சோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)

சோழர் வரலாறு ( முற்காலம், இடைக்காலம், பிற்காலம்)

சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு, சேரன் நாடு என பெயர்களுண்டு. சோழர் நாடுகளின் ஊர் பெயர்கள் கோட்டை என்றும், பாண்டியர் நாடுகளின் ஊர் பெயர்கள் பட்டி என்றும், சேரன் நாடுகளின் ஊர் பெயர்கள் பாளையம் என்று முடிவடைவதையும் காணலாம்.

மேலும் சோழமண்டலம் தஞ்சை, கச்சி என்ற கூறையுடையது. பாண்டிமண்டலம் கொற்கை, கூடல் எனும் கூறையும், சேரமண்டலம் கொங்கு, கேரளம் எனும் கூறையும் உடையன.

சந்திர மரபினர் பெயர்கள் உசிதன், கவுரியன், கூடற்கோமான், கொற்கைவேந்தன், செழியன், தென்னவன், பஞ்சவன், பாண்டியன், மாறன், மீனவன், வழுதி, வையைத்துறைவன் என்பன.

அக்கினி மரபினர் பெயர்கள் உதியன், குடகன், குடக்கோன், கேரளன், கொங்கன், சேரலன், சேரலாதன், மலையமான், முத்தரையன், வஞ்சிவேந்தன், வானவரம்பன், வானவன், வில்லவன், பூலியன், பனந்தாரகன், பொறையன், கொல்லிவெற்பன், குட்டுவன் என்பன

சூரிய மரபினர் பெயர்கள்

மனு, இக்குவாகு, நல்லுத்தரன், புறஞ்சயன், மாந்தாதா, நாகன், மறையன், இராயன், முசுகுந்தன், வாளமரன், விசலன், நன்னி, ஓரி, காரி, கண்டியன், அம்பன், கள்ளியன், சோழன், மறவசோழன், வில்லியன், நன்னி என்பன

சூரிய மரபினர்களே பெரும்பான்மையும் சக்கரவர்த்திகளாக இருந்தனர் என்று சுந்தரபாண்டியன், திருக்களர், பத்தூர் முதலாய கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

சோழர் குலம்

கள்ளர் குலம் உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஏகாதிபதியாய் பல்லாயிரம் நகரங்களையும், எண்ணிறந்த கோயில்களையும் அளவற்ற ஆறுகளையும் கணக்கற்ற ஊர்களையும் உண்டுபண்ணி வாழையடி வாழை போல் ஆண்டு வந்த ஒரு பூர்வீக குடிகளென்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெங்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி, பன்னிருதிருமுறை, திருமொழிப்பிரபந்தம் மூலம் அறிய முடிகிறது. ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் கள்ளர். இப் பட்டங்கள் அரசன்,தலைவன்,வீரம், நாடு, நகரம், ஆறு, ஊர், கோயில், குளம், ஏரி முதலியவற்றுடன் சம்பந்தபட்டவை என்பதனை நன்குணரலாம்

சோழ மரபினர் சூரிய குலத்தினர் என்பது சங்கத்துச் சான்றோர் கருத்தாகும். செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் இதையே அறிவிக்கின்றன. இவர்களுடைய கொடியும் இலச்சினையும் புலியுருவம் பொறிக்கப் பெற்றவையாகும். ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. சோழ அரசர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய பேருபெற்ற திருவுடைய நகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையறை நகர் என்பன. இவற்றுள் உறையூரும், காவிரிப்பூம்பட்டினமும் சங்ககாலச் சோழருக்கும், தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழருக்கும் தலைநகரங்களாக விளங்கியவை. பழையறை நகர் சோழ அரசர்கள் பல்லவ அரசர்களுக்கு சிற்றரசராயிருந்த காலப்பகுதியில் வாழ்ந்த இடமாகும்.

ஆத்தி மலர்(ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை )

ஆத்தி ஒரு சிறிய மரம். சற்று குணக்கும் கோணலுமாக வளரும். இலைகள் இரண்டு சிற்றீலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1 – 2 அங்குல நீளமிருக்கும். இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும். பூ சற்று ஒரு தளச்சமமானது. புறவிதழ்கள்5 ஒன்றாகக்கூடி மடல் போல இருக்கும். நுனியில் 5 பற்கள் இருக்கும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும். வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை, தழுவு அடுக்குள்ளவை. விரைவில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. மேற்பக்கத்து இதழ் எல்லவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும்
கேசரங்கள் 10. சூலகத்திற்குச் சிறுகாம்பு உண்டு, பல சூல்கள் இருக்கும். கனி ஒரு சிம்பு. 6 – 12 அங்குல நீளமும் 3/4 – 1 அங்குல அகலமும் இருக்கும். மரம், பட்டை, வேர், இலை, பூ, கனி முதலியன மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை. பட்டை சொரசொரப்பாகவும் கருமை நிறமுடையதாகவும் நார் எடுத்து முரடாண பலம் வய்ந்த க்யிறு திரிப்பதற்கும் உதவும், மரம் பழுப்பு நிறமுடய கடினமான விறகாகும். ஆத்திக்கு ஆர் என்ற பெயரும் உண்டு. இது ஒரு வித மந்தாரையாகும். ஆங்கிலத்தில் பௌஹினியா ராசிமோசா என்ற பெயர் உண்டு.

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். சோழர் என்னும் பெயர் சூரிய குலத்தினரான கள்ளர் குலத்தினர் என்று வழங்கத்தொடங்கியது.  சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர்.

சோழர் வரலாற்றை மூன்றாக பிரிக்கலாம்  

1. வரலாற்றுக்கு முற்பட்ட சோழர்கள் (சரித்திரத்திற் குட்படாத முற்காலத்தவர்)
சூரியன்.
மனு.
இக்குவாகு.
ககுத்தன்.
புலியும்மானும் ஒரு துறையுண்ண ஆண்டவன்,
மாந்தாதா.
முசுகுந்தன்.
தேவர்க்கமுதமளித்தவன்.
வல்லபன்.
சிபி.
சுராதிராசன்.
சோளன்.
இராசசேகரி.
பரகேசரி.
காலனிடத்தில் வழக்குரைத்தோன்.
காந்தன்.
காகந்தி.
அனைத்துலகும் வென்றோன்.
வேந்தனைக் கொடியாக வைத்தோன்.
ஒருகடலில் மற்றொரு கடலைப்புக விட்டோன்.
தன் குருதியை உண்ணவளித்தோன்.
காற்றைப்பணிகொண்டோன்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செப்பியன்.
வானவூர்தி செலுத்தினோன்.
அரசர் சூளாமணி.
வீரவாதித்தன்.
சூரவாதித்தன் முதலியோர்.
மனுவுக்கு முன்னிருந்த சோழ மன்னவர் கணக்கற்றவர். அவர் பெயர் திட்டமாய்த் தெரியவில்லை.சோழர், திருவாரூர் சீகாழி உறையூர் புகார் தஞ்சை செயங்கொண்ட சோழபுரம் முதலிய பல நகரங்களைப் பல சமையங்களில் தலைநகராகக் கொண்டிருந்தனர்.

2. முற்கால சோழர்கள. (சரித்திரத்திற்கு பிற்கலத்தவர்)
உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னி.
கரிகாலன்.
கிள்ளிவளவன்.
தித்தன்.
பெருங்கிள்ளி.
நல்லுத்தரன்.
கோப்பெருஞ் சோழன்.
கோச்செங்கட் சோழன் முதலியோர்.
இவருள் கரிகால் வளவன் பனிமலையிற் புலியைப் பொறித்து நாவலந்தேசம்[india] முழுதும் தன் ஆணையைச் செலுத்தினான்.

3. பிற்கால சோழர்கள
சோழநாட்டின் பேரரசர்களாக இருந்தவர்கள் 

  1. விஜயாலய சோழன் (846 – 881)
  2. ஆதித்தியன் (880 – 907)
  3. பராந்தகன் (907 – 955)
  4. கண்டராதித்தியன் (955 – 957)
  5. அரிஞ்சயன் (957)
  6. சுந்தரசோழ பராந்தகன் (957 – 985)
  7. உத்தம சோழன் (973 – 989)
  8. இராஜராஜன் (985-1012)(மகள்)
  9. ராஜேந்திரன் (1012-1044) (மகள்)
  10. இராஜாதிராஜன் (1018-1054)
  11. ராஜேந்திரன் II (1052-1064) (மகள்)
  12. வீரராஜேந்திரன் (1063-1069)

சாளுக்கிய சோழர் தோற்றம் சோழர்களில் இருந்து சாளுக்கிய சோழர் எனும் புது வம்சம் தோன்றியது

  1. குந்தவை – விமலாதித்யன் (கீழைச் சாளுக்கியர்)
  2. அம்மங்கைதேவி – ராஜேந்திரன்
  3. ராஜேந்திரன்
  4. மதுராந்தகி – குலோத்துங்கன்

சாளுக்கிய சோழர்கள்சாளுக்கிய சோழர்களில் இருந்து மன்னர்களாக வந்தவர்களின் பட்டியல்

  1. குலோத்துங்கன் (1070 – 1120)
  2. விக்கிரம சோழன் (1120 – 1133)
  3. குலோத்துங்கன் II (1133 – 1150)
  4. இராஜராஜன் II (1150 – 1173)
  5. இராஜாதிராஜன் II (1173 – 1178)
  6. குலோத்துங்கன் III (1178 – 1218)
  7. இராஜராஜன் III (1218 – 1246)
  8. இராஜேந்திரன் III (1246 – 1257)

பிற்கால மற்றும் சாளுக்கிய சோழ மன்னர்களின் அட்டவண
அரசன் பெயர். ஆட்சியாண்டுகள்.  யாருடைய மகன்.  தலைநகரம்

01. விசயாலய சோழன் 848-871 அறியவில்லை தஞ்சாவூர்.

02. ஆதித்த சோழன் 871-907 விசயாலய சோழன் தஞ்சாவூர்.

03. முதலாம் பராந்தக சோழன் 907-955 ஆதித்த சோழன் தஞ்சாவூர்.

04. கண்டராதித்த சோழன் 950-957 முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்.

05. அரிஞ்சய சோழன் 956-957 முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் தஞ்சாவூர்.

06. இரண்டாம் பராந்தக சோழன் 957-970 அரிஞ்சய சோழன் தஞ்சாவூர்.

07. ஆதித்த கரிகாலன் 957-969 சுந்தர சோழன் காஞ்சிபுரம்.

08. உத்தம சோழன் 973-985 கண்டராதித்த சோழன் தஞ்சாவூர்.

09. முதலாம் இராஜராஜ சோழன் 985-1014 இரண்டாம் பராந்தக சோழன் தஞ்சாவூர்.

10. முதலாம் ராஜேந்திர சோழன் 1012-1044 முதலாம் ராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்.

11. முதலாம் ராஜாதிராஜ சோழன் 1018-1054 முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன் கங்கைகொண்ட
      சோழபுரம்.

12. இரண்டாம் ராஜேந்திர சோழன் 1051-1063 முதலாம் ராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன்       கங்கைகொண்ட சோழபுரம்.

13. வீரராஜேந்திர சோழன் 1063-1070 இரண்டாம் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்.

14. அதிராஜேந்திர சோழன் 1067-1070 வீரராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்.

15. முதலாம் குலோத்துங்க சோழன் 1070-1120 முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பெயரன்   கங்கைகொண்ட சோழபுரம்.

16. விக்கிரம சோழன் 1118-1135 முதலாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்.

17. இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133-1150 விக்கிரம சோழன் கங்கைகொண்ட சோழபுரம்.

18. இரண்டாம் ராஜராஜ சோழன் 1146-1163 இரண்டாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்.

19. இரண்டாம் இராஜாதிராஜ சோழன் 1163-1178 இரண்டாம் இராஜராஜ சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்       கங்கைகொண்ட சோழபுரம்.

20. மூன்றாம் குலோத்துங்க சோழன் 1178-1218 இரண்டாம் ராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்.

21. மூன்றாம் இராஜராஜ சோழன் 1216-1256 மூன்றாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்.

22. மூன்றாம் இராஜேந்திர சோழன் 1246-1279 மூன்றாம் இராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்.

சோழர் ஆட்சியின் வரைவிலக்கணம் என்ன?

நடுநிலை தவறாத ஆட்சி.
விழுப்புண்படாத நாளெல்லாம் வாழ்ந்தும் வீணான நாட்கள் என்ற படை மறவர்கள்
அறம் உரைக்கும் புலவர் பெருங்குடி மக்கள்
சான்றோர் நிறைந்த சமூகம்
அறநெறி பிறழாத குடிமக்கள்
நடுநின்ற நன்நெஞ்சு படைத்த வணிகர்கள்.

கி.மு. 3ம் நூற்றாண்டிற்கு முற்பட்டசோழர்
1. சிபி சோழச் சக்கரவர்த்தி
சிபி சக்கரவர்த்தி எல்லாச் சங்கப் புலவராலும், பிற்பட்ட கால புலவராலும், சோழ மரபின் முன்னோரைப்பற்றிய இடங்களில் எல்லாம் குறிக்கப்படுள்ளான். இவனது வரலாறு மகா பாரதம், இராமாயணம் முதலிய காப்பியங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ளது. பருந்திற்கு அஞ்சி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவினை காக்க தன் சதையை கொடுத்த பெருமை படைத்தவன். இவன் புகழ் குறிக்கும் தமிழ் நூல்கள்
புறநானூறு
சிலப்பதிகாரம்
கலிங்கத்துப்பரணி
மூவருலா
பெரியபுராணம்
சிபி சக்கரவர்த்தி என்று பெயரிட்டு நாம் வழங்கும் சோழப் பெரு வேந்தன் வரலாறு பாடிய தாமப்பல் கண்ணனார் புறநானூறு 43ஆம் பாடலில் உள்ளது.

சோழன் சிபி வரலாறு ‘கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்,
தன் அகம் புக்க குறுநடைப் புறவின்,
தபுதி அஞ்சிச் சீரை புக்க,
வரையா ஈகை உரவோன்’
என்று சோழன் சிபியின் வரலாற்றை இப் புலவர் குறிப்பிடுகிறார்.

புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டுருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது.

(சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான்.)

புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.

(பாரி முல்லைக்குத் தேர் தந்தது போலவும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், குமணன் தன் தலையை எடுத்துக்கொள்ளும்படி பெருஞ்சித்திரனாருக்கு வாள் தந்தது போலவும் சிபி தன்னைத் தந்ததும் கொடைமடம்.)

2. முசுகுந்த சோழன்

கருவூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழ மன்னன். சிறந்த சிவ பக்தன். இந்திரன் என்னும் பேரரசனுக்கு போரில் உதவி செய்து இந்திரன் பூசித்து வந்த ஏழு சிவலிங்களை பெற்று அவற்றைத் திருவாரூர் (வீதிவிடங்கத்தியார்), திருநாகைக் காரோணம் (சுந்தரவிடங்கத்தியார்), திருக்காறாயில்(ஆதிவிடங்கத்தியார்), திருக்கோளிலி(அவனிவிடங்கத்தியார்) திருமறைக்காடு (புவனிவிடங்கத்தியார்), திருநள்ளாறு (நகவிடங்கத்தியார்) திருவாய்மூர் (நீலவிடங்கத்தியார்) ஆகிய ஏழு திருப்பதிகளிளும் எழுந்தருளச் செய்தான். வெள்ளிடைமன்றம்(திருட்டு வெளியாக்கும்), இலைஞ்சிமன்றம் (கூன், குறள், ஊமை, செவிடு, பெருவியாதி போக்கும்), நெடுங்கல்மன்றம்
(நஞ்சருந்தல், பாம்பு கடித்தல், பேய் பிடித்தல் நீக்கும்), பூதசதுக்கம் (பொய்த்தவஞ் செய்வோர், பிறர் மனை நயப்போர், பொய்யுரைப்போர், புறங்கூறுவோர், தண்டனை அடையவும்), பாவைமன்றம் (அரசன் நீதிதவறினாலும், அரசனுக்கு தீங்குநேரிடுவதாயிருந்தாலும் பாவை நின்றலும்) என்னும் ஐவகை மன்றங்களையும் புகார் பட்டினத்தில் தாபித்தவன். முசுரி என்னும் ஊரையும் உருவாக்கி பூம்புகார் பட்டினத்தை நன்னிலை படுத்தி காவிரிப்பூம் பட்டினம் மேனாடுகளுடன் வாணிபம் சிறக்க உதவினான்.

கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல்நாளில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடிதோட் செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது.

இவன் புகழ் குறிக்கும் தமிழ் நூல்கள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கலிங்கத்துப்பரணி
கந்தபுராணம்
ஒரு துறை கோவை

3. காந்தன்
காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து அரசாண்ட சோழ மன்னன். அகத்திய முனிவரிடம் பேரன்புடையவன். அவர் அருளால் காவிரி தன் நாடு நோக்கி வருமாறு பாதை அமைத்தான். (காந்தன் காவிரி கொணர்ந்தான்) என்று மணிமேகலையில் ஒரு குறிப்புண்டு.

4. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், இவன் கடைச் சங்கக் காலத்துக்கும் முற்பட்டவன் என்பர். இவனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பரம்பரையின் முன்னோர்களில் ஒருவன் என்று புறநானூற்றுப் புலவர் (49) மாற்றோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.

இம் மன்னன் ஒரு சிறந்த வீரன். அகத்திய முனிவரது கோரிக்கையை ஏற்று காவிரிப்பூம் பட்டினத்தில் முதன் முதலில் இந்திரனுக்கு 28 நாட்கள் விழா எடுத்து சிறப்பித்தவன்.இவன் அழித்த அரண்கள் மூன்று என சிலப்பதிகாரம் செப்புகிறது. பகைவரது மதிலை அழித்த வீரவாளை அணிந்த தோளையுடையவன் என்பதால் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் என பெயர் பெற்றான். இவனது சிறப்புக்களை புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சிறுபாண் ஆற்றுப்படை, பழமொழி, கலிங்கத்துப் பரணி, மூவர் உலா முதலிய நூல்கள் கூறுகின்றன.

பொதியை மலையில் குடிகொண்டிருந்த தமிழ் முனிவன் அகத்தியன் இட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல் திருவிழாவைக் கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. ஒழுக்கங்களாலும் பெருஞ்சிறப்புகளாலும் போற்றப்பட்டும் சிறப்புகளைக் கொண்ட பெருமக்கள் வாழ்ந்திருந்த மாநகரமாகிய காவிரிப் பூம்பட்டினத்தை விழாக்கோலங்கொள்ளச் செய்து காதல் விழாநகரமாக மாற்றியவன் தொடித்தோட் செம்பியன். அவன், காதல் திருவிழாவை காதல் திங்கள் விழாவாக இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடினான் 1.

தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் கொண்டாடிய அவ்விழாவைப் பற்றிக் கூறும் இளங்கோ அடிகள், ‘வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன் என்று குறிப்பிடுகின்றார்

கி.மு. 3ம் நூற்றாண்டுச் சோழன்
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி சோழன் – கி.மு. 290 – 270
இளநகரை தலைநகராகக்கொண்டவன். பகைவருடைய வீரக்கழலையும், யானையின் துதிக்கையையும் எறிந்த காரணத்தினாலும் காவல் மிகுந்த வடுகரின் போர்ப்படை தங்கியிருந்த பாழி என்ற நகரை மீட்டதினாலும், கோசர், வடுகர், மற்றும் மோரியர் ஒன்று சேர்ந்த பெரும் போர்ப்படைகளை வென்றதனாலும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என பெயர் பெற்றான். ஊன் பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இவனை பற்றி புறநானூற்றில் குறிப்பிடுள்ளார். (பாடல் 370 மற்றும் 378)

*இளஞ்சேட்சென்னி*, பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன்.
இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம்
நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில்
உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய
நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும் ,அகநானூற்றிலும் இவனைப்
பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது  பெருங்குன்றூர் கிழார் என்பவரும்   இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.

கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.

இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால்
சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இருங்கோவேல் என்பவனால்
கொல்லப்பட்டான். இவன்காலத்துப் பிற மன்னர்கள்

வெல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னனும், பாண்டிய மன்னன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்பவனும் இளஞ்சேட் சென்னியின் சமகாலத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
கி.மு. 2ம் நூற்றாண்டுச் சோழர்

1. மனுநீதிச் சோழன் அல்லதுமனுநீதி கண்ட சோழன்
மனு சக்ரவர்தி எனும் மனு நீதிச்சோழன்.

ஆரூர் என்னும் நகரத்தை யுண்டுபண்ணி இரரசதானியாகக் கொண்டவன்.பல யாகங்களை செய்து நீதி, நேர்மை, கடமை போன்ற நற்செயல்களுக்கு பெயர் பெற்றவன். பசுவின் கன்றின்மேல் தேரைச் செலுத்தி கொன்ற தன் மகனாகிய இக்குவகுவைத் தேர்க்காலில் வைத்து அரைத்துக் கொன்றவன். சூரியன் மரபில் வந்தமையால் மால், சூரியன் என்னும் பட்டங்களையும் சுமந்தவன். இவனது குலம் சூரியகுலம், மனுகுலம் என்றும் வழங்கலாயிற்று. இலங்கையின் வரலாறு பற்றி கூறும் மகாவம்சம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இலங்கை அரசனான அசேலனை சோழ மன்னன் எழ்ளாளன் (ஏழரரன்) என்பான் போரில் வென்று 45 வருடங்கள் ஆட்சி செய்ததாகவும் பின்னர் இலங்கை அரசன் துட்டகாமினியிடம் அரசை பறிகொடுத்ததாகவும் கூறுகிறது.

மேலும் மகாவம்சம் மகனை தேர் ஏற்றி கொன்ற உத்தமன் சோழமன்னன் ஏழரரன் என்றும் பெளத்த துறவிகளிடம் பேரன்பு காட்டி வந்தான் என்றும் கூறுகிறது. இவன் ஆண்ட பகுதி இலங்கையின் வட பகுதி என்றும், துட்டகாமினிக்கும் எல்லாளனுக்கும் போர் நடந்த இடம் அநுராதபுரம் என்றும் எல்லாளன் போரில் இறந்த பின்னர் அவனுக்குரிய இறுதிக்கடன்களை செய்து அவன் இறந்த இடத்தில் நினைவுத் தூபி அமைத்து வழிபாடு நடை பெறச் செய்தான் என்ற பல தகவல்கள் மகாவம்சத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இச்செய்திகள் சிலப்பதிகாரம், மணிமேகளை போன்ற பழைய நூல்களில் இடம்பெறவில்லை. மகனை தேர் ஏற்றி கொன்ற ஒரே அரசன் மனுச்சோழன் என்பதால் மனுச்சோழனின் மறு பெயர் ஏலாளன் என்று இருக்கக்கூடும்.

‘கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்நதான்’ என்று பழமொழி நானூறு (93) குறிப்பிடுகிறது.
சோழ நாட்டின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச் சோழன் பற்றிக் கண்ணகி குறிப்பிடுவதாகச் சிலப்பதிகாரத்தில் வருகிறது. இக்காப்பியத்தில் வேறு சில இடங்களிலும் இதை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூலான பழமொழி நானூறு என்னும் நூலிலும்  எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. சோழர் காலத்து நூலான சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே மனுநீதிச் சோழன்  பற்றி விரிவாகக் காணப்படுகிறது. இவை தவிரச் சோழ மன்னர் பெருமை கூற எழுந்த இராசராசசோழன் உலா, விக்கிரமசோழன் உலா, குலோத்துங்கசோழன் உலா என்பவற்றிலும் மனுநீதிச் சோழன் பற்றி வருகின்றன.

முன்னர், சோழர் பெருமை கூறுவதற்காக மட்டும் பயன்பட்டுவந்த மனுநீதி தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்தினதும் நீதி முறைசார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன்பட்டுவருகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை இருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

தொன்மம் என்று கருதத்தக்க மனுநீதிச் சோழனின் மனுநீதி பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தெரிந்த தாகும். இக்கதை பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் இடம் பெற்றிருப்பதைக் காணமுடியும்.

திருவாரூர் தியாகராயர் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் வடக்குச் சுவரில் உள்ள விக்கிரமச் சோழன் கல்வெட்டில் (தெ.இ.க. 5; 456) மனுநீதிச் சோழன் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இக் கல்வெட்டில் மனுநீதிச் சோழனின் அமைச்சனது பெயர், இங்கணாட்டு பாலையூருடையான் உபயகுலாமவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக  மனுநீதிச் சோழனின்அமைச்சனுக்கு ஒரு தெளிவான அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. சேக்கிழார் காலத்துக்குப் பிந்தைய கல்வெட்டு இது.

சோழர் ஆட்சிக்காலத்தி;ல் அரசநீதியாக மனுநீதி விளங்கியது. இதை சோழர்கால மெய்கீர்த்திகள் வாயிலாக அறியலாம். ‘மனுவாறு விளங்க’, ‘மனுநெறி’, ‘மனுவொழுக்கம்’ என்ற சொல்லாட்சி சோழர்கால மெய்கீர்த்திகளில் பரவலாக இடம்பெற்றுள்ளது.

மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் பதினொன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் (தெ.இ.க III பகுதி 1, 2; 86, 87) மெய்கீர்த்தியாக மனு நீதி முறை வளர மனு நீதி தழைத்தோங்க  என்ற தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

செஙகல்பட்டு மாவட்டம் மப்பேடு கிராமத்து சிவன் கோவிலிலும், தஞ்சை மாவட்ட கடம்பவனேசுவரர் கோவிலிலும் மனுநீதிச் சோழன்  தொடர்பான சிற்பங்கள் உள்ளன (தகவல்: முனைவர் வெ. வேதாச்சலம், கல்வெட்டாய்வாளர்).

பெரிய புராணத்தை அதன் மூலத்திலிருந்து விலகாது உரை நடையில் எழுதிய தி. பட்டுசாமி ஓதுவார் (2005; XIII) மனுநீதிச் சோழன் என்ற தலைப்பில்  “இவன், ஏழரான் (ஏழ் 10 ஆரன்ளூ ஏழு மாலைகளை அணிந்தவன் அல்லது ஏழு அரசரை வென்று சூடிய ஏழு மாலைகளையுடையவன்) என்னும் பெயர் உடையவன் கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இலங்கை மீது படையெடுத்து அசேலன் என்பவனை வெற்றி பெற்றவன்.”   என்ற குறிப்பை எழுதியுள்ளார்.

2. முதற் கரிகாலன்
முதற் கரிகாலன் கி.மு 120 – கி.மு. 90

இவன் சென்னி மரபைச் சேர்ந்தவன். அழுந்தூரை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன். பின்னர் குடவாயிலையும் தன் கோநகரமாகக் கொண்டான். இவன் பதினொரு வேளிரையும் அவருடன் வந்து மலைந்த வேந்தர்களையும் வெண்ணி வாயில் என்ற இடத்தில் வென்றான். பின் ஒரு கால கட்டத்தில் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் ஒன்பது அரசர்களை வென்று புறங்காட்டி ஓட வைத்தான். திதியன் என்பான் இவனது படைத்தலைவனாவான். சேரன் பெருஞ்சேரலாதன் இவனுடன் வெண்ணிப் பறந்தலையிற் போர் செய்து, கரிகாலன் எய்த அம்பில் மார்பில் துளையிட்டு ஊடுருவி முதுகினின்றும் வெளியேறியது. முதுகில் காயம் பட்டமையால் வெட்கம் தாங்கமல் சேரன் பெருஞ்சேரலாதன் கையில் பிடித்த வாளுடன் வடக்கிருந்து பட்டினி கிடந்து உயிர் துறந்தான்.

தோற்றமும் வரலாறும்
சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், பரணர் கழாத்தலையார் ஆகிய புலவர்களால் பாடப்பட்ட வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இன்னொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்.

கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன் இரண்டாம் கரிகாலன் (இமயம் வரை சென்றவன்)

இவன் திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான் எனும் பெயர்களையும் பெற்றவன். இளஞ்செட்சென்னிக்கும் அழுந்தூர்வேள் பெருமாட்டிக்கும் பிறந்த மகனாவான். இளஞ்செட்சென்னி முடிபுனைந்து அரசாண்டவன் இல்லை. அரசனுக்கு இளையவன். கரிகாற் பெருவளத்தான் பல கலைகளையும் கற்று சிறந்த வீரனாக இருந்தான். இவனது பெரிய தந்தையாகிய அரசனும், இவன் தந்தையும் அடுத்தடுத்து இறக்கவே நாட்டில் குழப்பம் ஏற்பட்டு திருமாவளவன் உறையூரினின்று வெளியேறி பல இடங்களில் அலைந்து திரிந்தான். அக்கால மரபுப் படி பட்டத்து யானை பல இடங்களிலும் அலைந்து திரிந்து கருவூரில் இருந்த திருமாவளவனை தேர்வு செய்து தன் மீது ஏற்றிக்கொண்டு உறையூரை அடைந்தது. திருமாவளவன் அரசனாக முடி சூடிக்கொண்டான். கயவர்கள் சிலர் இவன் மீது புகார் கூறி சிறையில் அடைத்து சிறைக்கு தீயும் இட்டனர். சிறையில் இருந்து தப்பி தன் தாய் மாமன் உதவியுடன் பகைவரை வென்று மீண்டும் அரியணை அமர்ந்தான்.

இவனே  இரண்டாம் கரிகால் சோழனின் தந்தையாவான். புறநானூற்றில் இவனைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே, கரிகாலன், தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான். முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். கரிகாலனுடைய அம்பு சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று தகவல் தருகிறது. பாண்டிய மன்னர்களையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். முற்காலச் சோழர்களில் பிற்காலத்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில், நல்லுருத்திரன், கோச்செங்கண்ணன் ஆகிய மன்னர்களின் பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

கல்லணை
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது.   தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலைபொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 40 முதல் 60 அடி வரை உள்ளது. 15 முதல் 18 அடி ஆழத்தில் நிறுவப்பட்ட இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

இறந்தோன் அவனே!
பாடியவர்: கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்;
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி,
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,
பருதி உருவின் பல்படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்;
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்
அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப்,
பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்,
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்,
பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்துகட்டு அழித்த வேங்கையின்,
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.

சோழ மன்னர்களின் பட்டியல்
முற்காலச் சோழர்கள்

கி.பி. 1 முதல் கி.பி 150 வரை ஆண்ட சோழர்கள்
1. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான்
2. கிள்ளிவளவன்
3. பெருநற்கிள்ளி
4. கோப் பெருஞ்சோழன்

கி.பி. 150 முதல் கி.பி 300 வரை ஆண்ட சோழர்கள்
1. நெடுமுடிக்கிள்ளி
2. இளங்கிள்ளி முதலியோர்.

வேறு முற்கால சோழ அரசர்கள் சிலர்.

(இவ்வரசர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டிருந்தாலும் மிகுதியான வரலாற்று செய்திகள் அறிவதற்கு ஏதும்இல்லை)
01. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
02. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி
03. வேல்பல் தடகைப் பெருநற்கிள்ளி
04. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி
05. தித்தன்
06. சோழன் நல் உருத்திரன்
07. முல்லைக்கலி சோழன்
08. நல்லுத்தரன்
09. குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
10. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
11. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
12. வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி
13. அத்திரிசோழன்
14. அரியசந்திரசோழன்
15. அண்டசோழன்
16. அடைவளைசோழன்
17. அன்னசோழன்
18. அன்பசோழன்
19. ஆந்தைசோழன்
20. ஆதனழிசிசோழன்
21. ஆலங்கிள்ளிசோழன் (ஆலசோழன்)
22. ஆதிராசேந்திரசோழன்
23. ஆனைச்சேவகசோழன்
24. அபயகுலசேகரசோழன்
25. கலிக்காமசோழன்
26. கடம்பசோழன்
27. கடையசோழன்
28. கண்டர்கிள்ளிசோழன்
29. காங்கமசோழன்(காந்தமசோழன்)
30. கிள்ளிசோழன்
31. கொள்ளிசோழன்
32. குடசோழன்
33. குருசோழன்
34. குமாரமகீதரசோழன்
35. கூரசோழன்
36. கொள்ளிசோழன்
37. கோப்பெருஞ்சோழன்
38. பஞ்சநதசோழன்
39. பாண்டுசோழன்
40. பாலையசோழன்
41. பாதிரிசோழன்
42. பாம்பசோழன்
43. புத்திகழிசோழன்
44. பசுபோகசோழன்
45. புகழ்ச்சோழன்
46. புலவசோழன்
47. பூதசோழன்
48. பெருந்திருமாவளவசோழன்
49. பெரும்பற்றசோழன்
50. பைஞ்ஞீலசோழன்
51. பொன்னசோழன்
52. பெரியசோழன்
53. பேரெயில்சோழன் (பேர்சோழன்)
54. மண்ணிசோழன்
55. மயில்சோழன் (மயிலாடுசோழன்)
56. மறவசோழன்
57. மஞ்சசோழன்
58. மதுராந்தகசோழன் (சோழவல்லபன்)
59. மாந்தைசோழன்
60. முள்ளிசோழன்
61. வடமசோழன்
62. வாஞ்சிசோழன்
63. வாலிசோழன்
64. வீரவாதித்தசோழன்
65. வெட்டுவசோழன்
66. வெண்டசோழன்
67. வெண்ணிசோழன்
68. சந்திரசோழன்
69. சங்கரசோழன்
70. சாளுவசோழன்
71. சித்தசோழன்
72. சிரசோழன்
73. சுந்தரசோழன்
74. செங்கமலசோழன்
75. சென்னிசோழன்
76. சேந்தசோழன்
77. நல்லுருத்திரசோழன்
78. நீவசோழன்
79. ஓடம்போகிசோழன்
80. ஐவசோழன்
81. உலகநாதசோழன்
82. ஈச்சோழன்
83. தக்கோலசோழன்
84. திருமலைசோழன்

இளஞ்சேட்சென்னி
கரிகால் சோழன்
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கண்ணன்
பெருநற்கிள்ளி

இலங்கையில் எல்லாளன் வரலாறு

எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவு செய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது. மகாவம்சத்தின்படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்த ஒரு மன்னன் ஆவான்.

கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர். இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை. ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் சிங்கள இனத்தின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகாமினியின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.

சேனனும் குத்திகனும்
கி.மு 177 ஆம் ஆண்டு சேனன், குத்திகன் ஆகிய தமிழ் மன்னர்களால் அனுராதபுர அரியணை சூரத்தீசன் எனப்படும் சிங்கள மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அரியணையை இழந்த சூரத்தீசன் தப்பி ஓடினான். அரியணையை கைப்பற்றிய சேனனும் குத்திகனும் நீதியான ஆட்சி நடத்தியதாக மகாவம்சம் கூறுகிறது. பெளத்த பிக்குகளும் அவனை ஆதரித்திருந்தனர். 22 வருடங்களின் முடிவில் கி.மு 155 ஆம் ஆண்டு சிங்கள இளவல் அசேலனின் சேனை அனுராதபுரத்தினை கைப்பற்றிக்கொண்டது. அசேலன் என்பவன் சூரத்தீசனின் தமையனான மகாசிவனின் ஒன்பதாவது மகன் ஆவான்.

எல்லாளன் பற்றி மகாவம்சம்
எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின்நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் கூறுகிறது. எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் மகாவம்சம், அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் சயன அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் கோட்டைவாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.

  • எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். ஒருநாள் ஒரு தேரில் திஸ்ஸவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.  (The Mahavamsa மு.கு.நூல். அதிகாரம் : XXI   வரி : 15 – 18)
  • பாம்பொன்றுக்கு இரையான குஞ்சையிழந்த தாய்ப்பறவை ஆராய்ச்சி மணியை அடித்தது. மன்னன் அந்தப்பாம்பினைப்பிடித்து வரச்செய்து, அதன் வயிறு கீறப்பட்டுக் குஞ்சு வெளியில் எடுக்கப்பட்டது. பின்னர் பாம்பு மரத்தில் தொங்கவிடப்பட்டது. ( The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 19 – 20)
  • ஒரு வயோதிப மாது வெயிலில் அரிசியைக் காயப்போட்டிருந்த போது, பருவம் தப்பிப் பொழிந்த மழையால் அரிசி முழுவதும் பழுதடைந்து போனது. அவள் எல்லாளனிடம் முறையிட்டபோது, அவன் வருணனிடம் வாரத்திற்கொருதடவை இரவில் மட்டும் மழை பொழிய வேண்டுதல் விடுத்ததாக மகாவம்சம் வருணிக்கிறது. ( The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 27 – 33 )

துட்டகாமினி
காக்கவண்ணதீசனினதும் விகாரைமகாதேவியினதும் மூத்தமகன் காமினி அபயன் ஆவான். இவன் தந்தையின் சொல்கேளாது இருந்தமையால் பிற்காலத்தில் துட்டகாமினி என அழைக்கப்பட்டான். துட்டகாமினி கருவிலிருந்தே தமிழருக்கெதிராக உருவாக்கப்பட்டவன். துட்டகாமினி ஒருமுறை கட்டிலில் கால்களை முடக்கிப்படுத்திருந்தபோது தாய் ஏன் என வினாவினாள், அதற்கு ‘வடக்கே தமிழரும் தெற்கே சமுத்திரமும் நெருக்கும்போது எப்படியம்மா கால்களை நீட்டி படுக்கமுடியும்’ என்றான்.

இவ்வாறு இனவெறியூட்டப்பட்டு வளர்த்த துட்டகாமினி தன் தந்தையின் மறைவிற்குப்பின் பெரும் சேனயுடன் எல்லாளனின் மீது படையெடுத்தான். நீண்ட நாள் தொடர்ந்த போர் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் சலிப்படைந்த துட்டகாமினி இறுதியில் வயது முதிர்ந்த நிலையிலிருந்த ‘கிழப்புலி’ எல்லாளனை தனிச்சமருக்கு வரும்படி வஞ்சக அழைப்பை விடுத்தான். நிகழ்ந்த போரில் எல்லாளன் தோல்வியுற்று இறந்தான்.

இளஞ்சேட்சென்னி
பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார் என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.

கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது.

இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் தாய் வயிற்றில் இருக்கும்போதே இளஞ்சேட் சென்னி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

கரிகால் சோழன்

இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்

நெடுங்கிள்ளி.

முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சிபீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது.

கோவூர்க் கிழார் என்னும் புலவர் பாடிய 44 ஆம், 45 ஆம் புறநானூற்றுப் பாடல்கள், இவ்விரு சோழர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதனால் மக்களும், விலங்குகளும்கூடப் படும் துன்பங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது. அது மட்டுமன்றி இரு சோழர்களுக்கும் இடித்துரைத்து ஆலோசனை கூறும் தொனியையும் இப் பாடல்களிலே காண முடிகின்றது.

நலங்கிள்ளிக்கு எதிராகப் போர் புரிந்த நெடுங்கிள்ளியைப் பற்றி,
இவ்விருவரையும் சமாதானப்படுத்த முயன்று கோவூர்க்கிழார் பாடிய இரு பாடல்களில் காண்கிறோம். உறையூரை நலங்கிள்ளி, முற்றுகையிட்டு அங்கு நெடுங்கிள்ளியை சிறை வைத்தான் என்று ஒரு பாடல் கூறுகிறது. கீழ்க்காணும் இப்பாடல் இம்முற்றுகையின் விவரங்களை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

உறையூரில் கோட்டைக்கட்டி ஆளும் நெடுங்கிள்ளியே, உன் கோட்டையை நலங்கிள்ளி முற்றுகையிட்டிருக்கிறான். நீயோ அதைப் பொருட்படுத்தாமல் உன்னுடைய கோட்டைக்குள் கவலையின்றி இருக்கிறாய். இது கோழையின் செயல்; வீர
அரசர்களுக்கு ஏற்குமா? ஒன்று கோட்டையை விட்டு வெளியே வந்து அவனுடன் போரிடுக; அல்லது அவனுடன் சமாதான உடன்பாட்டைக் காண்க; இரண்டும் கெட்டான் நிலையில், மக்கள் துன்பப்பட்டுகிறார்கள். யானைகள் உணவின்றி தவிக்கின்றன.
பெண்டு பிள்ளைகள், குழந்தைகள் எல்லாம்கூட பட்டினியால் தவிக்கின்றனர். உன் ஆட்சிக்கு இதெல்லாம் இழுக்கு அல்லவா? நீயாகிலும் ஆட்சி செய்; அல்லது அவனையாகிலும் ஆளவிடு. (புறம். 44)

நலங்கிள்ளியின் பகுதியிலிருந்து உறையூருக்குள் வந்த இளந்தத்தன் என்ற
ஒரு புலவரை ஒற்றர் எனக்கருதி, அவரைத் தூக்கிலிட இவன் உத்தரவிட்டான். ஆனால் அங்கு இருந்த கோவூர்க்கிழாரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. இது சங்ககாலப் புலவர்களின் வாழ்க்கை முறையை தெரிவிக்கிறது.

இளந்தத்தன் என்ற புலவர், நலங்கிள்ளியிடம் பரிசில் பெற்ற பிறகு,
நெடுங்கிள்ளியிடம் பரிசல் பெற வருகிறார். நலங்கிள்ளியிடமிருந்து வருவதால் புலவர் ஒற்றராக இருக்கலாம் என்று அச்சப்படுகிறான் நெடுங்கிள்ளி. ஐந்தாம் படைப் பேர்வழிகளைப் போல அவரைக் கொன்றுவிடவும் முடிவு செய்கிறான். இது தகுமோ? புலவர் ஒற்றர் அல்லர், அவர்கள் வறுமையால் வாடுபவர்கள், பழுத்த மரத்தை நாடிச்செல்லும் பறவைகள் போல, வள்ளல்களைத் தேடிச்செல்வது அவர்களுடைய
இயல்பு. பொருள்பெற்று, சுற்றத்தை வாழ வைக்க வேண்டியது புலவர் கடமை. அவர்கள்
ஒரு நாளும் பிறருக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள். தங்களை இகழ்ந்தார்
நாணும்படி நடந்து கொள்வர். மண்ணை ஆளும் அரசர் போல அவர்களும் தலைமையே
விரும்புவர்.

நலங்கிள்ளி
முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)

தன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.

பெரியபனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது (புறம். 45)

இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும். என்பதை அறிகிறோம்.

இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.

நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என்நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஓப்புவத்துவிடுவேன், கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியைஎழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக

கிள்ளிவளவன்

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப்பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.

இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்குமிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு கீழ்வரும் செய்யுமாறு கீழ்வரும் பாட்டினை அவர் பாடியுள்ளார்.

சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக்குறித்து பல நாட்கள் சிறப்பாகப் பேசுகின்றன. தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இதைப்பற்றி மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் புலம்புகின்றார்.

இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் இவன் காட்டிய கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். வெற்றிபெற்ற சோழமன்னன் மலையமானின் குழந்தைகளுக்கு அளித்த மரணதண்டனையிலிருந்து அவர்கள் தப்பி விடுதலை பெறச்செய்து இவர்களைப்போன்ற ஒரு புலவர் எழுதிய ஒரு பாடலே.

இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய கழுமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன.

கோப்பெருஞ்சோழன்.
உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன். அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்.

கோச்செங்கணான்
கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும். திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது.

நடுத்தர அளவிலான களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகேயுள்ள கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது. சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று அவனை செங்கணான் சிறைப்பிடித்தான்.

திருநாறையூரைப்பற்றத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம். செங்கணானின் பகைவனுடைய யானைப்படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப்படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்த, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் பரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப்போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார். ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.

சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.

மாடக்கோவில்கள்
தமிழகத்தில் உள்ள கோவில்களை கூடக்கோவில், கொடிக்கோவில், மாடக்கோவில் என மூன்று வகையாக கூறலாம். இவற்றில் மாடக் கோவில்களின் அமைப்பு விதியாசமாக இருக்கும். மற்ற கோவில்களில் சுவாமி சன்னதி நுழைவு வாயில்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும்.ஆனால் மாடக்கோவில்களின் நுழைவு வாயில்கள் குறுகலாக இருக்கும். யானைகள் நுழைந்து விடக்கூடாது என்பது இதன் காரணம்.

புவியாண்ட மாமன்னன் கோச்செங்கசோழன் தான் மாடக்கோவில்களை கட்டிய முதல் மன்னன். இவன் யானைகள் நுழையாதபடி 70 சிவாலயங்களையும் மற்றும் 3 திருமால் கோவில்களையும் கட்டிய பெருமை பெற்றவன்.மேலும் அதிக சிவன் கோவில்களை கட்டிய மன்னன் என்ற பெருமை பெற்ற இம் மன்னனின் பிறப்பு மிகவும் வியக்கத்தக்கது.

இவனது தாய் சோழ அரசி கமலாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது அரச ஜோதிடர்கள் இந்ந பிறக்கும் குழந்தை இன்னும் சிறிது தாமதமாக பிறந்தால் உலகம் போற்றும் மாபெறும் மன்னனாக இருப்பான் என்றனர். இதனை அறிந்த அரசி அந்த நல்ல நேரம் வரும்வரை தன்னை தலைகீழாகக் கட்டி தொங்க விட ஆனையிட்டாள். நல்ல நேரம் வந்ததும் அவிழ்த்து விடப்பட்ட அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டதனால்
பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன ஆனால் அரசி இறந்துவிட்டார்.சிவந்திருந்த கண்கள் பெற்ற குழந்தைக்கு கோச்செங்கண் என்ற பெயர் சூடினர்.

காவிரிக் கரையில் திருவானைக்காவல் என்னும் சிவதளத்தில் கோச்செங்கண் கட்டிய முதல் மாடக்கோவில் இன்றும் நம்மை வியக்கவைக்கிறது.
சிவாலயங்களில் மாமன்னன் கோச்செங்கசோழனுக்கு மாசி மாத சதய நட்சத்திரத்தில் விழாக்களும் சிற்ப்பு பூஜைகளும் ஆரதனைகளும் நடத்தப்படுகிறது.மாடக்கோவில்கள் என்ற கலைச்சிற்பங்களை எமக்களித்த வான் புகழ் கோச்செங்கசோழன் என்ற கள்ளர் குல மா மன்னனை நாம் நினைவு கொண்டு கள்ளர் இன மக்களாகிய நாம் பெருமை அடைவோம்

திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேசுவரர் ஆலயம்.
மூலவர் ஸ்ரீ ஜம்புகேசுவரர். கல்வெட்டுகளில் திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர் என்னும் பெயர்களால் மூலவர் குறிக்கப்படுகிறார்.
தல விருட்சம்- வெள்ளை நாவல் பழம் கொண்ட வெண்ணாவல் மரம்.
வேதங்களில் நான்கு தூண்களாகப் போற்றப்படும் தலங்களில் முதலிடம் பெருவது திருவனைக்காவல். மற்றவை திருவாரூர், மகேந்திரப்பள்ளி, திருவண்ணாமலை.
தமிழக சிவாலயங்களிலேயே மிகவும் பெரிய பரப்பளவு கொண்டதாக கருதப்படுவது திருவானைக்காவல் திருக்கோயில். சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பாக கோச்செங்கட் சோழ மன்னனால் யானைகள் நுழைய முடியாதபடி கட்டப்பட்டது. சுமார் 18 ஏக்கர் பரப்பளவுடன் 5 பிரகாரங்கள், 7 கோபுரங்கள் மற்றும் 9 தீர்த்தங்களுடன் திகழ்கிறது. 7 கோபுரங்களில் ராஜகோபுரம் 88.5 அடி உயரமும், மல்லப்பகட்ட கோபுரம் 60.5 அடியாகவும், கார்த்திகை கோபுரம் 98.5அடியாகவும், ஆரவிட்டான் கோபுரம் 68 அடியாகவும், மணிமண்டப கோபுரம் 46.5 அடியாகவும்,சங்கமேஸ்வரர் கோபுரம் 77 அடியாகவும்,சுந்தரபண்டியன் கோபுரம் 110 அடியாகவும் அமைந்துள்ளது இத் திருக்கோயில். 5ம் பிரகார மதில்களின் மொத்த நீளம் 7864 அடியாகவும் உள்ளது, 4ம்பிரகாரத்தின் நீளம் 8000 அடிகளாகவும், 6 அடி அகலம் கொண்டும் 35 அடி உயர மதில் சுவர்களையும் கொண்டுள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தின் சிறப்பை திருஞானசம்பந்தர் 21 பாடல்களாலும், திருநாவுக்கரசர் 20 பாடல்களாலும், சுந்தரர்10 பாடல்களாலும், மாணிக்கவாசகர் ஓரடியும் கொண்டு பாடியுள்ளனர். மேலும் இத் தலம் குறித்து அருணாகிரிநாதர் 14 பாடல்களும், ஆதிசங்கரர் (அக்ஷரமாலிகை) அய்யடிகள் காடவர்கோன்(சேத்திர திருவெண்பா) காளமேகப் புலவர் (திருவானைக்கா உலா) கச்சியப்பர்(திருவானைக்கா புராணம்) கமலை ஞானப்பிரகாசர் (தந்திவனப் புராணம்) மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை (அகிலாண்டநாயகி மாலை மற்றும் பிள்ளைத் தமிழ்) வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்(யமக நூல்) சுப்பையர் அடிகள்(பதிற்றுப் பத்தந்தாதி) சைவ எல்லப்ப நாவலர்(செவ்வந்தி புராணம்) மனொன்மணி அம்மையார் (திருவானைக்கா அகிலாண்ட அந்தாதி) சாம்பசிவ கவிராயர் (அகிலாண்டேசுவரி பதிகம்) ஆகியோரும் இத் தலத்தைப் போற்றிப் பாடியுள்ளனர்.

கோச்செங்கட் சோழனுக்குப் பிறகு வந்த விஜயபால் அகளங்க வளவன் 2ம் பிரகார மதில், கோபுரம், மற்றும் மண்டபம் ஆகியவற்றை கட்டியுள்ளான். மூன்றாம் திருச்சுற்று மதில், கோபுரம், மற்றும் சில மண்டபங்களை விக்கிரம சோழன் அமைத்துள்ளான். இத் திருக்கோயில் 156 கல்வெட்டுகளை கொண்டுள்ளது. இக்கல் வெட்டுகள் மூலம் ராஜகேசரிவர்மன் என்னும் 3ம் ராஜராஜ சோழதேவன் (கி.பி 1254) முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1127) மூன்றாம் குலோத்துங்க சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய சோழ மன்னர்களும், பாண்டிய, சேர மன்னர்களும் அளித்த நிலக்கொடைகள் மற்றும் திருப்பணிகள் செய்த விபரங்கள் தெரிய வருகிறது.

சிவபக்தியால் நாயன்மார்களுள் ஒருவரான இக் கோவிலை கட்டிய கோச்செங்கட் சோழனுக்கும் விமானத்துடன் கூடிய சந்நதி ஒன்று இக் கோயிலில் உள்ளது.

திருவானைக்கா கோயிலுக்குள் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ளது போல் 108 இடங்க ளில் பிள்ளையார் காட்சி அளிக்கிறார்.
சகஸ்ர லிங்கம் 1008 லிங்கங்கள் கொண்டது. ஸ்ரீ சனீஸ்வரர், தன் அன்னை சாயாதேவி, மற்றும் மனைவியுடன் குடும்ப சகிதமாக காட்சி அளிக்கும் சனிபகவானை வேறெங்கும் காண்பது அரிது.
மூன்றாம் பிரகாரத்தில் முருகன் சந்நதிக்கு முன்பாக வாயில் உருண்டைக்கல்லுடன் சிங்கத்தின் சிலை உள்ளது.இக்கல்லை வாய்க்குள்ளேயே உருட்டமுடியும் வெளியே எடுக்க முடியாது.
இக் கோயில் ஊஞ்சல் மண்டப தூண் ஒன்றில் ஒரே சிற்பத்தில் காளை மற்றும் யானையின் உருவங்களை காணமுடிகிறது. காளையை பார்க்கும்போது யானையும், யானையை பார்க்கும்போது காளையும் தெரியாது என்பது இதன் சிறப்பு.

பெருங்கிள்ளி
சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.

தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக, மிளiரும் நகைகளை அணிந்த வேலைக்காரப்பெண்கள் தங்ககுவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும் வெண்கொற்றக் குடைகளும் வீரத்தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க.

பெருங்கிள்ளிக்கும், சேரமன்னன் மாஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையான் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாக போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியவில்லை.

தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.

உறையூர்
உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது.

காவிரிப்பூம்பட்டினம்
காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், இன்னொரு துறைமுக நகரான நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இவ்விரண்டு பல்லின மக்கள் வாழ்ந்த நகரங்களும், வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறீத்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமரின் நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  

தஞ்சாவூர்
சிறப்புமிக்க தஞ்சைத்தரணி
சோழநாடு தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிசெய்யப் பட்ட பகுதியாகும். தஞ்சை என்பதற்கு “குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி” என்று பொருள். பெருகி வரும் காவிரியாற்றால் இப்பகுதி வளம் மிக்கதாகத் திகழ்ந்தது. இவ்வூர் பற்றிய மிக பழமையான குறிப்புகள் திருச்சி மலைக்கோட்டை பல்லவமன்னன் சிம்ம விஷ்ணுவின்(கி.பி.555- 590) கல்வெட்டில் இடம் பெற்று உள்ளது. தஞ்சையில் பெரியகோயில் கட்டப்படுவதற்குமுன் “தஞ்சை தளிக்குளத்தார் கோயில்’ இங்கு இருந்ததாகத் தெரிகிறது. தற்போதும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பெயராலேயே இவ்வூர் “தஞ்சாவூர்’ என அழைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

உலகிற்கு ஆன்மிகக் கருத்தையும், பண்பாட்டுச் சிந்தனையையும் வாரி வழங்கி வரும் தமிழகத்திலுள்ள தஞ்சை மண்டலத்தை கி.மு.,இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி., 13ம் நூற்றாண்டு வரை 1,500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சோழ அரச மரபினர் ஆட்சி செய்து வந்தனர். அவர்களின் முதல் 400 ஆண்டு கால ஆட்சிச் சிறப்பைச் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது. காவிரியில் கல்லணை கட்டி, காடு திருத்தி, நாட்டை வளம் பெறச் செய்த கரிகாற் பெருவளத்தான் என்ற சங்க காலச் சோழ மன்னன் கி.பி., முதலாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தான். தொடர்ந்து சோழப் பரம்பரையின் புகழ் சிறிது குன்றி யிருந்தாலும், ஆட்சி தொடர்ந்து நடந்தது. கி.பி., 850ம் ஆண்டு சாத்தன் பழியிலி என்ற முத்தரையர் குலச் சிற்றரசனிடம் போரிட்டு 90 விழுப்புண்களை பரகேசரி விஜயாலயச் சோழன் பெற்றான்.இவன் தான் தஞ்சாவூர் நகரைக் கைப்பற்றி, தனது தலைநகராகக் கொண்டு, தஞ்சைச் சோழப் பரம்பரையைத் தோற்றுவித்தான்.

விஜயாலயன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது.

கங்கைகொண்ட சோழபுரம்
சிறிது காலத்திற்கு அப்பால் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராஜராஜனின் மகன் முதலாம் இராஜேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் திருநகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. ‘சோழ கங்கம்’ என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராஜேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.  

கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராஜராஜனுடைய பெயரிலேயே “அருள்மொழி தேவேச்சுரம்” என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராஜராஜனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராஜராஜனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.

பழையாறை மாநகரம்
கி.பி. 830ல் பிற்கால சோழ பேராசிற்கு வித்திட்டு வளர்த்த மாமன்னன் விசயலாய சோழன். பழமைமிகு பழையாறை மாநகரில் விசயலாய சோழன் தோற்றுவித்த சோழப்பேராசு தான் உலக வரலாற்றில் நீண்டநெடிய காலமான சுமார் 430 ஆண்டுகள் செங்கோல் செலுத்தி கொடிகட்டி ஆண்ட வல்லரசு. வரும் காலங்களில் கூட ஆற்றல் மிக்க சோழவல்லரசு போல் ஒரு பேராசு தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை.

இவ்வியப்பிற்கும், பெருமைக்கும் தாண்டிய எல்லையுடையது பழையாறை மாநகரம். சோழ மாமன்னர்கள் சிறு வயதினில் தவழ்ந்து விளையாடி, இளவரசுப் பட்டங்களை சுமந்து, ஆயகலை 64 கினையும் கற்று, முடிசூடி பாராண்டு, இறுதிக்காலங்களில் ஓய்வெய்தி, வின்னுலகம் சென்ற அத்துனையும் கண்டது இம்மாநகரமே. கட்டிட கலைநுட்பம், சிற்பக்கலை நுணுக்கம், ஓவியக்கலை வண்ணமும், விஞ்சிய தெய்வத்தன்மையும் சிறப்புடன் அமையப்பெற்று இராசகம்பீர மிடுக்குடன் நிமிர்ந்து நின்ற மாநகரமும் பழையாறை என்பது சான்றோர் சாற்றிய வரலாறு.

பழையாறை மாநகரம் பெற்றிருந்த பெயர்கள்
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் (மூவர் தேவார காலங்களில்)
1. ஆறை
2. பழையாறை
3. பழையாறு
4. பழைசை

கி.பி.எட்டாம் நூற்றாண்டில்
5. நந்திபுரம்
6. நந்திபுரி

கி.பி. ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டில்
7. முடிகொண்ட சோழபுரம்
8. ஆகவமல்லகுலகாலபுரம்

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில்
இராச ராசபுரம்

உலக வரலாற்றில் எந்த ஒரு தலை நகருக்கும் ஒன்பது பெயர்கள் காலந் தோறும் மாறி மாறி வந்துள்ளதாக வரலாறும் இல்லை.

முதலாம் இராஜேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின. 

சோழ கல்வெட்டு செய்திகள்
தமிழகத்தில் சோழர் காலத்தில் தான் ஆயிரகணக்கான கல்வெட்டுகள் கோயிற்சுவர்களில் பொறிக்கப்பட்டன
கல்வெட்டுகளின் அமைப்பு
கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளைப் பெரும்பாலும் ஐந்து பெரும் பகுதிகளாக பிரித்தனர்
1. கல்வெட்டின் தொடக்கம் அல்லது மங்கலவாசகம்
2. கல்வெட்டு எழுதப்பட்ட காலம்
3. கல்வெட்டுச்செய்தி
4. கையெழுத்து
5. முடிவுரை அல்லது ஓம்படைக்கிளவி

பிற்கால மற்றும் சாளுக்கிய சோழ மன்னர்களின் அட்டவணை
அரசன் பெயர். ஆட்சியாண்டுகள். யாருடைய மகன். தலைநகரம்
1. விசயாலய சோழன் 848-871 அறியவில்லை தஞ்சாவூர்
2. ஆதித்த சோழன் 871-907 விசயாலய சோழன் தஞ்சாவூர்
3. முதலாம் பராந்தக சோழன் 907-955 ஆதித்த சோழன் தஞ்சாவூர்
4. கண்டராதித்த சோழன் 950-957 முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்
5. அரிஞ்சய சோழன் 956-957 முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் தஞ்சாவூர்
6. இரண்டாம் பராந்தக சோழன் 957-970 அரிஞ்சய சோழன் தஞ்சாவூர்
7. ஆதித்த கரிகாலன் 957-969 சுந்தர சோழன் காஞ்சிபுரம்
8. உத்தம சோழன் 973-985 கண்டராதித்த சோழன் தஞ்சாவூர்
9. முதலாம் இராஜராஜ சோழன் 985-1014 இரண்டாம் பராந்தக சோழன் தஞ்சாவூர்
10. முதலாம் ராஜேந்திர சோழன் 1012-1044 முதலாம் ராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
11. முதலாம் ராஜாதிராஜ சோழன் 1018-1054 முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன் கங்கைகொண்ட       சோழபுரம்
12. இரண்டாம் ராஜேந்திர சோழன் 1051-1063 முதலாம் ராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன்       கங்கைகொண்ட சோழபுரம்
13. வீரராஜேந்திர சோழன் 1063-1070 இரண்டாம் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
14. அதிராஜேந்திர சோழன் 1067-1070 வீரராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
15. முதலாம் குலோத்துங்க சோழன் 1070-1120 முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பெயரன்       கங்கைகொண்ட சோழபுரம்
16. விக்கிரம சோழன் 1118-1135 முதலாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
17. இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133-1150 விக்கிரம சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
18. இரண்டாம் ராஜராஜ சோழன் 1146-1163 இரண்டாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
19. இரண்டாம் இராஜாதிராஜ சோழன் 1163-1178 இரண்டாம் இராஜராஜ சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்
      கங்கைகொண்ட சோழபுரம்
20. மூன்றாம் குலோத்துங்க சோழன் 1178-1218 இரண்டாம் ராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
21. மூன்றாம் இராஜராஜ சோழன் 1216-1256 மூன்றாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
22. மூன்றாம் இராஜேந்திர சோழன் 1246-1279 மூன்றாம் இராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்

1. விசயாலய சோழன்கி.பி 848 முதல் கி.பி871
பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன் விசயாலய சோழன் ஆவான். விசயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான்.

திருப்புறம்பயம் தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும்பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை கண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுக்களும் விருதுகளுமே விளக்குகின்றன.

வரகுண மன்னன்(பாண்டிய மன்னன்) காலத்தில், தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ இவர்கள் தம் முழு ஆதரவைவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழமன்னனை இச்செயலில் இறக்கியது. “புலிக்குட்டியை வளர்த்து, இரத்தத்தை சுவைபார்க்க வைத்தது போலாகும்” என்று பல்லவ மன்னன் சிறிதும் சிந்திக்கவில்லை. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவுக்கூடக் காணவில்லை.

விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள்  சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர். இந்த நிகழ்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்கவர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன்(பல்லவ மன்னன்) கங்க மன்னன் முதலாம் பிரதிவீபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

பல்லவர்க்கும்  கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவிதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத்தொடங்கினான். முதலாம் பிரதிவீபதியின் கடைசி ஆண்டு, கி.பி. 879 ஆகத்தெரிகிறது. எனவே இதே ஆண்டில்தான் இவன் உயிர்விட வேண்டி நேர்ந்த திருப்புறம்பயம் போரும் நடைபெற்றிருக்க வேண்டும்.

இதிலிருந்து முதலாம் ஆதித்தன் கி.பி. 870 யிலிருந்து கி.பி. 907 வரை, ஏறத்தாழ 36 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என அறிய இயலுகிறது. கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது. ஆனால் தொடர்ந்து 400 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சியைத் தொடக்கி வைத்தான்

கி .பி 850 இல் விஜயாலய சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த போது நிசும்பசூதனி என்ற தேவி கோயில் ஒன்றினை தோற்றுவித்தான்.அவன் எடுத்த திருமேனி தற்போது தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள வடபத்ரகாளிகோயில் என்னும் திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் திகழ்கின்றது.
தஞ்சையில் சோழர் ஆட்சி மலர்ந்த போதே இத்தேவியின் கோயிலும் எழுந்ததாக வரலாறு கூறுகிறது.

2. ஆதித்த சோழன்(கி.பி 871 முதல் கி.பி907)
பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறப்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.

மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது.

கல்வெட்டு ஆதாரங்கள் பலம் மிக்க பல்லவ மன்னன் அபராஜிதனைத் தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது. தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் என தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் கி.பி. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும் என்றும் தெரிகிறது, இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்கை மன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான். தஞ்சாவூர் பட்டணத்தில் முடி சூட்டிக்கொண்ட பின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது. இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது.

மறைவு
சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்ட கோயிலை எடுப்பித்தான். பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான்.

இறந்தும் இறந்திலான்(ஆதித்த சோழன்)

கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புண்ணியத்தலம் காளஹஸ்தி அதன் அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்ற ஊர். இப்பொழுது ஆந்திர தேசத்தில் இருக்கிறது சோழர்காலத்தில் கட்டிய கோதண்ட ராமேச்வரம் என்னும் ஆதித்தேச்வரர் கோயில் அவ்வூரில் இருக்கிறது. வரலாறு படைத்த ஒரு மிகப்பெரிய சோழப் பேரரசனுடய கோயில் இது. இதன் வரலாறு மிகவும் சுவயானது.

தமிழ்நாட்டின் வடபகுதியை மிகப் பெரும் பேரரசாக 500 ஆண்டுகள் ஆண்டவர்கள் பல்லவர்கள். அந்தப் பல்லவப் பேரரசுக்கு இன்றைக்கு சரியாக 1100 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றுப்புள்ளி வைத்தவன் அந்த சோழப் பேரரசன். அவனுக்கு ஆதித்த சோழன் என்று பெயர். அவன் ஏறக்குறைய கி.பி. 887ல் பல்லவ அரசன் அபராஜிதன் என்பவனை சண்டையில் வீழ்த்தி தொண்டை நாட்டை அதாவது காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு முதலிய பகுதிகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் “தொண்டை நாடு பாவிய சோழன்” என்று பட்டம் பூண்டான். அதோடு தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி முடிந்துவிட்டது.

ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்கு பொன் வேய்ந்தான். சோழ சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும் உன்னதக்கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான்.

அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில் சாமாதிக் கோயிலை “பள்ளிப்படை” என்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின் அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றி பல செய்திகளை அறிகிறோம்.

ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின் பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105 கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும் வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்கவேண்டும்.

இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். “பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர்” என்று கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும் இருக்கவேண்டும். “தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள் இருநூற்றவர்” என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று அறிகிறோம்.

இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் அளந்தனர். இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும் இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம் இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல் கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் கொடுக்கப்பட்டது.

இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக் கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள்.

சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?

இப்போழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான்.

3. முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907முதல் கி.பி 953)

மதுரையும், ஈளமும் கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவன் சோழ பேரரசக்கு அஸ்திவாரம் அமைத்தவன் . தில்லைச் சிற்றம்பலத்துக்கு பொன் கூறை வேய்ந்தவன், சோழ சிகாமணி, சூரசிகாமணி , வீர நாராயணன் என்னும் சிறப்புப் பெயரைம் பெற்றவன். இவன் பெயரில் தான் வீராணம் ஏறியுள்ளது. இவனுக்கு 11 மனைவியர் 5 மகன்கள்
1. இராஜாதித்தன்,
2. கண்டராதித்தன்,
3.அரிகுலகேசரி,
4. உத்தமசீலி,
5. அரிந்திகை (எ) அரிஞ்சயன்.

ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.

தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.

இவனுக்கு பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே “மதுரை கொண்ட” என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரிவரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து (மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ-பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.

ஈழப்போர் தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945 – 53) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.

இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது(அதாவது பழிவாங்கப்பட்டது).

பராந்தகனின் நண்பர்கள் கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.

கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கே-வேளிர் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.

ஆட்சிக்காலம் முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான் தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களஇன் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது, பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

தக்கோலப்போர் மற்றும் பிரதிவீபதியின் மரணம் சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.

இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன் (இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.

இவ்வரசன் காலத்தில் மாதவர் என்ற வேதியர் ருக்வேத பாஷ்யம் என்னும் நூலை எழுதினார். இந்நூலில் ஜகதேகவீரன் என இவ்வரசனைக் குறிப்பிடுகின்றார் [1]. இச்சுவடி இன்றும் சரசுவதி மகாலில் உள்ளது. மேலும் பல வேத நூல்களும் சரசுவதி மகால் நூலகத்தில் சேர்க்கப்பட்டன. திருவெற்றியூரின் கோயில் கல்வெட்டில் உள்ள குறிப்பின்படி இவ்வரசன் தன் காலத்தில் தேவாரம் திருவெம்பாவை பாடல்களைக் கோயில்களில் பாட அறக்கட்டளைகள் ஏற்படுத்தினான் எனத் தெரிகின்றது.

4. கண்டராதித்தசோழன். கி.பி 950  முதல் கி.பி 955
கண்டராதித்த சோழன் த/பெ. 1ம் பராந்தக சோழன் இரண்டாவது மகன்.
மழவரையர் குலப்புதல்வி செம்பியன் மாதேவி சிவஞா செல்வரான கண்டராதித்தரின் மனைவி இவள் மகன் தான்
மதுராந்தக தேவன் ( சிறிய பளுவேட்டரையரின் மருகன்)

கண்டராதித்தர் இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர் கண்டராதித்தர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை. கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தான்.

5. அரிஞ்சயச் சோழன் கி.பி 956 முதல் கி.பி 957

5.அரிஞ்சயன் த/பெ. 1ம் பராந்தகனின் 3வது மகன்
இவர் மனைவி வைதும்பராயர்  குலப் புதல்வி ராணி கல்யாணி, சுந்தரச் சோழரின் தாய் இன்னொரு மனைவி சேரமான் மகள் பராந்தகன் தேவி.  கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தான்.இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன்.

6. சுந்தர சோழன்(இரண்டாம் பராந்தகன்)கி.பி 957 முதல் கி.பி 973
2ம் பராந்தகன் (சுந்தரச் சோழன்)த/பெ. அரிஞ்சயன்.

பத்தாண்டுகள் அரசாண்ட அவனுக்கு பாரிச நோய் தாக்கியது. மூத்தமகன் ஆதித்த கரிகாலன் வடக்கே காஞ்சியில் அரச பிரதிநிதியாக மாதண்ட நாயகன்(பிரதம சேனாதிபதி) கடைசிபுதல்வன் அருள்மொழிவர்மன் (பிற்காலத்தில் ராஜராஜன்) இலங்கைத்தீவில் போர்புரிந்து கொண்டிருந்தான் இருவருக்கும் நடுவில் குந்தவை தேவி பிறந்தவர்

இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான்.

கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானான்.

சுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான். காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்து ‘வானவன் மாதேவி’ என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவள் மகள் ‘குந்தவையால்’ தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.சுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான்.

7. ஆதித்த கரிகாலன்கி.பி 957 முதல் கி.பி 969
ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான். ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம்யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த [[வீரபாண்டியன்|வீரபாண்டியனுடன்] போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

இரண்டாம் ஆதித்தன் கொலை குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் ‘பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை’ கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனுடையது] என்பது தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க் குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

சோழ மன்னர்கள் யாவருமே திருக்கோயில்களுக்குப் பொன்வேய்ந்திருக்கிறார்களே தவிர தமக்கென்று யாரும் பொன்மாளிகை கட்டிக் கொண்டதில்லை.

முதல் பராந்தகன் தில்லைத் திருக்கோயிலுக்குப் பொன்வேய்ந்தான்.
முதலாம் இராசராசன் த்ன்னுடைய 29ம் ஆட்சியாண்டில் போர் வெற்றிகள் மூலம் கிடைத்த 41,500 கழஞ்சுப் பொன்னையும் 50,650 கழஞ்சு வெள்ளியையும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குஅளித்தான்.
இரண்டாம் குலோத்துங்கன் தன்னுடைய முடிசூட்டு விழாவையே தில்லைத் திருக்கோயிலிலேயே நடத்தினான்.

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் இளமைக் காலத்திலேயே வீரபாண்டியனை போரில் தோற்கடித்து வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்ற பெயர் பெற்றான். ஆதித்த கரிகாலனுக்கு கி.பி. 966ல் சுந்தரசோழன் இளவரசு பட்டம் கட்டுகிறான். ஆதித்த கரிகாலன் தன் அந்தஸ்துக்கு போதவில்லை என கருதி காஞ்சியில் பல்லவச் சக்கரவர்திகள் பல தலைமுறையாக வாழ்ந்து ராஜ்யபாரம் புரிந்த அரண்மனைகளை விட்டு பொன்னிழைத்த அரண்மனையை கட்டி வைடூரியங்களையும் இரத்தினங்களையும் சுவர்களில் பதிக்கிறான். கங்கபாடி, நுளம்பாடி, குடகு முதலிய நாடுகளில் கைபற்றிய பொருள்களில் ஒரு செப்புக்காசாவது தலை நகரிலுள்ள பொக்கிஷ்ஷதிற்கு அனுப்பவிலை.

தனக்கு பொன்னிழைத்த அரண்மனையை காஞ்சியில் கட்டியது அரச குலத்தில் புளுதியை கிளப்பியது. ஆதித்த கரிகாலனின் செய்கை பின்னால் வரும் மன்னர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து விட்டால் என்ன செய்வது என்று அரச அதிகாரிகள் திகைத்தனர். இதுவே ஆதித்த கரிகாலன் கொலைக்கு காரனமாக அமைந்தது. சிதம்பரம் தாலுகா காட்டுமன்னார் கோயிலுக்கு அருகிலுள்ள உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டு ஒன்று கொலை செய்தவர்களின் பெயர்களை பட்டியல் இடுகிறது.
1. சோமன்
2. ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்
3. பரமேசுவரனான இருமுடிச்சோழன் பிரமாதிராஜன்
4. ரேவதாசக் கிரமவிந்தன்.
இவர்கள் அனைவரும் சகோதரர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள், இக் கொலையின் மூலம் ஆட்சியும், சமய கோட்பாடுகளும் குலையுமே என கருதி இக் குற்றங்கள் மறைக்கப்பட்டு வெளிச்சத்திற்கு வரவில்லை.
தன்னுடைய அருமந்த புத்திரன் ஆதித்த கரிகாலன் இறந்த சோகத்தில் சுந்தரசோழன் தன் மகன் கட்டிய காஞ்சி பொன்மாளிகையில் தனித்திருந்து உயிர் துறக்கிறான். இதனால் சுந்தரசோழனை பொன்மாளிகைத் துஞ்சின தேவர் இன கல்வெட்டு விளம்புகிறது.

இக் கொலை சுந்தரசோழன் மற்றும் இராசராசசோழனுக்கும் தெரியாமல் நடந்திருக்கும் என்றும் இதனால் தான் உத்தமசோழன் முடி தரித்தான் என்றும் அறியப்படுகிறது.
இதன் பின் அரியனை ஏறிய உத்தமசோழன் இக் கொலையாளிகளை தண்டிக்கவில்லை.

இராசராசன் அரியனை ஏறிய இரண்டாம் ஆண்டில் உயிருடன் இருந்த இருவர் மட்டும் தண்டிக்கப்பட்டதாக உடையார்குடி கல்வெட்டால் அறியமுடிகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,
விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய [[உத்தம சோழன்|சிற்றப்பன்] அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.

இரண்டாம் ஆதித்தன் பற்றிய வரலாற்று சர்ச்சை இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.

வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்ப்பட்டதாகும்.

இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.

“இவ்விரு மன்னருமே, ‘பாண்டியன் தலைகொண்ட’  அல்லது வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.

பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது.”

பாண்டியன் தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.

இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.

எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசரி என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.

சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்தர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத் தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிது. இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான்.

8. உத்தம சோழன், கி.பி 973 முதல் கி.பி 985
உத்தமசோழன் (மதுராந்தகன்)த/பெ. கண்டராதித்த சோழன.
கண்டராதித்த சோழனின் மனைவியும் உத்தமசோழனின் தாயும் ஆன செம்பியன் மாதேவி இவரிடம் தான் ராஜராஜன் வளர்ந்தார்.
உத்தம சோழன், சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவான். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவன் பதவிக்கு வரவில்லை, பதிலாக இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தான். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவன் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தான். இவன் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. இவனைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராஜராஜ சோழன்அரியணை ஏறினான்.

9. இராஜராஜ சோழன்கி.பி 985 முதல் கி.பி1014
985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராஜராஜன் மன்னனானான். இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன. இவற்றுக்காக இராஜராஜன் நடத்திய போர்கள் பல. பாண்டி நாட்டின் மீதும், சேர நாட்டின் மீதும் போர் தொடுத்து, பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனையும், சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனையும் தோற்கடித்தான். இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத்தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து மைசூரை அண்டிய பகுதிகளைக் கைப்பற்றினான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராஜராஜன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள இலட்சத்தீவு மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.

இன்றைய திரிகோணமலையை அடுத்த கல்வெட்டுகளில் இந்த தமிழ்-பௌத்த மரபு பற்றிய வாசகங்கள் காணப்படுகின்றன. இவை இந்துக் கடவுளர்க்குப் பதிலாக, புத்த பகவானைக் கொண்டு துவங்குகின்றன. புத்த பகவானைத் “தேவன்” என்று குறிப்பிடும் வாசகங்களையும் அங்கே காணமுடியும். ஆக, இந்தத் தமிழ்-பௌத்த மரபினர், இந்து அடிப்படைகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் புத்தபகவானை ஏற்றுக்கொண்டாலும் அரசியல் ரீதியாக சோழ அரசர்களையே அண்டியிருந்தனர். எடுத்துக்காட்டாக, இவர்களுடைய பௌத்த-விகாரையின் பெயர் ராஜராஜ பெரும்பள்ளி. ராஜராஜசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு விகாரை அக்காலத்தில் இருந்துவந்ததும் குறிப்பிடத்தக்கது.

10. இராஜேந்திர சோழன்கி.பி1012 முதல் கி.பி1044
இராஜராஜனின் மறைவுக்குப்பின், 1012 ஆம் ஆண்டில், அவனது மகனான இராஜேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கெனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராஜேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் சோழநாடு மேலும் விரிவடைந்தது. ஏற்கெனவே பெற்றிருந்த வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்வதிலும், அவன் போர்களில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது. சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாஸ்கர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.

வடக்கு எல்லையிலும், சாளுக்கியர்களை மீண்டும் அடக்கிவைக்கவேண்டி ஏற்பட்டது. அப்பகுதியில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் தோற்கடித்தது சோழர்படை. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராஜேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது. இக்காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது.

பின்வந்த சோழ மன்னர்கள்

11. முதலாம் இராசாதிராஜன்.கி.பி1018 முதல் கி.பி1054

இராஜேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் முதலாம் இராசாதிராஜன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.

12. இரண்டாம் இராஜேந்திரன்

இவனைத் தொடர்ந்து, அவன் தம்பியான இராசேந்திரன் என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராஜேந்திரன் எனப்படுகின்றான். இவனுக்குப் பின்னர் இவன் தம்பி 13. வீரராஜேந்திரனும், பின்னர் அவன் மகனான 14. அதிராஜேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராஜேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராஜேந்திரன் இறந்து போனதால், சாளுக்கிய – சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விஜயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

15. முதலாம் குலோத்துங்கன் கி.பி.1070-1120)
வீரராசேந்திரன் மரணத்திற்குப் பின்பு சோழப் பேரரசனாக அரசு கட்டிலில் அமர்ந்தவன் முதலாம் இராஜேந்திரசோழனின் மகள்வழிப் பேரன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுங்கம்  தவிர்த்து  இருள்நீக்கி உலகு ஆண்ட ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்’

எனக் கல்வெட்டுகளில் புகழப்பெறும் குலோத்துங்கசோழன், அதிராசேந்திரசோழனின் மறைவுக்குப் பின்பு சோழப்பேரரசனாக ‘இராசகேசரி’ என்ற பட்டத்துடன் முடிசூடிக்கொண்டான். இவன் கீழைச் சாளுக்கிய மன்னனான இராசராச நரேந்திரனுக்கும் கங்கைகொண்ட முதலாம் இராசேந்திரசோழனின் மகள் அம்மங்கைதேவிக்கும் மகனாய்ப் பிறந்தவன். இவனுக்குத் தந்தைவழி அரசு உரிமை கிட்டவில்லை எனினும் தாய்வழிச் சோழநாட்டு அரசு உரிமை கிட்டியது. இளமைப்பருவத்திலிருந்து தாய்மாமன் வீட்டில் வளர்ந்ததாலும், அதிராஜேந்திரனுக்குப் பிறகு ஏற்ற ஆண் வாரிசு இல்லாததாலும் சோழ சிம்மாசனம் இவனுக்கு உரியதாயிற்று.  இராஜேந்திரன் எனும் இயற்பெயருடைய இம்மன்னவன், மகுடாபிஷேகம் செய்து கொள்ளும் போது குலோத்துங்கன் எனும் பெயர் பெற்றான்.

இவ்வேந்தனும் முன்னாளைய சோழ அரசர்கள் போன்றே மேலைச்சாளுக்கிய நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, தென் கலிங்கம், வட கலிங்கம் ஆகிய நாடுகளுடன் போர் தொடுத்துப் பெரு வெற்றியடைந்தான். ஆனால் இவனுக்கு முன்பு இருந்த சோழ அரசர்கள் ஆதிக்கம் செலுத்திய ஈழம், வேங்கி நாடு, கங்கபாடி நாடு ஆகியவற்றின் உரிமைகளை இழந்தான். சீனநாடு, கடாரம், காம்போஜம் போன்ற வெளிநாடுகளுடன் நட்புறவும் வணிகத் தொடர்பும் கொண்டு திகழ்ந்தான். வடபுலத்துக் கன்னோசி மன்னனுடன் நட்புறவு கொண்டு விளங்கினான்.

மாமன்னன்     இராசராசன் போன்றே இம்மன்னவனும் சோழநாடு முழுவதையும் அளக்கும்படி செய்து, விளைநிலங்கனின் பரப்பை உள்ளவாறு உணர்ந்து சில வரிè¬÷ ஒழுங்குபடுத்தினான். முத்தமிழும் செழிக்கச் செய்த இம்மன்னவன், சிறந்த கலாரசிகனாய், அனைத்துச் சமயங்களிடத்தும் ஈடுபாடு உடையவனாய் விளங்கினான். தன் நாட்டின் மக்கள் நலன் கருதி, சுங்க வரியை நீக்கினான். இவனது வீரத்தைப் புகழ்ந்து
ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி எனும் அருந்தமிழ் நூலை இயற்றினார். தமிழில் மலர்ந்த முதல் பரணி இலக்கியம் இதுவாகும். முதற்குலோத்துங்கனின் தானைத்தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவன் கருணாகரத்தொண்டைமான் என்பவனாவான்.

முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாணிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன. 

முதலாம் குலோத்துங்க சோழன்

கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவனாகையால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். இவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர். இவன் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டான்.

இவன் திறமையான அரசனாக இருந்தாலும், இவன் காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.

கி.பி 1115 ஆம் ஆண்டை அண்டி அவனது முதுமைக் காலத்தில், விட்டுணுவர்த்தன் என்பான் வடக்கிலிருந்து படையெடுத்து வந்து சோழ நாட்டில்பெரும் அழிவுகளை உண்டாக்கினான்.

இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

குலோத்துங்கனின் சோழ மரபு உரிமை

இராஜேந்திர சோழனின் மகளாகிய அம்மங்கை தேவிக்கும் சாளுக்கிய மன்னனாகிய ராஜ ராஜ நரேந்திரனுக்கும் மகனாக பிறந்தவன் அநபாய சாளுக்கியன். வேங்கி தேசம் சோழ தேசத்துடன் இவ்வாறாக தொடர்பு இருந்ததால் வேங்கி தேசத்தின் அரசுரிமைகளை சோழ ராஜ்யம் தலையிட்டது. சாளுக்கிய சோமேஸ்வரனை எதிர்த்த aஆறாம் விக்கிரமாதித்தனுக்கு தனது மகளைக் கொடுத்தான் வீர ராஜேந்திர சோழன். ஆதலால் வேங்கி நாட்டினை விக்கிரமாதித்தனின் தம்பி விஜயாதித்தன் ஆட்சி செய்ய உதவினான். நேரடி வாரிசான அனபாயநிற்கு அரசு இல்லாமல் போனது.

ஆனால் தன் மாமன் வீர ராஜேந்திர சோழனுக்கு உதவும் பொருட்டு சாளுக்கிய தேசத்துடன் நேர்ந்த போரில் தன் போர் திறனைக் காட்டினான் அநபாயன். இதன் பொருட்டு விருதராச பயங்கரன் என்ற பட்ட பெயரினை பெற்றான். அதி ராஜேந்திர சோழனின் மரணத்திற்கு பின் சோழ அரியணை ஏறினான் அனபாயனாகிய குலோத்துங்க சோழன்.

ஆறாம் விக்கிரமாதிதனுக்கும் குலோத்துங்க சோழனுக்கும் உறவுகள் நிலையானதாக இல்லாததால் விக்கிரமாதித்தனின் சபைப் புலவர் பில்கனர் குலோத்துங்கன் அதி ராஜேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். இக்கூற்றின் உண்மை தரத்தினைப் பற்றி நாம் முன்பே பார்த்துள்ளோம். (அதி ராஜேந்திர சோழன் பற்றி படிக்கவும்). இவ்வாறாக குலோத்துங்கன் சோழ அரியணை ஏற்கின்றான், நேரடி வாரிசு இன்றி சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது. ஆனால் சோழர்களின் புகழ் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. kuzhap

குழப்பங்கள்
சோழர்களின் நேரடி அரசு அமையாமல் போனதால் சிற்சில குழப்பங்களை குலோத்துங்கன் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவுகளால் சில இழப்புகளும் நேர்ந்தன. அரசுரிமையை அடைந்த உடனே சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது, அது மட்டும் இல்லாமல் பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றதால் இவன் அரசு ஏறிய பின் தொடர்ந்து சில காலங்கள் போரிலும் கலகங்களை அடக்குவதிலும் செலவிட நேர்ந்தது. இவ்வாறு அருகே நிகழ்ந்த குழப்பத்தினில் ஈழத்தில் நிகழ்ந்த கழகத்தை அடக்குவதில் சிரத்தை காட்டாமல் விட்டுவிட்டான். ஆதலால் நூறு ஆண்டுகள் இருந்து வந்து ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப் பற்றி ஆட்சி புரிய துவங்கினான்.

சாளுக்கியப் போர்.
அரசுரிமையை ஏற்றவுடன் குலோத்துங்கன் கலகங்களை கட்டுப்படுத்துவதில் ஈடுப்பட்டான். அதி ராஜேந்திரனின் மைத்துனன் ஆகிய ஆறாம் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசுடன் சோழ அரசை சேர்த்து பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருந்தான் ஆதலால் குலோத்துங்கன் அரசுரிமை பெற்றதை தாளாமல் தொடர்ந்து கலகங்களை மக்கள் மூலம் ஏற்படுத்தினான். இதன் பொருட்டு சாளுக்கியனுடன் போர் புரிந்தான் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கியனாகிய சோமேச்வரன் குலோத்துங்கனுக்கு உதவும் பொருட்டு (விக்கிரமாதித்தனை வெல்லும் பொருட்டு) தன் படைகள் மூலம் விக்கிரமாதித்தனை பின் பக்கமாக தாக்க ஆரம்பித்தான். சோழ படைகளோ சாளுக்கியப் படைகளை வேகமாக தக்க ஆரம்பித்தன, தோல்விதனை உணர்ந்த விக்கிரமாதித்தன் படைகளைப் பின்னுக்கு இழுக்க ஆரம்பித்தான். தனது வெற்றியை உறுதி செய்த்த குலோத்துங்கன், சாளுக்கிய படைகளை நசுக்கித் தள்ளிவிட்டு சோமேஸ்வரனுடன் ஒப்பந்தம் செய்து சோழ நாடு திரும்பினான். சாளுக்கிய போரில் சாளுக்கியனுடன் உறவுக் கொண்ட கங்கபாடி, இரட்டல மண்டலம் ஆகிய இடங்களை வென்றான்.

படைத் தளபதிகள்.
சாளுக்கிய போரில் ஈடுப்பட்ட குலோத்துங்க சோழனின் படைத் தலைவர்கள்.
1) இளவரசன் ராஜேந்திர சோழன்
குலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். இவன் யானைப் படைகளை கை கொள்வதில் சிறந்தவனாக விளங்கியதாக கூறப்படுகின்றது. வாள் பயிற்ச்சியில் மிகப் பெரும் வீரனாக விளங்கியதாக அறியப் படுகின்றது.
2) அரையன் காளிங்கராயர்
குலோத்துங்கனின் அரசபையில் மிகவும் முக்கியம் வாய்ந்த அமைச்சனாகவும் படைகளை கையாள்வதில் அன்புவம் மிகுந்த செனதிபதியாகவும் விளங்கியவர் அரையன் காளிங்கராயர். இவரது படைத் தலைமையில் தான் சாளுக்கிய போர் நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது. இவரின் மறு பேர் அரையன் பொன்னம்பலக் கூததன். 3) சேனாதிபதி இருங்கோவேள்.
4) அரையன் சயந்தன்
ஆகியோர் இப்போரில் கலந்துக் கொண்டதாக காணப் படுகின்றது.

பாண்டிய சேர யுத்தங்கள்.
குலோத்துங்கனின் ஆரம்பக் காலங்கள் போர்க் களத்தில் தான் பெரிதும் செலவிடப் பட்டன. தான் ஆட்சி ஏறிய பின்பு தனது ஆட்சியை நிலைப் படுத்தும் பொருட்டு ஏற்ப்பட்ட போர்கள் ஆதலால் அவனே முன் நின்று போர் புரிய வேண்டிய முக்கியத்துவம் வேண்டி இருந்தது. அவனிற்கு துணை நின்று போர் புரியவும் தலை சிறந்த படைத் தலைவர்கள் கிடைத்தார்கள்.

சாளுக்கிய தேசத்தில் போரினை வென்று அவன் சோழ தலைநகரிற்கு திரும்பாமல் நேராக பாண்டிய தேசம் நோக்கி சென்றான். சோழர்களின் படைத் தலைவர்களாகிய காளிங்கராயரையும் சயந்தனையும் சாளுக்கிய தேசத்திலேயே விட்டுவிட்டு பாண்டிய நகர் நோக்கி திரும்பினான். அங்கே அவனது நான்காம் மைந்தன் விக்கிரமன் தயாராக இருந்தான் குலோதுங்கநிற்கு உதவும் பொருட்டு. அவனுடன் சோழர்களின் படைத் தளபதி பல்லவ தொண்டைமான் என்கின்ற கருணாகர தொண்டைமானும் உடையான் ஆதித்த வேடவனாமுடையானும் படை முகாம் மிட்டு இருந்தனர். இவர்கள் பொன்னமராவதி அருகே முகாமிட்டு குலோதுங்கனுக்காக காத்திருந்தனர். குலோத்துங்கன் வந்தவுடன் படைகளுடன் பாண்டிய தேசத்திற்குள் நுழைந்து கழகத்தில் ஈடுப்பட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கி சோழ அரசினை நிலை நாட்டினர். இத்தனை அடுத்து தனது இளவல் விக்கிரமனை பாண்டிய சோழன் என்ற பேருடன் பாண்டிய தேசத்தில் மகுடாபிஷேகம் செய்வித்தான் குலோத்துங்கன்.

படைத் தளபதிகள்.

1) கருணாகரப் பல்லவன்
கருணாகரப் பல்லவன் என்கின்ற பல்லவ தொண்டைமான் குலோத்துங்கனின் ஆரம்பக் காலங்களில் இருந்தே தோழனாக இருந்தவனாக காணப் படுகின்றது. ஆதலால் குலோத்துங்கன் ஆட்சி தொடக்கத்திலிருந்தே படைகளை ஆளுமைப் படுத்தி வந்தவன் என்பது திண்ணம். கருணாகரனும், காளிங்கராயனும் குலோத்துங்கனின் அனைத்துப் போர்களிலும் பங்கு பெற்ற படைத் தலைவர்களாவர். இவ்விரண்டு நபர்களை மையப் படுத்தியே பெரும் போர்களை குலோத்துங்கன் புரிந்தான் என்பதும் திண்ணம்.
2) உடையான் ஆதித்தன்
உடையான் ஆதித்தன் என்கின்ற அரையன் மூவேந்தவேளாண். இவன் குலோத்துங்கனின் படைத் தளபதிகளுள் ஒருவன் ஆவான். மூவேந்த வேளாண் பாண்டியப் போரினை அடுத்து நிகழ்ந்த சேர யுத்தத்திலும் கலந்துக் கொண்டவன். ஆதலால் இப்பய்ரினைப் பெற்றான்.
3) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர்
4) அழகிய மணவாள நம்பி
5) ராஜ ராஜ மதுராந்தகன்.
இவர்கள் அனைவரும் பாண்டிய போரிலும் அதன் அடுத்து நிகழ்ந்த சேரப் போரிலும் ஈடுப் பட்டவர்கள். இவர்களில் அழகிய மணவாள நம்பியும், ராஜ ராஜ மதுராந்தகனும் விக்கிரமனுடன் பாண்டிய தேசத்திலே இருக்க வைக்கப் பட்டனர்.

சேர யுத்தம்.
காந்தளூர் எனப்படும் இடம் சேரர்களின் ஆயுதக் கிடங்காக விளங்கியது. ராஜ ராஜ சோழனின் காலம் தொட்டு காந்தளூர் சேரர்களின் புரட்சி இடமாகவே இருந்து வந்தது. பாண்டியர்களுடன் சேர்ந்து சோழர்களை எதிர்த்த சேரர்கள் பாண்டியர்கள் தோற்பதை எண்ணியவுடன் பின்வாங்கினர். காந்தளூர் அருகே சேர மன்னன் ரவி மார்த்தாண்ட வர்மன் தயாரக இருந்தான் குலோத்துங்கனை எதிர்க்க. பாண்டியக் கழகத்தினை ஒடுக்கிய குலோத்துங்கன் காலத்தினைக் கடக்காமல் சேரர்களை எதிர்நோக்கி சென்றான். பாண்டியர்களை விட வலிமை பொருந்தியவர்களாக இருந்தனர் சேரர்கள். பாண்டியர்களுக்கு துணை இருந்த இலங்கைப் படை பின் வாங்கி கடலோடியது. பாண்டிய படையும் இலங்கை படையும் சேரப் படைக்கு உதவினார்கள். இவ்வாறாக சேரப் படை சோழர்களை எதிர்நோக்கி காத்திருந்தது.

கருணாகரத் தொண்டைமான், உடையான் ஆதித்தன் தலைமயில் போரினால் ஈடுப் பட்டது சோழர்கள் படை. சாளுக்கிய தேசத்தில் இருந்து காளிங்கராயரும் சோழ தேசம் திரும்பி இருந்ததால் அவர் நேராக காந்தளூர் போரிற்கு படையுடன் வந்தார். ஆதலால் குலோத்துங்கன் தனது பெரும் படையுடன் சேரனை எதிர்த்து போரிட்டான். மிகவும் இளைய வயதினை உடைய ரவி மார்த்தாண்ட வர்மன் குலோதுங்கநிர்க்கு ஈடுக் கொடுக்க முடியாமல் சரணடைந்தான். அதனை அடுத்து மார்த்தாண்ட வர்மனையே ஆட்சி புரிய விட்டுவிட்டு உடையான் அதித சோழனை மேற்பார்வை புரியவும் கப்பம் வாங்கவும் ஆணையிட்டு சேர தேசத்தினை வென்று திரும்பினான் சோழன்.

படைத் தளபதிகள்.
கருணாகரத் தொண்டைமான், காளிங்கராயர், உடையான் ஆதித்தன் இவர்களைத் தவிர வேறு சில படைத் தலைவர்கள் இப்போரினில் பங்கேற்றனர்.
1) கரனை விழுப்பரையர்
2) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி

இலங்கைப் போர்.

வீர ராஜேந்திர சோழனின் காலத்திலேயே புரட்சிதனைத் தொடங்கிய விஜயபாகு குலோத்துங்கன் ஆரம்ப ஆட்சிக் காலத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான். சிங்கள தேசத்தில் இருந்த சோழ வீரர்களை கட்டுப்படுத்த சரியான சேனாதிபதி இல்லாத காரணத்தால் விஜயபாகு சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்க செய்தான். குலோத்துங்கன் சாளுக்கிய தேசம் மீது கவனம் செலுத்திய காலத்தில் இலங்கை தேசத்தில் சோழ அரசு பலம் குன்றியது. சாளுக்கிய தேசத்தை வென்ற பின் குலோத்துங்கன் பாண்டிய தேசத்தை நோக்கி பயணப்பட்டான். சிங்கள தேசத்தை இழக்க விருப்ப படாத குலோத்துங்கன் தனது மைந்தன் ராஜேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். ராஜேந்திரன் இலங்கையை அடையும் முன்பே சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கி இருந்தனர்.

ராஜேந்திரனின் வருகையால் பலம் பெற்ற சோழர்கள் அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். அனுராதபுரத்தில் மிகவும் சீரிய போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் கூருகின்றது. இத்தோல்வியினை அடுத்த மனம் குன்றாத விஜயபாகு மகானகக்குளா என்ற இடத்தில் படை வீடு அமைத்து திட்டம் தீட்டினான். சுதந்திர சாம்ராஜ்யத்தை அமைத்திட திட்டம் தீட்டிய விஜய பாகுவின் அடி மனதில் வேள்வி எரிந்துக் கொண்டிருந்தது. ஆதலால் அவன் புத்திக்கு சிறந்த யோசனை எழுந்து படை வீட்டைக் கலைத்தான்.

சிங்களர்களின் பூமியாகிய புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான் சிங்கள இளவல். மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு, புலனருவாவில் இருந்தும் அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான் சிங்களன். நடுவில் இருந்த மகானகக்குல்லாவிலும் எதிர்பாராத விதமாக கழகம் ஏற்பட்டது. இவ்வாறாக சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது.

சாளுக்கியனுடனும் பாண்டியர்களுடனும் சேரர்களுடனும் ஏற்பட்ட போர்கள் காரணமாக இலங்கையில் தீவிர கவனம் செலுத்த இயலாத குலோத்துங்கன் ராஜேந்திரனை சோழ தேசம் திரும்பும் படிக் கட்டளை இட்டான். அருகே குழப்பங்களை கலைந்த பின்பு இலங்கையை பின்பு பார்க்கலாம் என்று எண்ணிய அவன் சோழப் படைகளைப் பின்னுக்கு எழுத்தான். இவ்வாறாக விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினான். இருப்பினும் வடக்கே சோழர்களின் வீரர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயினும் குலோத்துங்கனின் ஆட்சியில் இலங்கையை சோழ அரசு இழந்திருந்தது. இலங்கையை மட்டுமே இழந்திருந்தது.

படைத் தளபதிகள்
1) இளவரசன் ராஜேந்திரன்
2)வீர விச்சாதிர மூவேந்த வேளார்
3)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்

முதலாம் கலிங்கத்துப் போர்
குலோத்துங்கன் தெற்கே பாண்டிய தேசம் நோக்கித் திரும்பிவுடனே சாளுக்கிய அரசை கைப்பற்றினான் ஆறாம் விக்கிரமாதித்தன். அரசை கைப் பிடித்தவுடன் மீண்டும் சோழனுடன் போர் புரிய விரும்பாத அவன், கலிங்க தேசத்தினை துண்டி விட்டான். வேங்கியில் விஜாயதித்தானே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தான், அதனை எதிர்த்து வேங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கலிங்கர்கள் சோழ தேசத்தின் மீது போர் தொடுத்தனர். வெங்கிக்கு உதவும் பொருட்டு சோழர்கள் கலிங்கத்துடன் போர் புரிந்தனர். முதலாம் கலிங்கத்துப் போர் குலோத்துங்கனின் ஆரம்ப ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த ஒரு போராகும்.

படைத் தளபதிகள்

குலோத்துங்கனின் மைந்தன் விக்கிரம சோழன் இப்போரினில் பங்கு கொண்டான். அவனிற்கு துணையாக காளிங்கராயனும் கருணாகரனும் இப்போரினில் ஈடுப்பட்டு துணை நின்றனர்.

இரண்டாம் கலிங்கத்துப் போர்

இந்த இரண்டாம் கலிங்கத்துப் போரே தமிழக வரலாற்றின் சிறப்பு மிகுந்த போராக காணப் படுகின்றது. களிங்கர்களுக்கும் சோழர்களுக்கும் மிகக் கடுமையாக போர் நிகழ்ந்ததாக காணப்படுகின்றது.

இப்போரின் தலைமை ஏற்று நடத்தியவன் கருணாகரத் தொண்டைமான். இப்போரின் காரணங்கள் தெளிவாக அறிய இயலவில்லை ஆனால் கலிங்கத்தின் மீது குலோத்துங்கன் தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போரினை புரிந்துள்ளதாக தெரிகின்றது. கலிங்கத்துப் பரணி என்றக் காவியத்தினை இப்போரினை அடுத்து ஜெயம் கொண்டார் என்ற புலவன் பாடியதன் மூலம் இப்போரின் தன்மைதனை உணர்கின்றோம். ஆயிரம் யானைகளை வென்றவன் மீது பாடப் படுவது பரணி என்ற தொடரின் மூலம் கருணாகரன் மிக வலுவுள்ள படைதனை எதிர்க் கொண்டு வெற்றிப் பெற்றுள்ளான் என்று அறிகின்றோம். மிக வலுமை மிகுந்த படைதனைக் கொண்டிருந்த அனந்தவர்மன், கங்கபாடி, இரட்டை மண்டலம் மற்றும் சாளுக்கியப் படைகளின் தோழமைப் பெற்று சோழனை எதிர்த்து நின்றான். காஞ்சி நகர் அருகே இப்பெரும் போர் நிகழ்ந்து இருக்க கூடும் என்று அறியப்படுகின்றது. இருப் பெரும்படைகளும் மோதியதில் இழப்புகள் இருப்பக்கமும் இருந்தாலும் இறுதியில் சோழ தேசம் கலிங்கத்தை அடிப்பணிய வைத்தது.

படைத் தளபதிகள்
1) கருணாகரப் பல்லவன்
2) அரையன் காளிங்கராயர்
3) அரையன் ராஜ நாராயணன்

வெளிநாட்டு வணிகத் தொடர்புகள்.
இலங்கை நாட்டினை குலோத்துங்க சோழன் இழந்திருந்தாலும் அவனது வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் மிகவும் மேலோங்கி இருந்தது. வீர ராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்திலேயே குலோத்துங்கன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த குலோத்துங்கன், அவனது ஆட்சி காலத்தில் நெருங்கிய தொடர்புகளைப் பெற்றிருந்தான். சாம்ராஜ்ய போட்டியில் சமாதானத்தை நிறுவும் வலிமை மிக்கவனாக இருந்தான். ஸ்ரீ விஜய தேசத்தில் சோழர்களின் பிரதிநிதியாக குலோத்துங்கனின் மைந்தன் ராஜ ராஜ சோழன் பெரும் படையுடன் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மட்டும் அல்லாமால், குலோத்துங்க சீன தேசத்துடனும் தொடர்புகள் கொண்டிருந்தான். அவனே இளவயதில் சீன தேசம் சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் ஆட்சி அமைத்த பின்பு சீன தேசத்திற்கு ஒரு வணிக குழுவினை அனுப்பி வைத்தான். இவ்வாறு வாணிகம் அவனது ஆட்சி ஆண்டில் சிறப்புற விளங்கியது. மேலும் வாநிகத்தினை பேருக்கும் வண்ணம், சுங்கத்தை நிறுத்தினான் ஆதலால் இவனை பரணியில் ஜெயம்கொண்டார் சுங்கம் தவிர்த்த சோழன் என்றுப் பாடுகின்றார்.

சீன தேசம் அடுத்து குலோத்துங்கனின் அவையினர் கம்போச நாட்டிலும், சக்கர கோட்டத்திற்கும், பாலி தேசத்திற்கும் , பாகர் (Burma) நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர்.

அமைச்சரவை
வாசுதேவ பட்டர்
குலோத்துங்கனின் குருவாகவும் அவனது பிரம்மராயராகவும் ராஜ ராஜ பிரம்மராயர் என்கிற வாசுதேவ பட்டர் விளங்கினர். இவர் திருவரங்கம் ரங்கநாதனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். சமயப் பற்றும் சாம்ராஜ்யப் பற்றும் கொண்டிருந்த இவரின் ஆலோசனைகளின்படிதான் பாண்டிய தேசம் மீதும் சேர தேசம் மீதும் படைப் எடுத்தான் குலோத்துங்க சோழன்.

பிரம்மராயர் பார்த்திவேந்திரர்

குலோத்துங்கனின் பெரும் மதிப்புக்குரிய பிரம்மராயனாக விளங்கியவர் பார்த்திவேந்திரர். மதி நுட்பம் வாய்ந்த இவரின் ஆலோசனைகளின் படி வெளிநாட்டுத் தொடர்புகளை புதுபித்தான் மன்னன்.

படைத் தலைவர்கள்

1) கருணாகரப் பல்லவன்
2) அரையன் காளிங்கராயர்
3) சேனாதிபதி இருங்கோவேள்
4) அரையன் சயந்தன்
5) உடையான் ஆதித்தன்
6) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர்
7) அழகிய மணவாள நம்பி
8) ராஜ ராஜ மதுராந்தகன்
9) கரனை விழுப்பரையர்
10) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி
11)வீர விச்சாதிர மூவேந்த வேளார்
12)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்
13) அரையன் ராஜ நாராயணன்

சோழப் பேரரசின் வீழ்ச்சி
முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்தும் வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் புதிய அரசுகள் வலிமை பெறலாயின. தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர்.

1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராஜராஜன் காலத்தில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராஜராஜனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராஜேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராஜராஜனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.

சோழர்ஆட்சிமுறை
சங்க காலத்தில் இருந்து வழங்கிவருவதாக அறியப்பட்ட மன்னர் ஆட்சிமுறை தான் சோழர்கள் காலத்திலும் நிலவியது. மன்னரே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்கு உதவியாய் மன்னருடைய மக்களும், சிற்றரசர்களும் இருந்தனர்.

அரசுரிமை
பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன. நேரடி வாரிசுகள் இல்லாத போது அரச குடும்பத்திலிருந்து வேறொருவரை அரசனாக்கிய நிகழ்வுகளும் உண்டு. இரண்டாம் இராஜேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவி பெற்றது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

உள்ளாட்சிப் பிரிவுகள்
பேரரசு மண்டலங்களாகவும், மண்டலங்கள், கோட்டம், கூற்றம் அல்லது வளநாடு எனப்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. கூற்றம், நாடுகள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன.

மண்டலங்கள்.
ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன. அரசகுமாரர்களும், அரசனின் நெருங்கிய உறவினர்களும் இப்பதவியில் அமர்த்தப்பட்டனர். மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதும், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும், ஆளுநர்களுடைய கடமையாக இருந்தது. மத்திய அரசுக்கும், மண்டலங்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் நல்ல நிலையில் பேணிவருவதும் இவர்களுடைய கடமையாகும். கோட்டங்கள் மட்டத்திலிருந்த நிர்வாகிகள், மண்டல ஆளுநர்களுக்கு உதவியதுடன், கோட்டங்களில் அமைதி காத்து, சமுதாயப் பணிகளையும் கண்காணித்தனர்.

குடியிருப்புக்கள்
கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன.

சமூகநிலை
பெண்டிர் சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாக சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச முடுபத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.

உடன்கட்டை ஏறுதல்

கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றி சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராஜராஜ பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்த சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை.

பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகள் மூலம் கிடைப்பதால் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகயிருக்கிறது.[3]

ஆடல் மகளிர்
இந்திய சமூக வாழ்வில் என்றுமே ஆடல் மகளிர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே ஆடள் மகள் கவர்ச்சிக் கன்னியராகவே திகழ்ந்தாள். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். ஆடவர்களுடன் இன்முகத்துடன் பழகினாள். ஆனால், சிலருடன் மட்டும் நெருங்கிய நட்புக் கொண்டாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள்.  தற்காலத்தில் நகரத்தில் தோன்றியுள்ள விலைமாதர்களை மனத்தில் கொண்டு அக்காலத்திய ஆடற்பெண்டிரை நாம் மதிப்பிடுவது பெரும் தவறு என்பதற்கு அக்காலத்துக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.

அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வுடையவர்களாயும் கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.

சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

சோழரும் சாதியமும்

சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. “முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று ‘தீண்டாச்சேரி’ என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது – கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் ‘தீண்டாதார்’ எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார்.

மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் ‘சேரிகள்’, அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு” அமுல்படுத்தி யிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.

பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.

சோழர் இலக்கியங்கள்
சோழர் இலக்கியங்கள் என விளிக்கப்படுவது தென்னிந்தியாவினை சோழ மன்னர்கள் வலிமை பெற்று ஆட்சி புரிந்த 9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலபகுதியிலே எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும்.சோழர் வலிமையாக ஆட்சி புரிந்த காலப்பகுதியிலே அந்நிய படையெடுப்பு, கலகம், குழப்பம் எதுமற்ற நிலமையும்,சைவம்,வைணவம் பக்தி இயக்கங்களின் எழுச்சியும்,சோழமன்னர்கள் கலை,இலக்கியங்கள் மீதான விருப்பும் புலவர்கள் மீது காட்டிய பரிவும் மிகச் சிறந்த இலக்கியங்கள் தமிழில் தோன்ற காரணமாயிற்று. பிற்காலச் சோழர்களினது ஆட்சிக்காலம் தென்னிந்திய கலை, இலக்கியங்களின் பொற்காலம் என சரித்திர ஆய்வாளர்கள விதந்து குறிப்பிடுவர். ஒரு சில இலக்கிய பிரதிகள் தவிர சோழர்கால இலக்கியங்கள் பலதும் தற்போதும் அழியாது கிடைக்கப்பெற்றுள்ளன.சோழர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கிய பிரதிகள பற்றிய  விபரங்கள் பல கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.

சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும். ஆனால் சோழர்களால் தமிழ் உயர் கல்வி கூடங்களில் ஊக்கிவிக்கப் படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சோழர்காலக் கல் வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. ஜைன, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். முதலாம் குலோத்துங்க சோழனுடைய கலிங்கத்துப் போரை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலை இயற்றியுள்ளார்

அடிமைகள்
சோழர்கள் வேழத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது “சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு”என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

ரொமிலா தபார் (Romila Thapar) என்று முக்கிய வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்தை குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது வேற்றோராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர்
குறிப்பிடுகின்றார்.

சோழர்களின் வெளிநாட்டு வணிக முயற்சிகளின் செல்வாக்கு, சீனா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகள் வரை எட்டியிருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் விரிவான கடல்கடந்த வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. தென்னிந்தியாவின் கிழக்கு, மேற்குக்கரைகள் இரண்டிலும்
ஆதிக்கம் பெற்றிருந்த சோழர்கள், இந்த நடவடிக்கைகளில் முன்னணியில் திகழ்ந்தனர். சீனாவின் டாங் வம்சம் (Tang dynasty), சைலேந்திரர்களின் கீழிருந்த, மலாயத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீவிஜயப் பேரரசு,
பாக்தாத்தின், அப்பாசிட் கலீபகங்கள் (Abbasid Kalifat) என்பன இம்முயற்சிகளில் சோழர்களின் கூட்டாளிகளாக இருந்தன.

சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமாத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து அஞ்ஞூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்கிகளுக்குச் சான்றாக அமைகின்றது.

சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்
ஜாவாவில், பிராம்பாணன் என்னும் இடத்திலுள்ள இந்துக்கோயில். திராவிடக் கட்டிடக்கலையின் செல்வாக்குத் தெளிவாகத் தெரிகிறது.

சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தை தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது.

பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டு பல நாடுகளிலும் தாக்கங்களை உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான
எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.

கலைகள்
சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விஜயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராஜராஜனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரிய அளவுள்ளவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதனால், இராஜராஜன் காலத்திலும் அவன் மகனான இராஜேந்திரன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் இராஜராஜன் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

சோழர் காலம், வெண்கலச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விஷ்ணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும்,
ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.

கல்வி
சோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள். இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.[

மொழி
சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் “அவற்றின் மெய்சீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது”. [

சமயம்
சோழர் இந்து சமயத்தை, சிறப்பாக சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். முற்காலச்சோழராயினும், பிற்காலச் சோழராயினும், பௌத்த, சமண மதங்களின் செல்வாக்கால் கவரப்பட்டவர்கள் அல்லர். எனினும் அவர்கள் ஏனைய சமயத்தவர்கள் தொடர்பில் எம்மதமும் சம்மதம் என்ற போக்கையே கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைஷ்ணவர்பால், சிறப்பாக இராமானுஜர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராஜேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.

https://mukkulamannargal.weebly.com/16-297030153006299629923021-299729922994300629933009–299030092993302129653006299429903021-2951297530162965302129653006299429903021-298630072993302.html

Giritharan Navaratnam

13 மணி நேரம்  · அண்மையில் பொலனறுவைக்குச் சென்றிருந்த எழுத்தாளர் காத்யான அமரசிங்க அங்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த (2019) ‘பண்டைத் தொழில்நுட்ப அருங்காட்சியக’த்துக்குச் (Ancient Technology Museum) சென்றிருக்கின்றார். அங்கு சேகரிக்கப்பட்டிருந்த , சோழர்களின் காலத்தில் , பொலனறுவை இலங்கையின் இராஜதானியாக விளங்கிய சமயத்தில் கட்டப்பட்ட வானவன் மாதேவி ஈஸ்வரமென்றழைக்கப்படும் சைவ ஆலயத்தின் மாதிரி, மற்றும் அந்த ஆலயத்திலிருந்த நடராஜர், பார்வதி, அப்பர் , பிள்ளையார் சிலைகள் ஆகியவற்றைப் படமெடுத்து அனுப்பியிருந்தார்.அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.இந்த வானவன் மாதேவி ஈஸ்வரம் ஆலயம் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் , அவனது அன்னை வானவன் மாதேவி நினைவாகக் கட்டப்பட்டதாக அறிகின்றேன். இவர்தான் பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவையுடன் கூட வரும் வானதி. இராசராச சோழனின் மனைவி. சோழர் காலத்தில் பத்து சிவன் கோயில்கள், ஐந்து விஷ்ணு கோயில்கள், காளி கோயிலொன்று எனப் பல ஆலயங்கள் பொலனறுவையில் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் வானவன் மாதேவி ஈஸ்வரம் (இரண்டாவது சிவாலயம் என்றழைக்கப்படுகின்றது) மட்டுமே இன்றுவரை முழுமையாகப் பேணப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது. ஏனையவற்றின் அழிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன.புகைப்படங்களை அனுப்பி வைத்த எழுத்தாளர் காத்யான அமரசிங்க அவர்களுக்கு நன்றி.பொலனறுவை ‘பண்டைத் தொழில்நுட்ப அருங்காட்சியகம்’ –

https://ancienttechnologymuseum.gov.lk/gallery.php+7

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply