ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு – சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (21-40)

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு – சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (21-40)

ஆக்கம்: பாவை சந்திரன்

புதிய அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் (1961) சிங்களப் பேரினவாத மனப்பான்மையுடைய சிங்களவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் தங்கள் நலன்களுக்குப் பாதகமான சட்ட முன்வடிவங்களை ஆங்கிலேயர் வைக்கயில் அவை தமிழர்க்கு ஒரு சில சலுகைகளையே அளித்த போதிலும், அவற்றுக்கு முட்டுக்கட்டையிட்டு, தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் அவற்றுக்கு எதிராகத் தங்கள் மக்களின் எதிர்ப்புக் குரல்களை ஒன்றிணைக்க முயற்சித்தனர்.

தாங்கள் ஆட்சிக்கு வந்த பின் புதிய வடிவில் வேறு பல சட்டங்களைக் கொண்டு வந்து, பழைய சட்டங்களைத் தூக்கியெறிந்து தமிழர்களை ஒடுக்க நினைத்தனர்.

ஆரம்ப காலச் சிங்கள இனவாதம், சட்ட வடிவங்களை முன்வைத்தே தமிழர்களை ஒடுக்கியது.

1920-சட்ட நிரூபண சபைக்கான திருத்தம்:

மலையக மக்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு, டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசை அரசு அமலாக்க நினைக்கிறது. ஆனால் மலையக மக்களின், குறிப்பாக தமிழர்களின் வாக்குரிமையால் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கிடைத்துவிடும் என்றும், அம்மக்களின் ஆதரவால் இடதுசாரிகளின் கை, பாராளுமன்றத்தில் ஓங்கும் என்பதால் சிங்களவர்கள் இதை அமலாக்குவதை எதிர்த்தனர்.

1931-“டொனமூர் சிபாரிசு’ சில திருத்தங்களுடன் அமலாதல்:

அத்திருத்தங்களினால் யாழ் சிறுபான்மையினர் பாதிப்படைகின்றனர். யாழ் பகுதி மக்கள் கடுமையாக இதை எதிர்க்கின்றனர்.

1937-“உள்ளாட்சித் தேர்தல் வாக்குரிமைச் சட்டம்’:

இச்சட்டத்தால் உள்ளாட்சித் தேர்தலில் தோட்டத் தொழிலாளர் பங்கேற்காத வகையில், அவர்களின் நலன்களை அமலாக்காதபடிக்கு, அவர்களுக்கு வாக்குரிமையைப் பறிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் வந்தது. இதன் மூலம் பழைய ராணுவ முகாம் பாணியில் காலனிகளில் தமிழர்கள் பிற சமூக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.

1940-“வாழ்விடத் தெரிவு பிரஜைகளை பதிவு செய்தல்’ சட்டம்:

இச்சட்டத்தின் மூலம் தமிழர்கள் தாங்கள் எந்தப் பகுதி மற்றும் குடியிருப்புகளில் தங்கி வாழ்கின்றனர் என்பதைப் பதிவு செய்தல் வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களின் நடமாட்ட விஸ்தரிப்பையும் இதன் மூலம் கட்டுப்படுத்துகிறது. இச்சட்டத்தில் சில விதிகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

1939-இல் இருந்ததை விட 57,000 பேர் தமிழர்களின் எண்ணிக்கையில் குறைக்கப்பட்டனர். மேலும் இச் சட்டத்தின் மூலம் 1943-இல் பெருமளவுக்கு வாக்காளர்கள் குறைக்கப்பட்டனர்.

1948-49 “குடியுரிமைச் சட்டம்’:

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமான 15 லட்சம் மக்கள் தொகையுள்ள மலையகத் தமிழர்களுக்கு விழுந்த முதல் அடி இதுவாகும். தமிழருக்கான குடியுரிமை மறுக்கப்பட்டது. உலகில் எந்த நாட்டிலுமே இல்லாத ஒரு குடியுரிமைச் சட்டம் இது.

சில நாடுகளில் அம்மண்ணிலேயே பிறந்தவர்களுக்குக் குடியுரிமை உண்டு. வேறு சில நாடுகளில் சில காலம் வாழ்ந்தாலே குடியுரிமை பெறும் தகுதி கிடைத்து விடுகிறது. இன்னும் சில நாடுகளில் குடியேறியவர்கள் அங்குள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்து ஏற்றுக்கொண்டாலே போதுமானது.

ஆனால் தலைமுறை தலைமுறையாக இலங்கையிலேயே வாழ்ந்து, இந்தியாவுடன் தொடர்பினை இழந்த மக்களுக்கு; அதே நாட்டில் ஏற்கெனவே குடியுரிமை பெற்றிருந்தவர்களுக்கு, இச் சட்டத்தின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டது.

இது ஒரு விநோதமான சட்டமாகும். சிங்களப் பெயர் அமைந்திருந்தால் அவர்களுக்குப் பிரஜா உரிமை உண்டு. குழந்தைகளுக்கோ உறவினருக்கோ தமிழ்ப் பெயர் இருக்குமானால் அவர்களுக்கு பிரஜா உரிமை இல்லை. இச்சட்டம் குடும்பங்களையே பிளவுபடுத்தியது. மேலும் இஸ்லாமியப் பெயர் கொண்டிருந்தால் அவர்களுக்குப் பிரஜா உரிமை இல்லை.

இதில் விசித்திரம் என்னவென்றால், “குடியேறியவர் லைசென்சு கொள்கை சட்டத்தின்’ கீழ் ஏற்கெனவே சட்டப்பூர்வமாக குடியேறியவர்கள், இச்சட்டத்தின் மூலம் சட்ட விரோதமாகக் குடியேற்றியவர்களாகக் கருதப்பட்டனர்.

1949- “இந்திய பாகிஸ்தான் குடியிருப்பு சட்டம்’:

இச்சட்டத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள், பத்தாண்டுக்கு முன்பிலிருந்து தொடர்ச்சியாக அந்நாட்டிலேயே இருந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். இது மேலோட்டமாகச் சாதாரண ஒரு நிகழ்ச்சியாகத் தெரியும்.

ஆனால் பத்தாண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இருந்திருப்பதை நிரூபிப்பதில் கண்டிப்பான வழிமுறைகளும் சிக்கலான நடைமுறையும் பல அதிகார விதிகளும் உருவாக்கப்பட்டுக் குடியுரிமை பெறுவதை மேலும் சிக்கலாக்கின.

1948-49 “தேர்தல் திருத்தச் சட்டம்’: (Elecltion Amendment Act:)

தமிழர்களுக்கு வாக்குரிமைப் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது இச்சட்டத்தின் மூலம்தான். தொகுதிகளின் எண்ணிக்கையில் அதிகமான அளவிற்கு சிங்களவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

1. தோட்ட நிர்வாகிகள் உரிமையாளர்களின் நலன்கள் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டது. தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல; 1931-இல் அளிக்கப்பட்ட வாக்குரிமை பறிக்கப்படுகிறது. 1949-இல் உருவான குடியேற்ற மசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இறுதி வடிவம் பெறுதலும் இச்சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள். இச்சட்டப்படி 1951 ஆகஸ்டு 5 வரை பிரஜா உரிமைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

2,37,034 விண்ணப்பங்களில் குடும்பத்தவர் உள்ளிட்ட 8,25,000 பேருக்கு தமிழ் பிரஜா உரிமை கோரப்பட்டது. ஆனால் 1951-இல் இருந்து 1962 வரை 11 ஆண்டுகள் விண்ணப்பங்களை அரசு பரிசீலனை செய்வதிலேயே கழித்தது. 1962-இல் ஒரு லட்சத்து முப்பத்து நாலாயிரத்து நூற்று எண்பத்தெட்டு பேர் விண்ணப்பித்ததில் 16.2 சதவிகிதம் பேரே பிரஜா உரிமை பெற்றனர்.

1956-“ஆட்சி மொழிச் சட்டம், தனிச் சிங்கள மொழிச் சட்டம்’:

இலங்கை முழுவதும் சிங்கள மொழி ஒரே ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் அரசாங்க நிறுவனங்கள், கல்வி, நீதிமன்றம் போன்ற துறைகளில் இதனை அமல்படுத்திய விதம், தமிழர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பெரும் தொல்லைகளை அளிப்பதாக இருந்தது.

1957, 1965 ஒப்பந்தங்கள் ரத்து:

தமிழ் தலைவர்களுடன் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயகா 1956-லும், டட்லி சேனநாயகா 1965-ஆம் ஆண்டிலும் ஆட்சி மொழிச் சட்டம் மற்றும் பிற பாகுபாடுகளினால் ஏற்படும் விளைவுகளை ஒட்டி, தமிழர்களுக்கு ஏற்பட்ட குறைகளை நீக்கிட ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

ஆனால் இந்த இரண்டு ஒப்பந்தங்களுக்கு எதிராகச் சிங்களவரிடையே செல்வாக்கு மிக்க புத்த பிட்சுக்கள் மற்றும் தலைவர்களின் தலையீடு காரணமாக இவை ரத்து செய்யப்பட்டன. அவ்வப்போது தமிழர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று சிங்கள ஆட்சியாளர்கள் அறிவிப்புச் செய்து கொண்டே வந்தனர்.

அவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அறிவிப்புகளை அளிப்பதும் சில அரசியல் பதவிகளை அளித்து அரசியல் லாபத்திற்காகச் சிறுபான்மையினரைப் பயன்படுத்திக் கொண்டும் வந்தனர். அது மட்டுமல்லாது தமிழை ஒரு மாநில மொழியாகவும் ஆக்கியது உள்பட, சிறப்பு வசதிகள் தமிழர்களுக்குச் செய்யப்பட்டன. ஆனால் சில நேரங்களில் சிங்கள இனவாதக் கொள்கை கொண்டவர்களால் இவை எதிர்க்கப்பட்டன.

சில நேரங்களில் அவர்களே பெரும் விளம்பரங்களை இச்செயல்களுக்குத் தந்தனர். ஆனால் இச்சட்டங்களை உண்மையிலேயே அமல்படுத்தியது மிகமிகக் குறைவே ஆகும்.

1960-61 “கல்வித் துறை தேசியமயம்’:

பள்ளிகளை தேசியமயமாக்கியது, 2 ரோமன் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் பிரிவினரை மிகவும் பாதித்தது. தனியார் பாடசாலைகள் பல தேசிய மயமாக்கப்பட்டன. வெளித் தோற்றத்தில் ஒரு முற்போக்கான அம்சமாக இது தென்படும். ஆனால், இதை அமலாக்கும்போது மதச்சிறுபான்மையினருடைய நிறுவனங்கள் அனைத்தும் அரசு மயமாக்கிச் சிங்களவருடைய நிர்வாகத்தின் கீழ் நிலைநிறுத்தப்பட்டது.

இதன் மூலம் மலையகத்தில் இருக்கும் தமிழ்ப் பாடசாலைகள் அனைத்தும் சிங்களப் பாடசாலைகளாகவும் மாற்றப்பட்டன. அங்கு சிங்கள மொழி முதன்மை பெற்றுக் குழந்தைகளின் தாய்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால் மலையக மக்கள் பெருமளவிற்குப் பாதிப்பு அடைந்தனர். மதச் சிறுபான்மையோருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்டது.

அதே நேரத்தில் 1964-இல் அக்டோபர் 30-ஆம் தேதி ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி சுமார் 6 லட்சம் பேர் குடியுரிமை இழந்து விடுகின்றனர்.

22. அவசரகாலச் சட்டம்!

புதிய அரசமைப்புச் சட்ட எதிர்ப்பு
ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்திற்குப் பிறகு சிங்களப் பேரினவாதம் பெரிய அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது எனலாம். தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் முயற்சியும், முடிந்தால் முழுவதுமாக வெளியேற்றிவிடும் முயற்சியும் முனைப்புடன் கட்டவிழ்த்து விடப்பட்டன.

1971-74 தர நிர்ணயம் மற்றும் மாவட்ட ஒதுக்கீடுகள் சட்டம்:

செய்தி நிறுவனத் தணிக்கை; தர நிர்ணயம் மற்றும் கல்வித் துறை மாவட்ட ஒதுக்கீடுகள் பல்கலைக்கழக அனுமதியின் கீழ் கடைபிடிக்கப்பட்டன. புத்தக வெளியீடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. பத்திரிகைச் சுதந்திரம் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமூக வேறுபாடுகளைச் சீர் செய்வதற்காக இவை கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது.

பல்கலைக்கழக வளாகங்கள் முறைப்படுத்தப்படுதல் ஏற்கெனவே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்திய விதம் சிக்கல் மிகுந்ததாக இருந்தது.

தமிழரின் பல்கலைக்கழக அனுமதிகளை இது மிகவும் பாதித்தது. படித்த தமிழ் இளைஞர் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஒரு பலத்த அடியைக் கொடுத்தது.

1974 யாழ் பல்கலைக்கழக புனரமைப்புச் சட்டம்:

பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தைத் துவக்கியதன் மூலம் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை தமிழ் மக்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மீண்டும் இதனை இங்கு செய்த விதம் கேள்விக்குறியாக மாறியது. தர நிர்ணயமும் இச் சட்டத்தோடு இணைந்து தமிழ் மாணவர்கள் விகிதமும், அங்கு அனுமதிக்கப்பட்ட பாடங்களும் நிறைவு தருவதாக இல்லை.

1971-1978 புதிய அரசியல் அமைப்புச் சட்டங்கள்:

1972-இல் இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது. புதிய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகியது. 1948-ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறுபான்மையோருக்கு இருந்த 29-ஆவது பிரிவு-தமிழர் உரிமைகளுக்கான சட்ட ரீதியான சிறப்புப் பாதுகாப்புகள், மற்றும் மத சிறுபான்மையோருக்கான பாதுகாப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்பட்டன. சிங்கள மொழி, சிறப்புத் தகுதியைப் பெற்றது. புத்த மதம் அதிகார பூர்வமான மதமாக அறிவிக்கப்பட்டது. சிங்களப் பேரினவாத அடக்குமுறை வடிவத்திற்கு, மதவாத முகமூடிகளைத் தரித்து அதைச் சட்டபூர்வமானதாக ஆக்கியது.

அதேபோன்று 1978-ஆம் ஆண்டு புதிய அரசியல் சட்டம், புதிய ஆட்சி முறை-ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் நாட்டைக் கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு அதிகார வடிவம் ஒரு முனையாக மையத்தில் குவிக்கப்பட்டது.

ஏற்கெனவே இருந்த சட்ட ஷரத்துகளில் பலமுனை அதிகார வடிவ அமைப்புகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. (மாவட்டம், உள்ளூர் ஆட்சி அதிகாரம் ஆகியவை பரவலாக்கப்பட்ட அதிகார வரம்புகள் குறுக்கப்பட்டன). இதன் மூலம் நாட்டில் உடனடியான பொருளாதாரத் திட்டமிடல், புதிய பொருளாதாரக் கொள்கைகள் நிறைவேற்றம் போன்றவை நிகழ்த்துவதற்கு வாய்ப்புகள் திறந்து விடப்பட்டன.

1972-74 நிலச் சீர்திருத்தம்:

1972-74 நிலச் சீர்திருத்தங்கள் தமிழர்களைப் பெரிதும் பாதித்தது. தோட்டங்களில் பணியாற்றிய இந்தியத் தமிழ்த் தொழிலாளர்கள் நிலங்களை இழந்தனர்.

நில ஆக்கிரமிப்பின் கீழ் பல நிலங்கள் பிடுங்கப்பட்டன. விவசாய நிலங்களைப் பிரித்து அளிப்பது என்றில்லாமல் மலைப்பகுதியில் உள்ள தோட்ட நிலங்களைப் பிரிப்பது இதன் முக்கிய அம்சமாக இருந்தது.

நிலச் சீர்திருத்தத்தில் தமிழர்களுக்குப் பதிலாக சிங்களவர்களுக்கு நிலங்கள் கை மாறின.

1975 காணி உச்சவரம்புச் சட்டம்:

தமிழர்கள் தங்களது சொந்த நிலம் என்று பரம்பரை பரம்பரையாகக் கருதி வந்த பகுதிகளில் சிங்களவர்களின் ஆதரவால் இட ஆக்கிரமிப்பும், அரசு உதவியுடன் கூடிய குடி அமர்த்தலும் செய்யப்பட்டு, அங்கு சிங்களவர்கள் பெரும் எண்ணிக்கையில் குடி அமர்த்தப்பட்டனர்.

தமிழர்களுக்குப் போதிய பங்கீடு கிடைக்கவில்லை. மேலும் உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் உதவியுடன் மாதிரிக் கிராமங்களையும், மாதிரிக் காலனிகளையும் அரசு உருவாக்கியது.

பழைய குடியிருப்புகள் கலைக்கப்பட்டுப் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் தொழிலாளர் குடியிருப்புகள், சிங்களவர் காலனிகளாக ஆக்கப்பட்டன. அதில் சிங்களவர்கள் பெரும் அளவில் குவிக்கப்பட்டனர். தமிழர்களுக்கான ஒதுக்கீடும் குறைக்கப்பட்டது.

1979 பயங்கரவாத தடுப்புச் சட்டம்:

மனித உரிமைகளை மறுக்கும் பல விதிகள் இந்தச் சட்டத்தினுள் நுழைக்கப்பட்டன. இதன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் 18 மாதங்கள் அமைச்சர் தீர்மானிக்கும் இடத்தில் வைக்கலாம். போலீஸôர் முன் ஒருவர் கூறிய புகார் ஆதாரமாகக் கருதப்படும். கொலை, கடத்தல், ஆயுதம் வைத்திருத்தல், இனக்கலவரம் ஏற்படுத்தக்கூடிய சொற்கள், சைகைகள் இதில் அடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 5 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும்.

1980-பல நல்வாழ்வுத் திட்டச் சட்டங்கள்:

1. கிராமப்புறங்கள் மேம்பாட்டுத் திட்டம்.

2. நட்லி குடியேற்றத் திட்டம்.

3. நகர விரிவாக்கத் திட்டம்.

4. கிராமப்புற ஒன்றிணைப்பு.

5. பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்துதல்.

6. மீன் காடாக்கம்.

7. மாதிரிக் கிராம நிலப்பங்கீடு.

இந்தச் சட்டங்கள், நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் சிங்களமயமாக்கும் கொள்கையை ஒட்டி வந்தனவாகும். மாதிரிக் கிராமங்களை உருவாக்கியது போன்று மாதிரித் தோட்டங்களும் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. மாதிரிக் கிராமங்களில் விவசாயிகளுடைய மேம்பாட்டிற்கு என்று கூறிக்கொண்டு சிங்கள விவசாயிகளைக் குவிக்கவும் தமிழ் விவசாயிகளை வெளியேற்றவும் இச்சட்டம் பயன்பட்டது.

அதேபோன்று மாதிரித் தோட்டங்களில் சிங்களவர்களைக் குடியேற்றித் தமிழர்களை வெளியேற்றக்கூடிய அவர்களை முற்றாகப் புறக்கணிக்கக் கூடிய வகையில் இவைகள் அமைந்தன.

மீன் காடாக்கம் என்ற திட்டத்தின் கீழ் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். நகர விரிவாக்கம் என்பது மலையகத் தமிழ் நகரங்களை விரிவாக்குவதன் கீழ் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்புகளை அதிகப்படுத்தி, நகரத்தைச் சிங்களப்படுத்தும் திட்டத்தினை உருவாக்கினார்கள். கிராமப்புற-தோட்டப்புற ஒன்றிணைப்பு என்ற மட்டத்தின் கீழ் நாலைந்து அடுத்தடுத்த கிராமங்களை இணைப்பதன் மூலமும், அதற்கான பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமும் விவசாயப் பகுதி நிலங்களில் குடியேற்றத்தைத் திணிப்பதன் மூலமும் சிங்கள மயமாக்கப்பட்டது.

நல்வாழ்வுத் திட்டங்களின் பெயரில் அவை சிங்களவர் நல்வாழ்வுத் திட்டங்களாகவே உருவெடுத்தன. சட்ட ரீதியான ஒடுக்கு முறையின் மூலம் பொருளாதார ரீதியாகத் தமிழர்களைப் பின் தள்ளினர். பொருளாதார ரீதியான பின் தள்ளுதல் மூலம் வாழ்நிலை மாற்றங்களில் குழப்பங்களை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையில் ஒரு நிச்சயமற்ற தன்மைக்கும் உத்திரவாதமற்ற வாழ்க்கைக்கும் தமிழர்களைச் சிங்களப் பேரினவாதம் தள்ளியது.

அவசரகாலச் சட்டம்:

1983-ஆம் ஆண்டில் தொடங்கி ஆண்டுக் கணக்கில் நாடாளுமன்ற ஒப்புதல் மூலம் யாழ்ப்பாணத்தில் அவசரநிலை நீட்டிக்கப்பட்டது. இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டால், சாதாரண உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டுவிடும். கைது, தடுப்புக்காவலில் வைப்பது, சடலங்களை அழிப்பது போன்றவை தாராளமாக நடைபெறும். தடுப்புக்காவலில் ஒருவர் வைக்கப்பட்டால், அவரது உறவினரிடம் தெரிவிப்பது அவசியம் என ஐ.நா.சபையின் 92 வது பகுதி அனுமதிக்கிறது. ஆனால், இலங்கையின் அவசரகாலச் சட்டத்தில் இதற்கு இடமில்லை.

 

தடை செய்யப்பட்ட பகுதிகள்:

கடல் பகுதிகள்-யாழ்ப்பாணம்-மன்னார், வவுனியா-முல்லைத்தீவு போன்ற பகுதிகள், காட்டுப்பகுதிகள் போன்றவற்றில் தடை விதிக்கப்பட்டால், மீன்பிடிக்க, படகில் செல்ல, கடைத்தெரு, மருத்துவமனை, கல்விச்சாலை மற்றும் அலுவலகங்கள் செல்ல யாவற்றுக்கும் தடை உண்டு.

கடல் பகுதியில் மீனவர் மீன்பிடித்தொழிலில் இறங்கமுடியாது. எல்லை சுருக்கப்பட்டுவிடும். நகரங்களில், காடுகளில் அனுமதியின்றி நடமாடுவோரைச் சுட்டுத்தள்ளும் ஆணையை போலீஸôர், ராணுவத்தினர் யாரிடமும் பெறத் தேவையில்லை. நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக ரத்தாகிவிடும். இவைகளின் மூலம் சிங்களப் பேரினவாதம் புத்தத்தின் முகமூடி தரித்து ரத்தச் சேற்றில் கைகளை நனைக்கக் கூடிய அளவிற்கு முன்னேறியது.


23. உளவியல் ரீதியிலான சித்திரவதை!

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவாளிகளின் பங்கு மிக முக்கியமானது. அதேபோன்று ஒரு சமூகம் மேம்பாடடைய, முன்னேறிச் செல்வதற்கு வேண்டிய முக்கியமான பங்களிப்பைச் செலுத்தக் கூடியவர்களும் அறிஞர்களே. சிங்களப் பேரினவாதம் தமிழ்ச்சமூகத்தின் மீது தொடுக்கக்கூடிய ஒடுக்குமுறையில் ஒன்றே அறிவுத்துறை ஒடுக்குமுறை ஆகும். மனிதப் படுகொலைகள் செய்யக்கூடிய அதே நேரத்தில் இவ்வொடுக்கு முறையையும் தொடர்ந்து செய்கின்றது.

உடல் ரீதியான சித்திரவதைகளைப் (டட்ஹ்ள்ண்ஸ்ரீஹப் பர்ழ்ற்ன்ழ்ங்) போல, உளவியல் ரீதியான சித்திரவதைகளைச் (ஙங்ய்ற்ஹப் பர்ழ்ற்ன்ழ்ங்) செய்வதையும், எப்படிச் சிவில் மனிதாபிமான உரிமை இயக்கங்கள் எதிர்க்கின்றனவோ அதே போன்று அறிவுத்துறை ஒடுக்குமுறையையும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஜனநாயக உரிமைக்கான இயக்கங்களும், மனித உரிமைக்கான இயக்கங்களும், இலங்கை அரசு விஷயத்தில் தள்ளப்படுகின்றன. முதலில் சிறு குழந்தைகள் விஷயத்தில் இருந்து இது தொடங்குகிறது. ஏனெனில் சிறு குழந்தைகள்தான் வருங்காலத் தலைமுறைகளை அடைவதற்கான விதைகள் ஆகும். சிறு குழந்தைகள் மீது வைக்கக் கூடிய கவனத்திலிருந்தே நாட்டின் வருங்கால சமூகத்தின் மீது வைக்கப்படும் மதிப்பீட்டையும் செய்ய முடியும்.

சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை இன்றைய தலைமுறையினர் மீது கலவரங்களையும் மனிதப் படுகொலைகளையும் உண்டாக்கி ரத்த ஆற்றை ஓடவிட்டு இன்றைய தலைமுறையைப் பூண்டோடு ஒழிப்பது மட்டுமல்லாமல் எதிர்காலத் தலைமுறையையும் கூடத் துடைத்தெறியச் செயல்பட்டு வருகின்றனர் என்பதற்குச் சமுத்திரன் அவர்களின் தனிப்பட்ட அனுபவமே சான்று: “”1960-களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் மாணவனாயிருந்தேன். அப்பொழுது சிங்கள, தமிழ் மாணவர் மத்தியில் நட்புறவே குரோத உணர்வையும்விட மிஞ்சியிருந்தது. இன்று அதே பேராதனை வளாகத்தில் பல சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்கி அவமதிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த மாற்றம் கலாசார சாதனங்களுக்கூடான பிரசாரத்தின் ஓர் நேரடி விளைவு என்றே சொல்ல வேண்டும்.

பாலர் வகுப்பிலிருந்து பூச்சி புழுக்களையே கொல்வது பாவம் என்ற புத்த போதனையைப் பெறும் அதே நேரத்தில் “இனம்-மதம்-நாடு’ என்ற புனிதத்துவமான மூன்று ஐக்கியத்தினையும் பற்றிய போதனை தமிழர்களைத் தாக்குவதை, அவமதிப்பதை நியாயப்படுத்துவதாகவும் தூண்டுவதாகவும் இருக்கிறது. கொழும்பு மருத்துவபீடச் சிங்கள மாணவர்கள் தம்முடன் ஒரே விடுதியில் வாழ்ந்த தமிழ் மாணவர்களை மோசமாகத் தாக்கி விரட்டிய சம்பவம் பல இலங்கையர்களைத் தலைகுனிய வைத்தது. இவர்கள்தான் எதிர்கால வைத்தியர்கள், உயிர்காக்கும் மனித தெய்வங்கள். அவர்களின் இந்த நடத்தையை நாம் அதன் அரசியல்-கலாசார-உளவியல் பின்னணியில் வைத்தே பார்க்க வேண்டும். அப்போதுதான் மனிதர்களின் மிருகத்தனமான நடத்தையைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். 1983-இன் வன்செயல்களில் கொழும்பில் 14-15 வயதுச் சிங்கள இளைஞர்களும் பெருமளவில் ஈடுபட்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது. கொழும்பின் பிரபலமான புத்தப் பாடசாலையொன்றின் மாணவர்களின் காடைத்தனம் பற்றி மிகவும் விசனத்துடன் சிலர் பேசினார்கள். இந்த மாணவர்களின் நடத்தைக்கு உடனடிக் காரணம் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களில் ஒருவர் அவர்களின் பாடசாலைப் பழைய மாணவர் என்ற செய்தி எனக் கூறப்படுகிறது. இப்படி அநாகரீகமாக, அவமானத்துக்குரிய முறையில் நடந்து கொள்ளும் ஓர் இனவாதம் மிகுந்த இளம் சந்ததி எப்படி உருவானது? இதை உருவாக்கிய சக்திகள் எவை?” என்று கேள்வி எழுப்புகிறார் சமுத்திரன்.*

நீங்கள் 40 வயதுடையவர்களாக இருந்தால் உங்கள் கடந்த காலப் பள்ளி வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். பள்ளியில் படிக்கும்பொழுது பல வகையான மத, இன, மொழிப் பிரிவுகளில் உள்ள குழந்தைகள் ஒன்றாகப் படிக்கையிலும், விளையாடும்போதும், நூல் நிலையத்திற்குச் செல்லும்போதும் மற்ற இனத்து மொழிப் பிள்ளைகளோடு இணைந்தே இருந்த நினைவு உங்களுக்கு வரும்.

வகுப்பறையிலேயே பிரிக்கப்பட்ட சூழ்நிலை இருந்திருக்காது. ஆனால் இப்பொழுது உங்களுடைய பிள்ளைகளை இலங்கைப் பள்ளிகளுக்கு அனுப்புவீர்களேயானால் அங்கு இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிரிக்கப்பட்டுத் தனித்தனியான வகுப்புகளில் படிக்கக்கூடிய சூழ்நிலையில் இருப்பது மட்டுமல்லாமல் நூலகத்தில் கூட பிரிந்தே இருக்கக்கூடிய ஒரு கட்டாயத்திற்கு அரசு உள்ளாக்கியுள்ளது.

இது மட்டுமல்ல, நாடு முழுவதுமான குழந்தைகளின் பள்ளி வாழ்க்கை அவர்களின் கல்விச் சூழ்நிலை ஆகியவை வேறாய் இருக்க, மலையகத்தில் வாழும் குழந்தைகளின் சூழ்நிலை மாறுபாடாய் இருப்பதைக் காண்பீர்கள். இதோ பாருங்களேன். சிங்கள அரசினது பாடமொழித் திட்டத்தில் என்னவெல்லாம் வருகிறது என்பதற்கு உதாரணமாக-ஒரு சிங்கள நூலில் தீபாவளி பற்றி ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதுபற்றி சிறிவர்த்தனா பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “”ஒரு புத்தகத்தில் தீபாவளி பற்றி ஒரு பாடம் இருக்கிறது. முதற்பார்வையில் இது தமிழ் இந்துக் கலாசாரத்தைச் சிங்களக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் ஓர் வரவேற்கக்கூடிய புதிய உத்தி என்றே படுகிறது. ஆயினும் இந்தப் பாடத்தை வாசிக்கும் போது இதிலிருக்கும் ஒரு விஷயத்தினால் இந்த நோக்கம் திசை திருப்பப்படுகிறது. தீபாவளி, இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களின் சந்ததியினரான இலங்கையில் வாழும் மக்களால் கொண்டாடப்படுவது என்றே குறிப்பிடப்படுகிறது. இந்த வசனத்தில் ஒரே அடியில் தமிழர்கள் இந்த நாட்டைச் சேரா ஒரு வெளியார் பிரிவு என்று சிங்களக் குழந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.” சிங்களப் பாடநூல்களின் இந்த ஒற்றைக் கலாசார இன வாதம் சார்ந்த போக்கின் விளைவுகளை மேலும் உரப்படுத்துபவையாக மற்றைய கலாசாரச் சாதனங்கள் அமைந்துள்ளன.

1963-இல் அரசு உருவாக்கிய பள்ளிகள் தேசிய மயம் மற்றும் தர நிர்ணயம், மாவட்ட ஒதுக்கீடுகள் போன்ற பல சட்டதிட்டங்கள் இலங்கையின் கல்வித் துறையையே இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் குழந்தைகளைப் பிரிப்பதற்கு பயன்படுத்தத் தொடங்கினர்.

* இலங்கைத் தேசிய இனப் பிரச்னை–சமுத்திரன்–வெளியீடு காவ்யா, பங்களூர், பக்-53.


24. உணர்வுகள் மீதான ஒடுக்குமுறை!

நாடு முழுவதும் கட்டாயக் கல்வி இருக்கும்பொழுது மலையகத்தில் மட்டும் அது கிடையாது. அதே போன்று நாடு முழுவதும் கல்விக்கூடங்கள் தேசிய மயம் என்று வரும்போது இங்கு மட்டும் இல்லை. பின்னர் தேசியமயம் என்ற பெயரால் தனிச் சிங்களமொழிச் சட்டத்தின் கீழ் தாய்மொழி பயில்வது மறுக்கப்பட்டது.

பொதுவாக மலையகக் கல்விக் கூடங்களில் தரம் மிகக் குறைவு. பத்து வயதுவரைதான் அவர்களால் படிக்க முடியும். ஐந்தாம் வகுப்புக்கு மேல் அவர்களால் படிக்க முடியாது. அதனால் அன்று இரண்டரை லட்சம் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. பொதுவாக வாழ்க்கை நிலைகளினாலும், பொருளாதார நிலைகளினாலும் பள்ளிகளில் குழந்தைகள் சேர்ப்புக் குறைவாகவே இருந்தபோதிலும்கூட, குடியுரிமை மறுக்கப்பட்டதால்-ஒருசில குடும்பங்கள் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பை அளிக்க முன்வந்தாலும்கூட அதை அளிக்க முடியாமல் போய்விட்டது.

மீறிச்சென்று படிக்கும் குழந்தையும் தாய்மொழியில் பயிலவில்லை. தாய்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டுச் சிங்கள மொழி திணிக்கப்பட்டது. தமிழ்ச் சமுதாயமோ அல்லது மலையகத் தமிழர்களோ இதை உத்தேசித்துத் தனி பள்ளிகள் திறக்கலாம் என்றாலோ, தனியார் பள்ளிகள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது.

கல்வி கற்கும் வயதுள்ள 3 லட்சம் குழந்தைகளில் சுமார் 75,000 குழந்தைகளுக்குத்தான் அவ்வாய்ப்பு ஏற்படுகிறது என்று 1983-ஆம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வு கூறுகிறது. பொதுவாகத் தமிழ் மாணவர் தொகை 1970-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இப்போது 5.4 சதவிகிதத்துக்கு மேலாகக் குறைந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் சரியான உணவு கிடைக்காததாலும், வறுமையாலும், நாடோடிகளாய் வாழ்கின்ற அவலத்தாலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் 10 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருக்கிறது.

மேலும் வயதானவர்களின் இறப்பு விகிதம் இலங்கை முழுவதுக்கும் 34.7 சதவிகிதம் இருக்கையில், மலையகத்தில் 62.4 சதவிகிதம் ஆகும். அவர்கள் வருவாயில் 76 சதவிகிதம் உணவுக்காகவே போய்விடுகிறது. சம்பள உயர்வோ மறுக்கப்படுகிறது. மிக மோசமான சூழ்நிலையில் வாழவேண்டிய நிலை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்படுகிறது. இப்படியிருக்க இவர்களின் குழந்தைகள் எங்கே படிக்க?

எஸ்.ஆர்.ஆசீர்வாதத்தின் கருத்துப்படி “”கல்வித்துறை மிக முக்கியமான ஒரு போர்க்களமாக 1948-க்குப் பின் மாறியுள்ளது. கலாசார மோதல்களின் இடமாகவும் அது மாறியுள்ளது. 1960-இல் கல்வித்துறையை அரசு ஏற்றுக் கொண்டபின் இது தீவிரமாகி உள்ளது” என்று தெரிகிறது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இட ஒதுக்கீடு சம்பந்தமாகக் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள், விதிமுறைகள் இந்தப் போர்க்களத்தின் முக்கியமான இடமாகும்.

1. ஏனெனில் வேலைவாய்பிற்கான ஓர் அடையாளச் சீட்டாகக் கல்லூரிக் கல்வி வாய்ப்பு இருக்கிறது.**

2. ஒரு சில இடங்களுக்கு அதிகமான எண்ணிக்கை நபர்களுடன் போட்டியிடக்கூடிய ஒரு துறையாக இது இருக்கிறது. ஆகையினால் இரு இனங்களும் தங்களுடைய வளர்சிக்கான போட்டிக்களமாக இதைக் கருதுகின்றன.

கல்வித் துறையில் இனவாதம் எந்த வடிவில் வந்தது என்றால், சிங்கள மாணவர்களுக்குப் பள்ளிகளில் கல்வி வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும் அதைத் தருவதற்கும், இருக்கும் இடங்களை ஒதுக்குவதற்கான போராட்டமாக இது வெடித்தது. இதன் எதிர் விளைவுகள் மாநில அரசியலில் சிங்களத் தரப்பில் இருந்த நிர்ப்பந்தத்தை கல்வித்துறையில் இவைகளை நிறைவேற்றும் அளவிற்கு இருந்தது.

சிங்களவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கு ஏற்படும் செலவுகளைத் தமிழ் மக்களின் தலையில் சுமக்க வேண்டி வந்தது. சிங்கள இனவாதத்தினரின் போராட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாகப் படிமுறை ரீதியான தரக் கட்டுப்பாடு ஙங்க்ண்ஹ-ரண்ள்ங் நற்ஹய்க்ஹழ்க்ண்ள்ஹற்ண்ர்ய்) 1973-இல் அறிமுகமானது. தமிழ் மாணவர்களுக்கு அதிருப்தியும் விரக்தியும் ஏற்படக்கூடிய அளவிற்கு இட ஒதுக்கீடு என்பது தர நிர்ணயிப்பில் இருந்தது.

தகுதி அடிப்படையிலான பழைய இட ஒதுக்கீடை 1978-இல் அரசு நீக்கிப் புதிய முறையைக் கொண்டுவந்தது. இது வேறு எங்குள்ள பல்கலைக்கழகத்திற்குள்ளும் இல்லாத ஒரு நிலையாகும்.

பள்ளியில் இருக்கும் இடங்களில் தர அடிப்படையில் 30 சதவிகிதம் ஒதுக்கீடு, மாவட்ட ஜனத்தொகை அடிப்படையில் 55 சதவிகிதம் பின்தங்கிய மாவட்டங்களான ஒதுக்கீட்டால் 15 சதவிகிதம் இருந்தது. அவற்றோடு மேலும் சில கட்டுப்பாடு விகிதம் இப்போது வந்துள்ளது. இவை என்னவென்றால், ஒரு மாவட்டத்தில் எத்தனை பள்ளிகள் இருக்கின்றனவோ அந்த விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு ஒரு பள்ளியில் செய்ய வேண்டும். மேலும் சேரக்கூடிய மாணவர் இருக்கும் ஊரில் விஞ்ஞானக் கல்விக்கான வாய்ப்பு வசதிகளை ஒட்டி இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் (கஹக்ஷ ங்ற்ஸ்ரீ…).

பின்கூறப்பட்டவைகள் பல்கலைக்கழக வழிகாட்டுதலின் அடிப்படையிலும், முன்சொன்னவை கல்வித்துறை வழிகாட்டுதலின் அடிப்படையிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக 1983-84-இல் ஒரு பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்விக்கான இடத்தில் 30 சதவிகிதம் கோட்டாவில் 2,692 முதல் தகுதியுள்ள விண்ணப்பப் படிவங்கள் இருந்தன.

விண்ணப்பதாரர்களில் 25 சதவிகிதம் பேர் தகுதி உள்ளவர்களாக இருந்த போதிலும் புறக்கணிப்பட்டனர். இதன் மூலம் 1983-84-இல் விண்ணப்பதாரர்களில் 590 மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். இவர்கள் கொழும்பு, யாழ், அம்பாறை, திருகோணமலை போன்ற சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இடமில்லாமல் மிகவும் தரம் குறைந்த வேறு மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்படிப் புறக்கணிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்களே. இந்த இட ஒதுக்கீடு விதிகளின் பெயரில் சிங்கள இனவாத அரசு சிங்களவர்களுக்கு அதிக இடம் ஒதுக்கியது.

அதேபோன்று பள்ளிகளில் ஆசிரியரின் விகிதாசாரமும் ஆசிரியர் புறக்கணிக்கப்படுதலும் உள்ளது.

அதேபோன்று வேலைவாய்ப்பிலும் கூட, தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். சமீப காலங்களில் அரசு அளிக்கும் வேலைவாய்ப்பில் 7 சதவிகிதம் கூடத் தமிழர்களுக்கு இல்லை. 1956-க்குப் பின் பொதுத்துறையில் தமிழர்களுக்கான இட ஒதுக்கீடு 10 சதவிகிதத்துக்கும் கீழாகவே உள்ளது. அது சில ஆண்டுகளில் 2 அல்லது 3 சதவிகிதம் கூட மாறியது.

மேலும் அறிஞர்கள், பேராசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆக்கத் திறமைகளைப் பயன்படுத்தாதது; அவர்களுக்கு அவர்களின் துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ள வாய்ப்புகள் அளிக்காதது; நிம்மதியாகக் குடும்ப வாழ்க்கை மேற்கொள்ள முடியாதது; பொருளாதார நிலையில் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலாதது போன்ற புறக்கணித்தல்கள் தொடர்ந்தன.

அதுமட்டுமல்லாமல் அவர்களின் வீடுகள் தாக்கப்படுவதும், நிறுவனங்களை இல்லாமல் செய்வதும், கைது செய்வதும் மற்றும் சித்திரவதை, கொலைகள் ஆகியவை செய்யப்படுவதும் தொடர் நிகழ்ச்சிகளாக மாறின.

பேராசிரியர் நிர்மலா நித்தியானந்தம், நித்தியானந்தம் போன்றவர்கள் பட்ட துன்பங்களைக் குறிப்பிடலாம். இன்னும் எண்ணற்ற அறிஞர்கள் இலங்கையை விட்டு வெளியேறிப் பிற நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவதையும் குறிப்பிட முடியும்.

மேலும் வயதான ஊழியர்கள், பென்ஷன் வாங்குபவர்கள் படும் மனநிலை வருத்தங்கள் சொல்லில் வடிக்க முடியாதது. அவர்கள் ஒவ்வொருவரும் பட்ட துன்பங்கள் ஏராளம்.

1983 கலவரத்திற்குப்பின் யாழ்ப்பாணம் பற்றிய ஓர் ஆய்வில் மிக நூதனமான ஒரு விஷயம் வெளிப்பட்டுள்ளது. அதாவது இன்று அங்கு 17 – 25 வயதிற்கிடையிலான மக்கள் குழுக்களில்-இளைஞர் பிரிவில் ஐந்து பெண்களுக்கு ஓர் ஆண் என்ற விகிதத்தில் தற்போது மாறியுள்ளது என்று சமூகவியலாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். பையன்கள் கொலை செய்யப்படுவதும், மறைவதும், சிறை செல்வதும், ஒடுக்குமுறை செய்யப்படுவதன் விளைவே இன்று இந்த விகிதம் என்கின்றனர் அவர்கள். இது எதிர்காலத் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் பாதிப்பது மட்டுமன்றி எதிர்காலத் தமிழ் கலாசாரத்தையும் சமூகத்தில் ஒழுக்க சீர்குலைவையும் உருவாக்கும் என்கின்றனர் சமூகவியலாளர்கள். பெண்களின் விகிதம் அதிகமாவதைக் கண்டு எச்சரிக்கும் அவர்கள் உதாரணத்திற்கு வியட்நாம் சண்டைகளைக் காட்டுகின்றனர். வியட்நாமில் சமூகம் சீர்குலைந்ததை நினைவு கூர்கின்றனர். தமிழ்க் கலாசாரம், நாகரிகம், சமூக வாழ்வு ஆகிய அனைத்தையும் அழிக்கும் தன்மையாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

ஆக, குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை மனரீதியான, உணர்வு நிலைகளில் மிகுந்த துன்பங்களையும் துயரங்களையும் சுமப்பவர்களாகவும், மன உணர்வுச் சித்திரவதைகளை அனுபவிப்பவர்களாகவும் உள்ளனர். இதன் உச்சகட்டமாக அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் முன் சுமார் மூவாயிரத்துக்கும் மேலான வயதான தாய்மார்கள் ஒன்றுகூடி நீதிபதியைச் சுற்றி நின்று “”ராணுவத்தால் கைது செய்யப்பட்டு ராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட தங்கள் மகன்களை விடுவிக்கும்படி” குரல் கொடுத்துப் போராடினார்கள். பின்னர் காவல் துறையினர் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

இவ்வகையில் அறிவுத்துறை மற்றும் மன உணர்வு நிலையில் ஓர் ஒடுக்குமுறையைச் சிங்களப் பேரினவாதம் மேற்கொண்டது. ** University Administrations: Saturday Review March 84


25. “அப்பே ஆண்டுவ’ ஆர்ப்பரிப்பு!

மாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி அவலங்களைத் தெரிந்து கொள்ளுமுன் அவரது கணவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா பற்றியும், அவரது அரசியல் நுழைவு, கொள்கை, ஆட்சிமுறை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.

இலங்கை எழுத்தாளர் சமுத்திரன் எழுதிய இலங்கைத் தேசிய இனப்பிரச்னை என்னும் நூலில் இவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அந்த நூலிலிருந்து ஒரு பகுதி:

1951-இல் பண்டாரநாயக்கா யு.என்.பி.யிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அமைத்தார். இவரின் வெளியேற்றத்திற்குக் கொள்கை வேறுபாடுகளைவிடத் தனிப்பட்ட அரசியல் நோக்குகளே காரணம் என இவரது சமகால யு.என்.பி. முக்கியஸ்தர்கள் கூறியுள்ளார்கள்.

தனக்குப் பிரதமராகும் வாய்ப்புகள், சேனநாயக்கா குடும்பத்தின் ஆதிக்கம் மிகுந்த அந்தக் கட்சியிலிருக்கும் வரை குறைவு என பண்டாரநாயக்கா உணர்ந்திருக்கலாம். டி.எஸ். சேனநாயக்கா அவருடைய மகனான டட்லியைப் பிரதமராக்கப் பல ஆயத்தங்களையும் செய்து கொண்டிருந்தார்.

புதிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டாரநாயக்கா அமைத்தபோது யு.என்.பி.யிடமிருந்து வேறுபட்ட சில கொள்கைகளையும் கையாண்டார். அவற்றை அவர் தேர்ந்தெடுத்த விதமும் அவற்றிற்கு வடிவம் கொடுத்த முறையும் அவருடைய அரசியல் உணர்வுத் திறனையும் தந்திரத்தையும் காட்டின. பொதுமக்களுக்கு நெருங்கிய அர்த்தமுள்ள ஓர் அரசியல் பிரசாரத்தை இவர் மேற்கொண்டார்.

1951-இல் சுதந்திரக் கட்சி ஆங்கிலத்தில் வெளியிட்ட அதன் கொள்கைப் பிரகடனத்தைப் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியம். சிங்கள, தமிழ்மொழிகளுக்குச் சமத்துவ உரிமை, வெள்ளையர் உடைமைகள், தளங்கள் தேசியமயமாக்கல், விவசாயம் கைத்தொழில் அபிவிருத்தி, தேசிய கலாசார விருத்தி இவை போன்ற ஜனநாயகக் கொள்கைகளைச் சுதந்திரக் கட்சி முதலில் வெளியிட்டது, கட்சியின் ஆரம்பகர்த்தாக்களில் தமிழர்களும் இருந்தனர். உபதலைவராக ஒரு தமிழர் தெரியப்பட்டார். ஆனால் இரண்டே வருடங்களுக்குள்-1953-இல் பண்டாரநாயக்காவின் மொழிக் கொள்கை முழு மாற்றம் பெற்றது.

1956 பாராளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இயங்கிய அவரது கட்சி, ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் மார்க்கத்தைப் பற்றியே கண்ணாயிருந்தது! சிங்கள புத்தர்களே பெரும்பான்மையினர். இவர்களுள் பெரும்பான்மையினர் கிராமப்புறங்களில் வாழ்ந்தனர்.

சிங்களப் பொதுமக்களின் ஆதரவைப் பெற அவர்கள்மீது ஆழ்ந்த செல்வாக்கினைக் கொண்டிருந்த மரபு ரீதியான நிறுவனங்களின் உதவியை அவர் நாடினார். புத்தமத குருக்கள், கிராமத்துப் பள்ளி ஆசிரியர்கள், உள்நாட்டு வைத்தியர்கள், செல்வாக்குக் கொண்ட விவசாயிகள் அவருடைய அரசியல் கருவியானார்கள். அதே நேரத்தில் அவரும் அந்நிறுவனங்களுக்குள் அதிக செல்வாக்கு மிகுந்த பிக்கு பெரமுன (பிக்குகள் முன்னணி) வின் கருவியானார். 1953-இல் சிங்களம் மட்டும் அரச கரும மொழியாதலே தன் முதல் இலட்சியமெனச் சுதந்திரக் கட்சி பிரகடனப்படுத்தியது. கிறிஸ்துவ – ஆங்கில ஆதிக்கம் ஒழிய, ஆங்கிலத்துக்கு ஈடாகச் சிங்களவரல்லாதோர் செலுத்தும் ஆதிக்கம் ஒழிய, சிங்களப் பொதுமகன் தன் உரிமையான மண்ணில் சுதந்திரமடைய இதுவே வழியெனப் பிரசாரம் ஆரம்பித்தது.

பிறப்பால் நிலப்பிரபுத்துவ, வெள்ளையாட்சியின் நெருங்கிய சகாவான கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பண்டாரநாயக்கா. இங்கிலாந்தில் வாழ்ந்து கல்வி கற்று ஐரோப்பியமயப்படுத்தப்பட்டவர். அவர் புத்தமதத்தினரானார். சிங்களத் தேசிய உடையை அணிந்தார். அவருடைய நாவன்மையால் சிங்கள இனவாதப் பிரசாரத்தை ஆரம்பித்தார். அவருடைய பிரசாரம் வெறும் சுலோகங்களல்ல. சிங்களப் பொதுமகனின் சகாப்தத்தைத் தோற்றுவிக்க, மொழிக்கும் மதத்திற்கும் முதலிடம் கொடுத்து ஒரு சிங்கள புத்த “சோஷலிச ஜனநாயகத்தை’ ஏற்படுத்தப் போவதாக அவர் பிரசாரம் செய்தார்…

முழுக்க முழுக்கச் சிங்கள புத்தத் தோற்றத்துடன் பண்டாரநாயக்காவின் தலைமையிலமைந்த புதிய கூட்டான மக்கள் ஐக்கிய முன்னணி 1956-இல் தேர்தல் களத்தில் இறங்கியது. அந்தக்கூட்டில் இலங்கையின் மார்க்சிச இயக்கத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் பிலிப் குணவர்த்தனாவின் புரட்சிகர சமசமாஜக்கட்சியும் அங்கம் வகித்தது. தமிழர்களைக் காலிமுகத் திடலில் போட்டுத் தோலுரிப்பேன் என்று சபதம் செய்த கே.எம்.பி. ராஜரத்தினாவின் குழுவும் அதில் சேர்ந்திருந்தது.

காலிமுகத்திடல் என்பது இலங்கை பாராளுமன்றத்தின் எதிரே அமைந்த திடலாகும். சிங்கள புத்தத்தை 2,500 வருடங்கள் பேணிக்காத்தவர்கள் என்ற புனிதப் பெருமைக்குள்ளான புத்த சங்கத்தின் பிக்கு பெரமுனவே பிரசாரத்தின் முக்கிய சக்தியாய் விளங்கியது.

1953 ஆகஸ்ட் 12-ஆம் நாள், யு.என்.பி. அரசுக்கெதிராக இடதுசாரிகள் மாபெரும் ஹர்த்தாலை வெற்றிகரமாக நடத்தினர். இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். ஏழு பேருக்கு மேல் உயிர் துறந்த இந்த ஒருநாள் போராட்டத்தின் எழுச்சி டட்லி சேனநாயக்காவைப் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவைத்தது.

அரிசி விலையேற்றமே ஹர்த்தாலுக்குக் காரணமாயிருந்தது. கம்யூனிஸ்ட், சமசமாஜக் கட்சிகள் முன்னின்று தலைமை தாங்கிய இந்த ஹர்த்தாலில் பண்டாரநாயக்கா குறிப்பிடத்தக்க ஒரு பங்கினையும் வகிக்கவில்லை. ஆனால் யு.என்.பி. எதிர்ப்பினை உயர் மட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவிய இந்தப் போராட்டத்தின் பரிசை அவர் 1956-இல் தட்டிக்கொண்டு போய்விட்டார். பிலிப் குணவர்த்தனா போன்ற பிரபல இடதுசாரித் தலைவர் அவருடைய அணியில் 1956-இல் இருந்ததும் அவருக்கு மிகவும் சாதகமாயிருந்தது. சிங்கள புத்தமும் சோஷலிசமும் இணைந்ததுபோல் அந்தக் காட்சி பொதுமக்கள் கண்களுக்குப்பட்டது போலும். இந்த இணைவுக் குறியீட்டு முக்கியம் வாய்ந்தது.

1956 தேர்தலில் சமசாஜிகளும் கம்யூனிஸ்டுகளும் சிங்களத்துக்கும் தமிழுக்கும் சமஉரிமை என்ற கொள்கையை முன்வைத்தனர். பண்டாரநாயக்காவின் இருபத்திநாலுமணித்தியாலங்களில் சிங்களம் மட்டும் என்ற கர்ஜனை 1953க்குப் பின் எழுந்தபோது யு.என்.பி.யும் தனது கொள்கையும் சிங்களம் மட்டுமே என்று கூற ஆரம்பித்தது. ஆனால் இன்னும் அதற்கிருந்த தமிழ்ப் பகுதித் தொடர்புகளும் அதன் கிறிஸ்துவ ஆங்கில வெளித்தோற்றங்களும் யு.என்.பி.க்கு உண்மையான சிங்கள புத்தத் தோற்றத்தைக் கொடுக்கவில்லை. எல்லா நிலைமைகளுமே பண்டாரநாயக்காவின் தலைமைக்குச் சாதகமாயிருந்தன.

மக்கள் ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது. சிங்கள புத்த பொதுமக்கள் “அப்பே ஆண்டுவ’ (நமது அரசாங்கம்) எனக்கோஷமிட்டு வீதிதோறும் வலம்வந்து தம் ஆர்ப்பரிப்பைக் காட்டினர். பண்டாரநாயக்காவின் வெற்றி இந்த மக்களைப் பொருத்தவரை ஒரு நூற்றாண்டின் கனவு நனவாகியது போல். இதுவரை எதுவித அந்தஸ்துமின்றி ஆங்கிலக் கிறிஸ்தவ ஆதிக்கத்தின் கீழ் வீழ்ந்து கிடந்த தம் மொழியும் மதமும் ஆட்சிபீடம் ஏறிவிட்டன என்ற எக்காளம் மிஞ்சிவழிந்தது. சிங்களப் பொதுமக்களின் “அப்பே ஆண்டுவ’ ஆர்ப்பரிப்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகள் பளிச்சிட்டன.

ஆனால் “சிங்களம் மட்டும்’ கோஷம் தமிழ்மக்களையும் இதில் பங்குபற்ற முடியாத நிலைக்கு தள்ளிவிட்டது…


26. ஸ்ரீமாவோவின் ராஜதந்திரம்!

1956 ஜூன் மாதம் “சிங்களம் மட்டும்’ சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மிகவும் சுருக்கமாக ஒருசில வரிகளில் எழுதப்பட்டிருந்தது இந்தச் சட்டம். இடதுசாரிகளும், தமிழ் அங்கத்தவர்களும் சட்டத்தை எதிர்த்து வாதாடி வாக்களித்தனர். தமிழ் அங்கத்தவர்கள் பாராளுமன்றத்துக்கு முன்னே காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் செய்தனர். அரசாங்க ஆதரவாளர்களான சிங்களக் குண்டர்களால் தாக்கப்பட்டனர். அன்று சிறிய அளவில் நடந்த அந்தத் தாக்குதல் வரப்போகும் ரத்தக் களரியையும் சாம்பலையும் அறிவிப்பதுபோல் அமைந்துவிட்டது. மறுபுறம் “சிங்களம் மட்டும்’ சட்டம் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தை அறிவித்தது.

தேசியமயமாக்கல் மூலமும் வெளிநாட்டு உதவியுடனும் புதிய அரசுப் பொருளாதாரத் துறையொன்றினை விருத்தி செய்வதில் பண்டாரநாயக்கா அரசாங்கம் கவனம் செலுத்தியது. இதன்மூலம் இரண்டு உடனடி நோக்கங்களை மக்கள் ஐக்கிய முன்னணி அரசு நிறைவேற்ற விழைந்தது. ஒன்று -தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார பலத்தைக் கட்டுப்படுத்தல். மற்றது -வளரும் புதிய அரசு கூட்டுத்தாபனங்களில் முடிந்தவரை அரசாங்கத்துக்குச் சார்பான சிங்கள புத்த ஜீவிகளுக்கும் கீழ்மட்ட ஆதரவாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் வழங்குதல். அரசு கூட்டுத்தாபனங்களே புதிய சிங்கள புத்த உணர்வுள்ள முகாமையாளர்களை உருவாக்கும் கூடங்களாயின.

இத்தகைய அரசு முதலாளித்துவம் தோன்ற சில புறநிலைக் காரணிகள் இருந்தன. சில முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு வேண்டிய மூலதனக் குவியலும் ஈடுபாடும் தனியார் துறையில் இருக்கவில்லை. அரசின் நேரடி உதவியுடன் தனியார் துறை இந்தத் துறைகளுக்குள் செல்லக்கூடிய கொள்கை ரீதியான சாத்தியப்பாடுகள் இருந்தன. ஆயினும் பண்டாரநாயக்கா அரசு அந்த வழியைப் பின்பற்றவில்லை. அரசு மூலதனம் மட்டுமே இருந்த முதலீட்டுச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியது.

பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை சோஷலிச நாடுகளின் ஆதரவைப் பெற்றது. 1956-க்குப் பின்புதான் இலங்கை சோஷலிச நாடுகளுடன் ராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. இதன் விளைவாக சோஷலிச நாடுகளின் பொருளாதார உதவிகள் வரத்தொடங்கின.

வறண்ட பிரதேசத்தில் காடுகள் வெட்டப்பட்டு, நிலம் அபிவிருத்தி செய்யப்பட்டு நீர்ப்பாசன வசதிகளுடன் அரசு செலவில் நிலமற்ற விவசாயிகளைக் குடியேற்றும் கொள்கை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பித்திருந்தது. 1938-ஆம் ஆண்டில்தான் இந்தக் கொள்கை அப்போது விவசாய அமைச்சராயிருந்த டி.எஸ். சேனநாயக்காவினால் முழு உருப்பெற்றது. சுதந்திரத்திற்குப்பின் எல்லா அரசாங்கங்களும் இந்தக் கொள்கையைப் பின்பற்றின.

சிங்களப் பிரதேசங்களில் உள்ள பெருநிலச் சொந்தக்காரர்களின் உடைமை உறவுகளை மாற்றுவதைத் தவிர்க்கும் ஒரு வழியாகவும் இந்தக் கொள்கை அமைந்தது. நிலமற்ற சிங்கள விவசாயிகளை அரசு செலவில் அரசு காணிகளில் குடியேற்றும் திட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் வேண்டுமென்றே தமிழ்ப்பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட்டன”.*

“புத்த பிக்குகளின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்து போக பண்டாரநாயக்கா மறுக்கிறார். இதனால் 1959-இல் சோமராம தேரோ என்ற புத்தபிக்கு தனது மஞ்சள் அங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொன்றுவிடுகிறார்’.**

பண்டாரநாயக்காவின் படுகொலையைத் தொடர்ந்து, 1960-இல் நடந்த தேர்தலுக்குப்பின் இலங்கையின் பிரதமராகிறார் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் டட்லி சேனநாயக்கா. 4 மாதங்களில் அவரது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டுப் பிரதமராகிறார் பண்டாரநாயக்காவின் மனைவியான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா. சொல்லப்போனால் 1956-இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு ஸ்ரீமாவோவின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. 1960-இல் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, ஆரம்பம் முதலே தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத் தமிழர்களையும், மலையகப் பகுதியில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களையும் பிரிப்பதற்கு இவர் கையாண்ட தந்திரத்தின் ஒரு பகுதிதான் ஸ்ரீமாவோ-சாஸ்திரி உடன்பாடு என்பது. இதன்படி, மலையகப் பகுதிகளில் வாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

1990-இல் எப்படி இந்திய அமைதிப்படையைக் காரணம் காட்டி, ஈழத்தமிழர்களை அதிபர் பிரேமதாசா இந்தியாவுக்கு எதிராகத் திருப்பினாரோ, அதேபோல, மலையகத் தமிழர்களைக் காரணம் காட்டி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது ஸ்ரீமாவோவின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

1965-இல் தமிழரசுக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து யு.என்.பி. அரசு ஆட்சி அமைக்கிறது. டட்லி சேனநாயக்காவின் தலைமையில் அமைந்த ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி அரசில் தமிழ் மற்றும் சிங்கள தேசியக் கட்சிகள் உள்பட ஆறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. “வடக்கு, கிழக்கில் ராணுவத்தைக் குவியுங்கள். சிங்களவரைக் குடியேற்றுங்கள், தமிழரை வெளியேற்றுங்கள்’ எனக் கொழும்பு பம்பலபிட்டி புத்தவிகாரத்தின் தலைமைப் புத்த பிக்கு அறிக்கை விடுகிறார். டட்லி சேனநாயக்காவின் அரசும் அப்படியே செய்கிறது. இதனால் யு.என்.பி.யுடனான உறவை முறித்துக்கொள்ளத் தமிழரசுக் கட்சி முடிவெடுத்துத் திருகோணமலையில் மிகப்பெரிய மாநாடு ஒன்றினைக் கூட்டுகிறது. இதனைக்கண்ட சிங்களப் பிரதமர், தமிழரசுக் கட்சியுடன் உடன்பாடு காண முயல்கிறார்.

மாவட்டக் கவுன்சில்களை 1968-இல் அளிக்கும் ஒரு உடன்பாட்டிற்கான தன்மையில் அரசோடு ஒத்துழைத்த ஈழத் தமிழர்களின் தந்தை என்று ஒருமனதாக அனைத்துத் தமிழர்களாலும் மதிக்கப்பட்ட, செல்வா எனப்படும் செல்வநாயகம் ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்ந்த இனவாதக் கொள்கையாலும், துரோகத்தனத்தாலும் 1968-இல் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

1970-இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பதவிக்கு வருகிறது. இந்தப் பதவிக்கு வரும் நிகழ்ச்சிக்கு சிங்களப் பேரினவாத சக்திகளின் கூட்டும் வெகுஜன கவர்ச்சிகரமான இடதுசாரி முகமூடியுமே காரணமானது.

எந்த நாட்டிலுமே கண்டிராத வகையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியானது 1970-77-க்கு இடைப்பட்ட காலத்தில் கொடூரமும், படுகொலைகளும், தீவிரமான ஜனநாயக ஒடுக்குமுறையும், மனித உரிமைகள் பறிக்கப்படுவதுமாக மாறிய காலமாகும்.

இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், மக்களுக்காக இயங்குவதாகக் கூறும் இடதுசாரிகள் இந்த மனிதப் படுகொலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு அரசுக்குத்துணை நின்றதாகும். இந்தக் காலத்தில் அரசு நிர்வாகம், குழப்பமும், பல வகையான கொள்கை மாறுதலும் நிகழ்ந்த காலமாகும்.

இந்தக் காலத்தில் பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமானது, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று கூறிக்கொண்டு சிங்கள இனவாத ஆளுமையை நிலைநாட்டிய காலமுமாகும்.

தனியார் மூலதனத்தைத் தேசியமயம் என்ற கொள்கை அடிப்படையில் அரசு மூலதனமாக்கி அதைச் சிங்கள மயமாக்கிய சதித்திட்டம் நிறைந்த நிகழ்ச்சிப் போக்கு இக்கால கட்டத்தில்தான் நிலவியது. அரசு அமைப்பைத் தாராளப்படுத்தி அதே நேரத்தில் கட்டுப்பாடுகளும் புதிய விதிகளும் கொண்ட நிகழ்ச்சிப் போக்குகளையும் பார்க்க முடிந்தது.

இதனால் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம், நாடு தழுவிய அதிருப்திகள், மக்களின் பல்வேறு வகையான எழுச்சிகளை உருவாக்கியது. தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள இளைஞர்கள், மற்றும் அடித்தட்டு மக்களும் கூட அரசின் கொடுமையால் பாதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர ஆரம்பித்தன.

*-சமுத்திரன் எழுதிய “இலங்கைத் தேசிய இனப்பிரச்னை’ (ஈழ எழுத்தாளர் சமுத்திரன் மாணவப் பருவத்திலிருந்தே இடதுசாரி அரசியலில் ஈடுபட்டு, கட்சி சாராது இருந்தவர். பின்னாளில் தமிழ் மக்கள் விடுதலைப் போரில் ஈடுபாடு கொண்டார்).


27. தீவிரவாதத்தின் ஆரம்பம்

நாடு தழுவிய ஓர் அதிருப்தியின் விளைவாக எழுந்த தீவிரவாதத்தால் மாபெரும் ஆயுதக் கலகத்தை 1971-இல் இலங்கை சந்தித்தது. 1971 கலகத்தைத் தலைமை தாங்கி நடத்தியது ஜனதா விமுக்தி பெரமுன என்ற மக்கள் விடுதலை முன்னணி ஆகும்.

அதுவரையில் நாட்டில் நிலவி வந்த இனவாத அரசியலையும், இன உணர்வுகளையும் மதிப்பீடு செய்ய ஆட்சியாளர்கள் தவறி விட்டனர். உற்சாகத்தின் உந்துதலினால் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிக் கலகம் செய்தனர் ஜே.வி.பி. (ஒயட) என்று பரவலாக அறியப்படும் ஜனதா விமுக்திப் பெரமுன அமைப்பினர். சாதாரண மக்களும் மலையகத் தமிழ் இளைஞர்களும் கூடப் பங்கேற்ற இந்தக் கலகத்தில் பெரும் அளவிற்குச் சிங்கள இளைஞர்களும் பங்கு பெற்றனர்.

இலங்கை இடதுசாரி மார்க்சியவாதிகள் தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவாகப் புதுவகையில் உருவான ஒரு தீவிரவாத இயக்கமே ஜனதா விமுக்தி பெரமுன. இதன் தலைவர்கள் தலைமறைவாக இருந்தே இவ்வியக்கத்தை நிறுவினர். மாஸ்கோவில் உள்ள லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு வந்த உரோகண விஜயவீரா இதற்குத் தலைமை தாங்கினார்.

1970-க்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சனத்துடன் ஆதரித்தது இது. ஆனால் அதே சுதந்திரக் கட்சிதான் பின்னாளில் உரோகண விஜயவீராவைக் கடுமையான முறையில் ஒடுக்கியது.

இந்தக் கலகத்தில் அரசு இயந்திரமே ஸ்தம்பித்துவிட்டது. இதனை ஒடுக்குவதற்குப் போதிய ஆயுதங்கள் அரசிடம் இருக்கவில்லை. பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்து ராணுவ உதவிகளைப் பெற்றது ஸ்ரீலங்கா அரசு.

நாடு முழுவதும் அனைத்துக் காவல் நிலையங்களும் கலகம் செய்த இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. பயந்த இலங்கை அரசு இந்தியாவிற்கு உதவி கோரி, கோரிக்கை விடுத்தது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மத்தியில் இருந்த இந்திரா அரசு ஸ்ரீமாவோவின் வேண்டுகோளுக்கு இணங்கி கப்பற்படையை இலங்கைக்கு அனுப்பியதோடு, பெருமளவிலான ஆயுதங்களையும் துருப்புகளையும் கூட அனுப்பியது. அவர்கள் அங்கு சென்று கலவரத்தை ஒடுக்கினர்.

இந்தக் கலகத்தில் 15,000 இளைஞர்கள் கொல்லப்பட்டதன்றி லட்சக்கணக்கான இளைஞர்களும் அதன் தலைவர்களும் மற்றும் அதோடு இணைந்த நவசமசமாஜக் கட்சியினரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வரலாற்றில் பதியத்தக்க இந்த எழுச்சி, பரந்த அளவில் பரவி நாட்டையே குலுக்கிய அதே நேரத்தில் அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைக்கு மறுக்க முடியாத சான்றாகவும் குறிக்கப்படுகிறது. இது இலங்கைக்கு மட்டுமின்றிச் சர்வதேச இடதுசாரி அணியினருக்கும் ஓர் அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்தது.

இந்த இயக்கம் தோல்வி அடைய முக்கிய காரணம் மார்க்சியக் கொள்கைகளைப் பேசிய இவர்கள், அதற்கு நேர்மாறாகச் சிங்கள இனவெறிக் கொள்கைக்கு பலியானதுதான். அதுமட்டுமின்றி, கட்டுப்பாடு நிறைந்த அமைப்பாக இவர்கள் இல்லாததும், சரியான அரசியல் சிந்தனையுடன் வளராததும் தமிழினச் சிறுபான்மையினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்காததும் ஆகும்.

இலங்கை மக்களின் அரசியல் வரலாற்றில் அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போராடிய இந்தக் கலகத்தின் வீச்சு பின்வரும் நாளில் தமிழ் தேசிய உணர்வுப் போராட்டங்களில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தது.

ஆக, இவ்விதத்தில் சோசலிச மனிதாபிமானத்தைப் பேசிய ஸ்ரீமாவோ அரசு மிகப் பெரிய படுகொலைக்குக் காரணமானது. பிற்காலத்தில் இலங்கைத் தீவு சந்திக்க இருக்கும் தீவிரவாதப் போர்களுக்கும், போராட்டங்களுக்கும், குருதியின் கோர தாண்டவத்துக்கும் ஆரம்பமாக அமைந்தது இந்தக் கலகம்தான்.

இந்த நிலையில்தான் ஸ்ரீமாவோ அரசு, அவசர நிலைச் சட்டத்தையும், அடக்குமுறைச் சட்டத்தையும் மக்கள் மீது திணித்தது.

போர்க்குணமிக்க சிங்கள இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைக்குப் பின், தமிழர்கள் மீது தனது சட்டரீதியான, அமைப்பு ரீதியான இனவாத ஒடுக்குமுறையைத் திருப்பியது இலங்கை அரசு. அதன் விளைவே இலங்கை “குடியரசு’ ஆகும் சட்டமும், புதிய அரசியல் அமைப்பு உருவாதலும் ஆகும்.

இதில் அனைத்து அடிப்படை உரிமைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் ஒதுக்கிவிட்டுச் சிறுபான்மை மத, இன பாதுகாப்புகளைத் தூக்கி எறியும் வகையில் சிங்களம் தேசிய மொழி என்றும், புத்த மதத்தை அரசு மதமாகவும் அறிவிக்கப்பட்டது.

கல்வி தரப்படுத்துதல் சட்டத்தின் மூலம் பெருமளவிற்கு பாதிப்படைந்த தமிழர்கள் இந்தப் புதிய அரசியல் சட்டத்தால் கொதிப்படைந்தார்கள். அரசியல் நிர்ணய சபையில் தமிழர்களால் அளிக்கப்பட்ட அனைத்துத் திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டு 1972 மே 22-ஆம் நாள், இலங்கை அரசியலில் தமிழர்கள் பங்கேற்கவும், ஆட்சியில் பங்கேற்கவும் சுமுகமான முறையில் சிங்களர்களோடு இணைந்து வாழும் நிலைமையும் அடியோடு ஒழிக்கப்பட்டது இச் சட்டங்கள் மூலம்தான்.

இதனால் தமிழ் இனம் தனிமைப்படுத்தப்பட்டுச் சிங்கள இனத்திற்கு எதிர்முகாமாகத் தள்ளப்பட்டது. இந்தப் பிற்போக்கு ஒருசார்புச் சட்டத்திற்கு ஆதரவாக அனைத்துச் சிங்களக் கட்சிகளும், இயக்கங்களும் (இடதுசாரிக் கட்சிகள் உட்பட) செயல்பட்டன.

சிங்கள அரசியல் கட்சிகளோடு கூட்டோ, அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதோ இனிமேல் இயலாத காரியம் என்று தமிழர்கள் நினைக்க ஆரம்பித்ததும் அதுமுதல்தான். இதனையொட்டி தமிழர் மத்தியில் ஐக்கியம் ஏற்பட ஆரம்பித்தது. அரசுக்கும், சிங்கள இனவெறியருக்கும் எதிராகத் தமிழர்கள் ஆத்திரம் கொண்டார்கள்.

இந்த நிலையில்தான தமிழ் மாணவர்களைக் கொண்ட தமிழ் மாணவர் பேரவையும், தமிழ் அரசியல் அமைப்புகள் ஒன்றாக இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் உருவாகின.

இதன் விளைவாக விசாரணையற்ற கைதுகளும், அரசின் அடக்குமுறை ஆர்ப்பாட்டங்களும் தொடர்கதையாக ஆனது. தமிழ் இளைஞர்கள் ஆவேசம் அடைந்தனர்.

சத்தியாக்கிரகம் மூலம் அமைதி வழியில் எதிர்ப்புகளைக் காட்டுவது என்பது அர்த்தமற்றது என்ற எண்ணம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக ஆரம்பித்தது.

தமிழ்ச் சமூகம் வாழ முடியாதபடி வேலையில்லாத் திண்டாட்டமும், அடக்குமுறையும் அதிகரித்ததால், இதை எதிர்த்துக் கடுமையான முறையில் போராட்டங்கள் வெடித்து வன்முறைச் சம்பவங்களும், தாக்குதல்களும் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன.

குடியரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செல்வநாயகம் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு (1972) மீண்டும் நடந்த இடைத்தேர்தலில் (1975) வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அது தமிழ் மக்களின் உணர்வுகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

இந்தத் தமிழ் உணர்வு வேகத்தால் உந்தப்பட்டு தமிழ் கூட்டணிக்கு தமிழர் சுயாட்சிக்கான திட்டங்களையும், இயக்கங்களையும் கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

வடக்குப் பகுதியில் பயணம் செய்த சிங்கள மந்திரியின் கார் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். தியாகராஜன் குடியரசுச் சட்டத்திற்கு ஆதரவு அளித்தார் என்ற காரணத்திற்காக அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்தது.

நல்லூர்க் கிராம கவுன்சிலின் பழைய தலைவரான குமார குலசிங்கம் துப்பாக்கியால் சுடப்பட்டார். இவ்விதத்தில் தமிழ் உணர்வின் வேகத்தால் தமிழ் தேசியப் போர்க்குணம் மிக்க இளைஞர்கள் ஆயுதம் தரிக்க ஆரம்பித்தனர்.

அரசு இயந்திரம் தமிழர் வாழும் வடபகுதி முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்து அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. அதிகாரத்தின் துணையுடன் அரசு வன்முறை வெறியாட்டத்தை தமிழர் மீது தொடுத்தது.

தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தன.

பொதுமக்களை அச்சுறுத்துவதும், விசாரணையின்றிக் கைது செய்வதும் தொடர்ந்து நடந்தது. ஒரு சோக வரலாற்றுக்கு தொடக்கம் எழுதியது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியரசுப் பிரகடனமும் அதற்குப் பின்னால் எற்பட்ட மாற்றங்களும்.

நேரடியாகக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை அமலுக்கு வந்தபிறகு சிங்கள இன ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு, சிறுபான்மையினரின் நலன் புறக்கணிக்கப்படத் தொடங்கியது. அழிவின் ஆரம்பம் அப்போதுதான் ஆரம்பமாகியது.

நாளை: உலகத் தமிழ் மாநாடு!


28. உலகத் தமிழ் மாநாடு!

சித்திரவதைகள், கொலைகள், கலவரங்கள், எதிர்த்தாக்குதல்கள் இவற்றுக்கு மத்தியில் 1974 பிறக்கிறது. இந்த ஆண்டு நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தும்படி அரசைக் கேட்டுக் கொள்ள ஒரு தூதுக் குழு செல்கிறது. ஆனால் அரசு அதற்கு அனுமதி மறுக்கிறது. அதை ஒரு சவாலாக ஏற்றுத் தாங்களே அம்மாநாட்டை நடத்துவது என்று தமிழ்ச்சமூகம் முடிவெடுக்கிறது.

யாழ்ப்பாணத்தில் எப்படியும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை 1974 ஜனவரி 3-10 நாள்களில் நடத்துவது என்பதை அனைத்துத் தமிழ் மக்களும் உறுதியுடன் ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர். இந்த மாநாட்டை ஒவ்வொரு தமிழரும் தனது சொந்தக் குடும்ப விழாவாக நினைத்து யாழ்நகரத்தில் குவிகின்றனர்.

இம்மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து புலவர் செ.ராசு (ஆசிரியர், கொங்கு), பிரகதம் (கொங்கு), கொடுமுடி ச.சண்முகன் (பொதுப்பணித்துறை), இரா.கணேசன் (சென்னைப் பல்கலை.), வண.தந்தை இராசமாணிக்கம் (லயோலா), பேரா.நயினார் முகமது (ஜமால் முகமது கல்லூரி), நீலகண்டன் (பெங்களூர் தமிழ்ச்சங்கம்), ரேன தா தேசா, ராஜ மகள் (கோவா), டாக்டர் சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், டாக்டர்.மோசூர் வாசுகி அம்மையார், டாக்டர் ரவீந்திர குமார், சேத் (இந்தி மொழியறிஞர்), வி.ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமானநிலையத்தில் இறங்கிய பலருக்கு ‘விசா’ அளிக்கப்படவில்லை, வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதன் பின்னர் அமைப்பாளர் குழுவில் பங்குபெற்ற கோ.மகாதேவா, மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஆகியோர் தலைமை அமைச்சரைச் சந்தித்துப் பேசியபின்னர்தான் எல்லா நாட்டினருக்கும் விசா வழங்கப்பட்டது.

நகர் விழாக்கோலம் பூண்டது. கடைவீதிகளில் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. மின்விளக்கு அலங்காரம் இரவில் ஒளி வீசியது. உலகமே கண்டிராவகையில் முழுத்தென்னை, பனை, பாக்கு, மூங்கில், மா மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரங்களில் நடப்பட்டிருந்தன. பனை மற்றும் தென்னை மரங்களில் வாழைமரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு நாகசுரம் முழங்க பூரண கும்ப மரியாதை அளித்து, கொழுக்கட்டை, சீடை, பிட்டு என பண்டைய தமிழ்ப் பலகாரங்கள் தந்து உபசரித்தனர் -என்று மாநாட்டில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட தஞ்சைப் பல்கலைக்கழகக கல்வெட்டு தொல்லியல்துறைத் தலைவர் செ.ராசு வியந்து மகிழ்கிறார். (தகவல்: கொங்கு இதழ் மற்றும் மறவன்புலவு க.சச்சிதானந்தம் எழுதிய ‘எனது யாழ்ப்பாணமே’).

தமிழ் அறிஞர்களின் பேச்சுகளைக் கேட்க ஆண், பெண் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கில் மக்கள் கூடினர். ஓர் உணர்ச்சி மயமான சூழ்நிலையில் விழா நடந்து கொண்டிருக்கிறது.

இதைக் கண்டு பொறுக்காத சிங்கள அரசும், இனவெறிச் சக்திகளும் ஆத்திரமும் கோபமும் ஆவேசமும் கொள்கின்றன. இதன் விளைவாக அரசின் காவல்துறை தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்தது. அன்றைய சம்பவங்களை நேரில் கண்ட ஒருவரின் நேரடி வர்ணனை இது-

திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் நயினா முகமது உணர்ச்சி மயமாக உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென வேறு ஏதோ ஒலிபெருக்கிக் குரல் தூரத்திலிருந்து வந்து மோதியது. என்னவென்று விளங்கவில்லை. அணி வகுத்து வந்த காவலர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

அளவுக்கதிகமாக வீசியதால் நெஞ்சை அடைத்தது. மேடையில் அமர்ந்திருந்தவர்களின் மீதும் வீசினார்கள். தூரத்தில் ஒரு பேருந்தில் உள்ளமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோர் மீதும், பேருந்திற்குள்ளும் வீசினர்.

பயந்துபோய் பதுங்க இடம்தேடிப் பறந்து சென்ற மக்களை பிரம்பால் மிருகத்தனமாக அடித்துத் தாக்கினர் காவல்துறையினர். நாலாபக்கமும் சிதறி ஓடினர் மக்கள். பலர் மிதிபட்டுத் துயருற்றனர். தாயைப் பிரிந்த குழந்தைகள், கணவரைப் பிரிந்த மனைவியர் போன்று ஏராளம். அருகிலே சேறு நிறைந்த குளம் ஒன்று இருந்தது. அதில் பலர் விழுந்தனர். செருப்புகளைத் துறந்தனர். பல பெண்கள் புடவைகளை இழந்து ஓட வேண்டியதாயிற்று.

தீரமிக்க யாழ் நகர் இளைஞர்கள் தமக்கு வந்த இடரையும் பொருட்படுத்தாது பலரைக் காத்தனர். குளத்தில் விழுந்தவர்களைத் தூக்கிவிட்டனர். தனியாக நின்ற குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கண்ணீர்ப் புகையால் திணறிய இந்திய நாட்டினரை யாழ் நகர் இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு ஒவ்வொருவரையும் காப்பாற்ற முனைந்தனர்.

புலவர் இராசு அவர்களை வீரசிங்கம் மண்டபத்திற்குப் பின்புறம் இழுத்துச்சென்று சுற்றுச்சுவர் மீது ஏற்றிப் பின்பக்கம் குதிக்க வைத்தனர். குதித்த இடம் சாக்கடை. அதிலேயே சற்றுதூரம் நடந்துசென்று சாலையேறி, தொடர்ந்து வந்து, எதிரில் வந்த கார் ஒன்றில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் பின்னர் வந்து, இவர் வீடு வந்து சேர்ந்ததை உறுதி செய்துகொண்டனர்.

அதே போல இரவீந்தர்குமார்சேத், நயினார்முகமது, சனார்த்தனம் ஆகியோர் தத்தம் துணிமணிகளை இழந்து பல துயருற்று பத்திரமாக வீடுவந்து சேர்ந்தனர்.

தென் ஆப்பிரிக்காத் தமிழர் முதியவர். கையில் அடிபட்டு வீடு வந்து சேர்ந்தார்.

காவல்துறையினர் சனார்த்தனம் பேசக்கூடாதென்று சொல்லியிருந்ததாகவும், பேராசிரியர் நயினார்முகமதுவின் பேச்சை தவறாகப் புரிந்துகொண்டு, இரா.சனார்த்தனம் பேசுவதாகக் கருதிக் கூட்டம் சட்டவிரோதமானதென்று அறிவித்துக் கலைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. கூட்டத்தில் குழப்பம் என்பது பச்சைப் பொய்.

எனினும் மேடையில் அமர்ந்திருந்த இந்தியர்களையும், பிற வெளிநாட்டாரையும் பாதுகாக்க முயலாமல் மேடை மீதும் கண்ணீர்ப்புகை வீசியதைப் போன்ற கொடுமை வேறு இருக்க முடியாது.

யாழ் நகரப் படுகொலைக்கு இலங்கை அரசு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைக் காலம்தான் நிர்ணயிக்க வேண்டும்! தமிழன்னையின் கண்ணீர்த்துளிகள் வீணாவதில்லை. (கொங்கு இதழில் வந்தபடி).

அதன் விளைவாக மின்சாரம் தாக்கியும் கூட்டத்தில் சிக்குண்டும் 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

விழாவிற்கு வந்த உலகத் தமிழ் அறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதைய யாழ்மேயர் ஆல்பிரட் துரையப்பா அளித்த விருந்துக்குப் போகக்கூடாது என்று ‘பொடியன்கள்’ (தமிழ் இளைஞர்கள்) தடுத்தனர். அவர் தமிழ்மாநாட்டு எதிரி என்பது அவர்களின் வாதம். ‘கவரிமான்’ என்ற பெயரில் யாழ் நகர இளைஞர்கள் துண்டுப்பிரசுரங்கள் வழங்கினர். ‘பொடியன்களை’ பெரியவர்கள் நம்பினர். ஈழத் தமிழர் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!


29: அமைப்பு ரீதியான எதிர்ப்பின் ஆரம்பம்!

இலங்கைத் தமிழ் மக்களின் மாறாத வடுவாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் பதிந்தன. இதனைத் தமிழ் மக்கள், தமிழ் தேசிய கெüரவத்திற்கு ஏற்பட்ட இழுக்காக நினைத்தனர். இந்த மாநாட்டிற்குப் பின் தமிழர் வாழும் பகுதிகள் எல்லாம் சிங்கள வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டு தாக்கப்பட்டன.

தியாகி சிவகுமாரன் மிகப் பெரிய துணிச்சலுடனும், தீர்மானத்துடனும் தமிழ் மக்களின் கெüரவத்தைக் காப்பதற்காகவும், “தனித்தமிழ்ஈழம்’ பெறுவதற்காகவும் ஆயுதம் ஏந்திய இளைஞர் குழுவை வளர்த்தார்.

ஆரம்பத்தில் இந்தக் குழுவின் லட்சியம், உலகத் தமிழ் மாநாட்டில் கலவரம் விளைவித்தவர்களைப் பழிக்குப் பழி வாங்குவது என்பதே.

இந்தக் கலவரத்திற்கும் குழப்பத்திற்கும் படுகொலைக்கும் காரணமான போலீஸ் உயர் அதிகாரி சந்திரசேகராவையும், யாழ் தமிழ் மேயர் துரையப்பாவையும் சுட்டுக் கொல்வதுதான் இந்தக் குழுவின் நோக்கமாயிருந்தது.

சந்திரசேகராவை சிவகுமார் தேடி அலைந்தார்.

தெல்லிப்பளை என்னும் இடத்தில் வைத்துக் குண்டு வீசினார். சந்திரசேகரா தப்பிவிட்டார். மீண்டும் யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் வேலைக்குச் செல்லும் சமயம் ஜீப்பை மறித்தார். குண்டுகளை எறிந்தார். குண்டு வெடிக்க மறுத்தது. சுழல் துப்பாக்கியை எடுத்துச் சந்திரசேகராவின் மார்புக்கு நேராக வைத்து ஆறு ரவைகளையும் தீர்க்க முயன்றார். ஆறும் வெடிக்க மறுத்தன. மீண்டும் மறைந்தார். அவரது தலைக்கு விலைபோட்டுப் போலீஸôர் தேடினர். ஆயிரம் பேர் ஆயுதங்களுடன் ஊரை வளைத்தனர். சிவகுமாரன் யாழ்ப்பாணத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.

பணம் தேவைப்பட்டது. யாரும் உதவி செய்யவில்லை. நண்பர்கள் மூவரைக் கூட்டிக்கொண்டு ஓரிடத்திற்குப் போனார். அங்கும் பணம் கிடைக்கவில்லை. ஒரு சிலர் அவரைத் துரத்தினர். அவர்களுக்கு எல்லாவற்றையும் விளங்கப்படுத்தினார்.

நேரம் போய்க்கொண்டிருந்தது. போலீஸôர் சுற்றி வளைத்துக் கொண்டனர். துப்பாக்கியிலோ ரவைகள் இல்லை. உடன் வந்த நான்கு நண்பர்களையும் நாலாபக்கமாக ஓடச்சொல்லிவிட்டு அவரும் ஓடினார்.

அறுவடை செய்யப்பட்ட புகையிலைத் தோட்டத்தின் அடிக்கட்டை அவரது காலில் குத்தியது. வேகமாக ஓட முடியவில்லை. அப்போது போலீஸôர் அவரைப் பிடித்து விட்டனர். அவரிடம் ஒரு குப்பியில் “சயனைட்’ எப்பொழுதும் இருந்தது. தொடையைக் கத்தியால் கிழித்து நஞ்சை ரத்தத்துடன் கலக்க முயற்சித்தார். போலீஸôர் கத்தியைப் பிடுங்கி எறிந்தனர். நஞ்சை வாயில் ஊற்றி விழுங்கினார்.

போலீஸôர் அவரை மருத்துவமனையில் சேர்த்துச் சங்கிலிகளால் கட்டிலுடன் பிணைத்துப் போட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் போலீஸ் காவல் வேறு. ஒருசில மணிகளில் அவர் உயிர் போய்விட்டது. அவர்தான் சிவகுமாரன்! (–லங்காராணி–அருளர் எழுதியதிலிருந்து)

1974 ஜூன் 5-ஆம் நாள் இந்தச் சிவகுமாரன் தன் வாழ்க்கையை ஒரு சீர்திருத்தவாதியாகவே தொடங்கினார். சாதியொழிப்பு, சமபந்தி, சமயச் சீர்திருத்தம் போன்றவற்றில் ஆர்வம் காட்டியவர் சிவகுமாரன். பொதுவாக அவரைக் கம்யூனிஸ்ட் என்று அழைப்பார்கள்.

குடியரசு, சுதந்திர தினம் போன்ற தேசியக் கொண்டாட்ட நாட்களில் அரசாங்கத்தின் தேசியக் கொடியை தமிழர்கள் ஏற்றி வைத்துக் குதூகலிப்பதை சிவகுமாரன் வெறுத்தார். தனது இல்லத்துக்குப் பக்கத்தில் யாராவது சிங்கள தேசியக் கொடியை ஏற்றி வைத்தால் அறுத்து எறிந்து விடுவார்.

சிங்களவரைக் குறிக்கும் சிங்கம் ஒன்று கத்தியுடன் நிற்கும் காட்சியைத் தாங்கியதாக இருந்தது அந்தக் கொடி.

இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த சமயத்தில் இந்தக் கொடிக்குத் தமிழர் தலைவர்கள் பயங்கரமாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்த எதிர்ப்புக்குப் பயந்து தமிழர்களைக் குறிக்கும் இரண்டு நிறங்களை தேசியக் கொடியில் இணைத்தார்கள். அந்த இரண்டு நிறக்கோடுகளையும் சிங்கத்துக்கு எதிர்ப்புறமாக வைத்தனர். தமிழர்களுக்கு அந்தச் சிங்கம் கத்தியைக் காட்டிக் கொண்டிருப்பதாக அமைந்திருக்கிறது இந்த தேசியக் கொடி.

துரையப்பா தமிழ்ப் பகுதியில் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக ஸ்ரீமாவோவினால் அமர்த்தப்பட்டார். துரோகிகளின் பட்டியலில் இவருக்கு முதலிடம் தந்து அவர் தீவிரவாத இளைஞர்களால் கண்காணிக்கப்பட்டார்.

இளைஞர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து துரையப்பாவின் நடவடிக்கைகளை ஆராய்ந்தனர். அவர் செவ்வாய்க்கிழமைதோறும் மானிப்பாய் என்னுமிடத்திலமைந்த அந்தோணியார் கோயிலுக்கும், வெள்ளிக்கிழமைகளில் புன்னாலையிலிருந்த வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும் செல்வார் என்று தெரிந்து கொண்டனர். வரதராஜப் பெருமாள் கோயில் வாசலில் நான்கு இளைஞர்கள் கையில் துப்பாக்கி சகிதம் நின்று கொண்டிருந்தனர். துரையப்பாவின் வண்டி கோயில் வாசலில் வந்து நின்றது. அவரும் காரின் கதவைத் திறந்துகொண்டு இறங்கினார்.

நான்கு இளைஞர்களில் ஒருவர் வேகமாகச் சென்று, “இப்போது மணி என்ன?’ என்று கேட்டார். துரையப்பாவும் மணி சொல்லும் நோக்கத்துடன் கையைத் தூக்கி மணி பார்த்தார். சற்றும் தாமதிக்காமல் மணி கேட்ட இளைஞர் தனது துப்பாக்கியில் இருந்த குண்டுகளைத் தீர்த்தார். துரையப்பா குண்டு துளைத்து சுருண்டு விழுந்தார். இளைஞர்கள் துரையப்பாவின் காரில் ஏறித் தலைமறைவானார்கள்.

அவ்வாறு குறிதவறாமல் சுட்டவர் யார் தெரியுமா? அவர்தான் பின்னாளில் தமிழ் ஈழவிடுதலைப் போரில் வீரமரணம் எய்திய விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன்.

சிவகுமாரனின் வீரமும், தியாகமும் தமிழ் அமைப்புகள் அனைத்திலும் ஒரு வீச்சை உருவாக்கின. 1976-ஆம் ஆண்டு மே 22-ஆம் நாள் தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் புதிய மாற்றம் பெற்றது.

அப்போது தமிழர் கூட்டணி தனது ஆரம்பகால கோஷமான தமிழர் சுயாட்சியைக் கைவிட்டுத் “தனி ஈழம்’ என்ற கோஷத்தை முன்வைத்துச் செயல்பட ஆரம்பித்தது.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் “”ஆறு வடக்கு, வட கிழக்கு மாவட்டங்களை உள்ளடக்கிய “ஒரு தனித்தன்மை வாய்ந்த ஈழமே’ தனது நோக்கம்” என்று பிரகடனம் செய்தது. செல்வநாயகம், பொன்னம்பலம், தொண்டமான் மூவரும் கூட்டுத் தலைவர்களானார்கள்.

“”சுதந்திரம் பெறுவதும், தங்கள் உழைப்பின் பயனை தாங்களே அனுபவிப்பதும் தமிழ் மக்களின் சொந்த பிறப்புரிமை என்றும், எந்த ஓர் அரசாங்கமாவது மக்களின் அந்த உரிமைகளைப் பறித்தால் மக்கள் அச்சட்டத்தை தூக்கி எறியக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்” என்றும் அம்மாநாட்டுத் தீர்மானம் கூறியது.

அது மட்டுமல்லாது தொடர்ச்சியான சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் தமிழ் மக்களின் சுதந்திரத்தைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார வளர்ச்சி, பண்பாட்டு முன்னேற்றம் ஆகியவற்றிற்கான வாய்ப்புகளையும் பறித்ததாகவும் தீர்மானம் கூறியது.

மேலும் மாநாட்டுத் தலைவர் குறிப்பிடுகையில், தாங்கள் வாழ்வதற்கு தமிழ் அரசை மீண்டும் உருவாக்குவதைத் தவிர வேறு மாற்று வழி ஏதும் தமிழர்களுக்கு இல்லை என்றும் கூறினார்.

இதை ஒட்டி தமிழ் மக்கள் ஓர் அமைப்பு ரீதியான வெகுஜனத் தன்மையான எதிர்ப்பை சிங்களவர் மீது தொடுக்க ஆரம்பித்தனர்.


30: புத்தளம் இனப்படுகொலை

அதுவரை நடந்த தாக்குதல்கள் எல்லாமே சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டுத் தமிழர்கள்மீது மட்டும்தான் அதிகமாக நிகழ்த்தி இருந்தது. மற்ற மதச் சிறுபான்மையினர் மீது தமிழர் மீது நடத்திய வெறித் தாக்குதல் இன்றி சட்டரீதியான ஒடுக்குமுறைகளை மட்டுமே நிகழ்த்தி வந்தது.

ஆனால் “தனி ஈழம்’ என்கிற கோஷம் எழுந்த அதேநேரத்தில் நாடு தழுவிய தேசிய உணர்வு எழுச்சியினால் சிங்கள அரசுக்கு எதிராக மதச்சிறுபான்மையினரும் ஒன்று சேரக்கூடிய போக்கு உருவானது.

இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள இனவெறியரும், அரசும் அவர்கள்மீது கடுமையான ஆத்திரத்துடன் தாக்குதல் தொடங்க திட்டமிட்டனர்.

இதன் விளைவே புத்தளத்தில் நடந்த படுகொலை நிகழ்ச்சிகளாகும்.

புத்தளத்தில் தமிழ் மொழி உணர்வும், மதச் சிறுபான்மையினர் நசுக்கப்படுவதால் விளைந்த எதிர்ப்பு உணர்வும் அப்பகுதி மக்களின் இதயத்தில் குமுறலை ஏற்படுத்தியது.

இதையொட்டி, மசூதியில் பிரார்த்தனை நடத்திக்கொண்டிருக்கும்போது போலீஸôர் மசூதியைத் தாக்க ஆரம்பித்தனர்.

மசூதிக்குள் ராணுவம் நுழைந்தது. எதிர்ப்படும் இஸ்லாமிய மக்கள் தாக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்தது. ஏராளமான பேர் உயிர் இழந்தனர். புத்தளத்தில் நடந்த படுகொலை பற்றிய செய்தி உடனடியாக நாடு முழுவதும் பரவியது. இஸ்லாமிய மக்களின் உணர்வுகள் பீறிட்டு வெளிக் கிளம்பின.

அதேசமயம் நாடு முழுவதும் இஸ்லாமிய சமுதாயத்தினர் மீது பயங்கரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. 1915 இனக் கலவரத்தில் தாக்கப்பட்டதைப்போல, மீண்டும் அவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களுடைய ரத்தம் ஆறாக ஓடியது.

1977-ஆம் ஆண்டு பிறந்தது. அவ்வாண்டுத் தேர்தலில் அமிர்தலிங்கத்தின் தலைமையில் தமிழ் ஈழம் என்ற கோஷம் முன் வைக்கப்பட்டுத் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் பங்கு பெற்றது.

தமிழ் மக்கள் பிரிவினை ரீதியான தேசியப் போராட்டத்தை நடத்த மக்களிடம் அங்கீகாரம் பெறக்கூடிய வகையில் ஒரு பரிசோதனைக் களமாகத் தேர்தலில் போட்டியிட்டது தமிழர் விடுதலைக் கூட்டணி.

ஏற்கெனவே மரபு வழியாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளை ஒரு சுதந்திரமான மதச் சார்பற்ற “தமிழ் ஈழ சோஷலிஸ நாடாக’ உருவாக்கவும், மாற்றி அமைக்கவும் கூடிய ஒரு அறிக்கையை அந்தப் பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்தது.

மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து, தனி ஈழம் என்ற தங்களது தாகத்தை அங்கீகரித்து தமிழர் கூட்டணியைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பினர்.

1970-ஆம் ஆண்டு தேர்தலில் பிரிவினைக் கோஷத்தை முன் வைத்துத் தோற்றுப்போன அதே இடங்களில் 1977-ஆம் ஆண்டு அதே கோஷம் தமிழ் மக்களால் பெருவாரியாக அங்கீகரிக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்ட 18 தொகுதிகளையும் கைப்பற்றி பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.

இந்த நிலையில், இலங்கை ஆட்சியை ஜெயவர்த்தனா கைப்பற்றினார். தமிழர்களின் எழுச்சியால் வெகுண்ட சிங்கள இன வெறியாளர்கள் அந்த ஆண்டின் ஆவணியில் மிகப்பெரிய இனப் படுகொலைக்கு வித்திட்டனர்.


34. சாஸ்திரி – ஸ்ரீமாவோ ஒப்பந்தமும் விளைவுகளும்!

சுதந்திரத்திற்குப் பின், இலங்கையும், இந்தியாவும் இரு மாநாடுகளை நடத்தின. 1953-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லண்டனில் நேரு-டட்லி சேனநாயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரஜா உரிமையற்ற மலையகத் தமிழர்களை யார் ஏற்றுக் கொள்வது என்பதுதான் பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம். ஆனால் இப்பேச்சுவார்த்தை எந்தத் தீர்வும் இன்றித் தோல்வி அடைந்தது.

பின்னர் நேரு-கொத்தலாவலை பேச்சுவார்த்தை புது டெல்லியில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதுவும் தோல்வி அடைந்தது. இந்திய அரசாங்கம் நாடற்ற மலையக மக்களை இலங்கையர் என்றது; இலங்கை அரசோ அவர்களை இந்தியர் என்றது. இவ்வாறு இப்பிரச்னை இழுபறியான சமயத்தில் ஒரு திடீர் சூழ்நிலை ஏற்பட்டது.

1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று, பர்மாவில் இருந்தும் (3,00,000 பேர்), உகாண்டாவில் இருந்தும் (28,755 பேர்) அந்த நாட்டு அரசாங்கங்கள் இந்தியர்களை விரட்டி அடித்தன. இத்தகைய ஒரு நிலை இலங்கையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என இந்தியா விரும்பியது. அடுத்ததாக நடைபெற்ற சீன-இந்திய யுத்தத்தைத் தொடர்ந்து, சீனாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த இலங்கையுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பியது.

இறுதியாக, அப்போது பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த அயூப்கான், “”இலங்கையில் உள்ள சகல பாகிஸ்தானியர்களையும் தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயார்” என்று இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இலங்கையில் 5749 பாகிஸ்தானியர்களே வாழ்ந்தார்கள். அதனால் பாகிஸ்தானுக்கு அவர்களை ஏற்றுக் கொள்வது அவ்வளவு சிரமமானதாக இல்லை.

அதே கடிதத்தில் அவர் “”இந்தியா தனது அண்டை நாடு எதனுடனும் சுமுகமாகப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவில்லை” எனக் குற்றம் சாட்டி இருந்தார். எனவே, சீனாவுடனான யுத்தத்தினால் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் இந்தியா தன் பெயரை நிலைநிறுத்த வேண்டிய நிலையில் இருந்தது.

இந்தச் சமயத்தில் நேரு காலமானார். அதற்குப்பின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். இவருக்கும், இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கும் இடையே 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதியன்று பேச்சுவார்த்தை துவங்கியது. ஆறு நாட்கள் தொடர்ந்த இப்பேச்சுவார்த்தை அக்டோபர் 30-ஆம் தேதியன்று ஒரு முடிவுக்கு வந்தது.

அன்றுதான் உலகமே கண்டித்த, மிக மோசமான சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இலங்கையில் இந்தியர்களின் மக்கள் தொகை 1964 செப்டம்பர் 25-ஆம் தேதி கணக்குப்படி 10,08,269 பேர் ஆகும்.

இதில் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்போரின் எண்ணிக்கை 28,269. மீதம் இருந்த 9,75,000 பேரின் பிரஜா உரிமை பற்றியே இம்மாநாடு முடிவு செய்தது.

சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின்படி, 9,75,000 பேரில் 5,25,000 பேருக்கு 15 வருடகாலத்தில் (அவர்களின் இயற்கை அதிகரிப்புடன்) இந்தியப் பிரஜை உரிமை வழங்குவதென்றும், அதே காலத்தில் 3,00,000 பேருக்கு அவர்களின் இயற்கை அதிகரிப்புடன் இலங்கைப் பிரஜா உரிமை வழங்குவதெனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

எஞ்சியுள்ள 1,50,000 பேரின் பிரஜா உரிமை அந்தஸ்து பற்றி 1974-ஆம் ஆண்டு தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி 1974-ஆம் ஆண்டு ஜனவரியில் செய்து கொள்ளப்பட்ட ஸ்ரீமாவோ- இந்திரா ஒப்பந்தத்தின்படி இலங்கையும், இந்தியாவும் 1,50,000 பேரையும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டன.

இந்த ஒப்பந்தங்களைக் கண்டிக்காத சர்வதேச மனிதாபிமான இயக்கங்களே இல்லை எனலாம். இருந்தும் இரு அரசாங்கங்களும் அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இந்த ஒப்பந்தத்தை மனிதாபிமான அமைப்புகளும் இயக்கங்களும் சர்வதேச அளவில் கண்டித்தன. ஆடு, மாடுகளைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொள்வதுபோல மனிதர்களைப் பங்குபோடும் அதிகாரத்தை அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அளித்தது யார் என்கிற கேள்விகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் எழுப்பப்பட்டன.

சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இரு அரசுகளும் தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிய ஒப்பந்தம் இது. அதாவது இதனை ஒரு சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகப் பாராமல் அந்தப் பத்து லட்சம் மக்களின் தலைவிதியை, அவர்கள் பங்கு பெறாமலே இரு அரசாங்கங்களும், வெறும் எண்களைக் கருத்தில் கொண்டு கணித முறையில் முடிவு செய்தன.

இப்பேச்சு வார்த்தை நடந்தபோது குறைந்தபட்சம் அம்மக்களின் பிரதிநிதியின் கருத்துகூட கேட்டு அறியப்படவில்லை.

இவ்வாறு முடிவு செய்யப்பட்டதும் அம்முடிவு ஒருகட்டாய அடிப்படையில் அமல் நடத்தப்பட்டது என்பதுதான் அதைவிட வேடிக்கை. இதற்கான மனுக்கள் கோரப்பட்டபோது இலங்கை பிரஜா உரிமை கோரி சுமார் 7,00,000 மனுக்கள் தாக்கல் ஆயின. ஆனால், இவ்வொப்பந்தப்படி இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் 3,75,000 பேர் மாத்திரமே. இந்தியப் பிரஜா உரிமை 6,00,000 பேருக்கு வழங்கப்படும் என்ற நிலைமை இருக்கும்போது இந்தியப் பிரஜா உரிமை கோரி மனு செய்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 மட்டுமே. ஒருவேளை இலங்கை பிரஜா உரிமை மறுக்கப்பட்டால் இந்தியப் பிரஜா உரிமையாவது கிடைக்கட்டுமே என்று இரண்டிற்கும் மனு செய்தவர்கள் தொகை கணிசமானது.

அதுமட்டுமல்ல, இந்த ஒப்பந்தம் அமலாகும்போது இந்தியாவில் அமையப்போகும் “”புதுவாழ்வு” பற்றி மிகக் கவர்ச்சியான சித்திரங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்கூட இந்தியா செல்வதற்கு இவர்கள் மத்தியில் இருந்து மிகக் குறைவாகவே ஆர்வம் காணப்பட்டது.

இவ்வாறு இம்மக்களின் சுய விருப்பத்திற்கு மாறாகப் பல்வேறு நிர்பந்தங்களாலும், ஏமாற்றுகளாலும் திணிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் மனித அடிப்படை உரிமைக்கு முரணானது.

1948 டிசம்பர் 10-ஆம் தேதி இயற்றப்பட்ட உலக மனித உரிமைகள் சாசனத்தின் 15-வது ஷரத்து * பின்வருமாறு கூறுகிறது:

“”தேசிய இனத்துவ உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒருவருடைய தேசிய இனத்துவம் வேண்டுமென்றே பறிக்கப்படுவதோ, அல்லது அவரது தேசிய இனத்துவத்தை மாற்றிக் கொள்வதற்குள்ள அவரது உரிமையை மறுப்பதோ கூடாது.”

இதன்படி பார்க்கும்போது இந்த இரு அரசாங்கங்களுமே உலக மனித உரிமை சாசனத்தை மிக மோசமாக மீறி இருக்கின்றன என்பது புலனாகிறது.

இந்தியா செல்வதற்குத் தயாராதல், புறப்படுதல் போன்ற முறைகளில் இம்மக்கள் அடைந்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்ட நாளில் இருந்து சகல ஒப்பந்தங்களையும் செய்து முடிக்க 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அவகாசம் (விசா) வழங்கப்படுகிறது. ஊழியர் சேமலாப நிதி, சேவைக் கால உபகாரப் பணம், நாணயப் பரிவர்த்தனை, அனுமதிப் பத்திரம், குடும்ப அட்டை ஆகிய அனைத்தையும் ஒரு வருட காலத்துக்குள் கல்வி அறிவு அற்ற இத்தொழிலாளர் பெற்றுத் தீர வேண்டும். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் தோட்ட நிர்வாகிகள் போன்றோர், இடைத் தரகர்களாக மாறி இவர்களைக் கொள்ளை அடித்தனர்.

இதன் பின்னர் வெளியேற்ற அறிவித்தல் (ணன்ண்ற் சர்ற்ண்ஸ்ரீங்) வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தங்கினால் அவரைக் கைது செய்து நாடு கடத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு. 1971-77 ஆண்டுகளில் நாய்களைப் பிடித்துச் செல்வது போல இம்மக்களைப் பிடித்து ஜீப்புகளில் ஏற்றி, இடுப்புத் துணியோடு இந்தியாவுக்கு நாடு கடத்திய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. இதிலும் சாத் முரண்பாடு தலைதூக்கியது. தாழ்த்தப்பட்ட ஜாதியினர்தான் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால், அவர்கள் ராமேஸ்வரம் வரை பயணம் செய்யும்போது, பியூன் முதல் போர்ட்டர் வரை, கிளார்க் முதல் உயர் அதிகாரி வரை அனைவரும் இவர்களை ஏமாற்றி லஞ்சம் வாங்கிக் கொண்டனர்.

இவ்வாறு குடிபெயர்ந்து செல்வோரின் குடும்ப உறவுகள் துண்டிக்கப்பட்டன. பிரஜா உரிமை முடிவு செய்யப்பட்டபோது மைனர் குழந்தைகளுக்குத் தந்தையுடன் சேர்த்து அதே பிரஜா உரிமை வழங்கப்பட்டு விடுகிறது. அனால் 18 வயது கடந்த அவர்களது குழந்தைகள் தனியாக மனு செய்து இலங்கை அல்லது இந்தியாவில் பிரஜா உரிமை பெறவேண்டும். வெளியேற்ற அறிவித்தல் வந்துவிட்டால்… தந்தையும், குடும்பத்தினரும் பிரிய நேரும். ஒரே குடும்பத்தில் அண்ணனுக்கு இலங்கைப் பிரஜா உரிமையும், தம்பிக்கு இந்தியப் பிரஜா உரிமையும் வழங்கப்பட்டு விடுகிறது.

பிறந்த நாட்டையும், வளர்ந்த மண்ணையும், பழகிய நண்பர்களையும் விட்டுப் பிரியும்போது அழுது, கதறித் துடிக்கும் பரிதாபகரமான காட்சியை மலை நாட்டில் உள்ள சகல புகைவண்டி நிலையங்களிலும் காண முடிந்தது. காதலனைப் பிரியும் காதலி, அண்ணனைப் பிரியும் தம்பி, பெற்றோரைப் பிரியும் பிள்ளை, இப்படி மனித உறவை அறுத்தெறியும் அந்தக் கொடிய காட்சி இரும்பு இதயத்தைக்கூட உருகச் செய்யும்.

புதுவாழ்வைத் தேடி இந்தியாவுக்கு விரட்டப்பட்ட இவர்களுக்கு இந்திய மண்ணில்கூட நிம்மதியோ, மகிழ்ச்சியோ கிடையாது. இன்று இந்த அகதிகள் இந்தியத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். இவர்களின் கண்களின் வெறித்த பார்வையில், தங்கள் பிறந்த மண்ணும், உற்றார் உறவினரும், வஞ்சிக்கப்பட்ட தங்கள் தலைவிதியும் அடிக்கடி வந்து போகும் விஷயங்கள் ஆகிவிட்டன.

மலையகத் தமிழர்களின் தலைவராக இருந்த எஸ்.தொண்டமான், பெரிய கங்காணி ஒருவரின் மகனாக இருந்து ஆரம்ப காலத் தியாகத்தால் மலையக மக்கள் இதயத்தில் வலுவான இடம்பெற்றுவிட்டவர். இலங்கையில் ஒரு தனிநபரின் குரலுக்கு ஆறு லட்சம் மக்கள் அணி திரள்கிறார்கள் என்றால், அது தொண்டமானுக்கு மட்டும்தான் இருந்தது.

அவர் தனிநபரல்ல; அவருக்குப் பின்னால் ஸ்தாபனப்பட்ட 6 லட்சம் தொழிலாளர்கள் இருந்தார்கள். அந்தத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் 60 சதவிகிதம் தமது கைகளில் வைத்திருக்கிறார்கள். விண்ணை அதிரவைக்கும் இந்த மகத்தான சக்தியால் தாங்கப்படும் ஒரு மனிதர் எவ்வளவு வலிமை மிக்கவராக இருக்க வேண்டும்? ஆனால் தொண்டமானோ அற்பப் பதவிக்காக ஜெயவர்த்தனாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் என்ற பலமான குற்றச்சாட்டு இவர் பேரில் உண்டு.

இந்த நிலையில் மலையகத் தமிழ் தொழிலாளர்களுடைய நிலையைச் சுருக்கமாகச் சிலவரிகளில் கூறிவிடலாம். பொருளாதார ரீதியில் சாகாமல் எப்படி உயிர் வாழ்வது என அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு இலங்கையில் விலைவாசி அதிகரித்துவிட்டிருந்தது.

தமிழர் என்ற முறையில் எப்படி சிங்கள குண்டர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிப் பிழைக்கலாம் எனச் சதா சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்குத் தேசிய இன ஒடுக்குமுறை உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. மேலும் அரசியல் விழிப்புணர்ச்சி மிக்க நல்ல தலைமையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது கூட அவர்கள் சிந்தனையில் இடம்பெற ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான காலகட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக மற்றும் ஜெயவர்தன போன்ற சிங்கள இனவாதத் தலைவர்களில் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும் பலியானார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. தமிழன் என்ற உணர்வுடன் இவர்கள் கைகோர்த்து செயல்படத் தவறியதையும், ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகியதையும் சிங்கள அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

மலையகத் தமிழர்களை அரவணைத்துச் செல்லாமல் போனதால் ஏற்பட்ட விளைவுதான் இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம் என்பதை சரித்திரம் மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யும். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுந்துவிட்ட தமிழர்களின் உரிமைக் குரல் இன்றும் ஒரு நியாயமான முடிவை எட்ட முடியாமல் போனதற்கு, இவர்களுக்குள் காணப்பட்ட பிளவுதான் காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

* Article 15 of Universal Declaration of Human Rights. (Dec.10.1948) ‘‘Every one has the right to a nationality; no one shall be arbitarily deprived of his nationality nor denied the right to change his nationality.’’


35: தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்

தந்தை செல்வா தனது நாடாளுமன்றப் பதவியைவிட்டு விலகியதையொட்டி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி (காங்கேயன்துறை) இலங்கையில் 1918-இல் “இலங்கை தேசிய காங்கிரஸ்’ எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து வைத்த சர்.பொன்னம்பலம் அருணாசலம், பின்னாளில் அதில் சிங்களவரின் ஆதிக்க வெறியை எதிர்த்து, “தமிழ் லீக்’ (1924) என்னும் அமைப்பைக் கண்டார். இதன் நோக்கம் தமிழ் இனத்தின் தனித்துவம் காக்க “தனிநாடு’ வேண்டும் என்பதாகும்.

பின்னர் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் அமைந்த ஆணைக்குழுவின் முன் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை ஒரே குரலில் எடுத்துக்கூற “இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்’ (1944) நிறுவப்பட்டது. அதன் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம். அவர் தனது வாதங்களை ஆதாரத்துடன் எடுத்து வைத்த போதிலும் சோல்பரிக் குழுவினர் சிங்களவரின் கோரிக்கைக்கே இணங்கினர்.

பின்னர் ஏற்பட்ட சுதந்திர அரசில் பங்கேற்பது குறித்தும், இந்திய-பாகிஸ்தானியர் பிரஜா உரிமைச் சட்டத்தை ஆதரிப்பது தொடர்பாகவும் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949-இல் மலர்ந்தது. தந்தை செல்வா தலைமையில் இக்கட்சி தமிழர்களின் சமவாழ்வு மற்றும் உரிமைகளுக்காகப் போராடியும் கேட்காமல் 1972-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி புதிய சிங்கள புத்தக் குடியரசு அமைந்தது. இதன் மூலம் தமிழரின் பாரம்பரியத் தாயகத்தை இழப்பதற்கான சிங்கள அரசு ஏற்பட்டதும், தமிழ் மண்ணில் சிங்களர் குடியேற்றம் நிகழ்ந்தது. தனி ஆட்சி முறையில் தமிழர்களின் சமநிலை உரிமையும்-மண்பாதுகாப்பும் பறிக்கப்படும் என்பதைக் கண்டுபிடிக்க தமிழர் அமைப்புகளுக்கு மேலும் 24 ஆண்டுகள் பிடித்தன.

இந்நிலையில் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 3-இல் தந்தை செல்வா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறினார். அப்போது அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

“இந்நாட்டில், சென்ற 24 ஆண்டுகளாக (1948-1972) நடந்தவற்றை மனதில் கொண்டு தமிழர்கள் இங்கு ஓர் அடிமை இனமாக -அழிவதா அல்லது விடுதலை பெற்ற மக்களாக வாழ்வதா என்ற தமது வருங்காலத்தை முடிவு செய்யும் உரிமை அவர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கை. விடுதலை பெற்ற மக்களாக வாழ வேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பேன். இந்தக் கொள்கையில் அரசாங்கமே என்னோடு போட்டியிடட்டும். நான் தோல்வியடைந்தால் என் கொள்கையை விட்டுவிடுகிறேன். அரசாங்கம் தோல்வியடைந்தால் தனது கொள்கையையோ, அரசின் திட்டத்தையோ தமிழர்கள் ஆதரிப்பதாக மேற்கொண்டும் கூறக்கூடாது.’ (கு.வே.கி. ஆசான் எழுதிய ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் -1948-1966).

செல்வா பதவி விலகியதால் காலியான காங்கேயன்துறை இடைத்தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் நடந்த தேர்தலில் தந்தை செல்வாவே காங்கேயன்துறை வேட்பாளராக நின்றார். அரசு ஆதரவு கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மீண்டும் நாடாளுமன்றத்தில் 1976, பிப்ரவரி 4-இல் செல்வா பேசியதாவது:

“இலங்கையில் ஓர் ஆளப்படும் இனமாக வாழும் நிலையைத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அடிமைத்தனத்திற்கு எதிராகப் புரட்சியில் இறங்குவார்கள். எங்கள் இனம் அழிவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு தனித் தமிழ்நாட்டை இங்கு நிறுவியே தீருவோம். தமிழ் மக்களின் குரலாக நின்றே இந்த அவையில் இதைக் கூறுகின்றேன்.’ (ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் 1948-1996 கு.வே.கி.ஆசான்).

இதனைத் தொடர்ந்து காங்கேயன்துறை, உடுவில், மூதூர், வவுனியா, திருகோணமலை, கோப்பாய், சாவகச்சேரி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, ஊர்க்காவல்துறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய 12 தொகுதிகளின் நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஈழ விடுதலைக்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தனர். அத்தீர்மானத்தின் கடைசி வரி இவ்வாறு அமைந்திருந்தது. அது வருமாறு:

“காங்கேயன்துறை இடைத்தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை, விடுதலை பெற்ற அரசுரிமை உடைய, மதச்சார்பற்ற, சமனிய நாடான தமிழ் ஈழத்தை அமைப்பதற்குரிய செயலுரிமையாக ஏற்றுக் கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது.’

1976 மே 22-இல் சிங்களவர் குடியரசு நாள் கொண்டாட்டத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாடியபோது, தமிழர் பகுதிகளில் விடுதலை கோரும் அறிக்கையை அ.அமிர்தலிங்கம், வ.ந.நவரத்தினம், க.பொ.இரத்தினம், க.துரைரத்தினம் ஆகிய தமிழர் தலைவர்கள் விநியோகம் செய்தனர். அரசு இவர்களைக் கைது செய்து அரசுத் துரோகக் குற்றச்சாட்டினைச் சுமத்தியது.

இத்தலைவர்கள் மீது மேல்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு (பழ்ண்ஹப் ஹற் ஆஹழ்) என்ற சிறப்பு நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களான தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், மு.திருச்செல்வம், வி.எஸ்.ஏ.புள்ளைநாயகம் முதலானோர் குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் வாதாடியதையொட்டி, நால்வரும் (1976 டிசம்பர் 10-ம் தேதி) விடுதலை பெற்றனர். பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

மலையகத் தமிழர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து “தமிழர் விடுதலைக் கூட்டணி’ (பமகஊ) 1976-இல் அமையப் பெற்றது. 1977 ஏப்ரல் 26-இல் ஈழத் தந்தை செல்வநாயகம் மறைந்தார். அந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் ஈழவிடுதலையை முன்வைத்து “தமிழர் விடுதலைக் கூட்டணி’யினர் போட்டியிட்டனர். தமிழர் பகுதியில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றனர்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி (யு.என்.பி.) 140 இடங்களையும் கடந்த நாடாளுமன்றத்தில் 116 இடங்களைப் பெற்றிருந்த ஸ்ரீமாவோ கட்சி எட்டே இடங்களையும்தான் பெறமுடிந்தது. இதன்மூலம் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணி ஆயிற்று.

சிங்கள மேலாதிக்கத்தில் நாட்டம் கொண்ட இனவெறியர்களுக்குத் தமிழரின் கட்சி, முக்கிய எதிர்க்கட்சியானது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. நாடெங்கும் இனக்கலவரத்தைத் தூண்டிவிட ஸ்ரீமாவோ கட்சி முயன்றது. இலங்கைக் காவல்துறையில் 17 ஆயிரம் போலீஸôர் இருந்தனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் ஸ்ரீமாவோ ஆட்சியில் நியமிக்கப்பட்ட இனவெறியர் ஆவர். இவர்களே இனக்கலவரத்துக்கு மூலகாரணம் என்று கருதப்படுகிறது.

யாழ் மருத்துவமனையில் (1977 ஆகஸ்ட் 12-13) புற்றுநோய்ப் பிரிவு ஏற்படுத்த நிதி திரட்டும் விழாவொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கையில், சீருடை அணியாத போலீஸôர் கூட்டத்தினரிடையே புகுந்து முறைகேடாக நடந்தனர். பொதுமக்களுக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் போலிசார் இருவர் காயமடைந்தனர்.

இதனைச் சாக்கிட்டு “யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கு ஆபத்து’ என வதந்தி, நாடு முழுவதும் பரப்பப்பட்டு கடைவீதிகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்தனர். எல்லா இடங்களிலும் (1977 ஆகஸ்டு 17) தமிழர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.

அதற்குப் பிறகு இன்றுவரை தொடர்ந்து நடந்துவரும் அடக்கு முறைகளும், ரத்தக் கிளரிக்கும் பிள்ளையார் சுழி போட்ட சம்பவம் தமிழர்கள்மீது தொடுக்கப்பட்ட இந்தக் தாக்குதல்தான்.


36. ஜெயவர்த்தனாவின் அடக்குமுறைகள்

1977-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழம் என்ற கோஷத்தை முன் வைத்து நிற்கும் அதே வேளையில் தமிழர் மத்தியிலான எழுச்சி, உணர்ச்சி ஊட்டக்கூடியதாக மாறியது. அதேபோன்று சிங்கள வெறியர்களின் வெறியாட்டமும் வேகமடைந்தது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டுமே இனக் கலவரம் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இதை ஒட்டியே 1977-ஆம் ஆண்டுக் கலகத்தை காண வேண்டும்.

1977-ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி அடைந்து ஆட்சியை அமைத்தது வெறிக் கூட்டத்திற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது.

அநுராதாபுரம், குருனாகலை, கோகாலை, களனியா, கொழும்பு, கந்தளாய், அம்பாறை, திருகோணமலை, மூதூர், இரத்னபுரி, கண்டி ஆகிய மாவட்டப் பகுதிகள் கலவரத்தின் அடித்தளமாக விளங்கின. 1977-இல் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் மடிந்தனர். இக் கலவரத்தால் 77,000 தோட்டத் தொழிலாளர்கள் வீடிழந்து அகதிகளாயினர்.

அரசாங்கத்தின் தலைவர்கள் வெறிமிக்க வகையில் அறிக்கைகளை விடுத்தனர். “போர் என்றால் போர்’ “சமாதானம் என்றால் சமாதானம்’ என்று ஜெயவர்த்தன கொக்கரித்தார். “சிங்களவரோடு போரிட்டு மடியப் போகிறீர்களா அல்லது இணங்கி வாழப் போகிறீர்களா என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று வெளிப்படையாகவே அறிக்கை விடுத்தவர் ஜெயவர்த்தன.

தமிழ் ஈழத்திற்காகப் போராடுவோர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியே இந்த அடக்குமுறையைச் சிங்களவர்கள் கையாண்டனர்.

அரசு தரப்பில் உள்ள வெறியர்களாலேயே தமிழ் எதிர்ப்புப் பிரசாரம் செய்யப்பட்டது. அமைச்சர் சிறில் மத்தியூ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது என்னவென்றால், “”பயங்கரவாதத்தைச் சட்டபூர்வமான வழிமுறைகளில் தடுத்து நிறுத்த முடியாது; யாரும் தடுத்து நிறுத்தியதும் இல்லை. பயங்கரவாதம், பயங்கரவாதத்தாலேதான் இதுவரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.*

இந்தக் கலவரத்தில் குண்டர்களை அணி திரட்டுவது என்பது போய், அரசே போலீசை அணி திரட்டி தாக்குதலை மேற்கொண்டது. இதில் இரண்டு வகைத் தந்திரங்கள் கையாளப்பட்டன.

சிங்களவர்கள் பெரும்பான்மையாய் உள்ள தென் பகுதியில், சிங்கள மக்களில் இருந்து குண்டர்களைத் திரட்டிச் சிறுபான்மைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனால் வட பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், அரசின் காவல் துறையே ஆயுதமேந்தித் தாக்கியது. அரசு திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்னவென்றால், யாழ்ப்பாணத்தில் இக்கலவரத்தை முன்னின்று நடத்த வழிகாட்டியாய் இருந்த டி.ஐ.ஜி. கலவரம் முடிந்தவுடன் ஐ.ஜி. ஆகப் பதவி உயர்வு அளிக்கப்படுகிறார்.

1977-இல் நடந்த இந்த மோசமான கலவரத்தைப் பற்றி அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல்வேறு மனித உரிமைக் கழகங்கள் நிர்ப்பந்தித்தன. கலவரத்தைப் பற்றி விசாரிக்க அனா செனிவரத்தினாவையே அரசு நியமிக்கிறது. அவர் அளித்த அறிக்கையை 1983-இல்தான் அரசு வெளியிட்டது. அந்தச் சமயம் அவர் மலேசியாவில் ஹை கமிஷனராக பதவி பெற்றுப் போய்விட்டார்.

அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அவர் குறிப்பிடுகிறார்: “தேர்தல் நேரத்தில் நடந்த வன்முறையில் 7,817 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 78 துப்பாக்கிச்சூடும், 62 கொலைகளும், திருட்டு, கொள்ளை அடிப்பு, சூறையாடல், கற்பழிப்பு அனைத்தும் இதில் அடங்கும்.

மேலும் தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரத்தில் 3,327 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதில் 131 கொலைகளும், 74 கற்பழிப்புகள் உட்பட சூறையாடல்களும், தாக்குதல்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் 77-ஆம் ஆண்டு முடிவில் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யும்போது மொத்தம் 83,082 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 76-ஆம் ஆண்டு கலவரத்தை ஒப்பிடுகையில் 48 சதவிகிதம் அதிகமாகி உள்ளது.

இன ரீதியான தாக்குதல்களின் விளைவாகத்தான் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு ஏற்பட்டு இந்த 48 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்பட்டது’ என்கிறார்.

1978-ஆம் ஆண்டு ஜெயவர்த்தன புதிய அரசியல் சட்டத்தை அமல்படுத்துகிறார். இதற்கிடையில் அரசாங்கத்தினுடைய அதிரடி விசாரணைக் கைதுகளும், சித்திரவதைகளும் தொடர்ந்து நடக்கின்றன. சித்திரவதை புரிவதில் மிகச் சிறந்த திறமைசாலியாகப் பேர் எடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை என்பவர் தீவிரவாத தமிழ் இளைஞர்களால் 25.4.78 அன்று (விடுதலைப்புலிகளால்) துப்பாக்கியால் சுட்டுச் சாகடிக்கப்படுகிறார். (“புலிகள் வரலாறு’ 1975-1984)

அதோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக ஒரு போலீஸ் கோஷ்டியே தாக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறது. (இன்ஸ்பெக்டர் பேரம்பலம், காவலர் பாலசிங்கம், போலீஸ் டிரைவர் ஸ்ரீவர்த்தனா ஆகியோர்)

உடனடியாக அரசாங்கம் பயங்கரவாதத்தை முறியடிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவசரநிலைப் பிரகடனம் செய்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது.

6 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். பலர் சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். புதிய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிக்கு ஒட்டுமொத்தமான அதிகாரம் அளிக்கும் வகையில், புத்தமதமும், சிங்கள மொழியும் விசேஷ அந்தஸ்தைப் பெற்று, தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தீவிரவாதத் தமிழ் இளைஞர்களால், ஏர்சிலோன் கம்பனியின் ஆவ்ரோ விமானம் நொறுக்கப்படுகிறது. (7.9.1978-)

இந்நிகழ்ச்சி அரசுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும், தமிழ்ச் சுதந்திர இயக்கத்திற்கு ஓர் உத்வேகத்தை அளிக்கக்கூடியதாகவும் மாறுகிறது. இதற்கிடையில் பல வங்கிகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.

1979-இல் தொடர்ந்து வன்முறை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜெயவர்த்தன பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமலாக்குகிறார். அரசியல் சட்டத்தில் மனித உரிமைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. எந்தவிதமான விசாரணையுமின்றி, யாரையும் கைது செய்யவோ, 18 மாதம் வரை காவலில் வைக்கவோ ஒரு தனி அதிகாரத்தை ராணுவம் பெறுகிறது. கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்குவதற்கு இது வழிவகுத்தது.

யாழ்ப்பாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணப் பகுதிக்கு ராணுவப் பட்டாளங்கள் மேலும் பல அனுப்பப்படுகின்றன.

பிரிகேடியர் வீரதுங்காவிற்குத் தனி அதிகாரம் அளிக்கப்பட்டு, “தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுங்கள்’ என்ற ஜனாதிபதியின் கட்டளையுடன் அவர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படுகிறார்.

6 மாதத்தில் தீவிரவாதத்தை ஒழிப்பேன் என்று சூளுரைத்து, சட்டத்தால் தனித்த அதிகாரம் அளிக்கப்பட்டு, அரசால் ஊக்குவிக்கப்பட்டு யாழ் பகுதிக்கு அவர் வருகிறார். யாழ் பகுதியில் ஒரு பாசிச ராணுவ பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறார்.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் கைதும், சித்திரவதையும் மிருகத்தனமாக நடைபெறுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்கள் சாலையோரத்தில் தூக்கி வீசப்படுகின்றனர்.

லண்டனில் உள்ள சர்வதேச மனித உரிமைக் கழகமும் பல்வேறு சங்கங்களும் இந்தப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டிக்கின்றன. நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டவுடனேயே வீடு புகுந்து கைது செய்யப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

இப்படி மறைந்து போனவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து ஒரு சில மாதத்திலேயே மிக உயர்ந்த பட்சமாக வளர்கிறது. யாழ் நகரம் ஒரு மாபெரும் சுடுகாடாக ராணுவத்தால் ஆக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, எதிர்த்துக் கேட்க ஆளில்லாத ஒரு நிலைமையும் தோன்றியது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்துடன் ராணுவம் தொடர்ந்து தமிழர் பகுதியில் நிறுத்திவைக்கப்படவும் ஏற்பாடாயிற்று.

1979 ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை உலகம் கண்டிராத காட்டுமிராண்டித் தர்பார் யாழ் பகுதியிலே நடந்தது. 1980-ஆம் ஆண்டில் ராணுவத்தின் வெறித்தாக்குதல் நடக்கும் அதே நேரத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் மாவட்டங்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க வழி ஏதும் இதில் இல்லை.

இதைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்கள் 1981-ஆம் ஆண்டு வருகிறது.

இவ்வாண்டில் அரசுக் காட்டுதர்பாரின் பயங்கரத் தாக்குதல் உச்சநிலையை அடைகிறது. மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் நின்ற ஒரு ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும் இரு போலீஸôரும் தமிழ் இளைஞர்களால் கொல்லப்பட்டனர். ஒரு முஸ்லிம் போலீஸ்காரர் காயம் அடைந்தார். அதற்குமுன் நீர்வேலியில் ஒரு வங்கிக் கொள்ளை நடைபெறுகிறது. இதையொட்டி, பெருமளவில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு மிரட்டப்படுகிறார்கள்.

ராணுவத்தினர் திட்டமிட்ட முறையில் தாக்குதலை ஆரம்பித்தனர். இந்த சமயத்தில்தான் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகத்தின் (“பிரைட் ஆஃப் நார்த்’ வடக்கின் பெருமை) என்ற கட்டிடப் பகுதி தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. இதில் பல நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட கிடைத்தற்கரிய விலை மதிப்பற்ற நூல்களும், தமிழ் இன வரலாற்று ஆதாரப் பொருட்களும் பழந்தமிழ் இலக்கியச் சுவடிகளும் சாம்பலாக்கப்பட்டன. இதன் மூலம் வடக்குப் பகுதியின் கெüரவத்தைக் கொளுத்திவிட்டதாக தமிழ் மக்கள் ஆவேச வெறி கொண்டனர்.

உலகின் அனைத்து முனைகளிலும் உள்ள அறிஞர்களும் இந்நூலக எரிப்பால் அதிர்ச்சி அடைந்தனர். இதுமட்டுமல்லாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகம், ஈழநாடு நாளிதழ் அச்சகம், யாழ்ப்பாணத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இல்லம், சுன்னாகம் பொதுக்கடை வீதி ஆகியவைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன!

கடைத்தெருவில் பொதுமக்கள் அனைவரும் தாக்கப்பட்டனர். அதில் பலர் காயமடைந்தனர். 5 பேர் மரணம் அடைந்தனர்.

இந்தப் பயங்கர சூழ்நிலையையும், குழப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தல்கள் திட்டமிட்டபடி ஜூன் நான்காம் நாள் நடைபெற்றன. நிர்வாகக் குழப்பத்தைப் பயன்படுத்தி அரசு தேர்தலில் பயங்கர ஊழல்கள் மற்றும் தில்லுமுல்லுகளைச் செய்தது.

அன்று காலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஜெயவர்த்தனாவின் வேட்பாளர் அனைவரும் தமிழர் பகுதிகளில் டெபாசிட் இழந்தனர்.

யாழ் பகுதியில் நடந்த அச்சுறுத்தும் அரச பயங்கரவாத அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டறிந்து வெளி உலகிற்குத் தெரியப்படுத்த ங.ஐ.த.ஒ.உ. (ஙர்ஸ்ங்ம்ங்ய்ற் ர்ச் ஐய்ற்ங்ழ் தஹஸ்ரீண்ஹப் ஒன்ள்ற்ண்ஸ்ரீங் அய்க் உவ்ன்ஹப்ண்ற்ஹ்) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சார்லஸ் அபயசேகர உள்ளிட்ட உண்மை அறியும் குழு ஒன்று யாழ் பகுதியில் விசாரணை செய்தது. ஆனால் அவர்கள் தங்கள் அறிக்கையை கொழும்பில் வெளியிட முனைந்தபோது அரசு குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் வன்முறை பரவியது. இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பகுதிகளும் தாக்கப்பட்டு அவர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.

மட்டக்களப்பில் இந்துக்கோவில் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.

ஜூலை முதல் வாரத்திற்குள் அம்பாறை, பதுளை, வெலிஓயா, பண்டாரவளை, நீர்கொழும்பு, கேகாலை போன்ற இடங்களில் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. ஜாஎவை, பேலியாகொடை, அம்பிலிப்பிட்டி, பண்டாரகமை ஆகிய பகுதிகளில் நவீனவகை குண்டர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்த நவீன வகைத் தாக்குதலின் முதல் நிகழ்ச்சியாக, ஒரு புகைவண்டி வழியில் நிறுத்தப்பட்டுக் கொளுத்தப்படுகிறது. பல தமிழர்கள் வண்டியிலிருந்து பிடித்து வெளியில் இழுக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள். பல பிரயாணிகள் பலத்த காயமடைகிறார்கள். அவர்களில் தமிழ் எம்.பி.யும் ஒருவர்.

கலவரம் பல பகுதிகளில் பரவுகிறது. பண்டாரவளைப் பகுதியில் ஜூலை 11-ஆம் நாள் இரண்டாவது தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. இது நீர்கொழும்பையும், கெüனியாவையும் தொற்றுகிறது.

மலையகத் தோட்டப்பகுதியிலும் கலவரம் மூண்டு எட்டியாந்தோட்டை என்ற பகுதியில் மூன்று தமிழ் தோட்டத் தொழிலாளிகள் பேருந்திலிருந்து வெளியில் இழுக்கப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள். பின்னர் பேருந்திற்குத் தீ வைக்கப்பட்டு அதில் தமிழர்கள் எரிக்கப்படுகிறார்கள்.

இரத்தினபுரிப் பகுதியில் கடைகள் சூறையாடப்படுகின்றன; கடைகளைக் கொளுத்திய பின் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் தலைமையில் ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.

மதகுரு எதிரிலேயே ஒரு தமிழர் கொல்லப்படுகிறார். அதுமட்டுமல்ல, அங்குள்ள எஸ்டேட்டிலும் பல தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்.

பயங்கரவாதம் ஒரு உச்சநிலைக்குச் சென்றது. இலங்கையே தீப்பற்றி எரியும் வகையில் இனவெறி மிக உச்சமான கோரத்தாண்டவம் ஆடியது.


37. அடக்குமுறையின் உச்ச கட்டம்!

கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ் இளைஞர்கள் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள நெல்லியடி என்ற இடத்தில் நான்கு போலீஸôர் கொலை செய்யப்படுகின்றனர். மூன்று போலீஸ் அதிகாரிகள் கடுமையாகக் காயம் அடைகின்றனர்.

ஒருவர் இருவராகத் தமிழர்களைக் கொன்ற இனவாதம் இப்போது வேறு உருவம் எடுத்துக் கும்பல் கும்பலாக தமிழர்களைக் கொல்லும் போக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் படுபயங்கர நிகழ்ச்சிகளையும், தமிழர்களின் வேதனையையும் முழுமையாகச் சொல்வதற்கு இந்தப் புத்தகம் போதவே போதாது. மேலும் அந்தக் கொடூரத் தாக்குதல்களைச் சரியாகச் சொல்ல எந்த மொழியாலும் முடியவும் முடியாது.

ஆவேசத்தின் வேகத்திலும், உணர்ச்சியின் உச்சகட்டத்திலும் இருந்த தமிழ் இளைஞர்கள் ராணுவத்திற்கும் போலீஸýக்கும் எதிராகப் பல இடங்களில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர் (விடுதலைப்புலிகள் வரலாறு 1975-84).

சாகவச்சேரிப் போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்டு மூன்று போலீஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டு, பலர் காயம் அடைகின்றனர். போலீஸ் ஒடுக்குமுறையைத் தீவிரமாகக் கையாண்ட பருத்தித்துறைக் காவல் நிலைய அதிகாரி போலீஸ் நிலைய வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருடன் ஜீப் டிரைவர் ராஜபட்சவும் கொல்லப்பட்டார். உமையாள்புரம், பரந்தன் என்ற பகுதியில் ஒரு ராணுவ லாரி தாக்கப்பட்டு ராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் தீவிர மோதல் ஏற்பட்டுப் பல ராணுவத்தினர் கொலை செய்யப்பட்டும், பலர் காயத்துடனும் தப்பி ஓடுகின்றனர்.

யாழ்ப்பாணம் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காகக் கூட்டப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட மாநாடு-உள்ளே நடந்து கொண்டிருக்கையில் செயலகக் கட்டிடம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது (விடுதலைப்புலிகள் வரலாறு 1875-84).

ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று தீவிர ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் உள்ளூர் தேர்தல் வேட்பாளர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் பலர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்கின்றனர்.

அக்டோபர் 15-ஆம் நாள் ராணுவத்தில் மூவர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதை ஒட்டி ஆத்திரம் கொண்ட ராணுவம் வெறித் தாக்குதல் நடத்தியது. சாலையில் போவோர் வருவோரைத் தாக்குவது, பஸ், ரயில் வண்டியில் பயணம் செய்வோரை வழிமறித்துத் தாக்குவது, கடைகளைச் சூறையாடுவது போன்ற அதிரடித் தாக்குதல்களை நடத்தியது ராணுவம்.

அக்டோபர் 21-ஆம் நாள் கிளிநொச்சியில் ஒரு வங்கி கொள்ளை அடிக்கப்பட்டு, கொள்ளை அடித்தவர்கள் வெளியேறியபோது ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.

இது நிலைமையை மோசமாக்கி மேலும் ராணுவத்தினரின் கொலை வெறி அதிகமாகியது.

அக்டோபர் 25-ஆம் நாள் இங்கிலாந்து அரசி இலங்கை வரவேண்டி இருந்ததால் ராணுவத்தினர் அரசினரால் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், தமிழர்களும் சிங்களவர்களும் வாழும் பகுதிக்கு இடையில் இருந்த எல்லை மாவட்டமான வவுனியா மாவட்டத்தில் ராணுவமும் போலீஸýம் அடக்குமுறை அட்டகாசத்தைத் துவக்கியது.

1970-ஆம் ஆண்டு முதல் இந்தியத் தமிழர் குடும்பங்களும் இலங்கைத் தமிழர் குடும்பங்களும், மலைப்பகுதித் தோட்டங்களில் இருந்தும், மற்றும் தென்பகுதியில் இருந்தும் கலவரங்களால் பாதிக்கப்பட்டு வீடு, சொத்துச் சுகங்களை இழந்து வவுனியா மாவட்டத்தில் தங்கி வாழ முயற்சி செய்து கொண்டிருந்தனர். இங்கு அரசின் பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்பட்டது.

ஏற்கெனவே கலவரங்களில் குடும்பங்களை இழந்து பாதிப்படைந்திருந்த இவர்கள் திரும்பவும் ஒரு வன்முறைத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுச் சின்னாபின்னமானார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் மகத்தான பொறுமையும் தாங்கும் சக்தியும் கொண்டிருந்ததால்தான் இந்த மோசமான சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடிந்தது. மறுபடியும் இவர்களைக் குடியமர்த்துவதில் பெரும் தொல்லைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்கள் இவர்களுக்கு உதவினர்.

பல பகுதியில் இருந்து அகதிகள் மீண்டும் இங்கு கொண்டு வரப்பட்டுக் காந்தீயம் நிறுவனத்தால் குடி அமர்த்தப்பட்டனர். அகில இலங்கை விவசாயக் காங்கிரஸ் மூலமாகவும் அகதி முகாம் அமைக்கப்பட்டது.

இந்தக் கலவரங்களுக்குப்பின் நாட்டின் பல பகுதிகளிலும் அகதிகள் முகாம்கள் தோன்றின. நவம்பர் மாத முடிவில் இப்பகுதியில் காடுகளில் தங்கி இருக்கும் தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் இப்பகுதியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ராணுவம் இறங்கியது.

பண்ணைகளின் உள்ளே புகுந்து அகதிகளை அடித்து நொறுக்கி, கைது செய்தபோது இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். சமூக சேவகிகள் தாக்கப்பட்டனர்; மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர்.

இந்தக் கலவரங்களை அரசு தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்ததற்கு முக்கியமான காரணங்கள்:-

ஒன்று, தொடர்ந்து இனவாத ஆளுமையை நிலைநாட்டிக் கொள்ளுவதற்கு. இரண்டாவதாக, நாடு தழுவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களைத் திசை திருப்ப. மூன்றாவதாக, புதிய அரசின் பொருளாதாரத் திட்டங்களின் சீர்கேடுகளை மறைத்துக் கொள்ள!

இதுவரை காணாத மிகப் பெரிய பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளை அரசு சந்தித்துக் கொண்டிருந்தது. இவைகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப இந்த அணுகுமுறை உதவியது.

தேசிய இனப்பிரச்னைக்கான கேள்வியில் சிங்கள பாசிச ராணுவ பயங்கரவாதம் மக்களைப் பெருமளவில் இனப்படுகொலை செய்வதை மட்டுமே தனது ஒரே தீர்வாக வைத்திருந்தது.

சிங்கள ஆட்சியாளர்கள் மிகப் பெரும் அளவிலான மக்கள் படுகொலைகள், உடமைகளைச் சேதப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தமிழ் மக்களின் சுதந்திரத் தேசிய இன உணர்வை நசுக்கிவிடலாம் என்று கனவு கண்டதும் இந்தத் தொடர் வன்முறைக்கு ஒரு காரணமாகும்.

மேலும் ஓர் ஆய்வாளர் குறிப்பிடுவதைப் போல்,

சேனநாயக்கா (முன்னாள் பிரதம மந்திரி) சட்டங்களின் மூலம் தமிழர்களை ஒடுக்க ஆரம்பித்தார். பிறகு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தமிழர்களைக் கூட்ட வன்முறை (mass violence) மூலம் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் சித்திரவதைகள் செய்தார். ஆனால் ஜே.ஆர். ஜெயவர்த்தன எல்லாவற்றிற்கும் மேலாக ஒருபடி மேலே சென்று, ஒரு பாசிசவாதியாக மாறி, அரசு ஆயுத சக்திகளின் பயங்கரவாதத்தின் மூலம் தமிழர்களை ஒடுக்க நினைக்கிறார்.*

இவையெல்லாம் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி ஈழத்தைப் பெறுவதையும், தமிழ் மக்களின் கெüரவம், சுதந்திரம், உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதையும், மதச்சிறுபான்மையினரின் சுயபாதுகாப்பு உரிமையையும் ஒடுக்குவதற்கு உருவான ஒரு புதிய வடிவமும் ஆகும்.

* கெயில் ஓம் விடட் (Gail Om Vedtt) Article in Frontier, Calcutta, Sept. 83.


38. தீவிரவாதம் உருவான காரணம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்தி வந்தவரை, ஓர் ஐக்கிய அரசின் அமைப்பிற்குள் தங்களின் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வது ஒன்றே வழி என தமிழ் மக்கள் கருதி வந்தனர். ஆனால் 1970-க்குப் பின் நிலைமை வேகமாக மாறியது.

அரசியல் தீர்வு பெறாத தமிழர் பிரச்னை, வளர்ந்து வரும் வேலை இல்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவற்றின் விளைவாக 1971-ஆம் ஆண்டு உரோகண விஜயவீரா தலைமையில் நடந்த அரசாங்கத்திற்கு எதிரான வீரசாகச அரசியல் கலவரத்தின் செல்வாக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழ் இனப்படுகொலையும் தமிழர் மத்தியில் தீவிரவாதம் உருவாகக் காரணமாயின.

இந்தச் சூழ்நிலையில்தான், தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராகக் தமிழ் இளைஞர் பேரவை உருவாகிறது. இவர்கள் வெகுஜன இயக்கத்தின் மூலம் சிங்கள இன வெறியர்களுக்கு எதிராக தமிழர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டனர்.

இளைஞர்கள் ஓரளவு அரசியல் தெளிவுடன், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொடங்கி இருந்தனர். தமிழ்த் தலைவர்களின் மிதவாதமும், இனவாத ஒடுக்குமுறையின் விளைவாக நிகழ்ந்த படுகொலைகளும் இவர்களை ஆவேசமூட்டி வேகமடையச் செய்தது. இவ்வுணர்வே விடுதலைப் புலிகளின் இயக்கம் 1971-இல் உருவாகக் காரணமாயின.

இந்த நிலையில் 1974-இல் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் நிகழ்கின்றன. இதனால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள் சிவகுமாரன் தலைமையில் பழிக்குப்பழி வாங்கச் சபதம் செய்கின்றனர்.

மாநாட்டில் நடந்த படுகொலைகளுக்குக் காரணமான போலீஸ் அதிகாரி சந்திரசேகராவை எப்படியும் தீர்த்துக் கட்டுவது என்றும் இந்தப் படுகொலைகளுக்குப் பக்க பலமாக விளங்கிய தமிழின துரோகி யாழ் நகர மேயர் துரையப்பாவை கொல்வது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

போலீஸ் அதிகாரி மீது இரண்டு முறை தாக்குதல் நடக்கிறது. மேயர் துரையப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார்.

போலீஸ் அதிகாரியைக் குறி வைத்துக் கொல்ல முயற்சி எடுக்கும் போது சிவகுமாரன் வளைத்துப் பிடிக்கப்படுகிறார். போலீஸ் கையில் சிக்காமல் இருக்க, சயனைட் குடித்துத் தியாக மரணம் அடைகிறார். இவரது வீரமரணம் நிகழ்ந்தது 1974-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி ஆகும்.

சிவகுமாரன் தலைமையிலான தமிழ் மாணவர் பேரவைத் தொடர்ந்து இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்தது. அதே காலத்தில் தொடர்ச்சியாக “தமிழ் புதிய புலிகள்” (Tamil New Tigers) என்ற தீவிரவாத இயக்கத்தினரும் போராடி வந்தனர்.

சிவகுமாரன் மரணத்திற்குப் பின் 1975-ஆம் ஆண்டு, அமிர்தலிங்கத்தின் விருப்பப்படி தமிழர் கூட்டணியின் உட்கிளையாக தமிழ் இளைஞர் பேரவை அமைகிறது.

இவ்வாண்டின் நடுப் பகுதியில் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் புதிய புலிகளின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான தனபாலசிங்கம் என்ற செட்டி 1976-ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் கைது செய்யப்படுகிறார்.

இதற்குப் பின் தமிழ்ப் புதிய புலிகள் இயக்கம் 1976-ஆம் ஆண்டு மே 5-ஆம் நாள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்கிற புதிய இயக்கமாகப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் தலைவராக வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளை பிரபாகரன் பொறுப்பேற்கிறார்.

இதே நேரத்தில் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தால் தனி ஈழக் கோஷத்தை முன்வைத்துத் தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியாக 1976-இல் உருவாகிறது. இதுதான் மிக முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும். இந்தக் கால கட்டத்தில் ஒரு சில தீவிரவாத அமைப்புகளும் தலைமறைவு இயக்கமாக சிறு சிறு குழுக்களாக இயங்கி வருகின்றன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்-(TELO)

ஈழத் தமிழர் போராட்டத்தில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வியக்கத்தின் ஆரம்ப காலத் தலைவர்கள் அனைவரும் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து உருவானவர்களே.

தமிழ் மாணவர் பேரவை உருவானதிலும் இத்தலைவர்களின் பங்கு முக்கியமானதாகும். அப்போதிருந்த தரப்படுத்துதல் சட்டம் மற்றும் பல்வேறு வகையான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இவர்கள் போராடி வந்தனர்.

தமிழ் மிதவாதத் தலைவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் மூலம் இன ஒடுக்குமுறையை எதிர்க்க முடியாது என்றும் தனி ஈழத்தைக் கட்டமைக்க முடியாது என்றும் இவர்கள் கருதினர்.

இதன் ஆரம்பகால முன்னணித் தலைவர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோர் ஆவார்கள்.

போலீஸ் அதிகாரி சந்திரசேகரா புகழ் சிவகுமாரனுடன் சேர்ந்து இவர்களும் மாணவர் பேரவை உறுப்பினர்களாக இருந்தனர்.

அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது குட்டிமணியும், பிற தலைவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தமிழ் மாநாட்டிற்கு முந்தைய இனப் படுகொலைக்கு எதிராகப் போராடியதன் விளைவுதான் இவர்கள் கைது செய்யப்பட்டதற்குக் காரணமாகும். குட்டிமணியுடன் கைதானவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ என்கிற சபாரத்தினம். சாட்சியம் இல்லாததால் இவர் விடுதலை செய்யப்படுகிறார்.

யாழ் மேயர் துரையப்பா கொல்லப்பட்டதன் விளைவாகக் குற்ற செயல்களுக்காகத் தேடப்படுவர் பட்டியலை அரசு சுவரொட்டியாக ஒட்டியது. அதில் இவர்கள் பெயரும், இவர்களது தலைக்கு விலையாக 1 லட்சம் ரூபாயும், அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் கைது செய்யப்பட்ட இவர்கள் 1971-ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

1977-இல் ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்தபிறகு நடந்த பல இனப் படுகொலைகளுக்குப் பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் இவர்கள் அமைப்பு ஈடுபட்டது.

1969-ஆம் ஆண்டிலிருந்தே தங்கதுரை “தமிழ் ஈழ விடுதலைக்கு ஆயுதம் தாங்கிய போராட்டமே வழி” என்று முடிவு கட்டுகிறார். அப்போதிருந்தே அதற்கான நடைமுறைப் போர்த் தந்திரங்களையும், இயக்க விதிமுறைகளையும் உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டார். சிவகுமாரன் மரணத்திற்குப் பின் 1975-ஆம் ஆண்டு தங்கதுரை தனக்குக் கீழே ஒரு குழுவாக அமைத்துச் செயல்பட்டார்.

கட்டுப்பாடும், உறுதியும் நிறைந்த இயக்கமாகப் படிப்படியாக வளர்ந்து 1981-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கமாகப் பரிணமிக்கிறது. இதில் பிரபாகரன் இணைந்து கொள்கிறார்.

1981 ஏப்ரல் 5-ஆம் தேதி தங்கதுரை, குட்டிமணி, தேவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.

22-ஆம் தேதி நடந்த அரசு நடவடிக்கையில் இதன் மற்றொரு தலைவரான ஜெகனும், பிற இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். முன்னணித் தலைவர்கள் அனைவரும் கைதானபின் அமைப்பு ஸ்தம்பிக்கிறது.

இந்த நேரத்தில் பிரபாகரன் மீண்டும் வெளியேறித் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஒருங்கிணைக்கிறார்.

1983-ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஆயுதப் படைகளின் விரிவாக்கத்தை இவ்வமைப்பு மேற்கொள்கிறது.

1983 கடைசியில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதன் விரிவான பகுதி வெலிக்கடை சிறைப்படுகொலைகள் என்னும் பிரிவில் பிறகு கூறப்படும்.


39. ஆயுதம் ஏந்தும் இளைஞர் அமைப்புகள்!

உண்மையில் விடுதலைப் புலிகளின் இயக்கம் 1972-லேயே உருவாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் தமிழ்ப் புதிய புலிகளாக இருந்த பின்னால் பெயர் மாற்றம் அடைந்ததே இது.

ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் ஆயுத எதிர்த்தாக்குதல் இயக்கமே விடுதலைப் புலிகள் இயக்கம் என்றும் ஆயுதமேந்திப் போராடுவதன் மூலமே தனி ஈழம் கட்டமைக்க முடியும் என்பதே தங்கள் நோக்கம் என்கிறார்கள் இவர்கள்.

இவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர் 1954-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி வல்வெட்டித்துறையில் பிறந்தார். தனது 16-ஆவது வயதிலேயே தமிழ் இன ஒடுக்கு முறையை எதிர்க்கும் மனோபாவத்தைக் கொண்டிருந்தார்.

சிறு வயதாக இருந்ததால் மற்றச் சக புரட்சியாளர்கள் இவரைத் “தம்பி’ என்றனர்.

இவர் ராணுவ வெளித்தாக்குதல்களை எதிர்த்துத் தீவிர எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இவர் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் கட்டமைக்கப்பட்ட ஓர் இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார்.

1983-ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீலங்கா அரசு நடத்திய உள்ளூராட்சித் தேர்தல் பகிஷ்கரிப்பு நிகழ்ச்சியில் இவ்வியக்கம் முதன்மைப் பங்கெடுத்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் மூவர் மீது ராணுவ நடவடிக்கை தொடுத்தது. அதேபோன்று 1983 ஜூன் 5-ஆம் தேதி காங்கேயன் துறைத் தாக்குதலும், சாவகச் சேரிப் போலீஸ் நிலையத் தாக்குதலும், நெல்லியடியில் அரசுப்படையினருக்கு எதிராக 1982-ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலும் ஆவ்ரோ விமானத் தகர்ப்பும் இவ்வமைப்பால் நடத்தப்பட்டவை ஆகும்.

தமிழ் மாணவர் பேரவை உருவானபின் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து அரசியல் தலைமை உருவாக ஆரம்பித்தது. தரப்படுத்துதல் மற்றும் ஒடுக்குமுறைச் சட்டங்கள் பல வந்தபின், முதல் தடவையாக தமிழ் இளைஞர்கள் இனவாதத்திற்கு எதிராக ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இந்தச் சமயம் இலங்கையின் பல பகுதிகளில் ஆயுதப் போராட்டங்கள் உருவாயின.

1971-ஆம் ஆண்டு உரோகண விஜயவீரா தலைமையின் கீழ் ஏற்பட்ட அரசுக்கு எதிரான எழுச்சியில் பல்வேறு இளைஞர்களைக் கும்பல் கும்பலாகக் கைது செய்து அரசாங்கம் காவலில் வைக்கிறது. இந்தக் கைது படலத்தில் தமிழ் இளைஞர்களும் இருந்தனர்.

இந்த இளைஞர்கள் விடுதலையானபின் அரசுக்கு எதிராகத் தீவிர எதிர்த்தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர்.

அரசு பதில் நடவடிக்கையாகக் கொடூரமான ஒடுக்குமுறையை மேற்கொள்ளுகிறது.

இதன் விளைவாக இளைஞர்கள் மத்தியில் மூன்று விதமான போக்கு வெளிப்படுகிறது.

1. தலைமறைவு ஆதல்.

2. ஒதுங்குதல்.

3. அரசால் கைது செய்யப்படுதல்.

தலைமறைவான இளைஞர்களில் அரசியல் தெளிவு பெற்ற ஒரு சிலர் லண்டனில் கூடி ஈராஸ் (EROS) என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். இதனுடன் மாணவர்களுக்கான அமைப்பான கஸ் (GUES)சும் உருவாகிறது. (General Union of Eelam Students)

ஆரம்பத்தில் இவ்விரண்டு அமைப்பும் ஒன்றாக இணைந்தே செயல்படுகின்றன.

ஈராஸ் படிப்படியாக ஆயுதப் படைக் குழுக்கள் கட்டமைப்பதற்கான வேலைகளைச் செய்கிறது. அதே நேரத்தில் பல பிரிவு வெகுஜன அமைப்புகளையும் உருவாக்கிச் செயல்பட வேண்டும் என்ற கருத்தும் உருவாகி, அதற்கான செயல்களில் சில தலைவர்களும் ஈடுபடுகிறார்கள். இதன் உச்சக்கட்டமாக 1980-இல் ஒரு பிளவு ஏற்படுகிறது. இப்பிளவில் இருந்து உருவானதே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகும்.EROS-இன் தலைவர் பாலகுமார் ஆவார்.

ஈராசிலிருந்து வெளியேறி வந்த தலைவர்கள் உருவாக்கிய அமைப்பே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஆகும்.

1981 அக்டோபர் 10-ஆம் நாள் இவர்கள் ஒரு பிரகடனத்தை வெளியிடுகின்றனர்.

இந்த அமைப்பு மூன்று மிக முக்கியமான நோக்கங்களைக் கொண்டதாகும்.

1. ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் தேசத்தை விடுவித்து தனி ஈழம் காண்பது.

2. ஒட்டுமொத்தமான சமூக, பொருளாதார, கலாசாரச் சுதந்திரத்தை உள்ளடக்கிய அரசியல் சுதந்திரத்தைப் பெற்று ஒரு சோஷலிச சமுதாயத்தைக் கட்டமைப்பது.

3. சர்வதேச முற்போக்குப் போராட்டத்தில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஈழவிடுதலைப் போராட்டத்தில், ஏகாதிபத்தியத்திற்கும், மிதவாத இனவாதத்திற்கும் எதிராகப் போராடுவது.

இம்மூன்று நோக்கங்களை உள்ளடக்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தைக் கட்டமைக்கப் பலதரப்பட்ட பிரிவு மக்கள் மத்தியில் இறங்கிப் பல வகையான மக்கள் இயக்கங்களை உருவாக்கித் தனி ஈழத்திற்காகப் போராட வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.

கஸ் ((GUES)அமைப்பு, பின்னால் இவர்களுடன் இணைந்து விட்டது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை அமைப்புகளாக, மாணவர் அமைப்பாக கஸ் (GUES) கிராமப்புறத் தொழிலாளர் விவசாயிகள் முன்னணி (Rural Workers & Peasants Front), ஈழ இளைஞர்கள் முன்னணி (Eelam Youth Front), தோட்டத் தொழிலாளர் முன்னணி (Plantation Proletariat Front), ஈழ பெண்கள் விடுதலை முன்னணி (Eelam Women’s Liberation Front), மீனவத் தொழிலாளர் முன்னணி (Fishery Workers Front) ஆகியவைகளும் அடங்கும்.

1983-ஆம் ஆண்டு இவ்வமைப்பின் ஆயுதப்படைப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டு மக்கள் விடுதலைப் படை உருவானது.

இது பல்வேறு வெகுஜனப் போராட்டங்களையும், இனவாத அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவராகப் பத்மனாபா இருந்தார்.

இது 1980-இல் LTTE – தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்து உருவான ஒரு அமைப்புதான் தமிழ் ஈழமக்கள் விடுதலை இயக்கம்- PLOT.. இது முகுந்தன் என்ற உமாமகேஸ்வரன் தலைமையில் செயல்பட்டது.

இவரது தலைமையில் உள்ள இயக்கம் பல ஆயுத எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொண்டுள்ளது.

இந்த ஐந்து (EROS, EPRLF, TELO, LTTE, PLOT) அமைப்புகளையும் தவிர மற்றும் சில சிறு ஆயுதக் குழுக்கள் இலங்கை மண்ணில் இருக்கத்தான் செய்தன. அதைத் தவிர ஒரு சில மனித உரிமை மற்றும் பல மக்கள் இயக்கங்களும் இலங்கை மண்ணில் இனவாத ஒடுக்குமுறையை எதிர்த்து இயங்கி வந்தன.

ஆனால் இந்த ஐந்து இயக்கங்கள் மட்டும்தான் ஆயுதப் படைப்பிரிவைக் கட்டமைத்து அரசு பயங்கரவாதத்தை வீரத்துடன் எதிர்த்துத் தியாகம் பல புரிந்து வந்தன.

ஒரு காலகட்டத்தில் EROS, EPRLF, LTTE, TELO ஆகிய நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவதாக முடிவெடுத்தன. அதன்படி வேறு சில மக்கள் இயக்கங்களுடன் (23 மக்கள் இயக்கங்கள்) இணைந்து இனவாத எதிர்ப்பு மக்கள் அணிகளைக் கட்டமைத்தும் அதே சமயம் ஆயுதப்படைப் பிரிவுகளின் மூலம் ராணுவ பதிலடியும் தந்தனர்.

பிரபலமாக உள்ள அமைப்புகளைத் தவிர (TELO, EPRLF, EROS, LTTE, PLOT) வேறு சில குழுக்களும் சிறிய அளவில் செயல்பட்டு வந்தன என்று சொன்னோம். இவற்றில் இரண்டு அமைப்புகள் நம் கவனத்திற்குரியது.

தமிழ் ஈழ விடுதலை ராணுவம் (TELA) என்கிற அமைப்பு TELO விலிருந்து பிரிந்ததாகும். இவ்வமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் “”ஓபராய்” தேவன் என்பவர். இவர் இலங்கையில் தியாகியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

1983 ஜூலை கலவரத்திற்குமுன் யாழ் பல்கலைக்கழக மாணவியரைக் கடத்திச் சென்று கற்பழித்த ராணுவ வீரர்களைக் கொன்ற தாக்குதல் நடவடிக்கை இவர்கள் எடுத்ததே ஆகும்.

இவைத் தவிர (TEA, TELE) என்ற ராணுவ அமைப்புகளும் உள்ளன.

தமிழ் ஈழ தேசிய ராணுவம் (TENA) என்கிற அமைப்பு தமிழ் விடுதலைக் கூட்டணியின் (TULF)ன் தலைவரான அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதனால் உருவாக்கப்பட்டதாகும். மற்ற விடுதலைக் குழுக்கள் இவ்வமைப்பைத் தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவருடைய துணை அமைப்பு என்றே குறிப்பிட்டனர்.

தமிழ் ஈழ விடுதலை முன்னணி (Tamil Eelam Liberation Front) என்பது ஈழவேந்தன் தலைமையில் உருவான அமைப்பாகும்.

அதேபோன்று எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மகனான சந்திரஹாசனால் வெளியேறிய இலங்கைத் தமிழரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு PROTEG. இலங்கையில் இருக்கும் மதத் தலைவர்கள் (புத்த, கிறிஸ்துவ முஸ்லிம்) தமிழ்நாட்டில் உள்ள விடுதலைக் குழுக்களுடன் பேசுவதற்கு வரும்போது இவ்விரு அமைப்புகளுடனேயே பேச விரும்பியதற்குக் காரணம், இவர்களின் அமெரிக்க சார்பு நிலைப்பாடு என்கிற விமர்சனம் உண்டு.

இவைகளைத் தவிர அகதிகளுக்கு உதவும், வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் OFERR என்ற ஓர் அமைப்பும் உள்ளது.

மேலும் ஆயுதப் போராட்ட விடுதலைக் குழுக்களைத் தவிர பரந்த அளவில் தமிழ் ஈழத்துக்காக மக்களைத் திரட்டிப் போராடும் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற ஒரு வெகுஜன அமைப்பும் குறிப்பிடத்தக்கது. இது 1983 ஜூலை கலவரத்திற்குப் பின் பல்வேறு மக்கள் போராட்டங்களை இலங்கையில் கட்டமைத்துள்ளது.

நம்மால் அறியப்பட முடியாமல் இலங்கையில் இயங்கிய பல சிறு சிறு அமைப்புகளும் கூட நமக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்த அமைப்புகளும் விரிவான தொடர்பின்மையின் காரணமாக அவ்வமைப்புகளைப் பற்றிய தெளிவான விஷயங்களை அறியமுடியவில்லை.


40: தீக்கிரையானது யாழ் நூலகம்!

ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் நூலக எரிப்பாகத்தான் இருக்கும்.

-ஆனந்த கே.குமாரசாமி நூல் தொகுதியில்

உள்ள 700 நூல்கள்

-சி.வன்னியசிங்கம் நூல் தொகுதி (100 நூல்கள்)

-ஐசக் தம்பையா நூல் தொகுதி (சமயம்,

தத்துவம் பற்றிய நூல்கள் 250)

-கதிரவேற்பிள்ளை நூல் தொகுதி (600 நூல்கள்)

-ஆறுமுக நாவலர் நூல் தொகுதி

-பைபிள் – முதன்முதலாக தமிழில்

எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி

-ஏட்டுச்சுவடிகள்

-பிரிட்டானியா கலைக்களஞ்சியம்

-அமெரிக்க கலைக்களஞ்சியம்

-கொல்லியர்ஸ் கலைக்களஞ்சியம்

-விஞ்ஞான தொழில்நுட்பக்

கலைக்களஞ்சியம்

-சமயங்கள் பற்றிய கலைக்களஞ்சியம்

-மருத்துவக் கலைக்களஞ்சியம்

-மாக்மில்லன் கலைக்களஞ்சியம்

-குழந்தைகள் கலைக்களஞ்சியம்

-அகராதிகள் (பல்வேறு வகை)

-கைடுகள் (பல்வேறு வகை)

-புவியியல் வரைபடங்கள், வரைபட நூல்கள்

-தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்

பெருமக்களின் நூல்கள்

-ஆங்கில பிரெஞ்சு – ஜெர்மானிய –

அரபி மொழியிலான நூல்கள்

-பத்திரிகைகள்.

இவ்வளவுமாகச் சேர்ந்து 97 ஆயிரம் நூல்களைக் கொண்ட புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் 1981 ஜூன் 1-ஆம் தேதி தீக்கிரையாக்கப்பட்டது. செய்தி கேட்டு உலகமே அதிர்ச்சியுற்றது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வீதிக்கு வந்து கதறி அழுதனர். வரலாற்றில் மன்னிக்க முடியாத கருப்பு நாள் இது!

யாழ்ப்பாணத்தில் நூலக இயக்கம் என்பது 1915 டிசம்பர் 18-ஆம் தேதி அன்றைய பருத்தித்துறை அரசியல்வாதி கே.பாலசிங்கம் கொழும்பில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பில் நூலகங்கள் அமைய வேண்டிய அவசியம் குறித்து பேசினார். இந்தச் செய்தி வெளியான 9-வது நாளில், டிசம்பர் 27-ஆம் தேதி – யாழ்ப்பாணத்தின் வடக்கே உள்ள கீரிமலை, காங்கேசன் துறைக்கு அண்மையில் கடற்கரையொட்டிய ஊரில் உள்ள நகுலேஸ்வரர் கோயில் மண்டபத்தில் அமைந்த நூலகத்துக்கு நகுலேஸ்வர படிப்பகமும் நூல் நிலையமும் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த நூல் நிலையத்தை நிறுவியவர் சைவப் பெரியார் சி.நமசிவாயம். இதனைத் திறந்து வைத்தவர்: ஆன்மிகத்துறவி சர்வானந்த அடிகள். (தகவல்: ஆவணஞானி இரா.கனகரத்தினம்)

1916-ஆம் ஆண்டு கீரிமலை நகுலேஸ்வர நூலகம் ஆரம்பிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் கன்னிமரா நூல் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தஞ்சை சரஸ்வதி மகால் (1918), ஆல்காட் ஆரம்பித்து வைத்த அடையாறு நூலகம் (1880), மறைமலை அடிகள் நூலகம் (1958), உ.வே.சாமிநாதய்யர் நூலகம் (1943) ஆகியவை உலகப் புகழ்பெற்றது போலவே, யாழ்ப்பாண நூலகமும் சரித்திரப் புகழ் கொண்டதாகும்.

யாழ்ப்பாண நூலகம் 1934-ஆம் ஆண்டில் 844 நூல்களுடன் (கலாநிதி ஐசக் தம்பையா தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கட்டடத்தில் எடுத்த முடிவுப்படி) ஆஸ்பத்திரி வீதியில், வாடகை வீட்டில், தொடங்கப்பட்டு 1936-இல் நகரசபைக் கட்டடத்தில் நிறுவப்பட்டது. பெருகி வரும் வாசகர்களுக்கேற்ப அனைத்து வசதிகளையும் கொண்ட நூலகம் ஒன்றினை அமைக்க 1952-இல் யாழ் மேயர் சாம்.ஏ.சபாபதி தலைமையில் கூடிய மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டபடி லாட்டரி சீட்டு மூலம் நிதி திரட்டப்பட்டது.

இந்த நூலகம் அமைப்பதில் அருட்தந்தை லாங் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். நூலகம் அமைப்பதற்கான திட்டங்களை நூலகத்தின் தந்தை என்று தமிழகத்தில் அறியப்பட்ட எஸ்.ஆர்.ரங்கநாதன் வகுத்தளிக்க, கட்டுமானப் பணிகளை சென்னையைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுநர் கே.எஸ்.நரசிம்மன் ஏற்றார். திராவிடக் கலையம்சம் பொருந்திய இந்த நூலகம் 11.10.1959-இல் திறந்து வைக்கப்பட்டது.

காவல்துறைத் தலைவர் மற்றும் பிரிகேடியர் வீரதுங்கா ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலையில், தமிழர்களின் பண்பாட்டின் வைப்பகமாக உருவான யாழ்ப்பாண நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினர். 97 ஆயிரம் சிறப்பு வாய்ந்த நூல்கள் எரிந்து சாம்பலாயின. உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரி என்று பெயரெடுத்த ஹிட்லர்கூட இங்கிலாந்து சென்று தாக்கும் தனது விமானப் படையினருக்கு, “ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தின்மீது குண்டு போடாதீர்கள்’ என்று எச்சரித்ததாகத் தகவல்கள் உண்டு. அதே போன்று, “ஜெர்மனியில் ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தைத் தாக்காதீர்கள்’ என்று பிரிட்டன் விமானப் படைப்பிரிவுக்கும் அறிவுறுத்தப் பட்டதாகவும் சொல்வார்கள்.

ஆனால் ஜெயவர்த்தனாவின் சீடன் அமைச்சர் காமினி திசநாயக்காவின் மேற்பார்வையில், தமிழர்களின் பண்பாட்டுப் பெட்டகத்தைத் தகர்க்க வேண்டும் என்ற வெறியில், தீமூட்டி எரித்தார்கள். (இதற்காகவே, இரு தினங்கள் முன்பாக தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம், மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் தேர்தல் வேலைகள் என்ற சாக்கில் காமினி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் வந்து திட்டம் தீட்டியதாக தகவல்). நூலகத்துக்கு எதிரே சில அடி தூரத்தில்தான் யாழ் தலைமைக் காவல்நிலையம் உள்ளது. மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் பாதுகாப்புக்கு என கொழும்பிலிருந்து வந்திருந்த போலீஸôர் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டரங்கமும் நூலகத்துக்கு எதிரேதான் இருக்கிறது. இவ்வகையான பாதுகாப்பு உள்ள நூலகம் தீப்பிடித்து எரிந்தது என்றால் ஆச்சரியம்தான்!

மே 31-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் நூலகத்தில் நுழைந்த போலீஸ் உடைக் கொடியவர்கள் அங்கிருந்த காவலர்களைத் துரத்தி, நூலகத்தின் கதவை உடைத்து, நூல்களின் வரிசைக்கு பெட்ரோல் ஊற்றி கொளுத்தி அழிக்கின்றனர் என்று பலரும் சாட்சியம் அளித்தனர். லெண்டிங் செக்ஷன், ரெபரென்ஸ் செக்ஷன், குழந்தைகள் பிரிவு யாவும் எரிந்தன. சுவர்கள், ஜன்னல்கள் வெப்பத்தால் வெடித்து சிதறி, எங்கும் சாம்பல் குவியல். பேய் வீடாகி விட்டது. இச்சம்பவம் தமிழின அழிப்பு என்கிற சிங்கள இனவாதிகளின் மனவோட்டத்தை உலகினருக்கு சந்தேகமின்றி வெளிப்படுத்தி விட்டது.

“இப்படியொரு மிருகச் செயலா?’- என்று கண்டனம் தெரிவித்த அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, நூலக எரிப்புச் செய்திகளை வெளியிடக்கூடாது என பல தடைகளை விதித்தார். ஆனாலும் செய்தி உலகம் முழுவதும் பரவிவிட்டது. இச்சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, இழப்பீடாக ரூபாய் ஒரு கோடியை அரசு வழங்க வேண்டும் என்று பணித்தது.

ஆனால் ஜெயவர்த்தன அரசு ஒரு ரூபாய்கூட அளிக்கவில்லை. மாறாக, “இயற்கை இடர்கள் மூலம் இழப்பு ஏற்பட்டால் அளிக்கப்படும் நிதியிலிருந்து’ சிறு தொகை மட்டும் அளிக்க உத்தரவிட்டார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த சந்திரிகாவும் கடும் கண்டனம் தெரிவித்து, யாழ் மக்களின் மனங்களை வெல்ல “புத்தமும் செங்கல்லும்’ என்று கோஷம் வைத்தார். அவர் சேகரித்த செங்கற்கள் எங்கே போயின என்பது தெரியவில்லை; அவர் சேகரித்த நூல்களோ பெரும்பாலும் சிங்கள நூல்கள் என்பது பின்னர் தெரிய வந்தது என்கிறார் யாழ்வாசி ஒருவர்.

யாழ் நூலகம் எரிப்பு குறித்து தமிழர்களின் குற்றச்சாட்டுக்கிடையே சிங்களரான அதிபர் பிரேமதாசா கூறியது என்ன?

“வடக்கு-கிழக்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார்? இதற்கு பிரதான காரணம் காமினியே. பத்து வருடங்களுக்கு முன் 1981-இல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கிடையேயான உறவுகளில் இது ஒரு கறை படிந்த – துயரமான சம்பவமாகும்.

பாராளுமன்றத்தில் மாவட்ட அபிவிருத்தி சபை முறையை நாம் கொண்டு வந்தபோது – அதிகாரத்தைப் பரவலாக்க முயன்றபோது – காமினி எதிர்த்தார். தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் காமினி நிறைய ஆட்களைக் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார். அங்கு வாக்குப் பெட்டிகளைச் சேகரித்து கள்ளவாக்குகளைப் போட்டார். இதனை நான் கூறவில்லை. பாராளுமன்றத்தில் காமினி பிரசன்னமாய் இருந்தபோது கூட்டணி செயலதிபர் ஆற்றிய உரை என்னிடம் உள்ளது.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்களில் சதிநாச வேலைகள் இடம்பெற்ற பின்னர், ஒரு சர்வதேச நூல் நிலையமான யாழ் நிலையம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுகளால் நீதியைப் பெறுவதற்கு எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியைக் குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ்த் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாதச் செயல்களில் இறங்கினார்கள்” என்பதாகும். (ஈழநாடு- (யாழ்பாணம்) 26.10.1991-இல் வெளிவந்தபடி).

இதற்கு ஒருபடி மேலே சென்று ஐக்கிய முன்னணியின் புத்தளம் அமைப்பாளர் ஜனாப் எம்.எச்.எம்.நவாஸ் கூறுகையில், “”தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நூல் நிலையமாக விளங்கிய யாழ் நூல் நிலையத்தை எரித்து சாம்பலாக்குவதற்கு முக்கிய சூத்ரதாரியாக இருந்த காமினி திசநாயக்காவுக்கு ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்” என்றார்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply