சோதிடப் புரட்டு (1-7)

சோதிடப் புரட்டு

(1)

அறிவியலும் சோதிடமும்

அறிவியல், வானியல், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்றவை இன்று மக்களது வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றி அமைத்துள்ளன. ஆண்டாண்டு காலமாக வேதவாக்காக நம்பி வந்த மதநம்பிக்கைகளை ஆட்டம் காண வைத்துள்ளன.

ஒரு காலத்திலஞாயிறு, நிலா, கோள்கள், விண்மீன்கள் (நட்சத்திரங்கள்), கிரகணம், அண்டவெளி, இடி, மின்னல், காற்று, புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை, கடல்கொந்தளிப்பு ஆகியஇயற்கை நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் ஆகியவற்றைக் கண்டு ஆதி மனிதன் பயந்து நடுங்கினான். அவற்றைத் திருப்திப்படுத்தபொங்கல், படையல், உயிர்ப்பலி கொடுத்து வழிபட்டான். காலப்போக்கில் இந்தஅச்சம் தரும் இயற்கையை ஆட்டுவிக்கசகலவல்லமை படைத்தஉலகியற்றியான் (கருத்தா) ஒருவன் இருக்கவேண்டும் என்று கற்பனை செய்து அதற்குக் கடவுள், இறைவன், தெய்வம், தேவன், பிரம்மம் எனப் பலவாறு பெயரிட்டான்.

மனிதன் பேசத் தெரிந்தபின்னரே கடவுள்ப் பெயர்களைக் கண்டு பிடித்திருக்கவேண்டும்! இன்னும் நன்றாகப் பேசத் தெரிந்தபின்னரே தத்துவம் என்றபெயரில் கடவுள் பற்றியகற்பனைக் கதைகளை உருவாக்கி இருக்கவேண்டும்.

கடவுளின் சினத்தைத் தணிக்கவும் அருளைப் பெறவும் தூபதீபநிவேதனங்கள், ஆடல் பாடல், மேளதாளம், தேர் திருவிழா, சரிகை கிரிகை எனச் சடங்குகளை மனிதன் உருவாக்கினான்.

கடவுளர் இருக்கஇடம் வேண்டாமா? கோயில், குளம், கோபுரங்கள் ஆகியவற்றைக் கட்டினான். அதில் அம்பு, வில், வேல், வாள், கத்தி, சூலம், கதை, சக்கரம், தண்டு ஆகியவற்றைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்ததன் முன்னோர்கள் உருவில் சிலைகளை வடித்து வைத்தான். தான் செய்வது போன்று அந்தச் சிலைகளைக் குளிப்பாட்டி, ஆடை உடுத்தி, ஆபரணம் பூட்டி, படையல் செய்தான். தனக்கு மனைவி மக்கள் இருப்பது போலத் தெய்வங்களுக்கும் மனைவி மக்களைக் கற்பித்துத் திருமணவிழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், வேட்டைத் திருவிழாக்கள் ஆகியவற்றை நடத்தினான்.

சார்ல்ஸ் டார்வின்

வேட்டையாடிப் பிழைக்கவும் உழுது பயிரிட்டு வாழவும் விரும்பாத ஒரு சோம்பேறிக் கூட்டம், தங்களை வானத்தில் இருக்கும் கடவுளருக்கும் நிலத்தில் வாழும் மனிதர்களுக்கும் இடையிலான தரகர்கள் என்றும், கடவுளை வசப்படுத்தி, விரும்பியதை விரும்பியவாறு பெற்றுத் தரத் தங்களிடம் மந்திரம் தந்திரம் யந்திரம் போன்ற ஆற்றல் இருப்பதாகச் சொன்ன பூசாரிகள, குருமார்கள் அதற்கான சடங்குகளை நடத்தி வைத்தார்கள்.

நாளடைவில் சரிகை கிரிகை, பூசை, பிரார்த்தனை, பக்தி, முக்தி என விரிந்து கடவுள் என்ற கற்பனைச் சொல்லினைச் சுற்றி உலக மதங்களும் சிக்கலான தத்துவங்களும் தோன்றின. இன்று மனிதன் பல் கலைகளையும் கற்று முன்னேறி, இயற்கையின் மர்மங்களைத் தெரிந்து கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்தவும் அடக்கி ஆளவும் கற்றுக் கொண்டு விட்டான். ஆன பொழுதும் பரம்பரைப் பழக்கத்தால் இந்தப் பொருளற்ற நம்பிக்கைகளையும் சடங்குகளையும் கற்றோரும் கல்லாதோரும் ஒரு சேரத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

உயிரியலாளர் சார்ல்ஸ் டார்வினின் (Charles Darwin – 1809-1882) படிமலர்ச்சிக் கருதுகோள் (Theory of Evolution) நீர்வாழ்வன, நிலத்தில் ஊர்வன, மேலே பறப்பன போன்ற உயிரினங்கள் தாமாகவே தோன்றின, அவை இன்றுள்ளது போல யாராலும் படைக்கப்படவில்லை என்பதை நிறுவியது. குரங்கில் இருந்து மனிதன் மேலும் நாம் காணும் உயிரினங்களின் உருவம் தொடக்க காலத்தில் இருந்தே வரவில்லை. அவை ஒரு கல (single cell) உயிரியிற் தொடங்கி இடையறாத மாற்றம், படிமுறை வளர்ச்சி, மலர்ச்சி, இனப் பெருக்கம், இடப் பெருக்கம், இயற்கைத் தேர்வு (Natural Selection) நிலத்தின் தன்மை, சூழல் முதலியவற்றுக்கு ஏற்ப வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்தல் காரணமாக உருமாற்றம் அடைந்து வந்துள்ளன.

இன்று நாம் காணும், மரம், செடி, கொடிகள் கடலில் இருந்து கரையில் விழுந்த சிறு சாதாளையின் படிமலர்ச்சி ஆகும்.
மனிதனை எடுத்துக் கொண்டால் அவன் “முழுசாகக் கடவுளால் படைக்கப்படவில்லை, மண்ணின் செழுமையால் ஒன்று கூடி உண்டான உயிரணுக்களின் படிமலர்ச்சியே (பரிமாண வளர்ச்சியே) மனிதன். அதாவது பூச்சியாய், புழுவாய், நத்தையாய், மீனாய், பறவையாய், குரங்காய் வளர்ந்து இறுதியில் அவற்றின் திருத்த உருவமாய் மனிதன் தோன்றினான்” என டார்வின் படிமலர்ச்சிக் கோட்பாடுமூலம்நிறுவினார்.

மனிதன் ஊர்வன நிலையைக் கடந்து நாலு காலால் நடக்கும் குரங்கு நிலை எய்திப் பின்னர் வளைந்த முதுகை நேர் நிமிர்த்தி நாலு கால்களில் இரண்டைக் கைகளாகப் பயன்படுத்தி மீதி இரண்டு காலால் நடக்கக் கற்றுக் கொண்டு மரக் கொப்புகளுக்குப் பதில் குடிசை கட்டி சிற்சில கருவிகளைச் செய்து வாழப் பல இலட்சம் ஆண்டுகள் எடுத்தது என டார்வின் விளக்கினார்.

உலகத்தையும் அதிலுள்ளஉயிர்களையும் கடவுள் படைத்தார், அரைகுறையாகஅல்லஒவ்வொன்றையும் முழுதாகவே படைத்தார், அதே போல் ஆறறிவு படைத்தஆணையும் பெண்ணையும் கடவுளே படைத்தார் என்றும் மதங்களும் மதவாதிகளும் சொல்லி வந்தபடைப்புக் கோட்பாட்டை டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு தகர்த்து எறிந்தது.

டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு உயிரினங்கள் தம் நிலை பேற்றுக்காகப் போராடுகின்றன, இறுதியில் தகுதியுள்ளவை மட்டுமே தப்பிப் பிழைக்கின்றன (The Struggle for Existence of the Fittest)  எனக்கூறியது.

டார்வின் பலஆண்டுகள் நாடுநாடாகச் சென்று ஆய்வு செய்து எழுதிய உயிரினங்களின் மூலம் (The Origin of Species)என்றநூல் 1859 இல் வெளிவந்தபோது, மனிதவரலாற்றில் அதுவரை காலமும் அவிழ்க்கப் படாதபலமுடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டன. உயிரினங்களின் மூலம் முதல் பதிப்பு முழுதும் (1,250 படிகள்) ஒரே நாளில் விற்று முடிந்தன. .உலகம் கண்டிராதஒரு சிந்தனைப்புரட்சியை 230 பக்கங்கள் கொண்டஅந்தநூல் ஏற்படுத்தியது. அதற்கு முன்னர் 1842 ஆம் ஆண்டு இயற்கைத் தெரிவுக் கோட்பாடு (Theory of Natural Selection)என்றசிறு நூலை எழுதிவெளியிட்டார். டார்வின் படிமலர்ச்சி பற்றி மொத்தம் 18 நூல்கள் எழுதினார்.

டார்வின் 1874 ஆம் ஆண்டு மனிதன் குரங்கிலிருந்து படிமலர்ச்சி பெற்றவன் (Man is the Developed Monkey) எனப் பலசான்றுகள் மூலமாகஎடுத்துக்காட்டினார்.

என்னைக் காதலிக்கிறாயா?

டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு மதவாதிகள் மத்தியில், குறிப்பாகச் செல்வாக்குப் படைத்த கிறித்தவ மதவாதிகள் மத்தியில், திகைப்பையும் வியப்பையும் அச்சத்தையும் உருவாக்கியது. பரமண்டலம் பற்றியும் சொர்க்கத்தைப்பற்றியும் நரகத்தைப்பற்றியும் பேசியும் எழுதியும் வந்த மத குருமார்க்குச் சொல்லி மாளாத சினம் ஏற்பட்டது. டார்வினும் அவர் எழுதிய நூலும் பலத்த கண்டனத்துக்கும் எதிர்புக்கும் உள்ளாகியது. மதவாதிகள் படிமலர்ச்சிக் கோட்பாட்டைக் கடுமையாக எதிர்த்தார்கள். ‘அண்டம், அதில் அடங்கிய உலகம் அனைத்தும் கடவுளால் படைப்கப்பட்டவை அதனை மறுப்பவர்கள் சாத்தானின் அவதாரங்கள்’ என ஆயர் வில்பபோர்ஸ் (Bishop Wilburforce) கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

உயிரினங்களின் மூலம் என்றநூல் நூல் வெளிவந்த ஆறு மாதத்துக்குள் (யூன் 30, 1860) நடந்தசொற்போரில் ஆயர் வில்பபோர்ஸ் பின்வருமாறு பேசினார்-

“மதிப்புக்குரிய மகாசனங்களே! பரமபிதாவின் பெயரால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன், சாத்தானின் அவதாரமானசார்ல்ஸ் டார்வின் நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என்று கொஞ்சமும் நாக் கூசாமால் கூறியிருக்கிறான். நீங்களே சொல்லுங்கள்? உங்களைக் கால்மேலும் தோள்மேலும் போட்டுச் சீராட்டி வளர்த்தஉங்களுடையபாட்டன்மார்களும் முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

குரங்கிலிருந்து தோன்றிய மனிதன் இத்தனை இலட்சம் ஆண்டுகளுக்குப் பின்னும் எந்தவித படிமலர்ச்சி கொள்ளாமல் அப்படியே இருக்கின்றான்? ஏன் அவனுக்கு இன்னும் ஒரு கொம்போ, ஒரு இறக்கையோ, ஒரு வாலோ அல்லது வேறு எதுவுமே உண்டாகவில்லை? குரங்கின் படிமலர்ச்சி மனிதன் என்றால் மனிதனின் படிமலர்ச்சி என்ன? இவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் நம்மைப் படைத்த ஆண்டவனை ஏளனம் செய்வது எத்தனை பெரிய பாவம் என்பதை நீங்கள் உணரவில்லையா?”

இவ்வாறு சொல்லாடல் செய்கின்ற மதவாதிகள் ஒன்றை மறந்து விடுகின்றார்கள். உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றால் கடவுளைப் படைத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறது. அவர் யாராலும் படைக்கப்படவில்லை என்றால் இயற்கையின் செயல்களில் காரணம் (ஏது) இன்றி விளைவு (காரியம்) இல்லை என்பதால் கடவுளும் படைக்கப்பட்டவரே என ஒப்புக் கொள்ள வேண்டி நேரிடும்.

இந்துகளைப் பொறுத்தளவில் டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு ஒன்றும் புதியதல்ல, அதனை மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டார் என்றார்கள். மாணிக்கவாசகர் அப்படி என்னதான் சொன்னார்?

புல் ஆகிப் பூடாய்ப் புழுவாய் மரம் ஆகிப்
பல் மிருகம் ஆகிப் பறவையாய் பாம்பு ஆகி
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்………(சிவபுராணம்)

என மாணிக்கவாசகர் பாடிய சிவபுராணத்தை மேற்கோள் காட்டுகின்றார்கள். ஆனால் இந்தப் பாடலில் படிமலர்ச்சி சொல்லப்படவில்லை. ஏற்கனவே படைக்கப்பட்ட உயிரினங்கள் மாறி மாறிப் பல பிறப்புப் பிறந்து இளைத்ததையே மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார்.

விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் முதல் அய்ந்து அவதாரங்களான மீன் (மச்சம்), ஆமை (கூர்மம்), பன்றி (வராகம்), வாமனம் (குள்ளன்), பாதி மனிதன் பாதி மிருகம் (நரசிங்கம்) படிமலர்ச்சிக் கோட்பாட்டைக் காட்டுகிறது என்பது திரிபுவாதம் ஆகும்.

எது எப்படி இருப்பினும் இன்று படிமலர்ச்சிக் கோட்பாடு நிறுவியது போல் குரங்கில் இருந்துதான் மனிதன் தோன்றினான் என்பதை அறிவியலாளர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக அண்டம்பற்றி அரிஸ்தோட்டல் (Aristotle), பிளாட்டோ (Plato), தொலமி (Ptolemy) முதலியோர் எழுதி வைத்த கோட்பாடுகளை கோபெர்னிக்கஸ், கெப்லர், கலிலியோ கலிலி, அய்சக் நியூட்டன் போன்ற வானியலாளர்கள் தலைகீழாக மாற்றி அமைத்தார்கள்! குறிப்பாக கோபெர்னிக்கஸ் அண்டத்தின் மையத்தில் இருந்த புவியை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ஞாயிறை வைத்தபோது கிறித்துவ மதத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டது. கிறித்தவ மதகுருமார்கள் பதைத்துப் போனார்கள்! ஓடி ஒளிய இடமின்றித் தவித்துப் போனார்கள்!

இயற்பியலாளர் அல்பேட் அயின்ஸ்தீனின் (Albert Einstein) பொது சார்புக் கோட்பாடு (General Theory of Relativity) இயற்பியலில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது. அண்டத்தில் ஆகக்கூடிய வேகம் ஒளியின் வேகத்தை விஞ்ச முடியாது, பருப்பொருளும் ஆற்றலும் மதிப்பில் ஒப்பானவை, ஒன்று மற்றொன்றாக மாறக் கூடியவை என்ற அவரது கண்டுபிடிப்புக்கள் இயற்பியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்தி இயற்கையின் முடிச்சுக்களை அவிழ்க்க உதவியது.

அறிவியல் கண்டு பிடித்த நீராவி, மின்னாற்றல், அணுசக்தி தொழில்த்துறையில் தலை கீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அச்சுயந்திரத்தின் கண்டு பிடிப்பு (கிபி 1450) கல்வி ஒளி பரந்துபட்ட அடித்தட்டுப் பொது மக்களையும் சென்றடைய வழி வகுத்தது.

மிதிவண்டிகள், ஊர்திகள், தொடர்வண்டிகள், கப்பல்கள், ஆகாய விமானங்கள் போக்குவரத்தை துரிதப்படுத்தியுள்ளது. தீராத நோய்கள் எனக் கருதப்பட்ட நீரிழிவு, எலும்புருக்கி, தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்த மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை நோய் (plague) அம்மை, இளம்பிள்ளை வாதம், குக்கல், தொண்டை அழற்சி (Diphtheria) போன்ற நோய்களுக்குத் தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு அவை முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளன.

புதியவகை நெல், கோதுமை உணவு உற்பத்தியை அதிகரித்துள்ளது. இவற்றால் மனிதனது பொதுமேனி அகவை உயர்ந்துள்ளது. பொதுமேனி வருவாய் அதிகரித்துள்ளது.

வானொலி, திரைப்படம், தொலைபேசி, தொலைநகல், தொலைக்காட்சி, கணினி, விண்கலங்கள் தகவல் புரட்சியைத் தோற்றுவித்துள்ளன.

அறிவியல் கண்டு பிடித்த ஏவுகணைகள், விண் ஒடங்கள், இராட்சத தொலைநோக்கிகள் இயலுலகின் (அண்டத்தின்) புதிர்களை அவிழ்க்கவும் மனிதனை நிலாவில் இறக்கவும் வழி வகுத்துள்ளன.

எவ்வளவுதான் ‘அந்தக்காலம்’ பற்றி வாய் சப்பிக் கொண்டாலும் மனித வரலாற்றின் பொற்காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மையாகும்.

ஆனால் தமிழர்கள் ஒருபுறம் அறிவியல் கண்டு பிடித்தவற்றை அனுபவத்திக் கொண்டு மறுபுறம் சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போய்க் கிடக்கின்றார்கள். பல கோடி கற்களுக்கு அப்பால் உள்ள செவ்வாய், வியாழன், சனி ஆகிய கோள்களைப் பார்த்து நடுங்குகின்றார்கள். அவற்றால் தோசம் ஏற்படுகிறது என்று பயந்து தோசம் நீங்கச் சாந்தி செய்கின்றார்கள்.

தமிழர்கள் நாள் கோள், நட்சத்திரம் பார்க்காமல் எந்த நல்ல நிகழ்வையும் தொடங்குவதில்லை. பிறந்த பிள்ளைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்றாலும் பஞ்சாங்கத்தைப் பாராமல், எண்சாத்திரம் பார்க்காமல் செய்வதில்லை. அறிவியல் கண்டு பிடித்த மகிழுந்துவை வாங்கினால் முதல் வேலையாக கோயிலுக்குச் சென்று அருச்சனை செய்து அதற்குத் தேங்காய் உடைத்துத் திருட்டி கழிக்கின்றார்கள். அதைக் கண்டு பிடித்த அறிவியலாளர்களையோ, அதை உற்பத்தி செய்த தொழிலாளர்களையோ ஒரு கணமாவது நன்றியோடு அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். படிப்பறிவில்லாத சோதிடரிடம் ஆண் – பெண் இருவரது சாதகங்களைக் காட்டிப் பொருத்தம் பார்க்காமல் தமிழர்கள் வீட்டில் திருமணம் நடை பெறுவதில்லை. பல்கலைக் கழகத்தில் படித்த அறிவியல் பட்டதாரிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. பொருத்தம் பார்த்துச் செய்த திருமணங்கள் தோல்வியில் முடிந்ததைக் கண்டும் கேட்டும் படிப்பினை படிக்காது செக்குமாட்டைப் போல் உரலைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்.

“தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே உட்காருகின்றார்கள், ஈரத்திலேயே நடக்கின்றார்கள், ஈரத்திலேயே படுக்கின்றார்கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்” என மகாகவி பாரதியார் மனம் நொந்து கூறிய வார்த்தைகள் நூறு ஆண்டுகள் கழித்தும் சரியாகவே இருக்கின்றன!

தமிழ் மக்களுடைய மனதில் மண்டிக்கிடக்கும் அறியாமையையும் சோதிடம் போன்ற மூடநம்பிக்கையையும் களைந்து, பகுத்தறிவு ஒளியை ஏற்றி, மரத்தின் கோணலைச் செப்பம் செய்யும் எற்று நூல் போல மனத்தின் கோணலைச் செம்மைப்படுத்துவதே இந்த நூலின் குறிக்கோளாகும்.

எல்லாவற்றுக்கும் மனிதனது மனமே காரணியாகும். மனமது செம்மையானல் மந்திரம் தேவையில்லை.

உள்ளத்தில் உண்மயொளி உண்டாயின்
வாக்கினில் ஒளி உண்டாகும்

என்பது மகாகவி பாரதியாரின் பொய்யா மொழி.

சோதிடம் போன்ற மூடநம்பிக்கையின் ஊற்றாக இந்திய துணைக் கண்டமே விளங்குகிறது. மேற்குலக நாடுகள் போல் அல்லாது அங்கு மத நம்பிக்கையும் சோதிட நம்பிக்கையும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

இந்தியாவில் நடந்த (2002) முத்தரப்புக் கிரிக்கெட் போட்டியின் போது சோதிட சாத்திரிகள் கடைவிரித்தார்கள்.

உலகக் கிண்ணத்துக்கானதுடுப்பாட்டப் (Cricket) போட்டியில் இந்தமுறை இந்தியாதான் வெற்றிவாகை சூடும் என எதிர்வுகூறல் (ஆரூடம்) சொன்ன அத்தனை பிரபலசோதிடர்களும் மண்ணைக் கவ்வினார்கள். செய்தியாளர்கள் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபலசோதிடர் நொஸ்ரடாமைக் (ழேளவசயனயஅரள) கூடவிட்டு வைக்கவில்லை. அவர் சூசகமாகஉலகக் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றும் எனக் கணித்துள்ளார் என்று ‘கரடி” விட்டார்கள். அந்தச் செய்திக்குக் கொடுத்ததலைப்பு ‘கோப்பை இந்தியஅணிக்கு, நொஸ்ரடாம் கணிப்பு’ என்பதாகும்.

‘ஒரு இளவரசர் (கொல்கத்தா இளவரசர் கங்குலி) ஆபிரிக்காவில் நடக்கும் ஒரு போரில் (உலகக் கிண்ணப் போட்டி) ஓர் இளையவரோடு (சச்சின் அல்லது சேவக்) இணைந்து அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்று மகிழ்ச்சி அடைவார்.’

யார் இந்தநொஸ்ரடாம்? நியூட்டனை, மார்க்கோனியை, எடிசனை, அயின்ஸ்தீனைத் தெரியாதோர் கூட இந்தநொஸ்ரடாமை அறிந்து வைத்திருக்கின்றனர்.

நொஸ்ரடாம் (1503-1566) யூதஇனத்தவர். தென் பிரான்ஸ் நாட்டின் Saint Remi  என்ற மாகாணத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர் Michel de Nostredame  என்பதாகும். அதனை இலத்தீன் மொழியில் Nostradamus எனமாற்றி வைத்துக் கொண்டார்.


சோதிடப் புரட்டு

(2)
மண்ணைக் கவ்விய சோதிடர்கள்

Inquisition என்றசமயதண்டனைக்குப் பயந்து கத்தோலிக்க மதத்துக்கு நொஸ்ரடாமின் குடும்பம் மாறியது. சிறு பிராயத்திலேயே தனது பாட்டனாரிடம் இருந்து கணக்கியல், வானியல், சோதிடம் ஆகியபாடங்களைக் கேட்டறிந்து கொண்டார். பின்னர் மருத்துவராகப் படித்துப் பட்டம் பெற்று 1525 இல் தொழில் செய்யத் தொடங்கினார். அப்போது தென் பிரான்சில் இடம் பெற்றகொள்ளை நோய்க்கு (plague) ஆளான பிணியாளிகளுக்கு மருத்துவம் செய்தார். புதுமையானமுறையில் மருத்துவம் செய்து பலரைக் குணப்படுத்தியதால் அவர் ஒரு கைதேர்ந்தமருத்துவர் எனப் போற்றப்பட்டார். இதன் விளைவாக அவரது பெயர் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகம் ஆனது.

நொஸ்ரடாம் தனது எதிர்வுகூறலை நான்கு வரிகள் கொண்ட கவிதை வடிவில் (Quatrains)எதுகை மோனையோடு எழுதினார். அப்படிப் பத்து நூறு கவிதைகளை எழுதினார். அதற்கு அவர் வைத்தபெயர் Centuries.இந்தச் சொல்லுக்குப் பொருள் நூற்றாண்டு அல்ல. வெறுமனே நூறு கவிதைகள் என்பது பொருள் ஆகும்.

அவர் கையாண்டநடை பூடகமாக (மறைபொருளாக) இருந்தது. வேண்டும் என்றே இலத்தீன், கிரேக்க, இத்தாலி மொழிச் சொற்களைப் புகுத்தி எழுதினார். படிப்பவர்களை மயங்கவைக்குமாறு சொற்களையும் சொற்களின் எழுத்துக்களையும் மாற்றியும் எழுதினார். தன்னை ஒரு சூனியக்காரன் அல்லது மந்திரவாதி என்று மற்றவர்கள் கணிக்கக் கூடாதென்பதற்காகவே அப்படிச் செய்ததாகச் சொல்கிறார்கள்.

இந்தநூலில் 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து உலகம் முடியும் வரை நடைபெறப் போகிறநிகழ்ச்சிகளை எதிர்வுகூறல் கூறினார். உலகம் கிபி 3797 ஆம் ஆண்டு முடிவடைந்து விடும் என்பது அவரது எதிர்வுகூறல் ஆகும்!

எல்லாவற்றையும் பூடகமாகஎழுதி வைத்ததால் அவருக்குப் பின் வந்தவர்கள் அவற்றைத் தங்கள் தங்கள் வசதிக்கு ஏற்பதிரித்தும் வளைத்தும் பொருள் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக  Hisler என்றசொல்லைப் பின்வந்தவர்கள் Hitlerஎனப் பொருள் கொண்டார்கள். Black என்றசொல் முசோலினியைக் குறிப்பதாகப் பொருள் கொண்டார்கள். இப்படி நொஸ்ரடாம் எழுதியவற்றைத் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு கசக்கி, திரித்து, வளைத்துப் பொருள் கொண்டார்கள்.

செப்தெம்பர் 11 (2001) ஆம் நாள் நியூயோர்க் நகரில் உள்ளவணிகக் கோபுரங்கள் தாக்கி அழிக்கப்பட்டதல்லவா? அதுபற்றி நொஸ்ரடாம் ஆரூடம் கூறியிருக்கிறாரா? என்பதை அறியஎல்லோரும் அவர் எழுதிய Centuries  நூலைப் புரட்டினார்கள். என்னவியப்பு? அதில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது,

Century 6, Quatrain 97

Two steel birds will fall from the sky on the Metropolis
The sky will burn at forty-five degrees latitude
Fire approaches the great new city
Immediately a huge, scattered flame leaps up
Within months, rivers will flow with blood
The undead will roam earth for little time.                     1654

இரண்டு எஃகுப் பறவைகள் வானத்தில் இருந்து தலைநகர் மீது விழும் வானம் நாற்பத்தைந்து பாகை குறுக்குக் கோட்டில் எரியும்
தீ அந்தப் பெருநகரத்தை அண்மிக்கும் உடனே சிதறுண்ட பெரிய தீச் சுவாலை மேலே பாய்ந்தெழும் சில மாதங்களுக்குள் ஆறுகளில் குருதி ஓடும் மடியாத மாந்தர் சொற்ப காலம் உலகில் அலைந்து திரிவார்கள்.

மூக்கில் விரலை வைக்கிறீர்களா? நொஸ்ரடாம் எவ்வளவு பெரியசோதிடசிகாமணி, சோதிடஞானி, சோதிடவிற்பன்னர் எனமலைக்கிறீர்களா? செப்தெம்பர் 11யை எவ்வளவு துல்லியமாகஎதிர்வுகூறல் சொல்லியிருக்கின்றார் என்று திகைக்கிறீர்களா?
கொஞ்சம் பொறுங்கள், இது ஓர் இடைச் செருக்கல். யாரோ ஒரு குறும்புக்காரன் தொடர் வலையத்தில் இதனை எழுதி வைத்து விட்டான். நொஸ்ரடாம் எழுதிய எதிர்வுகூறல்களில் காணப்பட்ட வரிகளைத் திருடி இந்தப் பாடலைப் புனைந்துவிட்டான். நொஸ்ரடாம் இரண்டு எஃகுப் பறவைகளைப்பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. அது முற்று முழுதான கற்பனையோடு கூடியஇடைச் செருக்கல் ஆகும்.

இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். நொஸ்ரடாமின் எதிர்வுகூறல்கள் நான்கு வரிகொண்டகவிதை. இதில் ஆறு வரிகள் காணப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் இது எழுதப்பட்டது 1654 ஆம் ஆண்டு என்றகுறிப்பு வேறு போடப்பட்டுள்ளது. ஆனால் நொஸ்ரடாம் 1566 இல் இறந்து போனார்!

இன்றும் இந்த ஆசாமியின் பெயரை வைத்துப் பலர் பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவரைப்பற்றி எழுதுகிற நூல்கள் உலகம் முழுதும் இலட்சக்கணக்கில் விற்பனையாகின்றன.

உலகக் கிண்ணப் போட்டி பற்றி பிரபல உள்ளுர் சோதிடர் ஒருவர் முந்திரிக் கொட்டைபோல எல்லோரையும் முந்திக் கொண்டு ஒரு வேறுபட்ட முடிவைச் சொன்னார்.

இறுதி ஆட்டத்தில் ஸ்ரீலங்காவும் கென்யாவும் மோதிக் கொள்ளும் என்றும் அதில் கென்யா அணி வெற்றி பெறும் என்றும் கிரகங்களது நிலையைத் துல்லியமாகக் கணித்து எதிர்வுகூறல் சொல்லியிருந்தார்.

இந்தச் செய்தியை வேலை மெனக்கிட்டு இங்குள்ள தமிழ்த் தொலைக்காட்சியில் உலகக் கிண்ணப் போட்டிகள் பற்றி ஆய்வு செய்த ஓர் ஆய்வாளர் குறிப்பிட்டார். நகைச் சுவைக்காகச் சொன்னாரோ தெரியவில்லை ஆனால் யார் அந்தப் பிரபல சோதிடர் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை.

இந்தியஅணி இந்தமுறை உலகக் கோப்பைக்குப் புறப்படும் முன்னரே முழு நாடும் யாகம், பூசை, கோமம், சாந்தி, அருச்சனை, சிறப்பு அபிசேகங்கள் என்று அமளிப்பட்டது. இந்தியஅணியின் வெற்றிக்காகச் சிற்றூர் முதல் பேரூர் வரை வேற்றுமையின்றி கோயில்களில் சிறப்புப் பூசைகள் இடம்பெற்றன. நூற்றியெட்டுக் குடங்களில் பாலாபிசேகம் எல்லாம் வல்லபிள்ளையாருக்குச் செய்யப்பட்டது. சிலர் திருப்பதியில் மொட்டை போடுவதாகநேர்த்தி வைத்தார்கள். இவற்றால் கோயில்களுக்கு நல்லவருமானம். அருச்சகர்கள் காட்டிலும் நல்லமழை!

‘இன்னின்ன காரணங்களால் இந்தியாவுக்குத்தான் வெற்றி’ என்று எல்லாச் சோதிடர்களும் கணிப்புச் சொல்லிக் கொண்டிருந்தனர். ‘சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியில் சனி ஓரை நடக்கிறது…. எனவே முதலில் துடுப்பெடுத்து ஆடும் அணி வெற்றி பெறும்……’ இப்படியும் ஓர் எதிர்வுகூறல் சொல்லப்பட்டது.

ஒரு சோதிடர் துடுப்பாட்டம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிக்கு நேர் எதிரில் குரு பகவான் (வியாழன்) படத்தை வைத்துப் பூசை செய்து கொண்டிருந்தார். இந்திய அணிக்குக் குருபகவான் அருளாசி வழங்குவார் என்று அவர் நம்பியதே அதற்குக் காரணம் ஆகும். போட்டி முடியும்வரை குரு பகவான் படத்துக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் இடையில் யாரையும் குறுக்கே நடக்கக்கூடஅவர் அனுமதிக்கவில்லை. காரணம் குருபகவானது சக்தி தடைபட்டுப் போமாம்!

ஆனால் இந்தியா-அவுஸ்திரேலியா இரண்டுக்கும் இடையிலானஇறுதிப் போட்டியில் இந்தியஅணி வெல்லும் என்று சோதிடர்கள் கிரகநிலைகளை வைத்துத் துல்லியமாகக் கண்pத்துச் சொன்னஎதிர்வுகூறல் பிழைத்து விட்டது! யாகங்கள், பூசைகள், அருச்சனைகள், அபிசேகங்கள் ஆகியவற்றால் கிரகங்களையோ கடவுளரையோ விலைக்கு வாங்கச் சோதிடர்களாலும் பக்தர்களாலும் முடியவில்லை!

துடுப்பாட்டம் போன்றவிளையாட்டில் திறமையானஅணி வெற்றிபெறும் என்பது பொது விதி ஆகும். பத்தில் ஒன்பது முறை திறமையானஅணியே வெல்லும் வாய்ப்பு உண்டு. பத்தில் ஒருமுறை புறநடையாகத் திறமையானஅணி தோற்கக் கூடும்.

இந்திய – அவுஸ்திரேலியா இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கே வெல்லும் வாய்ப்பு இருந்தது. ஏனெனில் அது ஆடியமுன்னையஆட்டங்கள் அத்தனையிலும் வெற்றி பெற்றிருந்தது. அதாவது தொடர்ந்து 16 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்திருக்கிறது. இறுதி ஆட்டத்தில் அது தோற்றிருந்தால் அது புறநடையாக இருந்திருக்கும்.

எடுத்துக்காட்டாக நமீபா இந்தமுறைதான் முதன் முதலில் உலகக் கிண்ணத்துக்கானபோட்டியில் கலந்து கொண்டது. அது ஆடியஎல்லா ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியது. அதற்கு முக்கியஏது திறமை மற்றும் பட்டறிவு இன்மை ஆகும். அதன் தோல்வியை எந்தக் குருபகவானாலும் மாற்றிவிடமுடியாது.

இன்னொரு சோதிடர் அமெரிக்க – இராக் சண்டை தொடங்கி இரண்டாம் நாள் சண்டை நின்றுவிடும் என்று கணித்துச் சொன்னார். வழக்கம்போல் அதுவும் பிழைத்து விட்டது. இதை எழுதும்போது (மார்ச்சு 2003) 15 நாள்களாகப் போர் தொடர்கிறது.

சென்னையில் வசிக்கும் ஆர்.கே. பகவதிராஜ் என்றவாஸ்து நிபுணர் ‘தெலிப்பதி’ அதிர்வுகளைக் கொண்டு துடுப்பாட்டம் உட்படயாருடையவெற்றி தோல்வியையும் துல்லியமாகக் கணிக்கமுடியும் என்று ஒரு புதுக் கரடியை அவிட்டு விட்டிருக்கின்றார்.


சோதிடப் புரட்டு

(3)

சோதிடம் போலி அறிவியல்

சோதிடர், ஒருவன் பிறந்த நேரத்தில் இப் புவியைச் சுற்றிக் கிழக்கும் மேற்குமாக மேலும் கீழுமாக வான வீதியில் படர்ந்துள்ள 12 விண்மீன் (இராசி) மண்டலங்கள், 12 இராசி வீடுகள் மற்றும் வான வீதியில் வலம் வரும் 9 கோள்கள் (கிரகங்கள்) 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பலன் சொல்கின்றார்.

ஆனால் வாஸ்து நிபுணர் ஒரு மனிதனின் நன்மை தின்மை, நலம் நலமின்மை, உயர்வு தாழ்வு, செல்வம் வறுமை எல்லாவற்றையும் அவன் குடியிருக்கும் வீட்டின் அமைப்பு, வாசல், திசை முடிவு கட்டுகிறது என்கின்றார்.

‘ஒரு மனிதனின் நன்மை தீமையை அவர் குடியிருக்கும் வீட்டின் வாஸ்து அமைப்பு நிர்ணயிக்கிறது என்பது விஞ்ஞான ப+ர்வ உண்மையாகும். குழந்தைச் செல்வம் இல்லாமல் போவது, மனநிலை பாதித்த ஆணோ, பெண்ணோ இருப்பது, தீராத நோய் பீடித்திருப்பது, திருமணத் தடைகள் உருவாகுவது, படிப்பு மந்தநிலை என்று இன்னும் பல்வேறு தீமைகள் வாஸ்து குறை பாடுள்ள வீட்டினால் ஏற்படும். அதற்கு அந்த வீட்டின் குறைகளைச் சரி செய்வது மிக முக்கியம்.

அதேபோல் ஆண்டவன் உறையும் கோயில்களுக்கும் வாஸ்து குறைகள் இருந்தால் அந்தக் கோயில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சிறப்புப் பெறாத நிலையில்தான் இருக்கும்.

வாஸ்து குறையுள்ள இடங்களில் அமர்ந்து செய்யும் தொழில்களும் நட்டத்தில் தான் முடியும். சினிமாப் பட அலுவலகத்திற்கும் இது பொருந்தும். தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி), ஸ்டண்ட் ய+னியன், அபராஜித் பட நிறுவனம், நடன இயக்குனர் லலிதாமணி, டைரக்டர் டி.பி. கஜேந்திரன் போன்ற பல்வேறு பிரபல திரையுலகினரின் வீடு, அலுவலகம் சரியான வாஸ்து முறையில் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். பட அதிபர்கள் பி.எல். தேனப்பன், டைரக்டர் டி. ராஜேந்தர் போன்றவர்களுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறேன்.

இது தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாட்டில் உள்ளவர்களும் ஆலோசனை பெற்றுள்ளனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற மாநிலங்களுக்கும் நேரில் சென்று வாஸ்து கணித்துத் தந்திருக்கிறேன்.

இதுவரை வாஸ்து பற்றி 3 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். இந்தப் புத்தகங்களை அண்ணா பல்கலைக் கழகத்தில் கட்டடக் கலைப் பாட நூல் திட்டத்தில் சேர்ப்பதற்கான ஆராய்ச்சியில் உள்ளது. விரைவில் ஆங்கிலத்திலும் வாஸ்து புத்தகம் வெளிவர இருக்கிறது.

இது தவிர தெலிபதி (Telepathy) முறையில் அதிர்வுகளைக் கொண்டு வெற்றி, தோல்வியைக் கணிக்கும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறேன். அவுஸ்திரேலியா, இந்தியா மோதிய கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா ஜெயிக்கும் என்று முதல் நாளே கணக்கிட்டுப் பிரபல பத்திரிகை ஆசிரியர் ஒருவரிடம் கூறினேன். அதன்படியே அமைந்த போது அந்தப் பத்திரிகை ஆசிரியர் என்னை அழைத்துப் பாராட்டினார்.”

‘ஆண்டவன் உறையும் கோயில்களுக்கும் வாஸ்து குறைகள் இருந்தால் அந்தக் கோயில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சிறப்புப் பெறாத நிலையில்தான் இருக்கும்’ என்று இந்த வாஸ்து சோதிடர் சொல்வது உண்மையானால் எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த ஆண்டவன் எழுந்தருளி இருக்கும் கோயிலின் வாஸ்து சரியில்லை என்றால் அந்தக் ஆண்டவனுக்கே “சக்தி” (power) இருக்காது!

நாத்திகர்கள் யாரென்று கேட்டால் இப்படிக் கடவுளரைச் சுத்தமாக மட்டம் தட்டுவோரையே நான் நாத்திகர்கள் என்று சொல்வேன்!

வாஸ்து தோதிடரின் கூற்றுப்படி கனடாவில் கோயிலாக மாறிய பண்டகசாலைகளிலும், பழைய சாராயக் குதங்களிலும் எழுந்தருளி இருக்கும் கடவுளருக்கு எந்த ஆற்றலும் இருக்க வாய்ப்பே இல்லை!

இது தெரியாமல் வீணாக அடியார்கள் இந்தக் கோவில்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கடவுளர்க்கு ஆற்றல் இருக்கிறதென நம்பி அருச்சனை, ஆராதனை, அபிசேகம், தேர், திருவிழா செய்து தங்கள் பணத்தையும் நேரத்தையும் பாழ் செய்கின்றார்கள்!

மேலும் ‘ஒரு மனிதனது நன்மை தீமையை அவன் குடியிருக்கும் வீட்டின் வாஸ்து அமைப்பு நிர்ணயிக்கிறது என்பது விஞ்ஞான பூர்வ உண்மை யாகும்” என்று கூறுவதன் நோக்கம் தனது வாஸ்து சோதிடத்தை மக்கள் மத்தியில் சந்தைப் படுத்தவே ஆகும். இப்போதெல்லாம் வேதம், உபநிடதம், பகவத் கீதை போன்றவற்றில் இன்றைய அறிவியல் உண்மைகள் எல்லாம் கூறப்பட்டுள்ளன என்று பேசுவதும் எழுதுவதும் ஒரு வழக்காக (fashion) மாறிவிட்டது. அறிவியல் சோதிடம் (Scientific Astrology) என்ற சொற்றொடர் மிக எளிதாகச் சோதிடர்களால் பயன்படுத்தப் படுகிறது!

‘அயோக்கியர்களுக்கு நாட்டுப்பற்றுத்தான் கடைசிப் புகலிடம்’ (“Patriotism is the last refuge of a scoundrel”) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அது போலச் சோதிடப் புரட்டர்களுக்கும் அறிவியல்தான் கடைசிப் புகலிடமாக இருக்கிறது!

பாவம் சோதிடர், அவருக்கு ‘விஞ்ஞான பூர்வ உண்மை’ என்றால் என்ன என்பது தெரியாமல் இருக்கிறது. அறிவியலை இரண்டாகப் பிரிக்கலாம்.

வேதியியல், இயற்பியல், உயிரியல், மூலக்கூறு உயிரியல் (Molecular biology) கணிதம் போன்ற துறைகளை ஆராயும் இயற்கை அறிவியல் ஒன்று. இது வல்லின அறிவியல் (Hard Scciences) என அழைக்கப்படும். இது கடந்த 200 ஆண்டுகளுக்குள் செம்மைப்படுத்தப் பட்டதாகும்.

மற்றது மானுடவியல், படிமலர்ச்சி உயிரியல் (evolutionary biology) சமூகவியல், தொல்பொருளியல், மெய்யியல், வரலாறு, பொருளாதாரம் போன்ற மனித சமூகத் துறைகளைப் பற்றி ஆராயும் சமூக அறிவியல். இது மெல்லின அறிவியல் (Soft Sciences) என்று பெயர் பெறும்.

ஆய்வுகளால் மெய்ப்பிக்கப் படக்கூடிய ஆய்வு முறையைச் சமூகவியலுக்குப் பொருத்தும் போது அது சமூக அறிவியல் (Social Sciences) என்ற தகுதியைப் பெறுகிறது.

வல்லின அறிவியல் என்பது அறிவியலாளர்கள் தனியாகவும் கூட்டாகவும் நீண்ட காலம் ஒரு பொருளையோ நிகழ்வையோ கூர்ந்து அவதானித்து முறைப்படி ஆய்வு செய்து நம்பத்தகுந்த, முரண்படாத, விதிக்கட்டுப்பாடுள்ள ஒரு கோட்பாட்டை (வாநழசல) அல்லது விதியைப் பெரும்பாலும் கணித அடிப்படையில் உருவாக்குவதாகும். கூர்ந்து அவதானித்தல் என்பது ஒரு பொருளையோ அல்லது நிகழ்ச்சியையோ விருப்பு வெறுப்பின்றித் திறந்த மனத்தோடு ஆழ்ந்து பார்த்து ஏதுக்களின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுப்பதாகும். அப்படியான அறிவியல் முறைமை அய்ந்து படிகளைக் கொண்டதாகும்.

1) ஒரு நிகழ்வை அல்லது நிகழ்வுகளை கூர்ந்து அவதானித்துப் பெறப்படும் தரவுகளைத் திருத்தத்தோடும் (accuracy) மெய்மையோடும் (objectivity)  ஏரண அடிப்படையோடும் (logical) வரைப்படுத்தல்.

2) ஒரு நிகழ்வை விளக்குவதற்கு ஒரு புனைகோளை (hypothesis) உருவாக்குதல்.

3) இயற்பியலில் புனைகோள் கணித அடிப்படையில் அமைக்கப்படும்.

4) எடுகோளைப் பயன்படுத்தி நிகழ்வை எதிர்வுகூறல் செய்தல்.

5) எதிர்வுகூறலைச் சுதந்திரமான தனித்தனி சோதனை மூலம் சரிபிழை பார்த்தல்.

மெல்லின அறிவியல் அவ்வாறு இல்லை. நூற்றுக்கு நூறு விழுக்காடு சரியாக இருக்காது. ஆய்வுகூடங்களில் அல்லாது பெரும்பாலும் மனிதனது பட்டறிவு, மனவுணர்ச்சி இவற்றின் அடிப்படையிலேயே மெல்லியல் அறிவியல் கோட்பாடுகள் வகுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு ளுபைஅரனெ குசநரன அவர்களது உளவியல் பகுப்பாய்வுகளைக் குறிப்பிடலாம். டார்வினின் படிமலர்ச்சி கோட்பாடு கூட மெல்லின அறிவியலைச் சார்ந்ததுதான்.

சோதிடம் இந்த இரண்டு வகை அறிவியல் எதிலும் சேராது. சோதிடத்துக்கு ஆய்வு கூடம் கிடையாது. கருவிகள் கிடையாது. அது வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில் விதிக்கட்டுப்பாடின்றி (Arbitrary)  அனுமானிக்கப்பட்ட முடிவுகளை அடிப்படையக் கொண்ட போலி அறிவியல் (pseudo – science) ஆகும்.

ஒரு எடை கூடிய குண்டையும் எடை குறைந்த குண்டையும் (cannon ball) ஒரு கோபுரத்தில் நின்று கொண்டு கீழே போட்டால் அவை இரண்டும் ஒரே வேகத்தில் கீழ் நோக்கி வீழ்ந்து ஒரே நேரத்தில் தரையைத் தொடும் என்பது ஒரு அறிவியல் உண்மை. இதனை முதன் முதலில் எண்பித்துக் காட்டியவர் கலிலியோ கலிலி (Galileo Gallei) என்ற வானியலாளர். இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். புகழ்பெற்ற பிசா சாய்ந்த கோபுரத்தில் (Leaning Tower  of Pisa) ஏறி நின்று இந்த ஆய்வைச் செய்தார் என்று கூறுகின்றார்கள்.

புவி ஈர்ப்பு விசை (force of gravity) பொருள்களை அவற்றின் எடை எதுவாக இருந்தாலும் ஒரே வேகத்தோடுதான் கீழ்நோக்கி இழுக்கிறது. இதற்குப் புறநடை கிடையாது. கலிலியோ செய்து காட்டிய ஆய்வை நானும் நீங்களும் செய்தாலும் அதே முடிவைப் பெறமுடியும். அதற்காகச் சாய்ந்த கோபுரத்திலோ அல்லது சிஎன் கோபுரத்திலோ (CN Tower) ஏற வேண்டியதில்லை. வீட்டில் ஒரு தோடம்பழத்தையும் ஒரு எலுமிச்சம் பழத்தையும் வைத்தே அதனை உறுதிப் படுத்தலாம்.

நீண்ட காலமாக அம்மை நோய் கடவுளின் கோபத்தால் ஏற்படுகிறது என்றுதான் மக்கள் நம்பி வந்தார்கள். அம்மை நோய் என்ற பெயர் காரணப் பெயர் ஆகும். ‘அம்மாளாச்சி’ யின் சினத்தால் அது ஏற்படுகிறது என்று தமிழர்கள் நம்பியதால் அந்த நோய்க்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது. அதைப் போக்க அவர்கள் கண்டு பிடித்த மருந்து பூசாரியைக் கொண்டு வேப்பிலை அடிப்பது, அம்மன் கோயில்களில் குளிர்த்தி செய்வது, பொங்கல் பொங்கிப் படைப்பது முதலியவையாகும்.

ஆனால் எட்வேட் ஜெனர் (Edward Jenner) என்ற மருத்துவர் அந்த நோய் ‘Variolation’ என்ற ஒருவகை வைறசினால் (Virus) ஏற்படுகிறது என்பதைக் கண்டு பிடித்தார். அது மட்டுமல்ல, அதே வைறசின் வீரியத்தைக் குறைத்து அதனை ஊசி மூலம் செலுத்தினால் மனிதர்களுக்கு அந்த நோய் வராமல் தடுக்கலாம் என்ற அறிவியல் உண்மையையும் கண்டு பிடித்தார்.

சோதிடர் பகவதிராஜ் வாஸ்து சாத்திரம் ‘விஞ்ஞான பூர்வ உண்மை’ என்பதைக் கண்டறிய எந்த ஆய்வு கூடத்தில் எப்போது ஆய்வு நடத்தினார்? எத்தனை ஆண்டுகள் நடத்தினார்? அதன் பெறு பேறுகள் என்ன?

இந்தச் சோதிடர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி, எங்கோ ஒரு குடிசையில் இருந்து கொண்டு படியாத பாமரமக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றார் என்பதில்லை. அப்படி இருந்தால் ‘பாவம் மனிதர் பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டு விடலாம்!

ஆனால் இன்று தமிழ்நாட்டில் கிரக சோதிடர்கள், வாஸ்து சோதிடர்கள் கணித்துக் கூறுவதை வைத்துத்தான் ஆட்சியே நடக்கிறது!

இராணி மேரி கல்லூரி சென்னையில் உள்ள பழம்பெரும் கல்லூரி. அன்றைய சென்னை மாகாண ஆங்கில அரசினால் பெண்களுக்கு மட்டுமே தொடக்கப்பட்ட கல்லூரி ஆகும். மொத்தம் 123 ஆண்டு பழமை வாய்ந்தது. மேட்டுக்குடி அல்லது பணம் படைத்த பெற்றோர்களது பிள்ளைகள் படிக்கும் கல்லூரி அல்ல, எளிய வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் கல்லூரி.

ஆனால் அந்தப் பழம் பெரும் கல்லூரிக்கு வாஸ்து சோதிடர்களால் ஆபத்து வந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு அதை இடித்துவிட்டு அந்த இடத்தில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்டத் திட்டமிட்டுள்ளது.

தலைமைச் செயலகம் கட்ட வேறு இடம் இல்லையா? இருக்கிறது. முதலில் பழைய மாமல்லபுரத்தை அண்டிய இடத்திலேயே தலைமைச் செயலகம் கட்டுவதாக இருந்தது. பின்னர்தான் கடற்கரை அருகில் உள்ள இராணி மேரி கல்லூரி தெரிவானது.

முன்னைய முடிவில் ஏன் திடீர் மாற்றம்? நெருக்கடி நிறைந்த சென்னை நகரை விட்டு விட்டு புறநகர்ப் பகுதியில் தலைமைச் செயலகத்தைக் கட்டுவதுதானே? அதுதானே அறிவு நாணயமான செயல்? அதை விடுத்து ஏன் முதலமைச்சர் ஜெயலலிதா இராணி மேரி கல்லூரியை இடித்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கின்றார்?


சோதிடப் புரட்டு

(4)

இராகு கேது கோள்கள் அழகான கற்பனை!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிடிவாதத்திற்கு வாஸ்து சோதிடர்களின் அறிவுரையே ஏது ஆகும்.

‘கோட்டை உங்களுக்கு இராசியில்லை, கோட்டைக்குப் போகிற வழியில் அண்ணா சமாதியும் எம்ஜிஆர் சமாதியும் இருக்கின்றன, அவை நல்ல சகுனங்கள் அல்ல, முழிவளத்துக்கு ஆகாதவை, இராணி மேரி கல்லூரி இருக்கும் இடத்தில் வாஸ்து சாத்திரப்படி இன்னொரு தலைமையகத்தைக் கட்டி அங்கு குடியேறுங்கள்’ என்று வாஸ்து சோதிடர்கள் கூற மூடநம்பிக்கைகளில் ஊறிப்போன ஜெயலலிதா மாமல்லபுரம் பக்கமாக தலைமையகத்தைக் கட்டும் தனது முன்னைய முடிவைக் கைவிட்டு இராணி மேரி கல்லூரியை இடித்து அங்கு தலைமையகம் கட்ட முடிவு செய்தார்.

ஜெயலலிதா கோட்டைக்குப் போவதென்றாலும் இராகு காலம் யமகண்டம் பார்த்துத்தான் கிளம்புகிறார்.

இராகு காலம் யமகண்டம் இரண்டும் ஒவ்வொரு நாளும் இடம்பெறுவதால் இராகு காலம் யமகண்டம் முடிந்தபின்னர் அல்லது தொடங்கு முன்னர் முதலமைச்சர் கோட்டைக்குப் போகின்றார்!

இங்குள்ள கோயில் ஒன்று வானொலியில் கிழமை தோறும் சமய நிகழ்ச்சி நடத்துகிறது. அதில் பேசிய ஒருவர் ‘இராகு காலத்தில் அம்பாளுக்கு அருச்சனை செய்தால் அதற்கு மற்றைய காலத்தைவிட அதிக பலன் உண்டு’ என்று பரப்புரை செய்தார். உண்மை என்னவென்றால் சனி தோசம் இருக்கிறது, வியாழ தோசம் இருக்கிறது, செவ்வாய் தோசம் இருக்கிறது, நாக தோசம் இருக்கிறது அவற்றை நீக்க வேண்டுமென்றால் அருச்சனை செய்ய வேண்டும் சாந்தி செய்ய வேண்டும் என்று இந்து மதம் சொல்வது பாமர மக்களைப் பயமுறுத்திப் பணம் பறிக்கவே ஆகும்!

ஜெயலலிதா முதலமைச்சராக இருப்பதால் அவர் நேரம் பிந்திக் கோட்டைக்குப் போகலாம். ஆனால் தமிழக அரச ஊழியர்கள் அப்படிக் காலம் தாழ்த்திப் போக முடியாது. போனால் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படலாம். அல்லது சம்பளத்தில் வெட்டு விழலாம். எனவே அப்படிப்பட்டோர் இராகு காலம் யமகண்டம் போன்ற சோதிடப் புரட்டுகளை நம்பினாலும் கடைப்பிடிக்க முடியாது! இராகு காலம் பார்த்தால் விமானம் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் என்னாவது? நல்ல காலம் விமானம் மற்றும் போக்குவரத்துச் சேவை நடத்துபவர்களுக்கு இராகு காலத்தில் நம்பிக்கை இல்லை!

முற் காலத்தில் வானூர்தி இருக்கவில்லை. பேருந்துகள் இருக்கவில்லை. இன்று போல் நாடு விட்டு நாடோ, கண்டம் விட்டுக் கண்டம் செலவு (பயணம்) செய்வதில்லை. ஆக மிஞ்சினால் அடுத்த ஊருக்கு மாட்டு வண்டியில் அல்லது குதிரை வண்டியில் போய் வந்தார்கள். அவர்களது வாழ்க்கை முறையும் வேறாக இருந்தது. குறைந்த தேவைகள். குறைந்த நேர உழைப்பு. இதனால் நேரம் மிச்சம் இருந்தது. கமக்காரர்கள் ஆண்டில் அய்ந்தோ ஆறோ மாதங்கள் உழுது, எருவிட்டு, விதைத்து, களை பிடுங்கி, அறுவடை செய்து, சூடு மிதித்து நெல்லை வீடு சேர்த்த பின்னர் அடுத்த பருவ மழைக் காலம் வரும் மட்டும் வீட்டில் ஓய்வாக இருந்தார்கள். எனவே அவர்களுக்கு இராகு காலம் யமகண்டம், அட்டமி நவமி பார்க்க நேரமிருந்தது. அதனாலேயே ‘அட்டமியில் தொட்டதெல்லாம் நாசம்’ என்ற பழமொழியே பிறந்தது.

சைவ சமய குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் நாளுக்கும் கோளுக்கும் எதிராக அவரளவில் புரட்சி செய்திருக்கின்றார்.

மதுரையை ஆண்ட பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி என்ற கூன்பாண்டியன் முன்னர் சைவ சமயத்தவனாக இருந்து பின்னர் சமண சமயத்தைத் தழுவியவன். அவன் துணைவி மங்கையற்கரசியார் சிவநெறியைப் பின்பற்றினார். பாண்டியனைச் சமண சமயத்தின் பிடியில் இருந்து விடுவிக்க எண்ணிய மங்கையற்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் திருஞானசம்பந்தரது உதவியை நாடினார்கள். பாண்டிநாட்டுக்கு எழுந்தருள வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்தார்கள்.

அந்த அழைப்பை ஏற்று திருஞானசம்பந்தர் பாண்டிநாடு செல்லப் புறப்பட்டார். அப்பொழுது அவரோடு உடன் இருந்த அப்பர் ‘சம்பந்தப்பிரானே! சமணர் சாமானியர்கள் அல்லர். இளமையில் நான் அவர்கள் பிடியில் சிக்கித் தவித்து மீண்டவன். அவர்கள் மந்திர தந்திரங்களை நான் அறிவேன். நீங்கள் போக வேண்டாம் நான் போகிறேன்’ என்றார்.

ஆனால் சம்பந்தர் அதற்கு இணங்காமல் ‘நானே பாண்டிநாடு சென்று மன்னனை மீண்டும் சைவனாக்கி மீளுவேன்’ என்று உரைத்தார்.
‘இன்று நாளும் கோளும் கூடச் சரி இல்லை. ஆகவே மதுரைப் பயணம் வேண்டாம்’ என்று நாவுக்கரசர் மீண்டும் தடை சொன்னார்.
அதைக் கேட்ட சம்பந்தர் ‘வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்’ என்று தொடங்கும் கோளறு பதிகத்தைப் பாடியருளினார்.

‘வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே’

‘என் சிந்தையில் சிவன் குடிகொண்டிருக்கும்பொழுது ஒன்பது கோள்களும் என்னை ஏதும் செய்ய முடியாது. கவலையில்லாமல் எனக்கு விடை தாருங்கள்’ என்று கூறி விடைபெற்றுச் சம்பந்தர் பாண்டி நாட்டை நோக்கி செலவு மேற்கொண்டார்.

ஒன்பது கோள்களும் என்னை ஏதும் செய்யாது என்று சம்பந்தர் அடித்துச் சொன்னதை இன்றைய சைவசமயத்தவர் பின்பற்றுவதாக இல்லை. ஒருவேளை ‘என் சிந்தையில் சிவன் குடிகொண்டிருக்கிறான்’ என்று சம்பந்தர் சொன்னதுபோல் அவர்களால் துணிந்து சொல்ல முடியாது இருக்கிறது போலும்!

இரண்டு பாம்பு என்பது இராகு கேது கோள்களைப் குறிப்பன. உண்மையில் அவை வியாழன், சனி போல் கோள்கள் அல்ல. வெறுமனே சோதிடர்களின் அழகான கற்பனை. வேத கால சோதிடத்தில் இராகு கேது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பிற்காலத்தில்தான் அவை சேர்க்கப்பட்டன. இருந்தும் இந்தக் கற்பனைக் கோள்களுக்குப் படித்தவர்கள், படியாதவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் பயந்து சாகின்றார்கள்.

ஜெயலலிதாவின் அரசவை (ஆஸ்தான) சோதிடர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது பெயர் உன்னி கிருஷ்ணன் பணிக்கர். அவரது சொந்த ஊர் தென் கேரளாவில் உள்ள மல்லபுரம். பொதுவாகக் கேரளம் ‘மலையாள’ மந்திரவாதிகளுக்குப் பெயர் போன மாநிலம். இவர் ‘அஷ்டமங்களாய பிரஸ்னம்’ என்ற சோதிடக் கலையில் வல்லுனராம். ‘ஒரு மனிதரது பேச்சு, உடை, நடை, பாவனை’ போன்றவற்றை வைத்துப் பலன் சொல்கின்றார்.

‘அம்மாவுக்குப் பச்சை நிறம்தான் இராசி’ (பொருத்தம்) என்று இந்தச் சோதிடர் சொன்னதால் இப்பொழுது ஜெயலலிதா எங்கே போனாலும் பச்சைச் சேலையையே உடுக்கிறார். அவர் போகிற இடமெல்லாம் பச்சை நிறத்தில் பதாதைகள். பச்சை நிறத்தில் அலங்கார வளைவுகள். பச்சை நிறத்தில் விரிப்புக்கள் என எங்கே பார்த்தாலும் ஒரே பச்சை நிறம்தான். அதிமுக இணைய தளத்திற்கும் பச்சை நிறம் தீட்டியுள்ளார்கள்.

உன்னி கிருஷ்ணன் பணிக்கர்தான் குருவாயூர் அப்பனுக்கு யானை ஒன்றைத் தானம் கொடுக்குமாறு ஜெயலலிதாவுக்கு அறிவுரை வழங்கினார். ஜெயலலிதாவும் அப்படியே ஒரு யானைக் குட்டி ஒன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குருவாயூர்க் கோயிலுக்குத் தனது உயிர்த் தோழி சசிகலாவோடு சென்று தானம் கொடுத்தார்.

இப்போதெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிச் செய்தித்தாள்களில் வரும் செய்திகள் அவர் தனது தோழி சசிகலாவுடன் இன்ன கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார், இன்ன சாந்தி செய்தார், இன்ன அபிசேகம் செய்தார், இன்ன யாகம் செய்தார், இன்ன தட்சணை கொடுத்தார் என்பதாகவே இருக்கின்றன. இது பற்றிப் பின்னர் எழுதுவேன்.

சோதிடர் பகவதிராஜ்தான் ஜெயலலிதாவின் வாஸ்து சோதிடரா என்பது தெரியவில்லை. ஆனால் அவருக்குப் பெரிய இடத்துத் தொடர்புகள் இருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அண்மையில் அவரது 52 ஆவது பிறந்த நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பிறந்த நாளையொட்டி கே.கே. நகர் மல்டி வினாயகர் கோயிலில் சிறப்புச் பூசை செய்யப்பட்டது.

எழுத்தாளர் வலம்புரி ஜான், அவைத் தலைவர் காளிமுத்து, அவரது மனைவி மனோகரி, அவரது உறவினர்கள், தொழில் முனைவர்கள் ஆகியோர் பகவதிராஜிக்கு நேரில் சென்று வாழ்த்துக் கூறினார்கள்.

இவர்களில் ஒருவர் மட்டும் எனக்குப் பழக்கம் ஆனவர். அவர் சொற்சித்தர் வலம்புரி ஜான் ஆவார். தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2001) நடத்திய கவிஞர் காசி ஆனந்தன் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஒரு மணி நேரம் அருமையாகப் பேசினார். கவிஞர் காசி. ஆனந்தன் பாரதி, பாரதிதாசனுக்கு ஒப்பான ஒரு கவிஞன் என்று வானளாவப் புகழ்ந்தார். அவர் பேசி முடித்ததும் இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம் என்பது போல் இருந்தது. அவ்வளவு இனிமையோடும் நகைச்சுவையோடும் பேசினார்.

சொல்லாண்மை மட்டும் அல்லாது அவரிடம் எழுத்தாண்மையும் இருக்கிறது. எழுபது புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கின்றார். இவற்றில் கவிதைகள் (13) சிறுகதைகள் (7) நாவல்கள் (8) கட்டுரைகள் (44) அடங்கும். அவர் எழுதிய பிரார்த்தனைப் பூக்கள் என்ற முதல் நூல் கனடாவிலும் வெளியிடப் பட்டது.

அண்மையில் வலம்புரி ஜான் தன் கைப்பட, தனது கடிதத் தலைப்பில் ஜெயலலிதாவிற்கு ஒரு மடல் வரைந்திருந்தார். அதில் ‘கோள்நிலை காரணமாகவும் சூழ்நிலை காரணமாகவும் நான் அம்மாவை விட்டுப் பிரிய நேரிட்டது. என்னை மன்னித்து மீண்டும் உங்களோடு என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது.



சோதிடப் புரட்டு

(5)

தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் சோதிடர்கள்!

மனிதர்களுக்கு உடல்நலக் குறைவு, தொழிலைத் தொடங்கும் போது அல்லது செய்கிற தொழிலில் பின்னடைவு ஏற்படும் போது கோள்கள், நட்சத்திரங்கள் பற்றிய நினைப்பு வருகிறது. ‘கிரகம் சரியில்லை, எதற்கும் குறிப்பைச் சாத்திரியாரிடம் காட்டுவோம்’ என சாதகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சோதிடர்களிடம் ஓடுகிறார்கள்.

திருமணத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பொருத்தம் பார்க்காமல் திருமணம் இல்லை என்ற மூட நம்பிக்கை ஒரு நோய் போல் தமிழ்ச் சமூகத்தில் ஆழப் புரையோடிப் போய்விட்டது.

மெத்தப் படித்த அதே நேரம் கிறித்தவரான வலம்புரி ஜான் ‘கோள் நிலை காரணமாகவும் சூழ்நிலை காரணமாகவும் நான் அம்மாவை விட்டுப் பிரிய நேரிட்டது…’ என்று எழுதும் பொழுது மற்றவர்களை நோவதில் பயனில்லை.

வலம்புரி ஜான் நமது எம்ஜிஆர் நாளேட்டின் ஆசிரியராக நீண்ட காலம் பணிபுரிந்தவர். ஒரு நாள் முதலமைச்சர் எம்ஜிஆரை சந்திக்க கோட்டைக்கு தானியங்கி வண்டியில் போனார். ‘எப்படி வந்தீர்கள்?” என்று கேட்டதற்கு “தானியங்கி வண்டி” என்று பதில் வந்தது. எம்ஜிஆர் அதைக் கேட்டுவிட்டு நமது எம்ஜிஆர் பற்றி அவரோடு உரையாடினார்.

அடுத்த நாள் அலுவலகத்துக்கு வந்திருந்த வலம்புரி ஜானுக்கு ஒரு ‘அதிசயம்’ காத்திருந்தது. அலுவலக வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி வண்டி. ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உத்தியோக நாளேட்டின் ஆசிரியர் ஓட்டோவில் பயணம் செய்வது அழகாக இருக்காது’ என்று எம்ஜிஆர் நினைத்த காரணத்தால் புதிய வண்டியொன்றை வாங்கி அவருக்குக் கொடுத்தார். எம்ஜிஆர் ஒருவரே அப்படிச் செய்யக் கூடியவர். மற்றவர்களுக்கு பணம் இருந்தாலும் மனம் வராது.

கனடாவிற்கு வந்த காலத்தில் வலம்புரி ஜான் சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். அதன் மூலம் ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் தேமதுரத் தமிழ் ஓசையையும் தமிழ் மணத்தையும் தமிழர் இல்லங்கள் தோறும் தவழவிட்டார். ஏறத்தாழ 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடந்த அந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு அறிவுப்பிழைப்பாளர் பத்தாம்பசலியான வாஸ்து சாஸ்திரி பகவதிராஜியின் பிறந்தநாள் விழாவில் ஏன் கலந்து கொண்டார் என்பது புரியவில்லை. எல்லாம் அந்கக் கோள்களின் ‘கோளாறு’ காரணமாக இருக்கலாம்!

சோதிடர் சாதகத்தைப் பார்த்து சாதககாரருக்குக் கிரக தோசம் இருக்கிறது என்கின்றார். வாஸ்து சாத்திரி அவனது வீட்டைப் பார்த்து அதன் அமைப்பில் தோசம் இருக்கிறது என்கின்றார்.

அப்படியென்றால் கிரகங்கள் நட்பாக இருந்து வீட்டின் அமைப்புப் பகையாக (நீசமாக) இருந்தால் அந்த மனிதனது ‘தலைவிதி’யை எது தீர்மானிக்கிறது? அல்லது மறுபக்கமாகக் கிரகங்கள் கேடாக இருந்து வீட்டின் இராசி நன்மையாக இருந்தால் அந்த மனிதரது தலைவிதியை எது தீர்மானிக்கிறது? சோதிடர் நம்பும் கிரகங்களா அல்லது வாஸ்து சோதிடர் நம்பும் வாஸ்து வீடா?

அமெரிக்காவில், கனடாவில் விண்ணை முட்டும் கட்டடங்கள், தொழிற்கூடங்கள், அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றைக் கட்டி வைத்திருக்கின்றார்கள். அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலி எடுக்கும். இவையெல்லாம் வாஸ்து சாத்திரப்படி கட்டப் பட்டவையா?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற்றுள்ள Microsoft  நிறுவனர் Bill Gates தனது தொழிற் கூடத்தையும் வீட்டையும் வாஸ்து சாத்திரம் பார்த்தா கட்டி இருக்கிறார்? அதுதான் அவரது வெற்றியின் இரகசியமா? அவரது சொத்தின் பெறுமதி 5,300 கோடி அ. டொலர்! அவரது வீட்டைக் கட்டச் செலவான தொகை 93 மில்லியன் அ. டொலர்!

வாஸ்து சாத்திரம் பார்க்கும் இந்தியாவில் வறுமையும் நோயும் கொடி கட்டிப் பறக்கும் போது மேற்குலக நாடுகளில் செல்வமும் செழிப்பும் கொழிக்கிறதே! அது எப்படி?

ஓர் இந்தியனின் பொதுமேனி அகவை அளவு (Average life-span) 55 மட்டுந்தான். மேற்கு நாடுகளில் இது 80 ஆக இருக்கிறது.

ஓர் இந்தியனது பொதுமேனி (பொதுமேனி) ஆண்டு வருவாய் 550 அ.டொலர் மட்டுமே. மேற்கு நாட்டுக்காரனின் பொதுமேனி வருவாய் 24,000 அ.டொலர் ஆகும்!

உலகில் தொழுநோய், எலும்புருக்கி நோய்,    எயிட்ஸ் (Aids) நோய் முதலியவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் தொகை இந்தியாவிலேயே மிக அதிகமாக் காணப்படுகின்றது!

இராசி மண்டலங்கள் (Constellations)

அப்படியென்றால் வான மண்டலத்தில் உலா வரும் கோள்களும் விண்மீன்களும் தங்களுக்குள் பேசிப் பறைந்து தங்களைக் கும்பிடும் இந்தியருக்கு இரண்டகம் செய்கின்றனவா?

இங்குள்ள கோயில் குருக்கள் ஒருவர் வானொலி ஒலிபரப்பில் ‘இப்போதெல்லாம் சோதிடம் பொய் என்று சிலர் கூறுகின்றார்கள். ஆனால் ஒருவர் பிறந்த காலத்தையும் நேரத்தையும் துல்லியமாகத் தெரிந்து கொண்டு அதன்படி சாதகத்தைக் கணித்தால் சோதிடம் நூற்றுக்கு நூறு உண்மை’ என்று அடித்துச் சொன்னார்.

கோயில்களில் அருச்சகத் தொழில் பிராமணர்களது ஏகபோக உரிமையாக இருக்கிறது. இதை அவர்கள் பிறந்த நேரமும் கோள்களும் தீர்மானிக்கிறதா? அல்லது இந்து சமயத்தில் காணப்படும் வருண பேதமும் சாதியமைப்பும் தீர்மானிக்கிறதா?

பிறந்த காலத்தையும் நேரத்தையும் துல்லியமாகத் தெரிந்து கொண்டு அதன்படி சாதகத்தைக் கணித்தால் சோதிடம் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும் என்று சொல்வது சரியானால், அந்தக் காலத்தையும் நேரத்தையும் துல்லியமாகக் கணிக்கச் சோதிடர்களுக்குத் தெரிந்திருந்ததா? அதற்கான கருவிகள் இருந்ததா? குருக்கள் கையில் கட்டியிருக்கிற மணிக்கூடு வெள்ளையன் கண்டு பிடித்தது, வேதகால இருடிகளும் முனிவர்களும் கண்டு பிடித்ததல்ல. வெள்ளைக்காரன் மணிக்கூட்டைக் கண்டு பிடித்த பின்பே எங்களுக்கு நேரத்தை மணி, மணித்துளி, விநாடி எனத் துல்லியமாகக் கணிக்கத் தெரிந்தது.

அதற்கு முன்னர் பகல் என்றால் அடியளந்தும், இரவென்றால் விடிவெள்ளி போன்ற வானத்து விண்மீன்களைப் பார்த்தும் அண்ணளவாக நேரத்தைக் கணித்தார்கள்.

மேலும் ஒரு குழந்தை பிறந்த சரியான நேரம் எது? அந்தக் குழந்தை கருவில் உருவான நேரமா? பிறக்கும்போது தலை அல்லது கால் புவியில் தொட்ட நேரமா? தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நேரமா? குழந்தை முதல் மூச்சுவிட்ட நேரமா? குழந்தையின் முதல் ‘குவா குவா’ அழுகைச் சத்தம் கேட்ட நேரமா? இதில் எந்த நேரம் சரியான நேரம்?

ஒரு மருத்துவமனையில் இரண்டு மூன்று மணித்துளி வேறுபாட்டில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் சாதக பலன் ஒன்றாக இருக்க வேண்டும். அவர்களது கல்வி, செல்வம், தொழில், உடல் நலம் போன்றவை ஒரே மாதிரி இருக்க வேண்டும். அவர்களது திருமணம், இறப்புப் போன்றவை ஒரே நேரத்தில் இடம்பெற வேண்டும். அப்படி எங்கேயாவது நடக்கிறதா? அது சாத்தியமா?

சோதிடர்கள் சாதக ‘பலனை’ பின் வருவனவற்றை அடிப்படையாக வைத்தே கணிக்கிறார்கள்.

(அ) இராசிச் சக்கரத்தின் (Zodiac) இருபுறமும் மொத்தம் 18 பாகையில் காணப்படும் 12 இராசிகள்.
(ஆ) இராசிச் சக்கரத்தைப் பிரிப்பதால் வரும் 12 இராசி வீடுகள்.
(இ) இராசிச் சக்கரத்தை வலம் வரும் 9 கோள்கள்.
(ஈ) இராசிச் சக்கரத்தின் பின்புலத்தில் காணப்படும் 27 நட்சத்திரங்கள்.
பன்னிரண்டு இராசி மண்டலங்களும் (விண்மீன் கூட்டங்கள்) இராசிச் சக்கரத்தின் (இராசி வட்டத்தின்) இருபுறமும் (8 பாகை எல்லைக்குள்) காணப்படும் நட்சத்திரங்களை ஒன்றோடு ஒன்று செயற்கையாக இணைத்துப் பெறப்பட்ட நட்சத்திரக் கூட்டங்களாகும்.

பன்னிரண்டு வீடுகளும் (Houses) 360 பாகை கொண்ட கற்பனையான இராசிச் சக்கரத்தைச் செயற்கையாக 12 ஆல் பிரிப்பதால் பெறப்படுகிறது. பன்னிரண்டு என்பது மனிதன் திங்களின் அல்லது ஞாயிறின் இயக்கத்தை வைத்துப் பெறப்பட்ட எண்ணாகும்.

இந்த இராசிகளுக்குரிய சின்னங்களுக்கும் இராசிச் சக்கரத்தில் காணப்படும் இராசி மண்டலங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இராசிச் சக்கரமும் ஞாயிறு செல்லுமாப்போல் தோன்றும் ஒரு கற்பனை வட்டமே!

ஆதி மனிதன் விண்ணில் ஞாயிறு செல்லும் பாதையை (இராசி வட்டத்தை) அண்ணாந்து பார்த்த போது சில விண்மீன் தொகுதிகள் அல்லது கூட்டங்கள் அவனது கண்களுக்கு மேடம் (ஆடு) இடபம் (எருது) மிதுனம் (ஆண் பெண் உருவம்) கடகம் (நண்டு) சிம்மம் (சிங்கம்) கன்னி (பெண்) துலாம் (தராசு) விருச்சிகம் (நட்டுவக்காலி) தனுசு (வில்) மகரம் (கடற்குதிரை) கும்பம் (குடம்) மீனம் (இரட்டைமீன்) போன்று காட்சியளித்தன. எனவே இராசி என்பது வான வீதியில் மனிதன் தன் ஊனக் கண்ணால் பார்த்த விண்மீன் தொகுதிகளுக்கு அவன் கொடுத்த கற்பனை உருவமாகும். கிரேக்கமொழியில் Zodiac என்ற சொல்லுக்கு விலங்குகள் என்பது பொருளாகும்.

இதனால்தான் இந்தியர்களது கண்ணுக்கு இடபமாகவும் விருச்சிகமாகவும் (நட்டுவக்காலி) தோன்றிய இராசிகள் சீனர்களது கண்ணுக்கு முறையே எலியாகவும் பாம்பாகவும் தோன்றியிருக்கிறது!

இராசிகள் எவ்வாறு நட்சத்திரங்களின் கூட்டமோ அவ்வாறே 27 நட்சத்திரங்களும் ஒன்று தொடக்கம் நூறு வரையிலான எண்ணிக்கை கொண்ட நட்சத்திரக் கூட்டமே.

இந்த நட்சத்திர மண்டலங்கள் சில தனி நட்சத்திரங்கன் ஆகும். எடுத்துக்காட்டாக சித்திரை, சுவாதி, ஆதிரை நட்சத்திரங்கள் தனித் தனியானவை. அவை முறையே முத்து (pearl)  நீலக்கல் (sapphire) துளசிமணி (bead) போன்ற சாயல் உடையன. பெரும்பாலான விண்மீன்கள் 3,4,5,6 எண்ணிக்கையுடைய நட்சத்திரங்களை ஒன்றோடு ஒன்றுடன் விதிக்கட்டுப்பாடின்றி (arbitrary) தொடுப்பதன் மூலம் உருவாக்கப் பட்டவையாகும். கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் என்பதால் அது 6 விண்மீன்கள் கொண்டவை என்பது சொல்லாமலே விளங்கும். சதய நட்சத்திரம் மட்டும் 100 விண்மீன்கள் கொண்டது. இருபத்தேழு நட்சத்திர மண்டலத்திலும் மொத்தம் 192 விண்மீன்கள் மட்டுமேஇருக்கின்றன.

கார்த்திகை விண்மீன்

உண்மையில் இந்த விண்மீன் தொகுதிகள் (நட்சத்திர மண்டலங்கள்) பல்லாயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கின்றன. சில விண்மீன்கள் கண்ணுக்கு அருகருகே காணப்பட்டாலும் அவற்றுக்கு இடையில் பல்லாயிரம் ஒளி ஆண்டு இடைவெளி இருக்கின்றது.

தொலைவு காரணமாக இந்த விண்மீன் கூட்டங்கள் அசையாதது போல் காணப்பட்டாலும் உண்மையில் அவை எமது ஞாயிறு விண்மீன் போல ஓடிக்கொண்டே இருக்கின்றன!

ஞாயிறு விண்மீனைச் சுற்றிவரும் கோள்கள் சில கோடி மைல்கள் தொலைவிலேயே சுற்றி வருகின்றன. அதனால் அவற்றின் அசைவு கண்ணுக்குத் தெரிகிறது.

இதன் காரணமாகவே சோதிடம் விண்மீன்கள் அசைவதில்லை என்றும் கோள்கள் அசைகின்றன என்றும் கூறுகிறது.

சோதிடம் இந்த விண்மீன் கூட்டங்களை அடையாளம் காண்பதற்கு அவற்றுக்குச் செயற்கையாக ஓர் உருவம் கற்பித்ததைப் பெரிய பிழையென்று சொல்ல முடியாவிட்டாலும் அவற்றுக்கு அந்த உருவத்தின் அடிப்படையில் குணாம்சங்களைக் கற்பித்துப் பலன் சொல்வது பெரிய பிழையாகும்.

எடுத்துக் காட்டாக சிம்ம இராசிக்காரர் சிங்கத்துக்கு உள்ள மூர்க்க குணங்களையும், விருச்சிக இராசிக்காரர் நட்டுவக்காலிக்குரிய கொட்டும் குணங்களையும் கொண்டிருப்பர் என்று சொல்வது அறிவீனமாகும்.

இராசி வட்டத்தில் (Zodiac) 27 நட்சத்திர மண்டலங்கள் மட்டுந்தான் இருக்கின்றதா? இல்லை என்கின்றார்கள் வானியலாளர்கள். அவர்கள் கணக்குப்படி நட்சத்திர மண்டலங்களின் எண்ணிக்கை 88 ஆகும். அப்படி என்றால் 27 நட்சத்திர மண்டலங்களை மட்டும் வைத்துப் பலன் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்? எப்படி அறிவு நாணயமாக இருக்கும்?

அது மட்டுமல்ல, எமக்குத் தெரிந்த அண்டத்தில் (Known Universe) ஏறத்தாழ 36,000 கோடி பால்மண்டலங்கள் (Galaxies) இருக்கின்றன எனவும் ஓவ்வொரு பால் மண்டலத்திலும் 10,000 – 20,000 கோடி விண்மீன்கள் (Stars)   காணப்படுகின்றன எனவும் வானியலாளர்கள் சொல்கின்றார்கள்! மனிதனது ஊனக் கண்களுக்கு 6,000 நட்சத்திரங்கள் மட்டுமே தெரிகின்றன!

எமது ஞாயிறு குடும்பம் இருக்கும் பால்மண்டலம் பால்வழி அல்லது பால் வீதி (Milky Way) என அழைக்கப்படுகிறது.

இந்தப் பால்மண்டலம் அதன் மையத்தை அச்சு ஆகக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது. ஞாயிறும் அதன் கோள்களும் இந்தப் பால்மண்டலத்தை ஏறத்தாழ மணிக்கு 864,000 கிமீ வேகத்தில் சுற்றிவருகிறது! இவ்வாறு ஒருமுறை சுற்றிவர 22 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

இந்த அண்டம் நீளம், அகலம், உயரம் என்னும் மூன்று அளவுகளும் காலம் எனப்படும் ஓர் அளவும் ஆக மொத்தம் நான்கு அளவீடுகள் (Four dimentional Space – Time) கொண்டதாகும்.

இவ் அண்டம் எல்லை அல்லது முடிவு அற்றது என்றே நியூட்டன் உட்படப் பெரும்பாலான அறிவியலாளர்கள் எண்ணினர். பேரறிஞர் அயின்ஸ்தீன் இவ் அண்டத்தில் நேர்க்கோடு என்பதே கிடையாது எல்லாம் வட்டங்களே என்கின்றார்.

இவ்வண்டத்துக்கு எல்லை இருக்கிறது என்று ஏன் கருத முடியாது? அப்படி எல்லை உள்ளதாகக் கருதினால் அதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்ற பயங்கரக் கேள்விக்கு விடை கூற வேண்டி வந்துவிடும்!

இவ்வண்டத்தின் ஆரம் 35,000,000,000, ஒளி ஆண்டுகள் (336 கோடி கோடி கிமீ) ஆகும். ஆரத்தின் நீளத்தை வைத்துக் கொண்டு அண்டத்தின் விட்டம், சற்றளவு, புறப்பரப்பு ஆகியவற்றை நீங்களே கணக்கிடலாம்.

அண்டத்தின் வடிவம் ஒரு இட்லி வடிவத்தில் இருக்கிறதாம், அதாவது நடுவில் பருத்தும் விளிம்பில் சற்று மெலிந்தும் காணப்படுகிறது.

சோதிட சாத்திரம் ஒன்பது கோள்களில் (நவக்கிரகங்களில்) ஒன்றான ஞாயிறைக் (சூரியனை) கோள்கள் பட்டியலில் சேர்த்திருப்பது சரியல்ல. ஞாயிறு கோளல்ல – அது சுய ஒளி படைத்த ஒரு விண்மீன் ஆகும். திங்கள் (சந்திரன்) கோளல்ல – அது புவியைச் சுற்றிவரும் ஒரு துணைக் கோள் ஆகும். இல்லை அது கோள்தான் என்று வாதிட்டால் வியாழனைச் சுற்றிவரும் 45 துணைக் கோள்களையும் சனியைச் சுற்றி வரும் 31 துணைக் கோள்களையும் சோதிடக் கணிப்பில் சேர்க்க வேண்டும். அதுவே முறை, அதுவே வாய்மை ஆகும். பின் ஏன் சோதிடர்கள் அவற்றைச் சேர்க்கவில்லை?

ஒன்பது கோள்களில் இராகுவும் கேதுவும் கற்பனை அல்லது நிழல் கோள்கள் எனப் பார்த்தோம். அந்தக் கோள்கள் மற்றக் கோள்களைப் போல் ஞாயிறைச் சுற்றி வராமல் நேர் எதிர்த்திசையில் எதிர் நீச்சல் போடுவதாகச் சொல்கின்றனர். இது வெறும் கற்பனையே. இந்தக் கற்பனைக் கோள்களை வைத்துச் சாதகத்தைக் கணித்து அதன் அடிப்படையில் ‘பலன்’ சொல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும் என்பது தெரியவில்லை! அண்மைக் காலத்தில் வானியலாளர்கள் கண்டு பிடித்த நெப்தியூன், புளுட்டோ, யூரேனஸ் போன்ற கோள்களையும் இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை.

உண்மையில் மனிதனைப் பாதிக்கும் கோள் ஏதாவது உண்டென்றால் அது அவன் பிறந்த இந்தப் புவியாகத்தான் இருக்க வேண்டும்.

மனிதனது வாழ்க்கையை அவன் பிறந்த மண்ணும் அவனைச் சுற்றியுள்ள சூழலும் பாதிக்கின்றன. அவன் மூச்சுவிடும் காற்று, அவன் குடிக்கும் தண்ணீர், அவன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வாழும் உறைவிடம், தட்ப வெட்பம் அவனை வெகுவாகப் பாதிக்கின்றன.

ஆனால் சோதிடம் இந்தப் புவியை அறவே கைவிட்டு விட்டது. என்ன காரணம்?

(அ) புவி உருண்டை வடிவமாக இருப்பது,
(ஆ) புவி தனது அச்சில் 23½ பாகை சரிந்திருப்பது, மற்றும்
(இ) புவி தனது அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கும் அதேவேளை ஞாயிறையும் சுற்றிவருவது,
(ஈ) புவி செவ்வாய், புதன் போல் ஒரு கோள்.

மேற் கூறியவானியல் உண்மைகள் சோதிடர்களுக்குத் தெரியாமல் இருந்ததே கோள்களின் பட்டியலில் புவி சேர்க்கப் படாததற்குக் காரணமாகும்.

புவி உருண்டை என்பது சோதிடர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதாலேயே புவியை இரண்யாட்சகன் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய்க் கடலில் ஒளித்து வைத்தான் என்றபுராணக் கதையை புராணிகர்கள் எழுதி வைத்தனர். கடலைப் பாயாகச் சுருட்டினான் என்றால் எதன் மீது நின்று சுருட்டினான்? புவியை எப்படிக் கடலில் ஒளிக்கமுடியும்? கடல் புவியில்தானே இருக்கின்றது!

தட்டையானபுவியை ஆதிசேடன் தாங்கிக் கொண்டு நிற்கின்றான் என்று எழுதி வைத்தார்கள். அந்தஆதிசேடனை யார் அல்லது எது தாங்கிக் கொண்டு நிற்கின்றது என்பதைப்பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை!

புவி ஞாயிற்றைச் சுற்றி வருவது மட்டுமல்லஅது 23½ பாகை அதன் அச்சில் ஒரு பக்கம் சாய்ந்து (Ecliptic)இருப்பதோடு அதன் வடதுருவம் எப்போதும் ஞாயிறை நோக்கியே இருக்கும். இவை காரணமாகவே  பருவங்கள் ஏற்படுகின்றன.

மேற்காட்டியகாரணங்களால் சோதிடம் அடிப்படையிலேயே பிழையானஅடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ளது தெரியும். மேலும் சோதிடம் சரி, சோதிடர்களே கணிப்பில் பிழைவிடுகின்றார்கள் என்பதில் எவ்விதஉண்மையும் இல்லை.

இன்று உலகில் இரண்டு விதமானசோதிடமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று மேற்குலகசோதிடம் மற்றது இந்தியசோதிடம் ஆகும். சீனர்களுக்குத் தனியானசோதிடமுறை இருக்கிறது. அவ்வாறே இனத்துக்கு இனம் நாட்டுக்கு நாடு வௌவேறு சோதிடமுறைமைகள் இருக்கின்றன.

மேற்குலகசோதிடமுறை வெப்பஇராசிவட்டம் (Tropical Zodiac) என்றும் இந்தியசோதிடமுறை விண்மீன் இராசிவட்டம் (Sidereal Zodiac) என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்தஇரண்டு சோதிடமுறைகளும் காலத்தைக் கணிப்பதிலும் கோள்களைத் தெரிவு செய்வதிலும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இதனால் சோதிடர்கள் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றனர்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளஅட்டவணை உடுமண்டலம் (நட்சத்திரக் கூட்டங்கள்) அவற்றின் பின்புலத்தில் ஞாயிறு உட்புகுந்து வெளிவரும் (உண்மையில் ஞாயிறு உட்புகுவது இல்லை. புவிதான் உட்புகுந்து வெளிவருகிறது) காலம், அது எடுக்கும் நாள்களின் எண்ணிக்கை, அது கடக்கும் பாகையின் அளவு, மேற்குலக (வெப்பமண்டல) சோதிடக் கணிப்பில் ஞாயிறு உட்புகுந்து வெளிவரும் காலம், இறுதியாகஇந்திய (நட்சத்திர) சோதிடக் கணிப்பில் ஞாயிறு உட்புகுந்து வெளிவரஎடுக்கும் காலம் தரப்பட்டுள்ளது.

                                                  உடுமண்டலங்களில் (Constellations) ஞாயிறு புகுந்து/வெளியேறும் கால அளவு

உடுமண்டலம்வானியல்நாள்கள்பாகைமேற்குலகசோதிடம்இந்தியசோதிடம்
மேடம்ஏப்பிரில் 19 –     மே 132524.66மார்ச்சு 21 –
ஏப்பிரில் 20
ஏப்பிரில் 14 –     மே 14
இடபம்மே 14 –     யூன் 193736.49ஏப்பிரில் 21 –      மே 21மே  15 –  யூன் 14
மிதுனம்யூன்   20 –    யூலை 203120.58மே  22 –         யூன் 21யூன் 15 –       யூலை  15
கடகம் யூலை  21  – ஆகஸ்ட் 92019.73 யூன்   22 –        யூலை 22 யூலை 16  – ஆகஸ்ட் 16
சிம்மம்ஆகஸ்ட் 10 – செப்தெம்பர்  153736.49யூலை 23  –ஆகஸ்ட்  22ஆகஸ்ட்  17 – செப்தெம்பர் 16
கன்னிசெப்தெம்பர்  16 – ஒக்தோபர்  304544.38ஆகஸ்ட்  23 – செப்தெம்பர் 23செப்தெம்பர்  17 -ஒக்தோபர்     16
துலாம்ஒக்தோபர   31 – நொவெம்பர்222322.69செம்தெம்பர் 24 – ஒக்தோபர் 23ஒக்தோபர்    17 – நொவெம்பர் 15
விருச்சிகம்நொவெம்பர்   23 –நொவெம்பர் 2976.9ஒக்தோபர்24 – நொவெம்பர் 22நொவெம்பர் 16 – டிசெம்பர் 15
பாம்பாட்டிநொவெம்பர் 30 – டிசெம்பர்   171817.75கணக்கில் எடுப்பதில்லைகணக்கில் எடுப்பதில்லை
தனுசுடிசெம்பர் 18 – சனவரி  183231.56நொவெம்பர்23 – டிசெம்பர் 21டிசெம்பர் 16  – சனவரி 13
மகரம்சனவரி  19 – பெப்ரவரி 152827.62டிசெம்பர் 22 – சனவரி  20சனவரி 14 – பெப்ரவரி 12
கும்பம்பெப்ரவரி 16 – மார்ச்சு  112423.67சனவரி  21 – பெப்ரவரி 19பெப்ரவரி 13 – மார்ச்சு 12
மீனம்மார்ச்சு 12  – ஏப்பிரில் 183837.48பெப்ரவரி 20 – மார்ச்சு  20மார்ச்சு 13  – ஏப்பிரில் 13

இந்த இராசிவட்டத்தில் ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட செயற்கையான இராசிகளுக்கும் (Signs) உண்மையான பால்மண்டலங்களுக்கும் (Constellations)  தொடர்பே இல்லை என்பதைத் துலாம்பரமாகக் காட்டுகிறது! இராசிச் சக்கரத்தின் பாதையில் உள்ள 17.75 பாகை கொண்ட பாம்பாட்டி (Ophiuchus) உடுமண்டலததைச் சோதிடம் கணக்கில எடுப்பதை முற்றாக விட்டு விட்டது. இநத உடுமண்டலத்தை ஞாயிறின் பின்புலத்தில் நொவம்பர் 30 – டிசெம்பர் 17 வரை வானத்தில் பார்க்கலாம்.
மேற்குலக – இந்திய சோதிடர்கள் வானத்தில் ஒரு கோளை வைப்பதற்கும் வானியலாளர்கள் அதே கோளை வைப்பதற்கும் வேறுபாடு உள்ளது. மேலே காட்டிய அடடவணைப்படி ஒக்தோபர் 24 இல் வானியல் அடிப்படையில் சூரியன் கன்னி இராசியிலும், மேற்குலக சோதிடத்தில் விருச்சிக இராசியிலும் இந்திய சோதிடத்தில் துலா இராசியிலும் காணப்படுகிறது!
மேலும் மேற்குலக சோதிடக் கணிப்புககும் இந்தியச் சோதிட கணிப்புககும் 24 நாள்கள் வேறுபாடு (அயனாம்ச வேறுபாடு) இருக்கிறது. இந்திய சோதிடக் கணிப்புக்கும் உண்மையாக ஞாயிறு (புவி) புகுந்து வெளிவரும் காலக் கணிப்புக்கும் இடையில 1 – 7 நாள் வேறுபாடு காணப்படுகிறது.

ஒவ்வொரு 2 மணித்தியாலத்துக்கு ஒரு இராசியாக அடிவானத்தில் 12 இராசிகளும் தோன்றி மறைவதால் இந்திய சோதிடக் கணிப்பின் படி எழுதப்படும் சாதகங்கள் 100 விழுக்காடு பிழையான இராசிகள் பிழையான நட்சத்திரங்களைக் காட்டும் என்பது வெள்ளிடமலை. கோள்களைப் பொறுத்தளவில் அவற்றின் இருக்கை பிழைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு நாளில் கோள்கள் ஒவ்வொன்றும் கடக்கும் தொலைவையும் ஒவ்வொரு நட்சத்திரபாதத்தைக் கடக்க எடுக்கும் காலத்தையும் கீழ்க் கண்ட அட்டவணை காட்டுகிறது.

கோள்களின் ஓட்டம்

 

 

கோள்கள்

ஒரு நாளில் கடக்கும் தொலைஒவ்வொரு நட்சத்திர பாதத்தைக் கடக்க எடுக்கும் காலம்
பாகைகலைவிகலைமாதம்நாள்நாழிவினாடி
சூரியன்

0

59

83

22

55

சந்திரன்

13

103513

32

அங்ககாரன்

0

31265

புதன்

4

533320

வியாழன்

0

55911033

20

வெள்ளி

1

368320

சனி

0

2031123

20

இராகு

0

311

2

கேது

03112

சோதிடர்கள பிறககும நேரததில 2 மணிததுளி வேறு பட்டாலே சாதகம் பிழைத்துவிடும் என்கிறார்கள். அப்படி எனறால் 1-7 நாள்கள் பிழைககும பொழுது சாதகம் எழுதும் கடதாசிக்கே பெறுமதி இலலாமல போயவிடும! சோதிடம் எவ்வளவு புரட்டு என்பதற்கு இது வலுவான சான்றாகும்.
                                             1979 ஆம் ஆண்டு உடுமண்டலங்களில் தரவு

Constellation

Border in 1979

LengthDate of Sun’s

 

entry in 1979

Duration of Sun’s

 

stay in days

Total area in

 

square degrees

Capricornus29,21:46 Capricorn27,49’57”Jan 2027.44414
Aquarius27,11:43 Aquarius24,27’42”Feb 1624.06980
Pisces21,39:25 Pisces36,44’25”Mar 1237.51889

Aries

28,23:50 Aries

24,43’51”Apl 1925.48441
Taurus23,07:41 Taurus36,43’26”May 1438.31

797

Gemini

29,51:07 Gemini27,50’56”Jun 2129.20514

Cancer

27,42:03 Cancer20,03’04”Jul 2120.96506

Leo

17,45:07 Leo35,48’50”Aug 1137.05

947

Virgo

23,33:57 Virgo43,57’40”Sept 1744.511294
Libra07,31:37 Scorpio22,54’24”Oct 3123.10

538

Scorpius

00,26:01 Sagittarius06,55’19”Nov 236.52497

Ophiuchus

07,21:20 Sagittarius18,36’01”Nov 3018.31

948

Sagittarius25,57:21 Sagittarius33,24’25’Dec 1832.55

867

சோதிடப் புரட்டு

(6)

புதன் கோள் அலியாம்! எப்படிக் கண்டு பிடித்தார்கள்?

வானியலுக்கும் சோதிடசாத்திரத்துக்கும் நெருங்கியதொடர்பு உண்டு. சோதிடசாத்திரத்தின் படிமுறை வளர்ச்சியே வானியலாகும்.

சோதிடம், வானமண்டலத்தில் காணப்படும் கோள்கள், இராசிகள்,  இராசி வீடுகள், நட்சத்திர மண்டலங்கள் போன்றவற்றுக்கும் புவியில் பிறந்த மனிதனுக்கும் ‘முடிச்சு’ ப் போட்டுக் கொண்டிருக்க அறிவியல் அண்டத்தில் காணப்படும் (புவி நீங்கலாக) திடப்பொருள் – ஆற்றல், பங்கீடு, ஆக்க அமைப்பு, இயற்பொருள் நிலை, அசைவுகள், ஓட்டங்கள் மற்றும் படிமுறை வளர்ச்சி ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து கணித்துக் கொடுத்தது. (The science which investigates all the matter – energy in the universe: its distribution, composition, physical states, movements, and evolution.)

இரண்டு நாள்களுக்கு முன் புதன் கோள் (Mercury)  புவிக்கும் ஞாயிறுக்கும் இடையில் நேர்க் கோட்டில் வந்தது. அப்பொழுது சூரிய கிரகணம் ஏற்பட்டது. ஆனால் ஞாயிறோடு ஒப்பிடும் பொழுது புதன் கோள் மிகவும் சிறியது – அதன் விட்டம் 4,800 கிமீ மட்டுமே. எனவே ஞாயிறுக்கும் புவிக்கும் இடையில் நிலா நேர்க் கோட்டில் வருவதால் ஏற்படும் சூரிய கிரகணம் போல் இது இருக்கவில்லை. புதன் கோள் ஒரு பொட்டுப்போல் ஞாயிறு மீது காணப்பட்டது. புதன் ஞாயிறைக் கடந்து அதன் பின்புறம் செல்ல எடுத்த நேரம் ஏறத்தாழ 5 மணித்தியாலம் ஆகும்.

புதன் ஞாயிறுக்கு மிக அண்மையில் உள்ள ஒரு சிறிய கோளாகும். அதன் சுற்றுப் பாதை ஞாயிறில் இருந்து 58 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது. அது ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் காலம் 88 நாள் மட்டுமே. அது சுற்றும் பாதை புவி சுற்றி வரும் பாதையின் தளத்திற்கு 7 பாகை சாய் கோணத்தில் உள்ளது. இப்படிச் சாய்ந்திருப்பதால் ஞாயிறின் பாதையைப் புதன் கோள் கடந்து செல்வதைக் காண்பது மிகவும் அரிதாக இருக்கும். மொத்தம் ஒரு நூற்றாண்டில் இப்படியான கிரகணம் சீரற்ற இடைவெளியில் 13 முறையே இடம் பெறுகிறது. அடுத்த சூரிய (புதன் ) கிரகணம் நொவம்பர் 8, 2006 இல் இடம் பெறும்.

இப்படி இராசிவட்டத்தில் (ஞாயிறு செல்லுமாப் போல் தெரியும் வீதி) உள்ள இராசி வீடுகளைக் கோள்கள் கடந்து செல்வதைப் பெயர்ச்சி (Transit) என அழைக்கின்றார்கள். இந்தப் பெயர்ச்சி, கோள்கள் ஞாயிறைச் சுற்றிவரும் வேகத்தைப் பொறுத்தது ஆகும்.

இப்படியான கடவுகளையும் அதனால் ஏற்படும் கிரகணங்களையும் வானியலாளர் தங்களது ஆய்வுக்குப் பயன்படுத்தும் போது சோதிடர்கள் நாட்டில் கெட்டது நடக்கப்போவதாகச் சொல்லிப் பாமரமக்களைப் பயமுறுத்துகின்றார்கள். தோசம் நீங்கக் கோயில் குளங்களுக்குச் சென்று கோள்களுக்கு அருச்சனை, அபிசேகம் மற்றும் சாந்தி செய்யுமாறு தூண்டுகின்றார்கள். குறிப்பாகப் பாப கிரகங்கள் என நம்பப்படும் சனி, செவ்வாய், சூரியன், இராகு, கேது ஆகியவற்றின் பெயர்ச்சியின் போது தோசம் உண்டாவதாகச் சொல்லி மக்களை ஏய்க்கின்றார்கள்.

சந்திர-சூரிய கிரகணங்கள் இராகு கேது என்ற இரண்டு பாம்புகள் அவற்றைக் கவ்வுவதால் ஏற்படுகிறது என்று சோதிடர்கள் சொல்கின்றார்கள். கிரகணம் முடிந்த பின்னரே குளித்து முழுகிச் சமைக்கத் தொடங்க வேண்டும் அல்லாவிட்டால் உணவில் நஞ்சு கலந்து விடும் என்று பாமரமக்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். கிரகணம் பற்றிய அறியாமை காரணமாக எழுகின்ற வீண் அச்சமே இதற்குக் காரணமாகும்.

இந்தச் சூரிய கிரகணம் பற்றி இம் முறையும் எதிர்கூறல் (ஆரூடம்) சொல்லச் சோதிடர்கள் பின் நிற்கவில்லை. அது அவர்களது வயிற்றுப் பிழைப்பாயிற்றே!

‘புதன் கோள் நல்ல குடும்ப வாழ்வுக்கு ஏற்றதல்ல. காரணம் அது ஆற்றல் இல்லாத கோள். உண்மையில் அது கோள்களில் அலி ஆகும். புதன் கோள் மாற்றம் பெரும்பாலும் சண்டை சச்சரவை ஏற்படுத்தும். முடிவுகள் எடுப்பதையும் அது தடுத்து விடும். அதுதான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்ட மூலம் பற்றி நாடாளுமன்றம் ஒரு முடிவை எடுக்க முடியாமல் போய்விட்டது’ இப்படிச் சொல்பவர் லால் பகதூர் சாஸ்திரி வித்தியா பீடத்தைச் சேர்ந்த சோதிடர் மாபிரேம் உஷா! இராக் போர் விரைவில் முடிந்ததற்கும் (?) புதனின் ‘செல்வாக்கே’ காரணமாம்.

சோதிட நூல்கள் அனைத்துக் கோள்களின் பலத்தை வரிசைப்படுத்தும் பொழுது புதன் கோளை இறுயில் வைத்திருக்கின்றன.

ஞாயிறைக் கடக்கும் புதன்

1. கேது

2. இராகு

3. ஞாயிறு

4. திங்கள் (சந்திரன்)

5. வெள்ளி (சுக்கிரன்)

6. வியாழன் (குரு)

7. சனி

8. செவ்வாய் (அங்காரகன்)

9. புதன்

மேலும் புதனுக்குச் சந்திரன் சத்துரு – செவ்வாய்க்குப் புதன் சத்துரு. தோல் சம்பந்தமான நோய் புதன் கோளினால் ஏற்படுமாம். ஏனைய கோள்களினால் ஏற்படும் நோய்கள் பின்வருமாறு:

ஞாயிறு – எலும்பு தொடர்பான நோய்

சந்திரன் – குருதி தொடர்பான நோய்

செவ்வாய் – மூளை தொடர்பான நோய்

வியாழன் – தசை, மாமிசம் தொடர்பான நோய்

சனி – நரம்பு தொடர்பான நோய்

வெள்ளி – விந்து (சுக்கிலம்) கருமுட்டை (சுரோணிதம்) தொடர்பான நோய்

இராகு கேது – உடல், குடல் தொடர்பான நோய்

இவற்றை எல்லாம் யார் யார் எப்படி எப்பொழுது ஆய்ந்து கண்டு பிடித்தனர் என்பது தெரியவில்லை. பாரத்தைப் பராசரர் போன்ற முற்கால முனிவர்கள் தலையில் ஏற்றி விட்டுச் சோதிடர்கள் தப்பித்துக் கொள்கின்றார்கள். யாராக இருந்தாலும் எந்த அடிப்படையும் இல்லாது, எந்த விதிக்கட்டும்பாடும் இன்றி மனம்போன போக்கில் கோள்களின் குணாம்சங்களைச் சித்தரித்து இருக்கின்றார்கள்.

வேடிக்கை என்னவென்றால் இரண்டு சோதிடர்கள் ஒரு சாதகத்தைப் பார்த்து ஒரே மாதிரியான பலன்களை ஒரே குரலில் சொல்வதில்லை. ஆளுக்கு ஆள் மாற்றி மாற்றிச் சொல்கின்றார்கள்.

இந்தத் தொடரைப் படித்து விட்டுப் பலர் நான் எழுதுவதைப் போற்றியும் சிலர் தூற்றியும் எழுதியுள்ளனர். நேற்றும் என்னைக் கண்ட ஒரு நீண்ட நாள் நண்பர் ‘சோதிடர்களை மட்டும் அல்ல, தங்களைச் சாமிகள் என்று சொல்லிக்கொண்டு கனடாவிற்கு வந்து சோதிடம், காண்டம், அருள்வாக்கு, பக்தி என ஏமாற்றிப் பணம் பறித்துக் கொண்டு போகிறவர்களைப் பற்றியும் எழுதுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.

இன்னொருவர் சாதகப் பொருத்தம் பார்ப்பதால் திருமணப் பேச்சுத் தடைப்பட்டு பெண்களும் ஆண்களும் திருமணம் இல்லாமல் இருக்கும் கையறு நிலையைக் கவிதையாக வடித்து அனுப்பியுள்ளார். ‘இதனை அறியா மடையர் இங்கே குறிப்புப் பார்த்து நிற்கின்றார்’ எனச் சினத்தோடு கவிதையை முடித்திருக்கின்றார்.

பெயர் குறிப்பிடாத ஒருவர் மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பி வைத்த மடலில் எழுதியிருப்பதாவது-

சோதிடப் புரட்டு கட்டுரைகளை எழுதி வரும் அன்பருக்கு,

கனம் பொருந்திய ஆசிரியருக்குக்கூடாக எழுதுவது,

தாங்கள் கூறிய கருத்துகளை வைத்துப் பார்க்கும்பொழுது எனக்குப் புலப்படுவது என்னவென்றால், சோதிடமானது எப்படி எவற்றையெல்லாம் வைத்துக் கணிக்கப்படுகிறது என்பதைத் துளிகூட அறியவில்லை என்பதாகும்.

நானும் ஒரு காலத்தில் தங்கள் கருத்தையே கொண்டிருந்தேன். ஆனால் கடந்த முப்பது வருடகாலமாக ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளேன்.

பிழைப்புக்காகச் சோதிடம் பார்க்கும் சிலரை வைத்துச் சோதிடத்தை எடை போடுவது தவறாகும். அத்துடன் சோதிடத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் அதைப் பற்றி விவாதிப்பது தவறு. இது கம்யூனிசத்தைப் பற்றித் தெரியாதவர்கள் அகராதியில் கம்யூனிசத்தை பற்றிய அரை குறையான விளக்கத்தை பார்த்து இது தான் கம்யூனிசம் என்று கூறுவது போன்றது.

இந்த உதாரணம் ஏன் என்றால், கம்யூனிச சித்தாந்தம் எவ்வளவுக்கு விஞ்ஞான பூர்வமான ஒன்றோ அந்தளவுக்குச் சோதிடமும் விஞ்ஞான பூர்வமானதே. இதைச் சமயவாதிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் கடவுளுடன் பின்னிப் பிணைத்திருக்கின்றார்கள். சமண மதத்தை ஒரு முறை ஆராய்ச்சி செய்தால் பிரபஞ்ச இயக்கத்தைப் பற்றி நன்கு புரியும்.

அடுத்து, சோதிடத்திற்கு ஆய்வு கூடம் இல்லை என்று கூற முடியாது. நாசா மற்றும் அமெரிக்க கடற்படையின் Astronomy  ஆய்வகங்கள்தான் ஒரு விநாடிதானும் பிழையில்லாது ஆய்வுகள் செய்து ‘தி எபமெரிஸ்’ (The Ephemeris) என்னும் புத்தகத்தில் 1900 – 2050 ஆண்டுகளுக்குரிய கிரக நிலைகளைக் கணித்து வெளியிட்டுள்ளன. அவற்றாலும் மற்றும் செர்மனியிலுள்ள ஆய்வுகூடம் கணித்து வெளியிடும் தரவுகளையும் வைத்தே எத்தனையோ ஆண்டுகளாகப் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டு வருகிறது.

புவியில் பிறந்தவர்கள் இந்தப் பிரபஞ்சத்தின் மூலகங்களால் (Elements) ஆக்கப்பட்டவர்களேயாவர். புவியானது இந்தப் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விசைகளுக்கு உட்படுத்தப் பட்டதாகும். அதாவது புவியும் ஏனைய கிரகங்களும் சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றி வருகின்றன. இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அசைவும் ஏற்கனவே ‘புறோகிறாம்’ செய்யபட்டுள்ளது.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு மூலகத்தின் சக்தியுள்ளது. ஒருவர் புவியில் பிறக்கும்போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களின் கதிர்களும் அப் பிள்ளையின் உடலில் பாய்ச்சப்படுகிறது.

இது அந்தப் பிள்ளை புவியில் வந்து அழும் நேரம் நடக்கிறது. அப்போது ஒவ்வொரு கிரகங்களும் புவியில் அந்தப் பிள்ளை பிறந்த இடத்திலிருந்து அவ்வக் கிரகங்கள் இருந்த தூரங்கள், கோணங்கள் முதலியவற்றைப் பொறுத்தே அவ்வக் கிரகங்களின் மூலகங்களின் அளவு அந்தப் பிள்ளையின் உடலில் செலுத்தப்படும். அதைப் பொறுத்தே அப் பிள்ளையின் புத்தி மற்றும் உடற்கூற்று விடயங்கள் ஏற்படுகின்றன.

பின்பு அதே கிரகங்கள் சுழற்சியில் செல்லும்போது மாறுபடும் தூரங்கள், கோணங்களைப் பொறுத்து அவ்வக் கிரகங்களினால் பிறக்கும் போது கிடைத்த மூலகங்களுக்கும் அது சம்பந்தப்பட்ட கிரகங்களுக்குமிடையில் ஓர் ஈர்ப்பு விசையானது ஆயுள் முழுவதும் வந்து கொண்டேயிருக்கும். இது விஞ்ஞான பூர்வமானதாகும்.

சோதிடர்கள் சொல்லும் எதிர்கூறல்கள் பிழைக்கும் போது பழியைப் ‘பிழைப்புக்காக’ சோதிடம்பார்க்கும் எனது விளக்கம் சில நேரம் காணாமல் இருக்கலாம். ஆனால் நான் 30 வருடங்கள் இதை ஆராய்ந்துள்ளேன். இன்னும் தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டேயிருக்கிறது.

தற்போது எழுதப்படும் பஞ்சாங்கங்களில் உள்ள பிழைகளையே நான் கண்டு பிடிக்கக் கூடியதாக இருக்கிறது. மருத்துவ உலகில் இறங்கிப் பார்த்தால் அமாவாசை, பறுவம் போன்ற நாட்களில் எவ்வளவு பேர் சந்திர சூரியனின் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படுகிறார்கள் என்பது தெளிவாகும். கிரகணங்கள் நடக்கும் காலங்களில் தோட்டப் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஆட்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய்ச்சி செய்தால் தாங்களே அவைகளைப் பற்றிக் கட்டுரை எழுத முற்படுவீர்கள். தற்போது நேரமில்லாதபடியால் பின்பு இது பற்றி விவாதிக்கிறேன்.

நான் முன்பொரு காலத்தில் செய்ததுபோல வெளியில் இருந்து இப்படியான அருமையான விஞ்ஞானத்தை விமர்சிப்பது இலகுவானது. ஆனால் உள்ளுக்குள் சென்றால் உண்மை விளங்கும். நன்றி!’ அவருக்கு நான் எழுதிய விடை பின்வருமாறு:

பெயரில்லாத சோதிட ஆராய்ச்சியாளருக்கு!

வணக்கம். சோதிடத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வதைத் திருப்பி உங்களைப் பார்த்தும் மிக எளிதாக என்னால் சொல்ல முடியும்.

கோள்களின் தாக்கம் பற்றி ஆராய்ச்சி செய்த நீங்கள் சோதிடத்தின் ஏனைய தூண்களான 12 இராசி வீடுகள், 12 இராசிகள், 27 விண்மீன்கள் மூன்றையும் ஏன் விட்டுவிட்டீர்கள்?

‘கம்யூனிச சித்தாந்தம் எவ்வளவுக்கு விஞ்ஞான பூர்வமான ஒன்றோ அந்தளவுக்கு சோதிடமும் ஒரு விஞ்ஞான பூர்வமானதே’ என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவுடமைச் (கம்யூனிச) சித்தாந்தத்தைச் சமூக அறிவியல் என்று சொல்லலாமே யொழிய அதனை வேதியியல், இயற்பியல் போன்ற இயற்கை அறிவியலோடு (physical sciences) சேர்க்க முடியாது.

கார்ல் மார்க்ஸ் (Karl Marx) வகுத்த பொதுவுடமைத் தத்துவத்தின் படி பொதுவுடமை உச்சகட்ட வளர்ச்சியை அடைந்த பின்னர் அதன் அடிப்படையில் இயங்கும் அரசு தானாக உலர்ந்து போய்விடும் (withering of the state) சொல்லப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. அது நடைபெறவில்லை என்பது மட்டுமல்ல சோவியத் நாட்டில் பொதுவுடமைத் தத்துவமே செத்தொழிந்து விட்டது! அந்த நாடே சிதறுண்டு போய்விட்டது!

சோதிடர்கள் சொல்லும் எதிர்கூறல்கள் பிழைக்கும் போது பழியைப் ‘பிழைப்புக்காக’ சோதிடம் பார்க்கும் சோதிடர்களின் தலையில் போட்டுவிட்டு மற்றவர்கள் தப்பிக் கொள்கின்றார்கள். அதில் நீங்களும் ஒருவர் ஆவீர்!

சோதிடர்கள் கடற்பெருக்கு (tides) சந்திரனால் ஏற்படுகிறது எனச் சொல்கின்றார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதம் பின்வருமாறு:

1) சந்திரன் கடற்பெருக்கை உருவாக்குகிறது –  (சரி).

2) வெள்ளப் பெருக்குச் சந்திரன் புவியின் தண்ணீரை இழுப்பதால் ஏற்படுகிறது –    (பேரளவு சரி ஆனால் முழுதும் சரியல்ல).

3) எனவே சந்திரன் (மனித) மூளையைப் பாதிக்கிறது.

கடற்பெருக்கு எதனால் ஏற்படுகிறது என்ற சரியான விளக்கம் தெரியாத ஒருவருக்கு இந்த வாதம் சரியாகத் தோன்றும்.

சந்திரனால் கடற்பெருக்கு ஏற்படுவதற்கு அதன் பொருண்மை மற்றும் புவியிலிருந்து அதன் தொலைவு முக்கிய காரணிகளாகும். அது மட்டும் அல்ல, புவியின் அகலத்தையும் அது பொறுத்தது. உண்மையில் ஒரு நாளில் இரண்டு வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. அது சந்திரன் புவியை இழுப்பதால் ஏற்படுகிறது என்று சொல்ல முடியாது.

சந்திரனின் அகலம், சந்திரன் – புவி இரண்டுக்கும் இடையிலான தொலை இவற்றோடு மனிதனின் அகலம் தொலை இரண்டையும் ஒப்பிட்டால் முன்னையது மிக மிக அதிகமானது. இதனை உள்வாங்குவது வில்லங்கம் என்றாலும் கணக்கியல் அடிப்படையில் மிகவும் சரியானது.

அறிவியல் கவனித்தல், கணித்தல், ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் சோதித்தல் முறைகளைக் கொண்டது. சோதிடம் அப்படியல்ல. வானியல் ஒரு அறிவியல் என்பதால் சரியாக எதிர் கூறல் கூறமுடியும். சோதிடம் சொல்லும் எதிர்கூறல் நடக்கலாம் நடக்காமலும் விடலாம் என்று ஒற்றை இரட்டை பிடிப்பது போன்றது. உண்மையில் சோதிடம் பற்றி எதுவுமே தெரியாத சாதாரண மனிதனாலும் அப்படி ஒற்றை இரட்டை பிடிக்க முடியும்!

மூலகங்களைப் (Elements) பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். சோதிட சாத்திரம் அண்டம் நெருப்பு (அக்கினி) நிலம் (பூமி அல்லது பிருதுவி) காற்று (வாயு) நீர் (ஜலம்) வான் (ஆகாயம்) ஆகிய 5 மூலகங்களால் மட்டும் ஆனது என்கிறது. அப்படிச் சொல்லிவிட்டு அவற்றை இராசிகளுக்கு ஒதுக்கும் போது வான் (ஆகாயம்) ஒதுக்கப்படுவதில்லை. அதற்கான ஏது சொல்லப்படவில்லை. சில சோதிடர்கள் வானை மட்டும் தனுசு இராசிக்கு ஒதுக்குகின்றார்கள். மேடம் தொடங்கி மீனம் வரையிலான 12 இராசிகளுக்கும் கீழ்க்கண்டவாறு மூலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேடம், சிம்மம், தனுசு    –     நெருப்பு

இடபம், கன்னி, மகரம்      –   நிலம்

மிதுன்ம், துலாம், கும்பம் – காற்று

கடகம், விருச்சிகம், மீனம்    – நீர்

அதாவது 1,5,9 இலக்க இராசிகளுக்கு நெருப்பு, 2,6,10 இலக்க இராசிகளுக்கு நிலம், 3,7,11 இலக்க இராசிகளுக்கு காற்று. இன்னும் விளக்கமாகச் சொன்னால் மேட இராசிக்கு நெருப்பு, இடப இராசிக்கு நிலம், மிதுன இராசிக்குக் காற்று, கடக இராசிக்கு நீர் என்ற வரிசையில் ஒதுக்கப்பட்டு மீண்டும் எஞ்சிய இராசிகளுக்கு அதே வரிசையில் மூலகங்கள் ஒதுக்கப்படுகிறது.

இராசிகளைப் போலவே இராகு, கேது நீங்கலாக எஞ்சிய 7 கோள்களுக்கும் மனம் போன போக்கில் மூலகங்கள் ஒதுக்கப்படுகிறது.

அங்காரகன்       – நிலம்

சந்திரன்                – நீர்

சுக்கிரன்                – நீர்

புதன்                    –   காற்று

குரு                     –   நெருப்பு

சூரியன்             –     நெருப்பு

சனி                      –  வான்

இப்படி மனம் போன போக்கில் மூலகங்களை இராசிகளுக்கும் கோள்களுக்கும் ஒதுக்கிவிட்டு அந்த இராசிகளுக்கும் கோள்களுக்கும் அந்த மூலங்களின் குணங்கள் மாடேற்றப்படுகின்றன.

கிரேக்க தத்துவவாதியான அரிஸ்தோட்டல் (கிமு 384-322) ஆகாயத்தையும் (ether) சேர்த்து அண்டம் அய்ந்து மூலகங்களால் ஆனது என நினைத்தார். அண்டம் கோள் வடிவானது என நினைத்தார். மேலும் அவர் புவி சூரிய குடும்பத்தின் நடுவில் இருப்பதாக நினைத்தார். வௌ;வேறு நிறையுள்ள பொருட்கள் வௌ;வேறு வேகத்தில் புவியின் தரையில் விழும் என்றார். மூளை என்ற உறுப்பு குருதியைக் குளிரச் செய்கிறது என நம்பினார். உணர்வுகளின் மையம் உள்ளம் என்றார். ஆயிரத்து அய்ந்நூறு ஆண்டுகள் நீடித்த இந்த நம்பிக்கைகள் இன்று பிழை என எண்பிக்கப் பட்டுவிட்டன.

உண்மையில் புவியில் 100 கும் அதிகமான மூலங்கள் இருக்கின்றன. அண்டமும் இதே மூலங்களினால் ஆனவைதான்.

நீர், மூலம் அல்ல. அது 2 நீரக அணுக்களும் (2 Hydrogen Atoms) ஒரு உயிரக அணுவும் (1 Oxygen Atom) சேர்ந்த அணுக்கூறுத் (Molecule) திரள் (compound) ஆகும்.

சோதிடம் 12 இராசிகள், 12 இராசி வீடுகள், 9 கோள்கள், 27 நட்சத்திரங்கள் இவற்றின் அடித்தளத்திலேயே கட்டி எழுப்பப்பட்டுள்ளது. நவக்கிரகங்களின் ஆட்சிவீடு, உச்சவீடு, நீச்ச வீடு, பகை வீடு, சம வீடு, நட்பு வீடு மற்றும் ஆரோகணம் அவரோகணம், அஸ்தங்கதோசங்கள், பார்வைகள், கோணங்கள் ஆகியவையும் கணிப்பில் எடுக்கப்படுகின்றன. இதை நீங்கள் மறுக்கிறீர்களா? கோள்களும் இராசிகளும் ஆண், பெண், அலி, நிலம், நீர் நெருப்பு, காற்று, வான், என்று பகுக்கப்பட்டு அவற்றுக்கு அந்தந்தப் பொருள்களின் குணங்களை மாடேற்றுவது அறிவியல் நாணயமா? இவற்றை விட வேறு அடிப்படை சோதிடத்துக்கு இருக்கிறதா?

விண்ணில் சோதிடம் கூறும் 12 வீடுகள் இல்லை. அது சோதிடரின் சாதகத்தில்தான் இருக்கிறது. பன்னிரண்டு இராசிகளும் செயற்கையாக மனிதன் நட்சத்திரங்களை மனம் போன போக்கில் (random) விதிக்கட்டுப்பாடின்றிச் (arbitrary) சேர்த்து உருவாக்கியதாகும்.

நாசா வானுயிரியல் நிறுவனத்தில் (Astrobiology Institute of NASA)  ஆய்வு நடைபெறுவது உண்மைதான். சோதிடத்துக்கும் வானியலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்வது இந்த அமைப்பின் குறிக்கோளாகும். சூரிய-சந்திர கிரகணங்கள் இடம்பெறுவதையும் வால்வெள்ளிகள் தோன்றுவதையும் முன்கூட்டியே கணக்கிட்டு நீங்கள் குறிப்பிடும் (The Ephemeris) என்ற நூலை வெளியிடுகிறது. ஆனால், அதே நாசா அட்டமி நவமி, இராகு காலம், யமகண்டம் பார்த்தா விண்ணில் கலங்களை ஏவுகிறது? விண்வெளிச் செலவுகளை (பயணங்களை) மேற்கொள்கிறது? தோசம் என்று சொல்லி நாசா சாந்தி ஏதாவது செய்கிறதா? பிராமணர்களை வைத்து யாகம் நடத்துகிறதா? சாதகம் பார்த்தா வெள்ளைக்காரன் திருமணம் செய்து கொள்கிறான்? நிலாவில் மனிதனை இறக்கிய நாசா இப்போது செவ்வாய்க் கோளில் மனிதனை இறக்க முயற்சி செய்கிறது. அதற்கு முன்னோடியாக செவ்வாய்த் தரையின் எந்தப் பகுதி மனிதன் பத்திரமாக இறங்குவதற்கு ஏற்றது என்பதை ஆராய்கிறது. இவ்வாறெல்லாம் நாங்கள் ஏதாவது செய்கிறோமா?

‘ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு மூலகத்தின் சக்தியுள்ளது. ஒருவர் புவியில் பிறக்கும் போது இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களின் கதிர்களும் அப் பிள்ளையின் உடலில் பாய்ச்சப்படுகிறது.

இது அந்தப் பிள்ளை புவியில் வந்து அழும் நேரம் நடக்கிறது….அவ்வக் கிரகங்கள் இருந்த தூரங்கள், கோணங்கள் முதலியவற்றைப் பொறுத்தே அவ்வக் கிரகங்களின் மூலகங்களின் அளவு அந்தப் பிள்ளையின் உடலில் செலுத்தப்படும். அதை பொறுத்தே அப் பிள்ளையின் புத்தி மற்றும் உடற்கூற்று விடயங்கள் ஏற்படுகின்றன’ என்று கூறுகிறீர்கள்.

உங்கள் கூற்று இந்தக் கோள்கள் பற்றி மட்டுமல்ல சோதிடம் கணக்கில் எடுக்கும் நட்சத்திர மண்டலங்களது தொலைவு பற்றிய ஞானம் கூட உங்களுக்குத் துளியும் இல்லை என்பதைக் காட்டுகிறது. ‘ஒருவர் புவியில் பிறக்கும்போது இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களின் கதிர்களும் அப் பிள்ளையின் உடலில் பாய்ச்சப்படுகிறது’ என்பது நடைமுறைச் சாத்தியம் அற்ற நிகழ்ச்சி ஆகும். காரணம் கிரகங்கள், விண்மீன் ஆகியவற்றில் இருந்து ஒளி வேகத்தில் ( ஒரு விநாடி 186,000 கல் அல்லது 300,000 கிமீ ) வரும் கதிர் புவியை உடனடியாக வந்து சேருவதில்லை. நேரம் கழித்தே வருகிறது.

புவி               –           சந்திரன்       1.25 விநாடி
புவி               –          ஞாயிறு          8.3 மணித்துளி
ஞாயிறு       –          வியாழன்     41.0 மணித்துளி
ஞாயிறு       –          சனி                85.0 மணித்துளி
ஞாயிறு       –           புளுட்டோ    5.5 மணி

ஞாயிறு           –     Alpha  Centauri     விண்மீன்                                                                            4.24       ஒளி ஆண்டு
ஞாயிறு           –     மிதுன இராசி (Gemini)  Pollux  விண்மீன்                                                33.70       ஒளி ஆண்டு
ஞாயிறு           –     மிதுன இராசி (Gemini)  Castor விண்மீன                                                51.60        ஒளி ஆண்டு
ஞாயிறு           –     இடப இராசி (Taurus) Alllderbaran    விண்மீன                                    65.20       ஒளி ஆண்டு
ஞாயிறு           –     சிம்ம இராசி  (Leo) Regulus    விண்மீன                                                   77.60         ஒளி ஆண்டு
ஞாயிறு           –     கன்னி இராசி     (Virgo)  spica  விண்மீன்                                                   263          ஒளி ஆண்டு
ஞாயிறு           –    இடப இராசி (Taurus) Plleidas விண்மீன                                                   385          ஒளி ஆண்டு
ஞாயிறு           –    விருச்சிக இராசி (Scorpius) Antares    விண்மீன                                      604        ஒளி ஆண்டு
ஞாயிறு           –     மிருகசீரிடம் (Orion)  Rigel     விண்மீன்                                                      777        ஒளி ஆண்டு

             ஞாயிறில்  இருந்து இராசிகளின் தொலைவு

 

இராசிSignStarஒளி ஆண்டுகள்

ஞாயிறு

மிதுனம்GeminiPollux

33.7

ஞாயிறு

மிதுனம்GeminiCastor

51.6

ஞாயிறு

இடபம்TaurusAldbaran

65.2

ஞாயிறு

சிம்மம்LeoRegulus

77.6

ஞாயிறு

கன்னிVirgoSpica263
ஞாயிறுஇடபம்TaurusPleiades

385

ஞாயிறு

விருச்சிகம்ScorpiusAntares

604

ஞாயிறு

மிருகசீரிடம்

OrionRigel

777

ஒரு குழந்தை பிறந்த நேரத்தைச் சரியாகக் கணிக்க வேண்டும் என்றால் குறைந்தது ஞாயிறின் கதிர்கள் புவியை வந்து சேர எடுக்கும் 8 மணித்துளியையும் புவி நேரத்தோடு கூட்ட வேண்டும்!

ஒரு கதைக்கு நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அதனை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? நீPங்கள் எந்தக் கருவிகளைக் கொண்டு கோள்களின் கதிர்கள் பிறக்கிற பிள்ளை அழும் பொழுது உடலில் பாய்ச்சப்படுவதைக் கண்டு பிடித்தீர்கள்? அதைக் காட்ட முடியுமா? ஒரு குழந்தை அழும்போது தான் கோள்களின் கதிர்கள் அப்பிள்ளையின் உடலில் பாய்ச்சப்படுகிறதா? அது அந்தப் பிள்ளை கருவில் உற்பத்தியாகும் நேரத்தில் இல்லையா? கால் அல்லது தலை நிலத்தில் (இந்தக் காலத்தில் கட்டிலில்) படும் நேரத்தில் இல்லையா? முதன் முதலாகக் குழந்தை மூச்சுவிடும் நேரத்தில் இல்லையா? உங்கள் கண்டு பிடிப்பை ஏனைய சோதிடர்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா? மேலும் நீங்கள் குறிப்பிடும் கோள்களின் பட்டியலில் யூறேனஸ், புளுட்டோ, நெப்தியூன் அடக்கமா? இல்லை என்றால் ஏன்?

நீங்கள் பிள்ளை அழும் நேரந்தான் அந்தப் பிள்ளை பிறந்த நேரம் என்கிறீர்கள். ஆனால் நீங்கள் சொல்வதைப் பெரும்பாலான சோதிடர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். சிலர் குழந்தை பிறக்;கிற நேரம் அந்தக் குழந்தையின் கால் அல்லது தலை புவியில் படும் நேரம் என்கின்றார்கள். இன்னும் சிலர் பிள்ளை பிறந்த நேரம் தொப்புள்க் கொடி அறுத்த நேரம் என்கின்றார்கள்.

இவ்வாறு பிறந்த நேரம் எது என்பதிலேயே சோதிடர்கள் ஆளுக்க ஆள் மாறுபடுகின்றார்கள்!

சரி போகட்டும். கோள்களினால் மனிதன் பாதிக்கப்படலாம் என்று வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் இன்ன இன்ன கிரகங்களினால் இன்ன இன்ன பாதிப்பு ஏற்படும் என்று எந்த அறிவாளி கண்டு பிடித்தான்? எப்படி எப்போது கண்டு பிடித்தான்? நாம் வாழும் புவி, கோள்கள் ஒரே மூலங்களினால் ஆக்கப்பட்டவை என்பது உண்மைதான். திங்களும் ஞாயிறும் உயிரினங்களைப் பாதிக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அவை ஒரேமாதிரித்தான் உயிரினங்களைப் பாதிக்கிறது. சோதிடம் சொல்வது போல் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து வௌ;வேறு விதமாகப் பாதிப்பதில்லை.

மேலும் சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது கெட்ட கோள்கள் என்றும் சூரியன், செவ்வாய், வியாழன் ஆண் என்றும் சந்திரன், சுக்கிரன் பெண் என்றும் புதன், சனி அலி என்றும், வியாழன், வெள்ளி சுவ கோள்கள் என்றும் சூரியன், சனி, செவ்வாய், இராகு கேது பாப கோள்கள் என்றும் எதன் அடிப்படையில் சொல்லப்படுகிறது?

அமாவாசை முழுநிலவு (பவுர்ணமி) நாட்களில் மருத்துவ மனையில் அதிகளவில் குழந்தைகள் பிறக்கிறது என்பதை ஆய்வு செய்தபோது அது பிழையான முடிவு என்பது தெரிய வந்துள்ளது. அதுபோலவே மனநிலை பாதித்தவர்கள் அந்த நாள்களில் அதிகளவு பாதிக்கப்படுகின்றார்கள் என்பதிலும் உண்மையில்லை. வீதி விபத்துக்கள் கூடுதலாக நடக்கிறது என்பதிலும் உண்மையில்லை. இவையெல்லாம் பாட்டிக் கதைகள்!

இன்று மருத்துவர்கள் பிறப்பை ஊசி மருந்து கொடுத்து தள்ளிப் போடுகின்றார்கள் அல்லது முன்னுக்குக் கொண்டு வருகின்றார்கள். அதனால் மேட இராசியில் பிறக்க வேண்டிய குழந்தை ஒன்றில் மீன இராசியில் அல்லது இடப இராசியில் பிறந்தால் அதற்கேற்ப கோள்களின் பலன்கள் உடனே மாறிவிடுமா? சில குழந்தைகள் பிறக்கும் போதே உடல் ஊனமாகப் பிறக்கின்றன. அது எப்படி? எதனால் ஏற்பட்டது?

ஒரு குழந்தையின் உடல் நலம் மன நலம் இரண்டுக்கும் அதன் தாய் தந்தையரது மரபணுக்கள் (genes) ஏது என்பதே அறிவியலாளர்களது முடிவாகும். அப்படி அல்ல கோள்கள்தான் ஏது என்று சாதிப்பது மடமையாகும். ஒரு குழந்தையின் தாய் அல்லது தந்தை அல்லது இருவருமே எச்ஐவி (HIV) நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் அந்த நோய் இருப்பது 90 விழுக்காடு சாத்தியமே. அது போலவே நீரிழிவு நோய் உள்ள தாய் அல்லது தந்தை அல்லது இருவருக்கும் பிறக்கும் குழந்தைக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம் 50 விழுக்காட்;டுக்கு மேல் இருக்கிறது. அப்படியென்றால் இந்த நோய்கள் தாய் தந்தையர் மூலம் ஏற்படுகிறதா? அல்லது கோள்களின் கோளாறினால் ஏற்படுகிறதா?

இந்தப் புவிதான் மனிதனைப் பாதிக்கும் பெரிய கோள் ஆகும். பின் ஏன் சோதிடர்கள் புவியை விட்டு விட்டார்கள்? ஈர்ப்பு விசை, கோள்களின் அசைவு இவை வானியலாளர் கண்டு பிடித்த உண்மைகளேயன்றிச் சோதிடர்கள் கண்டு பிடித்தவை அல்ல. உலகம் தட்டை வடிவமானது, அது அசைவதில்லை, அதனைச் சுற்றித்தான் ஞாயிறும் ஏனைய கோள்களும் சுற்றுகின்றன என்ற அடித்தளத்தின் மீதுதான் சோதிடம் எழுப்பப்பட்டுள்ளது!

ஒன்பது கோள்களில் அய்ந்துதான் உண்மையான கோள்கள். இராகு கேது கற்பனை அல்லது நிழல்க் கோள்கள், திங்கள் துணைக் கோள், ஞாயிறு ஒரு விண்மீன். ஓப்புக் கொள்கின்றீர்களா?

உலகில் ஆராய்ச்சி செய்வதற்கு சோதிட சாத்திரம்தான் உங்களுக்கு அகப்பட்டதா? தமிழர்களின் ஆய்வுகள் இப்படியான கவ்வைக்கு உதவாத ஆராய்ச்சியில் செலவிடப்படுவதால் அல்லவா நீராவியில் புட்டு இடியப்பம் அவிப்பதோடு தமிழர்களது கண்டுபிடிப்புக்கள் நின்று விட்டன! உங்களுக்காக நான் உண்மையிலேயே கழிவிரக்கப்படுகிறேன். உங்கள் பொன்னான வாழ்க்கையில் 30 ஆண்டுகளைச் சோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி மண்ணாக்கி விட்டீர்கள்!’


சோதிடப் புரட்டு

(7)

இரண்டு சோதிட முறைகளும் சரியாக இருக்க முடியாது!

ஒருவரது சாதக பலன்கள் 12 இராசி வீடுகள், 12 இராசிகள், 9 கோள்கள் 27 நட்சத்திரங்கள் இவற்றை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது என்பதைப் பார்த்தோம்.

இந்த ஒன்பது கோள்களைப் பொறுத்தளவில் வெப்பமண்டலச் சோதிடமும் இந்திய சோதிடமும் ஒத்துப் போவதில்லை.

வெப்ப மண்டல சோதிடத்துக்கும் இந்திய சோதிடத்துக்கும் ஏழு கோள்களே (விண்மீனான ஞாயிறு மற்றும் புவியின் துணைக் கோளான திங்கள் இரண்டையும் கோள்களாக எடுத்துக் கொண்டு) பொதுவாக இருக்கின்றன. அவையாவன:

ஞாயிறு
புதன்
வெள்ளி
சந்திரன்
செவ்வாய்
வியாழன்
சனி

இவற்றைவிட வெப்பமண்டல சோதிடம் பின்வரும் கோள்களையும் சேர்த்துக் கோள்களின் எண்ணிக்கையைப் பத்தாக உயர்த்திக் கொண்டுள்ளது.

யூறேனஸ்
நெப்தியூன்
புளுட்டோ

இந்திய சோதிடம் இராகு கேது என்ற நிழல் அல்லது கற்பனைக் கோள்களைச் சேர்த்து ஒன்பது கோள்களாக (நவ கோள்கள்) உயர்த்திக் கொண்டுள்ளது.

கெட்ட கோள்கள் எனக் கருதப்படும் இராகுவும் கேதுவும் வெப்பமண்டல சோதிடத்தில் இடம் பெறவில்லை. அதே நேரம் யூரேனஸ் (1871), நெப்தியூன் (1846) மற்றும் புளுட்டோ (1930) ஆகிய கோள்கள் இந்திய சோதிடத்தில் இடம்பெறவில்லை. இதற்குக்குக் காரணம் இந்த மூன்று கோள்களும் அண்மைக் காலத்தில் வானியலாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டதே.

மேலும் வெப்ப மண்டல சோதிடம், இந்திய சோதிடம் கணக்கில் எடுக்கும் 27 நட்சத்திர மண்டலங்களில் ஒன்றையாவது கணக்கில் எடுக்கவில்லை!

எனவே இந்த இரண்டு சோதிட முறைகளும் கோள்களைப் பொறுத்தளவில் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன. வெப்பமண்டல சோதிடம் 10 கோள்களின் அடிப்படையில் பலன் சொல்ல இந்திய சோதிடம் 9 கோள்களின் அடிப்படையில் பலன் சொல்கிறது.

வேடிக்கை என்னவென்றால் இந்த இரண்டு சோதிட முறைகளையும் பின்பற்றித் தொழில் நடத்தும் சோதிடர்கள் தத் தம் சோதிடப் பலன்கள் சரியாக இருப்பதாகச் சொல்கின்றார்கள்! ஆனால் சிறிது சிந்தித்துப் பார்த்தால் இரண்டும் சரியாக இருக்க முடியாது. கூடியபட்சம் இரண்டில் ஒன்றுதான் சரியாக (?) இருக்க முடியும்.

இரண்டையும் இரண்டையும் கூட்டினால் கூட்டுத்தொகை நாலாகத்தான் இருக்க முடியும். இரண்டும் இரண்டும் அய்ந்து என்றோ இரண்டும் இரண்டும் மூன்று என்றோ சொல்வது தவறாகவே இருக்க முடியும்!

இப்போது நாங்கள் இருக்கும் ஞாயிறு குடும்பத்தைச் (Solar System) சேர்ந்த ஞாயிறு என்ற விண்மீன், புதன், வெள்ளி, புவி, திங்கள் என்ற துணைக்கோள், செவ்வாய், வியாழன், சனி, யூரேனியஸ், நெப்தியூன், புளோட்டோ கோள்கள் பற்றி வானியல் தரும் தரவுகளைப் பார்ப்போம்.

எமது ஞாயிறு எமது பால் வழி மண்டலத்தின் (Milky Way Galaxy)  ஒரு ஓரத்தில் இருக்கிறது. எமக்குத் தெரிந்த அண்டத்தில் (Known Universe) ஏறத்தாழ 36,000 கோடி பால்மண்டலங்கள் (Milky Way Galaxies) இருக்கிறது எனவும் ஓவ்வொரு பால் மண்டலத்துக்குள்ளும் 10,000–20,000 கோடி உடுக்கள் (stars) காணப்படுகின்றன எனவும் மேலே பார்த்தோம். ஞாயிறு குடும்பம்

எல்லாக் கோள்களும் கடிகார முள்ளுக்கு எதிர்திசையில் (counter clock-wise) ஞாயிறைச் சுற்றி (Orbit) வருகின்றன. அவ்வாறே வெள்ளி, புளுட்டோ ஆகிய இரண்டு கோள்கள் நீங்கலாக ஏனைய கோள்கள் தங்கள் அச்சில் எதிர்த்திசையில் சுழன்று (rotate) கொண்டிருக்கின்றன. இதனால் ஞாயிறு கிழக்கில் உதித்து மேற்கே மறைவது போல் எங்கள் கண்ணுக்குப் படுகிறது. வெள்ளி புளுட்டோ ஆகிய கோள்கள் மட்டும் கடிகார முள்ளின் திசையில் சுழக்கின்றன. இதனால் இந்த இரண்டு கோள்களையும் இங்கிருந்து பார்த்தால் அவை மேற்கில் உதித்து கிழக்கில் மறைவது போல் தெரியும்.

ஞாயிறும் அவ்வாறே தன்னைத்தானே எதிர்திசையில் சுற்றுகிறது. சுற்ற எடுக்கும் நாள் 25 (நடுக்கோட்டில்) ஆகும். ஆனால் அது வாயு நட்சத்திரம் என்பதால் கோள்கள் போல இறுக்கமாகச் சுற்றுவதில்லை. இந்தத் தரவுகள் வேதகால முனிவர்களுக்குத் தெரியாதவை.

ஞாயிறு (Sun)

கிரேக்கர் ஞாயிறை Helios என்றும், உரோமர்கள் Sol  என்றும் அழைத்தனர். ஒரு நீரகக் குண்டு வெடித்தால் என்ன விளைவு ஏற்படுமோ அதே போன்ற நிலை ஒவ்வொருவிநாடியும் ஞாயிறில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஞாயிறு என்ற விண்மீன் புவிக் கோளத்தில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது. ஓப்பீட்டளவில் அது புவிக்கு மிக அருகில் உள்ளது. ஞாயிறு வியாழனின் விட்டத்தை விட 10 மடங்கு நீளமானது. புவியின் விட்டத்தை விட 109 மடங்கு நீளமானது. புவியைப் போல 13,000 இலட்சம் புவிகளை ஞாயிறுக்குள் அடக்கலாம்.

ஞாயிறு குடும்பம் (Solar system) 9 கோள்களையும், குறுங்கோள்கள் (Meteoroids) சிறு கோள்கள், வால்மீன்கள் (Comets) உள்ளிட்ட ஏராளமான விண்வெளி உடலிகளை உள்ளடக்கியது. ஞாயிறுதான் – ஞாயிறு குடும்பத்தின் நடுவில் உள்ளது. ஞாயிறின் ஈர்ப்பு விசையினாலேயே (force of gravity) புவி 940 மில்லியன் கிமீ நீளமான தனது சுற்றுப் பாதையில் (orbit) ஒரு விநாடிக்கு 20.79 கிமீ வேகத்தில் ஞாயிறை வலம் வந்து கொண்டிருக்கிறது. கோள்கள் அனைத்தும் ஞாயிறைச் சுற்றுவது போலவே ஒட்டு மொத்த ஞாயிறு குடும்பமும் பால் மண்டலத்தைச் சுற்றி உலா வருகிறது.

ஞாயிறு திடப்பொருள் அல்ல. அது ஒரு வாயுக்கோளம். அண்டத்தில் பொருட்கள் திரண்டு ஞாயிறு குடும்பங்கள் தோன்றுகின்றன. போதுமான அடர்த்தி (desnsity) இருந்தால் மாத்திரமே அந்தக் கோளிடத்தில் அணுக்கள் இணைந்து கீலியம் அணு உருவாகும். அப்போது வெளியாகும் ஆற்றலே ஒளியாக மாறிப் புவியை வந்தடைகிறது. ஞாயிறில் 73.46 விழுக்காடு நீரகம், 24.85 விழுக்காடு கீலியம் வாயு உள்ளன. அதன் நடுவே இவ்வாயுக்களின் அடர்த்தி பாதரசத்தை விட அதிகமாக இருக்கிறது. ஞாயிறின் நிறையீர்ப்பு விசைதான் அந்த வாயுக்கோளம் வட்ட வடிவில் நம் கண்ணில் தெரிய வைக்கிறது.

ஞாயிறின் வெப்பம் எமக்கு நேரடியாக வருவதில்லை. மறைமுகமாகவே வருகிறது. ஞாயிறின் கதிர் வீச்சுக்கள் விநாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செலவு செய்கின்றன. இந்தக் கதிர்கள் புவியில் உள்ள ஒரு பொருளின் மீது படும்போது அவை அதன் மூலக்கூறுகளை உந்துகின்றன. அப்போது மூலக்கூறுகளின் வேகம் கூடி வெப்பம் வெளிப்படுகின்றன.

சனி, வியாழன் ஆகிய கோள்களும் ஞாயிறு போல வாயுக் கோள்களே! எனினும் போதிய நிறைத்திணிவு அடையாததால் ஞாயிறு போல அவற்றால் சுயமான ஒளி, வெப்பம் இரண்டையும் ஏற்படுத்த முடியாமல் குளிர்ந்து விட்டன. ஞாயிறு தோன்றி 476 கோடி ஆண்டு ஆகிறது. அது இன்னும் 500 கோடி ஆண்டு நமக்கெல்லாம் ஆற்றலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டத்தில் ஞாயிறு குடுப்பத்தை ஒத்த குடும்பம் எங்காவது இருக்கிறதா என்று வானியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றார்கள். அப்படியான குடும்பங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன என அறிவித்துள்ளார்கள்.

ஞாயிறு விண்மீன் (Sun Star)

விட்டம்                 – 1, 391, 000 கிமீ (864,325 கல்)

திணிவு (mass)                    – 1.99 x 10×30 கிலோ புவியோடு ஒப்பிடும் போது 333,000 மடங்கு. இது ஞாயிறு குடும்பத்தின் பொருண்மையில் 99.8 விழுக்காடு!

செறிவு (density)                        –  1.99

ஞாயிறு ஒளி புவியை வந்து அடைய எடுக்கும் நேரம் – 8.3 மணித்துளி

வளி மண்டலம்       – 73.46 விழுக்காடு நீரகம், 24.85 விழுக்காடு கீலியம்

தன்னைத் தானே சுற்றும் காலம்          – 25.6 நாள் (நடுக்கோடு) 36 நாள் (துருவம்)

தன்னைத் தானே சுற்றும் வேகம்          – விநாடிக்கு 119.57 கிமீ (மணிக்கு 7174 கிமீ)

புவியில் இருந்து பொதுமேனி தொலைவு   – 149,600.000 கிமீ (93 மில்லியன் கல்)

பால் வெளி மையத்தில் இருந்து தொலைவு – 25,000 ஒளி ஆண்டு

பால் வெளியைச் சுற்றிவர எடுக்கும் காலம்  – 225 மில்லியன் ஆண்டு

பால் வெளியைச் சுற்றும் வேகம்                       – விநாடிக்கு 217 கிமீ (135 கல்)

வெப்பம் (மேற்பரப்பு)                                             –  9,900 பாகை பாரன்கைட் (Fahrenheit) (5500 பாகை செல்சியஸ் (Celcius)

வெப்பம் (உள் நடுப்பகுதி)                                    – 10 -22.5 மில்லியன் பாகை பாரன்கைட் (15,000மு)

உங்கள் எடை                                                          – புவியில் 200 கிலோ என்றால் ஞாயிறில் 5,600 கிலோ

Mercury

புதன் (Mercury)

புதன் கோள் புவியோடு ஒப்பிடும்போது அய்ந்தில் இரண்டு பங்காகும். இது கோள்களில் இரண்டாவது சிறிய கோளாகும். இதில் காற்று மண்டலம் இல்லாததால் உயிரினங்கள் வாழும் வாய்ப்பு இல்லை.

விட்டம்                 – 4,878 கிமீ (3,031 கல்)

மேற்பரப்பு            – மூலகம் (சிலிகேட்) கொண்ட தூசிப் படைகளால் மூடப்பட்டுள்ளது. சமவெளிகள், குழிகள் கொண்டது.

திணிவு (mass)                            –    3.30

செறிவு (density)                         –  5.427

வளிமண்டலம்                          – மெல்லிய கீலியம் (95 விழுக்காடு) போர்வை மற்றும் நீரகம்.

வெப்பம்                                          – ஞாயிறு ஒளிபடும் பக்கம் 950 பாகை பாரன்கைட் (510 பாகை செல்சியஸ்) இருளில் இருக்கும் பக்கம் -346 பாகை பாரன்கைட் (-210 பாகை செல்சியஸ்)

ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம்          – 87.96 புவி நாள்

தன்னைத்தானே சுற்றும் காலம்                      – 58.67 புவி நாள்

தன்னைத்தானே சுற்றும் வேகம்                      – விநாடிக்கு 47.89 கிமீ

புவியில் இருந்து பொதுமேனி தொலைவு       – 77.30 மில்லியன் கிமீ (48.21 மில்லியன் கல்)

ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு     – 57.97 மில்லியன் கிமீ (36.12 மில்லியன் கல்)

உங்கள் எடை                                                    – புவியில் 200 கிலோ என்றால் புதனில் 75.6 கிலோ)

துணைக் கோள்                                               – 0

வளையங்கள்                                                  – 0

வளையங்கள்                                                  – 0

AstrologyVenus

வெள்ளி (Venus)

வெள்ளிக் கோளின் அளவை வைத்து அது புவியின் இரட்டை என்று அழைக்கப்படுகின்றது. அது மட்டுமே இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையாகும். மற்றப்படி இந்தக் கோள் 864 பாரன்கைட் வெப்பம் உடையது. இதன் பெயர் உரோமரது காதல் தெய்வத்தின் பெயராகும். இதனை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்பதால் காலையில் விடிவெள்ளி என்றும் மாலையில் மாலை வெள்ளி என்றும் அழைக்கப்படுகின்றது. இது புவியில் இருந்து பார்க்கும்பொழுது வானத்தில் மிகத் துல்லியமாக ஒளிரும் கோள் ஆகும்.

விட்டம்           – 12,102 கிமி (7,515 கல்)

மேற்பரப்பு         – கற்கள், மலைகள், சமவெளி, உருகிய பாறைக் குழம்பு (டயஎய)

வளிமண்டலம்     – கரிமலவாயு (95 விழுக்காடு)

திணிவு (mass)                – 4.87
செறிவு (density)            – 5.204

தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்      – 243 புவி நாள்

தன்னைத்தானே சுற்றும் வேகம்                    – மணிக்கு 6.52 கிமீ

ஞாயிறை சுற்றி வர எடுக்கும் காலம்         – 224.70 புவி நாள்

ஞாயிறைச் சுற்றும் வேகம்                            – விநாடிக்கு 35.03 கிமீ

வெப்பம்                                                                   – 850 பாகை பாரன்கைட் (450 பாகை செல்சியஸ்)

புவியில் இருந்து பொதுமேனி தொலைவு – 40.00 மில்லியன் கிமீ (24.90 மில்லியன் கல்) ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு – 108.20 மில்லியன் கிமீ (67.23 மில்லியன் கல்)

உங்கள் எடை                                                           – புவியில் 200 கிலோ என்றால் வெள்ளியில் 181.4 கிலோ

untitled

புவி (Earth)

ஞாயிறு மண்டலத்தில் உள்ள கோள்களில் வியாழன், சனி, செவ்வாய், யுறேனஸ் ஆகியவற்றைவிடச் சிறியது. புதன், வெள்ளி, நெப்தியூன், புளுட்டோவை விடப் பெரியது. புவி ஞாயிறுக்கு அண்மையில் இருக்கும் காலம் சனவரி 2 ஆம் நாள் (147.1 மில்லியன் கிமி அல்லது 94.8 மில்லியன் கல்) ஆகும். தொலைவில் இருக்கும் நாள் யூலை 2 (152.6 மில்லியன் கிமி அல்லது 94.82 மில்லியன் கல்) ஆகும். புவி ஈர்ப்பு விசையில் இருந்து ஒரு பொருள் விடுபட வேண்டும் என்றால் அது விநாடிக்கு 11.10 கிமீ வேகத்தில் மேலெழுந்து பாய வேண்டும்.

விட்டம்                                 – 12,756 கிமி (7,921 கல்)

மேற்பரப்பு                          – தண்ணீர் (70 விழுக்காடு), காற்று, இறுக்கமான தரை.

வளிமண்டலம்               – வெடியம் (Nitrogen) 78 விழுக்காடு, உயிர்வாயு 21 விழுக்காடு.

திணிவு (mass)                 – 5.57 g/cm³ (6 x1024  kg.)  தண்ணீரை விட 5.6 மடங்கு அதிகமானது

செறிவு (density)            – 5.52
தன்னைத்தானே சுற்றும் காலம்                                                     – 23 மணி, 56 மணித்துளி, 4.091 விநாடி (86,164,091 விநாடி -Sidereal day)

புவி தன்னைத்தானே சுற்ற எடுக்கும் பொதுமேனி காலம் – 24 மணித்தியாலம் (Mean solar Day)

தன்னைத்தானே சுற்றும் வேகம்                                                   – விநாடிக்கு .46 கிமீ (.29 கல்) மணித்தியாலத்துக்கு 1670 கிமீ (1,040 கல்)

ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம் – 365 நாள், 5 மணி,0.48 மணித்துளி, 46 விநாடி (365.242374 -Tropical Year)

– 365 நாள், 6 மணி 9 மணித்துளி, 9.5 விநாடி (365.256363 -Sidereal Year) ( 365.3564 Mean Sideyear Year)

ஞாயிறைச் சுற்றும் வேகம்                      – விநாடிக்கு 29.79 கிமீ (18.49 கல்) மணித்தியாலத்துக்கு 107,000 கிமீ (67,000)

ஞாயிறில் இருந்து சihசரி தொலைவு – 149.60 மில்லியன் கிமீ (92.90 மில்லியன் கல்)

அச்சின் சாய்வு                                            – 23.45 பாகை

துணைக் கோள்                                          – 1

Astrologymoon

திங்கள் (Moon)

விட்டம்                                                – 3476 கிமீ.

ஈர்ப்பு விசை                                       – புவியைவிட ஆறில் ஒரு பங்கு.

திணிவு (mass)                                   – 7.35

செறிவு (density)                                – 3.34

புவியைச் சுற்றி வர எடுக்கும் காலம்               – 27.32 புவி நாள்

தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்         – 27.32 புவி நாள்

தன்னைத்தானே சுற்றும் வேகம்                       – விநாடிக்கு 16.655 கிமீ

புவியைச் சுற்றி வரும் வேகம்                           – விநாடிக்கு 1.022 கிமீ

புவியில் இருந்து தொலைவு                             – 384,467 கிமீ

ஆகக் கூடிய தரை வெப்பம்                                – 123 செல்சியஸ்

ஆகக் குறைந்த தரை வெப்பம்                          -233 செல்சியஸ்

நிலவில் உங்கள் எடை                                       – புவியில் 200 கிலோ என்றால் திங்களில் 33.2 கிகி (1/6 பங்கு)

Astrologymars

செவ்வாய் (Mars)

செவ்வாய் கோள் சிவப்பாக இருப்பதால் அதற்குச் செவ்வாய் என்ற பெயர் இடப்பட்டது. தொலைக் கோள்களின் சுற்றுப் பாதை கிரேக்கத்தில் ஆயசள போர்க் கடவுளாவார். அந்தப் பெயரையே இந்தக் கோளுக்கும் வைத்து விட்டார்கள். அதன் நிறம் சிவப்பாக இருப்பதற்கு இரும்பு உயிரகம் (சைழn ழஒனைந (சரளவ) நிறைந்த தூசித் தரை காரணமாகும். இந்தக் கோள் ஞாயிறில் இருந்து பார்க்கும் போழுது புவிக்கும் வியாழனுக்கும் இடையில் இருக்கிறது.

விட்டம்                                      – 6,794 கி.மீ (4,219 கல்). புவியைவிட நாலில் ஒன்று

மேற் தரை                                – செங்குத்தான பள்ளத்தாக்கு, எரிமலை, பனித் துருவங்கள்,
பனிக்கரிமலவாயு
திணிவு (mass)                         –  6.42
செறிவு (density)                     – 3.94

வளிமண்டலம்                     – கரிமலவாயு 95.32 விழுக்காடு, நீரகம் 2.7 விழுக்காடு

வெப்பம்                                   -305 பாரன்கைட் (-187 செல்சியஸ்)

தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்                     – 24 மணி, 38 மணித்துளி, 23 விநாடி

தன்னைத் தானே சுற்றும் வேகம்                                  – விநாடிக்கு 24.13 கிமீ

ஞாயிறைச் சுற்றிவர எடுக்கும் காலம்                       – 687 புவி நாள்

புவியில் இருந்து பொதுமேனித் தொலைவு             – 56.00 மில்லியன் கிமீ (35.00 மில்லியன் கல்)

ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு            – 227.94 மில்லியன் கி.மீ (141.55 கல்)

உங்கள் எடை                                                                       – புவியில் 200 கிலோ என்றால் செவ்வாயில் 75.4

துணைக்கோள்கள்                                                            – 2

Astrologypics 060

வியாழன் (Jupiter)

வியாழன் ஞாயிறு மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய கோளாகும். புவியின் விட்டத்தைவிட 11 மடங்கு நீளமானது. அதன் காரணமாக உரோமரது முதன்மைக் கடவுளின் பெயர் (Jupiter) இதற்குச் சூட்டப்பட்டது. கிரேக்கர் இதற்கு Zeus என்ற கடவுளின் பெயரைச் சூட்டினார்கள். சுமார் 1,300 புவிகளை இதற்குள் அடக்கலாம்! தொலைநோக்கி மூலம் பார்க்கும் பொழுது வியாழன் மிக அழகாக இருக்கும். நீலம், ஊதா, மஞ்சள், செம்மஞ்சள் (Orange) நிறத் திட்டுக்கள் காணப்படுகின்றன.

விட்டம்                                                – 142,984 கிமீ (88,612 கல்)

திணிவு                                                – 1.897 x 1027 kg. புவியைவிட 317.83 மடங்கு அதிகமானது

செறிவு (density)                               – 1.33

ஈர்ப்பு விசை                                      – 2.4

மேற்பரப்பு                                          – வெப்ப வாயு மற்றும் நீர்மம் (Hot gas and liquid)

வளிமண்டலம்                                – சுழன்றடிக்கும் முகில் கூட்டங்கள், அமோனியா, நீரகம் (hydrogen) 90 விழுக்காடு கீலியம் (helium) 10 விழுக்காடு

வெப்பம்                                              –      -234 பாரன்கைட் (-148 செல்சியஸ்)

தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்       – 9 மணி 55 மணித்துளி

தன்னைத்தானே சுற்றும் வேகம்                     – விநாடிக்கு 12.6 கிமீ ( மணிக்கு 43,500 கிமீ)

ஞாயிறைச் சுற்றி வர எடுக்கும் காலம்        – 11.86 புவி ஆண்டு (4,333 புவி நாள் )

யாயிறைச் சுற்றும் வேகம்                                –  விநாடிக்கு 13.06 கிமீ

புவியில் இருந்து பொதுமேனி தொலைவு          – 588.50 மில்லியன் கிமீ (367.04 மில்லியன் கல்)

ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு      – 778.33 மில்லியன் கிமீ (483.63 மில்லியன் கல்) ஞாயிறில் இருந்து புவியின் தொலைவை விட 5.2 மடங்கு தொலைவு

உங்கள் எடை                                                                 – புவியில் 200 கிலோ என்றால் வியாழனில் 506.6 கிகி

துணைக் கோள்கள்                                                      – 35

வளையம்                                                                        – 1

Astrologysaturn

சனி (Saturn)

சனிக் கோள் உரோமரின் வேளாண்மைத் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. சனிக் கோளே பண்டைக் கால மக்களுக்குத் தெரிந்திருந்த கடைசித் தொலைக் கோளாகும். வியாழனுக்கு அடுத்த இரண்டாவது பெரிய கோளும் இதுவே. ஏனைய கோள்களைப் போலவே சனிக் கோள் ஓர் அழகான கோள். சோதிட சாத்திரம் சொல்வது போல் அதன் நிறம் கறுப்பு அல்ல. அதன் நிறம் கறுப்பு என்பதோ, அதன் வாகனம் காக்கை என்பதோ வெறும் மூடநம்பிக்கை. இந்தக் கோளைச் சுற்றிலும் வளையங்கள் காணப்படுகின்றன. இந்த வளையங்களை முதன் முதலில் கலிலியோ கலிலி (Galileo Galilei, 1564-1642) என்ற வானியலாளரே தனது சிறிய தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார்.

ஞாயிறிடம் இருந்து இந்தக் கோள் பெறும் ஒளியும் வெப்பமும் மிகக் குறைவாகும்.

விட்டம்               – 120,660 கிமி (74,978 கல்)

மேற்பரப்பு                                       – வாயு மற்றும் நீர்மம் ( புயள யனெ டஙைரனை)

ஈர்ப்பு விசை                                   – 1.16 (புவி 1)

திணிவு (mass)                                 – 5.68

செறிவு (density)                             – 6.87

வளிமண்டலம்                             – நீரகம் (hydrogen) 88 விழுக்காடு கீலியம் (helium) 11 விழுக்காடு

வெப்பம்                                           – -288 பாரன்கைட் (-178 செல்சியஸ்)

அச்சின் சாய்வு                             – 26.73 பாகை

தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்            – 10 மணி 40 மணித்துளி, 0 விநாடி (0.436 புவி நாள்)

தன்னைத்தானே சுற்றும் வேகம                           – விநாடிக்கு 9.87 கிமீ (மணிக்கு 35,500 கிமீ)

ஞாயிறைச் சுற்நி வர எடுக்கும் காலம்               – 29.46 புவி ஆண்டு

ஞாயிறைச் சுற்றும் வேகம்                                     – விநாடிக்கு 9.64 கிமீ

புவியில் இருந்து பொதுமேனி தொலைவு – 1280.00 மில்லியன் கிமீ (798.30 மில்லியன் கல்)

ஞாயிறில் இருந்து பொதுமேனி தொலைவு – 1,426.64 மில்லியன் கிமீ (886.12 மில்லியன் கல்)

உங்கள் எடை                                                            – புவியில் 200 கிலோ என்றால் சனியில் 212.8 கிகி

துணைக் கோள்கள்                                                 – 31

வளையம்                                                                    – 1,000 (?)

கீழ்க்கண்ட அட்டவணை ஒரே பார்வையில் புவி உட்பட 9 கோள் பற்றிய தரவுகளைத் தருகிறது.

 

 

கோள்

 

 

விட்டம்

 

ஞாயிறு  கோள் தொலைவு  

 

சுழல் காலம்

 

 

சுற்றுக் காலம்

 

 

துணைக் கோள்

 

 

 

அடர்த்தி

 

 திணிவு

 

 

 

 

வெப்பம்

 

 

அச்சின் சாய்வு

ஞாயிறை

 

சுற்றும்

வேகம்

  கிமீ கல் மில் கிமீ       நீர்-1 புவி-1 செல்சி பாகை கிமீ
புதன் 4,878 3,029 57,910 58.67 நாள் 87.96 நாள் 0 5.43 0.06 467/-210 0 47.89
வெள்ளி 12,102 7,515 108,200 243 நாள் 224.70 நாள் 0 5.25 0.82 450 177.4 35.03
புவி 12,756 7,921 149,600 23.56 மணி 365.24 நாள் 1 5.52 1.00 -89/58 23.45 29.79
நிலா 3,476 2,159 384,467* 27.32** 27.32** 0 0.60 0.012 123/-233 7.00 31.022***
செவ்வாய் 6,794 4,219 227,940 24.6 மணி 687 நாள் 2 3.93 0.11 -187 23.98 24.13
வியாழன் 142,984 88,793 778,330 9.8 மணி 11.9 ஆண்டு 35 1.33 317.83 -148 3.08 13.06
சனி 120,536 74,852 1,426,940 10.665 மணி 29.46 ஆண்டு 31 0.71 95.2 -178 26.73 9.64
யுறேனியஸ் 51,118 31,744 2,870,990 17.24 மணி 84 ஆண்டு 5 1.24 14.53 -210 97.92 6.81
நெப்தியூன் 49,528 30,756 4,497,070 16.1 மணி 165 ஆண்டு 8 1.67 17.14 -210 28.8 5.43

*புவி-நிலா தொலைவு (கிமீ)

**புவியைச் சுற்றும் காலம்

*** புவியைச் சுற்றும் வேகம்

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply