சந்தியாவை அச்சுறுத்தும் மைத்திரியின் ஆலோசகர்
கொழும்பு, யூன் 28, 2018
சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக உள்ள பெளத்த பிக்கு ஒருவரே, தனக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் பரப்புரையின் பின்னால் உள்ளார் என சந்தியா எக்னெலிகொட குற்றம்சாட்டியுள்ளார்.
மகிந்த இராசபக்சாவின் ஆட்சிக் காலத்தில் காணாமல் ஆக்கப் பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட அவர்களின் மனைவியான சந்தியா எக்னெலிகொட, கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
சமூக ஊடகங்களில் எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த அச்சுறுத்தல்களை அரசு கவனித்துக் கொள்ள வேண்டும். எனது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். எனக்கு எதிரான பரப்புரைகளின் பின்னணியில் சனாதிபதியின் ஆலோசகர் ஒருவரே இருக்கிறார். அவரது முகநூலில் அத்தகைய தாக்குதல்களைப் பார்வையிட முடியும்.
எனக்கு எதிரான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும். நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். எனது கணவன் ஒரு விடுதலைப் புலி என்கிறார்கள். ஆனால் அவருக்கு அவ்வாறான எந்த தொடர்பும் இல்லை என்று எல்லாப் புலனாய்வு அமைப்புகளும் கண்டறிந்துள்ளன.
பிரகீத் விடுதலைப் புலிகளின் உறுப்பினரோ, அல்லது வேறு எந்த தீவிரவாத அமைப்பின் உறுப்பினரோ அல்லர் என்று அவர்கள் நீதிமன்றங்களில் கூறியுள்ளனர்.பொய்யான பரப்புரைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் மூலம் பிரகீத் காணமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை இவர்கள் நிறுத்த முற்படுகின்றனர் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.