சித்தர் பாடல்கள்: சிவவாக்கியம்
(ஆசிரியர் : சிவவாக்கியர்)
(பாடல்கள் 1-200)
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.
0 கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.
1 அக்ஷர நிலை
ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.
2 சரியை விலக்கல்
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
3 யோக நிலை
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.
4 தேகநிலை
வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.
[நந்துதல் – இச்சை கொள்ளுதல்; நடுவன் – எமன்]
5 ஞான நிலை
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.
6 நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.
7 மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ;
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ-
நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.
8 அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
9 அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
10 கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
11 நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
12 யோக நிலை
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!
13 நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.
14 வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை
தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே?
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்!
சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.
15
அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே.
16
அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம்
இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய்
எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே?
17
சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே!
18
சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்
மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை?
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்
கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.
19
அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.
அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!
20
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!
நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே!
21
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்,
வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?
காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!
22
ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்;
ஓடம்உள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்;
ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலே
ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே!
23 து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே!
24
உற்பத்தி நிலை
அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?
25
அறிவு நிலை
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?
26
அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யார்அறிய வல்லரே?
விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.
27
தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஅப் பராபரம்
ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!
28
தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே!
29
நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்;
நெருப்பும்நீரும் உம்முளே நினைந்துகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ!
30
பாட்டில்லாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிமங்கை பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்துக் குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பைக் கூப்பிடா முகிஞ்சதே.
31
குசுகுசுப்பை – சுருக்குப்பை
தரிசனம்
செய்யதெங்கி லேஇளநீர் சேர்த்தகார ணங்கள்போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்.
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே.
32
அறிவு நிலை
மாறுபட்டு மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே.
மாறுபட்ட தேவரும் அறிந்துநோக்கும் என்னையும்
கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே.
33
கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
34
செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!
35
பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!
36
இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்
உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்
சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமோ!
37
கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
நிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின்மாயை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ!
38
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
39
வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்;
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!
40
ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;
போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!
41
பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே.
அறுப்பென செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்.
42
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ?
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ?
செம்பொன் அம்பலத்துளே தெளிந்த சிவாயமே.
43
சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே
சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது
முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?
வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே.
44
ஒடுக்க நிலை
சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்
சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்
மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்
வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே.
45
கிரியை
சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?
46
அறிவு நிலை
கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.
47
அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்,
துறைஅறிந்து நீர்குளித்த அன்றுதூமை என்றிலீர்,
ப்றையறிந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,
புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.
48
தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.
49
சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே.
50
கைவடங்கள் கண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்?
எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணிஎண்ணிப் பார்க்கிறீர்?
பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்
மெய்கடந்து உம்முளே விரைந்து கூறல்ஆகுமே.
51
ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.
52
இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;
எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே?
53
நாழிஅப்பும் நாழிஉப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடம்
ஏறில்ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.
54
தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.
55
எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான்
சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்
சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே.
56
உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர்;
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே.
57
போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
58
அகாரம்என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ?
உகாரம்என்ற அக்கரத்துள் உவ்வுவந்து உதித்ததோ?
அகாரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதோ?
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.
59
அறத்திறங் களுக்கும்நீ, அண்டம்எண் திசைக்கும்நீ,
திறத்திறங் களுக்குநீ, தேடுவார்கள் சிந்தைநீ,
உறக்கம்நீ, உணர்வுநீ, உட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினும் குடிகொளே.
60
அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.
61
மைஅடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்அற்று இருப்பீர்கள்
மெய்அறிந்த சிந்தையால் விளங்குஞானம் எய்தினால்
உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே.
62
கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லீரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்
திருவிளங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே!
63
தீர்த்தம்ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்,
தீர்த்தம்ஆடல் எவ்விடம் தெளிந்துநீர் இயம்புவீர்?
தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே!
64
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?
அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர்
எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே.
65
கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீர் உணர்ந்திருக்க வல்லீரேல்
பண்டைஆறும் ஒன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி ஆகிநின்ற ஆதிமூலம் மூலமே!
66
ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவீர்காள்!
கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லீரேல்,
தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே.
67
உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்?
உழலும்வாச லைத்திறந்து உண்மைசேர எண்ணிலீர்?
உழலும்வாச லைத்திறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே.
68
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே.
69
இருக்கவேணும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ?
மரிக்கவேணும் என்றலோ மண்ணுளே படைத்தனர்?
சுருக்கமற்ற தம்பிரான் சொன்னஅஞ் செழுத்தையும்
மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம்கெடீர்.
70
அம்பத்தொன்று என அடங்கலோர் எழுத்துளோ?
விண்பரந்த மந்திரம் வேதம்நான்கும் ஒன்றலோ
விண்பரந்த மூலஅஞ் செழுத்துளே முளைத்ததே
அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.
71
சிவாயம்என்ற அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம்
உபாயம்என்று நம்புதற்கு உண்மையான அட்சரம்
கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை
உபாயம்இட்டு அழைக்குமே சிவாயஅஞ் செழுத்துமே.
72
உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல
மருவும்வாசல் சொந்தம்அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானும்அல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே?
73
ஆத்துமா அனாதியோ? அனாத்துமா அனாதியோ?
பூத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ?
தர்க்கமிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ?
வீக்கவந்த யோகிகாள்? விரைந்துரைக்க வேணுமே!
74
அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்;
நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அரிகிலீர்;
உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே?
75
அன்பு நிலை
இருவர்அரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்;
உருவரங்கம் ஆகிநின்ற உண்மைஒன்றை ஓர்கிலீர்;
கருஅரங்கம் ஆகிநின்ற கற்பனை கடந்துபின்
திருஅரங்கம் என்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே!
76
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்திருத்தி மெய்யினால் சிவந்தஅஞ் செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.
77
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும்
எண்ணிலாத கோடிதேவர் என்னதுஉன்னது என்னவும்
கண்ணிலேகண் மணிஇருக்கக் கண்மறைத்த வாறுபோல்
எண்ணில்கோடி தேவரும் இதன்கணால் விழிப்பதே.
78
அறிவு நிலை
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும்என்று பேணுவார்;
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும்என்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே.
79
மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ?
80
விறகு – கர்வம்
ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே
அக்கணிந்து கொன்றைசூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேகபாவம் அகலுமே.
81
மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே
மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல்கிடந்து உயிர்கழன்ற உண்மைகண்டும் உணர்கிலீர்!
82
பாடுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கன்மகூட்டம் இட்டஎங்கள் பரமனே
நீடுசெம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே,
நீலகண்ட காலகண்ட நித்தியகல் யாணனே.
83
கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானம்உற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையே;
ஊனமற்ற சோதியோடு உணர்வுசேர்ந்து அடக்கினால்
தேன்அகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே.
84
பருகிஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிருவியே நினைந்துபார்க்கில் நின்மனம் அதாகுமே.
உருகிஓடி எங்குமாய் ஓடும்சோதி தன்னுளே
கருதுவீர் உமக்குநல்ல காரணம் அதாகுமே.
85
சோதியாகி ஆகிநின்ற சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா,
வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய்
ஆதிநாதன் தன் நாதன்என்று அனந்தகாலம் உள்ளதே
86
இறைவனால் எடுத்தமாடத் தில்லையம் பலத்திலே
அறிவினால் அடுத்தகாயம் அஞ்சினால் அமைந்ததே.
கருவிநாதம் உண்டுபோய்க் கழன்றவாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே.
87
நெஞ்சிலே இருந்திருந்து நெருக்கிஓடும் வாயுவை
அன்பினால் இருந்துநீர் அருகிருத்த வல்லீரேல்
அன்பர்கோயில் காணலாம் அகலும்எண் திசைக்குளே
தும்பிஓடி ஓடியே சொல்லடா சுவாமியே!
88
தில்லையை வணங்கிநின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்துநின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே.
89
உடம்புஉயிர் எடுத்ததோ, உயிர்உடம்பு எடுத்ததோ
உடம்புஉயிர் எடுத்தபோது உருவம்ஏது செப்புவீர்
உடம்புஉயிர் இறந்தபோது உயிர்இறப்பது இல்லையே
உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே.
90
அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு ஆக்கினாய்;
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை;
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்;
அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!
91
மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்!
மந்திரங்கள் ஆவதும் மறத்தில்ஊறல் அன்றுகாண்;
மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை;
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம்ஏதும் இல்லையே!
92
என்னஎன்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை?
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதம்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்ஒடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானும்அல்லது இல்லையே!
93
ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான வாறுபோல்
வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்!
ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே!
பாரும்இத்தை உம்முளே பரப்பிரமம் ஆனதே!
94
அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை?
சவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத்து இருத்தினால்
அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே.
95
தற்பரம் – சுழிமுனை தானம்
நவ்விரண்டு காலதாய், நவின்றமவ் வயிறதாய்ச்
சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அழுர்ந்துநின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயஅஞ் செழுத்துமே.
96
இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டுமூன்று வளையமாய் சுணங்குபோல் கிடந்தநீ
முரண்டெழுந்த சங்கின்ஓசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே!
97
கடலிலே திரியும் ஆமை கரையிலேறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கும்எங்கள் மணியரங்க சோதியை
உடலுளே நினைந்துநல்ல உண்மையானது உண்மையே!
98
மூன்றுமண்ட லத்தினும் முட்டிநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்;
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்;
தோன்றும்ஓர் எழுத்துளே சொல்லஎங்கும் இல்லையே!
99
மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்
மூன்றும்அஞ் செழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும்மண்டலத்திலே சொல்லஎங்கும் இல்லையே!
100
சோறுகின்ற பூதம்போல சுணங்குபோல் கிடந்தநீர்
நாறுகின்ற கும்பியில் நயந்தெழுந்த மூடரே,
சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லீரேல்
ஆறுகோடி வேணியார் ஆறில்ஒன்றில் ஆவிரே!
101
வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி
அட்டவக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
எட்டும்எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
எட்டலாம் உதித்தது எம்பிரானைநாம் அறிந்தபின்.
102
பேசுவானும் ஈசனே, பிரமஞானம் உம்முளே;
ஆசையான ஐவரும் அலைந்தருள் செய்கிறார்;
ஆசையானா ஐவரே அடக்கிஓர் எழுத்திலே
பேசிடாது இருப்பிரேல் நாதன்வந்து பேசுமே.
103
நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே!
நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!
104
பரம்உனக்கு எனக்குவேறு பயம்இலை பராபரா!
கரம்எடுத்து நிற்றலும் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி அமுதளித்த சீருலாவு நாதனே;
உரம்எனக்கு நீ அளித்த ஓம்நமசி வாயவே!
105
பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன்
நிச்சலும் நினைந்திட நினைத்தவண்ணம் ஆயிடும்;
பச்சைமண் இடிந்துபோய் பறந்ததும்பி ஆயிடும்
பிச்சர்காள் அறிந்துகொள்க பிரான்இயற்று கோலமே.
106
ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே.
107
விழியினோடு புனல்விளைந்த வில்லவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவுநின்றது இல்லையே
வெளிபரந்த தேசமும் வெளிக்குள்மூல வித்தையும்
தெளியும் வல்லஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே.
108
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!
109
அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.
110
ஆதியானது ஒன்றுமே அநேக்அநேக ரூபமாய்
சாதிபேத மாய்எழுந்து சர்வசீவன் ஆனபின்
ஆதியோடு இருந்துமீண்டு எழுந்துசென்மம் ஆனபின்
சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே.
111
மலர்ந்ததாது மூலம்மாய் இவ்வையகம் மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம்வந்து அருத்ததும் விடுத்ததும்
புலன்கள்ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்றமாயம் என்னமாயம் ஈசனே.
112
பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றிநின்ற ஒண்சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவன் சிவன்தெரிந்து ஞானியே!
113
மண்கிடார மேசுமந்து மலையுள்ஏறி மறுகுறீர்,
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்,
தம்பிரானை நாள்தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வது எங்ஙனே?
114
நாவில்நூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விசாரம் குறைந்ததும்
பாவிகாள் இதென்னமாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார்.
115
இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்,
இல்லைஎன்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ?
இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே.
116
காரகார காரகார காவல்ஊழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ
ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.
117
நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான்
வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ?
பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ?
நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே!
118
உயிருநன்மை யால்உடல் எடுத்துவந்து இருந்திடும்!
உயிர்உடம்பு ஒழிந்தபோது ரூபரூப மாயிடும்
உயிர்சிவத்தின் மாயைஆகி ஒன்றைஒன்று கொன்றிடும்
உயிரும்சத்தி மாயைஆகி ஒன்றைஒன்று தின்னுமே.
119
நெட்டெழுத்து வட்டமே நிறைந்தவல்லி யோனியும்,
நெட்டெழுத்து வட்டமொன்று நின்றதொன்று கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டம்ஒன்றில் நேர்படான் நம்ஈசனே!
120
விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்துவாழ்வ துண்மையே.
121
விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே.
122
மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாளுநாளு முன்னிலொரு நாட்டமாகி நாட்டிடில்
பாலனாகி நீடலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே!
123
மின்எழுந்து மின்பரந்து மின்ஒடுங்கு மாறுபோல்
என்னுள்நின்ற என்னுள்ஈசன் என்னுள்ளே அடங்குமே,
கண்ணுள்நின்ற கண்ணில்நேர் மைகண்அறி விலாமையால்
என்னுள்நின்ற வென்னையன்றி யான்அறிந்ததில்லையே!
124
இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம்,
அரிக்குமால் பிரமனும் அண்டம்ஏழு அகற்றலாம்.
கருக்கொளாத குழியிலே காலிலாத தூணிலே
நெருப்பறை திறந்தபின்பு நீயும்நானும் ஈசனே!
125
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே?
ஆகலும் அழிதலும் அதன்கண்ணேயம் ஆனபின்
சாகலும் பிறத்தலும் இல்லைஇல்லை இல்லையே!
126
வேதம்நாலும் பூதமாய் விரவும்அங்கு நீரதாய்ப்
பாதமே இலிங்கமாய்ப் பரிந்தபூசை பண்ணினால்
காதினின்று கடைதிறந்து கட்டறுத்த ஞானிகள்
ஆதிஅந்த மும்கடந்து அரியவீடு அடைவரே!
127
பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்தரே!
துருத்திநூல் முறுக்கிவிட்டுத் துன்பம்நீங்க வல்லீரேல்
கருத்தில்நூல் கலைப்படு காலநூல் கழிந்திடும்
திருத்திநூல் கவலறும் சிவாயஅஞ்சு எழுத்துமே.
128
சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்
தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என்செய்வேன்?
மூவராலும் அறியொணாத முக்கணன்முதற் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே.
129
காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.
130
எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ?
அங்கும்இங்கு மாய்இரண்டு தேவரே இருப்பரோ?
அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ?
வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.
131
அறையறை இடைக்கிடந்த அன்றுதூமை என்கிறீர்;
முறைஅறிந்து பிறந்தபோதும் அன்றுதூமை என்கிறீர்
துறைஅறிந்து நீர்குளித்தால் அன்றுதூமை என்கிறீர்
பொறைஇலாத நீசரோடும் பொருந்துமாறது எங்ஙனே?
132
சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே!
சுத்தம்ஏது? கட்டதேது? தூய்மைகண்டு நின்றதுஏது?
பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே?
133
மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?
134
தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது?
ஆண்மைஅற்று நின்றலோ வழக்கமற்று நின்றது?
தாண்மைஅற்று ஆண்மைஅற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற
தூமைதூமை அற்றகாலம் சொல்லும்அற்று நின்றதே!
135
ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை
வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா?
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன?
சீறுகின்ற மூடனே அத்தூமைநின்ற் கோலமே.
136
தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமைஎங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந்துலகம் கண்டதே.
தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமைஅற்று கொண்டிருந்த தேசம்ஏது தேசமே?
137
வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்?
வேணும்என்று தேடினும் உள்ளதல்லது இல்லையே,
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாணல் ஆகுமே!
138
சிட்டர்ஓது வேதமும் சிறந்ததாக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்றமெய்மை நூல்களும்
கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்!
139
நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?
ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே!
140
காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார்
மாலைகாலை யாச்சிவந்த மாயம்ஏது செப்பிடீர்?
காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்
காலைமாலை ஆகிநின்ற காலன்இல்லை இல்லையே.
141
எட்டுமண்ட லத்துளே இரண்டுமண்டலம் வளைத்து
இட்டமண்ட லத்துளே எண்ணிஆறு மண்டலம்
தொட்டமண்ட லத்திலே தோன்றிமூன்று மண்டலம்
நட்டமண்ட லத்துளே நாதன்ஆடி நின்றதே!
142
நாலிரண்டு மண்டலத்துள் நாதன்நின்றது எவ்விடம்?
காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன்;
சேலிரண்டு கண்கலந்து திசைகள் எட்டுமூடியே
மேலிரண்டு தான்கலந்து வீசிஆடி நின்றதே.
143
அம்மைஅப்பன் உப்புநீர் அறிந்ததே அறிகிலீர்;
அம்மைஅப்பன் உப்புநீர் அரிஅயன் அரனுமாய்
அம்மைஅப்பன் உப்புநீர் ஆதியாதி ஆனபின்
அம்மைஅப்பன் நின்னைஅன்றி யாரும்இல்லை ஆனதே.
144
உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே?
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே?
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறது எங்ஙனே?
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே!
145
ஆதிஉண்டு அந்தம்இல்லை அன்றுநாலு வேதம் இல்.
சோதிஉண்டு சொல்லுமில்லை சொல்லிறந்த தேதுமில்;
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதிஅன்று தன்னையும் யார்அறிவது அண்ணலே?
146
புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே?
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே!
147
உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே?
148
உண்டகல்லை எச்சில்என்று உள்ளெறிந்து போடுகிறீர்;
கண்டஎச்சில் கையலோ பரமனுக்கும் வேறதோ?
கண்டஎச்சில் கேளடா, கலந்தபாணி அப்பிலே
கொண்டசுத்தம் ஏதடா? குறிப்பிலாத மூடரே!
149
ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றுமும் மறக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்குமாகி நின்றதோ?
சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே!
150
ஈணெருமையின் கழுத்தில் இட்டபொட்ட ணங்கள்போல்
மூணுநாலு சீலையில் முடிந்தவழ்க்கும் மூடர்காள்,
மூணுநாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணிஊணி நீர்முடித்த உண்மைஎன்ன உண்மையே?
151
சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காவலான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே!
கூவமான் கிழநரியக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலும் குஞ்சதஞ்சும் தான் இறந்து போனவே!
152
மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பீரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!
153
செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட
செம்பினில் களிம்புவிட்ட சேதிஏது காணுமே!
154
அணி அரங்கம் – அழகிய சிற்றம்பலம்
நாடிநாடி நம்முளே நயந்துகாண வல்லீரேல்
ஓடிஓடி மீளுவான் உம்முளே அடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடிகோடி காலமும் குறைவிலாது இருப்பிரே!
155
பிணங்குகின்றது ஏதடா? பிரக்ஞைகெட்ட மூடரே?
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்.
பிணங்கும்ஓர் இருவினைப் பிணக்கறுக்க வல்லீரேல்!
பிணங்கிலாத பெரியஇன்பம் பெற்றிருக்க லாகுமே!
156
மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்?
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,
மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.
157
ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலோ?
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது?
158
அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பது
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டது,
மைக்கிடீர் பிறந்துஇறந்து மாண்டுமாண்டு போவது,
மொக்கிடீர் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே.
159
ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே?
செய்யதெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே.
ஐயன்வந்து மெய்யகம்புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே!
160
நவ்வுமவ்வை யும்கடந்து நாடொணாத சியின்மேல்
வவ்வுயவ்வு ளும்சிறந்த வண்மைஞான போதகம்
ஒவ்வுசத்தி யுள்நிறைந்து உச்சியூ டுருவியே
இவ்வகை அறிந்தபேர்கள் ஈசன்ஆணை ஈசனே.
161
அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ?
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ?
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ?
162
பார்த்ததேது? பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில்அச் சிவமதாம்;
பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையும் இகந்துநீர்
பூத்தபூவுங் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிரே.
163
நெற்றிபற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பத்திஒத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன்
உற்றிருநது பாரடா, உள்ஒளிக்கு மேல்ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அரிந்தவன் அனாதியே.
164
நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம்
ஆரைஉன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்?
வேரைஉன்னி வித்தைஉன்னி வித்திலே முளைத்தெழும்
சீரைஉன்ன வல்லீரேல் சிவபதங்கள் சேரலாம்!
165
நெற்றியில் தயங்குகின்ற நீலமாம் விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியைப்
பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அதானவர்
அத்தலத்தில் இருந்தபேர்கள் அவர்எனக்கு நாதரே.
166
கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது எவ்விடம்?
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்புநின்றது எவ்விடம்?
அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது எவ்விடம்?
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம்என்று கூறுவீர்.
167
கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது தேயுவில்,
உருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்ற தேயுவில்
அருள்தரிக்கு முன்னெலாம் ஆசைநின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்.
168
திருக்கு – சந்தேகம்
தாதரான தாதரும் தலத்தில்உள்ள சைவரும்
கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம்
வீதிபோகும் ஞானியை விரைந்துகல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே.
169
ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும்
பாவியான பூனைவந்து பாலிலே குதித்ததும்
பணிக்கன்வந்து பார்த்ததும் பாரம்இல்லை என்றதும்
இழைஅறுந்து போனதும் என்னமாயம் ஈசனே?
170
சதுரம்நாலு மறையும்எட்டு தானதங்கி மூன்றுமே
எதிரதான வாயுவாறு என்னும்வட்ட மேவியே.
உதிரதான வரைகள்எட்டும் எண்ணும்என் சிரசின்மேல்
கதிரதான காயகத்தில் கலந்தெழுந்த நாதமே.
171
நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின்
மேலுபத்து மாறுடன் மேதிரண்ட தொன்றுமே
கோலிஅஞ் செழுத்துளே குருஇருந்து கூறிடில்
தோலுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோசமே.
172
கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும்
தேசமாய்ப் பிறந்ததும் சிவாயம்அஞ் செழுத்துமே
ஈசனார் அருந்திட அனேகனேக மந்திரம்
ஆசயம் நிறைந்துநின்ற ஐம்பத்தோர் எழுத்துமே.
173
அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும்
பொங்குதா மரையினும் பொருந்துவார் அகத்தினும்
பங்குகொண்ட சோதியும் பரந்தஅஞ்சு எழுத்துமே
சிங்கநாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே.
174
உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்?
உவமையாகி அண்டத்தில் உருவிநின்றது எவ்விடம்?
தவமதான பரமனார் தரித்துநின்றது எவ்விடம்?
தற்பரத்தில் சலம்பிறந்து தங்கிநின்றது எவ்விடம்?
175
ககமாக எருதுமூன்று கன்றைஈன்றது எவ்விடம்?
சொல்லுகீழு லோகம்ஏழும் நின்றவாறது எவ்விடம்?
அவனும்அவளும் ஆடலால் அருஞ்சிவன் பிறந்ததே,
அவள்தான் மேருவும் அவமைதானது எவ்விடம்?
176
உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்கநின்றது எவ்விடம்? கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்கநின்றது எவ்விடம்? மதிமயக்கம் எவ்விடம்?
விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்க வேணுமே.
177
திரும்பியாடு வாசல்எட்டு திறம்உரைத்த வாசல்எட்டு,
மருங்கிலாத கோலம்எட்டு வன்னியாடு வாசல்எட்டு,
துரும்பிலாத கோலம்எட்டு சுற்றிவந்த மருளரே!
அரும்பிலாத பூவும்உண்டு ஐயன்ஆணை உண்மையே!
178
தானிருந்து மூலஅங்கி தணல்எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறைதிறந்து தித்திஒன்று ஒத்ததே
வானிருந்து மதியமூன்று தண்டலம் புகுந்தபின்
ஊனிருந்து அளவுகொண்ட யோகிநல்ல யோகியே!
179
முத்தனாய் நினைந்தபோது முடிந்தஅண்டத் துச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்துஆடல் ஆடினார்,
சித்தரான ஞானிகள், தில்லைஆடல் என்பீர்காள்!
அத்தன்ஆடல் உற்றபோது அடங்கல்ஆடல் உற்றவே.
180 ஒன்றும்ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றும்இன்றும் ஒன்றுமே அனாதியானது ஒன்றுமே
கன்றல்நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
அன்றுதெய்வம் உம்முளே அரிந்ததே சிவாயமே.
181 நட்டதா வரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமானது ஓமகுண்டம் இசைந்தநாலு வேதமும்
கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே.
182 வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டசமீ பத்திலே சங்குசக் கரங்களாய்
விட்டதுஅச்சு வாசலில் கதவினால் அடைத்தபின்
முட்டையில் எழுந்தசிவன் விட்டவாறது எங்ஙனே?
183 கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா?
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா?
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே.
184 நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாகம் மூன்றதாய் குலாவுசெம்பொனி ரண்டதாய்
வில்லின்ஓசை ஒன்றுடன் விளங்கஊத வல்லீரேல்
எல்லைஒத்த சோதியானை எட்டுமாற்ற லாகுமே.
185 மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகள்;
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்;
மனத்தகத்து அழுக்கறுத்த மவினஞான யோகிகள்
பிணத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!
186 உருவும்அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும்அல்ல கந்தம்அல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும்ஆவி தானும்அல்ல
அரியதாக நின்றநேர்மை யாவர்காண வல்லிரே.
187 ஓரெழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே.
188
ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந்து பூதமாய்
ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந் தெழுத்துமாய்
ஆதிஅந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதிஅந்த மூலவிந்து நாதமே சிவாயமே.
189
அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே
சொன்னமிட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம்இட்ட பேரேலாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னம்இட்ட பேரெலாம் கடந்துநின்றல் திண்ணமே!
190
ஓதொணாமல் நின்றநீர் உறக்கம்ஊணும் அற்றநீர்
சாதிபேதம் அற்றநீர் சங்கையின்றி நின்ற நீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்
ஏதும்இன்றி நின்றநீர் இயங்குமாறு எங்ஙனே?
191 பிறந்தபொது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூலி உடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?
192 துருத்தியுண்டு கொல்லனுண்டு சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாம் மனத்தில்உன்னித் திகழஊத வல்லீரேல்,
பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயும்அல்லது இல்லையே.
193 வேடமிட்டு மின்துலக்கி மிக்கதூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள்போலும் பண்ணுறீர்
தேடிவத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசைஎன்ன பூசையே?
194 முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிக்கொண்டு நின்றிடம் கடந்துநோக்க வல்லீரேல்
திட்டும்அற்று சுட்டும்அற்று முடியில்நின்ற நாதனை
எட்டுத்திக்கும் கையினால் இருந்தவீட தாகுமே.
195 அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கிஏறு தாரகை நெருங்கிநின்ற நேர்மையை
உருக்கிஓர் எழுத்துமே ஒப்பிலாத வெளியிலே
இருக்கவல்ல பேரலோ இனிப்பிறப்பது இல்லையே.
196 அருக்கன் – சூரியன், சோமன் – சந்திரன்
மூலவட்டம் மீதிலே முளைத்தஅஞ்சு எழுத்தின்மேல்
கோலவட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்றநீர்
ஓலைவட்ட மன்றுளே நவின்றஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே.
197 சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முத்துசரம் எட்டுளே மூலாதார வறையிலே
அச்சமற்ற சவ்வுளே அரிஅரன் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே.
198 பூவும்நீரும் என்மனம் பொருந்துகோயில் என்உளம்
ஆவியோடி லிங்கமாய் அகண்டம்எங்கும் ஆகிலும்
மேவுகின்ற ஐவரும் விளங்குதூப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்திசந்தி இல்லையே.
199 உருக்கலந்த பின்னலோ உன்னைநான் அறிந்தது
இருக்கில்என், மறைக்கில்என் நினைந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ?
திருக்கலந்து போதலோ தெளிந்ததே சிவாயமே.
200 சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துதேவ ராகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொண்ட வான்பொருள்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளும் உண்மையே.
201 பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல்
இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தைமொண்டு அமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடம் சிவத்தைமொண்டு உகந்தமர்ந்து இருப்பதே.
202 பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப்
பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா;
திட்டவும் படாதடா, சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.
203 அல்லிறந்து பகலிறந்து அகப்பிரமம் இறந்துபோய்
அண்டரண்ட மும்கடந்த அனேகனேக ரூபமாய்ச்
சொல்லிறந்த மனமிறந்த சுகசொரூப உண்மையைச்
சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை ஆனதே.
230
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதன்உண்டு நம்முளே
எல்லைமஞ் சனங்கள்தேடி ஏகபூசை பண்ணினால்
தில்லைமேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே.
231
உயிர்அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன்
உயிர்அகாரம் ஆயிடும் உடல்உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கினேன்.
232
அண்டம்ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே
பண்டைமால், அயனுடன் பரந்துநின்று உழலவே
எண்திசை கடந்துநின்ற இருண்டசத்தி உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே.
233
உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசைஒத்த மூடரே,
கரியமாலம் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.
234
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றைநெஞ்சில் உண்ணுமே.
235
நாலதான போனியும் நவின்றவிந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.
236
அருவமாய் இருந்தபோது அன்னைஅங்கு அறிந்திலை
உருவமாய் இருந்தபோது உன்னைநான் அறிந்தனன்
குருவினான் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே.
237
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் கொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே.
238
கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே இருப்பனே மேவிஅங்கு நிற்பனே
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே.
239
ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ?
ஓடிஇட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து நிற்குமே.
240
எள்இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம்
அள்ளிஉண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வத்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால்
மெள்ளவந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே.
241
ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே.
242
மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லீரேல்
குருக்கொடுத்த தொண்டரும் முகனொடித்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே.
243
அன்னைகர்ப்ப அறைஅதற்குள் அங்கியின்பிர காசமாய்
அந்தறைக்குள் வந்திருந்து அரியவந்து ரூபமாய்
தன்னைஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே.
244
உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ
உள்ளமீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியைப்
பொன்னவென்ற பேரொளிப் பொருவில்லாத ஈசனே
பொன்னடிப் பிறப்பில்லாமை என்றுநல்க வேணுமே.
245
பிடித்ததண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோலம் அத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ,
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லீரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே.
246
சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ
சித்திநீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்துநீ
முத்திநீ முதலும்நீ மூவரான தேவர்நீ
அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
247
சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே
நிட்டைஏது ஞானமேது? நீரிருந்த அட்சரம்
பட்டைஏது? சொல்லீரே பாதகக் கபடரே?
248
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும்
தண்மையான காயமே தரித்துஉருவம் ஆனதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே.
249
வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே.
250
காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே.
————————————————————————————————————–
சிவவாக்கியருடன் 60 வினாடி நேர்காணல்
(கேள்விகள்: எனது கற்பனை, பதில்கள்: சித்தர் பாடல்களிலிருந்து)
சாமி, குருட்டுத் தனமாக ,அர்த்தம் புரியாமல் செய்யும் சடங்குகளைச் சாடுகிறீர்களாமே?
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
அம்மாடியோவ், பாட்டில் அனல் பறக்குதே! நீங்கள் எல்லோரும் எட்டு வகை சித்துக்களைச் செய்வீர்களாமே? இதனால் என்ன பயன் ?
யோகசாலை கட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப் பை சிக்கிப் பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே
அட, எட்டு சித்தி கிடைத்து அற்புதம் செய்தாலும் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு. அப்ப, புண்ய நதிகளில் குளித்தால் என்ன?
எத்திசை எங்கும் எங்குமோடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலை முழுக சுத்த ஞானி ஆவரோ?
அது சரி, இப்படி எதை எடுத்தாலும் எதிர்த்துப் பேசுவதை எங்கள் ஊர் எதிக் கட்சித் தலைவர்களும் செய்ய முடியும். ஏதேனும் செய்ய வேண்டியதை சொல்லுங்களேன்.
தீர்த்தலிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே
உள்ளில் நின்ற சீவனைத் தெளியுமே
உம்முளே தெளிந்து காண வல்லீரேல்
தான் அதாய்ச் சிறந்ததே சிவாயமே
நல்ல யோசனை. சித்தர்கள் எல்லோருக்கும் ஜாதியே கிடையாதா?
சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்
பூத வாசல் ஒன்றலோ, பூத ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி , காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?
யார் போட்டாலும் தங்க நகைகள் மாறாதாக்கும் சித்தர்கள் சாகாமல் இருப்பார்களா?
கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே
எங்களை மாதிரித்தான் நீங்களும். அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.அது சரியா?
நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்
ஏறில் ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே
நீரும் உப்பும் போல இருவரும் ஒருவரே, சரி, கடவுளை நாடுவோர் கல்யாணம் கட்டி குடும்பம் நடத்தலாமா?
மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிற்ப்பறுத்திருப்பரே
ஆக அவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருப்பார்கள். தெய்வத் தமிழில் நிறைய ஆகமங்கள் துதிகள் இருக்கின்றனவே. எதைப் படிப்பது?
“நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம்
நூறு கோடி நாள் இருந்தும் ஓதினாலும் அது என்ன பயன்?”
“சாம நாலு வேதமும் சகல சாஸ்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்”
நீங்கள் 600 பாடல்களில் சொன்ன கருத்துக்கள்: மனதில் கடவுள் இருக்கிறான். சடங்குகளோ கோவிலோ தேவை இல்லை. தூய்மையாக இருந்தால் சாதி பேதம் இன்றி எல்லோரும் இறைவனை அடையலாம். நல்ல கருத்துக்கள் தாம், நன்றி.
Leave a Reply
You must be logged in to post a comment.