திப்புசுல்தான் இந்துக்களின் கதாநாயகனா, வில்லனா?

திப்புசுல்தான் இந்துக்களின் கதாநாயகனா, வில்லனா?

  • உஸ்துல்லாஹ் கான்
  • பிபிசி

24 அக்டோபர் 2017

திப்பு சுல்தான்

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடி இந்துக்களின் காயங்களில் உப்பைத் தூவுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று மத்திய அமைச்சர் அனந்த் குமார் சொன்னதை ஒப்புக்கொள்கிறேன்.

திப்பு சுல்தான் மதச்சார்பற்ற அரசர் அல்ல, லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர். அதற்கான உதாரணங்களை பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும்.

இந்துக்களைப் போன்றே பெயர் வைத்துக் கொண்ட திப்புவின் அமைச்சர்கள் இந்துக்களின் துரோகிகளாக செயல்பட்டிருக் கிறார்கள்!

திப்புவின் அரசில் அங்கம் வகித்தவர்களில் பலர் இந்துக்களின் பெயர்களை வைத்திருந்தார்கள். உள்துறை அமைச்சராக இருந்தவர் இந்து பெயர் கொண்ட ஷாமையா ஐயங்கார். டெல்லியின் முகலாய அரசவையில் மைசூர் மற்றும் திப்புவின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் மூல்சந்த் மற்றும் திவான் ராய். திப்புவின் பிரதமமந்திரியாக பதவிவகித்த திவான் பூர்ணையா.

திவான் பூர்ணையா மீது கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்த திப்பு, ராக்கெட் படையணியின் தலைவராகவும் அவரை நியமித்தார். பிரிட்டனுடன் நடைபெற்ற போரில் காயமடைந்தபோதும், பூர்ணையாவின் கைகளில் தனது மகனை ஒப்படைத்த திப்பு, ‘என் மகனை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்’ என்று கூறினார்.

திப்பு சுல்தான்

கார்ன்வாலிஸ் இந்தியாவை காப்பாற்றினாரா?

கோரட்பூரின் இந்துக்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மலபார் நாயர்களை திப்பு கொன்றதை ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால், மங்களூரின் கிறித்துவர்கள், மகாதேவியின் முஸ்லிம்கள் மற்றும் மொபலா முஸ்லிம்களை ஏன் கொன்று குவித்தார்கள்? ஒருவேளை அவர்கள் அனைவரும் பிரிட்டிஷ்காரர்களின் உளவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டார்களோ?

  • குறைந்தபட்சம் கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினர் லார்டு கார்ன்வாலிஸின் பிறந்தநாளை அடுத்த ஆண்டு விழாவாக கொண்டாடட்டும், ஏனெனில் அவர் திப்பு போன்ற காட்டுமிராண்டியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றினார் அல்லவா?

புதிய வரலாற்றின்படி, மைசூரில் எட்டாயிரம் ஆலயங்களை இடித்துத் தள்ளினார் திப்பு. ஆனால், தனது அரண்மனைக்கு அருகில் இருந்த ரங்கநாத சுவாமி கோவிலை மட்டும் இடிக்க மறந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை.

இந்துக்களின் மீது மிகப்பெரிய வெறுப்பு இருந்தபோதிலும் தனது கோட்டையில் அவர் 10 நாட்கள் தசரா கொண்டாடினார் என்ற செய்தி விசித்திரமானதாக இல்லையா? ஆனாலும், திப்புவுக்குப் பிறகும் அவருடைய குடும்பத்தினர் இந்த பாரம்பரியத்தை தொடர்ந்தது ஏன் என்று தெரியாமல் வியப்பு ஏற்படுகிறது!

ஆவணங்களின்படி, ஆண்டுதோறும் இந்துக்களின் 158 பெரிய கோயில்களுக்கு நிதியுதவி அளித்துவந்த திப்புவின் அரசு, நிலங்களையும் நன்கொடையாக கொடுத்திருக்கிறது.

திப்பு சுல்தான்

மராத்தாக்கள் சூறையாடிய சிருங்கேரி மடத்தை புனரமைத்த திப்பு

1791 ஆம் ஆண்டில் திப்புவுடன் நடைபெற்ற யுத்தத்தின்போது, பேஷ்வா மாதவ்ராவின் மராத்திய ராணுவம் சிருங்கேரி மடத்தையும் ஆலயத்தையும் சிதைத்தது. ஆலயத்தையும், மடத்தையும் சீரமைக்கக் கோரி சிருங்கேரியின் மடாதிபதி சங்கராச்சாரியர் திப்பு சுல்தானுக்கு 30 கடிதங்களை எழுதினார். அதையடுத்து புனரமைப்பு பணிகளுக்காக பணத்தை கொடுத்த திப்பு, பணியாளர்களையும் ஏற்பாடு செய்தார்.

1916 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த கடிதங்கள் அனைத்தையும், மைசூர் தொல்பொருள் இயக்குநரகம் பாதுகாத்து வைத்துள்ளது.

“18ஆம் நூற்றாண்டில் மராத்தியர்களின் படையெடுப்பின்போது, ஆலயத்தின் அனைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது” என கொல்லூரில் பார்வதி தேவியின் அம்சமான மூகாம்பிகை ஆலயத்தின் இணையதளம் கூறுகிறது.

  • அதுமட்டுமல்ல, இன்றும்கூட காலை 7.30 மணியளவில் திப்புவின் பெயரில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் பூஜைகள் நடத்தப்படுகின்றன”

குறைந்தபட்சம் இந்த பூஜையாவது நிறுத்துங்கள். அதுமட்டுமல்ல சுமார் இருநூறு ஆண்டுகளாக, திப்புவைப் பற்றிய பாடல்களை பாடி அவரை போற்றும் கர்நாடகத்தை சேர்ந்த வயதான மூதாட்டிகள் மற்றும் பாட்டிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, அவர்கள் இவ்வளவு ஆண்டுகளாக செய்துவருவது பாவம் என்பதை புரியவைத்து, அதற்கு பிராயசித்தம் செய்யச்சொல்ல வேண்டியது கன்னட பேரன்களின் கடமையல்லவா?

1970களில் கர்நாடக மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் கிளை, இந்திய மகாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கன்னட மொழியில் வெளியிட்ட ‘பாரத பாரதி’ புத்தகத்தில் திப்பு சுல்தானும் இடம்பெற்றிருந்ததை நமக்கு வசதியாக மறந்துவிடலாம்.

எடியூரப்பா

திப்பு மிகப்பெரிய கதாநாயகனா!

கர்நாடக மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டில் முதல்முறையாக ஆட்சியமைத்த பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, 2012ஆம் ஆண்டில் ‘கர்நாடக ஜனதா பக்‌ஷ’ என்ற கட்சியை தொடங்கினார்.

அப்போது, முஸ்லிம்களின் ஒரு கூட்டத்தில், அவருக்கு திப்பு சுல்தானைப் போல் தலைப்பாகை கட்டி, கையில் வீரவாளைக் கொடுத்து மரியாதை செய்தார்கள். அப்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை என்பதால் அதை எடியூரப்பா ஏற்றுக்கொண்டார்.

லட்சக்கணக்கான இந்துக்களின் உயிரைக் குடித்த திப்பு சுல்தானைப் போன்றே தலைப்பாகையும், வீரவாளையும் பெறுவது தவறில்லை என்று அவர் நினைத்திருக்கலாம்.

பிறகு 2014இல் எடியூரப்பா மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கே திரும்பியபிறகு, அவர் திப்புசுல்தானின் பெயரை கேட்பதற்குகூட தயாராக இல்லை.

ஏனெனில் வரலாறும், பங்கு சந்தையும் எப்போது உச்சத்திற்கு செல்லும் எப்போது அதல பாதாளத்தில் வீழும் என்பதை யாரால் கணிக்கமுடியும்? இன்று விற்கப்படும் பங்கின் விலை நாளைக்கு என்னவா இருக்கும் என்பதை சொல்வது சுலபமா என்ன?

https://www.bbc.com/tamil/india-41730878

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply