ஒரு பேட்டியும் சுமந்திரனுக்கு அறம் போதித்தோரும்!

ஒரு பேட்டியும் சுமந்திரனுக்கு அறம் போதித்தோரும்!

புருஜோத்தமன் தங்கமயில்

முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் உச்சம் பெற்றிருந்த தருணத்தில், தமிழ்த் தொலைக்காட்சியொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஆயுத இயக்கமொன்றின் தலைவர் ஒருவர் வெளியிட்ட கருத்தோடு இந்தப் பத்தியை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும்.

“…தம்பி பிரபாகரனின் தமிழீழத்துக்கான அர்ப்பணிப்பு பெரியது. நாங்களும் தமிழீழத்தை இலக்காகக் கொண்டே ஆயுதங்களைத் தூக்கினோம். ஆனால், ஆயுதத்தினால் இலக்கை அடைய முடியாது என்று உணர்ந்த போது, அதனை கைவிட்டோம்…” என்று அந்தத் தலைவர் கூறினார். அப்போது, அவரது இயக்கம் இராணுவத்தோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களில் அந்த இயக்கத்தின் பெயரும் உண்டு. அந்த இயக்கம் வவுனியாவில் நிலை கொண்டிருந்த தருணத்தில் அரங்கேற்றிய ஆயுதவழி வன்முறைகளின் நேரடிச் சாட்சிகள் இன்றும் உண்டு.

பின்னரான தருணமொன்றில், அந்த ஆயுத இயக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கலந்துவிட்டது. அந்த இயக்கத்தின் தலைவர், கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராகக் கூட இருந்தார். எதிர்வரும் தேர்தலிலும் போட்டியிடுகிறார். தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

இப்போது, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சிங்கள YouTube தளம் ஒன்றுக்காக வழங்கிய நேர்காணல் தொடர்பில் கவனத்தில் கொள்ளலாம். அந்த நேர்காணல் வெளியாகி சில நாட்களின் பின்னர், தமிழ்த் தொலைக்காட்சியொன்று பேட்டியின் பாகங்களை வெட்டி ஒட்டி திரித்த மொழிமாற்றத்துடன் வெளியிட்டது. குறிப்பாக, “தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தவறு” என்று சுமந்திரன் கூறியிருக்கிறார் என்பதுதான் சர்ச்சைகளின் ஆரம்பம். ஆனால், அந்தப் பேட்டியில் ஆயுதப் போராட்டத்தை தான் ஆதரிக்கவில்லை என்றுதான் சுமந்திரன் குறிப்பிட்டார், எந்தவொரு தருணத்திலும் ஆயுதப் போராட்டத்தை தவறு என்று அவர் கூறியிருக்கவில்லை.

வெட்டி ஒட்டிய பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுச் சில மணித்தியாலங்களில், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரனுக்கு எதிரான முதலாவது கண்டன அறிக்கை வெளியிட்டார். அத்தோடு ஆரம்பித்த அறிக்கைகளின் போராட்டம் இன்னும் நின்றபாடில்லை. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடங்கி, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈறாக சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணா அம்மான் என்கிற வி.முரளிதரன், சதாசிவம் வியாழேந்திரன் என்று கிட்டத்தட்ட தமிழ் அரசியலில் இருக்கும் பெரும்பான்மையானோர் சுமந்திரனுக்கு எதிராக அறிக்கையை வெளியிட்டும், ஊடக சந்திப்புக்களை நடத்தியும் கருத்து வெளியிட்டுவிட்டார்கள்.

கடந்த வாரத்தின் நடுப்பகுதியில், சுமந்திரனின் நேர்காணல் தொடர்பிலான சர்ச்சைகளுக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கை ஓரளவுக்கு முடிவொன்றை எழுதியிருக்கின்றது. அதாவது, “…குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுமந்திரன் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பதிலளித்திருக்கின்றார்..” என்று சம்பந்தன் குறிப்பிட்டிருக்கின்றார். இதற்கு மேலும், கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை சுமந்திரனிடம் இருந்து பறிக்க வேண்டும்; அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று விடுக்கப்படும் அறிக்கைகள் மற்றும் அரங்காற்றுகைகள் எதுவும் எடுபட வாய்ப்பில்லை.

சுமந்திரனைச் சுற்றி கடந்த வாரங்களில் எழுந்த சர்ச்சை இரண்டு காரணங்களினால் நிகழ்ந்தது. முதலாவது, தேர்தல்- விருப்பு வாக்குச் சண்டை. அடுத்தது, தமிழ்த் தேசியத்தின் காப்பாளர்கள் அல்லது தரநிலை அரசியலினால்.

ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையில்லை என்கிற கருத்தினை சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் வந்த நாள் முதல் கூறிவருகிறார். அதாவது, தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஆகிய 2010 முதல் அவர் கூறி வருகின்றார். அதற்காக அவர் விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கின்றார். இப்போது, அறிக்கையை வெளியிட்ட அவரது கட்சிக்காரர்களும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் ஒரே மேடையில் இருக்கும் போதே, ஆயுதப் போராட்டத்தை தான் ஆதரிக்கவில்லை என்றும், அது எதிர்காலத்திற்கான தெரிவு அல்ல என்றும் சுமந்திரன் கூறியிருக்கின்றார். அப்போதெல்லாம், இந்த அறிக்கைப் போர் வீரர்களுக்கு அந்தக் கருத்துக்கள் பிரச்சினைக்குரியதாக தெரியவில்லை. ஆனால், இன்றைக்கு சுமந்திரனின் கருத்துக்களை பெரும் சர்ச்சையாக்க வேண்டிய தேவை, தேர்தல் – விருப்பு வாக்கினைக் கருத்தில் கொண்டு எழுந்திருக்கின்றது. ஏனெனில், தோல்வி பயம் என்பது அவர்களை இவ்வாறான அரங்காற்றுகைகளை செய்ய வைக்கின்றது.

கூட்டமைப்பின் ஆரம்பத்திலும் அதன் பெரு வெற்றியிலும் விடுதலைப் புலிகளின் பங்கு கணிசமாக இருந்திருக்கின்றது. கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படும் தருணத்தில், புளொட் இயக்கத்தை(யும்) உள்வாங்குவது தொடர்பில் பேசப்பட்டது. ஆனால், அந்தப் பேச்சுக்களை முன்னெடுத்தவர்களிடம் புளொட் இயக்கத்தின் தலைவரான சித்தார்த்தன், தன்னுடைய இயக்கம் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்குவதானால், புலிகளின் பின்புலத்துடன் தோற்றுவிக்கப்படும் கூட்டமைப்போடு இணைய முடியாது என்று கூறி விலகிக் கொண்டிருந்தார். அவர் புலிகள் அழிக்கப்படும் வரையில் கூட்டமைப்பில் இணைந்திருக்கவில்லை. அதன் பின்னரேயே, கூட்டமைப்புக்குள் வந்தார். பேரவைக்குள்ளும் வந்தார்.

சித்தார்த்தன், ஆயுதங்களினால் இலக்கை அடைய முடியாது என்று கைவிட்டு, ஜனநாயக(!) அரசியலுக்கு திரும்பியவர்களில் ஒருவர். அவரினால் ஆயுதப் போராட்டத்தை இன்று ஆதரிக்க முடியாது. அப்படியான நிலையில், ஆயுதப் போராட்டத்தில் என்றைக்கும் நம்பிக்கை கொண்டிருக்காத ஒருவர், அதனை ஏற்க முடியாது என்று கூறுவது எவ்வாறான சிக்கல் என்று சித்தார்த்தன் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், ஆயுதத்தினால் இலக்கினை அடைய முடியாது என்று கூறும் சித்தார்த்தன், அவரது இயக்கம் ஆயுதங்களை புலிகள் உள்ளிட்ட சகோதர இயக்கங்கள் மீதும், தமிழ் மக்களின் மீதும் திருப்பிய வரலாற்று பதிவுகள் உண்டு. அவற்றையெல்லாம் இலகுவாக் கடந்து நின்று ஆயுதப் போராட்டம் குறித்த வகுப்பினை தமிழ் மக்களுக்கு எடுக்க நினைக்கின்றார்.

தமிழ்த் தேசியப் போராட்டக் களம், அஹிம்சைப் போராட்டக் கட்டங்களைக் கடந்தே ஆயுதப் போராட்டங்களுக்குள் நுழைந்தது. நாற்பது வருடங்களாக அதற்குள் நிலை கொண்டது. அதுபோல, முள்ளிவாய்க்கால் முடிவுகளோடு ஆயுதப் போராட்டங்களின் கட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது. அதுதான், உண்மை. ஆயுதப் போராட்டங்களின் கட்டத்தில் இன்றைக்கு யாரும் இல்லை. அப்படியான நிலையில், அடுத்த கட்டங்கள் குறித்த சிந்தனையை நோக்கி நகர்வதுதான் அரசியல் அறம். அந்த அறத்தினை உரையாடுவதும் அவசியமாகின்றது. அஹிம்சைப் போராட்டங்களை மக்களைத் தவிர்த்துக் கொண்டு தலைவர்கள் முன்னெடுக்கவில்லை. அங்கும் மக்களின் பங்களிப்புத்தான் அதிகமாக இருந்தது. ஆயுதப் போராட்டத்திலும் அதுதான் நிகழ்ந்தது. மக்களுக்காகத்தான் போராட்டமே. மக்களின் பங்களிப்போடுதான் நிகழ்ந்தாக வேண்டும். இன்றைக்கு அந்த மக்கள் அடுத்த கட்டங்களை நோக்கி சிந்திக்கிறார்கள். ஆயுதப் போராட்டங்கள் தொடர்பிலான வரலாறு மக்களுக்கு தெரியும்; கூட்டமைப்பின் வரலாறும் மக்களுக்கு தெரியும்; அதனை யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை.

கூட்டமைப்புக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பது விருப்பு வாக்குகளுக்கான அரங்காற்றுகை என்பதுவும் மக்களுக்குத் தெரியும். தகுதியற்ற – ஆளுமையற்ற வேட்பாளர்களை முன்னிறுத்திக் கொண்டு கூட்டமைப்பு ஆடிக்கொண்டிருப்பது, ஒரு விதத்தில் அயோக்கியத்தனமாக ஆட்டமே. அதில், ஆயுதப் போராட்டத்தை தாங்களே தோள்களில் கொண்டு சுமந்ததாக காட்டிக் கொண்டு ஆடும் ஆட்டத்தை மக்கள் ரசிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அப்படியானவர்களை மக்கள் தேர்தல்களில் முறையாக கவனித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

தமிழ்த் தேசியத்தின் காப்பாளர்களாக தங்களை வரிந்து கொண்ட தரப்புக்கள் வெளியிடும் தரநிலை அறிக்கைகள் பெரும் குழப்பகரமானவை. தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில், ‘தமிழ்த் தேசியத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் மக்கள் பேரவையும், சிவில் சமூக அமையமுமே உண்மையான அக்கறையுள்ள அமைப்புக்கள்’ என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரநிலை அறிக்கையொன்றை வெளியிட்டார். இன்றைக்கு பேரவை தொடர்பில் அவர் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுவிட்டார்.. சித்தார்த்தனை ஆயுத குழுவின் தலைவராக குறிப்பிட்டு விமர்சிக்கின்றார். பேரவைக்குள் சித்தார்த்தனோடு இருக்கவும், ‘எழுக தமிழ்’ மேடைகளில் ஏறவும் அவரால் முடிந்திருக்கின்றது என்பது அண்மைக்கால வரலாறுதான்.

தமிழ்த் தேசிய அரசியலில் ‘தூய்மைவாதிகள்’ என்கிற அடிப்படைகளைக் கொண்டு சுமக்கும் தரப்புக்கள் எப்போதுமே இருந்திருக்கின்றன. ஆனால், உண்மை என்னவென்றால், அரசியலில் தூய்மைவாதத்திற்கு வேலை இருப்பதில்லை. அரசியல் என்பது சந்தர்ப்பங்களை கையாளும் வித்தை; இராஜதந்திரம் சார்ந்தது. ஆனால், தூய்மைவாதம் பேசும் தரநிலை வழங்குனர்கள் யார் என்று பார்த்தால், அவர்களுக்கும் கடந்த கால கறுப்பு வரலாறுகள் உண்டு. அதனை மக்கள் கண்டும் வந்திருக்கிறார்கள். அதனை மறைத்துக் கொண்டும் தங்களுக்கு வெள்ளையடித்துக் கொண்டும் புதிய வரலாறுகளை எழுதி தங்களை புனிதர்கள் ஆக்கலாம் என்று யோசிப்பதெல்லாம் அபத்தமே.

சுமந்திரன் தன் மீதான விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளின் வழியாக தமிழ்த் தேசிய அரசியலில் மேல் எழுந்து வந்தவர். இந்தச் சர்ச்சைகளின் வழியாகவும் அதனையே அவர் நிகழ்த்தியிருக்கின்றார். இந்தச் சர்ச்சைகளைத் தோற்றுவித்தவர்களுக்கு அது பலனளிக்குமோ இல்லையோ தெரியாது, ஆனால், அது சுமந்திரனுக்கு நிச்சயம் பலனளிக்கும். அதனை எதிர்வரும் காலங்களும் காட்சிகளும் பதிவு செய்யும்.

(தமிழ் Mirror)

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply