சிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு

சிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு

பி.கே. பாலச்சந்திரன்

இன்று இலங்கைத் தீவில் அசல் “சிறிலங்கன்” பிராமணர் இல்லை எனப் பொதுவாகப் பேசப்படுகிறது. இந்துக் கோயில்களில் பூசகர்களாக பணியாற்றுபவர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்.

கலாநிதி ஞானத் ஒபயசோரா, பிரின்ஸ்ரன் பல்கலைக் கழகத்தில் (Princeton University ) ஒரு சமூக மானிடவியலாளராகப் பணிபுரிபவர். அவர் 2015 ஆம் ஆண்டு ” பிராமணர்களின் குடிவருகையும் சிறிலங்காவில இந்திய உயர்த்தட்டினர் எப்படி விதிவசத்தால் சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள்” என்ற கட்டுரையை எழுதியிருந்தார்.

சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பிராமணர்கள் இருந்ததற்கான எந்தப் பதிவும் இல்லை.

“ஆனால் பிராமண புரோகிதர்கள் எல்லாச் சிங்கள பவுத்த இராச்சியங்களில் இல்லாவிட்டாலும் பெரும்பாலான இராச்சியங்களில் இருந்தார்கள் என்பதற்கு வலுவான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பதினாறாம் நூற்றாண்டில் இருந்து ஊர் அறிவாளிகளால் எழுதப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் தென்னிந்தியாவில் இருந்து பெருமளவிலான புலப்பெயர்ச்சி பற்றி மட்டுமல்ல பிராமணர்களது வருகை அவர்கள் குடியேறிய ஊர்கள் பற்றியும் குறிப்பிடுகின்றன.

பல ஓலைச்சுவடிகளில் பிராமணன் அல்லது பாமுனு என்ற சொற்பதம் காணப்படுகிறது. அதனால் சில ஊர்களின் பெயர்கள் பாமுனுகம மற்றும் கிரிபமுனுகம எனக் காணப்படுகின்றன. ஊவாமாவட்டத்தில் முருகனுக்கு உள்ள ஒரு முக்கிய கோயிலில் உள்ள வாசகங்கள் அந்தக் கோயிலை எழுப்பியவர்கள் இரண்டு பிராமண உடன்பிறப்புக்கள் என்றும் ஆனால் அவர்களது சந்ததிகள் பிராமணப் பெயரை கொண்டிருக்கவில்லை எனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

விமலதர்மசூரியன் (1591 – 1604) என்ற அரசன் ஆட்சிக் காலத்தில் கண்டிப் பட்டினத்தில் பிராமணர்கள் வாழ்ந்தார்கள் என ஒல்லாந்தரது வரலாற்று சாசனங்கள் குறிப்பிடுகின்றன. கேள்வி என்னவென்றால் அந்தப் பிராமணர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? என ஒபயசேகரா வியப்படைகிறார்.

கொவிகம சாதியில் கலப்பு

இலங்கையின் மத்திய மாத்தள மாவட்டத்தில் வாழ்ந்த முக்கிய கொவிகம (கமக்காரர்கள் குடும்பம்) பற்றி 17 – 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு ஓலைச்சுவடிகளில் ‘பிராமணா’ என்ற பெயர் அவர்களது பெயர்களோடு இணைக்கப்பட்டுள்ளன.

” அந்தக் கட்டுரை என்ன சொல்கிறதென்றால் கொவிகம சாதியின் எண்ணிக்கை மற்றும் அரசியல் செல்வாக்குக் காரணமாக புலம்பெயர்ந்த பல்வேறு குழுக்கள், அவர்கள் வணிகர்கள் அல்லது பிராமணச் சாதியில் ஒன்றிப் போய்விட்டார்கள். அதிலும் பிரபலமான பிராமணர்கள் மேட்டுக் குடிகளுடன் (ரதல) ஒன்றிப் போய்விட்டார்கள்.” என ஒபயசேகர கருதுகிறார்.

எந்த விகிதத்திலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த பிராமணர்கள் இந்தியாவில் இருந்து கடல் கடந்த போதே தங்களது சாதியை இழந்துவிட்டார்கள். சிங்களவர்கள் வாழும் தென்னிலங்கையில் மேலான சாதியான கொவிகம சாதியில் ஒன்றிப் போய்விட்டார்கள்.

சலாகம – நம்பூதிரி மூலம்

தென்மேற்கு இலங்கையில் கறுவாப்பட்டை உற்பத்தி மற்றும் உரித்தல் போன்ற தொழில்களோடு சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் பிராமண மூலத்தை – சரியாகச் சொன்னால் நம்பூதிரி பிராமண மூலத்தில் இருந்து வந்தவர்கள் என உரிமை பாராட்டுகிறார்கள்.

இந்தப் பிராமணர்கள் தாங்கள “பிரகக்மன வன்ஸ்ஹயா” வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தாங்கள் கேரளத்தில் உள்ள சாலிய மங்கலம் அல்லது சாலிய பட்டினத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள். வத்ஹிமி புவனேக்குபாகு என்ற ஒரு சிங்கள அரசன் இலங்கை நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொள்வதற்கு சிறிலங்கா நாட்டின் பவுத்த தேரர்கள் தடையாக இருந்தார்கள். காரணம் அந்த அரசன் அசல் சிங்களவன் அல்லவென்றும் அவர் பாத்திமா என்ற ஒரு முஸ்லிம் பெண்ணின் மகன் என்றும் சொன்னார்கள். பாத்திமா தனது தந்தையின் அந்தப்புரத்தில் இருந்தவர்.

இதனால், அரசன் பேறுவலையைச் சேர்ந்த ‘பெரிய முதலி மரைக்காயர்’ என்ற ஒரு முஸ்லிம் கனவானை அழைத்துத் தனது முடிசூட்ட விழாவிற்கு இந்தியாவிலிருந்து “உயர் சாதி” பிராமணர்களை அழைத்து வருமாறு கேட்டான்.

இன்னொரு கோட்பாடு நாலாவது புவனக்கபாகு என்ற அரசனது மனைவிகளில் முஸ்லிம் பெண் ஒருவரும் இருந்தார். அவர் மூலமாக ஒரு மகன் இருந்தான். அரசன் அவனைக் கருவூலத்துக்குப் பொறுப்பாக நியமித்திருந்தான். அவனது பெயர் வாஸ்து சுவாமி (வாஸ்து – சொத்து அல்லது பொருள்) அல்லது பின்னர் வத்துஹாமி அல்லது வத்திமி என்பதாகும். இளவரசன் வத்ஹிமி தான் அரசனாக வரவேண்டும் என்பதற்காக ஒரு சிங்கள இளவரசியைத் தேடினான். இதனால் குருநாகலில் பெண் பிள்ளைகளோடு வாழ்ந்த பிரபுக்கள் அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.

இருந்தும் இளவரசன் வத்திமி ஒரு சிங்கள இளவரசியை ஒருவாறு கண்டுபிடித்தான். ஆனால் சிறிலங்காவில் இருந்த பிராமணர்கள் அவனுக்கு முடி சூட்டிவைக்க மறுத்துவிட்டார்கள். இதனால் இளவரசன் இந்தியாவில் இருந்து பிராமணர்களை அழைத்துவர உதுமா லெப்பே என்ற பிரபுவை அனுப்பிவைத்தான். உதுமா லெப்பே மற்றும் பத்திமீரா லெப்பே இருவரும் ஏழு அல்லது எட்டுப் பிராமணர்களை அழைத்து வந்தார்கள்.

சலாகம வகுப்பினர் தங்களது மூதாதையர் இலங்கைக்குப் புலம்பெயர்ந்த கேரள நம்பூதிரி பிராமணர்கள் என நம்புகிறார்கள்.

அவர்களது குடும்பப் பெயர் முனி (முனிவர்) என்ற விகுதியோடு முடிகின்றது. எடுத்துக் காட்டு எதிரிமுனி, தேமுனி, நாம்முனி, வெத்தமுனி அல்லது வாலைமுனி, யாகமுனி (யாகம் செய்யும் முனிவர்) மற்றும் விஜயராம (வெல்லும் இராமன்) மற்றும் வீரக்கொடி.

இலங்கைத் தீவின் மேற்கு மற்றும் தென்பகுதிகளில் காணப்பட்ட கறுவாக் காடுகளை முகாமைத்துவம் செய்வதற்குப் பொறுப்பாக சிங்கள அரசர்களால் நியமிக்கப்பட்டார்கள்.

கொலனித்துவ காலம்

போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் கறுவாத் தோட்டங்களைப் பராமரிக்கும் பரம்பரை வழிவந்த பொறுப்புக்கு அமர்த்தினார்கள். இந்தக் காலப் பகுதியில் சலாகம வகுப்பினர் தங்களது கடைசிப் பெயரை டி சில்வா (அல்லது சில்வா) டி சொய்ஸ்சா, அப்ரூ, தாப்ரூ, மென்டிஸ் என வைத்துக் கொண்டார்கள்.

பவுத்தத்திற்குப் பங்களிப்பு

சிறிலங்காவின் தென்மேற்குக் கரையோரப் பகுதியில் உள்ள பலபிட்டியாவில் வாழ்ந்த அம்பகபிட்டிய ஞான விமல தேரர் என்ற ஒரு பவுத்த பிக்கு 1977 இல் தனது இளம் துறவிகளுடன்

குருதீட்சை பெறப் பர்மா சென்றார். 1800 இல் பர்மாவில் உள்ள அமரபுரத்து சங்கராசவிடம் தீட்சை பெற்றுக் கொண்டார்.

1803 இல் இந்த முதல் சமயக்குழு சிறிலங்கா திரும்பியது. திரும்பியதும் உபசம்பத என்ற சடங்கை ஒரு பொளர்ணமி நாளில் நடத்தினார்கள். இந்தப் புதிய சங்கம் அமரபுர நிக்காய என அழைக்கப்பட்டது. அதற்குப் பிரித்தானிய அரசு மிகவிரைவாக அங்கீகாரம் வழங்கியது.

19 ஆம் நூற்றாண்டில் சிறிலங்காவில் பவுத்த மீட்டெழுச்சிக்கு அமரபுர நிக்காய மிகமுக்கிய பங்கு வகித்தது. பவுத்த சமயத்தைத் தழுவிய பெரும்பான்மை சலாகம வகுப்பினர் இந்த இயக்கத்திற்கு முன்னணி வகித்தனர்.

கத்தோலிக்க மதத்திற்குப் பிராமணனின் பங்களிப்பு

1658 இல் ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து ஆட்சியுரிமையை கைப்பற்றினர். அவர்களே ஐரோப்பிய இராணுவ, அரசியல் மற்றும் பொருளியல் சக்தியாக விளங்கினர். தீவில் இருந்த கிறித்தவர்களது மதமான உரோமன் கத்தோலிக்க மதத்தின் இடத்தை கால்வினசம் (Calvinism) அல்லது புராட்டஸ்த்தானிசம் (Protestantism,) மதம் பிடித்துக் கொண்டது.

கத்தோலிக்க போர்த்துக்கேயரின் 150 ஆண்டு ஆட்சியில் சக்தி வாய்ந்த மதமாக இருந்த கத்தோலிக்கம் முற்றாக மறைந்து போய்விட்டது. புராட்டஸ்தன் ஒல்லாந்தர் கத்தோலிக்க போர்த்துக்கேயரை ஐந்தாம் அரசியல் படையாகப் பார்த்தார்கள். அதனால் அவர்கள் சமயவேட்டைக்கு உள்ளானார்கள். கத்தோலிக்க மதத்தைத் கடைப்பிடிப்பது முடியாத காரியமாக இருந்தது.

கோவாவில் அக்கறை

சிறிலங்காவில் கத்தோலிக்க சமூகத்தின் அவலநிலை கோவாவில் உள்ள கத்தோலிக்க வட்டாரங்களை அதன்பால் அக்கறைப்பட வைத்தது. கோவா, இந்தியா மற்றும் தூர கிழக்கு நாடுகள் கத்தோலிக்க மதத்தின் அதிகார இருக்கையாக இருந்தன.

இலங்கைக்குள் போர்த்துக்கேய பாதிரிமார் நுழைவதை ஒல்லாந்தர் இலகுவாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் யாரும் கண்டுகொள்ளாமல் இந்தியப் பாதிரிமார் இலங்கைக்குள் ஊடுருவி விடலாம். வணபிதா எஸ்ஜி பெரேரா அவர்களின் கூற்றுப்படி இந்திய மிசனரிமாரை இலங்கைக்கு அனுப்ப முடியவில்லை. காரணம் இந்தியாவுக்கு வெளியே பணியாற்றுவது வெள்ளையர்களின் ஏகபோக உரிமையாக இருந்தது.

யோசேப் வாஸ் வருகை

என்ன ஆபத்து நேர்ந்தாலும் இலங்கைக்குப் போயே தீரவேண்டும் என்பதில் ஒருவர் விடாப்பிடியாக இருந்தார். அவர்தான் வணபிதா யோசேப் வாஸ் ஆவார். இவர் கோவாவில் உள்ள சன்போல் என்ற இடத்தைச் சேர்ந்த கொங்கணி பிரமண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராவர்.

ஏற்கனவே இயங்கி வந்த நிறுவன சமயப் பிரிவுகளின் உதவி அல்லது ஆதரவின்றித் தன்பாட்டில் செல்ல அணியமானார்.

உயர்ந்த சாதியைச் சேர்ந்திருந்தாலும், கொங்கணி, போர்த்துக்கேயம், இலத்தீன் பின்னர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும் வணபிதா யோசேப் வாஸ் அவர்கள் வறிய வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். ஏழைகளிலும் ஏழைகளுக்கு ஆராதனை செய்தார்.

இலங்கையில் எந்த அதிகாரத்தையோ? எந்த நிறுவனத்தையோ அவர் பிரதிநித்துவப் படுத்தவில்லை. ஆனால் தனது 24 ஆண்டுகால தனிமனித சமயப் பணி மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு, கண்டியில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு போன்ற இடங்களில் மத அனுட்டானத்தைக் கடைப்பிடிக்கும் 70,000 கத்தோலிக்க குடும்பங்களை உருவாக்கினார்.

வணபிதா யோசேப் வாஸ் அவர்கள் இலங்கைக்கு கூலி வேலை தேடும் ஒருவராக மாறுவேடத்தில் சென்றார். தனது மேலாடை மற்றும் காலணிகளைக் கழைந்துவிட்டு இடுப்பில் ஒரு முழத்துண்டைகட்டிக் கொண்டு கால்நடையாகவே பயணமானார். அவர் தனியே எதையும் சேர்க்காமல் கஞ்சியைக் குடித்துக் கொண்டு வாழக் கற்றுக் கொண்டார்.

தேவை காரணமாகவும் ஒல்லாந்தரிடம் பிடிபடாமலும் இருக்க வணபிதா யோசேப் வாஸ் ஒரு பிச்சைக்காரன் போல் திரிந்தார். யாழ்ப்பாண சமூகத்தை நெருங்கிப் படித்தறிய இந்தப் பிச்சைக்காரன் பாத்திரம் உதவியது. அதுமட்டும் அல்லாமல் யேசுகிறித்து எந்த விதமான வாழ்வை விரும்பியிருப்பாரோ, அந்த வறுமை வாழ்க்கை அவர் வாழந்து காட்டினார்.

வணபிதா எஸ்.ஜி. பேராரா அவர்களின் கூற்றுப்படி வணபிதா யோசேப் வாஸ் ஒரு பிராமணன் என்பதால் அவரை யாழ்ப்பாண மக்கள் ஏற்றுக்கொள்ளத் தூண்டியது. இலங்கையில் வேறு எந்தப் பாகத்தையும் விட யாழ்ப்பாணத்தில் பிராமணர் உச்சமாக மதிக்கப்பட்டார்கள். வணபிதா வாஸ் யாழ்ப்பாணத்தில் ஒரு சன்னியாசியாக நடத்தப்பட்டார். தென்னிலங்கையில் மகாசன்னியாசியாக நடத்தப்பட்டார்.

அவரது தொண்டு காரணமாக வாஸ் இலங்கையின் திருத்தூதர் (Apostle of Ceylon. ) என அழைக்கப்பட்டார். கொழும்பில் 1995 சனவரி 14 ஆம் நாள் நடந்த திறந்தவெளி வழிபாட்டில் போப்பாண்டவர் இரண்டாவது யோன் போல் அவரைப் புனிதராகப் பிரகடனம் செய்து வைத்தார்.

(Daily FT என்ற இணைய தளத்தில் 17-11-2018 அன்று வந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம் நக்கீரன்)


சிறிலங்காவின் வரலாற்றில் பிராமண அடிச்சுவடு

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply