இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திர மோடி ஆனால் தமிழ்நாட்டில் எடப்பாடி அரசுக்கு வாழ்வா, தாழ்வா என்ற போராட்டம்!
நக்கீரன்
இந்தியாவில் கஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐந்து ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சி வரும் யூன் மாதம் 3 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அதற்குள் இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். கடந்த சில வாரங்களாக மக்களவைத் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் தமக்குள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை அனைவரும் தங்களின் கூட்டணியை அறிவித்து, தங்களின் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடவுள்ள தொகுதிகள் போன்றவற்றையும் அறிவித்துவிட்டன. இதே நேரம் ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் சட்டசபைத் தேர்தல்களும் நடைபெறவுள்ளன.
உலகத்தின் மிகப் பெரிய மக்களாட்சி முறைமை நிலவும் இந்தியாவில் அதன் மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல் கட்டத் தேர்தல் ஏப்ரில் 11 இல் தொடங்கி இறுதிக் கட்டத் தேர்தல் மே 6 இல் முடிவுறுகிறது.
இந்தியத் தேர்தல் நடைபெறும் கால அட்டவணை 1
கட்டம் |
திகதி |
இருக்கைகள் |
மாநிலம் |
1 |
ஏப்ரில் 11 |
91 |
20 |
2 |
ஏப்ரில் 18 |
97 |
13 |
3 |
ஏப்ரில் 23 |
115 |
14 |
4 |
ஏப்ரில் 29 |
71 | 9 |
5 |
மே 06 |
51 |
7 |
6 |
மே 12 |
59 | 7 |
7 |
மே 19 |
59 | 8 |
மொத்தம் |
543 | 78 |
இந்திய மக்களவைத் தேர்தலில் 900 மில்லியனுக்கு அதிகமான (90 கோடிக்கு அதிகமான) வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இதில் 18 – 19 அகவைக்கு உட்பட்ட 15 மில்லியன் (150 இலட்சம்) வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்க இருக்கிறார்கள். மொத்தம் 1,841 கட்சிகள் தேர்தல் களத்தில் நிற்கின்றன.
சென்றமுறை (2014) 830 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். அவர்களில் 550 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தார்கள். வாக்காளர் பட்டியலில் 18 வயதுக்கு மேலான வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களின் பெயர் இடம் பெறும். 2014 ஆம் ஆண்டு 900,000 இலட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஒரு மில்லியன் (10 இலட்சம்) வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தலைக் கண்காணிக்க 10 மில்லியன் ஊழியர்கள் (இராணுவம் உட்பட) ஈடுபடுத்தப் படுவார்கள். தேர்தல் செலவு ரூபா 500 பில்லியன் (ரூபா 5000 கோடி)
சென்ற (2014) தேர்தலில் 464 கட்சிகள் போட்டியிட்டன. வேட்பாளர் எண்ணிக்கை 8,251 ஆகும். இம்முறை இந்த எண்ணிக்கை 8,350 ஆக அதிகரித்துள்ளது. வாக்களித்தவர் விழுக்காடு 66.4 ஆகும். வாக்குகள் எண்ணும் மையங்கள் 4,000 ஆகும் சென்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனித்து 282 இடங்களில் வெற்றிபெற்றது. இதுவே ஒரு கட்சி கடந்த 30 ஆண்டுகளில் கைப்பற்றிய ஆகக் கூடுதலான இருக்கைகள் ஆகும். தோழமைக் கட்சிகளுடன் பாஜக 300 இருக்கைகளைத் தாண்டியிருந்தது.
இந்தத் தேர்தலிலும் பாஜக தலைமையில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (என்டிஏ) இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் (யுபிஏ) ருயு) தான் போட்டி நிலவுகிறது. சட்ட சபைத் தேர்தலில் (2016) மேற்கு வங்காளம், தமிழ்நாடு போன்ற மாநிலக்கட்சிகளே வெற்றி பெற்று ஆட்சியமைத்தன.
இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன. மாநிலங்களுக்கு குடித்தொகை அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்படும். ஆறு சட்ட சபைத் தொகுதிகள் ஒரு மக்களவைத் தொகுதிக்குச் சமமாகும். இந்திய மாநிலங்களில் உத்தரப்பிரதேசமே பெரிய மாநிலம். இந்த மாநிலத்தில் இருந்து 80 உறுப்பினர்கள் மக்களவைக்குத் தெரிவு செய்யப்டுகிறார்கள். உத்தரபிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை 200 மில்லியன். இந்த மாநிலம் தனிநாடாக இருக்கும் பட்சத்தில் உலகின் 5 ஆவது பெரிய நாடாக இருக்கும்.
இம்முறை என்டிஏ கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும் எனக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. பாஜக க்கு உள்ள செல்வாக்கைவிட பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு பல மடங்கு அதிமாகக் காணப்படுகிறது. அண்மையில் எடுத்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பின்வருமாறு அமைந்துள்ளன.
கருத்துக் கணிப்பு – அட்டவணை 2
திகதி | நிறுவனம் | தேஜகூ | ஐமுகூ | மற்றவர்கள் |
மார்ச் 2019 | 283 | 135 | 125 | |
மார்ச் 2019 | 273 | 133 | 137 | |
மார்ச் 2019 | 264 | 141 | 138 | |
மார்ச் 2019 | 285 | 126 | 132 | |
மார்ச் 2019 | 264 | 166 | 114 |
காஷ்மீரின் புல்வமா என்ற பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி 14 அன்று முஸ்லிம் தற்கொலைப் பேராளி ஒருவன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் இந்திய மத்திய துணைப்படை வீரர்கள் ( Central Reserve Police Force (CRPF) சென்ற டிரக் வண்டிமீது மோதி வெடிக்கச் செய்தான். இந்தத் தாக்குதலில் 41 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி அதிகாலையில், இந்திய விமானங்கள், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலகோட் என்ற இடத்தில் குண்டுகளை வீசின. இதில், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ‘லஷ்கர்-இ-தொய்பா’ இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் தெரிவித்தார்.
இந்தியா எல்லை தாண்டிச் சென்று, பாகிஸ்தான் நிலப்பரப்பின் மீது மேற்கொண்ட வான் தாக்குதலும் (இந்திய அரசாங்கத்தின் மொழியில் ‘surgical strike’) அதற்குப் பாகிஸ்தானின் எதிர்வினையும் இந்திய விமானப்படை வீரர் அபினந்தனை பாகிஸ்தான் சிறைப்பிடித்தமையும் பின்னர் விடுவிக்கப்பட்டதும் மோடியின் படிமத்தை மக்கள் மத்தியில் தூக்கி நிறுத்தியுள்ளது. இந்திய ஊடகங்களும் அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளும் முன்னாள் இராணுவத் தளபதிகளும் மோடியின் துணிச்சலைப் பாராட்டி இருக்கிறார்கள். சினிமாப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், பொதுமக்கள் என எல்லோரிடத்தும் இந்திய தேசபக்தி கரைபுரண்டு ஓடியதைப் பார்க்க முடிந்தது.
ரைம்ஸ் ஒவ் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் யார் அடுத்த பிரதமர் என்ற கேள்விக்கு 83.89 விழுக்காட்டினர் மோடிக்கு ஆதரவு தெரிவிதுள்ளனர். இராகுல் காந்திக்கு 8.33 விழுக்காட்டினரது ஆதரவு மட்டுமே உள்ளதாக அதே கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது. மம்தா பனார்ஜி (மேற்கு வங்க முதல்வர்) 1.44 விழுக்காடு, மாயாவதி 0.43 விழுக்காடு, வேறு தலைவர் 5.92 விழுக்காடு.
வட மாநிலங்களில் பொதுவிற்பனை வரி, நாணய மதிப்பு இழப்பு, விவசாயிகள் போராட்டம், நீட் தேர்வு போன்றவை மோடியின் செல்வாக்கைப் பாதிக்கவில்லை எனத் தெரிகிறது. இந்தி பேசும் மாநிலங்களான ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் மோடிக்கு முறையே 74 விழுக்காடு, 68.3 விழுக்காடு, மற்றும் 65.9 விழுக்காடு ஆதரவு காணப்படுகிறது.
ஐந்து ஆண்டுகால மோடியின் ஆட்சியின் பின்னர் எந்தக் கூட்டணிக்கு ஆதரவு என்று கேட்கப்பட்ட போது 83.03 விழுக்காடு மோடி தலைமை தாங்கும் என்டிஏ அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரம் 9.25 விழுக்காட்டினரே இராகுல் காந்தி தலைமைதாங்கும் யூபிஏ க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடி பிரதமர் இல்லாத தேஐகூ க்கு வெறுமனே 4.25 விழுக்காட்டினரது ஆதரவு காணப்படுகிறது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும்.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் : மார்ச் 19
வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் : மார்ச் 26
வேட்புமனு பரிசீலனை : மார்ச் 27
வேட்புமனு திரும்பப் பெறக் கடைசி நாள் : மார்ச் 29
மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டியிடலாம் என தமிழக தேர்தல் ஆணையர் சாஹு தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு நடந்துவருவதால் இந்த மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை விட 18 தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் அதிமுக ஆட்சிக்கு வாழ்வா சாவா? போராட்டமாக உருவெடுத்துள்ளது. இடைத் தேர்தலில் 8 தொகுதிகளை வெல்லாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கவிழும் அபாயம் உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போதைய நிலைப்படி பெரும்பான்மையை எண்பிக்க 109 உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி அரசுக்குத் தேவை. ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக, சபாநாயகர் நீங்கலாக, 109 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
திமுகவில் 88 உறுப்பினர்களும், காங்கிரஸ் 8 எம்எல்ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஒரு உறுப்பினர் என திமுக கூட்டணியில் மொத்தம் 97 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே, பெரும்பான்மைக்குத் தேவையான 108 எம்எல்ஏக்கள் மற்றும் சபாநாயகரின் ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இருக்கிறது. தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தங்கள் நிலைப்பாடு குறித்துத் தெளிவாக அறிவிக்கவில்லை.
ஆகையால் இதுவரை ஆபத்து இல்லாமல் தப்பி வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அதிமுக அரசுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு ஆபத்தாக வந்துள்ளது. 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இப்போது இல்லை என்பதால் மீதமுள்ள 18 தொகுதிகளுக்கும் முடிவு வந்தால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆக இருக்கும். ஆக ஆட்சியமைக்க எடப்பாடி அரசுக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இப்போது உள்ள 108 உறுப்பினர்களைத் தவிர தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரை விடுத்து 8 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும். ஆகையால் எடப்பாடி பழனிசாமி பெரும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் 1967 இல் இருந்து திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் இருந்து வருகின்றன. தேசியக் கட்சிகளுக்கு அடியோடு ஆதரவு இல்லாமல் இருக்கிறது. திராவிடக் கட்சிகளின் செல்வாக்குக்கு நான்கு தூண்கள் காரணமாக இருக்கின்றன.
1) பகுத்தறிவு
2) சோசலீசம்
3) இந்தி எதிர்ப்பு
4) பிராமணிய எதிர்ப்பு
இம்முறை முதன் முதலாக ஆளுமைமிக்க தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரும் இல்லாத ஒரு சூழ்நிலையில் மக்களைவைக்கான தேர்தல் மற்றும் கட்சித் தாவல் காரணமாகத் தங்கள் பதவியை இழந்த 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரை இவர்களை மிஞ்சிய ஆளுமை மிக்க மாநிலத் தலைவர்கள் இருக்கவில்லை. பாஜக யைப் பொறுத்தளவில் மாநிலத்தில் கனதியான தலைவர் இல்லை. தமிழ்நாட்டு வாக்காளர்களைப் பொறுத்தளவில் கொள்கைக்கு அல்லாது தனிப்பட்ட மனிதர்களுக்கே வாக்களிக்கிறார்கள். திமுக வுக்கு வாக்களித்தவர்கள் கருணாநிதிக்கு வாக்களித்தார்கள். அதிமுக க்கு வாக்களித்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் வாக்களித்தார்கள்.
பொதுவிற்பனை வரி, நாணய மதிப்பு இழப்பு, விவசாயிகள் போராட்டம், நீட் தேர்வு போன்ற நடவடிக்கைகளால் மோடி அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். காவேரிச் சிக்கல், ஜல்லிக்கட்டுச் சிக்கல், நீட் சிக்கல் போன்றவற்றில் மோடியின் நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது. மேலும் மோடியின் இந்தி ஆதரவு, திராவிட தேசியத்துக்கு எதிரான பார்ப்பன சக்திகளுக்கு ஆதரவு தமிழ்மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் மக்கள் எதன் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள்? கட்சிக்கா? சாதிக்கா? அல்லது இரண்டுக்குமா!
அரசியல் கட்சிகள் ஒரு தொகுதியில் எந்தச் சாதிக்கு வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறதோ அந்தச் சாதியைச் சேர்ந்த வேட்பாளரையே களம் இறக்குகிறார்கள். அப்படியில்லா விட்டால் அந்தக் கட்சிக்கு இருக்கிற வெற்றி வாய்ப்பு கை நழுவி விடும் எனக் கட்சித் தலைவர்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் எண்ணிக்கை பலம் வாய்ந்த முதல் ஐந்து இடத்தில் இருக்கும் சாதிகள் பின்வருமாறு –
சாதிவாரி தமிழ்நாடு குடிமக்கள் எண்ணிக்கை – அட்டவணை 3
சாதி | உட்பிரிவு சாதியினர் | எண்ணிக்கை | விழுக்காடு | அடர்த்தி மாவட்டங்கள் | இடம் |
ஆதி திராவிடர் (தமிழர்) | மள்ளர், பறையர் | 18,025,000 | 25 | வட மற்றும் தென் மாவட்டங்கள்…. | 1 |
வன்னிய குல சத்திரியர் | கவுண்டர், நாய(க்)கர், படையாட்சி | 12,987,000 | 18 | விழுப்புரம், வேலூர், சென்னை….. | 2 |
முக்குலத்தோர்(தேவர்) | கள்ளர், மறவர், அகமுடையோர் | 72,100,00 | 10 | மதுரை, தேனீ, தஞ்சை, சிவகங்கை… | 3 |
கொங்கு வெள்ளாளர் | மந்திரியார், கவுடா, மன்றாடியார் | 54,07,500 | 7.5 | கோவை, கிருஷ்ணகிரி, கரூர், திருப்பூர்… | 4 |
நாடார் | நாடார், சாணார், | 43,26,000 | 6 | கன்னியாகுமரி, தூத்துக்குடி, | 5 |
நடைமுறையில் ஒரு சாதியினரது எண்ணிக்கைப் பலத்துக்கும் அரசியல் செல்வாக்குக்கும் நேரடித் தொடர்பு இல்லரமல் இருக்கிறது. எண்ணிக்கையில் குறைந்த சாதியினர் தங்களது எண்ணிக்கைப் பலத்துக்கு அதிகமாக அரசியல் செல்வாக்குச் செலுத்துகிறார்கள். இன்றைய அதிமுக அமைச்சரவையில் சாதிவாரியாக ஆதிக்கம் செலுத்தும் சமூகங்கள் பின்வருமாறு,
1) முக்குலத்தோர் (தேவர்) – 28 விழுக்காடு
2) வன்னிய குல சத்திரியர் – 16 விழுக்காடு
3) கொங்கு வெள்ளாளர் – 16 விழுக்காடு
4) ஆதி திராவிடர் – 9 விழுக்காடு
5) ஏனையவை – 31 விழுக்காடு
ஆக மொத்தக் குடித்தொகையில் 10 விழுக்காடாக இருக்கும் கொங்கு வெள்ளாளருக்கு அமைச்சரவையில் அவர்களுக்கு 16 விழுக்காடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 25 விழுக்காடு ஆதித் திராவிடருக்கு 9 விழுக்காடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக க்கு எம்ஜிஆர் காலம் தொட்டு முக்குலத்தோர் (தேவர்) சமூகம் ஆதரவாக வாக்களித்து வருகிறது.
வேட்பாளர்களைக் கட்சிகள் சாதி அடிப்படையிலேயே நிறுத்துகின்றன என்பதற்கு நாடார்கள் பெரும்பானமையாக வாழும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். இந்தத் தொகுதியில் கனிமொழி (திமுக) தமிழிசை சௌந்தரசாரன் (பாஜக) இருவருக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகிறுது. இவர்கள் இருவரும் நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஏறக்குறைய ஒரே மாதிரியான அரசியல் பின்புலம் உள்ளவர்கள். தூத்துக்குடி தொகுதி வாக்காளர் எண்ணிக்கை 13,08,105 ஆகும். இந்தத் தொகுதியில் கடந்த முறை (2014) அதிமுக வெற்றிபெற்றிருந்தது. இந்தத் தொகுதியில் முக்கிய விவாதப் பொருளாக ஸ்ரெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு, கஜா புயல், பாஜக மீதான அதிருப்தி ஆகிய காரணிகள் தமிழிசைக்கு எதிராக இருக்கின்றன.
ஆதி திராவிடர் என்ற சொல் தமிழ் நாட்டில் தலித்துக்களைக் குறிக்கப் பயன்படுகிறது. இச் சொற்பதம் பெரியார் இராமசாமி அவர்களால் பயன்படுத்தப்பட்டது. இந்து சமூகத்தால் தாழ்ந்த சாதிகளாக வகைப்படுத்தப்பட்ட பறையர், அருந்ததியர், பள்ளர் போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களை கூட்டாக அழைக்கப் பயன்படுகிறது. கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இவை முறையே ஆதி கர்நாடகா, ஆதி ஆந்திரா என்ற சொற்களால் குறிப்படப்படுகின்றனர்.
சங்க காலத்தில் பறையர்கள், மிகச்சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர். வழிவழியாக பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாக கொண்டிருந்தனர். பறையர்களில் ஒரு பிரிவினர் “வள்ளுவன்” என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சோதிடத்திலும், மந்திர தந்திரங்களிலும் பெயர் பெற்று இருந்தனர். அரசர்களின் ஆலோசகர்களாகவும் இவர்கள் பணி புரிந்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் எண்ணிறந்த சாதியினரும் உட்பிரிவு சாதியினரும் உண்டு. எழுபதுக்கும் மேற்பட்ட சாதியினர் தமிழ்நாடு அரசினரால் அட்டவணைச் சாதியினர் (Scheduled Caste) என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். இவர்களில் தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் என்ற மூன்று சாதியினர்தான், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். கல்வெட்டுகளிலும், செப்புப் பட்டயங்களிலும் இம் மூன்று சாதியினர், முறையே பள்ளர், பறையர், சக்கிலியர் என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு இட ஒதுக்குக்காக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் ஏழு பிரிவுகளாகப் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே;
பட்டியல் சாதிகள் (76)
பட்டியல் பழங்குடியினர் (36)
பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136)
பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7)
மிகவும் பிற்பட்ட சாதிகள் (41)
சீர்மரபினர் (68)
முற்பட்ட சாதிகள் (79)
இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும். முற்பட்ட வகுப்பினர் தவிர்த்து, ஒவ்வொரு வகுப்பினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் தனி இட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.(https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%) இதன் மூலம் தமிழக அரசு சமூகத்தில் பின்தங்கிய சாதியினரை இட ஒதுக்கீடு மூலம் (கல்வி, வேலை வாய்ப்பு) உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கிறது.
இன்று தமிழ்நாட்டு அரசயிலில் இருந்து சாதியைப் பிரித்துப் பார்க்க முடியாது போய்விட்டது. தமிழ்நாட்டு சாதி அமைப்பைப்பற்றித் தெரிய விரும்புவோர் இந்த இணைய தள முகவரிக்குப் (http://www.worldtamilswin.com/read-tamil-news/18416/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%) போங்கள்.
வழக்கம் போல ஸ்டாலின் தலைவராக இருக்கும் திமுக அணிக்கும் (மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி) தமிழக முதல்வர் இடப்பாடி தலைமை தாங்கும் அதிமுக அணிக்கும் (ஐக்கிய தேசிய முன்னணி) இடையில்தான் போட்டி நிலவுகிறது. அதிமுக இல் இருந்து பிரிந்து போன ரிரிரி தினகரனது கட்சியான அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் கணிசமான ஆதரவு காணப்படுகிறது. இந்தக் கட்சி அதிமுக இன் வெற்றி வாய்ப்பை பல தொகுதிகளில் இழக்கச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட மன்றத்துக்கான தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும் வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலிலும் அதே கட்சிக்கு வாக்களிப்பார் என்று சொல்ல முடியாது. சட்டமன்றத்தில் வென்ற கட்சி மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவியிருக்கிறது. வாக்காளர்களின் விருப்பு, வெறுப்பை கண்டறிவது சுலபமான விடயம் அல்ல.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அணியில் திமுக, இந்திய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் (எம்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அணியில் அதிமுக, பாஜக, தேமுதிக (விஜயகாந்த்) தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) , புதிய தமிழகம், இந்திய ஜனநாயகக் கட்சி இடம் பெற்றுள்ளன.
2016 இல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் 40.8 விழுக்காடு. பாமக 5.36 விழுக்காடு, பாஜக 2.86 விழுக்காடு, தேமுதிக 2.41 விழுக்காடு. தமாகா 0.54 மற்றும் புதிய தமிழகம் 0.54 விழுக்காடு. ஆக மொத்தம் 52.74 விழுக்காடு.
2016 இல் திமுக பெற்ற வாக்குகள் 31.86 விழுக்காடு. இந்திய காங்கிரஸ் 6.47 விழுக்காடு, இந்திய கம்யூனிஸ்ட் (0.79 விழுக்காடு) கம்யூனிஸ்ட் (எம்) 0.72 வழுக்காடு, விடுதலைச் சிறுத்தைகள் 0.77 விழுக்காடு. மொத்தம் 41.48 விழுக்காடு.
2016 இல் அதிமுக பெற்ற இருக்கைகள் 134, திமுக 89, இந்திய தேசிய காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 மொத்தம் 232 ஆகும்.
கூட்டணி வைப்பதால் பல நன்மைகள் உண்டு. மிகக் கடுமையாகப் போட்டி நிலவுகிற தொகுதிகளில் சின்னக் கட்சிகளின் வாக்குப் பலம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றது. எடுத்துக் காட்டாக 2016 இல் சட்ட மன்றத்துக்கு நடந்த தேர்தலில் ஆகக் குறைந்த பெரும்பான்மை 60 – 532 வாக்குகளாகும்.
2016 இல் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் அதிமுக அணி மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் இரண்டிலும் எளிதாக வெற்றிவாகை சூடும் போலத் தெரியும். ஆனால் ஜெயலலிதா இல்லாத அதிமுக க்கு முன்னைய வாக்குப் பலம் இப்போது இல்லை. மேலும் அதிமுக உடைந்து ரிரிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் திராவிட கழகம் உருவாகியுள்ளது.
ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொகுதிக்கு 21 டிசெம்பர், 2017 இல் நடந்த இடைத் தேர்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ரிரிரி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் ஜெயலலிதா 39,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார் என்பது பலரை வியப்பில் ஆழ்த்தியது.
ஆர்கே நகர் இடைத் தேர்தல் முடிவு – அட்டவணை 4
ரிரிரி தினகரன் |
சுயேச்சை |
89013 |
மதுசூதனன் |
அதிமுக |
48306 |
மருது கணேஷ் |
திமுக |
24651 |
கரு நாகராஜன் |
பாஜக |
1417 |
கலைக்கோட்டுதயம் |
நாம் தமிழர் |
3860 |
நோட்டா |
– |
2373 |
சட்ட மன்றத்துக்கான தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும் வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலிலும் அதே கட்சிக்கு வாக்களிப்பார் என்று சொல்ல முடியாது. சட்டமன்றத்தில் வென்ற கட்சி மக்களவைத் தேர்தலில் தோல்வியை தழுவியிருக்கிறது. வாக்காளர்களின் விருப்பு, வெறுப்பைக் கண்டறிவது சுலபமான விடயம் அல்ல.
மத்தியில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இருப்பது தாயகத் தமிழர்களைப் பொறுத்தளவில் நன்மையாக இருக்கும். நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தியத் தூதுவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 13 ஏ முழுமையாக நடைமுறைப்படுத்தப் படவேண்டும் என்று பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதுவரை காலமும் 1987 இல் எழுதப்பட்ட இந்திய – இலங்கை உடன்பாட்டை மீளக் கையில் எடுப்பது பொருத்தமாக இருக்காது என்ற மன நிலையில் இந்தியா இருந்து வந்தது. 13 ஏ முழுதாக நடைமுறைப்படுத்தப் படவேண்டும் என்பது வட- கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், காவல்துறை அதிகாரம் மாகாண சபைகளுக்குப் பரவலாக்கப்பட வேண்டும் என்று என்று கேட்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.