தமிழ்மொழி  தமிழ் இலக்கணம் – எழுத்து

தமிழ் இலக்கணம் – எழுத்து

முதலெழுத்துகள்

தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.”எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” – தொல்காப்பியம் “உயிரும் உடம்புமாம் முப்பது முதலே” – நன்னூல்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற பன்னிரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு உயிர் போன்ற எழுத்துகள் ஆகும்.

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற பதினெட்டு எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் மொழிக்கு மெய் (உடல்) போன்ற எழுத்துகள் ஆகும்.

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், பதினெட்டு உடல் (மெய்) எழுத்துகளும் சேர்ந்து மொத்தம் 30 எழுத்துகளும் தமிழ் மொழியின் முதல் எழுத்துகள் எனப்படுகின்றன.

உயிரெழுத்துகள்

உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.

உயிரெழுத்துகளில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒஎன்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் அல்லது குற்றெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

மெய்யெழுத்துகள்

க் தொடக்கம் ன் வரையுள்ள (க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ) 18 எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் எனப்படுகின்றன. இவை வல்லினம்மெல்லினம்இடையினம் என மூன்று பிரிவுகளாக உள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துக்கள் வல்லினத்தையும், மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.

க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துக்களும் வல்லின எழுத்துக்களாகும். இவை வலிய ஓசையுடையவை. இவ்வெழுத்துக்கள் வலி எழுத்துக்கள், வன்கண எழுத்துகள் எனவும் கூறப்படும்.
இவ்வெழுத்துகளைச் சொல்லும் பொழுது வயிற்றுள் இருந்து வலிமையாக காற்று மேலே வரும். எனவே இவை வல்லின எழுத்துகள் ஆகும். கசடதபற என இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ளலாம்.

ங், ஞ், ண், ந், ம், ன்  எனும் ஆறு எழுத்துக்களும் மெல்லின எழுத்துக்களாகும். இவை மென்மையான ஓசையுடையவை. இவ்வெழுத்துக்கள் மெலி எழுத்துக்கள், மென்கண எழுத்துகள் எனவும் கூறப்படும்.
இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையான முயற்சி போதும். எனவே இந்த மென்மையான எழுத்துகள் மெல்லின எழுத்துகள் எனப்படுகின்றன. ஙஞணநமன என இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ளலாம்.

ய், ர், ல், வ், ழ், ள்  எனும் ஆறு எழுத்துக்களும் இடையின எழுத்துக்களாகும். இவை இடைப்பட்ட ஓசையுடையவை. இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையும், வன்மையும் இல்லாமல் இடைப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது. எனவே இவை இடையின எழுத்துகள் எனப்படுகின்றன. யரலவழள என இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ளலாம்.

மெய் எழுத்துகள் உயிர்க்குறில் எழுத்துகளைவிடக் குறைவான நேரத்தில் ஒலிக்கப்படுகின்றன.
இவற்றின் (மெய் எழுத்து) ஒலிப்புநேரம் 1/2 மாத்திரை ஆகும். மாத்திரை என்றால் ஒரு கை நொடி அளவு (அதாவது கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டும் அளவு) அல்லது கண்ணிமை அளவு எனக் கணக்கிடப்படுகின்றது.

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. – தொல்காப்பியம் – எழுத்ததிகாரம்

குறில் எழுத்துகள்     – 1 மாத்திரை  (அ, க, ச, சி, து)
நெடில் எழுத்துகள்     – 2 மாத்திரை (ஆ, கா, சா, சீ, தூ)
மெய் எழுத்துகள்     – 1/2 மாத்திரை  (க், ங், ச், ஞ், ன்)
ஆய்த எழுத்து          – 1/2 மாத்திரை (ஃ)

 சார்பெழுத்துகள்

மொழியை எழுதப் பயன்படுவது எழுத்து. இந்த எழுத்துக்களால் எழுதப்பட்ட மொழியில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் மொழியில் சார்ந்திருக்கும் இடத்தால் ஒலிக்கும் மாத்திரை குன்றும். செய்யுளில் மாத்திரை குன்றும் இடங்களில் சில எழுத்துக்கள் கூட்டியும் எழுதப்படும்.

இப்படிச் சார்பால் தன் இயல்புத்தன்மை மாறும் எழுத்துக்களை முன்னோர் சார்பெழுத்து என்றனர். இப்படிச் சார்பெழுத்து என்னும் பாகுபாட்டைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுவிட்டதால் நன்னூல் சார்பல்லா எழுத்துக்களை முதலெழுத்து எனக் குறிப்பிட்டுத் தெளிவுபடுத்தியது. நன்னூல் சார்பழுத்துக்கள் 10 வகை எனக் காட்டுகிறது.

(1) உயிர்மெய்
(2) ஆய்தம்
(3) உயிரளபெடை
(4) ஒற்றளபெடை
(5) குற்றியலுகரம்
(6) குற்றியலிகரம்
(7) ஐகாரக் குறுக்கம்
(8) ஒளகாரக் குறுக்கம்
(9) மகரக் குறுக்கம்
(10) ஆய்தக் குறுக்கம்

உயிர்மெய்

மெய்யெழுத்துகளுடன் உயிர் எழுத்துகள் சேர்வதால் உண்டாகும் எழுத்துகளே உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய் எழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை குறில்,நெடில் ஆகியனவாகும்.

18 (மெய் எழுத்துகள் ) x 12 (உயிர் எழுத்துகள் ) = 216 (உயிர்மெய் எழுத்துகள் ) 

(எ.கா.) : க்+அ=க

ஆய்தம்

ஃ என்ற எழுத்து ஆய்தம் எனப்படுகிறது. இதனை அஃகு என்று கூறுவர். ஃ என்ற இந்த எழுத்து ‘அ’ என்ற உயிர் எழுத்தையும் ‘கு’ என்ற உயிர்மெய் எழுத்தையும் சேர்த்தே ஒலிக்கப்படும்.     உயிர் எழுத்தை முதலாகவும், வல்லின உயிர்மெய் எழுத்தை இறுதியாகவும் கொண்டு இது இடையில் வரும். தனித்து வராது. எனவே இது சார்பெழுத்து எனப்படுகிறது.

(எ.கா.) அஃது, எஃது, எஃகு

பழங்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுள்களாகவே இருந்தன. செய்யுள், ஓசையை அடிப்படையாகக் கொண்டது. குறள் வெண்பா முதல் பல வகையான செய்யுள் வடிவங்கள் இருந்தன. செய்யுளில் ஓசைகுறையும் இடங்களில் ஓசையை நிறைவு செய்வதற்காக எழுத்துகள் நீண்டு ஒலிக்கும். இவ்வாறு நீண்டு ஒலிப்பதை, அளபெடுத்தல் என்று கூறுவர். அளபெடை இரண்டு வகைப்படும். அவை, உயிரளபெடை, ஒற்றளபெடை

 உயிரளபெடை

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள) ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர். நெடில்எழுத்து இரண்டு மாத்திரை. அளபெடுக்கும்போது அதற்கு இனமான குறில் எழுத்தையும் எழுதுவதால், குறிலுக்கு உரிய ஒரு மாத்திரையும் சேர்த்து உயிரளபெடை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்கும்.

இன எழுத்துகள் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்பனவாகும், ஐகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் இணையான குறில்இல்லை என்பதால், முறையே இகரம், உகரம் ஆகியவை அடையாளமாக எழுதப்படும்.

(எ.கா.) குழூஉக்குறி, தொகைஇ, கெடுப்பதூஉம், தொழாஅள்

” கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் “

ஒற்றளபெடை

ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும். செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.

(எ.கா.) கலங்ங்கு நெஞ்சம்,  கண்ண் கருவிளை

ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரை அளவினைவிட அதிகமாக ஒலிப்பதை அளபெடை     என்று கண்டோம். அவ்வாறே ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரைஅளவினைவிடக் குறைவாக ஒலிப்பதைக் குறுக்கம் என்பர்.

உயிர் எழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து என்னும் மூவகை எழுத்துகளும்
குறுகி ஒலிப்பது உண்டு. எனவே குறுக்கம் என்னும் சார்பெழுத்தை ஆறு வகையாக
வழங்குவர். அவையாவன:

(1) குற்றியலுகரம்
(2) குற்றியலிகரம்
(3) ஐகாரக் குறுக்கம்
(4) ஒளகாரக் குறுக்கம்
(5) மகரக் குறுக்கம்
(6) ஆய்தக் குறுக்கம்

குற்றியலுகரம்

உகரம் ஒரு மாத்திரை உடையது. இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து (குறுகி) ஒலிக்கிற இடங்களும் உண்டு. அப்போது அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) என்று அழைக்கப்படும்.

வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.
இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும்.

(எ.கா.) : பாக்கு, பேசு, நாடு, காது, அம்பு, ஆறு.

தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது. எடுத்துக்காட்டு: அது, பசு, வடு, அறு முதலியவை.

குற்றியலிகரம்

உகரம் சில இடங்களில் குறுகி, குற்றியலுகரம் ஆவது போலவே, இகரமும் சில இடங்களில் குறுகும். இவ்வாறு இகரம் குறுகி வருவதைக் குற்றியலிகரம் என்று கூறுவர். குற்றியலிகரம் இரண்டு வகையாக வரும்.

தனிமொழிக் குற்றியலிகரம்: மியா என்ற அசைச்சொல்லில் ம் என்ற எழுத்தோடு சேர்ந்த இகரம் குறுகும். இதில் ம் என்ற எழுத்திற்குப் பின் யகரம் வருவதால் குறைந்து ஒலிக்கிறது. இதுவே தனிமொழிக் குற்றியலிகரம் ஆகும்.

(எ.கா.) :  கேண்மியா, சென்மியா

புணர்மொழிக் குற்றியலிகரம்:  இரண்டு சொற்கள் சேரும்போது முதலில் உள்ள சொல்லின் இறுதியில் குற்றியலுகர எழுத்து வந்து, இரண்டாம் சொல் ‘ய’ என்ற எழுத்தில் தொடங்கும்போது, குற்றியலுகரத்தில் உள்ள உகரமானது, இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம், உகரம் குறைந்து ஒலிப்பது போலவே அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.

(எ.கா.) : நாடு(ட்+உ) + யாது     =     நாடியாது(ட்+இ)
களிற்று(ற்+உ) + யானை     =     களிற்றியானை(ற்+இ)

ஐகாரக் குறுக்கம்

ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது. ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையாகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்.

(எ.கா.) :  ஐந்து, வளையல், மலை

ஐ என்னும் எழுத்துக்கு உரிய அளவு இரண்டு மாத்திரை ஆகும். ஆனால், இம் மூன்று எடுத்துக்காட்டுகளிலும் இடம்பெற்ற ஐ என்னும் உயிர்நெடில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவினைவிடக் குறைந்து ஒலிக்கிறது. அதுவே ஐகாரக் குறுக்கம் ஆகும்.

ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.(எ.கா.) : ஔவை

 மகரக் குறுக்கம்

“ம்” என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம்எனப்படும். சொல்லின் இறுதியில் அமைந்த    “ம்”     என்னும் மெய்யெழுத்து     வருமொழியில் “வ” என்னும் எழுத்து வந்ததால் தனக்குரிய அரை மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும்.(எ.கா.) : வரும் வசந்தம்

 ஆய்தக் குறுக்கம்

புணர்ச்சியில் சொல்லின் இடையில் புதியதாகத் தோன்றும் ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவினைவிடக் குறைந்து கால் மாத்திரையாக ஒலிப்பது.(எ.கா.) : முள் + தீது = முஃடீது              அல் + திணை = அஃறிணை

தொகுப்புத் துணை மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/courses/hg100/hg113/html/hg113ind.htm
  2. http://www.tamilvu.org/courses/degree/c021/c0211/html/c0211403.htm
  3. http://ta.wikipedia.org/wiki/
  4. அடிப்படைத் தமிழ் இலக்கணம் – எம்.ஏ. நுஃமான் –


தமிழ்மொழி

தமிழ் இலக்கணம் – எழுத்து

உயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை

logo-tamil-wisdom-2024

Previous Lesson

உயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை

தமிழ்மொழி  உயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை

தமிழில் உள்ள எழுத்துகளை எவ்வாறு ஒலிக்க வேண்டும் அல்லது உச்சரிக்க வேண்டும் என்பது பற்றித் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் என்ற தனி இயல் ஒன்றை ஆக்கியுள்ளார். அவர் குறிப்பிடும் நா, இதழ் ஆகிய இரண்டும் இயங்கும் உறுப்புகள். இவை ஒலிப்பான்கள் ஆகும். இவ்வுறுப்புகள் தொடுகின்ற பல், அண்ணம் ஆகிய இரண்டும் இயங்கா உறுப்புகள். இவை ஒலிப்பு முனைகள் ஆகும். அங்காத்தல் (வாயைத் திறத்தல்), உதடு குவிதல், நாக்கு ஒற்றல், நாக்கு வருடல், உதடு இயைதல் முதலியன அவர் கூறும் ஒலிப்பு முறைகள் ஆகும்.

  • அ, ஆ       எனும் முதல் இரு எழுத்துக்களும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு, வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றன.
  •  இ, ஈ, எ, ஏ, ஐ       ஆகிய ஐந்து உயிர் எழுத்துக்களும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய், அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் (பொருந்துதல்) செயலால் எழுத்தாகி ஒலிக்கின்றன.
  • உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்துக்களும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன !

நாக்கானது வாயினுள் மேற் சென்றும், தாழ்ந்தும், முன்னும், பின்னும் நகர்ந்தும் மிடற்றிலிருந்து வரும் காற்றினை ஒரு குறிப்பிட்ட ஒலியாக வெளிக்கொண்டு வருகிறது. நாக்கின் அமைவைப் பொறுத்தும் இதழ்கள் குவிவதைப் பொறுத்தும் உயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:

  1. இதழ் குவிந்த உயிர்– இதழ்கள் (உதடுகள்) இரண்டையும் குவித்து உச்சரிப்பதால் ஏற்படும் ஒலிப்பு.
    உ – ஊ – ஒ – ஓ – ஔ
  2. இதழ் குவியா உயிர் – இதழ்கள் (உதடுகள்) இரண்டையும் குவியாமல் உச்சரிப்பதால் ஏற்படும் ஒலிப்பு.அ – ஆ – இ – ஈ – எ – ஏ – ஐ
  3. முன் உயிர் – ஒலிப்பின்போது நாக்கு கூடிய அளவுக்கு முன் நிலையிலும் தொடுகையில் இல்லாமல் (தடை ஏற்படுத்தாமல்) விறைப்பான நிலையில் இருக்கும்போதும் பெறப்படும் ஒலி. இச்சமயத்தில் நாக்கானது மேல் எழுந்து முன்பக்கமாக அமைந்து, ஒலியைத் தடையின்றி வெளிக்கொண்டு வருகிறது.
    இ – ஈ – எ – ஏ
  4. பின் உயிர் – ஒலிப்பின்போது நாக்கு கூடிய அளவுக்கு பின் தள்ளிய நிலையிலும் தொடுகையில் இல்லாமல் விறைப்பான நிலையில் இருக்கும்போதும் பெறப்படும் ஒலிஉ – ஊ – ஒ – ஓ
  5. நடு உயிர் – ஒலிப்பின்போது நாக்கு, முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும், பின்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும் நடுவில் இருக்கும். அ – ஆ
  6. மேல் உயிர் – நாக்கு வாயின் மேற்பகுதிக்கு கூடிய அளவு அண்மையாக இருக்கும் நிலையில், தடை ஏற்படுத்தாமல் ஒலிக்கப்படும் உயிரொலிகள் இ – ஈ – உ – ஊ
  7. கீழ் உயிர் – நாக்கு வாயின் மேற்பகுதியில் இருந்து கூடிய அளவு விலகிக் கீழே இருக்கும் நிலையில் ஒலிக்கப்படும் உயிரொலிகள்
    அ – ஆ
  8. இடை உயிர் – நாக்கு வாயின் மேல் பகுதிக்கு மிக அண்மையிலோ அல்லது கீழே அதிகம் தொலைவிலோ இல்லாது இடை நிலையில் இருக்கும்.
    எ – ஏ – ஒ – ஓ

ஓர் எழுத்து  இரண்டு மூன்று ஒலிப்பு முறைகளைக் கொண்டிருக்கையில் அவற்றை விளங்கிக் கொள்ள பின்வரும் அட்டவணை உதவுகிறது. மேற்குறிப்பிட்ட வகைகளில் இரண்டு இணை சேர்ந்து இவற்றை உருவாக்கின்றது.

எ.கா:

– முன் உயிர் (நாக்கு கூடிய அளவுக்கு முன் நிலையில்) – இ – ஈ – எ – ஏ

– இடை உயிர் நாக்கானது மிக உயரத்தில் இல்லாமலும் தாழ்ந்த நிலையில் இல்லாமலும் இடையில் நின்று இருப்பது) -எ – ஏ – ஒ – ஓ

மேற்குறிப்பிட்ட இரண்டையும் சேர்க்கும்போது, முன் இடை உயிர் அல்லது இடை முன் உயிர் தோன்றுகிறது இதற்குப் பொதுவான எழுத்துகள் எ மற்றும் ஏ ஆகும்.

உயிர் எழுத்து அட்டவணை (Vowel chart)

குறில் (short)நெடில் (long)
மேல் முன் உயிர்
இடை முன் உயிர்
மேல் பின் உயிர்
இடை பின் உயிர்
கீழ் நடு உயிர்

ஈருயிர் (diphthong)

இதழ் குவியா உயிர்
இதழ் குவிந்த உயிர்ஒள

உயிர் ஒலிகளின் பிறப்பு

முன்
FRONT VOWEL
நடு
CENTRAL VOWEL
பின்
BACK VOWEL
உயர் (மேல்)
High
இ ஈ
i i:
உ ஊ
u u:
இடை
Mid
எ ஏ
e e:
ஒ ஓ
o o:
தாழ் (கீழ்)
Low
அ ஆ
a a:

உயிர் எழுத்துகளின் ஒலி வேறுபாடு

இ, ஈ, எ, ஏ, உ எனும் ஐந்து உயிர் எழுத்துகள் இரண்டு விதமாக ஒலிக்கின்றன.

இ:

  1. இது – இனி – இலை
  2. இடம் – இணை – இழிவு

இங்கு முதற் தொகுதியில் உள்ளவை முன் உயிராக ஒலிக்கின்றன. இரண்டாம் தொகுதியில் உள்ளவை நடு உயிராக ஒலிக்கின்றன. இதற்கு அவற்றுடன் அடுத்து வரும் மெய் எழுத்துகளே காரணம். ட், ண், ள், ழ், ற (ற மட்டும்) எனும் மெய்யெழுத்துகளின் முன்னர் இவ்வுயிர் எழுத்துகள் வரும் போது இவ்வேறுபாடு தோன்றுகின்றது.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

  1. எலி – எருது
  2. எட்டு – எறும்பு – எளிமை

உசாத்துணைகள்

  1. தமிழ் இணையக் கல்விக் கழகம்
  2. அடிப்படைத் தமிழ் இலக்கணம் – எம்.ஏ நுஃமான்
  3. தமிழ் விக்கிபீடியா

Previous Lesson

Back to Course

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply