பெரியார் பெருமை பெரிதே!

பெரியார் பெருமை பெரிதே!

தேமொழி

Dec 19, 2020

siragu periyar1

இந்த நாளில் அன்று!….

சென்னை தியாகராயர் நகரில், டிசம்பர் 19, 1973 அன்று, தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை இரவு 10 மணிக்கும் மேல் தொடர்ந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வரும் அடுத்த ஆண்டு 1974 ஜனவரியில் நடத்தத் திட்டமிட்ட “சமுதாய இழிவு ஒழிப்பு” என்ற கிளர்ச்சியின் நோக்கம் மற்றும் தேவை என்ன என்பதை விளக்கி, அதில் மக்களின் கடமை என்ன என்று சிந்திக்கச் சொல்லி சமுதாய இழிவு ஒழிப்பு கிளர்ச்சியில் பங்கேற்க அவரது தொண்டர்களை (தோழர்களை) ஆயத்தமாக்குகிறார். தந்தை பெரியாரின் இந்த இறுதிப் பேருரையை, ‘மரண சாசனமாகவே அமைந்துவிட்ட தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை’ என்றே பலரும் குறிப்பிடுவதை அறிய முடிகிறது. பெரியாரின் இறுதி உரையின் வரலாற்றுப் பின்னணி குறித்த அறிமுகம் இங்கு தேவையாகிறது.

தந்தை பெரியார் 1957 நவம்பர் மாதம் 4-ஆம் நாள் தனது சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு மக்களிடம் அழைப்பு விடுத்தார். அப்பொழுது அவர் 78 வயது முதியவர். “நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும். இல்லையென்றால், நம் மக்களுக்கு உணர்ச்சியூட்டி விட்டுச் சாகவேண்டும். இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள், பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது. சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம் என்று அறிக்கை வராவிட்டால் அரசாங்கச் சட்டப்புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம்” என்ற புரட்சிக் குரலை எழுப்பினார். அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26 ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார். சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு கூறப்படவில்லை. சாதிகளின் ஏற்றத் தாழ்வு நிலை மதப்பாதுகாப்புப் பிரிவுகளின் உதவியுடன் தொடர்கிறது என்று சுட்டிக் காட்டி இந்திய அரசியல் சட்டத்தினை எரிக்கவும் செய்தார். அப்பொழுது இந்தியாவில் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது குறித்துச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, தொடர்ந்து தேசிய சின்னங்கள் அவமானப்படுத்துதல் தொடர்பான குற்றத்திற்குத் தண்டனை சட்டமும் இயற்றப்பட்டது.

கடவுள் மறுப்புக் கொள்கை பரப்பிய பெரியார், அதற்கு முற்றிலும் மாறாக, கோவில் நுழைவுப் போராட்டங்களையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற கோயில் கருவறை நுழைவுப் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தியவர். மனித உரிமை மீறலுக்கு எதிரான பெரியாரின் கலகக்குரல் அது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழியில்லை என்ற நிலை மாறவேண்டும் என்பதற்காக அவர் நடத்திய போராட்டங்களின் அடிப்படை அவரது சாதியொழிப்புக் கொள்கை.

மீண்டும், 1970 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று தமிழகத்தில் கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தினை அறிவித்தார் பெரியார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பெரியாரின் கோரிக்கையை ஏற்று சட்டமாக்குவதாக முதல்வர் கருணாநிதி உறுதியளித்து அப்போராட்டத்தினைக் கைவிடச் செய்தார். பார்ப்பனர் அல்லாதோரும் பயிற்சி பெற்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தினை 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்தார்.

இச்சட்டத்தினை எதிர்த்து பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்தனர். அவர்களில் சேஷம்மாள் என்ற பார்ப்பனரும் ஒருவர், ஆகவே அவர் பெயருடன் ‘சேஷம்மாள் வழக்கு’ என்று அந்த வழக்கு குறிப்பிடப்படுகிறது. தந்தை பெரியார் அரசியற் சட்டத்தினை கொளுத்தவேண்டும் என்று எந்த சட்டப் பிரிவுகளைக் காரணம் காட்டினாரோ, அதே பிரிவுகளை உதவிக்கு அழைத்திருந்தனர் வழக்குத் தொடுத்தோர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் வழங்கியுள்ள மதச்சுதந்திரம் மற்றும் வழிபாட்டுரிமை ஆகியவற்றில் தமிழக அரசு தலையிடுவதாகப் பன்னிரண்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் மார்ச் 15, 1972 அன்று தீர்ப்பளித்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி திரு. எஸ்.எம்.சிக்ரி மற்றும் திரு. ஏ.என்.குரோவர், ஏ.என்.ரே, டி.ஜி. பாலேகர், எம்.எச். பெய்க் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமைகோர முடியாது என்றனர். அதாவது அர்ச்சகர் தொழில் பரம்பரை தொழில் அல்ல. ஆனால், அர்ச்சகர் நியமனத்தில் ஆகம விதிகள் மீறப்பட்டால், அச்சட்டத்தினை எதிர்த்த பார்ப்பனர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தனர். தனது விடுதலை இதழில், “ஆபரேஷன் வெற்றி; நோயாளி மரணம்” என்று இந்தத் தீர்ப்பினைப் பற்றி தந்தை பெரியார் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தலையங்கத்தை எழுதினார். இதுதான் நான் என் வாழ்க்கையில் சாதிக்காத கடைசி விஷயம் எனப் பெரியார் சொல்லி இருக்கிறார்.

இந்த சாதி இழிநிலையை ஒழிக்க மீண்டும் போராட்டத்தில் இறங்கினார் பெரியார். “சமுதாய இழிவு ஒழிப்பு” என்ற கிளர்ச்சியினை 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்த தொண்டர்களைத் திரட்டினர். அந்த முயற்சியின் ஒரு பகுதிதான் சென்னை தியாகராயர் நகரில், புதன்கிழமை டிசம்பர் 19, 1973 அன்று இரவு தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை.

அவரது உரை சமுதாய இழிவு ஒழிப்பு அல்லது சாதி ஒழிப்பை நடைமுறை அளவில் தடை செய்யாத சட்டம் மீது கொண்ட எதிர்ப்பு என்றாலும்; வழக்கமான அவரது கடவுள் மறுப்புக்கொள்கை, சாஸ்திரம், சமயம் இவற்றைக் குறித்து கேள்வி எழுப்புவதும் உரையில் வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக: “நான் கேட்கிறேன், பெரிய மதக்காரனையே கேட்கிறேன். இந்து மதம் என்றால் என்ன அர்த்தம்? எப்ப வந்தது? எவன் அதற்குத் தலைவன்? என்ன அதற்குக் கொள்கை? அதற்கு என்று இருக்கிற சாஸ்திரம் என்ன?” என்று கேட்கும் அவர் தொடர்ந்து, “கடவுள் ரொம்ப அன்பானவர்; கருணையே உருவானவர் அப்படி என்கிறான். கடவுளைப் போய்ப் பார்த்தால், அந்தக் கடவுள் கையில் அரிவாள், கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம், ஈட்டி கொலைகாரப் பயல்களுக்கு என்ன வேணுமோ அதுவெல்லாம் கடவுள் கையில் இருக்கிறது. கடவுள் கருணையே உடையவர் என்கிறான். எந்தக் கடவுள் மனுஷனைக் கொல்லாதவர். அசுரனைக் கொன்றார், ராட்சசனைக் கொன்றார், மனிதனைக் கொன்றார், மூன்று கோடி பேரைக் கொன்றார், 5 கோடி பேரைக் கொன்றார் என்று கசாப்புக் கடைக்காரன் மாதிரிப் பண்ணிப் போட்டு, அவரைக் கருணை உள்ளவர் என்றால் எப்படி?” என்று கேள்விகளைத் தொடர்கிறார்.

அத்துடன் கடவுள் மறுப்புக் கொள்கை பேசும் பகுத்தறிவாளர்களான நாங்கள் வன்முறையாளர்கள் கிடையாது. சமயச் சார்புள்ளவர்களிடம்தான் வன்முறை அதிகம் என்பதை வரலாறு, இலக்கியங்கள் ஆவணப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டு; கடவுள் இல்லை என்கிறவனைக் கொல்ல வேண்டும் என்பது போன்ற வன்முறைக் கருத்துகளை சம்பந்தர், தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகியோர் பாடினார்கள். பௌத்தர்களை ஒழித்ததை கல்லில் வெட்டி வைத்துள்ளார்கள், சமணர்களைக் கழுவில் ஏற்றினோம் என்று ஒவ்வொரு ஆண்டும் இன்றுவரை விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாக வைத்துக் கடவுள் சங்கதி பேசினாலே கொஞ்சம் மரியாதையாகப் பேசுவோம்; மானத்தோடு பேசுவோம். பகுத்தறிவு இல்லாதவர்கள், கொஞ்சம் கடுமையாகத்தான் பேசுவார்கள்; நம்மைவிட மோசமாக.  உதாரணமாகச் சொல்கிறேன். நாலாயிரப் பிரபந்தம் பாடின ஆழ்வார்கள், தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடின நாயன்மார்கள், இந்தப் பசங்க சொன்னதைவிட நாங்கள் அதிகமாகச் சொல்வதில்லை. அதை மனசிலே வைத்துக் கொள்ளுங்கள். நாம் இவனைத்தான் திட்டுகிறோமே தவிர, இவனுடைய புத்தியைத்தான் திட்டுகிறோமே தவிர, அந்தப் பசங்க சொன்னதுபோல, அவர்கள் பெண்டாட்டி, பிள்ளைகளை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை.”

மேலும், மேலைநாடுகளின் கண்டுபிடிப்புகளான செயற்கை முறை கருத்தரிப்பு, விந்து-கருமுட்டை வங்கி, சோதனைக்குமாய் குழந்தை, நிலவிற்குச் சென்று வந்த அறிவியல் வளர்ச்சி, நவீன மருத்துவ கண்டுபிடிப்புகளால் சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பு, விமானம், தொலைபேசி போன்ற அறிவியல் வளர்ச்சிகள் பெரியாரைப் பெரிதும் கவர்ந்தன என்பதை அவர் உரையினால் தெளிவாக அறிய முடியும். அது போன்றவற்றில் நம்மவர்கள் பங்களிப்பு இல்லையே என்ற ஏக்கமும்; மாறாகப் புராணக் கதைகளை நம்பிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆற்றாமையும், புராணக் கதைகளை உருவாக்கி மக்களிடம் பரப்பும் கூட்டத்தினர் மீது எரிச்சலும் வெறுப்பும் அவர் உரையில் பன்முறை வெளிப்படுகிறது.

siragu oru koppai nanju2

அவரது உரை மிக எளிய சொற்களுடன் சிறு சிறு வாக்கியங்களாகவும் மக்களைச் சென்று அடையும் வண்ணம் அமைந்துள்ளது. சாதாரண பேச்சு வழக்கில் மக்களிடம் நேருக்குநேர் பேசும் உரையாடல் முறையில் அமைந்துள்ளது. நடுவண் அரசு குறித்துப் பேசினாலும் ஏதோ ஒரு ஆள் எதிரில் நிற்பது போல உருவகித்துக் கொண்டு கேள்விகள் எழுப்புகிறார்? எடுத்துக்காட்டாக அரசை விமர்சிக்கும் இந்தப் பகுதியைக் குறிப்பிடலாம்: “நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நட்டம்? எங்களுக்கு என்ன உப்பு இல்லையா, தண்ணீர் இல்லையா, மலை இல்லையா, காடு இல்லையா, சமுத்திரம் இல்லையா? இல்லை நெல் விளையவில்லையா? கம்பு விளையவில்லையா? என்ன இல்லை எங்களுக்கு? உன்னாலே எனக்கு என்ன ஆகுது?” என்கிறார்.

“காங்கிரசு ஒழிந்தது; அது ஒன்றும் உருப்படியாகாது; உருப்படியாகாது” என்று 47 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. உரையின் இடையில் உடல் நலக் குறைவின் காரணமாக வலியால் அவர் வெளியிடும் வேதனை அரற்றலும் உரையின் ஒலிப்பதிவில் பதிவாகியுள்ளது, உரை நூலிலும் அப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயர் நகரில், 19.12.1973 அன்று தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய 5,000 சொற்களுக்கும் மேற்பட்ட இறுதிப் பேருரையிலிருந்து, அவர் போராட்ட முயற்சிக்கான நோக்கம் குறித்த உரையின் பகுதி மட்டும் 1,000 சொற்களுக்கும் குறைவாகச் சுருக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை”

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

இன்றைய தினம் இந்த இடத்திலே “சமுதாய இழிவு ஒழிப்பு” சம்பந்தமாக சென்னையில் 10 நாள்களுக்கு முன்னால் நடந்த மாநாட்டின் தீர்மானத்தை விளக்கவும், மற்றும் நம்முடைய கடமைகளை எடுத்து விளக்கவும், அதன்படி பேரறிஞர்கள் பலர் அத்தீர்மானத்தை விளக்கியும், அது சம்பந்தமான மற்றும் பல அறிவு விஷயங்களை உங்களுக்கு நல்ல வண்ணம் எடுத்து விளக்கினார்கள். எல்லா விஷயங்களையும் நல்ல வண்ணம் விளக்கினார்கள். என்னையும் ஒரு முக்கியப் பேச்சாளனாக நீங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதினாலே நானும் சில வார்த்தை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.[…]

அண்மையில் நடக்கப்போகின்ற கிளர்ச்சியை முன்னிட்டு, சென்னையில் பல பாகங்களிலும் அது விஷயமாகத் தெளிவுபடுத்த பல கூட்டங்கள் போடவேண்டும் என்று தீர்மானித்ததன்படி, பல கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. என்னமோ இது ஒன்று இரண்டுதான் நடந்தது. இன்னமும் நடக்கலாம். ஜனவரி 26 ஆம் தேதிக்குள் மற்ற பாகங்களிலும் நடக்கலாம். நடக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.[…]

ஐம்பது வருஷமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல். அதுவும், எதிரே நம்மைப் பார்த்து, சூத்திரன் என்று சொல்லமாட்டான். வீட்டிலே பேசுவான்.  இந்தச் சூத்திரப் பசங்க என்றுதான் பேசுவான். இந்த இழிவிலே இருந்து நீங்கணும். […]

இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிறவர்கள், நாளைக்கு வெளிப்படையாகப் பேசுகிறான். பேசுகிறவனை மாலைப் போட்டு வரவேற்கிறான். அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான். எனவே, தோழர்களே, நம்முடைய நிலைமை உலகத்திற்கே தெரியும் மானக்கேடான நிலைமை. இரண்டாயிரம் வருஷமாக இருக்கிற முட்டாள்தனத்தைவிட, இந்த சட்டத்திலே இருக்கிற இந்துலாவிலும் மற்ற அரசியல் சட்டத்திலேயும், அது பெரிய முட்டாள் தனம். அதைவிட, இதைச் சொல்லி மாற்றச் செய்யாமல், இந்த ஆட்சியிலே நாம் குடிமகனாக இருக்கிறோமே, அது மகாமகா மானங்கெட்டத்தனம். […]

இல்லாவிட்டால், விதி, இன்னும் எத்தனை நாள்களுக்கு இப்படியே இருப்பது. இப்படியே இருப்போம் என்பது என்ன நிச்சயம்? நாம் ஒழிந்தால் நாளைக்கு மாற்றிவிடுகிறான். மாற்றினானே! நம்முடைய கலைஞர் கருணாநிதி அவர்கள், “கல்தான், யார் வேண்டுமானாலும் பூஜை பண்ணலாம்; ஆனால், முறைப்படி செய்யணும்” என்று யாருக்குமே அனுமதி கொடுத்தார். […]

நாதி இல்லையே, சொல்றதற்கு ஆள் இல்லையே; சிந்திக்க ஆள் இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே. ஓட்டு வாங்குவதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேன் என்கிறானே. முன்னேற்றக் கழகத்துக்காரனை, மற்றவனை எல்லாம், என்னை எல்லாம் வைவான். இவனுக்கு என்ன கேடு, இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான் என்று. அவனுக்கு ஓட்டுதான் பெரிது. […]

கோவில் கிட்டே போனதும், டக்கென்று வெளியே நின்றுகொள்கிறானே, வாசற்படிக்கிட்டே! ஏன்டா, அங்கே நிற்கிறாய் என்றால், நான் சூத்திரன், உள்ளே போகலாமா? என்கிறான். எப்போது, 1973 லே. நம்ம நாடு, நம்ம சமுதாயம், நமக்கு மானம், அவமானம் என்கிறது ஒன்று இருக்கிறது அப்படின்னு சொல்லமுடியுமா? அது பெரிதில்லையே, அதற்காக யார் பாடுபடுகிறார்கள். நாங்கள்தானே மூணே முக்கால் பேரு; மற்றவன் எல்லாம் வேற வேற கட்சி. ஒரு கட்சிக்காரன்கூட கடவுளைப்பற்றி பேசவேமாட்டான். […]

இவ்வளவு பண்ணினோம், இவ்வளவு பிரச்சாரம் பண்ணினோம்; இவ்வளவு மாநாடு எல்லாம் நடத்தினோம். எவன் எங்களை ஆதரித்தான்? பயப்படுகிறானே! ஆதரித்தால் ஓட்டுப் போய்விடுமே, ஆதரித்தால் அரசாங்கம் என்ன பண்ணுமோ!  அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். […]

காமராசர் நம்மோடு சேர்ந்ததால், கொஞ்சம் காரியங்களைச் செய்தார். பக்தவத்சலம் வாயிலே வருமா ஜாதி ஒழியணும் என்று. இல்லை, சுப்பிரமணியம் வாயிலே வருமா ஜாதி ஒழியணும் என்று. சொன்னாலும், காங்கிரசில் இருக்க முடியாதே! அந்த மாதிரித் திட்டத்தோடு இருக்கிறானுங்க; அது இனிமேல் உருப்படியாகுமா? முன்னேற்றக் கழகம் ஒழிந்தாலும், காங்கிரசு ஒழிக என்கிற, ஜாதி ஒழிக என்கிற சீர்திருத்த உணர்ச்சி உள்ளவர்கள்தான் இனி வருவாங்க […]

ஆனதினாலே, மக்கள் அறிவு பெற்றுக்கிட்டு வருகிறார்கள். பயன்படுத்திக்கொள்ள வேணும். அவர்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும், தெரியாது வெகுப் பேருக்கு. எனவேதான், இப்போது நாம் முன்னேற்றம் அடையணும்; மேலே வருவதற்குள்ளே பள்ளத்திலே இருந்து நிலத்து மட்டத்துக்கு வரணும்; அப்புறம் மேலே ஏறணும். இப்போது நாம் பள்ளத்திலே கிடக்கிறோம். என்ன? நாலாவது ஜாதி, ஐந்தாவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள் இப்படியல்லவா இருக்கிறோம் நாம். இது மாறவேணும், அப்புறம் மேலே போகணும்; மாறாது மேலே போக முடியுமோ? யாரும் கவனிக்கவில்லை. கவனிக்காமல் போனால், நாங்கள் சும்மா இருக்கலே; ஒன்று போனால் ஒன்று செய்துகிட்டேதான் இருக்கிறோம். நாளுக்கு நாள் கொஞ்சம் மாறிக்கிட்டேதான் வந்தது. இன்னும் மாறணும். எங்களால்தான் முடியும் என்று இருக்கிறது நிலைமை. வேற எந்தக் கட்சிக்காரனுக்கும் இதிலே கவலை இல்லை. இவங்களோடு சேர்ந்தால் ஓட்டுப் போய்விடுமே என்று பார்க்கிறான்; மானம் போறதைப்பத்தி அவனுக்கு வெட்கமில்லை. ஆகவே, நாம் மாநாடு போட்டோம். இந்த மாநாடு போட்டதற்குக்கூடக் காரணம் சொன்னாரே! தீண்டாமை இல்லை என்று சட்டத்திலே எழுதிப் போட்டான்; எந்த விதத்திலேயும் தீண்டாமை இல்லை என்று சொல்லிவிட்டான். ஆனால், மதத்திற்கு மதம் உண்டு என்று ஒரு அடையாளம் வைத்துவிட்டான்; நிபந்தனை.[…]

இனிமேல் நாம் இழிமகன். எனவேதான், மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டோம்; அவைகளையெல்லாம் பார்த்தோம், மாற்றி ஆகணும். சட்டத்திலேயும், சாஸ்திரத்திலேயும் இருக்கிறதினாலே, முதல்லே அதைக் கேட்டோம். சட்டத்திலே இருக்கிறது ஒழியவேணும் என்றால், சட்டம் ஒழிந்தால் உண்டு. […]

நாமதான் அதைப்பற்றிக் கவலைப்படுகிறோம். மாற்றியாகணும் என்கிறோம். நேற்று நடந்த மகாநாட்டுக்கு வேற கட்சிக்காரர்கள் யாரும் ஒண்ணும் வரவில்லையே, வரலாம் அல்லவா? அவனவன் சக்திக்கு, அனுசரணையா எங்களுக்கு வந்து உதவி பண்ணலாமில்லே. ஒருத்தரும் வரவில்லை. எங்கள் ஆட்கள்தான். அவன், டில்லிக்காரன் சி.ஐ.டி.யைப் போட்டுவிட்டான். வேற கட்சிக்காரன் எவனாவது உள்ளே வருகிறானா பார் என்று. அதைப் பார்த்து ஒருத்தனுமே வரவில்லை. மந்திரிகளா, அவனோ, மற்ற கட்சிக்காரனா ஊகும், வரவில்லை. இழிவு ஒழிய வேணும் என்று சொன்னால், இழிவுக்கு ஆளானவன் எல்லாம் வரணுமே, வந்து உதவிக்கு நிற்க வேணுமே. நாங்கள்தான். ஆனதினாலே, விஷயம் ரொம்ப முக்கியமானது மாறியே ஆகணும், மாறாவிட்டால் சாகணும்; அந்த உணர்ச்சி உள்ளவன்தான் மிஞ்சுவான். […]

ஆகவேதான், எந்தச் சங்கதி எப்படி ஆனாலும், இப்போது நாம் ஆரம்பித்துள்ள ‘இழிவு ஒழிவு கிளர்ச்சிக் காரியம்’ மிகவும் நியாயமானது என்பதற்கு என்ன ஒரு உதாரணம் உங்களுக்கு வேண்டுமானால், இன்றைக்கு எத்தனை நாளாகிறது? 10 நாளாகிறது. நல்லா கவனிக்கணும். இரகசியமா இல்லை. பத்தாயிரம் பேருக்கு மேலே வந்தார்கள். 30 பத்திரிகைக்காரர்கள் வந்தார்கள். எல்லாத் தீர்மானத்தையும் அவரவர் பத்திரிகையில் போட்டார்கள். இந்தியா பூராவும் பரவியது, அடுத்த நாளே பரவியது. நான் கேட்கிறேன், கவனியுங்கள், இந்தப் பத்து நாளா ஒருவனாவது இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினானா? எந்தப் பத்திரிகையிலேயாவது செய்தி வந்ததா? ஏன் சொல்லுகிறேன், நாம் பண்ணினது அவ்வளவு நேர்மையான காரியம். எவனாலேயும் ஆட்சேபிக்க முடியவில்லை. […]

பண்ணனும், நாளைக்குக் கிளர்ச்சி பண்ணினால் அவன் பிடிப்பான்; பிடிக்கவில்லையானால் பண்ணிக்கொண்டு இருப்போம்; பிடிக்க ஆரம்பித்து விட்டான் என்றால், 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று ஜெயிலுக்குப் போவோம். நாம் தயாராய் இருக்கிறோம், காரியம் முடிகிறவரைக்கும் ஜெயிலிலே வேணுமானாலும் இருக்கத் தயாராய் இருக்கிறோம் என்று நாம் காட்டணும். அப்புறம் அவன் பரிகாரத்திற்கு வரணும் […]

[இந்தப் பகுதியை பேசிக்கொண்டிருக்கும் பொழுது வலியில் அம்மா .. அஆ.. அம்மா .. என்று பெரியார் துடிப்பதும், சிறிது இடைவெளிக்குப் பிறகு உரையைத் தொடர்வதும் ஒலிப்பதிவில் பதிவாகியுள்ளது]

இது எப்படி அய்யா தப்பாகும். இதனாலே எப்படி நாம் கெட்டவனாவோம்; இதனாலே நாம் எப்படி அரசுக்கு விரோதமாவோம்? கவனியுங்கள், தாய்மார்களே! தோழர்களே! இந்த விஷயங்களையெல்லாம் முதலிலே சொன்னோம். இது நம்ம கடமை. 25 ஆம் தேதி ஆரம்பிப்போம். மளமள மளவென்று வரணும்; என்ன சொல்கிறோமோ அதைச் செய்யணும். சட்டங்களை எரிக்கிறது முதற்கொண்டு, மறியல் பண்ணுறது முதற்கொண்டு இன்னமும் பல காரியங்கள் திட்டம் போட்டுச் செய்யணும். கலகத்துக்குப் போகமாட்டோம்; எவனையும் கையாலே தொடமாட்டோம். எவனாவது அடித்தாலும், பட்டுக் கொள்வோம், திருப்பி அடிக்கமாட்டோம். ஞாபகத்திலே வைத்துக்கொள்ளுங்கள்! நான், நீ என்று மீசையை முறுக்கக்கூடாது. அடித்தால் பட்டுக்கணும். போலீஸ்காரன் இருப்பான், அதிகமாக அடிக்காமல் பார்த்துக் கொள்வான். அப்புறம் என்னத்துக்கு நாம் ஒருத்தனை அடிக்கப் போகணும்; நாம் யாரோடு சண்டைப் பிடிக்கிறோம்?[…]

ஆனதினாலே, தோழர்களே, பக்குவம் அடையணும் நாம். எதற்காக இங்கே நான் நாத்திகப் பிரச்சாரம் பண்ணவரவில்லை. கடவுள் இல்லை என்று உங்களுக்குச் சொல்வதற்காக வரவில்லை. அது வேறே, நாங்கள் பண்ணிக்கிறோம். அவனவன் நம்பட்டும், ஆராயட்டும், இருக்கட்டும். முட்டாள்தனமான காரியங்கள், பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்கள், மானத்துக்குக் கேடான காரியங்கள் செய்கிறதற்கு நாம் இடம் கொடுத்துக்கிட்டு, நாம் மனுஷனாக வாழணுமா?[…]

ஆனதினாலே, தயவு செய்து நீங்கள் விஷயங்களைத் தீவிரமாகக் கவனிக்கணும். ரொம்பத் தீவிரமாய்க் கவனிக்கணும். ஜெயித்தே ஆகணும்! நான் சொல்கிறேன், என்று கேலி பண்ணாதீர்கள், நீ என்ன நாளைக்கு சாகப் போறே, துணிந்து வந்திருப்பாய் என்று.  நானே பண்ண வேணும் என்று இல்லை; நீங்கள் பண்ண வேண்டிய காரியத்தைத்தானே நான் செய்கிறேன். அதனாலே எல்லோரும் துணியணும்; மளமளவென்று கலந்துகொள்ளணும்.

[இதற்குப் பிறகு, இதுவரை பேசிய செய்திகளை, கருத்துகளையே பெரியார் மீண்டும் வேறுவகையில் பேசுகிறார், ஆகவே அவை இங்கு தவிர்க்கப்படுகிறது]

இந்த உரையாற்றிய சில நாட்களில், ஒரு வாரத்திற்குள், உடல் நலக் குறைவின் காரணமாக டிசம்பர் 24, 1973 அன்று தமது 94ஆவது வயதில் பெரியார் மறைந்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று குரல் எழுப்பி கோயில் கருவறையில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற தம் வாழ்நாள் முழுவதும் முயன்று போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார்.

அவரது இறுதிப் பயணத்தில், ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக இயலவில்லை, தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளுடன் அவரைப் புதைக்கிறோம்’ என்றார் அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசியற் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானத்தையும், நாடாளுமன்ற தனிநபர் மசோதாவினையும் 1974 இல் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தார். ஆனால் அதற்குள் அரசியல் களத்தில் பற்பல மாற்றங்கள், எம். ஜி. ஆரால் கட்சியில் பிளவு, இந்தியாவின் இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனம், 1976ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சி கவிழ்ப்பு, ஆட்சி கைமாறிப்போனது என்ற பல மாற்றங்கள் நிகழ்ந்தன. திராவிட கழகம் தொடர்ந்து வற்புறுத்திய காரணத்தால் தொடர்ந்து பதவி ஏற்ற எம். ஜி ஆர். தனது காலத்தில் இதற்காக 1982ஆம் ஆண்டு நீதியரசர் மகாராஜன் குழு என்றொரு குழு அமைத்தார். அக்குழுவினர், வேத, ஆகம பயிற்சிப் பள்ளிகளை நிறுவி அதன்மூலம் அனைத்து சாதியினரையும் பயிற்றுவித்து, ஆகம விதிகள் மீறப்படாமல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம் என்ற பரிந்துரையை அரசுக்கு வழங்கியது.

எம். ஜி ஆர். மறைவிற்குப் பின்னர் பதவிக்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணா.தி.மு.க அரசு, ‘வேத பயிற்சி பள்ளிகள்’ நிறுவப்படும் என்று அறிவித்தது. அப்பெயர் ஏற்புடையது அல்ல என்று போராடி அவற்றை ‘அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள்’ எனப் பெயர்மாற்றம் செய்ய வைத்தது திராவிடர் கழகம். ஆனால் அறிவிப்பைத் தவிர வேறெந்த ஏற்பாட்டையும் ஜெயலலிதாவின் அரசு முன்னெடுக்கவில்லை. மீண்டும், 2006 இல் ஆட்சி அமைத்தார் கலைஞர் கருணாநிதி. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தனிச்சட்டத்தை இயற்றிய கருணாநிதி, ‘பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவதற்கான நடவடிக்கைதான் இது’ எனக் கூறினார். மேலும் கலைஞர் கருணாநிதியின் அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை நிறுவியதுடன் 69% விழுக்காடு அடிப்படையில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற அரசாணையையும் வழங்கியது.

இம்முறை இதை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவச் சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் மற்றும் தென்னிந்தியத் திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  முதலில் இவ்வழக்கில் நீதி மன்றம் இடைக்காலத் தடை வழங்கியது. பிறகு 16.12.2015 அன்று, சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின்னர், நீதியரசர் திரு. ரஞ்சன் கோகாய், நீதியரசர் திரு. ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் தமிழக அரசின் சட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் ‘தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும்’ மதுரை அழகர் கோவிலுக்குட்பட்ட அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக மாரிச்சாமி என்ற பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர் பணியமர்த்தப்பட்டார். ஆனால் இந்த ஐயப்பன் கோயில் ஆகமம் இல்லாதது. ஆகமம் உள்ள கோயில்களில் பார்ப்பனர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

அர்ச்சகர் பயிற்சி நிலைய திட்டத்தின்கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். பயிற்சி பெற்ற 207 பேர்களில் ஒருவரை மட்டும் அர்ச்சகர் பணிக்கு அமர்த்திய அதிமுக அரசு பின்னர் அது குறித்து அக்கறை காட்டவில்லை என்பதுதான் இன்றைய நிலை. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. ஆகமம் முறையைக் கடைபிடிக்கும் பெரிய கோயில்களில் பிராமணரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்படும்போது தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் முழுமையாக அகற்றப்படும் என்பது பெரியாரிய கொள்கையாளர்களின் கருத்து.

பிராமணரல்லாத ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் கட்டுப்பாடு அரசின் கையில் உள்ளது என்பது பொருள். இதனை முறியடிக்க விரும்புவோருக்கு சட்டப்படி நேரடியாக எதிர்க்கவும் வழியில்லை. அதனால், இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளின் மீது குற்றங்கள் பல சுமத்தப்பட்டு வருவது கண்கூடு. இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்துக் கட்டும் நோக்கில் சனாதன ஆர்வலர்களின் முயற்சி தற்பொழுது வேகம் பிடித்துள்ளது.

சமநீதிக்காகக் குரல் எழுப்பி, மக்களுக்கு எழுச்சியூட்டி, துடிப்புடன் இறுதி வரை தனது தள்ளாத வயதிலும் சமுதாய இழிவு ஒழிப்புக்காகப் போராடிய தந்தை பெரியாருக்கு வீரவணக்கம்.

மேலதிகத் தகவலுக்கு உதவக் கூடியவை:

(1) தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை: மரண சாசனம், தந்தை பெரியார், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, கிண்டில் பதிப்பு, 2017

(2) தமிழர் தலைவர் தந்தை பெரியார் – ஓர் கையடக்க வரலாறு, பெ. மருதவாணன், பெரியார் இயக்கம் பப்ளிகேஷன்ஸ், 2010, பக்கம் 59-60

(3) பெரியாரின் மரண சாசனம், இறுதி ஊர்வலம் – http://www.madhumathi.com/2012/12/blog-post_7375.html

(4) தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை – காணொளி:  https://youtu.be/xchSEp93RN0

(5) தமிழகத்தில் முதன்முறையாகப் பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்: சமூக நீதிக்கான முக்கிய நகர்வு – https://www.hindutamil.in/news/reporters-page/139846-.html

(6) பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா? கருவறை தீண்டாமை ஒழியுமா? – https://www.vinavu.com/2020/09/17/periyar-142-archakar-manavar-sangam-prpc/

——————————————————————————————————————–

மற்றவர்களிடம் பழகும் விதத்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான் – பெரியார்

பெரியார்

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமெனில் Thoughts Of Periyar EVR [ பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்] புத்தகம் இங்கே pdf வடிவில் இணைக்கப்பட்டுள்ளது நீங்கள் தரவிறக்கம் செய்து படிக்கலாம். அந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெரியார் அவர்களைப்பற்றிய ஒரு நீண்ட அறிமுகக்கட்டுரையைத்தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

இன்று பெரியாரின் சிலைகள் எளிதில் உடைக்கப்படுகின்றன, அவரின் சிலை மீது சாயங்கள் பூசப்படுகின்றன, அவரின் திருமண வாழ்க்கை கொச்சைப்படுத்தி பேசப்படுகின்றன. ஆனாலும் அந்த கறுப்பு மனிதரின் புகழ் மேலும் மேலும் எழுச்சி அடைந்துகொண்டே தான் இருக்கின்றன. இக்கால இளைய தலைமுறைக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான், நீங்கள் எத்தகைய கொள்கையுடைய அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் எதிரெதிர் கொள்கையுடையவர்களை மதித்து நடக்க கற்றுக்கொள்ளுங்கள். செப்டம்பர் 17, 1879 ஆண்டு பிறந்தார் பெரியார்.

பெரியார் பற்றி இன்றைய தலைமுறைகள் அறிந்துகொள்வதற்காக ஓர் அறிமுகக்கட்டுரையை பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற புத்தகத்தில் இருந்து பார்க்கலாம். தமிழக்தில் நீண்ட காலம் ஆட்சி புரிந்தவரின் கதையை கேட்கப்போகிறீர்கள். நிச்சயம் நீண்ட பதிவாகவே அது இருக்கும்.

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 1

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 2

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 3

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி….

தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவுகளும் எழுத்துக்களும் 1925 முதல் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழக மக்களாலும் பிறராலும் கேட்கப்பட்டும் பாதிக்கப்பட்டும் பின்பற்றப்பட்டும் ஆராய்ச்சிக்கு உரியவையாகக் கொள்ளப்பட்டும் வருபவை. இங்கு தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், இயக்கங்கள், கிளர்ச்சிகள், சாதனைகள் முதலானவற்றை சுருக்கமாக காணுவது இன்றியமையாதது.

பெரியாரின் பள்ளிப்படிப்பு மூன்றாண்டு காலத் திண்ணைப் பள்ளிக் கல்வியோடும் இரண்டாண்டு கால பிரைமரி பள்ளிக் கல்வியோடும் 11 வயதில் முடிவுற்றது. அக்காலத்தில் நம் சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரும் கடவுள், மத, சாஸ்திர, புராண நம்பிக்கைகளுக்கு பெரிதும் அடிமைப்பட்டு இருந்தனர். [இன்றும் அது தொடர்கிறது] இந்து வைதீகக் கொள்கைகளைப் போற்றுவதும் பின்பற்றுவதும் தங்களை உயர்ந்த மனிதர்களாக்கிக் கொள்வதற்குச் சரியான வழியென்று ‘பெரிய மனிதர்கள்’ என்பவர்களும் ‘படிப்பாளிகள்’ எனப்பட்டோரும் ‘மேல் சாதி மக்கள்’ எனக் கூறிக்கொன்றோம் அக்காலத்தில் கருதினர். மதம் என்பதன் பேராலும் சமுதாயப் பழக்க வழக்கம் என்பதன் பேராலும் பார்ப்பனர் – திராவிடர் மத குருவாகவும், மதத் தலைவராகவும் ஆதிக்கம் கொண்டு விளங்கினர்.

நம் சமுதாயத்திற்குள் பெரும்பாலோர் கல்வியறிவு அற்றவராயிருந்தனர். நூற்றுக்கு ஏழு பேரே படிப்பறிவு பெற்று இருந்தனர். எனின் அவர்களுள் பார்ப்பனர் மூவர். கிறிஸ்தவர் ஒருவர், சாதி இந்துக்கள் இருவர், பிறர் ஒருவர் என்ற அளவில் இருந்தது.

சூத்திரனுக்கு அறிவு கொடுக்கப்படக் கூடாது என்பதே ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாகத் தென்னாட்டில் ஆட்சி புரிந்தவர்களின் கல்விக் கொள்கையாக இருந்தது. வெள்ளையர் ஆட்சியிலும் கிபி 1800 க்குப் பின்னர் படித்தவர்கள் என்றால் பார்ப்பனர் என்ற நிலைமை மட்டுமே இருந்தபடியால் அரசு அலுவல் துறைகள் அனைத்திலும் பார்ப்பனர் மட்டுமே ஆதிக்கம் பெற்றிருந்தனர். படிப்புத் தகுதி ஒன்றே கருதி அலுவலர்கள் அமர்த்தப்பட நேர்ந்தவுடன் படிப்புத்தகுதி பெற வாய்ப்பில்லாதவர்களாக ஆக்கப்பட்டிருந்த அனைத்துச் சமுதாயத்தினரும் ஒதுக்கப்பட்டனர்.

சமுதாயத்தில் பெரும்பான்மையினராக இருந்த சூத்திரர் எனப்படுவோர் பார்ப்பனர்களால் தீண்ட தகாதவர் என கருதப்பட்டனர். பார்பபனர் புழங்கும் பொது இடங்களில் – உணவு விடுதிகள், குளிக்கும் துறைகள், கோவில்கள் போன்ற அனைத்திலும் சூத்திரர் புழங்கக் கூடாதவர்களாக கருதப்பட்டனர். பார்ப்பனர் அனுபவித்த உரிமைகள் எதனையும் எந்த துறையிலும் சூத்திரர் அனுபவிக்க இயலாது என ஆக்கப்பட்டிருந்தது.

கோவில்களை கட்டி முடிப்பவர் – சூத்திரர், ஆனால் கோவில் குடமுழுக்கு நீர் ஊற்றுபவர் , கோவிலில் அர்ச்சனை செய்பவர், ரதத்தில் சிலையோடு அமர்ந்து ஊர்வலம் வருபவர் – பார்ப்பனர் என்ற நிலைமை நிலவியது.

எந்த நிலையுடைய அல்லது சாதிக்கு உரிய திராவிடரையும் வா போ என்றும் வாடா போடா என்றும் பார்ப்பனர் ஏகமாக அழைக்கும் நிலைக்கு நம் மக்கள் இழி நிலையில் துன்புற்றனர். தமிழர் வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் பார்ப்பனர் குரு – தலைவர் என்பது நிலவியது.

தீண்டப்படாதவர் எனப்படும் பள்ளர், பறையர் முதலானோர் வேறு எந்த வகுப்பராலும் தீண்டப்படாதகாதவராவே நடத்தப்பட்டனர். பார்ப்பனரும் பார்ப்பனரல்லாத மேல் சாதி மக்களும் புழங்கும் எந்த பொது இடத்திலும் பள்ளரும் பறையரும் புழங்கக்கூடாது. சில தெருக்களில் நடக்கக்கூடாது. மாட்டு வண்டியில் உட்கார்ந்து செல்வதோ செருப்புகள் அணிந்து போவதோ குடை பிடித்துச் செல்வதோ பொது கிணற்றிலும் குளத்திலும் குளிப்பதோ நீர் அருந்துவது கூடாது. எங்கோ அரிதாகக் காணப்படும் தண்ணீர்ப் பந்தல்கள், காப்பிக் கடைகளில் கூட மூங்கில் குழாயில் ஊற்றப்படும் காபி, மோர், நீர் இவற்றைக் கொட்டங்களில் வாங்கிக் குடித்துச் செல்ல வேண்டும் என்பதே எல்லா ஊரினரும் கொண்டிருந்த சமுதாய நெறியாக இருந்தது.

மனிதன் உலகில் தன் சுயமரியாதையை, சுய மானத்தை உயிருக்கு சமமாகக் கொள்ள வேண்டும்.

கருஞ்சட்டைப்பேரணி

பறையரும் பள்ளரும் – பார்ப்பனர்களால் காணத் தகாதவர்களாக, அண்டத் தகாதவர்களாக தீண்டத் தகாதவர்களாக கருதப்பட்டனர். ஒற்றையடிப் பாதைகள், வண்டிப் பாட்டைகளில் பார்ப்பனரை எதிர்ப்படும் பறையர் முதலானோர் கூப்பிடு தூரம் ஒதுங்கியோடி மறைந்து நடத்தல் வேண்டும். பறையர் எனப்படுவோர் முழங்காலுக்குக் கீழ் தொங்கும்படி துணி அணியக் கூடாது, தோளில் துண்டு போடாக் கூடாது. உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. தங்க நகைகளை விரும்பி பெறுதல் கூடாது, மண் சுவரும் ஓலைக் குடிசையும் தவிர வேறு வகையான வீடு பெற விரும்பக் கூடாது. மொத்தத்தில் எந்தச் சுதந்திரமும் உரிமையும் பெறக்கூடாதவராய் அடிமை வேலை செய்தே வாழ வேண்டும் என்ற இழிவுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்.

சில சூத்திர சாதிப் பெண்டிரும் ஆதித் திராவிட பெண்டிரும் மாராப்புத் துணி போடுவதும் சட்டை போடுவதும் மேல் சாதியினர் என்பவர்களை அவமரியாதை செய்வதாகக் கருதப்பட்டு, அனுமதிக்கப்டாமல் இருந்தது. மனிதப் பிறவியில் பெண்கள் இழி பிறவிகள் எனவும், ஆண்களோடு சம உரிமை பெற அறுகதையற்றவர்கள் எனவும் அனைவரும் கருதினர்.

கேட்கவும் படிக்கவும் நெஞ்சு பொறுக்காத இந்த இழிநிலை சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், நாயக்கர், நவாபுகள் ஆகிய அனைவரின் ஆட்சிக்காலங்களிலும் இருந்தது. இந்தக் கோரா நிலைக்குப் பரிகாரம் தேட முயன்ற வெள்ளையரை, பார்ப்பனர் எதிர்த்தனர். பணக்காரர் எதிர்த்தனர். இத்தகைய அமைப்பு எதையும் மாற்றக்கூடாது. இத் துறைகளில் பிரிட்டிஷார் தலையிடக்கூடாது என்ற உறுதிமொழியினை கிபி 1773,1857 ஆண்டுகளில் அதிகாரபூர்வமாக பெற்றனர் – பார்ப்பனர்.

இத்தன்மையில் இருண்டு கிடந்த, அறியாமை ஆட்சி புரிந்த, சமூக இழிவுக்காப்பதே வாழ்க்கை நியதியாக இருந்த தென்னாட்டில் அறியாமை இருளையும் சமூக இழிவு இருட்டினையும் சுட்டெரிக்கும் தன்மையினராகக் தோன்றிய பெரியார், தமிழகத்தில் ஈரோடு பெருநகரில் 1879 செப்டம்பர் 17 – இல் உதித்தவராவார். இவருடன் பிறந்தவர் மூவர். தமையனார் திரு இ வெ கிருஷ்ணசாமி.

மேலே குறிப்பிட்ட இழி நிலைகள் மனிதாபிமான உணர்வுக்கும் பிரத்யட்ச அனுபவத்திற்கும் தன்மான உணர்வுக்கும் நேர்மாறான நிலையாகும் எனப் பெரியார் அவர்கள் 1891 முதலே உணரத் தலைப்பட்டார்.

மிக இளம் பருவத்தில் தனது சிறிய பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்து வந்த அவர் கட்டுக்கடங்காத முரட்டுப் பிள்ளையாகத் திரிந்தார். சமுதாய மக்கள் பலரும் அனுசரித்து வந்த சாதி அனுஷ்டானங்களை நாள்தோறும் மீறிவந்தார். சமுதாயத்தில் தாழ்ந்தவர்கள் என கருதப்பட்ட வாணியர், பணிக்கர்ம் குறவர் முதலானோர் வீடுகளிலும் முஸ்லீம்கள் வீடுகளிலும் நீர் பருகுவதும் பண்டங்களை உண்பதும் அவரது பிள்ளைக் குறும்புகளாக இருந்தன.

தொத்தாவை சோதித்த அண்ணா
பெரியார் உண்மையை உணர்ந்த அந்த தருணம்

இந்தத் தருணத்தில் பெரியார் சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த உண்மையை உணர்ந்த தருணம் என குறிப்பிட்டு நான் பாமரன் கருத்து இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்ட கட்டுரையை மீண்டும் இங்கே தருவது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு நிகழ்வு, அதில் எழும் கேள்வி, கிடைக்கும் பதில் இவை தான் வரலாற்றை மாற்றுகிற நட்சத்திரங்கள் உருவாக காரணமாகின்றன. பெரியார் சாதிய கட்டமைப்பை எதிர்த்து வலிமையோடு போராடிட அவருக்கு நடந்த இரண்டு சம்பவங்கள் போதுமானவையாக இருந்தது எனலாம்.

மூட நம்பிக்கையை பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும் சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை ஏற்பட்டது. முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக்கூடாதே என நினைப்பவர்கள் கோழைகளேயாவார்கள் , முன்னோர்களை விட நாம் அதிக புத்திசாலிகளே. நம்மைவிட நமக்குப்பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளே – பெரியார்

சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை அந்நிலையிலிருந்து மீட்க பகுத்தறிவு என்னும் பேராயுதத்தை ஏந்தி வந்த இராமசாமி எனும் பெரியார் ஒரு வசதியான மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தவர். பெரியார் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது ஒரு உயர்ந்த சாதியில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ஒரு பிள்ளையால் எப்படி ஏழை எளிய மக்களின் வலியை உணர முடிந்தது? தான் சார்ந்த மேல்தட்டு மக்களையே எதிர்க்க துணிந்தது எப்படி? சாதியின் கொடுமையை எந்த தருணத்தில் பெரியார் உணர்ந்திருப்பார்? என்ற கேள்விகள் எழுந்ததுண்டு. அதற்கான பதிலை அமரர் கே பி நீலமணி என்பவர் எழுதிய “தந்தை பெரியார்” என்ற புத்தகத்தில் படித்தேன். அதைத்தான் இந்தப்பகுதியில் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

இராமசாமியின் பெற்றோர்கள் மிகவும் நல்லவர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்திடும் பேருள்ளம் கொண்டவர்கள் ஆனாலும் பிறரைப்போலவே அவர்களிடத்திலும் அந்த எண்ணம் ஒட்டிக்கொண்டு தான் இருந்தது. அவர்கள் இராமசாமி தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளோடு பழக்கூடாது, அவர்கள் கொடுப்பதை உண்ணக்கூடாது என்றே வலியுறுத்தி வந்தனர். ஆனால் இராமசாமிக்கு அதில் உடன்பாடில்லை. பெற்றோர் எத்தனை அறிவுரைகள் கூறினாலும் அவர் தலையில் ஏறவே இல்லை, அங்கு தான் பகுத்தறிவு பிறக்க தயாராகிக்கொண்டு இருக்கிறதே பிறகெப்படி ஏறும்.

இனி அமரர் கே பி நீலமணியின் கட்டுரைக்குள் போகலாம்..

தான் சலீமின் வீட்டில் பிரியாணி சாப்பிட்டதையும் தனது அம்மாவிற்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதனால் அவர்களின் அருகே சென்றுவிடக்கூடாது என்று எண்ணிக்கொண்டும் நடந்துவந்தார். அவர் ஒதுக்குபுறமாக இருந்த குடிசைகளின் நடுவே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுவனின் பயங்கரமான அழுகுரல் கேட்டது.

“என்னை அடிக்காதேம்மா என்னை அடிக்காதேம்மா நான் இனிமே அந்த அய்யா கூட பேசல, விளையாடப்போகல” என அந்த சிறுவன் அலறிக்கொண்டு இருந்தான்.

உள்ளே போகலாமா வேண்டாமா என எண்ணிய இராமசாமி கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார். உள்ளே அடிவாங்கிக்கொண்டு இருந்தது தன்னோடு சேர்ந்து விளையாடும் தனது நண்பன் காளி.

அந்த அம்மையாரின் கைகளில் இருந்த சுள்ளியை பிடுங்கிக்கொண்டு காளியை மீட்டார் இராமசாமி. பார்ப்பதற்கு பெரிய இடத்து பிள்ளையைப்போல இருக்கவும் காளியின் அம்மாவும் வாயடைத்துப்போனார்.

யார் இந்த பெரிய இடத்து பையன் என கண்களாலேயே தனது மகன் காளியை நோக்கினாள் தாய். காளி இப்போது மிகவும் சந்தோசமாக ” இவருதாம்மா என்னோட சிநேகிதரு நம்ம அப்பா கூட இவங்க பண்ணைலதாம்மா வேலை பாக்குறாரு, சின்ன எசமான் ரொம்ப நல்லவரும்மா” என சொல்லி முடித்தான் காளி.

பதறிப்போன காளியின் தாய் “பெரியநாயக்கர் அய்யா வீட்டு புள்ளையா நீங்க? ” என்று அலறினாள்.

இராமசாமிக்கு சூழல் நன்றாக புரிந்துவிட்டது. தன்னோடு சேர்ந்து விளையாடுவதனால் தான் காளி அடி வாங்குகிறான் என்பதும் நன்றாகவே விளங்கியது.

“சின்ன எசமான் நீங்க எங்க தெருவுக்குள்ள எங்க வீட்டுக்குள்ள வரலாங்களா…எங்க புள்ளைய கூட சேர்ந்து விளையாடலாங்களா” என்றாள் பயந்தபடி

“இதுல என்னம்மா தப்பு இருக்கு, காளி என்னோடு சிநேகிதன், நான் அவன்கூட பழகினத்துக்கு அவன் கூட சினேகமாக இருந்ததுக்கு ஏன் அவன இப்படி அடிக்கிறீங்க?” என இராமசாமி கேட்டார்.

“எசமான் நீங்க சின்னப்புள்ள, உங்களுக்கு இதெல்லாம் புரியாது. நாங்க கீழ்சாதிக்காரங்க, நீங்க எங்க எடத்துக்கெல்லாம் வரக்கூடாது. பெரிய எசமானுக்கு தெரிஞ்சா எங்கள கொன்னே போட்டுருவாரு”

“நீங்க கீழ்ச்சாதினு யாரு சொன்னா, அதெல்லாம் நம்பாதீங்க” என்றார் இராமசாமி

“எசமான் நாங்க கீழ்ச்சாதினு இந்த ஊர் சொல்லுது, உலகம் சொல்லுது, எல்லாத்துக்கும் மேல காலம்காலமா தீண்டப்படாதவங்கனு வாழுற எங்க பொறப்ப பத்தி எங்களுக்கு தெரியாதா” என்றார் காளியின் அம்மா

“எசமான் இங்க இருந்து சீக்கிரமா போயிருங்க, இனிமே என் மவன் கூட சேராதீங்க யாராவது இவன உங்ககூட பாத்தா இவன் அப்பாவுக்குத்தான் கஷ்டம் வரும்” என காளியை கட்டிக்கொண்டே அழுதாள்.

இனிமேலும் இங்கிருப்பது அவர்களுக்கு மேலும் சங்கடத்தைத்தான் தரும் என்று எண்ணிய இராமசாமி “எனக்கு ரொம்ப தாகமா இருக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி இருக்குமா?” என்றார்

“ஐயோ தண்ணியா கேக்குறீங்க?” என்று தயங்கியபடி தாய் கேட்க

“ஏன் தண்ணி இல்லையா” என்றார் இராமசாமி

“பானை நெறைய தண்ணி இருக்கு ஆனா உங்களைப்போல பெரிய மனுசங்களுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்க முடியாத பாவி நாங்க” என்றார் தாய்

“நீங்க இங்க என் கையால தண்ணி வாங்கி குடிச்சது தெரிஞ்சா இந்த தெருவையே கொளுத்திருவாங்க” என அஞ்சிக்கொண்டே கூறினார் காளியின் தாய்

அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தார் இராமசாமி. பின்னர் ஒரு மூலையில் இருந்த பானையில் அலுமினிய டம்ளரால் தண்ணீரை அருந்திவிட்டு வெளியே வந்தார்.

அந்த வழியாக வந்தவர்கள் தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து கக்கத்தில் வைத்துக்கொண்டனர். காலில் இருந்த செருப்பை கழட்டிவிட்டு வணக்கம் வைத்தனர்.

இவர்களின் இந்த செய்கைகள் தனது குடும்பத்தின் மீதான அன்பினாலோ அல்லது மரியாதையாலோ அல்ல, அப்படி இருந்தால் கூட பரவாயில்லை. இவர்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை மட்டும் தீண்டத்தகாதவர்கள் என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கும் மேல் சாதிக்காரர்களிடம் இருக்கின்ற பயமே காரணம் என புரிந்துகொண்டார் இராமசாமி.

கீழ்சாதிக்காரர்களுக்காக பேசுகிறவர்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சாதியால் வன்கொடுமைக்கு ஆளாகிறவர்களின் மன துயரத்தை அவர்களை தவிர வேறொருவரால் உணரவே முடியாது. பிறகெப்படி இராமசாமி க்கு அவர்களின் வலி துல்லியமாக புரிந்தது. இதற்கான காரணத்தை அடுத்த நிகழ்வில் நாம் புரிந்துகொள்ள முடியும்.

இராமசாமி ஒருமுறை தனக்கு பாடம் நடத்திடும் வாத்தியார் வீட்டு வழியாக நடந்து செல்கிறார். அப்போது மிகவும் தாகமாக இருந்ததனால் வாத்தியாரின் வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்கிறார். அப்போது அங்கு வந்த வாத்தியாரின் மகள் செம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்தாள்.

அதை வாங்க கை நீட்டியபோது கைகளில் கொடுக்காமல் தரையில் வைத்தாள். தண்ணீரை குடிக்க துவங்கும் போது ” எச்சில் படமா தூக்கி குடியுங்கள்” என்றாள். குடித்து முடித்த பிறகு அந்த டம்ளரில் மூன்று முறை தண்ணீரை ஊற்றி சுத்தமாகிவிட்டது என்றெண்ணிய பிறகே உள்ளே கொண்டு சென்றாள். அதை வாத்தியாரின் மனைவியும் அருகே நின்று பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது இராமசாமி “கூனிக்குறுகி போனார்“.

இப்படித்தான் ஒவ்வொருவரும் சாதியால் தங்களை உயர்ந்தவராகவும் மற்றவரை தாழ்ந்தவராகவும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என சிந்தித்தார் இராமசாமி. நம் வீட்டில் நம்மை விட கீழ்சாதிக்காரர்கள் என ஒரு சமூகத்தை ஒதுக்குகிறார்கள், இன்னொரு வீட்டில் நம்மையே கீழ்சாதிக்காரன் என ஒதுக்குகிறார்கள் என சாதியின் அடிப்படையை புரிந்துகொண்டார்.

இந்த நிகழ்வுகளில் தான் பெரியார் உண்மையை உணர்ந்திருப்பார் என நான் நம்புகிறேன்.

இதே போன்றதொரு அனுபவம் நிச்சயமாக அப்போதிருந்த பெரிய மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கத்தான் செய்யும். அவர்களில் பலர் அதில் லயித்திருக்க பலர் அதை அப்படியே விட்டுவிட இராமசாமி என்ற ஒரு சிறுவன் மட்டும் தான் தன்னுடைய வாழ்வின் லட்சியமாகவே சாதியத்தை எதிர்ப்பதை மாற்றிக்கொண்டான்.

தொடரும்…

About editor 2992 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply