மக்கள் அரைப் பட்டினி கிடக்கிறார்கள் ஆளுவோர் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள்!

மக்கள் அரைப் பட்டினி கிடக்கிறார்கள் ஆனால் ஆளுவோர் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள்!

 நக்கீரன்

ஊரார் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. அதாவது தன் வீட்டு நெய் என்றால் மனைவி சிக்கனமாகவும் ஊரார் வீட்டு நெய் என்றால்  வாரி இறைத்தும் செலவு செய்வார் என்பதை விளக்க  இந்தப் பழமொழியைக் கூறுவர் அதுபோல இலங்கையின் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க  சாதாரண பொதுமக்களைப் பார்த்து வாயைக் கட்டி வயிற்ளைக் கட்டி வாழுமாறு உபதேசம் செய்கிறார். ஆனால் தனது அமைச்சரவை செலவீனங்கள் பற்றியோ, நாடாளுமன்ற உறுப்பினர்களது செலவு பற்றியோ அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கவலைப்படாதது மட்டுமல்ல  நாடாளுமன்றத்தின்  செலவீனங்களை அதிகரிப் பதில்தான் குறியாகயிருக்கிறார். அமைச்சரவையில் இப்போதுள்ள அமைச்சர்கள் போதாது என்று மேலும் பலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்க அவர் ஆயத்தமாகி வருகிறார்.  இதற்கான செலவு அவரது வீட்டுப் பணம் அல்ல,  நாட்டின் கருவூலத்தில் இருக்கும் பணம்!

முன்னாள் சனாதிபதி கோட்டாபய இராசபக்ச அவர்களின் முதலாவது அமைச்சர வையில் 26  அமைச்சர்களும் 39 இராசாங்க அமைச்சர்களும் இடம்பெற்றார்கள். தற்போதைய சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களின் அமைச்சரவையில் 21 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இராசாங்க அமைச்சர்களாக 35 பேர் இருக் கிறார்கள்.

நாடு ஒட்டாண்டியாகப் போன காரணத்தால் மக்கள் அரைப்பட்டினி கிடக்கிறார்கள். மூன்று நேரம் உணவு உண்டவர்கள் அதனை இரண்டு நேரமாகக் குறைத்துள்ளார்கள். பொருட்களின் விலை சற்றுக் குறைந்து காணப்பட்டாலும் ஏழைபாளைகளுக்கு அவை  எட்டாத தூரத்தில் இருக்கின்றன.

பக்கத்து நாடான பாகிஸ்தானும் இலங்கையைப் போலவே பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் ஏற்பட்ட  வெள்ளத்தால் 30 பில்லியன் டொலர் பெறுமதியான உற்பத்தி முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. பாகிஸ்தான் 22 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. அதன் மொத்த உள்நாட்டு  உற்பத்தி (GDP)  2.4% ஆகும்.  பணவீக்கம், சனவரியில், 2023 இல் 27.5% தொட்டது. அன்னியச் செலாவணி கையிருப்பு மூன்று வார இறக்குமதித் தொகைக்குக் கீழே குறைந்துள்ளது. மக்கள் தொகையில் 35%  ஏழைகள்.  

இலங்கையைப் போலவே பாகிஸ்தானும் அனைத்துலக நிதியத்திடம் கையேந்தி நிற்கிறது.  கடந்த பெப்ரவரி மாதம் பொருளாதாரச் சரிவைத் தடுக்க  $6.5 பில்லியன் கடனாகக் கேட்டிருக்கிறது. 

இதே சமயம் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் அரசின் செலவினங்களைக் குறைக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.  தனது அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களின் சொகுசு கார்கள் மற்றும் அவர்களின் சம்பளம்  குறைக்கப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 10% விழுக்காட்டால் குறைக்கப்பட்டுள்ளது.  இந்த சிக்கன நடவடிக்கைகளால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ரூபா 200 பில்லியன் ($766 மில்லியன்) மிச்சப்படுத்தப்படும்.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துவரும் இலங்கையில்  நா.உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் குறைக்கப்பட வில்லை. அரச ஊழியர்களின் சம்பளத்தில் வெட்டு இடம் பெறவில்லை. அமைச்சர்களும் அதிகாரிகளும் உலகத்தை சுற்றி வலம் வருகிறார்கள். அண்மையில் வெளியுறவு அமைச்சர்  எஸ்யுஎம் அலி சப்ரி, நீதி அமைச்சர் விசயதாச இராசபக்ச மற்றும் அதிகாரிகள் தென் ஆபிரிக்கா சென்று வந்தார்கள்.

இலங்கை சனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அவைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்களது  மாதாந்த சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும்  பின்வரும் அட்டவணை 1 காட்டுகிறது.
                                                          அட்டவணை 1

நா.உறுப்பினர்களின் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்ரூபா
சனாதிபதி97,500
பிரதமர்71,500
அவைத் தலைவர்68,000
துணைத் அவைத் தலைவர்63,500
அமைச்சரவை அமைச்சர்கள்65,000
எதிர்க்கட்சித் தலைவர்65,000
நா.உறுப்பினர்கள்54,285
கொடுப்பனவுகள்
பயணப்படி15,000
எரிபொருள் (சராசரி)  250 லிட்டர்15,000
முத்திரைச் செலவு (ஓர் ஆண்டுக்கு)350,000
தொலைபேசி50,000
ஒரு நாள் வருகை2,500
குழுக் கூட்ட வருகை2,500
பொழுதுபோக்குக் கொடுப்பனவு4,500
வண்டி ஓட்டுநர்3,500
அலுவலகம் 100,000

சம்பளம் மற்றும்  கொடுப்பனவுகளுக்கு மேலாக அலுவலக உபகரணங்களான கணினிகள், நகல் இயந்திரங்கள், தொலைநகல் இயந்திரங்கள் மற்றும் தொலைபேசிகள்  போன்றவற்றையும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கம் வழங்குகிறது.   கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சரவையில் 88 இராசாங்க அமைச்சர்கள் இருந்தனர். இந்த 88 இராசாங்க அமைச்சர்களுக்கும் அமைச்சரவை அமைச்சர்கள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டன. மேலும், எட்டுக் கண்காணிப்பு உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளுக்கு மேலதிகமாக மாதம் ரூபா 600,000  வழங்கப்பட்டது.

கீழ்க்கண்ட அட்டவணை 2,  ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம், கொடுப்பனவுகள், கழிவுகளைக் காட்டுகிறது.

                                                                  அட்டவணை 2

சனாதிபதி, பிரதமர்,அவைத்தலைவர், இராசாங்க அமைச்சர்கள் போன்றோருக்கு ஏராளமான  ஆளணி, வாகனங்கள் வழங்கப்படுகின்றன.

வரலாற்று நோக்கில்  வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நா.உறுப்பினர்கள் மத்திய கொழும்பில் உள்ள ஸ்ராவஸ்தியில் தங்க வைக்கப்பட்டார்கள். அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதி என்று அழைக்கப்பட்டது. 1980 களில் மாதிவெல வீடமைப்புத் தொகுதியை (Madiwela Housing Complex) நிர்மாணித்ததன் மூலம், கொழும்பிற்கு வெளியில் இருந்து வருகின்ற உறுப்பினர்கள் அதில் தங்க வைக்கப்படுகின்றனர். மாத வாடை ரூபா 1,000 மட்டுமே. மாதிவெல வீடமைப் தொகுதியில் இடம் இல்லை என்றால் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கான கொடுப்பனவை அரசாங்கம் கொடுக்கிறது.  அத்துடன், பாராளுமன்ற செயலகத்தின் நிர்வாகத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் நுவரேலியாவில் பத்தொன்பது அறைகள் கொண்ட விடுமுறை மாளிகையில் (General’s House)  நா. உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் தனியே பயன்படுத்தலாம்.

பிற கொடுப்பனவுகள்

நா.  உறுப்பினர்கள் உணவருந்தும் பகுதியில் மானிய விலையில் உணவு  வழங்கப்படுகிறது. முதன்மையாக, 5 பிரத்தியேக உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், சிறப்பு விருந்தாளிகளது உணவு அறைகள் மற்றும் பிற வகையான சேவை நிலையங்கள் உட்பட  12 முக்கிய உணவு மற்றும் குளிர்பான சேவை விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றில் 5  நாளாந்த  அடிப்படையில் இயக்கப்பட்டு, நாடாளுமன்றம் கூடாத நாட்களில் 1000 – 1200 பேருக்கு உணவு பரிமாறுகின்றன.

இந்தத் திணைக்களம் சிறப்பு நாட்களில் அதன் முழு அளவிலான திறனுடன் செயல்படும் போது சனாதிபதி,  பிரதமர், அவைத்தலைவர்,  அமைச்சர்கள்,  நா. உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், வெளிநாட்டு இராசதந்திரிகள், உள்ளூர் பிரமுகர்கள், வருகை தரும் அரசாங்க அதிகாரிகள் எனப் பலருக்கும் உணவு பரிமாறப்படுகிறது.  உணவு தயாரிப்பில் 260 க்கும் மேற்பட்ட  சமையல்காரர்கள் ஈடுபடுகிறார்கள். மதியநேர அல்லது இரவு  நேரச் சாப்பாட்டின் விலை ரூபா 296  மட்டுமே. ஆனால் அதன் தயாரிப்புச் செலவு ரூபா 3,000 தொடும் என்கிறார்கள். எப்படியும் வெளியில் அந்த உணவின் விலை குறைந்த பட்சம்  ரூபா 1,000 ஆவது  வரும். மேலும் இந்த உணவு வீணாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.  ஆண்டு தோறும்  ரூபா120 மில்லியன் பெறுமதியான  உணவு, குடிதண்ணீர் போன்றவற்றை  அரசாங்கம் வீணடிக்கிறது. தண்ணீரிள் பெறுமதி மட்டும் ருபா 9 மில்லியன்.

Stop Food Loss and waste, for the people, for the planet | Daily News

பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கும் இதே  அரசியல்வாதிகள்தான் மலையகத்  தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தை உயர்த்த மறுக்கிறார்கள்.  கடந்த ஆண்டு சம்பளத்தை ரூபா 1,000 ஆக உயர்த்த தோட்டக் கம்பனிகள் ஒப்புக் கொண்டாலும் வேலை நாட்களை 6 இல் இருந்து 5 ஆகக் குறைத்துவிட்டன.   16 கிலோ பறித்தால்  தினக் கூலி ரூபா 640 மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த மக்கள்தான் தேயிலை ஏற்றுமதியின்  மூலம் ஏற்றுமதி வருவாயில்  11% வெளிநாட்டு நாணயத்தை தேடித் தருகிறார்கள். இந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதி மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு (2022)  ஆண்டில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தது.

உலகில் மிகக் கடுமையாகச் சுரண்டப்படுகிற தொழிலாளர்கள் மலையகத் தமிழர்களே. பல ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டாலும், இவை பழைய லைன் அறைகளில் இருந்து வேறுபட்டவை அல்ல. இந்த வீடுகள்  இந்தியா கட்டிக் கொடுத்தவை. பல தோட்டங்களில் 200  ஆண்டுகளுக்கு முன் வெள்ளைக்காரன் கட்டிக் கொடுத்த லைன் வீட்டில்தான் இன்னமும்  தொழிலாளிகள் குடும்பம் வாழ்கின்றன.

story-page-image

உயர் கல்வித் தகைமைகள் அற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சட்டக் கல்லூரியின் நுழைவுத் தேர்வுக்குத்  தோன்றாமல் நேரடியாக அனுமதி பெறுகின்றனர். இந்தச் சலுகையைப் பயன்படுத்திச் கட்டக் கல்லூரியில் படித்து  சட்டத்தரணிகளாக வெளிவந்தவர்களில் மகிந்த இராசபக்ச, நாமல் இராசபக்ச குறிப்பிடத்தக்கவர்கள்!

நாடாளுமன்ற ஓய்வூதியச்  சட்டப்படி, நாடாளுமன்றத்தில்  5 ஆண்டு பதவிக் காலத்தை முடித்த நா.உறுப்பினர், தனது சம்பளத்தில் 1/3   பங்கை ஓய்வூதியமாகப் பெறுகிறார். இதன் அடிப்படையில் ஒரு நா.உறுப்பினக்கு  ரூபா 18,095  ஓய்வூதியமாகக்  கொடுக்கப்படும். அதே நேரம்  அமைச்சராக அல்லது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நா.உறுப்பினருக்கு ரூபா 21,166  ஓய்வூதியமாகக் வழங்கப்படும். ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் அவைத் தலைவருக்கு  ரூபா 22,833.50  வழங்கப்படும். ஓய்வூதியத்திற்குத்  தகுதி பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு காலத்தை முடித்த பிரதமருக்கு ரூபா 23,500 வழங்கப்படும்.  எவ்வாறாயினும் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தின்படி, 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நா.உறுப்பினர் அந்தக் காலகட்டத்தில் பெற்ற சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கைப் பெறுகிறார். இதன்படி, 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய ஒரு நா.உறுப்பினருக்கு ஓய்வூதியமாக ரூபா 44,190 வழங்கப்படும்.

அதே சமயம் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரூபா 42,332 வழங்கப்படும். மேலும். 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய நாடாளுமன்ற சபாநாயகருக்கு ரூபா 25,666 ஓய்வூதியமாக வழங்கப்படும். பதினைந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவையில் இருக்கும் பிரதமருக்கு ரூபா 47,000 வழங்கப்படும்.   தற்போது, 254 அரசியல்வாதிகள், 196  கைம்பெண்கள்,  முன்னாள் நா. உறுப்பினர்களைச்  சார்ந்துள்ள 7 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அதன்படி, ஓய்வூதியம் பெற வேண்டிய ஒவ்வொரு நா. உறுப்பினருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் போது  அரசாங்கத்துக்கு மாதச் செலவு ரூபா 8,276,587  ஆகும். ஒரு ஆண்டுக்கு அந்தத்  தொகை ரூபா 99,211,044 ஆக உயரும். பத்து ஆண்டு காலத்திற்கு இவர்களுக்கான ஓய்வூதியம் மட்டுமே கிட்டத்தட்ட ரூபா 1 பில்லியனைத் (நூறு கோடி)  தாண்டும்!

ஜேவிபியின் 39 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  கடந்த 13  ஆண்டுகளாக ஓய்வூதியக் கொடுப்பனவாக  ரூபா 24 கோடி, 63 இலட்சத்து அறுபதினாயிரம்   பெற்றுள்ளதாக இராசாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும்  40 ஆயிரம் ரூபா வீதம் ரூபா 62,40,000 ஓய்வூதிய கொடுப்பனவாக கடந்த 13 வருடங்களாக பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

இன்று ஐந்து  முன்னாள் சனாதிபதிகளுக்கு கோடிக் கணக்கில் ஓய்வூதியம், வீடுகள்,  வாகனங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பார்த்தால் மயக்கம் வருகிறது. (தொடரும்)

மக்கள் அரைப் பட்டினி கிடக்கிறார்கள் ஆளுவோர் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்கள்!

 கனடா நக்கீரன்

சென்றவாரத் தொடர்ச்சி……

பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது தமிழில் வழங்கும் ஒரு பழமொழி. யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதைத் தான் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் தானம் தருமம் செய்யக் கூடாது. உழைக்கிற பணத்தை குடித்து வெறித்து ஊதாரித்தனமாச் செலவழிக்கும்  ஒருவனுக்கு உதவி செய்யக் கூடாது. ஆனால் அனைத்துலக நாணய நிதியம் தகுதி பார்க்காது இலங்கைக்குக் கடன் கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனம் இலங்கைக்கு  கடன் வழங்குவதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

(1) ஊழலை ஒழிக்க  ஊழல் தடுப்புச்  சட்டம் கொண்டுவர வேண்டும்.  (2) அரசின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். (3)  அதிக வருமானம் ஈட்டுவோருக்கு வரிவிதிப்பு. (4) 2025 இல் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம். (5) 2023 இறுதிக்குள் பணவீக்கத்தை 12 %  முதல் 18 % வரை குறைத்தல். (6) 2023 யூன் மாதத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி  கட்டுப்பாடுகளை நீக்குதல். (7) அதிக மாற்று விகித நெகிழ்வுத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும். (8) மத்திய வங்கி மேலும் சுதந்தித்தோடு இயங்க வேண்டும். (9) வலுவான சமூக பாதுககாப்புக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப் பட  வேண்டும்.

இந்த நிபந்தனைகளுக்கு இலங்கை அரசு இணக்கம் தெரிவித்த காரணத்தால் பன்னாட்டு நாணய நிதியம் 48 மாதங்களில் இலங்கைக்கு டொலர் 2.286 பில்லியன்(ஒரு பில்லியன் 100 கோடி)  நிதியை வழங்க முன்வந்துள்ளது. முதற்கட்டமாக டொலர் 330 மில்லியனை கடந்த மாதம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் விதித்த நிபந்தனைகளில் நாட்டின் அரசியல் உறுதிப்பாடு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருக்கவில்லை.  சனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராசாங்க அமைச்சர்கள், நா.உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், கொடுப்பனவு மற்றும் பலன்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படவில்லை. வரவு – செலவு திட்டத்தில் பல பில்லியனை விழுங்கும் பாதுகாப்புப் படையின் எண்ணிக்கை குறைக்கப் பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

அதே நேரம் வருகிற யூன் மாதம் தொடக்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என பன்னாட்டு நாணய நிறுவனம்  நிபந்தனை போட்டுள்ளது. என்ன காரணம்?  இறக்குமதிக் கட்டுப்பாட்டால் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் தங்களது ஏற்றுமதிப் பொருட்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய முடியாது இருக்கிறது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு இலங்கையைக் கேட்டிருந்தது. அதைத்தான் பன்னாட்டு நாணய நிதியம்  செய்திருக்கிறது.  சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை.

இலங்கை அரசு சனாதிபதி, முன்னாள் சனாதிபதிகள், பிரதமர், அமைச்சர்கள், இராசாங்க அமைச்சர்கள், நா. உறுப்பினர்களுக் கொடுக்கும் சம்பளம், கொடுப்பனவு மற்றும் சலுகைகள் குறைக்கப்பட வில்லை. புதிதாக நியமிக்கப்பட்ட இராசாங்க அமைச்சர்களின் சம்பளம்  நா.உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் மட்டுமே கொடுக்கப்படும் என அரசாங்கம் சொல்வது வெறும் கண்துடைப்பு. காரணம் ஒரு இராசாங்க அமைச்சருக்கும் ஒரு நா.உறுப்பினருக்கும்  கொடுக்கும் சம்பள வேறுபாடு வெறுமனே ரூபா 10,415 மட்டுமே. கடந்த காலங்களில் நாடாளுமன்றம் சனாதிபதி, அமைச்சர் பரிவாரங்களுக்குச்  சம்பளத்தை அதிகரிக்காமல் கொடுப்பனவுகளை தாராளமாக அதிகரித்து வந்துள்ளது. இது ஒரு கபடமான தந்திரமான நடவடிக்கை ஆகம். 

இப்போது 5 முன்னாள் சனாதிபதிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் சம்பளம், கொடுப்பனவு, சலுகைகள் பற்றிய விபரத்தை கீழ்க்கண்ட அட்டவணை  3 காட்டுகிறது. 

                                                                                            அட்டவணை 3

கடந்த ஆண்டுகள் போலவே  2023 ஆம் ஆண்டிலும்  முன்னாள் சனாதிபதிகளுக்காக மில்லியன் கணக்கான நிதி தொடர்ந்து ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்  குடிமக்கள் ஒரு  பொருளாதாரப் பேரழிவுக்கு முகம் கொடுத்து வருவதால், சந்திரிகா குமாரதுங்க, மகிந்த இராசபக்ச , மைத்திரிபால சிறிசேன,  கோட்டாபய இராசபக்ச,   மறைந்த இரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச போன்றவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் 2022   ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட  ஒதுக்கீடுகளை விட அரசாங்கம்  குறைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடைபெறவில்லை. 2022 இல் ஒதுக்கப்பட்டதை விட  2023  ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளன.

சந்திரிகா குமாரதுங்க 

2022 ஆம் ஆண்டுக்கு  சந்திரிகா குமாரதுங்காவிற்கு ஓய்வூதியப்  பலன்களாக ஒதுக்கப்பட்ட  அதே ரூபா 1.17 மில்லியன் (11.7 இலட்சம்)  2023 இலும்  திறைச்சேரி   ஒதுக்கீடு செய்துள்ளது. ‘மற்றவை’ என்ற தலைப்பின் கீழ், குமாரதுங்கவிற்கு மேலும் ரூபா 3.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.  இது 2022 க்கு ஒதுக்கப்பட்ட ரூபா 3 மில்லியன்   மற்றும் 2021 க்கு ஒதுக்கப்பட்ட ரூபா 1.4 மில்லியனோடு ஒப்பிடுகையில் அதிகமாகும். மூலதன செலவினத்தின் கீழ், குமாரதுங்க ‘கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்’ கீழ்  ரூபா 1 மில்லியன்  2023 க்கு  ஒதுக்கப்பட்டுள்ளது. இதே தொகைதான் 2022 க்கும் ஒதுக்கப்பட்டது.

வாகனங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட  ரூபா 2 மில்லியனோடு   ஒப்பிடுகையில் 2023 இல் ரூபா 10 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மகிந்த இராசபக்ச

2023 ஆம் ஆண்டில் திறைசேரி மகிந்த இராசபக்சவுக்கு ஓய்வூதியப் பலன்களாக  ரூபா 1.17 மில்லியனை ஒதுக்கியுள்ளது.  2022 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட  10 மில்லியன் ரூபா மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட 6.8 மில்லியன்  ரூபாவுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டிற்கு மகிந்த இராசபக்சவுக்கு மேலதிகமாக 10 மில்லியன்  ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதன செலவினத்தின் கீழ், மகிந்த இராசபக்சவுக்கு ‘கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்’ திட்டத்தின் கீழ் 1 மில்லியன்  ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.  இது 2022 ஆம் ஆண்டும் இதே தொகைதான் ஒதுக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட 2 மில்லியன்  ரூபாவுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் 10 மில்லியன் ரூபா வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 5 மடங்கு அதிகரித்துள்ளது!
 

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 800 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கொழும்பு 7 விஜயராம வீதி இல்லத்திற்கு மகிந்த இராசபக்ச  அண்மையில் இடம் பெயர்ந்தார். விஜயராம வீதி இல்லம் மேம்படுத்தப்பட்டு வந்த போது பவுத்தலோக மாவத்தை வீதியில் மகிந்த இராசபக்ச தற்காலிகமாக குடியிருந்த  ஆடம்பர பங்களா  தற்போது அவரது சகோதரரும் முன்னாள் சனாதிபதியுமான கோட்டாபய இராசபக்சவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது ஆட்சிக் காலத்தில் அவரது தவறான பொருளாதாரக் கொள்கையால் அவர் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப் படுத்தப்பட்டார் என்பது தெரிந்ததே.  அவர் சனாதிபதியாக இருந்த போது பொருளாதார நெருக்கடி மேலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. எரிபொருள்,  மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

2022 ஆம் ஆண்டில், மகிந்த இராசபக்ச  பிரதமராக இருந்த போது திறைசேரி பிரதமர் அலுவலகத்திற்கு ‘மேலதிக நேரம் (Overtime) மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள்’ திட்டத்தின் கீழ் 70 மில்லியன் ரூபாவை ஒதுக்கியது.  இது 2021 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 74 மில்லியன் ரூபாவை விடச் சற்றுக் குறைவானது.  “உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணச் செலவுகளுக்காக” திறைசேரி 2022 ஆம் ஆண்டில் 12 மில்லியன் ரூபாவை ஒதுக்கியது.  இது 2021 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கப்பட்ட 37 மில்லியன் ரூபாவை விடக் குறைவானது. 2022 ஆம் ஆண்டிற்கான ‘பராமரிப்பு செலவினத்தின்’ கீழ், 2021 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட 213 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில், பிரதமரின்  பராமரிப்பதற்காகத்  திறைசேரியால் 229 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனா

மைத்திரிபால சிறிசேனவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய பலன்களுக்காக 1.17 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.   ‘மற்றவை’ தலைப்பில் 2023 ஆம் ஆண்டிற்கு மேலும் 11 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபா மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட 7.9 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 2023 ஒதுக்கீடு அதிகமானது.  மூலதன செலவினத்தின் கீழ், சிறிசேனவுக்கு ‘கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்’ கீழ் 1 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  2022 ஆம் ஆண்டிற்கான தொகையும் அதுவே. வாகனங்களுக்காக 2022 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட 2 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய இராசபக்ச

2023 ஆம் ஆண்டுக்கு திறைச்சேரி  கோட்டாபய இராசபக்சவிற்கு ஓய்வூதிய பலன்களாக 1.17 மில்லியன்  ரூபாவை ஒதுக்கியுள்ளது. ‘மற்றவை’ என்ற தலைப்பின் கீழ், 2023 ஆம் ஆண்டில்  மேலும் ரூபா10 மில்லியன் கோட்டாபயவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவினத்தின் கீழ், ‘கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்’ என்பதன் கீழ் கோட்டாபயவுக்கு ரூபா1 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 2023 இல் வாகனங்களுக்காக ரூபா 2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹேமா பிரேமதாச

இரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய பலன்களாக திறைசேரி 780,000 ரூபாவை ஒதுக்கியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட அதே தொகையாகும். ‘மற்றவை’ என்ற தலைப்பின் கீழ், ஹேமாவுக்கு மேலும் 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2022 க்கு ஒதுக்கப்பட்ட ரூபா 1.3 மில்லியன் மற்றும் 2021 க்கு ஒதுக்கப்பட்ட ரூபா 770,000  இரண்டோடும்  ஒப்பிடுகையில் அதிகமாகும்.  2023 இல் வாகனங்களுக்காக  ரூபா 5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 08, 2021  இல் சனாதிபதி அலுவலகத்தில்  அதிகாரிகள் 778,   பிரதமர் அலுவலகத்தில்  289,  நாடாளுமன்றத்தில் 935,   இலஞ்சம் அல்லது ஊழல் ஆணையத்தில் 442,  தேர்தல் ஆணையத்தில் 710,  கணக்காய்வாளர் திணைக்களத்தில் 1,769 பணியில் இருந்தார்கள். எல்லாத் திணைக்களங்கள் மற்றும் ஆணையங்களைச் சேர்த்து மொத்தம்  5,955 பேர் பணியில் இருந்தார்கள்.

2021 ஆம் ஆண்டில் ரூபா 1,610,287 இல்  இருந்து 2022 ஆம் ஆண்டில் ரூபா 1,727,261.20  மில்லியனாக இலங்கையின் அரசாங்க செலவுகள் அதிகரித்தது. இலங்கையின் பணவீக்கம் மார்ச் 2023 இல் 50.3%  காணப்பட்டது.  உணவு விலைகள்  48.8 %  இருந்து 51.7% ஆக அதிகரித்தது. வங்கி வட்டி  15.5% ஆக இருக்கிறது. 2023 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) – 3.01 %. 2022 இல் – 8.7  %.

கடந்த பத்து ஆண்டுகளில் 450 அரச நிறுவனங்கள் நட்டத்திலேயே இயங்கி வந்துள்ளன.  மேலும் 2012 ஆம் ஆண்டில் 183 பில்லியன்  2013 ஆம் ஆண்டு 186 பில்லியன்,  2014 ஆம் ஆண்டு 186 பில்லியன் என நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு 271 பில்லியன், 216 ஆம் ஆண்டு 180 பில்லியன்,  2017 ஆம் ஆண்டு 260 பில்லியன், 2018 ஆம் ஆண்டு 265 பில்லியன், 2019 ஆம் ஆண்டு 268 பில்லியன் என இந்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியுள்ளன. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு 436 பில்லியன்,  2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டில் முறையே 337 பில்லியன் மற்றும் 322 பில்லியன் என இந்த நிறுவனங்கள் மூலம் நட்டம் ஏற்பட்டுள்ளது. நட்டத்தில் ஓடிய நிறுவனங்களின் அதிகாரிகள், ஊழியர்கள்   வெகுமதியைப் (bonus) பெற்றுக் கொள்ளத் தவறவில்லை!

அரசாங்கத்தின் சம்பளக் கொடுப்பனவில் கிட்டத்தட்ட பாதியை  முப்படையினரும் காவல்துறையும் விழுங்கிவிடுகின்றன.  2023  இல் முப்படைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி ரூபா 694,910  மில்லியன் ஆகும்.  முப்படையின் எண்ணிக்கை 278,000 (1919) ஆகும்.  கீழ்க்கண்ட அட்டவணை 3  பாதுகாப்பு மற்றும் காவல்துறை தொடர்பான செலவு 49 % ஆகும்.

அட்டவணை 4

இலங்கையின் மக்கள் தொகை 2.2 கோடிதான். ஆனால் அது பென்னாம் பெரிய இராணுவத்தை வைத்திருக்கிறது. எந்த நாட்டோடு சண்டை பிடிக்க எனத் தெரியவில்லை. ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டால் 145 நாடுகளில் 71 ஆவது இடத்தில் இருக்கிறது!  இலங்கை ஒட்டாண்டி நாடாகப் போவதற்கு முக்கிய காரணி இராணுவம் மற்றும் கடற்படை, வான்படைகளே!

இலங்கை சுதந்திரம் அடைந்த ஆண்டு தொட்டு அதன்  கருவூலத்தை அரசியல் வேறுபாடின்றி, கட்சி வேறுபாடின்றி எல்லோருமே கொள்ளையடித்து வருகிறார்கள். ஆற்றிலே போகிற தண்ணீரை அண்ணை குடி, தம்பி குடி என்ற கதைதான்! (முற்றும்)

(Canada Uthayan April 06 & 13)

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply