மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்! – பகுதி 1,2, 3

மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!– பகுதி-1

tamil poets
Images of Tamil Poets

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1291; தேதி: 16 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது நாலாவது கட்டுரை.

மகாவம்சத்தில் தமிழர் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன. சங்க காலப் பெயர்கள் இதில் அதிகம் பயிலப்படுவதால் இது அக்காலத்தை ஒட்டியது என்பதும், இதை எழுதியவர் தமிழராகவோ அல்லது தமிழர்களை நன்கு அறிந்தவராகவோ இருத்தல் வேண்டும் என்றும் கருத இடம் உண்டு. நான் இப்படிக் கூறுவதற்கு கீழ்கண்ட 27 (27 reasons) விஷயங்களே காரணங்கள்:

சங்க இலக்கியத்தில் உள்ள பெயர்களும் சொற்களும் கதைகளும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் பெயர் அளவு அல்லது கதை அளவு ஒற்றுமைதான். சங்க இலக்கியப் புலவர்களோ நிகழ்ச்சிகளோ அல்ல:–

1.கபிலன்
சங்க காலத்தில் கபிலன் என்ற பிராமணப் புலவர் தான் அதிக செய்யுட்களைச் செய்தார். புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் பெருமக்களால் போற்றப்பட்டார். பாரி என்ற ஒரு சிற்றரசனுக்காக மூவேந்தரையும் பகைத்து நின்றார். மூவேந்தர்களும் பாரியை வஞ்சனையால் கொன்றனர். ஜாதி மதங்களை உதறிவிட்டு பாரியின் இரண்டு மகள்களையும் தன் சொந்த மகளாகக் கருதி ஊர் ஊராக அழைத்துச் சென்று கெஞ்சிக் கதறி திருமணம் செய்துவிட்டார். மூவந்தருக்கு அஞ்சிய பயங்கொள்ளிகள் அந்தப் பெண்களைத் திருமணம் செய்ய பயந்து நடுங்கினர்.

தமிழ் மொழியைக் கிண்டல் செய்த யாழ் பிரம்மத்தன் என்ற வடக்கத்தியானுக்குத் தமிழ் கற்பித்து அவனையும் சங்கப் பாடலை பாடச் செய்து அதையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தார். பிறகு தீயில் பாய்ந்து உயிர் நீத்தார். வாழ்க்கையில் தாம் செய்யவேண்டியதை செய்தாயிற்று என்ற நிறைவு கண்டவுடன் இந்துக்கள் இப்படி உயிர்துறப்பது வழக்கம். (( கீழே காண்க எண் 11: கோப்பெருஞ் சோழன் கதை))

கபிலருக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் பெயரில் கபிலதேவ நாயனார் என்பவர் தோன்றி பாடினார். அவர்தம் பாடல்கள் சைவத் திருமுறையில் சேர்க்கப்பட்டன. இவ்வளவு புகழுடைய கபிலன் என்ற பெயர் மக வம்சத்திலும் வருகிறது. ஆயினும் இவர் சங்க கால கபிலர் அல்ல. பெயரளவு ஒற்றுமைதான்.

2.பரணன்
கபில-பரணன் என்று இணைத்தே சொல்லும் அளவுக்குச் சங்க காலத்தில் கொடிகட்டப் பறந்த பரணரும் ஒரு பிராமணர். அவர் ஒரு பெரிய வரலாற்று அறிஞர். “வரலாறு எழுதிய முதல் தமிழன்” — (First Tamil Historian) என்ற எனது கட்டுரையில் அவரது சாதனைப் பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். அவர் ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரலாற்றுச் செய்தியை உவமையாகப் பயன்படுத்துவார். இவரைப்போல ஒவ்வொரு இந்தியக் கவிஞரும் செய்திருந்தால் இன்று நம் வரலாறு இமயமலை அளவுக்கு உயர்ந்திருக்கும். வன்பரணர் என்ற ஒருவரைத் தவிர பிள்ளையார்பட்டி பாண்டியர்காலக் கல்வெட்டில் ஒரு பரணரைக் கண்டுள்ளேன்.

இந்தப் பெயரும் மஹாவம்சத்தில் வருவது சிறப்புடைத்து. அத்தியாயம் 23-ல் வரும் பரணன் துட்டகாமினியின் பத்து உதவியாளர்களில் ஒருவன். பெரும் வீரன். கி.மு.வில் இலங்கையை ஆண்ட ஏலாரா காலத்தவன் இவன். அதாவது சங்க காலத்தை ஒட்டியவன்.

3.உதியன்
இலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். சங்க காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன் உதியஞ் சேரலாதன் அதே பெயருடைய வேறு ஒருவர் மகாவம்சத்தில் வருவது வியப்புக்குரியது. வேறு எங்கும் காணப்படாதது. 20-ஆவது அத்தியாயத்தில் உதியன் என்ற பெயரில் அரசாண்ட மன்னரின் பெயரும் வருகிறது!!!

4.கல்லாடன்
கல்லாடம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். இதை எழுதியவர் கல்லாடர். இதே போல சைவத் திருமுறைகளில் எழுதிய கல்லாடரும் உண்டு. அந்தப் பெயரில் மகாவம்சத்தில் கல்லாட நாகன் என்ற மன்னன் இருப்பது வியப்புக்குரியது. சங்கத் தமிழ் நூல்களில் 20 பெயர் “நாகன்” என்ற பெயரில் பாடி தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர்.

athiyaman

Tamil poetess Avvaiyar with Chieftain Athiyaman

5.நாகன்
நாகன் (Naga, Nagan) என்ற பெயர் ஒரு மர்மமான பெயர். காஷ்மீர் முதல் கண்டிவரை காணப்படும் இவர்கள் யார் என்றே தெரியவில்லை. குப்தர்கால கல்வெட்டுகளில் பல நாகர்கள் பெயர்கள் வருகின்றன. பலர் படைத் தலைவர்கள். இலங்கையில் பல “நாகன்” பெயர் மன்னர்களின் பெயரில் வருகிறது. இதுபற்றிப் பல ஆராய்ய்சிக் கட்டுரைகள் வந்த போதிலும் நிச்சயமாக ஒன்றும் சொல்ல இயலவில்லை.

6.இளநாகன்
மருதன் இளநாகன் என்ற புலவன் சங்ககாலத்தில் சக்கைப்போடு போட்ட புலவர்களில் ஒருவர். கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன் என்று சங்க காலப் பெயர்கள் எல்லாம் மகாவம்சத்தில் ஒருங்கே வருவதை யாரும் தன்னிச்சையாக நடந்த ஒற்றுமை Accidental Coincidence –“கோஇன்சிடென்ஸ்”– என்று ஒதுக்க முடியாது (காண்க:– அத்தியாயம் 35)

perunthalai saaathanaar and kumanan

Tamil chieftain Kumanan with the Tamil poet

7.குமணன் கதை
புறநானூற்றில் பாடல் 158 முதல் 165 வரை குமணன் கதை வருகிறது. குமணன் என்ற சிற்றரசனை அவன் தம்பி இளங்குமணன் விரட்டிவிட்டு நாட்டை ஆள்கிறான். அது மட்டுமல்ல. அண்ணன் தலையைக் கொண்டு வருவோருக்கு பெரும் பரிசு தருவேன் என்றும் அறிவிக்கிறான் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் இதுகண்டு வருத்தம் அடைகிறார். இருவரிடையே சமரசம் செய்ய ஒரு திட்டம் தீட்டுகிறார்.

காட்டில் வாழ்ந்த பெரிய குமணனைச் சந்தித்துப் பாடுகிறார். அவன் இந்தப் புலவர் காசுக்காகப் பாடும் புலவன் என்று எண்ணி, “அன்பரே, பொருள் அற்ற நிலையில் வாடுபவன் நான். இதோ இந்த வாளை எடுத்துக் கொள்ளும். இதனைக் கொண்டு என்னைக் கொல்லும். அப்படிக் கொன்றபின் என் தலையை என் தம்பி இளம் குமணனிடம் கொடுத்தால் உமக்குப் பெரும் பொருள் கிட்டும்” — என்கிறான். என்னே! தமிழர்களின் பெருந்தன்மை! தான் இறந்தாலும் புலவருக்குப் பணம் கிடைத்து வறுமை நீங்கினால் போதும் என்று எண்ணுகிறான்.

அந்தப் புலவர் ஒரு பெரிய வாழை மரத்தின் அடிப்பகுதியை வெட்டி அதில் செந்நிறச் சாயம் பூசி, ஈரமான வெள்ளைத் துணியில் சுற்றிக் கொண்டுவந்து இளங் குமணனிடம் சென்று பாடுகிறார். “பார், உன் அண்ணனின் பெருந்தன்மையை” கையில் வாளைக் கொடுத்து தலையைச் சீவச்செய்து அதைக்கொடுத்து உன்னிடம் பரிசு பெறச் சொன்னான் என்கிறார். வாளையும், வாழைத் தண்டையும் கண்டு அண்ணன் இறந்தானே என்று கண்ணீர் வடித்து தன் தவறை உணர்கிறான். “அது அண்ணன் தலை அல்ல, வெறும் வாழை மட்டையே, வருந்தற்க” என்றவுடன் மனம் மாறி அண்ணனை அழைத்துவந்து ஆட்சியை ஒப்படைக்கிறான்.

மகாவம்சம் அத்தியாயம் 36-ல் சங்க கால குமணன் கதை போலவே ஒரு கதை வருகிறது. கோதகாபயன் என்ற மந்திரி திடீர்ப் புரட்சியில் இறங்கி படை எடுக்கவே சங்கபோதி என்னும் அரசன் தப்பி ஓடுகிறான். அப்போது வழியில் தனக்கு உணவு கொடுத்த ஒரு வழிப்போக்கனிடம் என் தலையைச் சீவி கோதகாபயனிடம் கொடு; உனக்கு நிறைய பொருள் கிடைக்கும் என்கிறான். ஆனால் வழிப்போகன் மறுத்துவிடுகிறான். அவனுக்கு உதவுவதற்காக அரசன் அங்கேயே அமர்ந்து உயிர்விடுகிறான். உடனே அந்த வழிப்போக்கன் , சங்கபோதியின் தலையை கோதகாபய னிடம் கொடுக்கவே நிறைய பொருள் கிடைக்கிறது. இறந்துபோன மன்னனுக்கு உரிய ஈமச் சடங்குகளை கோதகாபயன் செய்தான்

8.மனுநீதிச் சோழன் கதை
அத்தியாயம் 21-ல் சோழ நாட்டில் இருந்துவந்த ஏலாரா இலங்கையை 44 ஆண்டுகளுக்குச் சீரும் சிறப்புடனும் ஆண்டான். அவன் சயன அறையில் ஆராய்ச்சிமணி தொங்க விட்டிருந்தான். குறை தீர வருவோர் அதை அடிக்கலாம்.. ஏலாராவின் மகன் ஒருநாள் ஒரு ரதத்தை ஓட்டிச் சென்ற போது அதில் ஒரு பசுங்கன்று அடிபட்டு இறந்தது. உடனே தாய்ப்பசு அரண்மனைக்கு வந்து நீதிகோரி ஆராய்ச்சி மணியை அடிக்கவே மன்னன் தனது மகனை தேர்ச் சக்கரத்தின் அடியில் கொல்கிறான்.

இந்தக் கதை அப்படியே மனுநீதிச் சோழன் என்ற பெயரில் தமிழ் இலக்கியத்தில் உள்ளது. நாம் திருவாரூரில் இது நடந்ததாகக் கூற, மகாவம்சமோ தீசவாபியில் நடந்ததாகச் சொல்லும். ஆனால் இருவரும் சோழ வம்சத்தினர். இது வியப்பான ஒற்றுமை. மேலும் ஆராய வேண்டிய விஷயம். ஏலாராவைத் துட்டகாமினி கொன்ற பின்னரும் அவனுக்கு உரிய மரியாதை செய்கிறான். அவன் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த இலங்கை மன்னர் ஒவ்வொருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி மரியாதை செய்வது மரபாகிவிட்டது. நீதி நேர்மை தவறாது ஆண்ட மாபெரும் தமிழன் ஏலாரன் (அத்தியாயம் 25ல் காண்க).

elara
Stories of Elara of Sri Lanka and Manu Neethi Choza of Tamil Nadu are similar.

9.மலய மலை/ சந்தனக் கட்டை
பல இலங்கை மன்னர்கள் மலய மலையில் வந்து தங்கி படை திரட்டிச் சென்றதை மகாவம்சத்தில் காணலாம். அதே போல பொதியம், மலயம் ஆகியவற்றின் சந்தனமும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. (உ.ம்: அத்தியாயம் 28 மற்றும் 36, 37)

10.பறவைகள் அரிசி கொணர்தல்
அத்தியாயம் 5 & 11:– அசோகன் மற்றும் தேவனாம்ப்ரிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பறவைகள் அரிசி கொண்டுவந்தன என்பது கபிலர் காலத்தில் நடந்தது போல இருக்கிறது. மூவேந்தர்களும் பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது, புலவர் கபிலர் கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அரிசி கொண்டுவந்தார் என்று சங்க இலக்கியம் கூறும்.

11.பாரா நட்பு
கோப்பெருஞ்சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் (வடக்கிருத்தல்) இருந்தபோது பிசிராந்தையார் என்னும் கிழப் புலவருக்கு ஒரு இடம் ஒதுக்கச் சொன்னார். “யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்” – என்று அற்புதமான பாடல் (காண்க புறம்.191) பாடிய அந்தக் கிழவனாரோ மன்னரைப் பார்த்ததே இல்லை. ஆயினும் இருவரும் நண்பர்கள்!! மன்னன் சொன்னபடியே புலவரும் வந்தார்!! அதேபோல இலங்கை மன்னன் தேவனாம்ப்ரியன் காலத்தில் ரத்தினங்களும் விலை உயர்ந்த உலோகங்களும் கிடைத்தன. அவற்றை இதுவரை பார்த்தே இராத அசோகனுக்கு அனுப்புகிறார்!

siva_kuthirai

12.குதிரை வியாபாரிகள்/ மாணிக்கவாசகர்
அத்தியாயம் 21-ல் சேனன், குட்டகன் என்ற இரண்டு தமிழர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு வருகிறது. இவர்கள் குதிரை வியாபாரிகளின் பிள்ளைகள். இதைப் படிக்கையில் மாணிக்கவாசகரின் கதை நினைவுக்கு வரும். அவரது காலமும் சம்பந்தருக்கு முந்தியது என்று நான் கட்டுரையில் நிரூபித்திருக்கிறேன்.

13.தேர் விழா
சிலப்பதிகாரத்தில் சமணர்களின் தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். மகாவம்சத்தில் புத்தமத தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். போதிமரத்தைத் தேரில் வைத்து ஊர்வலம் விடுகின்றனர். பிரபல பிராமணர் கிராமம் வந்தவுடன் அதைத் தரையில் இறக்கி மன்னன் மரியாதை செலுத்துகிறான்.

14.கார்த்திகை விழா
கார்த்திகை விழா சங்க இலக்கியத்திலும் பதினென்கீழ்க் கணக்கு நூல்களிலும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இதை இலங்கை மன்னரும் கொண்டாடியதை அத்தியாயம் 17-ல் காணலாம்.

karaikal
Karaikal Ammaiyar walking on head

15.மந்திர மாங்கனி
காரைக்கால் அம்மையார் என்ற சைவப் பெரியார் காலத்தால் சம்பந்தர் முதலிய நால்வருக்கும் முந்தியவர். இவர் திருமணம் ஆனபின் மந்திர மாங்கனி வரவழைத்ததும் இவரது கணவர், மனைவியின் அமானுஷ்ய சக்திகளைக் கண்டு பயந்து ஒதுக்கி வைத்துவிடுகிறார். பின்னர் அப்பெண்மணி சிவனடியாராக மாறி அற்புதமான திருவந்தாதிகளைப் பாடி தமிழில் அந்தாதி இலக்கியம் தோன்ற படி அமைத்துத் தருகிறார்.

மகா வம்சத்தில் 15ஆம் அத்தியாயத்தில் ஒருதேரர், மாம்பழத்தச் சாப்பிட்டு கொட்டையைப் போடவுடன் அது உடனே மீண்டும் வளர்ந்து கனிகள் நிறைந்த மா மரமாயிற்று!

16.உண்பது நாழி
உண்பது நாழி உடுப்பவை இரண்டே (புறம் 189) — என்பது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரின் கூற்று. இந்த அருமையான சொல் மகாவம்சம் 36 ஆம் அத்தியயத்தில் வருகிறது. குஜ நாகன் தம்பி குஞ்சநாகன் ஆட்சிக்க்காலத்தில் ஏக நாழிகைப் பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு விளக்கம் கூறும் மகாவம்ச உரை நாழி என்பது கையளவைக் குறிக்கும் ஒரு அளவை என்றும் ஒரு கவளம் சோறு இது என்றும் கூறும். ஒரு கவளம் கூடச் சோறு கிடைக்காத காலம் ஏக நாழிப் பஞ்சம் என்று அழைக்கப்பட்டது. நாழி என்னும் சொல்ல் இப்போது புழக்கத்தில் இல்லை.

05FR-KARAIKKAL_29905g

Magic mango incident of Karaikal ammaiyar

27 காரணங்களில் 16 காரணங்களை இங்கே பட்டியலிட்டேன். அடுத்த கட்டுரையில் மிக முக்கியமான, பாண்டிய ராஜகுமாரி—விஜயன் திருமணம், யானையை விட்டு குழந்தையைக் கொல்ல முயன்றது, கஜபாகு என்னும் மன்னனால் சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கண்டறிந்தது, சோழ நாட்டுப் புத்த பிட்சு இலங்கையில் போர்க்கொடி உயர்த்தியது, நாகர்களின் பட்டியல் முதலியவற்றைக் காண்போம்.

மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!– பகுதி-1


மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!! – பகுதி 2

arumuga navalar
Sri Lanka stamp on Arumuga Navalar, great Tamil scholar.

ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1293 தேதி: 17 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஐந்தாவது கட்டுரை.

கட்டுரையின் முதல் பகுதியில் மனுநீதிச் சோழன், குமணன் முதலிய 16 விஷயங்களைக் கண்டோம். இது இரண்டாம் பகுதி.

17.யானை மூலம் குழந்தைக் கொலை
அத்தியாயம் 35:– சந்தமுகசிவனை அரசனின் மனைவி அலங்கரித்து “இவனை யானையிடம் கொண்டு செல். அரசன், சிறையில் இருப்பதால் யானை இடறி இவன் தலை நசுங்கட்டும். எதிரிகளிடம் சிக்குவதைவிட அதுவே மேல்” — என்று சொல்லி வேலைக்காரியுடன் அனுப்புகிறாள். யானையின் காலடியில் குழந்தையை வைத்தவுடன் அது அவனைக் கொல்லாமல் கண்ணீர் வடிக்கிறது. திடீரெனக் கோபம் கொண்டு அரண்மனைக் கதவுகளை உடைத்து அரசனை முதுகிலேற்றிக் கொண்டு சென்று அக்கரைக்குக் கப்பலில் தப்பித்துச் செல்ல உதவுகிறது.

இது போன்ற நிகழ்ச்சிகளை அப்பர் கதையிலும் காண்கிறாம். மஹேந்திர பல்லவ மன்னனின் யானை, அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்து விடுகிறது. மூர்த்தி நாயனாரையும் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னனையும் யானையே மன்னனாகத் தேர்ந்தெடுக்கிறது.

சங்க இலக்கியத்திலும் இதை ஒட்டிய ஒரு காட்சி உண்டு.

புறநானூறு பாடல் 46 (கோவூர்க்கிழார் பாடியது)
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், தனது எதிரியான மலையமான் குழந்தைகளை யானையின் காலடியில் வைத்து நசுக்குங்கள் என்று உத்தரவிடுகிறான். இதைக் கேட்டு பதறிப்போய் கோவூர்கிழார் என்னும் புலவர் ஓடோடி வருகிறார்.
“மன்னா, என்ன காரியம் செய்கிறாய்? ஒரு புறாவுக்காக தன்னுயிரையே கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் நீ. இவர்களோ பால் மணம் மாறாப் பச்சிளங் குழந்தைகள். பூதாகார கருப்பு உருவம் உடைய யானையைக் கண்டு மகிழக்கூடிய வயது. புது முகங்களைக் கண்டால் மருளுவர். உடனே இந்த இழி செயலை நிறுத்து” — என்கிறார். மன்னனும் புலவனின் நல்லுரைக்குச் செவி சாய்க்கிறான். இதோ அப்பாடல்:—

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை!
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
களிறு கண்டு அழூ உம் அழா அல் மறந்த
புன் தலைச் சிறார்; மன்று மருண்டு நோக்கி
விருந்தின் புன்கணோ உடையர்;
கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்மே! (புறப் பாடல் 46)

ganesh
Sri Lanka stamp with Lord Ganesh

18.நாகர் பட்டியல்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலை கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)

மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—
நாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்):
கல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்

நாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம்.
(( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க))

19.கஜபாகு
இலங்கை வரலாறு தமிழர்களுக்குச் செய்த பெரிய உதவி கஜபாகு பற்றிய குறிப்பாகும். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் நடத்திய கண்ணகி சிலைத் திறப்பு விழாவுக்கு பல நாட்டு மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை ஏற்று வந்தவர்களில் ஒருவன் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்” — என்று மொழிகிறது சிலம்பு. இதன் மூலம் சேரன் செங்குட்டுவன் காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது உறுதி ஆயிற்று.
கஜபாகு ஆட்சி மகாவம்ச 35 ஆம் அத்தியாயத்தில் உளது

new year stamp
Sri Lanka Stamp on New Year

2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு!

20.மதுரைப் பாண்டியன்

மகாவம்சத்தில் மிகவும் சுவையான விஷயம் பாண்டிய நாட்டு இளவரசிகள் இலங்கைக்கு வந்ததாகும்; இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து வந்த விஜயன், குவென்னா என்ற ஒரு யக்ஷிணியைக் கல்யாணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை ( ஒரு மகன், ஒரு மகள்) ஆகிறான். ஆனால் உயர்குலத்து (க்ஷத்ரிய) மங்கை ஒருவளை ராணியாகப் பெறும்வரை மன்னன் ஆக முடிசூட்ட மாட்டேன் என்கிறான். உடனே மந்திரிமார்கள், ஒரு தூதர் குழுவை அமைத்து, முத்துக்களையும் விலை உயர்ந்த நகைகளையும் கொடுத்து பாண்டிய மன்னனிடம் பெண் கேட்க அனுப்புகின்றனர்.

தூதர்களும் கப்பல் மூலம் சென்று மதுரை மாநகரை அடைகின்றனர். (இது கி.மு ஆறாம் நூற்றாண்டு என்பதால் முதல் தமிழ் சங்கம் கொலு வீற்றிருந்த தென் மதுரையாக இருக்கலாம் என்பது என் கருத்து. இப்போதைய மதுரை அல்ல)

மதுரையில் பாண்டிய மன்னனும் மந்திரிகளைக் கலந்தாலோசித்து தன் பெண்ண அனுப்ப முடிவு செய்கிறான். உடனே மதுரை நகர தெருக்களில் தண்டோரா போடுகிறார்கள்:

“இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்…… மதுரை மாமன்னனின் மகள் — இளவரசியை — விஜனுக்கு மணம் முடிக்கப் போகிறோம். அங்குள்ள மந்திரிமார்களுக்கும் பெரிய அரசாங்க அதிகாரிகளுக்கும் பெண்கள் தேவை. இதுவரை நூறு பெண்கள் வந்து இருக்கிறார்கள். இன்னும் யார் யார் இலங்கைத் தீவுக்குப் போக விருப்பமோ அவர்கள் அனைவரும் இரண்டு மாற்று உடைகளுடன் வீட்டு வாசலில் நின்றால் மன்னரின் ஆட்கள் அழைத்துச் செல்வர். பெண்களை அனுப்புவோருக்கு மாமன்னன் நஷ்ட ஈடும் வங்குவார். தகுதிக்கு ஏற்ப இலங்கை செல்லும் பெண்களுக்கு யானை, குதிரை, தேர் வாகன வசதிகளும் அனுப்பப்படும்” — இந்த அறிவிப்பு வெளியானதும் ஏராளமான தமிழ்ப் பெண்கள் முன்வந்தனர். அவர்கள் கொண்டுவந்த இரண்டு உடைகளுடன் மன்னனும் ஆடை அணிகலன்களை வழங்கி கப்பலில் ஏற்றி விடுகிறான்.

AnandaCoomaraswamy
Sri Lanka Stamp on Ananda Coomaswamy, great art historian

கைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. விஜயனுக்கு முன்கூட்டியே செய்தியும் அனுப்பப்பட்டது. இவர்கள் இலங்கையில் மகாதிட்டு என்னும் இடத்தில் கரை இறங்கினர்.

((ஆதாரம்: மகாவம்சம் அத்தியாயம் 7))

பின்னர் பழைய மனைவி குவென்னாவை, விஜயன் கெஞ்சிக் கூத்தாடி பணம் கொடுத்து வழியனுப்பியதையும், அவளை யக்ஷர்களில் ஒருவனே, ஒரே குத்தில் கொன்றதையும் மஹாவம்சப் படுகொலைகள் கட்டுரையில் தந்துவிட்டேன்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு மஹாவம்ச வரி “18 குடிகள்”. தமிழ்நாட்டில் அகஸ்தியர் குடியேறியபோது வடக்கில் இருந்து 18 குடிகளை அழைத்துவந்தார் என்பது நச்சினார்க்கினியர் உரைதரும் விஷயம்!!

மஹாவம்சத்தை எல்லா தமிழர்களும் படிக்கவேண்டும். இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இன்னும் சில சுவையான விஷயங்களைத் தருவேன்.

கட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.

contact swami_48@yahoo.com

2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு!

https://tamilandvedas.com/2014/09/17/2500-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8


மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!! – பகுதி 3

dahamsonda paitings

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1297 தேதி: 19 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது ஏழாவது கட்டுரை.

( இலங்கையில் தமிழ் செல்வாக்கைக் காட்டும் 20 விஷயங்களை முதல் இரண்டு பகுதிகளில் காண்க. ))

21.சோழ பிக்கு போர்க்கொடி

அத்தியாயம் 36-லும் 37-லும் சோழநாட்டு பிக்கு சங்கமித்ரன் இலங்கைக்கு வந்து பெரும் குழப்படி செய்ததைப் படிக்கிறோம். இலங்கையில் புத்தபிட்சுக்கள், அரசாங்கப் பணிகளில் குறுக்கிடுவது இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக நடைபெறுவதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. அவர் அங்குள்ள பௌத்தர்களிடையே பெரும்பிளவை ஏற்படுத்தி பழம்பெரும் கட்டிடங்களான மஹாவிஹாரை, லோகபஸாதா ஆகியவற்றை இடிக்கச் செய்கிறார். இதனால் கோபம் அடைந்த ராணி, ஒரு ஆளை அனுப்பி அவரையும் அவருக்கு உதவி செய்த மந்திரியையும் கொன்றுவிடுகிறாள். மகாசேனன் (கி.பி..275—301) காலத்தில் இது நடந்தது. 37ஆம் அத்தியாயத்துடன் மஹாவம்சமும் முடிவடைகிறது.

இதனால் கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டின் மலயப் பகுதியும் சோழ நாட்டுக் கடற்கரைகளும் இலங்கை அரசியலில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை அறியமுடிகிறது

22.தமிழ் மன்னர்கள்: ஏலாரா/எல்லாளன் (கி.மு.205 –161)

அத்தியாயம் 21 முதல் 33 வரை சோழநாட்டில் இருந்து வந்த ஏலாரா என்ற உயர்குலத் தமிழன் பற்றியும் அவனை வெற்றி கொண்ட துட்டகாமினி என்பவனின் வரலாறு பற்றியும் இருக்கிறது. 44 ஆண்டுக்காலம் இலங்கையை நீதி நேர்மையுடன் ஆண்ட தமிழ்ப் பெருந்தகை ஏலாராவைப் பற்றி மஹாவம்சம் புகழ்கிறது. அவன் இறந்த பின்னரும் இலங்கை மன்னர்கள் அவ்விடத்தில் மரியாதை செலுத்தி வந்ததையும், துட்டகாமினி பிறப்பில் இருந்தே தமிழ் விரோதியாக இருந்ததையும் மஹாவம்சம் ஒளிவு மறைவு இன்றி உரைக்கிறது.

ஏலாரா ஆட்சி நமக்குத் தெரிவிக்கும் விஷயம் — 2200 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் “ஞாலம் நடுங்கவரும் கப்பற்படை” வைத்திருந்தனர் என்பதாகும்.

“தமிழர்களுடன் சமாதானமாக வாழ்” — என்று சொன்ன தந்தைக்கு பெண்கள் அணியும் நகைகளை அனுப்பி, நீ ஒரு ஆண்மகன் அல்ல என்று தந்தையையே துட்டககாமினி இழிவு படுத்தியதையும் காணமுடிகிறது. துட்ட காமினி 32 தமிழ் மன்னர்களை வெற்றிகொண்டதாக மஹாவம்சம் கூறுகிறது. சந்தன், தித்தம்பன் என்ற சில பெயர்களையே மஹாவம்சம் நமக்கு அளிக்கிறது. இவர்கள் யார் என்பதை ஆராய்வதும் ஏலாரன் (மனுநீதிச் சோழன்) புகழை தனியாக ஆய்வு நூலாக வெளியிடுவதும் வரலாற்றில் புத்தொளி பரப்பும்.

துட்டகாமினியின் புகழ்பாட ஏறத்தாழ மஹாவம்சத்தின் மூன்றில் ஒருபகுதியை ஒதுக்கியிருப்பதையும் காணமுடிகிறது. மஹாவம்சம் இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல் என்பதைவிட இலங்கையில் புத்தமதத்தின் வளர்ச்சியை வருணிக்கும் நூல் என்பதே பொருத்தமாக இருக்கும்!!

painting5

23. ஏழு தமிழ் மன்னர்கள் (கி.மு 104-ஐ ஒட்டிய காலம்)

அத்தியாயம் 33 (பத்து அரசர்கள்): வட்டகாமனி ஆட்சி செய்த காலத்தில் ரோஹணாவில் வசித்துவந்த தீசன் என்ற பிராமணன் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்தான். அப்போது தமிழ்நாட்டிலிருந்து வந்து இறங்கிய ஏழுபேர் அவனுடன் சேர்ந்துகொண்டனர். “ஆட்சியை ஒப்படைத்துவிடு” — என்று செய்தியும் அனுப்பினர். ஆனால் கூரிய மதிபடைத்த வட்டகாமனி, தனியாக தீசனுக்குச் செய்தி அனுப்பி, இது உன் நாடு, முதலில் தமிழர்களை விரட்டு என்றான். அந்தப் பிராமணனும் உடனே தமிழர்களை எதிர்த்தான், ஆனால் தோற்றுப் போனான். ஏழு தமிழர்களில் ஒருவன் ராணி சோமதேவியைக் கல்யாணம் செய்துகொண்டு தன் நாட்டுக்குத் திரும்பிப் போனான். மற்றொருவன் புத்தரின் பிட்சா பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தமிழகம் சென்றான்.

(பிச்சை எடுக்கப் பயன்படுத்தும் பாத்திரம் பிக்ஷா பாத்திரம். பிச்சை என்பது ‘பிக்ஷா’ என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பிறந்த சொல். ஆதிகாலத்தில் வேதம் கற்கும் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று “பவதி பிக்ஷாம் தேஹி” என்று வேண்டுவர். மதுரையில் வேத பாடசாலை மாணவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்து இப்படிக் குரல் கொடுத்தது இன்றும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது. உடனே எனது தாயார் அன்னத்தை அவர்கள் பாத்திரத்தில் போடுவார். அதை அவர்கள் குருநாதருடன் பகிர்ந்துகொள்வார்கள். வள்ளுவனும் “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” — என்ற குறளில் விருந்தினர் பற்றிப் பேசுகிறார்).

ஏழு தமிழரில் ஐவர் மட்டும் தங்கி இலங்கையை ஆண்டனர். புலஹதன், பாஹியா, பணயமாரன், பிழையாமாறன், தாதிகன் என்ற ஐவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்துவிட்டு அடுத்தடுத்து ஆண்டனர். மொத்தம் ஆண்ட வருடங்கள் 14 ஆண்டு 7 மாதம்.

இந்தப் பெயர்களில் சில தமிழ்ப் பெயர்கள் போலத் தோன்றவில்லை. மாறன் என்ற பெயர் கொண்டவர்கள் பாண்டி நாட்டுக்காரர்கள். தமிழ் நாட்டுக் கல்வெட்டுகளில் பணய மாறன் என்ற பெயர் உண்டு. இவைகளைப் பற்றித் தமிழ் வரலாற்றில் ஒன்றையும் காணோம். இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

(“தமில் வாள்க்க” (தமிழ் வாழ்க) என்று கோஷம் போடுவதை நிறுத்திவிட்டு உருப்படியான ஆராய்ச்சிகளில் இறங்க வேண்டும். தமிழர்களை ஆஹா ஒஹோ என்று புகழ்வதோடு நிற்காமல் உண்மை நிலையையும் கண்டு உரைக்க வேண்டும். கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் காரவேலன் என்ற ஒரிஸ்ஸா மாநில (கலிங்க) சமண மன்னனிடம் தோற்றுப்போன பாண்டியன் யார்? ஆதிசங்கரர் குறிப்பிடும் சுந்தரபாண்டியன் யார்? என்பதை எல்லாம் ஆராய்வது நலம் பயக்கும். வெற்றியை வெற்றி என்றும் தோல்வியை தோல்வி என்றும் ஒப்புக்கொள்ளும் பக்குவமும் வேண்டும்!)

painting4

சந்தமுக சிவன் – தமிழா தேவி
சந்தமுக சிவன் என்ற அரசனின் மனைவி பெயர் தமிழாதேவி. சந்தமுகசிவனின் தந்தை பெயர் இளநாகன். சங்க இலக்கியத்தில் அதிகம் தமிழ்ப் பாடல்களை இயற்றியவரில் ஒருவர் பெயரும் இளநாகன். ஆகவே இந்தத் தமிழதேவி தமிழ்நாட்டுத் தொடர்புடைய பெண்ணே.

சிங்களவரும் தமிழரும் ரத்தத் தொடர்புடையவர்கள் என்பது சிவன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் நாகன் என்று முடியும் மன்னர்கள் பெயர்களில் இருந்தும் தெளிவாகிறது. மேலும் ஆராயப்பட வேண்டிய விஷயம் இது.

24.மிளகு
துட்டகாமினி ஒரு முறை புத்த பிக்குகளை நினைக்காமல் மிளகு சாப்பிட்டதற்குப் பிராயச்சித்தமாக மாரீசவதை விஹாரத்தையும் சேதியத்தையும் அமைத்தார். மிளகு என்றவுடன் கேரள மிளகு ஏற்றுமதி நினைவுக்கு வரும். அக்காலத்தில் அது சேர நாடு என்னும் தமிழ்ப் பகுதியாக இருந்தது. மிளகு சாப்பிடும் வழக்கம் உண்டு என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது

Kandy-Painting

25.சுனாமி/ கடல்கோள்

அத்தியாயம் 22-ல் ஒரு காதல் கதை வருகிறது. இது காகவனதீசன் மன்னன் காலத்தில் நடந்தது.

கல்யாணி என்னும் நகரில் தீசன் என்ற மன்னனின் மனைவிக்கு (ராணிக்கு) ஜய உதிகன் என்பவன் ஒரு காதல் கடிதத்தை புத்த பிக்கு போல வேடம் அணிந்த ஒருவர் மூலம் அனுப்புகிறான். அவன் ராஜா ராணி வரும் போது அதை ராணியின் முன்னால் போடுகிறான். சத்தம் கேட்டுத் திரும்பிய தீசன், ராணிக்கு வந்த காதல் கடித்ததைப் படித்துவிட்டுக் கோபம் அடைகிறான். கோபத்தில் உண்மையான தேரரையும், தேரர் வேடத்தில் இருந்த போலியையும் வெட்டி வீழ்த்துகிறான். இதனால் கடல் (அரசன்) கோபம் கொண்டு பொங்கி நாட்டுக்குள் புகுந்தது. இது கி.மு 200க்கு முன் நடந்தது.

இது போன்ற சுனாமி தாக்குதல் கதைகள் பல தமிழ் இலக்கியத்திலும் உண்டு. கடல்மேல் வேல் எறிந்து கடலின் சீற்றத்தை அடக்கிய பாண்டியன் கதைகளை திருவிளையாடல் புராணத்தில் (கடல் சுவற வேல் எறிந்த உக்ர பாண்டியன்) காணலாம். ராமனும் கடல் பொங்கியவுடன் வருண பகவானுக்கு எதிராக கடலில் அம்புவிட்டதை ராமாயணத்தில் படிக்கிறோம்.

உடனே கடலின் சீற்றத்தை அடக்குவதற்காக, தீசன் தன் மகளை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து அனுப்புகிறான். அது கரை ஒதுங்கியபோது காகவனதீசன் அவளைக் கண்டு கல்யாணம் செய்துகொள்கிறான். இதில் நமக்கு வேண்டிய விஷயம் கடல் பொங்கிய (சுனாமி) விஷயமாகும். இதன் காலத்தை ஆராய்தல், முதல் இரு தமிழ்ச் சங்கங்களை விழுங்கிய கடற்கோள்களின் (சுனாமி) காலத்தை அறிய உதவலாம். சிலப்பதிகாரத்தில் ஒரு கடற்கோள் பற்றி நாம் படிக்கிறோம்.

வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!   -காடுகாண் காதை, சிலப்பதிகாரம்

இதை ஒப்பிட்டால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் மற்றும் முதல் இரு தமிழ்ச் சங்கங்களில் ஒன்றின் காலம் ஆகியன உறுதிப்படலாம். இலங்கை கடற்கோள் நடந்தது கி.மு.200–க்கு முன்.

SriLanka-3

26. வனதேவதை/உடும்பு

அதிகாரம் 28-இல் வரும் உடும்பு அதிசயம் பற்றி ஏற்கனவே மஹாவம்சத்தில் அற்புதச் செய்திகள் என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன்.

உலகப் புகழ்பெற்ற கம்போடியாவின் அங்கோர்வட் கோவிலைக் கண்டுபிடிக்க ஒரு பட்டுப்பூச்சிதான் காரணம். உலகப் புகழ்பெற்ற அஜந்தா குகைக் கோவிலைக் கண்டுபிடிக்க ஒரு ஆடு தான் காரணம். சிருங்கேரியில் முதல் மடத்தைச் சங்கராச்சார்யார் ஸ்தாபிக்க தவளைக்குக் குடைபிடித்த பாம்புதான் காரணம். பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை கட்ட முயலும் வேட்டை நாயும் தான் காரணம் என்பதை எல்லாம் விளக்கி நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரை எழுதிவிட்டேன் — Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri (3-10-2011). இதே போல வனதேவதை உடும்பு வடிவில் வந்து இந்திரனும் விசுவகர்மாவும் அனுப்பிவைத்த செங்கற்களைக் காட்டியதாகவும் துட்டகாமினி அதைப் பயன்படுதியதாகவும் படிக்கிறோம். இதுபோல தமிழ் நாட்டுக் கோவில்களிலும் உடும்பு தொடர்புடைய கோவில்கள் உண்டு

27.கோவலன் யானை அடக்கியது/ நந்திமித்ரன் யானை அடக்கியது

புத்தர் பிரான், யானையை வசப்படுத்தியது யோக சக்தியால்;
உதயணன் யானையை அடக்கியது மந்திர சக்தியால்;
கோவலன் யானையை அடக்கியது புஜபலத்தால்:

இதே போல கந்துலன் என்னும் யானை கதை மஹாவம்சத்தில் வருகிறது அதிகாரம் 25-ல் கந்துலன் என்னும் யானையை பத்து யானை பலம் கொண்ட நந்தி மித்ரன் அடக்கிய சம்பவம் வருகிறது

கட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.

painting3


“மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள்”

????????????????????????

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1283; தேதி: 12 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆய்வுக்கட்டுரை வரிசையில் நேற்று மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். இன்னும் நிறைய ஜோதிடச் செய்திகள் இருந்தும் மாதிரிக்காக கொஞ்சம் விஷயங்களைக் குறிப்பிட்டேன். அது போலவே புத்தர் பற்றிப் பல அற்புதச் செய்திகள் இருக்கின்றன. இலங்கைக்கு புத்தர் வந்தாரா? என்ற தலைப்பில் அவற்றைத் தனியாகத் தருவேன்.

மகாவம்சத்தை எழுதியதே ஒரு தமிழராகவோ அல்லது சங்கத் தமிழ் இலக்கியத்தைப் படித்தவராகவோ இருக்க வேண்டும் என்பது எனது துணிபு. மநுநீதிச் சோழன் கதை, குமணன் கதை, கோப்பெருஞ்சோழன் நட்பு, கிளி நெல் கொண்டு வந்த கதை, குழந்தையை யானை காலில் இடறவிட்ட கதை போன்ற பல சங்கத் தமிழ் கதைகளும் சங்க காலப் பெயர்களான கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன், ஏராளமான நாகர்கள் பெயர்களும் மகாவம்சத்தில் வருவதால் இது தமிழ் வரலாற்றுக்குத் துணைபுரியக்கூடும். அதையும் தனியாக எழுதுவேன். நேரடியாகத் தமிழர் பற்றிச் சொல்லும் கதைகளை எல்லோரும் முன்னரே அறிவர்.

மகாவம்சம் என்னும் பாலி மொழி நூல் இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் என்பதை முதல் பகுதியில் விளக்கி இருக்கிறேன். மகவம்சத்தில் 37 அத்தியாயங்கள் உண்டு.

அற்புதச் செய்தி 1
பாண்டு அபயன் பட்டாபிஷேகம் பற்றிய பத்தாவது அத்தியாயத்தில் ஸ்வர்ணபாலி என்பவர் செய்த அற்புதம் வருகிறது. அவர் தங்கக் கிண்ணத்தில் உணவு கொடுத்த பின்னர் அவர் பறித்த ஆலமர இலைகள் எல்லாம் தங்கக் கோப்பைகளாக மாறிவிடுகின்றன. இதை மஹாபாரத ராஜசூய கீரி கதையுடன் ஒப்பிடலாம். தர்மம் செய்த ஒரு ஏழைப் பிராமணன் வீட்டில் சிந்தப்பட்ட உணவில் புரண்ட கீரியின் பாதி உடல் மட்டும் தங்கமான கதையை ஏற்கனவே எழுதிவிட்டேன். உணவு தானம் செய்வோர் தொட்டதெல்லாம் தங்கமாகும். ‘’மண் எல்லாம் பொன் ஆகும் ராமர் வரவாலே’’ என்ற சம்பூர்ண ராமயணத் திரைப்படப் பாடலையும் நினைவிற் கொள்க.

srilanka landing

அற்புதச் செய்தி 2
தேவனாம்ப்ரிய திஸ்ஸன் பற்றிய பதினோறாவது அத்தியாயத்தில், நாட்டில் ரத்தினக் குவியல்கள் பூமிக்குள்ளிருந்து தானாக வந்த செய்திகளும் எலிகளும் கிளிகளும் உண்வுதனியங்களைக் கொண்டு குவித்த செய்திகளும் உள்ளன. குதிரை முத்து , யானை முத்து , ரத முத்து ,மணி முத்து , அணி முத்து , மோதிர முத்து , காகுத பழ முத்து, சிப்பி முத்து ஆகிய எட்டு வகை முத்துகள் கடலுக்கு வெளியே கரையில் குவிந்த அற்புதச் செய்திகளும் உள. அந்த மன்னன் அவைகளை அசோக மாமன்னனுக்கு அனுப்ப நினைக்கிறான். இருவரும் பார்த்ததே இல்லை. ஆயினும் ஆப்த நண்பர்கள்! பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் போல!!

அற்புதச் செய்தி 3
மகாவம்சத்தில் பல இடங்களில் பூமி அதிர்ச்சி அற்புதங்கள் வருகின்றன. 15-ஆவது அத்தியாயத்தில் பௌத்தர்களுக்கு மகாமேக வனத்தைக் கொடுக்க தாரை (நீர்) வார்த்தவுடன் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன், இலங்கைத் தீவில் பௌத்த தர்மம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார். மன்னன் கொடுத்த மல்லிகைப் பூவை எட்டு திசைகளிலும் போட்டவுடன் மீண்டும் பூமி அதிர்ந்தது. மன்னன் இதற்கான காரணத்தைக் கேட்டவுடன் போதி (அரச) மரம் வேரூன்றுவதை இது குறிக்கும் என்று தேரர் பதில் தருகிறார்.

அற்புதச் செய்தி 4
புத்தரும் பல தேரர்களும் பறவைகள் போலப் பறந்து வருவதும் காற்றில் மிதப்பதும் பல இடங்களில் பேசப்படுகிறது. இது இந்துமதப் புராணங்களில் காணப்படும் காட்சியே. நாரதர் என்ற முனிவர் த்ரிலோக சஞ்சாரி. அவர் ஒரு விண்வெளிப் பயணி. கிரகம் விட்டு கிரகம் தாவுவார். 14-ஆவது அத்தியாயத்தில் தேரர்களை அழைத்துவர ரதத்தை அனுப்பினான் மன்னன். அதை அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டு வானத்தின் வழியே பறந்து வந்து இறங்கினர் என்று 14-ஆவது அத்தியாயம் பகரும் ஜாம்பூத்வீபத்தில் (இந்தியாவில்) உள்ள துறவிகளுக்கு மற்றவர் எண்ணங்களை அறியும் சக்தி உண்டு என்றும் அவர்கள் ‘’தெய்வீகக் காது’’ படைத்தவர்கள் என்றும் தேரர்கள் விளக்குகிறார்கள்.

அற்புதச் செய்தி 5
17-ஆவது அத்தியாயத்தில் ஒரு யானை புத்தரின் அஸ்திக் கல்சத்தைச் சுமந்து வருவதையும் அந்தக் கலசம் தானாக வானில் பறந்து மிதந்ததையும் படித்தறியலாம். மன்னரும் மக்களும் அதைக் கண்டு வியக்கின்றனர்.

sl stamps2

அற்புதச் செய்தி 6
19-ஆவது அத்தியாயத்தில் போதி மரம் வருகை பெற்றி விவரிக்கப்பட்டுளது. முழுக்க முழுக்க அதிசய சம்பவங்கள் வருணிக்கப்பட்டுள்ளன போதிமரத்தைக் கடவுள் போல வழிபட்டு ஊர்வலம் நடத்தியது, பூஜை போட்டது, ஊரையே அலங்கரித்தது, மன்னன் அதன் பின்னாலேயே வந்தது எல்லாம் உள. அனுராதபுரத்தில் அதை இறக்கியவுடன் அது 80 முழ உயரத்துக்கு வானில் பறந்து தானாகவே அதற்கு நிர்மாணிக்க்ப்பட்ட பூமியில் இறங்கியது. உடனே பூமியே அதிர்ந்தது. மன்னன் தேவனாம்ப்ரிய திஸ்ஸனும் பல்லாயிரக் கணக்கானோரும் இந்த அதிசயத்தைக் கண்டு பிரமித்தனர்.

அற்புதச் செய்தி 7
12-ஆவது அத்தியாயத்தில் ஆண் குழந்தை பிறந்தால் விழுங்கிவிடும் கடல் பூதத்தை ஒரு தேரர் அடக்கிய கதை விவரிக்கப்படுகிறது. அவர் பெயர் சோனதேரர். அதிலிருந்து அரண்மனையில் குழந்தை பிறந்தால் அதற்கு சோனதேரா என்னும் பெயரிடும் வழக்கம் ஏற்பட்டது. கடல் பூதம் ஓட்டம் பிடித்தது.

இதுபோன்ற அற்புதச் செய்திகளில் அற்புத அம்சங்களை விலக்கிவிட்டுப் பார்த்தால் சில உண்மைகள் வெளிப்படும். ஆகையால் இத்தகைய செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அறிவு எனும் மைக்ரஸ்கோப்பின் அடியில் வைத்த ஆராய்வது நலம் பயக்கும்.

gem sl
gem2

அற்புதச் செய்தி 8
28-ஆவது அத்தியாயத்தில் துட்டகாமனி, புத்த சைத்தியம் கட்டுவதற்காக, இந்திரன் உத்தரவின் பேரில் விஸ்வகர்மா கற்களைத் தயார் செய்தான். அதை ஒரு வேட்டைக்காரன் காட்டுக்குள் சென்று கண்டுபிடித்து மன்னனிடம் சொன்னான். கற்கள் இருந்த இடத்தை அவனுக்குக் காட்ட, வனதேவதை ‘உடும்பு’ உருவத்தில் வந்து அவனை அழைத்துச் சென்றது. அதற்குப்பின் நாடு முழுதும் ரத்தினக் கற்களும், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்களும் கிடைத்தன.

தமிநாட்டிலுள்ள 38,000 கோவில்களின் தல புராணங்களைப் படிப்போருக்கு இந்த அற்புதங்கள் வியப்பளிக்கா. ஏனெனில் ஒவ்வொரு கோவிலிலும் ஏதேனும் ஒரு பறவை, விலங்கு, மரம் முதலியன் தொடர்பு பெற்று இருக்கும். இலங்கை பூமி — இராவணன், குபேரன் காலத்தில் இருந்தே ரத்னம் கொழித்த பூமி. இதை வால்மீகி முனிவரும் தொட்டுக்காட்டி இருக்கிறார். இலங்கையின் பொன்மயமான தோற்றத்தைக் கண்டு மயங்கிய லெட்சுமணனிடம், ‘’பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’’ என்று கூறி ஸ்வர்ணமய இலங்கையை நிராகரித்து விடுகிறான் ராமன். ஆகவே துட்ட காமினி சேதியம் கட்டத்துவங்கியவுடன் ஆளுக்கு ஆள் பூமியைத் தோண்டத் துவங்கினர் என்றும் அப்போது எங்கு பார்த்தாலும் தங்கம், வெள்ளி, ரத்தினக் கற்கள் கிடைத்தன என்றும் பொருள் கொள்வதில் தடை ஏதும் இல்லை.

sl stamp3

அற்புதச் செய்தி 9
12 அரசர்கள் பற்றிய 35-ஆவது அத்தியாயத்தில் யானை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. ராணியானவள் ஒரு குழந்தையை யானையின் காலுக்கு அடியில் வைத்துக் கொல்லச் சொல்கிறாள். அதை எடுத்துச் சென்ற சேவகப் பெண் யானையிடம் உண்மையைச் சொன்னவுடன் அது கண்ணீர் வடித்து கோபம் கொண்டு அரண்மனை வாயிலைத் தகர்த்து, சிறைப்பட்ட மன்னனை விடுவித்து, அவன் மறுகரைக்குச் செல்ல கப்பல் ஏற உதவிய கதை அது. இது போன்ற யானைக் கதைகள் சங்க கலம் முதல் ஏராளமாக உள. அத்தனையையும் யானை அதிசயங்கள் என்ற ஆங்கிலக் கட்டுரையில் ஏற்கனவே பட்டியலிட்டுவிட்டேன். இதே போல சோழ மன்னன் ஒரு குழந்தையைக் கொல்ல எத்தனித்தபோது கோவூர்க் கிழார் சென்று தடுத்ததை புறநானூற்றில் (பாடல் 46) காண்க. மாபெரும் பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் அனுப்பிய யானை அப்பர் பெருமானைக் கொல்ல மறுத்துவிட்டது!

அற்புதச் செய்தி 10
36-ஆவது அத்தியாயத்தில் மழை பற்றிய அதிசயச் செய்தி வருகிறது. இது போன்ற செய்திகளையும் மழை அதிசயங்கள் என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். சங்கபோதி என்ற மன்னன் நாட்டில் வறட்சி மிகவே, மகாஸ்தூப முற்றத்தில் படுத்துக்கொண்டு மழை பெய்யாதவரை நான் வெளியேறமாட்டேன். மழை பெய்யாவிடில் இங்கேயே உயிர் துறப்பேன் என்று சபதம் செய்கிறான். உடனே தேவர்கள், தீவு முழுதும் மழை பெய்யவைத்து வளம் ஊட்டினர்.

???????????????

இது போன்ற எத்தனையோ அதிசயங்கள் மகாவம்சத்தில் காணக் கிடக்கின்றன. படித்து மகிழ்க. அவற்றின் உட்பொருளை உணர்க!!

contact swami_48@yahoo.com

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply