இலங்கை அனைத்து மக்களுக்கும் உரித்தான நாடு என அரசியலமைப்பு கூறுமா?

16 JUL, 2023
image

‘அரசியலமைப்புகள் எல்லாம் நல்ல எண்ணங்களுடன் உருவாக்கப்படுவதில்லை’ மனிதர்களின் மொத்த அறிவு என்பது இப்பிரபஞ்சத்தை பொறுத்தவரை ஒரு தூசாகும். எனவே, திருத்தங்களை நாம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்” என சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் தனது ஆங்கில பத்தியில் குறிப்பிட்டிருந்தார்.

குருந்தூர் மலை விவ­காரம் தொடர்பில் “இலங்கை பெளத்த சிங்­கள நாடு என்­பதை முல்லைத்தீவு நீதி­பதி மறக்­கக்­கூ­டாது” என  நாடா­ளு­மன்­றத்தில்  சரத்வீர­சே­கர  எம்.பி. கூறியி­ருந்தார். ஊடகசந்­திப்­பொன்றில் இதற்குமஹிந்­தா­னந்த அழுத்­க­மகே எம்.பி. கூறிய மாற்றுக் கருத்­து­களால்  இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்கள் உச்சி குளிர்ந்து விடவில்லை.

மாறாக, அது வழ­மை­யான சமா­ளிப்பு கருத்து என்­பது அர­சியல் அறி­வுள்­ள­வர்­க­ளுக்குத் தெரியும்.  மேலும், சரத் வீர­சே­கர என்ற முன்னாள் கடற்­படை அதி­கா­ரியின் வாயில் இன­வாத கருத்­துக்­களைத் தவிர வேறு எதுவும் வந்­த­தில்­லை­யென்­ப­தையும் இலங்கை மக்கள் அறிவர்.

அவர் இன­வாத கருத்­துக்­களை பேசும் ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரே ஒழிய, அர­சியல் விவ­கா­ரங்கள் பற்­றிய எந்த அடிப்­படை அறிவும் இல்­லா­தவர். அவ­ரது பேச்­சையும் கருத்­துக்­க­ளையும் சிங்­கள ஊட­கங்­களே பெரி­தாக எடுத்­துக்­கொள்­வ­தில்லை. 

சரத் வீர­சே­க­ரவின் கருத்தை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் வன்­மை­யாக கண்­டித்­தி­ருந்­தது. இது நீதித்­து­றைக்கு விடுக்­கப்­பட்ட சவால் என வட­ப­கு­தியில் உள்ள பல நீதி­மன்ற சட்­டத்­த­ர­ணிகள் தமது எதிர்ப்பை போராட்­டங்கள் மூலம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இலங்கை என்ற நாடு அனைத்து மக்­க­ளுக்கும் உரி­யது என்றும் அனை­வரும் ஒற்­று­மை­யாக வாழ பழ­கிக்­கொள்ள வேண்டும் என்று மாத்­திரம் மஹிந்­தா­னந்த எம்.பி கூற­வில்லை. மாறாக ஒவ்­வொரு எம்.பியும் வெவ்­வோறு நிலைப்­பாட்டை  கொண்­டி­ருப்பர் என்றும் அவர்­களில் ஒரு சிலர் சிங்­கள மக்­களை மாத்­திரம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அவர்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்வர் என்றும் வேறு சிலர் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு சார்­பான கருத்­துக்­களை கூறி அவர்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்வர் என்றும் கூறி­யுள்ளார்.

ஆனால், இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் என்ன கூறப்­பட்­டுள்­ளது என்­பதை மஹிந்­தா­னந்த அறி­யா­த­வ­ரால்லர். ‘தனி­ம­னித வழி­பாட்டு அர­சி­ய­ல­மைப்பு’ என வர்­ணிக்­கப்­படும் நாட்டின் இரண்­டா­வது அர­சி­ய­ல­மைப்பை ஜே.ஆர்.ஜெய­வர்­தன 1978 ஆம் ஆண்டு கொண்டு வந்த போது பெளத்த மத­மா­னது  ஆள் பலத்தின் முதன்மை மத மாக விளங்க வேண்டுமென அத்­தி­யாயம் 11 இல் வரை­யறை செய்தார். அதற்கு முன்­ப­தாக சிறி­மாவோ அரசால்  கொண்டு வரப்­பட்ட முத­லா­வது அர­சி­ய­ல­மைப்பில் (1972) சிங்­களம் மாத்­தி­ரமே அரச கரும மொழி என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­ததால் அதன் பிறகு  பெளத்த மதத்­துக்கு அரச அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது.

இலங்­கையின்  முதலாம் ,இரண்டாம் அர­சி­ய­ல­மைப்­புகள்  நாட்டின் அனைத்து மக்­க­ளி­னதும்  அபி­லா­ஷைகள், எண்­ணங்­களை  பெற்று உரு­வாக்­கப்­ப­ட­வில்லை என்­பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.    நல்­லாட்சி காலத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்புப் பற்றி அதிகம் பேசப்­பட்­டது.

2016 ஆம் ஆண்டு அந்­நேரம் பிர­த­ம­ராக இருந்த ரணில் விக்கி­ர­ம­சிங்க,  கொழும்பு கொலன்னா விகா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் பேசும் போது, புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் நாடா­ளு­மன்றில் உள்ள அனைத்து கட்­சி­களும், பெளத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்கும் விட­யத்தில் தமது சம்­ம­தத்தை தெரி­வித்­துள்­ளன, ஆகையால் பெளத்த மதத்தை பாது­காப்­ப­திலோ அல்­லது அதை முன்­னு­ரிமை படுத்­து­வ­திலோ இங்கு எந்த பிரச்­சி­னை­களும் இல்லை எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

எனவே, இந்த நாடு அனை­வ­ருக்கும் சொந்தம் என்ற கூற்­றுகள் சிங்­கள தேசிய தலை­வர்­க­ளி­னதும் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும்  உதட்­ட­ளவு சமா­ளிப்­பு­களே ஒழிய அது  ஆழ்­ம­ன­தி­லி­ருந்தோ அல்­லது இதய சுத்­தி­யு­ட­னோ கூறப்­படும் வார்த்­தைகள் இல்லை.

அந்த விட­யத்தை எக்­கா­ரணம் கொண்டும் அர­சி­ய­ல­மைப்பில் சேர்ப்­ப­தற்கோ அல்­லது ஏற்­க­னவே இருக்கும் பெளத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை என்ற சரத்தை நீக்­கு­வ­தற்கோ எந்த சிங்­களத் தலை­வர்­களும் முன்­வர மாட்­டார்கள். பெளத்­தர்­களை மாத்­திரம் திருப்­திப்­ப­டுத்தும் ஒரு அர­சி­ய­ல­மைப்பை இந்த நாடு கொண்­டி­ருக்­கின்­றது. இதில் திருத்­தங்­களை கொண்டு வரு­வ­தென்­பது சவா­லான விட­ய­மாகும்.

அது பற்றி கதைத்தால்,  அவர் யாராக இருந்­தாலும் தேசத்­து­ரோ­கி­யா­கவும் பெளத்த சாச­னத்­துக்கு எதி­ரி­யா­கவும் கணிக்­கப்­ப­டுவார்.

சரத் வீர­சே­கர மற்றும் மஹிந்­தா­னந்த இரு­வரும் மொட்டு கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் . ஆனால் வெவ்­வேறு பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்கள். மஹிந்­தா­னந்த தனது  உரையில் சரத் வீர­சே­கர ஒரு அடிப்­ப­டை­வாதி என்­பதை சொல்­லாமல் சொன்னார். இந்த நாடு அனைத்து மக்­க­ளுக்கும் உரி­யது என்று கூறும்   மஹிந்­தா­னந்­த­வுக்கு தமிழ் மக்­களின் வாக்­குகள் அவ­சியம். அவ­ரது தொகுதி நாவ­லப்­பிட்­டி­யாகும். அது கண்டி மாவட்­டத்­துக்­கு­ரி­யது.

நாவ­லப்­பிட்­டியை அண்­டி­யி­ருக்கும் பல தேயி­லைத்­தோட்டப் பிர­தே­சங்கள் மஹிந்­தா­னந்­தவின் கட்­டுப்­பாட்­டி­லேயே உள்­ளன. குறித்த வாக்­குகள் அனைத்தும் அவ­ருக்கே உரித்­தா­னவை. ஒரு காலத்தில் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் செல்­வாக்­கி­லி­ருந்த அப்­பி­ர­தே­சத்தை மஹிந்­தா­னந்த தனது கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வரு­வ­தற்கு அவர் தமிழ் மக்­க­ளையே குறி­வைத்தார். 

பிர­தேச தமிழ் மக்­க­ளுக்கு தேவை­யா­னதை அவர் தாரா­ள­மாக செய்து கொடுத்தார்.  குப்பை நகரம் என்று அழைக்­கப்­பட்ட நாவ­லப்­பிட்­டியை சீர­மைத்தார். வைத்­தி­ய­சா­லையை மாற்­றி­ய­மைத்து சிறந்த சுகா­தார சேவை­களை வழங்கும் நிறு­வ­ன­மாக மாற்­றினார்.

நாவ­லப்­பிட்­டி­யி­லி­ருந்து தோட்­டப்­ப­கு­தி­க­ளுக்கு செல்லும் பாதை­களை திருத்­தினார். இவை அனைத்­தையும் செய்து முடித்த அவர் அப்­ப­குதி தமிழ் மக்­க­ளிடம் ஒரு கேள்­வியை முன்­வைத்தார்.  ‘தேவை­யான அனைத்­தையும் நான் செய்து கொடுத்­தி­ருக்­கிறேன் பிறகு எதற்கு இங்கு வேறு ஒரு அர­சி­யல்­வாதி’?    

இ.தொ.காவின் அசைக்க முடி­யாத ஆளு­மை­யான அமரர் ஆறு­முகன் தொண்­ட­மானால் நாவ­லப்­பிட்டி நகரில் கால் வைக்க முடி­யாமல் போன­தற்கு இது தான் காரணம். தேர்தல் காலங்­களில் தமிழ்க் கட்­சி­களின் எந்த பிர­சா­ரங்­களும் அங்கு நடத்த முடி­யாத அள­விற்கு மஹிந்­தா­னந்­தவின் ஆத­ர­வா­ளர்கள் அங்கு செல்­வாக்கு பெற்­றி­ருந்­தனர். உள்­ளூ­ராட்சி சபை­களில் மாத்­திரம் தமிழ் உறுப்­பி­னர்­களைக் கொண்­டி­ருக்கக் கூடிய நாவ­லப்­பிட்­டிய தொகு­தியில், மஹிந்­தா­னந்த ஏறத்­தாழ நிரந்­தர நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகவே விளங்­கு­கிறார். 

சரத் வீர­சே­க­ரவின் கூற்­றுக்கு மாற்று கருத்­துக்­களை அவர் கூறி­யதன் பின்­னணி அது தான். 

சரத் வீர­சே­க­ரவின்  கூற்று நீதித்­து­றைக்கே அச்­சு­றுத்­த­லா­னது என்­பது பொது­வான கருத்­தாகும். ஆனால், அது குறித்து நீதி அமைச்சர் விஜே­தாச ராஜபக் ஷவும் ஒன்றும் கூற­வில்லை. அவரும் பெளத்த தர்­மத்­துக்கு எதி­ராக எதுவும் பேசாத ஒருவர். நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வ­ருக்­குள்ள வரப்­பி­ர­சா­தங்­களை எல்லை மீறி பயன்­ப­டுத்­து­த­லுக்கு சரத் வீர­சே­கர ஒரு உதா­ரணம்.  இந்த நாட்டில் சட்டம் அனைத்து இன மக்­க­ளுக்கும் பொது­வா­னதா இல்­லையா என்ற சந்­தேகம் இப்­போது எழுந்­துள்­ளது.

பெளத்த சிங்­க­ள­வ­ராக இருந்தால் அவ­ருக்கு சட்டம் சற்று தளர்­வான போக்­கோடு செயற்­பட வேண்­டுமா? தமிழர் பிர­தே­சங்­களில் உள்ள உய­ரிய நீதி­மன்­றங்கள் கூட அவர்­க­ளுக்கு தலை­வ­ணங்க வேண்­டுமா என்ற சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன.

சரத் வீர­சே­க­ரவின் உரை முற்று முழு­தான இன­வெ­றியின் உச்சம்.  நாட்டை வழிநடத்தும், உயரிய சட்டங்களை இயற்றும் ஒரு சபையில் அதை  அச்சமின்றி வெளிப்படுத்தியுள்ளார். 

அவர் உரையாற்றிய சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றில் இருந்த எவரும் அதை எதிர்த்து  ஒரு வார்த்தை தானும் பேசவில்லை. மஹிந்தானந்தவும் கூட  ஊடகவியலாளர் மாநாட்டில் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே சரத் வீரசேகரவின் கூற்றை நிராகரித்திருந்தார்.

அரசியல்வாதிகள் மாத்திரமின்றி இந்நாட்டில் படித்த  சிங்கள இளைஞர், யுவதிகளும் கூட சமூக வலைதளங்களில் பதிவிடும் போது  இலங்கை பெளத்த நாடு என்ற விடயத்தில் உறுதியாக இருக்கின்றனர். ‘எல்லோரும் ஒரு நாட்டு மக்கள்’  என்ற அரசியல்வாதிகளின்  கூற்று சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காக  வெளிப்படும் உயிரில்லாத வெற்று வசனம் மட்டுமே!

https://www.virakesari.lk/article/160160

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply