ஒரே நாளில் 4 கோடி பாடல் எழுத வேண்டும் என கட்டளையிட்ட அரசர்! ஔவையார் செய்தது என்ன?

ஒரே நாளில் 4 கோடி பாடல் எழுத வேண்டும் என கட்டளையிட்ட அரசர்! ஔவையார் செய்தது என்ன?

அழகு தமிழிலில் எளிய சொற்களில், மனிதர்களின் நல்வாழ்க்கை வழிகாட்டியாக நீதி நெறி நூல்கள் பல படைத்தவர், அவ்வையார். இவர் பனிரெண்டாம் நூற்றாண்டில், சோழர்காலத்தில் வாழ்ந்தவர். அவ்வையார், இன்று சிறுவர்களுக்கு பள்ளியின் பால பாடங்களில், தமிழ் மொழியின் எழுத்துருவை விளக்கும் ஆரம்ப நிலைப்ப்பாடங்களில், உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் இவற்றுக்கு உருவகமாகக் குழந்தைகள் மனதில்பதியும் வண்ணம் எளிய மொழிநடையிலான பல நீதிநெறிக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியவர். நாமும், முன்னோர் எல்லோரும், பள்ளிக்காலங்களில், ஆத்திச் சூடியை வாசிக்காமல் வந்திருக்கமுடியாது.

வ்வையார், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை மற்றும் நல்வழி போன்ற பல நீதிநெறி நூல்களை, இயற்றியவர். குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தின் முக்கியத்துவம் உணர்த்த, அவ்வையார் பாடிய ஆத்திச்சூடியையே, காலகாலமாகப் பள்ளிகளில் உயிர்எழுத்துக்கள் பனிரெண்டையும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டையும் எளிதில் மனதில் இருத்த தமிழ்ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர்.

உயிரெழுத்துப் பாடல்கள் – விளக்கங்கள்

அ- அறம் செய விரும்பு – நல்லன செய்ய விரும்பு.

ஆ – ஆறுவது சினம் – கோபத்தைத் தவிர்த்து விடு.

இ – வது கரவேல் – கேட்பவர்க்கு உன்னால் முடியும் வகையில் உதவு.

ஈ – ஈவது விலக்கேல் – ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே.

உ – உடையது விளம்பேல் – உன் இரகசியங்களைப் பிறர் அறியப் பேசாதே.

ஊ – ஊக்கமது கைவிடேல் – முயற்சிகளை எப்போதும் கை விடக்கூடாது.

எ – எண் எழுத்து இகழேல் – படிப்பை வெறுத்து, படிக்காமல் இருந்துவிடாதே.

ஏ – ஏற்பது இகழ்ச்சி – கையேந்தி வாழ்வது இழிவு, யாசித்து வாழாதே.

ஐ – ஐயமிட்டு உண் – வறியவருக்கு அளித்துப் பின் சாப்பிடவேண்டும்.

ஒ – ஒப்புரவு ஒழுகு – ஊரோடு ஒத்து வாழவேண்டும்.

ஓ – ஓதுவது ஒழியேல் – நூல்களை வாசிப்பதை எப்போதும் நிறுத்தாதே.

ஔ – ஔவியம் பேசேல் – யாரிடமும் பொறாமை கொண்டு பேசக்கூடாது.

ஃ – அஃகஞ் சுருக்கேல் – தானியங்களை அளவை குறைத்து அளந்து, அதிக இலாபம்பெற எண்ணி, விற்காதே. இந்த உயிரெழுத்துப் பாடல்கள் குழந்தைகளுக்கு மட்டும்தானா? நமக்கும்தானே, சொல்லப்போனால், இந்தக் காலத் தலைமுறையினர் யாவரும், இதன்வழி நடந்தால் நாடு நலம்பெரும். நல்லன எங்கும் பெருகும். உண்மைதானே!

சரி! இனி உயிர் மெய்யெழுத்துப் பாடல்கள் பற்றிக்காணலாம். உயிர்மெய் என்பது, மெய் எழுத்துக்கள் உடன் சேர்ந்த உயிர் எழுத்தின் விளைவில் உருவாவது. உதாரணம் , க் – மெய்யெழுத்து + அ – உயிரெழுத்து, இவை இணைந்து க – உயிர் மெய் எழுத்து. [ க்+அ = க ]

க – கண்டொன்று சொல்லேல் – உண்மைக்குமாறாக போய் சாட்சி சொல்லக் கூடாது.

ங – ங போல் வளை – பெரியோரைப் பணிந்து வணங்கவேண்டும்.

ச – சனி நீராடு – குளிர்ந்தநீரிலேயே குளிக்கவேண்டும்.

ஞ – ஞயம் பட உரை – கேட்போருக்கு இன்பம்தரவல்ல இனியகுரலில் பேசவேண்டும்.

ட – இடம்பட வீடு எடேல் – தேவைக்குமேல் வீட்டைப் பெரிதாகக் கட்டக் கூடாது.

ண – இணக்கம் அறிந்து வணங்கு – நல்லவரை ஆராய்ந்து நட்புகொள்ளவேண்டும்.

த – தந்தை தாய் பேண் – பெற்றோரை இறுதிக்காலம் வரை அன்புடன் மதித்துக் காப்பாற்றவேண்டும்.

ந – நன்றி மறவேல் – ஒருவர் நமக்கு செய்த உதவியை என்றும் மறக்கக்கூடாது.

ப – பருவத்தே பயிர் செய் – எந்தச்செயலையும் அதற்குரிய காலத்தில் செய்து விடவேண்டும்.

ம – மண் பறித்து உண்ணேல் – பிறர் நிலத்தைப் பறித்து வாழக்கூடாது, அல்லது இலஞ்சம் வாங்கக்கூடாது.

த – இயல்பு அலாதன செய்யேல் – நல்ல ஒழுக்கத்துக்கு மாறான செயல்களை செய்யக்கூடாது.

ர – அரவம் ஆட்டேல் – பாம்புகளைப் பிடித்து விளையாடக்கூடாது.

ல – இலவம் பஞ்சில் துயில் – இலவம் எனும் மரத்தின் முதிர்ந்த காய்களில் இருந்து எடுக்கப்பட்ட பஞ்சினால் செய்தபடுக்கையில் தூங்கவேண்டும்.

வ – வஞ்சகம் பேசேல் – கபடமான, உண்மைக்கு மாறான வார்த்தைகள் பேசக்கூடாது.

ழ – அழகு அலாதன செய்யேல் – இழிவான செயல்கள் செய்யக்கூடாது.

ள – இளமையில் கல் – இளமைப்பருவத்தில் கற்க வேண்டிய கல்வியை நாட்டமுடன் கற்கவேண்டும்.

ற – அரனை மறவேல் – கடவுளை எப்போதும் மனதில் நினைக்கவேண்டும்.

ன – அனந்தம் ஆடேல் – அதிக நேரம் உறங்கக்கூடாது.

இதுபோல, அனைத்து உயிர்மெய் எழுத்துக்களுக்கும் பாடல்கள் மூலம் நற்கருத்துக்கள் போதித்த, அவ்வையார் ஒரு சமயம் “4 கோடி பாடல்கள்” இயற்றி, தமிழ்ப் புலவர்களை அரச தண்டனையிலிருந்து காத்த நிகழ்வைப் பற்றிப்பார்ப்போம். புலவர்களை காப்பாற்றிய கதை! ஒருசமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றி, உடனே தன் அரண்மனைப்புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார். நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்குகோடிப் பாடல்கள் எழுதுவது என்று புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றபோது, அங்கே வந்த அவ்வையார் “என்ன வருத்தம்?” என்று கேட்க, அவர்கள் அரசனின் உத்தரவை சொல்ல, அவ்வையார் இளமுருவலுடன் ” இவ்வளவுதானா, நான் எழுதித்தருகிறேன் நான்கு கோடி பாடல்கள் கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்” என்றுகூறி, நான்கு பாடலகள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுக்க, புலவர்கள் தயங்கிநிற்க, அவ்வையார் ” ஒவ்வொரு பாடலும் ஒருகோடி பொன் மதிப்புடையது சென்று கொடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

புலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசிக்க, மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் அவ்வையார்தான் இயற்றியிருக்க முடியும் எனப்புலவர்களைப் பார்க்க, புலவர்கள் அனைவரும் ஆமாம்.. அவ்வையார் இயற்றியதுதான் எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து அவ்வையை அழைத்து, பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினான் என்பது வரலாறு. அந்த நான்குகோடி பாடல்கள்:

1. மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று
மிதியாமை கோடி பெறும்.

நல்ல பண்புகளைக் கைக்கொள்ளாமல் வாழ்பவர் வீட்டிற்கு செல்லாதிருப்பது, கோடி பொன்னுக்கு சமம். அல்லது மதிக்காதவர் வீட்டுக்கு செல்லாமல் இருப்பது எனவும் பொருள் கொள்ளலாம்.

2. உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.

உணவை அருந்த அன்புடன் அழைக்காமல், வெறும் வாய்ச்சொல்லில் அழைப்போர் வீடுகளில், சாப்பிடாமல் இருப்பது கோடி பொன்னுக்கு சமம்.

3. கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்.

கோடி பொன்னைக் கொடுத்தாவது, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம் சேர்ந்து வாழ்வது, கோடிப் பொன்னுக்கு ஒப்பாகும்.

4. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்
கோடாமை கோடி பெறும்.

கோடி பொன் கொடுப்பதாகச் சொன்னாலும், சொன்ன சொல் மாறாமல் வாழ்பவன் கோடி பொன்னுக்கு சமம். அவ்வையார் நீதிக்கதைகள் எக்காலத்துக்கும் எல்லோருக்கும் பொருந்தும்.

https://tamil.boldsky.com/inspiration/famous-quotes-avvaiyar-be-followed-our-life-016143.html?ref=60sec

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply