முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1

முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 1
முதலாம் ராஜராஜ சோழனின் பெருமையை தஞ்சை பெரியகோவில் காட்டுவதுபோல் அவரின் அருமை மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையை கங்கைகொண்ட சோழீசுவரம் இன்று காட்டுகிறது நமக்கு. வடக்கே கங்கை நதி வரை( தற்போது உள்ள ஒரிசா, வங்காளம், கல்கத்தா) தன் பெரும் படையை அனுப்பி கண்ட வெற்றி தான் இவன் அமைத்த கங்கை கொண்ட சோழபுரம். திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவில் ஐயங்கொண்டானுக்கு அருகில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் ராஜேந்திரனின் பெருமையை பறைசாற்றுகிறது.

இந்திய நாட்டின் வரலாற்றிலேயே கடல் கடந்து பல கலம் செலுத்தி தன் திறம் வாய்ந்த போர்முனையால் வடக்கே துங்கபத்திரை ஆற்றங்கரை, தெற்கே ஈழம் முழுவதும், மேற்கு மகோதயபுரம் முதல் கிழக்கே வங்கக் கடல் கடந்து கடாரம் ஸ்ரீவிஜயம் வரை என தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யமாக கங்கை கொண்ட சோழபுரத்தை ஆண்ட பேரரசன் ராஜேந்திர சோழனை நம்மில் பலரும் ஆராய்ந்து அறிய வேண்டும். முதலாம் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை தோற்றுவித்து சுமார் 250 ஆண்டுகள் தென்னாட்டிலே ஈடுஇணையற்ற தலை நகரமாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜேந்திரனின் ஆற்றலுக்கு ஏற்ப தலைநகரும்,புகழுக்கு ஏற்ப கோயிலும் உள்ளன. இத்தலைநகரமான சோழர் ஆட்சியின் தளர்வு காரணமாக மறைந்து போயிருந்தாலும் இவனின் திறமையை எஞ்சியுள்ள கோயில் கூறுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்கிய மதுரை, காஞ்சி, தஞ்சை போன்ற நகரங்களுக்கு இல்லாத சிறப்பு இந்நகருக்கு இருந்தது. ஆனால், இருந்த தடயமே தெரியாது மறைந்து போன ஒரே தலைநகரும் இதுவே.

ராஜராஜ சோழனுக்கும் சேரர் குலப் பெண்ணான திரிபுவன மாதேவி க்கும் (வானவன்மாதேவி) பிறந்த ராஜேந்திர சோழன் மிகுந்த வலிமை மிக்கவன் ஆற்றல் மிக்கவன் என்பதை திருவாலங்காட்டுச் செப்பேடு நமக்கு சான்று கூறுகிறது. அலை கடல் நடுவில் பல கலங்களை செலுத்தி தன் நுண்ணிய போர் திறத்தால் தன் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்திக் கொண்டே சென்றான். இவன் ஆட்சி செய்த காலத்தில் போர்முறைகள், உத்திகள்,வில்,அம்பு போன்றவை இவனின் முதல் மனைவியாக இருந்தது.

தன் மகன் ராஜேந்திர சோழனின் ஆற்றலை அறிந்து ராஜராஜசோழன் கிபி 1012 -இல் முடிசூடி தன் பரந்த சாம்ராஜ்யத்தை தன் மகனிமேஒப்படைத்தான். ஒரு நாட்டை முழுமையாக ஒரு அரசன் மட்டுமே முழு ஆட்சி செய்யும் போது தன் தந்தையுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாவது அரசாண்டு இருக்க வேண்டும் என்பது கல்வெட்டு வழி அறிய முடிகிறது. இவன் இளங்கோவாக இருந்த போதே சுமார் 900,000 வீரர்களுக்கு தலைமைதாங்கி வடக்கே பீஜாப்பூர் வரை வெற்றிகண்டு. மேலை சாளுக்கியரை வென்றவனும் வேங்கி, கங்கை மண்டலத்தை காத்து நின்றவனும் இப்பேரரசனே ஆவான்.

ராஜேந்திரன் பட்டம் எய்திய பிறகு இவனின் அரசாங்க செயல்பாடானது மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அது மட்டுமல்லாது, பல உயர்தர அதிகாரிகள் நுண்ணிய அரசியல் பணியை கண்காணித்தனர். வேளாண்மை, பெரும் சாலைகள், நீர் பாசனம் போன்ற பல துறைகளில் கைதேர்ந்தவர்கள் பணியாற்றினர். இவன் காலத்தில் வணிகர்களின் குழுக்கள், ஊர் சபைகள், கைவினைஞர் குழுக்கள் முழு உரிமையுடன் செயல்பட சுதந்திரம் இருந்தது. அதனால், நாட்டில் முழு அமைதி நிலவியது. இவ்வாறு பலதரப்பட்ட ஆளுமை திறன் மூலம் தன் வீரர் படை நன்கு வலுவானதோடு மட்டுமல்லாது தன் சாம்ராஜ்யத்தையே பெருமளவு பரப்பி ஆசிய நாட்டில் தனக்கென ஒரு தனி இடத்தையே ராஜேந்திர சோழன் நிறுவினான்.

ராஜேந்திர சோழனின் வெற்றி சிறப்பு

ராஜேந்திர சோழன் பரகேசரி என்ற பட்டம் பூண்ட பின் பல இடங்களை கைப்பற்றினான். இடைதுறைநாடு, வனவாசி, கொல்லிப்பாக்கை, மண்டை கடக்கம் முதலானவையும் தெற்கே ஈழ மண்டலம் முழுமையும் ஈழத்து அரசன் முடியும், அவரின் தேவியர் முடியும் கைப்பற்றினான். ராஜேந்திர சோழனுக்கு நூறு ஆண்டுகள் முன்னர் பராந்தக சோழன் பாண்டியரை வென்கான். தோற்று ஓடிய பாண்டியன் ஈழத்தில் தஞ்சம் புகுந்தான் தனது மகுடத்தை ஈழத்தில் பதுக்கி வைத்தான். ராஜேந்திர சோழன் அம்முடியை கைப்பற்றி வெற்றி கண்டான். பாண்டியர்கள் இந்திரன் ஆரம் என்பதைப் பெருமையுடன் தரித்துக் கொண்டனர் அவற்றையும் இராஜேந்திரன் கைப்பற்றினான்.

“ பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
. ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
. சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தெண்டிரை ஈழ மண்டல முழுவதும்”.

என்று ராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்தி கூறிக் கொண்டே போகிறது.

மெய்க்கீர்த்தி புகழ்கொண்ட ராஜேந்திரன் பாண்டிய நாட்டை வென்ற ராஜேந்திரன் அவ்விடத்தில் ஒரு பெரும் மாளிகை எழுப்பி தன் மகனுக்கு சோழ பாண்டியன் என்ற பட்டம் அளித்து அவனை ஆள செய்தான். சேர நாட்டையும் வெற்றிகொண்டு பரசுராமன் காலம் தொடங்கி வந்த கேரள முடியை கைப்பற்றினான். முயங்கி எனுமிடத்தில் மேலை சாளுக்கிய மன்னனான ஜெயசிங்கன் என்பவனை வென்று இரட்டைப்பாடி, ஏழரை இலக்கத்தையும் கைப்பற்றினான். அது மட்டுமல்லாது கொல்லி சூழ்ந்த கொல்லிப் பாக்கையையும் கைப்பற்றினான். கலிங்கம் பகுதியில் பல இடங்களை வென்றான் கங்கை நதி வரையும் வெற்றி கண்டான் என கல்வெட்டுகள் பகர்கின்றன.

“ விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்
. முதிர் படவல்லை மதுரை மண்டலமும்
காமிடை வளைஇய நாமனைக் கோணமும்
வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்
. பாசடைப் பழன மாசுணி தேசமும்
அயர்வில் வன் கீர்த்தி ஆதி நகர் அகவையில்
. சந்திரன் தொல் குலத்து இந்திரரதனை
விளையமர்க் களத்துக் கிளையோடும் பிடித்துப்
பல தனத் தொடுநிறை குலதனத் குவையும்
கிட்டருஞ் செறிமிளை ஒட்ட விஷயமும்
பூசுரர் சேருநற் கோசல நாடும்”.
என்று கல்வெட்டு காட்டுகிறது.

சோழர்களின் வழிவந்த பல அரசர்களையும் அவர்களின் சிறப்புகளையும் அறிந்த நாம். போரில் பெரும் உத்திகளையும் நுண்ணிய ஆற்றலையும் கையாண்டு . ஆசிய நாட்டிலேயே பேரரசனாக வலம் வந்தான் என்பதும் ஆழ்கடல் நடுவில் பல போர்களை செலுத்தி பல நாடுகளைக் கைப்பற்றி தன் நாட்டிற்கு பெரும் சிறப்பு சேர்த்தான் என்பதும். பல சான்றுகள் நமக்கு கூறுகிறது அதனை நம்மில் பலரும் அறிய வேண்டிய ஒன்றாகும். தன் தந்தையை விட ஆட்சியில் சிறந்தவனாக விளங்கியது குறிப்பிடத்தக்க ஒன்று.

கடாரம் கொண்டான்

கங்கை முதல் கடல்கடந்த வெற்றியாளன் ராஜேந்திர சோழனின் பெரும் திறத்தை கங்கை நதி வெற்றி தான் இன்றும் பறைசாற்றுகிறது. எந்த தமிழனும் கண்டிராத வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். ராஜேந்திரனின் தானைத் தலைவர்கள் கங்கை ஆற்றில் இருந்து கொண்டு வந்த புனித நீரை வெற்றிச் சின்னமாகக் கொண்டு வர அதனை வாகை சூடி வரவேற்கும் விதமாக தானே கோதாவரி வரை சென்று வரவேற்றான். கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய ஏரி ஒன்றை தோண்டி சோழகங்கம் என்று பெயரிட்டு நீரை ஊற்றி அதனை வெற்றியின் சின்னமாக மாற்றினான். வரும் வழியில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள திரைலோகி என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலில் தங்கத்தாலான தாமரை மலரை சிவபெருமானுக்கு வைத்து வணங்கினான் என கூறப்படுகிறது. இந்த வெற்றியின் பெயர்தான் கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரம்.

கடாரம் கொண்டான்

ராஜேந்திர சோழனின் பெரும் வெற்றிகள் பல நடந்தது ஆழ் கடல் நடுவில் தான் பல கலங்களை செலுத்தி வெற்றி கண்டான். அதில் ஸ்ரீவிஜயத்து அரசன். சங்கிராம விஜயோத்துங்கவர்மன் என்பவனை வீழ்த்தி கண்ட வெற்றி தான் இன்றளவும் இவனின் புகழ் பேச காரணம் என்றே கூறலாம். அங்கிருந்து பல நாடுகள், நகரங்கள் கைப்பற்றப்பட்டு வித்யாதர தோரணம், தங்கத்தாலான கதவுகள், அழகிய மணிகள் கோர்த்த செய்யப்பட்ட கதவுகள், என ஏராளமான நிதி குவியல்கள் கப்பல் படையால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு கொண்டுவந்து குவிக்கப்பட்டது. இவன் கடல்கடந்த கடாரத்து அரசனை வென்ற வெற்றியால் கடாரம் கொண்ட சோழன் என்ற புகழை கல்வெட்டு கூறுகிறது. அதுமட்டுமல்லாது இவனின் நிக்கோபார் என்கின்ற “நக்க வாரத்தை” வெற்றிகொண்டு புலிக்கொடியை அங்கு பொறித்த செய்தியும்,

“ நித்தில நெடும் கடல் உத்திராலாடமும்
வெறிமலர் தீர்த்தத்து ஏறி புனல் கங்கையும்
அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி
. சங்கிராம விசையோத் துங்கவர்மன்
ஆகிய கடாரத்து அரசனை வகையாம்
பொருகடல் கும்பக் கறியொடும் அகப்படுத்து
உரிமையில் பிறக்கிய பருநிதி பிறக்கமும்
ஆர்த்து அவன் அகநகர் போர்த்தொழில் வாசலில்
. விச்சாதிரத் தோரணமும் மொய்த்து ஒளிர்
புனைமணிப் புதவமும் கனமணி கதவமும்
நிறை சீர் விசயமும் துறைநீர் பண்ணையும்
வண்மலை ஊர் எயில் தொன்மலை ஊரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாஇரு திங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா சோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப்பாளமும்
காவலம் புரிசை மேவிலிம்பங்கமும்
விளைபந் தூருடை வளைப்பந் தூரும்
கலைத்தக்கோர் புகழ் தலைத் தக்கோலமும்
தீதுஅமர் பல்வினை மாதக்கவாரமும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்
தேனக்கவார்பொழில் மாநக்கவாரமும்
தொடுகடல் காவல் கடுமுரட் கடாரமும்
மாப்பெருந் தண்டால் கொண்ட கோப் பரகேசரிவன்மரான
உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர்”.

என ராஜேந்திர சோழனின் கங்கை கொண்ட சோழபுரம் தோற்றுவிக்கப்பட்டது.

ராஜேந்திர சோழன் பெற்ற பட்டங்கள்

ராஜேந்திர சோழன் என்ற பெயருக்கு பின்னால் உள்ள ஒவ்வொரு பட்டங்களும் அவனின் ஒவ்வொரு வெற்றியின் சின்னம் என்றே கூறலாம். அவ்வகையில் அவன் போர் உத்தியின் மூலம் பெற்ற பட்டங்களே அதிகம்.

  1. கங்கை கொண்ட சோழன்
  2. மும்முடிச் சோழன்
  3. மதுராந்தகன்
  4. உத்தம சோழன்
  5. பண்டித சோழன்
  6. வீரசோழன்
  7. பூர்வ தேசன்
  8. அய்யன் பரகேசரி

என பல பெயர்கள் உண்டு. வடதிசைக் கங்கை,தென்திசை ஈழம், குடதிசை மகோதை, குணதிசை கடாரம் என்று நான்கு திசையும் இவன் பெயர் சொல்லும். இவனுக்கு வானவன்மாதேவி, பஞ்சவன்மாதேவி, முக்கோக்கிழான், வீரமாதேவி என்ற பல தேவியர் இருந்தனர். இத்தகு வல்லமை பொருந்திய ராஜேந்திர சோழன் வடக்கே காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள பிரம்மதேசம் என்ற இடத்தில் இறந்தான். இவன் உடல் ஈமத்தியில் இட்டபோது இவன் தேவி வீரமாதேவி யும் தீயில் பாய்ந்து உயிர் நீத்தாள். ஆதலால், வீரமாதேவி அண்ணன் அவர்கள் உயிர் பிரிந்த இடத்தில் தண்ணீர் பந்தல் ஒன்றை அமைத்து அவ்வழி செல்வோருக்கு பயன்பெறும் வகையில் வழி செய்தான்.

ராஜேந்திரன் காலத்து வாணிபம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரன் காலத்திலேயே மும்முடிச் சோழப் பெருந்தெரு என்று முடிகொண்ட சோழன் மடிகை என்று வாணிகத் தலங்கள் இருந்தது என்று கல்வெட்டுக்கள் கூறுகிறது. மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு ஒன்று தரணி சிந்தாமணி பெருந்தெரு எனும் வாணிகத்தை கூறுகிறது. ஆதலால், இங்கு வாணிகம் செழித்து இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், முதலாம் ராஜேந்திர சோழன் தனது போர் உத்திகளை கப்பல் படை மூலமாகவே அதிகம் நிகழ்த்தியதால் பல நாட்டுடன் வாணிபத் தொடர்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உண்டு.

சோழ கங்கை

ராஜேந்திர சோழனால் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஏரி தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. முன்பு கொள்ளிடத்தில் இருந்து நீர் இங்கு வந்து விழும் வகையில் பெரும் அமைப்பு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் சோழப் பேரரசர்கள் தங்கள் ஆட்சியில் நீர்ப்பாசனத்தின் வழிதான் வேளாண்மை வளரும் என்பதை கருத்தில்கொண்டு செயல் ஆற்றி உள்ளனர் என்பது நமக்குப் புலனாகிறது. ஆனால் இன்று இந்த ஏரியின் நிலை களர் நிலமாய் படிப்படியாய் புகழ் குன்றி இருப்பது கவலைக்குரியது. முதலாம் ராஜேந்திர சோழனால் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஏரி எந்த அளவு சிறப்பு மிக்கது என்பதை திருவாலங்காட்டுச் செப்பேடு நமக்கு கூறுகிறது.
சோழ சாம்ராஜ்யத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை நிறுவிய முதலாம் ராஜேந்திர சோழன் நிறுவிய கங்கைகொண்ட சோழபுரத்தின் நிலை தற்போது தடமின்றி கிடக்கிறது. ஆனால், கங்கைகொண்ட சோழீசுவரம் மூலம் மற்றும் கல்வெட்டு செப்பேடுகள் மூலம் நாம் அறிய வேண்டிய பல செய்திகள் உள்ளது.

கங்கைகொண்ட சோழீச்சுரம்

கங்கைகொண்ட சோழீசுவரர் விமானமே தமிழ்நாட்டில் உள்ள விமானங்களில் உயர்ந்த நிற்பதாகும். இக்கோவிலை அடைய நெடுஞ்சாலையிலிருந்து வடக்கே உள்ள வாயில் வழியாக சென்று அடையலாம். ஆனால், கிழக்கில் ஒரு உயர்ந்த கோபுரம் இருந்தது தற்போது அது இடிந்து சரிந்து காட்சியளிக்கிறது. இதுவே முன்பு கோயிலுக்கு வரும் முன் வழியாக முக்கிய வழியாக இருந்தது. உள்ளே திருச்சுற்று கிழக்கு மேற்காக நீண்ட சதுர வடிவில் உள்ளது. இந்த அமைப்பு தஞ்சை கோயிலில் இருந்து மாறுபட்ட அமைப்பாகும். இத்திருச்சுற்று இரண்டு தளங்களைக் கொண்டு கோவிலை சுற்றிய மாளிகையாக உள்ளது. தற்போது ஒரு பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. பிரகாரத்தின் நடுவில் ஓங்கிய விமானமாக நிற்பது கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலே. இதற்கு முன்பு நீண்டதொரு மண்டபம் இருக்கும் கங்கைகொண்ட சோழச்சுரத்தின் வட புறத்தில், தென் புறத்தில் சிறு கோவில்கள் உள்ளது. வடபால் உள்ளது வட கைலாயம் தென்பாலுள்ளது தென் கைலாயம் என்றும் இரண்டு கோவில்களும் சோழர் காலத்து கோவில்கள் என்றும் கூறுவர்.

ஓங்கி உயர்ந்து நிற்கும் கங்கைகொண்ட சோழீசுவரர் விமானம் கீழே சதுரமாகவும் அதற்கு மேல் எண்பட்டை உருவிலும் மேல் உச்சியில் வட்ட அமைப்பிலும் அமைக்கப்பட்டு இருக்கும் இவ்விமானம் சிவபெருமானின் உருவான சிவலிங்க அமைப்பில் கீழே சதுரமாகவும் இடையில் எண்பட்டை வடிவிலும் மேலே வட்ட வடிவிலும் இருப்பது போல அதன் புறத்தோற்ற மாக இந்த விமானம் அமைந்துள்ளது மிகச் சிறப்பான ஒன்று. இந்த சுவரின் கீழ் பகுதியில் பல கோஷ்டங்கள் உள்ளன. அதில் சிவபிரானுடைய பல உருவங்கள் இடம் பெற்றுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலை தோற்றுவித்து சிற்பங்களை புடைத்து அதன் வாயிலாக அனுபவமிக்க முதிர்ந்த சிற்பிகள் மூலம் மற்றும் அவர்களின் மாணவர்களின் மூலமும் தான் மிகப் பொலிவுடன் காண முற்படுகிறது இந்த கங்கைகொண்ட சோழீச்சுரம். இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் அங்க அமைப்பும் முகப்பொலிவும் பார்ப்போர் கண்களை கவரக்கூடிய வகையில் வலம் வந்து கொண்டே இருக்கும். தெற்கே நடமாடுகின்ற நர்த்தனமாடும் கணபதியின் உருவம் அதற்கடுத்து உமையொரு பாகனின் உருவம் அர்த்தநாரியின் சிலை அதற்கு அடுத்து தட்சிணா மூர்த்தியின் சிலை என பல சிலைகள் காணப் படுகிறது. அதன் அருகிலுள்ள முனிவர்களின் சிலை கோவிலின் சம காலத்தவை என்றும் அதற்கு அடுத்து ஹரிஹரன் சிற்பம் அதற்கடுத்து சுவரின் மேலே கோடியில் ஆடவல்லானின் அற்புத சிற்பம் என பலவாறு சிற்பங்கள் உள்ளது.

ஆனந்தக்கூத்தனின் அருகில் உமை அன்னை, நந்தியின் அருகில் நின்று கொண்டு தாண்டவத்தைக் கண்டு திகைத்து நிற்கிறாள் அண்ணலின் அருகில் காளியின் ஆடலையும் காண்கிறோம். மறுப்பால் குடமுழா வாசிக்கும் நந்திகேஸ்வரனையும் காணலாம். ஆடுகின்ற பெருமானின் காலடியில் கணங்கள் ஆடுகின்றது இங்கு ஒரு அற்புத உருவே காணலாம் எலும்பும் தோலுமாய் ஆனால் பத்தியே உருவாக காரைக்காலம்மை தாளம் போடுகின்றன காட்சி என மிகவும் அரிய காட்சிகள் இக்கோவிலில் காணப்படுகிறது. தஞ்சாவூர் கோயிலில் இதேபோன்று நடராஜபெருமான் உருவம் உள்ளது. ஆனால், அதற்கு கீழ் காரைக்கால் அம்மையார் உருவமில்லை இந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடுகின்ற அண்ணலின் தூக்கிய திருவடி கீழ் காரைக்கால் அம்மையார் அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில் காரைக்கால் அம்மையார் அமர்ந்திருப்பது போன்ற காட்சி கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் சுமார் 1050 எடுப்பித்தான் சேக்கிழார் நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றியவர். இருப்பினும் சோழர் அவையில் அமைச்சராக பணிபுரிந்தவர். அதாவது கங்கை கொண்ட சோழபுரத்து சோழர் அவையில் பணிபுரிந்தார். அவர் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலை பலமுறை கண்டிருப்பார். அப்போது இங்குள்ள ஆனந்தக் கூத்தாடும் அவரின் கீழ் இருக்கும் காரைக்கால் அம்மையாரின் உருவமும் அவர் மனதை கொள்ளை கொண்டிருக்க வேண்டும். ஆதலால் இப்பாட்டு தோன்றியிருக்க வேண்டும் இறைவா நீ ஆடும் போது அடியின் கீழ் இருக்க என்பது இந்த சிற்பத்தை தான் என்றால் மிகையல்ல.

மேற்குப் புற சுவரில் கங்காதரர், லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், விஷ்ணு அநுக்கிரக மூர்த்தி ஆகியவர்களின் சிற்பங்கள் உள்ளது. வட சுவரில் காலாந்தகர், துர்க்கை, பைரவர், காமதகனர் ஆகியவர்களின் உருவம் உள்ளது. பிரம்மாவின் உருவம் தாடி யுடன் சேர்ந்து மூன்று தலைகளாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது அவரது மேல் கரங்கள் யாகத்திற்கு பயன்படும் ச்ருச்,ச்ரவம் என்ற மரத்தாலான கலங்கள் உள்ளன. அவருக்கு இரண்டு தேவியர் காணப்படுவர் ஒரு தேவி சரஸ்வதி, மற்றவர் சாவித்திரி தேவி. இது ஒரு அரிய காட்சி இச் சுவரின் கிழக்கு கோடியில் உள்ள காமாந்தகர் சிலை மிகவும் பெருமிதமான அமைப்பு கொண்டது சிவபெருமானுக்கு அவர் சுட்டிக்காட்டும் கையும் போற்றத்தக்க ஒன்றாகும்.

இதையடுத்து பக்கவாட்டில் உள்ள படிகள் வட புறத்தில் இருந்து அர்த்த மண்டபத்திற்கு செல்லும் படிகள் அதற்கு இருமருங்கும் உலகமே வியக்கும் அளவு இரண்டு சிற்பங்கள் உள்ளது. ஒன்று சண்டேச அனுக்கிரக மூர்த்தி உருவம், சிவபெருமானுடன் உமையன்னை அமர்ந்திருக்கும் உருவம். மற்றது சரஸ்வதியின் சிற்பம் சரஸ்வதி தேவியின் கையில் அக்ஷமாலை, கெண்டி, ஓலைச்சுவடி, ஆகியன கொண்டு சாந்தமும் புன்னகையும் தவழ கலையின் பிறப்பிடம் காணப்படுகிறது.

ஒரு சிறந்த கற்பனை திறன் மிகுந்த சிற்பத்தின் முன்னே நிற்கிறோம் என்ற எண்ணம் நமக்கு தோன்ற அளவிற்கு சிற்பம் வியக்கத்தக்க வகையில் அமைந்திருக்கும்.
விமானத்துக்கும் முன் உள்ள மண்டபம் இரண்டடுக்கு மிகப் பெரிய மண்டபமாக உயர்ந்து இருக்கிறது. ஆனால், இப்பொழுது அதன் நிலை மிகவும் பழமையானதாக காணப்படுகிறது. மேல் பகுதி மிகவும் பிற்காலத்தில் எடுக்கப்பட்டது போன்று இருப்பதால் முன்னர் கூறியதுபோல அணைக்கரை மண்டபத்தை கலைத்து கற்களை எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்பது நமக்குப் புலனாகிறது. அதுமட்டுமல்லாது இம்மண்டபம் அலங்கரித்த சிற்பங்கள் மிகவும் பழமையானதாகும் கோட்டங்களில் இல்லை என்றும் இம்மண்டபத்தில் பல வாயில்களை காத்து நிற்கும் வாயில் காவலர்கள் சிலை மிகவும் பெரியவை அதுமட்டுமல்லாது மிகவும் அழகு மிக்கவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலில் உள்ள பல சிற்பங்கள் சாலுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட வையாக உள்ளது. முதலாம் ராஜாதிராஜ சோழன் மேலைச் சாளுக்கியர் தலை நகரான கல்யாணபுரத்தை வெற்றி கொண்டபோது அங்கிருந்த சில சிற்பங்களை கொண்டு வந்தான் என்பது நமக்குப் புலனாகிறது. ராஜேந்திர சோழன் வெற்றி கண்டு வந்த பல நாடுகளில் கைப்பற்றிய சிலைகளும் இக்கோவிலில் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட இரண்டு சிற்பங்கள் இப்பொழுது சிம்மக்கேணிக்கு அருகில் உள்ள சிற்றாலயத்தில் வழிபாட்டில் உள்ள துர்க்கை சிலை ஆகும். பலகரங்களுடன் எருமை ஒன்றின் தலையை துண்டிக்க அதன் கழுத்தில் இருந்து ஒரு மனித உருவில் அசுரன் வெளிப்படுவது தேவியின் சிம்மத்தின் மீது பாய்ந்து கடிப்பதும் புதுமையாக இருப்பதை நாம் காணலாம். தமிழ்நாட்டு சிற்பங்களில் மகிசாசுரன் மனித உருவமும் எருமைத் தலையும் உடையவனாக காணப்படுவான். ஆனால், இங்கு எருமை உடலும் அதிலிருந்து தோன்றும் மனித உருவமும் காணப்படுகிறது. இது சாளுக்கிய நாட்டு சிற்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று வழங்கப்படும் நவகிரகமான சூரிய பீடமும் சாளுக்கிய சிற்பமாகும். அமர்ந்த தாமரை மலர் மேலே காணப்படுகிறது அதன் கீழே ஒரு சக்கரம் உள்ளதாகவும் அதை இழுத்து பாயும் ஏழு குதிரைகளும் அதை ஓட்டி வரும் அருணானும் எட்டு திசைகளிலும் உள்ள உருவங்களும் ஒரு புதிய உத்தி அமைப்பு கொண்டு உருவாக்கப்பட்டவையாக காணப்படும்.

இவ்வாறு கங்கைகொண்ட சோழபுரத்தின் அமைப்பையும் சிறப்பையும் காணக்கிடைக்காத அரிய காட்சிகளையும் சொல்லிக்கொண்டே போகலாம். தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையாக நிற்கும் கங்கைகொண்ட சோழபுரத்தின் சிறப்பு இன்றும் பலர் அறியாத ஒன்றாகவே உள்ளது. முதலாம் ராஜேந்திர சோழன் போர் முறைகள் உத்திகள் சிறப்புகள் போன்றவை அளப்பரியது அதனை பலரும் அறிய வேண்டும். ராஜேந்திர சோழனின் சிறப்புகளைக் கூறும் கல்வெட்டுகள், செப்பேடுகளை நாம் கூர்ந்து நோக்கி ஆராய்ந்தோமானால் பல உண்மைகள் புலப்படும்.

முதலாம் ராஜராஜ சோழனுக்கும் திரிபுவன மாதேவிக்கும் மார்கழித்திங்கள் திருவாதிரை நாளன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். மதுராந்தகன் என்ற இயற்பெயர் கொண்ட இவன் ராஜேந்திர சோழன் என்ற பட்டப்பெயர் மட்டுமல்லாது பல பட்டங்களை முடிசூடிக் கொண்ட பேரரசன் ஆவான். கி.பி 1012 தொடங்கி கி.பி 1044 வரை தனது திறமைமிக்க ஆட்சியை தந்தையுடன் சேர்ந்தே நடத்தினான். திருச்சி மாவட்டம் திருப்பலாத் துறையில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு, ராஜேந்திர சோழனின் மெய்க் கீர்த்தியை திருமன்னி வளர என்று தொடங்கி “கோப்பரகேசரி பன்மரான ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு ஐந்தாவது…….. இவ்வாண்டு மேஷ நாயற்று செவ்வாய்க்கிழமை பெற்ற சதையத்தின் நாள் ” என்ற வாசகம் உள்ளது. அதாவது வரும் ஐந்தாம் ஆண்டு சித்திரை மாதம் செவ்வாய்க் கிழமை, நட்சத்திரம் சதயம் ஆகிய பஞ்சாங்க குறிப்பு கணக்கிட்டு தான் இவனின் ஆட்சி தொடக்கமானது 1012 மார்ச் மாதம் என்று கணக்கிட்டனர்.

தஞ்சை பெரிய கோயிலின் இரண்டாவது கோபுர கல்வெட்டை கொண்டு ராஜராஜசோழனின் 29 ஆவது ஆண்டை கணக்கிட்டு. அவனது இறுதி ஆண்டான கிபி 1014 என்றும் கூறலாம். இக்கல்வெட்டில் ஸ்தூபி குடங்கள் கொடுக்கப்பட்ட கொடைகள், ராஜேந்திர சோழனின் இரண்டாவது மூன்றாவது ஆண்டில் கொடுக்கப்பட்ட கொடைகள் பற்றியும் குறிப்பு உள்ளது. ஆதலால், 1012 முதல் ஆண்டு இவன் ஆட்சி தொடங்கி இருக்கக்கூடும். இந்த ஆண்டில் தந்தை உயிரோடு இருந்ததால் தன் மகனுக்கு இளவரசுப் பட்டம் சூடிஇருக்க வேண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து 1014 -இல் இறந்த பின் பேரரசர் பட்டம் சூட்டி இருக்க வேண்டும் என கருதலாம்.

ராஜேந்திர சோழன் 1012 மார்ச் 27 ஜூலை 7 க்கு இடைப்பட்ட காலத்தில் முடி சூட்டப்பட்டு இருப்பான் என்று பஞ்சாங்க குறிப்புகள் கொண்டு கணிக்க முடிகிறது. தன் தந்தையுடன் இணைந்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த பின் தனி ஆட்சி நடத்தினான். 1044 வரை இவன் ஆட்சி மொத்தம் முப்பத்திரண்டு ஆண்டுகள் மிகவும் சிறப்பாக நடந்தது. ராஜராஜனுக்கு பல மனைவியர் இருந்தனர் பட்டத்தரசியாக இருந்தது உலோகமாதேவி. ஆனால், இவருக்கு குழந்தை இல்லாததாலோ இல்லை ராஜேந்திரனின் மிகுந்த சிறப்பு காரணமாகவோ தெரியவில்லை இவனுக்கு அரசு பட்டம் சூட்டப்பட்டது. திருபுவன மாதேவி சேர குலத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

பிறப்பும் பெயரும் படமும்

ராஜேந்திர சோழன் பிறந்த மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் திருவொற்றியூர், விருத்தாச்சலம் போன்ற கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும் என்ற செய்திகள் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது. திருவொற்றியூர் கல்வெட்டில் இவன் பிறந்த நாளில் நெய்யபிஷேக ஏற்பாடு செய்ததை” திருவொற்றியூருடைய மகாதேவர்க்கு உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழன் திருநாள் மார்கழி திருவாதிரை நாளன்று நெய்யாடியருளவேண்டும் மிசத்துக்கு திருவோற்றியூர் திருமயானமும் மடமுடைய சதுரானை பண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்த காசு நூற்றைம்பது” எனக்கூறி ராஜேந்திரன் மிக அழகிய உருவம் கொண்டவன் எனவும் கல்வெட்டு கூறுகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடு இவன் காமன் என்றும் ஆனால் சிவபெருமானின் நெற்றிக்கண் காணாதவன் என்றும் கூறுகிறது.

மதுராந்தகன் என்ற இயற்பெயர் கொள்ள காரணம் தந்தை இராஜராஜனின் சிறிய தந்தை உத்தம சோழனிடம் கொண்ட பற்று தான் தன் மகனுக்கு பெயர் சூட்ட காரணம். மதுராந்தகன் என்பது மதுரைக்கு அந்தகன் எமன் என்று பொருள் ராசேந்திரன் என்பது இவன் அரியணை ஏறிய பொழுது இட்ட பெயர் ஆகும். சோழ மன்னர்கள் பரகேசரி ராஜகேசரி என்று தங்களது பெயர்களை மாறிமாறி வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அது போன்று ராஜேந்திரனுக்கும் பரகேசரி என்ற பட்டப்பெயர் சூட்டி இருந்தனர். பரகேசரி என்பது பல அரசர்கள் அல்லது பகைவர்க்கு சிங்கம் என்பதை குறிப்பதாகும். கல்வெட்டுகளில் இவன் பெயர் முன்னதாக கோப் பரகேசரி என்ற மரபு இருந்ததைக் காணலாம்.

ராஜேந்திர சோழனுக்கு பல பட்டப் பெயர்கள் வர காரணம். இவன் பல நாடுகளின் மீது தொடுத்த போரேக் காரணம் . அவ்வகையில் மேலை சாளுக்கிய நாட்டின் மீது எடுத்த போரின் போது நூர் மாடி சோழன் ராஜேந்திர வித்தியாதரன் என்றும் சோழ குல அணி என்றும் பலவாறு வர்ணிக்கப்பட்டான். தளபதியாக இருந்தபோது கங்க நாடு, வேங்கி நாடு, கலிங்கம் போன்றவற்றின் மீது படை எடுத்த காரணத்தால் மகா தண்டநாயகன் பஞ்சவன் மாராயன் என்று பெயர் பெற்றான். அறிவில் சிறந்தவன் என்பதால் பண்டித சோழன் என்றும் அழைக்கப்பட்டான் கங்கைகொண்ட வெற்றியால் கங்கைகொண்டான் என்றும் கடாரம் வெற்றியால் கடாரம் கொண்டான் என்றும் மாற்று அரசர்களை வென்று முடிக் கொண்டதால் முடிகொண்ட சோழன் என்றும்

அதுமட்டுமல்லாது

  1. வீரசோழன்
  2. மதுராந்தகன்
  3. மனுகுல சோழன்
  4. அதிசய சோழன்
  5. விக்கிரம சோழன்
  6. வீரராஜேந்திரன்
  7. நிருப திவாகரன்
  8. உதாரவிடங்கன்
  9. பராக்கிரம சோழன்
  10. பார்த்திவேந்திரன்
  11. ராஜ ராஜேந்திரன்
  12. தானவினோதரன்
  13. பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட அய்யன்
  14. உத்தம சோழன்
  15. பண்டித சோழன்
  16. ஐய சிம்ம சரபன்
  17. இராசவித்யாதரன்
  18. சோழேந்திர சிம்மன்
  19. மகிபால குல காலன்
  20. முடிகொண்ட சோழன்
  21. மலைநாடு கொண்டான்
  22. கங்கை கொண்ட சோழன்
  23. கடாரம் கொண்ட சோழன்
  24. இரட்டைபாடி கொண்ட சோழன்
  25. மண்டை கொண்ட சோழன்

என இவன் பட்ட பெயர்கள் பலவாறு அடுக்கிக் கொண்டே போகும்.

ராஜேந்திர சோழனின் மனைவியர்கள்

ராஜேந்திர சோழனின் தந்தை ராஜராஜ சோழன் எவ்வாறு பல மனைவியரை மணந்தாரோ அது போலவே தன் தந்தைக்கு நிகராக

முக்கோக்கிழானடிகள்
அறிந்தவன் மாதேவி
வானவன்மாதேவி (திரிபுவன மாதேவி)
வீரமாதேவி
பஞ்சவன் மாதேவி.
என பல மனைவியரை ராஜேந்திரன் மணந்தான்.

கல்வெட்டு கூறும் பரவை நங்கை

முதலாம் ராஜேந்திர சோழனின் மனம்கவர்ந்த மங்கை, நங்கை பரவையாகும். நங்கை பரவையின் வேண்டுதலுக்கு ஏற்ப எடுக்கப்பட்டதுதான் திருவாரூர் திருக்கோயில் ஆகும். அதுமட்டுமல்லாது அங்கு ஒரு மண்டபமும் ராஜேந்திரனின் மகனான ராசாதி ராசனால் எழுப்பப்பட்டது. அது நடராஜர் உள்ள சபாபதி மண்டபம் ஆகும்.

அக்கோவிலில் பரவை நங்கை தன் இறுதிக்காலம் வரை பணியாற்றி கழித்தாள் என்பதும் இவள் பெயரில் எண்ணாயிரம் என்ற ஊரில் பரவை ஈஸ்வரமுடையார் என்ற கோயிலும் இருந்த செய்தி இராஜேந்திர சோழன் கால கல்வெட்டில் புலனாகிறது.
சோழர்களின் வரலாற்றில் ராஜேந்திரனுக்கு என்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை கட்டிக் காத்தது நம்மில் பலரும் அரியாத ஒன்று. திரைப்படங்களில் வரக்கூடிய கற்பனை பாத்திரங்களுக்கு ரசிகர்கள் சேருவது சிறப்பல்ல நம் நிஜ வாழ்வில் கற்பனைக்கு எட்டாத அளவில் ஆற்றல்மிக்க ஆட்சியை நடத்தியவர்களை நினைவில் கொள்வதே சிறப்பாகும்.

ராஜேந்திர சோழன் ஆட்சியில் கண்ட சிறப்புகள்

முதலாம் ராஜேந்திரனின் பிள்ளைகள் தன் தந்தைக்கு நிகராக சோழர் ஆட்சியில் வெற்றி கண்டது ராஜேந்திரனுக்கு பெருமை சேர்ப்பதாகும் . அவ்வகையில், பெண்மக்கள் அருண்மொழி நங்கை, அம்மங்கை. ஆண்மக்கள் இராசாதிராசன் ,இரண்டாம் இராசேந்திரன் ,ராஜமகேந்திரன், வீரராசேந்திரன், சுந்தர சோழ பாண்டியன், விக்ரம சோழ பாண்டியன் ,பராக்கிரம சோழ பாண்டியன், மும்முடிச்சோழன், வீரசோழன், மதுராந்தகன், பராந்தகன். போன்றோர் தன் தந்தைக்கு பின்னான சோழர் ஆட்சியில் பெரிதும் வெற்றிகண்டு தமிழ் நாட்டை சிறப்புடன் வழிநடத்தினர்.

பள்ளிப்படை கோவில்

இறந்தவர்கள் நினைவாக அவர்கள் இறந்த இடத்தில் கட்டப்படும் கோவில்கள் பள்ளிப்படைக் கோயில்கள் என பட்டது. அந்த வகையில் சோழர் காலத்தில் முதன் முதலாக எடுக்கப்பட்ட பள்ளிப்படை கோவில் ஆதித்த ஈஸ்வரம், அறிஞ்சிகை ஈஸ்வரம் , பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம் போன்ற கோவில்கள் உள்ளது. அவ்வகையில் ஒரு கல்வெட்டின் மூலம் ராஜேந்திர சோழனின் பள்ளி படையும் பிரம்மதேசம் என்ற ஊரில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது. ராஜேந்திர சோழனின் ஆட்சி ஆண்டில் 33 அதாவது 1044 இறந்தபோது தொண்டை மண்டலப் பகுதியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறியமுடிகிறது.

ராஜேந்திரனின் மனைவியரில் ஒருவரான வீரமாதேவி ராஜேந்திரன் இறந்த போது தானும் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார். அப்போது வீரமா தேவியின் சகோதரனும் சேனாதிபதியுமான மதுராந்தகன் பரகேசரி மூவேந்த வேளான் என்பவன் பிரம்மதேசத்தில் இவ்விருவருக்கும் தண்ணீர்பந்தல் ஒன்றை ஏற்படுத்தியதாக கல்வெட்டு கூறுகிறது.

ராஜேந்திரனின் ஆட்சிப் பரப்பு

ராஜேந்திரன் காலத்தில் சோழநாடானது சென்னை மாநிலம், மைசூர் மாநிலம், ஒரிசா மாநிலத்தின் தென் பகுதி, நிசாம் அரசின் பெரும்பகுதி, கேரளம், இலங்கை போன்ற நாடுகளை அடங்கியதாகவும். கடல் கடந்து ஈழம், கடாரம், நக்கவாரம், கிழக்கிந்திய தீவுகள் என தன் ஆட்சியில் தன் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே சென்றான் ராஜேந்திரசோழன்.

ராசேந்திரன் காலத்து காசுகள்

ராஜராஜ சோழன் காலத்திலிருந்து காசுகள் இருந்திருக்கும் என்பது நமக்கு கல்வெட்டுகளின் வழியும் அகழ்வாராய்ச்சியின் வழியும் மட்டுமே அறிந்த ஒன்று. ராசராசன் 11 வகையான காசுகளை வெளியிட்டு இருந்தான் என்பதும் அதில் ராஜேந்திரன் காலத்தியது ஆறுவகை காசுகள் உள்ளது என்பதும் நாம் அறிய வேண்டிய ஒன்று. ஆந்திர மாநிலத்தில் தவளே ஸ்வரத்தில் கிடைத்துள்ள காசு குவியலில் உள்ள தங்க நாணயங்களில் கங்கை கொண்ட சோழன், தமிழ் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்ட முடிகொண்ட சோள என்று தமிழ் கிரந்த எழுத்தில் உள்ள தங்க காசும் யுத்தம் இல்லை என்று கிரந்த எழுத்தில் எழுதப் பட்டுள்ள காசும் இவன் காலத்தியதா என்ற ஐயப்பாடு இன்றும் நிலவுகிறது. தற்போது இத்தகைய காசு ஒன்றை தொல்லியலாளர் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து கண்டறிந்துள்ளார். இம்மன்னனால் வெளியிடப்பட்ட காசுகளின் நான்கு வகை காசுகள் நகரிலும் இருவகை காசுகள் கிரந்த எழுத்தில் உள்ளது என்பது அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்த சான்றுகள் ஆகும்.

முத்திரை பதித்த ராஜேந்திர சோழன்

ராஜேந்திரனுடைய செப்பேடுகளை கோர்த்த வளையங்களில் மிக அழகாக முத்திரைகள் இருப்பதை காணமுடிகிறது. முத்திரையை ஒட்டி வட்டமாக சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று இருக்கும் அது ராஜேந்திரசோழன் வெளியிட்ட சாசனம் என்பதும் இதே ஸ்லோகம் செப்பேடுகள் மட்டுமல்லாமல் சில கல்வெட்டுகளின் தொடக்கத்தில் காணப்படும். ஆயிரத்தளி எனப்படும் பழையாறையில் மங்களாம்பிகை கோவிலில் காணப்படுவது சான்றாகும்

கிரந்த எழுத்தில் சமஸ்கிருத மொழியில் உள்ள ஸ்லோகமானது,

ராஜந்ய மகுடச் }ரோணி ரத்நேஷீசாசநம். .
ஏத்த் ராஜேந்த்” ரசோளஸ்ய பரகேஸரி வர்ம்மண:…

என்று பொறிக்கப்பட்டது இதன் பொருள் என்னவென்றால்” இது மாற்று அரசர்களின் மணிமுடிகள் பாதத்தை அணி செய்கின்ற அளவு சிறப்புடைய பரகேசரிவர்மன் ஆக ராஜேந்திர சோழனுடைய சாசனம் என்பதை குறிக்கிறது.

ராஜேந்திர சோழனின் படையெடுப்புகள்

ராஜேந்திரனின் வாழ்க்கையில் 20 வருடங்கள் போருக்காவே அர்ப்பணிக்கப்பட்டது என்று கூறலாம். அவ்வகையில் ராஜேந்திர சோழனின் படையும் வலிமைமிக்க படையாகவே இருந்தது. ராஜேந்திர சோழனின் வெற்றி வெறியும், தன் நாட்டினை பெரும் எல்லைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், மற்றவர்களை அடிபணியச் செய்வதும், பல நாடுகளில் போர் செய்து செல்வங்களைக் கொள்ளையடித்து வருவதும் என பல நாடுகள் வெற்றிகொள்ள வழிசெய்தது.

இவைகள எல்லாம் ஒரு பக்கம் இருக்க ராஜேந்திர சோழனின் தீவிரமான படையெடுப்புக்கு முக்கிய காரணம் அன்றைய காலத்தில் நிலவிய வணிக முயற்சிகளே என்று கூறப்படுகிறது.

பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் மூன்று அரச வம்சங்கள் வணிகத்தில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தது. ஒன்று எகிப்து நாட்டை மையமாக கொண்ட பாதிமிட என்ற அரச வம்சம், இரண்டாவது தென்னிந்தியாவை மையமாகக்கொண்ட நம் சோழ வம்சம், மூன்றாவது சீனத்தை மையமாகக்கொண்ட சாங் வம்சம். இந்தப் பெரு வணிகங்கள் அனைத்தும் அரபிக்கடல், இந்து மகா சமுத்திரம், வங்கக்கடல், சீனக்கடல் ஆகியவற்றின் கடல்வழி வணிகமாகவே வந்து சென்றது. எகிப்து மற்றும் சீன அரேபிய நாட்டு வணிகத்தில் ஆதிக்கம் தொடர்பாக கேரள கடற்கரை, இலங்கை கடற்கரை, பல்பலத் தீவுகள் இராஜராஜன் காலத்திலும் ஆந்திரா,ஒரிசா, வங்கக் கடற்கரைகள் இராஜேந்திரன் காலத்திலும் அப்பகுதியில் இருந்த அரசர்களையும் வென்று கொள்ளப்பட்டனர்.

அந்தமான் தீவுகள், கடாரம், ஸ்ரீவிஜயம் ஆகிய நாடுகள் மலாக்க சந்தி, ஜாவா கடல் தாய் குடாக்கடல் போன்றவைகளில் ஆதிக்கம் செலுத்து வதற்காக கைப்பற்றப்பட்டன. பின்பு ஸ்ரீவிஜய மன்னர்கள் சோழ வணிகத்திற்கு தங்கள் கடல் கரையில் தொல்லை தந்த போது பர்மா வழியாக சீன நாட்டிற்கு தரைவழி வணிக வழிகாண சீன மன்னருக்கு தூதுக் குழுவும் அனுப்பப்பட்டது.

ராஜேந்திர சோழன் அலைகடல் நடுவில் பலகலம் செலுத்திய பயன் வணிகத்தில் பெரும் பங்காற்றியது. சீன பொருட்களும் மலாய்நாட்டுப் பொருட்களுமான செம்பு, கற்பூரம், அகில் போன்ற பல பொருட்கள் சோழநாட்டிற்கு கிடைத்தது. ராஜேந்திரனின் போர்கள் கடல்வழி வணிகம் செழிப்பிற்கு ஆகவே கடல் சார்ந்த அரசுகள் மீது தொடுக்கப் பட்டது என்பது இதன் மூலம் புலனாகிறது.

கடார வெற்றி முதல் ஈழத்து வெற்றி வரை

முதலாம் ராஜேந்திர சோழனின் கடார வெற்றி மூன்றாம் ராஜேந்திர சோழன் வரை நிலைத்திருந்தது. அதுமட்டுமல்லாமல், அவரின் புகழ் 200 ஆண்டுகளுக்கு மேலும் அரசியலில் தனி இடம் வகித்தது. கடார வெற்றியின் தாக்கமானது முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பெரும் சிறப்பை தேடித் தந்தது. இடைப்பட்ட காலத்து வரலாற்றில் அரசியல் சமூகத்தில் இருக்கக்கூடிய பெருமக்களுக்கு சிறப்புப் பெயராக அரசர்களின் பெயர்களும் விருது பெயர்களும் வழங்கப் பட்டது பல கல்வெட்டுகளில் காணப்படுகிறது. தங்களின் இயற்பெயர்களுடன் அவை சேர்த்து வழங்கப்பட்டது. அரசர்களின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட இடங்கள், பெயர்கள், ஆறுகள், கோவில்கள், வாய்க்கால்கள் போன்றவைகளுக்கும் அரசர்களின் பெயர்களையும் விருதுகளையும் வைப்பது வழக்கமாக இருந்தது.

முதலாம் ராஜேந்திர சோழனின் கடார வெற்றியின் மூலம் வணிகர்கள், அதிகாரிகள், படைத் தலைவர்கள், குறுநிலத் தலைவர்கள்( அரையன்) நெசவு வணிகர்கள் (கைக்கோளர்) போன்ற பெருமக்களுக்கு பட்டம் கொண்ட பெயர்களும் வழங்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டுகளின் வழி அறியமுடிகிறது. அக்கல்வெட்டில் காணப்படும் பெயர்களும் பட்டங்களும்

காலம். மன்னன். ஆட் பெயர்

கி.பி.- 1035. – ராஜேந்திரன்-I. -சேவூர் மணிநாகன் ஆன கிடாரங்கொண்ட சோழ செட்டி,
கி.பி .- 1042. ராஜேந்திரன்-I- சந்திரன் தான தொங்கன் ஆன கடாரங்கொண்ட சோழ மாயிலெட்டி,
கி.பி -1012-1044 ராசேந்திரன்-I- கடாரம் கொண்ட சோழ பிரம்மராயன்,
கி.பி. – 1057. ராஜேந்திரன்-II – கடாரம் கொண்ட சோழன் செலை செட்டி,
கி.பி. – 1068. வீரராசேந்திரன் – கன்றைக்காவுடையார் மாதேவன் சோழ மூவேந்த வேளான்,
கி.பி. -1097. குலோத்துங்கன்-I -சேந்தன் காரானை ஆன கிடாரத்தரையன்
கி.பி. -1013. குலோத்துங்கன்-III- பிச்ச தேவனான கிடாரத்தரையன் சமய சேனாபதி,
கி.பி -1236. ராசராசன்-III – திருவுடையான் உதையபெருமாள் ஆன கடாரத்தரையன்,
கி.பி. -1236. ராசராசன்-III – திருவுடையான் வீரம் அழகிய தேவனான கடாரத்தரையர்,
கி.பி -1245. ராசராசன்-III – கிடாரங்கொண்ட பறையன்,
இதேபோன்று இடப்பெயர்களுக்கும் கடாரம் என்று பெயர் சூட்டி இருப்பதை கல்வெட்டு வழி காணமுடிகிறது. அவை,
காலம் மன்னன். இடப்பெயர்
கி.பி. -1035 ராசேந்திரன் -I. சோழ மண்டலத்து அருமொழித் தேவ (வள)நாட்டு கிடாரங்கொண்ட சோழ நல்லூர்,
கி.பி. -1038. ராசேந்திரன்-I. பெரும்பற்றப்புலியூர் கீழ்பிடாகை கிடாரங் கொண்ட சோழ பேரிளமைநாட்டு பராக்கிரம நல்லூர்,
கிபி 1064. வீரராசேந்திரன்-I. ஸ்ரீ கடாரங்கொண்ட சோழச்சேரி நெட்டூர் இளவடி கிரமவித்தன்.
கி.பி. -1076-1112. குலோத்துங்கன்-I. கிடாரங்கொண்டான் திரு நந்தவனம், கிடாரங்கொண்டான் மடம், கிடாரங்கொண்டான் விளாகம்,
கி.பி. 1084- குலோத்துங்கன்-I. கிடாரங்கொண்ட சேரி நெட்டூர் அங்கி பிரான்,
கி.பி.1300. மனையிற்கோட்டத்து பாசாலி நாட்டு கடாரங் கொண்ட சோழபுரம்,
கி.பி 1454. – பராக்கிரம பாண்டியன் கிடாத்தூர் உடையான்
கி.பி 1600. வடபரிசார நாட்டு நவிரையான கப்பலன் கிடாரம்.

இவ்வாறு இடப் பெயர்களில் கடாரம் இருப்பதை காணமுடிகிறது. இங்கு குறிப்பிடப்படும் சேரி என்பது பிராமணர்கள் ஊரிருக்கையில் உள்ள பிரிவுகளாகும். இந்த பிராமண ஊரிருக்கைகளில் புதியதாக அமைக்கப்பட்ட ஊர்களுக்கு அரசர் அல்லது தெய்வப் பெயர்களையே சேரிகளாக சுட்டுவர். தென்காசியை சேர்ந்த பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு பதினைந்தாம் நூற்றாண்டில் விளங்கியல் கிடாரத்தூரையும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிடாரம் என்ற ஒரு கல்வெட்டு ஊரின் பெயரை கி.பி 16,17 -ஆம் நூற்றாண்டில் கப்பலன் கிடாரம் என்று குறிப்பதும் ராஜேந்திர சோழனின் செல்வாக்கானது சுமார் 5,600 ஆண்டுகளுக்குப் பிறகும் கடார வெற்றியை காட்டிக்கொண்டே இருக்கிறது.

இலங்கையை வெற்றி கொண்ட ராஜேந்திர சோழன்

சோழ அரசர்கள் இலங்கையைக் சுமார் 77 ஆண்டுகள் நேரடியாக ஆட்சி செய்தனர். ராஜேந்திரனின் படையெடுப்பில் தோற்று ஓடிய இலங்கை அரசனான ஐந்தாம் மகிந்தன்( 982- 1017) தென் இலங்கைக்கு சென்று ஒளிந்து கொண்டான். ஆனால், ராஜேந்திர சோழன் தென்னிலங்கையில் அவனை சிறைப் பிடித்து சோழநாட்டிற்கு கைதியாக கொண்டு சென்றான். 12 ஆண்டுகள் கைதியாக இருந்த அவன் 1029 இல் இறந்தான் . அவனது மகன் தான் காஸ்யபன், தென்னிலங்கையில் அவனது தளபதிகளின் உதவியோடு எழுச்சி பெற்று முதலாம் விக்கிரமபாகு (1017-1041) என்ற பெயரில் சிங்கள அரசை நிறுவினான். ராஜேந்திர சோழன் 1941- இல் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து அந்த சாம்ராஜ்யத்தையும் வீழ்த்தினான்.

மெய்க்கீர்த்தி புகழ்பாடும் ராஜேந்திரன் இலங்கை வெற்றி,
“பொருகடல் லீழத்து அரசர் தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஒங் எழில் முடியும்
முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தெண்டிரை ஈழ மண்டலம் முழுவதும்”
இலங்கையில் காணப்படும் முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டுகள்

1. திருகோணமலை
2. மாதோட்டம் கல்வெட்டு
3. மானாங் கேணி கல்வெட்டு
4. ஐநூற்றுவர் அம்பலத்து கல்வெட்டு
5. பொலன்னருவை துண்டு கல்வெட்டு
6. திருகோணமலை பத்திரகாளி அம்மன் கோவில் தூண் கல்வெட்டு
7. திருக்கேதீஸ்வரத்தில் இரண்டு அவை தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் 27 வரிகள் உள்ளன.
8. வானவன் மாதேவி ஈஸ்வரத்தில் கந்தாளயப்பிரம்மதேயம் . பிரம்ம தேயங்களிலே முதன்மையானது கந்தாளயப் பிரம்மதேயம் ஆகும்.
9. திருகோணமலைக் அருகிலுள்ள நாதனார் கோவிலில் 16 தமிழ் கல்வெட்டு கிடைத்துள்ளது அதில் ஏழு கல்வெட்டு முதலாம் ராஜேந்திரன் காலத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் ராஜேந்திர சோழனின் வெற்றியானது கடாரம் மட்டுமல்லாது ஈழம் வரையும் சென்றுள்ளது. அக்காலத்திலேயே ராஜேந்திர சோழனை கண்டு நடுங்கிய பல மன்னர்களும் தோற்று ஓடி ஒளிந்து கொண்டது ராஜேந்திர சோழனின் போர் வலிமைக்கு நடுங்கியதாலே.

பல பொருள்கள் கொண்ட படையெடுப்பு

முதலாம் ராஜேந்திரன் காலத்து அரசர்களுக்கு தற்போது கொடுக்கும் வரவேற்பானது சமகாலத்தில் வெற்றி வீரனாக இருந்த நம் ராஜேந்திர சோழனுக்கு கொடுக்க தவறிவிட்டனர் என்று தான் கூற முடிகிறது. அத்தகு அளவிற்கு பல நாட்டு மன்னர்களுடன் போர் புரிந்து, நட்புரிமை கொண்டு, பல படைகளை வென்று, பல பொருள்களை திரட்டி, பல நாடுகளைக் கைப்பற்றி, என வெற்றிகளை அடுக்கிக் கொண்டு போகும் ராஜேந்திர சோழனை போற்ற வேண்டியது நம் கடமை.

சமகாலத்தவன் சோனகன்

கர்நாடக மாநிலம் கோலாரில் முதலாம் ராஜேந்திரன் கல்வெட்டில், “திருமந்திர ஓலை நாயகம் கங்கைகொண்ட சோழபுரத்து ராஜ வித்யாதரன் பெருந்தெருவில் சோனகன் சாவூர் பரஞ்சோதி” என்ற குறிப்பு காணப்படுகிறது. ஆதலால், இவன் அரபு நாட்டை சார்ந்த வனாகவும் இஸ்லாம் மதத்தை சார்ந்தவனாகவும் இருக்க வேண்டும் என்பது அறிய முடிகிறது. ஆனால், இவன் இந்து மதம் சார்ந்த ஆட்சியில் குறிப்பாக முதலாம் ராஜேந்திர சோழனது காலத்தில் நீண்ட காலமாக உயரிய பதவியில் இருந்தது தெளிவாக புலப்படுகிறது.

ராஜேந்திர சோழனும் முகமது கஜினியும்

ராஜேந்திர சோழன் காலத்தவன் தான் முகமது கஜினி. வட இந்தியாவின் வடமேற்கு பகுதியில் கஜினி (1000-30)பல முறை படையெடுத்து வெற்றி வாகை சூடிய அதே காலத்தில்தான் ராஜேந்திர சோழன்(1012-44) வட இந்தியாவின் வடகிழக்கு பகுதியான கங்கை சமவெளி பகுதி, வங்காளம், பீகார் போன்ற பகுதிகளில் வெற்றிவாகை சூடினான். ஆனால், இவ்விரு போர் மன்னர்களும் ஒருவருக்கொருவர் எதிராக நின்று சந்தித்துக் கொள்ளவில்லை என்பது நம்மை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. படையெடுப்பை வெகுவாக குறிப்பிடும் வரலாற்று நூல்கள் ராஜேந்திர சோழனின் வெற்றியை மறைத்தது ஏன் என்று தெரியவில்லை.

ராஜேந்திர சோழன் கைப்பற்றியவைகள்

ராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்தி வழி மூலம் தான் வெற்றி கொண்டதும், வெற்றிகொண்ட இடங்களில் பெற்றுவந்த பொருட்களை பற்றியும் நம்மால் அறிய முடிகிறது. அப்படி அவன் கொண்டுவந்த வகைகள் மாற்ற அரசர்களுடைய முடிகள், அவர்களுடைய தேவியர்களின் முடிகள், மணிமுடிகள், அடிமைப்பெண்கள்,பண்டாரம் என்னும் கருவூலச் செல்வங்கள், குதிரைகள், யானைகள், மலை போன்ற நவ நிதிகள், மாற்றரசர் குலத்து செல்வம் போன்ற பலவும் கைப்பற்றினான். அதுமட்டுமல்லாது கடாரத்து அரசனை வென்று அவன் அரண்மனை வாசலில் இருந்த அழகிய தோரண மணிகள் கோர்த்த புதவம் சிறிய கதவு, பெரிய மணிகள் கோர்த்த கதவு என்று பலவும் இன்று நமக்கு காணக் கிடைக்கவில்லை. ஆனால் நுளம்ப நாடு, போல நாடு, சாளுக்கிய நாடு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவந்த தூண்கள், சிற்பங்கள் அவனுடைய செப்பேடு முத்திரையில் உள்ள தோரணம் புதவம் போன்றவைகள் இன்று நமக்கு காணக் கிடைக்கிறது.

• நுளம்ப நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட தூண்கள், திருவையாற்றில் இவனது மனைவி புதுப்பித்த தென்கைலாய கோயில் திருச்சுற்று மாளிகையில், 40க்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்ட பகுதியாக சுற்று மாளிகை தாங்கிய வண்ணம் உள்ளது. இவை கருப்பு நிற மாக்கல்லால் ஆன நுணுக்கமான சிற்பங்களை உடைய அழகு தூண்கள் ஆகும். அவற்றை நோக்கும்பொழுது இராஜேந்திர சோழனின் கலையார்வம் எத்தகு சிறப்புடையது என்பதை நம்மால் அறிய முடிகிறது.

• பால நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலை கும்பகோணம் நாகேஸ்வரர் சுவாமி கோயில் சந்நிதியின் முன்பாக ஒரு சிறு சன்னதியில் வைத்துள்ளனர். இந்த விநாயகர் மூஷிகம்,அடியார்கள்,மோதகம், பழங்கள் என படையல் பொருட்கள் இருப்பது போன்று காட்டப்பட்டிருக்கும்.

• அதுமட்டுமல்லாது, சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நவக்கிரக பீடம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மகா மண்டபம் முன் வடபுற மாளிகையில் சிறப்பு வழிபாடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல்பகுதி தட்டையாக பலிபீட அமைப்பு கொண்டும் கீழ்பகுதி சுற்றி அழகிய சிற்பங்களாகவும் அமைந்திருக்கும்.ங முன்பகுதியில் சூரியன் ஏழு நாட்களைக் குறிக்கும் தேரில் பயணம் செய்ய அருணன் அத்தேரை ஓட்டுவதாக காட்டப்பட்டு. அடுத்தடுத்து வலமாக பிற நவகிரக நாயகர்கள் காட்டப்பட்டிருப்பது அழகிய தோற்றம் தரும் வகையில் இருக்கும்.

• சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட துர்க்கை சிற்பம், கங்கைகொண்டசோழபுரம் வீரா ரெட்டி தெருவில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் சிறப்பு என்னவென்றால் இடது காலை நிலத்தில் ஊன்றி வலது காலை. மகிஷனின் தோள் மீது நிறுத்தி உள்ள துர்க்கை எட்டு கரங்களில் படைக்கலன்கள் கொண்டு இருக்கும் காட்சி காட்சியும், அவளது பின்னதாக திரட்சியும், இடது கால் அருகில் சிம்மமும் காட்டப்பட்டிருப்பது சிலையின் அழகை கூட்டுகிறது.

• கலிங்க நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பைரவர் பைரவி சிற்பங்கள். கங்கை கொண்ட சோழபுரம் ஒட்டிய மெய்க்காவல் புதூரில் அச்சம் தரும் தோற்றத்தில் உயரமாக வைக்கப்பட்டுள்ளது. திருக்கோலத்தில் ஆடை அணியாத கபால மாலை இடது தோளில் இருந்து கணுக்கால்வரை விளங்க இருபுறமும் பக்தர்களாக பிசாசுகள் அமைய பைரவர், பைரவி தனித்தனி சிற்பங்களாக இருக்கும்.

தமிழ் பாடும் ராசேந்திரன் புகழ்

முதலாம் ராஜேந்திர சோழனின் வெற்றிகள் பலவாக இருந்தாலும் அவனை இன்றளவும் போற்ற கங்கை வெற்றியும் கடாரம் வெற்றியும் தான் முக்கிய பங்காற்றுகிறது. அதனை இலக்கியத்தில் கையாண்ட விதமும் சிறப்பாகும்.

ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி பாடல் ஒன்றும்

“ களிறு கங்கை நீ கருண்ண மண்ணையில்
காய்ச்சின தொட கலவு செம்பியன்
. குளிரு தெண்டிரை குரை கடாரமுங்
கொண்டு மண்டலங்குடையுள் வைத்தும்”

சான்றாக அமைகிறது.

அதேபோல் ஒட்டக்கூத்தர் பாடிய மூவர் உலா பாடல் ஒன்றும்,

“தண்டேவிக் கங்கா நதியும் கடாரமும்
கைக்கொண்டு கங்காபுரி பரந்த கற்பகம்
கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு
சிங்காதனத் திருந்த செம்பியர் கோன்”

முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டு இன்றளவும் நிலைத்து நிற்கிறது.

ராஜேந்திர சோழனின் வளமிக்க சோழ நாடு

    முதலாம் ராஜேந்திர சோழன் வேளாண்மைக்கு காட்டிய முக்கியத்துவமே அவன் நாட்டின் வளமையை காட்டுகிறது. பில்கணர் அவர் இயற்றிய விக்கிரமாங்க தேவ சரித்திரம் என்ற வடமொழி நூல் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் மீது பாடப்பெற்றுள்ளது. அதில் விக்கிரமாதித்தன் தன் மைத்துனன் அதிராசேந்திர சோழனை காக்கப் படை திரட்டி வந்து பகைவரை வென்று கங்கை கொண்ட சோழபுரத்தில் அவனுக்கு முடி சூட்டி தன் தலைநகர் திரும்பியதாக கூறப்படுகிறது. இதில் கங்கை கொண்ட சோழபுரம் “கங்கா குண்டம்” என்று கூறுகிறது.

ராஜேந்திரன் காலத்து அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும்

முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகளில் இவன் ஆட்சி செய்த காலத்தில்  குறுநில மன்னர்கள் அதிகாரிகள் போன்றோர் இவன் காட்டிய வழியின் படி நாட்டை செம்மையாக வழி நடத்தினர் என்பது இக்கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலம் புலனாகிறது.

  1. காடவராயர்
  2. வில்லவராசன்
  3. ஆதித்த சூளாமணி
  4. திருநீலகண்ட பட்டர்
  5. உத்தம சோழகோன்
  6. ராசராச விசய பாலர்
  7. கொட்டி அதிராத்ரயாஜி
  8. பாண்டியன் சீவல்லபன்
  9. ராசராச பிரம்மராயன்
  10. ராசராச குமணராசன்
  11. விக்கிரமசிங்க மூவேந்த வேளான்
  12. வல்லவரையன் வந்தியத்தேவன்
  13. ராசேந்திர சோழ பிரம்மராயன்
  14. முடிகொண்ட சோழ விழுப்பரையன்
  15. சத்திரிய சிகாமணி கொங்காள்வான்
  16. விக்கிரம நாராயணன் மூவேந்த வேளான்
  17. கங்கை கொண்ட சோழப் பல்லவரையன்
  18. குணநிதி அருமொழி மூவேந்த வேளான்
  19. கடாரம் கொண்ட சோழ மூவேந்த வேளான்
  20. இரட்டபாடி கொண்ட சோழ மூவேந்த வேளான்
  21. உத்தம சோழப் பல்லவராயன்
  22. உத்தம சோழ மிலாடுடையார்
  23. வீரராசேந்திர தமிழதரையர்
  24. ராச மூவேந்த வேளான்
  25. ஜநநாத மூவேந்த வேளான்
  26. வீர சோழ மூவேந்த வேளான்
  27. வீரராசேந்திர பிரம்மாதி ராஜன்
  28. வீரராசேந்திர முனையதரையர்
  29. மதுராந்தகம் மூவேந்த வேளான்
  30. ராச ராச மூவேந்த வேளான்
  31. விக்கிரம சோழ மூவேந்த வேளான்
  32. விக்கிரம சோழ சோழிய வரையன்
  33. கங்கைகொண்ட மிலாடுடையார்
  34. ராசராசேந்திர மூவேந்த வேளான்
  35. கொடும்பாளூர் ராசேந்திர சோழ இருக்குவேளார்
  36. சேனாபதி மதுராந்தகன் பரகேசரி மூவேந்த வேளான்
  37. பாண்டி உதய திவாகரன் ராசராச நல்லூர் உடையான்
  38. கிருஷ்ணன் ராமனான மும்முடிச் சோழ பிரம்மராயன்
  39. நீலன் வெண்காடன் என்ற ராசராச மூவேந்த வேளான்
  40. மாராயன் அருள் மொழியான் உத்தம சோழ பிரம்மராயன்
  41. ஈராயிரவன் பல்லவராயனான உத்தம சோழப் பல்லவரையன்
  42. விக்ரமசோழன் சோழிய வரையனாகிய அரையன் ராசராசன்
  43. தண்டநாயகன் வீமையனாகிய ராசேந்திர சோழ பிரம்மராயன்
  44. சேனாபதி அறையன் கிடாரங்கொண்ட சோழன் இராச ராச அணிமுரி நாடாள்வான்.

என்ற பல குறுநில மன்னர்களும் அதிகாரிகளும் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சி கட்டுப்பட்டு தங்கள் நிலப்பரப்பை செம்மையாக வழிநடத்தினர்.

முதலாம் ராஜேந்திரனின் ராஜதந்திரம்

       பராந்தக சோழன்தான் பாண்டிய நாட்டின் ஆட்சியை சோழ ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்.    இராசராச சோழன் காலம் வரை பாண்டிய நாடு அனைத்தும் முழுமையாக சோழ நாட்டிற்கு உட்பட்ட வில்லை.   பாண்டியர்கள் போர் தொடுத்துக் கொண்டே இருந்தனர்.  இதனை தவிர்க்க முதலாம் ராஜேந்திரன் தனது இரண்டாவது மகனை பாண்டிய நாட்டின் அரசனாக்கி.  பாண்டிய நாட்டு மக்கள் மனம் கோணாதபடி பாண்டியர்கள் பட்டமான ஜடா வர்மன் என்ற பட்டத்தைக் கொடுத்து.  சோழ பாண்டியன் என்ற பெயரும் கொடுத்து மதுரையில் அரண்மனை ஒன்றை அமைத்து ஆட்சி செய்ய வழி செய்தான்.  சோழபாண்டியனை அடுத்து வரும் இளவரசர்கள் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிய வேண்டும் என்ற ராஜதந்திரத்தை முதலாம் ராஜேந்திர சோழன் கையாண்டான்.

ராஜேந்திர சோழனின் வளம்மிக்க நாடு

கங்கைகொண்ட சோழ வளநாடானது ராஜேந்திரன் காலத்தில் மிகவும் வளமாக இருந்தது. சோழர் காலத்தில்  நாடு என்று அழைக்கப்பட்ட தொண்டைமண்டலம் மற்றும் சோழ மண்டலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் கீழ் ஆம்பூர் நாடு, ஏமப்பேரூரய் நாடு, மாத்தூர்  நாடு, மேலூர் நாடு, பனையூர் நாடு, பட்டான் பாக்கை நாடு, பேரிங்கூர் நாடு, வாகூர் நாடு, வாவலூர் நாடு, ஆகிய ஒன்பது நாடுகளை உள்ளடக்கியதாக கங்கை கொண்ட சோழ வளநாடு விளங்கியது.  இந்த ஒன்பது நாடுகள் கல்வெட்டுகளில் 1097-1130- க்கு இடைப்பட்ட கால கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.  3,6,5,4,15,5,2 என மொத்தம் 46 ஊர்களைக் கொண்டு இன்றுள்ள  திருக்கோவிலூர், விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி பகுதிகள் பெண்ணை மற்றும் கெடிலம் ஆறு களிடையே உட்பட்ட பகுதிகளாக இருந்தது என்பது இக் கல்வெட்டின் வழி அறியமுடிகிறது.

இராசராசன் காலம் முதல் கொண்டு சோழர் அரசின் கீழ் இருந்த நாட்டுப் பிரிவுகள் நிர்வாக வசதிகளை அடிப்படையாகக் கொண்டு புதிதாக வளநாடு என்று பெயரில் துவக்கப்பட்டது.   இவ்வகையில் கல்வெட்டுகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட வளநாடுகள் கிடைக்கின்றன.  இவள நாட்டின் கீழ் 1 முதல் 22 வரை நாடுகள் (கூற்றம், கோட்டங்கள்) இருந்துள்ளது.  ராஜேந்திர சோழ வளநாட்டில் அள நாடு, ஆர்வலர் கூற்றம், இடைய அள நாடு, நெல்மலி நாடு, புறங்கரம்பை நாடு, வலிவல கூற்றம் என ஏழு நாடுகள் இருந்தமையும் 1017 முதல் 1050 வரை இந்த ஆண்டு கல்வெட்டுகளால் நமக்கு தெரிகிறது. இந்நாடுகள் 11, 10, 14, 15, 28, 8, 15 என மொத்தம் 101 நாடுகளை உள்ளடக்கியது. இவ்வளநாடு நாகபட்டினம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ,இன்றைய டெல்டா பிரதேச வட்ட பகுதிகளில் கருவாய்யாறு மற்றும் வெண்ணாறு இடையில் பரவியிருந்தது.  முதலில் அருமொழிதேவர் வளநாடு என்ற பெயருடன் விளங்கி பிறகு ராசேந்திர சோழ வளநாடு என்ற பெயர் மாற்றம் கொண்டது.

ராஜேந்திர சோழன் காலத்தில் பல கோவில்கள் பல்கி இருந்தது.  அதன் மூலம் இவன் ஆட்சியில் பல கொடைகளும் கொடுக்கப்பட்டது.  இவன் ஆட்சியானது பல நாடுகளின் நேரடி ஆட்சியாக இருந்ததால் இவனின் நிர்வாகத்திறன் நுண்ணிய தன்மை உடையதாக இருக்க வேண்டும்.  முதலாம் ராஜேந்திர சோழனின் பல அரிய தகவல்கள் கல்வெட்டுகளின் வழியும் ஆவணங்களின் வழியும் பதிவாகியுள்ளது அதனை அதிகாரிகள் ஆராய்ந்து பார்த்தனர்.

கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரம் ராஜேந்திர சோழனின் 30 ஆண்டு கல்வெட்டு கோயில் கருவூலத்தில் தேய்ந்து உபயோகமற்ற இருந்த அணிகலன்கள் கொடுத்த ஆண்டு கொடுத்தவர் முதலியவற்றை குறிப்பிட்டு உள்ளது.  அது கொடுக்கப்பட்ட பொழுது இருந்த எடை 30 ஆம் ஆண்டிலிருந்து எடை விவரங்களையும் குறிப்பிட்டு அவற்றை அழித்து இறைவனுக்கு பொன்னின் கவசம் செய்ததை குறிப்பிடுகிறது.   அதுமட்டுமல்லாது, தேய்ந்து உபயோகமற்ற அணிகளாக 33 பொற் பூக்கள் 2  கை தாமரைப்பூக்கள், நெற்றிப்பட்டம், திருக்கைக்காறை,காப்பு,  ஹஸ்த பட்டிக்காறை, தோள் வளை, பொற்தாலி போன்றவையும் குறிப்பிடப்படுகிறது.

முக்கியமான கல்வெட்டு ஒன்றில் அரசன் நாடு வகை செய்கின்ற அதிகாரிகள் ஸ்ரீகாரியம் பார்க்கின்ற அதிகாரிகள் சென்று கோவில் வாரியம் செய்வார், பூசகர்கள் கருவூலத்தார், திருப்பதியம் விண்ணப்பிப்பார், மெய்காவல்  முன்னிலையில் கங்கை கொண்ட சோழ புரத்தில் இருந்து வந்த வியாபாரி பிரம்மகுட்டன் உலகளந்தான் என்பவன் தன்மக் கட்டளைக் கல் என்ற எடைக்கல்லால்  எடை பார்த்து குறித்த செய்தி வெளியாகிறது.

இந்த கல்வெட்டுகளின் வழி முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சி திறம் ஆனது எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. போர்த்திறன் மட்டுமின்றி தன் நாட்டினை ஆளும் விதத்தினையும் முதலாம் ராஜேந்திர சோழன் நன்றாகவே செய்துள்ளார் என்பது கங்கை கொண்ட சோழ வளநாடு நமக்கு சான்று பகர்கின்றது.

கங்கை கொண்டானின் சோழீச்சுரம்

முதலாம் ராஜேந்திர சோழனின் வெற்றியை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டதே இந்த கங்கை கொண்ட சோழீச்சுரம். இக்கோயிலில் முதலாம் ராஜேந்திர சோழன் பற்றிய கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இவன் மூன்றாவது மகனான வீர ராஜேந்திர சோழன் தனது 23 வது ஆட்சி ஆண்டில் கொடுத்த தானங்களையும், முதலாம் இராசாதிராசன் தனது 26, 30 ஆண்டுகளில் கொடுத்த தானங்களையும் குறிக்கும் கல்வெட்டுகள் மட்டுமே உள்ளது. தென்னார்க்காடு மாவட்டம் எசாலம் என்னும் ஊரில் உள்ள செப்பேட்டின் வடமொழிப் பகுதியில் முதலாம் ராஜேந்திரனுக்குரிய அருஞ்செயலாக கருதப்படும் கங்கை கொண்ட சோழீச்சுரம் கட்டிய செய்தி பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

இதுவே ராஜேந்திர சோழன் தான் இக்கோயிலைக் கட்டி இருக்க வேண்டும் என்ற உண்மைக்கு சான்றாக புலப்படுகிறது. இது நான்கு மைல் சதுரப் பரப்பளவை கொண்டது. கங்கை கொண்ட சோழபுரம் கோயில் பெண் வடிவம் ஒத்ததாகும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் ஆண் வடிவை ஒத்ததாகும். அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருக்கக்கூடிய விமானங்களை விட கங்கைகொண்டசோழபுரம் விமானமே உயர்ந்தது என்று கூறப்படுகிறது. இவ்விமானத்தின் உயரமானது 131..5 அடி ஆகும் . மொத்த உயரம் 180 அடியாகும், கருவறை உயரம் 48.5 அடியாகும். மகாமண்டபம் 175×35 என்ற அளவிலும், துவாரபாலகர் 12 அடி உயரமும், மகாமண்டபத்தின் 150 கற்தாண்களும் அதன் நடுவில் 18 அடி உயரமும் 16 அடி உயரமும் கொண்டுள்ளது.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட நான்கு பெரிய கோவில்களில் தஞ்சை பெரிய கோயிலை அடுத்து, சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது கங்கை கொண்ட சோழீச்சுரம் மட்டுமே. கங்கை நாடுகளைக் கொண்ட வெற்றியின் சான்றாக இன்றளவும் பேசப்படுவது கங்கைகொண்ட சோழீச்சுரம் என்று பதினோராம் ஆட்சி ஆண்டில்(1023) முதன்முதலாக குறிக்கப்படுகிறது. ஆனால் கங்கை கொண்ட சோழபுரம் அவனது 17வது ஆண்டு கல்வெட்டில் 1029 இல் முதன்முதலாக அறியக் கிடைக்கிறது. எனவே, 1023 மற்றும் 1029 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் இக்கோவில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என நம்மால் கணிக்க முடிகிறது.

கங்கைகொண்ட சோழபுரத்தின் மதில்கள் ஆனது சுமார் 185 மீட்டர் நீளமும் 130 மீட்டர் அகலமும் உடைய மதில் சுவரையும், சுவரொட்டி அடுக்கு திருச்சுற்று மாளிகையும் ஒன்று அடுத்து ஒன்றாக இரு கோபுரங்களையும் கொண்டு இக்கோயிலின் உயரிய சிறப்பினைப் காணமுடிகிறது. திருச்சுற்று மாளிகையும் கோபுரங்களும் தற்போது இல்லை ஆங்கிலேயர் காலத்தில் இவற்றின் கற்கள், அருகில் உள்ள அணை கட்டுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. அதனால் கோபுரம், மதில் , மாளிகை ஆகிய பகுதிகளும் சிதைவுகளும் எச்சங்களும் இன்று நாம் காணக்கூடியது.
கங்கைகொண்ட சோழபுரத்தின் அமைப்பானது கிழக்கு நோக்கி அமைந்து ஒன்றடுத்து ஒன்றாக இரு கோபுரங்களை கிழக்கு பகுதியில் கொண்டும்.3 புறங்களில் நுழைவு வாயில்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கருவறை மீதான விமானத்தை விட உயரத்தில் குறைவாகவே சோழர் கால மரபு படி கட்டப்பட்டுள்ளது.

கோவில் திருச்சுற்றுகள் இருமருங்கிலும் இரு சிறிய சிவன் கோவில்கள் முதலாம் ராஜேந்திர னின் அரசியர்களால் கட்டப்பட்ட வடகயிலாயம் தென் கயிலாயம் என்ற பெயரில் உள்ளது. இன்று வட கைலாயம் அம்மன் கோயிலாக உள்ளது திருச்சுற்றில் உள்ள விநாயகர் கோவில் சாளுக்கிய நாட்டு துர்கையுள்ள கோயில் அவை. பிற்காலத்தில் சண்டிகேஸ்வரர் கோயில் ராஜேந்திர சோழன் காலத்து சிங்கமுக கிணற்றின் காலம் தெரியவில்லை. உடையார்பாளையம் ஜமீன் தாரால் சிங்க உருவம் சுதையால் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோயிலை போன்றே திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. பரிவார ஆலயங்கள் தற்பொழுது சிதைந்து இல்லாமல் போய்விட்டது . ஆனால், அவை இருந்த தடயங்களும் கிடைக்கப் பெறவில்லை. தரையில் புதைந்திருந்த சூரியன் உருவங்கள் அதனை எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டால் இதற்கு முன் அழகிய பரிவார ஆலயங்கள் இருந்திருக்க வேண்டும் என நம்மால் கருதமுடிகிறது.

தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு இக்கோயிலின் விமானத்தின் மூலம் அறியப்பட்டது. விமானம் என்பது கருவறை பகுதி உட்சுவர் மற்றும் வெளி சுவரையும் இடையில் சாந்தாரப் பகுதியையும் கொண்டது. இந்த இரட்டைச் சுவரின் மீது தான் 9 தளங்களுடன் கருங்கல்லால் ஆன 180 அடி உயர விமானம் வைக்கப்பட்டுள்ளது.

இதன் கருவறை உள்ள பகுதியில் 48.5 அடி உயரமும் அதற்கு மேல் உள்ள விமானம் 131 அடி உயரம் உடையவையாக இரண்டு பிரிவாக உள்ளது. விமானத்தில் இரு தளங்கள் மட்டுமே தளம் உடையவையாக உள்ளது உட்புறம் கூடு போல இடைவெளியுடன் காணப்படுகிறது. லிங்கம் சிகரத்தில் உள்ள ஸ்தூபியில் நல்லக்க தோழ உடையார் என்று பொறிக்கப்பட்டு உள்ளதால். உடையார்பாளையம் பாளையக்காரர் புதியதாக இதனை செய்து கொடுத்திருக்க வேண்டும் என காணமுடிகிறது.

கங்கைகொண்ட சோழீசுவரர் என்று அழைக்கப்படும் லிங்க உருவம் சுமார் 13 அடி உயரம் உடையது. பொதுவாக லிங்கத்திற்கு அணியும் ஆடை துணியும் 3 மூலம் இருந்தால் போதும் என்பர். ஆனால் இப்பெரிய உயர லிங்கத்திற்கு 15 முழப்பரி சட்ட துணியும் ஆவுடையாருக்கு 54 முழப்பரி சட்டத்துணியும் இருந்தால் பரிச்சட்டம் சாத்த முடியும். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய பக்கவாட்டில் சாரம் கட்டி பலகைகள் போடப்பட்டுள்ளது.

தேவகோட்டை தெய்வங்கள் கருவறையை வலம் வரும்பொழுது தெய்வ உருவங்களானது , கீழ் தள தெற்கு, மேற்கு, வடக்கு திசை தேவ கோட்டங்களில் திசைக்கு ஐந்து ஐந்தாக உள்ளது. கணபதி, அர்த்தநாரி, தக்ஷிணாமூர்த்தி, ஹரிஹரன், நடராஜர் (தெற்கு),கங்காதரர், லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, சுப்ரமணியர், விஷ்ணு அநுக்கிரக மூர்த்தி( மேற்கு), காலசம்கார்,துர்க்கை, பிரம்மா, பைரவர், காமதகன மூர்த்தி (வடக்கு) மிக அழகாக காட்சியளிக்கிறது.

இடைநாழியில் உள்ள தேவ கோட்டங்கள் மகாமண்டபம் இடைப்பட்ட பகுதி அந்தராளம் என்றும் இடைநாழி என்றும் அழைக்கப்படும் . இங்கு அர்த்த மண்டபம் ஆக உள்ளது. இடைநாழி இருபுறமும் வாயில்களையும் அவற்றை அடைய அழகிய படிகளையும் பெரிய துவாரபாலகர்களையும் கொண்டுள்ளது. வடபுறம் கருவறை மற்றும் மகாமண்டப தேவ கோட்டங்களில் உலகப் புகழ்பெற்ற சண்டேச அனுக்கிரக மூர்த்தி, சரஸ்வதி உருவங்கள் போன்றவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தென்புறம் கங்காளர் மற்றும் இலக்குமியின் உருவாகியுள்ளது.

மேல்தள தேவகோட்டை தெய்வங்கள் ஆனது நான்கு புறமாக 31 தெய்வ உருவங்கள் உள்ளது. சில பத்து தேவகோட்டை தெய்வங்களை அடையாளம் காணமுடியாது. மற்ற 21 தேவகோட்ட தெய்வங்களை வலமாக செல்லும் பொழுது சூரியன் ,அக்கினி, காலந்தகன் , தட்சிணாமூர்த்தி, நிருருதி, பிக்க்ஷாடனர், வருணன், விஷ்ணு, லிங்கோத்பவர், பிரம்மன், ஈசன், பூவராகர், கஜசம்கார, சந்திரன் இவற்றில் திக் பாலகர்கள் ஆன அக்கினி, யமன், நிருருதி, வாயு, சோமன் , வருணன் ஆகிய எட்டு திசை பாலகர்கள் ஒருவர் குபேரன் இந்திரன் உருவங்கள் தெரியாத உருவங்கள் ஆகும்.
இவ்வாறு கங்கைகொண்ட சோழீசுரத்தின் சிறப்பானது பிரமிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. முதலாம் ராஜேந்திர சோழனின் கங்கை வெற்றியை இன்றளவும் பேச வேண்டும் என்றே மிக நுண்ணிய தன்மை கொண்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையாக கங்கைகொண்ட சோழீசுரத்தை கட்டியுள்ளான்.

முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையை பெரியகல்வெட்டு கூறும் சோழீ சுரத்தின் சிறப்புகள்

முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையை பெரிதும் எடுத்தியம்புவது கல்வெட்டுகளும் செப்பேடுகளும் மட்டுமே. கங்கைகொண்ட சோழபுரத்தில் காணப்படும் செப்புத்திருமேனிகள் பலகாலம் வழிபாடு இல்லாமல் அழிவுற்று காணப்பட்டாலும் அதில் சில செப்புத்திருமேனிகள் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தை வென்று அறிய முடிகிறது.. இதில் உலகப் புகழ் பெற்றவையாக காணப்படுவது முருகனின் உருவமும் சோமாஸ்கந்தர் திருமேனியும் ஆகும். முருகனின் வாளும் கேடயமும் முன் கரங்களில் சக்தியும் பின் கரங்களில் வேலும் பத்ம பீடத்தின் மீது நிற்கும் அழகு மிக சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாது, நடராஜன், சிவகாமி, தனி அம்மன், ரிஷபானந்தர், நந்திகேஸ்வரர், அம்மன் உருவங்கள் அசர தேவர் எனும் சூல தேவர் உருவம் செப்புத்திருமேனி சிறப்புமிக்கது.

சண்டேஸ்வரர் அனுக்கிரக மூர்த்தி சிற்பம்

பெரிய புராணத்தில் சேக்கிழார் சண்டிகேஸ்வரருக்கு சிவபெருமான் மாலை சூட்டுவதே பின்வருமாறு சொல்கிறார்,

“ அண்ட பிரானும் தொண்டர் தமக்கு
அதிபனாகி அமைத்து நாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காகச்
சண்டீசனுமாம் பதந் தந்தோம்
என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு
துண்ட மதிசேர் சடைக் கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்”

சிற்பக் கலையில் விமர்சகர்களாக உள்ளவர்கள் சண்டிகேஸ்வரர் அழகிய உருவத்தை முதலாம் ராஜேந்திரனோடு ஒப்பிட்டு கூறுவார். இச்சிற்பத்தின் சுவர்களில் மாடுகள் மேய்ப்பது, வழிபடுவது, தந்தை மறைந்திருந்து பார்ப்பது, பால் குடங்களை உதைத்துத் தள்ளுவது,சண்டேசர் தந்தையின் காலை வெட்டுவது என புராண காட்சிகளை சிறுசிறு சிற்பங்களாக செதுக்கி உள்ளனர்.

கங்கைகொண்ட சோழபுரத்து கல்வெட்டுகளுக்குரியோர்

1. விக்ரம பாண்டியன்
2. வீரராசேந்திர சோழன்
3. மாறவர்மன் குலசேகரன்
4. மூன்றாம் குலோத்துங்கன்
5. முதல் குலோத்துங்க சோழன்
6. உடையார்பாளையம் ஜமீன் தார்
7. விசயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர்
8. பாண்டியன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்
9. வானவன் மகாதேவி( இராசேந்திரனின் தேவி)
10. வைப்பூர் திருவேங்கடமுடையான் ஏகாம்பரநாதர் காங்கேயன்
11. அம் மங்கா தேவி( ராஜேந்திரனின் அன்பு மகள் குலோத்துங்கனின் தாய்)
12. கன்னோசியைச் சார்ந்த காஹடவால அரசன், சோழர்களின் நண்பன் மதனபாலன்
13. ராசேந்திர சோழன்( பூர்வ தேசமும், கங்கையும் ,கடாரமும், கொண்டருளின ஐயப்பன்)
14. இராசாதிராச சோழன்( கல்யாணபுரம் கொல்லாபுரம் கொண்டு ஆனைமேல் துஞ்சின அண்ணல்)

பெரும்பாலும் கங்கைகொண்ட சோழபுரத்து கல்வெட்டுகளின் வழிதான் பல செய்திகள் நமக்கு கிடைக்கின்றன. முதலாம் ராஜேந்திரன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் நமக்கு பல சிதைந்த கிடைத்தது.

கோயில் கல்வெட்டுகள்

ராஜேந்திரன் கால கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணக்கிடைக்கவில்லை. ராஜேந்திர சோழன் கோயில் பணி முடித்து கோயிலுக்கு குறுகிய காலத்தில் கொடைகள் தந்ததால் கல்வெட்டுகள் பொறிக்க இயலாது போய் விட்டு இருந்திருக்கலாம். இங்கு உள்ள வீரராசேந்திரன் கல்வெட்டு மிக நீளமானது 216 வரிகள் கொண்டது இது ராஜேந்திரன் காலத்தில் வெளியிடப்பட்ட ஆணைகளை குறிப்பதாக உள்ளது. இராஜேந்திரனுடைய 26, 30 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆணைகள் ஆகும்.
தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுக்கப்பட்ட நில கொடைகள் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது அறிய முடிகிறது.

கல்யாணபுரம் கொல்லாபுரம் கொண்டு யானை மேல் துஞ்சிய அண்ணல் என்று குறிக்கப்படும் மன்னனின் கல்வெட்டு இக்கோயிலுக்கு 340 கழஞ்சு பொன்னும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கலம் நெல்லும் பெற பல ஊர் வருவாய்களை கொடுத்த செய்தியை சொல்லுகிறது.

முதல் குலோத்துங்கன் 41வது ஆண்டு கல்வெட்டு அவனுக்கு கப்பம் செலுத்தி கீழ்ப்படிந்த அரசனாக இருந்த காகதவல மன்னனின் தனி மெய்க்கீர்த்தியை குறிப்பிட்டு வேறு செய்தி ஏதும் சொல்லாது நின்று விட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாது பிற்கால பாண்டிய மன்னர்கள் சோழ அரசர்களை வென்று சோழ நாட்டை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தன் பெயரில் இக்கோவிலில் சுந்தரபாண்டியன் சந்தி ஒன்றை ஏற்படுத்தியது அறியமுடிகிறது. வழிபாடுகளை செய்து வந்தான். அதேபோல விக்கிரமபாண்டியன் ராஜாக்கள் நாயன் என்ற பெயரில் ஒரு சந்தி கட்டளை பூஜை வழிபாட்டை ஏற்படுத்தியது இங்குள்ள கல்வெட்டு மூலம் காண முடிகிறது.

இவ்வாறு முதலாம் ராஜேந்திர சோழனின் பெரும் புகழ் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணையாக நிலை நிற்கிறது. கங்கைகொண்ட சோழபுரம், ஏரி, கோவில், வேளாண், வணிகம் போன்ற பலவற்றை நிறுவி கங்கை வெற்றியை பறைசாற்றும் விதமாக கங்கைகொண்ட சோழபுரத்தின் சிறப்பை நிலைநிறுத்தி நிற்கிறான் முதலாம் ராஜேந்திர சோழன்.

இறைபக்தியான் ராஜேந்திர சோழன்

ராஜேந்திர சோழன் காலத்தில் பல கோவில்கள் அமைக்கப்பட்டது. அக் கோவில்கள் பல அவன் மூலமாகவும் அவனது மனைவியர் மூலமாகவும் அல்லது அவன் அதிகாரிகள் மூலமாகவும் பல எழுப்பப்பட்டது . அவை அங்கு காணப்படும் கல்வெட்டுகளின் வழி கொண்டு அறிய முடிகிறது. இவன் அமைத்த கோவில்கள் முழுவதும் கருங்கல்லால், கூரை வரை அதற்கு மேல் செங்கல் சுதை போன்றவை கொண்டுதான் கட்டப்பட்டுள்ளது.

1. அகரம்.- கைலாசநாதர்
2. கொத்தகரே கோவில் -மைசூர் மாநிலம்
3. அழகா திரி புத்தூர். – சூரியன் கோவில்
4. திருவலஞ்சுழி. -பைரவர் கோயில்
5. திருவையாறு. – தென்கைலாயம்
6. சிட்டிபெடா. -பைரவர் கோயில்
7. சோழபுரம். – ராஜராஜேஸ்வரம்
8. திருப்பத்தூர் -அய்யனார் கோவில்
9. கங்கைகொண்டான். – கைலாசபதி கோவில்
10. கோலார் -கோலம்மா கோவில்
11. மேல்பாடி -அரிஞ்சிகை ஈஸ்வரம்
12. பெத்தூரு. -பானேஷ்வரர் கோவில்
13. நாகப்பட்டினம். – நாகை காரோணம்
14. நந்தி கொண்ட. – மல்லேஸ்வரர் கோவில்
15. வான மங்கை – கைலாசநாதர் கோவில்
16. திருவொற்றியூர் -ஆதிபுரீஸ்வரர் கோவில்
17. திருவல்லம் -திருவையாறு ஈஸ்வரம்
18. ஆத்தூர் -சோமநாத சுவாமி கோவில்
19. மாம்பாக்கம். – முருகேஸ்வரி சாமி கோவில்
20. கன்னியாகுமரி. – கோனேரீசுவர கோவில்
21. மாதோட்டம். – சிவன் கோவில் (ஈழம்)
22. ராமநாதன் கோவில். – பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம்
23. செங்குன்றம். – செய்ய கொண்ட சோழிஸ்வரர்
24. நார்த்தாமலை. – திருமலை கடம்பர் கோவில்
25. திருமழபாடி -வைத்யநாதசுவாமி கோயில்
26. மன்னார்குடி – ராசகோபால சுவாமி கோவில்
27. சாத்தூர் -மூலஸ்தானம் உடையார் கோவில்
28. கங்கை கொண்ட சோழபுரம் -கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில்
29. கூழம்பந்தல் -கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில்
30. தொட்ட மையூர். – சென்னை பட்டணம் கோவில்(பெங்களூர் மாவட்டம்)
31. காவந் தண்டலம் -ராஜேந்திர சோழீஸ்வரர் (செங்கை மாவட்டம்)
32. சேரன்மாதேவி. – ராமசாமி கோவில் ,அம்ம நாதேஸ்வரர் கோவில்

முதலாம் ராஜேந்திர சோழனின் இறை பக்திக்கு சான்றாக திகழும் இக் கோவில்கள் பட்டியல் நீண்டு கொண்டே சொல்லும்.

திருவொற்றியூர் கோவில் சிறப்பு

சென்னை அடுத்துள்ள திருவொற்றியூர் இறைவனிடம் ராஜேந்திர சோழன் மிகவும் பக்தியுடன் இருந்தான். இவ்வூரில் ராஜாதித்தன் காலத்தில் அவன் போரில் இறந்த துக்கம் காரணமாக துறவு பூண்டு வெள்ளன் குமாரன் சதுராந்ந பண்டிதர் தொடங்கிய காளாமுக. மடம் இராஜேந்திரன் காலத்திலும் இருந்தது. மடத்தின் தலைவராக ராஜேந்திர சோழனை கேட்டுக் கொண்டதன் பேரில் செங்கல் சுதையாக இருந்த திருவொற்றியூர் கோவில் கற்றளியாக மாற்றப்பட்டது. இதனை மாற்றியவர் ஸ்தபதி ரவி(வீரசோழன்) அவன் கருங்கல்லால் மிக அழகிய வடிவில் அமைத்த இக்கோவில் தூங்கானை மாட அமைப்புடையது.

இக் கோவிலின் தென்புறத்தில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு, கருமையான கல்லால் அமைந்த இந்த விமானம் (கருவறை மூலக் கோயில்) பல்வகையான தோரணங்கள், கூடங்கள்,கோஷ்டங்கள், சிறிதும் பெரிதுமான நீடங்கள், சிம்ம முகங்கள்,மகரங்கள் போன்றவை கொண்டு மூன்று தளங்கள் உடையதாக ராஜேந்திர சோழனிடம் சதுராந்ந பண்டிதர் பிரசாதம் பெற்று ரவி என்னும் வீரசோழ தச்சனால், மிகவும் சிறப்புற ஆதி புரியில் ஆதிபுரீஸ்வரர் என்ற சிவ பெருமானுக்காக அமைக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்லாது இவ்வூரில் காணப்படும் கெளலீசர் சிற்பம், ராஜேந்திர சோழனின் ஆணைக்கிணங்க கருங்கல்லால் கட்டப்பட்டது. அது சிவபெருமான் பத்மாசனம் இட்டு அமர்ந்த கோலத்தில் சூலம், கபாலம், தாங்கி நெஞ்சருகில் தியான முத்திரையும் அருகில் சின் முத்திரையும் காட்டி கபாலிகரமாக அமர்ந்துள்ள அழகிய சிற்பத்தில் கெளலீசர் சன்னதி உள்ளது . இது போலவே கோவிலின் விமானத்தின் சிற்பம் ஒன்று சிறப்பாக அமைந்துள்ளது.

ராஜேந்திரன் மடம்

திருவொற்றியூரில் காணப்படும் ராசாதிராசன் கல்வெட்டு இரண்டில். பிரபாகர பட்டரின் மனைவியும் ஆரிய தேசத்து மேகலா புரத்தை சேர்ந்தவரான நாகலவ்வைச்சானி என்ற ஆரியவம்மை என்பவரும் கொடை கொடுத்தவராக குறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, ராசேந்திர சோழன் பெயரில் ஒரு மடம் உண்டாக்கி மடத்திற்கு விளைநிலங்கள் மனை இடங்கள் வாங்கிக்கொடுத்து சிவனடியார்கள் உணவருந்த வழிசெய்து உள்ளதை கல்வெட்டு வாசகம் கூறுகிறது.

“. திருவொற்றியூர் உடைய மகாதேவர் திருப்பணி
செய்திருக்கும் ஆரிய தேசத்து மேகலா பிரபாகரப்பட்டன்
பிராம்மணி நாகலவ்வைச் சாநியான ஆரியாம்மை எடுப்பித்த
ராஜேந்திர சோழ மடத்துக்குக மடப்புறமாக ஆரியம்மைகள்
பக்கல் எம்மிலிசைந்த விலை பொருள் கொண்டு
விற்றுக் கொடுத்த நிலம் “

அதில் ராஜேந்திர சோழ மண்டபம் மண்டை கொண்ட சோழன் மண்டபம் இருந்தவை தெரியவருகிறது.

மண்டை என்பது இராசேந்திர சோழன் வென்ற மண்டலமாகும்.
ராசராசன் காலத்திலும் இராஜேந்திரன் காலத்திலும் வாழ்ந்த அரச குருவாக திகழ்ந்தவர் கரூர் தேவர். அவருடைய உருவ ஓவியம் தஞ்சைப் பெரிய கோவிலில் ராசராசன் உருவத்துடன் காணப்படுகிறது. இவரை 18 சித்தர்களில் ஒருவராக சொல்லுவார். தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் குறித்து இரு பதிகங்கள் பாடியுள்ளார். அவை ஒன்பதாம் திருமுறை, திருவிசைப்பா என்ற தலைப்பில் உள்ளது. இவர் கங்கை கொண்ட சோளேச் சரத் தானே என்று அழைத்து பதிகப் பாடலில் இறுதி வரியை முடிக்கின்றார்.

முதலாம் ராஜேந்திர சோழன் தன் காலத்தில் தன் பக்தித்திறத்தை வெளிப்படுத்தும் விதமாக பல கோவில்களை அமைத்து சிறப்பு வழிபாடுகள் செய்து தன் நாட்டிற்கு நலம் பெறும் வகையில் பல நற்பணிகளை செய்தது கல்வெட்டுகளின் வழியும் சாதனங்கள் வழியும் அறிய முடிகிறது.

கங்கைகொண்ட சோழபுரத்தின் சிறப்புகள்

கங்காபுரி, கங்காபுரம், கங்கைமாநகர் என்று சிறப்பு பெயர்களால் அழைக்கப்படும் கங்கை கொண்ட சோழபுரம். விஜயாலய சோழன் காலம் முதல் ராஜராஜசோழன் காலம்வரை 174 ஆண்டுகள்(850-1024) தஞ்சை தலைநகராக விளங்கியது. ராஜேந்திர சோழன் தலைநகராக கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றி(1024-1257) 233 ஆண்டுகள் தலைநகராகவே இருந்தது. கங்கைகொண்ட சோழபுரத்து நகரிலிருந்த மாளிகைகளானது கேரளன் திருமாளிகை, முடிகொண்ட சோழன் திருமாளிகை, சோழ கேரளன் திருமாளிகை, வீரசோழன் என்ற பெயர்களால் அமைக்கப்பட்டது.
ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட மதில்களால் ஆனது 17 ஆம் ஆட்சி ஆண்டிற்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இவ்வூரில் இருபெரு மதிற் சுவர்களுடன் 6 முதல் 8 அடி அகலத்தில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டும். அதற்கு ராஜேந்திர சோழன் மதில் என்று பெயரிடப்பட்டு உள்ளது. உட்புறத்தில் கட்டப்பட்டு இருந்த மதில் சுவருக்கு உட்படைவீட்டு மதில் எனவும் பெயரிடப் பட்டிருந்தது.

பரந்துபட்ட கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் அணைக்கரை சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு மண்மலை என்ற கிராமம் உள்ளது. இங்கு சிறிய மண்மேடு ஒன்று காணப்படுகிறது. ஆதலால், இதனை அறிந்து கொள்ளும் வகையில் இரு அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டது. முதல் குழியில் 3.90 மீட்டர் ஆழத்தில் செங்கற்கள் பாவப்பட்டதுபோன்ற அமைப்பு கட்டடத்தின் ஒரு பகுதியாக இருக்க கூடும். இதுபோன்ற கட்டடப் பகுதி மற்றொரு குழியில் 2.70 மீட்டர் ஆழத்திலும் காணப்பட்டது.

இங்கு இருக்கக்கூடிய அந்த கட்டட பகுதியானது ஒரு உயர்ந்த கட்டிடம் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. இங்குள்ள சுவரின் அகலம் ஆனது 1.10 மீட்டர் இருப்பதால் மாளிகைமேடு அகழ்வாய்வில் காணப்பட்ட சுவரின் அளவோடு ஒத்துப்போகிறது. ஆதலால், மண்மலை மாளிகைமேடு சுவர்கள் ஒரே காலத்தவை யாகவும் கங்கைகொண்ட சோழபுரம் நகரமானது மண்மலை வரை விரிவடைந்து இருந்திருக்கும் என்பது நம்மால் இந்த கல்வெட்டு அகழ்வாராய்ச்சி மூலம் அறியமுடிகிறது.

அகழாய்வின் மூலம் அறியப்படும் மதகின் சிறப்பு

ராஜேந்திர சோழனது கங்கை வெற்றியை போற்றும் விதமாக கங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரால் ஆக்கப்பட்டது தான் சோழகங்கம் என்று சொல்லக்கூடிய ஏரி. இது தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏரியானது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் உள்ளது. இதற்கு கிழக்குப் பக்கத்தில் காணப்படும் மதத்துக்கு அருகில் பண்டைய மதனின் கட்டமைப்பு அறியும் வகையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம்தான் ராஜேந்திர சோழன் காலத்திய மதகானது நம்மால் அறிய முடிந்தது. இம்மதகின் இரு பக்கங்களிலும் அரைவட்ட வடிவில் செங்கல் சுவர்கள் அமைக்கப் பட்டும் இரு சுவர்களுக்கும் இடையில் தரை பகுதியில் 3.60 மீட்டர் நீளமும் 80 சென்டி மீட்டர் அகலமும் உடைய தோட்டி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது ஆய்வின் மூலம் புலனாகிறது.

சோழ கங்கத்தின் நீர் தொட்டியில் விழுந்து அதன் பிறகு மதகின் துளை வழியாக சென்று வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்கச் சுவர்கள் அரை வட்ட அளவில் அமைக்கப்பட்டு நீரின் வேகம் குறைக்கப்பட்டு கரை உடையாமல் பாதுகாக்கும் வகையில் நுணுக்கமாகக் பின்பற்றப்பட்டது நாம் காணமுடிகிறது. தொட்டி போன்ற வடிவில் வண்டல் படிந்து விடுவதால் பயிர்களுக்கு வண்டல் மண்ணால் கெடுதல் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. பூம்புகாரில் சங்க காலத்தை சேர்ந்த கட்டட பகுதியிலும் இருந்த கள ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

சோழகங்கம் ஏரி மதகு க்கு மேல் பகுதியில் மராட்டியர் கால கட்டடப் பகுதியும் அதற்கு மேல் பகுதியில் ஆங்கிலேயர் கால கட்டடப் பகுதியும் காணப்படுகிறது. ஆதலால் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மாளிகை மராட்டியர்களாளும் ஆங்கிலேயர்களாளும் சீர்திருத்தி உள்ளார்கள் என்பதும் அதே மதகை பிற்காலத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதும் அறிய முடிகிறது. இதுபோன்ற இடங்களை தவிர மாளிகை மேட்டிற்க்கு அருகில் உள்ள கீழ் மாளிகைமேடு புறம்போக்கு நிலங்களிலும் மாதிரி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அகழாய்வின் வழி அறியப்படும் கல்குளம் பற்றிய செய்தி, மாளிகைமேடு எனப்படும் இடத்தின் அருகே குளம் ஒன்று உள்ளது இதனை கல்குளம்என்று அழைக்கிறார்கள். இக்குளத்தின் வடக்கு பக்கத்தில் இரண்டு அகழாய்வுகள் தோண்டப்பட்டன இதில் இரண்டு மீட்டர் ஆழத்தில் கருங்கற்களை கொண்டு அமைத்த நீரோடை ஒன்று காணப்படுகிறது. இது குளத்திற்கு நீர் கொண்டு சென்ற மூடிய நீரோடையாக இருக்க வேண்டும்.

கால்வாயின் மேல் பகுதி 71× 30 ×23 சென்டி மீட்டர் அளவுள்ள கற்களால் மூடப்பட்டு காணப்படுகிறது. .கால்வாயின் அகலம் 50 சென்டி மீட்டர் ஆழம் 41 சென்டி மீட்டர் ஆகும். பக்கவாட்டில் நீர் கசிவு இல்லாமல் இருப்பதற்காக நன்கு வலிமையுடன் இருக்க இரு பக்கங்களிலும் செம்புராங் கற்களும் களிமண்ணும் குழைத்து கட்டப்பட்டிருக்கிறது. தண்ணீர் வரும் வழி முழுவதும் கருங்கற்களால் பாவப்பட்டு மேற்பகுதி கற்களால் மூடப்பட்டு காணப்படுவதாலும் மாளிகைமேடு அருகே காணப்படுவதாலும் . சோழர் காலத்து அரச குடும்பத்தினர் பயன்படுத்தி இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

கோட்டை மதில் சுவரின் அமைப்பு

முதலாம் ராஜேந்திர சோழனின் கங்கைகொண்டசோழபுரம் ஆனது இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பது அகழாய்வின் மூலம் மட்டுமே அறிய முடிகிறது. கங்கை கொண்ட சோழபுர நகரை சுற்றி மதில் சுவர் அமைந்து இருக்கும் என்பதும் குருவாலப்பர் கோவில் என்னும் ஊரில் இருந்து உள்கோட்டை செல்லும் சாலையில் துவக்கத்தில் இடது புறத்தில் காணப்படும் வயல்களுக்கு அருகில் நீளமான மேடு ஒன்று காணப்படுகிறது அதனை அகழி மேடு என்று அழைக்கிறார்கள்.

இப்பகுதியைப் பற்றி அறிந்து கொள்ள இரண்டு ஆய்வு குழி தோண்டப்பட்டது. இதில் 50 சென்டிமீட்டர் ஆழத்தில் செம்பூரான் கற்கள் எனப்படும் ஒருவகை கற்களை சீராக அடுக்கி கட்டிய சுவர் அமைப்பு ஒன்று காணப்பட்டது. கிழக்கு மேற்காக சுவர் அமைப்பு தொடர்ந்து செல்கிறது . சோழர் காலத்தில் கட்டப்பட்ட வெளிப்புற கோட்டை மதில் சுவராக இருத்தல் வேண்டும் என்பது நம்மால் அகழாய்வின் மூலம் காண முடிகிறது.

இவ்வாறு கங்கைகொண்ட சோழபுரத்தின் சிறப்புகள் ஆனது மண்மலை அகழாய்வு, சோழகங்கம் அகழாய்வு, கல்குளம், கோட்டை, மதில் சுவர் போன்றவற்றின் மூலம். அக்காலத்தில் இருந்த கட்டுமானப் பணியாளர்களின் நுண்ணிய திறன் வெளிப்படுகிறது. இத்தகு அமைப்பை செய்து தரக் கூடிய அளவிற்கு முதலாம் ராஜேந்திர சோழனின் ஆற்றல் சிறந்து விளங்கி இருக்கக்கூடும்.

அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் ( கங்கைகொண்ட சோழபுரம்)

கங்கை கொண்ட சோழபுர கோவிலின் மேற்புறம் அமைந்த மாளிகை மேட்டினை பல ஆண்டுகளாக தரையை அகழ்ந்து செங்கற்கள் எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. நம் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை முதலில் மாளிகைமேடு 1980 இல் தொடங்கிய பின் மண்மலை, கல்குளம், சோழகங்கம் அதற்கென குறிப்பிட்ட இடங்களில் 1996 வரை ஆய்வுகளை நடத்தியது. அகழாய்வில் மாளிகை மேட்டில் ஒரு மாளிகையில் செங்கற்களால் ஆன அடிப்பகுதியும் தூண்கள் நிறுத்துவதற்கான சிறுகுழி உடைய கற்களும் வெளிப்பட்டது. சுவர்கள் ஒரு மீட்டர் அளவு கனமுடைய உடையதாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல், உயரமான கட்டடம் எழுப்புவதற்கு வசதியாக இவ்வடிச்சுவர்கள் அருகருகே இரட்டைச் சுவர்களால் காணப்படுகிறது. உயர்ந்த சுவர்கள் மீது மரத்தாலான உத்திரங்களும் கூரை சட்டங்களுக்கும் அமைத்து சிறுதட்டுக்கள் செய்யப்பட்டிருந்தன. பல படையெடுப்புகளில் நிகழ்ந்த மாளிகைகளை எரிக்கும் நிகழ்வுகளாலும் காலப்போக்கில் அழிவுகளும் மரச்சட்டங்கள் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால், அவை அடித்து இணைக்க பயன்பட்ட சதுர இரும்பு ஆணிகள் பல்வேறு அளவுகளிலும் கிடைத்துள்ளது. வேய்ந்த ஓடுகளும் அழகுபடுத்திய ஓடுகளும் மணிகளும் கிடைத்துள்ளது.

ராஜேந்திர சோழனின் கடார வெற்றியில் கண்ட ஆய்வு, அகழாய்வின் படி தான் கடாரத்தில் சோழர் ஆட்சியில் வர்த்தகமும் சிறந்து இருந்திருக்கும் என்பதை அறியமுடிகிறது. அன்றைய கடாரம் இன்றைய மலேயா என்பர். அங்குள்ள பூஜாங் நிலப்பரப்பில் நடைபெற்ற அகழாய்வில் பல பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளது. சிதைந்த நிலையில் பூஜாங் பள்ளத்தாக்கில் முதல் ஆலயம் 1840 இல் கிடைத்தது. மேலும் 50 க்கும் மேற்பட்ட சிறு வழிபாட்டுத்தலங்கள் சிதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டன. கெடா மலையின் தென்பகுதியில் உள்ள அருகில் உள்ள பத்துபகாட் ஆற்றங்கரை தோட்டத்தில் கண்டறியப்பட்ட கோவில் 40 அடி சதுரம் ஆகும் கருவறை 20 அடி சதுரம் ஆகும் கருங்கல்லில் கட்டப்பட்டதாக உள்ளது.

ராஜேந்திரன் வெட்டுவித்த பழையாறை

கிபி 1015 -இல் கோயிலுக்குரிய நிலங்களை அலந்திட முதலாம் ராஜேந்திர சோழன் ஆணை பிறப்பித்தான். இந்த ஆணை பழையாறை அரண்மனையில் இருந்து தொடங்கியது பழையாறைக்கு முடிகொண்ட சோழபுரம் என்ற பெயரும் உண்டு. முடி கொண்ட சோழப் பேராறு என்பது முதலாம் இராஜேந்திரன் வெட்டுவித்தது ஆகும்.

இந்த பழையாறை கி. பி -7-ஆம் நூற்றாண்டு முதல்கி.பி 14—ஆம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம், இராச ராசபுரம் எனும் பெயர்களை தாங்கி சோழர்களில் இரண்டாவது தலைநகராய் விளங்கியது. நகரில் இருந்த கோவில்கள்.

1. பட்டீச்சுரம்
2. அரிச்சந்திரம்
3. ராஜராஜேஸ்வரம்
4. திருச்சந்திமுற்றம்
5. பழையாறை வடகாளி
6. நந்திபுர விண்ணகரம்
7. பழையாரை மேற்றளி
8. பழையாறை தென்காளி
9. பஞ்சவன்மாதேவி சுரம்
10. அருண்மொழி தேவிச்சுரம்
11. சுந்தரபெருமாள் கோவில்
12. கோமிராதப் பெருமாள் கோவில்
முன்பு கூறியது போலவே முதலாம் இராஜேந்திரனின் இறைபக்தி வெளிப்படுகிறது.

முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு வாசகங்களானது இதுவரை ஏறத்தாழ 320 வரை அச்சாகியுள்ளது. அச்சான தொகுதிகள்,

தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளில் -230
எபிகிராஃபிகா கர்நாடகா தொகுதிகளில்- 50
புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டு தொகுதியில்- 10
திருவாங்கூர் ஆர்காலஜிகல் சீரிஸ் தொகுதிகளில்- 10
செந்தமிழ் இதழ்களில்- 2
தமிழ்ப் பொழில் இதழ் களில்- 2
தென்னிந்தியக் கோயில்சாசனங்கள் தொகுதியில்- 9
எபிகிராஃபிக் இன்டிகா தொகுதிகளில்- 3

அதுமட்டுமல்லாது இன்று கன்னியாகுமரி கல்வெட்டுகள் மற்றும் பிற தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை கல்வெட்டு தொகுதிகளில் நிறைய அச்சாகியுள்ளது.

செப்பேடுகள் கூறும் ராஜேந்திரன் சிறப்பு

ராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் வரும் பல செய்திகள் இன்று நாம் அறிய முடிகிறது. திருவாலங்காட்டு செப்பேடு அரக்கோணம் பகுதியில் உள்ளது என்பதை 1905ல் கண்டறிந்தனர். 31 ஏடுகளை உடைய செப்பேடு வளையம் முத்திரையுடன் உள்ளது. இதன் எடை 82 விசை 20 பலம் என்று குறிப்பு ஆண்டு அறிக்கையில் உள்ளது. சுமார் 100 கிலோ எடைக்கு சமமானது சமஸ்கிருதம், தமிழ் பகுதிகளில் அடங்கிய செப்பேடு 10 ஆண்டுகள் இடைவெளியில் இரு பகுதிகளிலும் எழுதப்பட்டிருக்கலாம் என்பது கணிக்க முடிகிறது. இச்செப்பேடு ராஜேந்திர சோழனின் 6 ஆவது ஆட்சியாண்டில் 1918 இல் எழுதப்பட்டது.

பத்தாவது வீட்டின் முன்புறம் சமஸ்கிருத பகுதி முடிந்து 11வது ஏட்டில் தமிழ் பகுதி தொடங்குகிறது. இந்த பத்தாவது ஏட்டில் விடப்பட்ட இடைவெளியில் ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட எழுத்துக்களில் இடைச்செருகலாக செப்பேடும் தொடர்புடைய வாசகர் பகுதியும் பொறிக்கப்பட்டுள்ளது. நாச்சியாருக்கு 251/2 வேலி நிலம் அம்மைசேரி என்ற ஊரில் கொடுத்த செய்தியைக் கூறுகிறது.

அதுமட்டுமல்லாது, இதன் மூலம் செப்பேடு வாசகம் பழையனூர் மகாதேவனுக்கு சிங்காளந்த சதுர்வேதி மங்கல சபையினுடைய பிரம்தேயமாய் இருந்த பழையனூர் நிலங்களை பிரித்து வகையாக மாற்றிக் கொடுத்த செய்தியும் சொல்கிறது. இதன் மூலம் பொன்னாக 193 கழஞ்சும் கிடைத்தது. 3288 கல நெல் கோயிலுக்கு கிடைத்தது. பழையனூர் வேளாளர் நீலி கதையுடன் தொடர்புடைய ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் செப்பேட்டில் வழி அறியக்கூடிய செய்திகள்

• சமஸ்கிருத பகுதியில் விஜயபாலன், ஆதித்தன், பராந்தகன், ராஜாதித்தன், சுந்தரசோழன் பற்றிய வெற்றிச் செய்திகள் உள்ளது.
• சுந்தர சோழன் இறந்தபோது அவரது மனைவியும் ராஜராஜனின் தாயுமான வானவன்மாதேவி உடன்கட்டை ஏறிய செய்தி.
• ராஜராஜன் அமர புயங்களை வென்ற செய்தி உள்ளது.
• ராஜேந்திர சோழனின் படைத் தலைவன் கங்கை வரை சென்று அவர்களை வென்று கொண்டு வந்த கங்கை நீரை வைத்து சோழகங்கம் ஏரி உருவாக்கிய வெற்றியை வர்ணிக்கப்படுகிறது.

கரந்தை செப்பேடு சிறப்புகள்

ராஜேந்திர சோழன் காலத்தில் நான்கு செப்பேடுகள் கிடைத்துள்ளது. அது கரந்தை செப்பேடுகள், திருக்களர் செப்பேடு, எசாலம் செப்பேடு, திருவாலங்காடு செப்பேடு என 4 உள்ளது. தஞ்சாவூர் அம்மாபேட்டை அருகில் புத்தூர் என்ற இடத்தில் நிலத்தடியில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்றுதான் 1950-இல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். கரந்தை தமிழ்ச் சங்கத்தினர் பாதுகாப்பாக வைத்திருப்பதால் கரந்தைச் செப்பேடு என அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 57 தகடுகளும் 2 வளையங்களும் உள்ளது. செப்புத் தகடுகள் 3 பிரிவாக துளை அருகில் எண்ணடப்பட்டுள்ளன. இரண்டு பிரிவாக வளையங்களில் கோர்த்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கருதலாம். இவற்றின் மொத்த எடை 9582 தோலா என்ற குறிப்புள்ளது( இது109.20 கிலோ எடைக்கு சமம் ஆகும்.

ராஜேந்திர சோழனின் தாய் திரிபுவன மாதேவி பெயரில் சதுர்வேதிமங்கலம் உண்டாகி அதில் 1080 பிராமணர்களுக்கு பங்கு கொடுத்து அக்ரகாரம் உண்டாக்கியதை இச்செப்பேடு கூறுகிறது. இதனை உண்டாக்கியவன் நாராகன் மாராயன் ஜனநாதனாகிய ராஜேந்திர சோழ பிரம்மராயன் என்பவன் ஆவான். ராஜேந்திர சோழனின் எட்டாவது ஆட்சி ஆண்டில் 107-ஆம் நாளில் ஆணை பெறப்பட்டு 380 ஆவது நாளில் நிறைவேற்றப்பட்டது. அதாவது 1021 இல் வழங்கப்பட்ட செப்பேடு ஆகும். திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் இன்றைய அம்மாபேட்டை அருகிலுள்ள உடையார் கோவில் பகுதி ஆகும். இதில் முதல் பகுதி சமஸ்கிருதத்தில் 3 ஏடுகளிலும் இரண்டாம் பகுதி தமிழில் 22 ஏடுகளிலும் 1080 பிராமணர் பெயர்களை குறிப்பிட 32 ஏடுகளிலும் உள்ளது.

ராஜேந்திர சோழன் பெரும்பற்றப்புலியூரில் முகாமிட்டு அங்கிருந்த மாளிகையில் கீழே மண்டபத்தில் இருந்த பொழுது நாராகன் மாராயன் சதுர்வேதிமங்கலம் அமைக்க ஆணை பெற்ற செய்தியும் உள்ளது. இச்செப்பேடு சமஸ்கிருத பகுதியில் சுந்தரசோழன், ராசராசன் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சொல்லப்பட்டுள்ளது. ராஜேந்திரனின் வட இந்தியப் படை எடுப்புகள், இலங்கை வெற்றி, கடாரம் வெற்றி ஆகியவை சொல்லப்பட்டுள்ளது. கம்போடியா மன்னன் பரிசாக ஒரு தங்க தேரினை அனுப்பியதையும் அதனில் இவன் போர்க்களங்கள் சென்று வென்ற செய்தியையும் சொல்லப்பட்டுள்ளது.

சதுர்வேதி மங்களம் உண்டாக கொடுக்கப்பட்ட ஊர்கள் 54. மொத்த நிலப்பரப்பு 3153× வேலி வரிவிலக்கு தரப்பட்ட நிலப்பரப்பு 619 ×விதிக்கப்பட்ட நிலப்பரப்பு 2515× வேலி வசூலிக்கப்பட்ட நெல் 15050 கலம், காசு 32, அக்கம் 65.

திருக்களர் செப்பேடு

தஞ்சை மாவட்டம் திருக்களர் சிவன் கோயிலில் ஐந்து சோழர் செப்பேடுகள் கண்டறியப்பட்டது. 1902 ஆம் ஆண்டு கல்வெட்டு அறிக்கையில் பதிவாகி உள்ளது. அவை முறையே முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்து என்பது அறியப்படுகிறது. ராஜேந்திரன் செப்பேடு ஒரு ஏட்டில் முன்னும் பின்னும் பதியப்பட்ட 30 வரிகளான வாசகம் உள்ளது. இவனது திருமன்னி வளர என்ற மெய்க்கீர்த்தி 28 வரிகளில் உள்ளது.

எசாலம் செப்பேடு

விழுப்புரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எசாலம் சிவன் கோயில் திருப்பணியின் போது இச்செப்பேடு செப்புத் திருமேனிகளும் நிலத்தடியில் இருந்து கிடைத்தது. தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் உள்ளது 15 ஏடுகளை கொண்ட செப்பேட்டில் முதல் மூன்று இடங்கள் சமஸ்கிருத பகுதியிலும் பிற 12 ஏடுகளும் தமிழ் பகுதியும் கொண்டுள்ளது. ராஜேந்திர சோழனின் 24 வது ஆட்சி ஆண்டில் அவனது குரு சர்வசிவ பண்டிதர் வேண்டுகோளுக்கு இணங்க அவர் எழுப்பிய திருவிராமேச்சுரம் உடைய மகாதேவர் கோவிலுக்கு 90 வேலி நிலமும் அதன் வருவாய் என 3400 கல நெல்லும் கொடுக்க வெளியிட்டு உள்ளது. ராஜேந்திர சோழனின் இவ்வாணை காஞ்சிபுரத்தில் இருந்த மாளிகையிலிருந்து வழங்கியதாக கூறுவர் .வாய்மொழி ஆணை,வரிப்புத்தகத்தில் எழுதிய வாசகம் இது தொடர்பான அலுவலகங்கள் என செப்பேட்டில் தமிழ்பகுதி 45 வரிகள் வரை உள்ளது.

முத்திரைகளில் காணப்படும் சின்னங்கள்

முதலாம் ராஜேந்திர சோழனின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததுதான் திருவாலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள், எசாலம் செப்பேடு அவ்வகையில் அவனது ஆட்சி எல்லைகள் அவன் வென்ற அரச குலங்கள் வெற்றிகள் போன்றவற்றை உணர்த்தும் விதமாக முத்திரைகளில் காணப்படும் சின்னங்களும் மங்கலச் சின்னங்களும் இடம்பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாது திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சாமரங்கள், அதனிடையே வெண்கொற்றக்குடை, வில் அதன் மீது இரு மீன்கள், புலி, குத்துவிளக்குகள், அங்குசம், ஈட்டி ஆகியவையும். வில்லின் உட்பகுதியில் மத்தளம், முக்காலியின் மீது சங்கு, கடாரத்து அரசனை வென்று கொண்டுவந்த வித்தியாதர தோரணம், சாளுக்கியரின் பன்றி, ஸ்வஸ்திகம் போன்றவை உள்ளது.

கரந்தைச் செப்பேடு முத்திரையில் வெண்கொற்றக்குடை, சாமரங்கள், மீன்கள், புலி, குத்துவிளக்குகள், கொடிகள், அங்குசம், குத்துவாள், தாமரை, முக்காலி மீது சங்கு அல்லது படையல் போன்றவை உள்ளன.

எசாலம் செப்பேட்டில் சக்கரவர்த்தியை குறிக்கும் சக்கரம், ஸ்வஸ்திகம், மேகம், வெண்கொற்றக்குடை, சாமரங்கள், வில்லின் மீது மீன்கள், புலி, குத்துவிளக்குகள், அங்குசம், ஈட்டிகள், வில்லின் கீழாக பன்றி, முக்காலி மீது சங்கு, வித்யாதர தோரணம் ஆகியவையும் உள்ளது.

ராஜேந்திர சோழனுடைய செப்பேடு வாசகங்களை பொறித்தவர்களாக ஏழு நபர்கள் கூறப்படுகிறார்கள். அவர்கள் கரந்தைச் செப்பேடு, திருவாலங்காட்டுச் செப்பேடு, ராஜராஜன் காலத்திய ஆனைமங்கலச் செப்பேடுகள் போன்றவற்றை வைத்து கூறுகிறார்கள். அவர்கள்,

1. கிருஷ்ணன்
2. வாசுதேவனாகிய இராசராசப் பேராசாரியன்
3. ஆராவமுது
4. அரங்கள் திருபுவன மாதேவி பேராசாரியன்
5. தாமோதரன்
6. கிருஷ்ணன்
7. புருஷோத்தமனாகிய இராசேந்திர சிம்கப் பேராசாரியன்

இவர்களில் 3, 4, 5, 7 ஆகிய நால்வர் திருவாலங்காடு செப்பேட்டிலும் 2,4,5, 6, 7 ஆகியவர்கள் ஆனைமங்கலம் செப்பேட்டிலும் 4 7 ஆகிய இருவர் கரந்தைச் செப்பேட்டிலும் காணப்படுகின்றனர். செப்பேடுகள் எண்ணிக்கையில் அதிகம் இருந்ததால் ஒன்றிற்கு மேற்பட்டோர் பணி புரிந்தனர் என்று கூறப்படுகிறது. எழுத்து வடிவங்கள் மாறுபட்டு காணப்படுவதால் ஒன்றுக்கு மேற்பட்டோர் கை திறமையில் அவை அமைந்திருக்கலாம்.

முதல் ராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியில் ஆண்டில் ஏக நாயகன் திரு வாசலில் இரவில் விளக்கு எரிக்க 45 ஆடுகள் வழங்கப்பட்டதை கல்வெட்டு கூறுகிறது. ஏகநாயகனை இமையவரக்கரசை என்பது திருவிசைப்பா. ஏகநாயகன் என்ற சொற்றொடரால் இறையகத்து திருவாசல் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து மக்கள் குறிப்பிடுகின்றனர்.

முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ஐப்பசி திருநாள் என்பது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. கல்வெட்டு வழி நமக்குக் கிடைக்கிறது. முதலாம் ராஜேந்திரன் காலத்தில் செய்யாறு வட்டம் பிரம்மதேசத்தில் உள்ள திருமால் கோயில் ஐப்பசி திருநாளுக்கு திருவேங்கட மலையில் இருந்து நூற்றுக்கணக்கான ஸ்ரீவைஷ்ணவர்கள் வருவது வழக்கமாயிருந்தது. இந்த திருவிடைக்கழி சேவிக்க வந்தவருக்கு ஒன்பது நாளும் சோருஇடப்பட்டது அங்குள்ள கல்வெட்டு சொல்கிறது.

முதலாம் ராஜேந்திர சோழனின் இறைபக்தி பெரிதும் நமக்கு வெளிப்படுவது இவன் கோயிலுக்கு கொடுத்த கொடைகளின் வழியே. திருவண்ணாமலை தீபம் முதலாம் ராஜேந்திரனுக்கு சிறப்பான ஒன்றாக உள்ளது. திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இவ்விழாவானது சோழப் பெருமன்னர் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் இருந்தே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது கல்வெட்டு வழி அறியமுடிகிறது. திருக்கார்த்திகை நாளில் திரு அருணாச்சலேஸ்வரர் வீதி உலாவிற்கு அடியவர்களுக்கு உணவு அளிக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பேரகல் 40, சிற்றகல் 20 வழங்க நெல் ஐங்குறுணி வழங்கப்பட்டது. அகல் என்பது அகல் விளக்கை குறிப்பதாக உள்ளது.

ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் களில் தான் முதன் முதலாக திருவாய்மொழி என்ற சொல் இடம் பெற்றுள்ளது. நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள் ராஜேந்திரன் காலத்தவன். முதலாம் ராஜேந்திரன் காலம் முதல் நாலாயிர திவ்ய பிரபந்தம் பிரபலமடைய பட்டது. எண்ணாயிரம் சபையினர் திருவாய்மொழி இசைக்க நாங்கூராகிய ராசராச நல்லூரில் 45 வேலி நிலத்தை இராசராசனின் விண்ணகருக்கு அளித்துள்ளனர். திருவாய்மொழி பாடல்களை இசைக்கும் வைணவர்களுக்கு பூசை செய்பவரை விட அதிக ஊதியம் வழங்கப்பட்டது.

முதலாம் ராஜேந்திர சோழனின் போர் சிறப்பு, ஆற்றல், வலிமை போன்றவற்றை காட்டிலும் வேளாண்மைக்கு இவன் காட்டிய முக்கியத்துவம் கல்வெட்டுகள் வழி அறிய முடிகிறது. தாங்கள் செய்த வேளாண்மையின் பயனை அறுவடை செய்து மகழ்ச்சி அடையும் நாளை விழாவாக கொண்டாடுவர். இப் பழக்கமானது முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் இருந்தே வந்தது. இவ்விழாவிற்கு புதியீடு என்றும் அவ்வாண்டின் முதல் அறுவடை என்றும் பொருள் உள்ளது. இதனை திருவொற்றியூர் கல்வெட்டு கூறுகிறது.

முதலாம் ராஜேந்திரன் காலத்தை சேர்ந்த ஒரே ஒரு உருவச் சிலை ராசராசனின் அரசி சோழமாதேவி உருவமாகும். அது காளகஸ்தி கோவிலில் உள்ளது அதன் காலமும் விவரமும் உருவச் சிலையின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது. இராஜேந்திர சோழதேவரின் உத்தரவின்படி உருவாக்கியது என்று செய்தி உள்ளது. இது தான் தென் இந்தியாவிலேயே முதன்முதலாக காலத்தை குறிப்பிட்டுள்ள உருவ சிற்பமாகும்.

இவ்வாறு முதலாம் ராஜேந்திரனின் சிறப்பானது கல்வெட்டு, செப்பேடு, போன்றவை மூலம் அறியக்கிடைக்கிறது.

அரசகுல படிமங்கள்

1. தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நிறுவிய அவனது தந்தை சுந்தர சோழன் படிமம்.
2. ராசராசன் அவன் பட்டத்தரசி உலகமாதேவி படிமங்கள்.
3. காமரவல்லியில் செம்பியன் மாதேவியின் படிமம்.
4. ராசேந்திர சோழன், அவனது பட்டத்தரசி சோழமாதேவி ஆகிய இருவரது உருவங்களையும் ஒத்ததாக தஞ்சை பெரிய கோவில் செதுக்கப்பட்ட படிமங்கள்.
5. கோனேரிராஜபுரம் கண்டராதித்த சோழனின் சிற்பம்.
என உருவச் சிலைகள் காணப் படுகிறது.
வணிகப் பொருட்கள்
நெல், எள், கடுகு, சீரகம், பெருங்காயம், புளி, கருப்பட்டி, பனை வெல்லம், மஞ்சள், உப்பு, பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு கொட்டை, பாக்கு, மிளகு, சுக்கு, தேர், குதிரை, யானை, ஒட்டகம், எருது ,காளை, முத்து, சிப்பி, புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, பட்டு, நூல், இரும்பு, செம்பு, பொன், வெள்ளி, சவ்வாது, மெழுகு, விண்கலம், சந்தனம், அகில், பன்னீர், கற்பூரம், புனுகு முதலியவை வணிகப் பொருளாக கல்வெட்டுகளில் அறியப்படுகிறது.

கொங்கு நாடான அதிராச மண்டலம்

சோழர்களின் ஆட்சியில் கொங்குநாடு மண்டலம் என்று அழைக்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்து கொங்கு நாட்டை அதிரசம் மண்டலம் என்று பெயரிட்டு, 24 நாடுகளாகப் பிரித்தனர். முதலாம் ராஜேந்திர சோழன் கங்கர்களின் தலைகாட்டை கி.பி 1004-இல் கைப்பற்றினான். அதனால் அதனை சார்ந்த கொங்கு நாடு முழுவதும் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது சோழர்கள் நாட்டை மண்டலங்களாக பிரித்து கொங்கு நாட்டை சோழ கேரள மண்டலம் என்ற பிரிவில் வைத்து ஆண்டனர்.

மாந்தை, பொலன்னருவை, திருகோணமலை போன்ற இடங்களில் கிடைத்த ஆதாரங்கள், மாந்தை என்னும் மன்னாரில் இரு சோழர் கால கோவில்கள் இருந்தது. ஒன்று ராஜராஜேஸ்வரம் மற்றொன்று திருவிராமேஸ்வரம் இலங்கை மேலைக் கடற்கரையில் உள்ளது. இந்த ஊர் மாதோட்டம் என்ற பெயர் பெற்றிருந்தது. இது ஒரு வணிகத் துறை ஆகும்.

இலங்கையில் உள்நாட்டு பகுதியில் உள்ள பொலன்னருவை சோழர்களின் தலைநகரமாக இருந்தது. இங்கு வானவன் மாதேவி ஈஸ்வரம் முதலிய ஐந்து சிவாலயங்கள் சோழர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. தமிழகம் சார்ந்த வேலைக்காரர் படையினரின் கல்வெட்டுக்களும் உண்டு. சோழர்களை வென்ற பிறகு அரசர்களுக்கும் தலைநகராக விளங்கியது. அது மட்டுமல்லாது பல புத்த ஆலயங்களும் மடங்களும் இங்கு கட்டப்பட்டுள்ளது. பொலன்னருவையில் கிடைத்த ஆதாரங்களை காட்டிலும் திருகோணமலையில் அதிக அளவில் சோழர் ஆட்சி குறித்தும் கிடைத்தது. இது இலங்கை கடற்கரையில் உள்ள துறைமுகமாகும். தென் கிழக்காசிய நாடுகளுக்குச் செல்ல திருகோணமலை முக்கிய இடமாகக் பயன்பட்டது.
நால்மடி பீமன், சோழன் சக்கரன், சாமாந்த பரணன், வீர பூஷணம், எதிர்த்தவர் காலன், சயசிங்ககுல காலன் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் அரையன் ராஜராஜன் என்ற விக்கிரம சோழ சோழியரையன் தான் கங்கைநீர் கொணர்ந்த தளபதி ஆவான்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள வேளம், போரில் சிறைப்பிடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் வேளத்தில் அமர்த்தப்பட்டனர். அரண்மனை பணியாளர்களுக்கு என தனி விடுதிகளும் தெருக்களும் அமைந்திருந்தது. அவ்விடுதிகளுக்கு வேளம் என்று பெயர் சோழ மன்னர்களின் போர் படையில் 60000 யானைகளுக்கும் பல்லாயிரக்கணக்கான குதிரைகளுக்கும் இருந்துள்ளன. மேலும் ராஜேந்திரன் 9 லட்சம் படை வீரர்களுக்கு தலைமை ஏற்று சென்ற செய்தியை கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம், ஹோட்டூர் என்ற பொட்டி ஊரிலுள்ள சத்தியாசிரயனின் சகம் 929 கல்வெட்டில் உள்ளது. இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே எடுத்த படையெடுப்பாகும். இக்கல்வெட்டில் அவனது முழு பெயர்” ராஜராஜ நித்திய வினோத ராஜேந்திர வித்யாதர நுரு மாடி சோழன்” என்பதாகும்.
கோவில்களில் உணவு சாலைகள் இருந்தது இதன் பராமரிப்பிற்காக விடப்பட்ட நிலம் அல்லது ஊர்சாலபோகம் எனப்பட்டது. உணவு சாலைக்கு ராஜேந்திர சோழன் சாலை என பெயரிடப்பட்டு இருந்தனர்.

ராஜேந்திரன் அமைத்த எண்ணாயிரம் கல்வி சாலை

விழுப்புரம் பகுதியில் உள்ள எண்ணாயிரம் என்ற ஊர் ராஜேந்திர சோழன் காலத்தில் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. இதற்கு அருகில் உள்ள ஊரான பனையவரத்திலும் ராஜராஜ விண்ணகர், பரவை நங்கையார் ஈஸ்வரம், ராஜேந்திர சோழ விண்ணகர், ராஜேந்திர சோழன் மண்டபம் ஆகியவை உள்ளது. இங்கு ஒரு வேத பாடசாலை உள்ளது, அதற்கு ராஜேந்திர சோழன் காலத்தில் அவனது ஆணைப்படி நில வருவாயும் வரி வருவாயும் வழங்கப்பட்டது. அங்கு பயில்வோருக்கு தங்கிப் பயிலும் வசதியும் இருந்தது.

பிராமணர்களுக்கான இந்த வேத பாடசாலையில் 270 இளநிலை மாணவர்களும் 70 முதுநிலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் இருந்தனர். இவர்களில் இளநிலை பயின்ற பாடங்களும் நபர்களும்,

75 பேர்- ரிக் வேதம். 20 பேர்- தலவகாரசாமம்
75 பேர்- யஜூர் வேதம. 20 பேர்- வாஜ சனேயம்
20 பேர் -சந்தோக சாமம். 10 பேர்- அதர்வனம்
40பேர் – ரூபாவதாரம். 10 பேர்- பெளதாநாநீய கிரியாகால்பம், மற்றும் காணம்
முதுநிலை மாணவர்கள்
. 25 பேர்- வியாகரணம். 25பேர்- பிரபாகரம்
10 பேர் – வேதாந்தம்பயின்றனர் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் பயிற்றுவித்த பாடங்களும்,
3பேர்- ரிக்வேதம். 3பேர்- யஜூர் வேதம்

ஒருவர்- சந்தோகம். ஒருவர் – கலவ காரசாமம்

ஒருவர் – வாஜ சநேயம். ஒருவர்- பெளதாயநீய கிரியா, கல்பம், காணம்
இவர்களுக்கு உணவிற்கான நெல், அணிய ஆடை, எண்ணெய் தேய்த்து குளிக்க எண்ணெய். தங்குமிடம் போன்றவை கோவில் சார்ந்த தரப்பட்டது. ராஜேந்திர சோழன் மண்டபத்தில் உணவு அளிக்கப்பட்டது. இவர்கள் தவிர கோஷ்டியாக இருப்பவர்களும் இருந்தனர். வெண்ணை கூத்தாரின் ஜன்மாஷ்டமி (கிருஷ்ணா ஜெயந்தி) நாளில் வேதபாராயணம், திருப்பதியம் பாடல் சிறப்பாக நடைபெறும். இவ்வூரில் இவர்களது வசதிக்காகவும் ஏனையோர் வசதிக்காகவும் 3 தண்ணீர் பந்தலும் இருந்தது. அவை உணவு வழங்கப்பட்ட ராஜேந்திர சோழன் மண்டபம், பறவை ஈஸ்வரமுடையார் கோவில், ராஜேந்திர சோழ விண்ணகர் ஆழ்வார் கோவில் ஆகியவற்றின் முன்பாக அமைந்திருந்தது. இவ்வூரில் ஒரு தர்ம பள்ளியும் ஆசிரியரும் இருந்த செய்தியும் நமக்கு கிடைக்கிறது.

இவ்வாறு ராஜேந்திரன் சோழன் காலத்தில் நடந்த சிறப்பு விழாக்கள் பல செய்திகள் நமக்கு கல்வெட்டின் வழியாக கிடைக்கிறது.

ராஜேந்திர சோழன் காலத்தில் சமணம்

கோனேரிராஜபுரத்திலுள்ள இராஜாதிராஜன் கல்வெட்டு ஒன்று,
“ பாவைக்குடி பெருங்குறி சபையோம் இவ்வாட்டை
கற்கடகநாயற்று பூர்வ பக்ஷத்து வியாழக்கிழமை பெற்ற
அத்தத்தி நின்று நம்மூர் சுத்தமல்லி வாய்க்கால்
கரையில் இராசேந்திரன் சோழன் புளி கீழ் கூட்டங்
குறைவரக்கூடி இருந்து”.

இவ்வூரில் இறைவனுக்கு வழிபாட்டு நிலம் ஒதுக்கியது குறிப்பிடுகிறது. சபை கூட்டங்கள் பொதுவாக மண்டபங்களிலும் ஊர் பொது இடங்களிலும் கூடின. இக் கல்வெட்டின் படி கால்வாய் கரை மீது இருந்த புளியமரத்தடி கூடும் இடமாக இருந்தமை அறியப்படுகிறது. பல தர்ம காரியங்களுக்கும் ஊர் பொது விஷயங்களுக்கும் கூடும் இடமாக புனித இடமாக இப்புளியமரநிழல் அமைந்தது. இந்த புளிய மரத்துக்கு ராஜேந்திரன் என்ற பெரும் மதிப்புடன் பெயரிட்டிருந்தனர்.
ராஜேந்திரன் காலத்தில் சைவமும் வைணவமும் பேராதரவை பெற்று இருந்தது போலவே, சமணமும் பெளத்தமும் ஆதரவு பெற்று விளங்கியது. பௌத்தத்திற்கு நாகப்பட்டினம் சூடாமணி விகாரம் சிறந்த எடுத்துக்காட்டு. சமணத்திற்க்கு ஆதரவளித்த வேலூர் -போளூர் அடுத்துள்ள திருமலையும் கொங்கு நாட்டிலுள்ள விஜயமங்கலம் சிறந்த எடுத்துக்காட்டு. திருமலை ராஜேந்திர சோழனின் 12- வது ஆட்சியாண்டு கல்வெட்டு, அங்கு அவனது அத்தையும், ராஜராஜனின் சகோதரி குந்தவை பெயரில் சமணக் கோவில் இருந்ததையும், ஒரு வியாபாரியின் மனைவி நந்தாவிளக்கு கொடுத்ததையும் திருவமுது ஏற்பாடு செய்ததையும் கல்வெட்டு ஒன்று,

“ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து
பங்கள நாட்டு நடுவில் வகை முகை நாட்டு
பள்ளிச்சந்தம் வைகாவூர்த திருமலை
ஸ்ரீ குந்தவை ஜீநாலயத்து தேவருக்கு
பெரும்பாணப் பாடி கரைவழி மல்லியூர்
இருக்கும் வியாபாரி நந்தப் பயன் மணவாப்பு
சார் முண்டப்பை வைத்த திரு நந்தா விளக்கு
ஒன்றினுக்கு காசு இருபதும் திருவமுதுக்கு
வைத்த காசு பத்தும்”
விஜயமங்கலம் கோவிலில் ராஜேந்திர சோழன் காலத்தில் அங்குள்ள பார்சுவநாதர் என்ற சமண தெய்வத்திற்கு முன்பாக விளக்கெரிக்க, கவிமாணன் விஜயமல்லன் என்பவன் 96 ஆடுகள் கொடுத்த செய்தி மற்றொரு கல்வெட்டில் நமக்கு அறியக் கிடைக்கிறது.

கன்னியாகுமரி கல்வெட்டு

அக்காலத்தில் அரண்மனை பணிப்பெண்களுக்கு பெண்டாட்டிகள் என்று பெயர் இருந்தது. முதலாம் ராஜேந்திரன் சமையற்காரி ஒருத்தி திருவமுதிடும் பெண்டாட்டி குறிப்பிடப்படுகிறது. அகமுடையாள், மணவாட்டி எனும் சொற்கள் மனைவியைக் குறிக்கிறது. கன்னியாகுமரி குகாநாதசுவாமி கோவிலில் உள்ள ராஜேந்திர சோழனின் 24வது ஆண்டு கல்வெட்டு ஒன்று. குமரியில் இருந்த ராஜராஜேஸ்வரம் கோயிலுக்கு கொடை கொடுத்த, சோழகுல வல்லி எனும் பெண் ராஜேந்திர சோழனுக்கு திருஅமுது ஆடும் பெண்டாட்டி என்ற குறிப்பு தருகிறது. இதன் மூலம் இவள் ராஜேந்திர சோழனுக்கு சமையல் பணி செய்தவர் என்பது தெளிவாகக் கிடைக்கிறது.

“ ஸ்வஸ்தி ஸ்ரீ பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும்
. கொண்டருளின கோப்பரகேசரி பன்மராயின
உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு
யாண்டு இருபத்து நாலாவது – ராஜராஜப்
பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு புறத்
தாய நாட்டு குமரி ராஜ ராஜ பாண்டி
ஈஸ்வரமுடையார் உடையார் ஸ்ரீரா
ஜேந்திர சோழ தேவர்க்கு திருவமுது ஆடும்பெண்
டாட்டி அருமொழிதேவர் வளநாட்டு புலியூர் நாட்டுப்
பாலையூர் திட்டை சோழ குலவல்லி வைச்ச
திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு வைச்ச சாவா
மூவாப் பேராடு ஐம்பது.”
இவ்வாறு கல்வெட்டின் வழி முதலாம் ராஜேந்திர சோழனுக்கு சமையல் பணி செய்தவர் பற்றிய குறிப்பு கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாது, பெரும் வெற்றியான சோழகங்கம் ஏரி இவன் பகை நாட்டின் மீது படையெடுத்து படைகளோடு ஜெயங்கொண்டத்தில் காத்திருந்த பொழுது, மாமன்னன் முதலாம் ராஜராஜனின் ஆணை கிடைக்கும் வரை பொழுதை வீணாக்காமல் இவன் உருவாக்கியது. கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கே ஜெயங்கொண்ட சோழபுரம் செல்லும் பெருவழியில் இரண்டு கல் தொலைவில் உள்ளது. இது தற்போது பொன்னேரி என அழைக்கப்படுகிறது. தெற்கு வடக்காக16 கல் நீளமும் 3. கல் அகலமும் கொண்டது. ஒரு காலத்தில் பொன்னேரி வடிகாலாக வீராணம் ஏரி அமைந்திருந்தது.

ராஜேந்திர சோழன் மகன் திருவிந்தளூர் செப்பேடானது , இரண்டாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது இத்திருவிந்தளூர்ச் செப்பேடு தான் மிகப்பெரிய செப்பேடு ஆகும். இந்தியா முழுவதற்கும் இதுவரை கிடைத்த செப்பேடுகளில் எண்ணிக்கையில் 86 ஏடுகளை கொண்ட செப்பேடுகள் ஒவ்வொன்றும் 44 சென்டிமீட்டர் நீளமும் 21. சென்டிமீட்டர் அகலமும் கொண்டது. இதன் மொத்த எடை 150 கிலோ. இதுவரை பெரிய செப்பேடு தொகுதியாக கருதி வந்த 57 ஏடுகளைக் கொண்ட கரந்தைச் செப்பேடு தற்போது இரண்டாவது பெரிய செப்பேடு என்ற நிலையை அடைகிறது. இது முதலாம் ராஜேந்திரனால் வெளியிடப்பட்டது.

ராஜேந்திரன் காலத்தில் தமிழகத்தில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள் பானர்ஜி என்ற பெயரில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது, ராஜேந்திரன் திருவுருவங்கள் ஆனது கோவிந்தபுத்தூர். திருவாரூர், கோலார் போன்ற இடங்களில் திருவுருவச்சிலை ஆக செதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலாம் ராஜேந்திர சோழனின் காலத்தில் நடந்த பல செய்திகளை நமக்கு புலப்படுத்தும் விதமாக கல்வெட்டு அமைகிறது.

முதலாம் ராஜேந்திர சோழனின் பிறப்பு விழா

சோழநாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்திருந்த நாள், அது ராஜராஜ சோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்த முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளே.  பழையாறை நகரம், தஞ்சை மாநகரம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது.  கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பல இளவரசர்கள் ராஜேந்திர சோழனின் அழகை காண வந்த வண்ணமே இருந்தனர்.  இவன் பிறந்த நாளில் திருமுதுகுன்றம் உடையார் கோவிலில் திருவாதிரை நாளில் திங்கள் தோறும் சிறப்பு வழிபாடுகள் செய்யவும், விழாக் கொண்டாட நிலம் அளிக்கப்பட்ட செய்தியையும் விருதாச்சலத்தில் உள்ள கல்வெட்டொன்று கூறுகிறது.

தன் சிறிய தந்தையான மதுராந்தக உத்தம சோழன் பால் கொண்ட அன்பால், ராஜ ராஜன் தன் மகனுக்கு மதுராந்தகன் என்ற பெயரை சூட்டி மகிழ்ச்சி கண்டான்.  முதலாம் ராஜேந்திர சோழன் புன் சிரிப்பிலும் வடிவழகிலும்  தாய் தந்தையருக்கு மகிழ்ச்சியையும்,  பகைவர்க்கு அச்சத்தையும் கொடுத்தது என்பதை கரந்தைச் செப்பேடு கூறுகிறது.

இராஜராஜன் தலைமையில் சோழ நாடானது அரசியல் துறை, சமூகத் துறை, அறிவுத் துறை, வாணிகம், விவசாயம், சமய வளர்ச்சி, நாகரிகமும் பண்பாடும் போன்றவற்றில் நல்ல வளர்ச்சியில் இருந்தது.  இதனை சேரரும், பாண்டியரும், மேலைச் சாளுக்கியரும், ஈழத்தினரும், அதுமட்டுமல்லாமல் பல  பகைவர்களும்  சோழ  வளர்ச்சியை தடுத்து நிறுத்த முற்பட்டபோது,  ராஜ ராஜனும் தன் படை வலிமை கொண்டு பகைவர்களை வென்றான்.  இருப்பினும் மதுராந்தகன் உரிய பருவம் எய்திய பின்பு தன் தந்தையை விட பெருமளவு வெற்றியைக் கண்டான்.

முதலாம் ராஜேந்திர சோழன்  செம்பியன்மாதேவியராலும், இராஜராஜனின் தமக்கை குந்தவை தேவியராலும், வானவன் மாதேவியராலும் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்டான்.  சிறு வயதிலேயே நல்ல ஆற்றலும் அறிவும் வீரமும் வலிமையும் இவனிடம் காணப்பட்டது.  தந்தையான ராஜ ராஜன் தன் மகனுக்கு பல உயரிய அணிகலன்களை அணிந்து மகிழ்ச்சி அடைந்தனர். அதற்கேற்ற வண்ணம் முதலாம் ராஜேந்திரனும் அரசு குலத்துக்கே உரிய, யானை ஏற்றம்பரி ஏற்றம், தேர் செலுத்துதல்வாள் பயிற்சிபடைக்கலப் பயிற்சி, திண்டோளும், போன்றவற்றில் சிறந்து விளங்கினான்.

முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வியறிவு

இவன் சிறந்த சைவாசாரியராகவும், மாணவரின் மனநிலை அறிந்து கற்பிக்கும் பண்புள்ளவராகவும் விளங்கினான். சர்வசிவ பண்டிதரிடத்து  இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள், அரசியல் தொடர்பான அறநூல்கள், போர் பற்றிய நூல்கள், சோழ மன்னருடைய முறையான வரலாறு போன்றவற்றையும் கற்றான் .  சைவ சமய நூல்கள் ஆன தேவாரம், திருவாசகம், திருமுறை நூல்களையும், வேதங்கள், சாஸ்திரங்கள் போன்றவற்றையும் தெளிவுற கற்றான்.

இவன் ஆன்றவிந்தடங்கிய சான்றோர் ஆன காஷ்மகாரி ஆராவமுது  புருஷோத்தமனான ராஜேந்திர சிம்மப் பேராசிரியரிடம் தான் அற நூல்களை கற்று தேர்ந்தான்.  முதலாம் ராஜேந்திரனுக்கு நண்பனாய், தத்துவ ஞானியாய்,ஆசானாய்  இருந்தார்.  இவர்தான் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பேராசிரியராக இருந்தார் என்பதை கரந்தைச் செப்பேடுகள் பகுதியில் காணப்படுகிறது.

இவன் சைவ சமயத்தில் பேர் ஆர்வம் காட்டியதால் அதன் நுணுக்கங்களை நன்கு கற்றுத் தேர்ந்தான். சிவநெறியின் அறுவகைப் பெயர்களில் ஒன்றாகிய காளாமுகத்தை சார்ந்த இலகுலீச பண்டிதரிடம் சைவ ஆகமங்களில் நன்கு கற்றார்.  ஒரு மன்னன் மகனாக பிறந்த போதிலும் தன் ஆசிரியர்கள் மீது அளவு கடந்த அன்பு காட்டினான். இவன் தன் ஆட்சிகாலத்தில் தன் ஆசிரியர்களுக்கு  அளித்த ஆசாரிய போகத்தால் அறிய முடிகிறது.

இவன் சிற்பம், ஓவியம், இசை முதலான கலை வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டதோடு சமயபொறை  மிக்கவனாகவும் வாழ்ந்தான்.  தன் தந்தையின் சிவநெறி பண்பினை தாமும் பின்பற்றி வாழ்ந்தான் .இறை பக்தி உடையவராகவும் விளங்கினார். இவனுக்கு பண்டித சோழன்,  சயங்கொண்டான், சிவபாதசேகரன் போன்ற சிறப்பு பெயர்கள் வழங்க இவைகளை காரணமாக இருந்தது .முதலாம் ராஜேந்திர சோழன் வீரமும் கடவுள் பற்றும் தன் இரு கண்களாக கொண்டான்.

தன் இளமைப் பருவத்திலேயே தந்தையுடன் சேர்ந்து கங்க போர், கலிங்கப்போர், குந்தளப்போர் போன்றவற்றை வெற்றி கண்ட நடத்தியதால்.  ராஜராஜன் ஒரு நன்னாளில்,கி.பி(1012) இராஜேந்திரனுக்கு இளவரசு பட்டம் கட்டி ராஜேந்திரன் என்னும் அபிஷேக விழாவினை நடத்தி அரியணையில் ஏற்றினார்.   இராஜேந்திரன் இளவரசுப் பட்டம் பெற்று  இரண்டு ஆண்டுகள் கழித்த பின்னரே கி.பி 1014 தன் தந்தையால் முடிசூட்டப்பட்டான்.

ராஜேந்திர சோழன் முடிசூட்டிக் கொள்ளும் பொழுது 50 வயது உடையவனாக இருந்தான் என ராசமாணிக்கனார் தனது சோழ வரலாறு நூலில் குறிப்பிடுகிறார். ஆனால், ஏறத்தாழ 45 வயது இருக்கலாம் என்று குலோத்துங்கன் மூவர் நூலில் திரு.வ. பொன்னுசாமி பிள்ளை குறிப்பிடுகிறார்.

ராஜ ராஜன் தன் மகனான ராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டில் ஒரு தேவ தானம் அளித்தான் என்ற செய்தி திருமுக்கூடல் கல்வெட்டில் குறிக்கப் படுகிறது.  ராஜேந்திரன் மூன்றாம் ஆட்சியாண்டில் தந்தையுடன் இணைந்து ஆட்சி நடத்தியதால் தமிழக வரலாற்றில் யாரும் காண முடியாத அளவு அனைவருக்கும் வியப்பைக் கொடுத்தது.

இங்கிலாந்து நாட்டை ஆண்ட விக்டோரியா பேரரசர் வயது முதிர்ந்தவர். அவரது ஆட்சிக் காலத்தில் அவருக்கு வயது முதிர்ந்த மகன்  ஒருவர் இருந்தார். தாயாருக்கு பிறகு பட்டம் பெற்ற அவர் முதுமை அடைந்தார். அவரைப் போலவே நம் ராஜேந்திரனும் பட்டம் பெற்றபோது ஏறத்தாழ 50 வயது உடையவராக இருந்தான்.  ராஜராஜனது நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டில் ராஜேந்திர சோழ தேவன் எனக் குறிக்கப் பெறுகிறது.

ராஜராஜனின் ஆட்சி காலம் ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் நீடித்தது என்பதும். அக்காலத்தில் ராஜேந்திரன் தந்தைக்கு உதவியாக நிர்வாகத்தை கவனித்தான், படை நடத்திச் சென்று பல போர் கண்டான், அரியணை ஏறினான், படைத் தலைவனாய் அமர்த்தப்பட்டான். இவ்வாறு பார்க்கும் பொழுது இவன் அரியணை ஏறிய பொழுது 50 ஆண்டு நிறைந்தவனாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

இவ்வாறு முதலாம் ராஜேந்திர சோழனது கல்விப் புலமையையும் போர் கண்ட வெற்றிகளும் தன் தந்தைக்கு பெரும் நெகிழ்ச்சியை தந்ததால் தான் தன்  ஆட்சி காலத்திலேயே அவனுக்கு பட்டம் சூட்டி அரியணையில் ஏற்றினார்.

இராஜேந்திரனின் அரசியல் கால அரியணை ஏற்றம்

முதலாம் இராசேந்திரன் சோழன் கி .பி 1012-இல் இளவரசு பட்டம் சூட்டபட்டு தன் தந்தையுடன் இணைந்து மிக ஆற்றலுடன் ஆட்சி புரிந்தான். ராஜராஜ சோழன் இறந்த பின்பு பரந்துபட்ட பேரரசின் ஆட்சியை தன் மகனான ராஜேந்திர சோழனுக்கு விட்டுச் சென்றான் . ராஜேந்திரன் அரியணை ஏறிய பொழுது சோழப் பேரரசு தற்போது சென்னை மாநிலத்தையும், மைசூர் மாநிலத்தில் ஒரு பகுதியையும், ஈழநாட்டின் வடபகுதியையும் உடையதாக பரந்து காணப்பட்டது. முதலாம் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய போது பேரரசை சூழ்ந்துள்ள அரசுகளின் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

பாண்டியர்கள் தமிழகத்தின் தென்கோடி பகுதியை ஆண்டு வந்தனர். சங்ககால பாண்டியர் வரலாறு தெளிவாக கிடைக்கவில்லை. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வெற்றியைப் பற்றி நாம் சங்க இலக்கிய நூல்களில் பார்க்கலாம். களப்பிரர் , பல்லவர் எழுச்சியால் நான்காம் நூற்றாண்டில் வீழ்ச்சியுறு தொடங்கிய பாண்டிய அரசு. கி.பி ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில் மீண்டும் தலை தூக்கியது.

பிந்திய பாண்டியர்கள் இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டிய முதல் மன்னன் கடுங்கோன் என்பவன். பாண்டியர் ஏறத்தாழ மூன்று ஆண்டு காலம் தமிழ்நாட்டை சிறப்புடன் ஆண்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட சோழருடன் இவர்கள் மணவினை தொடர்பும் நட்புரிமையும் கொண்டிருந்தனர்.

இந்நிலை விசயாலய சோழன் காலத்தில் மாறியது. இக்காலத்தில் பாண்டிய மன்னர்கள் சோழ மன்னரினும் மேம்பட்டு விளங்கினர் . பாண்டியர்கள் சோழ நாட்டைக் கைப்பற்றும் நோக்கத்துடன் குமமூக்கு, அரிசிலாற்றங்கரை, திருப்புறம்பியம் போர்களில் ஈடுபட்டனர் . திருப்புறம்பியம் போரில் முதலில் தோற்றனர் . இதற்குப் பின்னர் சோழ பாண்டியர் பகைமை வளர்ந்தது தொடர்ந்து நடைபெற்ற பாண்டியர் சோழர் ஆதிக்கம் தமிழக வரலாற்றில் சிறப்பான ஒரு நிகழ்ச்சியாகும்.

இரண்டாம் வரகுண பாண்டியர் காலம் வரை பாண்டியர்களின் பெருமை உயர்ந்திருந்தது. இவர்களுடைய புகழும் வெற்றியும் திருப்புறம்பியம் போருக்குப் பின் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. விசயாலயனுக்கு பின்பு ஆண்ட சோழ மன்னர் பாண்டியர்களை பல முறை வென்று அடிமைப்படுத்தினர். பிற்கால சோழர் காலத்தில் சோழப்பேரரசு மீண்டும் தனது மேலாண்மையை தமிழகம் முழுவதும் நிறுவியது.
முதலாம் ராஜராஜன் பாண்டியர்களை இரு தடவை வென்று அடிமைப்படுத்தினான். இவனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன்னன் அமரபுயங்கன் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடு நமக்கு புலப்படுத்துகிறது.

தஞ்சை ராஜராஜேச்சுரத்து சாசனங்களில், ராஜராஜன் காலத்தில் பாண்டிய நாட்டில் சிற்றரசர் சிலர் இருந்தனர் என்பதும் அமர புயங்கன் அவர்களுக்கு தலைவனாய் இருந்திருக்க வேண்டும் என்பதும் அவர்களை ராஜராஜன் வென்றான் என்பதும் மலைநாட்டு சேரனையும் பாண்டியர்களையும் எரித்துக் கொன்ற பண்டாரம் என்று கூறப்படுவதால் நம்மால் அறிய முடிகிறது.

ராஜராஜனால் வென்று அடக்கப்பட்ட பாண்டிய சிற்றரசர்கள் ராஜேந்திரன் அரியணை ஏறிய பொழுது சிறிது வலிமை கொண்டு திறை செலுத்தாமல் முரண்பட்ட நடந்தனர். அதுமட்டுமல்லாது சோழ ஆட்சிக்கு எதிராக புரட்சி கொடி ஏற்றினர். படை வலிமையைப் பெருக்கிக் கொண்டு இருந்தனர் .

முத்தரையர்

தொடக்கத்திலிருந்தே பல்லவரின் சிற்றரசர்களாக முத்தரையர் இருந்தனர். பாண்டியர் பல்லவர் போராட்டத்தில் பல்லவருக்கு பக்கபலமாக முத்தரையர் இருந்து பாண்டியரை எதிர்த்துப் போர் புரிந்தனர். விஜயாலய சோழனுக்கு பின்னர் பாண்டியரின் துணையுடன் சோழரை வீழ்த்தும் பணியில் முத்தரையர் முனைந்து செயல்பட்டனர். ஆதித்த சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழரின் சில பகுதிகளை முத்தரையர் கைப்பற்றிக்கொண்டு புரட்சி செய்ய தான். ராஜராஜ சோழன் காலத்தில் சோழர்கள் முத்தரையர்களின் நட்பை கொண்டனர். இந்த சோழனின் இலங்கைப் படையெடுப்பு அரங்கன் காரியான சோழ விச்சாதிர முத்தரையன் சோழர் சார்பாக இலங்கையில் போரிட்டான். ராஜேந்திரன் காலத்தில் முத்தரையர் சோழருடன் நட்பு கொண்டிருந்தனர்.

சேரர்

சோழநாட்டிற்கு மேற்கு அமைந்துள்ளது சேர நாடு. மலை நாடு என அழைக்கப்படும் சேரநாட்டினை பண்டைய காலம் முதல் ஆண்டு வந்தனர். பிற்கால சோழர் காலங்களில் சேர மன்னர்கள் சோழ மன்னர்களுக்கு திறை செலுத்தும் குறுநில மன்னர்களாக வலம் வந்தனர் என்பது கல்வெட்டு வழி அறியமுடிகிறது. அக்கல்வெட்டு துணை கொண்டு ஆராய்ந்து பார்க்கும் பொழுது முதலாம் ராஜராஜன் ஆட்சிக் காலத்திலேயே சேர நாடும், பாண்டிய நாடும் சோழர் ஆட்சிக் உள்ளகிவிட்டது என்பது தெரிய படுகிறது.

சேர மன்னன் ஆகிய பாஸ்கர ரவிவர்மன் முதலாம் ராஜராஜசோழன் அனுப்பிய தூதுவனை பிடித்து சிறை வைத்தான் என்பதும் இதனால், ராஜராஜன் சேர நாட்டின் மீது படையெடுத்து சேர நாட்டின் கடற்கரைப் பட்டினம் ஆகிய காந்தளூர் சாலை யில் சேரர் மரக்கலங்களை அழித்து பெரிய வெற்றி பெற்றான் . காந்தளூர் சாலை என்று தற்காலத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு பகுதியாகும்.

இது வலிய சாலை எனவும் அழைக்கப் படுகிறது. ராஜராஜன் காந்தளூர் சாலை வென்ற பின்பு , உதகையை வென்று தீக்கிரையாக்கிநான். பின்பு விழிஞத்திலும் பெரும் போர் நிகழ்த்தி வெற்றி பெற்றான். இவர் கி.பி 978 முதல் கிபி 1036 வரை ஆட்சி செய்த பெருமைக்குரிய பாஸ்கர ரவிவர்மன் ராஜராஜன் இடம் தோல்வி கண்டான். இருப்பினும் ஈழ மன்னனிடம் உதவி பெற்ற சோழ வேந்தனை வெல்லும் தருணம் பார்த்திருந்தான் . சோழர் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்து வந்தான். எனவேதான் ராஜேந்திரன் சோழ நாட்டின் மீது படை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. சேரநாடு முன்பு ராஜராஜனால் சோழ நாட்டுடன் இணைக்க பெற்று மலை மண்டலம் எனப் பெயரிட்டு பெற்றிருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஈழம்

தமிழகத்தின் தெற்கே அமைந்த கடலால் சூழப் பெற்ற நாடுதான் ஈழம். இப்பழம் தீவில் சிங்களர் வாழ்ந்து வந்ததால் சிங்களத் தீவு என அழைக்கப்பட்டது. இது தற்போது உள்ள ஸ்ரீ லங்கா ஆகும். சங்ககாலச் சோழன் கரிகாலன் ஈழ நாட்டை வென்றான் என்று அறியமுடிகிறது. பிற்கால சோழர் காலத்தில் ஈழ-சோழ போர் கடுமையாக நடைபெற்றது. முதல் பராந்தக சோழன் இடம் தோல்வி கண்ட ராஜ சிம்ம பாண்டியன் இடத்தில் அடைக்கலம் புகுந்தான் தன் முடியினையும் அரசு சின்னங்களையும் ஈழ நாட்டு மன்னனிடம் அடைக்கலப் பொருளாக கொடுத்தான்.

இம் முடியினை கைப்பற்றும் நோக்கத்தோடு முதலாம் பராந்தகன் ஈழ நாட்டின் மீது படையெடுத்து வடபகுதியை வென்றான் முடியை கவர முடியவில்லை . இரண்டாம் பராந்தகன் சுந்தரசோழன் ஈழத்தின் மீது படை எடுத்து தோல்வி கண்ட மன்னனுடன் சமாதானம் செய்துகொண்டான். ஈழ மன்னர்கள் பாண்டிய மன்னருக்கு படை உதவி செய்து சோழரை வீழ்த்த முயன்று வந்தனர். முதலாம் ராஜராஜன் காலத்தில் ராஜேந்திரன் தலைமையிலான சோழப்படை ஈழம் சென்று வட பகுதியை வென்று மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிட்டு அனுராதபுரத்தை அழித்து பொலனருவாயை புதிய தலைநகராக்கி மீண்டது.

இப் போரில் தோல்வியுற்ற ஈழவேந்தன் ஐந்தாம் மகிந்தன் காட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்டான் . ராஜேந்திரன் முடியை கைப்பற்ற இயலாமல் தன் நாடு திரும்பினான். பின்னர் காட்டில் ஒளிந்த மகிந்தன் சில ஆண்டுகள் கழித்து காட்டி நின்று வெளியே வந்தான். பெரும் படை திரட்டினான் ராஜேந்திரன் ஈழ படையை சோழர் ஆட்சியில் செலுத்தி மீட்க தகுந்த காலத்தை எதிர்நோக்கி இருந்தான். இச்சமயத்தில்தான் சோழநாட்டில் ராஜராஜன் தன்னாட்சி நீங்க ராஜேந்திரனை பொறுப்பினை ஏற்றான். ராஜேந்திரனும் ஈழ நாடு முழுவதும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற ஆவல் கொண்டு அங்கு போர் தொடுத்து இளவரசனின் முடியையும் அவர் தேவியரின் முடியையும் கைப்பற்றினான்.

சாளுக்கியர்

தென்னிந்திய வரலாற்றில் தமக்கென ஒரு சிறந்த இடத்தைப் பெற்றவர் சாளுக்கியர். தக்கணப் பகுதியில் மிக்க வலிமையுடன் ஆட்சி செலுத்தியவர் ரட்டர் சாளுக்கியர், வல்லவர் என்று சோழர்கால கல்வெட்டில் குறிக்கப் பெறுகிறது. இரட்டை மண்டலத்தை ஆண்டு வந்தவர் துங்கபத்திரை ஆற்றுக்கு வடக்கே நர்மதை ஆற்றின் பெரும்பகுதி அளவும் படர்ந்திருந்தது. நாடே ரெட்ட மண்டலமாகும் ஏழரை இலக்கம் நிலவுஉடையதால் இரட்டபாடி ஏழரை இலக்கமும் என்று தமிழ் நூல்களில் கல்வெட்டுகளில் குறிக்கப் படுகிறது. இந்நாட்டை தொடக்க காலங்களில் சாதவாகன வேந்தர்கள் ஆண்டு வந்தார்கள். பின்னர் ராஷ்டிரகூட மன்னர்கள் இந்நாட்டினை கைப்பற்றி ஆட்சி செலுத்தினார்கள் .இவர்களை வென்று இரட்டபாடி பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தவர் சாளுக்கியர்.

முப்பிரிவு கொண்ட சாளுக்கியர்

சாளுக்கியர்கள் முதல் பிரிவினர் வாதாபியை தலைநகராகக் கொண்ட மேலை சாளுக்கியர்கள் கி.பி 547 முதல் கி.பி 753 மூடிய செங்கோல் ஆட்சி செலுத்தினர். பாதாமி (வாதாபியின்) முந்திய சாளுக்கியர் என அழைக்கப்படுகிறார்கள். இரண்டாவது பிரிவினராகியவர்கள் வேங்கை தலைநகராகக் கொண்ட கீழைச் சாளுக்கியர்கள் கி.பி 615 முதல் கிபி 1076 சோழ சாளுக்கிய அரசிணைவு ஏற்படும்வரை நல்லாட்சியை செய்தனர். மூன்றாவது பிரிவினர் கல்யாணி நகரைச் சார்ந்த பிந்திய சாலுக்கியர் ஆட்சி கி.பி 973 முதல் கி.பி 1200 முடிய நீடித்தது. இவர்களை தவிர்த்து குஜராத்தைச் சார்ந்த சோலாங்கிகள் (சாளுக்கியர்கள்) பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர்.

கல்யாணி சாளுக்கியர்

இரண்டாம் தைலபன் என்னும் மன்னன் ராட்டிரகூட மன்னனான இரண்டாம் கர்க்கரை வென்று. அரியணையில் இருந்து வெளியேறிய மேலை சாளுக்கியரையை தோற்றுவித்தான். இவர்கள் கி.பி 973 முதல் 997 முடிய ஆட்சி செய்தனர். தொடக்கத்தில் மால்கெட்( மான்யகேதம்)எனும் நகரை தலைநகராக கொண்டனர். பின்னர் கல்யாணி இவர்களால் தலைநகராக ஆக்கப்பட்டது. பின்னர் கல்யாணபுரம் என மாற்றப்பட்டது. நைசாம் மாநிலத்தில் பீடார் மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய நகரம் ஆகும். இது கி.பி 978 முதல் கிபி 1127 வரை மேலைச் சாளுக்கியரின் தலைநகராக இருந்தது. தைலபன் காலத்தில் மேலை சாளுக்கியர்கள் உச்ச நிலையில் இருந்தனர்.

இந்நாட்டினை சத்தியசிரயன் கி.பி 997 முதல் 1008 முடிய ஆட்சி செய்தான். இவன் காலத்தில் சோழ சாளுக்கிய போர் தொடர்ந்தது. சோழரின் மேலாண்மை வேங்கி நாட்டில் நிறுவப்பட்டது. இதைக் குறித்துப் பொறாமை கொண்ட சத்யசிரயன் வேங்கி நாட்டின் மீது போர் தொடுத்து நாட்டின் ஒரு பகுதியினை கைப்பற்றிக் கொண்டான். இதைக் கேள்வியுற்ற சோழ மன்னனான முதலாம் ராஜராஜன் சத்தியசிரயனுடன் போர் தொடுத்தான். ராஜ ராஜன் சத்திய சிரையனோடு நேருக்கு நேராக குதிரை மீது அமர்ந்து போர் புரிந்து வெற்றி கண்ட நிகழ்ச்சியை “சத்தியசிரயனை எறிந்து எழுந்தருளி வந்து ஸ்ரீபாத புட்பமாக அட்டித் திருவடி தொழுதனம் பொற்பூ” என கரந்தைச் செப்பேடு நமக்கு உணர்த்துகிறது.

சோழர் வனவாசியையும் ராய்ச்சூரின் பெரும்பகுதியையும் கைப்பற்றினர். கிருஷ்ணா துங்கபத்ரா ஆகிய பேர் ஆறுகளுக்கு இடையில் அமைந்த இடைதுறை நாடு, எடத்தோர் இராண்டாயிரம், வடமேற்கு பகுதியான வனவாசி வனவாசி பன்னீராயிரம் போன்றவைகளையும் மண்ணைக் கடக்கம் என அழைக்கப்படுகிறது மான்யகேடம் போன்ற பல இடங்களையும் கைப்பற்றினான் என கல்வெட்டில் குறிக்கப் படுகிறது.

ராஜராஜ சோழன் தன் மகனாகிய ராஜேந்திரன் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி சாளுக்கியருடன் போரிட ஆணை பிறப்பித்தான். சாளுக்கிய மன்னனான சத்யசிரையனுக்கும் ராஜேந்திரனுக்கும் பெரும் போர் நிகழ்ந்தது. முடிவில் ராஜேந்திரனே வெற்றி பெற்றான் என்பதை மெய்க்கீர்த்தி உணர்த்துகிறது. ராஜராஜ சோழன் காலத்தில் மேலை சாளுக்கியரின் வளர்ச்சி தடைப்பட்டது. சோழன் உயர்ச்சி ஓங்கியது.

சத்தியசிரையனுக்கு பின் ஐந்தாம் விக்கிரமாதித்தர் கி.பி1009 முதல் 1014 முடியவும் ஆட்சி புரிந்தார். இரண்டாம் அய்யனாருக்கு பின்னர் அரியணை ஏறி அவர் ஐந்தாம் விக்ரமாதித்தன் தம்பியான இரண்டாம் ஜெயசிம்மன்சக தேவமலர் என்பவர் கி.பி 1015 முதல் கிபி 1042 வரை ஆட்சி செய்தார். இவர் பெல்லாரி, மைசூர் ஆகிய பகுதியை வென்று தனது பேரரசை விரிவுபடுத்தினர்.

சோழர்களை வீழ்த்துவதையே பெரும் நோக்கமாகக் கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற சோழ சாளுக்கிய போர் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தன் படையை பெருக்கினார். சோழ பகுதியில் ஊடுருவல் செய்தார். சோழர்களை வென்றதாக கல்வெட்டுகளில் குறித்துக் கொண்டார். ராஜேந்திரன் அரியணை ஏறிய போது சோழர்களின் வலிமை மிக்கவராக விளங்கியவர் கல்யாணி சாளுக்கியர் என்பவர் என்பது வரலாறு சுட்டிக் காட்டுகிறது. கல்யாணி சாளுக்கியர் இன் வளர்ச்சி ராஜேந்திரனுக்கு பேரிடியாக இருந்தது.

வேங்கியின் கீழைச் சாளுக்கியர்

வாதாபி சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி உடன்பிறப்பு ஆவார். மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் வேங்கி. கிருஷ்ணா கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி வேங்கி நாடு ஆகும். இது வேங்கை நாடு என்ற பெயர் கொண்டது. இவர்கள் தாய்மொழி தெலுங்கு. இவர்கள் வடமொழி பெரிதும் போற்றினர். விஜயாலய சோழன் காலத்திலிருந்து பிற்கால சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் அடிக்கடி போர் நிகழ்ந்தது. சோழர் மேலை சாளுக்கியரை வெல்லக் கருதி கீழைச் சாளுக்கியரை தமக்கு நட்பு, உறவு கொண்டார்கள். இதனால் வலிமைமிக்க மேலைச் சாளுக்கியர் சோழர் ஆதரவு பெற்ற கீழை சாளுக்கியரும் ஒன்று சேரும் வாய்ப்பு தடைபட்டது. சோழரின் அரசியல் சூழ்ச்சியாகும். மேலைச் சாளுக்கியரும் கீழை சாளுக்கியம் இணைந்திருப்பின் தமிழக வரலாற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். கி.பி 965 அரிஞ்சய சோழன் கீழை சாளுக்கிய மன்னன் பீமனின் மகளாகிய குந்தவையை மணந்து கொண்டான்.

இரண்டாம் பராந்தக சோழன் தன் மகள் குந்தவையை வல்லவரையன் வந்தியத்தேவனை மணம் செய்வித்து கீழை சாளுக்கிய உறவை வலுப்படுத்தினான் . இவர்கள் இராட்டிரகூடர்கள் உடன் இடைவிடாது போர் புரிந்தனர். இராட்டிரகூடர்கள் வலிமை குன்றிய பின் சோழர் கீழைச் சாளுக்கியர் மீது தமது மேலாண்மையை செலுத்தினர். முதலாம் ராஜராஜன் காலத்தில் கீழைச் சாளுக்கிய நாட்டில் பட்டத்தகராறு ஏற்பட்டு உட்பூசல்கள் வழிந்தது. எனவே ராஜராஜன் கிபி 999 வேங்கியை கைப்பற்றி மூத்தகிளையினரை அதிகார பீடத்தில் அமர்த்தினான். சோழசாளுக்கிய உறவை வளர்க்க எண்ணி ராஜராஜனின் மகள் குந்தவையை விமலாதித்தன் மணம் செய்வித்தான் என்பது முன்பு கண்டோம். இச்செயலால் கீழை சாளுக்கிய நாடு சோழ நாட்டின் சிறந்த உறுப்பாகவே விளங்கியது.

ராஜேந்திர சோழன் அரசு கட்டில் ஏறிய போதும் கீழைச் சாளுக்கியரின் சோழருக்கு உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேங்கி நாட்டின் அரசியல் நிகழ்ச்சிகளினால் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியரை நிறுவிய பகைமை முற்றியது. கீழைச் சாளுக்கியர் மேலைச் சாளுக்கியர் தாக்குகின்ற காலை, சோழர்களுக்கு படை உதவி அளித்தனர்.

பண்டில் கண்டின் சாந்தேலர்கள்

ராஜபுத்திர மரபை சார்ந்தவர்கள், பிரதிகாரர்கள் வீழ்ச்சியுற்ற போது ஏற்றம் பெற்றன இந்துக்களாக மாறிய கோண்டு இனத்தவர். கிபி ஒன்பதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் நானுகா என்ற மன்னன் மரபைத் தோற்றுவித்தான்.
கிபி 954 முதல் 1002 வரை ஆட்சி செய்த டங்கா என்ற மன்னன் சாந்தேல மரபின் முதலாவது சுதந்திர மன்னன் ஆவார். இவன் தன் முதலாம் யசோவர்மனின் மகன் ஆவான். இவன் பிரதிகாரத் தலையில் இருந்து தனது மரபை விடுவித்து தனி ஆட்சி செய்து கொண்டான். இவன் பல போர்களில் வென்று மகா ராஜாதிராஜர் என்ற தோரணையான பட்டத்தை கொண்டவன். இவனுக்குப் பின் வந்த இவன் மகன் கண்டா கி.பி 1002முதல் 1019 முடிய ஆட்சி செய்தான். இவன் முதலாம் இராஜேந்திரனின் சமகாலத்தவர். இவனுக்குப் பின் ஆட்சி செய்த வித்யாதரன், பரமார மன்னன் போசன், கலாசூரி மன்னன் காங்கேயன் ஆகியோருடன் நட்புக்கொண்டான் என்பது நம்மால் அறிய முடிகிறது.

வங்க பீகாரின் பாலர்கள்

வங்கத்தை ஆட்சி செய்த சசாங்கன் மன்னன் மறைவுக்குப் பின் பல குழப்பமும் கொந்தளிப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டது. இந்த நிலையில் முதலாம் கோபாலர் கி.பி எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்கத்தில் புதியதொரு ஆட்சியை நிறுவினார். இதுதான் பால மரபின் ஆட்சி என அழைக்கப்படுகிறது.
பாலர் ஆட்சிக்கு வந்ததால் வங்கத்தில் முழு அமைதி பரவியது. இவ் வம்சத்தின் தலை சிறந்த மன்னரான தேவபாலர் கி. பி 815 முதல் 854 முடிய அரசாட்சி செய்தான். இவரது காலத்தில் பாலகர்களின் புகழ் உயர்ந்து இருந்தது. காம்போஜம், ஒரிசா, அசாம் ஆகியவற்றை தமது அரசுடன் இணைத்துக் கொண்டார். ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர்களின் புகழ் மங்கியது இவர்கள் மகதத்தையும்,வங்கத்தையும் சிறிது காலம் இழந்திருந்தனர்.

இம் மரபின் இழந்த பெருமையை மீட்க அரும்பாடுபட்டவர் முதலாம் மகிபாலர் ஆவார். இவர் கிபி 992 முதல் 1040 முடிய இம்மரபை சிறப்புடன் ஆட்சி செய்தார். இவர் ஆட்சியை கைப்பற்றிய பொழுது மட்டும் இவரது ஆட்சியில் அடங்கியிருந்தது மற்ற பகுதிகளை காம்போஜர்கள், சந்திரர்களும் ஆண்டு வந்தார்கள். தமது வலிமையினால் இழந்த பகுதிகளை முயன்று மீட்டார். எனவே இவர் பாலகர்களின் பேரரசை இரண்டாம் முறையாக தோற்றுவித்தார் என்றே கூறவேண்டும்.

இவரது நாடு உத்திரலாடம் எனவும் அழைக்கப்படுகிறது. இது பீகார், வங்காள மாநிலங்களில் கங்கை ஆற்றின் தென்கரையில் தக்கணலாடத்திற்கு அருகில் உள்ளது. இது தண்ட புத்தி நாட்டிற்கு வடக்கிலும், கிழக்கிலும் பரவியுள்ளது. பாலகர்களின் இழந்த பெருமையை மீட்ட மகிபாலர், பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெரு மன்னராகத் திகழ்ந்தார். இவரது பரந்த பேரரசு பல நாடுகளை தன்னகத்தே கொண்டு இருந்தது. இவ்விதம் இவரது மேலாதிக்கத்தை ஏற்று ஆட்சி புரிந்த சிற்றரசர்களை பற்றி நாம் அறிய வேண்டும்.

தண்ட புத்தி

ஒட்டர் தேசத்திற்கும், வங்காளத்திற்கு நடுவில் ஸ்வர்ண ரேகை ஆற்றின் இரு கரைகளிலும் பரவி இருந்த நாடு, தண்ட புத்தி என வழங்கப்படுகிறது. வங்காள மாநிலத்தில் மிதுனபுரி மாவட்டத்தின் தென் பகுதியினையும், தென்மேற்கு பகுதி இணையும் தன்னகத்தே கொண்டு நிலவிய பெரும் நிலப்பரப்பாகும். முற்காலத்தில் வங்க நாட்டிலடங்கிய பர்த்துவான் மாவட்டம் வர்த்தமான புத்தி என அழைக்கப்பட்டதாகவும் அதன் ஆளுமைக்குட்பட்ட ஒரு சிறு நாடே தண்டபுத்தி என வழங்கப்பெற்றது அறியப்படுகிறது. இப்பகுதியை தன்மபாலன் எனும் மன்னன் ஆண்டதாக இவனது பெயருக்கும் மகிபாலன் பெயருக்கும் உள்ள ஒற்றுமையை கருத்தில் கொண்டு, இவன் மகிபாலனை நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் அல்லது தாயகத்தின்னாகவோ இருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது. எனில் அக்காலத்தில் மன்னரின் நெருங்கிய உறவினர்கள் சிற்றரசர்களும் அரசு பொயராளராகவும் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

தக்காண லாடம்

தக்காணலாடம் தண்டபுத்தி நாட்டிற்கு வடக்கில் அமைந்த நாடாகும். இது பீகார், வங்காளம் மாநிலங்களில், புனித கங்கையின் தென் கரையில் அமைந்த கங்கை கரை நாடு. இது செழிப்பான பகுதி. இரணசூரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். பண்டைய காலத்தில் ராடா என்ற ஒரு பகுதி வங்காளத்தில் இருந்து. கல்வெட்டுகளில் லாட தேசம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. பின்னர் லாடம் என்பது என்று வழங்கப்பட்டது.

வங்காளதேசம்

கிழக்கு வங்காளமே பண்டைய காலத்தில் வங்காள தேசம் என்று அழைக்கப்பட்டது. வங்காளதேசம் கோவிந்த தச்சன் என்னும் மன்னனால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. மேலே கூறப்பட்ட தக்காணலாட மன்னனும், வங்கதேசம் மன்னனும், தண்ட புத்தி மன்னனும், உத்திரலாட பெரு மன்னனான மகிபாலனைத் கீழ்ப்படிந்த குறுநில மன்னர்களாக, இருந்தனர் என்பதை ராஜேந்திரன் மெய்க்கீர்த்தி கூறுகிறது.

சக்கரக்கோட்டம்

சக்கரக்கோட்டம் மத்திய மாகாணத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வடமேற்கில் வத்ச நாட்டில் அமைந்த நகரம் ஆகும். இந்திராவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள சக்கரக்கோட்டம், வத்ச நாட்டின் தலைநகரான ராஜபுதனத்திலிருந்து எட்டுக் கல் தொலைவில் அமைந்துள்ளது. தற்காலத்தில் சித்திரகூட என்றும் சித்திரகோடா என்றும் அழைக்கப்படுகிறது. பஸ்தர் மாநிலத்தின் நாகவம்ச புதல்வனான மதுராந்தகனால் கிபி 1065- இல் ராஜபுர செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள சித்திர கோட்டயமே என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

கி.பி 11,12 நூற்றாண்டுகளில் சக்கரக்கோட்டத்தை நாக மரபினர் என தங்களை அழைத்துக் கொண்டன மன்னர்கள் ஆண்டுவந்தனர். இவர்கள் நாக மரபு உடையவர்கள் ஆதலால் ஆண்ட நாடும் மாசுண தேசம் என பெயர் கொண்டது. மாசன தேசம் என்பது பாம்புகள் நிறைந்த நாடு என்பது பொருள். மேலும், ராஜபுரச் செப்பேட்டில் சிந்தகவத்து மன்னர்கள் தங்களை நாகவம்சோத் பவா அதாவது நவாம்சத்தில் பிறந்தவர்கள் என்றும், போகவதி புரவரேஸ்வரா அதாவது தங்களின் நகரங்களில் தலை சிறந்து விளங்குபவர் என்றும் போகவதி அதிபதிகள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

மாசுணிதேசம் வேங்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்த அண்டை நாடு ஆகும். மதுரை மண்டலம், நாமணைக் கோணம், பஞ்சப்பள்ளி ஆகிய சிறு பகுதிகளிலும் வத்ஸ நாட்டில் அமைந்த பகுதிகளாகும். இவர்கள் மாசுணி தேசத்தின் ஆளுமையின் கீழ் அமைந்திருந்த சிறு சிறு பகுதிகள் ஆகும். ராஜபுர செப்பேடு மதுராந்தகன் என்பவனால் வெளியிடப் பெற்று இருப்பதால் , அவன் ஆண்ட மதுரை மண்டலம் பெரிய மண்டலமாக விளங்குதல் வேண்டும். மேல் கூறிய பகுதிகளில் ராஜேந்திரன் அது படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர் என்பதை ராஜேந்திரன் மெய்க்கீர்த்தியால் அறிய முடிகிறது.

ஒட்டர தேசம்

ஒட்டார தேசம் என்பது தற்காலத்தில் ஒரிசா மாநிலம் ஆகும். ராஜேந்திரன் படை எழுச்சியின் போது ஒட்டர தேசத்தையும், கோசல நாட்டையும் இந்திர ரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். கோசல நாடு என்பது மகா கோசலம் என அழைக்கப்படும் தென் கோசலநாடாகும்.  இந்நாட்டு மன்னன் பரமார மன்னனான போச மன்னனுடன்  பகை கொண்டிருந்தான்.

சேதி கால சூரிகள்

கால சூரிகள், கூர்ஜர பிரதிகாரம் பேரரசின் வீழ்ச்சியின் போது எழுச்சி பெற்று தனி ஆட்சியாக இருந்தது.  இவர்கள் ஹைகயர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். சேதிகால சூரிகள் அல்லது தகாலாவைச் சார்ந்தவர்கள் என்பது ஒரு கருத்து.  இவர்கள் திரிபுரியை சுற்றி இருந்த சிறு பகுதியை ஆண்டு வந்தனர்.

முதலாம் கோக்கல்லர் என்னும் மன்னர் இம்மரபினை தோற்றுவித்தார் என்பதும் இவர் கி.பி 875 முதல் கிபி 925 முடிய இவ்வரசினை திரிபுரையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார் என்பதும் அறியப்படுகிறது.      ராஜேந்திரனிடம் பகைமை பாராட்டாது நட்பு கொண்டிருந்தனர் என்பதும் அறியப்படுகிறது.    காங்கேய விக்ரமாதித்தன் கங்ரா  பள்ளத்தாக்கில் உள்ள கீராவையும், கோசலை, உத்கலை போன்றவற்றையும், பிரதிகாரர்களையும்  வென்று புகழ்மிக்க வடநாட்டு மன்னனாக இருந்தான் என்பது அறியப்படுகிறது.

முஸ்லீம் படையெடுப்பு

ராஜேந்திரன் சோணாட்டில் அரியணை ஏறிய போது தென் நாட்டில் அமைதி நிலவியது. ஆனால், வடநாட்டில் முகமது கஜினியின் படையெடுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. முகமது என்ற துருக்கிய வீரன் கிபி 998 – இல்  கஜினி அரியணை ஏறினான்.  இவன் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களின் மீது புனிதப்போர் நிகழ்த்துவதாக உறுதி பூண்டான்.  இவன் சமய வெறி கொண்டு இந்தியாவின் மீது 17 தடவைகள் படையெடுத்து, பல இந்து கோயில்களை தரைமட்டமாக்கி பொன்னையும் மணியையும் கொண்டு சென்றான்.

வட இந்தியா சிறுசிறு அரசுகளாக  பிளவு பட்டு இருந்தமையால், ஒற்றுமை உணர்வு ஏற்படவில்லை.   சோணாட்டில் ராஜேந்திர சோழன் தனது புகழை கொடுமுடியில் பாராண்ட போது வட இந்தியாவிலோ அச்சமும், அமைதியின்மையும், ஒற்றுமை இன்மையும், கொள்ளையும் மலிந்து இருந்தன என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.  முகமது கஜினியின் படையெடுப்பு கி.பி 1027 வரை வடநாட்டில் நீடித்தது.  இம் முஸ்லிம் படை எழுச்சியின் அச்சுறுத்தலினால் வடநாடு நடு நடுங்கிக் கொண்டிருந்த வேளையில்தான், ராஜேந்திரனது படை கங்கை பகுதிகளில் திக் விஜயம் செய்தது. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் அறிந்திருந்த வடநாடு, மாமூது கஜினியின் படையெடுப்பினால் மணி இழந்த நாகம் போல் துன்பமுற்று.  ராஜேந்திரன் வட இந்திய படையெழுச்சியின்  விளைவாக இந்தியாவின் அரசியல் நிலை மேலும் குழப்பம் நிறைந்ததாக  வலுவிழந்ததாக காணப்பட்டது.  இவ்வாறு ராஜேந்திரன் அரியணை ஏறிய பொழுது அவன் நாட்டை சுற்றி இருந்த சூழல் பல்வேறுபட்டதாக காணப்படுகிறது.  அதனையும் மீறி முதலாம் ராஜேந்திர சோழன் பல வெற்றி கண்டது அவனது போர் முறையும் அவரது ஆற்றல் திறத்தையும் காட்டுகிறது.

போர் பிரியனான ராஜேந்திரன்

தன் வாழ்நாளில் போருக்கு என்று பல ஆண்டுகளை கழித்தவர். போர் மீது கொண்ட பிரியம் தன் தந்தையைப் போல வாள்  வலியும் தோல் வலியும் கொண்டு ஊக்கத்துடன் போர் செய்யும் பண்பும் கொண்டவர். இவர் நிகழ்த்திய போர் செயல்களை மூன்று வகையாகப் பகுக்கலாம். ஒன்று ராஜ ராஜன் தன் ஆட்சிகாலத்தில் தலைமை ஏற்று நடத்திய போர்கள், மன்னனாக இருந்து நடத்தியவை, இவன் காலத்தில் இவன் மகனான இளவரசன் ராஜாதிராஜன் நடத்தியவை என வகைப்படுத்தலாம்.

ராஜேந்திரன் ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் நடத்திய போர்கள் பல உண்டு.

சேர பாண்டியருடன் போர்

     ராஜராஜன் சோழ நாட்டின் மீது படை எடுக்க காரணம் தெளிவாக கிடைக்கவில்லை.   ராஜராஜனால் சேர நாட்டிற்கு அனுப்பப்பட்ட சோழ நாட்டு தூதுவர் சேர மன்னனாகிய பாஸ்கர ரவிவர்மனால்  அவமதிக்க பட்டு, இழிவாக நடத்தப்பட்டு உதகையில் சிறை வைக்கப்பட்டார்.  தூதர்களை அவமதிப்பதும் சிறையில் இடுவதும் அரசர் குலத்திற்கு சிறப்பு இல்லை. அன்றியும் அச்செயல்கள் அரசு நீதிக்கு மாறுபட்டதாகும். அறநெறியில் பிறழாத சோழர் குடியிற் பிறந்த ராஜராஜன் இதனை அறிந்து பெருசினம் கொண்டான்.

சோழப் படையை சேர நாட்டின் மீது செலுத்த ஆணையிட்டான் பஞ்சவன் மாராயன் என்ற ராஜேந்திரன் படைத் தலைமை,  ஏற்று பாஸ்கர ரவிவர்மனை ஒறுத்து, அவனது செருக்கடக்க கடிது சென்றான்.  சோழ பெரும் படை பாண்டிய நாட்டின் வழியாக சேர நாட்டிற்கு புறப்பட்டது.  அங்கனம் செல்லுங்கால் சேரனின் நண்பனான பாண்டிய மன்னன் அமரபுயங்கன் என்பான், சோழர் படைகளை தடுத்து நிறுத்தினான்.

சினம் கொண்ட ராஜேந்திரன் தன் படையுடன் பாண்டிய படை மீது வேங்கை என பாய்ந்தான். பாண்டிய படைகள் சோழப் படையின் தாக்குதலைத் தாங்கி கொள்ள முடியவில்லை, அச்சம் கொண்ட பாண்டிய வீரர் சிதறி ஓடினர்.  சோழ வீரர் வெற்றி மடந்தையை மணந்தனர்.  பாண்டியனை வென்று அடக்கிய ராஜேந்திரன் காடும், மலையும் கடந்தான் தன் படைகளுடன் சேர நாட்டை அடைந்தான். மலை நாட்டின் கடற்கரைப் பட்டினம் ஆகிய காந்தளூர் சாலை மீது தன் படைகளை ஏவினார்.   கி.பி 988 இல்  சேரர்க்கும்,  சோழரும் கடும்போர் நிகழ்ந்தது.  சேரர்கள் தோற்கடிக்கப்பட்டனர் காந்தலூர் சாலையில் உள்ள மரக்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

சிறைப்பட்ட தூதுவனை மீட்க உதகை நகர் நோக்கி புறப்படுமாறு வெற்றி படைக்கு ராஜேந்திரன் ஆணையிட்டான்.   தானைத் தலைவனின் கட்டளையை ஏற்று சோழ வீரர்கள் சோர்வின்றி 18 காடுகளையும் கடந்து கடந்து சென்றன.  காவல் மிகுந்த உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட நகரை முற்றுகையிட்டு. சோழ-  சேர போர் கடுமையாக நடைபெற்றது. சேரநாட்டின் செருக்களம் செங்களமாயிற்று.

வெற்றிப் பெருமிதத்தில் மூழ்கிய சோழ வீரர்கள் தன் நாட்டு தூதுவனை பழித்த சேரர்களை பழிவாங்கினார்.  சீற்றம் தாளாது சேர நாட்டு வீரர் அழகு நகராம் உதகையினை இடித்தனர்.  கோட்டை கொத்தளங்களை தகர்த்தனர், மாளிகைகளை தரைமட்டமாக்கினர், கோபுரங்களை உடைத்தனர், சிறைச்சாலைகள் தரப்பட்டன,  சோழத்தூதுவன் விடுவிக்கப்பட்டான்.  உதகை  தீக்கிரையாக்கப்பட்டது நாடும், நகரமும், இடுகாடாக காட்சி தந்தன.   இத்துணை அழிவு வேலைகளுக்கு பின்னும் சினந் தணியாத  தானை  தலைவன்,  படைகளை தென்கோடியில் உள்ள விழிஞிம்  எனும் துறைமுகத்தின் மீது ஏவினான்.  சேரர் செயல் இழுந்தனர் தோல்வி பெற்றனர், விழிஞம் சோழ வீரர்களால் கைப்பற்றப்பட்டது. வெற்றிவாகை சூடிய சோழ வீரர்கள் பொன்னும் மணியும் வைரமும் கொண்ட பொருநிதியுடன்   சோழ நாடு திரும்பினர்.

ராஜேந்திர சோழனது ஆட்சியின் சேர நாட்டில் பரவி இருந்தது என்பதை நாகர்கோவில் அருகிலுள்ள சோழபுரம் என்னும் நகர் காட்டுகிறது.  தற்காலத்தில் இந்நகரம் அழிவுற்ற நிலையில் காணப்பட்டாலும் இப்பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், சோழ புரம் அதனை அடுத்தப் பகுதிகளில் ராஜேந்திர சோழனின் ஆட்சிக்குட்பட்டிருந்த்தை காண முடியும். எனவே நம் ராஜேந்திரன் தலைமை ஏற்று சேர நாட்டையும் பாண்டிய நாட்டையும் வென்றதால் ராஜராஜன் மலைநாட்டு சேரமானையும் பாண்டியர்களையும் எறிந்துகொண்ட பண்டாரம் என்று சிறப்பிக்கப்படுகிறார்.

கலிங்க நாட்டு போர்

கலிங்க நாடு வீரமறவர்கள் நிறைந்த நாடு இது குலூத நாடு என அழைக்கப்பட்டது. நாட்டை விமலாதித்தன் என்பவன் ஆண்டான். இந்நாட்டின் மீது ராஜராஜன் படை எடுக்க காரணம் ஏன் என தெரியவில்லை. ஒருவேளை இவர்கள் கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனுக்கு இடையூறு செய்து, சோழரின் பகைமையை சம்பாதித்து இருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து எழப்படுகிறது. . ராஜேந்திரன் குலூத நாட்டின் மீது படையெடுத்து விமலாதித்தனை அடிமைப்படுத்தினான். கலிங்க வீரர்களை வென்றது ராஜேந்திரனின் அரிய சாதனை.

வெற்றிவாகை சூடிய ராஜேந்திரன் தனது வெற்றியின் அடையாளமாக மகேந்திர மலை உச்சியில் வெற்றித் தூண் ஒன்றை நாட்டினான் . மகேந்திரமலை கல்வெட்டில் “விமலாதித்தன் என்னும் குலூதநாட்டு அரசனை இராஜேந்திரன் வென்றான்: வென்று மகேந்திர மலை உச்சியில் வெற்றித் தூண் ஒன்றை நாட்டினான்” என்று குறிப்பு காண முடிகிறது. இக்கல்வெட்டு தமிழிலும் வடமொழியிலும் வரையப்பட்டுள்ளது. இதில் தேதி குறிக்கப்படவில்லை. இப் போர் நடைபெற்ற காலம் தெரியவில்லை. இராஜேந்திரன் இளவரசுப் பட்டம் பெற்ற பின் நடைபெற்று இருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

ஈழப் போர்

ராஜேந்திரன் தன் தந்தையுடன் இணைந்து ஆட்சி புரிந்த காலத்தில், தானை தலைவனாக படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற பல நாடுகளில் ஈழ வெற்றி மிக சிறந்ததாகும். ராஜேந்திரன் தன் தந்தைக்கு துணையாக உள்நாட்டில் மட்டுமன்றி கடல் கடந்த நாட்டிலும் பகைவரை வென்று சோழ ஆதிக்கத்தை விரிவுபடுத்தினான். ஈழவேந்தன் ஐந்தாம் மகிந்தன் கிபி 981 முதல் ஈழ நாட்டினை ஆளும் உரிமை பெற்றான். அவனது தலை நகரம் அனுராதபுரம். அவன் சோழர்களின் பகைவனான சேர, பாண்டியர்களுக்கு படை உதவி அளித்தான்.

இதனால் ராஜ ராஜன் தன் மகன் ராஜேந்திரன் தலைமையில் ஒரு பெரும்படையை ஈழத்தின் மீது படையெடுக்க ஆணையிட்டான். முதலாம் ராஜேந்திரன் படையைச் செப்பம் செய்தான். தேர்ந்த கப்பல் படையுடன் ஈழம் நோக்கி புறப்பட்டு தமிழகத்தையும் ஈழத்தையும் மரக்கல பாலத்தால் இணைப்பது போல், கப்பற்படை வரிசை வரிசையாக சென்றது. தானை தலைவன் தன் படைகளை ஈழத்தீவில் இறக்கினான்.

அப்போது கிபி 991 ஈழ நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ஈழ மன்னனான ஐந்தாம் மகிந்தன் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள உரோகண நாட்டிற்கு ஓடிவிட்டான். இருப்பினும் நாட்டுரிமையில் வேட்கை கொண்ட ஈழ படை, சோழப். படையுடன் மோதியது. சோழருக்கும்,ஈழருக்கும் கடும் போர் நடந்தது. சோழப் படையின் முன் நிற்காமல் ஈழப் படைகலைந்து ஓடியது. சிங்களர் மனம் புழுங்கிற்று. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் இயங்கிய இலங்கை தலைநகரம் அனுராதபுரம் அழிவுற்றது. பொலனறுவை புதிய தலைநகர் ஆனது. சனநாதமங்கலம் என்னும் பெயர் பெற்றது.

ஈழநாட்டின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. மும்முடிச் சோழமண்டலம் என்று பெயரிடப்பட்டது. ஈழநாட்டில் சோழனின் புலிக்கொடி நாட்டிய வெற்றியின் சின்னமாக ஈழத்தில் சிவாலயம் ஒன்று அமைக்கப்பட்டது. இது சிவ தேவாலயம் என்ற பெயருடன் இன்றும் விளங்குகிறது. இவ்விதமாக ராஜேந்திர சோழன் சிங்களரை வென்று ஈழத்தில் சோழரின் புகழை நிலைநாட்டி தன் நாடு திரும்பினான்.

மேலைசாளுக்கியருடன் போர்

இரண்டாம் தைலப்பனின் மகனான சத்யா சிரயன் இரட்டபாடி ஏழரை இலக்கத்தின் மன்னன் ஆனான். சோழருக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் நீண்ட நெடுங்காலமாக கடும் பகை இருந்தது. அது ராஜராஜன் காலத்தில் போராக வந்தது. எனவே, இராஜராஜன் சத்தியாசிரயன் மீது போர் மேற்கொண்டான். இப்போரினை ராஜேந்திரன் தலைமை தாங்கிச் சென்றான். 9 லட்சம் பெருவீரர்கள் கொண்ட சோழர் படை சாளுக்கிய நாட்டின் மீது படை எடுத்தது. சோழர் படை பல வெற்றிகளைப் பெற்று பீசப்பூர் மாவட்டத்தில் உள்ள தோனூர் வரை முன்னேறி சென்றது.
சாளுக்கிய படையினர் சளைக்காமல் போர் செய்த போதிலும் தோல்வியைத் தழுவினர். தொடர்ந்து வருகின்ற சாளுக்கிய பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ராஜேந்திரன் வெஞ்சினம் கொண்டு நாட்டை சூறையாடி தீக்கிரையாக்கினான். பெருமதிப்புடைய அளவில்லா பொருட்களைக் கவர்ந்து கொண்டு வெற்றி பெருமிதத்துடன் சோணாடு திரும்பினான். இப்போரில் சோழப் படையின் மாபெரும் வீரனான ராஜமல்ல முத்தரையனின் இழப்பு ஈடு செய்ய இயலாது.

அதுமட்டுமல்லாது சோழர்களின் பெரும் பகைவர்களான பிந்தைய மேலைச் சாளுக்கியர்களையும் வென்றான். இப்போர் கிபி 1007 ஆம் ஆண்டிற்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டும். இப்போர் நிகழ்ச்சி பற்றிய சுவையான சிறு குறிப்புகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஊற்றத்தூர் கல்வெட்டில் காணப்படுகிறது. இக்கல்வெட்டு ராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. மேலைச்சாளுக்கிய நாட்டில் சோழப்படைக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் கடும்போர் நிகழ்ந்தது. சத்தியாசிரயனோ யானை மீது அமர்ந்து போர் புரிந்து வந்தான். ராஜேந்திரனோ , ஊற்றத்தூர் சுருதிமான் நக்கன் சந்திரனான ராஜமல்ல முத்தரையனுக்காக சத்தியாசிரயன் அமர்ந்து போர் புரியும் யானையை குத்திவிட ஆணை பிறப்பித்தார். ஆணையை தலைமேற் கொண்டு யானையை குத்தி வீழ்த்தும் பணியில் ஈடுபட்ட ராஜ மல்ல முத்தரையன் விழ்ந்துபட்டான்.

முத்தரையர் குலத் துதித்த இம்மாணிக்கத்தின் நலனுக்காக ஊற்றுத் ஊரிலுள்ள மகாதேவர் கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்த செய்தியின் மேற்கூரை கல்வெட்டில் காணப்படுகிறது.

இப்போர் பற்றிய செய்திகளை தார்வார் மாவட்டம் ஓட்டூரில் கி.பி 1007 ஆம் ஆண்டில் சத்தியாசிரயன் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டில் அறியப்படலாம். இக்கல்வெட்டு ராஜேந்திரன் போர்திறனை செம்மையாக விளக்குகிறது. வெற்றி பெற்ற பகுதிகள் சோழ நாட்டுடன் இணைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சோழ மன்னரின் கல்வெட்டுகள் மேலை சாளுக்கிய நாட்டில் காணப்படாமையால் இக்கருத்து வலிமை பெறுகிறது.

ராஜராஜன் காலத்தில் ராஜேந்திரன் பல போர்களில் தலைமையேற்று வெற்றிகள் பல பெற்றான், இருப்பினும் அவை அனைத்தும் குறிப்பிட்டு காட்டப் படாமையால் அவன் சேரர், பாண்டியர், ஈழவர், கலிங்கர், மேலைச் சாளுக்கியர் ஆகியோருடன் செய்த போர்கள் மட்டும் மேலே கண்டோம். ராஜராஜன் காலத்தில் சோழப்பேரரசு விரிவடைய காரணமாக விளங்கியவன் ராஜேந்திரன் என்பதை நம்மால் மறுக்க முடியாது. அவன் ஆட்சி காலத்தில் மேற்கொண்ட போர் செயல்களையும் ஹர்ஷ மாவீரனை போல் இடைவிடாதும், விட்டுவிட்டு போர் மேற்கொண்டான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ராஜேந்திரன் அது ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட போர்கள்

ராஜேந்திரனின் போர் திறனை பற்றியும் போர்க்கலையில் நல்ல தேர்ச்சி பெற்று தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இன்றி மாவீரனாக திகழ்ந்தான் என்பதை பற்றியும் முன்பே அறிந்தோம். ராஜேந்திர சோழனது திருமன்னி வளர இருநில மடந்தையும் என தொடங்கும் மெய்க்கீர்த்தி இவனின் போர் செயலைப் பற்றி சிறப்பாகக் கூறுகிறது. இவனது முதலாம் ஆட்சி ஆண்டைவிட ஐந்தாம் ஆட்சி ஆண்டில் வெற்றிச் செய்திகள் மிகுதியாக குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்லாது, பதிமூன்றாம் நூற்றாண்டு வரை விரிந்துகொண்டே செல்கிறது இவரின் மெய்க்கீர்த்தி ஒரே நிலையில் அமைந்துள்ளது.

மேலும் இவனது 13-ம் ஆட்சி ஆண்டிற்கு பின் குறிப்பிடக் கூடிய வகையில் பெரிய வெற்றிகள் பெறவில்லை என்பது அறியமுடிகிறது. 19-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டிலும் 13 ஆவது ஆண்டு மெய்க்கீர்த்திகள் கூறப்பட்ட வெற்றிகளே திரும்பவும் கூறப்பட்டுள்ளன. புதிய வெற்றிகள் சேர்க்கப்படவில்லை. ஆதலால், இவன் தன் ஆட்சியின் முற்பகுதியில் மட்டுமே போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது தெரிகிறது. இவனது 6 வது ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட வடதிருவலாங்காட்டு கோயிலுக்கு அளித்த நிவந்தங்கள் கூறும் திருவாலங்காட்டுச் செப்பேடும், இவனுடைய வெற்றிகளைப் பற்றி குறிப்பிடுகிறது. இவனது புறநாட்டு படையெழுச்சிகள் அனைத்தும் முடிவு எய்திய பின் வரையபட்டதாகும்.
இச்செப்பேடும் இவனது மெய்க்கீர்த்தியும் சில இடங்களில் மாறுபடுகிறது.

இருந்தாலும் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ள வெற்றிகளும்,மெய்க்கீர்த்தியில் மேற்கூறப்பட்ட வெற்றிகளும் ஒன்றுபடுகிறது, உறுதிப்படுகிறது. இவன் தன் முன்னோர் வரலாற்றை நன்கு விளக்குவதால் திருவாலங்காட்டுச் செப்பேடு சோழர் வரலாற்றில் பெரிதும் முக்கியத்துவம் கொண்டுள்ளது. இவனுடைய வீரச் செயல்களையும் சாதனையையும் விளக்கிக் கூறும் கரந்தை செப்பேடு பல வகையில் ராஜேந்திரன் வரலாற்றினை உருவாக்குவதில் பெருந்துணை அளிக்கிறது. இராஜேந்திரன் கல்வெட்டுகள் இவனது மூன்றாவது ஆட்சி ஆண்டில் இருந்து தான் கிடைக்கிறது.
ராஜேந்திர சோழனின் வெற்றிகள் இடை துறை நாடு, வனவாசி, கொள்ளும் பாக்கை, மண்ணைக் கடக்கம், மேலைச்சாளுக்கிய நாடு போன்ற பல இடங்கள் வரை விரிந்துகொண்டே சென்றது.

ஈழ நாட்டுடன் போர்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கரந்தையில் ராஜேந்திரனின் ஈழப்படை எழுச்சி பற்றிய குறிப்பு காணக்கிடைக்கிறது. ராஜேந்திரன் வலிமை மிக்க பெரும் படையுடன் ஈழம் சென்று ஈழ மன்னனை வென்று இடத்தை கைப்பற்றி ஈழ மன்னன் மணிமுடியையும், அவனது தேவியையும், தேவின் அழகிய முடியினையும், அவன் மகளையும், அவனது விலை மதிப்பிட முடியாத செல்வங்கள் அனைத்தும், வாகனங்களையும் அவனிடம் பாண்டிய மன்னன் அடைக்கலமாக வைத்து சென்ற பாண்டிய மணிமுடியையும், இந்திரன் ஆரத்தையும் கவர்ந்தான், போரில் தோல்வி கண்டு அன்பான மனைவியையும், பாசமிக்க மகளையும், மகனையும் தன்னுடைய உடைமைகளையும் பறிகொடுத்த ஈழவேந்தன் . அச்ச மிகுதியால் ராஜேந்திரன் காலடியில் தஞ்சம் புகுந்தான் என கரந்தைச் செப்பேடு குறிப்பிடுகிறது.

இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் இப்படைஎழுச்சி ஐந்தாம் மகிந்தனின் 36 வது ஆண்டாக கிபி 1017 இல் முடிவுற்றது என்று குறிப்பிடுகிறது. ராஜேந்திரன் ஈழம் எழுச்சி கிபி 1017 இல் நிகழ்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. ராஜேந்திரன் தன் ஈழப்படை எழுச்சியின் முடிவில் மன்னர் மகிழ்ந்தர், அவர் தேவியர் ,அவன் மகன் ஆகியோரை சிறைப்படுத்தி சோழ நாட்டுக்குக் கொணர்ந்தார். ஐந்தாம் மகிந்தனின் மகன் காசிபன் என்பவன் ஈழ நாட்டு மக்களால் மறைமுகமாக வளர்க்கப்பட்டான். காசிபன் தன் தந்தையார் சோழ நாட்டில் இறந்த செய்தி கேட்டு மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு வந்து. நாட்டுப்பற்று மிக்க சிங்கள வீரர்களை ஒன்று திரட்டி சோழர் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தான். ஏறத்தாழ சிங்களவர்களுடன் கடும் போர் செய்தனர். வீரர்களைக் கொன்று குவித்தனர் சோழர் பிடியில் இருந்த ஈழத்தை மீட்டனர். கி.பி 1029 ஈழம் தன்னாட்சி பெற்றது.

தன்னாட்சி பெற்ற தொன்னகரில் காசிபன் கி.பி 1029 – இல் முதலாம் விக்கிரமபாகு எனும் பெயரில் மூடி புனியை பெற்றான். இவன் ஏறத்தாழ 12 ஆண்டுகள் நல்லாட்சி செய்தான். இவன் ஆட்சி கிபி 1041 இல் முடிவுற்றது. ஐந்தாம் மகிந்தன் இராஜேந்திரனின் ஆட்சிக்காலம் முற்பகுதியிலும், முதலாம் விக்கிரமபாகு ராஜேந்திரன் ஆட்சிக்கால பிற்பகுதியிலும், ஈழத்து வேந்தர்களாக ஆட்சி செலுத்தினர். எனவே இருவரும் ராஜேந்திர சோழன் சமகாலத்தவர் என்பது தெரியவருகிறது. இவர்களைப் பற்றிய செய்திகள் மகாவம்சத்தில் கூறப்படுகின்றது.

சேர நாட்டுடன் போர்

சேர பாண்டிய நாடுகளில் குழப்பம் ஏற்பட்டதால் அங்கு அமைதியும், ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தால் இப்படை எழுச்சியை ராஜேந்திரன் மேற்கொண்டார் . ராஜேந்திரன் கி.பி 1018 -இல் சேர நாட்டின் மீது தன் படையை செலுத்தி பெற்றுக் கொண்டதாக இவனது 6,7 ஆட்சியாண்டுக் கல்வெட்டில் காண முடிகிறது. சேர மன்னனை வென்று அடிமைப்படுத்திய ராஜேந்திரன் அந் நாட்டு மன்னர்கள் பண்டை காலந்தொட்டு ஒருவர் பின் ஒருவராக புனைந்து கொண்ட அழகுமிக்க மணிமுடியையும், கண்ணை பறிக்கும் ஒளிமிக்க மாலையும் தன் வீரச் செயலின் சின்னமாக கவர்ந்து கொண்டான்.

பலருடைய பாராட்டுதல்களைப் பெற்றான். கடலால் சூழப் பெற்றதும் சிறந்த அறம் கொண்டதுமான தொன்மைமிக்க தீவுக்கூட்டங்களையும் தன் கடற்படை வலிமை யால் கைப்பற்றினார். பல்வகை அரண்களால் சூழப்பெற்ற சாந்தி மத்தீவில் பரசுராமனால் வைக்கப் பட்ட உயர்ந்த செம்பொன் முடியினையும் கிபி 1019 -இல் இவன் கவர்ந்து வந்ததான். மக்களால் பாராட்டு பெற்றார் சாந்த மத்தீவு என்பது மேலே கடலில் சேரர்களின் ஆளுமையில் இருந்த மாலத் தீவு ஆகும். அண்ரோத் தீவு என கா.ம வெங்கட்ராமன் கல்வெட்டுத் துணைவன் எனும் நூலில் கூறுகிறார்.

இவன் வெற்றிகளை இவனது மெய்க்கீர்த்தி,

“எறிபடை கேரளன் முறைமையிற் சூடும்
குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்
தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்
செருவீற் சினவி யிருபத் தொருகால்
அரசு களைகட்ட பரசு ராமன்
மேவரும் சாந்திமத்தீவரண் கருதி
இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும்”

என்று விரித்து உரைக்கின்றது.

பாண்டியருடன் போர்

அடுத்து, ராஜேந்திரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். சோழப் படையின் வருகையை கேட்ட அளவிலேயே, அவர்கள் போர்க் களத்தில் சந்திக்க அஞ்சி ஓடி மலைய மலையில் பாண்டியன் ஒளிந்து கொண்டான். ராஜேந்திரன் பாண்டிய நாட்டின் சிறப்புக்குக் காரணமான வெண்முத்துக்களை மிகுதியான அளவில் கவர்ந்துகொண்டு, குலப்பற்று மிக்க பாண்டிய மக்களின் மனதை நிறைவு செய்யக் கருதி, தன் மகனை சோழ பாண்டியன் எனும் பெயரில் பாண்டிய நாட்டு பெயராளராக நியமனம் செய்தான். இவரே முதல் சோழ பாண்டியன் பெயராளராக நியமிக்கப்பட்டவர். ராஜேந்திர சோழனின் மகனாகிய சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்பவன் ஆவான்.

பின்னர், ராஜேந்திர சோழன் தன் படையுடன் மேற்கு நோக்கி சென்று சேர மன்னனுடன் கடும் போர் நிகழ்த்தி வெற்றி பெற்று சோழ நாடு திரும்பினார்.
இச்செய்தி திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் மட்டுமே காணப்படுகிறது. பத்தாம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒற்றை கல்வெட்டும் இவனது பாண்டிய போர் பற்றி குறிப்பிடுகிறது. இச்செய்திகள் இவனது மெய்க்கீர்த்திகளில் கிடைக்கவில்லை.
ராஜேந்திர சோழனின் அரசியல் அறிவை பறைசாற்றும் விதமாக அமைந்ததுதான் இப் பாண்டியப் போர். ராஜேந்திரன் சேர, பாண்டிய நாடுகளை வென்று அடிமைப்படுத்தினான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுவது பொருத்தமானதாக தெரியவில்லை. இருப்பினும் ராஜராஜன் காலத்தில் சேர நாடும் பாண்டிய நாடும் சோழர் ஆட்சியில் இணைக்கப்பட்டு. அவை முறையே மலை மண்டலம் என்றும் ராஜ ராஜ பாண்டி மண்டலம் என்றும் அழைக்கப்பட்டது.

அந்நாடுகளில் காணப்படும் பல கல்வெட்டுகளில் நாம் அறியலாம். இருப்பினும் புதுச்சேரிக்கு அருகிலுள்ள திருவாண்டார்கோயிலில் இவனால் 10 வது ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டில், “பாரது நிகழ பாண்டி மண்டலத்து மதுரையில் மாளிகை எடுப்பித்து தன் மகன் சோழ பாண்டியன் என்று அபிஷேகம் செய்து தண்டாற் கோப்பரகேசரி” என்று குறிப்பிட்டுள்ளது. மதுரையம்பதி அரண்மனை அமைத்து தன் மகனை அரச பெயராளராக நியமித்து பாண்டிய நாட்டை ஆட்சி செய்ய வழி செய்தான்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மன்னார் கோவிலில் காணப்படும் கல்வெட்டு. பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த சடையவர்மன் சுந்தரபாண்டியன் கிபி 1018 ஆம் ஆண்டில் மதுரையம்பதியில் அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இருப்பான் என்பதை கூறுகிறது. 1018-இல் அரச பெயராளராக நியமிக்கப் பெற்ற சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் 23 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான் என்றும் கி.பி 1040 அவனது ஆட்சி முடிந்து இருக்க வேண்டும் என்பதும் கல்வெட்டுக்கள் கூறுகிறது என கே.ஏ நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கூறுகிறார்.

சேர நாட்டுடன் போர்

முதலாம் ராஜேந்திரன் தன் தந்தையைப் போல் தானும் காந்தளூர் சாலையை தாக்கி சேரர் படைக் கலங்களை அழித்து வெற்றி கண்டான். சேர நாட்டையும் ராஜேந்திரன் தன் மகனான சடையவர்மன் சுந்தரபாண்டியன் இடம் ஒப்படைத்து நிரந்தர ஆட்சி புரியுமாறு அமைத்துக் கொடுத்தான். சேர வேந்தனாகிய ராஜசிங்கன் என்பான் பாண்டி நாட்டில் மன்னார்கோவிலில் ஒரு விண்ணகம் அமைத்து அதற்கு ராஜேந்திர சோழ விண்ணகரம் என பெயரிட்டு இருந்தான். நாஞ்சில் நாட்டின் கண்ணுள்ள சுசீந்திரம் சுதந்திர சோழ சதுர்வேதி மங்கலம் என்று சேர நாட்டின் அரசனாக சுந்தரசோழன் பெயரால் அமைந்துள்ளது.

விஷ்ணுவர்தன பேரரசனான சாளுக்கிய விசயாதித்திய விக்கியண்ணன் என்பான் சுந்தர சோழன் ஆட்சிக்காலத்தில். நாகர்கோயிலுக்கு அருகில் உள்ள கோட்டாற்றில், ராஜேந்திர சோழேச்சுரமுடைய மகாதேவர்க்கு ஒரு நந்தா விளக்கிற்கு நிவந்தம் அளித்ததாக அக்கோவில் கல்வெட்டு கூறப்படுகிறது. இதனால் சேரநாடு சோழர் ஆட்சிக்கு உட்பட்டது என்பதும் அதற்கு சடையவர்மன் சுந்தர சோழன் பாண்டியன், அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் என்பது உறுதியாக அறிய முடிகிறது.
மன்னார்கோவில் வெட்டெழுத்து சோழர் ஆட்சி பற்றிய பல நுணுக்கங்களை எடுத்துக் கூறுகிறது. அரச பிரதிநிதியாக நியமிக்கப் பட்டவர் தனது மாநிலத்தில் மன்னனுக்கு உரிய அனைத்து அதிகாரங்களையும் பெற்றான் என்பதும், அதிகாரப்பூர்வமான ஆணைகளை தன்னாட்சி ஆண்டில் வெளியிட உரிமை பெற்றிருந்தார் என்பதும், மைய ஆட்சிக்கும், மாநில ஆட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதையும் ராஜேந்திரன் காஞ்சியில் ஒரு அரண்மனை அமைத்திருந்தான் என்பது பற்றியும் பல அரிய தகவல்களை கூறுகிறது.

சாளுக்கியருடன் போர்

ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் முதலாம் இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய மன்னனான சத்தியா சிரயனுடன், போரிட்டு வெற்றி பெற்ற செய்தியை நாம் முன்பே அறிந்தோம். சத்யா சிரயனுக்கு மகன் இல்லாத காரணத்தால் அவன் உடன் பிறப்பாகிய தசவருமனின் மகனான, ஐந்தாம் விக்கிரமாதித்யன் சத்யாசிரயனுக்கு பின் மேலைச்சாளுக்கிய நாட்டை கிபி 1008- முதல் 1012 முடிய ஆட்சி செய்து வந்தான்.
ஐந்தாம் விக்கிரமாதித்தனுக்கு பின் ஜெயசிங்கன் 1012ல் அரியணை ஏறினான். இவனுக்கு முதலாம் ஜகதேக மல்லன் என்ற பெயருண்டு. இவன் ஆட்சிக்கு வந்தவுடன் படைவலிமையை நல்ல முறையில் பெருக்கினான். செம்மையான போர் பயிற்சி அளித்தான். தன் தந்தையும் தமையனும் சோழரிடம் தோல்வி கண்டதனால் மாசு படிந்து கிடந்த வரலாற்றை தூய்மை செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டான். சோழர்களால் கைப்பற்றப்பட்ட சாளுக்கிய பகுதிகளை மீட்க வேண்டும் என்று வஞ்சினம் கொண்டிருந்தாள். அவர்களை பழிவாங்கவும் கங்கணம் கட்டிக்கொண்டான்.

தன் பெரும் படையை சோழநாட்டின் மீது செலுத்தி சோழ நாட்டின் எல்லையில் உள்ள பல்லாரியையும் மைசூர் மாநிலத்தின் வட மேற்குப் பகுதிகளையும் கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டான். அப்பகுதிகளில் பல கல்வெட்டுக்களை வெட்டுவித்தான் .

இவன் ராஜேந்திரன் என்ற யானைக்கு சிங்கம் போன்றவன் என்றும், போசன் ஆகிய தாமரைக்கு தண் மதியம் போன்றவர் என்றும், தனது கி.பி1019 ஆம் ஆண்டு சாசனத்தில் குறித்துள்ளார். சேர சோழ மன்னர்களை பன்முறை கடலில் மூழ்கடித்தவன் என்றும், பெளகாம்பே கல்வெட்டிலும், மிரேஜ். செப்பேட்டிலும் குறித்துள்ளார். பாம்பே கல்வெட்டு கி.பி 1017இல் வரையப்பட்டதனால். இங்கு சோழன் என்று குறிக்கப்பட்டவன் ராஜேந்திரனே ஆவான். ஜெயசிங்கன் சோழப் பேரரசின் எல்லைப் புறத்தில் இருந்த சில பகுதிகளை மீட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி ஆகும். ராஜேந்திரனது கரந்தைச் செப்பேடு மான்யகேடத்தை நான் பிடிக்காத வரையில் கிரிஹா விஹாரம் செய்யதில்லை எனும் தன் தந்தையுடைய சூளுரையை நிறைவேற்றி வைப்பதற்காக, ராஜேந்திரன் அப்பட்டத்தை பிடிப்பதில் ஆர்வம் கொண்டான் என கூறுவதால், இவன் மேலை சாளுக்கிய நாட்டின் மீது படை எடுக்க தருணம் நோக்கியிருந்தான் என்பது தெரியவருகிறது.

வேங்கியை தலைநகராக கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் கீழைச் சாளுக்கியர்கள் ஆவர். சோழர்களிடம் நட்பு உரிமையும் திருமண தொடர்பும் கொண்டிருந்தனர். எனவே, மேலைச் சாளுக்கியரும் சோழர்களின் அரசியல் நிகழ்ச்சிகளில் தலையிட்டனர். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனுக்கு பின் கிபி 1019 – இல் இவன் மகன் ராஜராஜ நரேந்திரன் அரியணை ஏறமுயன்றான். ஜெயசிம்மனோ ராஜராஜ நரேந்திரன் அரியணை ஏறுவது தடுத்து நிறுத்தி அவனுடைய தாயத்தாருள் ஒருவனான ஏழாம் விஷ்ணுவர்தன் விசயாதித்தனை அரியணையில் ஏற்ற தேவையான ஆதரவு தந்து உற்சாகப்படுத்தினார். அரியணை ஏறும் வாய்ப்பினை இழந்து விட்ட ராஜராஜ நரேந்திரன் தன் மாமனான ராஜேந்திர சோழனின் உதவியை நாடினான். ராஜேந்திரனும் தனது பெரும் படையை தொண்டை மண்டலத்து மாதண்ட நாயகரான இராஜராஜன் தலைமையில் ராஜராஜ நரேந்திரனுக்கு உதவி செய்ய அனுப்பி வைத்தான். வேங்கியில் நடைபெற்ற சோழ சாளுக்கிய போர்கள் பற்றி அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள மதகசிரா வட்டத்தில் உள்ள கோட்ட சீவரம் என்னுமிடத்தில் தமிழிலும், கன்னடத்திலும் வரையப்பட்ட கல்வெட்டு நிகழ்ச்சி பல கூறுகின்றன. இப்போரில் வேங்கி நாட்டு மன்னன் ஜெயசிம்மன் குலம் அளிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

ராஜேந்திரனின் பத்தாம் ஆட்சியாண்டின் போது வெளியிடப்பட்ட கல்வெட்டு, வீரத்திலகம் ஆன மாவீரன் அரையன் ராஜராஜன் தனது தலைநகரை நோக்கி படையுடன் வருகிறான், என்று கேள்விப் பட்ட மாத்திரத்தில் வேங்கை மன்னர் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என கல்வெட்டு செப்புகிறது. இவ்வாறு ஓட்டம் பிடித்த கங்கை மன்னன் விசையாதித்தன் ஆக இருக்கக் கூடும் என்றும், இந்நிகழ்ச்சியும் முயங்கி போர் நிகழ்ச்சியும் ஏறத்தாழ ஒரே காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் திரு நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தமது சோழர்கள் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
சோழர் சாளுக்கியரின் எல்லைப் பகுதியில் ஊடுருவி சாளுக்கிய பகுதியை கைப்பற்றுவதும், சாளுக்கியர் பின்பு அதனை மீட்டுக் கொள்வதும் அடிக்கடி நிகழ்வுற்ற ஒரு செய்தியாக கருதப்படுகிறது. மேலைச் சாளுக்கியர் வலிமை பொருந்தியவர்களாக விளங்கிய போதிலும் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் ஆகிய சோழ மன்னர்களின் ஆட்சிகாலத்தில் தோல்வியே கண்டனர். இவர்கள் காலத்தில் சாளுக்கியர்கள் தலைதூக்க முடியாது இருந்தனர் குறிப்பாக அதிலும் சிறப்பாக இராஜேந்திரன் மேலைச் சாளுக்கியர்களை அடக்கி ஒடுக்கினான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

கங்கைப் படையெழுச்சி

முதலாம் ராஜேந்திர சோழனின் வெற்றிகளில் கங்கை படையெழுச்சி வெற்றி தான் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. பண்டைய காலத்து கங்கை, வைகை, காவிரி, கோதாவரி, நர்மதை போன்ற பேராறுகள் புனிதமாகப் போற்றப்பட்டது.  இவற்றுள் கங்கையாறு புனித ஆறுகளில் தலையாயது ஆகும்.  இப் புனித நீரினைக் கொணர  வட திசையிலுள்ள வேந்தர்களையும் போரில் வென்று தன் வீரத்தை நிலை நாட்டி அதனை கொணர எண்ணுதல் , வீரம் செறிந்த பழங்குடியில் தோன்றிய பெருமான்னரின் இயல்பாகும். எனவே ராஜேந்திர சோழனும் தான் புதியதாக கட்டுவித்த தலைநகரை கங்கை நீரால் தூய்மைப்படுத்த வேண்டும் என எண்ணி வட நாட்டுப் படையெழுச்சியினை  மேற்கொண்டான் என திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகிறது.

அரியணை ஏறிய முதல் மூன்று ஆண்டுகளில் எவ்வித போர் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதை இவன் மெய்க்கீர்த்தி வழி அறியமுடிகிறது.   இவன் மூன்றாண்டு காலம் தலைநகர் நிறுவும் பணியில் ஈடுபட்டு இருந்தான் , நகரினை தூய்மை ஆக்கும் பொருட்டு கங்கை படையெழுச்சியினை மேற்கொண்டான். கங்கை நீரைக் கொண்டு செல்லும் கால் வட வேந்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை செய்யக் கூடும் என்பதை முன்பே அறிந்த ராஜேந்திரன்.       அஞ்சா நெஞ்சமும்,  பெரு வீரமும் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்டு பெரும் படையை அணிவகுப்பு செய்தார்.  பெரும் படையின் தலைவனாக புகழ்பூத்த ஒரு மாவீரன் படை நடத்திச் செல்ல தகுந்த ஏற்பாடுகளையும் செய்தான்.

இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட வேந்தர்கள் வென்று கங்கை நீரைக் கொணர்ந்து செயற்கரிய செயல்கள் செய்த, சோழ மாதண்ட நாயகர் யார் என்பது பற்றிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் இப் பெரும் படையை தலைமை ஏற்று நடத்திச் சென்றவன் மாபெரும் வீரனான அரையன் ராஜராஜன் என்றே கருத முடிகிறது..

ஏனெனில், சோழர் படைத் தலைவரும் வீரத்தின் திருவுருவாய் வெற்றியின் பெரு உருவாய் திகழ்ந்து போர்க்களங்களில் வேங்கை என பாய்ந்து அவர்களை சிதறி ஓடச் செய்த மாவீரன் அரையன் ராஜராஜன் என்பவனே.   இவன் நால் மடி பீமன், எதிர்த்தவர் காலன்,  சயசிங்க குலகாலன், வீர பீமன் ,வீர பூஷன் போன்ற பல தோரணையான பட்டங்களை பெற்ற சோழ மன்னன் ஆவான், என்பதனையும் நாம் முன்பே கண்டோம்.  மேலும் மேலை சாளுக்கிய போரின் தொடர்ச்சியே கங்கைப் படையெழுச்சி ஆதலின்  சாளுக்கிய நாட்டின் மீது படை தலைமை ஏற்றுச் சென்று, அரையன் ராஜராஜன் எழுச்சிக்கும் தலைமை தாங்கிச் சென்றிருத்தல் வேண்டும் என கொள்ள முடிகிறது.

கலிங்க நாட்டு மன்னனும், ஒட்டர நாட்டு மன்னனுக்கு ஜெயசிம்மன் உதவி புரிந்ததால், இவர்களை வென்று அடக்க மேற்கொண்ட முயற்சியே கங்கை படையெழுச்சிக்கு வழிவகுத்தது என்பதை முன்பே கண்டோம் .    எனவே அரையன் ராஜராஜன் மேலை சாளுக்கிய படையெழுச்சியை தொடர்ந்து கங்கையை நோக்கி சென்றிருக்க வேண்டும் என கூறப்படுகிறது  .

மதுரை மண்டலம்

அடுத்து சோழர் படை மதுரை மண்டலத்தை நோக்கி நடை போட்டது. பெரும் போருக்குப் பின் மதுரை மண்டலம் அடிபணிந்தது. சோழர் பெருமை கொண்டனர் மதுரை மண்டலம் என்பது வத்ச இராஜ்ஜியத்தில் இருந்திருத்தல் வேண்டும்.   இது பஸ்தாரின்  ஒரு பகுதியாகும்.   வேங்கி நாட்டின் வடக்கே இருந்தது என்றும். கூறுகிறார்கள்.   ஈண்டு மதுரை மண்டலம் என்பது யமுனைக் கரையின் கண் அமைந்துள்ள மதுரையும் அதனை சுற்றிய பகுதிகளும் ஆக இருத்தல் வேண்டும் என திரு டி. என் சுப்பிரமணியன் அவர்கள் தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் என்ற நூலில் கூறுகிறார்.

பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வடமதுரை சிறப்பு மிக்க நகரமாக விளங்கியது ஆயர்குலத்தில் கார்மேக வண்ணன் கண்ணன் பிறந்தது வளர்ந்தது இன்பமாக விளையாடிய இடம் இதுதான் என்பதை புராணங்கள் கூறுகிறது.

மதுரா நகரின் மீது கஜினி முகமது தாக்குதல் நிகழ்த்தினான் என்பது வரலாறு உணர்த்துகிறது. ஹேமச்சந்திரன் துவயாச்சிரயம் எனும் நூலின் கண் அன்ஹில் பாடக நகர மன்னனான  துர்லபராஜன் நதூல  நாட்டு மன்னனான மகேந்திர ராஜனுடைய தங்கையான துர்பல தேவியை மணந்த போது,  ஏனைய மன்னர்களுடன் வராமலும் சுயம்வர மண்டபத்திற்கு  வந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

“வடமதுரையிலொரு புடை இடை வனிதையர்

மெய் கவின் மைக்காவின்

வயிற்ற மணியுக வரிவளை யுடனணி

பொற்றொடி சிற்றாடை

கொடிமறு கடையவு மொளிபெற வருமுகில்

கொட்டுக சப்பாணி.   ( குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்)

எனவும்,

மருக்கமழும் வடமதுரை வளநகரக்கும் பழையோரம்”

எனவும்,  சோழர் ஆட்சி மதுரையில் நடைபெற்றது எனவும்,  மதுரை நகரம் சோழ மன்னர்க்கு உட்பட்டு இருந்தது எனவும் இதில் அறிய முடியும்.

சக்கரக்கோட்டைதையும்,   மதுரை மண்டலத்தையும் வெற்றி கொண்ட சோழப் பெரும் படை வத்ச அரசின் பகுதிகளான நாமணைக் கோணம், பஞ்சப்பள்ளி ஆகியவற்றின் மீது பாய்ந்தது. சோழர் தம் கடும் தாக்குதலுக்கு உள்ளான இவ்விரு பகுதிகளும் அடிபணிந்தனர்.   சோழ வீரர்கள் வெற்றி முரசு கொட்டினார் இவற்றை நம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி,

  “விக்கிரம் வீரர் சக்கரக் கோட்டமும்

  முற்படவில்லை மதுரை மண்டலமும்

   காமிடை வளைஇய நாமணை கோணமும்

   வெஞ்சின வீரர் பஞ்ச பள்ளியும்

   பாசடை பழன மாசுணி தேசமும்”

என நிரல்பட கூறுகின்றது.

இப்பகுதியில் குறிப்பிடப்பட்ட இடங்களைப் பற்றி கேஜி கிருஷ்ணன் மறு ஆய்வு செய்துள்ளார். சக்கரக்கோட்டை, மதுரை மண்டலம், நாமணை கோணம், பஞ்சப்பள்ளி, மாசுணி தேசம் ஆகிய இடங்கள் பூர்வ தேசமாகும். சரபுர மன்னர்கள் ஆண்ட பகுதி பூர்வராஷ்டிரத்திலிருந்தது என்பதை செப்பேடு ஒன்று அறிய முடிகிறது .   இந்த பகுதியை முன்பே பூர்வ தேசம் என அழைக்கப் பட்டதை மணிமேகலையில் 10:13 கூறப்பட்டுள்ள ஒரு பழங்கதை உண்டு.

மதுரை மண்டலம், பஞ்சப்பள்ளி, மாசுணி தேசம் என்ற மூன்றும் கோதாவரி கரையில் இருந்து தென்மேற்கில் இருந்து வடகிழக்காக செல்லும் பகுதியில் இருந்தது என்பது தெளிவு.   மெய்க்கீர்த்தியில் அடுத்து குறிக்கப்பட்டுள்ள ஆதி நகர் எனும் ஊர் பழைய மயூர் பஞ்ச்  அரசின் தலைநகரமாக கிச்சிங் என்ற ஊருக்கு வடமேற்கே இன்று ஆதியூர் என வழங்கும் ஊராக இருந்திருக்கக்கூடும்.      ராஜேந்திரன் ஒட்டகம் ஒன்று வென்பதற்கான சான்றாக கல்வெட்டு ஒன்று உள்ளது. கஞ்சம்  மாவட்டத்தில் மகேந்திர மலை உச்சியில் யுதிஷ்டிரர் கோவில் நுழைவு வாயிலில் ராஜேந்திரனின் வடமொழிக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.     இது இவனுடைய வெற்றியின்  நினைவுச் சின்னமாக கூறமுடிகிறது.     மேற்கூறியவற்றால் பூர்வ தேசம் என்பது தற்கால ஒடிசா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் தென் மேற்கில் இருந்து வடகிழக்காக செல்லும் மலை அல்லது மலையை சார்ந்த இடமே என்பது தெரிய முடிகிறது.  அடுத்து கர்நாடகத்தில் குருகூர் என்னும் இடத்திலுள்ள ராஜேந்திரனின் பதினோராம் கல்வெட்டு குறிப்பிடும் பூர்வ தேசம் இந்த பகுதி ஆகும்.

இவ்வாறு முதலாம் இராஜேந்திரன் வெற்றிகொண்ட நாடுகளும் போர் உத்திகளும்  பலவகையில் சான்றாக நமக்கு கிடைக்கிறது. பெரும்பான்மையான கல்வெட்டுகள், செப்பேடுகள், மெய்க்கீர்த்திகள் மூலம் முதலாம் இராஜேந்திரனின் திறமையை நம்மால் அறிய முடிகிறது.

சிந்து வெற்றி

விசாகப்பட்டினம் மாவட்டத்துக்கு  வடமேற்கு மத்திய மாகாணத்தில் வத்ச அரசின் ஆட்சியின் கீழ் இருந்தது தான் சக்கரக்கோட்டம் எனும் நகரமாகும்.  இது நாக மரபினரால் கி.பி 11,12 ஆம் நூற்றாண்டுகளில் ஆளப்பட்டு வந்தது. இவர்கள் ஆண்ட நாடு மாசுணி தேசம், என்று வழங்கப்பட்டது.  சக்கரக்கோட்ட மண்டலம் என்ற பெயரும் உண்டு என திரு டி.வி சதாசிவப் பண்டாரத்தார் கூறுகிறார்.  இந்திய நாட்டில் மாசுணி தேசம் என்ற பெயரால் ஒரே ஒரு இடம் சிந்து நதி கரை பகுதியில் உண்டு.

அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பை எடுத்து  கூறும்,  கிரேக்க வரலாற்றாசிரியரான டய டோரஸ் என்பவர் அலெக்சாந்தர் சிந்து நதியில் படகில் பயணம் செய்தபோது, சிந்து  கரையில் உள்ள சோத்திரி, மாசுணி ஆகிய இரு  வகுப்பினரின் சரணாகதியை ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார். எனவே மாசுணி வகுப்பினர் ஆண்ட சிந்துநதிக்கரை பகுதியே மாசுணி தேசமாகும். மாசனி தேசம் தற்காலத்தில் பாகிஸ்தானில் அடங்கிய சிந்து மாகாணத்தில்  உள்ளதோர் ஊர் ஆகும்.

கூர்ச்சர சாம்ராச்சியம் என்ற நூலில் ராஜேந்திரனின் நண்பனான போஜராஜன் சிந்து நாட்டில் முஸ்லிம்களை வென்றான் என்ற செய்தி இடம் பெறுகிறது. ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட ராஜராஜ சோழன் உலாவில்,

        கங்கையு நன்மதையுங் கௌ தமியும் காவிரியும்

        மங்கையுடன் னாடு மரபினோன் (இருபத்திரண்டாம் கண்ணி)

கங்கையும் சிந்துவும் என குறிக்கப்படுதலால் இவன் சிந்து பகுதியினை வென்றிருக்க வேண்டும் என நம்மால் யூகிக்க முடிகிறது. ராஜேந்திரன் சிந்து பகுதியை வென்றதால் தான் கங்கை, சிந்து, காவேரி,  நர்மதை ஆகிய புனித நதிகளில் நீராடினால் என ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார். போஜராஜனும், காங்கேயனும்  ராஜேந்திரனது சோழ படையுடன் இணைந்து போரிட்டதாக கி.பி 1028 ஆம் ஆண்டு ஜெயசிங்கனது குலேனூர் கல்வெட்டு கூறுகிறது. அதுமட்டுமல்லாது, சாந்தல மன்னனான வித்யாதரனுக்கு ஆதரவாக ராஜேந்திர சோழன் படை, போஜராஜன் படை, காங்கேயன் படை ஆகிய மூன்றும் வடநாட்டில் கஜினி  முகமதுவிற்கு எதிராக போரிட்டன என்ற செய்தியும் இக்கல்வெட்டு வழி அறியமுடிகிறது.

தென்னிந்திய வரலாற்று மேதை என்று அழைக்கப்படும் திரு கே. கே பிள்ளை அவர்களும், ராஜேந்திரனுக்கு போக ராஜராஜன் நட்பும், சேதிநாட்டு காள சூரி காங்கேயம் விக்கிரமாதித்தன் நட்பும் கிடைத்தது.   அவர்களுடன் கூட்டுறவு கொண்டு ராஜேந்திர சோழனும் வித்யாதரனுக்கு உதவ விரைந்தான் என தம் நூலில் குறிப்பிடுகிறார்.  முதலாம் இராஜேந்திரனின் மகனான முதலாம் ராஜாதிராஜன் உடைய திங்களேர்தரு எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியில்,

வில்லவர் மீனவர் வேள் குல சாளுக்கியர்

வல்லவர் கெளசலர வங்கணர் கொங்கணர்

சிந்துர ரையணர் சிங்களர் பங்களர்

அந்திரர் முதலிய வரை சரிடு திறைகளும்

என்று குறிக்கப்பட்டுள்ளது.   இம் மெய்க்கீர்த்தியின் வழியே இவன் வேந்தர் களிடமிருந்து திரையினை பெற்றுக் கொண்டான் என்பதை மட்டும்தான் அறிய முடிகிறது. ஆனால், மன்னர்களை வெற்றிகொண்டதான சான்று இல்லை. ராஜேந்திரன் தனி ஆட்சி செலுத்திய நாளிலிருந்தே இச்செய்தியை இவனது மெய்க்கீர்த்திகள் குறிக்கப்பட்டிருக்கிறது. மேலே  கூறப்பட்ட வேந்தர்கள் அனைவரும் இவன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே சோழர் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

ராஜாதி ராஜனுக்கு திறை செலுத்திய நாடுகளில் சிந்தும் குறிக்கப்பட்டுள்ளது. ஆதலால், சிந்து பகுதியை இவன் வென்றதாக சான்றுகள்  இல்லாமையாலும் ராஜேந்திரன் தன் ஆட்சிகாலத்தில் வென்ற மாசுணி தேசத்தையே இவன் மெய்க்கீர்த்தி சிந்துரரையாணர் என குறிக்கின்றது என்பதை அறியலாம். திரு டி.என் சுப்பிரமணியன் அவர்கள் ராஜேந்திரன் வென்றதாக குறிப்பிட்டுள்ள மாசுணி தேசம் சிந்து பிரதேசமே என எண்ண இடமுண்டு என்று குறிப்பிடுகிறார்.

ராஜேந்திரனும் முகமது கஜினியின் படையெடுப்பு

ராஜேந்திர சோழன் தனது புதிய நகரை கங்கை நீரைக் கொண்டு தூய்மை செய்தல் வேண்டி வடநாட்டின் மீது படையெடுத்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடு நமக்கு சான்று பகர்கின்றது .  அப்போது ராஜேந்திரனது படை வடநாடு  சென்றபோது அங்கு முகமது கஜினியின் படையெடுப்பு நிகழ்ந்தது.

அப்போது வட வேந்தர்கள் பல இன்னல்களுக்கு உட்பட்டனர். வட நாடு கஜினியின் படையெடுப்பின் கொடுமையை அனுபவித்தது.  பரமார மன்னனான போஜராஜனும்,  சேதி நாட்டு காளசூரி மன்னனான காங்கேய விக்ரமாதித்தனும், சாந்தல  மன்னனான வித்யாதரனும்  ராஜேந்திரனது படையுடன்   கூட்டு சேர்ந்த்து.  முகமது கஜினியை எதிர்த்துப் போரிடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சி பற்றிய செய்திகளைத். திரு.டி.என் சுப்பிரமணியம் அவர்கள் தென்னாட்டு கோயில் சாசனங்கள் நூலில் கூறுகிறார்.

திரு கே கே பிள்ளை அவர்களும் “ராஜேந்திரன் இது வடநாட்டுக் திக் விசயத்தின் போது ஏற்பட்ட நிகழ்ச்சிகளை பார்க்கும் போது போஜராஜன், காங்கேயன் மற்றும் பல மன்னர்களுடன் கூடி, கஜினி முகமது உடன் போரிட்டு அவர்களை ஒழித்துக் கட்டுவதற்காக அவனுடைய வடநாட்டு நண்பர்களின் வேண்டுகோளின்படி, அவன் வடநாட்டுக்கு படைதிரட்டி சென்றான் என்று கருதத் தோன்றுகிறது” எனக் குறிப்பிடுவதால்.   ராஜேந்திரனது படை முஸ்லீம் மன்னனான கஜினி முகமதுவை தோற்கடிப்பதில் பெரும்பங்கு வகிக்க வேண்டும் என்பது பெறப்படுகின்றது.

இந்நிகழ்ச்சியினால் ராஜேந்திரனது வட நாட்டு படை எழுச்சி பல வகையில் முக்கியத்துவமும் சிறப்பும் கொண்ட நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.

முகமது கஜினி தாக்கிக்  கொள்ளையிட்ட மதுரையை ராஜேந்திரனும் வெற்றிக் கொண்டுள்ளதால். இவ்விரு மன்னர்களின் போர்கள் இடையே ஒரு தொடர்பு காணமுடிகிறது. சோழர் படை வட நாட்டு படையெழுச்சியை மேற்கொண்ட போது அங்கு முகமது கஜினியின் படையெடுப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.  பொன்னாசை மிக்க கஜினி முகமது வடநாட்டின் பலபகுதிகளில் படையெடுத்தான் நகரங்களையும், கோவில்களையும் கொள்ளை இட்டு சூறையாடினான்.

கி.பி  1018 – 1019 – இல்  கஜினி மதுராவை தாக்கி கோயில் சிலைகளை எல்லாம் உடைத்து கையில் அகப்பட்ட ஏராளமான பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொண்டு சென்றான்.    பின் கஜினி கன்னோசியின்  மீது படையெடுத்தான். கூர்ச்சரப் பிராதிகார  மன்னனான ராஜ்யபாலன் கஜினியின் வருகையை கேள்விப்பட்டவுடன் தன் தலைநகரை விட்டு ஓட்டம் பிடித்தான். தலைநகரில் நுழைந்தபோது வேந்தனை காணவில்லை.

கஜினியின் படைவீரர்கள் தலைநகரை தரைமட்டமாக்கினர்.    அளவிறந்த பொருட்களை கொள்ளையடித்து கொண்டு சென்றான். கோழைத்தனமாக நடந்துகொண்ட ராஜ்யபாலனை பழிவாங்க அண்டை அரசுகள் தீர்மானித்தனர். காஞ்சார நகரைத் தலைநகராகக் கொண்டு சாந்தல  மன்னன், வித்யாதரன் ஒரு கூட்டுப் படைக்கு தலைமை வகித்தான்.     ராஜ்ய பாலன் கொல்லப்பட்டு அவன் மகன் திரிலோசன பால்  மன்னனாக்கப்பட்டான். இதைக் கேள்விப்பட்ட கஜினி கடுஞ்சினம் கொண்டு வித்யாதரன் மீது போர் தொடுத்து,   கி.பி 1021-1022 ல் காஞ்சார நகரத்தை முற்றுகையிட்டான்.  பாமர மன்னனான போஜராஜனும் சேதிநாட்டு காளச்சுரி மன்னனான காங்கேய வித்யா விக்ரமாதித்தனும் வித்யாபாலனுக்கு துணைநின்று முகமது கஜினியை,  எதிர்த்துப் போரிட்டனர்.

இராஜேந்திரனுடைய பெரும் படையும் இந்த கூட்டு படைக்கு உதவி  புரிந்து இருத்தல் கூடும். இந்த பெரும் படை தாக்குதலை கண்ட முகமது கஜினி  பெரும் வியப்பில் ஆழ்ந்தான்.   முகமது கஜினியால் வித்யாதரனை தண்டிக்க இயலவில்லை. இந்த போரில் இரு தரப்பிலும் வெற்றிபெறவில்லை. கடும் எதிர்ப்பால் முகமது கஜினி கங்கை கரை நோக்கி தன் படையை செலுத்தாமல் கூர்ச்சர  நாட்டின் மீது படையெடுத்து சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.  முகமது கஜினி திரும்ப சென்ற அதே சமயத்தில்தான் ராஜேந்திரன் படைகளும் கங்கை நோக்கிச் சென்றன. உதயப்பூர் பிரசஸ்தியின் மூலம் போஜராஜனும், காங்கேயனும், முஸ்லிம்களுக்கு எதிராக போர் நிகழ்த்தினர் என்று அறியமுடிகிறது.

ராஜேந்திர சோழனது படை வென்ற நாடுகளைத் போஜராஜனும், காங்கேய  விக்கிரமாதித்தனும் வென்றதாக கூறிக்கொள்கின்றனர். போஜராஜனின் மேலாண்மை கௌட நாட்டிலும் தட்சிணபாதத்திலும் நிலைநாட்ட பெற்றது என  திரு. மேருதுங்க குறிப்பிடுகிறார்.   இந்திரரதன் ராஜேந்திரனுக்கும் போசரா அரசனுக்கும் மாற்றான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. காங்கேய விக்ரமாதித்தன் அங்க நாட்டினை வென்றதாக  குறிப்பிட்டுள்ளதால். இராஜேந்திரனுடைய படைகள் முயங்கி போரில் வெற்றிபெற்று இரட்டபாடியை கைப்பற்றியபோது, போஜராஜன் கொங்கணப் பகுதியை வென்று வெற்றி விழாக் கொண்டாடினான் என்பதை போசனின் பனீஸ்வார,பெத்மா செப்பேடுகள் குறிப்பிடுவதனால்.

முதலாம் இராஜேந்திரனின் கங்கை,படையெழுச்சியின் போது காங்கேயன், போசன்  போன்ற வட இந்தியா இந்து மன்னர்கள் படையுதவியளித்திருத்தல் வேண்டும்  என்றும்.இவர்கள் கூட்டிணைவு படைவட இந்தியாவில் நிகழ்ந்த முஸ்லிம் படையெழுச்சிக்கு எதிராக வித்யாதரனுடன் போரிட்டிருக்க வேண்டும் என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறது.

இதன் மூலம் போசனும், காங்கேயனும்  ராஜேந்திரனின் படையுடன் நட்பு கொண்டிருக்க வேண்டும் என்பது விளங்குகிறது. போஜராஜன் சிந்துப் பகுதியை வென்றதாக குறிப்பிட்டுள்ளதால் ராஜேந்திரன் வென்ற மாசுணி தேசம் என்பது சிந்து பகுதியாக இருக்க வேண்டும் என்பது  டி.என் சுப்பிரமணியன் அவர்கள் கருதுகிறார்.

அடுத்து, சோழப்படை ஒட்டர நாட்டையும் கோசல நாட்டையும் கடந்து செல்ல வேண்டியதாயிற்று. ஒட்டர நாடு காடுகள் நிறைந்த பகுதியாகும். அப்பொழுது ஒட்டர நாட்டையும்,   தென் கோசல நாட்டையும் இந்திரரதன்  என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் சோழ வம்ச மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார்.     ஒட்டர நாடு ஒட்ட விஷயம் எனவும் அழைக்கப்பட்டது.

ஒட்ட விஷயம் தற்காலத்தில் ஒரிசா மாநிலம் என அழைக்கப்படுகிறது.   உதயபுர கல்வெட்டில் தாரா நகரத்திலிருந்த போஜராஜனின் பகைவன்  எனக் குறிக்கப் பெற்றுள்ள  இந்திரரதன் என்னும் மன்னன் இவன் ஆக தான் இருக்கவேண்டும், என டாக்டர்கள் கெல்பர்ன் குறிப்பிடுகிறார்.  கோசல நாடு என்பது மகா நதியின் கரையோரத்தில் அமைந்திருந்தது.

சோழ படையும் இந்திரரதன் படையும் ஆதி நகர் என்னும் இடத்தில் போர்க்களத்தில் சந்தித்து போர் நிகழ்த்தின. இப்போரில் சோழப்படை வியக்கதகு வெற்றியைப் பெற்று. ஒட்டர  நாட்டையும்,   கோசல நாட்டையும் கைப்பற்றிக் கொண்டது.   சோழப் படை ஒட்டரதேசத்து மன்னனை கொன்று அவன் தம்பியிடம் பன்மணிக் குவியலை திறையாக கொண்டது என்பதை திருவாலங்காடு செப்பேடு நமக்கு சான்று பகர்கிறது.

பின்பு, சோழப்படை சொர்ண ரேகை ஆற்றின் கரையில் உள்ள தண்டபுத்தின் மீது தன் கவனத்தை செலுத்தியது.  இது வங்காள மாநிலத்தில் மிதுனபுரி மாவட்டத்தின் தென் பகுதியிலும், தென்மேற்கு பகுதியலும் அமைந்த நாடாகும்.  இப்பகுதியை தன்மபாலன்  என்ற மன்னன் ஆண்டு வந்தான். சோழப் படை வீரர்கள் தன்மபாலன் பெரும் படையை புறமுதுகிட்டு ஓடச் செய்தன.    சோழ வீரர்கள் நீண்ட இடைவிடாத போர்களின் விளைவாக களைப்புற்ற போதிலும், கங்கை கரையை நெருங்கி விட்டோம் என்ற  ஆர்வத்தால் புத்துணர்ச்சியும் உற்சாகமும் பெற்று தங்கள் புனித பயணத்தை தொடங்கினார்.

தண்டபுத்தியை வென்ற களிப்பில், சோழ மறவர்கள் கங்கை பேராற்றின் தென்கரையில் அமைந்துள்ள தக்கணலாடம் என்னும் பகுதியின் மீது படையை செலுத்தினர்.      தக்கணலாடத்தின்  மன்னனான இரணசூரன் சோழப் படையை எதிர்த்து போர் புரிந்த தோல்வியைத் தழுவினான்.   சோழ வீரர்கள் வெற்றி செருக்கினாலும் எல்லை அற்ற மகிழ்ச்சியாரவாரம் செய்து கொண்டு வங்கத்தின்  மீது படையெடுத்தனர்.     வங்க வேந்தனாகிய கோவித சந்தனும் தன் படையுடன் சோழப் படையை எதிர்த்துப் போரிட்ட போதிலும் தோல்வியால் துவண்டான்.    இவ்விதம் தனக்கு கீழ் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள் பலரும் தோல்வியை தழுவிய செய்தி உத்திரலாட வேந்தனாகிய மகிபாலனின்  காதுகளுக்கு எட்டியது.  மகிபாலனோ சீற்றம்  மிகக் கொண்டான். சிதறிக் கிடந்த வீரர் படையைத்  திரட்டினான். சோழப் படையை வெல்ல வேண்டும் அல்லது போரில் மடிய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

இரு வீரர்களுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. வங்க சிங்கமான மகிபாலன் போர் களத்தில் முன்னணியில் நின்று வீரப்போர் புரிந்தான்.   வீரர்களும் வெஞ்சினம் கொண்டு வீரப் போரிட்டனர். சோழர்களும் சோர்வடையாது போரிட்டனர். போர் மும்முரமாக நடைபெற்றது.    வீரர் பலர் கை இழந்து கால் இழந்து குருதி ஆற்றில் மிதந்தனர்.  சோழப்படை சிறிது சோர்வுற்றது தானை தலைவனோ வீர மொழி கூறினார். சோழமறவர்  மீண்டும் புத்துயிர் பெற்றன. சோழர்கள் வெற்றி அல்லது வீர மரணம் என்று இறுதி முடிவு உடன் போரிட்டனர்.

பகைவர்களை வென்று குவித்தனர் தன் வாள் வலியும் தோல்வியும் விளங்க போரிட்டனர். வங்கபடை  பின்வாங்கத் தொடங்கியது. சோழப்படை  வீரர்கள்  வங்கப்படையை கடுமையாக தாக்கி முன்னேறி சோழச்சேணை  ஆரவாரித்தது. மகிபாலனும்  போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான்.   சோழப் படை வெற்றி பெற்றது. மகிபாலனின் யானைகளையும் பெண்டிர் பண்டாரங்களையும் பற்றிக்கொண்டான்.  வீரமறவர்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்.

பல குடங்களில் கங்கை நீரை நிரப்பி தோல்வியுற்ற வேந்தர்களின் தலைகளில் குடங்களை வைத்தனர்.    தோல்வி பெற்ற வேந்தர்கள் கங்கை நீர் நிரம்பிய குடங்களுடன் நடந்தனர். பின்னால் கரிப்படையும், பரிப்படையும் வீர படையினரும் தொடர்ந்தனர்.   புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது. கங்கை நாட்டிலிருந்து காவிரி  நாட்டிற்கு பயணம் தொடங்கியது.  இப்படை எழுச்சியில் சோழப் படைத்தலைவன் வென்ற அடக்கிய வேந்தர்களின் பட்டியலை ராஜேந்திரன் அது மெய்க்கீர்த்தியும், திருவாலங்காட்டுச் செப்பேடும் நிரல்பட கூறுகிறது.

அதுமட்டுமல்லாது, திருவாலங்காட்டுச் செப்பேடு சோழப் படை கங்கையை வென்று திரும்பிய போது உத்தரலாட வேந்தன் மகிபாலனையும்  வென்றதாக கூறுகிறது.  இப்படை எழுச்சி நிகழ்ந்தபோது கங்கை பேராற்றில் நூற்றுக்கணக்கான போர் யானைகளை வரிசையாக நிறுத்தி, அதன் மீது தன் படைகளை செலுத்தி கங்கையைக் அடைந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகிறது. இதனால் சோழர்களின் யானைப் படையின் எண்ணிக்கையிணையும் நன்கு உணர முடிகிறது.   இதனை செயங்கொண்டார் கங்கையாற்றின் கண்  களிறுகள் நீர்  உண்டன, என்பதை களிறு கங்கைநீருண்ண  என்று குறிப்பிடுகிறார்.   வில்லிபுத்தூர் ஆழ்வார், கங்கை நதியிடை…..மாகத் என்று குறிப்பிடுகிறார்.

தாரா நகரினை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பரமார மன்னனான போஜராஜனும், சேதிநாட்டு திரிபுர நகரத்திலிருந்து அரசு செலுத்திய காள சூரி வம்சத்தை சார்ந்த காங்கேய விக்ரமாதித்தனும், சாந்தல மன்னனான வித்யாதரனும் சோழர்களிடம் நட்பு கொண்டிருந்தனர்.   எனவே,  தான் சோழப்படை மேல் கூறிய நாட்டினர் மீது படை எடுக்காமல் கங்கையை நோக்கி சென்றது.   வடநாடு சென்று வட வேந்தர்களை போரில் வென்று சோழ வீரத்தினை அங்கு நிலைநாட்டி.  கங்கை நீரையும்,  விநாயகர் படிமமும் என பல பொருட்களை கைக்கொண்டு வெற்றியோடு திரும்பிய,    சோழர் படைத் தலைவன் ராஜேந்திர சோழன் கோதாவரி ஆற்றங்கரையில் கண்டு பெருமகிழ்ச்சி உற்றான் அன்புடன் வரவேற்றான்.

ராஜேந்திரன் தன் படைத்தலைவன் இடமிருந்து அருமந்த கங்கை நீரையும் பெரும் பொருளை யும் பெற்றுக் கொண்டு. தன் படையுடன் சோழபுரம் நோக்கி புறப்பட்டான். அவன் புறப்பட்ட வழியில் உள்ள கோவில்களை வணங்கி நிவந்தங்கள் அளித்தான் என்பது கல்வெட்டுகள் வழி அறிகிறோம். சோழப் படை கங்கையிலிருந்து வெற்றியின் சின்னமாகக் கொண்டு வந்த விநாயகர் படிமம் கும்பகோணத்தில் திருநாகேச்சுரரது கோயிலில் இறைவன் திருமுன் வைக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவே  கங்கை வெற்றியின் சின்னமாக நிலைநாட்டப்பட்டது. கங்கை விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. கங்கை விநாயகர் படிமம் அமைக்கப்பட்ட கல்லும் சிற்ப திறனும் தமிழ்நாட்டினின்றும் வேறுபட்டு இருப்பது,  இது வட நாட்டில் இருந்து வெற்றிச் சின்னமாகக் கொண்டு வரப்பட்டது என்பது புலனாகும். தனது புதிய தலைநகரை தூய்மை செய்து மக்களை அங்கு குடியேற்ற வேண்டும் என்பதற்காக ராஜேந்திரன் கங்கை படையெழுச்சியை மேற்கொண்டார் என்பது திருவாலங்காடு கூறுவதாக நாம பார்த்தோம்.   இப்படையெழுச்சி வெறும் தீர்த்த யாத்திரை மட்டுமில்லாது ஒரு திக்விசயமாகும்.

சோழ அரசின் பெருமையும், தமிழ் அரசின் வலிமையும், தென்னாட்டின் வெற்றியினையும், வடவாரிய மன்னர்களுக்கு உணர்த்தி மாபெரும் படை எழுச்சி, தமிழக வரலாற்றில் மட்டுமின்றி இந்திய வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ராஜேந்திரன் வடநாட்டுப் படையெழுச்சி, சமுத்திர குப்தரின் தென்னிந்திய படை எழுச்சியுடன்,  அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய படை எழுச்சியுடனும், கரிகால் பெருவளத்தானின் இமயப் படை எழுச்சியுடனும்,  சேரன் செங்குட்டுவனின் வடநாட்டு படை எழுச்சியுடனும், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் படை எழுச்சியுடனும் ஒப்புமை நோக்கதக்க வரலாற்றுச் சிறப்பு கொண்ட படை எழுச்சி ஆகும்.

ராஜேந்திரன் பிற நாடுகளை வென்று தன் அடிமைப்படுத்தினான். தன் நாட்டுடன் இணைத்து ஆள வேண்டும் என வடநாட்டு படையெழுச்சியை  மேற்கொண்டான் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இராட்டிர கூட பெருமன்னர்கள் துருவா,  மூன்றாம் கோவிந்தன், மூன்றாம் இந்திரா போன்றோரும் வடநாட்டு படையெழுச்சியை  மேற்கொண்டு வெற்றி பெற்றனர். இருப்பினும் இவற்றை விட ராஜேந்திரனின் வடநாட்டு படை எழுச்சி ஓர் வரலாற்று சிறப்பு வாய்ந்தது ஆகும்.

கங்கை வெற்றியின் விளைவுகள்

இராஜேந்திரனின் கங்கை படையெழுச்சியின் பயனாக தமிழர் நாகரீகம் வங்க மாநிலம் வரை பரவியது. அதுமட்டுமல்லாது இப்படை எழுச்சியில் ஈடுபட்ட படைத்தலைவன் ஒருவன் (கருநாடகன்) மேற்கு வங்கத்தில் தங்கி விட்டான். அவன் வழியில் வந்த சாமந்த சேனன் என்பவன் கி.பி1050 -இல்  வங்கச்சேன மரபினை தோற்றுவித்தான் என அறிஞர் ஆர்.டி பானர்ஜி குறிப்பிடுகிறார். பாலர்களின் வீழ்ச்சிக்குப் பின் சேனமரபினை  ஏற்படுத்திய சாமந்த சேனன் கி.பி 1050. முதல் கி.பி  1075 முடிய அரசாட்சி செய்தான்.

மிதிலையை ஆண்ட கருனாடகரும் இங்கனம் சென்ற தென்னாட்டவரே என்பது அறிஞர்கள் கருத்து.  கங்கைக்கரை நாடுகளில் வாழ்ந்து வந்த சிவ பிராமணர் பலரை ராஜேந்திரன் அழைத்து வந்த சோழ நாட்டிலும், காஞ்சி மாநகரிலிம் குடியேற்றினார் என்பது திரிலோசன சிவாச்சாரியார் அது சித்தாந்த சாராவளி உரையில் குறிக்கப்படுகிறது. இப்படையெழுச்சியால் தமிழகத்தில் நிலவிய சைவம்,     இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவிய சைவத்துடன் தொடர்புகொண்டது.

தென்னிந்தியாவின் மாபெரும் வெற்றி வீரனான முதலாம் ராஜேந்திர சோழனின் படை எழுச்சி வங்கத்தில் நிரந்தரமான அடையாளங்களை விட்டு சென்றதாக  வங்கபாலர்கள் என்ற நூலில்  திரு.ஆர்.டிபானர்ஜி குறிப்பிடுகிறார்.   இப்படையெழுச்சியின் விளைவால் சோழ மன்னரின் வீரம் வடநாடு வரை பரவியது. இந்தியா முழுவதும் தன் புகழ் பரப்பிய முதலாம் ராஜேந்திரன் இந்திய வெற்றி வீரர்கள் ஒருவனாக போற்றப்பட்டான்.

இவற்றின் விளைவாக முதலாம் இராஜேந்திரன் கங்கைகொண்ட சோழன் என்னும் விருதினை பெற்றான். அவன் அமைத்த புதிய நகரமும் கங்கை கொண்ட சோழபுரம் என அமைந்ததே நாம் முன்பே பார்த்தோம்.  அப்புதிய கோயிலும் கங்கைகொண்ட சோழேச்சுரம் என பெயர் பெற்றது. இவற்றின் சின்னமாகத்தான் சோழகங்கம் என்னும் பெரிய ஏரி வெட்டப்பட்டது என்பதை நீர் மயமான வெற்றித் தூண் என திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகிறது. வரலாற்றறிஞர் திரு வெங்காய அவர்கள் இப்படையெழுச்சியை மிகவும் குறைத்து மதிப்பிடுகின்றனர். இருப்பினும் இப்படையெழுச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

ராஜேந்திரன் தனது ஆட்சிக்காலத்தின் தன் மகனான மும்முடி சோழனை, சேர, பாண்டிய நாடுகளில் அரச பிரதிநிதியாக நியமித்து மதுரை மாநகரில் ஆட்சிபுரிய ஏற்பாடு செய்திருந்தான் என்பதை நாம் முன்பே பார்த்தோம். இதே போன்று தன் ஆண் மக்கள் பிறரையும் கங்கைக் கரைப் பகுதிகளில் அரச பிரதிநிதியாக நியமித்து நல்லாட்சி புதிய வகை செய்து கொடுத்தான், என்பதை,

முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன் ஆகியோர் மெய்க்கீர்த்தி வழி அறியலாம். முதலாம் இராஜேந்திரனின் ஆட்சி காலத்தின் ஏழாம் ஆண்டில் கி.பி  1018 முடிசூட்ட பெற்ற அவன் மகனான முதலாம் ராஜாதிராஜன் மெய்க்கீர்த்தியில்,

திங்களஏர் தருதன் றொங்கல்வெண் குடைக்கீழ்

நிலமக ணிலவ மலர்மகட் புணர்ந்து

செங்கோ லோச்சி கருங்கலி கடிந்து

தன் சிறியதா தையுந்திருந்  தமையனுங்

குறிகொ டன்னிளங் கோக்கிளையுங் துன்றெழில்

வானவன் வில்லவன் மீனவன் கங்க

னிலங்கையர்க் கிறைவன் பொலங்கழற் பல்லவன்

கன்னகுச் சியர்கா வலனெனப் பொன்னணி

சுடர்மணி  மகுடஞ் சூட்டிப் படர்புக

ழாங்கவர்க் கவர்நா டருளிப் பாங்கற

என்று குறிக்கப்பட்டுள்ளது.

இதனால், இவனது ஆட்சியின் தொடக்க காலத்திலேயே கன்யா கிப்சம், இலங்கை,கங்க நாடு,சேர நாடு, பாண்டியநாடு போன்ற நாடுகளுக்கு அரச பிரதிநிதிகளை அனுப்பி ஆட்சிபுரிய செய்தான் என்பது நம்மால் அறிய முடிகிறது. இம்மெய்க்கீர்த்தி இவனது 27-ஆம்  ஆட்சியாண்டில் இருந்து தான் காணப்படுகிறது.    முதலாம் ராஜாதிராஜனின்  தம்பியான இரண்டாம் ராஜேந்திரனது மணிமங்கலத்தில் கிடைக்கப்பெறும் நான்காம் ஆண்டு கல்வெட்டில் உள்ள மெய்க் கீர்த்தியிலும், இவன் அரசகுமாரர்களை நாட்டின் பல பகுதிகளில் அரசப் பிரதிநிதிகளாக அமர்த்தியது தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது.    முதலாம் ராஜேந்திரன் தன் மகளாகிய அம்மங்காதேவியை ராஜராஜ நரேந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்து கீழைச் சாளுக்கியரின் உறவை வலுப்படுத்தினான்.

கடாரப்  படையெழுச்சி

முதலாம் ராஜேந்திர சோழனின் கடல்கடந்த வெற்றிகளில் கடார வெற்றி முதன்மையானதாக போற்றப்படுகிறது. கடார வெற்றி பற்றிய செய்திகள் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் உள்ள மெய்க்கீர்த்திகளில் காணப்படுகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் கடார வெற்றி பற்றிய செய்திகள் சுருக்கமாக கூறப்படுகிறது. கடார படையெழுச்சி கி.பி 1025 ஆம் ஆண்டிற்கு முன்னரே நடைபெற்றிருக்க வேண்டும் என்பது அறிஞர்கள் கருத்து.

முதலாம் ராஜேந்திரன் வென்ற கடாரம் நாடானது எங்கு உள்ளது என்பதை அறிந்து பார்க்கும் போது, மெய்க்கீர்த்தியில் பப்பாளம் என்னுமிடத்தை வெற்றி கொண்டதாக குறிப்பிட்டுள்ள,  இப்பகுதி பர்மாவில் உள்ள தலைங் பகுதியில் உள்ள ஒரு துறைமுகப்பட்டினம் ஆகும் என மகாவம்சம் குறித்துள்ளது.  எனவே, ராஜேந்திரன் வென்ற கடாரம் பர்மா நாட்டில் உள்ள பெகு என்னும் பகுதி ஆகும் என்று வரலாற்று அறிஞர் வெங்கய்யா கூறுகிறார்.

சில ஆண்டுகள் கழித்து பர்மா நாட்டின் பழம்பொருள் பாதுகாப்பு துறையினர் ராஜேந்திர சோழன் கி.பி 1025- 1027- இல்  வென்றதாக குறிக்கப்பட்டிருக்கும் இரு தூண்கள் பெகு நாட்டில் காத்து கிடப்பதாக அறிவித்தனர். ஆராய்ச்சி அறிஞர் பலர் ராஜேந்திரன் மெய்க்கீர்த்தியில் கூறியுள்ள கடார வெற்றி, பர்மா வெற்றிதான் என்று உறுதி கொண்டனர்.   அதுமட்டுமல்லாது, திருச்சிராப்பள்ளி மாவட்ட கருப்பொருள் களஞ்சியத்தில் கடாரம் என்பது கீழ் பருமா என குறிப்பிட்டுள்ளது திரு கனகசபை பிள்ளை அவர்களும் இக்கருத்தை வலியுறுத்துகிறார்.

திரு எம். எஸ் பூர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் தமிழ் இந்தியா என்ற நூலில் கடாரம் என்பது பர்மாவில் ஒரு பகுதி என குறித்துள்ளார்.

திரு. சிதம்பரனார் அவர்கள் முதலாம் ராஜேந்திரன் வென்று பேகு என்னுமிடத்தில் ஒரு கற்த்தூணில் சாசனம் வெட்டுவித்து பெரிய கோர்ட்டுக்கு முன்னால் நாட்டியுள்ளான்.  அக்கற்த்தூண்  இன்றும் உள்ளது. அதற்கு அடுத்த ஆண்டில் அதாவது கி.பி  1027-இல்  திருவாரூருக்கு கிழக்கே இரண்டு கல் தொலைவில் உள்ள கடாரம் கொண்டான் என்ற கிராமத்தை நிர்மாணம் செய்தான் என்று பர்மா வெற்றியை கரந்தைத் தமிழ்ச்சங்க தமிழாராய்ச்சி மலரில் குறித்துள்ளார். இலக்கண விளக்க பரம்பரை திருவாரூர் சோமசுந்தர தேசிகர் அவர்கள் பர்மா தேசத்தில் உள்ள பிகு நாட்டிற்கு கடார தேசமென்று பெயர் உண்டு என செந்தமிழ் இதழில் குறிப்பிட்டுள்ளார்.

கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞரும்,   கரந்தை தமிழ் கல்லூரி தமிழ் பேராசிரியர் திரு கோவிந்தராஜன் அவர்கள் பர்மாவில் உள்ள பெகு என்னும் பகுதியில், முதலாம் ராஜேந்திரன் நாட்டிய வெற்றித் தூண்கள் தமிழ் எழுத்துக்களுடன் இருப்பதை அந்நாட்டு கல்வெட்டுத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதை அறிகிறோம். மற்றும் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பியுள்ள அறிஞர் சிலர் இடம் பெற்ற செய்திகளும் முதலாம் ராஜேந்திரன் என்ற வரலாற்றினை உறுதிப்படுத்துகிறது.

இவற்றில் உள்ள கடற்கரைப் பட்டினம் அதை சார்ந்த பகுதிகளும் கடாரம் என்பதை பல சான்று மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.  அதுமட்டுமல்லாது, இதுவரையில் வெளிவந்துள்ள சோழர் வரலாறு முதலாம் ராஜேந்திரன் உடைய கல்வெட்டு, செப்பேடுகளை கொண்டு ஆழ்ந்த முடிவாக கடாரம் என்பது மலேயா தீபகற்பத்திலுள்ள  கெடா என்னும் பகுதி என்பது திட்டவட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடாரம் என்ற சொல்லை ஜெயங்கொண்டார் அவர்கள் தனது பாடலில் கலிங்கத்துப்பரணியில் பலமுறை  பரக்கு மோதக்  கடாரம்,  குளிறு தெண்டிரைக் குரைக்கடாரம் குறித்துள்ளார்.  பட்டினப்பாலையில் காழகம் எனக் குறிக்கப் பெறுவது காடாரமே என்ற நச்சினார்க்கினியர் கூற்று ஒன்றும் அறியப்படுகிறது. இதன் மூலம் தமிழர்கள் சங்க காலத்திலிருந்தே நீண்ட நெடுங்காலமாக காடாரத்துடன் வாணிகம் செய்தனர் என்பது தெரியவருகிறது. சீன நூல்களில் காடாரம் கீ……டோ என்னும் பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டினர் அந்நாட்டுடன் கடல் வாணிகம் செய்ததாக சீன நூல்கள் கூறுகிறது.  

இதுபோன்ற கருத்துக்கள் மூலம் கடார நாட்டுடன் தமிழர்களும், சீனர்களும் பன்னெடும் காலமாக கடல் வாணிகம் செய்தது தெரிய வருகிறது. கடாரம் என்பது கடற்கரைப் பட்டினம் என்பதும் அதன் வழியாக தான் இந்தியா,கீழ்த்திசை ஆகிய நாடுகளுடன் கடல் வாணிகம் செய்தது என்பதையும் அறியமுடிகிறது. பன்னெடுங்காலமாக தமிழகம் சீன நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது இதன் வழி அறியமுடிகிறது.

      சோழப் பேரரசுடன் கடாரம் கொண்டிருந்த நட்புறவு நிலைகுலைந்த தாலோ, வங்க கடல் முழுவதும் சோழப் பேரரசின் ஒரு பகுதியாக ஆக்கப்படவேண்டும் என்ற ஆவலாலோ. சோழ நாட்டிற்கும் சீன நாட்டிற்கும் இடையே வளர்ந்து வந்த வாணிபத் தொடர்பினை துண்டிக்க கடாரம் முயன்றதால், ராஜேந்திரன் கடாரத்தின் மீது படையெடுத்து இருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்தாக உள்ளது. பெரும்பாலும் வணிக நோக்கத்தின் அடிப்படையில்தான் இப்போ நிகழ்ச்சி நடைபெற்று இருக்க வேண்டும்.

ஈழத்தை வென்று கடல்கடந்த பேரரசினை நிறுவி சோழர்களது ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்திய ராஜேந்திர சோழன்.    தனது கடல் கடந்த பேரரசினை விரிவு படுத்தும் நோக்கத்துடன் கடாரத்தின் மீது படையெடுத்து இருக்க வேண்டும். எனவே, தான் ராஜேந்திரனுக்கு பின்பு வந்த வீர ராஜேந்திரன் கடாரப்  படையெழுச்சியில்  ஈடுபட்டான்.   இக்கருத்தினை பேராசிரியர் திரு. என். சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில்,

தூரக்கிழக்கு நாடுகளில் தென்னிந்தியா பல்லாண்டு காலமாக கடல் கடந்த வாணிபம் செய்து  வந்தமைக்கு, தடையாக இருந்து வந்த ஸ்ரீவிசய நாட்டின் தொல்லையை அடக்கவும் கடல் வழியை சிக்கலின்றி செய்யவுமே இப்படை எடுப்பானது ஓரளவு நிகழ்ந்திருக்கும்.   இதனை துருக்கியர்களின் தலையீட்டை முறியடித்து இந்தியாவிற்குள் நுழைந்த ஐரோப்பிய நாடுகளில் செயலோடு ஒப்பிடலாம். இருப்பினும் ராஜேந்திரன் கடல் கடந்து தன் பேரரசை நிறுவினான் என்று கூறுவதே நிதர்சன உண்மை. இதுவரை யாராலும் செய்ய முடியாத கங்கை படையெடுப்பை இவன் செய்தான் என்று கூறுவோம். ஆனால், கடல் கடந்து தன் பேரரசை பரப்பவும் அவனால் முடிந்தது.    

கடலுக்கு அப்பாலுள்ள ஈழத்தை வென்று தன் ஆட்சியை கடல்கடந்த பேரரசாக்கிய சோழர்கள், ஸ்ரீ விசய நாட்டினுடைய எல்லைகளையும் எளிதாக தங்களது ஆட்சியுடன் சேர்த்துக்கொள்ள முடியும். ராஜேந்திரன் இதன் நிமித்தம் தூண்டப்பட்டு இருக்க முடியாது. பரந்த பேரரசினை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் இதற்கு காரணமாகும்.  இப்படை எழுச்சி முடிந்தவுடன் கடல் கடந்த நாடுகளில் சோழ அரச குடும்பத்தினர் சிலர் அரச பிரதிநிதியாக நியமிக்கப் பட்டனர்.   வீரராஜேந்திரன் இரண்டாம் தடவை வெற்றிகொண்டது குறிப்பிடத்தக்க ஒன்று. சோழர்களின் இந்நிலை பகுதிகளை தங்கள் பேரரசுடன் இணைந்த மாநிலங்களாக ஆளுவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று, திரு நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார். ஆனால், இதற்கு மாறாக கூறுவதற்கு சான்றுகள் இல்லை.

ராஜேந்திரன் கலம் செலுத்தும் விதம்

ராஜேந்திரன் காவல் மிக்க கடாரத்தின் மீது போர் மேற்கொள்ள முடிவெடுத்தான்.   கப்பல் படைத் தலைவனாக தானே பொறுப்பேற்றான். காலமும் நிலையும் கருதி அக்கலங்களை கீழ்த்திசை நோக்கி செலுத்தினான். நாட்கள் உருண்டன. மரக்கலங்களும் நீரைக் கிழித்துக் கொண்டு நீண்டு சென்றது. ஸ்ரீவிசய நாடும்  நெருங்கிவிட்டது. வீரர்களின் கண்களுக்கும் அது தென்பட்டது. வீரர்கள் வீறு கொண்டனர். இக்காலை சுமத்திரா என அழைக்கப்பெறும். மேற்குக் கரையில் அமைந்த நாட்டின் தலைநகரமும் துறைமுகமும்மான ஸ்ரீவிஜயா நகரில் கரை ஏறினர். 

ஸ்ரீவிசய நாட்டு கரையில் சோழ வீரர்கள் இறங்கினர்.  என்ற செய்தி கேட்டு நாட்டு மன்னனான விசயோத்துங்கவருமன் சீறி எழிந்தான் சிங்காசனத்தில் இருந்து.  தன் ஆற்றல்மிகு படை தலைவர்களை அழைத்து பெரும்படை திரட்டிட ஆணை பிறப்பித்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் அணிவகுத்து நின்றனர். வெஞ்சினம் கொண்ட  வீரர்கள், வீரா ஆவேசம் கொண்டு சோழப் படையை தாக்க முன்னேறினர். இரு திறத்தாரும் அணிவகுத்து நின்றனர்.      வீரர்கள் இடைவிடாது போர் செய்து கொண்டனர். நீண்ட நாட்களாக போர் செய்து களைத்திருந்த சோழப் பெரு வீரர்களும் புத்துணர்ச்சி கொண்டு போரிட்டனர். சோழப் படையின் பெருவீரம் கண்டு பகைவர்களும் நாற்றிசையிலும் சிதறி ஓடினர். சோழ மறவரகள்  ஸ்ரீவிசய வளநாட்டில் வெற்றிக்கொடி நாட்டினர்.   நாட்டின் காவலனாம் விசயோத்துங்கவருமன் தோல்வியால் துவண்டு விட்டான்.

ராஜேந்திரன் விசயோத்துங்கவருமனை அடிமைப்படுத்தினான்.    பட்டத்து யானையை கவர்ந்தான், பெரும் பொருட்களையும் கவர்ந்து கொண்டான். வியக்கத்தக்க வகையில் வித்தியாதர தோரணையும் கைப்பற்றிக் கொண்டான். விசயோத்துங்கன் வெட்கித் தலைகுனிந்தான். கடற்படை வலிமை இருந்தும் தோல்வி கண்டதை எண்ணி மனம் வருந்தினான். கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் கடாரம் நாட்டிற்கு வாணிகத்தின் பொருட்டு சென்ற சுலைமான் என்னும் அராபியன், கடாரநாட்டில் கப்பல் கட்டும் தொழில் சிறப்புடன் நடைபெற்றது என்பதை குறித்துள்ளார். கடற்படை வலிமை மிக்க இருந்தது என்பது இதனால் தெளிவாகிறது.

வலிமைமிக்க இந்நாட்டினை ஆண்ட ராஜேந்திர சோழனது கப்பற்படையின் மேம்பட்ட வலிமையின் இவற்றினால் அறியமுடிகிறது. ஸ்ரீவிசயம் என்பது ஸ்ரீவிஷயம் எனவும் அழைக்கப்படுகிறது. இதனை சீனர்கள் ஸ்ரீவிஜயம் என்று குறிப்பிடுகிறார்கள். ஸ்ரீ விசயம் என்பது திருநாடு எனப் பொருள்.  இது பாலம் பாங் மாநிலமாகும். ஸ்ரீவிசய நாட்டிற்கும் தமிழ்நாட்டுக்கும் கிபி எட்டாம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு முடிய வணிக தொடர்பு வலிமை அடைந்திருந்தது என சீன  நூல்கள் குறிப்பிடுகிறது.   கடார வேந்தனிடமிருந்து சோழர் கைப்பற்றிய முதல் நாடு ஸ்ரீ விசயம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

கடார வெற்றியின் விளைவுகள்

கடார வெற்றியின் பயனாக தமிழ்நாட்டு வணிகர்கள் எந்தவித இடையூறுமின்றி கடாரத்தில் வாணிகம் செய்து வந்தனர். மேலும் கிபி 1088 ஆம் ஆண்டு தேதியிட்ட சிதைந்த கல்வெட்டு ஒன்று கடாரத்தில் காணக்கிடைத்தலின், தமிழ்நாட்டு வணிகர் கடாரத்தில் தங்கி  வாணிகம் செய்தமை உறுதி பெறுகின்றது. தமிழர் வாணிகம் அங்கு பெருகியது. ஸ்ரீவிஜய நாட்டு மன்னன் ராஜேந்திரனின் மேலாண்மையை தற்காலிகமாக ஏற்றுக் கொண்ட போதிலும், இப்படையெழுச்சியினால் நிலையான நிரந்தரமான விளைவுகள் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

ஸ்ரீவிஜய நாடு சோழ வேந்தனுக்கு முறையாகக் கப்பம் செலுத்தி இருக்க கூடும் எனில்,     இன் நாட்டினை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என்ற எண்ணத்துடன், சோழர்கள் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதற்க்கு சான்றுகளும் கிடைக்கவில்லை. ராஜேந்திரனுக்கு பின்னர் சோழ நாட்டை ஆண்ட மன்னருள் ஒருவனான முதலாம் வீரராஜேந்திரன் என்னும் மன்னன்,கடார நாட்டினை வென்று மீண்டும் கடார மன்னனிடம் ஒப்படைத்ததாக கல்வெட்டு செய்திகள் சான்று கூறுகிறது. அதனால் ராஜேந்திரனின் கடார வெற்றி ஒரு தற்காலிக வெற்றி என்பது உறுதி.

இக்கடல் கடந்த வெற்றியினால் இராஜேந்திரனுடைய வெற்றியும் புகழும் கடல் கடந்த நாடுகளில் பரவியது. இவற்றின் காரணமாக ராஜேந்திரன் இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு சிறந்த இடத்தைப் பெற்றார்.    இந்திய வரலாற்றில் கடல் கடந்து சென்று வியக்கத்தகு வெற்றிகள் பல பெற்ற வேந்தர்களில் தலையானவன் ஆவான்.     முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் கொண்டு சிறப்பினைப் பெற்ற இவனுடைய தந்தை ராஜராஜனை விட மேம்பட்ட புகழை கடார வெற்றி முதலாம் ராஜேந்திரனுக்கு தந்தது.   ராஜேந்திரனின் கடாரம் வெற்றி விளைவுகள் பற்றி திரு நீலகண்ட சாஸ்திரி அவர்கள் சோழர்கள் என்ற நூலில் இராஜேந்திரனுடைய வெட்டு எழுத்துக்களில் கூறப்பட்ட  செய்திகளை, அப்படியே வரலாற்று சான்றுகளாக எடுத்துக் கொண்டாலும் கூட, அவனது ஸ்ரீவிசயப்படையெழுச்சி நாட்டு மன்னனை தற்காலிகமாக சோழனின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ள வைத்தது என்று நிலையான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறார். 

இவ்வெற்றியால் தமிழர்களின் கட்டடக் கலை, வழிபாட்டு உருவங்கள், மதக்கோட்பாடுகள், சிற்ப்பகலை போன்றவை கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து பர்மா, மலாயா,தாயார், இந்தோசீனம் முதலிய நாடுகளில் பரவி அங்கு காணப்படும் கோவில்களிலும் விக்கிரகங்களை கொண்டும் இவற்றை நாம் அறிய முடிகிறது. 

ராஜேந்திரனின் கப்பற்படை பண்ணை என்னும் நகரில் தாக்குதல் நிகழ்த்தியது. பண்ணை போரும் ராஜேந்திரனுக்கு வெற்றியை அளித்தது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள ஊராகும். இக்காலத்தில் பனி எனவும் பனை எனவும் இரண்டு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அடுத்து சோழப்படை மலையூரக தாக்கியது. மலையூரும் ராஜேந்திரனுக்கு வெற்றிமாலை சூட்டியது.  மலையூரில் மலையூ எனும் பெயரில் ஒரு நதி ஓடியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மலையூர் சுமத்திராவின் கீழ்க்கரையில் அமைந்திருந்ததா, இல்லை மேல் கரையில் அமைந்திருந்ததா, இல்லை தென் பகுதியில் அமைந்திருந்ததா என்பது பற்றி மாறுபட்ட கருத்து உள்ளது. இருப்பினும் சிலர் இது பாலம் பாங் மாநிலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது மலேசியாவின் ஒரு பகுதி என்றுகே.ஏ.என். சாஸ்திரி கூறுகிறார்.   கே கே பிள்ளை அவர்கள் இது ஸ்ரீ விஷயம் அல்லது பண்ணையாதல்என்று குறிப்பிடுகிறார். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில், பழைய சிங்கப்பூர் நீர்ச்சந்தியின் வடக்கு கறைகளில்  அமைந்திருந்ததாக கூறுதல் பொருத்தமானதாகும்.    

        ஆலந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் இது ஜாம்பி எனும் நாடு என்று கூறுகிறார். இவற்றின் பயனாக ஜாவாவிலும், சுமத்திராவிலும் தமிழ் நாட்டு பாணியில் சிவன் கோவில்கள் கட்டப்பட்டன. சேர, சோழ, பாண்டியரின் பெயர்களைப் அங்கு உள்ள இனத்தினர் சூட்டிக்கொண்டனர். இதனை திரு எஸ்.ஜே குணசேகரன் அவர்கள் தமது தென்கிழக்கு ஆசியாவில் முந்திய தமிழ் நாகரிகம் என்ற நூலின் கண் சுமத்ராவில் உள்ள சில இனப் பிரிவினர்கள் பெயர் தென்னிந்தியாவின் அதிலும் சிறப்பாக சோழ, பாண்டிய, மலையாளம் என்னும் தமிழருடைய பெயர்கள் ஐயப்பாடு இன்றி கிடைக்கிறது, என்பதைக் கூறுகிறார்.  

இக்கருத்தினையே தென்னிந்திய வரலாற்று அறிஞர் பேராசிரியர் திரு கே என் நீலகண்ட சாஸ்திரி அவர்களும் சுமித்ரா காடுகளிலுள்ள வேட்டையாடுகின்றனர் தியாக்ஸ் இனத்தருள் இன்றும்  தம்மை பாண்டியர், சோழர்,தேளாவி,மலையாளி என சொல்லிக் கொள்கின்றனர் என்று கூறுகிறார்.  

ராஜேந்திரன் தன் கடற்படை வலிமையால் ஸ்ரீவிஜய நாட்டின் ஆட்சிக்குட்பட்ட மாயிருடிங்கம், இலங்காசோகம் எனும் இடங்களை வென்று அங்கு தன் புலிக்கொடியை  பறக்க விட்டான்.  மாயிருடிங்கம் என்பது ஆழமான கடல் நீர் பாதுகாப்பு கொண்ட மலேயாவின்  மத்தியில் அமைந்த நகரமாகும்.   செள-ஜீ-குவா இதனை ஜி-லோ-டிங் என்று கூறுகிறார். இது மலேயாவில் லீகாருக்கு அருகில் இருந்தது.

இலங்கா சோகம் என்பது சீன நாட்டினரால் லிங்-யா-சென்-கியா  என அழைக்கப்படுகிறது.   இது மலாயா நாட்டில் உள்ள கெடாவிற்க்கு தெற்குப் பக்கத்தில் உள்ளது. வியக்கத்தக்க வெற்றிகள் பல பெற்ற ராஜேந்திரன் அடுத்து அதே கெடா நாட்டில் உள்ள பப்மாளத்தை தாக்கி தன் அடிமைப்படுத்தியது.     இது பாப்பலமா என்னும் பெயரால் குறிப்பிட்ட நாடு என்று மகாவம்சத்தில் திரு வெங்கையா அவர்கள் எழுதுகிறார். ஈழவேந்தன்  முதலாம் பராக்கிரமபாகு என்பவன் தமிழ்நாட்டு தானே தலைவனாம் ஆதிச்சன் என்பவனை அருமணதேசத்திற்கு எதிராக படையுடன் அனுப்பிய போது, அவன் பாப்பலமா என்ற இடத்தில் இறங்கினான் என்பதை மகாவம்சம் குறிப்பிடுகிறது. எனவே இது கீழ் பர்மாவில் உள்ள தலைங்க் நாட்டினை சேர்ந்தது என்று வரலாற்று அறிஞர் திரு வெங்கையா அவர் கூறுகிறார்.

பாவேந்தன் ஒட்டக்கூத்தரும் மாளுவம் சோணகம் பப்பளம் என்று குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழல் குறிப்பிட்டதால்.   பப்பளம் என்ற நாடு ஒன்று இருந்ததை அறிய முடிகிறது. பப்பளம்பப்பாளம் இரண்டும் ஒன்றே என்பது தெளிவு. எனவே பப்பளம் என்பது கிரா.  பூசந்திக்கு அண்மையில் அமைந்திருத்தல் வேண்டும் என்பது அறிஞர் கருத்தாக முடிகிறது.

இலிம்பங்கம், வளைப்பந்தூர்  ஆகிய இவ்விரு இடங்களும் இருந்தன என்பது பற்றி எவருக்கும் தெளிவாக தெரியவில்லை.   அடுத்து  ராஜேந்திரனது வலிமைமிக்க படை, தலைத்த கோலத்தை தாக்கி பகைப்படையினை உலையச்  செய்தது.     அந்நகரம் பிடிபட்டதால் மலாயா நாட்டின் மேலைக்கரை முழுவதும் பரவியது.    தக்கோலம்.  என்பது ஒரு காலத்தில் வாணிக புகழ் பெற்ற நகரமாக விளங்கியது.   கிரேக்க அறிஞர் தாலமி தகோலா என குறிப்பிட்டுள்ளதால் உறுதியாகிறது.   தலைத்தக்கோலம் என்பதும் தக்கோலா என்பதும் ஒரே இடத்தை தான் குறிக்கிறது.

கிரா பூசந்த்திற்கு தெற்கே அமைந்துள்ளதும்.  மலாயாவின் மேல் கரையில் அமைந்துள்ளதுமான  தகோபா மாவட்டத்தின் தலைநகராகிய தகோபா நகரமே  தக்கோலம் என அழைக்கப்பட்டுகிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.  சிலப்பதிகாரத்திற்கு உரை கண்ட  அடியார்க்கு நல்லார்,    கிடாரவன், தக்கோலி, அருமணன் போன்ற வார்த்தைகளை பண்டைநாளில் தக்கோல நாட்டிலிருந்து அகில் தமழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது என்பதும். தமிழ் நாட்டிற்கும், தக்கோல நாட்டிற்கும் பலகாலம் கடல் வாணிகம் இருந்தது என்பதையும் கூறுகிறார்.

தமாலிங்க நாட்டு வெற்றி

      சீன நாட்டு நூல்களில் தன்– மாலிங்  என குறிக்கப்பட்டுள்ள நாடும் ராஜேந்திரன் மெய்க்கீர்த்தியில் மாதமாலிங்கம் என்று  குறிக்கப்பட்டுள்ளதும் ஒன்றே. இலங்கா தேசத்திற்கும்,   தமாலிங்கத்திற்கும் தரை வழியும், கடல் வழியும் இருந்தன  என்றும், கடல் வழியே சென்றால் ஆறு நாள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று சீன நூல் கூறுகிறது. தன்-மாலிங் என்பது மலாயாவின் கீழ்க்கரையில் உள்ள குவாண்டன் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்த. தெமிலிங்(அ) தெம்பலிங் என்ற நாடு என்பதை அறிஞர்  செரின கூறியுள்ளார்.  மாதமாலிங்கம், மலேயா  தீபகற்பத்தில் பண்டன் விரிகுடாவிற்கு அண்மையில் இருந்ததாக திரு கே.  கே பிள்ளை அவர்கள் கூறுகிறார்.  

      தக்கோல வெற்றிக்குப்பின் ராஜேந்திரனின். கலங்கல் தமாலிங்க கரையில் இறங்கின.  தமாலிங்க படையும், சோழரது படையும் போர் நிகழ்த்தின.   இரு படைகளும் மலையோடும் மலை மோதுவது போல் கடும்போர் செய்தது. இருப்பினும் சோழரது படையில் வலிமைமிக்க தாக்குதலை, தாங்க முடியாத தமாலிங்க படை பின்வாங்கத் தொடங்கியது. இதில் சோழப் படை வெற்றி பெற்றது. தமாலிங்க நாடும் தமிழனது வெற்றிப் புகழ் பாடியது.

     தமாலிங்க நாட்டினை தமதாக்கி கொண்ட ராஜேந்திரன்.   இலாமூரிதேசத்தை நோக்கி தன் கடற்படையினை  செலுத்தினான். சோழர் படை இலாமுரி தேசத்தின் கடற்படையில் இறங்கிற்று.   இதைக் கேள்வியுற்ற இலாமுரி தேசப்படை சோழர்களை எதிர்த்து நின்று போரிட்டது.   சோழப் படையினர் வீரஆவேசம் கொண்டு எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடும் படிகடுமையாக தாக்கினர்.   இலெமூர் தேசமும் ராஜேந்திரனுக்கு வெற்றிமாலை சூடியது.   

        இலாமுரிதேசம், சுமத்ரா தீவின் வடபகுதியில் இருந்த நாடு என்பதை அறுதியிட்டு கூறுவர். இதனை இத்தாலி நாட்டுப் பயணியான மார்கோபோலோ, லம்பிரி எனவும், அந்நாட்டு புவியியல் வல்லுநர்கள், லாமுரி  எனவும், சீன நாட்டினர்,  லான்வூலி எனவும் கூறுகிறார்கள். இவ்விதம் பல நாட்டினரால் குறிக்கப்பட்டுள்ள சிறப்பும் கொண்டதாக விளங்கிய இலாமுரி தேசம் இப்போது, லம்ரி  என அழைக்கப்படுகிறது.    

         மேலே. கூறப்பட்ட நாடுகளில் பெற்ற வெற்றிகள் பலவும் ராஜேந்திரன் அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தியதை சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கிறது. இந்நாடுகள் அனைத்தும் மலாயாநாட்டையும், சுமத்ரா நாட்டையும் சார்ந்தும், சூழ்ந்தும் மிகுந்த பகுதிகளாகும்.  இவை மாபெரும் நாடாகிய ஸ்ரீவிசய நாட்டின் ஆளுமைக்கு உட்பட்டு, சங்கராம விஜயதுங்கவர்மன் ஆளப்பட்டு வந்தது என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது. ஸ்ரீவிஜய நாடு சுமத்திராவில் அமைந்து, சீரும்  சிறப்பு மிக்கதாக விளங்கியதை வரலாறு கூறுகிறது. 

முதலாம் ராஜராஜன் காலத்திலும், சங்கிராம விஜயதுங்கவர்மனே மன்னனாக திகழ்ந்தான்.  ஸ்ரீவிசய நாட்டின் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளாக குறிப்பிட்டுள்ள 15 நாடுகளும், ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளதாக மெய்க்கீர்த்தியில் குறிப்பிட்டுள்ள  நாடுகளும் ஏறத்தாழ ஒன்றாக உள்ளது.    ராஜராஜனுடைய வெற்றிகள் வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பல கலம்  செலுத்தி கடல் கடந்து கடாரம் நாட்டின் பல பகுதிகளில் வென்று, அங்கு வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்திரன் ,கடல் அலைகள் புகழ்பாட தாய்நாடு திரும்பினார்.

முதலாம் ராஜேந்திரனின் கடல் கடந்த வெற்றி பல நாடுகளை சென்று பரவியது. இவன் கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர், பிரெஞ்சு நாட்டு மாவீரன் நெப்போலியன் போன்றோருக்கு இணையாக நிற்கிறான். பல காலங்களாக சோழர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட ஈழத்தவர்,    மேலைச் சாளுக்கியர், கீழைச் சாளுக்கியர், மலை நாட்டவர் போன்றோர் ராஜேந்திரனின் இறுதி காலத்தில் புதுப் பொலிவும், புத்துணர்ச்சியும் கொண்டு எழுந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழப்பமும், கொந்தளிப்பும் விளைந்தது.  அக்குழப்பகங்களையும்,   புரட்சிகளையும் அடக்கி ஒடுக்கும் பணியினை மேற்கொண்டார் முதலாம் இராஜேந்திரனின் மகனான முதலாம் ராஜாதிராஜன்.  இவன் இப்புரட்சிகளை அடக்கிய நிகழ்ச்சிகளை இவனது மெய்க்கீர்த்தி விரிவாக கூறுகிறது.

இவன் படை நடத்திச் சென்று கலகங்களை ஒடுக்கி அமைதியை நிலைநாட்டியதால்.    ராஜேந்திரன் தன் தனது இறுதி காலத்தில் போர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படவில்லை.   தன் மகனின் ஆண்மையையும், ஆற்றலையும் கண்டு ராஜேந்திரன் எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டான். இது போன்ற  செயல்கள் ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் ராஜேந்திரன் மேற்கொண்ட செயல்களுடன் ஒப்புடையதாக இருந்தது. இது போன்ற செயல்களினால் தன் தந்தையின் காலத்தே ராஜாதிராஜன், திறமான போர்ப்பயிற்சி பெற்றான்,  போர் மேற்கொண்டான். தனக்கு தன் தந்தையான ராஜராஜன் போர்செயல்களிலும், அரசியல் துறைகளிலும் நற் பயிற்சி அளித்தது. போலவே, முதலாம் இராஜேந்திரனும் தன் மகனான ராஜாதி ராஜனை போர்களிலும் ,அரசியல் ஆட்சித் துறையிலும் ஈடுபடுத்தி நல்ல பயிற்சி கொடுத்தான்.  

தன் வாழ்நாளில் தன் மகன் போர் மேற்கொண்டு திக்கெட்டும் வெற்றி முரசு கொட்ட ராஜேந்திர சோழனும் விருப்பம் கொண்டான்.   அரசியல் திறனும், கூர்த்த மதியும் கொண்ட ராஜேந்திர சோழன் பாண்டியரையும், சேரரையும் வென்று.   அவர்கள் நாடுகளை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான் தன் மகனாகிய சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் மதுரை மாநகரின் கண் புதியதாக அமைக்கப்பட்ட அரண்மனையில் அவனுக்கென்று ஒரு ஆட்சியை ஏற்படுத்திக் கொடுத்தான்.  

 ராஜராஜன் பாண்டிய நாட்டினையும், சேர நாட்டினையும். வென்று தன் அடிமைப்படுத்தினான்.   இவன் அவைகளை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டானே தவிர அங்கு தன் அரச பிரதிநிதிகளை நியமித்து ஆட்சிபுரிய தவறிவிட்டான்.   எனவே, தான் பாண்டிய நாட்டில் மறுபடியும் கிளர்ச்சி ஏற்பட்டது. இதனை கண்ட  ராஜேந்திரன் தன் மகனை அங்கு சோழ பிரதிநிதியாக அனுப்பி நல்லாட்சி நிலவ வழி வகுத்தான். இராஜதிராஜன்,  தன் தந்தையினும் மேம்பட்ட அரசியல் திறன் கொண்டவனாக விளங்கினார்  .

ராஜேந்திரன் புதல்வன் ராஜாதிராஜன் நடத்திய போர்கள்

பாண்டியருடன் போர்

 சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன், பாண்டிய பகுதி அனைத்தையும் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். மானாபரணன்,  வீரகேரளன் சுந்தரபாண்டியன் போன்ற மன்னர்களும் பாண்டிய நாட்டை சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக ஆண்டு வந்தார்கள். நாட்டுப்பற்றும்,  வீரமும் மிக்க பாண்டியர்கள் தம் நாடுகளை  சோழர் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து தனியாக ஆட்சி செய்ய ஆர்வம் கொண்டனர்.    அதனால் உள் நாட்டில் பல குழப்பம் விளைவித்து, நாட்டின் அமைதியும் ஒழுங்கும் கெடுக்கப்பட்டது. பாண்டியர்கள் புரட்சி கொடி உயரத்தை எட்டியதும்.     

இதனைக் கண்ட சோழ இளவரசன் ஆகிய ராஜாதிராஜன் பெரும் சினம் கொண்டான்.   வீரமிக்க சோழன்  பாண்டி நாடு நோக்கி புறப்பட ஆணையிட்டான்.   புலிக் கொடி ஏந்திய சோழப்படை பாண்டிய நாட்டை அடைந்தது. பாண்டிய படையை எதிர்த்து நின்று கடும்போர் புரிந்து சோழப் படையின் தாக்குதலில் முன் நிற்க முடியாமல். பாண்டிய படை நிலைகுலைந்து ஓடியது.  தன் உடலில் கடைசிப் சொட்டு குருதி உள்ளவரை கடும் போர் புரிந்த பாண்டிய வேந்தர்களாம் வீரகேரளனும், மானாபரணனும் போர்க்களத்திலேயே உயிரைவிட்டு வீரமரணம் அடைந்தனர்.   போர்க்களத்தில் பெரும் வீரம் விளைவித்த பாண்டிய வேந்தனாம் சுந்தர பாண்டியனோ தன் முடியையும், குடையையும், வாலையும், வீரத்தையும் போர்க்களத்தை போட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்துடன், தலைவிரி கோலத்துடன் ஓடி ஒளிந்து விட்டான்.

இவ்விதம் போர்க்களத்தில் இருந்து ஓடி ஒளிந்த சுந்தரபாண்டியன் முல்லையூர் எனுமிடத்தில்  தஞ்சம் புகுந்தான். ராஜாதிராஜன் பாண்டிய நாட்டின் குழப்பத்தையும் புரட்சியிணையும் எவ்வாறு அடக்கி வெற்றி பெற்றான் என்பதை நம்மால் உறுதிபடக் கூற முடியவில்லை.  இருப்பினும் இந்நிகழ்ச்சியினை குறிக்கும் கல்வெட்டுகள் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை.     இப்போர் நிகழ்ச்சிகளை நாம் இராஜராஜனின் மெய்க் கீர்த்திகள் மட்டுமே அறிய முடிகிறது. எனவே, பாண்டிய நாட்டில் கலகம் விளைவித்த 3 பாண்டியர்களையும் போரில் வென்று அமைதியை ஏற்படுத்தும் பணியில் ராஜாதிராஜன் வெற்றி பெற்றார்.   அதுமட்டுமல்லாது  பாண்டி நாட்டு மக்களின் விடுதலை வேட்கையை அடியோடு எடுக்கப்பட்டது, என்பதையும் அறியமுடிகிறது. நிகழ்ச்சியை ராஜராஜன் மெய்கீர்த்தி கூறுகிறது.

 மலைநாட்டுப் போர்

தன்மானமும் தன்னாட்சி வேட்கையும்  கொண்ட பாண்டியர்களைப் போலவே. சேர நாட்டு மக்களும் விடுதலை வேட்கை கொண்டு சோழர் பிடியிலிருந்து விடுபட எண்ணம் கொண்டிருந்தனர்.  தங்களால் இயன்றவரை படைகளை ஒருங்கிணைத்து, சோழர் ஆட்சிக்கு எதிராக புரட்சி கொடி ஏற்றினர். சேரநாடு சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பல குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.  அவர்களில் மிகவும் புகழ்  கொண்டு ஆட்சி புரிந்தவன் மூவர் திருவடியாகிய கண்டன் காரவருமன் என்ற மன்னன் ஆவான்.

இவன் எலி  நாட்டுக்கு அண்மையிலுள்ள நாட்டை ஆண்டு வந்தான். இராமகுட நாட்டு மன்னர்கள் மூசிக மரபினை சேர்ந்தவர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டனர்.   சத்ரிய மன்னர் குலத்தினர் அனைவரும் கொன்று அழித்த பரசுராமரால் இவர்கள் முடிசூட பெற்றதால் பெருமை சான்றுகளாய் கூறிக்கொள்கிறார்கள்.  . சேரநாட்டில் சோழர் ஆட்சிக்கு எதிராக சேரர்கள் திரண்டிருந்த செய்தியை கேள்வியுற்ற ராஜேந்திர சோழ தேவன் தன் மகனும்  ராஜாதி ராஜனை சேர நாட்டின் மீது ஏவினான்.

ராஜாதி ராஜனும் பெரும் படையைத் திரட்டிக்கொண்டு சேரநாடு நோக்கி சென்றான் சோழர் படையினர் ஆறுகளையும் காடுகளையும் கடந்து சென்ற போதிலும் களைப்புறாது, மன உறுதியுடனும் உற்சாகத்துடனும் சென்றனர். சேர நாடு நோக்கிச் சென்ற சோழர் படை முதன்முதலில் வேணாட்டின்  மீது தாக்குதல் நிகழ்த்தியது.    வேணாட்டு மன்னன் கூபக நாட்டு மன்னனின் பேருதவியை  பெற்று சோழப் படையை எதிர்த்து நின்றான். சோழர் படையினை வெல்லும் பொருட்டு மன்னன் மேற்கொண்ட முயற்சிகள் வீணாயிற்று. இறுதியில் வேணாட்டு மன்னன் செரிக்களத்தே மாண்டான்.       

அடுத்து, வேணாட்டு மன்னனுக்கு படையுதவியளித்த. . கூபக நாட்டு மன்னனை பழிவாங்க ராஜாதிராஜன் உறுதி பூண்டான். கூபக நாடு என்பது தென் திருவாங்கூர் பகுதியை கொண்ட நாடு ஆகும். ராஜாதிராஜன் கூபக நாட்டின் மீது தாக்குதல் நடத்தினான்.   சோழ படையுடன் எதிர்த்து போர் செய்த பல நாட்டுப் படை பின்வாங்கி ஓடிற்று.  கூபக நாட்டு மன்னனும் அச்சத்தினால் வீரம் குறைந்து புறமுதுகு காட்டி ஓடி விட்டான்.  இதனை ராஜாதிராஜன் மெய்க்கீர்த்தி ,

“வேணாட் டரசைச் சேணாட் டொதுக்கிக் 

கூவகத் தரசை சேவகத் தொலைத்து”

அதாவது, “வேணாட்டு அரசனைக் கொன்று அவனுக்கு உட்பட்டிருந்த கூவகத்த ரசனை விடுவித்து” என்ற பொருள் கொள்ளப்படுகிறது.

பண்டாரகர் மா.இராசமாணிக்கரும் சோழர் வரலாறு என்ற நூலில் “வழியில் வேணாட்டு  அரசனை தாக்கி கொன்று,கூபக நாட்டு அரசனை விடுவித்தான்” என்று கூறியுள்ளார். இவ்விதம் பொருள் கொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.     வேணாட்டு மன்னனைக் கொன்றுகூபகமன்னனின் வீரம் கெடுத்து என பொருள் கொள்வது சிறப்புடையது. ராமகூட நாட்டின் மன்னனான மூவர் திருவடியான கண்டன. காரிவருமன் 59 ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று ஏறி மலைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.   இது கிபி 15ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஆகும்.   இக் கல்வெட்டில் ராஜேந்திர சோழன் சமய சேனாபதி என்பவனைப் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. ராஜாதி ராஜனுடன்  போரிட்ட இராமகுட நாட்டு மன்னன் காரிவருமனே என அறியமுடிகிறது. இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியில் ராம கூட நாட்டு மன்னனின் பெயர் குறிக்கப்படவில்லை.

வேணாட்டு மன்னனையும் கூப நாட்டு மன்னனையும் தோல்வியுறச் செய்த ராஜேந்திரன், இறுதியாக சேர நாட்டின் கடற்கரைப் பட்டினமான காந்தளூர் சாலை மீது தன் தாக்குதலை நடத்தினான். காந்தளூர்ச் சாலையில் கல மறுத்தான்.  தன் வீரமிக்க பாட்டனையும் தந்தையும் போல் இவனும், காந்தளூர்ச்சாலை கல மறுத்தருளிச். சோழர் வரலாற்றில் மங்காதப் புகழ் பெற்றான்.  இப்போ நிகழ்ச்சியை இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியில்,

வேணாட். டரசனாக சோணாட் டொதுக்கி  

மேவபுக.  ழிராகுட. மூவர்கெட முனிந்து 

மிடல்கெட வில்லவன் குடர்முடிக் கொண்டுதன்

நாடுவிட் டோடிக் காடுபுக் கொளிப்ப

வஞ்சியம் புதுமலர் மலைந்தாங் கெஞ்சலில்

வேலைகெழு காந்தளூர் சாலை கலமறுத்து,

ஆதலால், ராஜேந்திர சோழதேவனின் பிந்திய ஆட்சி காலத்தில் பாண்டிய, சேர நாட்டின் பகுதியை ஆட்சி புரிந்து வந்தவன் சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்றும், அவரது காலத்தில் ஏற்பட்ட கலகங்களை அடக்கி, ஒடுக்கி அமைதியை நிலைநாட்டி. தன் தம்பிக்கு பேர் உதவி செய்தவன்  ராஜாதிராஜன் என்றும் அறியமுடிகிறது. 

ராஜேந்திரன் ஆட்சியின் தொடக்க காலத்தில் ஈழப் படையெடுப்பின் விளைவாக ஏறத்தாழ பத்து ஆண்டுகள், ஈழ நாடு முழுமையும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஈழவேந்தன் ஐந்தாம் மகிந்தனின் மகன் ஆகிய காசிபன் என்பான் கி.பி 1029 இல் உருவான நாட்டை கைப்பற்றி விக்கிரமபாகு என்ற பெயருடன் ஆண்டு வந்தார். இவன் ஆட்சி கி.பி 1014 வரை நீடித்தது. இவன் ஈழ நாடு முழுமையும் அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என திட்டம் தீட்டினான். சோழருடன் போர் மேற்கொண்டான். கி.பி.   1041 –இல்.   இவன் போரில் இறந்து விட்டான்.     இவன் இறந்து விட்டதால் ராஜாதிராஜன் இவனது அரச சின்னங்களை கவர்ந்து கொண்டான்.

சோழர் கல்வெட்டுகள் மேற் கூறிய செய்திகளைக் கூறுகின்றன. ஆனால், இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் சோழர் ஆட்சியில் இருந்து ஈழம் முழுவதையும் மீட்க திட்டமிட்டிருந்த காசிபன் நோய்வாய்ப்பட்டு இறந்தான் என்று குறித்துள்ளது.  ஆதலால், கி.பி  1014ல் விக்ரமபாகு இறந்திருப்பான் என்பது உறுதியாகிறது.  விக்ரமபாகுவிற்கு பின் கித்தி என்ற வேந்தன்  உரோகண  நாட்டினை 8 –நாட்கள் ஆண்டான். கித்திக்கு பின் மகாலான.  கித்தி  எனும் வேந்தன் மூன்றாண்டு காலம் உரோகண நாட்டை ஆண்டு வந்தான்.  

ஈழ படையணி ஒன்று திரட்டி சோழனை எதிர்த்தான். ஆனால்,  போரிட்டு படுதோல்வி அடைந்தான்.   தன்மானம் மிக்கவன் ஆதலால் அவமானத்தை தாங்கிக் கொள்ள இயலாது தன் கையாலேயே தன் கழுத்தை அறுத்துக்கொண்டு.    கி.பி 1044 இறந்துவிட்டான்.     வெற்றி பெற்ற சோழர் படை அவனது அரசமுடிவினையும், விலையுயர்ந்த அணிகலன்கள், அரும்பொருட்கள், போன்றவற்றை கைப்பற்றி சேரநாட்டு அனுப்பிவிட்டனர்.  இச்செய்திகளைப் பற்றி சோழ மன்னர்களின் கல்வெட்டுகளில்  எவ்வித குறிப்பும் காணப்படவில்லை. மகாவம்சம் நூல் விளக்கமாக கூறுகிறது.

தந்தை ஈழத்தில் இறந்துபட்ட செய்தி கேட்ட விக்கமபண்டு துளுவ நாட்டில் இருந்து புறப்பட்டு ஈழநாடு வந்தடைந்தான். இவன் கி.பி 1044 –இல் உரோகண நாட்டின் வேந்தனாக முடி சூடிக்கொண்டான்.    இவன் தாய் வழியில் பாண்டியனையும் தந்தை வழியில் ஈழத்தவனையும் முன்னோனாக பெற்றவன். இவன் ஈழநாட்டில் வசிப்பதற்கு அஞ்சி துளுவ நாட்டில் வாழ்ந்து வந்தான். விக்கம் பண்டு அயோத்தியை ஆண்டு வந்த சகதீபபாலன் என்பவனோடு செய்த போரில் இறந்து விட்டான். இலங்கை வேந்தனை வென்ற அவனையும் சோழர்கள் கொன்றனர். ராஜேந்திர சோழனின் பிற்காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது ஈழப்படை எழுச்சி ராஜாதிராஜனால் மேற்கொள்ளப்பட்டு முடிவுக்கு வந்தது. ஈழ நாட்டினர் நாட்டு பற்றில் சிறந்தவர்களாய் இருந்தனர், ஆனால்  ஒற்றுமை.  இன்மை காரணமாக சோழர் படையை வென்று தன் ஆட்சியை நிறுவ முடியவில்லை. இருப்பினும் சோழர்களுடன் தன்னை விடுவிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது சிறப்புக்குரிய ஒன்றாகும். 

மேலைச் சாளுக்கியர் போர்

இந்த மேலைச் சாளுக்கிய போரானது நெடுங்காலமாக நிகழ்ந்து வந்த ஒன்றாகும்.   ராஜேந்திரனது இறுதி காலத்தில் தொடர்ந்து நடைபெற்றது. சோழ சாளுக்கிய போர் தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ராஜேந்திரனது  தொடக்க காலத்தில் சோழர்களை எதிர்த்து போர் செய்த சாளுக்கிய மன்னனான இரண்டாம் ஜெயசிம்மன் கி.பி1042–இல்  இறந்துவிட்டான்.    இரண்டாம் ஜெய்சிங்கனுக்குப்பின் அவன் மகனான முதலாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடா பட்டான்.   ஆகவமல்லன்,திரைலோக்கிய மல்லன்  என்ற பெயர்களால் அழைக்கப்படுவான்.

குறிப்பாக சோழர் கல்வெட்டுகளில் இவன் ஆகவமல்லன் என்று குறிக்கப்படுகிறான்.    ஆகவ மல்லன் என்பதன் பொருள் பெருவீரன் என்று அர்த்தம். தனது சிறப்புப் பெயருக்கு ஏற்ப ஆகவமல்லன் வீரத்திற்க்கு  எடுத்துக்காட்டாய் விளங்கினான்.  திரைலோக்கிய மல்லன் சோழனான மத யானைக்கு சிங்கம், கலிங்க அரசன் ஆன கரு மேகத்திற்கு புயல், பாஞ்சால அரசன் ஆகிய இருளுக்கு சூரியன், மகத   அரசனான ஆரண்யத்திற்கோர் தீ, மாளவ அரசனான மலைக்கோர் வஜ்ராயுதம்,   கேரள அரசனாகிய பாம்புக்குக் கருடன், நேபாள அரசனான கடலுக்கு ஊழிக்கால நெருப்பு,  என கல்வெட்டுகள் பல மன்னர்களை புகழ்ந்து கூறுகிறது.

மாவீரனான ஆகவ மல்லன் பட்டஎய்தியவுடன் போச மன்னனின் தலை நகரத்தை முற்றுகையிட்டு வென்றான். அம்மன்னனை நாட்டை விட்டே விரட்டி விட்டான்.  சேதிநாட்டை அழித்து அதன் மன்னனான கருணனை தோற்கடித்தான். இவன் துங்கபத்திரைக்கு தெற்கே சோழநாட்டின் உட்பகுதிகளில் ஊடுருவல் செய்ததோடு மட்டுமல்லாமல், சோழர்களின் அரசிருக்கையை தானாமான காஞ்சிபுரத்தையும் தாக்கினான்.   

இவன் கீழைச்சாளுக்கியரின் தலைநகரான வேங்கியை தாக்கிப் பிடித்துக்கொண்டான்.   ஆகவமல்லன் போர்ச் செயலைக் கேள்வியுற்ற ராஜேந்திரன் சிங்கமென எழுந்தான். தன் மகனாகிய ராஜாதி ராஜனிடம் பெரும்படையினை ஒப்படைத்து ஆகவ மல்லனின் கொட்டத்தை அடக்கி பணிந்தான்.  சோழர் படை அணிவகுத்து நின்றது.  சோழநாட்டின் மாவீரர்கள் மேலைச்சாளுக்கிய நாடு நோக்கி விரைந்தனர். 

ராஜாதிராஜன் வீர ஆவேசம் கொண்டு படைக்கலம் ஏந்தி பட்டத்து யானை மீது அமர்ந்தான் விரைந்து போர்க்களம் நோக்கி புறப்பட்டான்.     ஆகவ மல்லனை வெல்லாமல் திரும்பமாட்டேன் என சூளுரை உரைத்தான்.  பரந்து நின்ற பெரும் படைகளின் முன்னணியில் வந்து நின்று எதிரிகளின் இடையில் இடி என முழங்கினான். மின்னல் என தாக்கினான்.    இலக்குசுரம் என்ற பட்டினம் தீக்கிரையாக்கப்பட்டது. 

இலக்குசுரம் எனும் பட்டினம் கொப்பத்துக்கு அருகில் அமைந்ததும், ஆகவ மல்லனுக்குச் சொந்தமானதும், புலிக்கரை சார்ந்ததுமான நகரமாகும். இந்நகரம் இராஜாதிராஜனின் தாக்குதலால் உருக்குலைந்து தரை மட்டமானது. அடுத்து, சோழப்படை நைசாம் மாநிலத்தின்  சிக்கந்தராபாத்திலிருந்து, 42 கல் தொலைவில் உள்ளதான கொள்ளிப் பாவையை எரியூட்டியும், கம்பிலித் தோட்டத்தையும் அதிலுள்ள அரண்மனையும் தரைமட்டமாக்கினர். இவ்வெற்றிகளின் நினைவாக வெற்றித்தூண்  ஒன்றையும் நிலை நாட்டினான். 

(முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 2 படிக்க)

0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://www.google.com/recaptcha/api2/anchor?ar=1&k=6Ldgl8UgAAAAAKj2Eucski1spAdDtpdfPEwUeQQk&co=aHR0cHM6Ly9oZXJpdGFnZXIuaW46NDQz&hl=en&v=Trd6gj1dhC_fx0ma_AWHc1me&size=invisible&cb=tcsr883rne4x

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply