காமசூத்ராவிற்கு மிகையான தமிழ் படைப்புகள் ஏதேனும் உள்ளதா? இல்லையா?

காமசூத்ராவிற்கு மிகையான தமிழ் படைப்புகள் ஏதேனும் உள்ளதா? இல்லையா?

குமரி நாடன்

பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை.

இந்தச் சிறப்பு வாய்ந்த இலக்கணம், சங்கம் கண்ட தமிழ்முன்னோருக்கு கூட்டுச்சிந்தனையில் கிடைத்த கருவூலம் ஆகும். இதனால் சமூகம் திருத்தும் நோக்கத்திற்காக, தனி மனித அறிவாளர்கள் முன்னெடுத்த மதம் தமிழர்களுக்கு தேவைப்படாமல் போனது.

பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக் கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத் தலைவி என்றும் கூறுவர். தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முதன்மை இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள். காதல் பற்றிப் பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை.

காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப்பாடுவதில்லை. அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மை கொண்டிருக்கும். எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் மூவர் உரையாடுவது போல இருக்காது. ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை கூறப்பட்டிருக்கும். திணை, நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும். துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும். அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும். அகப்பொருள் திணைகள் ஐந்து. அவை,

1. குறிஞ்சித் திணை

2. முல்லைத் திணை

3. மருதத் திணை

4. நெய்தல் திணை

5. பாலைத் திணை

இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,

1. முதற்பொருள்

2. கருப்பொருள்

3. உரிப்பொருள்

ஆகியன ஆகும்.

முதற்பொருள்:

நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்பர்.

நிலம்

ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு:

குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை – பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும்

தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பொழுது

பொழுது என்பது காலம் என்று பொருள்படும். பொழுது சிறு பொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சிறு பொழுது

சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்.

வைகறை – விடியற்காலம்

காலை – காலை நேரம்

நண்பகல் – உச்சி வெயில் நேரம்

எற்பாடு – சூரியன் மறையும் நேரம்

மாலை – முன்னிரவு நேரம்

யாமம் – நள்ளிரவு நேரம்

சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம்.

பெரும்பொழுது

பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சித்திரை, வைகாசி – இளவேனில் காலம்

ஆனி, ஆடி – முதுவேனில் காலம்

ஆவணி, புரட்டாசி – கார் காலம்

ஐப்பசி, கார்த்திகை – குளிர்காலம்

மார்கழி, தை – முன்பனிக் காலம்

மாசி, பங்குனி – பின்பனிக் காலம்

சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.

திணை பெரும்பொழுது சிறுபொழுது

குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம்

முல்லை கார்காலம் மாலை

மருதம் ஆறு காலமும் வைகறை

நெய்தல் ஆறு காலமும் எற்பாடு

பாலை முதுவேனில், பின்பனி நண்பகல்

ஒவ்வொரு நிலத்திற்கும் மேலே குறிப்பிட்ட காலங்கள் சிறந்தனவாக இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.

கருப்பொருள்

நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்கள் அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. இவற்றின் காரணமாக ஒவ்வொரு திணையிலும் சூழல் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு திணையிலும் வாழும் மக்கள், அவர்களின் தொழில், உணவு, பொழுதுபோக்கு, அந்த நிலத்தில் உள்ள மரங்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலை முதலியவற்றைக் கருப்பொருள் என்கின்றனர். கருப்பொருள், பாடல்களில் பின்னணியாகச் செயல்படுகின்றது. எடுத்துக்காட்டாகக் குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்

1 தெய்வம் – முருகன்

2 தலைமக்கள் – வெற்பன், கொடிச்சி

3 மக்கள் – குறவர், குறத்தியர்

4 பறவை – கிளி, மயில்

5 விலங்கு – புலி, யானை

6 ஊர் – சிறுகுடி

7 நீர்நிலை – அருவி, சுனை

8 பூ – வேங்கை, குறிஞ்சி

9 மரம் – தேக்கு, அகில்

10 உணவு – மலைநெல், தினை

11 பறை – தொண்டகம்

12 யாழ் – குறிஞ்சி யாழ்

13 பண் – குறிஞ்சிப் பண்

14 தொழில் – தேன் எடுத்தல், வெறியாடல்

இவ்வாறே ஏனைய திணைகளுக்கும் கருப்பொருள்கள் சொல்லப் பட்டுள்ளன.

உரிப்பொருள்

ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளை உரிப்பொருள் என்பர். உரிப்பொருள் திணைக்கு உரிய முதன்மை உணர்ச்சியைக் குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள் பின்வருமாறு:

குறிஞ்சி – புணர்தல் – தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல்.

முல்லை – இருத்தல் – தலைவி, பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல்.

மருதம் – ஊடல் – தலைவனிடம் தலைவி பிணக்குக் கொள்ளுதல்.

நெய்தல் – இரங்கல் – தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்.

பாலை – பிரிவு – தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்.

இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் சொல்லப்பட்டிருக்கின்றன. திணை, நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றபடி உள்ள காலம், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை அந்தந்த நிலங்களுக்குச் சிறப்பாக அமையக் கூடியவை ஆகும். எல்லா நிலங்களுக்கும் சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவை பொதுவானவையே. ஆயினும் ஒவ்வொரு திணைக்கும் உரியதாகச் சொல்லப்பட்டவை அந்தந்தத் திணைக்குச் சிறப்பானவை ஆகும்.

பறவைகளும் விலங்குகளும் மரங்களும் பூக்களும் மற்ற நிலங்களிலும் இருக்கக்கூடும். எனினும் அந்தந்த நிலங்களுக்கு அவை சிறப்பு வாய்ந்தவை என்பதால் ஒரு திணைக்கு உரியதாக அவை சொல்லப்பட்டுள்ளன. உரிப்பொருள்களும் அவ்வாறே சிறப்புக் கருதிச் சொல்லப்பட்டுள்ளன.

அகப்பொருள் இலக்கணம் களவு, கற்பு என்று இரண்டு கூறாகப் பிரிக்கப் பட்டுள்ளது. தலைவன், தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் பிறர் காணாதவாறு சந்தித்துக் காதல் கொள்ளுவது களவு எனப்படும். திருமணத்திற்குப் பின் உள்ள காதல் வாழ்க்கை, கற்பு எனப்படும். களவிலும் கற்பிலும் தலைவன் தலைவி இவர்களின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்று விரிவாக இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்முன்னோருக்கு காமசூத்திரம் தேவையற்றது. நீண்ட நெடுங்காலம் ஒரே மண்ணில் வாழ்ந்திருந்த தமிழ்முன்னோர், காம நோக்க பாவணைகளைத் தவிர்க்கவே களவு என்கிற காதலையும், கற்பு என்கிற குடும்பத்தையும், திருமணத்தையும் கட்டமைத்திருந்தனர்.

ஆரியர்கள் குறைந்த பெண்களுடன் நாடோடி வாழ்க்கை மேற்கொண்டதால், காம நோக்க பாவணைகளைக் கொண்டாடும் முகமாக- அவர்களுக்கு காமசூத்திரமும், கொக்கோகமும், பாஞ்சாலிகளை அரங்கேற்ற பாரதம் எல்லாம் தேவையாய் இருந்தன.

இன்றைக்கு எல்லோருமாக இந்தியாவில் கலந்து வாழ்ந்து- காம நோக்க பாவணைகளைக் கொண்டாடிக் கொண்டு பாலியலுக்கான தீர்வாக பாலியல் கல்வி என்று பேசுகிறோம். பாலியல் கல்வி மிகப் பெரிய காம நோக்க பாவணைகளைக் கொண்டாடுதல்தான்.

About editor 2990 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply