெரிக்க நாட்டு ஊடகவியலாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் இராக்கில் உள்ளாட்டுப் போர் ஒன்று நடைபெறுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

கேளாச் செவியரான அமெரிக்க ஆட்சித் தலைவர் யோர்ஜ் புஷ் மட்டும் இராக் ஒரு உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்டுவிடவில்லை எனக் கூறியுள்ளார். பாவம் புஷ் –  அப்படித்தான் அவர் பேச வேண்டும். தற்போது இராக்குக்கு எதிரான அவரது படையெடுப்பு அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்துக்கும் கருத்தாடலுக்கும் உள்ளாகி வருகிறது.

அமெரிக்கா உட்பட உலகெங்கும் இராக் போருக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதில் இலக்கக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இராக் மீது அமெரிக்க – பிரித்தானிய படைகள் மேற்கொண்ட சட்டத்துக்கு மாறான போர் கடந்த மார்ச்சு 19 அன்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

அய்க்கிய நாடுகள் அவையை மீறித் தன்னிச்சையாக அமெரிக்கா இராக் மீது தொடுத்த சட்ட முரணான போர் ஏனைய நாடுகளுக்குப் பிழையான எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. அய்யன்னாவையும் ஜெனீவா மரபுகளையம்  அமெரிக்கா மீறியது போல் ஏனைய நாடுகளும் நாளை அவற்றை மீறலாம்.

இராக் போரை அமெரிக்கா தனது நவீன ஆயுதங்களைப் பரிசோதிக்கும் களமாகப் பயன்படுத்தி வருகிறது. போர் தொடங்கிய போது (மார்ச்சு 2003) அமெரிக்க பிரித்தானிய படைகள் 1,100 – 2,200 தொன் குண்டுகளை இராக் நகரங்கள் மீது வீசியது. இந்தக் குண்டுகள் கதிரியக்க உலோகம் மற்றும் நஞ்சு கலந்த (toxic and radioactive metal)  குண்டுகளாகும். இந்தக் குண்டு வீச்சினால் அமெரிக்கப் படையினரும் பாதிக்கப்பட்டனர். பஸ்ரா நகரில் உடல் ஈனத்தோடு பிறந்த குழந்தைகளின் விழுக்காடு ஏழு மடங்கு அதிகரித்தது.

பொய்யான முற்றிலும் அநீதியான ஏதுக்களின் அடிப்படையில் மேற்கொண்ட இராக் போரில் போரில் இதுவரை 2,319 அமெரிக்க இராணுவத்தினரும் 103 பிரித்தானிய இராணுவத்தினரும் இராக் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். 17,004 வீரர்கள் காயப்பட்டுள்ளார்கள். 30,000 கும் குறையாத பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். சாதாரணமாகப் படையினர் செய்கிற பணியில் 20,000 கும் அதிகமான ஒப்பந்தகாரர்கள் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

‘பூச்செண்டு கொடுத்து இராக் மக்கள்  வரவேற்பார்கள்  என்று எண்ணி வந்தோம். ஆனால் எங்களைத் துப்பாக்கிக் குண்டுகள்தான் வரவேற்றன” என்று அமெரிக்க இராணுவத்தினர் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

இராக் ஆப்கனிஸ்தான் போர்கள் தொடங்கிய பின்னர் 364,000 கையிருப்புப் படையினர் (reserve troops) களம் இறக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு படையினது பணி 20 மாதங்கள் வரை நீடிக்கலாம். இதில் 30-40 விழுக்காட்டினர் பொதுப் பணியில் இருந்ததைவிடக் குறைந்த சம்பளத்தையே பெறுகிறார்கள். தேசிய பாதுகாப்புப் படையைப் பொறுத்தளவில் (National Guard soldiers) அதில் இருப்பவர்கள் அமெரிக்க படையினரில் மூன்றில் ஒரு பங்கை நிரப்புகிறார்கள். இதற்குத் திரட்டப்படுபவர்கள் தீயணைப்புப் படை, காவல்துறை, அவசரகால மருத்துவப் பணியாளர்கள் ஆவர். இதனால் 44 விழுக்காட்டுப் பணியாளர்களைக் காவல்துறை இழந்துள்ளது. இதனால் கற்றீனா சூறாவளி நியூ ஓர்லியன்ஸ் மாகாணத்தை;தைத் தாக்கிய போது அதன் மீட்புப் பணியில் ஈடுபடுத்துவதற்குப் போதிய பணியாளர்கள் இருக்கவில்லை.

இதை எழுதிக் கொண்டிருக்போதே இராக் நகரங்களில் தீவிரவாதிகள் நடத்திய நான்கு வௌ;வேறு கார்க் குண்டுத்தாக்குதலில் 14 காவல்துறையினர் உட்பட 45 பேர் உயிர் துறந்துள்ளார்கள். நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.   (Mission Accomplished)

2003 மே 1 ஆம் நாள் சனாதிபதி புஷ் USS Abraham Lincoln  என்ற அமெரிக்கப் போர்க்கப்பலில் நின்று கொண்டு போரில் வெற்றி வாகை சூடிவிட்டதாக ஒரு அறிவித்தல் விடுத்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வென்றுவிட்டோம், பாரிய இராணுவ நடவடிக்கைள் முடிவுக்கு வந்து விட்டன, எங்கள் “வேலை முடித்து விட்டது” (Mission Accomplished) என்பதே புஷ் விடுத்த அறிவிப்பாகும். இந்த வாசகம் அடங்கிய பதாதை அவரது முதுகுக்குப் பின்புலத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.

செய்தி ஏடுகளில் தனது படத்தோடு  பரப்பான செய்தி வரவேண்டும் என்று ஆசையில் விடுக்கப்பட்ட அந்த அறிவித்தல் இப்போதும் அவரைத் தொடர்ந்து விரட்டிக் கொண்டிருக்கிறது!

ஆறு மாதங்கள் அதிகம் என்று திட்டமிட்ட புஷ் முப்பத்தாறு மாதங்கள் முடிந்த பின்னரும் இராக் போரை முடிவக்குக் கொண்டு வர முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். கேட்டால் கடதாசியில் திட்டங்களும் வியூகங்களும் போர்யுக்திகளும் போர்த்தந்திரங்களும் அழகாக இருக்கின்றன. ஆனால்,  அவற்றைத் தரையில் நடைமுறைப்படுத்தும் போதுதான் ஒட்டைகள் தெரிகின்;றன என்கிறார்.

போரை எந்த மடையனும் தொடங்கலாம். ஆனால் அதை நிறுத்துவது என்பதுதான் கடினமான செயல்.

புஷ் சேற்றில் காலை விட்டவன் நிலையில் இருக்கிறார். ஒரு காலை இழுத்தால் மற்றக் கால் சேற்றில் புதைகிறது!

சனாதிபதி புஷ் அவர்களது எதிரிகள் “சனாதிபதி புஷ் கையாலாகத தலைவர்” (incompetent president)  என வசைபாடி வருகிறார்கள்.

அமெரிக்க சனாதிபதி புஷ் அவர்களது தனிப்பட்ட செல்வாக்கும் வெகுவாகச் சரிந்துள்ளது. அமெரிக்கர்களில் 52 விழுக்காட்டினர் இராக் போரைப் புஷ் கையாண்டுவரும் விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். முன்னர் 38 விழுக்காட்டினரே எதிர்ப்புத் தெரிவித்து இருந்தார்கள்.

ஆறில் ஒருவர் அமெரிக்கா தனது படையை இராக்கில் இருந்து மீளப்பெற வேண்டும் எனக் கருதுகிறார்கள். மூன்றில் இரண்டு மடங்கு மக்கள் இராக்கை விட்டு வெளியேறுவதற்கு சனாதிபதி புஷ் அவர்களிடம் தெளிவான திட்டம் இல்லை என நினைக்கிறார்கள். காங்கிரசில் இருக்கும் சனநாயக் கட்சிக்குத்தானும் இராக்கை எப்படிக் கையாள்வது என்பது தெரியாது என 70 விழுக்காட்டினர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இந்தப் புள்ளி விபரங்கள் இராக்குக்கு எதிரான அமெரிக்கா படையெடுப்புக்குத் தொடக்கத்தில் இருந்த ஆதரவு எவ்வாறு சரிந்து விட்டது என்பதைக் காட்டுகின்றன. 2003 ஆம் ஆண்டு முடிவில் பத்தில் ஆறு (59 விழுக்காடு) மக்கள் இராக்குக்கு எதிரான போரில் செலவாகும் பணம் வேண்டியதுதான் எனத் தெரிவித்திருந்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் படிமம் உலகளாவிய அளவில் பலத்த அடிவாங்கியுள்ளது. எட்டு அய்ரோப்பிய நாடுகளிலும் பல அரபு நாடுகளிலும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்களில் பெரும்பாலானவை அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அமெரிக்காவுக்கு சாதகமாக இருப்பதை விடப் பாதகமாகவே அமைந்து விட்டதாகத் தெரிவிக்கின்றன.

இராக்கி யுட புசயiடி  மற்றும்  கவுந்தனாமோ வளைகுடா (Guantanamo  Bay)  சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட கொடூர சித்திரவதைகள் அமெரிக்காவிற்கு உலக நாடுகள் மத்தியில் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. அமெரிக்க நீதி திணைக்களம் அந்தச் சிறைச்சாலைகளில் நடைபெற்ற சித்திரவதை சட்டபூர்வமானது என வாதிடுகிறது. இது சித்திரவதைக்கு எதிரான அய்க்கிய நாட்டு அவையினது  மரபை  காலில் போட்டு மிதிப்பதற்கு ஒப்பானதாகும். இந்த மரபில் அமெரிக்கா கைச்சாத்திட்டுள்ளது மனங்கொள்ளத்தக்கது.

இராக் மீதான படையெடுப்பும் ஆக்கிரமிப்பும்  ஒரு பாரிய அழிவு (disaster) என்ற உண்மை நாளும் பொழுதும் வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் ஆளணி இழப்பு மட்டுமல்லாது  பொருள் இழப்பும் எதிர்பார்த்ததைவிடப் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தொடக்கத்தில் இராக் போருக்கு 50 பில்லியன் டொலர்கள் போதும் எனக் கணக்கிடப்பட்டது. இப்போது அது 249 பில்லியனாக அதிகரித்துள்ளது. ஒரு அமெரிக்க  இணையதளம் ஒவ்வொரு வினாடியும் செலவாகும் பணத்தை மீட்டர் ஓடுவதுபோல் காட்டிக் கொண்டிருக்கிறது!

இராக் போருக்குச் செலவாகும் பணத்தில் கோடிக்கணக்கான அமெரிக்க மக்களுக்கு ஆயிரக்கணக்கில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம் எனப் போர் எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.

இராக்கில் இரத்த ஆறு ஓடுகிறது. அந்த மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் அமெரிக்கா தோல்வி அடைந்துள்ளது. அமெரிக்க துரப்புக்கள் பதுங்கு குழிகளிலும் அதியுயல் பாதுகாப்பு வலையங்களிலும் பதுங்கிக் கொண்டிருக்கும் போது இராக்கிய வீரர்களும் காவல்துறையினரும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் அமெரிக்கா மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

இராக்கில் சனநாயகத்தை நிலை நாட்டப் போவதாகச் சூளுரைத்த அமெரிக்கா அங்கு ஆயுதக் குழுக்கள் தோன்றுவதற்கே வழி சமைத்துள்ளது.

ஷியா மதத் தலைவர்களில் பலம் வாய்ந்தவர் என்று கருதப்படும் Moqtada al-Sadr  என்ற மதத் தலைவர் 20 இலக்கம் வறிய ஷியா மதத்தினர் வாழும் சடார் நகரை (Sadr City) தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாக ஆயுதங்களோடு வீதியில் வலம் வருகிறாhகள். இவர்களே சுன்னி மதத்தவரைக் கொல்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. அல் – சடார் தெகரான், டமஸ்கஸ் மற்றும் பெய்ரூட் போன்ற நகரங்களுக்குச் சென்ற போது அவருக்குச் செங்கம்பள வரவேற்புக் கொடுக்கபட்டுள்ளது.

இடைக்கால  அரசு ஏற்பட்டால் கிளர்ச்சி ஓய்ந்து விடும் என்றார்கள். ஆனால் இடைக்கால அரசு ஏற்பட்ட பின்னரும் கிளர்ச்சி நீடித்தது. பின்னர் யாப்பு ஒன்றை வரைந்து தேர்தல் வைத்து ஆட்சி ஒன்றை அமைத்துவிட்டால் கிளர்ச்சி முடிவுக்கு வந்துவிடும் என்று கணக்குப் போட்டார்கள். ஆனால் அதுவும் நடைபெறவில்லை.

பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை போல இராக்கில் சனநாயகத்தை நிலைநாட்டப் போர் தொடுத்ததாகச் சொல்லும் அமெரிக்கா இன்று இராக்கை பெரும்பான்மை ஷியா மதத்தினரிடம் ஒப்படைத்ததன் மூலம் இராக்கை இரானிடம் ஒப்படைத்துள்ளது! அப்படி ஒப்படைக்கத் தவறினாலும் அதுவும் சனநாயகப் படுகொலையாகக் கணிக்கப்பட்டுவிடும்!

அமெரிக்காவைப் பொறுத்தளவில் புலிவாலைப் பிடித்த கதையாக இராக் விளங்குகிறது. இராக்கை பிடித்து வைத்திருக்க முடியாமலும் அங்கிருந்து விட்டு வெளியேற முடியாமலும் இரண்டும் கெட்ட திரிசங்கு நிலையில் அது உள்ளது.

ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தளவில் இராக்கில் இருந்து வெளியேறுவதை விட வேறு மாற்று வழி இல்லை. அப்படி வெளியேறினால் மட்டுமே எஞ்சியுள்ள மிச்சசொச்சப் பெயரைக் காப்பாற்ற முடியும். அதுமட்டும் அல்லாமல் அமெரிக்கா –

1)      இராக் நாட்டில் உள்ள அல் கிரேப் சிறைச்சாலையை மூடிவிட வேண்டும்.

2)     கியூபாவில் உள்ள கவுந்தமானோ வளைகுடா சித்திரவதைக் கூடத்தை மூடிவிட வேண்டும்.

3)      தீவிரவாதிகள் என அய்யப்படுபவர்களை ஏனைய நாடுகளில் உள்ள சிறைக் கூடங்களில் சிஅய்ஏ காலவரையின்றி அடைத்துச் சித்திரவதை செய்வதை நிறுத்த வேண்டும்.

4)      போர்க் கைதிகளை ஜெனிவா மரபுகளுக்கு அமைய நீதிமன்றங்களால் விசாரணை செய்ய வேண்டும்.

5)      இஸ்ரேல் நாட்டைக் கண்மூடித்தனமாக ஆதரிப்தை நிறுத்தி தங்கள் அடிப்படை வாழ்வுரிமைகளுக்காகப் போராடி வரும் பாலஸ்தீனிய மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.

6)      பயங்கரவாதம் என்ற போர்வையில் தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை ஆயுத முனையில் மறுக்கும் இனவாத அரசுகளுக்கு வழங்கும் ஆயுத மற்றும் பொருள் உதவிகளை நிறுத்த வேண்டும்.

7)      ஏனைய நாடுகளின் உள்நாட்டு அலுவர்களில் மூக்கை நுழைக்கும் வெளியுறவுக் கொள்கையைக் கைவிட வேண்டும்.

8)      இராக்கில் மூழ்ந்துள்ள உள்நாட்டுப் போரை முடித்து வைக்குமாறு அரபு நாடுகளைக் கேட்க வேண்டும்.

இவையெல்லாம் நடக்கிற காரியமா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. குறிப்பாக இராக்கில் இருந்து வெளியேறும் முடிவை இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பதவிக்கு வரும் சனாதிபதியே அதனைத் தீர்மானிக்க வேண்டும் என்று சனாதிபதி புஷ் சொல்லி விட்டார். கெடு குடி சொற் கேளாது என்பதற்கு புஷ் மாமாவை விட வேறு எடுத்துக்காட்டு உலகில் உண்டா?  (உலகத்தமிழர் – 24-03-2006)


தமிழகத்தில் அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்

நக்கீரன்

தமிழ் நாட்டுத் தேர்தல் திருவிழா என்பது ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்றது. திரைப்படத்தில் சிரிப்பு, அவலம், இழிபு, வியப்பு, பயம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி முதலிய எட்டுச் சுவைகளைச் சித்தரிக்கும் காட்சிகள் இருக்கும். தமிழ் நாட்டுத் தேர்தலிலும் அவை நிறைய உண்டு.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நாள் குறிப்பிடப்படாவிட்டாலும் தேர்தல் நடைபெறும் நாள் மே 8 என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. மே 11 ஆம் நாள் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பது தெரிந்துவிடும்.

திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்து விட்டாலும் எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

அதிமுக கூட்டணியிலும் இதே நிலைமை தான் நீடிக்கிறது. எல்லாக் கட்சிகளுமே வெற்றி வாய்ப்பு ஒளிமயமாக இருக்கும் தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்கின்றன. தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலுக்கு இதுதான் ஏதுவாகும்.
அதிமுக வேட்பாளர்களைப் பொறுத்தளவில் அவர்களது பெயர்கள் அடங்கி பட்டியலை ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா கோயில் கோயிலாக எடுத்துச் சென்று விக்கிரகங்களது பாதங்களில் வைத்து பூசை செய்கிறார்! இப்படிச் செய்தால் அதிமுக வேட்பாளர்களது வெற்றிக்குக் கடவுள் அருளுவார் என்பது நம்பிக்கை.

மழைக்கு முளைக்கும் காளான்கள் போல் தேர்தல் காலத்தில் பல கட்சிகள் முளைத்துள்ளன. தீரனின் மக்கள் பாட்டாளிக் கட்சி;, திண்டிவனம் ராமமூர்த்தியின் இந்திரா காங்கிரஸ், விஜய ராசேந்திரரின் இலட்சிய திமுக தொகுதிகளுக்காக பொயஸ் தோட்டத்தில் பழி கிடக்கின்றன.

அதிமுக அவர்களுக்கு பிச்சை போடுவதுபோல ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கிக் கொடுக்கிறது. தீரன், திண்டிவனம் ராமமூர்த்தி போன்றோர் தொகுதி ஒதுக்கீட்டுக்குத் தொடர்ந்து தோட்டத்தில் தவம் இருக்கிறார்கள். நரிக்குறவர்கள் கூடத் தங்கள் இனத்துக்கு ஒரு தொகுதி கொடுங்கள் எனக் கேட்டுத் தோட்டத்தில் முகாம் அடித்துக் காத்திருக்கிறார்கள்!
தேர்தல் காலத்தில் இடம்பெறும் கட்சித் தாவல்கள் தொடர்கின்றன. காங்கிரஸ் பேச்சாளர் நெல்லைக் கண்ணன் அதிமுக வில் சேர்ந்துள்ளார்.

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) அதிமுக விடம் 2 தொகுதிகள் கேட்டு வாங்கி தேர்தலில் போட்டியிடுகிறது! தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை 234 தொகுதிகளிலும் போட்டி போடப் போவதாக அறிவித்துள்ளது!

கடந்த பெப்ரவரி 24 ஆம் நாள் கலைஞர் கருணாநிதியை தொகுதி உடன்பாடு பற்றிச் பேசிய பின்னர் “கலைஞர் கருணாநிதியை அடுத்த முதலராக்குவோம்” என்று செய்தியாளர்களிடம் அறிவித்த மதிமுக பொதுச் செயலர் திமுக கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்தார். வைகோவின் தாயார் “நூறு சீட் கொடுத்தாலும் எனது மகன் அந்த அம்மாவோடு சேர மாட்டான்” என விகடன் கிழமை இதழுக்கு செவ்வி கொடுத்தார். ஆனால் மார்ச்சு 4 ஆம் நாள் வைகோ தோட்டத்துக்குச் சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து 35 தொகுதிகளை வாங்கிக் கொண்டு அதிமுக கூட்டணியில் சேர்ந்து கொண்டார்.

இதன் மூலம் வைகோ அதிமுக அணியில் சேர்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று செய்தித் தாள்களில் வலம் வந்த ஊகங்கள் உண்மையாகி விட்டன.

கடந்த இரண்டு மாதங்களாகவே திமுக கூட்டணியா? அதிமுக கூட்டணியா? என வைகோ ஊசலாடிக் கொண்டிருந்தார். அதனால் முதல்வர் ஜெயலலிதாவை விமர்ச்சிப்பதை அவர் தவிர்த்து வந்தார்.

கட்சிகள் கூட்டணி மாறுவது என்பது தமிழ்நாட்டில் மிக மிக சாதாரண நிகழ்ச்சியாகும். திமுக – அதிமுக கூட்டணி மட்டும் இன்னும் ஏற்படவில்லை. மற்றப்படி கட்சிகள் மாறி மாறிக் கூட்டணி வைத்துள்ளன.

1967 இல் அண்ணா தலைமையிலான திமுக இராசாசியின் சுதந்திரா கட்சியோடு கூட்டணி வைத்துத்தான் ஆட்சியைப் பிடித்தது. 1977 ஆம் ஆண்டு தொடக்கம் அமைந்த கூட்டணி எவையெவை என்பதை கீழ்க் கண்ட அட்டவணை காட்டுகிறது.

கட்சிமாறுவதும் கூட்டணி மாறுவதும் இயல்பு என்றாலும் தன்னை 18 மாதங்கள் சிறைக் கொட்டிலில் அடைத்து வைத்த ஜெயலலிதாவோடு வைகோ கூட்டணி வைத்துக் கொண்டதுதான் பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக ஜெயலலிதா தன்னைத் தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரியாகவும் விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்பாளராகவும் காட்டி வந்திருக்கிறார். தேசியத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்த வேண்டும் எனச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ‘பெருமை” அவரைச் சாரும். பொடாவில் வைகோ, பழ.நெடுமாறன், சுப வீரபாண்டியன் போன்றோரை சிறையில் அடைத்த ‘புகழும்’ அவரையே சேரும்!

“‘லட்சியத்தில் உறுதி” “பொதுவாழ்வில் தூய்மை”  “அரசியலில் நேர்மை” வைகோ அடிக்கடி சொல்லும் முழக்கங்கள்
“நாகரிக அரசியல் என்பது அருங்காட்சியகத்தில் மட்டுமே காணப்படுகிற அபூர்வப் பொருளாகி விட்ட இந்தக் காலத்தில வைகோ ஒரு நிகழ்கால அதிசயம்” இந்த வாசகம் எல்லோரும் பார்க்கக் கூடியதாக வைகோ வீட்டில் சுவரில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதுகால வரை வைகோ ஒரு நேர்மையான அரசியல்வாதி, கொண்ட கொள்கைக்காக சிறைச்சாலையை தவச்சாலையாக எண்ணிச் சிரித்த முகத்துடன் செல்லக் கூடியவர் (24 முறை சிறை சென்றுள்ளார்) அடக்குமுறைக்கு அஞ்சாதவர் என்ற படிமம் இருந்தது. அது இனி என்னாகுமோ என்பதுதான் அவரது ஆதரவாளர்களது கவலை.

சிறையில் இருந்த பொழுதும் சிறையில் இருந்து வெளிவந்த பின்னரும் ஜெயலலிதாவை மிகக் கடுமையாகக் கண்டித்தவர். சூடான வார்த்தைப் பதங்களைப் பயன்படுத்தியவர்.

‘மக்கள் என்னும் சக்தியைத் திரட்டி இந்தப் பாசிச ஆட்சியைத் தூக்கி எறிவேன்” இது சென்னை விமான நிலையத்தில் (2002 யூலை 11)  வைத்து காவல்துறையால் பொடாவில் கைது செய்யப்பட்டபோது வைகோ ஆவேசமாக இட்ட முழக்கம்.

”தமிழ்நாட்டை வாழ வைக்க ஏதோ அவதாரம் எடுத்து வந்தவர் மாதிரி பேசும் ஜெயலலிதாவை அரசியலை விட்டு விரட்டுவேன்”  இது பொடா நீதிமன்றத்துக்கும் வேலூர் சிறைக்கும் வானில் வந்து போன போது வைகோ பேசியது.

இப்படியலெ;லாம் பேசிவிட்டு ‘தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு அற்புதமான நிகழ்வு. கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை மறந்து விட்டு, அதிமுகவின் வெற்றிக்காக நாங்கள் உழைப்போம்.’ போயஸ் தோட்டத்து படிக்கட்டுகளில் முதல்வர் “புரட்சித்தலைவி” ஜெயலலிதாவின் பக்கத்தில் நின்ற பேசியது.

“வைகோவின் நண்பர்கள் சரி எதிரிகள் சரி அரசியல் அவரது அரசியல் நகர்வை சந்தர்ப்பவாதம் என்றே நினைக்கிறார்கள்” என ஒரு ஏடு வர்ணித்துள்ளது.

மதிமுக அதிமுக வோடு கூட்டணி சேர்ந்ததற்குத் தொண்டர்கள் மத்தியல் ஆதரவு உண்டுபோல் தெரிகிறது. ஆனால் தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தேர்தல் முடிந்த பின்னரே தெரியவரும்.

“பண்டாரப் பரதேசிகள்” என்றும், “நச்சரவங்கள்’ என்றும் பாஜா வை விமர்சித்து விட்டு, அதே பாஜ அமைச்சரவையில் திமுக இடம் பெறவில்லையா? முரசொலி மாறன் மறைகிற வரை அமைச்சரவையில் நீடித்துவிட்டு அவரது இறுதி சடங்கிற்கு வாஜ்பாய் வந்து சென்ற பிறகு, பாரதிய ஜனதாவுக்கு டாட்டா காட்டிவிட்டு காங்கிரஸ் பக்கம் திமுக தாவவில்லையா? இதற்கெல்லாம் பெயர் என்ன? அவர்கள் எல்லாம் செய்தது ராஜதந்திரம் நான் எடுத்த முடிவு மட்டும் சந்தர்ப்பவாதமா…?’ இவ்வாறு மதிமுக செயலர் வைகோ சூடாகக் கேட்டுள்ளார். இரண்டு பிழைகள் ஒரு சரியாகிவிடாது என்பதுதான் இதற்கான விடை! அதுவும் வைகோ அந்தப் பிழையை விடக் கூடாது என்பதுதான் தமிழ்த் தேசியவாதிகளின் ஆசையாகும்.

ம.தி.மு.க , பொது செயலர் வைகோ திமுக வுடன் ஆன கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு ஒரேயொரு தொகுதி வித்தியாசம்தான் காரணம் என்பதை நினைக்கும் போது அதைக் கொடுத்து கலைஞர் கருணாநிதி வைகோவைத் தன்னோடு வைத்திருந்திருக்கலாம் எனச் சொல்லத் தோன்றுகிறது.

‘மதிமுக வுக்கு 22 தொகுதிகளே ஒதுக்க முடியும் விரும்பினால் அதை ஏற்றுக் கொண்டு கூட்டணியில் நீடிக்கலாம் இல்லாவிட்டால் அவர்கள் போகலாம்” என்று கலைஞர் கருணாநிதி எடுத்தெறிந்து பேசியது அவரது அரசியல் முதிர்ச்சியையோ இராதந்திரத்தைகோ கிஞ்சித்தும் காட்டவில்லை. அகம்பாவத்தைத்தான் அவரது பேச்சுக் காட்டியது.

மதிமுக வுக்கு ஒதுக்கிய 22 தொகுதிகள் இப்போது ஏனைய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி கூட்டணிக் கட்சிகளுக்கு 105 தொகுதிகள் (காங்கிரஸ் 48, பாமக 31, கம்யூனிஸ்ட் (மா) 13, கம்யூனிஸ்ட் (இ) 10 முஸ்லிம் காங்கிரஸ் 3) ஒதுக்கியது போக மீதம் 129 தொகுதிகளே திமுக வுக்கு எஞ்சியுள்ளன. இவற்றிலும் 4  தொகுதிகளை சேதுராமன், ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களுக்கு வழங்கினால்  திமுக போட்டியிடும் தொகுதிகள் 125 மட்டுமே.

திமுக தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 125 தொகுதிகளில் 118 தொகுதிகளை வெல்ல வேண்டும். அதாவது 94.4 விழுக்காடு தொகுதிகளை வெல்ல வேண்டம். இது சாத்தியப்படாது என்பது நிச்சயம்.

கடந்த 2001 ஆம் நடந்த  சட்டசபைத் தேர்தலில் இதே திமுக 167 தொகுதிகளில் போட்டியிட்டது. இது தவிர உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 183 தொகுதிகளில் போட்டியிட்டது.

இந்தத் தொகுதிப் பங்கீடு திமுக தேர்தலுக்குப் பின்னர் ஒரு கூட்டணி அரசை அமைக்க முடிவு செய்துவிட்டதைக் காட்டுகிறது. இவ்வாறான எண்ணம் தொடக்கத்திலேயே வந்திருந்தால் மதிமுக வுக்கு மேலும் 2 அல்லது 3 தொகுதிகளைக் கொடுத்து அந்தக் கட்சியை கூட்டணியோடு வைத்திருந்திருக்கலாம்.

மதிமுகவும் சிறுத்தைகளும் அதிமுகவோடு சேர்ந்தாலும் வி.புலிகளுக்கு வழங்கும் ஆதரவில் மாற்றம் இல்லை என வைகோவும் திருமாவளவனும் அறிவித்துள்ளார்கள். அது மனதுக்கு ஆறுதலையாக இருந்தாலும் அது நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

வைகோ அணிமாறியது சனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை. மதிமுக சனநாயக முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து இருப்பதை எதிர்க்கப் போவதாக கலைஞர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். அவ்வாறு மதிமுக சனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டால் வைகோவிற்கு பிரதமர் மான்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா போன்றவர்களிடம் தற்போது இருக்கும் செல்வாக்கு சரிந்து போய்விடும் என்பதில் அய்யமில்லை. அது தமிழ்த் தேசியத்துக்கு நிச்சயம் பின்னடைவைக் கொடுக்கும்.

தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தளவில் தமிழ்த் நேசியத்தை நேசிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் திரள்வதையே தமிழ் உணர்வாளர்கள் விரும்புகிறார்கள். பாமக மற்றும் திக ஒரு அணியிலும் மதிமுக மற்றும் சிறுத்தைகள் இன்னொரு அணியிலும் எதிரும் புதிருமாக நிற்பதை அவர்கள் விரும்பவில்லை.

இந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு வேட்பாளர்கள் பாமக வேட்பாளர்களோடு மோதப் போகிறார்கள். அது நடக்கக் கூடியதுதான் என்பதை “பாமக போட்டியிடும் தொகுதிகளில் வி.சிறுத்தைகள் அமைப்பு போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் கூட்டணி ‘தர்மமப்படி’ செயல்படுவோம்” என திருமாவளவன் சொல்லியிருப்பது உறுதி செய்கிறது. சிறுத்தைகள் மட்டுமல்ல மதிமுகவும் பாமக வோடு மோத நேரிடலாம்.

இந்தத் தேர்தலில் முன் எப்பொழுதையும் விடத் திரைப்பட நடிகர்களின் கையோங்கியுள்ளது. நடிகர் விஜயகாந்த், நடிகர் கார்த்திக், நடிகர் விஜய இராசேந்தர் தனிக் கட்சிகளுக்குத் தலைமை தாங்குகிறார்கள். நடிகர் விஜயகாந்த் 234 தொகுதிகளிலும் போட்டி போடப் போவதாகவும் ஊழலை ஒழிக்கப் போவதாகவும் மேடைகளில் வசனம் பேசுகிறார்.

நடிகர் விஜயகாந்த் நடிகர் கார்த்திக் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். இது தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து திரைப்பட மோகத்தில் மூழ்கி இருப்பதைக் காட்டுகிறது. புலம் பெயர்ந்த தமிழர்களிடையும் இந்த நோய் இல்லாமல் இல்லை. அதற்குச் சில ஊடகங்கள் தீனி போடுகின்றன என்பதுதான் சோகம்!

மே 8 இல் நடக்கும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாயப்பில்லை. பெரும்பாலும் கூட்டணி ஆட்சியே உருவாகும் என்றே நம்பப்படுகிறது. திமுக இப்போதே அதற்குத் தயாராகிவிட்டது. (உலகத்தமிழர் – மார்ச்சு 17, 2006)


சுதந்திரத்தை நோக்கி நடைபோடும் கொசொவோ
நக்கீரன்

கொசொவோவின் எதிர்கால அரசியல் மற்றும் அதன் சட்டத் தகுநிலை (ளவயவரள)  பற்றி சேர்பியர் மற்றும் அல்பேனியர் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சு வார்த்தை வியனாவில் கடந்த பெப்ரவரி 26 தொடக்கம் நடைபெற்று வருகிறது.

கொசொவோ ஒரு முழு அளவிலான சுதந்திர நாடாக மாற்றம் பெற வேண்டுமா அல்லது சேர்பியா-மொன்ரெநீக்றோ (Serbia – Montenegro) குடியரசின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட வேண்டுமா என்பதை இந்தப் பேச்சு வார்த்தை முடிவு செய்ய இருக்கிறது. பேச்சு வார்த்தை நடத்தும் இரு தரப்பினருக்கும் இடையில் அய்க்கிய நாடுகள் அவை இடையீட்டளாராக (Mediators) இருந்து வருகிறது.

கொசொவோ கடந்த 7 ஆண்டுகளாக (1999 தொடக்கம்) அய்க்கிய நாடுகள் அவையால் நிருவகிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பினரும் தத்தம் பக்க நிலைப்பாட்டை மணித்தியாலக் கணக்கில் எடுத்துப் பேசினார்கள். குறிப்பாக கொசொவோவில் வாழும் சேர்பியர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களில் கல்வி, நல்வாழ்வு (Health) மற்றும் பண்பாடு போன்ற துறைகளில் எந்தளவு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேற்கு நாட்டு இராசதந்திரிகள் இறுதித் தீர்வு கொசொவாவின் உறுதித்தன்iiயையும் அதன் செயல்பாட்டினையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; என வற்புறுத்தி இருக்கிறார்கள்.

கொசொவோவின் மொத்த மக்கள் தொகை 20 இலக்கம் ( 2 million) ஆகும். இதில் அல்பேனியர்கள் 90 விழுக்காடு! சேர்பியர் 8 விழுக்காடு ஆகும்.

கொசொவோ தனிநாடு கேட்டுப் போராடிய போது அவர்களது போராட்டத்தை முறியடிக்க அன்றைய சேர்பிய நாட்டு ஆட்சித் தலைவராக இருந்து ஸ்லோபடன் மிலோசெவிக் (Slobodan Milosevic) இராணுவத்தைக் கொண்டு அடக்க முற்பட்டார். அதனை நிறுத்த நேட்டோ நாடுகள் சேர்பியா மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.

அந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து பட்டார்கள். இலக்கக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள். சண்டை முடிந்த போதும் சேர்பியர்களும் அல்பேனியர்களும் ஒற்றுமையாக இருக்கவில்லை. பகை உணர்வோடு பிரிந்தே வாழ்ந்தார்கள்.
அய்க்கிய நாடுகள் அவை சார்பாக முன்னாள் பின்லாந்து நாட்டுப் பிரதமர் Martti Ahtisaari,  அவரது உதவியாளர்  யுடடிநசவ சுழாயn பங்கு கொள்கிறார்கள்.

அய்க்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் உருசியா நாடுகளைச் சேர்ந்த இராசதந்திரிகளும் இந்தப் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்கிறார்கள். இந்த நாடுகள் கொசொவோவின் எதிர்காலம் பற்றித் தமக்குள் கலந்து பேசி ஒருமுகப்பட்ட முடிவை எட்டியுள்ளன. அதன்படி கொசொவோ மறுபடியும் சேர்பியாவோடு இணைக்கப்படமாட்டாது. அதே சமயம் கொசொவோ வேறு எந்த நாட்டுடனோ, எடுத்துக்காட்டாக அல்பேனியாவோடு, சேரவும் அனுமதிக்கப் படமாட்டாது. எந்த உடன்பாடு கண்டாலும் அது கொசொவோ மக்களது ஆதரவைப் பெற வேண்டும்.

சேர்பியாவைப் பொறுத்தளவில் ஒரு சுதந்திர கொசொவோ பற்றிப் பள்ளிக்கூடங்களும் தேவாலயங்களும் பேசுவதில்லை. சேர்பிய நாட்டு ஊடகங்களும் அதுபற்றி விவாதிப்பதில்லை.

அய்ரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கொசொவோவை சேர்பியா மீண்டும் ஆள நினைப்பதை மறந்து விட வேண்டும் என்கிறார்கள். அதே நேரம் பெரும்பான்மை கொசொவோ அல்பேனியர்கள் சிறுபான்மை கொசோவோ சேர்பியர்களோடு பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருமாறும் வற்புறுத்தி வருகிறார்கள். அப்படிச் செய்தால் மட்டுமே ஒரு உறுதியான, மக்களாட்சியை மதிக்கும் பல்லின கொசொவோவை உருவாக்க முடியும் என அய்ரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ழுடடi சுநபn அறிவுரை வழங்கியுள்ளார். சேர்பியா கொசொவோவை மீண்டும் ஆள வேண்டும் என்ற நினைப்பைக் கைவிட்டு விட வேண:;டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார்.

நேட்டோ நாடுகள் சேர்பியா மீது தாக்குதல் நடத்திய போது அன்றைய யூகோசிலாவியா  நாட்டின் ஆட்சித் தலைவர் ஸ்லோபொடன் மிலோசொவிக்   சண்டையை நிறுத்துவதற்கு அவமானமான நிபந்தனைகளை ஏற்க வேண்டி இருந்தது. அதே சமயம் கொசொவோ விடுதலை இராணுவம் சுதந்திர கொசொவோ பற்றிய தீர்மானம் தள்ளிப்பட்டுப் போனதினால் கவலை அடைந்தது. அதற்கு மேலாக கொசொவோ விடுதலை இராணுவம் ஆயுதங்களைக் கீழெ வைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அது விரும்பவில்லை.

கொசொவோ அய்க்கிய நாடுகள் அவையின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டாலும் நேட்டோ நாடுகளது படைகளே அங்கு நிலைகொண்டு இருந்தது. கொசொவோ அய்க்கிய நாடுகள் அவையின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் அங்கே காலப் போக்கில் மக்களாட்சிக்கு வேண்டிய நிலையான அமைப்புக்களைக் (institutions)  கட்டி எழுப்புவதே ஆகும்.
பண்டைக் காலத்தில் கொசொவோவில் வாழந்தவர்கள் கிரேக்கர்களாலும் உரோமர்களாலும் இலிறியன்ஸ் (Illyrians) என்று அழைக்கப்பட்டார்கள். அந்தப் பிரதேசம் மகா அலெக்சாந்தரால் கிமு 300 ஆண்டளவில் கைப்பற்றப்பட்டது. கிபி 4 ஆம் நூற்றாண்டளவில் அது உரோம பேரரசின் ஒரு பகுதியாக இருந்து வந்தது.

கிபி 6 ஆம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து டனூப் ஆற்றைக் கடந்து சிலாவ்ஸ் கொசொவோ பிரதேசத்தில் குடியேறினார்கள். இந்தப் புலப்பெயர்வு அன்றைய பைசாந்தியம் பேரரசை (Byzantium Empire)  பலவீனப் படுத்த உதவியது. இதனால் இலிறியன்ஸ் அட்றியாரிக்கில் (Adriatic)  இருந்து கிழக்கு நோக்கி கொசொவோ பக்கம் நகர்ந்தார்கள். அவர்களது மொழி அல்பேனியாவோடும் அவர்களது பண்பாடு கத்தோலிக்க மதபீடம் கிழக்கு மற்றும் மேற்குக் கிளைகளாகப் பிரிந்த பின்னர் (கிபி 1054) பைசாந்தியத்தோடும் கலந்து கொண்டன.

போல்க்கன் (Balalkans) பகுதிக்குப் புலம் பெயர்ந்த சிலாவ்ஸ் சிலோவன்ஸ், குறோட்ஸ், சேர்ப்ஸ் என மூன்று பிரிவினராகப் பிரிந்தார்கள். இந்தப் பிரிவு இன்றும் நீடிக்கிறது. 12 ஆம் நூற்றாண்டளவில் இந்தப் பிரதேசம் வட அல்பேனியா என்று அழைக்கப்பட்டது. கொசொவோ சிலாவிக்கியர்களது கையில் சிக்கி இருந்தது.

14 ஆம் நூற்றாண்டில் கொசொவோ சேர்பியர்களால் “பழைய சேர்பியா” என அழைக்கப்பட்டது. ஆனால் கிபி 1389 இல் சேபியர் ஒட்டாமன் துருக்கியர்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அது முதல் கொசொவோ ஒட்டாமன் பேரரசின் ஒரு உறுப்பாக வந்தது. அல்பேனியர்கள் 15 ஆம் நூற்றாண்டில் மீண்டும் கொசோவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். கிபி 1489 இல் ஒட்டாமன் பேரரசு அந்தப் பகுதியின் இறைமையைக் கையில் எடுத்துக் கொண்டது.

இந்தக் கட்டத்தில் பெரும்பான்மை அல்பேனியர்கள் கிறித்தவர்களாவே காணப்பட்டார்கள். அதனால் சேர்பியர்களும் அல்பேனியர்களும் பேரளவு ஒற்றுமையோடு வாழ்ந்தார்கள். ஆனால் நாளடைவில் அல்பேனியர்கள் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.

சிறுபான்மை சேபியர்களும் மதம் மாற்றம் செய்யப்பட்டார்கள். ஆனால், பெரும்பான்மையோர் மதமாற்றத்தை விரும்பாமல் சேர்பியன் பழமைவாத தேவாலயம் (Sebian Orthodox Church) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். ஒட்டமான் துருக்கியர்களது தாக்குதல் காரணமாக சேர்பியர்கள் அல்பேனியாவில் இருந்து வெளியேறினார்கள். இதனால் கொசொவோமக்கள் தொகை வெகுவாகக் குறைந்து போய்விட்டது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அல்பேனியர்கள் அங்கே குடியேறினார்கள்.
கொசொவோ உட்பட சேர்பியா ஒட்டமான் துருக்கியர்களால் 1459 இல் கைப்பற்றப்பட்டது. கிபி 1465 இல் பொஸ்னியாவும் 1483 இல் ஹேர்ஸ்கொவினாவும் (Herzegovina)  கைப்பற்றப்பட்டன.

ஒட்டமான் பேரரசு இஸ்லாமிய அரசாக இருந்ததால் அதன் ஆட்சியில் யூதர்களும் கிறித்தவர்களும் அடக்குமுறைக்கு ஆளானார்கள். அதிக வரி கட்டக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அடிமைகள் போல் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள். அதன் பின்னர் அய்ந்து நூற்றாண்டு காலத்துக்கு ஒட்டமான் பேரரசின் இரும்புப் பிடிக்குள் அது வைக்கப்பட்டிருந்தது. கிபி 1912 இல் போல்கன் யுத்தத்தை அடுத்து சேர்பியா சுதந்திரம் அடையும்வரை இந்த நிலை நீடித்தது.

இஸ்லாமிய மதவாத ஒட்டமான் பேரரசின் அடக்குமுறைக்கு ஆளான சேர்பியர் நகரங்களைவிட்டு நீங்கி மலைப்பிரதேசங்களில் குடியேறி வாழ்ந்தார்கள். நகரங்களில் வாழ்ந்தபோது கைவினைப் பொருட்கள், சுரங்கவேலை மற்றும் வணிகம் முதலிய தொழில்கள் செய்து பிழைத்த சேர்பியர்கள் புதிய சூழலில் கால்நடை வளர்த்தல், விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபட்டார்கள்.

அய்ரோப்பிய நாடுகளும் அவுஸ்திரியாவும் (Austria) துருக்கிக்கு எதிராக ஒட்டமான் பேரரசின் கீழ் வாழ்ந்த சேர்பியர்களது உதவியுடன் பல யுத்தங்களை நடத்தின. துருக்கி-அவுஸ்திரியா இடையில் நடந்த யுத்தத்தின்போது (1593-1605) சேர்பியர்கள் துருக்கிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள். பதிலடியாகத் துருக்கி சுல்தான் சேர்பியர்களால் போற்றப்படும் பரி.சாவா (St. Sava) அவர்களது உயிரற்ற உடலைக் கொளுத்தி அழித்தான்.

சேர்பியர்கள் ஹேர்ஸ்கொவினா என்ற பிரதேசத்தில் இன்னொரு எதிர்ப்பு மையத்தை உருவாக்கித் துருக்கிக்கு எதிராகச் செயல்பட்டார்கள்.

ஆனால் யுத்தத்தை நிறுத்த துருக்கியும் – அவுஸ்திரியாவும் உடன்படிக்கை செய்து கொண்டபோது சேர்பியர் தங்கள் எதிர் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டி நேரிட்டது. இப்படி யுத்தம், அமைதி உடன்படிக்கை, மீண்டும் யுத்தம் என்ற வழமை அடுத்த பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தது.

1683 – 1690 இல் துருக்கிக்கும் அவுஸ்திரியா, போலந்து மற்றும் வெனிஸ் நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பெரிய யுத்தம் நடந்தது. அவுஸ்திரியா, போலந்து மற்றும் வெனிஸ் நாடுகளுக்கு இடையிலான புனித கூட்டணியை (Holy Alliance) போப்பாண்டவரே உருவாக்கி இருந்தார். இந்தப் புனித கூட்டணி நாடுகள் சேர்பியரை துருக்கிக்கு எதிராகக் கிளர்ந்து எழுமாறு தூண்டியது. சேர்பியர்களது கிளர்ச்சி போல்கன் பிரதேசம் முழுதும் பரவியது. சேர்பியர்கள் துருக்கிக்கு எதிராகக் கரந்தடித் தாக்குதலில் ஈடுபட்டார்கள்.

ஒரு கட்டத்தில் அவுஸ்திரியா தனது படையைப் பின்வாங்க முடிவு செய்தது. அப்போது சேர்பியர்களை வடக்கு நோக்கித் தனது பிரதேசத்துக்கு வருமாறு அவுஸ்திரியா கேட்டுக் கொண்டது. துருக்கியின் அடக்குமுறை ஆட்சியில் அடங்கி ஒடுங்கி வாழ்வதா அல்லாது பிறந்த மண்ணை விட்டு வடக்கு நோக்கி இடம்பெயர்ந்து வாழ்வதா என்று தீர்மானிப்பது சேர்பியர்களுக்கு இலகுவாக இருக்கவில்லை. இறுதியில் பெரும்பான்மையினர் (சுமார் 30,000 – 40,000 குடும்பங்கள்) இடம் பெயர்வது என முடிவுக்கு வந்தார்கள்.

சேர்பியர்கள் விட்டு நீங்கிய பிரதேசம் வெறிச்சோடியது. இதுதான் தருணம் என்று எண்ணிய துருக்கி எஞ்சியிருந்த பிரதேச (கொசொவோ, மஸ்டோனியா….) மக்களை இஸ்லாமிய மதத்தை தழுவமாறு அழுத்தம் கொடுத்து அதில் வெற்றியும் கண்டது. இன்று போல்க்கன் பிரதேசத்தில் கணிசமான முஸ்லிம்கள் இருப்பதற்கு இந்த வரலாற்றுப் பின்னணிதான் காரணம்.
துருக்கி – அவுஸ்திரிய நாடுகளுக்கு இடையில் யுத்தம் (1716-1718) மீண்டும் மூண்டது. இம்முறையும் சேர்பியர்கள் அவுஸ்திரியா பக்கம் நின்று போராடினார்கள். யுத்தம் பொஸ்னியா, ஹெர்ஸ்கொவினா, பெல்கிறேட், டனூப் பள்ளத்தாக்கு (Danube Basin) எங்கும் பரவியது. யுத்த முடிவில் ஒரு அமைதி உடன்பாடு துருக்கிக்கும் அவுஸ்திரியாவுக்கும் இடையில் எழுதப்பட்டது. இந்த உடன்படிக்கையின் விளைவாக துருக்கி டனூப் பள்ளத்தாக்கு, வட சேர்பியா, வட பொஸ்னியா போன்ற இடங்களை முற்றாக இழந்தது.

அவுஸ்திரியா – துருக்கி இடையிலான கடைசி யுத்தம் 1788 – 1791 இல் நடந்தது. அந்த யுத்தத்திற்குப் பெயர் டுபிக்கா போர் (Dubica

War) என்பது. இந்தமுறையும் அவுஸ்திரியர் துருக்கிக்கு எதிராகக் கிளர்ந்து எழுமாறு பொஸ்னியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

1877 ஏப்றில் 12 ஆம் நாள் சேர்பியாவும் மொன்ரெநீக்கிறோவும் ஒட்டமான் பேரரசின் மீது போர்ப் பிரகடனம் செய்தன. அதே சமயம் உருசியாவை ஆண்ட இரண்டாவது அலெக்சாந்தர் ஒட்டமான் பேரரசுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தார். 1878 பெப்ரவரி 19 இல் உருசியப் படைகள் டுநஎயெ என்ற நகரைக் கைப்பற்றியது. அதே ஆண்டு உருசியா – ஒட்டமான் பேரரசு இரண்டுக்கும் இடையில் அமைதி உடன்படிக்கை கைச்சாத்தானது.

சேர்பியா, மொன்ரெநீக்றோ மற்றும் றோமேனியா நாடுகளின் சுதந்திரத்தை ஒட்டமான் பேரரசு அங்கீகரித்தது. பின்னர் 1912 இல் சேர்பியாவிற்கும் துருக்கிக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் துருக்கியின் எச்ச சொச்ச ஆட்சி முற்றாக முடிவுக்கு வந்தது. முதலாவது உலக மகா யுத்தம் தொடங்கியபோது போல்க்கன் பிரதேசம் சிறு சிறு நாடுகளாகச் சிதறுண்டு கிடந்தன.

1914 யூன் 14 இல் அவுஸ்திரிய மன்னர் யுரளவசயைn யுசஉhனரமந குசயணெ குநசனiயெனெ பொஸ்னியன் சேர்பியர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலை முதலாவது உலக மகா யுத்தத்திற்கான கொடியேற்றம் ஆக அமைந்தது.
யுத்த முடிவில் வெற்றி பெற்ற நட்பு நாடுகள் போல்க்கன் பிரதேசத்தை கூறுபோட முனைந்தன. அதற்காக அவுஸ்றோ – ஹங்கேரி பேரரசு (யுரளவசழ-ர்ரபெயசயைn நுஅpசைந) துண்டாடப்பட்டது. 1918 இல் சேர்பியர், குரோசியர், பல்கரியன்ஸ், அல்பேனியன்ஸ், மசிடோனியன்ஸ் ஒன்றாக இணைந்து சேர்பியர்களின் இராச்சியம் (Kingdom of Serbs) என்ற அரசை உருவாக்கினார்கள். பின்னர் 1929 ஆம் ஆண்டு அது யூகோசிலாவியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யூகோசிலாவியா என்றால் தென் ஸ்லாவ் அரசு (ளுழரவா ளுடயஎ ளவயவந) என்று பொருள் படும்.
1934 ஆம் ஆண்டு யூகோசிலாவியா மன்னர் அலெக்சாந்தர் மசிடோனியா புரட்சிவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து போல்க்கன் நாடுகளில் புரட்சி இயக்கங்கள், தேசிய இயக்கங்கள் தலைதூக்கின.

இரண்டாவது உலக யுத்தத்தின்போது நாசி ஜெர்மனி அய்ரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து அவற்றை ஆக்கிரமித்தபோது யூகோசிலாவியா இனக் குழுக்களிடம் பிளவு ஏற்பட்டது. பாதிப் பேர் ஜெர்மனியரை “விடுவிப்பாளர்” (டுiடிநசயவழசள) எனக் கூறி வாழ்த்தி வரவேற்றனர். மீதிப் பேர் நாசி ஜெர்மனியை எதிர்த்தனர்.

ஜெர்மனியின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இரண்டு கெரில்லா இயக்கங்கள் போரிட்டன. அதில் ஒன்று மார்ஷல் யோசிப் புறஸ் ரிட்ரோ (துழளip டீசழண வுவைழ) தலைமையில் சோவியத் நாட்டின் ஆதரவோடு போரிட்டது.

1943 ஆம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ரிட்ரோ தலைமையில் சேர்பியா, குரோசியா, ஸ்லோவினா, பொஸ்னியா – ஹெர்ஸ்கொவினா, மசிடோனியா, மொன்ரெநீக்றோ குடியரசுகள் அடங்கிய சமவுடமை யூகோசிலாவிய இணைப்புக் குடியரசு (Yugolovia Federal  Socialist Republic) பிரகடனப் படுத்தப்பட்டது. சனாதிபதி ரிட்ரோ கலப்பு இனத்தவர். இந்தக் குடியரசில் சேர்பியர்களே பெரும்பான்மை இனத்தவராக விளங்கினார்கள்.

1974 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் யாப்பு குரோசியர், ஸ்லோவினியர்கள், முஸ்லிம்கள் மற்றும் அல்பேனியர்களது தேசிய உணர்வையும் பிரிவினை உணர்வையும் அதிகரிக்க வழிகோலியது.

1980 இல் அதிபர் ரிட்ரோ காலமானார். அவரது மறைவோடு இரும்புப் பிடிக்குள் அவர் வைத்திருந்த யூகோசிலாவியா குடியரசு சிதற ஆரம்பித்தது.

சேர்பியாவில் வாழ்ந்த அல்பேனிய சிறுபான்மையினர் தங்களுக்கு யூகோசிலாவியா குடியரசின் கீழ் தன்னாட்சி வேண்டும் என்று வலியுறுத்திப் போராடினார்கள்.

1889 இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (1990) சோவியத் ஒன்றியம் உருக் குலைந்தது. 1991 டிசெம்பர் 8 இல் சோவியத் ஒன்றியம் 74 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசமுறையாகக் கலைக்கப்பட்டது. அதற்கு ஈடாக 12 சுதந்திர நாடுகளின் பொதுநல அமைப்பு உருவாகியது.

இவற்றால் யூகோசிலாவியாவின் அரசியல் ஒருமைப்பாடு ஈடாடிப் போனது. யூகோசிலாவியாவில் உறுப்புரிமை வகித்த குரோசியாவும் ஸ்லோவேனியாவும் முறையே யூன் 25, 1991 இல் சுதந்திரப் பிரகடனம் செய்துவிட்டுத் தனி நாடுகளாகப் பிரிந்தன. இந்த இரண்டு நாடுகளையும் அய்க்கிய .நாடுகள் அவை 1992 சனவரியில் புதிய நாடுகளாக அங்கீகரித்தது.

1991 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் மசிடோனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது. சண்டை இல்லாமல் அமைதி வழி யூகோசிலாவியாவில் இருந்து பிரிந்த ஒரே நாடு மசிடோனியாதான்.

இதனைத் தொடர்ந்து பொஸ்னியா 1992 பெப்ரவரி மாதத்தில் தன்னைச் சுதந்திரநாடாகப் பிரகடனப்படுத்தியது. அதே ஆண்டு ஏப்ரில் மாதத்தில் அதற்கு அய்க்கிய நாடுகள் அவையின் அங்கீகராரம் கிடைத்தது. அதே சமயம் யூகோசிலாவியா (எஞ்சிய) அய்க்கிய நாடுகள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இன்று சேர்பியா – மொன்ரெநீக்றோ இரண்டும் மட்டுமே பழைய யூகோசிலாவியா குடியரசில் எஞ்சி இருக்கும் நாடுகள் ஆகும்.
மிக விரைவில் கொசொவோவும் சுதந்திர நாடாகத் தோற்றம் பெற்றுவிடும் என்பதில் எந்தவித அய்யமும் இல்லை.
நாடுகள் உள்நாட்டு விவகாரம், இறைமை, பிரதேசக் ஒருமைப்பாடு, இறைமை என்ற வேலிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இனப் படுகொலை நடாத்த முடியாது. அதனை உலக நாடுகள் (அமெரிக்கா உட்பட ) அனுமதிக்கவில்லை.

சுண்டைக்காய் நாடுகள் கூட சுதந்திர நாடுகளாகத் தோற்றம் கொள்ளலாம்! அவற்றின் உருவத்துக்கும் சுதந்திரத்திற்கும் தொடர்பு இல்லை.

இன்று உலகத்தில் சிறுபான்மை தேசிய இனங்களைச் சார்ந்த 80 கோடி மக்கள் தங்கள் சுதந்திரத்துக்கும் விடுதலைக்கும் போராடிவருகிறார்கள்.

புலம், வரலாறு, மொழி, பண்பாடு இவற்றின் அடிப்படையில் தேசிய இனங்களாகக் கணிக்கப்படும் ஒவ்வொரு இனத்துக்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்படவேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே நிரந்தர உலக சமாதானத்தை உருவாக்கலாம்.
அய்க்கிய நாடுகள் அவை தோற்றம் பெற்றபோது அதில் உறுப்புரிமை வகித்த நாடுகளின் எண்ணிக்கை வெறுமனே 51 மட்டுமே. இன்று அதன் எண்ணிக்கை 191 ஆகும்.  கடந்த 12 ஆண்டுகளில் (1990-2002) அய்யன்னா  அவையின் உறுப்பினர் தொகை 159 இல் இருந்து 191 ஆக உயர்ந்துள்ளது.

நாடுகளின் தொகை கூடியதால் வானம் இடிந்து விழுந்துவிட வில்லை. அல்லது பூமி பிளந்து விடவில்லை. மாறாக நாடுகளின் அதிகரிப்பு உலக அமைதிக்கு வழிகோலியுள்ளது.

அய்க்கிய நாடுகள் அவையில் தமிழீழத்தைவிடப் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் குறைந்த 38 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.

இந்த வரலாற்று உண்மைகளை சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள அரசியல் கட்சிகளும் செரித்துக் கொண்டால் இனச் சிக்கலுக்குக் குருதி சிந்தாது அமைதியான வழியில் தீர்வு காண முடியும். (உலகத்தமிழர் – மார்ச்சு 10, 2006)


உள்நாட்டுப் போருக்குத் தயாராகும் இராக்
நக்கீரன்

இன்றைய இராக் பண்டைய காலத்தில் தலைசிறந்த ஒரு நாகரிகத்தின் தொட்டில் ஆக விளங்கியது.
ரைகிறிஸ் மற்றும் யுபிரட்டிஸ் (வுபைசளை யனெ நுரிhசயவநள) ஆறுகள் ஓடும் அன்றைய மெசொப்பொட்டாமியா (ஆநளழிழவயஅயை) எகிப்து, கிரேக்கம், உரோம் நாடுகள் நாகரிகம் அடையுமுன்னரே (கிமு 4,000) நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தது.

மெசொப்பொட்டாமியாவில்  வாழ்ந்த சுமேரியர்கள் எழுத்தைக் கண்டு பிடித்து வணிகத் தரவுகளை களிமண்ணில் பதித்து வைத்தார்கள். கிமு 3,000 ஆண்டளவில் முழு அளவிலான நெடுங்கணக்கை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
ரைகிறிஸ் மற்றும் யுபிரட்டிஸ் ஆறுகளின் நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தார்கள். உலக வரலாற்றில் சுமேரியர்களே தங்களது தேவைக்கு அதிகமான உபரி உணவை முதன் முதல் உற்பத்தி செய்தவர்கள் என்ற பெருமைக்கு உரியவர்கள்.
இன்றைய இராக் நாட்டில் குருதி ஆறு ஓடுகிறது. கடந்த 2003 ஆண்டு மார்ச்சு மாதத்தில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இராக் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்புப் போர் காரணமாக 30,000 – 100,000 பொதுமக்கள் அநியாயமாக இறந்து பட்டிருக்கிறார்கள்.
இதுகால வரையில்; அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான கெரிலாத் தாக்குதல்களை ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத மூன்று பிரிவினர் நடாத்தி வந்தார்கள்.

(1) சதாம் குசேனின் ஆதரவாளர்கள்.
(2) அமெரிக்க படையினரை நம்பிக்கை ஈனர்கள் எனக் கருதும் இஸ்லாமிய அடிப்படை வாதிகள்.
(3) இராக்கின் விடுதலைக்காகப் போராடும் இராக்கிய தேசியவாதிகள்.

இப்போது இராக்கிய சுன்னி மதப் பிரிவினரும் சியா மதப் பிரிவினரும் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கி உயிர்ப் பலி எடுத்து வருகிறார்கள்.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் பக்தாத்துக்கு வடக்கே 100 கிமீ தொலைவில் உள்ள சமாரா நகரில் இருந்த பொன்மசூதி சுன்னிகளால் குண்டு வைத்துத் தகர்கப்பட்டது. அதனை அடுத்து சுன்னி-சியா மதப்பிரிவினரிடையே இடம்பெற்று வரும் மோதல்களில் இதுவரை 500 கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

பக்தாத்தில் நேற்று (மார்ச்சு 02) நடந்த தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். சுன்னி மதப் பிரிவினரின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அட்னன் – அல் – துலாய்மி பயணம் செய்த வண்டி மீது மேற்கொண்ட தாக்குதலில் அவர் மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்.

சுன்னி – சியா மதப் பிரிவினருக்கு இடையில் நடைபெறும் தாக்குதல் – எதிர்த்தாக்குதல் இராக்கை ஒரு முழு அளவிலான உள்நாட்டுப் போருக்குத் தள்ளிவிடக் கூடிய அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது.

சதாம் குசேயின் ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த இராக் இன்று அமளி துமளிப் பட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான பயங்கரவாதம் அதற்கு முக்கிய காரணியாகும்.

பொது எதிரியான அமெரிக்காவுக்கு எதிராகப் போராட வேண்டிய இராக் மக்கள் எதற்காக தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஏனைய மதங்களைப் போலவே இஸ்லாம் மதத்திலும் சியா – சுன்னி என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இராக்கின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் சியா, 35 விழுக்காட்டினர் சுன்னி மதப் பிரிவினர் ஆவார்.

ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகச்  சிறுபான்மை சுன்னி மதப்பிரிவினரே ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் கைக்குள் வைத்திருந்தார்கள். இராக்கின் முன்னாள் சனாதிபதி சதாம் குசேன் சுன்னி மதப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

சியா- சன்னி இரு பிரிவினரும் முகமது நபிகள் நாயகத்தை இறை தூதராகவும் குர்ரானை இறைநூலாகவும் ஏற்றுக் கொண்டவர்கள். இருந்தும் இராக் நாட்டில் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் சியா- சுன்னி மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

சியா – சுன்னி இரு மதப்பிரிவினரும் இஸ்லராம் மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை (Five Pillars) ஏற்றுக் கொள்கிறார்கள். அவையாவன –

(1) அல்லாவை விட வேறு கடவுள் இல்லை. முகமது நபிகளே அல்லாவின் கடைசி இறை தூதர் ஆவார்.
(2) ஒரு நாளில் ஐந்து முறை மெக்காவை நோக்கி தொழுதல் வேண்டும்.
(3) இராமதான் மாதத்தில் நோன்பு அனுட்டிக்க வேண்டும்.
(4) வருவாயில் 2.5 விழுக்காடு தர்மத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
(5) உடல் நலம் உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் மெக்காவிற்கு யாத்திரை செய்ய வேண்டும்.

சியா மதப்பிரிவினரின் பொன்மசூதி சுன்னிகளால் தாக்கப்பட்டதை அடுத்து 90 சுன்னி மசூதிகள் சியா மதப் பிரிவினரால் தாக்கிச் சேதப்படுத்தப் பட்டுள்ளன.

பொன்;மசூதியில் முகமது நபிகளின் வாரிசுகளான இருண்டு இமாம்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல இந்த மசூதிக்கு அருகிலேயே 12 சியா இமாம்களின் கடைசி இமாமான முகமது – அல் மாடி காணாமல் போனதாக சியா மதப்பிரிவினர் நம்புகிறார்கள். இந்த அல் மாடி அஸ்காரிய மசூதியில் புதைக்கப்பட்டுள்ள. இரண்டு இமாம்களின் மகன் – பேரன் ஆவார். சியாக்கள் அல் மாடி மறைத்து வைக்கப்பட்டுள்ளார் அவர் வெளிவந்து உலகில் நீதியை நிலைநாட்டுவார் என்று நம்புகிறார்கள்.
இமாம் அல் மாடி பற்றிச் சுன்னிகளது கருத்தியல் வேறுவிதமானது. அவர்கள் மாடிகள் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறந்து தங்களைப் பகைவர்களிடம் இருந்து காப்பாற்றுவார்கள் என நம்புகிறார்கள். வேறு சிலர் முஸ்லிம் உலகம் முற்றுகைக்கு உட்படும் என்றும் அப்போது யேசுநாதர் தோன்றுவார் என்றும் நம்புகிறார்கள்.

பல நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வரும் சியா-சுன்னி மோதல்களுக்கு இந்த அல் மாடி காணாமல் போனதும் ஒரு ஏதுவாகும்.
இந்த இரண்டு மதப் பிரிவினருக்கும் இடையில் உள்ள மிதவாதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போனாலும் கடும் போக்காளர் அவ்வப்போது தங்களுக்குள் கடுமையாகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். சவுதி அரேபிய நாட்டு வாகாபிஸ் மற்றும் சலாபிஸ் போன்ற சுன்னி கடும் போக்காளர்கள் சியா மதப் பிரிவினரை மதவிரோதிகள் என நினைக்கிறார்கள். ஆனால் இலட்சக்கணக்கான சியா பிரிவினர் மக்காவிற்கு கஜ் யாத்திரை மேற்கொள்வதை சவுதி அரேபியா அனுமதிக்கிறது.

சியா- சுன்னி மோதல் 7 ஆம் நூற்றாண்டு தொடங்கி இடம்பெற்று வருகிறது. முகமது நபிகள் இறந்த போதே இந்த மோதல் தொடங்கி விட்டது. சிலர் முகமது நபிகளின் மருமகன் அலி ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் பெரும்பான்மையினர் முகமது நபிகளின் ஆப்த நண்பர் அபூபக்கர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாதிட்டார்கள். அபுபக்கருக்குப் பின்னர் அலி 4 ஆவது கலிவ் ஆகப் பதவிக்கு வந்தார்.

அலியின் ஆட்சிக் காலத்தில் சிரியாவை ஆண்ட ஆளுநர் யெசித் (ஆளுநர் முவியாவின் மகன்) கலிவ் அலியோடு முரண்பட்டுக் கொண்டார். யெசித்தோடு பேசி ஒரு இணக்கத்துக்கு வர அலியின் மகன் குசேன் (முகமது நபியின் பேரன்) தலைமையில் ஒரு குழு சிரியா சென்றது. ஆனால் நிராயுதபாணிகளான குசேனின் குழு கர்பாலா நகரில் (இராக்) இரவில் முகாமிட்டு இருந்த போது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டது. அதில்  குசேன் உட்பட பலர் கொல்லப்பட்டார்கள். ஒரு சிலரே குசேனின் மகனனோடு உயிர்தப்பி மக்கா திரும்பினர். இவர்களே தங்களைச் சியா என்று கூறிக் கொண்டனர்.

முகமது நபிகளின் தலைமுறை கிபி 873 இல் முடிவுக்கு வந்தது.

அல் மகாடி 4 வயதில் இமாம் ஆக பதவி ஏற்றபோது மறைந்த போனார். ஆனால் சியா பிரிவினர் அவர் இறக்கவில்லை எங்கோ மறைத்துவைக்கப்பட்டிருக்கிறார் ஒரு நாள் திரும்பி வருவார் என்று நம்பினார்கள்.

பல நூற்றாண்டு காலமாக அல் மாதி திரும்பி வராததால் சியாப் பிரிவைச் சேர்ந்த 12 உலாமாக்கள் கூடி ஒரு தலைமை இமாமைத் தங்கள் ஆன்மீகத் தலைவராகத் தெரிவு செய்தார்கள்.

இன்று இரானில் ஆன்மீகத் தலைவராக இருக்கும் அயத்தொல்லா கொமேனி (Ayyatollah Khomeni) அவ்வாறு தெரிவு செய்யப்டவர் ஆவார்.  இவரது படம் சியா மதப் பிரிவினரின் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க மதத்தினருக்குப் போப்பாண்டவர் எப்படியோ அப்படியே சியா மதப்பிரிவினருக்கு அயத்தொல்லா விளங்குகிறார். அவர் பிழைவிட முடியாதவர் என்றும் சமயம் பற்றிய அவரது தீர்ப்பே இறுதியானது என சியா மதப்பிரிவினர் நம்புகிறார்கள். உலகில் இரான் மட்டுமே சியா மதப்பிரிவினர் பெரும்பான்மையாக வாழும் நாடாக விளங்குகிறது. சியா மதப்பிரிவினர் அலியைப் பெரிதும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

சியா மதப்பிரிவினரோடு ஒப்பிடும் போது சுன்னி மதப் பிரிவினர் புறட்டஸ்தான் மதப் பிரிவைப் போன்றது. அவர்களுக்கு மதத் தலைவர்கள் கிடையாது.

இராக்கில் சியா – சுன்னி மதப்பிரிவினர் இடையே இடம்பெற்று வரும் கடும் மோதல்களுக்கு அமெரிக்க படையெடுப்பே காரணமாகும். சதாம் குசேன் ஆட்சியின் போது அப்படியான மோதல்கள் இடம் பெற்றது கிடையாது.

பொன்மசூதியைத் தாக்கியவர்கள் அல் கெயிடா தீவிரவாதிகள் என நம்பப்படுகிறது. ஆனால் அவர்களை வழிநடத்துபவர்கள் என்று நம்பப்படும் ஒசமா பின் லேடன் சுன்னிகள் சியா மதத்தவரைத் தாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.

பொன்மசூதி தாக்கப்பட்டதற்குப் பின்னால் இஸ்ரேலும் அமெரிக்கா தலைமையிலான அந்நிய நாட்டுப் படைகளும் காரணம் என இரான் நாட்டு ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா கொமேனி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க இராணுவ கல்லூரியின் சார்பில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று சியா- சுன்னி மதப் பிரிவினரிடையே மத வேறுபாட்டை விதைத்து மதக் கோட்பாட்டு மோதலை வளர்க்க வேண்டும் என அமெரிக்காவைக் கேட்டுள்ளது.

இஸ்லாம் ஏனைய மதங்கள் போலல்லாது மிகவும் கட்டுக் கோப்பான மதமாகும். இஸ்லாம் மதத்தில் அரசு வேறு பள்ளிவாசல் வேறு என்ற பிரிவு கிடையாது. பொதுவாக வெள்ளிக்கிழமைத் தொழுகை;குப் பின்னரே முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன.

மது அருந்தல், புகைத்தல் முஸ்லிம்களுக்கு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியரின் மதநூலான குர்ரான் அல்லாவால் கபிரியல் என்ற தேவதூதர் மூலம் முகமது நபிக்கு ஓதப்பட்டது என்பது நம்பிக்கையாகும். குர்ரான் எழுத்துரு பெற்றபின்னர் அதில் ஒரு கால்புள்ளி கூட மாற்றப்படவில்லை!

மசூதிகளில் வழிபாடு அரபு மொழியிலேயே நடை பெறுகிறது. அதற்காக முஸ்லிம் பிள்ளைகளுக்கு அரபு மொழி இளவயதில் பெற்றோர்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறது. எந்த இனத்தவராக இருந்தாலும் முஸ்லிம் மதத்தவர் அரபு மொழிப் பெயர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும்.

குர்ரானில் உலகம், உயிர், கடவுள் இவற்றுக்கு இடையிலான உறவுகள் பற்றிச் சிக்கலான  தத்துவங்கள் பேசப்படவில்லை. இஸ்லாம் மிகவும் எளிமையான மதமாகும்.

இராக், லெபனன், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் மதம்சார்ந்த மோதல்கள் இஸ்லாம் மதத்திற்குக் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இஸ்லாம் மதம் வன்முறையை வளர்க்கிற அல்லது ஊக்குவிக்கிற தீவிரவாத மதம் என்ற படிமம் ஏற்பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டு செய்தி இதள்களில் முகமது நபிகளை ஒரு பயங்கரவாதி போன்று சித்தரித்து எழுதப்பட்ட கேலிச்சித்திரங்களுக்கு எதிராகத் தீவிரவாத முஸ்லிம்கள் பல நாடுகளில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தீ வைப்பு, கொலை போன்ற வன்முறையில் முடிந்தன. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு மதத் தலைவரை பயங்கரவாதிகயாகச் சித்தரித்து அந்த மதத்தைச் சார்ந்தவர்களின் மனதைப் புண்படுத்துயதை யாரும் எற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே சமயம் அந்தக் கேலிச்சித்;திரம் வரைந்த சித்திரக்காரரது தலைக்கு 10 இலட்சம் விலை பேசுவதையும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

நல்லகாலமாக முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராக முஸ்லிம் அறிஞர்கள் கல்விமான்கள்  குரல் கொடுக்கத்; தொடங்கியுள்ளார்கள்.
“பாசிசம், நாசிசம் மற்றும் ஸ்டாலினிசம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த பின்னர் உலகம் இப்போது புதிதாக இஸ்லாமிசம் என்ற சர்வாதிகாரத்தை எதிர்நோக்குகிறது.

எழுத்தாளர்கள், செய்தியாளர்கள், அறிவிப்பிழைப்பாளர்கள் ஆகிய நாங்கள் மத சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் சுதந்திரம், சமவாய்ப்பு, மதசார்பின்மை போன்ற விழுமியங்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தீவிரஇஸ்லாம் என்பது பிற்போக்குக் கோட்பாடாகும். அது சமத்துவம், சுதந்திரம் மற்றும் மதசார்பின்மையைக் கொல்கிறது. அதன் வெற்றி உலக மேலாண்மை, பெண்கள் மீதான  மேலாண்மை, தீவிரஇஸ்லாமின் மேலாண்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
நாங்கள் எல்லாக் கண்டங்களிலும் எண்ணச் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்க விரும்புகிறோம். நாங்கள் இஸ்லாமிய விரோதிகள் எனக் குற்றம்சாட்டப்படுவோம் என்ற பயத்தில் எதனையும் நுணுகி ஆராய்ந்து பார்ப்பதைக் கைவிட்டு ஒதுங்க நாம் தயாரில்லை.
இந்த அறிக்கையில் 6 அறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள். அவர்களில் சாத்தானின் பாடல்கள் (Satanic Verses) எழுதிய சல்மான் ருஷ்டி, பெண்ணியவாதி தஸ்லிமா நஸ்றீன் அடங்குவர்.

எல்லா மதங்களும் அன்பு, அறன், அருள் போன்ற மனித விழுமியங்களைப் போதித்தாலும் நடைமுறையில் அவற்றைக் காண்பது அரிதாக இருக்கிறது. அதற்கு அதிக தூரம் போக வேண்டியதில்லை. எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்த புத்தரின் மஞ்சள் அங்கி அணிந்த சீடர்கள் ஸ்ரீலங்காவில் போர்ப்பறை கொட்டுவதைப் பார்த்தாலே தெரிந்துவிடும். (உலகத்தமிழர் – மார்ச்சு 03, 2006)


சூடு பிடிக்கும் தமிழகத் தேர்தல் களம் 

நக்கீரன்

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, பரப்புரை என இப்போதே தயாராகிவிட்டன. தேர்தலுக்கான நாள் இன்னும் அறிவிக்கப் படவில்லை. எப்படியும் தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் அல்லது அதற்கு முன்னதாக நடந்தே ஆகவேண்டும்.

தொகுதிப் பங்கீட்டில் திமுக தலைமையிலான 7 கட்சிக் கூட்டணிக்குள் இழுபறி  நிலவுகிறது. எல்லாக் கட்சிகளுமே தங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று அடம் பிடிக்கின்றன.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக குறைந்தது 138 தொகுதிகளை தனக்கு வைத்துக்கொள்ள விரும்புகிறது. எஞ்சிய 96 தொகுதிகளை ஏனைய கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். ஆனால் அதில்தான் சிக்கல் இருக்கிது.
கூட்டணிக் கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்றன என்ற பட்டியலைத் தருமாறு திமுக கேட்டுள்ளது. பாமக தவிர ஏனைய கட்சிகள் பட்டியலைக் கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன. இருந்தும் இந்தக்  கட்சிகள் தங்கள் பட்டியலை விரைவில் கொடுக்கும் என்று திமுக எதிர்பார்க்கிறது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டம் 17 ஆம் நாள்; காலை அண்ணா அறிவாலத்தில் கருணாநிதி தலைமையில் நடக்க இருக்கிறது இந்த கூட்டத்தில் திமுக மற்றும் கட்சிகள் கொடுக்கும் பட்டியலைச் சரிபார்த்துப் .போட்டியிட விரும்பும் தொகுதிகள் பற்றிக் கலந்து பேசி முடிவு எடுக்கப்படலாம். ட்ப
திமுக கூட்டணியில் ம.திமுக நீடிக்குமா இல்லையா என மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ள நிiலில் மதிமுக திமுக கூடணியில் தான் தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் மதிமுக வின் இரண்டாம் மட்டத்  தலைவர்களின் பேச்சு வேறு விதமாக உள்ளது.
ம.திமுக கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் தற்போதுள்ள கூட்டணி குறித்து வாய் திறக்காமல் ஜெயலலிதா குறித்தும் குறைகூறாமல் பாம்பும் சாகவேண்டும் தடியும் முறியக் கூடாது என்பது போல் மதிமுக அணி மாறுவதை உறுதிப்படுத்தும் தோரணையில் பேசியுள்ளார்.
உடுமலை  அருகேயுள்ள கணியூர் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசும்போது “தமிழகத்தில் ம.திமுக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. இதைப் பயன்படுத்தி இந்த முறை வாணிகம் செய்யலாம் என்று உள்ளோம். நாங்கள், என்ன விவசாயிகளா? பாடுபட்டு விதைத்து, இடையில் வெட்டுக் கிளிகள் அரித்து, இறுதியில் வணிகர்கள் இலாபம் பார்ப்பதற்கு? அதற்காக நாங்கள் தனித்து நிற்க மாட்டோம்.  நிச்சயம் கூட்டணிதான்” எனப் பேசியிருக்கிறார்.
இதற்கிடையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் அதிமுக வைகோவிற்கு வலை வீசி வருகிறது. இன்னாள் அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவருமான கே. காளிமுத்து துரியோதனர்களோடு சேர்ந்திருக்கும் வைகோ என்ற கர்ணன் பாண்டவரிடம் வந்து சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். காளிமுத்துவின் பேச்சுக்கள் திமுக வட்டாரத்தில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிமுக அதிமுகவோடு சேரும் பட்சத்தில் 50 தொகுதிகள் வழங்கப்படும் என்றும் தேர்தல் செலவையும் அதிமுக பொறுப்பேற்கும் என்ற பேச்சும் காற்றில் அடிபடுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக திருவண்ணாமலையில் நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய காளிமுத்து தான் வைகோவிடம் தொலைபேசியில் பேசி வருவதாகவும் வைகோ கருணாநிதிபற்றி சொன்னவை வெளியில் சொல்லமுடியாதவை என்றும் பேசியிருக்கிறார்.

“அவதூறான பேச்சுக்களை காளிமுத்து அடிக்கடி பேசி வருவது மக்களிடம் தேவையில்லாத சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. தில்லியில் செவ்வியளித்த நண்பர் வைகோ திமுக கூட்டணியில் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ள சூழ்நிலையில் காளிமுத்துவின் இத்தகைய பேச்சுக்களுக்கு வைகோவே சரியான பதில் அளித்து முற்றுப்புள்ளி வைப்பார்” என்று திமுக பொருளாளர் வீராசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனால் வைகோ திமுக கூட்டணியோடுதான்  இருக்கிறார், அவரைப்பற்றி ஏடுகளில் வெளிவரும் செய்திகள் வேண்டும் என்றே அவரைத் திமுக கூட்டணியில் இருந்து பிரிக்க எதிரிகள் செய்யும் சூழ்ச்சிகள் என்று பேசிவந்த திமுக இப்போது காளிமுத்துவின் பேச்சுக்கு வைகோவே சரியான பதில் அளித்து முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்ப்பதாக அறிக்கை விட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக அனைத்துத் தொகுதியிலும் தோற்றுப்போனது. வைகோவின் சொந்தத் தொகுதியான கலிங்கப்பட்டியிலும் மதிமுக தோற்றுப் போனது. மதிமுக தேர்தலில் 5.12 விழுக்காடு வாக்குகளை மட்டும் பெற முடிந்தது.

இருந்தும் இப்படித் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு வைகோவைத் தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய அவசியம் என்ன?
அவசியம் இருக்கிறது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1)      மக்கள் மத்தியில் வைகோ பற்றிய படிமம் இன்று அதிகரித்துள்ளது. அவரது 18 மாத சிறைவாசம் அவரை ஒரு கொள்கைவாதியாகவும் தியாகியாகவும் மக்களை எண்ண வைத்திருக்கிறது.
2)      நாடாளுமன்றத்துக்கு 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சனநாயக முற்போக்குக் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியதற்கு தமிழ்நாடு முழுதும் வைகோவின் சூறாவளிப் பரப்புரை முக்கிய காரணி எனக் கருதப்படுகிறது.

இன்று தமிழ்நாட்டில் வைகோவே மக்களைக் கவரும் வண்ணம் பேசக் கூடிய சிறந்த பேச்சாளர் என்ற  பெயரை எடுத்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்திக்கும் சேர்ந்து வெளியிடும்  “கருத்து’ இதழ் மூலம் தமிழ்நாட்டின் முதல்வராகும் தகுதி யாருக்கு உண்டு என வாசகர்களிடம் இருந்து கருத்து கேட்டிருந்தனர்.  அதில், வைகோவுக்கு 70 விழுக்காடு வாக்குகளும், ஸ்டாலினுக்கு 10 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியது.
இதனால் உற்சாகம் அடைந்து கொண்ட மதிமுக வின் இரண்டாம் மட்டத் தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் “ வெற்றி பெறும் கூட்டணிக்கு மட்டுமே ஓட்டளித்துப் பழகியவர்கள் மக்கள். அதனால் நாங்கள் இனி வெற்றிக் கூட்டணியில் சேருவோம். எங்களுக்கும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் வேண்டும். தொண்டர்களின் கருத்து அறியப்பட்டு வருகிறது. ஒரு கூட்டணியில் மாட்டிக்கிட்டு முழிக்க நாங்கள் தயாரில்லை வேட்பு மனு தாக்கல் வரை பார்ப்போம். கடந்த லோக்சபா தேர்தலில் திமுககூட்டணி வெற்றி பெற வைகோவின் பேச்சுத் தான் காரணம். அழகான பொண்ணு இருந்தா எல்லாருக்கும் ஆசை இருக்கும். எங்களுக்கும் தகுதி இருக்கிறது. தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறோம் அரசியலில் எதுவும் நடக்கலாம்.  நாட்டுக்கு எது நல்லது, கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் கூட்டணி அமைந்துள்ளதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். சில முடிவுகள் தேடி வருகின்றன. தவறு செய்தவர்கள் வட்டியும், முதலுமாக சேர்த்து பிராயசித்தம் செய்யத் தயாராகி வருகின்றனர். இந்த தேர்தலில் நிச்சயம் மதிமுகவுக்கு 50 தொகுதிகள் கிடைக்கும்” எனப் பேசியுள்ளார்.

மதிமுக தொடங்கி 12 ஆண்டுகள் (1994) ஆகிவிட்டன. இதுவரை காலமும் சட்டசபையில் கணக்கே திறக்கவில்ல. இந்த நிலையில் மதிமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் தங்கள் எம்எல்ஏ கனவுகள் நனவாக இலவு காத்த கிளிகள் போல மேலும்  காத்திருக்கத் தயாராயில்லை என்பது தெரிகிறது.

வைகோ பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவினால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் 578 நாள்கள் (யூலை 11, 2002 – பெப்ரவரி 07,2004) அடைக்கப்பட்டவர். வைகோ தனது கைது அரசியல் பழிவாங்கல் என்று ஜெயலலிதா மீது கடுமையாகக் குற்றம் சாட்டினார்.  வைகோ மட்டுமல்ல ஏனையோரும் அப்படித்தான் பேசினார்கள். அது மட்டுமல்ல வைகோவுக்கு எதிரான 18 ஆண்டுகளுக்கு முந்திய ஒரு வழக்கையும் தூசி தட்டி எடுத்த ஜெயலலிதா அவரை வேலூர்க்கும் நீதிமன்றத்துக்கும் இழுத்தடித்தார்.
ஜெயலலிதா தமிழ்நாட்டில் பழிவாங்கும் அரசியலையே நடத்தி வருகிறார். சிலர் பட்டறிவு காரணமாக அரசியல் முதிர்ச்சி, பக்குவம் அடைவார்கள். ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து தலைக்கனத்தோடு ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியாகவே நடந்து கொள்கிறார். அவரிடம் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் தகுதி பண்பு நாகரிகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

2001 இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு சென்னையில் மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்தார் என்ற குற்றம் சாட்டி நள்ளிரவில் ஜெயலலிதா காவல்துறை அதிகாரிகளை அனுப்பி கலைஞரைக் கதறக் கதறக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டுபோய் சிறையில் அடைத்தார்.

மதுரையைச் சேர்ந்த  ஷெரிஜா பானு, அவரது தாயார் ரஷிஜா, வண்டியோட்டி சதீஷ் ஆகியோர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். காவல்துறையே ஜெயலலிதாவின் கட்டளைப்படி கஞ்சாவை வைத்துவிட்டுக் கைது செய்ததாக பரவலான குற்றச் சாட்டு எழுந்தது. கைதுக்குக் காரணம்? சசிகலாவின் கணவர் நடராசன் ஷெரிஜா பானுவோடு வைத்திருந்த தொடர்பே எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் சென்னையில் பெய்த கன மழை மற்றும் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கியது. சென்னை எம்.ஜிஆர் நகரில் வெள்ள நிவாரணம் பெறக் கூடியிருந்த மக்களிடையே ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 42 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அரசு மற்றும் காவல்துறையின் கையாலாகத்தனத்தால்தான் அச் சம்பவம் நடந்தது.  ஆனால், இந்தச் சாவுகளுக்கு திமுகவினர் பரப்பிய வதந்தியே காரணம் என முதல்வர் ஜெயலலிதா ‘கண்டுபிடித்தார்.’

அதனைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர் தனசேகரன் கைது செய்யப்பட்டார். வழக்கில் அவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை கொடுத்தது. ஆனால் அதற்குள் பிணையில் வெளியே வர முடியாதவாறு தனசேகரன் மீது குண்டர் சட்டம் ஏவிவிடப்பட்டது. குண்டர் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தனசேகரன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், சம்பத்குமார் ஆகியோர் கீழ் நீதிமன்றம் முறைப்பாட்டாளருக்கு நிபந்தனையோடு  அளித்த பிணையை கருத்தில் கொள்ளாமல் குண்டர் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தததை ஏற்க முடியாது எனவே அவர் கைது செய்யப்பட்டது செல்லாது உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என அதிரடியாகத்  தீர்ப்பளித்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திலும் ஜெயலலிதா அரசு வாங்கிக் கட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையைப் பயன்படுத்தித் தனது எதிரிகளைப் பொய்வழக்கில் சிக்க வைத்துப் பழிவாங்குவது ஜெயலலிதாவிற்குக் கைவந்த கலையாகும். வைகோவே அதற்கு சான்றாக விளங்குகின்றார்.

அப்படிப்பட்ட ஒரு பண்பற்ற, பணிவற்ற, நாகரிகமற்ற ஒரு அரசியல்வாதியோடு வைகோ சில தேர்தல் தொகுதிகளுக்காக மீண்டும் கைகோர்த்தால் தூய்மையான அரசியல்வாதி (ஆச.ஊடநயn Pழடவைiஉயைn) என்ற அவரது படிமம் சேதாரப்படலாம் எனப் பலர் நினைக்கிறார்கள்.

அது மட்டுமல்ல ஜெயலலிதா ஏதாவது ஒரு அற்ப காரணத்துக்காக வைகோவை  மீண்டும் வெளியேற்றி அவமானப்படுத்தினாலும் அதில் வியப்பேதுமில்லை.
1999 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிகவும் அதிமுகவும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் என்று சொல்லி அணி சேர்ந்த வைகோ பின்னர் அதில் இருந்து வெளியேறினார் என்பது நினைவு கூரத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதா 2001 இல் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன், அரசு அலுவலகர்கள், ஆசிரியர்கள், தொழிலாhளர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பினரும் பெற்று வந்த சலுகைகள் அனைத்தையும், நிதிநிலையைக் காரணம் காட்டி வெட்டிவிட்டார். அப்படிச் செய்துவிட்டு அதற்குக் காரணம் கருணாநிதியின் முந்தைய ஆட்சிதான் என்று பழி சுமத்தினார்.

சாலைப் பணியாளர் 10 ஆயிரம் பேர், மக்கள் நலப் பணியாளர் 13 ஆயிரம் பேர், கூட்டுறவுப் பணியாளர் 9 ஆயிரம் பேரைக் கூண்டோடு பணி நீக்கம் செய்தார். ஆனால், இப்போது, சட்டசபைத் தேர்தல் வருவதை முன்னிட்டு, மக்களுக்குப் பல்வேறு சலுகைகளை நாள்தோறும் அறிவிப்புச் செய்து வருவதுடன், சாலைப் பணியாளர்களின் மீது  “கருணை’ காட்டி, திடீரென மீண்டும் வேலை கொடுத்து, அவர்களுக்கு எதிரான நீதி மன்ற வழக்கையும் திருப்பிப் பெறப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த நாலரை  ஆண்டு காலம், அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளுக்கும், எதிர்க்கட்சியினரின் குரல்களுக்கும் செவி சாய்க்காத முதல்வர், நிதிநிலையைக் காரணம் காட்டி வந்த முதல்வர், தற்போது நிதிநிலை சீராகி விட்டதாகக் கூறி, நாளாந்தம் சலுகை அறிவிப்புகளை செய்து வருகிறார்.  அரசால் அறிவிக்கப்படும் சலுகைகள், எந்த நோக்கத்தைக் கருத்திற் கொண்டு வழங்கப் படுகிறது என்பதை மக்கள் உணராமல் இல்லை. “ஜீபூம்பா’ நிலையில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும், தேர்தலுக்குப் பின் நீடிக்குமா என்பது பெரிய கேள்விக் குறியாகும்.  தேர்தல் ஆணையம்  தேர்தல் தேதியை அறிவிக்கும் வரை அரசு வழங்கும் சலுகை அறிவிப்புகள், புதிய தொழிற்சாலைகள் பற்றிய உறுதி மொழிகள் தேர்தலில் ஓட்டுகளைப் பெறுவதற்குத் தரப்படும் கையூட்டு என்பதே சரியாகும்.

1967 இல் இருந்து தமிழக அரசியலை புரட்டிப் பார்த்தால், தொடர்ந்து திரையுலகத் துறையைச் சேர்ந்தவர்கள் தான் முதல்வர் நாற்காலியைப் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். எத்தனையோ பேர் படிப்பு, அனுபவம், திறமை, தகுதி படைத்து இருந்தும் அவர்களால் முதல்வர் நாற்காலியைப் பிடிக்க முடியவி;ல்லை.

1967 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த திமுக. பின்னர் அதில் இருந்து பிரிந்து போன அதிமுக கட்சி இரண்டுமே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகள் மீதும் உள்ள சினிமாக் கவர்ச்சி இன்னும் விட்டுப் போகவில்லை.

நடிகர் செந்தில், விஜயகுமார், முரளி, இயக்குநர் விஜய இராசேந்திரர்,  இயக்குநர் லியாகத் அலிகான், திரைப்படத் தயாரிப்பாளர் பழ. கருப்பையா ஆகியோர் அதிமுகவில் சங்கமமாயுள்ளது அந்தக் கட்சிக்கு ஏற்கனவே உள்ள சினிமாக் கவர்ச்சியை அதிகரிகச் செய்துள்ளது.

சினிமாக் கவர்ச்சியை நம்பியே நடிகர் விஜயகாந்த் தேசிய திமுக வைத் தொடக்கி இருக்கிறார். அவர் போகும் இடமெலாம் கூட்டம் அலை மோதுகிறது. அது வாக்ககளாக மாறுமா என்பது தேர்தல் முடிந்த பின்னர்தான் தெரியவரும்.

இன்னொரு சினிமா நடிகர் கார்த்திக் தமிழ்நாடு  குழசறயசன டீடழஉம கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று திராவிடக் கட்சிகள் தேர்தல் அரசியலுக்காக இந்தி எதிர்ப்பைக் கைவிட்டு விட்டன.  பகுத்தறிவு கொள்கையும் காற்றோடு போய்விட்டது. அதிமுக பற்றிப் பேசவே வேண்டாம். அந்தக் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் வேற்றுமை காண முடியாத அளவுக்கு அது ஒரு மதவாதக் கட்சியாக மாறிவிட்டது.

அதிமுக கட்சித் தலைவர்கள் தங்களை அம்மா உதைத்தாலும் அம்மா காலால் உதைவாங்கியதைப் பெருமையாக நினைக்கிறார்கள். அதனால் ஜெயலலிதா அவர்களைத் தனது கொத்தடிமைகளாகவே வைத்திருக்கிறார். சட்டசபைக்குள் அவர் நுழையும் போது அமைச்சர்கள் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறார்கள். சட்டசபையில் பேரவைத் தலைவருக்கு மட்டும் எழுந்து மரியாதை செய்வதே மரபாகும்.

வேடிக்கை என்னவென்றால் கருத்துக் கணிப்புக்கள் எதிர் வரும் தேர்தலில் ஜெயலலிதாவே வெல்வார் எனச் சொல்கின்றன. கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மற்றும்  கும்முடிப்பூண்டி தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்றமுறை திமுக அணிpயிலிருந்து வைகோ அநீதியான முறையில் கழட்டிவிடப்பட்டார். இம்முறை அவராகவே அணியிலிருந்து போய்விடுவாரா? அவரது முடிவு எதுவாக இருந்தாலும் அது தமிழ்த் தேசியத்துக்கு ஊறு விளைக்காது என்று நம்பலாம்.  (உலகத்தமிழர் – பெப்ரவரி 27, 2006)


பழமைவாதக் கட்சி தரம் இறங்க இரண்டு  கிழமையே பிடித்தது!

நக்கீரன்  

ஸ்ரீபன் கார்ப்பர் (47) கனடாவின் 22 ஆவது பிரதமராக கடந்த பெப்ரலரி 6 ஆம் நாள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

அதன் பின் புதிய அமைச்சரவை பற்றிய விபரத்தை வெளியிட்ட பிரதமர் ஸ்ரீவன் கார்ப்பர் தனது அரசு முன்னுரிமை வழங்க இருக்கும் அய்ந்து முக்கிய திட்டங்களை அறிவித்தார்.

1)    மத்திய அரசின் பொறுப்புடமை சட்டத்தை  ( Federal  Accountability Act) இயற்றி அரச இயந்திரத்தைத் தூய்மைப் படுத்தல்.
2)    உழைக்கும் கனடியர்களது வரிச் சுமை குறைக்கப்படும். அதன் தொடக்கமாக பொருட்கள் மற்றம் சேவை வரி குறைக்கப்படும்.
3)     கனடிய குடும்பங்களையும் சமூகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு நீதிமுறை பலப்படுத்தப் படும்.
4)    குழந்தைப் பராமரிப்பில் பெற்றோரது விருப்பப்படி நடத்தல்.
5)    கனடியர்களது நல்வாழ்வுத் தேவையை, எப்போது தேவைப்படுகிறதோ அப்போது  வழங்கும் பொருட்டு மாகாண அரசுகளுடன் பேசி நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தை உறுதிப்படுத்தல்.

மேலும் “எங்களது வழிமுறைகள் தெளிவானது. நாங்கள் எங்களது பொது நிறுவனங்கள் மீது நம்பிக்கையை மீள்கட்டியெழுப்பி கனடாவை வலிமையும் ஒற்றுமையும் படைத்த  நாடாக வைத்திருப்போம்” எனப் பிரதமர் குறிப்பிட்டார்.  பேச்சுப் பல்லக்குத்தான்! ஆனால் கார்ப்பரின் நடைமுறை எப்படி இருக்கிறது?

“அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு வார்” என்று பிழாவைத் தூக்கிய குடிமகன்  கதையாகப் பிரதமராகப் பதவியேற்ற பழமைவாதக் கட்சியின் தலைவர் ஸ்ரீபன் கார்ப்பர் ஆட்சியில் பொறுப்புடமை (Accountability) அரசியலில் தூய்மை, வினையில் ஒழுக்கம் என்ற தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று? அவற்றுக்கு நேர்ந்த கதியென்ன?

கார்ப்பர் பிரதமராகப் பதவி ஏற்ற அடுத்த கணம் எந்த வாக்குறுதிகளை அள்ளி வீசித் தேர்தலில் வென்று வந்தாரோ அவற்றில் முக்கியமான இரண்டைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார்!

சென்ற மாத பிற்பகுதியில் லிபரல் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற வன்கூவர்-கிங்ஸ்வே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் இமேர்சன் இந்த மாத முற்பகுதியில் கார்ப்பர் அமைச்சர் அவையில் பன்னாட்டு வணிக அமைச்சராகி விட்டார்!

டேவிட் இமேர்சன் லிபரல் ஆட்சியின் போது கைத்தொழில் அமைச்சராக இருந்தவர்.

இந்தக் கட்சித் தாவல் அவருக்கு வாக்குப் போட்டு வெற்றிபெறச் செய்த தொகுதி வாக்காளர்களுக்குக் கன்னத்தில் அடித்தமாதிரிப் போய்விட்டது. லிபரல் மற்றும் புதிய மக்களாட்சிக் கட்சி இரண்டுக்கும் கிடைத்த வாக்கு விழுக்காடு 77 க்கு அதிகமாகும். பழமைவாதக் கட்சிக்கு வெறுமனே 20 விழுக்காடு வாக்குகளே விழுந்தன.

கட்சிமாறிய இமேர்சனைப் பதவி விலகுமாறு அவரது தொகுதி லிபரல் கிளை  கேட்டுள்ளது. அவரது தேர்தல் வெற்றிக்குச் செலவளித்த 96,755 டொலர்களைத் திருப்பித் தருமாறும் கேட்டுள்ளது. வாக்காளர்கள் அவரைத் திருப்பி அனுப்பக் கேட்டுக் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.

வானொலியும் தொலைக்காட்சியும் இந்தக் கட்சித் தாவலை நாள்தோறும் தாளித்துக் கொண்டு இருக்கின்றன!

ஆனால் அமைச்சர் டேவிட் இமேர்சன் அசைவதாக இல்லை. தான் பதவி விலகப்போவதும் இல்லை பணத்தைத் திருப்பிக் கொடுக்கப் போவதும் இல்லை என்று அடித்துச் சொல்லி விட்டார். அவரது தொகுதி வாக்காளர்கள்தான் பாவம்! அமைச்சர் அவர்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டார்!

டேவிட் இமேர்சன் பழமைவாதக் கட்சிக்கு நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்தது  பழமைவாதக் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இல்லை என்பதைக் காட்டுகிறது.

இன்னொருவர் மைக்கேல் வோட்டியர் (Michel Fortier)  ஆவார். இவர் தேர்தலில் நிற்காதவர். இப்போது பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல அவர் கார்ப்பரால் மேலவைக்கு நியமிக்கப்பட்டு பொதுப்பணி (Public Works) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்! இது மேல்சபைக்கு உறுப்பினர்கள் பிரதமரால் நியமனம் செய்யப்படும் முறைக்கு முழுக்குப் போட்டுவிட்டு தேர்தல் மூலம் அவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற பழமைவாதக் கட்சியின் தேர்தல் உறுதிமொழிக்கு வேட்டு வைப்பதாக உள்ளது. மைக்கேல் வோட்டியர் கியூபெக் மாகாண பழமைவாதக் கட்சியின் தேர்தல் இணைத் தலைவராகப் பணியாற்றினார். அதற்கான பரிசு இந்த மேலவை மற்றும் அமைச்சர் பதவி பரிசாக எடுத்துக்கொள்ளலாம். பொதுப்பணி அமைச்சு பணம் புரளும் அமைச்சாகும்!

லிபரல் கட்சியின் அரசியல் தரத்துக்குப் பழமைவாதக் கட்சி தரம் இறங்க இரண்டு  கிழமையே பிடித்திருக்கிறது!

தேர்தல் பரப்புரையின் போது “முக்கிய அரச நியமனங்கள் தகுதி திறமை அடிப்படையிலேயே நிரப்பப்பட வேண்டும் அவை நண்பர்கள் கட்சி ஆதரவாளர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று வீரம் பேசிய கார்ப்பர் அதனை இவ்வளவு கெதியில் மறப்பார் என யாரும் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கட்சித் தாவல் என்று வரும்போது கனடிய அரசியல்வாதிகள் மூன்றாம் உலக அரசியல்வாதிகளுக்கு எள்ளளவேனும் சளைத்தவர்கள் அல்லர்! இன்னும் சொல்லப் போனால் இவர்கள் அவர்களை விட விபரமானவர்கள்!

அரசியலில் கற்பைப் பற்றிக் கூறவந்தால் கனடிய அரசியல் அதற்கு நிச்சயமாக ஒரு எடுத்துக் காட்டல்ல எனலாம். கட்சி தாவல் கனடிய அரசியலுக்குப் புதியதன்று..அது இங்கு  மிகச் சாதாரணமாகப் போய்விட்டது.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற டீநடiனெய ளுவழயெஉh லிபரல் கட்சிக்குத் தாவியது மட்டுமல்ல போல் மாட்டின் அவருக்கு மனிதவள அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்த்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இன்று கியூபெக் மாகாண முதலமைச்சராக இருக்கும் துநயn ஊhயசநளவ 1993 ஆம் ஆண்டு முற்போக்கு பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அதே ஆண்டு நடந்த தேர்தலில் பழமைவாதக் கட்சி படு தோல்வியைத் தழுவியது. 295 தொகுதிகளில் போட்டியிட்ட பழமைவாதக் கட்சி 2 தொகுதிகிளில் மட்டும் வெற்றிபெற்றது. அதில் துநயn ஊhயசநளவ ஒருவர். 1997 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பழமைவாதக் கட்சி 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால் விரக்தி அடைந்த  ஊhயசநளவ பழமைவாதக் கட்சியைக் கைகழுவி விட்டு கியூபெக் மாகாண லிபரல் கட்சிக்கு 1998 இல் தாவினார்.

அதே ஆண்டு கியூபெக் மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஊhயசநளவ எதிர்க் கட்சித் தலைவரானார். பின்னர் 2003 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அந்த மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார்.

Belinda Stronach   2004 மே மாதத்தில் நடந்த தேர்தலில்  New Market – Aurora தொகுதியில் பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர். தொழில் அதிபரான இவர் Scott Brison  Magna  என்ற தொழில் நிறுவனத்தின் இயக்குநர் அவையில் இயக்குநராக (1988-2004) இருந்தவர்.  நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட அதே மாதம் (மே 17)  லிபரல் கட்சிக்குப் பாய்ந்தார். போல் மாட்டின் உடனே அவரை  மனிதவள அமைச்சராக நியமித்தார்.  ளுஉழவவ டீசளைழn 1997 இல் பழமைவாதக் கட்சி சார்பில்  KingHants (Nova Scotia) போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2003 ஆம் ஆண்டு லிபரல் கட்சிக்குத் தாவினார். தாவிய கையோடு பிரதமரின் நாடாளுமன்றச் செயலாளராக பதவி நியமனம் செய்யப்பட்டார்.

வேடிக்கை என்னவென்றால் கட்சி தாவிய Scott Brison மற்றும்  Belinda Stronach   இப்போது நடந்து முடிந்த தேர்தலில் இருவரும் அதே தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்!

பழமைவாதக் கட்சியில் போட்டியிட்ட போதும் வென்றார்கள். லிபரல் கட்சியில் போட்டியிட்ட போதும் வெல்கிறார்கள். அப்படியென்றால் தேர்தலில் கட்சிச் செல்வாக்கைவிட தங்கள் சொந்தச் செல்வாக்கில் இவர்கள் வெல்கிறார்களா?

Belinda Stronach  கட்சி தாவியபோது கார்ப்பர் அவரைக் கடுமையாகச் சாடினார். “Belinda Stronach  கட்சி தாவியது பழமைவாதக் கட்சி நா.உறுப்பினர்களது மனதில் வாட்டத்தையம் ஏமாற்றத்தையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. பலர் அவர் கட்சிக்குத் துரோகம் செய்து விட்டார்” என செய்தியாளர் மாநாட்டில் கார்ப்பர் சொன்னார். மேலும் பேசுகையில் “இந்தக் கட்சித் தாவல் எமது நாடாளுமன்றக் குழுவின் லிபரல் ஆளும் கட்சி அடிப்படையில் ஒரு ஊழல் நிறைந்த கட்சி என்ற நிலைப்பாட்டில் மாற்றவில்லை.”

இப்போது கூட லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர்  Bob Rae, Belinda Stronach, மற்றும் Scott Brison  ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. பொப் றே புதிய மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்.

கார்ப்பரின் குத்துக் கரணங்கள் பழமைவாதக் கட்சியி நா.உறுப்பினர்களிடையே சினத்தை மூட்டியுள்ளது. எதையெதை எதிர்த்துத் தேர்தலில் பரப்புரை செய்தோமோ அவற்றுக்கு மாறாக கார்ப்பர் நடந்து கொள்வது அதிர்ச்சியாக இருக்கிறது எனப் பலர் புலம்புகிறார்கள்.

பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் இன்னொரு சாதனையையும் செய்து காட்டியுள்ளார். முன்னர் கனடிய இராணுவத்துக்கு ஆயுத தளபாடம் விற்கும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு மாமா வேலை (Lobbyist) பார்த்து வந்த  (இழிவு பொருளில் இதை நான் கூறவில்லை) ஓய்வு பெற்ற இராணுவ தளபதி Gordon O’Connor   பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது கள்ளனைக் காவலுக்கு வைத்த கதை மாதிரி என்று எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன. மாமா வேலை பார்ப்போரை எதிர்க்கும் கார்ப்பர் அப்படியான ஒருவரை எப்படி அமைச்சராக்கினார் அதிலும் பாதுகாப்பு அமைச்சராக்கினார் என எல்லோரும் வியப்பில் மூக்கில் விரலை வைக்கிறார்கள்.

பீட்டர் மக்கே துணைப் பிரதமராக நியமிக்கப்படலாம் என எதிர்வுகூறல் சொல்லப்பட்டது. ஆனால் துணைப் பிரதமர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. பழமைவாதக் கட்சியின் முக்கிய தலைவர்களான பீட்டர் மக்கே மற்றும் ஸ்ரொக்வெல் டே இருவரும் முறையே வெளியுறவு மற்றும் பொதுப் பாதுகாப்பு (Public Safety) அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரொக்வெல்லே வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் அவர்தான் பழமைவாதக் கட்சியின் வெளியுறவு விமர்சகராக இருந்தார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சரான ஸ்ரொக்வெல்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்குப் பொறுப்பாக இருக்கப் போகிறார்.

ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தி உளவுத்துறை வி.புலிகளை தடைசெய்யுமாறு புதிய அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

எதிர்கட்சி வரிசையில் இருந்து கொண்டு வி.புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்ரொக்வெல் மற்றும் பீட்டர் மக்கே அப்படிச் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. வி.புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும்போது வி.புலிகள் அமைப்புத்  தடை செய்யப்படுவது சாத்தியமில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் வெடித்தால் கனடிய அரசின் நிலைப்பாடு மாறலாம்.

பழமைவாதக் கட்சியின் நட்சத்திர  நாடாளுமன்ற உறுப்பினர் Diane  Ablonczy  க்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு நாடாளுமன்றச் செயலாளர் பதவியே வழங்கப்பட்டுள்ளது. கட்சி தாவிக்கும் தேர்தலில் போட்டியிடாதவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கும் போது னுயைநெ யுடிடழnஉணல போன்ற பட்டறிவும் திறமையும் வாய்ந்த ஒரு பெண்ணுக்கு அமைச்சர் பதவி வழங்காதது ஆண் – பெண் சமத்துவத்தில் கார்ப்பருக்கு அதிக நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது.

அகப்பை பிடிப்பவள் நம்மடை ஆள் என்றால் அடிப் பந்தியில் இருந்தால் என்ன நுனிப் பந்தியில் இருந்தால் என்ன? கார்ப்பர் அமைச்சரவையில் அவரது சொந்த மாகாணமான அல்பேட்டாவைச் சேர்ந்த மூன்று பேர் அமைச்சர்களாகி விட்டார்கள். எட்மொன்ரன் றோனா அம்புறோசா சுற்றுச் சூழல் அமைச்சர், கல்கறி ஜிம் பிறென்ரிஸ் பூர்வீககுடியுறவு  அமைச்சர், மொன்ரே சொல்பேர்க் குடிவரவு அமைச்சர்.

கியூபெக் மாகாணத்தல் வெற்றிபெற்ற பத்து நா.உறுப்பினர்களில் நான்கு பேர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்!

ஒன்ரோறியோ மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட   Jim Flaherty  மற்றும்  Tony Clement   முறையே நிதி அமைச்சராகவும் நல்வாழ்வு அமைச்ராகவும் நியமிக்கப் பட்டுள்ளார்கள். இவர்கள் மைக் கரிஸ் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள். இதில் துiஅ குடயாநசவல மைக் கரிசைவிட மோசமான வலதுசாரி அரசியல்வாதி எனப் பெயர் எடுத்தவர்.

பொதுவாக வலதுசாரிகளான பழமைவாதக் கட்சி ஆட்சியைப் பிடித்திருப்பதை கனடிய இராணுவ தளபதிகள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கோடு பல கோடி பெறுமதியான போர் விமானங்கள், இராணுவதளபாடங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றைக் கனடா கொள்வனவு செய்ய உள்ளது. ஆயுத விற்பனை தொழில் நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்தான். கிணற்றில் இருக்கும் தவளை தண்ணீர் குடிக்காது என்றால் அதை யார் நம்புவார்கள்?

லிபரல் கட்சியின் அரசியல் தரத்துக்குப் பழமைவாதக் கட்சி தரம் இறங்க இரண்டு  கிழமையே பிடித்தது! அவர்களை வெல்ல எத்தனை கிழமை வேண்டும்? (உலகத்தமிழர் – பெப்ரவரி 10, 2006)


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply