இந்து மதம் எங்கே போகிறது? 69-71

கட‌வுளை காலையில் எழுப்பனுமா? சுப்ரபாதம் பாடி?

Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம். சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?…

சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்?… அது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம்.
சமஸ்கிருத கைதிகளாக இருக்கும் சிலபேர் தமிழை நீசபாஷை என ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.

தமிழ் நீச பாஷையா?… இறைவனின் நேச பாஷையா?

பகுதி – 69

ஆழ்வார்கள் தமிழில் பாடியதால் கோயில்கள் புனிதமாகின என்று பார்த்தோம். ஆனால்… அதே ஆழ்வார்கள் பாடிய அதே கோயில்களில் கூட…

காலை வேளைகளில் ஒலிக்கிறதே வடமொழி சுப்ரபாதம்! சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்?… அது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம். இன்னும் உங்களுக்கு மாடர்ன் ஆக சொல்ல வேண்டுமென்றால் Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம்

அதாவது “Good morning to God and wake up him…” இன்று பற்பல கோயில்களிலும்… காலை வேளைகளில் ரம்யமான விடியல் போதில்… ஸ்பீக்கரில் போடுகிறார்கள் சுப்ரபாதத்தை. அந்த இசை கேட்கும்போதே நம்மை மயக்குகிறது. ஆனால் அதன் அர்த்தம் உங்களுக்குப் புரியுமா?… என்ன பாடுகிறார்கள் என்று தெரியாமலேயே… அதை நாம் திரும்பப் பாடி முணுமுணுக்கிறோம்.

தினமும் காலையில் அதை டேப் ரெக்கார்டரில் போட்டு விடுகிறோம். எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் வசீகர குரல் வளத்தால்…”கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்ததது…” என ஆரம்பிக்கிறார். அப்படியே விடியும்வரை கேட்கிறீர்கள்.

இது யார் எழுதியது?… இதன் அர்த்தம் என்ன?… தமிழ்நாட்டில் பற்பல பிராமணர் அல்லாதோர் வீடுகளிலும் இந்த சுப்ரபாதப் பாடல் ஒலித்து மயக்குகிறதே… இந்த சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?…

திருப்பதி வெங்கடேசனை எழுப்பும் இந்த சுப்ரபாதம் ஏன் தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட ஒலிக்கிறது?… என்றெல்லாம் உங்களுக்கு கேள்வி எழ வேண்டும்… அதற்கு பதில் உங்களில் பலருக்கு தெரியாது. இது சத்தியம்.

இந்த சுப்ரபாதத்தை அதாவது சமஸ்கிருத “Good morning’ ‘ஐ இயற்றியவர் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. (மத விஷயங்களில் தன்னோடு வாதம் பண்ண வருபவர்கள் யாராக இருந்தாலும்… தன்னுடைய பயங்கரமான பிரதிவாதம் மூலம் அவர்களை தோற்கடித்து விடுவார் அண்ணா. அதனால்தான் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா என பெயர் பெற்றார்.) இவர் மணவாள மாமுனிகளின் சிஷ்யர். “ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி’ என்று வாழ்த்தினாரே அதே மணவாள மாமுனிகளின் சிஷ்யர்தான் அண்ணா.

“கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்தது…” என்ற இந்த முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து உருவப்பட்டது அதாவது… விஸ்வாமித்ரர் ராமனை எழுப்புகிறார். “கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா… அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்களை வீழ்த்து…’ என ராமனை எழுப்பி அழைக்கிறார்

விஸ்வாமித்ரர்.இதை முதல் வரியாக போட்டு… வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியிருக்கிறார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா.

இவர் இந்த சுப்ரபாதத்தை 14-ம் நூற்றாண்டில் இயற்றினார் என்கிறார்கள். ஆனால்… இதே போன்ற சுப்ரபாத வடிவத்தை நாம் இப்போது கேட்கிற சுப்ரபாதம் இயற்றப்பட்டதற்கு அறுநூறு வருஷங்கள் முன்னதாகவே… அற்புதமாக இயற்றியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில்.

இனிய தமிழில் “திருப்பள்ளியெழுச்சி’ என்றும் பெயர் கொண்ட அந்த பத்து முத்தான பாடல்களை (ஆழ்வார்கள் அருளிச் செயல் புத்தகத்தில் 917 முதல் 926 வரையிலான பாடல்கள்) சிலவற்றை மட்டும் உங்களுக்கு சொல்கிறேன்.

தொண்டரடிப் பொடியாழ்வார் காவேரிக் கரையில் படுத்திருக்கும் திருவரங்க பெருமாள் அரங்கநாதனை எழுப்புவதாக இந்த பாடல்களை இயற்றியிருக்கிறார். “கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்; கனை இருள் அகன்றதுகாலை அம் பொழுதாய்மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர்திசை நிறைந்தனர். இவரொடும் புகுந்த இருங் களிற்று ஈட்டமும் பிடியொரு முரசும்அதிர்தலில் அலை-கடல் போன்றுவிது எங்கும்அரங்கத்தம்மா. பள்ளி எழுந்தருளாயே…-இதுதான் தமிழ் திருப்பள்ளியெழுச்சியின் முதல் பாடல்.

கதிரவன் கிழக்கின் மேலே முளைத்து விட்டான். இரவின் இருள் அகன்றது… காலைப்பொழுது மலர்கள் பூத்து தேன் சொரிகின்றன. வானத்து தேவர்களும், பூமியின் மன்னர்களும், பக்தகோடிகளும் நீ பார்க்க தெற்குப் பக்கம் திரண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்த யானைத் திரள்கள் எழுப்பும் பிளிற்று ஒசையும்… யானைப் படையின் முரசு ஒலியும் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கிறதே அரங்கா… திருப்பள்ளியை விட்டு எழுக, அவர்களுக்கு காட்சி தருக…-என திருவரங்கத்து பெருமானை தமிழால் தட்டி எழுப்புகிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

இங்கே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே… -என தன் இறைவனை அம்மாவென அழைக்கிறார் ஆழ்வார். இந்தப் பாடலில் பக்தி இல்லையா?… சுவை இல்லையா?… இலக்கியம் இல்லையா?… அல்லது உங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா?…இன்னும் ஒரு தமிழ் திருப்பள்ளியெழுச்சி கேளுங்கள்.கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன, இலையோகதிரவன் கனை கடல்முளைத்தனன், இவனோதுடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறிதுகில் எடுத்து ஏறினர்.

சூழ்புனல் அரங்காதொடை ஒத்த துளவமும் கூடையும் பொழிந்துதோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன்அடியார்க்கு ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்தருளாயே!- சுற்றிலும் காவிரி நதி சூழ்ந்த அரங்கா. கடலிலே கதிரவன் தோன்ற… குளங்களில் தாமரைப் பூக்கள் சிரித்து மலர்ந்து மணக்கின்றன.சின்னச் சின்ன இடுப்புகளை பெற்ற பெண்கள் காவிரியில் குளித்து… தங்களின் நனைந்த கூந்தலை ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி உதறி… தத்தம் அடைகளை உடுத்தி கரையேறுகிறார்கள்.

இப்படிப்பட்ட இளங்காலைப் பொழுதில் தொண்டரடிப் பொடியென்னும் நான் திருத்துழாய் (துளசி) மாலையும், பூக்குடலையும் தாங்கி காத்திருக்கிறேன். இந்த அன்பனை ஏற்று அருளி ஆளாக்க வேண்டும்.இந்த தமிழ்பாடலுக்கு என்ன குறைச்சல்….

பகுதி – 70. – தொண்டரடிப் பொடியாழ்வாரின் தமிழ் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் பத்தில்… முதல் மற்றும் கடைசி பாடல்களை எடுத்துக் காட்டினேன்.என்ன வர்ணனைகள்?… என்ன எதுகை மோனைகள்?… எவ்வளவு இனிமை வழிகிறது!

“கொழுங்கொடி முல்லையின் கொழுமலர்’ என்ற இரண்டாவது பாடல், “சுடர் ஒளி பறந்தன சூழ்திசை எல்லாம்’ என்ற மூன்றாவது பாடல், “மேட்டு இள மேதிகள்’ என்ற 4-ஆம் பாடல், “புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்’ என்ற ஐந்தாம் அருளிச் செயல் “இரவியர் மணி நெடுந் தேரோடும்’ என்ற ஆறாவது பாசுரம்.”அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள்’ என ஆரம்பிக்கும் ஏழாவது பாட்டு, வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க… -என்ற எட்டாவது பாட்டு… ஏதம் இல் தண்ணுமை எக்கும் மத்தளி… – என்று ஒன்பதாவது பாசுரம்…தொண்டரடிப் பொடியாழ்வாரின் இந்த பத்து பாடல்களும்… இன்று எங்கும் ஒலிக்கிற சுப்ரபாதப் பாடலுக்கு 600 வருடங்கள் முன்னரே ரங்கனை எழுப்பிய பாடல்கள்.

சுப்ரபாதத்தில் இன்னொரு “லாஜிக்’கும் இருக்கிறது. அதிலும் தமிழ்தான் வெற்றி பெறுகிறது

திருப்பதி வெங்கடாஜலபதி நின்று கொண்டிருக்கிறார். அவரை எழுப்புவது சரியாக இருக்குமா?… இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக்கிறார் இவரை எழுப்புவது சரியாக இருக்குமா?

படுத்துக் கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை தமிழில் செய்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். நின்று கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை சமஸ்கிருதத்தில் செய்தார் அண்ணா.

ஆனால்… நாமோ logic இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம். ஆனால்… மறுபடியும் நான் அழுத்திச் சொல்வேன். இதே பொருளை 600 ஆண்டுகள் முன்கூட்டியே சொன்ன தமிழை தள்ளி வைத்து விட்டார்களே.

இன்றும் கோயில்களில் தினசரி சேவா காலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி ஒலிக்கிறது. ஆனாலும், சுப்ரபாதத்தை போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா?

சமஸ்கிருத கைதிகளாக இருக்கும் சிலபேர் தமிழை நீசபாஷை என ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். தமிழ்தான் நமக்கு மட்டுமல்ல அரங்கனுக்கும் நேசபாஷை என்பதை இன்னொரு ஆழ்வாரின் வாழ்க்கையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

அவர் திருப்பாணாழ்வார்… சோழ நாட்டிலே உறையூர் என்ற திருவூரில் பாணர் வம்சத்தில் பிறந்தவர். பாணர்கள் என்றால் “பாண்’ என்னும் இசைக்கருவியை வைத்துக் கொண்டு மன்னர்களைப் பாடி பரிசுப் பொருள்களை பெற்று ஜீவனம் நடத்துபவர்கள்.

ஆனால்… நமது பாணரோ… திருவரங்கத்து பெருமாளையே நினைத்துப் பாடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் காவேரி சூழ்ந்த திருவரங்கத்தில் இருக்கும் ரங்கநாதனை தனது பாண் இசைக்கருவி மூலம் “டிங்கு டிங்கு டிங் டிங்…’ என இசைத்துக் கொண்டு பாடியபடி இருந்தார்.

ஆனால்… இவரைப் பார்த்த உயர் ஜாதியினர்களோ…”நீ தாழ்ந்த சாதிப்பயல் நீ எப்படியடா திருவரங்கத்துக்குள் நுழைய முடியும்… போடா’ என துரத்தியடித்தார்கள். பாணரோ… நான் பெருமாளை பாடித்தான் தீருவேன் என்று செந்தமிழில் ரங்கனை உருகி ராகமிசைத்துக் கொண்டிருந்தார். இவரது தமிழிசையை… ரங்கனின் உயர்ஜாதி பக்தர்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் விரட்டியடிக்க… காவேரிக் கரையிலேயே நின்று கொண்டிருந்த பாணர் வாழ்வில் ஒரு அதிசயம் நடந்தது.

காவேரிக் கரையில் தனிமையில் நின்று அரங்கனை பாடிக் கொண்டிருந்த பாணர் முன்பு… ஒரு வைதீகர் ஆச்சாரமான வைதீகர் நின்றார். எங்களை மன்னிப்பீர் பாணரே… உங்களை இதுநாள் வரை திருவரங்கத்துள் அனுமதிக்காமல்… அரங்கனை தரிசிக்க விடாமல் பாவம் செய்தோம். உங்கள் தமிழை நாங்கள் மறுதலித்தோம்.

ஆனால்… பகவான் அரங்கநாதர் உங்கள் தமிழுக்காக தவம் இருக்கிறார்.உங்களது இனிய பாடல்களை அரங்கன் அவதானித்துக் கொண்டே இருக்கிறார். என்னை அழைத்து, “நீ போய் நமக்கு அந்தரங்கரான பாண் பெருமாளை உம்முடைய தோளிலே தூக்கிக் கொண்டு வா… அவரை ஒதுக்கி வைக்க நினைக்காதீர் உடனே செல்’ என கேட்டுக் கொண்டார்.

வாருங்கள் என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். உங்களை சுமந்து அரங்கனிடத்தில் இறக்கி விடுகிறேன்” என்று பாணரை பார்த்து பணிவுடன் சொன்னார் அரங்கன் அனுப்பிய லோகசாரங்கர். பாணர் அதாவது திருப்பாணாழ்வார் லோகசாரங்கர் தோளில் எறி… திருவரங்கத்தை அடைய…அங்கே திருப்பாணாழ்வாரை பார்த்த அரங்கன்… அவருக்கு காட்சி தந்து இப்போது என் அருகில் தமிழ் பாடுங்கள் பாணாழ்வாரே…” என்று கேட்கிறார்.இந்த காட்சியை பார்த்து அனுபவித்து அமலனாதிபிரான் என பத்து பாசுரங்களை (927-936) பாடினார் திருப்பாணாழ்வார். ..இப்போது சொல்லுங்கள் தமிழ் நீச பாஷையா?…இறைவனின் நேச பாஷையா?…
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 68. தமிழை கட்டிப்போட்ட சமஸ்கிருதம். பூசையில் சூழ்ச்சி. தமிழன் வெளியே நிறுத்தப்பட்டு சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள்.

பகுதி 71. தமிழ் நேசபாஷையா? நீசபாஷையா? தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்.


தமிழ் நேசபாஷையா? நீசபாஷையா? –  71

இந்து மதம் எங்கே போகிறது?
தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்.

தமிழுக்கு என்ன நிலைமை?… தமிழ் இறைவனின் நேசபாஷையா? நீசபாஷையா?

இறைவனே காசு கொடுத்து எல்லார்க்கும் உணவு கொடுக்கச் சொன்னாராம்.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி-71.

தமிழ் இறைவனின் நேச பாஷையா அல்லது நீசபாஷையா என்பதை திருப்பாணாழ்வாரின் வாழ்வியல் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோம்.

திருப்பாணாழ்வாரின் தமிழை கேட்பதற்காக ஆளனுப்பி அவரை மரியாதையோடு தூக்கிவரச் சொன்னார் அரங்கத்துக்கு பெருமாள். ஆனால்… அப்பேற்பட்ட ஸ்ரீரங்கத்திலே படுத்துக்கிடக்கும் ரங்கநாதனுக்கு எதிரே நாலாயிரம் அருளிச் செயலை பாடுகிறார்களா?

ஒவ்வொரு திருமால் ஆலயத்திலும் வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்துநாள் பின் பத்துநாள் ஆக இருபது நாள்கள் நாலாயிரம் ஆழ்வார்கள் அருளிச் செயலை பாடி ஒரு தமிழ்விழா நடத்துவார்கள். இது வருடா வருடம் நடக்கும்.

ஸ்ரீரங்கத்தில் எப்படி நடக்கும் என்றால்… மூலவரான ரங்கநாதன் படுத்தபடியே தமிழ் கேட்க காத்திருக்க… உற்சவரை அதாவது உற்சவ மூர்த்தியை வெளியே ஒரு மண்டபத்துக்கு தூக்கி வருவார்கள்.

அங்கே வைத்து நாலாயிரம் அருளிச் செயலையும் இசையோடு…  பாடி முடிப்பார்கள். இதற்கு அரயர் சேவை என்று பெயர். இது முடிந்த பிறகு… அதாவது தமிழ்ப் பாடல்கள் முடிந்த பிறகு உற்சவரை மறுபடியும் தூக்கி உள்ளே கொண்டு போய் வைத்து விடுவார்கள்.

ஆக… தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்.

அதுவும்… தமிழுக்காக ஆழ்வாரை தூக்கிவரச் சொல்லி தமிழ் கேட்ட ரங்கநாதனுக்கு… நமது பூஜை புனஸ்காரங்கள் படி தமிழ் கேட்க வாய்ப்பில்லை. இதை நான்முன்பே பலதடவை வலியுறுத்தியபோதும்… வைணவ சமயவாதிகள் சிலர் எதிர்த்தனர்.ஆனால் என் நிலையிலும், தமிழின் நிலையிலும் மாற்றமே இல்லையே?

சரி வைணவத்தில் தமிழ் பார்த்தாயிற்று சைவத்தில்?… “தென்னாடுடைய சிவனே போற்றி…என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…”என்ற தமிழ்க் கவிதையே சிவன் தென்னாட்டவன் அதாவது தமிழ்க் கடவுள்… ஆனாலும் எல்லா நாடுகளுக்கும் அருள் செய்வான் என தமிழ் நாட்டுக்காரனாக தத்துவப்படுத்தியிருக்கிறது.

திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் அளவுக்கு சிவனுக்கும் தமிழுக்கும் Tight Relationship கொடுத்துள்ளார்கள். சிவனடியார்களும் நாயன்மார்களும் உதாரணத்துக்கு…இன்றைய வேதாரணியம்… அன்றைய திருமறைக்காடு… அங்குள்ள சிவன் கோயில்மணிவாசல் கதவு வேதங்களால் பூஜிக்கப்பட்டு அடைக்கப்பட்டு விட்டது.

என்னென்னமோ பண்ணி பார்த்து விட்டோம். திறக்கவே முடியவில்லை என சிவனடியார்கள் துன்புற்ற வேளை… திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் மணிக்கதவை திறக்கவேண்டும்என முடிவு செய்தனர்.

திருநாவுக்கரசர் கோயில் வாசலிலேயே நின்று…“பண்ணினர் மொழியோள் உமைபங்கரோமண்ணினார் வலஞ் செய்ம்மறை காடரோகண்ணினால் உமைக் காணக் கதவினைதிண்ணமாக திறந்தருள் செய்ம்மினே…”என தமிழ்ப்பாடினார்.

தாமதமானது, மீண்டும்“அரக்கனை விரலால் அடர்த்திட்டநீர்இரக்க மொன்றிலீர் எம்பெருமானரேசுரக்கும் புன்னைகள் சூழ்மறைக்காடரேசரக்க இக்கதவம் திறம்பிம்பினோ…”இந்த இரண்டாவது தமிழ்ப் பாட்டு கேட்டதும் வேதங்களால் வெகுகாலம் மூடிக்கிடந்த சிவன் கதவு மணிக்கதவு மெல்லத் திறந்தது. இறைவனுக்கு தமிழ்ப் பாமாலைகள் சாத்திவழிபட்டனர். மகிழ்ச்சி பொங்கியது.

சரி, இரவாகிவிட்டது’ கதவை அடைத்துவிட்டு நாளை திறக்க வேண்டும். மறுபடியும் திருஞான சம்பந்தர் ‘சதுரமறைதான்…’ என பதிகம் பாட கதவு மூடிக் கொண்டது.அன்றிலிருந்து தான் கதவு திறந்து சாத்தும் வகையில் மாறியது என்கிறார்கள்.

இந்தக் கதையை நாம் நம்பவேண்டாம் என்றாலும்கூட பல்லாண்டு காலம் வேதக்காரர்களால் பூட்டப்பட்ட கதவை தமிழ்பாடி திறக்கவேண்டும்’ என்ற கருத்துருவே நமக்கு போதுமே. வேதம் அடைத்ததை தமிழ் திறக்கும் என்ற கருத்தை நிலை நிறுத்தவே இந்த கதையில் கதவுகொண்டு வரப்பட்டது.

இப்படியாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எளிய…பலதரப்பினரும் புரிந்துகொள்ளத்தக்க தமிழ்ப் பாக்களை வளர்த்தது சைவம். முற்காலத்தில் காவிரி பொய்த்து பஞ்சம் பாசனம் நடத்தியபோது… இறைவனே காசு கொடுத்து எல்லார்க்கும் உணவு கொடுக்கச் சொன்னாராம்.

ஏனென்றால் அப்போதுதான் அடியார்களின் தமிழ் கேட்கலாம் என்ற அவாவில். இதை…“இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசுநித்தம் நல்கிறீர்” என்கிறார் சுந்தரர், மேலும்,“பாடலங்கார பரிசில் காசருணிபழுத்த செந்தமிழ் மலர் சூடி…” என்கிறார் சேந்தனார் திருவிசைப்பாவில்அதாவது… உணவுக்கு பஞ்சம் வந்தால்கூட தமிழுக்கும்… தமிழ்ப்பற்றுக்கும் பஞ்சம் வரக்கூடாது என்பதை ‘சிவனை’ முன்னிறுத்தி மொழிந்தார்கள் சைவக்காரர்கள்.

இப்படியெல்லாம் தமிழோடு பின்னிப் பிணைந்திருக்கும் சிவபெருமானுக்கு…சிவன் கோயில்களில் நடக்கும் பூஜை புனஸ்காரங்களில் தமிழுக்கு என்ன நிலைமை?…

சிவாச்சாரியார் திருநீற்றுப் பட்டை அணிந்து கொண்டு… லிங்கத்தை நெருங்கிச் செல்வார். பூஜைகள் செய்வார். அவர் வாயில் தமிழ் இருக்காது சமஸ்கிருதம்தான் சொல்லும்இந்தநேரத்தில்… லிங்கத்திடமிருந்தும்… சிவாச்சாரியாரிடமிருந்தும் சற்றே தூரத்தில் நின்றுகொண்டு… வெளிப்புறமாக நின்றபடி ஓதுவார்கள் தமிழை.

தேவாரம், திருவாசம், திருவிசைப்பா, பெரியபுராணம், திருப்பல்லாண்டு ஆகிய பக்திப்பாடல்களில் இருந்து சில பாடல்களை ஓதுவார்கள். அவர்கள் பெயர்தான் ஓதுவார்கள்.

ஆக…இவர்கள் ஓதும் தமிழ் சிவாச்சாரியாருக்கோ… சிவலிங்கத்துக்கோ… அருகில் சென்று கணீரென கேட்காது.
நாம் பேருந்தில் செல்லும்போது நமக்குப் பிடித்த பாடல் எங்கோ திடீரென லேசாக ஒலித்து காதைவிட்டு மறையுமே… அதேபோலத்தான் சிவன் கோயில்களில் சிவனுக்கு தமிழ் கேட்கும். — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்(தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 69 – 70. கட‌வுளை காலையில் எழுப்பனுமா? சுப்ரபாதம் பாடி?. Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம். சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?…

பகுதி – 72. பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம். பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, உன் தாய்மொழியை கெட்டது, உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply