மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள்

மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள்

முனைவர் போ. சத்தியமூர்த்தி

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்களை அடுத்துக் காப்பிய இலக்கியங்களை அமைப்பது வழக்கம். ஐம்பெருங் காப்பியங்கள் தமிழில் இடம் பெற்று பண்டைத் தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகரம், மணிமேகலை என்ற இரண்டும் முழுக்க முழுக்கத் தமிழ்ச் சமுதாயத்தின் கோட்பாடுகளைக் காலங்கடந்தும் தெரிவிக்கும் தக்க சான்றுகளாக விளங்குகின்றன. பண்டைக்காலச் சமுதாயத்தில் இடம் பெற்றிருந்த கீழ்த்தட்டு மக்களுடைய வாழ்வியலை அவ்விரண்டு காப்பியங்களும் குறிப்பிடுகின்றன. முடிமன்னர் வாழ்க்கை மேலோங்கியிருந்த காலத்தில் வணிகரின் வாழ்க்கையைச் சிலப்பதிகாரம் படம் பிடிக்க, மணிமேகலைக் காப்பியம் கலை வல்லுநராம் மடந்தையரின் வாழ்வியலைப் படம் பிடிக்கிறது. எனவே இரட்டைக் காப்பியங்களில் அக்காலச் சமுதாயத்தை முழுமையாகக் காண முடிகிறது. இக்கட்டுரையில் இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைக் காப்பியத்தில்; இடம் பெற்ற சமுதாய நிகழ்வுகள் தொகுத்துக் காட்டப் பெறுகின்றன.
நால்வகை வருணம்

சமுதாயம் என்ற சொல் பழமை இலக்கியங்களிலோ, இலக்கணங்களிலோ பயின்று வரவில்லை. அரசர்தம் வாழ்வியலைப் பற்றிப் பின்னிப் பிணைந்த சங்க இலக்கியங்களில் சமுதாயம் என்ற கூட்டுணர்வு தோன்றிடாமல் இருந்திருக்கலாம். தனிமனித உணர்வுகள் இலக்கியங்களில் படைக்கப் படுகின்ற காலத்தில் சமுதாயச் சிந்தனைகள் தோன்றியிருக்க வேண்டும். அச்சிந்தனைகள் தோன்றிய கால கட்டங்களில் அவ்வக்கால சமுதாய நிலைகளும், அவற்றின் உயர்வு தாழ்வுகளும் , சமுதாயம் சீர்பெற வேண்டிய சிந்தனைகளும் கவிஞர்களிடத்தில் எழ ஆரம்பித்தன. இந்த அடிப்படையில் மணிமேகலை என்ற தனிமனிதச் சிந்தனையைக் கொண்ட காப்பியத்தில் சமுதாயச் சிந்தனைகள் அமைவது இயற்கையாகிறது.

மக்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்தும் சமுதாய உணர்வை மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் கதைப்போக்கில் ஆங்காங்கு குறிப்பிட்டுச் செல்கிறார். மணிமேகலையின் காலத்தில் பிறப்பால் சாதிகள் அமைந்து, சமுதாய உணர்வு தோன்றியதாகத் தெரியவில்லை. தொழில் அடிப்படையில் ஒன்று சேர்ந்த மனிதஇனம் சமுதாயமாகக் கொள்ளப்பட்டு, அவற்றின் நடைமுறைகள் மணிமேகலையில் புலப்படுத்தப் படுகின்றன. அந்தணர் பற்றிய குறிப்புக்களும், அரச மரபு பற்றிய செய்திகளும், வணிகர்களின் தொழில் முறைமையும் , கடைக்கோடி மக்களாம் வேளாளர்களின் வாழ்வியல் உணர்வுகளும் மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

ஆபுத்திரன் என்ற அந்தணருடைய பாத்திரம் மணிமேகலையின் தலைமைப் பாத்திரங்களில் ஒன்றாகும். அப்பாத்திரத்தின் கதை நிகழ்வுகள் மூலம் அந்தணர் என்னும் வருணத்தாரின் சமூக நடைமுறைகள் அறியலாகின்றன. ஆபுத்திரன் உள்ளிட்ட அந்தணர் பாத்திரங்கள் பல காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. மணிமேகலைக் காப்பியம்; இடம் பெற்ற அரச மரபுகளில் உதயகுமரனின் அரச பரம்பரை சிறப்பிடம் பெற்றுத் திகழுகின்றது. உதயகுமரனின் செயல்முறைகள் மூலம் அரச சமுதாயம் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது.

மணிமேகலையின் தந்தையான கோவலன் வணிக மரபினன் ஆதலால். அவனைச் சார்ந்த குலமரபுச் செய்திகள் சமுதாயச் சிந்தனையைத் தருகின்றன எனலாம். மணிமேகலைக் காப்பியத்தில் அடித்தளத்து மக்களாகிய சித்திராபதி, சுதமதி,ஆதிரை நல்லாள் ஆகியோர்கள் மூலம் எஞ்சிய வருணமாகிய வேளாளர் மரபுச் சமுதாயச் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே மணிமேகலைக் காப்பியக் காலத்தில் மண்ணில்வாழ் மக்கள் தொழில் நிலையால் நான்குநிலைச் சமுதாய மக்களாக வகுத்துக் காணப்பெற்றனர். அத்துடன் நில்லாது மணிமேகலையில் கிளைக்கதைகள் அதிகம் என்பதால் வானவர், விஞ்சையர் ஆகியோரின் செயல் முறைகளும் இடம் பெற்றுள்ளன.

அந்தணர் சமுதாயம்

மணிமேகலை வைதீக சமயச் செயல்பாடுகளை மறுத்துச் சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, உயர்ந்த சமுதாயத்தைப் படைத்துக் காட்டுவதற்கு எழுந்த காப்பியமாகும். மணிமேகலையின் கதைப் போக்கைக் காணும்பொழுது, அந்தக் காலத்து வைதீகச் சடங்குகளைக் கொண்டிருந்த அந்தணர்களின் இழிவான செயல்களை வெளிப்படுத்தும் காப்பியமோ? என்று எண்ணும் அளவிற்குக் காப்பியத்தின் முதன்மைப் பாத்திரங்களில் ஒன்றான ஆபுத்திரன் பாத்திரத்தை முன்னிறுத்திக் காட்டுகிறது.

ஆபுத்திரனின் பிறப்பு அன்றைய அந்தணர்களின் சமுதாயத்தினைப் படம் பிடித்துக் காட்டி, அவர்களுக்குரிய உயர்வின்மையைச் சுட்டுகிறது எனலாம். மணிமேகலைக்குக் கோமுகி என்னும் நீர்நிலையிலிருந்து வைகாசித் திங்களில், பூரண நிலவுக் காலத்தில் அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரம் தீவதிலகையின் அறிவுரையால் கிடைத்தது. அப்பாத்திரத்தைப் பற்றி அறிந்து கொள்ள அறவணடிகள்பால் சென்ற பொழுது, இப்பொழுது சாவக மன்னனாக இருக்கின்ற ஆபுத்திரன் வரலாற்றை அரவண அடிகள் கூறினார். ஆபுத்திரனுக்கு முற்பிறவியில்; சிந்தாதேவி என்னும் தெய்வத்தால் கிடைக்கப் பெற்றதுதான் அமுதசுரபி என்று கூறி அறவணஅடிகள் ஆபுத்திரனின் வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

வாரணாசியில் அவஞ்சிகன் என்ற அந்தணனுக்குச் சாலி என்ற மனைவி வாழ்ந்தாள். ஆனால் அவள் தன்னுடைய தவறிய ஒழுக்கத்தால் கருவுற்றாள். தான் செய்த தவறுக்குப் பரிகாரமாகத் தென்திசைக் கன்னியாகுமரிக்கு நீராட வருகிறாள். வந்தவளுக்குக் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை ஒரு தோட்டத்தில் எறிந்தாள். அக்குழந்தையை இளம்ப10தி என்னும் அந்தணன் எடுத்து வளர்த்தான். அவனே முன்பிறவி ஆபுத்திரன் ஆவான். இச்செய்தி அந்தணப் பெண்களின் ஒழுங்கு தவறிய நிலையை எடுத்துக் காட்டுகிறது. எனவே மணிமேகலைக் காப்பியம் தமக்கு முன் காலத்தில் உயர்ந்திருந்த அந்தணச் சமுதாயம் பின் சீர்;கெட்டதைக் கூறுவது போல் காப்பியக் கதையை அமைத்துள்ளது.

முறை தவறிப் பிறந்த குழந்தை என்றாலும் அந்தணனால் வளர்க்கப் பெற்ற அக்குழந்தை அருள் உள்ளம் படைத்ததாக விளங்குகிறது. எனவேதான் தான் வாழ்ந்த ஊரில் வேள்வியில் அவிப்பலி ஊட்ட அந்தணர்களால் பாதுகாத்து வைக்கப் பெற்ற பசுவைக் கட்டவிழ்த்து விட்டுக் காப்பாற்றுகிறது. இக்கதை நிகழ்வும் அக்காலத்து அந்தணர்கள் அவிப்பலிக்காக உயிர்களைக் கொல்லுகின்ற தீய வினைகளைச் செய்கின்றவர்கள் என்று காட்டி , அந்தணரின் வாழ்வையும் சுட்டிக் காட்டுகிறது. அந்தணர்கள் பிற உயிர்கள் மேல் கருணையற்றவர்கள் என்பதும் இதனால் பெறப்படுகிறது.

பசுவைக் காப்பாற்ற நினைத்த ஆபுத்திரன் பசுவைக் கட்டவிழ்த்து விட்டதால் அவனையும் பசுவையும் கண்டுபிடித்த அந்தணர்கள் கருணை உள்ளம் கொண்ட ஆபுத்திரனை அடித்துத் துன்பப் படுத்துகிறார்கள். இதுவும் அந்தணர்களின் இழிந்த செயலைக் காட்டுவதாகும். அடித்த அந்தணர்களைக் கண்ட பசு அவர்களைக் கொம்பினால் குத்தி வீழுமாறு செய்து தான் தப்பித்துக் கொண்டு ஒடிவிட்டது. இந்தப் பசுதான் அடுத்த பிறவியில் ஆபுத்திரனைத் தன் வயிற்றில் இருந்து பெற்றது. எனவேதான் அவனுக்கு ஆபுத்திரன் என்ற பெயர் இப்பிறவியில் கிடைத்தது. இப்பகுதிக் கதையிலிருந்து அந்தணர்களின் இல்லம் கீழ்நிலைக்கு ஆளாகி இருந்தது என்பதும், வேள்வியை வெறும் சடங்கிற்காக அக்காலத்து அந்தணர்கள் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்தனர் என்பதும் கூறப்பெற்று, அந்தணர் சமுதாயத்தை மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகிறது.

அந்தணச் சமுதாயப் புரட்சியாளன்

முன்பிறவியில் ஒழுங்கு தவறிய அந்தணப் பெண்ணிற்கு மகனாகப் பிறந்த ஆபுத்திரன் தான் வாழ்ந்த காலத்தில் அந்தணரில் ஓர்; புரட்சியாளனாக விளங்குகிறான். இளம்பூதியால் எடுத்து வளர்க்கப் பெற்ற அவன் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குகின்றான். வேள்விப் பசுவைக் காப்பாற்றித் தன்னைத் துன்புறுத்த வந்த அந்தணர்களுக்கு எவ்வளவோ அறிவுரைகளை எடுத்துச் சொல்கிறான்.

“நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
வீடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டுச் சிறந்த தன் தீம்பால்
அறம் தர நெஞ்சொடு அருள் கரந்து ஊட்டும்”

(ஆபுத்திரன் திறம் அறிவித்தகாதை: 50-55)

புல் மேய்ந்து பால் தரும் பசுவின் சிறப்பை இப்பகுதியால் குறிப்பிட்டுக் கூறினாலும் அந்தணர்கள் கேட்கவில்லை. அதன்பிறகு அந்தண முனிவரின் பிறப்புக்கள் பற்றியும் ஆபுத்திரன் எடுத்துரைக்கிறான். அசல முனிவன் ஒரு பசுவின் மகன். சிருங்கி முனிவன் ஒரு மானின மகன். விரிஞ்சி முனிவன் ஒரு புலியின் மகன். கம்பள முனிவன் ஒரு நரியின் மகன். இவர்கள் எல்லாம் ;நான்மறைகள் அறிந்த அந்தணர்களாக விளங்குகின்றனர். எனவே இழிகுலம் என்பது இல்லை. எனவே என் பிறப்பை நீங்கள் கேலி செய்ய வேண்டாம் என்று குறிப்பிடுகிறான்.

“ஆண் மகன் அசலன் மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேசகம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால்”

(ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை:63 -67)

என்பது அதற்குரிய பகுதியாகும். இப்பகுதி ஒருபுறம் பெருமையாக இருந்தாலும் , மற்றொரு புறம் பண்டைக்காலத்து முனிவர்களின் பிறப்பு பற்றிய செய்திகள் போற்றத் தக்கனவாக இல்லை என்பதையும் உணரவேண்டும். இதனை மணிமேகலைக் காப்பிய ஆசிரியர் கூறுவதால் அவர் அக்காலத்தில் பெருமையாகப் பேசப் பெற்ற முனிவர்களின் பிறப்பு இயல்பைக் குறிப்பிட்டு , அவர்கள் பெருமைக்கு உரியவர்கள் அல்ல என்று உணர்த்துகிறாரோ? என்ற சிந்தனைக்கும் இப்பகுதி இடம் தருகிறது.

ஆபுத்திரன் அந்தணர்களுக்கு அறிவுரை கூறிய பிறகு சோழநாட்டிலிருந்து மதுரைக்குச் செல்கின்றான். அந்தணர் மனைவிக்குப் பிறந்து, அந்தணனால் வளர்க்கப் பெற்ற அவன் மதுரைத் தெருக்களில் பிச்சை எடுத்து , அதனால் கிடைக்கும் உணவைப் பசியால் வருந்தும் மக்களுக்கும், உடல் குறைவுற்ற மக்களுக்கும் உணவிடுகிறான். இத்தகைய அறச்செயலைச் செய்யும் அவன் அந்தணர்களில் ஒரு புரட்சியாளனாகவே தோன்றுகிறான்.

இவ்வாறு உணவு கொடுத்து வந்த காலத்தில் ஒருநாள் இரவு வழிப்போக்கர் சிலர் தங்களுக்குப் பசிக்கிறது எனக் கூற, அதனைப் போக்க முடியாது வருந்தித தவித்த அவனுக்குச் சிந்தாதேவி கொடுத்த பாத்திரம் தான் அமுதசுரபி ஆகும். அமுதசுரபியைப் பெற்ற அவன். வழிப் போக்கருக்கும், பின்பு பல நாட்கள் பழுத்த மரத்தை நாடிவரும் பறவைகள் போலப் பல உயிர்கட்கும் அமுதசுரபிப் பாத்திரத்தின் மூலம் உணவளித்து மகிழ்ந்தான். இடையில் விணண்கத்துத் தேவேந்திரன் அந்தணர் வடிவத்தில் வந்து , இவனை விண்ணகத்திற்கு அழைக்கிறான். அவனைப் பார்த்து ஆபுத்திரன் நகையாடி,

“அறம் செய் மாக்கள் புறங் காத்து ஓம்புநர்
நல்தவம் செய்வோர் பற்றுஅற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர் நல்நாட்டிற்கு (வாரேன்)”

(பாத்திரம் மரபு கூறிய காதை: 41 – 43)

என்று கூறி அவனை அனுப்பி விடுகின்றான். இப்பகுதியம் ஆபுத்திரனின் உயர்ந்த பண்பாட்டை விளக்குவதாகும். அந்தக் காலத்து அந்தணர்கள் விண்ணகத்தே செல்வதற்கு அறம் செய்ய வேண்டும் என்று கூறுகின்ற பொழுது , ஆபுத்திரன் விண்ணகமே வேண்டாம் என்று கூறுவது புரட்சியாகும்.

இறப்பிலும் புரட்சி

மதுரை நகர் நல்வளம் பெற்றது. யாசிப்பார் யாரும் இல்லை. எனவே ஆபுத்திரனின் பணிக்கு இடமில்லாது போயிற்று. ஆதலால் ஊர் தோறும் உண்போரை வினவிச் சென்று ஏமாற்றம் அடைகின்றான். மரக்கலம் ஏறி மணிபல்லவத்தைச் சென்று அடைகின்றான். தன் அமுதசுரபிக்கு உரிய உயிர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை அறிவதுடன், தன் பசியை மட்டமே அறிகின்றான். தன் பசிக்கு அமுதசுரபியைப் பயன்படுத்த அவனுக்கு மனம் வரவில்லை. எனவே மணிபல்லவத்திலேயே உண்ணா நோன்பு இருந்து, தன் கையிலிருந்த அமுதசுரபியைக் கோமுகி என்னும் நீர்நிலையில் இட்டு, ஆண்டுக்கு ஒருமுறை நீ இந்த நீர்நிலையிலிருந்து தோன்றுக என்று கூறி உயிரை மாய்த்துக் கொண்டான். அவன் முற்பிறவி முடிந்தது. பசித் துன்பத்தை நீக்கும் தன் பணியை நிறைவேற்ற முடியாத பொழுது, உண்ணா நோன்பு இருந்து, உயிர் துறந்த அவனின் இறப்பும் ஓர் புரட்சி தானே.

ஆபுத்திரனின் முன் வரலாற்றை மணிமேகலை ஆசிரியர் மூன்று காதைகளில் கூறியதன் நோக்கம் , மணிமேகலைக் காப்பியக் காலத்தில் அந்தணச் சமுதாயம் சீரகெட்டிருந்தாலும், அதில் ஒரு விடிவெள்ளியாய் ஆபுத்திரன் தோன்றி அந்தணர் சமுதாயத்திற்குப் பெருமை தந்தான் என்று அமைத்திருப்பது அறிந்து இன்புறத் தக்கதாகும். அந்தணர் சமுதாயத்தில் இடம் பெற்ற மற்றொரு சிறுபாத்திரம் ஆதிரை என்ற பெண்ணாவாள். ஆதிரையின் கணவன் சாதுவன். அவ் அந்தணன் பரத்தமையால் தன் செல்வம் முழுதும் இழந்து, பொருள் சேர்க்க வணிகரோடு சேர்ந்து மரக்கலத்தில் சென்றான். மரக்கலம் கவிழ்ந்தது. அவன் ஊழ்வினையால் பூம்புகார் நகரத்தில் கரையேறினான். ஆனால் அவனுடன் சென்றவர்கள் அவன் இறந்துவிட்டான் என்று கூற, அவன் மனைவி ஆதிரை துன்புற்றாள். நெருப்பில் மூழ்க முற்பட்டு மூழ்கினாள். ஆனால் அத்தீ கற்புத் தெய்வமாகிய அவளைச் சுடவில்லை. எனவே கணவன் உயிருடன் இருக்கின்றான் என்பதை அவள் உணர்கின்றாள். அந்த ஆதிரைதான் மணிமேகலைக்குக் கிடைத்த அமுதசுரபிக்கு முதன் முதலாக உணவிட்டவள். இத்தகைய பெருமை உடைய அந்தணப் பாத்திரமும் அக்காலத்தில் வாழ்ந்திருக்கிறது என்பதை நோக்கும் பொழுது , அந்தணர் சமுதாயத்தில் நல்லதும் தீயதும் அமைந்திருந்தமை புலனாகின்றது.

அரச சமுதாயம்

மணிமேகலைக் காப்பியத்தின் நிகழிடம் சோழநாடாகும். சோழ அரசனின் மகன் தான் உதயகுமரன். அவன் மணிமேகலையைக் காதலித்த காமுகனாகக் காட்டப் பெற்றுக் காமத்தால் கொலை செய்யப் படுகிறான். ஆனால் அவனுடைய தந்தையான மாவண்கிள்ளி , மணிமேகலை அமுதசுரபி கொண்டு உயிர்கள் கொண்ட பசியை நீக்குகிறாள் என்பதை அறிந்து அவளை வரவேற்று உபசரிக்கிறான். அவளுடைய வரலாற்றைக் கேட்ட பிறகு அவள் விருப்பப்படி, சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுகிறான்.

“யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு? என்று
வேந்தன் கூற மெல் இயல் உரைக்கும்
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்குமது வாழியர்! என
அருஞ் சிறை விட்டு, ஆங்கு ஆய்இழை உரைத்த
பெருந் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என்”

(சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை: 155 – 162)

என்ற இப்பகுதியின் மூலம் குடிமக்களில் ஒருத்தியாகிய மணிமேகலையின் அருள் திறத்தை மன்னன் பாராட்டியதும், அவள் கூற்றுப்படி சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றியதும் , அக்கால அரச சமுதாயத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது என்றாலும் உதயகுமரன் இறப்பிற்கு மணிமேகலை தான் காரணம் என்பதால் மன்னன் அவளைச் சிறை செய்கின்றான். சிறை செய்தது மட்டும் போதாது என்று எண்ணி அவளுடைய பட்டத்து அரசி, மணிமேகலையை வஞ்சகமாக விடுதலை செய்து, மணிமேகலைக்குத் தீமைகளைச் செய்து அழிக்க எண்ணுகிறாள். அவள் செய்த முதல்; தீமை அவளுக்குப் பித்து உண்டாக்குகின்ற மருந்தைக் கொடுத்துப் பைத்தியம் ஆக்கி மக்களால் அடித்துக் கொல்லப் பட வேண்டும் என நினைக்கிறாள். ஆனால் அம்மருந்து பயன்படாத வண்ணம் மணிமேகலை தனக்குக் கிடைத்த மந்திரத்தால் தடுக்கிறாள். அடுத்து அவள்மீது காமுகனை அரசி ஏவிக் காமத்தால் சீர்கெட்டாள் என்று உலகறியச் செய்ய வேண்டும் என எண்ணுகிறாள். அதனையும் மணிமேகலை தனது மந்திர சக்தியால் அறிந்து, தன்மீது காமம் கொண்டு வந்த கயவனை ஊரை விட்டு ஓடும்படிச் செய்து விடுகிறாள்.

இறுதியாக அரசமாதேவி மணிமேகலைக்கு நோய் ஏற்பட்டது என்று கூறி அவளைப் பலநாட்கள் உணவில்லாது அறையில் அடைத்து விடுகிறாள். அங்கும் மந்திரத்தால் பசிப்பிணியைப் போக்கி மணிமேகலை உயிர் வாழுகிறாள். இப்பொழுதுதான் அரசமாதேவி மணிமேகலையின் தெய்வத் தன்மையை உணர்ந்து . மணிமேகலையிடத்தில் மன்னிப்புக் கேட்கிறாள். மணிமேகலையும் அவளை மன்னித்து அறம் பல சொல்லுகிறாள். இது கதையின் நிகழ்வாகும். இத்தகைய கதை நிகழ்வால் மணிமேகலை காப்பியக் காலத்து அரச சமுதாயம் ஒருபக்கம் நலம் செய்யும் சமுதாயமாகவும், மற்றொரு பக்கம் குடிமக்களை ஆராயாது அவர்களுக்குத் தீமை செய்யும் சமுதாயமாக விளங்கியிருக்கிறது எனத் தெரிய வருகிறது.

தொழிற் சமுதாயம்

பூம்புகார் நகரத்தில் பலவிதமான தொழிலை நடத்துகின்ற தொழிலாளர் சமுதாயம் அமைந்திருக்கிறது. ஓவியத்தொழில் சிறந்திருந்தமையை மணிமேகலைக் காப்பியம் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.

வம்ப மாக்கல் கம்பலை மூதூர்
கடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மை அறு படிவத்து வானவர் முதலா
எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்”

(மலர்வனம் புக்க காதை,: 126 -131)

என்ற இப்பாடலில் ஓவியக்கலை கற்றுத் துறை போகிய வித்தகப் புலமையோர் குறிக்கப் பெறுகின்றனர். எனவே பூம்புகார் நகரில் ஓவியம் தீட்டும் தொழிலாளர்கள் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பது பெறப்படுகிறது.

வஞ்சி நகரத்தில் பல தொழிலாளர்கள் வாழ்ந்தார்கள் என்பதை,கச்சிநகர் புக்க காதையில் சாத்தனார் பட்டியலிட்டுக் காட்டுகிறார். பலவகையான மீன்களை விற்பவர், வெண்மையான உப்பினை விற்பவர், கள் விற்கும் வலைச்சியர், பிட்டு வாணிகர், அப்ப வாணிகர், இறைச்சி விற்போர் என இவர்களுடைய வீதியும், குயவரும், செப்புப் பாத்திரம் செய்பவரும், வெண்கலப் பாத்திரம் செய்பவரும், பொன்னை உருக்கும் தட்டாரும், மரத்தை வெட்டும் தச்சரும், சிற்பக்கலை வல்லுநரும், வரந்தரும் தெய்வ வடிவங்களைத் தீட்டும் ஓவிய, தோல் வேலை செய்பவரும், தையல் தொழில் செய்பவரும், மாலை கட்டுபவரும், காலத்தைக் கணக்கிட்டுச் சொல்லும் சோதிடநூல் வல்லவரும், பாணரும் ஆகிய இத்திறத்தோர் பலர் வாழும் வீதி அங்கு அமைந்திருந்ததாகச் (கச்சிமாநகர் புக்க காதை,31-45) சாத்தனார் குறிப்பிடுவதால் மணிமேகலைக் காப்பியக் காலத்தில் பல்தொழிலாளர்கள் வாழ்ந்தமை பெறப்படுகிறது.

பசிப்பிணி மருத்துவர்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவர் என்ற அடிப்படையை மையமாகக் கொண்டு அமைந்த காப்பியம் மணிமேகலைக் காப்பியம் ஆகும். எனவே மணிமேகலைக் காப்பியத்தில் எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் ஆசிரியர் சாத்தனார் பசிப்பிணி நோயை நீக்கிய மருத்துவத்தைத் திறம்படச் சுட்டிச் செல்கிறார். உணவு கொடுக்கும் அறம் கூடத் தக்கவர்பால் சேர வேண்டும் என்பதில் ஆசிரியர் சாத்தனார் கண்ணும் கருத்துமாக விளங்குகிறார்.

எனவேதான் உலக அறவி புக்க காதை என்ற காதையையே அமைக்கிறார் இக்காதையில் காயசண்டிகை என்னும் வித்தியாதர நாட்டவளின் ஆனைத்தீ பசி நோயை மணிமேகலை நீக்குகிறாள். காயசண்டிகை மணிமேகலை பசிப்பிணி நீக்க வேண்டிய இடத்தைச் சுட்டிக் காட்டுகிறாள். உலக அறவியின் கண் உருபசி உழன்றோரும், பாதுகாப்பவர் யாரும் இன்மையும், அரும்பிணி உற்றவர் பலர் அங்கு வாழ்வர். நீ அங்கு சென்று அறம் புரிக என்று கூறுகிறாள். அவள் கூற்றுப்படி மணிமேகலை சம்பாதிக் கோட்டத்தைச் சென்றடைந்து, கந்திற்பாவையை வணங்கி, ஆற்றா மக்களைக் கூவியழைத்து உண்டி வழங்கினாள் என்ற செய்தி கூறப் பெற்றுள்ளது. எனவே, பசிப்பிணியை நீக்குவதற்குரிய சூழல் ஆசிரியரால் சுட்டப் பெறுவதால் , தக்கவர்க்குப் பயன்படுமாறு அறப்பணிகள் செய்யப் பெற்றன என்பது தெரியவருகிறது. அதே நேரத்தில் காப்பியக் காலச் சமுதாயத்தில் இதுபோன்ற வறிய நிலையும், கொடும் பிணியும் நிலவியிருந்தன என்பதை உணரவேண்டும்.

இத்தகைய வறுமையான சூழலை ஆபுத்திரன் வரலாற்றிலும் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் காட்டியிருப்பதால் காப்பியக் காலம் தமிழகத்தின் பொற்காலம் எனக் கூறமுடியாது. அக்காலத்தில் சமுதாய மக்களின் தாழ்வுடைமை, வறுமை உடைமை, பிணி உடைமை இருந்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது. எனவேதான் அத்தகைய இழிநிலையைப் போக்குவதற்கே மணிமேகலை என்ற பெண்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த வறுமைச் சூழலைத் தீர்க்கவேண்டும் என்று எண்ணிக் காப்பியத்தைப் படைத்திருப்பாரோ? என எண்ணத் தோன்றுகிறது.

மணிமேகலைக் காப்பியக் காலத்தில் சமுதாய வாழ்க்கை ஒரு உயர்ந்த வாழ்க்கையாகப் படைக்கப் படவில்லை. ஒருபக்கம் அந்தணர் அரசர் போன்ற சமுதாய வாழ்க்கை;யில் நன்மையும் தீமையும் அமைந்திருப்பது போலப் பொதுச் சமுதாயத்தில் பொருள் வளம் தரும் தொழிலாளர்கள் வாழ்ந்தாலும் , எத்தொழிலையும் மேற்கொள்ள முடியாது பசியால் வாடுகின்றவர்களும் , நோயால் வாடுகின்றவர்களும் நகர் முழுவதும் நிறைந்திருந்தார்கள் என்பது காப்பியக் கதைப்போக்கால் தெரிய வருவதை யாரும் மறுக்க இயலாது. முடிவாகச் சொன்னால் மணிமேகலைக் காப்பியக் காலப் பொதுச் சமுதாயம் மணிமேகலை போன்ற அறச் செல்வர்களை நாடியிருந்தது எனக் குறிப்பிடலாம்.

இயற்கை இறந்த நிகழ்வுகள்

மணிமேகலைக் காப்பியத்தின் கதைப் போக்கில் பதுமபீடிகை, மணிமேகலா தெய்வம் ஆகிய இயற்கை இறந்த நிகழ்வுகளைச் செய்யும் தெய்வங்கள் சமுதாய நம்பிக்கைக்கு உரியனவாகக் கூறப் பெற்றுள்ளன. எனவே மணிமேகலைக் காப்பியத்தின் மூலம் அந்தக்காலச் சமுதாயம் இயற்கை இறந்த நிகழ்ச்சிகளை நம்பின என்பது உறுதியாகிறது.

பதுமபீடிகையில் எந்தத் தெய்வத்தை நினைத்து மலரை வைக்கின்றோமோ அந்தத் தெய்வத்திற்குச் சென்று சேரும் என்ற நம்பிக்கை இருந்தமை கூறப்படுகிறது. அதுபோல மணிமேகலா தெய்வம் பூம்புகாரில் தோன்றித் தன்னை வணங்கிய மணிமேகலையை மணிபல்லவத் தீவிற்கு எடுத்துச் சென்றது என்ற செய்தியும் அக்கால மக்களின் இயற்கை இறந்த நிகழ்ச்சியில் கொண்ட நம்பிக்கையைப் புலப்படுத்துவதாகும். அத்துடன் மணிமேகலைக்குக் கிடைத்த மந்திரத்தால் மணிமேகலை தன் உருவத்தை மாற்றிக் கொள்ள முடியும், தூணிலே உள்ள பாவை (கந்திற்பாவை) பேசுகின்ற நிகழ்ச்சியும் அக்காலச் சமுதாயத்தின் நம்பிக்கையைக் காட்டுவதாகும். இவ்வாறு மணிமேகலைக் காப்பியத்தில் பல இயற்கை இறந்த நிகழ்வுகள் கூறப்பெற்றிருப்பது அக்காலச் சமுதாயத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்தவதாகும்.

சமுதாயத்தின் பழக்க வழக்கம்

மணிமேகலை தன் தந்தையை நினைத்து வருந்தியதால் கண்ணீர் சிந்துகிறாள். அது அவள் தொடுத்துக் கொண்டிருந்த மலர் மாலையை நனைத்தது. அதனால் அதன் புனிதம் அழிந்தது. அதற்கு மாறாக மீண்டும் மலரைப் பறிக்க மலர்வனம் அனுப்பப் படுகிறாள். எனவே தெய்வ வழிபாட்டில் அக்கால மக்களின் உறுதி பெறப்படுகிறது.

சக்கரவாளக் கோட்டம் என்ற சுடுகாட்டை மதிக்கக் கூடிய பழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது. அங்கு ஐந்து மன்றங்கள் இருந்திருக்கின்றன. பாவை மன்றம், வெள்ளில் மன்றம், வன்னி மன்றம், இலந்தை மன்றம், வெள்ளிடை மன்றம் என் ஐவகை மன்றங்கள் இருந்தன. அவற்றைப் போற்றுகின்ற நிலையும் காணப்படுகின்றது. பிரிந்த சென்ற உயிரைக் கொண்டுவர முடியாது என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்திருக்கிறது.

தெய்வத் தச்சனால் கந்திற்பாவை செய்யப் பெற்றது, அது எதிர்காலத்தைப் பற்றிக் கூறக் கூடியது, என்ற நம்பிக்கையால் கந்திற்பாவையை வணங்கும் வழக்கமும் அந்நகரத்தில் இருந்திருக்கிறது. இவ்வாறு பலவித நம்பிக்கைகளும் , பழக்க வழக்கங்களும் மணிமேகலைக் காப்பியத்தில் சமுதாய மக்களிடத்தில் காணப் பெற்றிருக்கின்றன.

தவத்தின் சிறப்பு
காப்பியத்தின் தலைமைப் பாத்திரம் மணிமேகலை . அம்மணிமேகலை துறவியாகக் காட்டப் பெற்றிருக்கிறாள். மணிமேகலை நூலிற்கு மணிமேகலைத் துறவு என்ற பெயர்கூட உண்டு என்பதை நினைவு கொள்ளலாம். தவத்தின் சிறப்பை விளக்கும் பொருட்டு மணிமேகலைக் காப்பியத்தின் கடைசிக்காதை பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை என்று மணிமேகலை ஏற்ற துறவின் பெருமையைக் கூறுவதாகும். அறவண அடிகள் என்ற பாத்திரம் நிலையாமையைக் குறிப்பிட்டுத் தவத்தில் போய்ச் சேர வேண்டும் என்பதை அறவுரையாகக் கூறும் பாத்திரமாக அமைக்கப் பெற்றுக் காப்பியம் துறவறத்தின் மேன்மையை எடுத்துக் காட்டுகிறது எனலாம்.
தத்துவ சமுதாயம்

மணிமேகலைக் காப்பியத்தில் அந்தணர் முதலாகிய இயல்பான சமுதாயக் களங்கள் அமைந்திருப்பதோடு , சமயக் கணக்கர்கள் என்ற தனிஒரு சமுதாயமும் படைத்துக் காட்டப் பெற்றிருக்கிறது. சமயக் கணக்கர் தம்திறம் கேட்ட காதை என்ற காதை 27ஆவது காதையாகக் காப்பியத்தில் அமைந்துள்ளது. வஞ்சிநகர் சென்ற மணிமேகலை அங்கு கூடியிருந்த பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, இறுதியில் அவர்தம் கருத்துக்களை ஏற்காது , பௌத்தமதக் கருத்துக்கு இலக்கானாள் என்ற செய்தியும் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. அக்காதையில் அளவை வாதி, சைவ வாதி, பிரம்ம வாதி, வைணவ வாதி, வேத வாதி, ஆசீவகவாதி என்பன உள்ளிட்ட சமய வாதிகள் தத்தம் சமயங்களின் கருத்துக்களைக் கூறி வாதிடுவதாக அமைந்துள்ளது. இப்பகுதி அக்காலச் சமுதாயத்தில் சமயத் தத்துவங்கள் எத்தகைய இடம் பெற்றிருந்தன என்பதை எடுத்துக் காட்டுவது போல் அமைந்துள்ளது.

காப்பியக் காலத்தில் சங்க காலத்தில் அரசியல் அமைப்பு முக்கியத்துவம் பெற்றது போலச் சமயத் தத்துவங்கள் முக்கியத்துவம் பெற்றுத் தனிஒரு இடத்தைப் பெற்றிருந்தன என்பது வரலாறாகும். சிலப்பதிகாரம் சமண சமயத்தின் கருத்துக்களை வலியுறுத்த, மணிமேகலைக் காப்பியம் பௌத்த சமயக் கருத்துக்களை வலியுறுத்த, சீவக சிந்தாமணி சமணக் காப்பியமாக அமையக் காப்பியக் காலம் முழுக்க முழுக்கச் சமயம் சார்ந்த காலமாக விளங்கியது என்பது உண்மையாகிறது. எனவே மக்கள் சமுதாயத்தில் சமயத் தத்துவங்கள் மேலோங்கியிருந்து. மக்களை , வினைக்கொள்கைகளைக் கூறி அச்சுறுத்தி, சடங்கு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சமயப் பிணக்குகளை ஏற்படுத்தி ஒரு தெளிவற்ற சமுதாயத்தைக் கொண்டிருந்தது என்ற நினைப்புக்கு ஆளாக்குகிறது.

முடிவு

இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைக் காப்பியம் சங்ககாலத்திற்குப் பிறகு தமிழகத்தில் இருந்த சமுதாயத்தைச் சுட்டிக் காட்டுகின்ற இலக்கியமாகத் திகழ்கிறது. மணிமேகலைக் காப்பியம் சுட்டிக் காட்டுகின்ற சமுதாயம் ஓர் உயர்ந்த சமுதாயமாக விளங்கிற்று எனக் கூற இயலாது. ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட சமுதாயமாக, தெய்வங்களின் பெயரால் மூட நம்பிக்கைகளுக்கும், வேள்விச் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயமாக, சமயத் தர்க்கங்களை வாதிட்டுக் காலத்தைக் கழித்த சமுதாயமாகப் படைக்கப் பெற்றிருப்பதை மீண்டும் மீண்டும் வாசிக்கின்ற பொழுது அறிய முடிகிறது. எனவேதான் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதற்கு இலக்காக மட்டும் மணிமேகலைக் காப்பியம் எடுத்துக் காட்டப் பெறுகிறதே தவிர , மற்ற சமுதாய வளர்சசிகளுக்கு மணிமேகலைக் காப்பியப் பகுதிகள் இக்காலத்தில் எடுத்தாளப் பெறுவதில்லை. என்றாலும் காப்பியக் கால சமுதாயத்தை உணர்வதற்கு மணிமேகலைக் காப்பியம் சான்றாகத் திகழுகிறது எனலாம்.

http://www.muthukamalam.com/essay/literature/p73.html


 


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply