மாகாண சபை விவகாரத்தில் சம்மந்தரின் அரசியல் முதிா்ச்சி வெளிப்படுத்தப்பட்டது: எஸ். தவராசா
அரசியல் நேர்மைக்கும் வாய்மைக்கும் முதலமைசர் விக்னேஸ்வரன் அவர்களுக்கும் வெகு தூரம் என்பதை அவரே காட்டிவிட்டார். தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறுவது உறுதி என அறிந்து கொண்ட முதலமைச்சர் பலபடி இறங்கி வந்து தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, ததேகூ இன் தலைவர் சம்பந்தர், சுமந்திரன் ஆகியோரோடு பேச்சு வார்த்தை நடத்தினார். ஆணைக் குழுவால் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்ட நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், மீன்வளத்துறை அமைச்சர் பா.. டெனீஸ்வரன் இருவரும் ஒரு மாத காலம் விடுப்பில் போக வேண்டும் என்ற முடிவை மாற்ற வேண்டும் என்ற யோசனைக்கு முதலமைச்சர் இணங்கினார். முன்னாள் அமைச்சர் குருகுலராசா தமிழ் அரசுக் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டவர் எனவே அந்த இடத்தில் இன்னொரு தமிழ் அரசுக் கட்சி உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்ற நியாயமான யோசனைக்கும் முதலமைச்சர் இணங்கினார். ஆதனை எழுத்தில் தருமாறு கேட்டு முதலமைச்சர் வாங்கிக் கொண்டார். அனந்தி சசிதரனை அமைச்சராக நியமிக்க யோசிப்பதாக முதலமைச்சர் சொன்ன போது அனந்தி தமிழ் அரசுக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்பவர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மறுநாள் வேதாளம் மறுபடியும் முருங்க மரத்தில் ஏறிவிட்டது. முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராசாவின் இடத்துக்கு சுரேஷ் பிரேமச்சந்திரனது சகோதரர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அனந்தியும் அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழ் அரசுக் கட்சித் தலைமை விக்னேஸ்வரன் ஒரு கனவான், சுப்பிறீம்கோட்டு இராசா, பொய் சொல்ல மாட்டார், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார், உண்மை பேசுவதில் அவர் அரிச்சந்திரன் வீட்டு பக்கத்து வீட்டில் வாழ்பவர் என எண்ணி ஏமாந்து போனது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து தப்பவும் அதன் மூலம் முதலமைச்சர் பதவியைக் காப்பாற்றவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்த காலை ஒரு உத்தியோடு (tactical retreat) பின்வாங்கினார் என்பது வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைக்குத் தெரியாமல் போய்விட்டது. தனது தலைமையில் ஒரு புதிய கட்சியை அல்லது புலம்பெயர் வன்னியின் எச்சங்களது பினாமி அமைப்பான தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றுவதே அவரது கள்ள நோக்கமாகும். இடுப்பில் வெள்ளை வேட்டி, தோளில் உருத்திராட்ச சால்வை, நெற்றியில் விபூதி, குங்குமம், வெண்தாடி போன்றவற்றைப் பார்த்து மக்கள் ஏமாறுவது போல தமிழ் அரசுக் கட்சியின் தலைமையும் (ஒரு சிலர் நீங்கலாக) ஏமாந்து போய்விட்டது. வள்ளுவர் சொல்கிறார் முள் மரத்தை இளசாாக இருக்கும் போதே வெட்டிவிட வேண்டும். வளர்ந்த பின் வெட்ட முனைந்தால் வெட்டுகிறவர் கையை முள் குத்தும்! நக்கீரன்
Leave a Reply
You must be logged in to post a comment.