Political Column 2008 (1)

புஷ் மீது நடாத்தப்பட்ட சப்பாத்துத் தாக்குதல் அழிவாயுதங்களை விட வலிமை வாய்ந்தது!
நக்கீரன்

தமிழ்த் திரைப்படங்களில் தன்னோடு அத்து மீறிப் பேசி சேட்டை செய்ய முனையும் வில்லனைப் பார்த்துக் கோபமாக “செருப்பு பிஞ்சிடும்” எனக் கால் செருப்பைக் கழட்டிக் காட்டி கதாநாயகி வசனம் பேசுவார். சாதாரண மக்கள் கூட ‘உன்னைச் செருப்பாலை அடிக்க வேண்டும்’ எனத் திட்டுவார்கள். தடி, தண்டுகளால் அடி வாங்குவதை விட கால் செருப்பால் அடிவாங்குவது தமிழ்ப் பண்பாட்டில் மிகப் பெரிய அவமானமாகக் கருதப்படுகிறது.

அதனால்தான் செருப்புப் போட்டுக் கொண்டு யாரும் கோயிலுக்குள் போவதில்லை. அவ்வளவு ‘மரியாதை’ செருப்புக்கு!
இப்போது அரபியர்களிடமும் அதே பண்பாடு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரபு பண்பாட்டில் மசூதிக்குள் காலணியோடு போகும் வழக்கம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் மீது சப்பாத்தை வீசுவது மிகப் பெரிய அவமானமாகக் கருதப்படுகிறது. சப்பாத்தின் அடிப் பாகத்தை யாருக்கேனும் காட்டுவது கூட மிகப் பெரிய அவமானமாக அரபு பண்பாட்டில் கணிக்கப்படுகிறது.

இராக்குக்குத் தனது கடைசிப் பிரியாவிடைப் பயணத்தை மேற்கொண்ட யோர்ஜ் புஷ் மீது தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசெம்பர் 14, 2008) இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் எகிப்தைத் தளமாகக் கொண்ட இராக் தொலைக்காட்சியின் (Al-Baghdadiya) நிருபர் தனது கால் சப்பாத்தைக் கழட்டி ஒன்றன் பின் ஒன்றாக வீசித் தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்கதலை நடத்திய நிருபரின் பெயர் முன்;தாசர் அல் சைய்தி (Muntazer al-Zaidi) என்பதாகும்.

இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத புஷ் கெட்டித்தனமாகத் தலையைக் குனிந்து தலைக்கு வந்த ஆபத்தைத் தலைப்பாவோடு தவிர்த்துக் கொண்டார். ஆனால் அவரது முகத்தில் இலேசான கலவரம் காணப்பட்டது.

நிருபரின் எதிர்பாராத சப்பாத்து வீச்சு அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைப் பிரதமர் நூரி-அல்-மாலிக்கியின் பாதுகாவலர்கள் விரைந்து சென்று மடக்கித் தரையில் தள்ளி கைது செய்தனர்.

சப்பாத்தை வீசி புஷ்சை பரிசுகெடுத்தது மட்டுமல்லாமல் அவரைப் பார்த்து ‘நாய்’ என்றும் அல் சைய்தி திட்டினார். “நாயே! உனக்கு இதுவொரு பிரியாவிடை முத்தம்” என முதல் சப்பாத்து காற்றைக் கிழித்துக் கொண்டு பாயும் போது கத்தினார். இரண்டாவது சப்பாத்து பறந்தபோது “இது இராக்கில் கொல்லப்பட்ட கைப்பெண்கள், அநாதைக் குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்கள் நினைவாக” என உரத்த குரலில் கூவினான்.

[Muntazer al-Zaidi, the journalist who soon was sans footwear, made sure Bush understood the import of his heartfelt act. “This is a farewell kiss, you dog,” he shouted as the first shoe got airborne. “And this is for the widows, the orphans and those who were killed in Iraq ,” were the words accompanying the second of his aerial ‘adieus’ to the unwelcome presence. [al-Zaidi was a pioneer of sorts; late-night comic Jay Leno dubbed him a ‘shoe-icide bomber’.]

சப்பாத்துகளைக் கழட்டிப் பூஷ் மீது வீசிய அல் சைய்தி ஒரே இரவில் மத்திய கிழக்கில் மட்டுமல்ல உலகம் முழுதும் கதாநாயகனாக உயர்த்தப்பட்டு விட்டார்.

அமெரிக்க தொலைக் காட்சிகள் சப்பாத்துகள் புஷ்சை நோக்கிப் பறந்து போவதை மீண்டும் மீண்டும் சளைக்காமல் களைக்காமல் போட்டுக் காட்டினி. இதனால் புஷ்சுக்கு எஞ்சியிருந்த அற்பசொற்ப மானமும் காற்றில் பறந்து போனது.

அல் சைய்தி புஷ் மீது பயங்கரக் கோபத்தில் இருந்தார். ஆயிரக்கணக்கான இராக்கிய மக்களது சாவுக்கு புஷ் மேற்கொண்ட இராணுவப் படையெடுப்பே காரணம் என அவர் நினைத்தார். அவரைப் போலவே சாதாரண அரபியர்கள் அமெரிக்கப் படையெடுப்பை நடத்திய புஷ்தான் இராக்கின் உயிர் இழப்புக்கும் பொருள் அழிவுக்கும் வன்முறைக்கும் பொறுப்பானவர் எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.

சதாம் குசேன் ஒரு சர்வாதிகாரி என்பது உண்மைதான். சிறுபான்மை குர்திஷ் இனமக்கள் பலர் அவரால் கொலை செய்யப்பட்டார்கள். அவரது ஆட்சியை எதிர்த்தவர்கள் நீண்ட காலமாகச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஆனால் இராக்கில் சதாமின் ஆட்சியில் அமைதி நிலவியது. சட்டம் ஒழுங்கு பேணப்பட்டது. மதச் சண்டைகள் நடைபெறவில்லை.

அரபிய அல் ஜசீரா இணைய தளம் புஷ் மீது தொடுத்த தாக்குதல் தொடர்பாக அதன் வாசகர்கள் எழுதிய கருத்துக்களை 34 பக்கத்தில் வெளியிட்டது.

“அந்த சோடி சப்பாத்து அரபு நாடுகளது இராணுவத்துக்கு சமமானது.”

“அந்தச் சப்பாத்துக்கள் பெருந்தொகை அழிவாயுதங்களை விட வலிமை வாய்ந்தது.”

“எனது மகனுக்கு முன் தாசர் எனப் பெயர் வைப்பேன்.”

அமெரிக்காவிற்கு எதிராக சதாம் குசேன், ஒஸ்மா பின் லேடன், இப்போது சைய்தி என யார் ஒரு சிறிய எதிர்ப்பைத் தெரிவித்தாலும் அவர்களை அரபியர்கள் போற்றிக் கொண்டாடுவார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.

இதற்கு முன்னர்; அய்யன்னா அவையில் அன்றைய சோவியத் நாட்டுத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் (Nikita Khrushchev)  மேசையைத் தனது காலணியால் தட்டி கலாட்டா செய்தது நினைவிருக்கலாம்.

கைது செய்யப்பட்ட நிருபர் அல் சைய்தியை விடுதலை செய்யுமாறு இராக்கியர்கள் வீதியில் இறங்கி மூன்று நாட்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அமெரிக்க தேசியக் கொடியை வீதியில் போட்டு எரித்தார்கள்.

அல் சையிதியின் கைது இராக் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

அல் சைய்தி எறிந்த அந்த ஒரு சோடி சப்பாத்தை ஒரு கோடி டொலர் (பத்து மில்லியன்) கொடுத்து வாங்க சவுதி அரேபிய நாட்டு ஆசிரியர் ஹசன் முகமது மக்ஹாவா (Hasan Muhammad Makhafa ) என்பவர் முன்வந்துள்ளார்!

இராக் மீது புஷ் மேற்கொண்ட. இராணுவத் தாக்குதல் அவரை ஒரு போர் வெறியராகக் காட்ட உதவியுள்ளது. ஜெர்மன் நாட்டு நாசிகளது தலைவர் இட்லர் கூட புஷ்சைப் போல் மோசமாக நடந்து கொண்டதில்லை எனச் சிலர் நினைக்கிறார்கள்.
தொடக்கத்தில் இராக் போரை ஆதரித்த அமெரிக்கர்களே இப்போது புஷ் மீது கோபமாக இருக்கிறார்கள். அமெரிக்க நாட்டு வரலாற்றிலேயே புஷ்ஷை ஒத்த வேறொரு ஆட்சித்தலைவர் யாரேனும் வெள்ளை மாளிகையை அலங்கரித்ததில்லை என்கிறார்கள். புஷ் அத்தனை மோசமான ஆட்சித்தலைவராகக் கணிக்கப்படுகிறார். அவரை ஆதரிப்போர் விழுக்காடு 25 ஆகக் குறைந்துள்ளது.

அண்மையில் நடந்த அமெரிக்க ஆட்சித்தலைவர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் யோன் மக்கெயின் படு தோல்வி அடைந்ததற்கும் மக்களாட்சிக் கட்சித் தலைவர் பராக் ஒபாமா அமோக வெற்றி ஈட்டியதிற்கும் புஷ்சின் செல்வாக்கின்மையே காரணமாகும். குறிப்பாக இராக் மீதான போரையிட்டு அமெரிக்கர்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள்.

அய்ந்து ஆண்டுகளாக நீடிக்கும் இராக் போரில் இதுவரை இதுவரை 4128 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 30,182 படையினர் காயம்பட்டுள்ளனர்.

இராக்கியர்களைப் பொறுத்தளவில் அவர்களது நாடு குண்டு போட்டு தரைமட்டமாக்கப் பட்டுவிட்டது. ஒரு இலட்சம் மக்கள் இறந்து பட்டுள்ளார்கள். இருபது இலட்சம் மக்கள் அண்டை நாடுகளான லெபெனன் மற்றும் சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். உள்நாட்டில் மேலும் இருபது இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

பதினாயிரத்துக்கும் அதிகமான இராக்கியர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஆண்டுக் கணக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. மீறி நிறுத்தப்பட்டோரில் 10 விழுக்காட்டினரே குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இராக் நாட்டின் நகர வீதிகளில் பொதுமக்கள் நாளாந்தம் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்படுகிறார்கள்.

அமெரிக்கா இன்று எதிர்நோக்கும் பொருளாதார தேக்கத்துக்கு (recession) புஷ் இராக் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான இராணுவப் படையெடுப்பே காரணம் எனப் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

எப்படி இலவச சாப்பாடு இல்லையோ அது போல இலவச போர் என்றும் ஒன்று கிடையாது.

இராக் போருக்கு அமெரிக்கா நாளொன்றுக்கு 435 மில்லியன் – கிழமைக்கு 3 பில்லியன் – மாதம் 12 பில்லியனைச் செலவழிக்கிறது. போருக்கு வாங்கிய கடனுக்கு செலுத்தப்படும் வட்டி 615 பில்லியன் டொலர் ஆகும். போர் ஆயுத தளபாடங்களை ஈடுசெய்யச் செலவாகும் தொகை 280 பில்லியன் ஆகும். போர்ச் செலவு நாலு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமெரிக்கக் குடும்பத்துக்கு 16,500 டொலர்கள் (2003 – 2008) ஆகும். போர்க்களத்தில் சாகும் ஒவ்வொரு படையினனுக்கும் இழப்பீடாக 500,000 டொலர்கள் வழங்கப்படுகிறது.

தொடக்கத்தில் இராக் படையெடுப்புக்கு ஆகும் செலவு 100 – 300 பில்லியன் மட்டுமே ஆகும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் இராக் போருக்கு அமெரிக்கா இதுவரை ஒரு திரில்லியன் (ஆயிரம் பில்லியன்) டொலர்களைக் கரியாக்கியுள்ளது. சிலர் உண்மையான செலவு 3 திரில்லியனைத் தாண்டும் என்கிறார்கள். முதலாவது உலகப் போரில் ஏற்பட்ட செலவை விட இது இரண்டு மடங்காகும். இரண்டாவது உலகப் போரில் செலவிடப்பட்ட பணம் மட்டுமே இதைவிட அதிகமானது.
அமெரிக்காவின் தேசியக் கடன் ஒரு திரில்லியனைத் தாண்டியுள்ளது. அமெரிக்க வரவு – செலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறை 455 பில்லியன் (2008) ஆகும். 2007 ஆம் ஆண்டு பற்றாக்குறை 162 பில்லியனாக இருந்தது.

திரில்லியன் கணக்கில் தோற்றுப் போன இராக் போருக்குச் செலவழித்து விட்டு அதன் தாக்கம் அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பாதிக்காது என்று எதிர்பார்ப்பது மடமையாகும். 1991 இல் அமெரிக்கா இராக் மீது படையெடுத்த போது அதில் ஏற்பட்ட செலவை வளைகுடா நாடுகள் ஈடு செய்தன. ஆனால் இப்போது அந்தப் பேச்சுக்கே இடமில்லாது போய்விட்டது.
அமெரிக்காவின் பொருளாதார தேக்கம் வேலையற்றோரது தொகையை 10.3 மில்லியனாக உயர்த்தியுள்ளது. வேலையற்றோரின் விழுக்காடு 6.7 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வேலையில்லாதோர் தொகை 2.7 மில்லியனாக அதிகரித்துள்ளது. வேலையற்றோர் விழுக்காடு 1.7 ஆக உயர்ந்துள்ளது.

திவாலாகப் போக இருந்த அமெரிக்காவின் மிகப் பெரிய காப்புறுதி நிறுவனமான யுஐபு யை அமெரிக்க அரசு கையேற்றுள்ளது. அதற்குக் கொடுக்கப்பட்ட 85 பில்லியன் டொலர் நிதியுதவிக்கு ஈடாக அரசு அதன் பங்குகளில் 79.9 விழுக்காட்டைப் பெற்றுள்ளது. மேலும் பல நிதி நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் கரைசேர்க்க அமெரிக்க நாடாளுமன்றம் 700 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

அமெரிக்க ஆட்சியாளர் யோர்ஜ் புஷ் அவர்கள் மீது தொலைக்காட்சி நிருபர் முன்;தாசர் அல் சைய்தி சப்பாத்துகளால் தாக்குதல் நடத்தியது தவறாக இருக்கலாம். ஆனால் இராக் என்ற நாட்டை நாசமாக்கி அமெரிக்காவின் பொருளாதாரத்தை அதல பாதாளத்துக்குத் தள்ளிவிட்ட புஷ் அந்த மரியாதைக்கு சகலவிதத்திலும் தகுதியானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. (உலகத்தமிழர் – டிசெம்பர் 19, 2008)


அறுபது மணி நேரம் மும்பையை உலுக்கிய இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்
நக்கீரன்

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. உலகின்; நான்காவது படை பலத்தைக் கொண்ட நாடு. பொருளாதார வளர்ச்சியல் ஆண்டு தோறும் 9 விழுக்காட்டை எட்டித் தன்னை ஒரு ‘பொருளாதார ஆற்றல் மையம் (Economic Power House)  என்ற விருதோடு முன்னணியில் இருக்கும் நாடு. அண்மையில் சந்திரனை ஆராய “சந்திராயன் -1” என்ற செயற்கைக் கோளை இந்தியா அனுப்பி இருந்தது. அது சந்திரனைச் சுற்றி வருகிறது.

இத்தனை புகழ் இருந்தும் மும்மை மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலால் இந்தியாவின் ‘மானம்’ கப்பலேறியுள்ளது. அதன் பிராந்திய வல்லரசுப் படிமம் பலத்த அடிவாங்கியுள்ளது.

மும்பை இந்தியாவின் வாணிக தலைநகரம் ஆகும். அங்குதான் கோடிக்கணக்கில் பணம் புரளும் பங்குச் சந்தை, பண்டமாற்றுச் சந்தை, வைரம் மற்றும் தங்க வாணிகம் நடைபெறுகிறது.
வானுயர்ந்த பெரிய பெரிய ஹோட்டல்களும்; அங்குதான் உண்டு. தாக்குதலுக்கு இலக்கான தாஜ் ஹோட்டல் 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னம்.

மும்பையில் ஆயுதக்கடத்தல், போதை மருந்து கடத்தல், வயிரம் கடத்தல் மிக சாதாரணமாக நடைபெறுகிறது. இன்னொரு ‘புகழும்’ மும்மைக்கு உண்டு. பலகோடி செலவில் அங்கு இந்திப்படங்கள் தயாரிக்கப்படுகிறது. திரையுலகத்தை ஆட்டி வைக்கும் பாதாள தாதாக்கள் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை அறாவட்டிக்குக் கொடுத்து உதவுகிறார்கள்.

இதே மும்பையில்தான் ஒரு திரைப்படத்தை விட அதிக திகில் நிறைந்த காட்சிகளை தீவிரவாதிகள் அரங்கேற்றினார்கள். புதன்கிழமை (நொவெம்பர் 26,2008) தொடங்கிய தாக்குதல் 60 மணித்தியாலங்கள் நீடித்தது. இந்தியாவிற்கு உள்ளும் வெளியும் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்து மும்பையை உலுக்கிய திகில் காட்சிகளை கண்வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை வெறுமனே பத்துத்தான். ஆனால் அவர்கள் சுட்டுத்தள்ளிய பொது மக்களின் எண்ணிக்கை 173 என்கிறார்கள். தாக்குதலில் காவல்துறை, அதிரடிப்படை ஆகியவற்றைச் சேர்ந்த 14 பேர் பலியானார்கள். அதில் மும்பை பயங்கரவாதத்துக்கு எதிரான காவல்படையின் தலைவர் ஹேமந்த் கார்க்கரே ஒருவராவர்.

தாஜ், ஒபாராய் ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களும் தப்பவில்லை. மொத்தம் ஆறு அமெரிக்கர், 6 இஸ்ரேலியர், ஒரு கனடியர் உட்பட 18 வெளிநாட்டவர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளார்கள்.

பலர் 16/1 மும்பைத் தாக்குதல் நியூயோர்க் நகர் மீது அல் கொய்தா 9/11 இல் நடத்திய தாக்குதலை ஒத்திருப்பதாக நினைக்கிறார்கள்.

இதற்கு முன் மும்பை 1993 இல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அந்தத் தாக்குதலில் 260 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள்.

தாக்குதல் தொடங்கியதை அடுத்து தில்லியில் இருந்து 400 தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் மும்பைக்கு விரைந்து வந்தனர். இராணுவத்தை சேர்ந்த 65 அதிரடிப் படையினரும் வர வழைக்கப்பட்டனர். இவர்களின் எதிர்த் தாக்குதலில் தீவிரவாதிகள் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிபட்டான்.

பிடிபட்ட தீவிரவாதியின் பெயர் மொகமது அஜ்மல் அமிர் கசார் (Mohammed Ajmal Amir Kasar)  ஆவான். நாலாம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப் போட்டுவிட்ட இவனது சொந்த ஊர் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஒகாரா மாவட்டத்தில் உள்ள பாரிட்கொட் (Faridkot in the Okara District of Pakistan’s Punjab Province) என்பதாகும். இந்தத் தாக்குதலில் பங்கேற்பதற்கு லக்ஷகர் அமைப்பின் தளபதி ஸகீர் உர் – இரகுமான் (Yousuf Raza Gilani)  அஜ்மல் என்பவனது வறிய குடும்பத்துக்கு ரூபா 150,000 ஆயிரம் கொடுப்பதாக வாக்களித்துள்ளான்.

அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாத லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தினால் பயற்றுவிக்கப்பட்ட தீவிரவாதி. இவன் கொடுத்த வாக்குமூலத்தில் 10 தீவிரவாதிகளுமே கராச்சி துறைமுகத்தில் இருந்து லஷ்கர்- இ-தொய்பா இயக்கத்துக்குச் சொந்தமான கப்பலில் ஏறி குஜராத் கடற்பகுதிக்கு வந்துள்ளனர். வழியில் மீன்பிடிக் கப்பல் ஒன்றை மடக்கிப் பிடித்து அதில் இருந்த அனைவரையும் கொன்று விட்டு தண்டயலை மட்டும் கப்பலை மும்பை நோக்கிச் செலுத்துமாறு கட்டளையிட்டார்கள். மும்பை வந்ததும் தண்டயலையும் கொன்று விட்டு செயற்கைகோள் உதவியுடன் இடத்தைக் கண்டுபிடிக்கும் கருவியின் உதவியுடன் வாடகை வண்டிகளில் மும்பை நகருக்குள் நுழைந்தார்கள்.

தீவிரவாதி அஜ்மலிடம் விசாரணை நடத்திய மும்பை காவல்துறை ஆணையர் ஹசன் கபூர் “தீவிரவாதிகளுக்கு மும்பையில் யாரும் உதவி செய்ததாகத் தெரியவில்லை” என்கிறார்.
மும்பையில் 12 இலக்குகளை அதிரடியாகவும் ஈவு இரக்கமின்றியும் மிகக் கடுiமையாகத் தீவிரவாதிகள் தாக்கினார்கள். சத்ரபதி சிவாஜி தொடர் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் மற்றும் ஒபராய் நட்சத்திர ஹோட்டல்கள், நரிமன் இல்லம் (யூதர்களுக்கு சொந்தமான மையம்) இடங்கள் தாக்குதலுக்கு இலக்காயின. ஏகே – 47 மற்றும் ஏகே – 56 இயந்திர துப்பாக்கிகளினால் சரமாரியாகச் சுட்டும் கைக் குண்டுகளை வீசியும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

அஜ்மல் இஸ்மாயில் இருவரும் ஏகே – 47 எந்திர துப்பாக்கி ஏந்தியபடி சத்ரபதி சிவாஜி தொடர் நிலையத்தின் முன்பாக சாவகாசமாக நின்று கொண்டு பொதுமக்களைக் குறிவைத்துச் சுட்டுத் தள்ளினார்கள். அங்கு காவலுக்கு நின்ற தொடர்வண்டி பாதுகாப்பு படையைச் (Raillway Protection Force (RPF)  சேர்ந்த காவல்துறையினர் தலைதெறிக்க ஓடித் தூண்களுக்குப் பின்னர் மறைந்து கொண்டனர். அவர்களில் ஜில்லு யாதவ் (Jilly Yadev)  என்ற கொன்ஸ்டபிள் தன்னிடம் துப்பாக்கி இல்லாததால் இன்னொரு காவல்துறையினரிடம் இருந்த பழைய 303 ரக துப்பாக்கியைப் பறித்து தீவிரவாதி அஜ்மலை நோக்கிச் சுட்டிருக்கிறார். ஆனால் அது குறி தவறிவிட்டது! சத்ரபதி சிவாஜி தொடர் நிலையத்தில் மட்டும் 50 பேர் கொல்லப்பட்டனர்!

அஜ்மலின் அகவை 21 மட்டுமே. பார்க்கப் பள்ளிமாணவன் போல் இருக்கிறான். இவன் மட்டுமல்ல தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் 20 – 23 அகவையைத் தாண்டாதவர்களாகவே காணப்படுகின்றனர்.

அஜ்மலிடம் நடத்திய விசாரணையில் நரேந்திர மோடி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா ஆகியோர் முஸ்லீம்களுக்கு எதிராகப் பேசிய ஒளிப்படங்களைத் தங்களுக்குக் காட்டி உருவேற்றக் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டது எனக் கூறியுள்ளான். மேலும் “குஜராத் கலவரம் மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை குறித்த ஒளிப் படங்களும் எங்களுக்குக் காட்டப்பட்டன. இதன் மூலம் எங்களுக்கு வெறியூட்டப்பட்டது” எனக் கூறினான்.
தாஜ் ஹோட்டலின் முன்புறத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனைத் தெரிந்து கொண்ட தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டலின் முன்புற வாசல் வழியாக நுழையாமல் பின்புற வாசல் வழியாக நுழைந்துள்ளார்கள்.

மும்பையில் தீவிரவாதிகள் புகுந்த மணித்துளி முதல் கமாண்டோப் படையினர் தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றது வரை மும்மை நகரில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், பங்குச் சந்தை, பண்டமாற்றுப் பங்குச் சந்தை மூடப்பட்டிருந்தன.

அறுபது மணி நேரம் மும்பையை உலுக்கிய தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக மும்பைக்கு ரூ. 4000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை, தேசிய பங்குச் சந்தை மற்றும் பண்டமாற்றுப் பங்குச் சந்தை ஆகியவற்றின் நாளாந்த பணப் புழக்கம் ரூ. 32 ஆயிரத்து 710 கோடியாகும்.

தீவிரவாதிகளின் நோக்கம் மும்பையைத் தாக்கி உலகத்தின் கவனத்தை அதன்பால் ஈர்ப்பதுதான் என பிடிபட்ட அஜ்மல் விசாரணையின் போது தெரிவித்தான்.

ஒன்பது தீவிரவாதிகளை இந்தியப் படையினர் சுட்டுத்தள்ளினாலும் அதற்கு 60 மணி நேரம் பிடித்தது என்பது பெரிய அவமானம் என்று முன்னாள் பஞ்சாப் காவல்துறை அதிகாரி கே.பி.எஸ். கில் சாடியுள்ளார். இவர்தான் 1984 ஆம் ஆண்டு யூன் 6 இல் சீக்கிய பொற் கோயிலில் பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளுக்கு எதிரான ‘கறுப்பு இடி நடவடிக்கை’ என்ற தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர்.

இதேபோல் தேசிய பாதுகாப்புப் படை தில்லியில் இருந்து மும்பை போக அய்ந்து மணி நேரம் தாமதம் ஏற்பட்டதையிட்டு முன்னாள் இராணுவ தளபதி வி.பி. மலிக் கவலை தெரிவித்துள்ளார். இப்படியான வேளையில் வியப்பு, வேகம் மட்டுமே வெற்றிக்கு வழி எனகிறார்.
மலிக் இந்திய அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கவில்லை. அரசியல்வாதிகள் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்குப் பதில் அரசியல் இலாபத்துக்கு அதனை ஒரு கருவியாகப் பயன்டுத்துவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மும்பைத் தாக்குதல் பாகிஸ்தான் மண்ணில் பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் ஆட்சித்தலைவர் சர்தாரி மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானியர் என்பதை மறுக்கிறார். இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பழையபடி போர் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.
அமெரிக்காவும் மும்பைத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் தீpவிரவாதிகளே காரணம் என்கிறது. மும்பைத் தாக்குதல் பற்றி நடத்தப்படும் விசாரணைக்குப் பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க இராசாங்க செயலர் கொன்டலீசா றைஸ் பாகிஸ்தானைக் கேட்டுள்ளார்.
இந்தியா போலல்லாது பாகிஸ்தானில் நான்கு அதிகார மையங்கள் இருக்கின்றன. பாகிஸ்தான் ஆட்சித்தலைவர் சர்தாரி, பிரதமர் யூசுவ் ராசா கிலானி Yousuf Raza Gilani) இராணுவம், அய்எஸ்அய் (Inter Srvices Intelligence)  என்று அழைக்கப்படும் உளவு நிறுவனம் என்பவையே அவையாகும்.
பாகிஸ்தானின் உளவு நிறுவனமான அய்எஸ்அய் இந்தியாவுக்கு எதிராக ஒரு நிழல் சண்டையை நீண்ட காலமாக நடத்தி வருகிறது. ஆப்கனிஸ்தானில் தலிபானுக்கு எதிரான போரில் அய்எஸ்அய் தலிபான் பக்கம் இருப்பதாக அமெரிக்கா நினைக்கிறது. மிகவும் ஆற்றல் வாய்ந்த இந்த உளவு நிறுவனத்தின் அரசியல் பிரிவு கடந்த வாரம் பாகிஸ்தான் அரசால் மூடப்பட்டது.
இந்தியா கேட்டுக் கொண்டதற்கு இணங்க அய்எஸ்அய் அதிகாரி தளபதி சுஜட் பாஷாவை (ISI Chief Lt.Gen.Shujat Pasha)  அனுப்ப பாகிஸ்தான் முதலில் ஒத்துக் கொண்டது. ஆனால் இராணுவத்தின் எதிர்ப்புக் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது.
மும்பைத் தாக்குதல் இந்திய உளவு நிறுவனங்களின் முகத்தில் கரி பூசிவிட்டது. தாக்குதல் வெற்றிபெற்றதற்கு உளவு நிறுவனங்களின் கையாலாகாத் தன்மையே காரணம் என்கிறார்கள். இதனால் வெளிப் புலனாய்வுக்குப் பொறுப்பான றோ (RAW) வுக்கும் உள்நாட்டு உளவு நிறுவனமான அய்பி (Intelligence Bureau)  க்கும் இடையில் சொற்போர் மூண்டுள்ளது. றோ வின் உயர் மட்டத்தில் பயங்கரவாதம் – எதிர்ப் பயங்கரவாதம் இரண்டிலும் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் இல்லை என்கிறார் பி. ராமன். இவர் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய அமைச்சரவைத் துணைச் செயலர் ஆவார்.
உளவு அமைப்புக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டதே மும்பை தாக்குதலுக்குக் காரணம் என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா (Brajesh Mishra)  கருத்து வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சிகளை உளவு பார்ப்பதில் உளவு நிறுவனங்கள் அதிக கவனத்தையும் காலத்தையும் செலவழிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். பாஜக சொல்வது போல் தீவிரவாதத்தைப் பொடா சட்ட மூலம் தடுத்துவிட முடியாது என்கிறார்.
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா மும்பைத் தாக்கதலுக்கு முறையான புலனாய்வுத் தகவல் கிடைக்காததே காரணம் என்கிறார். அவரது கடற்படையும் கடலோரக் காவற்படையும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. கராச்சியில் இருந்து புறப்பட்டுவந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவின் கடற்பரப்பில் 72 மணித்தியாலங்கள் தரித்து நின்றிருந்தது மனம்கொள்ளத்தக்கது.
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் பதவியை துறக்க முன்வந்துள்ளார். அவரது விலகல் கடிதத்தைப் பிரதமர் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.
நாராயணன் தனது நேரத்தையும் நினைப்பையும் புலி வேட்டைக்குச் செலவழிப்பவர். வி.புலிகள் தமிழ்நாட்டை ஊடுருவித் தாக்குவார்கள் எனக் கூறி இந்திய கடற்படை, கடலோர ரோந்துப்படை, விமானப்படை, காவல் நிலையங்கள், தடுப்பு மையங்கள், இரடார் கருவிகள் எனப் பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டைத் தமிழ்நாட்டில் செய்யப்பட்டிருக்கிறது. இதில் நூறில் ஒரு பங்கு பாதுகாப்பை மும்மையில் செய்திருந்தால் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து இந்தப் பயங்கரத் தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்பே இருந்திருக்காது.
உலக்கை போகிற வழியைப் பார்க்காமல் ஊசி போகிற வழியை நாராயணன் பார்த்ததால் ஏற்பட்ட வினை இது.
முகவரி இல்லாத இஸ்லாமிய தீவிரவாதிகளால் பொதுமக்களை இலக்கு வைத்துக் கண்மூடித்தனமாக நடத்தப்படும் தாக்குதல்களினால் இன அடிப்படையிலான அடக்கு முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தி விடுதலைப் போராட்டங்களை நடத்தும் விடுதலை இயக்கங்களும் பயங்கரவாத இயக்கங்களாகப் பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கான பாகிஸ்தானின் தூதுவர் மும்பைத் தாக்குதலுக்குப் பின்னால் வி.புலிகள் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இது நகைப்புக்குரியதாகும். வி.புலிகள் அயல்நாடுகளின் உள் நடவடிக்கைகளில் தலையிடுவது இல்லை என்பது நன்கு அறிந்ததே. இப்படியான குற்றச்சாட்டு தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதில் இருந்து திசை திருப்பும் முயற்சியாகும்.

உலகில் 130 கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். இரான், பாலஸ்தீனம் (ஹாமாஸ் இயக்கம்) பாகிஸ்தான் (லஷ்கர்- இ-தொய்பா) ஆப்கனிஸ்தான் (தலிபான், அல் கொய்தா) போன்ற நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது.

இந்தியாவில் 12 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். கஷ்மீர் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாகும். கடந்த 30 ஆண்டுகளாக கஷ்மீர் மக்களில் ஒரு சாரார் ஆயுதம் ஏந்தியும் ஏந்தாமலும் சுதந்திரத்துக்காகப் போராடி வருகிறார்கள்.
இஸ்லாமிய தீவிரவாதத்தை இராணுவ அடிப்படையில் ஒழித்துவிட முடியாது. அதற்கான காரண காரியங்களை ஆராய்ந்து அரசியல் – பொருளியல் வழியில் தீர்வு காண்பதே புத்திசாலித்தனமாகும். அஜ்மல் தனது குடும்பத்தின் வறுமை காரணமாகவே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. (உலகத்தமிழர் – டிசெம்பர் 15,2008)


உலக்கை போகிற வழியைப் பார்க்காமல் ஊசி போகிற வழியைப் பார்த்த இந்தியா!
நக்கீரன்

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. உலகின்; நான்காவது படை பலத்தைக் கொண்ட நாடு. பொருளாதார வளர்ச்சியல் ஆண்டு தோறும் 9 விழுக்காட்டை எட்டி முன்னணியில் இருக்கும் நாடு. அண்மையில் சந்திரனை ஆராய “சந்திராயன் -1” என்ற செயற்கைக் கோளை இந்தியா அனுப்பி இருந்தது. அது சந்திரனைச் சுற்றி வருகிறது. இந்த செய்மதியை அனுப்ப 386 கோடி ரூபா செலவானது.

இத்தனை புகழ் இருந்தும் இன்று இந்தியாவின் ‘மானம்’ கப்பலேறியுள்ளது. அதன் பிராந்திய வல்லரசு படிமம் பலத்த அடிவாங்கியுள்ளது.

மும்பை இந்தியாவின் வாணிக தலைநகரம் ஆகும். அங்குதான் கோடிக்கணக்கில் பணம் புரளும் பங்குச் சந்தை, வைர வாணிகம் நடைபெறுகிறது. வானுயர்ந்த பெரிய பெரிய ஹோட்டல்களும்; அங்குதான் உண்டு. இன்னொரு ‘புகழும்’ மும்மைக்கு உண்டு. திரையுலகத்தை ஆட்டி வைக்கும் தாதாக்கள் அங்குதான் வாழ்கிறார்கள். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை இவர்கள்தான் கொடுத்து உதவுகிறார்கள்.
இதே மும்பையில்தான் ஒரு திரைப்படத்தை விட அதிகமான திகில் நிறைந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளார்கள். புதன்கிழமை (நொவெம்பர் 26,2008) தொடங்கிய தாக்குதல் 60 மணித்தியாலங்கள் நீடித்தது. இந்தியாவிற்கு உள்ளும் வெளியும் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் உட்கார்ந்து மும்பையை உலுக்கிய திகில் காட்சிகளை கண்வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை வெறுமனே பத்துத்தான். ஆனால் அவர்கள் சுட்டுத்தள்ளிய பொது மக்களின் எண்ணிக்கை 200 க்கும் அதிகமாகும். தாக்குதலில் காவல்துறை, அதிரடிப்படை ஆகியவற்றைச் சேர்ந்த 14 பேர் பலியானார்கள். அதில் மும்பை அதிரடிப்படை தலைவர் ஹேமந்த் கார்க்கரே, என்கவுண்டர் விற்பன்னர் விஜய்சலாஸ்கர் மற்றொரு அதிகாரி அசோக் காம்தே அடங்குவர்.

தாஜ், ஒபாராய் ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களும் தப்பவில்லை. மொத்தம் 6 அமெரிக்கர், 6 இஸரேலியர் உட்பட 18 வெளிநாட்டவர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்துள்ளார்கள்.

தாக்குதல் தொடங்கியதை அடுத்து தில்லியில் இருந்து 400 தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் மும்பை விரைந்து வந்தனர். இராணுவத்தை சேர்ந்த 65 கமாண்டோ வீரர்களும் வர வழைக்கப்பட்டனர். இவர்களின் எதிர்த் தாக்குதலில் தீவிரவாதிகள் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

பிடிபட்ட தீவிரவாதி பெயர் மொகமது அஜ்மல் அமிர் கசார் (Mohammed Ajmal Amir Kasar) ஆவான். இவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா இயக்க தீவிரவாதி. இவனுடன் மேலும் 9 தீவிரவாதிகள் தாக்குதல் திட்டத்துடன் கராச்சியில் இருந்து கப்பல் மூலம் மும்பைக்குள் நுழைந்தார்கள். பின் இரண்டு வாடகை வண்டிகளைப் பிடித்து மும்பையின் மத்திய பகுதிக்குள் ஊடுருவினார்கள்.

அவர்களுடன் ஏற்கனவே மும்பையில் பதுங்கி இருந்த 6 தீவிரவாதிகள் சேர்ந்து கொண்டனர். மும்பையைச் சேர்ந்த 2 பேர் 16 தீவிரவாதிகளுக்கு தேவையான பொதிகள், பை, ஆயுதங்கள், உணவு வகைகளை செய்து கொடுத்தனர்.
அவற்றை பெற்றுக் கொண்ட 16 தீவிரவாதிகளும் 6 குழுக்களாக பிரிந்து சென்று மும்பையில் 12 இடங்களில் மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஈடுபட்டனர். சத்ரபதி சிவாஜி தொடர் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் மற்றும் ஒபராய் நட்சத்திர ஹோட்டல்கள், நரிமன் இல்லம் இடங்கள் தாக்குதலுக்கு இலக்காயின. ஏகே – 47 துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும், கையெறி குண்டுகளையும் வீசியும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
அப்போது அஜ்மல் தனது கூட்டாளி இஸ்மாயிலுடன் எந்திர துப்பாக்கியுடன் வந்து மும்பை அதிரடிப்படை தலைவர் ஹேமந்த் கார்க்கரே, என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்சலாஸ்கர், மற்றொரு அதிகாரி அசோக் காம்தே ஆகியோரை சுட்டுக் கொன்றான்.

அஜ்மலின் அகவை 21 மட்டுமே. பார்க்க பள்ளிமாணவன் போல் இருக்கிறான். இவன் மட்டுமல்ல தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அனைவரும் 20 – 23 அகவை படைத்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடம் ஏகே – 47, ஏகே – 56 துப்பாக்கிகளும் கைக்குண்டுகளும் ஏராளமான வெடிபொருட்களும் இருந்திருக்கிறது. வெடிபொருட்கள் தாஜ் ஹோட்டலில் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

ஒரு தீவிரவாதி சத்ரபதி சிவாஜி தொடர் நிலையத்தின் முன்பாக நீண்ட நேரம் நின்று கொண்டு சாவகாசமாக பொதுமக்களைக் குறிவைத்துச் சுட்டுக் கொண்டிருந்தான்!

தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டலின் முன்புற வாசல் வழியாக நுழையாமல் பின்புற வாசல் வழியாக நுழைந்துள்ளார்கள்.
தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல்களில் குறைந்த பட்ச பாதுகாப்புத்தானும் இல்லாதிருந்தது வியப்பைத் தருகிறது.
மும்பையில் தீவிரவாதிகள் புகுந்த மணித்துளி முதல் கமாண்டோப் படையினர் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது வரை மும்மை நகரில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், பங்குச் சந்தைகள், பண்டமாற்றுப் பங்குச் சந்தை மூடப்பட்டிருந்தன.

அறுபது மணி நேரம் மும்பையை உலுக்கி எடுத்த தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக மும்பைக்கு ரூ. 4000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை, தேசிய பங்குச் சந்தை மற்றும் பண்டமாற்றுப் பங்குச் சந்தை ஆகியவற்றின் நாளாந்த பணப் புழக்கம் ரூ. 32 ஆயிரத்து 710 கோடியாகும்.

தீவிரவாதிகளின் நோக்கம் மும்பையைத் தாக்கி உலகத்தின் கவனத்தை அதன்பால் ஈர்ப்பதுதான் என பிடிபட்ட அஜ்மல விசாரணையின் போது தெரிவித்தான்.

ஒன்பது தீவிரவாதிகளை இந்தியப் படையினர் சுட்டுத்தள்ளினாலும் அதற்கு 60 மணி நேரம் பிடித்தது என்பது பெரிய அவமானம் என்று முன்னாள் பஞ்சாப் காவல்துறை அதிகாரி கே.பி.எஸ். கில் சாடியுள்ளார். இவர்தான் 1988 ஆம் ஆண்டு மே மாதம் சீக்கிய பொற் கோயிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு எதிரான ‘கறுப்பு இடி நடவடிக்கை’ என்ற தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்.

இதே போல் தேசிய பாதுகாப்பு படை தில்லியில் இருந்து மும்பை போக அய்ந்து மணி நேரம் தாமதம் ஏற்பட்டதையிட்டு முன்னாள் இராணுவ தளபதி வி.பி. மலிக் கவலை தெரிவித்துள்ளார். வியப்பு, வேகம் இரண்டுமே இப்படியான வேளையில் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் என்றார்.

அவர் இந்திய அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கவில்லை. அரசியல்வாதிகள் பயங்கரவாதத்தை நாட்டின் பாதுகாப்புக்குப் பதில் அரசியல் இலாபத்துக்கு ஒரு கருவியாகப் பயன்டுத்துவதிலேயே கண்ணாய் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

மும்பைத் தாக்குதல் பாகிஸ்தான் மண்ணில் பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது. தனது எதிர்ப்பைத் தெரிவிக்க பாகிஸ்தான் தூதுவரை இந்திய வெளியுறவு அமைச்சுக்கு அழைத்துள்ளது. . இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பழையபடி முறுகல் நிலை தோன்றியுள்ளது.
பாகிஸ்தானின் உளவு நிறுவனமான அய்எஸ்அய் (Inter-Services Intelligence)  இந்தியாவுக்கு எதிராக ஒரு நிழல் சண்டையை நீண்ட காலமாக நடத்தி வருகிறது. ஆப்கனிந்தானில் தலிபானுக்கு எதிரான போரில் அய்எஸ்அய் தலிபான் பக்கம் இருப்பதாக அமெரிக்கா நினைக்கிறது. மிகவும் ஆற்றல் வாய்ந்த இந்த உளவு நிறுவனத்தின் அரசியல் பிரிவு கடந்த வாரம் பாகிஸ்தான் அரசால் மூடப்பட்டது.

மும்பைத் தாக்குதலை அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் கண்டித்துள்ளன. தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு முழு ஆதரவு தருவதாக இந்த நாடுகள் வாக்குறுதி அளித்துள்ளன. அமெரிக்க வெளியுறவு செயலர் கொன்டலீசா றைஸ் தில்லிக்கு இரண்டொரு நாளில் பயணம் செய்ய இருக்கிறார்.

மும்பைத் தாக்குதல் உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீலின் தலையை உருட்டியுள்ளது. அவர் பதவி துறந்துள்ளார். அதே போல் மகாராஷ்டிர முதல் அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் (Vilasrao Deshmukh) தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைததுள்ளார். துணைப் பிரதமர் ஆர்.ஆர். பட்டீல் பதவியை ஏற்கனவே துறந்து விட்டார்.
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் பதவியை துறக்க முன்வந்துள்ளார். அவரது விலகல் கடிதத்தைப் பிரதமர் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.

எம்.கே. நாராயணன் தனது நேரத்தையும் நினைப்பையும் வி.புலிகளில் செலவழித்தவர். வி.புலிகள் தமிழ்நாட்டை ஊடுருவித் தாக்குவார்கள் என்று கூறி இந்திய கடற்படை, கடலோர ரோந்துப்படை, விமானப்படை, இரடார் கருவிகள், தடுப்பு மையங்கள் என பலத்த ஏற்பாட்டை தமிழ்நாட்டில் செய்திருந்தது. இதில் நூறில் ஒரு பங்கு ஏற்பாட்டை மும்மையில் செய்திருந்தால் துணிச்சலுடன் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து இந்தப் பயங்கரத் தாக்குதலை நடத்தியிருக்க வழி இல்லாமல் போயிருக்கும்.
உலக்கை போகிற வழியைப் பார்க்காமல் ஊசி போகிற வழியைப் பார்த்ததால் ஏற்பட்ட வினை இது.
இஸ்லாமிய தீவிரவாதிகளால் பொதுமக்களை இலக்கு வைத்து கண்மூடித்தனமாக நடத்தப்படும் தாக்குதல்களினால் இன அடிப்படையிலான அடக்கு முறைக்கு எதிராக விடுதலைப் போராட்டங்களை நடத்தும் வி.புலிகள் போன்ற விடுதலை இயக்கங்களும் பயங்கரவாத இயக்கங்களாகப் பார்க்கப்படும் சூழ்நிலை தோன்றுகிறது. இது ஒரு வேண்டத்தகாத பழியாகும். (உலகத்தமிழர் – டிசெம்பர் 2, 2008)
.
ஒபாமா பற்றிய பலத்த எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களிடம் மட்டுமல்ல உலகம் முழுதும் இருக்கிறது


நக்கீரன்
முடிதாங்கிய தலையில் கவலை இருக்கும் (Uneasy lies the head that wears the crown) என்ற சொற்றொடர் புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர் சேக்ஸ்பியர் எழுதிய 4 ஆவாது ஹென்றி என்ற நாடகத்தில் வருகிறது. நாடாளும் மன்னன் போன்ற ஒருவனுக்கு பாரிய பொறுப்புக்கள் இருக்கின்றன. எனவே அவனை கவலை எப்போதும் வாட்டி எடுக்கிறது.
இந்தக் காலத்தில் மன்னர்கள் இல்லை. இருப்பவர்களும் பெயரளவில்தான் இருக்கிறார்கள். அவர்கள் இருந்த இடத்தில் ஆட்சித்தலைவர்கள் இல்லையேல் முதல் அமைச்சர்கள் இடம் பிடித்துள்ளார்கள்.

அமெரிக்காவின் ஆட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா இன்னும் முறைப்படி பதவி உறுதிமொழி எடுக்கவில்லை. அதற்காக எதிர்வரும் சனவரி 20 ஆம் நாள்வரை அவர் காத்திருக்க வேண்டும். ஆனால் அய்யர் வரும்வரை அமவாசை காத்திருக்காது என்பதுபோல அவரது தலைக்கு மேல் மலைபோல் நாட்டுச் சிக்கல்கள் குவிந்தவண்ணம் உள்ளன. அவற்றைத் தீர்க்க ஒரு மணித்துளியைத்தானும் வீணடிக்கமுடியாது என்று ஒபாமாவே சொல்லுகிறார்.

அப்படி என்ன தலைக்கு மேல் மலைபோல குவிந்துள்ள சிக்கல்கள்? முதலில் யோர்ஜ் புஷ்ஷின் புண்ணியத்தால் வரலாறு காணாதவாறு அதலபாதாளத்தில் சரிந்துவிட்ட அமெரிக்க பொருளாதாரத்தை ஒபாமா தூக்கி நிறுத்த வேண்டும்.

அமெரிக்க பொருளாதாரரத்தின் முதுகெலும்பு என வருணிக்கப்படும் காப்பகங்கள், நிதி நிறுவனங்கள், நிதிமுதலீட்டுக் காப்பகங்கள் (Investment Banks) மகிழுந்து தொழிலகங்கள் குற்றுயிரும் குறையுயிருமாகக் கிடக்கின்றன. அவற்றுக்கு உயிர்க்காற்று அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகிறது.

மகிழுந்து தொழிலகங்களின் (Ford, General Motors, Chrysler)  உயர்மட்ட அதிகாரிகள் அமெரிக்க மேலவையிடம் 25 பில்லியன் கடன் கேட்டு காவடி போனார்கள். தங்கள் நிறுவனங்கள் கடன் தண்ணீரில் முழுகாமல் காப்பாற்றுமாறு கெஞ்சினார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் பல இலடச்சம் டொலர்களை செலவழித்துச் சொந்த விமானங்களில் வோஷிங்டனுக்கு வந்ததை மேலவை உறுப்பினர்கள் இரசிக்கவில்லை. கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களைத் துளைத்து எடுத்துவிட்டார்கள்!

ஒக்தோபர் மாதத்தில் மட்டும் 240,000 அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளார்கள். ஓகஸ்ட் மாதத்தில் 127,000 பேரும் செப்தெப்பர் மாதத்தில் 284,000 பேரும் வேலை இழந்துள்ளார்கள். 2008 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் வேலை இழந்தோர் தொகை 1.2 மில்லியன் (12 இலட்சம்) ஆகும். இதில் பாதி ஓகஸ்ட், செப்தெம்பர், ஒக்தோபர் மாதங்களில் ஏற்பட்ட இழப்பாகும். வேலை இல்லாதவர்களது விழுக்காடு 6.1 இல் இருந்து 6.5 ஆக உயர்ந்துள்ளது.

பெரிய பெரிய தொழில் – நிதி நிறுவனங்கள் மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையில் இருந்து தூக்க இருக்கின்றன!

சிட்டி குரூப் (City Group) என்;ற காப்பகத்தை வங்குறோத்தில் இருந்து காப்பாற்ற அமெரிக்க திறைச்சேரி 326 பில்லியனைக் கொடுத்து (306 பில்லியன் கடனுறுதி, 20 பில்லியன் பணம்) உதவியுள்ளது. இதற்கு ஈடாக சிட்டி குரூப் பங்குகளை அரசுக்குக் கையளித்துள்ளது. சென்ற மாதம் இதே நிறுவனத்துக்கு 25 பில்லியன் பணம் கொடுக்கப்பட்டது. சிட்டி குரூப் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய காப்பகமாகும். உலகம் முழுதும் அதற்கு 100 க்கும் அதிகமான கிளைகள் இருக்கின்றன. அதன் சொத்துப் பெறுமதி 2 திரில்லியன் டொலர்கள் (ஒரு திரில்லியன் 1,000 பில்லியன்) ஆகும். அதன் பங்குகளின் பெறுமதி பங்குச் சந்தையில் 60 விழுக்காடு சரிந்துவிட்டது! இந்தக் காப்பகத்தைக் காப்பாற்றாவிட்டால் ஏற்கனவே கந்தறுந்து போன Bear Stearns, Lehman Brothers Holdings, Washngton Mutual Funds  போன்ற நிதி நிறுவனங்களின் கெதிதான் இதற்கும் ஏற்பட்டிருக்கும்.

கடந்த ஆண்டு தொடக்கம் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்க திறைச்சேரி இதுவரை 7.7 திரில்லியன் பெறுமதியான கடன், பிணைகள், உத்தரவாதங்கள் (Guarantees)   கொடுத்துள்ளது. அல்லது கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.

பங்குச் சந்தை பலத்;த அடி வாங்கியுள்ளது. பங்குச் சந்தையில் பணத்தை இழந்த சிலர் மனைவி, மக்களைக் கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டார்கள்.

நொவெம்பர் 25, 2008 அன்று Dow Jones பங்குச் சந்தை சுட்டியெண் 5,700 புள்ளிகளை இழந்தது. ஒவ்வொரு புள்ளி இழப்பு 523 மில்லியன் டொலரை ஏப்பமிடுகிறது. எனவே மொத்த இழப்பின் பெறுமதி 1.7 திரில்லியன் டொலராகும்!

பங்குச் சந்தை வீழ்ச்சியால் ஓய்வு பெற்றவர்களின் 2 திரில்லியன் டொலர் சேமிப்பு காற்றோடு கலந்து விட்டது!
எல்லாம் சரி, இந்தப் பாரிய நிதியளிப்பை திறைச்சேரி யார் வீட்டுப் பணத்தில் இருந்து அள்ளிக் கொடுக்கிறது? யார் வீடும் அல்ல டொலர் தாள்களை அமெரிக்க மத்திய காப்பகம் (Federal Reserve Bank)  சும்மா அச்சடித்துத் தள்ளுகிறது. பருவாயில்லையே! நோய்க்கு மருந்து கையோடு இருக்கிறதே என்று எண்ணிவிடாதீர்கள். கொடுக்கும் மருந்துக்கு பக்கவிளைவு இருக்கின்றன. அதில் முக்கியமானது பணவீக்கம்!

ஏற்கனவே வரவு – செலவுத்திட்டத்தில் செம்தெம்பர் 30 வரை 455 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் சூத்திரதாரி புஷ் ஆவார். அவர் தொடக்கி வைத்த இராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போர்கள்தான் இந்தப் பற்றாக்குறைக்கு மூல காரணமாகும். இப்போது கடகம் கடகமாக வாரிக் கொடுக்கும் பணத்தையும் சேர்த்தால் இந்த ஆண்டு முடிவில் பற்றாக்குறை ஒரு திரிலியனை எட்டிவிடும்!

அமெரிக்கா எதிர்நோக்கும் வரலாறு காணாத பாரிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஒபாமா மெத்தப்படித்த, பட்டறிவு வாய்ந்த நான்கு நிதி விற்பன்னர்களை அரசின் முக்கிய பதவிகளுக்கு நியமித்துள்ளார். தேசிய பொருளாதார அவைக்கு Lawrence Hendy Summers அவர்களை நியமித்துள்ளார். திறைச்சேரி செயலாளராக Timothy Geithner நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் அறிவிக்கப்பட்ட போது பங்குச் சந்தையில் இறங்குமுகமாக இருந்த பங்குகளின் பெறுமதி மளமளவென்று ஏறுமுகத்தைக் காணத்தொடங்கியது! இன்னொருவர் Melody Barnes. இவர் வெள்ளைமாளிகையின் உள்வீட்டு கொள்கைவகுப்பு அவையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். Christiana Romer வெள்ளைமாளிகை பொருளாதார அறிவுரையார்ளகளின்; அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரும் இவரது கணவரும் கலிபோர்னியா (Berkeley)  பல்கலைக் கழகப் பொருளாதார பேராசிரியர் பணியில் இருந்தவர்கள்.

ஒபாமா இந்த நால்வரையும் ஒரு செய்தியாளர் மாநாட்டில் அறிமுகம் செய்து வைத்தார். ஒபாமாவின் தலைவலி இந்தப் பணி நியமனங்களால் தீர்ந்துவிடுமா? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். தலைவலி மாறுமா? அல்லது தலைவலி போய் திருகுவலி வருமா? என்பதை எல்லாம் அவரது தேன்நிலவு காலம் முடியுமட்டும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த விற்பன்னர்களின் நியமனங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. Dow Jones சுட்டி எண் இரண்டு நாளில் 891 புள்ளி உயர்த்தியுள்ளது. சென்ற வெள்ளிக்கிழமை மட்டும் 397 புள்ளிகள் உயர்ந்தது. 1987 க்குப் பிறகு இப்போதுதான் இத்தனை புள்ளிகள் இரண்டு நாளில் உயர்ந்துள்ளது.

ஆனால் தொடக்கத்தில் கூறியது போல ஆட்சிக்கட்டில் ஏற இருக்கும் ஒபாமா பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். வரவு – செலவுத் திட்ட அறிக்கையை பக்கம் பக்கமாக வரி வரியாகப் படித்து முடிக்கப் போவதாக பராக் ஒபாமா சூளுரைத்துள்ளார். 2003 – 2006 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் 2.5 மில்லியனுக்கு மேல் ஆண்டு வருமானமுள்ள இலட்சாதிபதி கமக்காரர்களுக்கு 49 மில்லியன் டொலர்கள் மானியமாகக் கொடுப்பனவு செய்தது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஏன் மானியம்? கமம் செய்யாமல் விட்டதற்கு! இது எப்படி சாத்தியமாயிற்று? எல்லாம் இந்த டுழடிடிலளைவள என்று சொல்பவர்களின் கைங்கரியந்தான்! இவர்களை வெள்ளை மாளிகையில் இருந்து ஓட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று ஒபாமா தேர்தல் பரப்புரையின் போது வெட்டொன்ற துண்டிரண்டாகச் சொல்லியிருந்தார்.

ஒபாமா கருப்பராக இருப்பதால் அவருக்கு ‘கண்டம்’ இருப்பதாகப் சிலர் எதிர்கூறல் சொல்கிறார்கள். யோன் கென்னடி அயிறிஷ் – கத்தோலிக்க மதத்தவர். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் உளவுத்துறையினர் (ஊஐயு) எனப் பரவலாக நம்பப்படுகிறது. அவர் மட்டுமல்ல அவரது உடன்பிறப்பு றொபேட் கென்னடி தொடக்க தேர்தலில் (pசiஅயசநைள) வென்ற அதே நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்க ஆட்சித்தலைவர் பதவியை வெள்ளை அங்கிலோ சக்சன் புரட்டஸ்தான் (றூவைந யுபெடழஇ ளுயஒழn Pசழவநளவயவெள) மதத்தவர்கள்தான் தெரிவு செய்கிறார்கள். இப்போது ஒபாமாவைத் தெரிவு செய்ததன் மூலம் அமெரிக்காவின் படிமத்தை – மக்களாட்சி, தோழமை மற்றும் சமத்துவம் (Democracy, fraternity and equality) – பட்டை தீட்டியுள்ளார்கள் என்று சொல்லலாம். ஏனைய நாடுகளுடன் அமெரிக்கா வைத்திருக்கும் உரசல் உறவில் ஒபாமா மாற்றங்களைக் கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ் மாமாவினால் அமெரிக்காவக்கு ஏற்பட்டுள்ள கேடுகள் கொஞசநஞ்சமல்ல. சென்ற கிழமை கூட அவரது கொடும்பாவியை பக்தாத் நகர சதுக்கத்தில் போட்டு ஷியா மதத் தலைவர் ஆழஙவயனய யட-ளுயனச இன் ஆதரவாளர்கள் எரித்தார்கள்.

புஷ் இராக்குக்கு எதிரான போரைத் தொடங்கி கடந்த 8 ஆண்டுகளில் ஒரு மில்லியன் இராக்கியர் கொல்லப்பட்டுள்ளார்கள். நான்கு மில்லியன் இராக்கியர்கள் இடம்பெயர்ந்து ஏதிலிகளாக அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். இராக் – ஆப்கனிஸ்;தான் போரில் அமெரிக்க படையினர் 4,710 பேர் (ஒக்தோபர்,2008 வரை) கொல்லப்பட்டுள்ளனர். இராக்கில் மட்டும் 4,207 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 32,799 படையினர் படுகாயப்பட்டுள்ளனர். 10,685 பேர் காயப்பட்டுள்ளனர்.

தேர்தலின் போது பராக் ஒபாமா இனம் பற்றியோ மதம் பற்றியோ பேசுவதைத் தவிர்த்துக் கொண்டார். இதனால் 18 – 19 அகவையுடையவர்களில் 66 விழுக்காடு வாக்காளர்களும் 30 – 44 அகவையுடையவர்களில் 52 விழுக்காடு வாக்காளர்களும் ஒபாமாவுக்கு வாக்களித்தார்கள். தீவிர கறுப்பு மதபோதகரிடம் இருந்து ஒபாமா விலகிக் கொண்டார். அந்த தேவாலயத்தில் இருந்து தனது உறுப்பிரிமையையும் விலக்கிக்கொண்டார்.

தேர்தல் பரப்புரையின் போது ஒபாமா ஒரு முஸ்லிம் என்ற குற்றச்சாட்டு குடியரசுக் கட்சியினரால் வீசப்பட்டது. அவரது நடுப் பெயர் குசேன் என்று இருப்பதே அதற்குக் காரணமாகும். இதனால் ஒபாமா மசூதிகளுக்குப் போவதை தவிர்த்துக் கொண்டார். இஸ்லாமிய உடை அணிந்த யாரும் தன்னை அண்டவிடாது பார்த்துக் கொண்டார். அதே நேரம் கிறித்தவ தேவாலயங்களுக்கும் யூத தேவாலாயங்களுக்கும் (ளலயெபழபரநள) தாராளமாக ஒபாமா சென்று வந்தார்.
இராக்கில் இருந்து அமெரிக்கப் படையை விலக்கிக் கொள்ளப் போவதாக சூளுரைக்கும் ஒபாமா ஆப்கானிஸ்தானில் தலிபான் – அல் கொய்தா இரண்டுக்கும் எதிரான போரை தீவிரப்படுத்தப் போவதாகச் சூளுரைத்துள்ளார். இரானைப் பொறுத்தளவில் அதன் அணுசக்தி உற்பத்தி திட்டத்தை அமெரிக்காவின் இராணுவ பலம் கொண்டு தடுத்து நிறுத்தப் போவதாக ஒபாமா கூறுகிறார். அது மட்டுமல்ல. பாகிஸ்தானைப் பொறுத்தளவில் வடமேற்கு மாகாணத்தில் அமெரிக்கா நடத்தும் விமானத் தாக்குதலை பாகிஸ்தானின் ஒப்புதல் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி விரிவுபடுத்தும் ஒருதலைபபட்ச உரிமை தனக்கு இருப்பதாக மார்தட்டுகிறார்.

நடந்து முடிந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மக்கெயினுக்கு 2,600 முதன்மை நிறைவேற்றுனர் நிதி அளித்திருந்தார்கள். ஆனால் ஒபாமாவுக்கு 6,000 பேர் நிதி அளித்திருந்தார்கள். ஒபாமாவுக்கு சட்டவாதிகள், வோஷிங்டன் இடைத் தரகர்கள் (lobbyists) தகவல்தொடர்பு நிறுவனங்கள், மின்எந்திர தொழிலகங்கள், அணுசக்தி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஒபாமாவுக்கு வாரி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இடைத் தரகர்கள் மட்டும் 39 மில்லியனைக் கொடுத்திருந்தார்கள். இவர்களிடம் கடமைப் பட்டுள்ள ஒபாமா பதிலுக்கு ஒன்றுமே செய்யமாட்டார் என்று சொல்ல முடியுமா?

இராசாங்க செயலாளராக ஹிலாரி கிளிங்டன் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது.;. ஒபாமா – கிளின்டன் இருவரும் தேர்தல் காலத்தில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தமிழீழச் சிக்கலில் தமிழர்களுக்கு சாதகமாக ஏதாவது செய்யக் கூடும் எனப் பலர் நினைக்கலாம். எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. காரணம் சரிந்து விழுந்து விட்ட அமெரிக்காவின் பொருளாதரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதிலேயே ஒபாமாவின் கவனம் இருக்கும். ஹிலாரி கிளின்டனைப் பொறுத்தளவில் இராக் – ஆப்பானிஸ்தான் – இரான் – பாலஸ்தீனியர்கள் சிக்கலைத் தீர்க்கவே நேரம் சரியாக இருக்கும்.

ஒபாமா பற்றிய பலத்த எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களிடம் மட்டுமல்ல உலகம் முழுதும் இருக்கிறது. ஒபாமாவிடம் மந்திரக் கோல் ஏதாவது இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (உலகத்தமிழர் – நொவெம்பர் 26, 2008)


வி.டுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா நடத்தும் நிழல்ப் (proxy)  போர்
நக்கீரன்

“போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாகப் படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்” என தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை தமிழ்மக்கள் வரவேற்பார்கள் என்பதில் அய்யமில்லை. இது தமிழீழச் சிக்கல்பற்றி தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கும் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு, ஒரே அணியில் நிற்பதைக் காட்டுகிறது.
ஆனால் இந்தத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு எவ்வளவு தூரம் கவனத்தில் எடுத்துக் கொண்டு அக்கறையோடு செயல்படும் என்பதில் பலருக்கு நியாயமான அய்யம் இருக்கிறது.
தமிழீழத்தில் வி.புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசினால் நடத்தப்படும் ஆக்கிரமிப்புப் போருக்கு இந்தியா ஆயுதம், பயிற்சி, தொழில்நுட்பம், கண்காணிப்பு (surveillance) புலனாய்வு (intelligence) போன்றவற்றை நல்கிவருகிறது.
இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வு அல்ல அரசியல் தீர்வே தேவை எனக் கடந்த மூன்றாண்டுகளாக கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தியா போரைத் தீவிரப்படுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்த நிலைப்பாடு ஒரு தன்முரண்பாடு (self-contradictory)  ஆகும். இதன் அடிப்படையிலேயே வி.புலிகளோடு பேசுவதாக இருந்தால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துத் தன்முன் மண்டியிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பயங்கரவாதத்துக்கு (வி.புலிகளுக்கு) எதிரான போர் முழு வீச்சில் தொடரும் என்றும் ஸ்ரீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே தலைநகர் தில்லியில் இருந்தபடியே திமிரோடு மார்தட்டுகிறார்.

இப்படி அவர் மார்தட்டுவதற்கு என்ன காரணம்? அதற்கான துணிச்சல் ஒரு சுண்டக்காய் நாடான ஸ்ரீலங்காவின் ஆட்சித்தலைவருக்கு எங்கிருந்து வந்தது?

ஸ்ரீலங்கா அரசு வி. புலிகளுக்கு எதிரான போரை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிறது. இந்தியாவும் அதையே சொல்கிறது. அதற்கும் அப்பால் வி.புலிகளுக்கு எதிரான போரை இந்தியாவே ஸ்ரீலங்கா ஊடாக நடத்தி வருகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி – ஸ்ரீலங்காவின் சிறப்புத் தூதுவர் பசில் இராசபக்சே இருவரும் தில்லியில் நடத்திய பேச்சு வார்த்தைகளை அடுத்து ஒக்தோபர் 26 ஆம் நாள் வெளியிட்ட கூட்டு செய்தி அறிக்கையில் காணப்படுகிறது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது –

“இருதரப்பினாலும் வடக்கு உட்பட இலங்கைத் தீவில் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகரவேண்டிய அவசியம் பற்றிப் பேசப்பட்டது. இருதரப்பும் பயங்கரவாதம் (வி.புலிகள்) முன்னரைவிட உறுதியோடு முறியடிக்க வேண்டும் என்பதில் இணக்கம் கண்டன.
(Both sides discussed the need to move towards a peacefully negotiated political settlement in the island including in the North. Both sides agreed that TERRORISM should be countered with resolve.)

தில்லியில் இந்தக் கூட்டறிக்கையை விட்ட பின்னரே பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வர் மு.கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரணாப் முகர்ஜி “நான் முதல்வர் கருணாநிதி முன்வைத்த கோரிக்கைகளை (இலங்கைத் தமிழர்களுக்கெதிராக நடைபெற்று வரும் போரை நிறுத்த இந்திய மத்திய அரசு இருவார காலத்துக்குள் முன்வரவேண்டும். இந்திய அரசு ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கும் ஆயுத உதவி அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தவும் தமிழ் மக்களை அழிக்கவுமே பயன்படுகிறது. எனவே இத்தகைய இராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்தி அங்கு இடம்பெறும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும்) நிராகரித்துவிட்டதாகச் (I have overuled Chief Minisxter Karunanidhi) சொன்னார். முன்னதாக இந்திய நாடாளுமன்றத்திலும் ஸ்ரீலங்காவிற்ககுக் கொடுக்கப்படும் இராணுவ ஆயுத தளபாட உதவி தொடரும் என்று அவர் பேசியிருந்தார்.

இந்திய – இலங்கை உடன்பாட்டின் கீழ் வட – கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. ஆனால் அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டு கிழக்கு மாகாணத்தில் துப்பாக்கி முனையில் மகிந்த இராசபக்சே தேர்தலை நடத்தினார். அதனை இந்தியா எதிர்க்கவில்லை. மாறாக பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் (1987) 13 ஆவது சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரித்தது. இப்போது அதே 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ்த்தான் இனச் சிக்கலுக்கு தீர்வு என மகிந்த இராசபக்சே கூறுகிறார். அதனை இந்தியா வரவேற்றுள்ளது.

தமிழர்களைக் கொல்லப் பயன்படும் ஆயுததளபாடங்கள் ஸ்ரீலங்காவிற்குக் கொடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அனைத்துக்கட்சி;களின் ஒருமனதான வேண்டுகோளை இந்திய மத்திய அரசு – தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் உயிர் வாழும் காங்கிரஸ் அரசு – நிராகரித்துள்ளது.

இவ்வாறு இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வு அல்ல அரசியல் தீர்வே தேவை என வற்புறுத்திச் சொல்லும் இந்தியா போரைத் தீவிரப்படுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கிவருகிறது. இது ஒரு தன்முரண்பாடு (self – contradictory) ஆகும்.

மகிந்த இராசபக்சே கடந்த மூன்று ஆண்டுகளாக இனச் சிக்கலுக்கு தீர்வுகாண அனைத்துக் கட்சி பிரதிநித்துவ குழு ஒன்றை உருவாக்கி ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி வருகிறார். இந்தக் குழுவுக்கு தமிழ்மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழர் தேசிய கூட்டமைப்பு அழைக்கப்படவில்லை. இந்தக் குழு ஒற்றையாட்சியின் கீழ்த்தான் தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும் என மகிந்த இராசபக்சே கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

2005 ஆம் ஆண்டு ஆட்சித்தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மகிந்த இராசபக்சேயின் கட்சியான அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி (United Peoples Freedom Alliance (UPFA) பச்சை இனவாதக் கொள்கைகளை முன்வைத்து வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற மகிந்த இராசபக்சே தனது வெற்றிக்கு சிங்கள – பவுத்த மக்;களின் வாக்குகளே காரணம் எனவும் தனது ஆட்சி அவர்களது விருப்பப்படியே செயல்படும் என அறிவித்தார்.

இனச் சிக்கலைப் பொறுத்தளவில் அப்படியொரு சிக்கல் இருப்பதை அவர் மறுத்தார். மாறாக நாட்டில் பயங்கரவாதம் இருப்பதாகவும் அதற்கு இராணுவ தீர்வு காணப்படும் என்றும் தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களுக்கு ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் (அதிகாரப்பரவல்) அரசியல் தீர்வு காணப்படும் என்றார். மேலும் தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தார்.
தொண்ணூறுகளில் சிங்கள அரசியல்வாதிகள் இனச் சிக்கலுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தீர்வு காணமுடியாது – இணைந்த வடகிழக்குக்கு மாகாணங்களுக்கு இணைப்பாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தார்கள். குறிப்பாக முன்னாள் ஆட்சித்தலைவர் சந்திரிகா குமாரதுங்கா அவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தார்.

ஆனால் மகிந்த இராசபக்சே பதவிக்கு வந்த பின்னர் “ஸ்ரீலங்கா சிங்கள – பவுத்த மக்களுக்கே சொந்தமான நாடு. சிங்களவர் பெரும்பான்மை இனம் (74 விழுக்காடு) என்பதால் அவர்களே நாட்டை ஆளும் உரிமையுடையவர்கள். சிறுபான்மையான தமிழர்களும் முஸ்லிம்களும் இடையில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது. கொடுப்பதை வாங்கிக்கொண்டு வாய்பொத்தி வாழ வேண்டும்” என்ற சிந்தனை பவுத்த தேரர்கள், சிங்கள அரசியல்வாதிகள், சிங்கள இராணுவ தளபதிகள், பெரும்பான்மை சிங்கள அறிவுப்பிழைப்பாளர்கள் போன்றோர் இடையே காணப்படுகிறது. இது மகாவம்ச சிந்தனையும் ஆகும்.
இனச்சிக்கல் பற்றிய மகிந்த இராசபக்சேயின் சிந்தனை நாட்டின் அரசியலை அய்ம்பது ஆண்டுகள் பின்தள்ளியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 4,000 க்கும் அதிகமான தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒன்பது தமிழ் ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

வன்னி வான்பரப்பில் ஸ்ரீலங்கா வான்படை 6,000 க்கும் அதிகமான தடவைகள் பறந்து 50,000 க்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளது. இதனால் வீடுவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனைப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்.

போரினால் மூன்று இலட்சம் தமிழ்மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழ் ஆண்கள், பெண்கள் அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஸ்ரீலஙிகாவின் சிறைச்சாலைகளில் விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டவர்கள்.

ஆறு இலட்சம் தமிழ்மக்கள் வாழும் யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறியுள்ளது. உயிருக்கு அஞ்சி 200 க்கும் அதிகமான தமிழர்கள் தாமாகவே சிறைச்சாலையில் அடைக்கலம் புகுந்துள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் 40,000 சிங்களப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயம் முடக்கப்பட்டுள்ளது. மாலை 6.00 மணி தொடக்கம் காலை 6.00 மணிவரை ஊரடங்கச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் –

1,100 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 771 பேர் காணாமல் போனவர்கள். 334 பேர் கடத்தப்பட்ட பின்னர் காணாமல் போனவர்கள். 543 கொலைகளில் கொலையாளிகள் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொலைசெய்யப்பட்ட 308 சடலங்கள் அடையாளம் காட்டப்படவில்லை.

இந்த புள்ளிவிபரங்களைத் தந்திருப்பவர் காணாமல் போனோர் பற்றி விசாரிக்க அரசினால் நியமிக்கப்பட்ட ஆட்சி ஆணையத்தின் Presidential Commission on Disappearances தலைவர் இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியாளர் மகாநம திலகரத்தின ஆவர். (Daily Mirror – November 13, 2008)

சிங்கள – பவுத்த பேரினவாதியான மகிந்த இராசபக்சே பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஒரு முழு அளவிலான தமிழினப் படுகொலையை அரங்கேற்றி வருகிறது. அதனைப் பன்னாட்டு சமூகம் கண்டும் காணதது போல் இருக்கிறது.

உண்மையில் வி.புலிகளுக்குப் பயங்கரவாத வருணம் பூசி அவர்களுக்கு எதிரான போரைத் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு இந்தியாவே நடத்துகிறது! அந்தப் போருக்கு ஸ்ரீலங்கா அரசை இந்தியா ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது!
வேறுவிதமாகச் சொன்னால் இந்தியா வி. புலிகளுக்கு (பயங்கரவாதத்துக்கு) எதிராக ஒரு நிழல்ப் போரை (proxy war) நடத்துகிறது. இதன் காரணமாகவே போர் நிறுத்தம் செய்யுமாறு ஸ்ரீலங்காவை வற்புறுத்த மறுக்கிறது. ஆயுத தளபாடங்கள் வழங்குவதை நிறுத்த மறுக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் “போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாகப் படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்” என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒக்தோபர் 14 இல் நிறைவேற்றப்பட்ட அனைத்துக்கட்சித் தீர்மானங்களுக்கு ஏற்பட்ட கதியே இப்போது நொவெம்பர் 12 ஆம் நாள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் ஏற்படப் போகிறது என எதிர்பார்க்கலாம்.

இந்தக் கசப்பான உண்மையை தமிழக அரசியல் தலைவர்களும் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். (உலகத்தமிழர் – நொவெம்பர் 14, 2008)


கறுப்பர் வெள்ளை மாளிககையில் குடிபுகுவது மட்டும் மாற்றலாகாது!
நக்கீரன்

“வெள்ளைமாளிகை ஒபாமாவின் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கிறதா?” என்ற வினாவை நான் ஆகஸ்ட் 29 ஆம் திகதி எழுதிய கட்டுரையில் எழுப்பியிருந்தேன். அந்த வினாவுக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. கறுப்பரான பராக் ஒபாமா அடுத்த ஆண்டு சனவரி 20 ஆம் நாள் வெள்ளைமாளிகையில் குடிபுக இருக்கிறார்.

வெற்றிவாகை சூடிய பராக் ஒபாமா “நீண்டகாலமாக வர இருந்தது, ஆனால் இன்று இரவு ………. அமெரிக்காவில் மாற்றம் வந்துள்ளது (It’s been a long time coming, but tonight… change has come to America)  எனக் கூறினார்.

அமெரிக்க வாக்காளர்களது தீர்ப்பு இரண்டு முக்கிய செய்திகளை வெளிக்காட்டின. ஒன்று தற்போதைய அரசியல் பொருளாதார கொள்கைகள் மாற வேண்டும் என வாக்காளர்கள் விரும்பினார்கள். மற்றது கடந்த கால நிறவேற்றுமை பாரம்பரியத்துக்கு எதிராகக் கதவைச் சாத்தினார்கள். (He says the American people have made two fundamental statements about themselves: that they are profoundly unhappy with the status quo, and that they are slamming the door on the country’s racial past.)
47 அகவையுடைய பராக் ஒபாமா கென்யா நாட்டைச் சேர்ந்த கறுப்பர் இன தந்தைக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் பிறந்தவர். சிறு வயதில் கென்யா, இந்தோனிசியா நாடுகளில் படித்தவர். தாய் வழிப்பாட்டியால் வளர்க்கப் பெற்றவர். சட்டவாதியான இவர் புகழ்பெற்ற ஹார்வாட் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்துப் பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் சிறிதுகாலம் பேராசிரியாராகவும இருந்தவர். இல்லினாய்ஸ் மாநிலத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமெரிக்க மேலவைக்குத் தெரிவ செய்யப்பட்டவர்.

மொத்தமுள்ள 538 தேர்தல் அவை (Electoral College)   உறுப்பினர்களில் (100 மேலவை மற்றும் 438 கீழவை உறுப்பினர்களின் கூட்டுத்தொகை) ஒபாமா 349 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர் யோன் மக்கெய்னுக்கு 162 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. பெரும்பான்மை 270 உறுப்பினர்களின் வாக்குகளே போதுமானதாக இருந்தாலும் அதற்கும் மேலாக 79 வாக்குகளைப் பெற்று ஒபாமா மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்.

நாடு தழுவிய வாக்கெடுப்பில் பராக் ஒபாமா 41,530,707 வாக்குகள் (52.4 விழுக்காடு) பெற்றுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர யோன் மக்கெய்ன் 38,935,597 (46.3 விழுக்காடு) வாக்குகள் பெற்றுள்ளார். 1960 க்குப் பிறகு இந்தத் தேர்தலில் தான் மிக அதியுச்ச வாக்குகள் (60.1 விழுக்காடு) பதிவாகியுள்ளது.

பராக் ஓபாமா தேர்தலுக்கு 650 மில்லியன் டொலர்களைச் செலவழித்துள்ளார். தொலைக்காட்சியில் தோன்றி 30 மணித்துளி ஒபாமா பேசினார். அதற்குச் செலவான பணம் 30 மில்லியன் டொலர்கள் ஆகும். யோன் மக்கெயின் 85 மில்லியன் டொலரை மானியமாக அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

பராக் ஒபாமா பெரும்பாலான மாகாணங்களில் வென்றிருக்கிறார். அது மட்டுமல்ல அவரது மக்களாட்சிக் கட்சி கீழவையில் (காங்கிரஸ்) மேலதிகமாக 19 இருக்கைகளை வென்று மொத்தம் 254 இடங்களைப் பிடித்திருக்கிறது. குடியரசுக் கட்சி 173 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மேலவையில் 5 அதிகப்படியான இருக்கைகளை (New Hampshire, New Mexico, North Carolina, Virginia, Colorado)  மேலதிகமாக வென்று மொத்தம் 57 இருக்கைளை வென்றிருக்கிறது. இன்னும் Alaska, Georgia, Minnesota  தேர்தல் முடிவுகள் இதை எழுதும் போது வர இருக்கின்றன. மேலவையில் 60 இருக்கைகளைக் கைப்பற்றினால் குடியரசுக்கட்சி ஓயாது பேசி (filibuster)  நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கலாம். இரு அவைகளிலும் மக்களாட்சிக் கட்சி தனது பெரும்பான்மை பலத்தை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

இம்முறை கருத்துக் கணிப்புத் தொழிலகங்கள் எதிர்கூறல் கூறியவாறே முடிவுகள் அமைந்துள்ளன. சராசரி கருத்துக் கணிப்பு பராக் ஒபாமா 7.6 விழுக்காடு முன்னுக்கு இருப்பதாகத் தெரிவித்தன. முடிவில் அவர் 6.1 விழுக்காட்டால் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் பராக் ஒபாமா வரலாறு காணாத பல சாதனைகளப் படைத்துள்ளார். அமெரிக்க ஆட்சித்தலைவராகும் முதல் கறுப்பு இனத் தலைவர் என்ற பெருமையைத் தட்டிக் கொண்டுள்ளார். உண்மையில் வெள்ளை மாளிகையில் முன்னரும் கறுப்பர்கள் குடிபுகுந்திருக்கிறார்கள். ஆட்சித் தலைவர்களாக அல்ல. அமெரிக்காவின் முதல் ஆட்சித் தலைவர் யோர்ஜ் வோஷிங்டன் காலத்தில் சில கறுப்பு அடிமைகளை தனது வேலைக்காரர்களாக அவர் வெள்ளை மாளிகையில் குடி வைத்திருந்தார்!

மேலவை உறுப்பினராக இரண்டு ஆண்டுகள் மட்டும் பதவி வகித்த ஒபாமா, கிலாரி கிளின்டன் போன்ற செல்வாக்குப் படைத்த அரசியல்வாதியை கட்சித் தேர்தலில் தோற்கடித்துப் பின்னர் நடந்த ஆட்சித்தலைவர் தேர்தலிலும் வென்றுள்ளார்.

ஒபாமா தனது ஏற்புரையில் “அமெரிக்காவில் மாற்றம் வந்திருக்கிறது. அதற்காக அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாற்றம் நீண்ட போராட்டத்திற்குப் பின் வந்திருக்கிறது. தேர்தலில் நாம் மேற்கொண்ட கடும் உழைப்பு, முயற்சிகள் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

தேர்தல் பரப்புரையின்போது எதிர் அணி வேட்பாளர் யோன் மெக்கயினும் மிகவும் பாடுபட்டார். நாட்டின் மீது அவர் கொண்டிருந்த அளவு கடந்த அன்பினால் கடுமையாக உழைத்தார். வியட்நாம் போரில் அமெரிக்காவுக்காக அவர் செய்த ஈகையை நாம் மறந்து விடக்கூடாது. அவர் துணிச்சலுடனும், சுயநலமின்றியும் தனது சேவையை நாட்டுக்காக ஆற்றியிருக்கிறார். அவரது ஈகையை நாம் போற்றவேண்டும்.

என்னை இந்த அளவிற்கு வளர்த்து ஆளாக்கிய எனது பாட்டி உயிருடன் இல்லை என்பதை அறிவேன். எனினும், அவரும் எனது குடும்பத்தினருடன் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றே எண்ணுகிறேன். அவரை இன்று இழந்து நிற்கிறேன். அவருக்கு நான் பட்டிருக்கும் கடன்கள் அளவிட முடியாதவை.

தற்போது, நமக்கு எதிராக உள்ள பாதை மிகவும் நீளமானது. நாம் ஏறவேண்டிய உயரமோ மிகவும் செங்குத்தானது. அந்த உயரத்தை நம்மால் ஒரு ஆண்டிலோ அல்லது இன்னும் சில காலங்களிலேயோ அடைந்து விட முடியாது. ஆனாலும், அமெரிக்காவும், நானும் அந்த இடத்தை அடைந்து விடுவோம் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாம் நிச்சயம் அந்த இடத்தை அடைவோம் என்று உங்களிடம் உறுதி கூறிக்கொள்கிறேன்.

நமக்கு முன்னதாக உள்ள பொருளாதார நெருக்கடிகளும், இழப்புகளும், நாம் அனைவரும் ஒரே மக்களாக எழுவோம் அல்லது வீழ்வோம் என்பதையே உணர்த்தியிருக்கிறது. தற்போது, நமக்கு தேச பக்தி மீதான சேவையில் புதிய உத்வேகமும், பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. அதை நம் ஒருவருக்கானது என்று மட்டுமே கருதாமல் அனைவருக்கும் பொதுவானது என்று நினைத்து அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைப்போம்.
உலக மக்கள் கண்ணீரையும் ஏழ்மையையும் அமெரிக்கா தோற்கடிக்கும். அமைதியையும் பாதுகாப்பையும் விரும்புவோருக்கு என்றும் நாம் ஆதரவாக இருப்போம் ” எனச் சூளுரைத்தார்.

பராக் ஓபாமாவின் வெற்றி அமெரிக்காவில் மட்டுமல்ல அவரது தந்தையார் பிறந்த நாடான கென்யாவிலும் கொண்டாடப்பட்டது. கென்ய அரசு ஒருநாள் விடுமுறை விட்டுள்ளது. யப்பானில் ஒபாமா என்ற நகரில் யப்பானியர்கள் கூடி ஆடிப் பாடிக் கொண்டாடினார்கள்.

தங்கள் வாழ்நாளில் கனவிலும் நடக்காது என்றிருந்த அதிசயம் தங்கள் கண்முன்னே; நிகழந்தபோது கறுப்பு இனமக்கள் பல இடங்களில் கைகளில் அமெரிக்கக் கொடியை ஏந்தியபடி மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தபடி நின்றார்கள். குறிப்பாக மக்களாட்சிக் கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 2 தடவை வாய்ப்பு கிடைக்காத கறுப்பரும் குடிமக்கள் (civil) உரிமைகள் அமைப்பின் தலைவருமான ஜெஸ்சி யக்சன்; கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியதைக் கண்டோம்.

ஆப்ரிக்க – அமெரிக்கர் இனத்தைச் சேர்ந்த ஒபாமாவை அமெரிக்கர்களில் பெரும்பான்மை வெள்ளை இனத்தவர் (55 விழுக்காடு) ஆதரிக்கவில்லை. இவர்கள் பழமையைப் பேணும் தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். எப்போதும் குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பவர்கள். மொத்த வாக்காளர்களில் வெள்ளை நிறத்தவர் 75 விழுக்காடு ஆவர். ஒபாமாவுக்கு ஆதரவாக கறுப்பு இனத்தவர் (95 விழுக்காடு) ஹிஸ்பானியர் (68 விழுக்காடு) ஆசியர் (75 விழுக்காடு) இளையோர் (65 விழுக்காடு) வாக்களித்ததன் காரணமாகவே அவர் வெற்றி பெற்றார்.

குடியரசுக் கட்சி வேட்பாளர் யோன் மக்கெயின் படு தோல்விக்கு யோர்ஜ் புஷ்ஷின் மோசமான கொள்கையே காரணமாகக் கருதப்படுகிறது. புஷ்ஷின் தோல்வியுற்ற கொள்கைகள் பற்றித் தனது தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து பராக் ஒபாமா நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். பெரிய வணிக குழுமங்களுக்கு 250 பில்லியன் பெறுமதியான வரிவெட்டை நடைமுறைப்படுத்தி பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் மக்கெயினின் பொருளாதார கோட்பாட்டை ஒபாமா கடுமையாக விமர்ச்சித்தார். மக்கெயினின் அகவை (72) அவருக்கு சாதகமாக இருக்கவில்லை. மாறாக ஒபாமாவின் அகவை (47) அவருக்கு சாதகமாக இருந்தது. குறிப்பாக பொய்க் காரணங்களைக் கற்பித்து இராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட படையெடுப்பும் ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கு எதிரான போரும் மக்கெயினுக்கு எதிராக இருந்தன.

இராக்கில் மாதம் ஒன்றுக்கு 10 பில்லியன் டொலர்களை புஷ் அரசு செலவிடுவதாக ஒபாமா குற்றம் சாட்டினார். இராக்கில் இதுவரை 600 பில்லியன் டொலர்களை அமெரிக்கா கரியாக்கியுள்ளது. ஆனால் கடந்த மாதம் அமெரிக்கா எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடியே மக்கெயினின் தோல்விக்கு முக்கிய காரணியாக விளங்கியது. 60 விழுக்காடு வாக்காளர்கள் பொருளாதாரம் முக்கிய சிக்கல் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவித்திருந்தனர். மக்கெயின் துணை ஆட்சியாளர் பதவிக்கு நிறுத்திய அலஸ்கா மாநில ஆளுநர் Sarah Palin  அவருக்குப் பலமாக இல்லாமல் பாரமாகவே கடைசிவரை இருந்துவிட்டார். மொத்தத்தில் யோர்ஜ் புஷ் செய்த பாபத்துக்கு உடந்தையாக இருந்த மக்கெயின் வாக்காளர்களால் தண்டிக்கப்பட்டார்.

பராக் ஒபாமா உழைக்கும் மக்களையும் மத்தியதர மக்களையும் இலக்கு வைத்து பரப்புரை செய்தார். ஆண்டொன்றுக்க 250,000 டொலருக்கு அதிகமாக உழைப்பவர்களது வருமான வரியைக் கூட்டப் போவதாகச் சொன்னார். எல்லோருக்கும் உடல்நல காப்புறுதி வழங்கப்படும் என்றும் சொன்னார். இவற்றை வைத்து ஒபாமா ஒரு சமவுடமைவாதி (Socialist)  அவர் பதவிக்கு வந்தால் வரிகளைக் கூட்டுவார் என்ற பரப்புரை வெற்றியளிக்கவில்லை. ஒபாமா ஒரு முஸ்லிம், அவர் ஒரு பயங்கரவாதி என்று கூடச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவை வாக்காளர் மத்தியில் எடுபடவில்லை.
இப்போது வரும் செய்திகள் பராக் ஒபாமா தனது அமைச்சரவையை அமைக்கும் பணியில் மும்மரமாக இறங்கியுள்ளார் எனத் தெரிவிக்கின்றன. இரண்டொரு குடியரசுக கட்சிக்காரர்களை அவர் தனது அமைச்சரவையில் சேர்க்கலாம் எனத் தெரிகிறது.

அமெரிக்க உளவுத்துறை (CIA)  மிக இரகசியமான நாளாந்த புலனாய்வுத் தகவல்களை பராக் ஒபாமாவுக்கு கொடுக்கத் தொடங்கியுள்ளது.

எல்லாம் சரி பராக் ஒபாமா ஆட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் இதனால் தமிழீழத் தமிழர்களுக்கு ஏதாவது அனுகூலம் கிடைக்குமா?

அமெரிக்கா ஒரு வல்லரசு. 195 நாடுகளில் 130 நாடுகளில் அமெரிக்;காவின் படைகள் நிலைநிறுத்தப்பட்டுளன. பாதுகாப்புக்கு ஆண்டொன்றுக்கு 500 பில்லியன் (ஒரு பில்லியன் 100 கோடி) டொலர்களைச் செலவழிக்கிறது. பொதுக் கடன் 9.2 திரில்லியனை எட்டியுள்ளது. வரவு – செலவுத்திட்ட பற்றாக்குறை 1 திரில்லியன்.

ஆட்சிமாறினாலும் வெளியுறவுக் கொள்கை மாறுவதில்லை என்கிறார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேட் பிளேக். அவர் சொல்வது உண்மைதான். அமெரிக்க கடற்படைத்தளபதி வி.புலிகளுக்கு எதிரான போரில் ஸ்ரீலங்கா இராணுவம் பெற்று வரும் “வெற்றி” களைப் பாராட்டிப் பேசியுள்ளார்!

அமெரிக்கா அடிப்படையில் ஒரு முதலாளித்துவ – ஏகாதிபத்திய நாடு. ஆக மிஞ்சினால் பராக் ஒபாமா மனிதாபிமான முதலாளித்துவ – ஏகாதிபத்திய முகத்தோடு (Imperialism with human face ) காட்சிதரலாம் என எண்ணுபவர்கள் இருக்கிறார்கள்.

பாராக் ஒபாமா ஸ்ரீலங்காவின் கொடிய உள்றாட்டுப் போரைப் பற்றிக் குறிப்பிடும் போது “21 ஆம் நூற்றாண்டின் சிக்கல் என்னவென்றால் நாங்கள் – மற்றவர்கள் என்ற சிக்கலாகும். இதற்குக் காரணம் “எங்களைப் போல் இல்லாதவர்களை” ஏற்றுக்கொள்ளாத மனப்பான்மையாகும். ஸ்ரீலங்கா அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. “அங்கு இருப்பவர்கள் பார்க்க ஒரேமாதிரி இருக்கிறார்கள். இந்த “மற்றவர்கள்” பற்றிய சிக்கல் ஸ்ரீலங்கா, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் இடம்பெறும் இனப்பாகுபாடுபற்றிய சிக்கல் இருக்கிறது.

ஒபாமா புஷ்ஷின் “பயங்கரவாதத்துக்கு எதிரான போரை” கண்டிக்கிறார். அந்தப் போர்தான் குடிமக்கள் உரிமைகளை ஒடுக்கக் காரணமாகும் என்கிறார். “நான் ஆட்சித்தலைவராக வந்தால் இந்த ஆட்சியால் தன்நலத்துக்குப் பயன்படுத்தப்படும் பயத்தை மாற்றுவேன். பயஙகரவாதிகள், குடிவரவாளர்கள் மற்றும் ஒருவரை ஒருவர் பற்றிப் பயப்படுமாறு எங்களுக்குச் சொல்லப்படுகிறது. இவ்வாறான வழிமுறைகளால் தான் எமது சுதந்திரம் நசுக்கப்படுகிறது. எமது விழுமியங்கள் திரிக்கப்படுகிறது.

பராக் ஒபாமா வின் கூற்றுக்கள் அவரது ஆட்சியில் கொள்கை மாற்றங்கள் ஏற்படலாம் என்பதைக் கட்டியம் கூறுகிறது. ஆனால் அவர் சொன்னதை செய்வாரா அல்லது இவை வழக்கமாக அரசியல்வாதிகள் அள்ளி வீசும் வார்த்தை சாலங்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கறுப்பு ஆட்சித்தலைவர் பராக் ஒபாமாவைச் சுற்றி இருப்பவர்கள் வெள்ளை நிறத்தவர் என்பதை மறந்து விடக்கூடாது. கறுப்பர் வெள்ளை மாளிககையில் குடிபுகுவது மட்டும் மாற்றலாகாது! (உலகத்தமிழர் – 07-11-2008)


தமிழக முதல்வர் கருணாநிதியால் தில்லியைப் பணிய வைக்க முடியுமா?
நக்கீரன்

தூங்கிக் கிடந்த தமிழகம் இப்போது பொங்கி எழுந்துள்ளது. ஏன் கொதி நிலை அடைந்துள்ளது என்று கூடச் சொல்லலாம்.

அரசியல்வாதிகள், திரையுலகக் கலைஞர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள், வணிகர்கள் என அனைவரும் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டப் பேரணி, கதவடைப்பு எனத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

மேலவை உறுப்பினர் கனிமொழி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை முதல்வர் கருணாநிதியிடம் கையளித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்தோபர் 21 இல் சென்னையில் மாபெரும் மனிதசங்கிலிப் போராட்டம் நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

,ந்தத் திருப்பங்கள் தமிழகத்தை தமிழீழ போராட்;டம் சார்பாகத் தள்ளிவிட்டுள்ளது. இதனை இந்திய மத்திய அரசு கொள்கை வகுப்பாளர்கள் எதிர்பார்த்திருப்பார்கள் எனக் கூற முடியாது.

வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவ முகாம் மீது கடந்த செப்தெம்பர் மாதம் விடுதலைப் புலிகள் நடத்திய வான், தரைவழி தாக்குதலில் அங்கிருந்த இந்திய இராடார் சேதப்படுத்தப்பட்டது. அதனை இயக்கிய இரண்டு இராணுவ பொறியியலாளர்கள் காயப்பட்டனர். அப்போதுதான் இந்தியா ஸ்ரீலங்காவிற்கு ஆயுதம் மட்டுமல்ல ஆட்களையும் கொடுத்து உதவிவருகிறது என்ற குட்டு வெளியுலகுக்குத் தெரியவந்தது. கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு உதவியாக மொத்தம் 265 இராணுவ தொழில்நுட்பவியலாளர்கள் இருப்பதாகச் சொன்னது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாகப் போயிற்று.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஒக்தோபர் 2 ஆம் நாள் ஒரு உண்ணாநோன்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது. தமிழீழத்தில் நடைபெறும் மனிதவுரிமை மீறல்கள், இடம்பெயர்ந்த மக்களின் அவலங்கள் ஆகியவற்றை மட்டும் அல்லாமல் இந்தியாவின் இரட்டை வேடத்தையும் உண்ணாநோன்புப் போராட்டம் கலைக்க உதவியது. தமிழ் உணர்வு கரைபுரண்டு ஓடியது.

எங்கே தானும் தனது கட்சியும் தனிமைப்படுத்தப் பட்டுவிடலாம் என்று அஞ்சிய முதலவர் கருணாநிதி ஒக்தோபர் 14 ஆம் நாள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் “இலங்கையில் தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் மத்திய அரச இலங்கை அரசுக்கு பக்கத்து நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் வழங்கும் ஆயுத உதவிகள், இனப் படுகொலையைத் தீவிரப்படுத்தி, தமிழர்களை அழிக்கவே இலங்கை அரசால் பயன்படுத்தப்படுவதால் அவற்றை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். அங்கு இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இது தொடர்பாக இரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்றால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பதவியை விட்டு விலகுவது” என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக, மதிமு, பாரதிய ஜனதா மற்றும் தேமுதிக கலந்து கொள்ளவில்லை. இது அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஒரு பின்னடைவாகும். அதைக் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி “என்னுடைய பிரச்சினையிலே அவர்களுக்குள்ள அதிருப்தியின் காரணமாகத் தான் அவர்கள் வரவில்லையே தவிர, இலங்கையிலே தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் அவர்களை சிங்கள வெறியர்களுக்கு களப்பலியாக ஆக்கக் கூடாது, அவர்கள் சிங்கள இராணுவத்திற்கு பலியாகி மாண்டு மடியக் கூடாது என்பதில் எல்லோரையும் போலவே ஒத்த கருத்து உடையவர்கள் தான் என்றாலுங்கூட, இன்று வராத காரணத்தால் அவர்களுக்கு உடன்பாடு இ,ல்லை என்று சிங்கள வெறியர்கள் நினைத்து விடக் கூடாது. இந்தக் கூட்டத்தின் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்ட அந்த மறுப்புக் கருத்துகள் அவர்கள் காதுகளிலே விழுமேயானால் – இது சிங்கள வெறியர்களுக்கு ஒரு ஊக்கமாக, ஆக்கமாக அமைந்து விடக் கூடாது. அமைய விடவும் மாட்டோம்” என்றார்.
முதல்வர் அஞ்சியது போலவே சிங்கள ஆட்சியாளர் தமிழக கட்சிக்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமையின்மையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்துகிறார்கள்.

எதிர்பார்த்தது போலவே தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிரான குரல் ஸ்ரீலங்கா ஆளும் வட்டாரத்தில் இருந்து கிளம்பியுள்ளது.

ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே கொழும்பில் உள்ள இ,ந்திய தூதுவர் பிரசாத்தை அலரிமாளிகைக்கு அழைத்து இரண்டு மணி நேரம் பேசியதாகச் செய்திகள் தெரிவித்தன. ஒரு கட்டத்தில் உரத்த குரலில் மகிந்த இராசபக்சே பேசியதாகத் தெரிகிறது.

“இலங்கையில் தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல. 2006 இல் கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதிகளைத் தோற்கடித்து அங்கு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், வடக்கிலும் தமிழ் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தீவிரவாதிகள் விரட்டி அடிக்கப்படுவர்” என்று இலங்கை வெளியுறவுச் செயலர் பாலித கோகனா கடந்த புதன்கிழமை தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன என்னும் பலபடி மேலே சென்று “தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கமைவாக இங்கு முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்குத் தாம் தயாராகவில்லை” எனத் தெரிவித்தார். இ,ந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையீடு செய்யும் எனத் தாம் கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை, முக்கியமாக இந்தியாவில் அரசியல் அடிப்படையில் அந்நாட்டு அரசுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தமாகும்;. அரசின் உறுதித்தன்மை தொடர்பாக ஏற்பட்டுள்ள அழுத்தமாகும். எனினும் தமிழ்நாடும் இரண்டாகப் பிரிந்துள்ளது, தமிழ்நாட்டில் ஜெயலலிதா அணியும், வைகோ அணியும் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

“இதேவேளை, கருணாநிதியும் வேறு சில தரப்பினரும் இந்திய அரசாங்கத்திற்கு ஏதோ வகையான அழுத்தத்தைக் கொடுத்துள்ளனர். எனினும், இந்திய அரசாங்கமும், எமது அரசாங்கமும் எப்போதுமே மிகுந்த புரிந்துணர்வின் அடிப்படையிலேயே செயற்பட்டு வந்துள்ளன. எமது சனாதிபதி பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது, அரசியல் தீர்வு காண்பது என்ற இரு விடயங்கள் தொடர்பாக மிகுந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றார். இந்தியாவும் இது விடயத்தில் விளங்கிக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் எமது நாட்டு உள்விவகாரத்தில் தலையீடு செய்யும் என நான் கருதவில்லை. அந்த வகையில் நாம் மிகுந்த புரிந்துணர்வோடு இந்தியாவில் அரசியல் உறுதியற்ற நிலை ஏற்படாத வகையில் செயற்படும் அதேவேளை, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அதே விதத்திலேயே முன்னெடுப்பதற்காக இந்தியாவின் ஆதரவை வேண்டி நிற்பதுடன், இந்தியாவில் இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது விடயத்தில் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கும் அரசு தயாராகவுள்ளது.

“அந்த வகையில் இது இரண்டு அரசுகளுக்கு இடையிலுள்ள விடயமேயன்றி தமிழ்நாட்டிலுள்ள பிரச்சினைக்கு மத்தியில் தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு அமைவாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நாம் தயாராகவில்லை. எனினும், விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழே வைத்துப் பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக இந்த அரசாங்கம் அதன் உதவிகள் அனைத்தையும் இந்திய அரசினால் வழங்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கத்தை எந்த விதத்திலும் ஒரு இக்கட்டு நிலைக்கு உட்படுத்த நாம் தயாராகவில்லை” என்றார்.

அமைச்சரின் பேச்சு எதனைக் காட்டுகிறது? இந்தியாவின் நிலைப்பாடு சிங்கள சிறிலங்கா சார்பாகவும் தமிழீழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகவும் இருந்து வந்துள்ளதைக் காட்டுகிறது. இந்தியா இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் இராணுவத் தீர்வு தீர்வாகாது என்று மேலுக்குச் சொன்னாலும் உள்ளுர சிறிலங்காவின் இராணுவத் தீர்வுக்கு பச்சைக்கொடி காட்டி வருகிறது. ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளித்து வருகிறது. குறைந்த வட்டியில் கடன் உதவி அளிக்கிறது. சம்பூரில் (கிழக்கு மாகாணம்) அனல் உலை நிறுவுகிறது. இவை காரணமாகவே ஸ்ரீலங்கா ஒருதலைப்பட்சமாக சமாதான உடன்பாட்டை கிழித்தெறிந்த போது இந்தியா மவுனம் காத்தது. இந்திய – இலங்கை உடன்பாட்டை மீறி வட – கிழக்கு இணைப்பு துண்டிக்கப்பட்ட போது இந்தியா மவுனம் சாதித்தது. ஸ்ரீலங்காவின் மிகையொலி போர் விமானங்கள் குண்டு வீசிப் பொதுமக்களைக் கொல்லும்போது இந்தியா வாய்மூடிக் கிடந்தது.

தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புதன்கிழமை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங் “இலங்கையில் தற்போது நிலவும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துள்ளோம்;. அது எமக்குக் கவலை தருகிறது. இதில் இராணுவத்தின் மூலம் தீர்வு காண முடியாது பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியும் என்பதை இலங்கை அரசிடம் நாம் கேட்டு கொள்ள முடியும். இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பு அளித்து பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும். அதே சமயம் தமிழ் சிறுபான்மை மக்களின் மனித உரிமையும் மதிக்கப்பட வேண்டும்; மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும். இந்தக் கருத்தை நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மூலமாக இலங்கைத் துணைத் தூதர் வழியாக இலங்கை அரசுக்கு கூறப்பட்டது. இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதையும் இலங்கையிடம் தெரிவித்துள்ளோம்” எனக் கூறினார்.

அதே சமயம் இலங்கையில் நடக்கும் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில் வரையறைகள் உள்ளன என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

மத்தியில் இருப்பது இந்திரா காங்கிரஸ் ஆட்சியல்ல. அது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி.. அதில் திமுக, பாமக இருக்கின்றன. இருந்தும் மத்திய ஆட்சி காங்கிரஸ் ஆட்சி என்றே அழைக்கப்படுகிறது. அந்தக் கட்சியின் சார்பில் பேசவல்லவர்கள் அனைத்துக் கட்சி தீர்மானம் பற்றிக் தெரிவித்திருக்கும் கருத்து ஊன்றிக் கவனிக்கத்தக்கது.

“இலங்கைப் பிரச்னை அதன் உள்நாட்டு விவகாரம். ,றையாண்மை கொண்ட அடுத்த நாடுகள் குறித்து கோரிக்கை வைப்பவர்கள், இந்தியாவின் ,றையாண்மை என்பது நமது எல்லையுடன் முடிவடைகிறது என்பதை அறிய வேண்டும். அடுத்த நாட்டு உள் விவகாரத்தில் இந்திய அரசு தலையிட முடியாது. அடுத்த நாட்டின் உறவுகள் மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம். அடுத்த நாடுகளில் நடக்கும் வன்முறைகளைக் கண்டனம் செய்யும் போது, மத்திய அரசு இதைச் செய்யவேண்டும் என்று (தமிழ்நாடு அரசு) கூற முடியாது என்று கருதுகிறேன்” எனக் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறினார்.

“இலங்கைப் பிரச்னையால் மத்திய அரசுக்கு எவ்வித சிக்கலும் இல்லை’ என காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான மணீஸ் திவாரி கூறினார். இதன் பொருள் சோனியா முதல்வர் கருணாநிதிக்குப் புறங்கை காட்டுகிறார் என்பதுதான்.

,தற்கிடையில் “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறேன் அவர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கையில் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும்” என்று அறிக்கைவிட்ட ஜெயலலிதா இப்போது இராகத்தை மாற்றிப்பாடுகிறார்.

“இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று கோருவதன் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருக்கிறார்” என ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையில் இப்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. ,இலங்கையில் இப்போது நடப்பது விடுதலைப் புலிகள் எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இதில் அங்கு வாழும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவிடாமல் அவர்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன. இது உடனே நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துச் செல்ல விடுதலைப் புலிகள் தடை செய்யக் கூடாது என்று விடுதலைப்புலி நண்பர்கள் மூலம் கருணாநிதி வலியுறுத்தி இருக்கலாம்.”

ஜெயலலிதாவின் இ,ந்தக் கருத்து துக்ளக் சோ, இந்து ராம், இந்து மாலினி பார்த்தசாரதி, அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமி போன்றோரது கருத்தாகும்.

இவர்கள் தாங்கள் சொல்வதும் எழுதுவதும் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தக் கருத்து என்ற தோற்றத்தைக் கொடுப்பவர்கள். இவர்கள் கையில் தூக்கும் முதல் ஆயுதம் இராசீவ் கொலை ஆகும். மற்றது தமிழீழம் தனிநாடானால் தமிழ்நாட்டிலும் பிரிவினை கேட்போர் பலம்பெற்று தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரித்து விடுவர். பின்னர் தமிழகத்தையும் தமிழீழத்தையும் சேர்தது ஒரு அகண்ட தமிழகத்தை பிரபாகரன் உருவாக்கிவிடுவார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத இந்து ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி இந்து’ ஏட்டில் (ஒக்தோபர் 14) எழுதிய கட்டுரையில் இந்த இரண்டு காரணங்களைச் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் – தமிழ்நாட்டில், தமிழீழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும் இப்படித் தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் 51 விழுக்காட்டினர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கருத்துக கணிப்புத் தெரிவித்துள்ளதை மாலினி பார்த்தசாரதி கண்டுகொள்ளவில்லை.

வி.புலிகளுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்று பேசி இந்தப் பார்ப்பனக் கூட்டம் இப்போது வி.புலிகளுக்கு ஆதரவாக வீசும் அலையைக் கண்டு அரண்டு போனதில் வியப்பில்லை. ஆனந்தவிகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ஏடுகள் நடத்திய கருத்துக் கணிப்புக்குப் பின்னரும் துக்ளக் சோவும் இந்து இராமும் இந்து மாலினியும் விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்றே வாதாடுகிறார்கள்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை காங்கிரஸ் அரசு மதித்து நடக்கப் போவதில்லை. நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (இதில் 10 பேர் காங்கிரஸ்) பதவி விலகினாலும் மத்திய அரசு உடனடியாகக் கவிழ வாய்ப்பில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் எண்பித்துக் காட்டுமாறு ஆட்சித்தலைவரலால் கேட்கப்படலாம். பொதுத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே எஞ்சியிருக்கின்றன.

இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களின் (South Block) பெரும்பாலானோர் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்கள். இதில் எம்.கே. நாராயணன் ஒருவர். இந்திய அரசியலில் அவர்களது குடுமிப்பிடி தொடருமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்ன நடந்தாலும் தமிழக அரசியல் முன்னர் போல் இனி இருக்கப்வோவதில்லை. (உலகத் தமிழர் – ஒக்தோபர் 17, 2008)


கனடாவில் மீண்டும் ஒரு சிறுபான்மை அரசு!

நக்கீரன்

மக்களாட்சி முறைமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கிரேக்கர்களைச் சாரும். அவர்கள் ,ன்றல்ல 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் குடியாட்சி முறைமையை உருவாக்கி விட்டார்கள்.

பிளட்டோ எழுதிய குடியரசு (The Republic)  மேற்கத்தைய நாட்டின் மக்களாட்சி முறைமைக்;கு அடிகோலிய தலை சிறந்த தத்துவ நூலாகும். ,ந்த நூல் மனிதன் நல்வாழவு வாழ்வது எப்படி என்பதையிட்டு விசாரணை செய்கிறது. அது தொடர்பான மேலும் இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்ல விளைகிறது. (அ) அரச நீதி எத்தன்மையது? அல்லது ஒரு எடுத்துக்காட்டு அல்லது முன்னுதாரண அரசு எத்தகையது? (ஆ) நீதியான மனிதன் யார்? இந்தக் கேள்விகள் மேலும் பல கேள்விகளுக்கு ,ட்டுச் செல்கின்றன.

தமிழர்கள் குடியரசு பற்றிச் சிந்திக்கவே இல்லை. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர் தலையுலகம் என்பது அவர்களது தத்துவம்.

கனடிய 40 ஆவது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியிருக்கின்றன. கடந்த செப்தெம்பர் 07 இல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. தேர்தல் பரப்புரைக்கு 5 கிழமைகளே ஒதுக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு எதிர்வரும் ஒக்தோபர் 14 ஆம் நாள் (செவ்வாய்க்கிழமை) இடம்பெறும். கடந்த 2 ஆண்டுகளில் நடைபெறும் 3 ஆவது தேர்தல் இதுவாகும்.
2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலின் போது ஆளும்கட்சியான லிபரல் 1995 ஆம் ஆண்டு கியூபெக் மாநிலத்தில் நடந்த நேரடி வாக்கெடுப்பில் கனடிய இணைப்பாட்சிக்கு ஆதரவாகப் பரப்புiரை செய்யச் செலவிடப்பட்ட பணத்தில் 250 மில்லியன் டொலர்கள் லிபரல் கட்சிக்காரர்கள் மற்றும் லிபரல் கட்சி நண்பர்கள் பைக்குள் போய்விட்டது என்ற ஊழல் குற்றச்சாட்டு பூதாகாரமாக எழுந்திருந்தது. லிபரல் கட்சி தோற்றதற்கு இந்த ஊழல் குற்றச்சாட்டு முக்கிய காரணியாக இருந்தது. இம்முறை அப்படியான ஊழல் குற்றச்சாட்டு பழமைவாதக் கட்சிக்கு எதிராக வைக்கப்படவில்லை.

இe;jj;  தேர்தலில் நாட்டின் பொருளாதாரம், சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம், வேலை வாய்ப்பு, வீட்டுவசதி, ஆப்கனிஸ்தான் போர் போன்ற விடயங்களே அலசி ஆராயப்படுகின்றன. குறிப்பாக அண்டை நாடான அமெரிக்காவில் கொடிகட்டிப்பறந்த முதலீட்டுக் குழுமங்கள், காப்புறுதி நிறுவனங்கள் பாரிய பணநெருக்கடியை சந்தித்து வருகின்றன. Lehman Brothers என்ற முதலீட்டு நிறுவனம் வங்குறோத்தாகி விட்டது.

Dow Jones Industrial Average  கடந்த பத்து நாட்களில் 5,585 புள்ளிகள் அல்லது 39.4 விழுக்காடு இழப்புக் கண்டுள்ளது. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது சராசரி Dow Jones ஒரே நாளில் 678.91 புள்ளிகள ;அல்லது 7.3 விழுக்காடு குறைந்து 8,579.19 புள்ளிக்கு இறங்கியுள்ளது. யூன் 30, 2003 க்குப் பின்னர் Dow Jones 9,000 புள்ளிகளுக்கு கீழே இறங்கியிருப்பது இதுவே முதல் தடவையாகும். ஒக்தோபர் 09, 2007 இல் சந்தை மூடியபோது 14,198 ஆக இருந்தது.

பங்குச் சந்தையில் பங்குகளின் பெறுமதி கடந்த ஆண்டைவிட 8.33 திரில்லியன் (1,000 கோடி ஒரு திரிலியன்) டொலர்கள் குறைந்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) மட்டும் 875 பில்லியன் (ஒரு பிலலியன் 1,000 கோடி) குறைந்துள்ளது.

நிதி நெருக்கடிக்கு உள்ளான நிறுவனங்கள் முற்றாக முழுகிப் போகாமல் அவற்றை மீட்க அமெரிக்க பேரவை (காங்கிரஸ்) 700 பில்லியன் நிதியை ஒதுக்;கும் சட்டத்தை இந்தக் கிழமை நிறைவேற்றியது. இருந்தாலும் அது முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்கத் தவறிவிட்டது. இது நீடிக்குமானால் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகி இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.

கனடாவின் பங்குச் சந்தையும் இந்தமாதிரியான இழப்பில் இருந்து தப்பவில்லை. S&P/TSX  புள்ளி இன்று மட்டும் 456.13 புள்ளிகள் அல்லது 4.54 விழுக்காடு குறைந்து 9,447.11 புள்ளியை எட்டியது. கனடிய டொலர் 90 சதமாகக் குறைந்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி கனடாவின் பொருளாதாரத்தைப் பாதிக்குமா? இல்லை என்கிறார் பழமைவாதக் கட்சித் தலைவர் ஸ்ரீபன் கார்ப்பர். அப்படியல்ல. அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி கனடாவையும் பாதிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்கிறார்கள். கனடாவின் ஏற்றுமதியில் 75 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். அமெரிக்கா தும்மினால் கனடாவுக்கு சளி பிடிக்கும் என்று வேடிக்கையாகச் சொல்லும் வழக்கு இருக்கிறது.

அமெரிக்காவில் புஷ் ஆட்சியின் கீழ் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பழமைவாதக் கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணமாகும்.

பொதுவாகக் கனடிய தேர்தல் பற்றி வாக்காளர்கள் அதிகம் அக்கறை காட்டுவதில்லை. சென்றமுறை (2006) நடந்த தேர்;தலில் 64.7 விழுக்காடு மக்களே வாக்களித்தார்கள். இம்முறை இந்த விழுக்காடு குறையலாம். காரணம் கனடிய தேர்தலை விட அமெரிக்காவில் ஆட்சித்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கனடியர்களது கவனத்தை கூடுதலாகக் கவர்ந்துள்ளது.

தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சென்ற தேர்தலில் நூற்றில் 18 விழுக்காட்டினரே வாக்களித்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த அய்ம்பது ஆண்டுகளாக அரசியல் மயப்படுத்தப்பட்டு வரும் தமிழர்கள் ஏன் தங்கள் மக்களாட்சிக் கடமையைச் செய்ய பினனடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. வாக்குரிமைதான் மற்ற எல்லா உரிமைகளையும் விட அதியுச்ச உரிமையாகும். அதன் மூலம்தான் எமது பலத்தை அரசியல் கட்சிகளுக்கு எடுத்துக் காட்ட முடியும். தேர்தல் நாளன்றுதான் தமிழர்கள் மற்றக் குடிமக்கள் போல் தாங்களும் ஒரே நிறை, ஒரே விலை, இந்நாட்டு மன்னர்கள் என்பதை எண்பிக்கலாம்.

வாக்களிப்புக்கு ஆங்கில மொழிப்பாற்றாக்குறை ஒரு காரணமாக இருந்தால் அப்படிப்பட்டவர்கள் மொழியறிவு வாய்ந்த ஒருவரது உதவியோடு வாக்களிக்கலாம்.

கட்சிதாவல் என்பது மூன்றாவது உலக அரசியல்வாதிகளது தனியுரிமை அல்ல. இங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்கிறார்கள். 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு கட்சி மாறியிருக்கிறார்கள். இடைத் தேர்தலில் லிபரல் கட்சியிடம் இருந்து ஒரு இருக்கையை புதிய மக்களாட்சிக் கட்சி (NDP)  கைப்பற்றியது. பழமைவாதக்கட்சி (Conservative) முறையே லிபரல் மற்றும் புளக் கியூபெக்குவா கட்சிகளிடம் (Bloc Québécois)  இருந்து தலைக்கு ஒரு இருக்கையைக் கைப்பற்றியது.

மூன்றாவது உலக நாடுகளில் காணப்படும் தேர்தல் கால அன்பளிப்புக்கள் எங்கும் இடம்பெற்றுள்ளன. அட்லாந்திக் பகுதியில் உள்ள இளையோர் அமைப்புக்கள் மற்றும் பண்பாட்டுக் கழகங்களுக்கு 500,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. வேறு நிறுவனங்களுக்கும் சிறியதும் பெரியதுமான நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. வரியிறுப்பாளர்களது வரிப்பணத்தில் வாக்குகளை வாங்கும் மலிவான தந்திரம் இதுவாகும்.

லிபரல் கட்சி அடுத்த 10 ஆண்டுகளில் பல திட்டங்களுக்கு 80 பில்லியன் செலவிடப் போவதாக அறிவித்துள்ளது. மாறாக பழமைவாதக் கட்சி 2 பில்லியன் மட்டுமே செலவழிக்கப் போவதாகச் சொல்கிறது. லிபரல் கட்சியின் செலவினம் வரவு – செலவுத்திட்டத்தில் பற்றாக்குறை ஏற்படும் என பிரதமர் கார்ப்பர் எச்சரித்துள்ளார்.

சென்ற தேர்தலில் ரொறன்ரோ பெருநகரில் உள்ள 44 இருக்கையில் லிபரல் 36;, பழமைவாதக் கட்சி 6, புதிய மக்களாட்சிக் கட்சி 2 இருக்கைகளை கைப்பற்றியிருந்தன. ஒன்ராறியோ மாகாணத்தில் மொத்தம் 107 இடங்களில் லிபரல் 54, பழமைவாதக் கட்சி 40, புதிய மக்களாட்;சிக் கட்சி 12 இடங்களைக் கைப்பற்றி இருந்தன.

இம்முறை எல்லோரது பார்வையும் ரொறன்ரோ பெருநகர் Beaches – East York  தொகுதிப் பக்கமே திரும்பியுள்ளது. 2006 இல் Beaches – East York  தொகுதிக்கு நடந்த தேர்தலில் புதிய மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் மரிலின் சேர்லி (Marilyn Churley) 2778 வாக்குகளால் வெற்றிவாய்ப்பை இழந்தார். இம்முறை மரிலின் சேர்லி முன்னணியில் இருப்பதாக  எழுதியுள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் மரிலின் சேர்லிக்கு வாக்களிக்குமாறு தமிழ் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தத் தொகுதியின் லிபரல் வேட்பாளர் மாரியா மின்னா தொடர்ந்த அய்ந்துமுறை வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த தேர்தலில் 127 தொகுதிகளில் (36.27 விழுக்காடு) வென்று சிறுபான்மை அரசை பழமைவாதக் கட்சி ஆட்சி அமைத்தது.

தேர்தல் முடிவுகள் 2004 – 2006
fl;rp
fl;rpj; jiytH
Ntl;gh
sHfள்;
fpilj;jit
2004
2006
% khw;wk;
#
%
khw;wk;

goikthjk;
Stephen Harper
308
99
124
+26.3%
5,374,071
36.27%
+6.64%

ypguy;
Paul Martin
308
135
103
-23.7%
4,479,415
30.23%
-6.50%

Gsf; fpA+ngf;th
Gilles Duceppe
75
54
51
-5.6%
1,553,201
10.48%
-1.90%

Gjpa kf;fshl;rp
Jack Layton
308
19
29
+52.6%
2,589,597
17.48%
+1.79%

gRik
Jim Harris
308

664,068
4.48%
+0.19%
இதன் அடிப்படையில் பழமைவாதக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. இன்னும் சொல்லப்போனால் சென்ற முறையைவிட,(127) இம்முறை 110 க்கும் குறைவான இடங்களிலேயே வெற்றிபெறும் என எதிர்வு கூறப்படுகிறது.

பழமைவாதக் கட்சி மீண்டும் ஒரு சிறுபான்மை அரசை அமைத்து ஆட்சிக் கட்டில் ஏறுவது தமிழ்மக்களைப் பொறுத்தளவில் ஆபத்தானது. அதனைத் தடுப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. அது லிபரல் கட்சியும் புதிய மக்களாட்சிக் கட்சியும் குறைந்த பட்ச நிழச்சி நிரலின் (Minimum common programme)   கீழ் கூட்டணி ஆட்சி அமைப்பதாகும். (உலகத்தமிழர் – ஒக்தோபர் 03,2008)


தமிழக அரசியல் கட்சிகள் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டால் மட்டுமே இந்திய அரசை அடிபணிய வைக்கலாம்!

நக்கீரன்

உலக உத்தமர் காந்தியார் பிறந்த நாளான ஒக்தோபர் 2 இல் தமிழக மீனவர்கள்; ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாக்கப்படுவதையும் இலங்கைத் தமிழர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தினால் தாக்கப்படுவதையும் ஸ்ரீலங்காவிற்கு இந்தியா இராணுவ தளபாட உதவி செய்வதையும் இராணுவப் பயிற்சி அளிப்பதையும் கண்டித்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் உண்ணாநோன்புப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ள தமிழீழத் தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த உண்ணாநோன்புப் போராட்டத்தை ஒழுங்கு செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதில் கலந்து கொள்ளுமாறு எல்லாக் கட்சிகளுக்கும், திமுக மற்றும் பிஜேபி நீங்கலாக, அழைப்பு விடுத்திருந்தது.

உண்ணாநோன்புப் பந்தலில் வைகோ (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்) பண்ருட்டி இராமச்சந்திரன் (தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்) தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய இயக்கம்), மருத்துவர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), இரா. ஜனார்த்தனம் (உலக தமிழர் பேரவை), திண்டிவனம் இராமமூர்த்தி (தேசியவாத காங்கிரஸ்), ஜெகவீரபாண்டியன் (சமூக நீதி)) ஷேக்தாவூத் (தமிழக முஸ்லிம் லீக்), இசக்கிமுத்து (மூவேந்தர் முன்னணி கழகம்), வேட்டவலம் மணிகண்டன் (உழவர் உழைப்பாளர்), சுப. இளவரசன் (மக்கள்நீதி), துரைஅரசன் (மறுமலர்ச்சி மக்கள் தமிழகம்), விஜய டி. ராஜேந்தர் (லட்சிய திமுக), இயக்குனர் சீமான், கவிஞர் முத்துலிங்கம், ஓவியர் புகழேந்தி, டாக்டர் இரவீந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகள் பெருமளவில் கலந்து கொண்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்கவில்லை.

தேமுதிக தொண்டர்கள் தங்கள் கொடிகளுடன் பெருமளவில் கலந்து கொண்டார்கள். இளைஞரணியினர் மஞ்சள் சீருடையில் வந்திருந்தார்கள். எங்கு பார்த்தாலும் தேமுதிக கக் கொடிகள் காட்சி அளித்தன.

சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தம்மால் கலந்து கொள்ள இயலாது என்றும், தமக்குப் பதிலாக அதிமுகவின் முக்கிய தலைவர்களை அனுப்பி வைப்பதாகவும் கடித மூலம் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். மற்ற மாவட்டங்களிலும் அதிமுக நிருவாகிகள் பங்கேற்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அதிமுக உண்ணாநோன்பில் பங்குகொள்வதிலிருந்து பின்வாங்கி விட்டது. காரணம் என்ன என்பது தெரியவில்லை. அதிமுக போலவே பாமகவும் உண்ணாநோன்பில் பங்குபற்றவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி கலந்து கொள்வார் எனச் சொல்லப்பட்டது. திராவிடர் கழகமும் உண்ணாநோன்பில் பங்குபற்றவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாநோன்பை முன்னெடுப்பதற்குக் காரணம் அது தமிழகத்தில் திமுக வுக்கு எதிரான ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியின் வெள்ளோட்டம் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்துப் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் திரு.பாண்டியன் “சிலர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தேர்தலில் அணி சேர்வதற்கான ஒத்திகை என்று கூறுகிறார்கள். 24 மணி நேரமும் தேர்தல், அதில் கிடைக்கும் வெற்றி, அதனால் பெறப்போகும் பதவி என்பதைப் பற்றியே கனவு காணுபவர்களுக்கு மனித இதயங்கள் பேசுவதை ஏற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும. இலங்கையிலே தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் தேர்தலைப் பற்றிச் சிந்திப்பவர்கள் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட வேண்டும். சொந்த சகோதரர்கள் அங்கே சாகும்போது, இங்கே தேர்தலைப் பற்றி கோட்டைக் கனவு காண்பது பற்றிச் சிந்திப்பது ஏற்புடையது அல்ல” என்றார்.

இன்னொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களைப் பற்றி இந்திய மத்திய அரசோடு சேர்ந்திருந்த காலத்தில் பேசாதிருந்துவிட்டு இப்போது காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி இந்த உண்ணாநோன்பை நடத்துகிறது என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டுக்கும் திரு. பாண்டியன் தனது பேச்சில் பதில் இறுத்தார். “நான்கு ஆண்டுகள் டெல்லியிலே கூட்டணியிலே இருந்தீர்களே, அப்போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் குரல் கொடுக்கிறீர்கள் என்று ஒரு முதிர்ந்த அரசியல்வாதி கேட்டிருக்கிறார். கூட்டணியில் இருந்தபோதும் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவிகளை செய்யக்கூடாது; இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம்” என்றார்.

தமிழீழ மக்களின் போராட்டத்துக்கும் தமிழீழ மக்களின் அடிப்படை மனிதவுரிமை மீறல்களைக் கண்டித்தும் கடந்த காலத்தில் மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் போன்ற கட்சிகள் ஆhப்பாட்டம், பொதுக்கூட்டம், உண்ணாநோன்பு அனுட்டித்தாலும் இப்போதுதான் பரந்த அளவில் ஒரு உண்ணாநோன்புப் போராட்டம் நடந்துள்ளது.

இந்த உண்ணாநோன்புப் போராட்டத்தில் திட்டமிட்டபடி அதிமுகவும் பாமகவும் கலந்து கொண்டிருந்தால் தமிழகத்தில் மூன்றில் இரண்டு விழுக்காடு மக்கள் தமிழீழ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டிருக்கலாம்.

நீண்ட காலம் தமிழீழச் சிக்கல் பற்றி பாராமுகமாக இருந்த திமுக எதிர்வரும் 6 ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த இருக்கிறது.

முதல்வர் கருணாநிதி தமிழ்ஈழச் சிக்கல்பற்றி நீண்ட காலம் மவுனம் சாதித்து வந்திருக்கிறார். கடைசியாக சென்ற ஆண்டு சட்டசபையில் பேசும் போது இராசீவ் காந்தி கொலைக்குப் பின்னர் திமுக கழகம் வி.புலிகளுக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது என்றும் வி.புலிகளைப் பொறுத்தளவில் தனது நிலைப்பாடும் ஜெயலலிதாவின் நிலைப்பாடும் ஒன்றுதான் என்ற பொருள்படச் சொன்னார். இப்போது தானும் தனது கழகமும் தனிமைப்படுத்தப்படுவதை தடுக்கவே கூட்டம் போட்டு அதன் வழியாக தமிழ் ஈழச் சிக்கலை திசை திருப்பப முதல்வர் கருணாநிதி எத்தனிக்கிறார் எனப் பலர் நினைக்கிறார்கள்.

கருணாநிதி எப்போதும் இலாப – இழப்பைக் கணக்குப் பார்த்துத்தான் முடிவு எடுக்கும் வழக்கத்தைக் கொண்டவர். தமிழீழச் சிக்கலால் தனக்கு அரசியல் இலாபம் எதுவும் இல்லை என அவர் நினைக்கிறார். இலாபம் இருந்தால் அவர் தமிழீழச் சிக்கலை எப்போதோ கையில் எடுத்திருப்பார். தில்லி சென்று சோனியா – மன்மோகன் சிங் இரண்டு பேரோடும் பேசியிருப்பார்.

தமிழக மீனவர்களைச் சுடக்கூடாது என சார்க் மாநாட்டில் மகிந்த இராசபக்சேயிடம் இந்தயப் பிரதமர் கேட்டிருந்தார். அப்படியொரு உறுதிமொழியை எம்.கே. நாராயணன் கருணாநிதியைச் சென்னையில் நேரில் சந்தித்து வழங்கி இருந்தார். ஆனால் அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை. அதன் பின்னரும் தமிழக மீனவர்களுக்கு எதிரான தாக்குதலை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் இரண்டு மீனவர்கள் சுடப்பட்டனர். நு}ற்றுக்கணக்கானோர் காயப்பட்டனர். இதையிட்டு இந்திய மத்திய அரசு கவலைப்படவில்லை. ஆளும் திமுக அரசு ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தது.

கேள்வி என்னவென்றால் தமிழ்நாட்டில் வீசத்தொடங்கியிருக்கும் “அலை” ஸ்ரீலங்கா பற்றிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? முன்னரும் 62 செஞ்சோலை மாணவர்கள் ஸ்ரீலங்காவின் விமானத் தாக்குதலுக்குப் பலியானபோது தமிழகத்தில் ஒரு “அலை” வீசியது. பின்னர் அது ஓய்ந்துவிட்டது.

கடந்தகால வரலாறு மத்திய அரசின் கைகளைத் தமிழகம் முறுக்குவது என்பது அத்தனை எளிதல்ல என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

இந்திய மத்திய அரசு தமிழர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அது காங்கிரஸ் ஆட்சி என்றாலும் சரி, பிஜேபி ஆட்சி என்றாலும் சரி இரண்டும் தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியப்படுத்தியே வந்திருக்கின்றன. வட இந்தியர் தமிழக தமிழரை “மதறாசி” எனக் கேலி செய்து அவர்களைத் தாழ்வாகப் பார்க்கிறார்கள்.

இந்தியாவை எந்தக் கட்சி ஆண்டாலும் அதன் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் அனைவரும் தமிழ் எதிர்ப்பாளர்களாகவே இருந்து வருகிறார்கள். தமிழீழம் உருவானால் தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகளது கை ஓங்கும். தமிழ்நாடு தனி நாடானால் பிரபாகரனின் தமிழீழத்தோடு சேர்ந்து அகண்ட தமிழகம் உருவாகிவிடும் என்கிறார்கள். வி.புலிகளை இந்தியா தடைசெய்த போதும் அதற்குப் பின்னரும் இந்தியா கூறிவரும் காரணங்களில் இது முக்கியமானது.

1987 இல் எழுதப்பட்ட இந்திய – இலங்கை உடன்பாட்டின் கீழ் வட -கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. அது நிரந்தரமாக இணைக்கப்படும் என்று இந்தியா தமிழர் தரப்புக்கு உறுதி அளித்தது. ஆனால் சிங்கள அரசு உடன்பாடு பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் கிழக்கு மாகாணத்தை வடக்கில் இருந்து பிரித்து அங்கு மாகாண தேர்தலை நடத்தியுள்ளது. இதன் மூலம் 1987 ஆம் ஆண்டு எழுதிய உடன்பாட்டில் “வட கிழக்கு மாகாணங்கள் தமிழர்களது வரலாற்று உறைவிடம்” (ழேசவா யனெ நுயளவ ழக ளுசi டுயமெய ளை வாந hளைவழசiஉயட hயடிவையவ ழக வுயஅடைள) என்ற கோட்பாட்டை இந்தியா கைவிட்டு விட்டது என்பது தெளிவாகிறது.

இதன் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தம் என அந்த நாட்டு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா செய்தித்தாள்களுக்கு பகிரங்கமாகச் செவ்வி கொடுக்கிறார். அதனை அரசோடு ஒட்டியிருக்கும் ஜாதிக்க ஹெல உறுமய வழிமொழிந்திருக்கிறது. அமைச்சர் கேகலிய இரம்புக்வல்லாவும் அதனை வழிமொழிந்திருக்கிறார். இவற்றையிட்டு இந்தியா கண்டுகொள்ளாது இருக்கிறது.

இனச்சிக்கலுக்கு இராணுவத் தீர்வு கூடாது அரசியல் தீர்வை ஸ்ரீலங்கா அரசு முன்வைக்க வேண்டும் என்று இந்தியா கிளிபிள்ளை போல் சொல்லி வந்தாலும் வன்னி மீதான படையெடுப்புக்கு இந்தியா பச்சைக் கொடி காட்டிவருகிறது என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.

இந்திய மத்திய அரசு இவ்வாறு ஏன் நடந்து கொள்கிறது? தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி என்ற இனிப்புகளைக் கொடுத்து வாயை அடைத்துவிடுவதுதான் காரணம் ஆகும்.

நக்கினார் நாவிழந்தார் என்பது போல அமைச்சர் பதவிகளை கேட்டுப் பெற்றுக்கொண்ட திமுக வாய்மூடி மவுனம் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பரபரப்பாகப் பேசப்பட்ட சேது கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது அதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும்.

இந்திய மத்திய அரசை அடிபணிய வைப்பதற்கு ஒரே வழிதான் உண்டு. தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழீழ மக்களது விடுதலை போராட்டத்தை மையமாக வைத்து ஒரு குடையின் கீழ் அணி திரண்டு மத்திய அரசுக்கு எதிராகப் போராட வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்திய மத்திய அரசு தற்போது கடைப்பிடிக்கும் ஸ்ரீலங்கா சார்பான வெளியுறவுக் கொள்கையைக் கைவிட்டு தமிழ்மக்கள் சார்பான நிலைப்பாட்டை எடுக்கும் வாய்ப்பு உருவாகும்.


போரில் உணவை ஆயுதமாகப் பயன்படுத்தும் இராசபக்சே அரசு

நக்கீரன்

இவ்வுலகில் பாவியாய் இருப்பவன் அடுக்கடுக்காக வரும் துன்பங்கள் பற்றி விவேக சிந்தாமணி என்ற நூலில் ஒரு பாடல் (77) இருக்கிறது. அந்தப் பாடல் இது.

ஆவீன மழைபொழிய வில்லம்வீழ
அகத்தடியாள் மெய்நோவ வடிமைசாவ
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள
கோவேந்த ருழுதுண்ட கடமைகேட்கக்
குருக்கள்வந்து தட்சணைக்குக் குறுக்கேநிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசுகேட்கப்
பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே.

தன் பசு கன்றுபோட அதற்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும்போது அதற்கு இடையூறாக விடாது மழைபொழிய, அம்மழையால் தான் குடியிருக்கும் வீடு இடிந்து விழுகிறது. அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தன் தருத்தரித்த மனைவி வயிற்று நோவில் துடித்துக்கொண்டிருக்கிறாள்.

இதற்கு என்ன செய்யலாம் என்று கலங்கித் தவிக்கும் நேரத்திலே தன் (அடிமை) வேலைக்காரப் பெண் இறந்துபோக அது விதை விதைக்கும் பருவமாதலின் நிலத்தில் ஈரம் காய்துவிடுமே என்று எண்ணி அடிமைப்பெண்ணின் சடலத்தை அப்படியே போட்டுவிட்டு விதையைத் து}க்கிக்கொண்டு ஓடுகிறான். அப்படிப் போகும் வழியில் கடன் கொடுத்தவன் அவனை மறித்துக் கடனைக் கொடுத்துவிட்டுப் போ என்கிறான்.

அப்போது அரசனுக்காக வரி அறவிடுபவன் தீர்வை செலுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறான். அந்த நேரம் பார்த்து இறைவனுக்கு பூசை செய்ததற்காகப் பணம் கேட்டு குருக்கள் குறுக்கே நிற்கிறார். இப்படியான இக்கட்டான நிலையில், கவிஞர்கள் அவனைப்பாடிப் பரிசில் கேட்கின்றனர்.

இங்ஙனம் அடுக்கடுக்காக பல துன்பங்கள் தாக்குகின்றன பாவியின் துன்பம் பார்த்துப் பொறுக்க இயலவில்லை என்கிறார் இராமச்சந்திர தீட்சிதர் என்ற புலவர்.

புலவரது கற்பனையில் வருபவன் படும் துன்பங்களை விட மோசமான துன்பங்களை வன்னியில் வாழும் எமது உறவுகள் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வன்னியில் சிங்களப் படையின் எறிகணைத் தாக்குதலுக்கும் விமானக் குண்டு வீச்சுக்கும் அஞ்சி மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 225,000 அதிகமான தமிழ் மக்கள் ஊர் விட்டு ஊர் பெயர்ந்து கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.

மன்னாரின் மடு உதவி அரச அதிபர் பிரிவைச் சேர்ந்த அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து விட்டனர். இப்படியான இடப்பெயர்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இவர்களின் வாழ்வியல் முறை சிதைக்கப்பட்டு சின்னாபின்னப் படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்மக்களைப் பொறுத்தளவில் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் இடப்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்னர் தமிழ்ச்சோலை வானொலிக்கு செவ்வி வழங்கிய ஆசிரியை ஒருவர் தானும் தனது குடும்பமும் 1983 இல் திருகோணமலை மாவட்டம் உப்புவெளியில் இருந்து இடம்பெயர்ந்து மன்னாரில் குடியேறியதாகவும் போர் காரணமாக சொந்த ஊரான ஆண்டான்குளத்தில் இருந்து பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்து தற்சமயம் முழங்காவிலில் தங்கி இருப்பதாகச் சொன்னார். இப்போது முழங்காவிலும் சிங்கள இராணுவத்தின் வல்வளைப்புக்கு உள்ளாகி விட்டதால் அந்தக் குடும்பம் பூனகரிக்கு இடம் பெயர்ந்துவிட்டதென நினைக்கிறேன்.

முல்லைத்தீவில் அய்ந்தில் மூன்று உப அரச அதிபர் பிரிவு மக்கள் முல்லைத்தீவுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 4250 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இதனால் முல்லைத் தீவில் மட்டும் .இடம்பெயர்ந்த 15,000 குடும்பங்கள் இருக்கின்றன.

இடம் பெயரும் போது மக்கள் தங்களிடம் இருந்த அற்பசொற்ப உடைமைகளைக் கைவிட்டு, கன்றுகாலிகளைக் கைவிட்டு, பயன் தரும் மரங்களைக் கைவிட்டு, விளை நிலங்களைக் கைவிட்டு கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

கடந்த புதன்கிழமை (செப்தெம்பர் 17) கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்கியிருந்த பகுதி மீது சிறிலங்கா கிபீர் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் மூவர் ; படுகாயமடைந்தனர். எட்டு வீடுகள் பலத்த சேதத்துக்குள்ளாகின. கால்நடைகளும் இறந்து பட்டன. இதனைத் தொடர்ந்து மக்கள் விசுவமடு, புதுக்குடியிருப்பு, கண்டாவளை போன்ற இடங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,000 ஏக்கர் நெல்வயல்கள் கைவிடப்பட்டுள்ளன. வன்னியின் நெற்களஞ்சியம் என வருணிக்கப்படும் மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை – வவுனிக்குளம் பகுதியில் அறுவடைக்கு அணியமாக இருந்த 1,000 ஏக்கர் காணி கைவிடப்பட்டுள்ளன.

இடம் பெயரும் மக்கள் மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் வெட்டவெளியிலும் கொளுத்தும் வெய்யிலிலும் புழுதியிலும் து}சிபடிந்த காற்றின் மத்தியிலும் கொட்டும் மழையிலும் எறிகணைச் சத்தங்களின் மத்தியிலும் அவல வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இப்போது வன்னியில் வட-கிழக்கு பருவ மழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் மக்கள் சொல்லொணாத நெருக்கடிக்கும் அவலத்துக்கும் உள்ளாகப் போகிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டுள்ளன. தரைவழி தொலைபேசியோ அல்லது செய்மதி தொலைபேசி இணைப்போ இல்லை. வன்னி முழுதும் மின்சாரத் தட்டுப்பாடு பரவலாக நிலவுகிறது.

இடப்பெயர்வால் ஏறத்தாழ 25,000 பள்ளிக்கூட மாணவர்களது கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. துணுக்காய் உப அரச அதிபர் பிரிவில் 17 பள்ளிக்கூடங்களில் 11 பள்ளிக்கூடங்கள் கைவிடப்பட்டுள்ளன. மாந்தைப் பகுதியில் 14 பள்ளிக்கூடங்கள் கைவிடப்பட்டுள்ளன. ஒட்டிசுட்டானில் 23 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.

நடந்து முடிந்த உயர்தர பொதுத் தேர்வுக்கு 60 விழுக்காடு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. .

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக உலக உணவுத் திட்டம், யூன்எச்சிஆர் (UNHCR)  போன்ற அரச சார்பற்ற அமைப்புக்கள் வன்னியை விட்டு வெளியேறுமாறு சிங்கள அரசு நிர்ப்பந்தப்படுத்திய காரணத்தால் அவை வன்னியை விட்டு வெளியேறிவிட்டன. போர் வலயங்களுக்கு அனைத்துலக மனிதநேய அமைப்புக்களை அனுமதிக்க வேண்டும் என்பது அனைத்துலக சட்டத்தின் அடிப்படை விதியாகும். இந்த அமைமப்புக்கள் அரசின் அழைப்பில்தான் ஸ்ரீலங்காவில் பணியாற்றுகின்றன.

இதனால் உணவு, மருந்து, குடிதண்ணீர் போன்றவற்றுக்கு அந்த தொண்டு நிறுவனங்களை நம்பியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளது.

வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. வாரத்தில் திங்கள் மற்றும் புதன் இருநாளும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும் 20 பாரவூர்திகளுக்கு இந்த வாரத்தில் அனுமதி வழங்கப்படவில்லை என கிளிநொச்சி அரச அதிபர் என். வேதநாயகம் இன்று (வியாழக்கிழமை) பிபிசி தமிழோசைக்குக் கொடுத்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய அய்யன்னா அமைப்புக்களும் அனைத்துலக தொண்டு நிறுவனங்களும் வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறியதன் பின்னர் அந்தப் பகுதிக்கு எந்த பொருட்களும் அனுப்பிவைக்கவில்லை. உலக உணவுத் திட்டத்தின் மூலம் அனுப்பப்படுகின்ற பாரவூர்திகளும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லவில்லை. அதற்கான அனுமதி படை அதிகாரிகளினால் மறுக்கப்பட்டுள்ளது.

ஆசிய மனிதவுரிமை ஆணையம் செப்தெம்பர் 18 ஆம் நாள் விடுத்த அறிக்கையில் ஜெயபுரம் மற்றும் அக்கராயன் பகுதிகளை மோதல் அற்ற வலயமாக (NO CONFLICT ZONE)   அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டது. அய்யன்னா அமைப்புக்கள் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் வன்னியை விட்டு அகன்றுவிட்டதால் பொதுமக்களது பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிதண்ணீர், மருந்து, கழிவறை போன்றவற்றை வழங்கும் பொறுப்பு ஸ்ரீலங்கா அரசைச் சார்ந்தது என தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு செவிசாய்க்கும் மனநிலையில் சனாதிபதி மகிந்த இராபக்சே இல்லை. வன்னியைச் சுற்றி ஆறேழு முனைகளில் தாக்குதல் நடத்தி முழு வன்னி நிலப்பரப்பையும் பிடிக்க கங்கணம் கட்டிநிற்கும் ஒரு அரசு வன்னி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் என யாரும் எதிர்பார்க்க முடியாது.

மகிந்த இராசபக்சேயின் அரசு தமிழ்மக்களுக்கு எதிரான போரில் உணவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. வன்னி மக்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை ஓமந்தையில் தடுத்து நிறுத்துகிறது. அல்லது குறைந்தளவு பொருட்களையே உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கிறது. உணவை ஒரு ஆயுதங்களாகப் பயன்படுத்துவது அதை;துலக மனிதநேய சட்ட (Humanitarian Law)   விதிகளின் படி போர்க்குற்றமாகும். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத மகிந்தா இராசபக்சே அரசு தொடர்ந்து அந்த விதியை மீறி வருகின்றது.

வன்னியில் தமிழ்மக்கள் படும் அவலங்களையிட்டு உலக நாடுகள் பயங்கர மவுனம் சாதிக்;கின்றன. மனிதவுரிமைகள் பற்றி வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கைகள் விடும் மனிதவுரிமை அமைப்புக்களும் மவுனம் சாதிக்கின்றன. உலகில் அமைதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட அய்யன்னாவும் அவ்வப்போது கவலை தெரிவிப்பதோடு நின்றுவிடுகிறது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி வி.புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கை தொடரும் போது பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற ஆசையை மட்டும் வெளியிட்டுள்ளார். அவரது கூற்று வி.புலிகளுக்கு எதிரான போரை இந்தியா ஆதரிக்கிறது என்ற உண்மையை உறுதிசெய்ய உதவியுள்ளது.

வன்னி மக்களை வவுனியாவிற்கு வருவிக்க அரசு எடுத்த முயற்சி தோல்வியைத் தழுவியுள்ளது. வி.புலிகளிடம் இருந்து மக்களைப் பிரித்தெடுப்பதே ஸ்ரீலங்கா அரசின் உள்நோக்கமாகும். இடம்பெயர்ந்த தமிழ்மக்களை அரசு வவுனியாவில் முகாம்களில் தங்க வைப்பதாகச் சொhன்னாலும் நடைமுறையில் அவை இராணுவ வதை முகாம்களாகவே செயல்படும் என்பது அவர்களுக்குத் தெரியாத செய்தியல்ல. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இராணுவம் அதனை ஒரு திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்றியிருப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. நாளாந்தம் அங்கே கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், காணாமல் போதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

போர் காரணமாக வன்னிப்பெரு நிலபரப்பிலிருந்து இடம்பெயர்ந்த அல்லது பெயர்கின்ற மக்கள் வவுனியாவுக்கு வந்து தங்குவதற்கான சு10ழ்நிலை தற்போதைக்கு இல்லை என்று யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் தங்கியுள்ள மக்கள் 50 மைல் து}ரம் வரை நடந்து வவுனியாவுக்கு வரமுடியாது. அதற்கான போக்குவரத்து வசதிகள் எதுவும் அங்கு இல்லை. அதே சமயம் மனிதநேய தொண்டு நிறுவனங்கள் வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து வெளியேறியமை கவலை தருகின்றது என்றும் வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்றும் ஆயர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களையும் வழங்குவதற்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் உடனடியாக முன்வர வேண்டும் எனவும் ஆயர் தோமஸ் சொளந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த அழகில் வன்னி மக்களைப் பட்டினி போடும் மகிந்த இராசபக்சே ‘தமிழ்;மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்து வன்னி நிலப்பரப்பைக் கைப்பற்றும் வரை போர் ஓயாது” எனச் சூளுரைத்து வருகின்றார்.

தமிழ்மக்களது போராட்டம் என்பது தொடக்கம் முதலே மற்றவர்களது உதவியின்றி சொந்தக் காலில் நின்று நடத்தப்படும் போராட்டமாகும். வன்னிமக்களது அவலங்களையும் துன்பங்களையும் துடைப்பது புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனது தலையாய வரலாற்றுக் கடமையாகும்.

தமிழ் மக்கள் உலகில் வாழும் ஏனைய மக்களைப் போல் தாமும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்பதே அவர்களது ஆசையாகும். அது வசப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. (Ulagathamilar – September 19, 2008)


ஸ்கொட்லாந்தில் சுதந்திரம் என்பதே பேச்சாக இருக்கிறது!

நக்கீரன்

அய்க்கிய இராச்சியம் (United Kingdom) என அழைக்கப்படும் நாடு பிரித்தானியா (இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து) மற்றும் வட அயர்லாந்து இரண்டையும் உள்ளடக்கிய நாடாகும்.

ஒற்றை ஆட்சியின் கீழ் வெற்றிகரமாக அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப் படுத்திய நாடுகள் சிலவற்றில் அய்க்கிய இராச்சியம் ஒன்று என அரசியல் விற்பன்னர்கள் சொல்கிறார்கள்.

இங்கிலாந்து 10 ஆம் நூற்றாண்டு தொடங்கி ஒரே நாடாக இருந்து வருகிறது. இங்கிலாந்துக்கும் வேல்ஸ் நாட்டுக்கும் இடையிலான இணைப்பு கிபி 1284 தொடங்கியது. ஆனால் அதற்கான சட்ட வடிவம் (Act of Union)  கிபி 1536 இல் கொடுக்கப்பட்டது. 1707 இல் இன்னொரு சட்டத்தின் வாயிலாக ஸ்கொட்லாந்து நிரந்தரமாக பிரித்தானியாவோடு சேர்ந்து கொண்டது. அயர்லாந்து 1801 இல் சேர்ந்து கொண்டது. இதன் பின்னர் பிரித்தானியாவின் அய்க்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்து (United Kingdom of Great Britain and Ireland)   எனப் பெயர் சூட்டப்பட்;டது.

1921 ஆம் ஆண்டு அங்கிலோ – அயிரிஷ் உடன்பாட்டின் கீழ் அயர்லாந்து இரண்டாகக் கூறுபோடப்பட்ட போது அயர்லாந்தில் உள்ள 6 மாவட்டங்கள் (உழரவெநைள) வட அயர்லாந்து என அழைக்கப்பட்டது. எஞ்சிய பகுதி அயர்லாந்து குடியரசு எனப் பிரகடனம் செய்து கொண்டது.

இதன் பின்னர் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதுதான் இன்றுள்ள பிரித்தானியாவின் அய்க்கிய இராச்சியம மற்றும் வட அயர்லாந்து (United Kingdom of Great Britain and Northern Ireland)   என்ற பெயராகும்.

இப்போது, சரியாக 301 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவில் சேர்ந்து கொண்ட ஸ்கொட்லாந்து நாட்டில் சுதந்திரத்துக்கான பிரிவினை முழக்கம் கேட்கத் தொடங்கியுள்ளது.

வென்டி அலெக்சாந்தர் என்பவர் ஸ்கொட்லாந்து நாட்டு தொழில் கட்சியின் தலைவராக இருக்கிறார். கடந்த மே மாதம் அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அது பிரதமர் கோர்டன் பிறவுண் (புழசனழn டீசழறn) உட்பட பல அரசியல்வாதிகளை வியப்பில் ஆழ்த்தியது. அவர் போட்ட குண்டு இதுதான் – ஸ்கொட்லாந்து சுதந்திரம்பற்றி ஒரு நேரடி வாக்கு எடுங்கள மக்களின் தீர்ப்பைப்பற்றி நான் அஞ்சவில்லை.”

இந்த அதிரடி அறிவிப்பு தொழில் கட்சியின் வழக்கமான கொள்கைக்கு – அய்க்கிய இராச்சியத்தின் ஒற்றுமையைக் பாதுகாப்பது – மாறானது. ஒரு இக்கட்டான சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரதமர் கோர்டன் பிறவுண் வென்டி அலெக்சாந்தர் சொன்னதைக் காதில் போட்டுக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

வென்டி அலெக்சாந்தர் ஸ்கொட்லாந்து அய்க்கிய இராச்சியத்தில் இருந்து பிரிவதை விரும்பவில்லை. அதனால் இப்போது ஒரு நேரடி வாக்கெடுப்பை நடத்தினால் மக்கள் சுதந்திரத்தை எதிர்த்து வாக்களிக்கக் கூடும் என நினைக்கிறார்.

ஸ்கொட்லாந்தின் ஆட்சி அதிகாரம் தற்போது ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி (Scotish Nationalist Party) யின் கையில்தான் இருக்கிறது. கடந்த 2007 மே மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலில் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி 50 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ஆட்சிக் கட்டிலில் இருந்த பிரித்தானிய தொழிற் கட்சியைத் தோற்கடித்தது.

அந்தக் கட்சியும் நேரடி வாக்கொடுப்பை விரும்புகிறது. ஆனால் இப்போது அல்ல. 2010 இல் நேரடி வாக்கெடுப்பு நடத்தலாம் என்கிறது.

ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி நேரடி வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் இலண்டனோடு பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. அதற்கு இசைவாக சுதந்திரம் பெற்ற ஸ்கொட்லாந்து மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும். அப்படியான சட்டம் அய்ரோப்பிய சட்டத்தைப் போன்று இருக்கும். பேச்சு வார்த்தைகள் இழுத்தடிக்கப்படலாம். சிக்கலாகவும் இருக்கலாம். அமைதியான முறையில் ஒரு நாடு இரண்டாகப் பிரிந்ததுக்கு வரலாற்றில் முன் எடுத்துக்காட்டுக்கள் இல்லை. வேண்டும் என்றால் அண்மையில் இரண்டு நாடுகளாகத் துண்டாடப்பட்ட செக்கோஸ்லோவியாவை எடுத்துக்காட்டாகக் காட்டலாம்.

பிரித்தானிய குடிமக்கள் எந்த நாட்டின் குடியுரிமையை விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க கால அவகாசம் கொடுக்கப்படலாம். இங்கிலாந்தில் ஸ்கொட்லாந்தோடு தொடர்புகளை வைத்துக் கொண்டு அதே நேரம் வேலை செய்து கொண்டு வாழும் ஸ்கொட்டிஷ் மக்களுக்கு முடிவு எடுப்பது வில்லங்கமாக இருக்கலாம். இதில் பிரித்தானிய பி;ரதமர் கோர்டன் பிறவுண் அவர்களும் சேர்மதி. இங்கிலாந்து – ஸ்கொட்டிஷ் எல்லையைக் கடந்து செல்ல புதிய கடவுச் சீட்டுக்கூடத் தேவைப்படலாம்.

சுதந்திர ஸ்கொட்லாந்து அய்ரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். அது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படலாம். அப்போது ஸ்கொட்லாந்து ஸ்ரேலிங் நாணயத்தைக் கைவிட்டு யூரோவைக் கைக்கொள்ளலாம்.

பிரித்தானியாவின் அய்க்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்து ஒரே பார்வையில்

இறைமை (Sovereign) ) – எலிசெபெத் அரசியார் 11 (1952)

பிரதமர்                            – கோர்டன் பிறவுண் (2007)

பரப்பளவு                       – 241,590 சதுர கிமீ (93,278 சதுர மைல்)

தலைநகர்                      – இலண்டன் (7.6 மில்லியன – 2003 மதிப்பீடு)

மக்கள் தொகை          – 60.8 மில்லியன் (2007 மதிப்பீடு)

இனங்கள்                      – ஆங்கிலேயர் (83.6 விழுக்காடு) ஸ்கொட்டிஷ் (8.6 விழுக்காடு) வெல்ஷ் (4.9 விழுக்காடு) வட அய்ரிஷ் மக்கள் (2.9 விழுக்காடு) கருப்பர் (2.0 விழுக்காடு) 2001 ஆம் ஆண்டுக் கணிப்பு.

மொழிகள்                     – ஆங்கிலம், வெல்ஷ், ஸ்கொட்டிஷ்

சமயம்                           – கிறித்தவர்கள் (71.6 விழுக்காடு) முஸ்லிம் (2.7 விழுக்காடு) இந்து (1.0 விழுக்காடு) எந்த மதமும்
இல்லாதவர்கள் (23.1 விழுக்காடு)

அகவைப் பலம்         – 78.7 ஆண்டுகள்

மொத்த உள்ளுர் உற்பத்தி (GDP)       – 2.037 திரில்லியன் டொலர்கள்

தனி ஆள் வருமானம்                             – 35,100 டொலர்கள்

எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்         – 99 விழுக்காடு

ஸ்கொட்லாந்து ஒரே பார்வையில்

பரப்பளவு                                 – 78,772 சதுர கிமீ (30,414 சதுர மைல்”

மக்கள்தொகை                     – 5,100,000 (1991 யூன் மதிப்பீடு)

எல்லைகள்                           – தெற்கே இங்கிலாந்துடன் 60 மைல் எல்லை. மேற்கும் வடக்கும் அடலாந்திப் பெருங்கடல். கிழக்கு வட கடல் (North Sea).

பெயர் வந்த காரணம்     – அயர்லந்தில் இருந்து ஸ்கொட்லாந்துக்கு கிபி 5 ஆம் 6ஆம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்த செல்ரிக் (Celtic) இனத்தவர் வைத்த பெயர். இவர்கள் ஏனைய இனக் குழுக்களோடு கலந்து இன்றைய ஸ்கொட்லாந்து நாடு உருவானது.

தீவுகள்                                  –  790 தீவுகள் இருக்கின்றன.
——————————————————————————
இங்கிலாந்து மக்களுக்கும் ஸ்கொட்டிஷ் மக்களுக்கும் நீண்ட கால வரலாற்றுத் தொடர்பு உண்டு. அது 1707 க்கும் முந்தியது. அந்த உணர்வு காரணமாக அவர்கள் எலிசெபெத் அரசியாரை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவர் எலிசெபெத் 11 என்பதற்குப் பதில் வெறுமனே எலிசெபெத் அரசி என்றே அழைக்கப்படுவார். அவரது பேரன் முடிசூட்டிக் கொண்டால் அவர் வில்லியம் V என்பதற்குப் பதில் வில்லியம் 11 என்றே அழைக்கப்படுவார்.

1707 இல் இயற்றப்பட்ட சட்டம் (Act of Union)  இங்கிலாந்தில் ஸ்கொட்டிஷ் மக்களுக்கு எதிரான எதிர்ப்பலைகளை உருவாக்கியது. அது மீண்டும் தலைதூக்கலாம். குறிப்பாக ஸ்கொட்டிஷ் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்ட பின்னர் அதனை ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி கைப்பற்றியிருப்பது ஆங்கிலேயர்களுக்கு கடுப்பை உண்டாக்கி இருக்கிறது. 2006 இல் Sunday Teelegraph  நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் 59 விழுக்காடு ஆங்கில வாக்காளர்கள் ஸ்கொட்டிஷ் பிரிந்து போவதை ஆதரித்துள்ளார்கள்!

என்ன காரணம்? ஆங்கிலேயரை விட ஸ்கொட்டிஷ் மக்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்ற எண்ணம் ஆகும். 2003 – 2004 ஆண்டில் இங்கிலாந்து தனி ஒரு குடிமகனுக்குச் செலவழித்த தொகை 5,940 ஸ்ரேலிங் பவுண் ஆகும். ஆனால் ஸ்கொட்டிஷ் குடிமகனுக்குச் செலவழித்த தொகை 7,346 ஸ்ரேலிங் பவுண் ஆகும்!

பழமைவாத (Conservtives)  க் கட்சிக்காரர்களுக்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது. இங்கிலாந்தில் மட்டும் தேர்தல் நடந்தால் அந்தக் கட்சிக்கு வெல்லும்; வாய்ப்பு அதிகரிக்கும்.

ஆங்கிலேயரை விட ஸ்கொட்டிஷ் மக்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் பதி;ல் என்ன? ஒரு சுதந்திர ஸ்கொட்லாந்து அய்ரோப்பிய ஒன்றியத்தின் உதவியோடு தனது பொருளாதாரத்தை நன்றாக சமாளித்துக் கொள்ள முடியும். அண்டை நாடுகளான நோர்வே, டென்மார்க் மற்றும் அய்ஸ்லாந்து போல பொருளாதார செழிப்போடு வாழ முடியும். மேலும் ஒரு பலமான காரணம் இருக்கிறது. அது
வடகடல் (North Sea)  எண்ணெய் வளமாகும்.

வடகடலில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மதகு எண்ணெய் எடுக்கப்;படுகிறது. கடந்த ஆண்டு (2007) எண்ணெய் விற்பனையால் கிடைத்த வருவாய் 8 பில்வியன் ஸ்ரேலிங் பவுணாகும். இந்த ஆண்டு இது 12.5 பில்லியன் ஸ்ரேலிங் பவுணாக உயரக் கூடும். ஆனால் இங்கிலாந்து வடகடல் எண்ணெய் வருவாயை ஸ்கொட்லாந்துக்கு விட்டுக் கொடுக்குமா என்பது கேள்விக் குறி ஆகும். இங்கிலாந்து வடகடல் எண்ணெய் வருவாயில் பங்கு கேட்கலாம்.

இன்றைய சூழ்நிலையில் ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் எப்போது சாத்தியம்? பெரும்பாலும் 2010 இல் அல்லது அடுத்த சில ஆண்டுகளில் சாத்தியமாகலாம். ஒரு நேரடி வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவாகக் கணிசமான ஆதரவு கிடைக்குமானால் அதனை தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள பிரித்தானியா கடமைப்பட்டுள்ளது. தற்போது 52 விழுக்காடு ஸ்கொட்டிஷ் மக்கள் சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள்.

மனிதனுக்குப் பசி, தாகம், தூக்கம் எப்படி இயற்கையானதோ அப்படியே சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஆசையும் இயற்கையானது.

ஒரு வேளை ஸ்கொட்டிஷ் மக்கள் தன் இச்சையாக சுதந்திரப் பிரகடனம் செய்தால் என்ன நடக்கும்? அதனை ஏற்றுக் கொள்ள அனைத்துலக நாடுகள் மறுக்கலாம். எது எப்படி இருப்பினும் இப்போது ஸ்கொட்லாந்தில் சுதந்திரம் என்பதே பேச்சாக இருக்கிறது! (உலகத்தமிழர் – செப்தெம்பர் 05, 2008)


வெள்ளைமாளிகை ஒபாமாவின் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கிறதா?
நக்கீரன்

அமெரிக்காவில் இப்போது தேர்தல் திருவிழாக் காலம். எதிர்வரும் நொவெம்பர் 04 ஆம் நாள் தேர்த் திருவிழா.; வெற்றிபெற்ற வேட்பாளர் அமெரிக்காவின் ஆட்சித்தலைவராக 2009 ஆம் ஆண்டு சனவரி 09 ஆம் நாள பதவி ஏற்பார்.
சனநாயக் கட்சி சார்பில் பராக் ஒபாமா (Barack Obama) போட்டியிடுகிறார். கொலோறடோ (Colorado) மாநிலத்தின் தலைநகரான டென்வெர் (Denver) இல் ஆகஸ்ட் 27 ஆம் நாள் நடந்த சனநாயக் கட்சியின் 2008 தேசிய பேராளர் மாநாட்டில் (Democratic National Convention) பராக் ஒபாமா சனநாயக் கட்சியின் வேட்பாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இது எதிர்பார்த்த முடிவுதான்.

டென்வரில் நடந்த சனநாயகக் கட்சியின் 4 நாள் மாநாட்டில் 4,200 க்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொண்டார்கள்.
இன்று இரவு (வியாழக்கிழமை) ஒபாமா 85,000 மக்கள் நிரம்பி வழிந்த விளையாட்டு மைதானத்தில் ஏற்புரை வழங்கினார். மாநாட்டில் பராக் ஒபாமாவின் துணைவியார் மிசேல் ஒபாமா (Michelle Obama) செவ்வாய்க்கிழமை உரையாற்றிய போது அதனை உலகளாவிய அளவில் 21.4 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தார்கள். வழக்கறிஞரான அவர் தேர்ந்த அரசியல்வாதி மாதிரி எழுச்சியோடு பேசினார்.

செவ்வாய்க் கிழமை நடந்த மாநாட்டில் கிலாரி கிளின்டன் பேசும் போது ஒபாமாவை ஆதரித்துப் பேசினார். வாக்கெடுப்பில் தனது வாக்கு ஒபாமாகவுக்கு என்று அறிவித்தார். அடுத்த நாள் மாநாட்டில் பில் கிளின்டன் உரையாற்றும் போது “பராக் ஒபாமாதான் எமது வேட்பாளர். அவர்தான் எங்களது அடுத்த ஆட்சித்தலைவர். அவருக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்யுங்கள்” (Barack Oama is ourr candidate; and he will be our president” ) என உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.

ஒபாமாவின் துணை ஆட்சிததலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ள பிடன் (Joe Biden) மாநாட்டில் பேசினார். இவருக்கு அகவை 65, தனது 29 ஆவது அகவையில் அமெரிக்க மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் தொழிலாள வர்க்கத்துக்கு ஆதரவானவர் எனக் கருதப்படுகிறார். மேலவையின் வெளியுறவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார். இவரும் பராக் ஒபாமாவும் அரசியல், படைத்துறை மற்றும பொருளாதரம் பற்றி ஒரே அலைவரிசையில் இருக்கிறார்கள் எனக் கருதப்படுகிறது.

ஒபாமாவைப் போலவே பிடன் உலக விவகாரங்களில் முதலில் இராசதந்திரத்துக்கு இடம் அளிக்க வேண்டும் என்ற கருத்து உடையவர்.

இன்றைய அமெரிக்கா அனைத்துலக அளவில் குறைந்த பாதுகாப்போடு காணப்படுகிறது. ஏனைய நாடுகளிடம் இருந்தும் ஓரம் கட்டப்பட்டுள்ளது. “எங்களது வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவை புதைகுழியில் ஆழப் புதைத்துள்ளது. ஒரு சில நண்பர்களே எங்களை வெளியில் இழுத்தெடுக்க ஆயத்தமாக இருக்கிறார்கள்” என யோ பிடன் தனது உரையில் குறிப்பிட்டார்.

இப்படிச் சொல்வதால் யோ பிடனோ அல்லது பராக் ஒபாமோ இராணுவ பலத்தைப் பயன்படுத்த மாடடார்கள் என்று பொருள் இல்லை. நல்ல நோக்கங்களுக்கு அல்ல செயல்களுக்கு இராணுவ பலத்தை பயன்படுத்துவோம் என்கிறார்கள்.

இராக் மீதான போரை ஒபாமா எதிர்த்து வாக்களித்தவர். யோ பிடன் ஆதரித்து வாக்களித்தவர். பின்னர் தனது தவறை உணர்ந்து ஒபாமாவோடு ஒத்துப் போனவர். இருந்தும் மக்களாட்சியையும் மனிதவுரிமைகளையும் காப்பதற்கு அமெரிக்கப் படைகளை சண்டைக்கு அனுப்புவதை யோ பிடன் ஆதரிக்கிறார். சுடானில் இடம்பெறும் இனவழிப்பை முஎவுக்குக் கொண்டுவர அமெரிக்கா அங்கு தனது படையினரை அனுப்ப வேண்டும் என்கிறார். ஆனால் ஒபாமாவைப் போலவே எடுத்த எடுப்பில் படைபலத்தைப் பயன்படுத்துவதை பிடன் ஆதரிக்கவில்லை.

பராக் ஒபாமா சரி யோ பிடன் சரி பதவிக்கு வந்தால் தங்கள் கவனத்தை இராக்கில் இருந்து ஆப்கனிஸ்தான் பக்கம் திருப்ப நினைக்கிறார்கள். அண்மையில் ஒபாமா பாகிஸ்தானுக்கு அமெரிக்க படைகளை அனுப்ப வேண்டும் என்று பேசியிருந்தார். இதனை யோ பிடன் ஆதரிக்கவில்லை.

சனநாயகக் கட்சியின் தொடக்கப் பேராளர் தெரிவுத் தேர்தலின் போது (primaries) கிலாரி கிளின்டனும் பராக் ஒபாமாவும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். இதனால் கிளின்டனுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் ஆட்சித்தலைவர் தேர்தலில் ஒபாமாவுக்கு வாக்களிப்பார்களா என்ற அய்யம் இருந்தது. இந்த மாநாடு அதனைப் பேரளவு போக்கியிருக்கிறது. முன்பு இருந்த கசப்மை மறந்து சனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமைப் பட்டிருக்கிறார்கள்.

குடியரசுக் கட்சியின் 2008 தேசிய மாநாடு எதிர்வரும் செப்தெம்பர் 1 – 4 வரை மினஸ்சோட்டா (Minnesota)  மாநில Minneapolis -Saint Paul அரங்கில் இடம்பெறுகிறது. இதில் 45,000 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் குடியரசுக் கட்சி வேட்பாளராக யோன் மக்கெயின் (John McCain)  தெரிவு செய்யப்பட இருக்கிறார். இந்த மாநாட்டின் மூலம் 150 – 160 மில்லியன் டொலர்கள் திரட்டப்படுமாம்.

பராக் ஒபாமாவின் தெரிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு ஆபிரிக்க – அமெரிக்கர் வெள்ளைமாளிகைக்கு போட்டியிட நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவை. இன்னும் தேர்தலுக்கு 67 நாள்களே எஞ்சியிருக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக குடியரசுக் கட்சியின் கோட்டையாக விளங்கிய வெள்ளைமாளிகையை குடியரசுக் கட்சியின் பிடியில் இருந்து மீட்டெடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கருத்துக் கணிப்புக்களில் ஒபாமா, மக்கெயினுக்கு 4 – 5 விழுக்காட்டால் முன்னிலையில் நிற்கிறார். இதன் அடிப்படையில் வெள்ளைமாளிகை ஒபாமாவின் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கிறதா?

பராக் ஒபாமா “நாங்கள் மாற்றத்தைக் ஏற்படுத்தலாம்” (We can change)  என்ற முழக்கத்தையே முன்வைத்து தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுக்கிறார்.

யோர்ஜ் புஷின் இராக் மற்றும் ஆப்கனிஸ்தான் படையெடுப்புக்களால் அமெரிக்காவின் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்துள்ளது. வரி விதிப்பால் பெறும் ஒவ்வொரு டொலரிலும் 40 சதம் இராக், ஆப்கனிஸ்தான் போருக்குச் செலவாகிறது. இதனால் டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. வரவு – செலவு திட்டப் பற்றாக்குறை 400 பில்லியன் டொலர்களைத் (ஒரு பில்லியன் 100 கோடி) தாண்டியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வீடுகளை அடைமானம் வைத்து கடன் வாங்கியோர் அதிகரித்த வட்டி விழுக்காட்டால் தங்கள் மாதாந்த கட்டுப்பணத்தைக் கட்டத்தவறி வீடுகளை இழந்து வருகிறார்கள். சில வங்கிகள் இழுத்து மூடும நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இலட்சக்கணக்கான மக்கள் நல்வாழ்வுக் காப்புறுதியின்றி அல்லல்படுகிறார்கள். நோய்க்கு ஆளாகிப் படுக்கையில் விழுந்தால் வீடுவாசல்களை விற்றுத்தான் மருத்துவச் செலவை ஈடு செய்ய வேண்டும்.

பெரும்பாலான உலகநாடுகள் அமெரிக்காவை உயர்வாகப் பார்க்க மறுக்கின்றன. அமெரிக்க எண்ணெய் குழுமங்கள் கோடிக் கணக்கில் இலாபம் ஈட்டி வருகின்றன. யோர்ஜ் புஷ் வலதுசாரி பொருளாதாரக் கோட்பாட்டுக்கு ஏற்ப செல்வந்தர்களுக்கு பல நூறு கோடி பெறுமதியான வரிச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளார். இவற்றை மாற்றி அமெரிக்காவை பழையபடி ஒரு பொருளாதார வலுவுள்ள நாடாக ஆக்கி அடிமட்ட மக்களை அவர்களது ஏழ்மையில் இருந்து தூக்கி விடுவதே தனது குறிக்கோள் எனப் பராக் ஒபாமா பேசி வருகிறார்.

பரப்பளவு                                   –   9.8 மில்லியன் சதுர கிமீ (3.8 மில்லியன் சதுர மைல்)
மக்கள்தொகை                       – 305.8 மில்லியன் (அய்யன்னா 2007) வெள்ளையர் (75.1 விழுக்காடு கறுப்பு அல்லது ஆபிரிக்க – அமெரிக்க இனத்தவர்        -12.4 விழுக்காடு.
முக்கிய மொழி                     – ஆங்கிலம்
முக்கிய மதம்                        – கிறித்துவம்
மாநிலங்கள் தொகை       – 50
கட்சிகள்                                  – (1) சனநாயகக் கட்சி (2) குடியரசுக் கட்சி
யாப்பு                                       – 1787 இல் எழுதப்பட்டது. இதுவரை 18 முறை திருத்தப்பட்டது
தலைநகர்                              – வோஷிங்டன் (கொலம்பிய மாவட்டம். இது எந்த மாநிலத்தையும் சேராதது)
பெரியநகரம்                        – நியூ யோர்க்
அகவைப் பலம்                  – 76 ஆண்டுகள் (ஆண்) 81 ஆண்டுகள் (பெண்)
சராசரி தனியாள் வருமானம் – 43,740 டொலர் (உலகவங்கி 2006)

அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது ஒன்றும் புதிதல்ல. முதலாவது மூன்றாவது உலகம் என்றில்லாமல் எல்லாநாட்டு அரசியல்வாதிகளுக்கும் அது பொதுவானதாகும். சிக்கல் எங்கே இருக்கிறதென்றால் தேர்தலில் வென்ற பிறகு அவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிகிறதா இல்லையா என்பதுதான்.

அமெரிக்கா எல்லா விதத்திலும் பெரிய நாடு. உலகத்தில் அதிக செல்வம் படைத்த நாடு. படைபலம் மிக்க நாடு. சோவியத் ஒன்றியம் கலைந்தபின் உலகில் உள்ள ஒரே வல்லரசு. அய்ந்து கண்டங்களிலும் ஏழ்கடலிலும் அதன் செல்வாக்கு கொடி கட்டிப் பறக்கிறது.

ஒவ்வொரு அமெரிக்கனும் உலகத்தின் முன்வரிசை கோடீசுவரரான பில் கேட்ஸ் (Bill Gates) போல் தானும் கோடீசுவரனாக வரவேண்டும் எனக் கனவு காண்கிறான். அதற்கு வேண்டியது கல்வி, தொழில்நுட்பம், கடின உழைப்பு என நினைக்கிறான். தான் சார்ந்திருக்கும் கட்சியைவிட நாடு (அமெரிக்கா) பெரிதென்று நினைக்கிறான். சனநாயகக் கட்சிப் பேராளர் மாநாட்டில் கட்சிக் கொடி மருந்துக்கும் இல்லை. அமெரிக்க கொடியைத்தான் கையில் வைத்து மக்கள் அசைத்துக் கொண்டிருந்தாhர்கள்.

அமெரிக்காவின் ஆட்சித்தலைவரை தேர்ந்தெடுப்பவர்கள் வாக்களர்களாக இருக்கலாம். ஆனால் அரசை ஆட்டிப்படைப்பவர்கள் பெரிய கோடீசுவரர்கள், தொழில் அதிபர்கள், பில்லியன் கணக்கில் மிகுவருவாய் ஈட்டும் பெரிய தொழில் நிறுவனங்கள். வலதுசாரிப் போக்குடைய கிறித்துவ தேவாலயங்கள் போன்றவை ஆகும்.

இந்தத் தேர்தல் “என்னைப் பற்றியது அல்ல. உங்களைளப் பற்றியது” (This election is not about me but about you) என தனது ஏற்புரையில் ஒபாமா குறிப்பிட்டார்.

தேர்தலில் ஒபாமா வென்று வெள்ளிமாளிகைக்குள் குடியேறினால் அவர் தனது வாக்குறிதிகளை எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்துவார் என்பது கேள்விக் குறியே.

அண்மையில் தமிழீழம் உட்பட உள்நாட்டுப் போர் நடை பெறும் நாடுகள் பற்றி அவரது கருத்தைக் கேட்ட போது அவன் பின்வருமாறு பதிலளித்தார்.

“The problem of the 20th Century is the problem of the colour line. This problem of the other afflicted places like Sri Lanka, Northern Ireland and the issue of race within the US..”

“இருபதாம் நூற்றாண்டின் சிக்கல் என்பது நிறம் பற்றியதாகும். இந்தச் சிக்கல் ஸ்ரீலங்கா, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்காவில் இனப்பாகுபாடு உருவில் இருக்கிறது…..”

வெள்ளைமாளிகையில் தனது அரசியல் மதியுரைஞர்கள் புடைசூழ பராக் ஒபாமா கொலு வீற்றிருக்கும் போது இருபதாம் நூற்றாண்டின் சிக்கல்கள் பற்றி மட்டுமல்ல இருபத்தியிரண்டாம் நூற்றாண்டின் சிக்கல்களையும் அவிழ்க்க அவரால் முடியுமா என்பதுதான் இன்றைய கேள்வியாகும். (Ulagath Thamizhar – August 29, 2008)


பேரஸ் முஷ்ராவ் இல்லாத பாகிஸ்தானின் எதிர்காலம்?

நக்கீரன்

குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து அயலூர் நண்ணினும் நண்ணுவர்.

குஞ்சரம் என்றால் யானை. குடை நிழலில் இருந்து கொண்டு யானை மேல் அமர்ந்து பவனி வந்தோர் அவற்றை இழந்து கால் நடையாக அயலூருக்குச் செல்ல நேர்ந்தாலும் நேரலாம்.

பாகிஸ்தான் முன்னாள் ஆட்சித்தலைவர் பேரஸ் முஷ்ராவ் (Pervez Musharraf) அவர்களின் பரிதாப நிலையைப் பார்க்கும் போது இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

பாகிஸ்தானின் சகல வல்லமை படைத்த இராணுவத் தளபதி, பின்னர் இராணுவத்தளபதி + ஆட்சித்தலைவர், பின்னர் ஆட்சித்தலைவர், இன்று மின்னாமல் முழங்காமல் ஒரே இரவில் சாதாரண குடிமகனாகிவிட்டார். பதக்கங்கள் பதித்த இராணுவ சீருடைக்குப் பதில் சாதாரண சட்டையில் தன்னைச் சந்தித்த பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் காட்சி அளித்திருக்கிறார்.

ஒரு மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு மேலே போகிறானோ வீழும் போது அவ்வளவுக்கு அளவு கீழே விழுந்து விடுகிறான்.

1999 ஆம் ஆண்டு ஒக்தோபர் 12 ஆம் நாள் நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து பேரஸ் முஷ்ராவ் பதவிக்கு வந்தார்.

பேரஸ் முஷ்ராவ் கொழும்பில் நடந்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் பொன்விழாக் கொண்டாடத்தில் கலந்து கொண்டுவிட்டு விமானத்தில் பாகிஸ்தான் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நடுவானத்தில் வைத்து அவரது படைத்தளபதிப் பதவியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பறித்திருந்தார். ஆனால் கையில் செல்தொலைபேசி வைத்திருந்த படைத்தளபதி முஷ்ராவுக்கு செய்தி எட்டிவிட்டது. வானத்தில் இருந்து கொண்டே அவர் தனது உதவிப் படைத்தளபதிகளுக்கு கட்டளைகளைப் பிறப்பித்தார். அவர் பயணம் செய்த விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கவும், பாகிஸ்தான் இராணுவம் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் நேரம் சரியாக இருந்தது.

அப்போது பிரதமர் ஆக இருந்த பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் தலைவர் நவாஸ் செரீப் பாதுகாப்பு நிறைந்த அட்டோக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். பதினைந்து மாதங்கள் கழித்து அவர் சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் மூப்பு அடிப்படையில் இராணுவத்தில் முஷாரவ் அப்போது மூன்றாவது இடத்தில் இருந்தார். இருந்தும் அடுத்த இரண்டு இராணுவ தளபதிகளையும் ஒதுக்கிவிட்டு முஷராவை நவாஸ் செரீப் நியமனம் செய்தார். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. முஷராவ் உருது பேசும் முஸ்லிம் ஆவார். தில்லியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1947 இல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட போது பெற்றோர்களோடு இடம்பெயர்ந்தவர். பஞ்சாப் மொழிபேசுவோரை பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தான் இராணுவத்தில் முஷராவ் ஒரு பலவீனமான இராணுவத் தளபதியாகவே இருப்பார் என்பது நவாஸ் செரீப்பின் கணிப்பீPடு. ஆனால் அவர் போட்ட கணக்குப் பிழைத்து விட்டது.

உலகத்தின் ஒரே வல்லரசான அமெரிக்காகூட நவாஸ் செரீப்பை ‘அம்போ’ என்று கைவிட்டு விட்டது. பாகிஸ்தானில் அரசியல் சட்டத்துக்கு முரணான ஆட்சிமாற்றத்தை ஆதரிக்க முடியாது என்று முதலில் அறிவித்த அமெரிக்கா பாகிஸ்தானில் மீண்டும் மக்களாட்சியைக் கொண்டுவர நாள் குறிக்குமாறு இராணுவ ஆட்சியைக் கேட்டதே தவிர நவாஸ் செரீப்பை மீண்டும் பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை அமெரிக்கா முன்வைக்காது பின்வாங்கி விட்டது.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அப்போது இங்கிலாந்தில் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்த பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான மக்கள் கட்சியின் தலைவி பெனாசிர் பூட்டோ நவாஸ் செரீப்பின் ஆட்சி கவிழ்க்கப் பட்டதை வரவேற்றிருந்தார்.

பாகிஸ்தானில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சிகள் காலத்துக்குக் காலம் இராணுவப் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டிருக்கிறது. முஷ்ராவுக்கு முன்னர் இருமுறை இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது. பாகிஸ்தான் அதன் 60 ஆண்டு கால வரலாற்றில் 34 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்து வந்திருக்கிறது.

.—————————————————————
பாகிஸ்தான் ஒரே பார்வையில்

பெயர் – பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு

தலைநகர்                           – இஸ்லாமபாத்

பரப்பளவு                          – கஷ்மீர் நீங்கலாக 796, 095 சதுர கிமீ (307,374 சதுர மைல்) கஷ்மீர் – 85,716
சதுர கிமீ (32,323 சதுர மைல்;)

சமயம்                                – இஸ்லாம் (97 விழுக்காடு. இதில் சுன்னிஸ் 77, ஷியா 20 விழுக்காடு)
இந்து மற்றும் கிறித்தவர்கள் – 3 விழுக்காடு

மக்கள் தொகை                            – 163.9 மில்லியன் (அய்யன்னா 2007)

எல்லைநாடுகள்                           – சீனா (523 கிமீ) இந்தியா  (2912 கிமீ) இரான் (909 கிமீ) ஆப்கனிஸ்தான் (2430 கிமீ)

மொழிகள்                                      – பஞ்சாபி ( 48 விழுக்காடு) சிந்தி (12 விழுக்காடு) சிரக்கி (10 விழுக்காடு) பாஸ்து (8 விழுக்காடு)
உருது (8 விழுக்காடு) உத்தியோக மொழி

தனியாள் வருமானம்            – 2,600 அமெரிக்க டொலர் (2007)

மொத்த பொருள் உற்பத்தி வளர்ச்சி – 6.4 விழுக்காடு

பணவீக்கம்                                                   – 7.8 விழுக்காடு

இராணுவச் செலவு                                 – 348 கோடி அமெரிக்க டொலர்

——————————————————————-

பின்னர் பேரஸ் முஷ்ராவ் இராணு தளபதி பதவியில் இருந்து கொண்டே நாட்டின் ஆட்சித்தலைவராகவும் நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். அண்மைக் காலத்தில் இராணுவத் தளபதிப் பதவியை இன்னொருவருக்கு கையளித்து விட்டு ஆட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தார்.

பேரஸ் முஷ்ராவ் பாகிஸ்தான் ஆட்சித்தலைவர் பதவியில் இருந்து தாமாகவே விலகி விட்டார். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்த குற்றச்சாட்டை (impeachment) தவிர்த்துக் கொண்டுவிட்டார். அவர் பதவி விலகு மட்டும் அவர் சார்பில் பேசக் கூடியவர்கள் அவர் எந்தக் கட்டத்திலும் பதவி விலகப் போவதில்லை அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி துறந்த பேரஸ் முஷ்ராவ் வழிபாட்டுக்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா சென்று அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டு அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிடுவார் எனச் செய்திகள் தெரிவித்தன. இப்போது எந்தக் காரணத்துக்காகவும் பாகிஸ்தானை விட்டு வெளியேற மாட்டேன் என்று முஷ்ராவ் சூளுரைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடும் தலிபான் தீவிரவாதிகளுக்கு புதிய துணிவையும் தெம்பையும் கொடுத்துள்ளது. நேட்டோ படைகளின் அமெரிக்க தளபதி டேவிட் மக்கீர்மான் (U.S.Gen. David McKierman) இந்த ஆண்டு தலிபானின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது எனக் கூறியுள்ளார். “பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டிருக்கும் சீர்கேடு கிளர்ச்சிக்காரர்களுக்கு புதிய பலத்தைக் கொடுத்துள்ளது” எனக் கூறினார். கிளர்ச்சிக்காரர்கள் பாகிஸ்தானின் பழங்குடிமக்கள் வாழும் பகுதிகளில் செல்வாக்குப் பெற்று வருவதாகவும் அதனால் மேலும் பல போராளிகளை தங்கள் பக்கம் திரட்ட முடிகிறது என்றும் இராணுவத் தளபதி டேவிட் மக்கீர்மான் சொன்னார்.

பெரும்பாலான தாக்குதல்கள் பாகிஸ்தானின் எல்லையை அண்டி இடம்பெறுகிறது. கடந்த யூலை மாததத்தில் தலிபான் மேற்கொண்ட தாக்குதலில் 9 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர். தலிபான் தாக்குதல் அணியில் சுமார் 200 பேர் பங்குகொண்டார்கள். தாக்குதல் நடந்த இடம் பாகிஸ்தானின் எல்லையில் இருக்கும் இரண்டு மாவட்டங்களுக்கு இடையிலான மலைப் பிரதேசம் ஆகும்.

கடந்த ஆகஸ்ட் 11 ஆம் நாள் தலைநகர் காபுலில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இடம் ஒன்றில் 100 தலிபான்கள் பிரஞ்சு படையணி ஒன்றை இடைமறித்துத் தாக்குதல் தொடுத்தார்கள். அந்தத் தாக்குதலில் 10 பிரஞ்சு படையினர் கொல்லப்பட்டார்கள். 21 படையினர் காயப்பட்டார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது தலிபான்களின் தெருவோர கண்ணிவெடித் தாக்குதலில் 3 கனடிய படையினர் கொல்லப்பட்டதாக செய்தி வந்துள்ளது. இந்த இறப்புகளோடு ஆப்கனிஸ்தானில் மொத்தம் 93 கனடிய படையினர் இறந்துள்ளார்கள்.

கடந்த சில மாதங்களாக செச்சீனியர்கள், துருக்கியர், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த போராளிகள் தலிபான் அமைப்பில் சேர்ந்து வருகிறார்கள். சில வெள்ளை நிறத்தவர் கூட சேர்ந்திருப்பதாக அமெரிக்க தளபதி டேவிட் மக்கீர்மான் தெரிவிக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) பேரஸ் முஷ்ராவ் தனது பதவியில் இருந்து விலகுவதாக தொலைக்காட்சியில் அறிவித்ததை அடுத்து மக்கள் வீதியில் வந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். குறிப்பாக வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பல இடங்களில் முஷ்ராவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

அடிப்படைவாதிகளது கோட்டையாகக் கருதப்படும் வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வாழும் மக்கள் பேரஸ் முஷ்ராவ் பதவி துறந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு ஒப்பீட்டளவில் முஷ்ராவ் எதிரானவர் என்ற எண்ணம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருக்கிறது.

மார்ச் 06, 2008 இல் நடந்த தேர்தலில் முஷ்ராவின்; கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி (Q) படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கு மொத்தம் 340 இருக்கைகள் கொண்ட நாடாளுமன்றத்தில் 54 இருக்கைகள் மட்டும் கிடைத்தன. பாகிஸ்தான் மக்கள் கட்சியும் (124) நவாப் செரீப்பின் முஸ்லிம் கட்சியும் (91) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றின.

பேரஸ் முஷ்ராவ் மக்கள் செல்வாக்கு இழந்ததற்கு ஒரு பலமான காரணம் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட பல நீதிபதிகளின் பதவிகளைப் பறித்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததுதான். பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவதில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் அசிவ் அலி சர்தாரியும் ((Asif Ali Zardari) நவாஸ் செரிப்பும் தங்களுக்குள் முரண்படுகிறார்கள்.

மொத்தம் 163.9 மில்லியன் (பதினாறு கோடி) மக்களைக் கொண்ட பாகிஸ்தான் ஒரு ஏழை நாடு. அதன் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் துரித வளர்ச்சி;யைக் கண்டாலும் அன்றாட செலவுகளைச் சமாளிப்பதற்கு அமெரிக்கா, உலக வங்கி மற்றும் அனைத்துலக நிதி நிறுவனம் (International Monetary Fund) இவற்றின் நிதி உதவியிலேயே தங்கியுள்ளது.

கஷ்மீர் சிக்கல் தொடர்பாக இந்தியாவிற்கும் – பாகிஸ்தானுக்கும் இடையில் பிரகடனப் படுத்தப் படாத யுத்தம் நடந்து வருகிறது. இரண்டு நாடும் வருமானத்தில் பெரிய விழுக்காட்டை இராணுவ தளபாடங்கள், ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பதில் செலவழித்து வருகின்றன. ஆண்டொன்றுக்கு பாகிஸ்தான் மட்டும் பாதுகாப்புக்கு 248 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவழிக்கிறது.

பாக்கிஸ்தான் உருவாகிய பின்னர் கஷ்மீர் யாருக்குச் சொந்தம் என்பதில் பாகிஸ்தான் – இந்தியா இரண்டு நாடுகளுக்கும் இடையில் மூன்றுமுறை போர் நடந்திருக்கிறது. கஷ்மீர் தீவிரவாதிகளுக்கு இராசதந்திர, அரசியல், இராணுவ மட்டத்தில் பாகிஸ்தான் மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. இதன் காரணமாகவும் பாகிஸ்தான் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

பேரஸ் முஷ்ராவ் இல்லாத பாகிஸ்தானின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பாகிஸ்தானிய அரசியல்வாதிகள் ஊழலுக்குப் பெயர் போனவர்கள். விரைவில் மீண்டும் ஒரு இராணுவப் புரட்சி ஏற்பட்டாலும் வியப்பில்லை.

“மக்களாட்சியும் இசுலாமும் இலகுவில் கலப்பதில்லை” (Islam and democracy do not easily mix) என்று சொல்வார்கள். பாகிஸ்தானின் கடந்த கால வரலாறு இதனை எண்பிக்து வருகிறது. (உலகத் தமிழர் – ஆகஸ்ட் 22, 2008)


எலி வளையானாலும் தனிவளை வேண்டும்!

எலி வளையானாலும் தனிவளை வேண்டும் என்பார்கள். ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கு என ஒரு இறைமை படைத்த நாட்டை உருவாக்கிக் கொள்ள விரும்புகிறது.

அய்க்கிய நாடுகள் அவை 1945 இல் உருவாக்கப்பட்ட பொழுது அதில் உறுப்புரிமை வகித்த நாடுகளின் எண்ணிக்கை 50 ஆகும். இப்போது அதில் மொத்தம் 192 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. பீஜிங்கில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் 204 நாடுகள் பங்கு பற்றின.

இன்று செவ்வாய்க்கிழமை ;ஒரு இனிப்பான செய்தி வந்திருக்கிறது. ஒசெச்சியா மற்றும் அப்காஷிய மக்கள் சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளார்கள்.

சுதந்திரப் பிரகடனம் செய்த சில மணித்தியாலங்களில் அந்த நாடுகளை உருசியா அங்கீகரித்துள்ளது. இராசதந்திர உறவுகளை மேற்கொள்ள உருசியா நடவடிக்கை எடுத்துள்ளது. உருசிய தேசியக் கொடி ஒருபுறமும் ஆட்சித்தலைவர் பதாதை மறுபுறமும் இருக்க உருசிய நாட்டின் ஆட்சித்தலைவர் டிமித்ரி மித்விடேவ தொலைக்காட்சியில் தோன்றி ஒசெச்சியா மற்றும் அப்காஷிய நாடுகளை அங்கீகரிக்கும் முடிவை நாட்டுமக்களுக்கு அறிவித்தார்.

“யோர்ஜியாவின் ஆட்சித்தலைவர் மிக்கேல் சாகாஷ்விலி தனது அரசியல் சிக்கல்களை தீர்ப்பதற்கு இன அழிப்பை தெரிவு செய்தார். அதன்பின் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த மக்கள் தங்களது தலைவிதியைத் தாங்களே தீர்மானிப்பதற்கு உரிமையுடையவர்கள்” என டிமித்ரி மித்விடேவ விளக்கம் அளித்துள்ளார். அவர் மேலும் பேசும் போது “தென் ஒசெச்சியா மக்களும் அப்காஷியா மக்களும் ஒருமுறைக்குப் பலமுறை தங்கள் நாடுகளின் சுதந்திரத்தை வற்புறுத்தி நேரடி வாககெடுப்பு மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள். ஆனால் யோர்ஜியா அதனை அலட்சியப்படுத்தி விட்டு படையெடுப்பை மேற்கொண்டது” என்றார்.

உருசியாவின் முடிவை நேட்டோ கண்டித்துள்ளது. அமெரிக்க இராசாங்க செயலர் கொன்டலீசா றைஸ் “வருத்தப்பட வேண்டிய நடவடிக்கை” என வருணித்தார். ஜெர்மன் ஆட்சித்தலைவர் அஞ்சலா மேர்கெல் “முற்றிலும் ஏற்க முடியாத நடவடிக்கை” என்றார். பிரித்தானியா “உருசிய முடிவு முற்றாக நிராகரிக்கப்படுகின்றது” என்றது. பிரான்ஸ் கவலை தெரிவித்தது.

சுவீடிஷ் வெளியுறவு அமைச்சர் கார்ல் பில்டிற் கருத்துத் தெரிவிக்கையில் “ உருசிய அரசின் தலைவர்கள் அய்ரோப்பாவோடு அல்லாமல் பொதுவாக அனைத்துலக சமூகத்தோடும் மோதும் கொள்கையை தெரிவு செய்துள்ளார்கள்” என்று மற்றவர்களைவிட கொஞ்சம் காட்டமாக உருவியாவைச் சாடினார்.

யோர்ஜியாவின் துணை வெளியுறவு அமைச்சர் உருசியாவின் நடவடிக்கை “யோர்ர்ஜியாவின் அப்பட்டமான நில அபகரிப்பு” என்றார்.

ஆனால் மேற்குலக நாடுகளுக்கு இருக்கும் தெரிவுகள் (options)  என்ன? அய்யன்னாவின் பாதுகாப்பு அவை ஒன்றும் செய்ய முடியாது. காரணம் உருசியா தனது வீட்டோ பலத்தைப் பயன்படுத்தி தீர்மானங்களை தோற்கடிக்கும். உருசியாவைப் பகைத்தால் இரானின் அணுசக்தி தொடர்பான திட்டத்துக்கு ஆதரவாக உருசியா செயல்படக் கூடும். இப்போது உருசியா அமெரிக்காவுக்குத் தனது ஆதரவை கொடுத்து வருகிறது. மேலும் ஆப்கனிஸ்தானுக்குப் படையினர் மற்றும் போர்த் தளபாடங்களை உருசியா ஊடாக நகர்த்தப்படுவதை உருசியா நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது.

மேற்குலக நாடுகள் அதிகபட்சம் உருசியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நினைத்தால் உருசியாவை ஜி8 நாடுகளது அமைப்பில் இருந்து கழட்டிவிடலாம். உருசியா உலக உடல்நல அமைப்பில் சேரவிடாது தடுக்கலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 07 ஆம் நாள் யோர்ஜியா தென் ஒசெச்சியாவைத் தாக்கி அதன் தலைநகர் Tskhinvali யை யோர்ஜிய படைகள் பிடித்தது. அந்தப் படையெடுப்பில் ஒசெச்சியாவின் தலைநகர் தரைமட்டமாக்கப் பட்டது. 2,000 பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உருசிய அமைதிப்படையைச் சேர்ந்த பலரை யோர்ஜிய அமைதிப் படையினர் சுட்டுக் கொன்றார்கள். யோர்ஜியா அரங்கேற்றிய படையெடுப்பையும் படுகொலைகளையும் ஆட்புலத்தில் ஒரு பகுதி என்பதுதான் யோர்ஜியா தனது படையெடுப்புக்குச் சொன்ன காரணம் ஆகும்.

உருசிய ஆட்சித்தலைவர் டிமித்ரி மித்விடேவ் யோர்ஜியா அரங்கேற்றிய படுகொலைகள் முழுமையான இன வடிகட்டல் என அப்போது வருணித்தார். அத்தோடு அவர் அமைதி அடைந்துவிடவில்லை. “உருசிய குடிமக்கள் எங்கிருந்தாலும் அவர்களது உயிரையும் தன்மானத்தையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அவர்களது கொலைக்குப் பொறுப்பானவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர்களுக்குரிய தண்டனை நிச்சயம் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளையே உருசியா மேற்கொண்டுள்ளது” என உருசிய ஆட்சித்தலைவர் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற பாணியில் தெரிவித்தது நினைவிருக்கலாம்.

மீண்டும் ஒரு பனிப்போர் மேற்குலக நாடுகளுக்கும் – உருசியாவுக்கும் இடையில் தொடங்குமா? “அதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். ஆனால் ஒரு பனிப்போரை நாங்கள் விரும்பவில்லை” என்கிறார் டிமித்ரி மெட்வேடெவ்.

தங்கள் நாடுகளின் சுதந்திரத்தை உருசியா அங்கீகரித்த செய்தியைக் கேட்டு தென் ஒச்செச்சியர்களும் அப்காஷியர்களும் வீதியில் இறங்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். விண்ணில் துப்பாக்கி வேட்டுக்களை சுட்டுத் தீர்த்தார்கள். சம்பெயின் (champagne)  போத்தல்களை திறந்தார்கள். மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என ஆடிப் பாடினார்கள்.

“சேர்பியாவில் இருந்து பிரிந்த கொசொவோவை அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் அங்கீகரிக்க முடியும் என்றால் நாங்கள் ஏன் தென் ஒசெச்சியாவையும் அப்காஷியாவையும் அங்கீகரிக்கக் கூடாது” என உருசியா திருப்பிக் கேட்கிறது. அது நியாயம்தானே?

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைந்தபின் இருதுருவ ((bi-polar) உலகுக்குப் பதில் தனித்துருவ (ரni-pழடயச றழசடன) உலகு உருவாகியது. அமெரிக்கா உலக அரங்கில் தனிக்காட்டு இராசாவாக காட்சி அளித்தார். தட்டிக் கேட்க ஆள் இருக்கவில்லை. ஆனால் அமெரிக்கா இனிச் சண்டித்தனம் செய்தால் அதனைக் தட்டிக் கேட்க உருசியா கிளம்பியுள்ளது. இது பெரும்பான்மை தேசிய இனங்களின் பிடியிலிருந்து தப்ப விடுதலைக்குப் போராடும் எண்ணிக்கையில் குறைந்த தேசிய இனங்களுக்கு நல்ல செய்தி ஆகும்.

ஒரு நாட்டின் எல்லைகள் என்பது கடவுளால் கீறப்பட்டவை அல்ல. போரில் வென்றவர்கள் எல்லையைக் கீறுகிறார்கள். தென் செச்சியா மற்றும் அப்காஷியாவை உருசியா அங்கீகரித்திருப்பது யோர்ஜியாவின் “இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு” (Sovereignty and territorial integrity) என்ற கோட்பாட்டை நிர்முலமாக்கியுள்ளது.

இன்று உலகத்தில் நடைபெறும் மோதல்களில் பெரும்பான்மையானவை சிறுபான்மை தேசிய இனங்களை பெரும்பான்மை தேசிய இனங்கள் ஆயுத முனையில் அடக்கி ஆளும் ஆட்சிக்கு எதிரானவை ஆகும். எடுத்துக்காட்டாக திபெத், கஷ்மீர், தமிழீழம், பலுஸ்தித்தான், பாஸ்க், குர்திஷ், சீனாவின் வட மேற்கு மாகாணமான சிங்ஜியாங் (Xinjiang)  இல் வாழும் உய்க்கூர் (Uighur)  முஸ்லிம்கள் போன்ற தேசிய இனங்களைக் குறிப்பிடலாம். கியூபெக் மக்கள் கூட தனிநாட்டுக் கோரிக்கையை இன்னும் கைவிடவில்லை.

எண்ணிக்கையில் பெரிய தேசிய இனங்கள்; சிறிய தேசிய இனங்களை வலோத்காரமாக – அவர்களது ஒப்புதல் இன்றி – அவர்கள் மீது சவாரி செய்யும் அல்லது சவாரி செய்ய நினைக்கும் மேலாண்மைப் போக்கைக் கைவிட்டால் உலகில் மோதல்கள் அருகி அமைதி ஏற்பட வழி பிறக்கும். தென்; ஒசெச்சியா மற்றும் அக்பாஷிகா சொல்லித் தரும் அரசியல் பாடம் இதுதான். (தமிழ்ச்சோலை – ஆகஸ்ட் 26 2008)


About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply