பிரபல எழுத்தாளர் நவம் ஏப்ரில் 12 அன்று இயற்கை எய்தினார்

IMG_0372 IMG_0369 IMG_0368 IMG_0367 IMG_0366 IMG_0365

பிரபல எழுத்தாளர் நவம் (இயற்பெயர் சீனித்தம்பி ஆறுமுகம்) அவரது சொந்த ஊரான மட்டக்களப்பு ஆரையம்பதியில் கடந்த ஏப்ரில் 12 அன்று இயற்கை எய்தினார். தனது கடைசிக் காலத்தை தனது பிறந்த ஊரில் கழிக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தவர்.

அவரது மகன் முகுந்தன்  அமெரிக்கா செல்ல வதிவிட இசைவுச் சீட்டு எடுத்துக் கொடுத்தும் அவர் அங்கு நிரந்தரமாக இருக்க மறுத்துவிட்டார்.

நீண்ட காலம் தமிழ்நாட்டில் வாழ்ந்த அவர் அவரது பிள்ளைகளைப் பார்க்க அமெரிக்கா,  கனடா வந்து சிலகாலம் இருந்து விட்டு ஓராண்டுக்கு முன்னர் ஊர் திரும்பினார். கனடாவில் அவரது பேத்தியின் நடன அரங்கேற்றத்துக்கு வந்திருந்தார். அதுவே அவரோடும் அவரது குடும்பத்தோடும் ஆன எனது கடைசிச் சந்திப்பு. சென்ற கிழமை அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவரைவிட லீலாதான் 30 நிமிடம் அளவில் பேசினார். வழக்கம் போல பழைய நினைவுகளை இரை மீட்டுக் கொண்டோம். எப்போதும் போல  நகைச் சுவை கலந்த கல கல பேச்சு. தொண்ணூறு அகவையை நெருங்குவதாக அவரது மனைவி லீலா சொனனார். இப்போதும் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

 

நவம் – லீலா திருமணம் காதல் திருமணம். இருவரும் ஆசிரியர்கள். அன்றில் பறவைகள் என்று சொல்வோமே? அது போல இணைபிரியாத சோடிகள்.  வாழ்க்கையில் நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார் கண்ணதாசன். அப்படியே ஒரு மனைவி வந்து வாய்த்தாலும்  வாழ்க்கை துணையாக அமைவது  அருமை.

 

கனடாவுக்கு வந்தால் கட்டாயம் எங்களது வீட்டுக்கு வருவார்.  ஐம்பதுகளில் நான் இரத்தினபுரியில் பணிபுரிந்த காலத்தில் ஆசிரியர் நியமனம் பெற்று அங்கு வந்தார். பின்னர் நான் மட்டக்களப்பில் பணயாற்றிய காலத்தில் வார இறுதி நாள்களில் ஆரையம்பதியில் இருந்த அவரது வீட்டுக்குப் போய்விடுவேன். வாவிக்கரையில் அவரது வீடு.

 

ஐம்பதுகளில் கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் நந்தினி என்ற கதை எழுதி முதல் பரிசு பெற்றவர். மறைந்த ஜெமினி கணேசன், மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா கவிப்பேரரசு வைரமுத்து போன்றோரது உற்ற நண்பன். ஜெமினி கணேசனோடு நெருங்கிய தொடர்பு.  அவரது பிற்ந்த நாளில் மறக்காமல் அவரது இல்லம் சென்று வாழ்த்துவார்.

வந்தது தெரியும் போவது எங்கே? வாசல் நமக்கே தெரியாது வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது? வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும் ஜனனம் என்பது வரவாகும் – அதில் மரணம் என்பது செலவாகும்.

உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?

அவரது மனைவி லீலா,  முகுந்தன், (அமெரிக்கா), அரவிந்தன் (ஜெர்மனி), கீதாஞ்சலி,(கனடா), நளாயினி ( கனடா)  தர்மகீர்த்தி (அமெரிக்கா), கலைவாணி (அமெரிக்கா), கலைச்செல்வி (ஜேர்மனி) கோணேசமூர்த்தி (கனடா), சதாகரன் (கனடா) ஆகியோருக்கும் உற்றார் உறவினருக்கும்  எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply