ரூபா 2,250 கோடி நிதியுதவியை கோட்டை விட்டு வட மாகாண கமக்காரர்களின் வயிற்றில் நெருப்பைக் கொட்டிய விக்னேஸ்வரன்!

ரூபா 2,250 கோடி நிதியுதவியை கோட்டை விட்டு வட மாகாண கமக்காரர்களின் வயிற்றில் நெருப்பைக் கொட்டிய  விக்னேஸ்வரன்!

நக்கீரன்

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme – UNDP) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு துணை அமைப்பு ஆகும்.  யூஎன்டிபி சுமார் 170 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் இந்தப் புவியைக் பாதுகாக்கும் அதே வேளையில் வறுமையை ஒழிக்கவும்  செயல்படுகிறது. வலுவான கொள்கைகள், திறன்கள், கூட்டாண்மை மற்றும் நிறுவனங்களை உருவாக்க நாடுகளுக்கு  உதவுகிறது.  

யூஎன்டிபி  தனது இலக்குகளை அடைய ஐநா உறுப்பு நாடுகள், பலதரப்பு நிறுவனங்கள் மற்றும்  தனியார் துறை பங்களிப்புகளை முழுமையாக நம்பியுள்ளது.

அபிவிருத்தி என்பது ஒரு நீண்ட கால செயல்முறையாகும்.  இது வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்குப் பதிலளிக்க ஒரு தெளிவான மூலோபாய கவனம் மற்றும்  திறன் தேவைப்படுகிறது.  யுஎன்டிபி  அபிவிருத்தி அடையா  நாடுகள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு  உதவி வருகிறது.

2015  ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் வடக்கு மக்களுக்கு சமாதான நடவடிக்கைகளில் நம்பிக்கையை ஊக்கப் படுத்துவதற்கான உதவிகள் உட்பட அந்த நாட்டுக்குப் பரந்துபட்ட தொழில் நுட்ப மற்றும் நிதிகளை ஒதுக்கியதாக ஐநா கூறியது.

இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்த பொறுப்புக் கூறல் விடயத்தில், சர்வதேச பொறிமுறைக்குப் பதிலாக உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அமல்படுத்த ஏதுவாக ஐநா அந்த நாட்டுக்கு நிதி உதவிகளை செய்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஐநா பேச்சாளரான ஸ்டீபன் டுஜரிக், நல்லிணக்கத்துக்காகவும் பொறுப்புக்கூறலுக்காகவும் இலங்கை அரசாங்கமும் இலங்கை மக்களும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐநா உதவும் என்றும், வடமாகாண முதலமைச்சர் கேட்டதற்கு இணங்க அங்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவிகளை ஐநா செய்யும் என்றும், சமாதான முயற்சிகளில் வடமாகாண மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கான உதவிகளும் அதில் அடங்கும் என்றும் கூறினார்.

இந்த சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான நிதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தவும், மனித உரிமைகளை அங்கு மேம்படுத்தவும், குற்றஞ்செய்பவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கும் நிலையை அகற்றவும் பயன்படும் என்றும் அந்த பேச்சாளர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தவும், நல்லிணக்க முயற்சிகளுக்கும் ஏற்கனவே ஒரு மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், பொறுப்புக் கூறும் பொறிமுறை உள்நாட்டுக்குரியதா, அல்லது சர்வதேச பொறிமுறையா என்பதற்கு அப்பால், திட்டங்களை அமல்படுத்த நாம் இலங்கை அரசாங்கத்துக்கும்  வடக்கு மாகாண சபைக்கும் உதவுகிறோம் என்பதுதான் இங்கு முக்கியம் என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து   யூஎன்டிபி நிறுவனத்தின் கொழும்பு வதிவிட ஒருங்கிணைப்பாளர் சுபினே நந்தி (Subinay Nandhi)  2015 இல் அ.டொலர் 150 மில்லியன் (அன்றைய மதிப்பு ரூபா 2,250 கோடி) நிதியுதவியைக் கொடுக்க முன்வந்தார்.  வட மாகாணத்தில்  விவசாயத்துறையில்  25.9 விழுக்காட்டினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிதியின் மூலம் வட மாகாண விவசாயிகள், தோட்டக்காரர்கள் ஆகியோரது வாழ்வாதாரத்தை நிமிர்த்துவதே நோக்கம் ஆகும்.  இவர்கள் விக்னேஸ்வரன் அந்த நிதியை இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டாரா? 

இல்லை.  அவரிடம் வேறு திட்டம் இருந்தது.  அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனது மருமகன் நிமலன்  கார்த்திகேயன் (அப்போது அவரது தனிச் செயலாளர் மற்றும் அரசியல் ஆலோசகர்) அவர்களுக்கு அந்தத் திட்டத்தில் மாதம் அ.டொலர் 5,000 சம்பளத்தில் சிறப்பு அதிகாரி (Special Officer) வேலை கேட்டுக் கடிதம் எழுதினார். 

அதற்குப் பதிலளித்த வதிவிட ஒருங்கிணைப்பாளர் “யாரை நியமிப்பது அல்லது நியமியாது விடுவது எங்களுடைய பொறுப்பு. அதனைச் செய்ய எங்களுக்கு சட்ட திட்டங்கள் இருக்கிறது” என யூஎன்டிபி கொழும்பு வதிவிட ஒருங்கிணைப்பாளர் சுபினே நந்தி தெரிவித்தார். “நிமலன் கார்த்திகேயன் மேற்கொண்ட “அதீத தலையீட்டு பிரச்சாரத்தால் சாத்தியம் இல்லாமல் போனதாக .[“….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to consider such an appointment”)  கொழும்பில் உள்ள யூஎன்டிபி அலுவலகம் தெரிவித்தது.

இந்த விவகாரம் குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும்  சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் அரசியல் விமர்சகர் (Political Editor,  the “Sunday Times” of October 4th 2015) எழுதிய விமர்சனத்தின்  தமிழ் மொழிபெயர்ப்புக் கீழே தரப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்புதான், இலங்கையில் உள்ள ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரனை மட்டம்தட்டியிருந்தார் (snubbed).  அரசாங்கத்தையும் அவரது சொந்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் (TNA) மற்றும் வடமாகாண அமைச்சர்களையும் தவிர்த்து உலக அமைப்புடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்த விக்னேஸ்வரன் முயன்றார். ஒரு சிறப்பு ஆலோசகரை நியமிப்பதன் மூலம் (அவர் தனது சொந்த மருமகனை அந்தப் பதவிக்கு பரிந்துரை செய்தார்), ஐநா கூட்டு தேவைகள் மதிப்பீடு (JNA)  குழுவையும், அமைதி கட்டும் திட்டத்திலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களையும் நாடினார். இது  புலி கெரில்லாக்களின் இராணுவ தோல்வியை அடுத்து நடந்தது.

அமைதிக் கட்டமைப்பு ஆணையத்திற்கு (PBC)  மூலோபாய ஆலோசனை மற்றும் கொள்கை வழிகாட்டுக்கு உதவுவதற்கும் ஆதரவளிப்பதற்கும், அமைதிக் கட்டட நிதியை நிர்வகிப்பதற்கும், ஐக்கிய நாடுகள் முகவர்களை  ஒருங்கிணைப்பதில் பொதுச் செயலாளருக்கு உதவி செய்வதற்கும் ஒரு அமைதிக் கட்டட ஆதரவு அலுவலகம் (PBSO) நிறுவப்பட்டது. ஓஸ்திரேலியா, மெல்போர்னில் வசிக்கும் நிமலன் கார்த்திகேயன் பெயரை தன்னோடும் வட மாகாண அமைச்சர்களோடும் அமைச்சர்களுடனும் பணியாற்றுவதற்காக விக்னேஸ்வரன் பரிந்துரை செய்திருந்தார். நிமலன் கார்த்திகேயன் முன்பு தமிழ் அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் (TRRO) ஊழியராக இருந்தவர். இந்த அமைப்பு பின்னர்  தடைசெய்யப்பட்டது.

ஆகஸ்ட் 15 தேதியிட்ட இலங்கையில் ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பிய  கடிதத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பது குறித்த உங்கள் குறிப்பைப் பொறுத்தவரை, வடக்கு மாகாண முதலமைச்சர் (CM-NP) என்ற முறையில்  ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் முதல்வர் – வடக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாண சபையுடனான அவரது தொடர்புகளில் ஐநா இன்  மதிப்புகள், நல்லாட்சிக் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளை மனதில் கொண்டு அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் ஐநா வட மாகாண சபை (NPC)யோடு அணுகி இருக்க வேண்டும் என்பதை கூறியுள்ளேன்.

“கால் நூற்றாண்டுக்கும் மேலாக சனநாயக ஆட்சி இல்லாதிருந்தபின்னர், பதின்மூன்றாவது திருத்தத்தின் கட்டமைப்பிற்குள் வட மாகாண சபை  ஒரு புதிய நிர்வாக கட்டமைப்பாக உருவானது என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று நான் சொல்லத்  தேவையில்லை. மார்ச் 1990 இல் சனாதிபதியால் வடகிழக்கு மாகாண சபை கலைக்கப் பட்டதிலிருந்து, வடக்கு மாகாணம் நேரடியாக ஆளுநரின் ஆட்சியின் கீழ் இருந்தது, முக்கியமாக இராணுவத் தளபதிகள் தலைமையில் இருந்தார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்….. ”

“… .. ஐநா சிறிலங்காவில் ஒரு மோதல் உணர்திறன், ஐநா இன் விழுமியங்கள்  மற்றும் வட மாகாண சபையோடான நல்லாட்சிக் கோட்பாடுகளின் அடிப்படையில் கற்றுக்கொண்ட அணுகுமுறையை பின்பற்றுவது முக்கியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். வடக்கு மாகாணத்தில் போருக்குப் பிந்தைய சமூகங்கள். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் என்ன நடந்தது, அந்த நேரத்தில் ஐநா ஆற்றிய பங்கு மக்களின் மனதில் இன்னும்  பசுமையா இருக்கிறது. ”

 விக்னேஸ்வரனுக்கு  ஓகஸ்ட் 28 தேதியிட்டு  எழுதிய கடிதத்தில் நந்தி பதிலளித்தார், “ஆட்சேர்ப்புக்கான நிலையான போட்டி முறையைப் பின்பற்றாமல் முன் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளருக்கு ஒரு முழுமையான ஆலோசனை பதவிக்கு நிதியளிக்க எந்த நன்கொடையாளரும் இல்லை என்று ஐநா பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு அறிவுறுத்தியது.”

சண்டே டைம்ஸ் செலவினங்களுக்கு அப்பால் மாதந்தோறும் 5,000 அமெரிக்க டொலர் சம்பளம் கோரப்பட்டதாக அறிந்திருந்தது. “…. முன்மொழியப்பட்ட சிறப்பு ஆலோசகரின் அதிகப்படியான ஆதரவு  (excessive canvassing) ஐநா அத்தகைய நியமனத்தை கருத்தில் கொள்வது  மேலும்  ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிட்டது,” என்று நந்தி கூறினார்.

நந்தியின் கடிதத்தில் கூறப்பட்ட பிற குறிப்பிடத்தக்க விடயங்கள் இங்கே:

“நீங்கள் அதைக் குறிப்பிடுகிறீர்கள்“….JNA செயல்பாட்டில் வட மாகாண சபையின் சமமான பங்காளித்துவத்தைச் செயல்படுத்த சிறிலங்கா  அரசாங்கத்துடன் வாதிடுமாறு நீங்கள் எனது அலுவலகத்தை வலியுறுத்தினீர்கள்…. ”ஐ.நா.வின் பங்கைப் பற்றி நீங்கள் தெரிவிக்கும் தவறான புலனறிவை (misperception)  ஒருவேளை அது விவரிக்கிறது. உங்கள் பதிலில் உங்களுக்குத் தெரியாதது என்னவென்றால், மத்திய அரசுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம் – முன்மொழியப்பட்ட சிறப்பு ஆலோசகருக்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெறும்போது நீங்கள் செய்ததைப் போல. உங்களுக்கும் உங்கள் அமைச்சர் குழுவிற்கும் JNA (கூட்டுத் தேவைகள் மதிப்பீடு) பற்றிய விரிவான விளக்கத்தை ஏற்பாடு செய்ய நான் முன்வந்தேன், இதன் விசாலம், நோக்கம் மற்றும் முக்கிய விளைவுகளை விரிவாகக் கூறுவது உட்பட. துரதிர்ஷ்டவசமாக நீங்கள் கோரிக்கைக்கு ஒருபோதும் பதிலளிக்கவில்லை. ஐநாவின் இந்தக் கொடை இன்றுவரை உள்ளது.

“ஆகவே, யூலை மாதம் நியூயோக்கில் உங்கள் கூட்டங்களுக்குப் பிறகு, வெவ்வேறு ஊடகங்கள்  நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்ட வரைவு கருத்துக் குறிப்பு “கசிந்துவிட்டது” என்பதையிட்டு நாங்கள் வியப்படைந்தோம். வரைவு கருத்துக் குறிப்பு நீங்கள் உள்ளிட்ட மற்றும் பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதோடு, யூன் 4 அன்று சமாதானக் கட்டமைப்பை அமைக்கும் ஒரு பொது அறிக்கையை நான் வெளியிட்டுள்ளதால்  கசிய  விடுவதற்கு எதுவும் இல்லை. இது, எங்கள் பார்வையில், எந்தவொரு உயர் பதவியிலும் எதிர்பார்க்கப்படும் வெளிப்படைத்தன்மையின் தரத்தை நிறைவு செய்யவில்லை. இலங்கை அரசு மற்றும் ஐநா வின் தொடக்க சிந்தனையை அமைக்கும் அமைதிக் கட்ட நிதிக் கருத்துக் குறிப்பு அரசாங்க பங்குதாரர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

“இனிமேல், அமைதி கட்டும் நிதியத்தின் முறையான ஆதரவைப் பெற உங்களது கரிசனைகள் மற்றும் கருத்துக்களை வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு உங்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன்.  அரசாங்கத்தை வெளியுறவு அமைச்சகம்தான்   பிரதிநிதித்துவப் படுத்துகிறது.   ஐநா மற்ற அதிகாரிகளுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில் நீங்கள் குறிப்பிடுவதுபோல்  JNA மற்றும் அமைதிக் கட்டடத் திட்டத்திற்கு இடையே நேரடி தொடர்பு இல்லை என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.”  முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் நந்தி கூறியதாவது: “ஐநா அதன் செயல்பாடுகளில், அதன் அனைத்து திட்டங்களிலும் அதன் முக்கிய ஆணையால் தொடர்ந்து வழிநடத்தப்படும், மேலும் எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் கீழ்ப்படியாது.”

“அமைதி கட்டும் நிதியத்தின் ஒட்டுமொத்த கருத்து மற்றும் கட்டமைப்பானது ஐ.நா வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொள்ளும், இது வடக்கு மாகாண நிர்வாகம் உட்பட பல்வேறு செயல்படுத்தும் நிறுவனங்களின் உள்ளீடுகளை ஒருங்கிணைக்கும்” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். விக்னேஸ்வரனின் பரிந்துரைக்கப்பட்ட பிரதிநிதி யுஎன்டிபி இல் உதவிப் பிரதிநிதி, ஆளுமை அதிகாரம் மற்றும் சமூக சேர்க்கை குழுவுடன் “ஐநாவுடன் எதிர்காலத் தொடர்புகளை” மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஐநா விடம் இருந்து நேரடியாக நிதி பெற விக்னேஸ்வரனின் முயற்சிகள் மற்றும் பிற முயற்சிகள் இப்போது ஒரு புதிய பரிமாணத்தை எடுத்துள்ளன. இது மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க நிதியுதவி தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம், வளர்ச்சி நடவடிக்கைகள், நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு தொடர்பான விடயங்கள் மத்திய அரசின் மீது வரும். வடக்கு மாகாண முதலமைச்சர் அரசாங்கத்துடனோ அல்லது அவரது சொந்தக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடோ ஒத்துழைக்காத அறிகுறிகளைக் காண்பிப்பதால், இந்த பிரச்சினை ஒரு குழப்பமாக இருக்கும். இது ஐநாமஉ பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை அடுத்து அரசாங்கத்தின் பொறுப்புகளை அதிகரிக்கிறது. (http://www.sundaytimes.lk/151004/columns/pm-assures-security-forces-chiefs-over-geneva-resolution-166706.html)

தொடக்கத்தில்  அ.டொலர் 150 மில்லியன் நிதியுதவி பற்றி விக்னேஸ்வரனுக்கு  நந்தி எழுதிய கடிதத்தையும் அதன் பின்னர் இருவருக்கும் இடையில் பரிமாறப்பட்ட கடிதங்களை அவர் சபைக்குச் சமர்ப்பிக்காது அவற்றை ஒளித்துவிட்டார். பூனைக் குட்டி பையில் இருந்து வெளியே வர நீண்ட காலம்  எடுத்தது.

விக்னேஸ்வரன் – நந்தி இருவருக்கும் இடையிலான கடிதங்களைப் படிப்பவர்கள் விக்னேஸ்வரன் சும்மா  கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்த்தவன் கதை நினைவுக்கு வரும். உண்மையில் வலியவந்த சீதேவியை விக்னேஸ்வரன் விளக்குமாற்றால் அடித்துத் துரத்தியிருக்கிறார்.

இப்போது யூஎன்டிபி கொடுக்க முன்வந்த ரூபா 2,250 கோடி நிதியுதவியை கோட்டை விட்டு வட மாகாண கமக்காரர்களின் வயிற்றில் நெருப்பைக் கொட்டிய  விக்னேஸ்வரன்  போரினால் நொந்து நூலாகிப் போன வட மாகாண கமக்காரர்களின் வயிற்றில் நெருப்பைக் கொட்டிய விக்னேஸ்வரன் எந்த முகத்தோடு வட மாகாணக் கமக்காரர்களிடம் வாக்குப் பிச்சை கேட்டுப் போகிறார் என்பது விளங்கவில்லை.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply