தமிழரசுக் கனவு நிறைவேறும் வரை பதவிகளுக்கு ஆசைப்படாமல் அர்ப்பணிப்போடு போராட வேண்டும்!

(தந்தை செல்வநாயகம் அவர்களது  126 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை)

 மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார். 

“எதனை விரும்புகிறோமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது. பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும்  (புரவலர்களையும்), வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும்.”

பாரதியார் அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும், வீரரையும் கொண்டா தேசத்தில் அறிவும்,  லோகோபகாரமும், வீரமும் மங்கிப் போகும் எனச் சொன்னாலும் அவரது பொன்மொழி இன்றைய உலக அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். மக்கள் இன விடுதலையை விரும்பினால் அவர்கள் விடுதலை பெறுவார்கள். மக்கள் தாயக வளர்ச்சியை விரும்பினால் அது வளர்ச்சி பெறும்.

இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான தந்தை செல்வநாயகம் அவர்களது 126 ஆவது பிறந்த நாள். தமிழ்மக்கள் தங்களது தாயக மண்ணில் ஒரு இனத்துக்கு இயல்பாக இருக்கும் தன்னாட்சி உரிமையின் கீழ் ஒன்றுபட்ட இலங்கையில் இணைப்பாட்சி அடிப்படையில் ஒரு அரசை நிறுவ உரித்துடையவர்கள் என்ற கோட்பாட்டை முன்வைத்து 1949 ஆம் ஆண்டு முதல் அவர் மறையும்வரை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அகிம்சை வழியில் ஓய்வொழியின்றிப்  போராடியவர். அதனால் பொருளை மட்டுமல்ல தனது உடல்நலத்தையும் இழந்தவர்.

Image result for Chelvanayakam q,c,

தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.  இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அமைதிவழிப் போராட்டம். மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம். இப்போது கடந்த 14  ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் அமைதிவழிப்  போராட்டம்.  அதாவது மீண்டும்   தொடக்கப் புள்ளியில்  வந்து நிற்கிறோம்.

அமைதி வழிப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் தந்தை செல்வநாயகம். 1948 இல் நாட்டின் பிரதமராக இருந்த  டிஎஸ் சேனநாயக்க அவர்களால் கொண்டு வரப்பட்ட   18 ஆம் இலக்க இலங்கைக்  குடியுரிமைச்  சட்டம் இலங்கை சுதந்திரம் பெற்று 285 நாட்களுக்குள் (ஓகஸ்ட் 20, 1948)  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் அதனைத்  தீவிரமாக எதிர்த்துப் பேசியவர் தந்தை செல்வநாயகம். எதிர்த்துப் பேசியதோடு நில்லாமல் எதிர்த்து வாக்களிக்கவும் செய்தார்.  இந்தச் சட்டத்தின் கீழ் 1948 ஆம் ஆண்டு நொவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு  அவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது.

இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தினால் எட்டு இலட்சம் மலையகத் தமிழர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தார்கள். 1946 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின் படி  மலையகத் தமிழர்களது எண்ணிக்கை 780,600  (11.73%),  இலங்கைத் தமிழர்களது எண்ணிக்கை 733,700 (11.02%)  ஆக மொத்தம்  1,524,300 (22.75 %).  2012 இல்  மலையகத் தமிழரின் எண்ணிக்கை (2012)  842,323 (4.16% ) இலங்கைத் தமிழர் 2,270,924 (11.21%) ஆக இருந்தது.  இது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போன்றது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இலங்கைக் குடியுரிமைச் சட்டம்  புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும் பிரதமர் டிஎஸ்  சேனநாயக்க அவர்கள் மலையகத் தொழிலாளர்களது குடியுரிமையைப் பறித்து, அதன் மூலம் அவர்களது அரசியல் பலத்தைக் குறைத்து,  அவர்களை நாடற்றவர்களாக ஆக்குவதே அவரது உள்நோக்கமாக இருந்தது.

சோல்பரி அரசியல் யாப்பு இயற்றப்பட்ட போது இலங்கையின் குடியுரிமை பற்றி அதில் ஒன்றும் சொல்லப்படவில்லை. தந்திரசாலியான பெரிய சேனநாயக்கா  நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் குடியுரிமை பற்றி நாடாளுமன்றம் தீர்மானிக்கும் எனப்  சோல்பரி பிரபுவிடம் சொல்லிவிட்டார். தமிழர் தரப்பும் அதனை வலியுறுத்தவில்லை.

தந்தை செல்வநாயகம் 1944 இல் தொடக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்.  அதன் தலைவர் ஜிஜி  பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் எதிர்த்து வாக்களித்திருந்தார்.  ஓகஸ்ட் 20 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்  குடியுரிமைச் சட்டம்  நொவெம்பர்  15, 1948  இல் சட்டமாகியது.   ஆனால் அதற்கு முன்னரே – செப்தெம்பர் 03 ஆம் நாள் – பொன்னம்பலம் பெரிய  சேனநாயக்காவின் அமைச்சரவையில் கைத்தொழில், மீன்பிடி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இது குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே பொன்னம்பலம் அமைச்சர் பதவிக்கு  பெரிய சேனநாயக்கா அவர்களோடு பேரம் பேசத் தொடங்கிவிட்டார் என்பதைக் காட்டி நிற்கிறது.

பொன்னம்பலம் 1947 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) வேட்பாளர் அருணாசலம் மகாதேவாவை 9,100 அதிகப்படி வாக்குகளால் தோற்கடித்து வெற்றிபெற்றார்.  “கந்தசாமியைக் கொன்ற துரோகி மகாதேவா ஒழிக” என்பது அவரது தேர்தல் முழக்கமாக இருந்தது. காரணம் டி.எஸ். சேனநாயக்காவின் அமைச்சரவையில் அருணாசலம் மகாதேவா அப்போது உள்நாட்டு அமைச்சராக இருந்தார்.   காவல்துறை அவரது அமைச்சின் கீழ்  இருந்தது. ஊர்வலமாக வந்த வேலை நிறுத்தக்காரர்கள் மீது காவல்துறை சுட்டதில் எழுதுவினைஞர் கந்தசாமி உயிர் துறந்தார்.

மலையகத் தமிழர்களின் குடியுரிமைக்குத்  துணைநிற்பேன் என்று எழுத்தில் மலைய மக்களது தலைவர்களுக்குக் கொடுத்த உடன்படிக்கையை பொன்னம்பலம் மீறினார்.  குடியுரிமை பறிக்கப்பட்டதை அடுத்து 1949 இல் டி.எஸ். சேனநாயக்க கொண்டு வந்து நிறைவேற்றிய  தேர்தல் திருத்தச் சட்டம் 48  மலையகத் தமிழர்களின் வாக்குரிமையும் பறித்தது.  இந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சி.சுந்தரலிங்கம், தந்தை செல்வா, கு.வன்னியசிங்கம் எதிர்த்து வாக்களித்தார்கள். ஜிஜி பொன்னம்பலம், சி.சிற்றம்பலம், வி.நல்லையா, ஏ.எல்.தம்பியா, எஸ்.யு.எதிர்மன்னசிங்கம் ஆகியோர் ஆதரித்து வாக்களித்தனர். மீண்டும் ஒருமுறை  பெரும்பான்மையான இலங்கைத் தமிழர் பிரதிநிதிகள் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிப்பதையே ஆதரித்தனர் (Hansard, Cols. 551-2, 20.10.1949.). 1947 இல் நாடாளுமன்றத்துக்கு  நடந்த பொதுத் தேர்தலில்  7 மலையகத் தமிழ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்கள். 1952 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மலையகத்தில் இருந்து ஒரு தமிழர்கூட தெரிவு செய்யப்படவில்லை.

தமிழர்களின் நாடாளுமன்றப்  பிரதிநித்துவம் இல்லாது போய்விடும் என்பது பற்றி ஜிஜி பொன்னம்பலம்  கிஞ்சித்தும் கவலைப் படவில்லை.   மலையகத் தமிழர்களது குடியுரிமையை மற்றும் வாக்குரிமையைப்  பறித்த சட்டங்களின்  விளைவையோ அல்லது அதனைக் கொண்டு வந்து நிறைவேற்றிய டிஎஸ் சேனநாயக்காவின் கபட நோக்கத்தையோ பொன்னம்பலம் அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது.  அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட பொன்னம்பலம் அந்தச் சட்டத்தின் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வில்லை என்பதே உண்மை.  மலையகத் தமிழர்களை அரவணைத்துச் செல்லாமல் போனதால் ஏற்பட்ட விளைவுதான் இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம் என்பதை வரலாறு  மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யும். அரசியற் துறையில் ஓர் இனம் அழியாமலிருப்பதற்குப் பல ஏதுக்கள் தேவை. இவற்றுள் ஒன்று, அந்த இனத்தின் எண்ணுத்  தொகை குன்றாமலிருப்பது. இன்னுமொன்று, அவர்களது வாழ்விடம் பறிபோகாமலிருப்பது.

 ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று முழங்கிய திரு. பொன்னம்பலம் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டதன் காரணமாக “தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா” என்ற நிலைக்குத் தமிழர்களைத்  தாழ்த்தினார்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய தந்தை செல்வநாயகம் “இன்று மலைநாட்டுத் தமிழர்களது   கழுத்துக்குக் கத்தி விழுந்துள்ளது. நாளை ஆட்சிமொழிபற்றி முடிவு செய்யும் நேரம் வரும்போது இலங்கைத் தமிழர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்” (“Today the knife has fallen on the neck of hill country Tamils. The same fate will befall the Sri Lankan Tamils tomorrow when the time comes to decide on the official language”)  எனத் தீர்க்கதரிசனத்தோடு பேசினார்.  1956 ஆம் ஆண்டில் திரு. பண்டாரநாயக்கா “சிங்களம் மட்டும்” சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போது தந்தை செல்வநாயகத்தின் அரசியல் தீர்க்கதரிசனம் உண்மையாகியது.  பதவி ஆசை காரணமாக   பொன்னம்பலத்துக்கு இப்படியான  தீர்க்கதரிசனம்  அடியோடு இருக்கவில்லை.

மலையகத் தமிழரைச்  சிங்கள ஆளும் வர்க்கத்திற்குக் காட்டிக் கொடுத்த  பொன்னம்பலத்தின் சந்தர்ப்பவாத,  சுயநல அரசியலை எதிர்க்கு முகமாகத்  தந்தை செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறினார். வெளியேறி 1949 ஆம் ஆண்டு டிசெம்பர் 18 ஆம் நாள் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம், வட – கிழக்கு (மாகாணங்கள்) அவர்களது பாரம்பரிய தாயகபூமி, இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஒழித்து விட்டு கூட்டாச்சி (federal) அரசியல்  அடிப்படையில் தமிழ்மக்களுக்கு தன்னாட்சி அரசை நிறுவுவது தமிழரசுக் கட்சியின் அரசியல் இலட்சியம் எனப் பிரகடனப் படுத்தப்பட்டது. வட- கிழக்கில் சிங்கள அரசின் ஆதரவுடன் இடம்பெறும் பாரிய சிங்களக் குடியேற்றங்களை எதிர்ப்பதென்பது அந்தக் கட்சியின் அடுத்த முக்கிய குறிக்கோளாக இருந்தது.

தமிழ் அரசுக் கட்சியின் தொடக்கக் கூட்டத்தில் பேசிய தந்தை செல்வநாயகம் அவர்கள் தனது நீண்ட தலைமை உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“சென்ற காலங்களில் எமது தலைவர்களின்  உறுதியற்ற நிலையே எமது பலவீனத்துக்குக் காரணமாக இருந்தது. இக் குறையை நிவர்த்தி செய்தாலன்றி  எமது கட்சியும் தோல்வியுறும். ஐரிஷ் தேசியவாதிகளைப் போல சுதந்திரத்  தமிழ் அரசு நிறுவப்படும் வரை ‘பதவி ஏற்க மாட்டோம்’ என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும். உள்ளத்தில் ஒரு நோக்கமும் பேச்சில் ஒரு நோக்கமும்  இருத்தலாகாது.”

“In the past, our weakness was due to the (political) instability of our leaders.  Unless we rectify this weakness our party will also fail. The party needs trustworthy members who will pledge ‘we will not accept ‘office’  like the Irish nationalists until we establish an independent  Tamil state.”

 ஒரு அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு 8 இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை, வாக்குரிமை இரண்டும் பறிபோவதற்கு  ஜிஜி பொன்னம்பலம் காரணகர்த்தாவாக இருந்ததை மனதில் இறுத்தித்தான் இவ்வாறு தந்தை செல்வநாயகம்கூறினார் என்பது வெள்ளிடமலை. இறுதிக் காலத்தில் இந்த இரு தலைவர்களும் ஒற்றுமைப்பட்டது வரலாறு.

தமிழரசுக் கட்சியின் கொடியாக யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி மன்னர்களது இடபக் கொடி தேர்ந்தெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சியின் முதல் கூட்டம் முத்திரைச்சந்தை மைதானத்தில் நடந்தது. அதில் இடபக் கொடியோடு ஊர்வலமாகச் சென்று கலந்து கொண்டது  இப்போதும் எனக்கு நினைவு  இருக்கிறது. அப்போது நான் கல்லூரி மாணவன். பின்னர் இடபக் கொடி மூவர்ணக் கொடியாக மாற்றப்பட்டது.

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலோர் தந்தை செல்வநாயகம் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.   யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் முதல் முதல் அவரை மேடையில் பார்த்த போது மெல்லிய ஆனால் நெடுத்த உருவம்,  நேர்க்கோடு வகுத்து வாரிய தலை, சற்றுப் பெரிய காது,  கவர்ச்சிகரமான முகம், சந்தண நிறம்,  பட்டு வேட்டி, பட்டுச் சால்வை, பட்டுச் சட்டை. ஆகிவற்றோடு காட்சி அளித்தார். வயது அய்ம்பதைத் தாண்டிவிட்டாலும் இளமை குன்றாத தோற்றம்.

அய்ம்பதுகளின் முற்பகுதியில் யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில் தமிழரசுக் கட்சி மேடைகளில் தோன்றிய தந்தை செல்வநாயகம் அவர்களின்  இந்தக் கம்பீரமான தோற்றத்தை  இளைய தலைமுறைகள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இளமை குன்றி, முதுமை எய்தி, நடை மெலிந்து, மேடைகளிலும் சரி, நேரிலும் சரி, ஒவ்வொரு சொல்லாகத் தட்டுத் தடுமாறி மெல்லிய குரலில் பேசும் தந்தை செல்வநாயகம் அவர்களைத்தான் பலர் பார்த்திருப்பார்கள்.   அவரைப் பீடித்த பார்க்கின்சன் நோய்  (Parkinson’s disease) தந்தை செல்வநாயகம் அவர்களின் உடல் நிலையை  வெகுவாகப் பாதித்தது.

இதனால் போலும் தந்தை செல்வநாயகம், 1972 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில்  தந்தை பெரியாரைத் சந்தித்துக் கொண்டபோது தன்னைவிட வயது குறைவாக இருந்தும் தன்னைவிட மூப்பாகத் தெரிகிறார் என்று  பெரியார் சொல்லிக் கவலைப் பட்டார்.

தந்தை செல்வநாயகம் மட்டும் அரசியலுக்கு வந்திராவிட்டால், அல்லது 1948 ஆம் ஆண்டு அன்றைய சிங்கள ஆட்சியாளரால் எட்டு இலட்சம் மலைநாட்டுத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட சட்டத்தை ஆதரிக்க முடிவு செய்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர்  பொன்னம்பலத்தோடு சமரசம் செய்து கொண்டு ஒத்துப் போயிருந்தால், அல்லது அவரோடு முரண்பட்டுக் கொண்டு அரசியலுக்கு ஒரேயடியாக முழுக்குப் போட்டுவிட்டு ஒதுங்கியிருந்தால், பின்னர் தன்னைத் தேடிவந்த உயர் நீதிமன்ற நீதியரசர் பதவியை ஏற்றிருந்தால் தமிழினத்தின் அரசியல் வரலாறு நிச்சயமாக மாலுமி இல்லாத படகு போலத் திசை மாறிப் போயிருக்கும்.

கொழும்பில்  புகழ் பெற்ற  St.Thomas கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய புதிதில் தந்தை செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது தாயார் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள்  கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டது. உடனே அந்த இடத்திலேயே விலகல் கடிதத்தை கல்லூரி அதிபரிடம் எழுதிக் கொடுத்து விட்டு யாழ்ப்பாணம் பயணமானார். பின்னர் கொழும்பு திரும்பிய அவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞர் (Advocate)  பட்டம் பெற்று வெளியேறினார். அதற்கு முன்னர் 1918 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி  மாணவராகப் படித்து  அறிவியல் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தார்.

தந்தை செல்வநாயகம் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் (civil) வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார். நீதி மன்றங்களில் வழக்கறிஞர்களுக்கே உரித்தான உருட்டல், மிரட்டல் எதுவுமின்றி தனது கட்சிக்காரர் பக்கம் உள்ள நியாயங்களை சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆணித்தரமாகவும் முன் எடுத்துக்களோடும் வழக்குரைத்து வழக்குகளை எளிதில் வென்றுவிடுவார். இந்த ஆற்றல் அவரிடம் அபரிமிதமாகக் காணப்பட்டது. இதனால் சக வழக்கறிஞர்கள் மட்டும் அல்லாது நீதிபதிகளும் அவரிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள்.

தந்தை செல்வநாயகம் அவர்களின் கொள்ளுப்பிட்டி வீட்டில் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் ஒவ்வொரு நாளும் கூடி அரசியல்பற்றி  உரையாடுவோம். சில நேரங்களில் தந்தை செல்வநாயம் அவர்களோடும் பேசுவோம்.  தமிழ் அரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் (அறுபதுகளில்) நாடாளுமன்றத்துக்கு ஒழுங்காக வராமல் நீதிமன்றங்களில் வழக்குப் பேசுகிறார்கள் என தந்தை செல்வநாயகம் அவர்ளிடம் முறைப்பாடு செய்வதுண்டு. அதற்கு அவர் “தலைவர்களை இணக்க முடியாது, கடையில் வாங்க முடியாது, இருக்கிறவர்களை வைத்துக் கொண்டுதான் செயற்பட வேண்டும்”  என்று சொன்ன பதில் இப்போதும் நினைவிருக்கிறது.

கட்சி ஆதரவாளர்கள் சிலர் விரக்தியோடு (சிங்களம் மட்டும் சட்டத்தின் கீழ் சிங்கள மொழியில் தேர்வு எழுதாத  தமிழ் அரச ஊழியர்கள் வேலையை இழக்கும் நெருக்கடியில் இருந்த காலம்) தந்தை செல்வநாயகம் அவர்களோடு உரையாடுவது உண்டு. அவற்றை எல்லாம் மிகவும் கவனமாகச்  செவிமடிப்பார்.  வேறு யாராவது குறுக்கிட்டுச் “சொன்னது போதும் அய்யாவுக்கு எல்லாம் விளங்கும்” என்று  சொன்னாலும் “இல்லை. அவரைப் பேசவிடுங்கள்” என்று பெருந்தன்மையோடு சொல்லிவிடுவார்.

அப்படியான சமயங்களில் தந்தை செல்வநாயகம் தான் தோன்றி வாதாடிய வழக்குகள் பற்றி அவ்வப்போது சொல்லி எங்களை ஆற்றுப்படுத்துவார். ஒரு வழக்கில் அவரது கட்சிக்காரர் அறம்புறமாக வாக்குமூலம் அளித்துவிட்டார். தந்தை செல்வநாயகத்தின் உதவி சட்டத்தரணி  பி. நவரத்தினராசா  கியூ. சி  தனது தலையை மேசைக்குக் கீழே புதைத்துக் கொண்டார். சாட்சிக் கூண்டில் இருந்து இறங்கி வந்த வழக்காளி  தந்தை செல்வநாயகம் அவர்களைப் பார்த்து “எப்படி அய்யா எனது சாட்சியம்” என்று கொஞ்சம் பெருமிதத்தோடு கேட்டார்.  தந்தை செல்வநாயகம் “மெத்த நல்லது. நீர் ஒரு கெட்டிக்காரன்” என்று சொல்லி அவரது முதுகில் தட்டிக் கொடுத்தார்.   எந்த நெருக்கடியிலும் தன்னம்பிக்கையை கை விட்டுவிடக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தந்தை செல்வநாயகம் இந்த நிகழ்வைச் சொன்னார்.

முப்பதுகளில் நடைமுறைக்கு வந்த டொனமூர் அரசியல் யாப்பு அதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த வகுப்புவாரிப் பிரதிநித்துவ முறையை ஒழித்து அனைவருக்கும் வாக்குரிமை (Universal suffrage) என்ற அடிப்படையில் சட்டசபைக்குத் தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையை நடைமுறைப் படுத்தியது. அதனை சேர் பொன்னம்பலம் இராமநாதன் கடுமையாக எதிர்த்தார்.  “டொனமூர் என்றால் இனித் தமிழர் இல்லை என்று பொருள்” (Donoughmore means Tamils No More) என்று குரல் எழுப்பினார். புதிய தேர்தல் முறையில் தமிழரின் பிரதிநித்துவப் பலம் பெருமளவு குறைந்தது. 1931 இல் அமைச்சரவையில் (Board of Ministers) தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டு நூற்றுக்கு நூறு சிங்களவர்களைக் கொண்ட அமைச்சரவை உருவாகியது. டொனமூர் அரசியல் யாப்பின் பின்னரே பெரும்பான்மைச்  சிங்களவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால்  ஆட்சி அதிகாரம் தங்களது கையில் இருக்க வேண்டும் என எண்ணத் தொடங்கினார்கள். இந்த வரலாற்றையும் எம்மிடம் சொன்னவர் தந்தை செல்வநாயகம் அவர்கள்தான்.

தமிழரசுக் கட்சியின் தொடக்க காலத்தில் தந்தை செல்வாநாயகத்தோடு தோளோடு தோள் கொடுத்தவர்கள் பலர் இருந்தாலும் மூன்று  பேரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒருவர் இரும்பு மனிதர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட டாக்டர் இ.எம்,வி.நாகநாதன். இரண்டாமவர் கோப்பாய்க் கோமகன்  திரு. கு. வன்னியசிங்கம் அவர்கள்.  மூன்றாமவர் இளம் சட்டத்தரணி வி.நவரத்தினம்.  இந்த மூவரும் தந்தை செல்வநாயகத்தின் வலது இடது கைகளாகச் செயல்பட்டார்கள்.

இவர்களில் திரு வி. நவரத்தினம் மட்டும் 1967 இல் சிறிமாவோ – சாஸ்திரி உடன்பாட்டுச் சட்டம், அடையாள அட்டை அமுலாக்கச் சட்டம் ( டட்லி சேனநாயக்க அரசில்) நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அவற்றைக் கடுமையாக எதிர்த்துப் பேசி வாக்களித்த காரணத்துக்காக அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். .திரு வன்னியசிங்கம் அவர்கள் செப்தெம்பர் 17, 1959 ஆம் ஆண்டு (அகவை 49) இயற்கை எய்திய போது அவரது  இடத்தை நிரப்பியவர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஆவார்.

அய்ம்பதுகளிலும் அறுபதுகளிலும் தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்காக வழக்கறிஞர் தொழிலில் கைநிறையச் சம்பாதித்த பணத்தை தந்தை செல்வநாயகம் தண்ணீராகச் செலவழித்தார். அரசியலில் புகுந்தால் பெயர், புகழ், பணம் சம்பாதிக்கலாம் என்ற நியதி இருந்த காலகட்டத்தில் தந்தை செல்வநாயகம் அரசியலில் ஈடுபட்டுத் தனது வழக்கறிஞர் தொழிலில் உழைத்த பணத்தை  இழந்தார்.

கொழும்பில் அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக  வாழ்ந்த அவர் கடைசிவரை ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார் என்ற செய்தி பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அவர் நினைத்திருந்தால் கொழும்பில் ஒன்றல்ல ஒன்பது வீடுகள் அவரால் வாங்கியிருக்க முடியும். வாடகை வீட்டில் வசிப்பதன் மூலம், கொழும்பு தமிழர்களின் நிரந்தர இருப்பிடமாக  மாறிவிடக் கூடாது என்ற செய்தியை அவர் தெரிவிக்க விரும்பினார்.

தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல சுதந்திரன் என்ற வார ஏட்டை 1952 ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகம் தொடங்கினார். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் உரிமைக் குரல் ஆக அது வெளிவந்தது. அதனை நடத்த பெரும்தொகைப் பணத்தை செலவழித்தார். தொடக்கம் முதல் இறுதிவரை அது நட்டத்தில் ஓடியது. அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி  பத்திரிகைக்குத்  தடை விதித்ததோடு  அலுவகத்தையும்  மாதக் கணக்கில் மூடுவதை  வழக்கமாகக் கொண்டிருந்தது.

கொழும்பு, தமிழர்களுக்கு அந்நியமான இடம்.  வடக்கும் கிழக்குமே தமிழர்களுக்கு உரித்தான வாழ்விடம்.  இது தந்தை செல்வநாயகம் அவர்களது  அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அவர் கடைசிவரை கொழும்பில் வாடகை வீட்டில் இருந்ததற்கு அதுவே காரணமாகும். தனது பிள்ளைகள் தாங்கள் பிறந்த மண்ணின் மணத்தையும் மண்ணுக்குரிய பண்பாடுகளையும் மறக்கக் கூடாது என்பதற்காக பள்ளி விடுமுறை நாட்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான தெல்லிப்பளைக்கு அவர்களை அனுப்பி வைத்து விடுவார்.

தந்தை செல்வநாயகத்திடம் தான் பெரிய தலைவர் என்ற எண்ணமோ, புகழ் பெற்ற வழக்கறிஞர்  என்ற பெருமையோ எள்ளத்தனையும் இருந்ததில்லை. காட்சிக்கு எளியவர் என்று சொல்வோமே? அதற்குத் தந்தை செல்வநாயகம் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கினார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அதில் மெய்ப் பொருள் காண்பது அறிவு, சொல்பவர் உருவுகண்டு எள்ளாமை, ஒருவர் சொல்பவரை இடை மறித்தல் செய்யாது எல்லாவற்றையும் பொறுமையோடு செவி மடுக்கும் பண்பு அவரிடம் இயற்கையாகவே குடிகொண்டிருந்தன.

சிலர் சரமாரியாகக்  கட்சியில் உள்ள குறைகளை அடுக்கிக் கொண்டு போவார்கள்.  அவர்களைப் பார்த்து தந்தை செல்வநாயகம் கேட்கும் கேள்வி  “சரி நோயைச்  சொல்லி விட்டீர்கள். அதற்குரிய மருந்தையும் சொல்லுங்கள்” என்பார்.

நாடாளுமன்றத்துக்கு ஒழுங்காகப் போகாமலோ அல்லது தொகுதிகளுக்குப் போகாமல் தங்கள்  சட்டத் தொழிலைப் பார்ப்பதில் காலத்தைப் போக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி முறையிட்டால் அதற்கு தந்தை செல்வநாயகம்  இறுக்கும் பதில் “ஆட்களை இணக்கமுடியாது. உள்ளதை வைத்துத்தான் செயற்பட  வேண்டும்.”

தந்தை செல்வநாயகம் அரசியல் மேடைகளிலும் சரி, நீதிமன்றங்களிலும் சரி அதிகம் பேசுவதில்லை. குறிப்பாக நீதிமன்றங்களில் தேவைக்கு அதிகமாக ஒருவார்த்தைதானும் பேசமாட்டார். “எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறோம் அய்யா இவ்வளவு சுருக்கமாகப் பேசிவிட்டு உட்கார்ந்து விட்டாரே வழக்கு வென்றமாதிரித்தான்” என்று ஏங்கிய கட்சிக்காரர்கள் நிறையப் பேர் இருந்தார்கள்.

தந்தை செல்வநாயகம் அவருக்கு வாலாயமான சில தமிழ்ச்  சொற்றொடர்களை  பேசும்போது அடிக்கடி பயன்படுத்துவார். “அவர்கள் எங்களை அழிக்க நினைப்பது துலாம்பரமாகத் தெரிகிறது.” “எங்கள் போராட்டத்தில் வெற்றிபெறுவது என்பது ஒரு வில்லங்கமான காரியம்.” “சிங்கள மேலாண்மையை நாங்கள் எதிர்த்துப் போராட வேண்டும் இல்லாவிட்டால் அழிந்து போவோம்.” “வாள் எடுத்தவன் வாளால் அழிவான்” என்பன சில   சொற்றொடர்கள். 

தந்தை செல்வநாயகம் மதத்தால் கிறித்தவராக இருந்தாலும் தமிழ் பண்பாட்டைக் கட்டிக் காப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். கர்நாடக இசை சரி, நாதசுர இசை சரி இரண்டிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவில் திருவிழாக் காலங்களில் இடம்பெறும் நாதசுரக் கச்சேரியை மண்டபத்தின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து  கொண்டு ஆடாமல் அசையாமல் மணித்தியாலக் கணக்கில் கேட்டு மகிழ்வார்.

தமிழ்ப் பண்பாடு காப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு அவரது திருமணம்.  திருமணமாகி  நாலாம் நாள் சடங்கை தடபுடலாக வைக்க அவரது மாமனார் திரு ஆர்.ஆர். பார் – குமாரசிங்கம் விரும்பினார். ” நல்லது, அதனைத்  தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவாக நடத்த வேண்டும்” என்பது மாப்பிள்ளை போட்ட நிபந்தனை. மாமனாரும் சரி என்று தலையாட்டி விட்டார். மாமனார் வீட்டுக்கு தனது மனைவியோடு சென்ற மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேற்கத்தைய பாணியில் மேசையில் பீங்கான் கோப்பை, கரண்டி,  முள்ளுக் கரண்டி சகிதம் தனது மாமனார் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதை விரும்பாது தனது புது மனைவியையும் அழைத்துக் கொண்டு தனது வீட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார். 

தந்தை செல்வநாயகத்தின் இந்தக் கொள்கைப் பிடிப்பு அரசியலிலும் இருந்தது. சந்தர்ப்பவாதம்,  வளைந்து கொடுத்தல் அவரது அரசியல் அகராதியில் இல்லாத  சொற்கள். முடிவு மட்டுமல்ல அதனை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடாகும்.  

1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஸ்ரீலங்காவின் புதிய ஒற்றையாட்சி யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக தந்தை செல்வநாயகம் தனது நா. உறுப்பினர் பதவியை உதறித்தள்ளித் தமிழ்மக்கள் ஆதரவு யார் பக்கம் என்பதை எண்பிக்க இடைத் தேர்தல் நடாத்துமாறு ஆட்சியாளருக்கு அறை கூவல் விடுத்தார். மூன்று ஆண்டுகள் காலத்தைக் கடத்திய பின்னர் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் தன்னோடு எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளரை 16,470 அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். இப்படி இடைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் வி. பொன்னம்பலம் சில ஆண்டுகள் கழித்து தமிழீழக் கோரிக்கையை ஏற்று அதனை முற்றாக ஆதரித்தார் என்பது தந்தை செல்வாநாயகத்தின் அரசியல் ஆளுமைக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.

 பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அவரது அரசியல்வாதிகளும் தந்தை செல்வநாயகத்தின் கொள்கை கோட்பாட்டை விரும்பாவிட்டாலும் அவரது நேர்மையில் ஒருபோதும் அய்யப்பட்டது  கிடையாது. தமிழ் மக்கள் அவரை “ஈழத்துக் காந்தி” என்றும்   “தமிழ்த் தேசியத்தின் தந்தை” என்றும்  அன்போடும் உரிமையோடும் இன்றும்  அழைக்கிறார்கள்.

தந்தை செல்வநாயகம் அரசியலுக்கு வந்திராது தான் உண்டு,  தனது தொழில் உண்டு,  குடும்பம் உண்டு என்று இருந்து பின்னர் தன்னைத் தேடிவந்த உயர் நீதிமன்ற நீதியரசர் பதவியை ஏற்று ஓய்வு பெற்றிருந்தால் தமிழினத்தின் அரசியல் வரலாறு நிச்சயமாக மாலுமி இல்லாத படகுபோலத் திசை மாறிப் போயிருக்கும். சுயநலத் தமிழ்த் தலைவர்களுக்குப் பணம், பதவி, பட்டங்கள் கொடுத்து முழுத் தமிழினத்தையுமே சிங்கள ஆட்சியாளர்கள் விலைக்கு வாங்கியிருப்பார்கள். அதன்பின் தமிழர்களை தாலாட்டுப்பாடித் தூங்க வைத்து கழுத்தை அறுத்திருந்திருப்பார்கள். தமிழினம் மீளா அடிமைத் தளையில் கட்டுண்டு அழிந்து போயிருக்கும்.

குன்று போன்ற செல்வம் பொருளைத் தொலைத்து, சிறை சென்று, உடல் நலம் கெட்ட போதும் தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் இட்டு தமிழ் மக்களை கரடு முரடான  விடுதலைப் பாதையில் அழைத்துச் சென்றவர்  தந்தை செல்வநாயகம் அவர்கள்.  அந்தப் பயணம் இன்றும் தொடர்கிறது. தமிழர்களின் தாயகமான வட – கிழக்கை உள்ளடிக்கிய நிலப்பரப்பில் தமிழர்களுக்கு உரிய தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் கூட்டாச்சி அரசை நிறுவ வேண்டும் என்ற  கோரிக்கை  இன்று தமிழர் தரப்பால் அரசியல் வேறுபாடின்றி ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

தந்தை செல்வநாயகம் அவர்கள் மேற்கொண்ட அரசியல் பயணம் தொடர்கிறது. அவரது தமிழரசுக் கனவு நிறைவாகும் வரை பட்டம் பதவிகளுக்கு ஆசைப்படாமல் அர்ப்பணிப்போடு காந்தீய வழியில் தொடர்ந்து போராட வேண்டும்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply