இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்

இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்

ம.ஆ. சுமந்திரன், பா.உ

இன்றைய  பேருரைக்கான தலையங்கம் சமஷ்டி பற்றியது. இச் சொல் ‘federal’ என்கின்ற ஆங்கில சொல்லை குறிக்கிறதாக தமிழிலே உபயோகிக்கப்பட்டு வந்திருந்தாலும் அது வட மொழி சார்ந்த ஒரு சொல்லாகும் .  பொருத்தமான தமிழ் சொல் இல்லையென்றாலும் கூட்டாட்சி அல்லது இணைப்பாட்சி என்ற சொற்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.  சமஷ்டியை தனது அடிப்படையாக கொண்டிருக்கின்ற இலங்கை தமிழ் அரசு கட்சியும் சில வருடங்களுக்கு முன்னர் எமது யாப்பிலே காணப்படும் வட சொற்களை தமிழ் சொற்களாக மாற்றிய போது சமஷ்டியை இணைப்பாட்சி என்று மாற்றியிருந்தோம். இந்த மாற்றத்தை எமது கொள்கையில் ஏற்றப்படுத்திய  மாற்றமாக குற்றம் சுமத்தி, பிரிவினையைக் கோருவதாகச் சொல்லி எமக்கெதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விபரங்களை நான் பின்னர் எடுத்துக் கூறுவேன். ஆனால் தற்போதைக்கு இவ் உரையில் சமஷ்டி என்ற சொற் பிரயோகத்தையே நான் உபயோகிக்கப் போகிறேன்.

சமஷ்டியை கொள்கையாகக் கொண்ட ஒரே அரசியல் கட்சி இலங்கை தமிழ் அரசுச் கட்சி. ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அடிப்படைக் கொள்கையாக அது இன்று பரிணமித்திருக்கிறது. எழுபது வருட சுதந்திர சரித்திரத்தில் பல்வேறு தமிழ் கட்சிகள் வெவ்வேறு கொள்கைகளை முன்வைத்திருந்தாலும் கூட அனைத்து கட்சிகளும் இன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாப்பில் உள்ள கொள்கையே தமது கொள்கையென்று ஏற்றுக்கொண்டுள்ளன.  இப்படியான சந்தர்ப்பத்தில் சமஷ்டி ஆட்சி முறை என்றால் என்னவென்பதை தெளிவாக வரையறுத்துக் கூற வேண்டியது இலங்கை தமிழ் அரசுக் கட்சியினுடைய கடமையென்று நான் கருதுகிறேன்.

சமஷ்டியென்ற அரசியல் கோட்பாட்டிற்கு குறித்தவொரு வரைவிலக்கணத்தைக் கொடுப்பது இயலாத விடயம். துல்லியமான குறித்த வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுக்க முடியாவிட்டாலும் அதனுடைய வரையறைகளையும் விஸ்தீரணத்தையும் சற்று விளக்கமாக முன்வைப்பதே இப் பேருரையின் நோக்கமாகும்.

சமஷ்டி ஆட்சிமுறை இருப்பதாகக் கூறப்படுகிற ஏதேனும் இரண்டு நாடுகளுடைய ஆட்சிமுறைகள் ஒரே மாதிரியாக இருப்பதாகக் காணமுடியாது. ஆனாலும் சமஷ்டியினுடைய சில அடிப்படைப் பண்பியல்புகள் ஒரு குறித்த நாட்டின் ஆட்சி முறையில் இருக்கின்றதா இல்லையா என்று பரிசீலித்து பார்க்க முடியும்.  A  V  Dicey  என்கின்ற மிகப் பிரபலமான  அரசியல் அறிவியலாளருடைய கருத்துப்படி சமஷ்டி என்பது தேசிய ஒருமைப்பாட்டிற்கும்  பிராந்தியங்கள் அரச அதிகாரங்களை கையாள்வதற்கும்  இடையிலான நடுநிலையைப் பேணுகின்ற ஒரு அரசியல் ஒழுங்கமைபாக்கும். அவருடைய கருத்துப்படி சமஷ்டியின் அடிப்படை குணாதிசங்களாவன:-

  1. அரசியலைப்பு சட்டத்தினுடைய மீயுயர் தன்மை
  2. வெவ்வேறு அரச அதிகாரங்களை சமமானதும் மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பது
  3. அரசியலமைப்பு சட்டத்திற்கான வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழக்கப்படுத்தல் என்பதாகும்

இதேபோன்று K  C  Wheare  என்கின்ற அறிஞரின் கூற்றுப்படி சமஷ்டி அரசியலமைப்பு என்பது அரசாங்கத்தின் வெவ்வேறு மட்டங்களுக்கு பிரித்துக்கொடுக்கப்படும் அதிகாரங்களின் மீது அவை ஒவ்வொன்றும் பூரணமான அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.

Ronald  Watts, பொதுவான அரசாங்கமும் பிராந்திய சுயாட்சி அலகுகளும் ஆட்சியதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளும் முறை என்று சமஷ்டியை வர்ணித்திருக்கின்றார். இவர் சமஷ்டி என்பது, அதிகார அலகுகள் ஒன்றிலிருந்து மற்றது  தன்னுடைய அதிகாரத்தை பெற்றுக்கொள்ளாமல் நேரடியாகவே அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நேரடியாகவே இறைமையினடிப்படையில் பெற்றிருக்க வேண்டுமென கருத்துரைத்திருக்கிறார்.

Watts னுடைய சமஷ்டி கோற்பாட்டை எமது அரசியலமைப்புச் சட்ட நிபுணர் திரு ரொஹான் எதிரிசிங்க பின்வரும் கூறுகளாக காண்பித்திருக்கிறார்

  1. பிரஜைகள் மீது நேரடியாக அதிகாரம் செலுத்தும் தகைமையுள்ள இரண்டு அரசாங்க அமைவுகள்: சில சுயாதீனங்களை உள்ளடக்கிய சட்டவாக்கம் மற்றும் நிறைவேற்றதிகாரங்களும் நிதி வளங்களையும் இவ்விரு அரசாங்க அமைவுகளிடையே சட்டபூர்வமாக பகிர்ந்து கொள்ளும் ஒரு முறைமை.
  2. மத்திய கொள்கைவகுப்பு நிறுவனங்களில் பிராந்தியங்களின் அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ளுதல். இது மத்தியிலிருக்கும் இரண்டாம் (மேல்) சபைக்கு  பிராந்தியங்கள் / மாகாணங்கள் தமது பிரதிநிதிகளை அனுப்புவதன் மூலம் செயற்படுத்தலாம்.
  3. ஓர் எழுதப்பட்ட தன்னிச்சையாக மாற்றப்படமுடியாத மீயுயர் அரசியலமைப்புச் சட்டம்
  4. மத்திக்கும் மாகாணகளுக்குமிடையிலான சர்ச்சைகளை தீர்க்கும் ஒரு நடுநிலையாளர்
  5. மத்தியும் மாகாணங்களும் சேர்ந்து கையாளுகின்ற பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான பொறிமுறை

இந்தக் குணாதிசயங்களின் அடிப்படையில்தான் 13ம் திருத்தச்சட்டத்தில் இருக்கும்  குறைபாடுகளை தன்னுடைய பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

13ம் அரசியலமைப்பு திருத்தம் 1987 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது அத் திருத்தம் இலங்கையின் ஆட்சி முறையை ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டி ஆட்சிமுறைக்கு மாற்றிவிடுமென்று குற்றஞ்சாட்டி பலர் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தனர். அரசியலமைபுச்  சட்டத்தின்  இரண்டாம் உறுப்புரை இலங்கையை ஓர் ஒற்றையாட்சி முறையென்று வர்ணித்திருக்கின்ற காரணத்தினால், சர்வஜன வாக்கெடுப்பில்லாமல் 13 ம் திருத்தத்தை நிறைவேற்ற முடியாதென்பது அவர்களுடைய வாதம். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்ற குழாமில் ஒன்பது நீதியரசர்கள் இருந்தார்கள். அதில் நால்வர் 13 ம் திருத்தம் ஓற்றையாட்சிமுறையை  மீறவில்லையென்று தீர்ப்பளித்தார்கள். வேறு நால்வர் 13ம் திருத்தம் இலங்கையினுடைய அரசியலமைப்பை ஓற்றையாட்சி முறையிலிருந்து சமஷ்டி முறைக்கு மாற்றிவிடுமென்று சரப்பட தீர்ப்பளித்தார்கள். ஒன்பதாவது நீதியரசரான பாரிந்த ரணசிங்க 13 ம் திருத்தத்திலிருந்த இரண்டு பிரிவுகளை சுட்டிக்காட்டி அவை மாற்றப்படாவிட்டால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென தீர்ப்பளித்தார்.

அந்த இரண்டு பிரிவுகளையும் மாற்றியமைத்த காரணத்தினால் தான் 13ம் திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பிலில்லாமல் நிறைவேற்றக்கூடியதாக இருந்தது.  மாகாண நிரலிலுள்ள விடையமொன்று சம்பந்தமாக மாகாணமொன்றின் இணக்கமில்லாமல் மத்தி சட்டமியற்றினால் அச் சட்டம் அக் குறித்த மாகாணத்திற்கு பொருந்தாது என்கின்ற ஏற்பாடே மாற்றியமைக்கப்பட்டு அப்படியான சந்தர்ப்பத்தில் மத்தி 2/3 பெரும்பான்மையோடு அச் சட்டத்தை நிறைவேற்றினால் இணங்காத மாகாணத்திற்கும்  அது பொருந்துமென்கின்ற மாற்றம் செய்யப்பட்டது. ஒற்றையாட்சியின் ஓர் குணாதிசயமாகிய மத்திய பாராளுமன்றத்தின் மீயுயர் சட்டவாக்கத் தகைமை 13ம் திருத்தத்திற்கு கொண்டுவரப்பட்ட மேற் கூறிய  சிறிய திருத்தத்தின் முலம்  உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன் காரணத்தினால் தான் திவிநெகும சட்டத்திற்கு வட  மாகாணம் இணைகியிராத போதும் 2/3 பெரும்பான்மையோடு அது நிறைவேற்றப்பட்டு வடக்கு மாகாணம்  மீதும் திணிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தின் இணக்கப்பாடு இல்லாத காரணத்தினால்  சாதாரண பெரும்பான்மையோடு அச் சட்டம்  நிறைவேற்றப்பட முடியாது என்கின்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கள் திரு மாவை சேனாதிராஜாவை மனுதாரராக கொண்ட இரண்டு வழக்குகளினூடாக பெறப்பட்டது.

மாகாண நிரலிலுள்ள விடையங்கள் மீது இப்படியாக மத்திய பாராளுமன்றம் மேலாதிக்கம் செலுத்துவதை தவிர்ப்பது சமஷ்டியின் முதலாவது அடிப்படை  குணாதியமாகக் கருதலாம். சமஷ்டியின் இரண்டாவதுஅடிப்படை குணாதிசயமாக நான் கருதுவது மாகாணத்திற்கென்று பகிர்தளிக்கப்பட்ட அதிகாரத்தை  ஒரு தன்னிச்சையான அரசியலமைப்பு திருத்த்தின்  மூலம் மத்தி மீளப்பெற முடியாததாக இருத்தல் வேண்டும்.

இவ்விரண்டு அடிப்படை குணாதிசயங்களும் தற்போது நடைமுறையிலுள்ள 13ம் திருத்தத்தில் இல்லாத காரணத்தினால் இது சமஷ்டியல்ல என்று நாம் கூறினாலும் கூட, மேற்சொன்ன நான்கு நீதியரசர்களின்  கருத்துப்படி 13ம் திருத்தம் இலங்கை அரசியலமைப்பை ஒற்றையாட்சியிலிருந்து சமஷ்டிக்கு  மாற்றியிருக்கிறது. ஆனால் மேற்றச்சொன்ன திருத்தங்களுக்குப் பிறகு ஐந்து நீதியரசர்கள் ஒற்றையாட்சி முறை பாதிக்கப்படவில்லையென சொன்ன காரணத்தினால் 5/4 பெரும்பான்மையின் அடிப்படையில்  இன்று அமுலிலிருக்கும் அரசியமைப்புச்சட்டம்  ஒற்றையாட்சி முறைமையை பெயரளவில் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்திலும்  கொண்டதாக அமைந்திருக்கின்றது.

ஒற்றையாட்சி முறை என்பது பிரித்தானியாவில் உருவான ஒரு கோட்பாடாகும்  இது சட்டவாக்கல் அதிகாரத்தை மட்டும் மையப்படுத்தியதாகும்: அதாவது மத்திய பாராளுமன்றத்திற்கு நிகராக சட்டங்களை ஆக்கும் அதிகாரமுள்ள வேறு நிறுவனங்கள் இருக்க முடியாதென்பது அக்கோட்பாட்டின் அடித்தளமாகும்.  எழுதப்படாத அரசியலமைப்பைக் கொண்ட மகா பிரித்தானியா இன்றைக்கும் ஒற்றையாட்சியை கொண்டதாக  கருதப்படுகின்றது. அப்படியிருந்த போதிலும் பிரித்தானியாவில் இன்று இருக்கும் அதிகார பகிர்வின் விஸ்தீரணம் எந்த சமஷ்டி நாட்டின் அதிகார பகிர்வுக்கும் சளைத்ததல்ல. 1920 ம் ஆண்டில் அயர்லாந்தை தனிநாடாக பிரித்துக் கொடுத்த சட்டத்திலிருந்து 1998 ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு பிரிந்துசெல்லும் உரித்தோடு அதிகாரப்பகிர்வை கொடுத்த ஸ்காட்லாந்த்து சட்டம் வரைக்கும், ஒற்றையாட்சியின் பிரகாரம் பிரித்தானிய பாராளுமன்றத்திலேயே நிறைவேற்றப்பட்டவையாகும். கோட்பாட்டளவில் இச் சட்டங்களை பிரித்தானிய பாராளுமன்றம் தன்னிச்சையாக ரத்துச்செய்யும் தகைமையை கொண்டிருந்தாலும் கூட நடைமுறையில் அது எப்போதுமே சாத்தியமற்றது. ஆதலால் பெயரளவில் ஒற்றையாட்சி முறையை பிரித்தானியா  கொண்டிருந்தாலும் நடைமுறையில் உலகிலுள்ள பெரும்பாலான சமஷ்டி ஆட்சிமுறையை விட கூடுதலான சமஷ்டி குணாதிசயங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

ஆகவே பலர் கருதுவதை போல சமஷ்டி என்பது ஒற்றையாட்சிக்கு நேரெதிரான ஆட்சிமுறை என்பதை விட பெயரளவில் ஒற்றையாட்சி நாடுகளுக்குள்ளும் முழுமையாக ஊடுருவக்கூடியது. ஆகவே “இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணத்தை” பற்றி பேசுகிறபோது ஒரு குறுகிய வட்டத்திற்குள்  மட்டுப்படுத்தப்பட்ட ஒர்  முறைமையாக அதனை அணுக முடியாது.

அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டதில் சமஷ்டி என்ற சொல் பாவிக்கப்படவில்லை.  ஆனால் அமெரிக்கா அரசியலமைப்புச் சட்டம் சமஷ்டி கட்டமைப்பிலானதென்பதில் எவருக்குமே சந்தேகம் கிடையாது.

பல நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை ஒப்பீடு செய்கின்ற தாமஸ் ஓ ஹூக்லின்னுடைய Comparative Federalism: A systemic Inquiry, Second Edition (2015) என்ற புத்தகத்தில் கீழ் காணும் குறிப்புகளையும் காணலாம்.

அதேபோல் ஸ்பெயின் நாட்டினுடைய அரசியலமைப்புச் சட்டம் சமஷ்டியென்று பெயர் குறிப்பிடப்படாத போதிலும் அதிகாரப்பகிர்வு அலகுகளின் சட்டவாக்கல் அதிகாரத்தை மீறி தேசிய அரசாங்கம் சட்டங்கள் இயற்ற முடியாது. அதேபோல் மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவும் முடியாது. இவ் இரண்டு காரணங்களின் நிமிர்த்தம் ஸ்பெயின் நாடு பெயரில் தவிர மற்றெல்லாவற்றிலும் சமஷ்டி நாடாக கருதப்படுகின்றது.

மாறாக ஆஸ்திரியா நாட்டின்  அரசியலமைப்புச் சட்டத்தில்  பெயரளவில் சமஷ்டி முறையென்று என்று  அழைக்கப்பட்டாலும் மத்தியின் மேலாதிக்கம் மிகவும் கூடியதாக காணப்படுகின்றது.

எமது அண்டைய நாடான இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் ஒற்றையாட்சி என்றோ சமஷ்டி என்றோ பெயரிடப்படாத ஒன்று. இது பூரணமான சமஷ்டியுமல்ல பூரணமான ஒற்றையாட்சியும் அல்லாத இரண்டும் கலந்த ஒரு முறைமை என்று கூறப்படுகின்றது. ( Durga Das Basu, Commentary on the Constitution of India, 7th Edition, Vol-A Calcutta: S. C. Sarkar and Sons, 1965, p. 55)

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்த அரசியல் நிர்ணய சபையின் தலைவர் Dr . அம்பேத்கார் “எமது அரசியலமைப்புச் சட்டம் கால சூழ்நிலைகளின் தேவைப்பாட்டிற்கமைய ஒற்றையாட்சியாகவும் சமஷ்டியாகவும் இருக்கக்கூடியது” என்று கூறியிருக்கின்றார்.

2014ம் ஆண்டு இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் என்ற வகையில் மாவை சேனாதிராஜாவிற்கு எதிராக 6ம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைவாக தொடரப்பட்ட வழக்கொன்றின் தீர்ப்பு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் திகதி பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூன்று நீதியரசரைக்  கொண்ட உச்ச நீதிமன்ற குழாமொன்றினால் வழங்கப்பட்டது. பல நாடுகளினுடைய அரசியலமைப்புக்களின் பல சட்ட நிபுணர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பிலே பின்வருமாறு கூறப்பட்டிருக்கின்றது. “நாடுகளை ஒற்றையாட்சி அல்லது சமஷ்டி என்று பெயரிடுவது தவறான அர்த்தத்தை தரக்கூடும். சில ஒற்றையாட்சி நாடுகள் சமஷ்டி குணாதிசயங்களோடும் சில சமஷ்டி நாடுகள் சில ஒற்றையாட்சி குணாதிசயங்களோடும் காணப்படலாம்… ஆகையால் இறைமை, அதிகார பகிர்வு மற்றும் அதிகார பரவலாக்கம் என்பவை ஓர் ஒற்றையாட்சி அரசிற்குள் சமஷ்டிமுறையிலான ஆட்சிமுறையை ஏற்படுத்த வழிவகுக்கலாம்.” (SC Spl 03/2014)

“சமஷ்டி” என்று அழைக்கப்படுகின்ற அரசியலமைப்பு சட்டங்களை கொண்ட எல்லா நாடுகளிலேயும் சில “ஒற்றையாட்சி” குணாதிசயங்கள் காணப்படும். அந்த நாடு பிளவுபடாமல்  ஒரே நாடாக இருப்பதற்கான ஏற்பாடுகள் தான் அந்த  ஒற்றையாட்சி குணாதிசயங்கள். அனால் இவற்றை காரணமாக கொண்டு அது சமஷ்டி அல்லதென்று கூறிவிட முடியாது.

இன்றைய சமஷ்டி என்பது  வெறுமனே பெயரளவில் நின்றுவிடாமல் எல்லாவகையான அரசியலமைப்பு முறைமைகளுக்குள்ளும் விஸ்தீரணமடைந்துள்ளது. ஆகையால் சமஷ்டியென்பது வெறுமனே பெயரால் மட்டும் வர்ணிக்கப்படும் ஒரு ஆட்சிமுறையாக இருக்கமுடியாது. மாறாக ஒரு நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் உள்ளடக்கத்தை ஆராய்கின்ற போது சமஷ்டியின் அடிப்படை குணாதிசயங்கள் காணப்படுமாக இருந்தால் அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும், பெயரே கொடுக்காவிட்டாலும் அது சமஷ்டி ஆட்சி முறையாகவே இருக்கும்.

(யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் செப்தெம்பர், 2018 இல் நடந்த தமிழ் அறிஞர் சி.வி.தாமோதரம்பிள்ளை அவர்களுடைய 187 ஆவது பிறந்த நாள் நினைவுப் பேருரை.)


 

 

 

 

 

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply