மார்ச் 19, 2024 சமபகலிரவு நாள், வேனில் பருவத்தின் தொடக்கம்!

பூமியின் வட கோளத்தில் இருப்பவர்களுக்கு  ஓர் ஆண்டில் நான்கு பருவங்கள் ஏற்படுகின்றன என்பது தெரிந்ததே. அவையாவன  வேனில்,   கோடை,   இலையுதிர், பனிக்  காலங்கள் ஆகும். புவியின் நில நடுக்கோட்டில் வாழ்ந்த பண்டைய தமிழர்கள் ஓர் ஆண்டில் ஒவ்வொன்றும் இரண்டு தமிழ் மாதங்களைக் கொண்ட ஆறு பருவங்களாகக் கணித்தனர்.  முன்பனிக்காலம், (மார்கழி, தை)   பின்பனிக்காலம் (மாசி,பங்குனி)  இளவேனில் (சித்திரை ,வைகாசி)  முதுவேனில் கார்காலம் (ஆனி, ஆடி)  கார்காலம் (ஆவணி, புரட்டாதி), கூதிர் (ஐப்பசி, கார்த்திகை)  என்பனவே அந்த ஆறு பருவங்களாகும்.

புவி ஞாயிறைச் சுற்றும் போது அதன் அச்சு 23.45°  பாகை ஒருக்களித்து இருப்பதே இந்த பருவங்கள் ஏற்படுவதற்குக் காரணமாகும். புவி ஞாயிறைச் சுற்றிவரும் போது அதன்  செங்குத்தான அச்சு ஞாயிறை நோக்கியே இருக்கும். வடதுருவம் ஞாயிறை நோக்கி இருக்கும் போது கோடை காலம் (மார்ச் 20  தொடக்கம் செப்தெம்பர் 22 வரை) வட கோளத்திலும்  தென் கோளத்தில்  பனிக்காலமும் (டிசெம்பர் 21 தொடக்கம் யூன் 21 வரை)   நிலவும். ஆறு மாதங்களின் பின்னர்  பருவங்கள்  எதிர்மாறாக மாறிவிடும். ஓர் ஆண்டின் எந்த நேரத்திலும் வட கோளத்திலும்  தென்கோளத்திலும் எதிர் எதிரான பருவங்கள் காணப்படும்.

மார்ச் 20 இல்  ஞாயிறு தனது சுற்றுப் பாதையில் தெற்கில் இருந்து வடக்காக  பயணிக்கும் போது விண் நடுக்கோட்டை (celestial equator)  வெட்டுகிறது. இந்த வெட்டுச் சந்திதான் (intersection)  சமயிரவு (equinox) என்று அழைக்கப்படுகிறது.  விண் நடுகோடு என்பது புவியின் நடுக்கோட்டின் நீட்டம் (extention)  ஆகும். இவை கற்பனைக் கோடுகள்.  வரைபடம் வரைவோர் புவியில் உள்ள இடங்களைக் கண்டறிய நிலநடுக்கோடு (equator)   நிரைகோடு (longitude)   குறுக்குக் கோடு (latitude) போன்ற கற்பனைக் கோடுகளைப் பயன்படுத்துகிறார்கள்.  நிரைகோடு வடக்குத்  தெற்காகவும் குறுக்குக் கோடு கிழக்கு மேற்காகவும் ஓடுகின்றன. 

இதே போல் செப்தெம்பர் 22 இல் ஞாயிறு மீண்டும் விண் நிலநடுக்கோட்டை  வடக்கில் இருந்து தெற்காகக் கடக்கிறது. இதனை வட கோளத்தில் இலையுதிர்கால சமயிரவு (autumn equinox)  என அழைக்கிறார்கள்.   அதாவது வேனில் காலம், கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் தொடங்குகிறது.

வசதி கருதி புவி 360°யாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குறுக்குக் கோடு நிலநடுக்கோட்டில்  0° இருந்து கணக்கிடப்படுகிறது.  நிரைகோடு இலண்டன் கீறீன்விச் (0°)  என்ற இடத்தில் இருந்து கிழக்கு – மேற்காகக் கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக இலங்கை நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் 7° பாகையும் குறுக்குக் கோட்டில்  நிரைகோடு 81° கிழக்கிலும் உள்ளது,

Equinox and solstice illustration.

ரொறன்ரோவில் மார்ச் 19 அன்று  ஞாயிறு உதிக்கும் நேரம் முப 7.21. அது   படும் நேரம் பிப 7.29 என்று போட்டிருப்பதைப் பார்க்கலாம். அதாவது பகல் 12 மணித்தியாலங்கள் இரவு 12 மணித்தியாலங்கள். 

ரொறன்ரோ, ஒன்ரேறிய, கனடாவில்: செவ்வாய், மார்ச் 19, 2024 இரவு 11.06 மணிக்கு   வேனில் சமபகலிரவு (spring equinox) (சில ஆண்டுகளில் சமயிரவு  20, 21 ஆம் நாள்களிலும் வரலாம்) ஏற்படுகிறது. இது புதன்கிழமை, மார்ச் 20, 2024 அன்று 03:06 UTCக்கு ஒத்திருக்கிறது.  இந்த நாளில் உலகனைத்தும் பகல் 12 மணித்தியாலம்,  இரவு 12  மணித்தியாலம் ஆக இருக்கும். சிலசமயம்  இரண்டொரு நொடி வேறுபாடு காணப்படலாம். முன்னைய GMT (Greenwich Mean Time) நேரத்தை இப்போது  UTC (Cordinated Universal Time) என அழைக்கிறார்கள். ரொறன்ரோவில் செவ்வாய் மாலை 10.30 மணி என்றால் UTC நேரம் புதன்கிழமை  காலை 2.30  மணி ஆகும். அதாவது நான்கு மணித்தியால வேறுபாடு ஆகும்.

March equinox illustration

ஞாயிறைப் புவி சுற்றிவரும்போது அதன் அச்சு எப்போதும் அதன் பாதைக்கு  ஒரு  பக்கமாக 23.45°  ஒருக்களித்து இருக்கும் எனrச் சொன்னோம்.    இதனால் ஞாயிற்றின் கோணம் ஆண்டு முழுதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறிக் கொண்டே இருக்கும் (The earth’s axis always remains pointing in the same direction as it revolves around the sun. As a result, the solar angle varies at a given place through out the year).

யூன் 22 இல்  வட கோளத்தில் புவியின் அச்சு ஞாயிறை நோக்கி இருக்கும். அப்போது ஞாயிறு 23½° (23°27′) வடக்கே குறுக்குக்கோட்டுக்கு சரி மேலே உச்சியில் காணப்படும். இந்த நாள் கோடை திருப்புமுகம் ( (summer solstice) என அழைகப்படும். இதன் போது கடகக் கோட்டுக்கு (tropic of cancer) வடக்கே உள்ள பகுதிகளில் ஆண்டின் மிக நீண்ட பகல் காணப்படும். வடதுருவத்தில் 24 மணித்தியாலமும் பகலாக இருக்கும்.

இதற்கு எதிர்மாறாகத் தென் கோளத்தில் யூன் 21 இல்  பனி திருப்புமுகமாக (winter solstice) இருக்கும். மகரக் கோட்டுக்கு (tropic of capricorn) தெற்கே உள்ள பகுதிகளில் ஆண்டின் மிக நீண்ட இரவு காணப்படும். தென் துருவத்தில் 24 மணித்தியாலமும் இரவாக இருக்கும்.

இங்கே பருவங்களையும் பருவமாற்றங்களையும் குறிப்பிடும் போது  பொதுவாக வட கோளத்தில் இடம்பெறும் மாற்றங்களே குறிக்கப்படுகின்றன.

வெப்பமண்டல ஆண்டு (Tropical Year) என்பது (இது ஞாயிறு ஆண்டு (solar year) என்றும் அழைக்கப்படும்) புவி ஞாயிறைச் சுற்றி வர (அல்லது புவியில் இருந்து பார்க்கும் போது ஞாயிறு நட்சத்திர மண்டலங்களைச் சுற்றி வருவது போன்ற  தோற்ற அசைவு (apparent motion) 365 நாள்கள் 5 மணி, 48 மணித்துளி,  46 நொடி அல்லது 365.242189 நாள்கள் கொண்ட காலமாகும். அதாவது வேனில்   சமயிரவு   நாள் (மார்ச்சு 20) தொடங்கி அடுத்த வேனில் சமயிரவு வரையான காலமாகும்.

சமயிரவு  நாள் தவிர்ந்த வேறு நாள்களில் புவியின் அச்சு ஒன்றில் ஞாயிறை நோக்கி இருக்கும் அல்லது பின்னோக்கி இருக்கும்.  ஆனால் சமயிரவு நாளன்று புவியின் அச்சு ஞாயிறை நோக்கியோ அல்லது பின்னோக்கியோ இல்லாது சம  நோக்கில்  இருக்கும். அதாவது புவியின் அச்சு ஞாயிறுக்கு  செங்குத்தாக (perpendicular ) இருக்கும்.

கீழ்க் கண்ட அட்டவணை புவி – ஞாயிறு மற்றும் பருவங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பைக் காட்டுகிறது.

        புவி – ஞாயிறு தொடர்வு மற்றும் பருவங்கள்

          Earth – Sun Relations and Seasons

 மார்ச்சு
வேனில் சமயிரவு
  (Spring Equinox)
டிசெம்பர்
பனி திருப்புமுகம்;
(Winter Solstice)
செம்தெம்பர்
இலையுதிர் சமயிரவு (Autumn Equinox)
யூன்;
கோடை திருப்புமுகம்
(Summer Solstice)
நாள்மார்ச்சு 20டிசெம்பர் 22செப்தெம்பர் 23யூன் 21
ஞாயிறின் நிலை23 ½ ° தெற்கு180°23 ½ ° வடக்கு
தொடுகோடு
(Tangent)
கதிர்கள்;
  வட – தென் துருவங்கள்  வட – தென் துருவ வட்டங்கள்வட – தென் துருவங்கள்வட – தென் துருவ வட்டங்கள் 
ஒரு நாளின் நீளம்எங்கும் 12 மணித்தியாலப் பகல்வட துருவத்தில் 24 மணித்தியால இருள் தென்துருவத்தில் 24 மணித்தியால வெளிச்சம் நடுவட்டக்  கோட்டில் 12 மணித்தியால வெளிச்சம்எங்கும் 12 மணித்தியாலப் பகல்தென் துருவத்தில் 24 மணித்தியால இருள்  வட துருவத்தில் 24 மணித்தியால வெளிச்சம்  நடுவட்டக்கோட்டில் 12 மணித்தியால வெளிச்சம்

இந்த சமயிரவு புள்ளிகள் விண் கோளத்தில் (celestial sphere) ஒரே இடத்தில் நிலைத்து நிற்பவை அல்ல. அவை மேற்கு நோக்கி வான்வெளியில்  ஞாயிறு செல்லுமாப் போல் தோன்றும் 23.45° பாகை கோணத்தில் சரிந்திருக்கும் வட்டப்பாதையில் (கதிர் வீதி)  நகர்ந்தவண்ணம் இருக்கின்றன. இப்படி நகரும் போது அவை நட்சத்திர மண்டலங்கள் எல்லாவற்றுக்கும் ஊடாக ஒரு கூம்பு வடிவத்தில் (conical shape) நகர்கின்றன.  இப்படி மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வர 25,800 ஆண்டுகள் எடுக்கின்றன.  இந்த நகர்வுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருந்தாலும் புவி மீது ஞாயிறு மற்றும் நிலா  இரண்டும் செலுத்தும்   ஈர்ப்புவிசை முக்கிய காரணி ஆகும். புவி ஒரு வட்டவடிவமாக இல்லாமல் நில நடுக்கோட்டுப் பகுதியில் சற்றுப் புடைத்திருப்பது இந்த நகர்வுக்கு இன்னொரு காரணமாகும்.

இதனை வேறு விதமாகவும் விளக்கலாம். ஞாயிறை  புவி சுத்திவர எடுக்கும் காலம்  ஞாயிறு ஆண்டைவிட 20 மணித்துளிகள் அதிகம்.  இரண்டு சமயிரவுகள் அல்லது இரண்டு திருப்புமுகங்கள்  இடையில்  இடம்பெறும் காலம் 365.24 நாள்கள். இதனால் சமயிரவுகள் அல்லது திருப்புமுகங்கள் பின்னோக்கி நகருகின்றன.

புவியின் ஆரம் (radius) 6378.137 கிமீ (3963.19 கல்) என்றால் அதன் சுற்றளவு (circumference) 40,075 கிமீ (24.901.5 கல்) தொலைவு ஆகும். ஆனால், வடதுருவம் – தென்துருவம் இடையிலான தொலைவு 40,000 கிமீ மட்டுமே. இந்த வேறுபாட்டுக்குக் காரணம் கிழக்கு மேற்காக உள்ள புவியின் நிலநடுக்கோட்டை  அண்டிய பகுதி கிழக்கு மேற்கு ஆக உள்ள நிரைகோடு  பகுதியைவிட சற்றுப் புடைத்துக் (bulge) காணப்படுவதாகும்.

இந்த புடைப்புக் காரணமாக புவியின் அச்சு ஞாயிறு நிலா இரண்டின் எதிர் எதிரான ஈர்ப்பினால் சற்றுத் தளம்புகிறது (wobble) – இதனால் புவியின் சுற்று வேகம் தடைப்படுகிறது.

புவியின் வட துருவம் (North Pole) அரைவிண்கோளத்தில் (Celestial Hemisphere) ஒரு கற்பனை வட்டத்தை வலம் இடமாக (counter – clockwise) வரைகிறது. மேலே கூறியது போல் இந்த வட்டத்தைப் புவி சுற்றிவர 25,800 ஆண்டுகாலம் எடுக்கிறது. இதனை  அயன முந்து நிகழ்வு  அல்லது பின்னேகல் (Precession of the Equinoxes)  என  அழைக்கிறார்கள்.  

ஒவ்வொரு ஆண்டும் ஞாயிறு நட்சத்திரங்களின் பின்னணியில் தோராயமாக 50.24 ஆர்க் நொடி பின்தள்ளப்படுகிறது.  ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு பாகை பின்தள்ளப்படுகிறது.  ஒவ்வொரு 2,000 ஆண்டுக்கு ஒருமுறை ஞாயிறு ஒரு உடுமண்டலத்தில் இருந்து அடுத்த உடுமண்டலத்துக்கு (30° பாகை) நகருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓகஸ்ட் முதலாம் நாள் ஞாயிறு சமயிரவு சிங்க உடுமண்டலத்தில் (Constellation of Leo)இடம் பெற்றிருந்திருக்கும். ஆனால் இன்று பின்னேகல் காரணமாக ஞாயிறு சிங்க உடுமண்டலத்தில்  இல்லை.  அது கடக உடுமண்டலத்தில் (Constellation of Cancer ) இருக்கிறது.

இந்த பின்னேகலின் விளைவாக பருவ காலங்களின் தொடக்கம் மாறுகிறது. இப்போது வேனில் காலம் மார்ச்சு 20 இல் தொடங்குகிறது. இன்னும் 2160 ஆண்டுகள் போனால் வேனில் காலம் பெப்ரவரி 20 இல் தொடங்கிவிடும். அப்படி நேரும் போது ஏனைய பருவங்களின் (கோடை, இலையுதிர், பனி) ) தொடக்கம் ஒரு மாதத்தால்  பிந்திவிடும். சித்திரை 14 இல் பிறக்கும்  புத்தாண்டு வேனில் காலத்தின் தொடக்கம் எனப் பஞ்சாங்கம் சொல்கிறது. ஆனால் அது உண்மையல்ல. மேலே கூறியவாறு வேனில் காலம் மார்ச்சு 19  (இந்த ஆண்டு மிகு ஆண்டு (Leap Year)  அன்று தொடங்குகிறது.

ஒரு காலத்தில் (கிபி 285) வேனில் சமயிரவு அன்று ஞாயிறு மேட நட்சத்திரமண்டலத்தில் (இராசி)  காணப்பட்டது. இப்போது பின்னேகல் காரணமாக சமயிரவு அன்று ஞாயிறு, மீன நட்சத்திர மண்டலத்தில் (இராசி)  காணப்படுகிறது. 

இந்த பின்னேகலால்  நட்சத்திர  ஆண்டை அடிப்படையாக  வைத்து கணிக்கப்படும் காலக் கணிப்புக்கும்  ஞாயிறு  – புவி   ஆண்டை  அடிப்படையாக வைத்து கணிக்கப்படும் காலக் கணிப்புக்கும் 24.0° பாகை வேறுபாடு காணப்படுகிறது. இதனை மேற்கு நாட்டவர் பின்னேகல் என்றும் இந்தியர் அயனாம்சம் என்றும் அழைக்கிறார்கள்.

தற்போது புவியின் துருவம் (உண்மையில் விண் துருவம் – Celestial Pole) வட கோளத்தில் உள்ள வட மீன் அல்லது துருவ நட்சத்திரத்தை (Polarisis or North Star)  நோக்கியுள்ளது. இந்தத் துருவ நட்சத்திரமே பண்டைக் காலத்தில் மாலுமிகள் கடலில் திசைகளை அறிவதற்கு வானில் ஒரு அடையாளமாக வைத்திருந்தனர்.

கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வட துருவம் Thuban  என்ற நட்சத்திரத்தை நோக்கி இருந்தது. கிபி 15,000 ஆண்டளவில் Vega  என்ற நட்சத்திரமே வட மீனாக அல்லது துருவ நட்சத்திரமாக இருக்கும்.

நேரம் மற்றும் வெளி (Time and Space)  இரண்டுமே  நேற்று, இன்று, நாளை என முக்காலத்திலும் மனிதர்களுக்கு புதிராக இருக்கின்றன.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply