இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 29, 30,31,32

 ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா…!!! பகுதி 29 

ஸ்திரிகளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா?  ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

அவர்களுக்குத்தான் கல்யாணம் பண்ணும்போது சீதனம் கொடுக்கிறாளே…அப்புறம் எதுக்கு சொத்து? இருக்கு என்ற தைரியத்துல இஷ்டப்பட்டவாகூட ஓடத்தான் போறா. லோகமே அழியப்போறது ஓய்.

ஆலயப்பிரவேச போராட்டத்தை தடுத்த பெண்கள் தாக்கப்பட்டதற்காக அழுத சங்கராச்சாரியார்… பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டதற்கு சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். ஆனால்?.. 

டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.

அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்பகோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது’ உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ (-) இதுதான் தந்தி வாசகம் கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.

நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்கு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றை பார்வையிட எசையனூருக்கு சென்றிருந்தார் மகாபெரியவர்.

என்ன ஸ்வாமி’ என்றேன் நான் அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர். லோகமே அழியப்போறது ஓய்… அழியப் போறது… என படபடப்பாகப் பேசினார்.

“இதப்பார்த்தீரா… ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயீடுவா… அபாண்டமா அபச்சாரமா போயிடும் ’ என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.

நான் சிரித்தபடியே பதில் சொன்னேன். எனக்கு நல்லதுதான் ஸ்வாமி.. என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான். இந்த பதிலைக் கேட்டதும்…அசட்டுத்தனமாக பேசாதீர். இந்த சட்டம் ஸ்திரி தர்மமே பாழாயிடும். ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

அங்கே தேவி உபாசனை செய்யும் ஒரு அம்மா இருந்தார். அவரிடம் போய் இதுபோல சர்க்கார் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு பெண்களுக்கும் சொத்து பாத்யம் உண்டுனு சர்க்கார் கொண்டு வந்திருக்கிற சட்டத்தை பெண்கள் மூலமாகவே எதிர்க்கணும்னு மகாபெரியவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கார் அதனால இங்க ஸ்த்ரீகள் கூட்டம்போட வந்திருக்கோம். கூட்டத்துக்கு நீங்களும் ஸ்த்ரீகளை கூட்டி வரணும்’ என்றேன்.

அந்த தேவி உபாசகரோ மறுத்துவிட்டார். பிறகு ஒவ்வொரு வீடாய் போய் பெண்களை பெரிய முயற்சிக்குப் பிறகு கூட்டத்துக்கு அழைத்து வந்து…எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி ஸ்த்ரீ தர்மம் பாதுகாக்கப்படணும் சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும்’ என பெண்களை வைத்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை நகல் எடுத்து டில்லி சர்க்காருக்கு அனுப்பி வைத்தோம் இது மட்டுமா?

திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து தமிழ்நாட்டின் பல ஊர்களில் இப்படி ஸ்த்ரீகள் கூட்டம் சங்கராச்சாரியாரின் உத்தரவுப்படி நடந்தது என்ன ஏதென்றும் தெரியாமலேயே பல பெண்கள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என சொன்னார்கள்.

கும்பகோணத்தில் நடந்த ஸ்த்ரீகள் கூட்டத்துக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் திருவேங்கடாச்சாரியாரின் தங்கை செண்பகத்தம்மாளை அழைத்து வந்தோம். அவரோடு இன்னும் பல ஸ்த்ரீகளும் வந்து எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என தீர்மானம் போட்டார்கள்.

கிட்டதட்ட ஒருமாதம் தமிழ்நாடு பூராவும் 100 ஸ்த்ரீ கூட்டங்கள் நடந்தன. தீர்மான நகல்கள் தவிர சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும் என்று டில்லிக்கு பல தந்திகளும் அனுப்பிக் கொண்டே இருந்தோம்.இந்த கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே சங்கராச்சாரியார் மறுபடியும் என்னை அழைத்தார். இங்கேயே கூட்டம் நடத்திக் கொண்டிருந்தால் சரிபட்டு வராது போலிருக்கிறது. டில்லிக்கே போய் எதிர்ப்பை தெரிவிக்கணும் அதுக்கு நீர் டில்லி கிளம்பணும்” என்றார்.

டில்லியில் Constituion Club- இல் ஸ்த்ரீகளுக்கும் சொத்து பாத்யம் பில் பாஸ்பண்ணலாமா, வேண்டாமா என நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பெரிய அளவில் பெண்களை திரட்டிக் கொண்டு போனோம்.அங்கே, பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என வலியுறுத்த கமலாதேவி சட்டோபாத்யாய தலைமையில் பல பெண்கள் கூடியிருந்தனர்.

நாங்கள் கூட்டிப்போயிருந்த பெண்கள், நேரு அங்கே வருவதற்கு முன்னரே கலைந்து விட்டதால் பயன் இல்லாமல் போய்விட்டது.

சங்கராச்சாரியாரின் எதிர்ப்பால் கொஞ்சநாள்கள் பில்லை தள்ளிவைத்த நேரு… பிறகு பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்ற பில்லை பாஸ் பண்ணிவிட்டார்.

‘டில்லிவரை சென்று போராடியும் ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்க முடியவில்லையே…’ என வருத்தப்பட்ட சங்கராச்சாரியார் பில் பாஸான செய்தியை பேப்பரில் படித்துக் கொண்டே மறுபடியும் என்னிடம் சொன்னார்.
அவர்களுக்குத்தான் கல்யாணம் பண்ணும்போது சீதனம் கொடுக்கிறாளே…அப்புறம் எதுக்கு சொத்து? இருக்கு என்ற தைரியத்துல இஷ்டப்பட்டவாகூட ஓடத்தான் போறா… – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.  ( தொடரும்)


 ஹோமம் வளர்ப்பது போல் துவேஷம் வளர்த்துக் கொண்டு   பகுதி 30

மடங்களை ஒரே குட்டையில் திரட்டும் முயற்சி. ஹோமம் வளர்ப்பது போல் துவேஷம் வளர்த்துக் கொண்டு இருந்தன.

வர்ணாஸ்ரம தர்மத்துக்குட்பட்டு ஜனங்களை ஒற்றுமையாக (!) வாழவைக்கவேண்டும் என மடாதிபதி என்ற முறையில் பல காரியங்களை செய்தார் சங்கராச்சாரியார்.ஆனால், மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய மடங்களே சண்டையிட்டுக் கொண்டு… ஹோமம் வளர்ப்பது போல் துவேஷம் வளர்த்துக் கொண்டு இருந்தன.

வைஷ்ணவ மடங்கள்-சைவ மடங்கள், பிராமண மடங்கள், பிராமணர் அல்லாத மடங்கள் இப்படி மடங்களுக்கிடையே முட்டல், மோதல்கள் மூண்டபடி இருந்தன. ‘கும்பகோண’ மடத்துக்கும், சிருங்கேரி மடத்துக்கும் சகோதரச்சண்டை என்று ஆன்மீக வட்டாரத்திலேயே அழுத்தமான பெயர் உண்டு.

இங்கே இப்படியென்றால்… நம்மூர் மடங்களை ஏதோ புழுபூச்சி போல பார்த்து வந்தார்கள் வட இந்திய மடக்காரர்கள். காரணம், தமிழ்நாடு திராவிடதேசம், சூத்திரதேசம் என்பது அவர்கள் வாதம். இன்னொன்றாக, கும்பகோண மடம் உண்மையான சங்கரமடம் இல்லை என வட இந்தியாவிலுள்ள சங்கர மடாதிபதிகளே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மகாபெரியவர் சங்கராச்சாரியார் யாத்திரை மேற்கொண்ட போது… அவர் காசிக்குள்ளேயே வரக்கூடாது’ என்றெல்லாம் அவர்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்தனர்.

சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என அழைக்கக்கூடாது. அவர் ஜெகத்குரு அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவர் குருவே அல்ல. பின் எப்படி “ஜெகத்குரு” ஆகமுடியும்?-என்றெல்லாம் வட இந்தியாவிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் ஏகத்துக்கும் கிளம்பின.

இதுபற்றி சங்கராச்சாரியாரிடமே கேட்டபோது அவர் சொன்னார்.‘என்னே ஜெகத்குரு என்று நான் சொல்லிக் கொண்டதில்லை. சொல்லுமாறும் நான் கேட்டுக் கொண்டதில்லை. “ஜெகத்குரு” என்றால் என்ன அர்த்தம் தெரியுமோ? ஜெகம்தான் எனக்கு குரு அதாவது லோகம்தான், உலகம்தான் எனக்கு குரு நான் குருவல்ல என பதில் சொன்னார் மகாபெரியவர்.

இப்படியாக உள்ளூரிலிருந்து, தேச அளவில் மடங்கள் முஷ்டி உயர்த்திக் கொண்டு நின்ற சூழலில்.. எந்த மடாதிபதிக்கும் வராத யோசனை மகாபெரியவருக்கு வந்தது.

“மடங்கள் மடத்தனமா சண்டை போட்டுண்டிருக்கா தேஸத்துல இருக்குற எல்லா மடங்களும் ஒரே அமைப்பா வரணும். அது மூலமா… மதவிஷயங்களை, மனு தர்மத்தை இன்னும் வேகமா கொண்டு போகணும்” என என்னிடம் கூறிய மகாபெரியவர்…நான் அடிக்கடி வட இந்தியாவில் யாகங்கள் மதப் பிரச்சாரக் கூட்டங்கள் என சென்று வந்து கொண்டிருந்ததால்.. வட இந்திய மடங்களிடம் பேசி மடங்களுக்கான அமைப்பை உருவாக்க என்னை அங்கே போகச் சொன்னார்.

அயோத்தியில் எக்கச்சக்க மடங்கள் இருக்கின்றன. இதுதவிர பூரி, துவாரகா, பத்ரி போன்ற சங்கரமடங்களுடனும் பேசினோம், சின்னச்சின்ன மடங்களைகூட விட்டுவைக்காமல் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினோம்

‘Association of Mutts’ என்ற பெயரில் மடங்களுக்கான அமைப்பை சங்கராச்சாரியார் உருவாக்க முனைவதையும், இதற்கான காரியங்கள் நடைபெற்று வருவதையும் கேள்விப்பட்ட குல்ஸாரிலால் நந்தா குறுக்கே வந்தார்.

குல்ஸாரிலால் நந்தா.. வட இந்திய காங்கிரஸ் தலைவரான இவர், நேருஜி காலமான போதும், லால்பகதூர் சாஸ்திரிஜி காலமானபோதும் இரண்டு முறை பாரதத்தின் இடைக்கால பிரதம மந்திரியாக இருந்தவர் அவ்வளவு பெரியவரான அவர்… ஒரு தென்னிந்திய மடாதிபதி இந்திய அளவில் மடங்களை இணைக்க முயற்சிப்பதை விரும்பவில்லை.

நாங்கள் வக்கீல்களை வைத்து… மடங்களை ஒரு குடையில் ஒன்று சேர்க்க சங்கராச்சாரியார் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை தனது அரசியல் செல்வாக்கால் முடக்கிப்போட்டு விட்டார் குல்ஸாரிலால் நந்தா.

எந்த மடத்துக்காரர்களும் எங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை காரணம்… ஒரு தென்னிந்திய மடாதிபதி இந்திய அளவில் மடங்களை ஒருங்கிணைத்து விடுவாரோ என்ற பயத்தில்… நந்தா வட இந்தியாவில் உள்ள மடங்களை எல்லாம் ஒருங்கிணைத்து ‘சாது சம்மேளன்’ என்றொரு அமைப்பை தோற்றுவித்து விட்டார்.சங்கராச்சாரியாருக்கு இத்தகவலை தெரிவித்தேன்.

“பாரதம் பூரா ஒண்ணு சேக்கலாம்னு நெனைச்சேன். அவா பேதம் பாக்குறாளா? சரி… நாம இங்கேயே இருக்கிற மடங்களை சேத்து அஸோஸியேஷன் ஆரம்பிச்சிடலாம்” என சொல்லிவிட தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மடங்களை ஒரே குட்டையில் திரட்டும் முயற்சியை தொடங்கினோம்.

உடுப்பியில் 8 மடங்கள் இருந்தன. அவர்களிடம் பேசிப் பார்தோம். சங்கராச்சாரியார் எடுக்கும் எந்த முயற்சிக்கும், செய்யும் எந்த காரியத்துக்கும் சிருங்கேரி மடத்துக்காரர்கள் எதிராகத்தானே இருப்பார்கள். அவர்களைத் தவிர பல மடங்களை சேர்க்கும் முயற்சியில் இறங்கினோம். ஆனால்… வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவர்களும் பின்வாங்கிவிட்டார்கள்.

கடைசியில்… தமிழ்நாட்டு அளவில் இருக்கிற அத்தனை மடங்களையும் சேர்ப்பது என்ற முடிவுக்கு வந்தார். சங்கராச்சாரியார் மதுரை ஆதீனம், திருவாடுதுறை, திருப்பனந்தாள், தர்மபுரம் என மற்ற மடத்தின் ஆதீனங்களோடு பேசி அனைவரையும் ஒன்று சேர்த்தார்.

இந்திய அளவில் முயற்சித்து… அது குல்ஸாரிலால் நந்தாவால் தடுக்கப்பட்டுவிட்டது. சரி… தென்னிந்திய அளவில் மடங்களை இணைக்கலாம் என்ற மகாபெரியவரின் முயற்சி சிருங்கேரி கைங்கரியத்தாலோ என்னமோ முடங்கிப் போனது.
கடைசியில் தமிழ்நாட்டில் உள்ள மடங்களை மட்டும் இணைத்த சங்கராச்சாரியார் Association of Mutts ஆரம்பித்தார். நான், செகரட்டரி ஆனேன். சங்கராச்சாரியார் மடங்களுக்கான அமைப்பின் தலைவரானார். – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.  (தொடரும்)

 கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 29. ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா…!!! ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

பகுதி 31. கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது…


 செய்ய தடையா? ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது…’ பகுதி 31

ஜலம் நிறைந்திருக்கிற குளத்துக்குள்ளிருந்து சேற்றின் சிக்கல்களை கால்களால் மீறி… தாமரைப் பூவை பறித்து… பாசிபடிந்த படிகளின் மீது பதமாக லாவகமாக ஏறி வழுக்கி விழாமல் பூவுக்கும் சேதாரம் ஏற்படாமல் மேலே வந்த ஒருவன்…அத்தாமரை மலரை தெய்வத்தின் காலடிகளில் சமர்ப்பிக்கிறானே… அதேபோலத்தான் சங்கராச்சாரியார் கஷ்டப்பட்டு ‘மடங்களுக்கான அமைப்பு’ என்னும் மலரை எடுத்து வந்தார். மலர் வாடாமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும்?

யோசித்தோம். மடங்களுக்கான அமைப்பை கஷ்டப்பட்டு உண்டாக்கிய பிறகு அதை முறைப்படி பதிவு (Register) செய்தோம். இதற்காக அனைத்து மடங்களின் பிரதிநிதிகளும் கையெழுத்து போட்டார்கள்.

நான் செகரட்டரி என்ற முறையிலும், பரகால மடத்தின் பிரதநிதி என்ற முறையிலும் கையொப்பம் போட்டேன். சங்கராச்சாரியார்கள் எந்த இடத்தில் தங்கள் கையொப்பத்தை போட நேர்ந்தாலும்… பெயரை எழுத மாட்டார்கள் ‘நாராயண ஸ்மிருதி’ என்று தான் கையொப்பம் போடுவார்கள். அஃது போல் மகாபெரியவரும் நாராயணஸ்மிருதி என கையொப்பம் போட்டார்.

அமைப்பு, லெட்ஜரில் பதிவாகிவிட்டது. மக்கள் மனதில் பதிவாக வேண்டுமே, அப்படியென்றால் தனம், செல்வம் சேர்க்கவேண்டுமே.

மகாபெரியவருக்கு செல்வத்தின் மீது பணத்தின் மீது கொஞ்சம் கூட ஆசை கிடையாது. செல்வமோ, நகையோ அதை திரும்பிக்கூட பார்க்கமாட்டார்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். மடத்தில் அன்று நானும் இருந்தேன். வடநாட்டுத் தொழிலதிபர் பிர்லா அன்று மகா பெரியவரை பார்ப்பதற்காக வந்திருந்தார். எத்தனை தொழிற்சாலைகளை நிருவகித்துக் கொண்டிருப்பவர். சாதாரணமாகவா வருவார்?

ஒவ்வொரு நிலையிலும் படாடோபம் பட்டவர்த்தனமாக தெரிந்தது.வெள்ளித்தட்டு முழுக்க புதுபுஷ்பம் கமகமத்தது. இன்னொரு வெள்ளித்தட்டில் ரகம் ரகமாய் பழங்கள். அடுத்தாக ஒரு வெள்ளித்தட்டு அதன் மேல் கட்டுக்கட்டாய் பணம்… மூன்றாவது தட்டு முழுதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது பணம்.

பிர்லா… மகாபெரியவரை தரிசித்துக் கொண்டிருக்கும்போதே அவருடன் வந்தவர்கள் அந்த தட்டுகளை மகாபெரியவர் முன் அர்ப்பணிப்பதற்காக எடுத்து வந்தார்கள்.

புஷ்பத்தட்டை பார்த்த மகா பெரியவர் புன்னகைத்தார். பழத்தட்டை பார்த்ததும் புன்னகைத்தார். மூன்றாவதாக அந்த பணத்தட்டு வருவதை பார்த்துவிட்ட உடனேயே..பிர்லாவை கூப்பிட்டு… ‘என்ன இது’ என்ன இது? என்றார் அவசரமாய்.‘ஸ்வாமிஜி… மடத்து காரியங்களுக்காக என்னுடைய சிறிய காணிக்கை…’ என பிர்லா இழுக்க…

மகாபெரியவரோ சட்டென அந்த தட்டை தூக்கி பார்த்து வெளியே போய் விடுங்கள்’ என்று பொருள்படும்படி கைகளால் சைகை காட்டி விட்டார். பிர்லா எவ்வளவோ சொல்லியும்…’நான் சந்நியாசி… எனக்கே இவ்வளவு பணம் தேவைப்படுமானால்… லோகத்தில் சம்ஸாரிகளாக இருப்பவர்களுக்கு எவ்வளவு தேவைப்படும். அவர்களிடமே கொடுங்கள். பொது காரியத்துக்காக லோக சேமத்துக்காக மடத்துக்கு வெளியே செலவழித்து விடுங்கள்’ என மென்மையாய் மறுத்துவிட்டார் மகாபெரியவர்.

‘அர்த்தம் அனர்த்தம்’ என்ற ஆதிசங்கரரின் கூற்றுக்கு எவ்வளவு உண்மையாக மகா பெரியவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை அப்போது அங்கே நான் பார்த்தேன். இப்படிப்பட்ட மகா பெரியவர் மடாதிபதியாக இருந்த மடத்தில் செல்வத்துக்கு அதிகம் வேலையும் இல்லை. தேவையுமில்லை. அதனால் மடங்களுக்கான அமைப்பை ஆரம்பிப்பதிலிருந்து… ஆதீனங்கள் ரொம்ப உதவிகள் செய்தார்கள்.

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு ஏகப்பட்ட சொத்துகள் உண்டு. அதுபோல மற்ற ஆதீனங்களுக்கும் வருவாய் இனங்கள் உண்டு.இவற்றை முறைப்படுத்திப் பயன்படுத்திக் கொள்ள… ஒரு திட்டம் தீட்டினோம். அதாவது… மடங்கள் தங்கள் வருவாயில் 5 சதவீதத்தை வருஷத்துக்கொரு தடவை ‘மடங்களுக்கான அமைப்பு’க்காக கொடுக்கவேண்டும். இந்த நிதியில்தான் அமைப்பு இயங்க வேண்டும்.

இந்த செல்வம் மூலம்… நமது மதத்தில் நிலவும் பிரிவுகளைத் தாண்டி ஒரு பொதுவான ஆன்மீகப் பிரச்சாரம் செய்யவேண்டும் என நாங்கள் திட்டம் போட்டோம்.

இந்த விஷயங்கள் பற்றி விவாதிக்க… அமைப்பின் கூட்டத்தையும் கூட்டினோம். இதில் மகாபெரியவர் தலைமையேற்பார். மற்ற மடங்களின் மடாதிபதிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். வருஷா வருஷம் கூட்டம் நடந்தது. ஆனால்… சொன்னபடி மடங்கள் தங்களது வருவாயில் 5 சதவிகித பங்கை கொடுக்க முன்வரவில்லை.கூட்டம் மட்டும் நடந்தபடி இருந்தது. 5 வதோ, 6வது கூட்டமோ…

அதில்தான் மதுரை பெரிய ஆதீனம் ஒரு பிரச்சினையை கிளப்பினார்.

கோவில்களை கட்டியது மன்னர்கள், அதற்கு உதவி செய்தது… உழைப்பு கொடுத்தது… வியர்வை கொடுத்தது.. வீர்யம் கொடுத்தது. கல் சுமந்தது மண் சுமந்தது எல்லாம் பிராமணர்களா? கல்சுமந்து மண் சுமந்து கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா?

வடநாட்டில் குறிப்பாக காசியில் கோவிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவரவர் பூசை செய்து போகிறார்கள். அதுபோல… இங்கேயும் அனைவரும் பூசை செய்யவேண்டும். மடங்களுக்கான அமைப்பு அதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெறவேண்டும். அதற்கு இந்த அமைப்பு உதவவேண்டும்.”என்றெல்லாம் மதுரை ஆதீனம் புதிய கருத்துகளை பேசினார்.

சொன்னதோடு இல்லை. தஞ்சாவூர் ஜில்லாவில், கும்பகோணம் சுவாமிமலை இடையே இருக்கிற திருப்புறம்பியத்தில் கோவிலில் குடி கொண்டுள்ள சிவனைப் போலவே வேறொரு விக்ரகத்தை கோவிலுக்கு வெளியே வைத்து… அதை அனைவரும் பூசிக்க ஏற்பாடும் செய்தார்.

இது மடங்களுக்கான அமைப்பில் சலசலப்பை உண்டு பண்ணியது. ஏற்கெனவே நிதியாதாரம் இல்லாமல் நடைபோட்ட அமைப்பில்… மதுரை ஆதீனத்தின் கருத்தை மகாபெரியவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது…’ என்றார் மகா பெரியவர் – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 30. மடங்களை ஒரே குட்டையில் திரட்டும் முயற்சி. ஹோமம் வளர்ப்பது போல் துவேஷம் வளர்த்துக் கொண்டு இருந்தன

பகுதி 32. நாஸ்திகர்களை நசுக்க இடியாய் வந்தவர்.

ராமானுஜர் எப்படிப்பட்டவர்? பௌத்தம்…புத்தர் வேதங்களை எதிர்த்து ஓர் இருட்டை பரப்பினார்.மண்டையோட்டு வழிபாட்டு முறையை எரிக்க,,.

மதுரை பெரிய ஆதீனம் உரிமைப் பிரச்சினை கிளப்பியதும், அதை மகாபெரியவர் சங்கராச்சாரியார் மறுத்ததும், ‘மடங்களுக்கான அமைப்பு’ மேலும் செயல்படுவதில் தடங்கலை ஏற்படுத்தியது. சில வருடங்களில் அமைப்பின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின.

சேற்றிலிருந்து பறித்து வந்த செந்தாமரைகள் போல வேததர்ம சாஸ்திர பரிபாலனசபை, ஆகமசிற்ப சதஸ், திருப்பாவை… திருவெம்பாவை மாநாடு, மடங்களுக்கான அமைப்பு… என சமய ஒற்றுமைக்காக மகாபெரியவர் ஏற்படுத்திய ஸ்தாபனங்கள் எல்லாம் அவருடனேயே போய்விட்டன.

அவரது காலத்திற்குப் பிறகு மடத்தில் இந்த ஸ்தாபனங்கள் பற்றி கவலைப்பட, அக்கறைப் பட யாரும் இல்லை. அந்த செந்தாமரைகள் கொஞ்சம் கொஞ்சமாய் வாடி… இப்போது சுண்டிச் சுருங்கிவிட்டன.

மகாபெரியவர் என்ற மகாபுருஷரோடு என்னுடைய அனுபவங்களை சிலபல அத்தியாயங்களில் படித்திருப்பீர்கள். ஆதிசங்கரரில் ஆரம்பித்து மகாபெரியவருடனான அனுபவங்கள்வரை பகிர்ந்து கொண்டாயிற்று. இப்போதைய சங்கராச்சாரியாருடனான சிலவற்றை தக்க சமயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்து…?

அடுத்து உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தப் போகிறவர் ஆதிசங்கரரின் அத்வைதம் மீது வேதாந்த ஆயுதம் பாய்ச்சியவர்! அவர் யார்?

அதற்கு முன்…சோழச்சக்ரவர்த்தி ராஜராஜ சோழனின் தனயன் ராஜேந்திரசோழன்… தன் தந்தையின் வெற்றிகளைக் கண்டு பூரித்துப்போனதோடு மட்டுமல்ல… அப்பாபோல நாமும் இந்த தரணி வெல்லவேண்டும். நம்மை பலரும் பரணி பாடவேண்டும். தந்தை தஞ்சையில் கட்டிய கோவிலைப் போன்றே தானும் கட்டவேண்டும் என நெஞ்சுக்குள் வேட்கையை வெறியாக எரியவிட்டான். விளைவு?

படைகளை கிளப்பினான். திக்கெட்டும் வெல்லப் புறப்பட்டவன். வடஇந்தியாவை நோக்கிப் படையெடுத்தான் பலநாட்கள். கடந்த அவனது படை கங்கை கரையை முட்டியது. கங்கை கொண்ட சோழன்… அங்கே ஒரு வேத விற்பன்னரை சந்தித்தான்.

அவரது சாஸ்திர விளக்கங்கள் அறிவு சார்ந்த கருத்துக்களைக் கேட்ட ராஜேந்திர சோழன்… ‘இந்த வித்வானை நம்முடன் அழைத்துச் சென்றால்தான் வெற்றிமுழுமைப்படும்’ என்ற முடிவுக்கு வந்தான். அவர்தான் நாதமுனி இன்றும் உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரில் நாதமுனியின் உபதேசத்தைப் பின்பற்றுகிற ‘நாதபந்துக்கள்’ என்ற பிரிவினர் வாழ்ந்து வருகிறார்கள்.

நாதமுனியை மிகுந்த மரியாதையோடு தென்னகம் அழைத்து வந்த ராஜேந்திரசோழன் கங்கை கொண்ட சோழபுரம் அமைத்ததோடு… நாதமுனியை தனது ராஜ ஆலோசகராக… உபதேசம் செய்பவராக வழிபட்டான்.

சோழனுக்கு உபதேசங்கள் செய்ததோடு… பல வேத நூல்களையும், உபநிஷதுகளையும் ஆழ்ந்து கற்ற நாதமுனியை வேதமுனி என்றே சொல்லலாம். பல ஸ்லோகங்கள் பண்ணிய நாதமுனியின் பேரன்தான் ஆளவந்தார்.

நாதமுனியின் பரம்பரைக்கும், சோழ ராஜாக்கள் பரம்பரைக்கும் தலைமுறை தாண்டிய சம்பந்தம் தொடர்ந்து ஆளவந்தாரும் தன் காலத்திய சோழ சாம்ராஜ்யத்துக்கு ராணுவ ஆலோசகராக அமர்ந்தார். சோழனின் யானைப் படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை ஆகியவற்றுக்கு ஆலோசனை செய்யும் முக்கியமான பொறுப்பில் அமர்ந்திருந்த ஆளவந்தாரை சமய சம்ப்ரதாய விஷயங்களுக்காக தாத்தாவான நாதமுனி பலதடவை அழைத்தார்.

புண்டரீகாக்ஷர், குருகை காவலப்பன் என பல தூதுவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகும் நாதமுனியின் உபதேசத்தை கேட்க மறுத்துவிட்டார் ஆளவந்தார்.இப்பேற்பட்ட ஆளவந்தாரின் பேத்திக்கு பிள்ளையாக மலர்ந்தவர்தான்… அதாவது ஆளவந்தாரின் பேரன் திருமலைநம்பியின் தங்கையான பூமிபிராட்டி என்பாருக்கு மகனாக வந்து உதித்தவர்தான் விசிஷ்டாத்வைதம் கண்ட ஸ்ரீராமானுஜர்.

ராமானுஜர் எப்படிப்பட்டவர் என உங்களுக்கு அறிமுகப்படுத்த ஓர் வடமொழி கவிதை எவ்வளவு தகவல்களை தேக்கித் தருகிறது பாருங்கள்.

“பாஷண்ட த்ருமஹண்ட தாவதகனாஹாசார்வாக சைலாஹனிஹிபௌத்த த்வாந்த்த நிராஸ வாஸரபதிஹிஜைனேப கண்ட்டீர வஹாமாயாவாதி புஜங்க பங்க கருடஹாத்ரைவித்ய சூடாமணிஹி…” என்று போகும் இந்த கவிதையின் கருத்து என்ன தெரியுமா?

அந்தக் காலத்தில் சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு மண்டை ஓடுகளை எடுத்து வைத்துக்கொண்டு பூசை செய்யும் ஒரு ‘பயம்’ தரும் வழிபாட்டுமுறை பரவிக்கிடந்தது. இப்படிப்பட்ட மண்டையோட்டு வழிபாட்டு முறையை எரிக்க காட்டுத்தீயாக வந்தவர்.

‘சார்வாகன்’ என்பவரின் உபதேசப்படி தெய்வமே இல்லை எல்லாம் மூடர்களின் கற்பனை மனிதர்கள் வாழப் பிறந்தவர்கள். தெய்வத்தை கும்பிட்டு வாழ்நாளை வீணாக்காதீர்… என்ற கொள்கை பிடிப்பில் வந்த நாஸ்திகர்களை நசுக்க இடியாய் வந்தவர்.

பௌத்தம்…புத்தர் வேதங்களை எதிர்த்து ஓர் இருட்டை பரப்பினார். அந்த இருட்டை கிழித்து வேத வெளிச்சத்தை ஏற்படுத்திய உதயசூரியனாக வந்தவர். ஜைனம் என்னும் யானையை அடக்க சிங்கமாக புறப்பட்டவர்.

மாயாவாதம் என்னும் துன்பம் தருகின்ற கொடிய மலைப்பாம்பினை கொத்தி கொலை செய்யவந்த வைணவ கருடன்.

இப்படியாக மண்டையோட்டு வழிபாட்டு கலாச்சாரம், நாஸ்திக கூட்டம், பௌத்த இருட்டு, ஜைனம் என்ற யானை, மாயாவாதம், அதாவது ஆதிசங்கரர் போதித்த அத்வைதம் என்கிற மலைப்பாம்பு ஆகியவற்றை அடக்கி ஒடுக்க வந்தவர்தான் ஸ்ரீராமானுஜர்.இவர் என்ன சொன்னார்…? செய்தார்.? – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்(தொடரும்)


About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply