அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி!

 அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி!

 இது கருணாநிதி போட்ட முதல் நாடகம்

‘சாந்தா அல்லது பழனியப்பன்’ – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘டெசோ அல்லது புஸ்ஸோ’ – இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.

ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது, தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில் அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி. அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்தி கருணாநிதிக்கு இருந்தது. அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, ‘என்னது… சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது ‘ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்… பச்சைத் துரோகம்!

முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால், இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

”இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார். சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில் ‘முதல்வராக’ இருந்தபோது, ”நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப் பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லது வெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்” என்று சொல்லிச் சமாளித்தவர்.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச் சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை. ‘கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர் ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். ‘இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ”பதவி என் தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி” என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!

”இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்” என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதே உண்மை. ‘போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை, ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை. ”அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்” என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன், பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே… அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன? கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் ‘பாதுகாப்பான இடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டு கள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.

”நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?” என்று மனசாட்சிஉள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ”மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்” என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள்கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்று நிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்கா வது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. ‘கொன்றுவிட்டார் கள்… கொடுமைப்படுத்தினார் கள்… சித்ரவதை செய்தார்கள்’ என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. அப்போதும் ‘முதல்வர்’ கருணாநிதி, ”இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல” என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ”போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை” என்றார். அதாவது, இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.

”இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்” என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும். ‘போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக் காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.

”போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல” என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ”அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது” என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும். ”ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்” என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.

போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ”முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து” என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ”அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை… பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்” என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப் பட்டபோது, ”இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்” என்று மிரட்டல் விடுத்து, பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக் கொடுத்து… இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.

சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக் கொடுக்கிறது. உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ”பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்” என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ”விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்” என்று கிண்டல் அடித்ததும், ”இன்று அனை வரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்” என்பவர், அன்று, ”ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்” என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.

ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால், பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50 ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது. அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களை விரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு… என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு, கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது. தன்னுடைய கடந்த காலத் தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். பெரியாரைக் காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ”ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை!” என்று தந்தை பெரியார் சொன்னார்.

அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?

– நன்றி – விகடன்..

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13339:karunanithi-parasathi&catid=36:tamilnadu&Itemid=102


கலைஞரின் ஈழ துரோக பட்டியல்

 யுவகிருஷ்ணாவிற்கு மட்டுமல்ல இந்த பதில்….

Yuva Krishna

திமுக சார்பாக பேசும் நான் உண்மைகளைப் பட்டியலிட்டிருக்கிறேன். இதில் எது பொய் என்று யாரும் எதிர்த்துப் பேசமுடியவில்லை. திமுகவை எதிர்ப்பவர்களிடம் வெறும் வாய் மட்டும்தான் இருக்கிறது. வாயில் இருந்து உருப்படியாக எதிர்வாதம் வருவதாக தெரியவில்லை. மிஞ்சிப்போனால் “கருணாநிதி துரோகி” என்று தெனாலி கமல் மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்படித் துரோகி என்று நிறுவக்கூடத் தெரியவில்லை.

என்ன செய்வது? இப்படிப்பட்டவர்களுடன்தான் உரையாடித் தொலைக்க வேண்டியிருக்கிறது :-

பலமுறை பதில் சொல்லியும் பதிலளிக்காமல் கடந்து சென்று கொண்டிருந்தவர் மிகச்சலிப்புடன் நம்மிடம்  உரையாடவேண்டி இருந்ததால் அவருக்காக வும்  அவரது  நண்பர்களுக்காகவும் இந்த  பதிவு.  திமுக தமிழீழ படுகொலை நடந்தபோது செய்த அடக்குமுறைகளில் இருந்து சிறு புள்ளியை உங்களுக்கு அளிக்கிறேன்…

1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009 இல்  ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கியதன் காரணம் என்ன?….

2. தமிழீழ ஆதரவாளர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?…  சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டதேன்?

3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்த காரணங்கள் ஏன்?

4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக எங்களது தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்த காரணம் என்ன…

5. உங்கள் ஆட்சி மாறும் வரை ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’ என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை சிலவற்றை மூடியதும், வழக்கு பதிவு செய்து அச்சுக் கூடங்களை கையகப்படுத்தியதும் நடந்தது.

வேண்டுமானால்  அச்சக தோழர்களை சந்தித்து உண்மை அறிந்து கொள்ள திமுக  நண்பர்கள் முயற்சி எடுக்கலாம். இதை பல இடங்களில் சொல்லியும் திமுக நண்பர்கள் பதில் சொல்லாமல் சென்றதை கவனித்து இருக்கிறேன்.

6. கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து வருபவர்களை கைது செய்வதும், உதவி பொருட்கள் அனுப்பபடுவது தடுக்கபட்டும் செய்யப்பட்டது. மறைந்த தோழர். புதுக்கோட்டை முத்துக்குமார். இதை சொல்லி இருக்கிறார்.

7. கருணா நிதியை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்களை மூன்று மாதம் பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்

8. தமிழீழ போர் சி.,டிக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய சி.டிக்களை நகல் எடுக்க முடியாமல் தடை செய்தது. காரைக்குடிக்கு சி.டிக்களை கொண்டு வந்த எங்களது தோழர் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

9. போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக அரசு.

10. சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள் அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும். ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்

11. தமிழீழப் படுகொலையை கண்டித்தும், திமுக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய் வழக்கில் அடைக்கப்பட்டார்

12. முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்தார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.

13. இரண்டாவது ஈகியரான பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும்., உடல் நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது அரசு.

பின்பு இதை மாற்றி எழுதவைக்க போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

14. தமிழீழ தேசியதலைவர் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணா நிதி.. விடுதலை சிறுத்தைகளுக்கே கூட இது ந்டந்தது. அவர்களின் சுவரெழுத்தில் பிரபாகரன் படம் கருப்பு மை பூசி அழிக்கப்பட்ட படம் என்னிடம் இருக்கிறது. தேவையெனில் பதிவேற்றம் செய்கிறேன்.

15. மூன்றாவது ஈகியரான சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது. இன்று வரை கிடைக்கவில்லை.

16. அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் உடனடியாக நடத்த கோரி நெருக்கடி செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.

17. தமிழீழ போர் காட்சிகள் தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என சட்டம் கொண்டுவந்து தடுத்தார்.

18. போர்காட்சிகளை வெளியிடலாம் என உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென  காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.

19. போர்காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அச்சகங்கள் அச்சடிக்கவில்லை.மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்ப்ட்டன.

20 சென்னை மற்றும் இதர இடங்களில் உள்ள அரசு கருத்தரங்க கூடங்கள் தமிழீழ பிரச்சனைக்கும், தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழி பிரச்சனை என்ற எதற்கும் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுக்கப்ப்ட்டது.

21. சென்னை தேவ நேய பாவணர் அரங்கம் ஒவ்வொருமுறையும் காவல்துறை அனுமதி பெற்று ந்டத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர் பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை.. கீற்று ரமேஸ் பலமுறை சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் 8 மணி நேரம் அலைந்ததை நான் நேரில் கண்டு இருக்கிறேன். ( நாங்கள் எங்களது போராட்ட அனுமதிக்காக அலைந்து கொண்டிருக்கும் சுழல் இருக்கும். நிகழ்வின் முதல் நாள் வரை அனுமதி பற்றிய விவரங்கள் கிடைக்காது)

22. தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி,மணியரசன், சீமான் கைது செய்யப்ப்ட்டனர் சனவரியில்.

23. பின்னர் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டார் பேசியதற்காக. நெல்லையில் இருந்து அவர் தலைமறைவாக வெளியேறி பல ஊர்களுக்கு பயணம் செய்து பேச வேண்டி இருந்தது. சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டார்கள்.

24. நாஞ்சில் சம்பத்தும், கொளத்தூர் மணியும் திரும்பவும் கைது செய்யப்பட்டார்கள்.

25 சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்து, திரள அனுமதி மறுக்கப்ப்ட்டதால்

‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

26. கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்தது

27. முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும்

மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

28. முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.

29. கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது

30. போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்கானிக்கப்பட்டு நடவெடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்ப்ட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.

31. மே மாதம் 2009இல் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும்  உடைத்தார்கள்.. பெதிக அலுவலகம் அண்ணா அறிவாலயத்திலிருந்து குறைந்த பட்ச தூரத்திலேயே உள்ளது. கருணா நிதியின் கோபாலபுர வீடு இருக்கும் அதே பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

32. இது தவிர இது தவிர இவை அனைத்தும் போர் நடக்கும் போது அங்கு 420,000 மக்கள் இருக்கிறார்கள் என அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சொல்லிகொண்டிருந்த போது பிரணாப் மட்டும் 70,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக சென்னையிலும், பிர ஊரிலும் பொய் பேசியதை திமுக கண்டிக்கவே இல்லை…

33. தஞ்சையில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களது இல்லம் உட்பட பல த.தே.பொ.க. தோழர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டது காவல்துறை. ஈரோட்டில் பெ.தி.க. செயலாளரின் வீட்டில் குறுந்தகடுகளைக் கைப்பற்றி அவரை ரிமாண்ட் செய்தது காவல்துறை. –க. அருணபாரதி, த.தே.பொ.க.

34. தஞ்சையில் இந்திய அரசின் விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கையின் பலாலி விமானத்தளத்திற்கு ஆயுதம் அனுப்புகிறார்கள் என்று செய்தியறிந்து, தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்ட, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன் உள்ளிட்ட தலைவர்களும், பெண்கள் – குழந்தைகள் உள்ளிட்ட தோழர்களுமாக 275 பேரை கருணாநிதியின் காவல்துறை ரிமாண்ட செய்தது. இரவு 4 மணிக்கு நீதிபதி வீட்டில் வழக்கறிஞர்கள் பலரும் போராடி பிணை வாங்கி அனைவரும் அதிகாலை 5 மணியளவில் விடுதலையாயினர்.–க. அருணபாரதி,

த.தே.பொ.க. இன்றைக்கு, முன்னெச்சரிக்கை கைது செய்யக் கூடாது என மனு போடுகின்ற தி.மு.க. நிர்வாகிகள், தாம் ஆட்சியிலிருந்த போது, அவர்களது தில்லி கூட்டாளிகள் தமிழகம் வரும்போதெல்லாம், அவர்களுக்கு சொறிந்து விடுவதற்காக ஈழஅகதிகளை முகாமிற்கு சென்று எத்தனை முறை முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என்பதை நாமறிவோம்!–க. அருணபாரதி , த.தே.பொ.க.

மிக குறைந்த அளவிலேயே நடந்த அடக்குமுறைகளை இங்கு பதிந்து இருக்கிறேன். தமிழகத்தின் பிற பகுதிகளில் வேறென்ன நிகழ்ந்தது என்பது முழுமையாக பதிவு செய்யப்படவில்லை… அதையும் செய்தால் திமுக ஆட்சியின் உண்மை முகம் அனைவருக்கும் தெரியும்.

2009 போர் நடக்கும் வரை ந்டந்த  அடக்குமுறைகள் இவை. போர் நடந்த பிறகு 2009-2011 இரண்டு வருடங்களில் செய்த அயோக்கியதனத்தை  நேரம் கிடைக்கும் போது பிறகு எழுதி வைக்கிறேன்….  அதுவரை தோழர்கள் இந்த கட்டுரையில் விடுபட்டு போனவற்றினை பதியவும்… 

தோழமையுடன்
 
ஸ்டாலின் பெலிக்ஸ்
————————————————————————————————————–

இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..

————————————————————————————————————————-

———————————————————————————————-

http://andamansaravanan.blogspot.in/2009/08/17.html

தோழமையுடன்
 
ஸ்டாலின் பெலிக்ஸ்
————————————————————————————————————–

இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..


 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply